Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அப்பாவின் காதலிக்கு ஒரு கடிதம்

Featured Replies

அப்பாவின் காதலிக்கு ஒரு கடிதம் - சிறுகதை

 
கணேசகுமாரன், ஓவியங்கள்: ஹாசிப்கான்

 

என் தந்தை மேல் பிரியமானவருக்கு... என் தாய்க்கு மகனாக நான் எழுதிக்கொள்வது...

இப்போது உனக்கு, மன்னிக்கவும் உங்களுக்கு 55 வயது இருக்கலாம். என்னைப் பெற்றவளைவிட ஐந்து வயது குறைவானவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இத்தனை வயதில், இவ்வளவு நாட்களுக்குப் பிறகு உங்களுக்கு எழுதும் இந்தக் கடிதம், ஆச்சர்யமானது மட்டும் அல்ல; அவசியமாகிப்போன துர்பாக்கியம் நிகழ்ந்திருக்கக் கூடாதுதான்.

'கந்தசாமிக்கு, வாரத்துக்கு எட்டு நாள் இருந்தா ரொம்பச் சௌரியமா இருந்திருக்கும். நைனார்குளத்துல நாலு நாளும், தாமரைக்குளத்துல நாலு நாளுமாப் பிரிச்சு வாழ்ந்திருவான். அவனும் என்ன செய்வான் பாவம். ஏழு நாளாப் போச்சுல்ல. ஒருநாள் குறைவாப்போனதுல பாவம் அவனுக்குத்தான் எவ்ளோ சிரமம்’ என்று தெருவாசிகள் என் அப்பாவைப் பேசும் கேலிப்பேச்சு, என் சிறு வயது மூளைக்கு அப்போது புரியவில்லை.

p78c.jpgஅப்பாவும் பெரிதாக மறைத்தும் வாழவில்லை. நண்பர்கள் அவரிடம் கிண்டலாக, 'அங்கே எப்பிடி மாப்ளே சௌவுரிய மெல்லாம்?’ என்று கேட்டால், தளும்பும் சிரிப்புடன் திமிராகவும் கம்பீரமாகவும், 'அவளுக்கு என்ன... எப்பவும்போல நல்லாத்தான் இருக்கா...’ என்பதில் அப்பாவுக்கு இருந்த அதீத சந்தோஷம் எனக்குப் புரியவில்லை.

நாங்கள் வளரும் காலத்தில், உங்களுக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ அதையெல்லாம், என் அம்மாவின் கண்ணீரை முன்னிறுத்தியே வெறுத்தோம். கண்மை, சாந்துப்பொட்டு, முல்லைப் பூ, சிவப்பு நிறம், பி.சுசீலா. மூன்று பெண்பிள்ளைகள் வளரும் வீட்டில், கண்மையும் சாந்துப்பொட்டும் வெறுக்கக்கூடிய ஒன்றாக ஆனது உங்களால்தான் என்பது, கொஞ்சம் கொடூரம்தான். இவற்றுள் என் அப்பாவும் அடங்கிப்போனது எங்கள் துரதிர்ஷ்டம்.

சுசீலா - என்னவோர் அருமையான பாடகி. இன்று வரை அந்தத் தேன்குரலை நான் மனதார ரசித்ததே இல்லை. பாடல் கேட்கும்போது பாடியவர் பெயர் மனதுக்குள் சுற்றிச் சுழல்வதால், என்னால் அவர் பாடிய எல்லாப் பாடல்களையும் வெறுக்கத்தான் தோன்றியது.

திடீர் திடீரென்று அப்பா காணாமல்போகும்போது எல்லாம் என்னைப் பெற்ற வளுக்குத் தெரிந்த ரகசியம், எங்களுக்குத் தெரியாது. காணாமல்போன அப்பா, திரும்ப வீட்டுக்கு வரும்போது எல்லாம் அவரிடம் தாளாத சந்தோஷமும், மூச்சுக்காற்றில் புதிதாக ஒரு வாசனையும், எங்களுக்கு என வாங்கிவரும் இனிப்பில் அன்பு அதிகமாகவும் இருக்கும். குடும்பத்தில் மூத்த ஆண்பிள்ளையாக என்னையும், எனக்குப் பிறகு மூன்று பெண் குழந்தைகளையும் வைத்துக்கொண்டு, என்னைப் பெற்றவள் தனியாகப் பட்டப் பாட்டுக்கும், அழுத கண்ணீருக்கும் நீங்கள்தான் காரணம் என்பது வளரவளர எனக்குப் புரிந்ததில், உங்கள் மீது வெறுப்பு தோன்றியது. ஒரு குடும்பத்தின் ஒட்டுமொத்த வேதனையையும் சம்பாதித்து வாழும் நீங்களும் ஒரு பெண்தானா என்று ஆத்திரம் ஆத்திரமாக வரும். நைனார்குளத்துக்கும் தாமரைக்குளத்துக்கும் இடையில் ஒரு மணி நேர பஸ் பயணம்தான். செட்டிக்குளம், கழுநீர்க்குளம் கடந்தால், நைனார்குளம். வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறை, என் அப்பா இறங்கிப்போகும் அந்தப் பேருந்து நிலையம்தான், நான் இந்த உலகிலேயே வெறுக்கும் முதல் இடமாக இருந்தது.

