Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நா முத்துக்குமார் பாடல்கள்

Featured Replies

தற்போதைய தமிழ் சினிமாவில் எனக்கு மிகவும் பிடித்த பாடலாசிரியர் நா முத்துக்குமார் இன்று காலமானார். அவருக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள். அத்துடன் அவரது நினைவாக உங்களுக்கு பிடித்த அவரின் பாடல்களை இங்கு இணையுங்கள் - ஒரு கோப்பாக இருக்கும். நன்றி.

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் எப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறை இல்லை

அவள் பெரிதாய் எதுவும் படித்ததில்லை
அவளை படித்தேன். முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிப்பதில்லை
இருந்தும் கவனிக்க மறப்பதில்லை

 

 

  • தொடங்கியவர்

 

NaMuthujumar

Tamilonline - Thendral Tamil Magazine - நேர்காணல் - நா. முத்துக்குமார்

தமிழ்த் திரையுலகின் முன்னணிப் பாடலாசிரியர் நா. முத்துக்குமார். சங்கத் தமிழும் சந்தத் தமிழும் கொஞ்சி விளையாடும் கவிதை வரிகளுக்குச் சொந்தக்காரர். 'வீரநடை' தொடங்கி விரைவில் வெளியாக இருக்கும் 'சைவம்' வரை தொடர்ந்து 13 ஆண்டுகளாகத் தமது கவித்துவத்தால் ரசிகர்களைக் கட்டிப் போடுகிறவர். "வெயிலோடு விளையாடி" (வெயில்), "பறவையே எங்கு இருக்கிறாய்", "உனக்கென இருப்பேன்", "தேவதையை கண்டேன்", "நினைத்து நினைத்து பார்த்தேன்", "அவள் அப்படி ஒன்றும் அழகில்லை", "ஆனந்த யாழை மீட்டுகிறாய்" போன்ற எழில் கொஞ்சும் வரிகளால் கேட்போரின் இதயம் வருடியவர். கடந்த பத்து ஆண்டுகளாகத் தொடர்ந்து அதிக படங்களுக்கு அதிகப் பாடல்கள் எழுதியவர் என்ற வகையில் முன்னணிப் பாடலாசிரியர். அப்படி எழுதியவை பலவும் ஹிட் பாடல்கள். கலைமாமணி, தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர், விஜய் டி.வி. சிறந்த பாடலாசிரியர், ஃபிலிம்ஃபேர் விருது (இரண்டு முறை), சிறந்த பாடலுக்கான தேசிய விருது, உட்படப் பல கௌரவங்களைப் பெற்றவர். இவரது கவிதைகளையும் பாடல்களையும் சிங்கப்பூர் பல்கலை உட்படப் பல கல்லூரிகளில் பாடமாக வைத்துள்ளனர். இவற்றை ஆய்ந்து பலர் எம்.ஃபில் பட்டம் பெற்றுள்ளனர். 2000 பாடல்கள் எழுதியிருக்கும் நா. முத்துக்குமார், இந்த ஆண்டு மட்டுமே 93 படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார் (இந்த ஏப்ரல் வரை). ஓய்வின்றி இயங்கிக் கொண்டிருக்கும் அவருடன் உரையாடியதிலிருந்து....
*****

கே: தமிழ்த் திரைப்படப் பாடல்கள் பற்றி ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறீர்கள். அதுபற்றிச் சொல்ல முடியுமா?
ப: பேசும் படம் காலம் தொடங்கி கி.பி. 2000 வரையிலான தமிழ் திரைப்படப் பாடல்கள் பற்றிய ஆய்வை நான் முனைவர் பட்டத்துக்காகச் செய்தேன். பேசும்பட காலம், புராண காலம், சமூக காலம், தற்காலம் என பல்வேறு காலகட்டங்கள் அதில் அடங்கும். மதுரகவி பாஸ்கரதாஸ் முதல் பழநிபாரதி வரையிலான பாடலாசிரியர்களின் பாடல்களை அலசினேன். பாடல்கள் எப்படிப் பயன்பட்டன, சமூகத்தின் மீது அவற்றின் தாக்கம், பாடல்களுக்கு இருந்த முக்கியத்துவம், சமூகப் பங்களிப்பு என்பது பற்றியெல்லாம் அதில் விரிவாக ஆராய்ந்திருக்கிறேன். தமிழின் முதல் திரைப்பாடல் ஆசிரியர் மதுரகவி பாஸ்கரதாஸ். அவர் ஆரம்பித்து வைத்த பாட்டுப் பயணம் கிட்டத்தட்ட 800, 900 பாடலாசிரியர்களால் தொடர்ந்து கொண்டிருக்கிறது. விரைவில் அந்த ஆய்வேட்டைப் புத்தகமாக வெளியிட இருக்கிறேன். 

கே: உங்களது தந்தைதான் உங்களைச் செதுக்கியவர் என்று சொல்லலாமா?
ப: நிச்சயமாக. என் தந்தை ஒரு தமிழாசிரியர். ஒரு லட்சம் புத்தகங்களை அவர் சேமித்து வைத்திருந்தார். அவர் இரவு முழுதும் படித்துக்கொண்டே இருப்பார். சிறுவயதுமுதலே அதைப் பார்த்துப் பார்த்துப் படிக்க, எழுத ஆரம்பித்தேன். அதன் பிறகு என் வாழ்வில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் படிக்க வேண்டியது எது என்பதை அவர் அறிமுகப்படுத்தினார். எழுத்து, வாசிப்பு என்று ஊக்குவித்தார். நான் பத்தாவது படிக்கும்போது என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவர அவரும் ஒரு முக்கிய காரணம். எனக்குப் பொறியியல் படிக்க வாய்ப்பு வந்தபோது, நான் மேற்கொண்டு தமிழ் படிக்கப்போகிறேன் என்று சொன்னபோதும் கூட அவர் தடை சொல்லவில்லை. என்னைச் சுதந்திரமாகச் செயல்பட விட்டார். இன்றைக்கு நான் ஒரு படைப்பாளி என்று சொல்லிக்கொள்வதை விட ஒரு வாசகன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையடைகிறேன், விரும்புகிறேன் என்றால் அதற்கு என் அப்பாவும் ஒரு மிக முக்கியக் காரணம்.

கே: உங்களைப் பாதித்த மிகப் பெரிய கவி ஆளுமைகள், பாடலாசிரியர்கள் யார், யார்?
ப: கவி ஆளுமைகள் என்று எடுத்துக் கொண்டால் அது ஒரு பெரிய லிஸ்டே இருக்கிறது. சங்க காலம் தொடங்கி பாரதி, பாரதிதாசன் பின்னர் கலாப்ரியா, விக்ரமாதித்தன், பசுவய்யா, கல்யாண்ஜி, ஆத்மாநாம், நகுலன் என்று சொல்லிக்கொண்டே போகலாம். பாடலாசிரியர்களில் என் மனதுக்கு மிக நெருக்கமானவராக, ஒரு பல்கலைக்கழகமாக, தினந்தோறும் பூஜிக்கத் தகுந்தவராக நினைப்பது கவியரசு கண்ணதாசன் அவர்களைத்தான்.

கே: இன்றைக்கும் ஹிட் பாடல்கள் வரிசையில் இருக்கும் கேள்வியும் பதிலுமாக அமைந்த "நினைத்து நினைத்து பார்த்தேன்..." பாடலும் சூழலும் குறித்துச் சொல்லுங்களேன்...

