Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வால்வாயணம் - சிறுகதை

Featured Replies

வால்வாயணம் - சிறுகதை

தென்றல் சிவக்குமார் - ஓவியம்: ரமணன்

 

“உங்க அபார்ட்மென்ட்ல சிசிடிவி இல்லையா?”

“இருக்குப்பா... அது எதுக்கு இப்ப?” - திகிலுடன் நான்.

“சிம்பிள்டி... டேப்ஸ் எடுத்துப் பார்த்துட்டு அதை ப்ரூஃபா வெச்சு லோக்கல் போலீஸ், இல்லன்னா மகளிர் காவல் நிலையம், அதுவும் வேணாம்னா ஹ்யூமன் ரைட்ஸ் வரைக்கும்கூட காக்ரோச் பண்ண முடியும்...”

‘அப்ரோச்’ என்று அவள் சொன்னதுதான் குழப்பத்தின் ஏதோ ஒரு சுழற்சியில் எனக்கு ‘காக்ரோச்’ என்று கேட்டது என்பது இந்நேரம் உங்களுக்குப் புரிந்திருக்கும். சுதாரிப்பதற்குள், “நம்ம கீதாவோட தம்பி லாயர்தான்... நா வேணா பேசிப் பார்க்கவா...” என்று அடுத்த சுற்றைத் தொடங்கினாள். வேறு வழியே இல்லாமல் “செகண்ட் கால்ல வினோத் வராருப்பா... அப்பறம் பேசறேன்” என்று அப்போதைக்குத் தப்பித்தேன்.

p62a.jpg

சுயசிந்தனை, தோழமை, துணை என்ற வரிசைப்படி அடுத்து நிஜமாகவே வினோத்தை அழைத்தேன். வழக்கமான மீட்டிங்குக்காகச் சேலம் சென்றிருந்தார் என்னவர். திவ்யாவாவது மூன்று நிமிடங்கள் முழுக்கதை கேட்டாள். இவர் கதைச் சுருக்கம் ஆரம்பித்த உடனேயே, “மறுபடியுமா..? சரியான லூசு. சரி விடு... அஞ்சு நிமிஷத்து வேலை... ரொம்ப யோசிக்காதே... நியாயங்கறதெல்லாம் நமக்குச் சுலபமானது மட்டும்தான். புரியுதா... வெக்கட்டா... ஹேய் சுமதி இரு இரு... அம்மாட்ட உளறி வெக்காதே...” - அவ்வளவுதான்!

மேலோட்டமாகப் பார்த்தால் இருவருமே சரியான தீர்வைத்தான் சொல்கிறார்கள் என்று தோன்றும். பிரச்னை இதுதான். மூன்றாவது முறையாக இன்று எங்கள் வீட்டுக்கு மட்டுமான தண்ணீர் இணைப்பின் வால்வ் மூடப்பட்டிருந்தது. தளத்துக்கு ஆறு என்று 24 வீடுகள் இருக்கும் எங்கள் குடியிருப்பில், யார் இதைச் செய்கிறார் கள் என்பது முதன்முறை புரியவில்லை.

அன்று ஞாயிற்றுக்கிழமை. அடுத்து வரவிருக்கும் புத்தாண்டையொட்டி நிகழ்ச்சி நிரல் முடிவு செய்வதற்காக, குடியிருப்பின் உறுப்பினர் கூட்டம் கூட்டப்பட்டிருந்தது. “ஞாயிற்றுக்கிழமை காலைல கூட்டமான கூட்டம். பாவம் நீ சமையலைக் கவனி... நான் போயிட்டு வரேன்” என்றவாறே மாமியார் கிளம்பிப் போனார். வினோத் கடமையாக ஷேவிங் செய்து கொண்டிருந்தார். அடுப்பில் ஏற்றியிருந்த பாலை மறந்து, நான் மும்முரமாகத் துணிகளைத் துவைக்க வாகாகப் பிரித்துக் கொண்டிருந்தேன். லேசாகப் புகையும் வாடை வந்தவுடன் ஓடிப்போய் அடுப்பை நிறுத்திவிட்டு வினோத்தை எட்டிப் பார்த்தேன். கவனிக்கவில்லை என்று தெரிந்தது. மாமியார் வருவதற்குள் தடயத்தை அழிக்கவேண்டி, சிங்க்கில் போட்டுத் தண்ணீரைத் திருப்... ம்ஹூம்... காற்றுதான் வந்தது. வெளியில் வந்தபோது வினோத்தும் கன்னங்களில் க்ரீம் நுரையுடன் வந்தார்.