தாய்க்கோழியின் சிறகுகளுக்குள் குஞ்சுகளாக எங்களைப் பொத்திக்கொண்டு, வரும் உறவுகளிடம் எல்லாம், 'தோப்பு ஏதோ வெலைக்கு வந்துருக்காம். அதைப் பத்தி பேச அசலூருக்குப் போயிருக்காங்க’ என்று அம்மா சொல்லும் பொய்யின் இயலாமை, சாணம் மெழுகப்பட்ட விறகு அடுப்பின் முன் அன்று இரவு அமர்ந்து, எங்களுக்குத் தோசை வார்த்துத் தரும்போது கண்ணீராக வழியும். அப்பா, கோபம் வந்து கத்தும்போது எல்லாம் சொல்லும் ஒரே வாக்கியம், 'உங்களுக்கு சோத்துல குறை ஏதும் வெச்சிருக்கேனா?’ என்பதுதான். ஆனால் அம்மா, தன் வயிற்றையும் மீறி என் அப்பாவை நேசித்தாள். அப்பாவுக்கு அது புரியவில்லையா, இல்லை புரிந்தும் அம்மாவை வெறுத்தாரா என்பது, அப்போது எனக்குப் புரியவில்லை.

அப்பா, என் அம்மாவை எங்கே வெறுத்தார் என்பது, கொஞ்சம் வளர்ந்த பிறகுதான் புரிந்தது. அவரின் சுதந்திரத்தில் என்னைப் பெற்றவள் தலையிட்ட குறுக்கீடு. குடிப்பது என்பதை, அப்பா கொண்டாட்டமாகத்தான் விரும்பினார். அதை என் அம்மாதான் துக்கத்துக்கான வடிகாலாக மாற்றினாள். நைனார்குளத்தில், என் அப்பாவின் சுதந்திரம் இருந்தது; சந்தோஷம் இருந்தது; கொண்டாட்டம் இருந்தது. உங்களோடு என் அப்பாவையும், அவர் தேடிச்சென்ற குடியையும் அடியோடு வெறுக்கத் தொடங்கியது அன்றில் இருந்துதான். 'கந்தசாமிக்கு ரெட்டைக் குதிரை சவாரி கைவந்த கலைதான் போ...’ என்று ஊர் பேசும் பேச்சுக்கு முன், நான் தலை குனிந்துதான் நடந்தேன்.

நான் தலை நிமிர்ந்தும், ஏதும் மாறிவிடவில்லை. எனக்கு வேலை கிடைத்து மூத்த ஆண்பிள்ளையாக என் குடும்பத்தை வழிநடத்தும் தைரியம் வந்தும், என் அம்மா, அப்பாவுக்குப் பயந்தவளாகத்தான் வாழ்ந்தாள். முதலில் தங்கைகளுக்குத் திருமணம்... பிறகுதான் எனக்கு என்று பிடிவாதமாக இருந்ததால், என் வயதும் ஏறிக்கொண்டேபோனது, என்னைப் பெற்றவளுக்கு இன்னும் கவலையைத்தான் தந்தது. உறவினர்களுக்கு மத்தியில் அப்பாவின் இன்னோர் உறவு தெரிந்திருந்ததே, தங்கைகளின் திருமணத்தைக் கேள்விக்குறியில் தள்ளியது.

p78b.jpg

'நாளப்பின்னே நெலம் நீச்சு சொத்துப்பத்துல எனக்கும் உரிமை உண்டுனு அவ வந்து நின்னா, நீ என்ன பண்ணுவே மரகதம்? அவளுக்கு இருக்கிற துணிச்சல் உனக்குக் கிடையாதே... உன் வீட்டுக்காரன் குடிச்சிட்டு வந்து உன்னை அடிச்சா, வாங்கிட்டு நிக்கிறவ நீ. எங்க புள்ளையை உன் பொண்ணுக்குக் கட்டிக்குடுத்துட்டு, நாளைக்கி இந்தப் பஞ்சாயத் துக்கு எல்லாம் எங்க மானத்தை விட்டுட்டு வர மாட்டோம்’ என்ற கூடப்பிறந்த அண்ணன் மனைவியின் காதில், 'இவரு... அங்க போக வரத்தான் இருக்காரு மதினி. தாலி கட்டிக் குடும்பம் நடத்தலை...’ என்ற என் அம்மாவின் குரல் கம்மிய போது, 'அப்பன்னு ஒருத்தன் இந்தக் குடும்பத்துக்கு எதற்கு?’ என்று எல்லாம் யோசித்தது உண்டு.