ப: நண்பர் செல்வராகவன் இயக்கிய '7ஜி ரெயின்போ காலனி' படத்தில் இடம்பெற்ற பாடல் அது. இறந்து போன காதலியை நினைத்து காதலன் பாடுவதாக ஒரு பாடல் இருக்கும். அந்தக் காதலனுக்கு ஆறுதல் கூறி காதலி பாடுவதாக மற்றொரு பாடல் இருக்கும். இந்தப் பாடலுக்கு எப்போதும் வரவேற்பு இருக்கிறது. நான் பல பாடல்கள் எழுதியிருந்தாலும் இதற்கு இருக்கும் வரவேற்புக்குக் காரணம், இதிலிருக்கும் மெல்லிய சோகம்தான். (பாடலைக் கேட்க)

கே: உச்சரிப்புப் பிழையோடு பாடுவதைச் சிலர் 'ஸ்டைல்' என்கிறார்கள். சிலர் அதைக் 'காலமாற்றம்' என்கிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ப: என் பாடல்களில் கூடுமானவரை இவ்வாறு நேர்வதை நான் தவிர்க்கவே முயல்கிறேன். இப்போது தமிழை நன்கு அறிந்த பாடகர்கள் நிறையப் பேர் வந்திருக்கின்றனர். நன்றாக உச்சரிக்கின்றனர். அந்த 'ஸ்டைல்' பல வருடங்களுக்கு முன்னால் இருந்தது. தற்போது வழக்கொழிந்து போய்விட்டது. என் பாடல்களைப் பொருத்தவரையில் பாடகர்கள் பொருளுணர்ந்து சரியாகவே பாடுகிறார்கள்.

கே: குத்துப் பாடல்கள் தேவை தானா?

ப: குத்துப் பாடல்கள் என்பது ஒன்றும் ஒதுக்கப்பட வேண்டியதல்ல. காட்டுக்கு நடுவில் நெருப்பு மூட்டி, பறையடித்து ஆனந்தமாக ஆடிப்பாடிய சமூகம்தான் நம்முடையது. மூதாதையர்கள் ஆதிகாலத்தில் அப்படித்தான் வாழ்ந்தனர். அதனுடைய தொடர்ச்சி அல்லது நீட்சிதான் இந்தவகை துள்ளலோசைப் பாடல்கள் என்று சொல்லலாம். ஆகவே மெல்லிசைப் பாடல்களுக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை இவற்றுக்கும் கொடுக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து.

கே: ஆங்கிலம் கலந்து பாடல்கள் எழுதுவது அவசியம் தானா?

ப: இது இன்றைக்கு வந்தது என்று சொல்ல முடியாது. தஞ்சை ராமையாதாஸ், கண்ணதாசன் என்று பல முன்னோடிப் பாடலாசிரியர்கள் கூட ஆங்கிலம் கலந்த பாடல்களை எழுதியிருக்கிறார்கள். தேவையானால், தவிர்க்க முடியாத இடங்களில் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதில் தவறில்லை. திணித்தால்தான் அது தவறு. 

கே: காஞ்சிபுரத்தை மையமாக வைத்து நீங்கள் எழுதிக் கொண்டிருக்கும் நூல் பற்றி...

ப: 'Silk City' என்ற தலைப்பில், ஏழெட்டு தலைமுறைகளின் வாழ்க்கை பற்றிய நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன். காஞ்சிபுரத்தின் சமூகப் பின்னணி வரலாற்றை ஒரு குடும்பத்தின் வாயிலாகச் சொல்ல இருக்கிறேன். பல ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கும் அந்த நாவலை விரைவில் வெளியிட வேண்டும்.கே: யுவன்ஷங்கர் ராஜாவுடனான உங்கள் பாடல்கள் எல்லாமே 'ஹிட்.' இதற்குக் காரணம் என்ன?

ப: யுவன் இப்போது நூறு படங்கள் செய்திருக்கிறார். அதில் கிட்டத்தட்ட 75 படங்களில் முழுப் பாடல்கள் எழுதியிருக்கிறேன். நான் அதிகம் வேலை செய்தது யுவனுடன்தான். தொடர்ந்து ஒரு கவிஞரும் இசையமைப்பாளரும் இணைந்து பணிபுரியும் போது இருவருக்குமிடையே ஒரு புரிதல் ஏற்படுவது இயல்புதான். மேலும் யுவன் எப்போதும் நான் செய்வதில் குறுக்கிட மாட்டார். பாட்டை எழுதி முடித்தவுடனேயே "அதை பாடகரிடம் கொடுத்து விடுங்கள்" என்று சொல்லிவிடுவார். அந்த சுதந்திரமும், நம்பிக்கையும் பொறுப்புமே மீண்டும் மீண்டும் தரமான பாடல்களைக் கொடுக்க உந்துதலாக இருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் யுவன் மட்டுமல்ல; நான் ராஜா சார், ஏ.ஆர். ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், ஜி.வி. பிரகாஷ்குமார் எனப் பலருடனும் இணைந்து பணிபுரிந்திருக்கிறேன். ஹிட் பாடல்கள் கொடுத்திருக்கிறேன். யுவனுடன் இருவருமே பல காலமாக இணைந்து பணியாற்றி வருவதால், அந்த காம்பினேஷனில் நிறைய பாடல்கள் ஹிட் ஆகியிருப்பதால் "இவர்கள் இருவரும் இணைந்தால் பாடல்கள் சூப்பர் ஹிட்" என்ற எண்ணம் வலுவாக இருக்கிறது என்று நினைக்கிறேன். "ஆனந்த யாழை மீட்டுகிறாய்" பாடலுக்கு யுவனுக்கும் விருது கிடைத்திருக்க வேண்டும் என்பது என் கருத்து. அடுத்த ஆண்டு நிச்சயம் அவருக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். நம்புகிறேன். வாழ்த்துகிறேன்.

கே: "ஆனந்த யாழை மீட்டுகிறாய்" பாடல் சூழல் குறித்தும், அதற்குக் கிடைத்த தேசிய விருது குறித்தும் சொல்லுங்கள்...

ப: தாய்-மகன் உறவைக் காட்ட தமிழில் எத்தனையோ படங்கள் இருக்கின்றன. பாடல்கள் இருக்கின்றன. ஆனால்; தந்தை-மகள் உறவைக் கூறும் படங்களும் குறைவு. பாடல்களும் மிகமிகக் குறைவு. தந்தை-மகள் உறவின் சிறப்பை எடுத்துக்காட்டுவதற்காக ராம் எடுத்த தங்க மீன்கள் படத்தில் அந்த உணர்வை, உறவைப் பாடலில் கொண்டு வந்ததற்காக இந்த விருது கிடைத்திருக்கிறது. இன்னும் தரமான பாடல்களைத் தமிழ்மக்களுக்குத் தர வேண்டும் என்னும் கூடுதல் பொறுப்புணர்வை இவ்விருது தந்திருக்கிறது. இந்த விருதை என் குருநாதரும், எப்போதும் என் ஞானத்தந்தையாக நான் போற்றுபவரும், 'உன் நல்ல மனதுக்கு எல்லாம் நன்றாகவே நடக்கும்' என்று என்னைப் பார்க்கும்போதெல்லாம் வாழ்த்தியவருமான இயக்குநர் பாலுமகேந்திரா அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன். இந்த விருது கிடைத்த சமயத்தில் அவர் இல்லையே என்பதை நினைக்கும்போது மனதிற்கு மிகவும் வருத்தமாக உள்ளது. அதே சமயம் அவர் நடித்து இயக்கிய 'தலைமுறைகள்' படத்திற்கும் விருது கிடைத்திருப்பது வருத்தத்திலும் ஒரு சிறு மகிழ்ச்சியைத் தருகிறது. இத்தருணத்தில் தங்கமீன்கள் இயக்குனர் ராம், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, பாடகர் ஸ்ரீராம் பார்த்தசாரதி, என் தந்தை நாகராஜன், ஞானத்தந்தை பாலுமகேந்திரா, இயக்குனர் ராமின் மகள் ஸ்ரீ சங்கர கோமதி, என் மகன் ஆதவன் நாகராஜன், இந்தப் பாடலுக்காக என்னைச் சந்திக்கும் போதெல்லாம் என் கைகளைப் பிடித்து ஆனந்த கண்ணீர்விட்ட பெற்றோர்கள் என அனைவரையும் நன்றியோடு நினைவு கூர்கிறேன்.