டிஸ்னியில் `டோரேமான்' பார்த்துக் கொண்டிருந்த அர்ச்சனாவிடம், “வாட்ச்மேனை மோட்டார் போடச் சொல்லுடா...” என்று கொஞ்சினார். அவள் நிமிர்ந்து அப்பாவைப் பார்த்துவிட்டு சிரிப்புடன் ஓடினாள். “ஓடாதடீ...” என்பதெல்லாம் அவளுக்கு “சீக்கிரம்...” என்றுதான் கேட்குமாக்கும். நிமிடத்தில் திரும்பி வந்தவள், “வாட்ச்மேன் கீழ இல்லப்பா... ஆனா, மோட்டார் ஓடிட்டுத்தான் இருக்கு... ஹரீஷோட தாத்தாகூட செடிக்குத் தண்ணி விடறாரே...” என்றாள். `சைத்தான்' என்றும் சொல்லலாம்... `சமர்த்து' என்றும் சொல்லலாம். அடுத்த கேள்விக்கு ஆப்ஷனே இல்லாமல் தீர்க்கமாகப் பதில் சொல்வாள்.

துவைத்து மடித்த துண்டை எடுத்து க்ரீமைத் துடைத்து மெத்தை மேல் போட்டுவிட்டு, அழுக்குக் கூடையிலிருந்து டி-ஷர்ட் ஒன்றை மாட்டிக்கொண்டு வினோத் வெளியே போனார். நான் குளியலறை வாளியிலிருந்து கொஞ்சம் தண்ணீர் எடுத்துவந்து பால் பாத்திரத்தில் ஊற்றினேன். ‘சர்’ரென்று குழாயில் தண்ணீர் வரவும் ஒரு கணம் பதறிவிட்டேன். வினோத் கடுகடுவென்று வந்தார். “நம்ம வால்வை மட்டும் யாரோ மூடியிருக்காங்க... ரொம்ப சில்லியா இருக்கும்மா... பத்து நிமிஷம் யோசிச்சா கண்டுபிடிச்சிட மாட்டமா? எவன் வேலைன்னு தெரியலை...”  

p62b.jpg

எனக்கும் எரிச்சல் வந்தது. சரி தொலை யட்டும் என்று அவரவர் வேலையில் மூழ்கி விட்டோம்.

எந்த விஷயமும் முதன்முறை நிகழும் போது அதற்குண்டான முக்கியத்துவம் தரப்படுவதில்லை. அடுத்தடுத்த முறைகளில் தான் மனசு யோசிக்கிறது. புத்தாண்டுக் கொண்டாட்டம் விமரிசையாக நடந்தது.  உள்ளூரில் வசிக்கிற வீட்டு ஓனர்களும்கூடக் குடும்பத்தோடு வந்திருந்தனர். இரவு ஒன்பதரை. பாத்ரூமுக்குப் போன வினோத் உர்ரென்று வெளியே வந்தார். நான் அனுசரணையான குரலில் `என்னப்பா?' என்றேன். `தண்ணி வர்லம்மா... புரிஞ்சுதா' என்றார். இதில் புரிய என்ன... `மைகாட்'. எனக்குப் பழக்கமில்லை என்றாலும் பல்லைக் கடித்தேன். எங்கள் வீட்டின் தலைக்கு மேலிருக்கும் வீட்டின் ஓனர் ராமசாமி. இப்போது வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு மேடவாக்கத்திலோ, எங்கோ இன்னொரு சொந்த வீட்டில் வசிக்கிறார். எப்போதுமே அவருக்கும், சகல திசைகளில் இருக்கிற வீடுகளுக்கும் ஆகவே ஆகாது. அஃப்கோர்ஸ்... இங்கே எல்லாரோடும் `டூ' விட்டுவிட்டதால்தான் இருநூறு வீடு இருக்கிற பெரிய அபார்ட்மென்ட்டாகப் பார்த்துப் போயிருக்கிறார். ஆறேழு வருஷங்கள் தாங்குமல்லவா எல்லாரையும் பகைத்து முடிக்க!