கே: இன்றைய திரைப்பாடல்கள், கவிஞர்கள் குறித்து...

ப: இன்றைக்குப் பல தரமான கவிஞர்கள் தரமான கவிதைகளைத் தந்து கொண்டுதான் இருக்கிறார்கள். கண்ணதாசன் செய்ததுபோல் தத்துவம் கலந்த உறவுகள் கலந்த பாடல்களை அமைக்கும் வாய்ப்புகள் தற்போது கிடைப்பதில்லை. அந்தக் காலகட்டம் வேறு; தற்போதுள்ள காலகட்டம் வேறு. அவ்வகை வாய்ப்பு அமையும்போது, அது மாதிரியான கதைகளுக்கான களமாக தமிழ் சினிமா அமையும்போது நிச்சயம் இன்னமும் தரமான கவிதைகளும், பாடல்களும் வெளிவரும் என்பதில் ஐயமில்லை.

கே: உங்களைக் கவர்ந்த எழுத்தாளர்கள் யார், யார்?

ப: நிறைய இருக்கிறார்கள். ஜெயகாந்தன், கரிச்சான்குஞ்சு, மௌனி, எம்.வி. வெங்கட்ராம், சுந்தர ராமசாமி, தி.ஜானகிராமன், தஞ்சை ப்ரகாஷ், அசோகமித்திரன், ப. சிங்காரம், ஜி. நாகராஜன் துவங்கி இன்றைய ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் என்று அது ஒரு மிகப்பெரிய லிஸ்ட். தமிழில் உலகத்தரத்துக்கு எழுதிக் கொண்டிருக்கிற குறைந்த பட்சம் ஒரு நூறு எழுத்தாளர்களை என்னால் இனம் கண்டு பட்டியலிட முடியும். தமிழ் உரைநடை என்பது இன்றைக்கு உலகத் தரத்தில் இருக்கிறது. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருவதாகவும், பெருமையாகவும் இருக்கிறது. 

கே: இன்றைக்கு பெரும்பாலும் இல்லாமலே போய்விட்ட கூட்டுக் குடும்பத்தின் மேன்மையை வலியுறுத்துவது உங்களது "அணிலாடும் முன்றில்" தொடர். அதைப் பற்றிச் சொல்லுங்கள்...

ப: நான் 'அணிலாடும் முன்றில்' தொடர் எழுதியதே அது அடுத்த தலைமுறைக்கு, நம் தொப்புள்கொடி உறவுகளின் மேன்மைகளையும் அதன் பெருமைகளையும் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான். அதில் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி என்னவென்றால் அது பத்து பதிப்புகளையும் தாண்டி இன்றைக்கும் விற்றுக் கொண்டிருக்கிறது என்பதுதான். தமிழர்கள் தங்களின் திருமணங்களிலும், பிறந்தநாள் போன்ற வீட்டு விசேஷங்களிலும் அந்த நூலைத் தாம்பூலப் பையில் போட்டுக் கொடுக்கின்றனர் என்பதை அறியும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து நம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு வாசகர்கள் முன்னெடுத்துச் செல்லும்போது நமது உறவுகளின் அருமை பிடிபடும். தேவை புரியவரும். அது நிச்சயம் சிதைந்த மனங்களில் மாற்றங்களைக் கொண்டு வரும்.

கே: எது உங்களை எழுத வைக்கிறது, உங்கள் கவிதா சக்தியை உயிர்ப்போடு வைத்திருக்கிறது?

ப: தொடர்ந்த வாசிப்பும் வாழ்க்கை பற்றிய அவதானிப்புமே என்னை தொடர்ந்து இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது.

கே: உங்கள் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தை எப்போது எதிர்பார்க்கலாம்?

ப: இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து.

கே: உங்கள் குடும்பம் பற்றி...

ப: எனது தாய் சிறுவயதிலேயே காலமாகிவிட்டார். தந்தையும் சில ஆண்டுகளுக்கு முன்னால் மறைந்து விட்டார். மூன்று தம்பிகள். இரண்டு பேர் ஐ.டி. துறையில். ஒருவர் பிபிசியில் இருக்கிறார். மனைவி ஜீவலட்சுமி. மகன் ஆதவன் நாகராஜன் இரண்டாம் வகுப்பு படிக்கிறார். அவர்மூலமாக என் தந்தையை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

கே: எதிர்காலத் திட்டங்கள் என்ன?

ப: அப்படி ஏதும் திட்டங்கள் இல்லை. வாழ்க்கையை அதன் போக்கில் எதிர்கொள்ளவே விரும்புகிறேன். 

கே: புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

ப: உலகளாவிய புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவதெல்லாம் தமிழ் மொழிதான் உங்களுக்கும் தமிழ்நாட்டிற்குமான தொப்புள் கொடி உறவு. அந்தத் தொப்புள் கொடி உறவை அடுத்த தலைமுறையினருக்கும் கடத்துங்கள். வீட்டில் கூடுமானவரை குழந்தைகளிடம் தமிழிலேயே பேசுங்கள். தமிழ் மொழியையும் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் அதன் பெருமையையும் அவர்களுக்கு உணர்த்துங்கள். நீங்கள்தான் அடுத்த நூற்றாண்டுத் தமிழை உலகெங்கும் கொண்டு செல்லப் போகிறீர்கள்.

இந்த மே மாதத்தில் நடக்க இருக்கும் TNFன் அமெரிக்கத் தமிழச்சங்கங்களின் கூட்டமைப்பு விழாவில் கலந்து கொள்ள இருக்கும் கவிஞர் நா. முத்துக்குமாருக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் கூறி விடைபெற்றோம்.

 

உரையாடல்: அரவிந்த்

https://venkatramanan.wiki.zoho.com/NaMuthujumar.html

 

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்

நா. முத்துக்குமார்: முன் க(வி)தைச் சுருக்கம்

* பள்ளியில் படிக்கும்போதே துவங்கி விட்டது நா.முத்துக்குமாரின் கவிதை ஆர்வம். காஞ்சியில் நடக்கும் இலக்கிய விழாக்களில் பள்ளிச் சீருடையுடன் மேடை ஏறிக் கவிதை படித்தவர்.

* முதல் கவிதைத் தொகுப்பு (தூசிகள்) வெளியாகும்போது வயது 15.

* கணையாழி ஆண்டு விழாவில் சுஜாதா மேடையில் படித்துப் பாராட்டிய கவிதை "தூர்", முத்துக்குமாருக்கு இலக்கிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. தொடர்ந்து கணையாழியின் கடைசி பக்கக் கட்டுரைகளில் முத்துக்குமாரின் கவிதைகளைப் பற்றி எழுதி பரவலான வாசக கவனத்தை ஏற்படுத்தினார் சுஜாதா. சுஜாதாவால் அடையாளம் காட்டப்பட்ட கவிஞர்களில் திரைப் பாடலாசிரியராக இன்று முதலிடத்தில் இருப்பவர் நா. முத்துக்குமார்.

* நாடறிந்த கவிஞராக அடையாளம் காட்டியது "பட்டாம்பூச்சிகள் விற்பவன்" கவிதைத் தொகுப்பு. வெளியிட்டு ஊக்குவித்தவர் கவிஞர் அறிவுமதி.

* மெட்டுக்குப் பாட்டெழுதும் வித்தையை கவிஞர் அறிவுமதியிடமிருந்தும், திரைப்பட இயக்க நுட்பத்தை இயக்குநர் பாலுமகேந்திராவிடமிருந்தும் கற்றுக் கொண்டார்.

* அஜித் நடித்த 'கிரீடம்' படத்துக்கு வசனம் எழுதியிருக்கிறார்.

* கவிஞராக மட்டுமல்லாமல் சிறந்த எழுத்தாளராகவும் தன்னை நிரூபித்தவர். "பட்டாம் பூச்சி விற்பவன்", "நியூட்டனின் மூன்றாம் விதி", "ஆனா ஆவன்னா", "பச்சையப்பனில் இருந்து ஒரு தமிழ் வணக்கம்", "குழந்தைகள் நிறைந்த வீடு" (கவிதைத் தொகுப்புகள்), "என்னைச் சந்திக்க கனவில் வராதே" (ஜப்பான் காதல் கவிதைகளின் மொழிபெயர்ப்பு), "கண்பேசும் வார்த்தைகள்", "கிராமம் நகரம் மாநகரம்", "பால காண்டம்", "அணிலாடும் முன்றில்" போன்ற கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதியிருக்கிறார். 

* தற்போது "வேடிக்கை பார்ப்பவன்" என்னும் சுயவரலாற்று அனுபவத்தொடரை ஆனந்தவிகடனில் எழுதி வருகிறார்.

https://venkatramanan.wiki.zoho.com/NaMuthujumar.html

*****

 

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்

தூர்

(கணையாழி ஆண்டு விழாவில் சுஜாதா மேடையில் படித்துப் பாராட்டிய, நா. முத்துக்குமாருக்கு அறிமுகத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்த கவிதை)

"வேப்பம் பூ மிதக்கும்

எங்கள் வீட்டு கிணற்றில்

தூர் வாரும் உற்சவம்

வருடத்துக்கு ஒரு முறை

விசேஷமாக நடக்கும்.

 

ஆழ் நீருக்குள்

அப்பா முங்க முங்க

அதிசயங்கள் மேலே வரும்...

கொட்டாங்குச்சி, கோலி, கரண்டி,

துருப்பிடித்தக் கட்டையோடு

உள் விழுந்த ராட்டினம்,

வேலைக்காரி திருடியதாய்

சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்...

எடுப்போம் நிறையவே! 

 

'சேறுடா சேறுடா' வென

அம்மா அதட்டுவாள்

என்றாலும்

சந்தோஷம் கலைக்க

யாருக்கு மனம் வரும்?

 

படை வென்ற வீரனாய்

தலைநீர் சொட்டச் சொட்ட

அப்பா மேலே வருவார்.

 

இன்று வரை அம்மா

கதவுக்குப் பின்னிருந்துதான்

அப்பாவோடு பேசுகிறாள்.

 

கடைசி வரை அப்பாவும்

மறந்தே போனார்

மனசுக்குள் தூர் எடுக்க..!"

 

 

Edited by ஜீவன் சிவா

 

யுவன் சங்கர் ராஜா இசையில் தங்க மீன்கள் படத்துக்காக இவர் எழுதிய 'ஆனந்த யாழை மீட்டுகிறாய்... ' பாடலுக்கு முதல் தேசிய விருதினை வென்றார். அடுத்து ஜிவி பிரகாஷ் இசையில் சைவம் படத்தில் இடம்பெற்ற அழகே அழகே... பாடலுக்காக இரண்டாவது தேசிய விருதினை வென்றார்.

 

  • தொடங்கியவர்
7 minutes ago, Athavan CH said:

அழகே அழகே... பாடலுக்காக இரண்டாவது தேசிய விருதினை வென்றார்.

அழகே அழகே எதுவும் அழகே 
அன்பின் விழியில் எல்லாம் அழகே 
மழை மட்டுமா அழகு
சுடும் வெயில் கூட ஒரு அழகு
மலர் மட்டுமா அழகு
விழும் இலை கூட ஒரு அழகு
புன்னகை வீசிடும் பார்வைகள் அழகு
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு
நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு
உண்மையில் அது தான் மெய்யாய் அழகு

நா. முத்துக்குமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக பல வெற்றிப்பாடல்களையும், பல படங்களின் முழுப்பாடல்களையும் எழுதி வந்தவர். அநேகமாக காவியக்கவிஞர் வாலியின்  பதினைந்தாயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் எனும் சாதனையை முறியடித்திருக்கக் கூடும்.

இளங்கலை பட்டப்படிப்பில் இயற்பியலில் தேர்ந்த நா. முத்துக்குமார் தமிழ் ஆர்வம் காரணமாக முதுகலை தமிழ் படித்தவர். கவிஞர் அறிவுமதியிடம் பாடல் எழுத பயிற்சி எடுப்பதும், இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக பயிற்சி எடுப்பதுமாக கழிந்த அக்காலத்தில் இறுதியாக உதவி இயக்குநர் ஆவலை முற்றாகத் துறந்தார்.

தமிழில் முனைவர் பட்டம் பெறுவதா? பாடலாசிரியராக மாறுவதா? எனும் வாய்ப்புகளில் பாடலாசிரியராக முடிவெடுத்த அவர் வெற்றிகரமான பாடலாசிரியராக வலம் வந்தவர். தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது பெற்றவர்.

கல்லூரிக் காலத்தில் இவரது ’தூர்’ கவிதை எழுத்தாளர் சுஜாதாவால் பெரிதும் பாராட்டப்பட்டு புகழ் வெளிச்சம் பெற்றதாகவும் பல்வேறு சூழல்களில் இவரே குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கவிதை எழுதச் சொன்ன சுஜாதா அவர்களிடம், எனக்கு திரைப்படங்களில் பாடல் எழுதவே ஆசை என்று தெரிவித்துள்ளார்.

யாரும் எதிர்பாராத இவரது மறைவு தமிழ்த் திரையுலகத்திற்கு ஈடு செய்ய இயலாத இழப்பாகும். பாடலாசிரியர்/கவிஞர் நா. முத்துக்குமாருக்கு இசைப்பா தளம் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது

சமீபத்தில் வெளிவந்த அவரது பாடல் இன்று இசைப்பாவில். நீண்ட நாட்களுக்கு பிறகு, வெளிவரும் இப்பதிவு, அவருக்கான இசை அஞ்சலி.

ஊருக்கு செல்லும் நாயகன். பிரிவில் உள்ள சுகம் மற்றும் வருத்தத்தைக் கூறும் பாடல். எளிய வரிகள், அழகிய காட்சியமைப்பு, துள்ளும் இசை, மயக்கும் குரல்கள். இசை என்னும் இன்பம் பெருகட்டும். அதற்கு வித்திட்ட உள்ளங்கள் நம் மனங்களில் நிலைக்கட்டும்.

na-muthukumar-isaipaa

பாடல் : கொஞ்சிப் பேசிட வேணாம்
இசை : நிவாஸ் பிரசன்னா  
பாடலாசிரியர் : நா. முத்துக்குமார் 
பாடகர்கள் : சித்ரா, ஸ்ரீராம் பார்த்தசாரதி
படம் : சேதுபதி

கொஞ்சிப் பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடி
கொஞ்சமாக பார்த்தால்
மழச் சாரல் வீசுதடி

நான் நின்னா நடந்தா கண்ணு
உன் முகமே கேக்குதடி
அட தொலைவில இருந்தா தானே
பெரும் காதல் கூடுதடி

தூரமே தூரமாய்
போகும் நேரம்

கொஞ்சிப் பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடா
கொஞ்சமாக பார்த்தால்
மழச் சாரல் வீசுதடா

நான் நின்னா நடந்தா கண்ணு
உன் முகமே கேக்குதடா
அட தொலைவில இருந்தா தானே
பெரும் காதல் கூடுதடா
தூரமே தூரமாய்

போகும் நேரம்
ஆச விலையிடுதா

நெஞ்சம் அதில் விழுதா
எழுந்திடும் போதும் அன்பே
மீண்டும் விழுந்திடுதா

தனிமை உன்னை சுடுதா
நினைவில் அனல் தருதா
தலையணைப் பூக்களில் எல்லாம்
கூந்தல் மணம் வருதா ?