நானும் வினோத்தும் ஒரே நேரத்தில் `ராமசாமி' என்றோம். இங்கிலீஷ் படத்தின் க்ளைமாக்ஸ் சீனில் பேசுவதற்கு நேரமில்லாத நாயகனைப் போல வினோத் வெளியே டார்ச்சோடு கிளம்பிப் போனார். குழாயில் தண்ணீரும் அவரும் ஒரே வேளையில் வந்ததும் ரெண்டாவது ஷோ முடிந்தது. `இவ்ளோ மட்டமாவாடீ இருப்பான் மனுஷன்’ என்றார் வினோத். ‘ஏங்க பன்னண்டு மணிக்கு அந்தாளைப் பத்திப் பேசுறீங்க..?’ என்றதற்கு முறைத்தார் வினோத். “அம்மாவுக்கு எதும் தெரிய வேண்டாம். தெரிஞ்சதுன்னா அடுத்த தடவை அந்தாள் வர்றப்ப சட்டையைப் பிடிச்சு உலுக்கிடுவாங்க... பேசாம இரு...” என்றார்.

என் மாமியார் காவல் துறையில் வேலைபார்த்தவர். ஆஃபீஸ் வேலைதான் என்றாலும் அத்தனை அஃபீஷியல்களுக்கும் அவரைத் தெரியும். போல்டு டைப். ரிடையரான பிறகும்கூட அவ்வப்போது போகிற வருகிற இடங்களில் காவல் யூனிஃபார்ம்கள் சல்யூட் அடித்து சிநேகம் காட்டும்போது பெருமையாக இருக்கும்.ராமசாமிக்கு இதுவும் தெரியும். இருந்தாலும் பல்லிக்கும் கரப்பானுக்கும் கூடக் கோபம் வரலாம் இல்லையா... அவற்றில் கூட திரிசமன் இருந்தே தீருமல்லவா..? அன்று வெகுநேரம் கழித்தே தூங்கினேன். அடுத்து வந்த இரண்டு மாதங்களில் மூன்று முறை வந்து போனார் ராமசாமி. ஆனால், வால்வுக்குத் தொல்லையில்லை. ‘திருந்தியிருப்பார்’ என்று நாங்களா கவே நினைத்துக் கொண்டோம். யாரிடமும் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. மாமியார் உட்பட யாருக்கும் தெரியாது. அர்ச்சனாவுக்கு மட்டும் ஓரளவுக்குத் தெரியும்.