குறு குறு பார்வையால்
கொஞ்சம் கடத்துறியே

குளிருக்கும் நெருப்புகும்
நடுவுல நிறுத்துறியே

வேற என்ன வேணும்
நேரில் வர வேணும்
சத்தம் இல்ல முத்தம்
தர வேணும்

கொஞ்சிப் பேச வேணாம்…
நான் நின்னா…
தூரமே…

கொஞ்சிப் பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடா
கொஞ்சமாக பார்த்தால்
மழச் சாரல் வீசுதடா

 

https://isaipaa.wordpress.com/tag/நா-முத்துக்குமார்-எழுதிய/

  • தொடங்கியவர்

கிணறு தொலைத்த நிலா

ஞாயிற்றுக்கிழமைகளை இவன் எந்த வேலை இருந்தாலும் மகனுக்காக ஒதுக்கிவிடுவான். அப்படி ஒரு ஞாயிற்றுக்கிழமையில் மகனிடம் இவன் சொன்னான், "நான்தான் பிஸ்கட் பாய்".

மகன் கேட்டான், "ஏம்பா நீங்க பிஸ்கட் பாய்?"

"ஏன்னா... நான் வாசனையா இருப்பேன்."

"அப்ப நான் யாருப்பா?"

"நீயா... ம்... நீ சாக்லேட் பாய்."

"சூப்பர்ப்பா."

"எங்கப்பா வந்து டைகர் பாய்."

"எதுக்குப்பா தாத்தா மட்டும் டைகர் பாய்?"

"ஏன்னா, அவரு வீரமா இருப்பாரு."

"அது சரி. உங்க அம்மா எந்த கேர்ள்னு சொல்லவே இல்லியே."

"அதுவா... அவங்க வந்து ஃப்ரூட்டி கேர்ள். ஏன்னா ஸ்வீட்டாப் பேசுவாங்க."

"அப்ப எங்கம்மா?" என்று மகன் கேட்க, இவன் மனைவியை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு, "உங்கம்மாவா? ம்... உங்கம்மா வந்து சில்லி கேர்ள்" என்றான்.

"சில்லி கேர்ள்னா என்னப்பா?" என்று மகன் கேட்க, "சில்லி கேர்ள்னா எப்பவுமே கோபமா, காரமா இருப்பாங்க" என்று இவன் பதில் சொன்னான்.

"உங்கம்மா மட்டும் ஃப்ரூட்டி கேர்ள், எங்கம்மா மட்டும் சில்லி கேர்ளா?" என்று மகன் தாவி வந்து கழுத்தைப் பிடித்துக் கேட்கவும், இவன் மூச்சுத் திணறியபடி "இல்லடா ராஜா, தெரியாம சொல்லிட்டேன்" என்றான்.

"அப்ப எங்கம்மாவை ஐஸ்க்ரீம் கேர்ள்னு சொல்லுங்க. அப்பத்தான் கைய எடுப்பேன்" என்று மகன் மிரட்டவும், "சரிடா உங்கம்மா ஐஸ்க்ரீம் கேர்ள்தான்" என்று இவன் ஒப்புக்கொண்டான். பின்பு கணிப்பொறியில் வீடியோ கேம்ஸ் விளையாடிவிட்டு, "அப்பா... ஏதாவது விடுகதை சொல்லுப்பா" என்று திரும்பி வந்தான்.

"எங்க வீட்டுக் கிணத்துல வெள்ளிக் கிண்ணம் மிதக்குது! அது என்ன?" என்று இவன் கேட்டதும்,

"என்னப்பா அது?" என்றான் மகன்.

"நிலாடா" என்றான்.

"அது எப்பிடிப்பா கிணத்துல மிதக்கும்?" என்று மகன் ஆச்சரியப்பட, "அடுத்த வாரம் காஞ்சிபுரம் போகும்போது நேர்ல காட்டுறேன்" என்று அப்போதைக்கு சமாதானப்படுத்தினான்.

கிணறே இல்லாத மாநகரத்தில் நிலவின் பிம்பத்துக்கு இவன் எங்கே போவான்?

https://venkatramanan.wiki.zoho.com/NaMuthujumar.html

நா. முத்துக்குமார் ஆனந்தவிகடனில் எழுதிவரும் "வேடிக்கை பார்ப்பவன்" தொடரிலிருந்து 

 

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

பாடலாசிரியர்  நா. முத்துக்குமார், 41 வயது இளமையானவர். 
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்,
அவரின் ஆத்ம சாந்திக்காக, பிரார்த்திக்கின்றேன்.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

தாத்தா-பேரன்

அப்பா-மகன் உறவுக்கும் தாத்தா-பேரன் உறவுக்கும் என்ன வித்தியாசம்? 

அப்பா-மகன் உறவில் ஒரு ப்ரியம்; ஒரு வாஞ்சை; ஒரு தோழமை; ஒரு கண்டிப்பு; ஒரு கவனம்; ஒரு கவலை; ஒரு பதற்றம்; எல்லாவற்றிற்கும் மேல் ஓர் எதிர்பார்ப்பு எங்கோ அடி ஆழத்தில் ஒளிந்து கிடக்கிறது. மாறாக, தாத்தா-பேரன் உறவில் ப்ரியமும், வாஞ்சையும், தோழமையும் தாண்டி இருவருக்குள்ளும் ஒரு குழந்தைமை ஆயிரமாயிரம் வண்ணங்களுடன் தலைகாட்டுகிறது. கடவுளுக்கு அருகில் இருப்பவர்கள் குழந்தைகளும் முதியவர்களும் மட்டுமே. ஆகவே, அந்த உறவில் ஒரு தெய்வீகத் தன்மையைத் தரிசிக்க முடிகிறது.

ஒவ்வொரு மனிதனும் முதுமையின் கடைசிப் படிக்கட்டில் கால் வைக்கும் அதே நேரம், காலச் சக்கரத்தில் திரும்பி வந்து, குழந்தைமையின் முதல் படிக்கட்டிலும் கால் வைக்கிறான். பால்யத்தின் கண்கள் வழியாகப் பார்க்கையில் பிரமிப்புடன் தெரிந்த இந்தப் பிரபஞ்சம், முதுமையின் கண்கள் வழியாகப் பார்க்கையில், அதே பிரமிப்பு அடங்காமல் வடிவம் காட்டுகிறது. புள்ளியாகி வளர்ந்து தேய்ந்து மீண்டும் புள்ளியாகி இணையும் புள்ளிதான் தாத்தா-பேரன் உறவோ?

தன் கிளையில் தன் வண்ணத்தையும் வடிவத்தையும் உள்வாங்கிப் பூத்த பூவைப் பற்றிய செடியின் பெருமிதம் அப்பா-மகன் உறவு எனில், தன் காலடியில் தன் விழுதும் தரைதொட்டு வேர் ஊன்றுவதைப் பார்க்கும் அமைதியின் பெருநிலையே தாத்தா-பேரன் உறவோ?

நா. முத்துக்குமார் எழுதிய அணிலாடும் முன்றில் (விகடன் பிரசுரம்) நூலில் இருந்து...

5 minutes ago, தமிழ் சிறி said:

பாடலாசிரியர்  நா. முத்துக்குமார், இளமையானவர் என்று கருதுகின்றேன்.
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்,
அவரின் ஆத்ம சாந்திக்காக, பிரார்த்திக்கின்றேன்.

ஆமாம் 41 வயது. 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன், ஜிவாமிர்தங்களை தெளித்திருக்கின்றிர்கள் ....!  tw_blush:

வேண்டும் இன்னும் இன்னும்...!!  tw_blush:

 

 

 

  • தொடங்கியவர்
37 minutes ago, Athavan CH said:

 

மன்னிக்கவும் ஆதவன் நீதானே என் பொன் வசந்தம் படத்தில் சகல பாடல்களையும் நா முத்துக்குமார்தான் எழுதியிருந்தார். ஆனால் இந்தப்பாடல் நினைவெல்லாம் நித்யா படத்துக்காக வைரமுத்து எழுதியது. மீண்டும் புதிய இசைக்கோவையுடன் இளையராஜாவால் இப்படத்துக்காக உருவாக்கப்பட்டது. 

காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்
பூப்பறித்து கோர்க்கச் சொன்னேன்
ஓடி வந்து உன்னைச் சந்திக்க
மெத்தை ஒன்று தைக்கச் சொன்னேன்
மேகம்  அள்ளி தைக்கச் சொன்னேன்
கண்ணை மூடி உன்னைச் சிந்திக்க
சுற்றும் பூமி நிற்க சொன்னேன்
உன்னை தேடி பார்க்க  சொன்னேன்
என்னை பற்றி கேட்க சொன்னேன்
என் காதல் நலமா? என்றேன்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

ஒரு கல் 
ஒரு கண்ணாடி 
உடையாமல் மோதி கொண்டால் 
காதல் 

ஒரு சொல் 
சில மௌனங்கள் 
பேசாமல் பேசிக்கொண்டால் 
காதல் 

எவ்வளவு எளிமையான வரிகள். இந்த சொற்கள் நமக்கும் பரீச்சயமானதுதான்.  ஆனால் இப்படி ஒரு அழகான மாலையாக எம்மால் இவற்றை கோர்க்க முடியுமா? ஒருவன் கோர்த்தான். அஞ்சலிகள் + அவன் பாடலையே அவனுக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டிய நிலைமை.

எனக்கு வரிகளுக்காக பிடித்த ஒரு பாடல் இது..

 

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே திறந்திருந்தோம் 
சேர்த்து வைக்க காத்திருந்தோம்

ஒரு பாதி கதவு நீயடா
மறு பாதி கதவு நானடா
தாள் திறந்தே காத்திருந்தோம்
காற்று வீச பார்த்திருந்தோம்

இரவு வரும் திருட்டு பயம்
கதவுகளை சேர்த்து விடும் 

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்

மகனுக்கு

 நா.முத்துக்குமார் எழுதிய கடிதம்

மறைந்த பிரபல பாடலாசிரியர் நா.முத்துக்குமார்  முன்பு தனது மகனுக்கு ஒரு தந்தையாக அவருடைய நடையில் எழுதிய ஒரு கடிதம் ஒன்றை,  தற்போது அவர் மரணத்திற்கு பிறகு முகநூலில் ஷேர் செய்து வருகிறார்கள். 

அந்த கடிதம்:

’’அன்புள்ள மகனுக்கு அப்பா எழுதுவது,  

இது நான் உனக்கு எழுதும் முதல் கடிதம். இதைப் படித்துப் புரிந்துகொள்ளும் வயதில் நீ இல்லை. மொழியின் விரல் பிடித்து நடக்கப் பழகிக்கொண்டு இருக்கிறாய். வயதின் பேராற்றாங்கரை உன்னையும் வாலிபத்தில் நிறுத்தும். சிறகு முளைத்த தேவதைகள் உன் கனவுகளை ஆசீ்ர்வாதிப்பார்கள். பெண் உடல் புதிராகும். என் தகப்பன் என்னிடமிருந்து ஒளித்து வைத்த ரகசியங்கள் அடங்கிய பெட்டியின் சாவியை நான் தேட முற்பட்டதைபோல நீயும் தேடத் தொடங்குவாய். பத்திரமாகவும் பக்குவமாகவும் இருக்க வேண்டிய பருவம் அது. உனக்குத் தெரியாதது இல்லை. பார்த்து நடந்து கொள்.

நிறைய பயணப்படு. பயணங்களின் ஜன்னல்களே முதுகுக்குப் பின்னாலும் இரண்டு கண்களைத் திறக்கின்றன. புத்தகங்களை நேசி. ஒரு புத்தகததை தொடுகிறபோது நீ ஓர் அனுபவத்தைத் தொடுவாய். உன் பாட்டனும் தகப்பனும் புத்தகங்களின் காட்டில் தொலைந்தவர்கள். உன் உதிரத்திலும் அந்த காகித நதி ஓடிக்கொண்டே இருக்கட்டும்.

கிடைத்த வேலையைவிட பிடித்த வேலையைச்செய். இனிய இல்லறம் தொடங்கு. யாராவது கேட்டால் இல்லை எனினும் கடன் வாங்கியாவது உதவி செய். அதில் கிடைக்கும் ஆனந்தம் அலாதியானது. உறவுகளிடம் நெருங்கியும் இரு. விலகியும் இரு. இந்த உலகில் எல்லா உறவுகளையும்விட மேன்மையானது நட்பு மட்டுமே. நல்ல நண்பர்களைச் சேர்த்துக்கொள். உன் வாழ்க்கை நேராகும்.

இவையெல்லாம் என் தகப்பன் எனக்கு சொல்லாமல் சொன்னவை. நான் உனக்கு சொல்ல நினைத்துச் சொல்பவை. என் சந்தோஷமே நீ பிறந்த பிறகுதான். என் தகப்பனின் அன்பையும் அருமையையும் நான் அடிக்கடி உணர்கிறேன். நாளை உனக்கொரு மகன் பிறக்கையில் என் அன்பையும் அருமையையும் நீ உணர்வாய். நாளைக்கும் நாளை நீ உன் பேரன் பேத்திகளுடன் ஏதோ ஒரு ஊரில் கொஞ்சிப்பேசி விளையாடிக்கொண்டு இருக்கையில் என் ஞாபகம் வந்தால், இந்தக் கடிதத்தை எடுத்துப் படித்துப்பார். உன் கண்களில் இருந்து உதிரும் கண்ணீர்த் துளியில் வாழ்ந்து கொண்டிருப்பேன் நான்.’’

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=171084

தந்தையைப் பற்றிய கவிஞரின் ஒரு பாடல் சமர்ப்பணம்.  

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்
தந்தை அன்பின் பின்னே
தகப்பனின் கண்ணீரை கண்டோர் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
என் உயிரணுவின் வரம் உன் உயிரல்லவா
மண்ணில் வந்த நான் உன் நகலல்லவா
காயங்கள் கண்ட பின்பே உன்னை கண்டேன்

கண்டிப்பிலும் தண்டிப்பிலும் கொதித்திடும் உன்முகம்
காய்ச்சல் வந்து படுக்கையில் துடிப்பதும் உன்முகம்
அம்பாரியாய் ஏற்றிக் கொண்டு அன்று சென்ற ஊர்வலம்
தகப்பனின் அணைப்பிலே கிடந்ததும் ஓர் சுகம்
வளர்ந்ததுமே யாவரும் தீவாய் போகிறோம்
தந்தை அவனின் பாசத்தை எங்கே காண்கிறோம்
நமக்கெனவே வந்த நண்பன் தந்தை…

 

 

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்

இவன் என்றோ கிறுக்கியது

  

மரணம் பற்றிய வதந்தி

 

திருஷ்டி கழிந்தது என்றார்கள்

தீர்க்காயுசு என்றார்கள்

படபடத்தோம் என்றார்கள்

 

எப்போதோ எழுதிய

என் கவிதையைச் சொன்னேன்..

"இறந்துபோனதை

அறிந்த பிறகுதான்

இறக்க வேண்டும் நான்!

 

இவன் இறக்கவே மாட்டான் எமது மனதில்.