இன்று நான் அர்ச்சனாவைப் பள்ளியிலிருந்து அழைத்து வரும்போது, “இந்தப் பக்கம் வந்தேன்” என்று ‘ரயில்வே’ கண்ணனிடம் பேசிக் கொண்டிருந்தார் ராமசாமி. வால்வு மூடப்பட்டிருந்தது. எனக்குத் தலையை வலித்தது. நேரடியாகக் கேட்பதில் எந்தப் பயனும் இல்லை. அவரது நமுட்டுச் சிரிப்பு கண்முன் தோன்றி மேலும் வெறுப்பைக் கிளறியது. பெரிதாக யோசிக்க முடியாமல்தான் திவ்யாவையும், பின்னர் வினோத்தையும் அழைத்தேன். எனக்குள் யோசித்தபடியே வண்டியை உசுப்பினேன். அர்ச்சனாவைப் பாட்டு கிளாஸிலிருந்து அழைத்துக்கொண்டு திரும்பி வந்தபோது, “ஏம்மா... இந்த வால்வை மூடினா, அவங்க வீட்ல தண்ணி நின்னுபோற மாதிரி நம்ம ராஜேஷ் அங்கிள்ட்ட சொல்லி மாத்திட முடியாதா?” என்றாள். உண்மையிலேயே ஒரு நிமிடம் யோசிக்க வைத்த யோசனை அது.

இதோ இன்னொரு வாரத்தில் ‘வாடகை வாங்க’ என்று வந்துவிடுவார் ராமசாமி. எக்கேடோ கெட்டு ஒழியட்டும், அமைதியாக இருப்போம் என்று வினோத்தைப் போலவும் இருக்க முடியவில்லை. அடுத்த முறை வால்வில் கை வைத்தால் ராமசாமி தலையில் இங்க் கொட்டுவது முதல், வால்வோடு அவர் கை ஒட்டிக்கொள்வது வரை  கையும் களவுமாகப் பிடிபடுமாறு மனசுக்குள் ஏகப்பட்ட திட்டம் தீட்டிப் பத்து நிமிடங்களுக்கொருமுறை பழிவாங்கிக் கொண்டிருந்த அர்ச்சனாவைப் போலவும் இருக்க முடியவில்லை. மிகத் தெளிவாக எங்கள் கண்களில் படும் நாள்களில் மட்டுமே வால்வை அடைத்து, அவர்தான் என்பதைத் தெரியப்படுத்தி இம்சிக்கிறார். குறைந்தபட்சம் நறுக்கென்று நாலு வார்த்தை கூட அவரைக் கேட்க முடியாமல் இருப்பது எனக்கு மெகா எரிச்சலாகிக் கொண்டிருந்தது.p62c.jpg

ஒருவழியாக ராமசாமி வந்த ஒரு நாளில், ஒரு முடிவுக்கு வந்தேன். எனக்கு என் ஆரோக்கியம், அதிலும் மன ஆரோக்கியம் மிக முக்கியம். அர்ச்சனாவை அழைத்துக் கொண்டு, பக்கத்து மளிகைக் கடைக்குப் போய்வருவதாகச் சொல்லிவிட்டு இறங்கினேன்.

“என்னம்மா பண்ணப் போறோம்?”

“ஷ்... சொல்றேன் வா...”

நேரே வண்டியை எடுக்கப் போவது போலவே போய் எங்கள் வால்வை நானே அடைத்துவிட்டேன். குழப்பத்துடன் பார்த்தாள் அர்ச்சனா. “எப்படியும் நாமதான் திரும்பவும் திறக்கப் போறோம்... அதுக்கு எதுக்கு அந்தாளு வந்து அடைக்கற வரைக்கும் காத்திருக்கணும்?” என்றேன். ஏதோ புரிந்தது போல தலையசைத்தாள். ஒரு நிமிடமாவது அவர் குழம்புவார் என்ற திருப்தி எனக்கு.

சாமான்களோடு கடையிலிருந்து திரும்பி வருகையில் தெருமுனையில் எதிர்ப்பட்டது ராமசாமியின் கார்.

வண்டியை பார்க் செய்தபோது வால்வ் திறந்திருப்பது தெரிந்தது.

“ஹா ஹா ஹா... மத்த வால்வெல்லாம் எப்டி இருக்குன்னு வெரிஃபை கூடப் பண்ணல போலிருக்கும்மா” என்றாள் என் ராட்சசி!

http://www.vikatan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.