 

 

கலைந்தாலும் உந்தன் கூந்தல் ஓர் அழகே

விழுந்தாலும் உந்தன் நிழலும் பேரழகே

அடி உன்னைத் தீண்டத்தானே

மேகம் தாகம்கொண்டு

மழையாய் தூவாதோ

வந்து உன்னை தொட்டபின்னே

தாகம் தீர்ந்தது என்று

கடலில் சேராதோ

 

 

 

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்

’முதல் முறை மரணத்தை பார்க்கிறேன்’..! -நா.முத்துக்குமார்

1975-ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ம் தேதி என் தாயின் பிறந்தகமான சென்னையில், எழும்பூர் அரசு மருத்துவ மனையில் நான் பிறந்தபோது, ஒட்டுமொத்த மருத்துவமனையே மாடிக்கு ஓடி வந்தது. என்னைப் பார்க்கத்தான் வருகிறார்கள் என்று நான் என் பால்யத்தின் முதல் புன்னகையைப் பூமிக்குப் பரிசளித்தபோது, அந்தக் கூட்டம் என்னைக் கடந்து, மொட்டை மாடிக்குச் சென்றது. ஒரு சில உயரமான கட்ட டங்களே சென்னையாக இருந்த அந்த மொட்டை மாடியில் பதற்றத்துடன் அவர்கள் பார்த்த காட்சி எல்.ஐ.சி. கட்டடம் தீப்பிடித்து எரிந்துகொண்டு இருப்பதை. இப்படித்தான் நண்பர்களே நான் பிறந்தபோதே என்னைச் சுற்றித் தீப்பிடித்தது. அந்தத் தீயை அபசகுனமாகக் கருதாமல், என் தகப்பன் தன் நாட்குறிப்பில் இப்படி எழுதினான்... ‘இன்று உலகின் இரண்டாவது அறிவாளி பிறந்தான்!’ நான் முதல் முறையாக நா.முத்துக்குமார் ஆனேன்!

ஆழம் அறி!

எங்கள் வீடு முழுக்கப் புத்தகங்களே வியாபித்திருந்தன. தமிழாசிரியரான தந்தை தேடித் தேடி புத்தகம் வாங்கினார். வால்கா முதல் கங்கை வரை என்னை புத்தக உலகில் பயணிக்கவைத்தார். மூன்றாம் வகுப்பு படிக்கையில் சந்தை என்ற தலைப்பில் சிறுகதை எழுதி அப்பாவிடம் வாசிக்கக் கொடுத்தேன். காய்கறிச் சந்தையில் கடை வைத்திருப்பவரைப்பற்றிய கதை. வாசித்துவிட்டு ஒன்றுமே சொல்லாமல் திருப்பிக் கொடுத்தார். அடுத்த நாள் அதிகாலை ஐந்து மணிக்கு என்னை எழுப்பி சைக்கிளில் அமரவைத்து, காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறிச் சந்தைக் குக் கூட்டிச் சென்றார். ஒருபுறம் லாரியில் இருந்து கூடை கூடையாகத் தக்காளிகள் இறங்கிக்கொண்டு இருக்க...

உள்ளூர் விவசாயிகள் கீரைக் கட்டுகளை அடுக்கிக்கொண்டு இருந்தனர். எங்கிருந்தோ வந்த ஒரு பசு மாடு, வாழை இலை ஒன்றை இழுத்து கடிக்கத் துவங்க, யாரோ ஒருவர் அதை விரட்டிக்கொண்டு இருந்தார். ‘இந்த டீக்கடையில் நான் காத்திருக்கிறேன். நீ மார்க்கெட் முழுக்கச் சுற்றிப் பார்த்துவிட்டு வா’ என்றார் அப்பா. அரை மணி நேரம் கழித்துத் திரும்பி வந்த என்னிடம் ‘உன் கதை நன்றாக இருந்தது. ஆனால், அதில் உண்மையான காய்கறிச் சந்தை இல்லை. எந்த இடத்திலும் காய்கறியின் வாசம் இல்லை. எதையும் உணர்ந்து அனுபவித்து எழுது, உன் எழுத்து வலிமையாக இருக்கும்’ என்றார். வீட்டுக்குச் சென்றதும் அந்தக் கதையைக் கிழித்துப் போட்டேன். அன்று இரண்டாம் முறையாக நான் நா.முத்துக்குமார் ஆனேன்!

கோபம் கற்றுணர்!

பள்ளியில் படிக்கும்போதே என் கவிதைகளும் கதைகளும் பத்திரிகைகளில் வர ஆரம்பித்தன. எங்கள் பள்ளியில் ஒரு சில ஆசிரியர்கள் தங்களிடம் டியூஷன் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே பாஸ் மார்க் போட்டார்கள். வகுப்பிலும் சொல்லித் தருவதில்லை. இதைக் கண்டித்து தூசிகள் என்று கவிதைத் தொகுதி வெளியிட்டேன். பிரேயரில் என் கவிதை விவாதிக்கப்பட்டு, என்னை ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்தார்கள். வார்த்தைகள் என்னைக் கைவிட்ட நிலையில், குற்றஉணர்வுடன் அப்பா முன் நின்றேன். அவர் அமைதியாகச் சொன்னார், ‘இப்போதுதான் உன் எழுத்து வலிமையாகிக்கொண்டு இருக்கிறது. இன்னும் நிறைய எழுது!’ மூன்றாம் முறையாக நான் நா.முத்துக்குமார் ஆனேன்.

உன் திசை உற்றுணர்!

காஞ்சி பச்சையப்பனில் இளங்கலை இயற்பியல் சேர்ந்தேன். எங்கள் வீடும் கல்லூரியும் அருகருகே இருந்ததால், பத்திரிகைகளில் இருந்து என் கவிதைக்கு வரும் சன்மானத் தொகையை என் வகுப்புக்கே வந்து தருவார் தபால்காரர். வேதியியல் பேராசிரியர் ஒருவர் ஒருநாள் இதைக் கவனித்து, ‘இப்படியே கதை, கவிதைன்னு சுத்துனா, சத்தியமா நீ பாஸாக மாட்டே’ என்று திட்டினார். எப்போதும் அதிக மதிப்பெண்கள் வாங்கும் மாணவன் ஒருவன் என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தான். அன்று ஒரு வைராக்கியம் தோன்றியது. அவனைவிட ஒரு மார்க்காவது அதிகம் வாங்க வேண்டும். 85 சதவிகிதம் பெற்று தேர்ச்சியடைந்தேன்.

அவனுக்குக் கிடைக்காத பி.டெக். வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. என் சபதத்தை முடித்துக்கொண்டு, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ. தமிழ் இலக்கியம் சேர்ந்தேன். இவ்வளவு மார்க் எடுத்துட்டு ஏன் தமிழ் படிக்கிறாய் என்று அறிவுரை சொன்னார்கள். மௌனமாகத் தலையாட்டிவிட்டு, மண்ணில் விழுந்த மழைத் துளிபோல் தமிழின் வேர் வரை பயணிக்கத் தொடங்கினேன்.

கல்லூரியிலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி அடைந்ததும், அமெரிக்காவில் இருந்து ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர் பணிக்கு வரச் சொல்லிக் கடிதம் வந்தது. மாதம் மூன்று லட்சம் சம்பளம். மீண்டும் அப்பா முன் நின்றேன். நான் திரைப்படத் துறையில் உதவி இயக்குநராகப் போகிறேன். இந்த வேலை வேண்டாம் என்றேன். என்னை உற்றுப் பார்த்துவிட்டுச் சொன்னார், ‘உன் முடிவை நீயே எடு. பின் நாட்களில் அதற்காகச் சந்தோஷப்படவும் வருத்தப்படவும் உனக்கே உரிமை உண்டு!’ அன்று நான் சலனப்பட்டு அமெரிக்கா சென்றுஇருந்தால், முனைவர் நா.முத்துக்குமாராக மட்டுமே இருந்திருப்பேன். சினிமாவுக்கு வந்ததால் நான்காம் முறையாக நா.முத்துக்குமார் ஆனேன்.

எரிக்க எரிக்க எழுந்து வா!

இயக்குநர் அருண்மொழி, பட்டுக்கோட்டை பிரபாகர், அறிவுமதி என்று பலரிடம் உதவியாளராக இருந்துவிட்டு, என் ஆசான் பாலுமகேந்திராவிடம் சேர்ந்தேன். பெப்சிக்கும் படைப்பாளிகளுக்கும் பிரச்னை நடந்த காலகட்டம் அது. ஒரு வருடமாக வேலை நிறுத்தம். தன் காரை விற்று எங்களுக்குச் சம்பளம் கொடுத்தார் பாலுமகேந்திரா சார். என் தூர் கவிதையை ஒரு விழாவில் எழுத்தாளர் சுஜாதா வாசிக்க, என் மேல் மஞ்சள் வெளிச்சம் விழுந்தது. நண்பர்கள் பாடல் எழுத அழைத்தார்கள். விளையாட்டாக எழுதத் தொடங்கி, கடந்த ஆறு வருடங்களாக அதிக பாடல்கள் எழுதும் பாடலாசிரியர் என்கிற நிலை வரை ஓடிக்கொண்டு இருக்கிறேன்.

‘சினிமா உலகம் போட்டியும் பொறாமையும் நிறைந்தது. இங்கு தூங்கும்போதுகூட காலை ஆட்டிக்கொண்டேதான் தூங்க வேண்டும்; இல்லையென்றால், இறந்துவிட்டான் என்று எரித்து விடுவார்கள்’ என்றார் என்.எஸ்.கிருஷ்ணன். சென்ற வருடம் என் திருமண நாளன்று, நான் விபத்தில் இறந்துவிட்டதாகவும், தற்கொலை செய்துகொண்டதாகவும் என்னைப்பற்றி வதந்தி கிளம்பியது. இறந்துபோனதை அறிந்த பிறகுதான், ‘இறக்க வேண்டும் நான்’ என்று எப்போதோ நான் எழுதிய கவிதை ஞாபகம் வந்தது. முகம் தெரியாத அந்த நண்பருக்காகவாவது இன்னும் கவனமாகவும், கூடுதலாகவும் உழைக்க வேண்டும் என்று தோன்றியபோது, நான் ஐந்தாம் முறையாக நா.முத்துக்குமார் ஆனேன்!

ஆறாவது முறையாக நா.முத்துக்குமார் ஆவீர்களா கவிஞரே..!

http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/special-news/35/48236/na-muthukumar-a-lyrical-wonder-gone-too-soon

 

 

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்

கூர்வாள்

நான் ஏன் நல்லவனில்லை

என்பதற்கு மூன்று காரணங்கள்.

ஒன்று

நான் கவிதை எழுதுகிறேன்.

இரண்டு

அதைக் கிழிக்காமலிருக்கிறேன்.

மூன்று

உங்களிடம் அதைப்

படிக்கக் கொடுக்கிறேன்

 

- நா.முத்துக்குமார்

 

வேப்பங்கொட்டை அடிச்சு வந்த ரத்தம் ரசிச்சோம்
வத்திக்குச்சி அடுக்கி கணக்கு பாடம் படிச்சோம்
தண்ணியில்லா ஆத்தில் கிட்டிப்புல்லு அடிச்சோம்
தண்டவாளம் மேல காசை வச்சு தொலச்சோம்

அஞ்சு பைசா ஃபிலிமை வாங்கி அப்பாவோட வேட்டியிலே
கண்ணாடி லென்சை வச்சு சினிமா காமிச்சோம்
அண்ணாச்சி கடையில தான் எண்ணெயில தீக்குளிச்ச
பரோட்டாக்கு பாதி சொத்தை நாம அழிச்சோம்

பொட்டல் காட்டில் பொழுதெல்லாம்
ஓட்டம் போட்டு திரிஞ்சோம்
வெயிலத் தவிர வாழ்க்கையில
வேற என்ன அறிஞ்சோம்
 

 

Edited by ஜீவன் சிவா

 

படம்: வெயில்
பாடலாசிரியர்: நா.முத்துகுமார்
பாடியவர்: ஷங்கர் மஹாதேவன், ஸ்ரேயா கோஷல்
இசை: G.V. பிரகாஷ் குமார்

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே
தங்கம் உருகுதா அங்கம் கரையுதா
வெட்கம் உடையுதா முத்தம் தொடருதா
சொக்கித்தானே போகிறேனே மாமா கொஞ்ச நாளா

ஏ உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே
தங்கம் உருகுதே அங்கம் கரையுதே
வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே
சொக்கித்தானே போகிறேனே நானும் கொஞ்ச நாளா.. ஓ..

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே

ஏ அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது
அன்புக் கதை பேசிப் பேசி விடியுது இரவு
ஏழுகடல் தாண்டித்தான் ஏழு மலை தாண்டித்தான்
எங்கருத்து மச்சான் கிட்ட ஓடி வரும் மனசு
நாம சேர்ந்து வாழும் காட்சி கோடி பார்க்கிறேன்
காட்சி யாவும் நிசமா மாற கூட்டி போகிறேன்
சாமி பார்த்துக் கும்பிடும் போதும்
நீதானே நெஞ்சில் இருக்கே.. ஏ

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே

ஊரைவிட்டு எங்கேயோ வேரறுந்து நிக்கிறேன்
கூடு தந்த கிளி பெண்ணே உன்னாலதான் வாழுறேன்
கூரைப்பட்டுச் சேலைதான் வாங்கிச் சொல்லி கேட்கிறேன்
கூடுவிட்டு கூடுபாயும் காதலால சுத்துறேன்
கடவுள்கிட்ட கருவறை கேட்டேன் உன்னைச் சுமக்கவா
உதிரம் முழுக்க உனக்கேதான்னு எழுதிக் கொடுக்கவா
ஓ மையிட்ட கண்ணே உன்னை மறந்தா இறந்தே போவேன்

ஓ.. உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே
தங்கம் உருகுதே அங்கம் கரையுதே
வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே
சொக்கித்தானே போகிறேனே நானும் கொஞ்ச நாளா..
ஓ.. உருகுதே

படம்: வானத்தை போல

பாடல் வரிகள்: நா,முத்துக்குமார் & பா. விஜய்

பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், அருண்மொழி, சுஜாதா

இசை: எஸ. ஏ. ராஜ்குமார்
 

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை
கிளி கூட்டம் போல் எங்கள் கூட்டமே
இது ஆனந்த பூந்தோட்டம் அன்பின் ஆலயம்

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை

பாடும் பறவை கூட்டங்களே
பாசத்தின் மொழியைக் கேளுங்கள்
அண்ணன் என்ற சொந்தமே
அன்னை ஆனதைப் பாருங்கள்
சிலுவைகளை நீ சுமந்து மாலைகள் எமக்கு சூட்டினாய்
சிறகடிக்கும் பறவைக்கெல்லாம்
வானத்தைப் போல மாறினாய்
விழியோடு நீ குடையாவதால் விழிகள் நனைவதில்லை
நெஞ்சில் பூமழை

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை


எங்கள் சொந்தம் பார்த்தாலே சொர்க்கம் சொக்கிப் போகுமே
எங்கள் வீட்டில் பூத்தாலே பூவின் ஆயுள் கூடுமே
இரண்டு கண்கள் என்றாலும் பார்வை என்றும் ஒன்றுதான்
உருவத்திலே தனித்தனிதான்
உள்ளம் என்றும் ஒன்றுதான்
ஒரு சேவல் தான் அடைகாத்தது
இந்த அதிசயம் பாருங்கள்
அண்ணனை வாழ்த்துங்கள்

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.