'சொந்தத்துல கட்டித்தான் நான் இப்பிடிக் கேள்வி கேக்க ஆள் இல்லாம இருக்கேன். நீ பிறத்தியில் பாருப்பா...’ என்ற என் அம்மாவின் வேண்டுகோளும் அத்தனை சீக்கிரம் சரியாகிவிடவில்லை. உங்களுடனான என் அப்பாவின் உறவை மறைத்து, என் மற்றும் தங்கைகளின் கல்யாணம் முடிக்க நாங்கள் பட்ட பாட்டை, நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். இன்னமும் நாங்கள் சம்பந்தம் செய்த குடும்பத்தின் பல உறவுகளுக்கு, என் அப்பாவின் இன்னொரு வாழ்க்கை தெரியாது. எல்லா விசேஷங்களிலும் அப்பா என்ற ஸ்தானத்தில் இருந்து மரியாதை தந்ததைத் தவிர, வேறு எதிலும் அவர் ஈடுபட்டது இல்லை. எனக்கும் குழந்தைகள் பிறந்தன. எல்லோருக்கும் அவரவர் அப்பாதான் ரோல்மாடல் என்பார்கள்; எனக்கும்தான். ஆனால், ஓர் அப்பா எப்படி இருக்கக் கூடாது என்பதில்தான், அவர் ரோல்மாடல்.

ஆனால், எல்லாம் மாறியது 10 நாட்களுக்கு முன்னால்தான். நடுராத்திரி எழுந்து எங்கோ போனவர், அதன் பிறகு வரவே இல்லை. வழக்கம்போலத்தான் என்று அலட்சியமாக இருந்த எங்களுக்கு, நான்கு நாட்கள், ஒரு வாரமாகி, பின் 10 நாட்கள் ஆனதும் பயம் வந்தது. 'இனிமேல் வரவே மாட்டாரோ?’ என்று சந்தேகம் வந்த ஒரு நாளில் அப்பா வந்தார். நிறையக் குடித்திருந்தார். எப்போதும் முகம் மழிக்கப்பட்டு, தன்னை மைனராகவே காட்டிக்கொள்ளும் அப்பாவின் முகத்தில், தாடி மண்டியிருந்தது; கவலை அப்பியிருந்தது. யாரிடமும் எதுவும் பேசவில்லை. சாப்பாடு வைத்தால், சாப்பிட்டார். பழைய கந்தசாமியாக அவர் இல்லாதது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

அன்று ஈஸிசேரில் சாய்ந்தபடி, அவர் கையில் வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தது ஒரு பெண்ணின் புகைப்படம். பாஸ்போர்ட் சைஸைவிட சற்றே பெரிதான படம். அதன் பின்னே ஏதோ எழுதினார். பின் தன் சட்டைப்பையில் வைத்தார். ஒருநாள் அவர் வீட்டில் இல்லாத சமயத்தில், அவரின் சட்டைப்பையை ஆராய்ந்ததில் அந்த போட்டோ கிடைத்தது. போட்டோவின் பின்னால் நுணுக்கி நுணுக்கி எழுதப்பட்டிருந்த எழுத்து, என் அப்பாவுடையது. நான் பிறந்ததில் இருந்து அன்றுதான் என் அப்பாவின் கையெழுத்தைப் பார்த்தேன். அதில் எழுதியிருந்த வார்த்தைகள்தான், இந்த ஜென்மத்தில் நான் பார்க்கவே கூடாது என்று நினைத்திருந்த, நீங்கள் வாழ்ந்த ஊரினை நோக்கி என்னை பஸ் ஏற வைத்தது. அந்த போட்டோவில் நீங்கள்தான் இருந்தீர்கள். அவ்வளவு அழகு. என் அப்பாவின் தவறான உறவின் அழகு. 'பொத்துப்போன மாரோட என் சுசீம்மா, என் விரலை இறுகப் பிடிச்சிருந்தா. அழுதுக்கிட்டு இருந்த என்கிட்ட ஒரு வார்த்தை பேசலை. என்னையே பாத்துக்கிட்டு இருந்தவ, கை இறுக்கம் கொஞ்சம் கொஞ்சமாக் கொறஞ்சி என்னைவிட்டுப் போயிட்டா. அப்புறம் வரவேயில்லை...’ - இதுதான் அந்த போட்டோ பின்னால் எழுதப்பட்டிருந்த வரிகள். கீழே... அன்று நடுராத்திரி, அவர் எழுந்துபோன நாளின் மறுநாள் எழுதப்பட்டிருந்தது. எனக்கோ ஆச்சர்யமாக இருந்தது. 'என் அப்பா அழுதாரா?’ என்னால் நம்பவே முடியவில்லை. நான் மறுநாளே உங்களைப் பார்க்க தாமரைக்குளத்துக்கு பஸ் ஏறினேன்.

p78a.jpg

பெரிதாக விசாரணை எதுவும் தேவைப்படவில்லை. உங்கள் பெயரைச் சொன்னதுமே, வீட்டை அடையாளம் காட்டிவிட்டார்கள். எங்கள் ஊரில் பெரிய பணக்காரர்களின் அடையாளமான மிகப் பெரிய ஓட்டு வீடு. இந்த வீட்டுக்கா அப்பா வந்து போனார்? ஆச்சர்யமாக இருந்தது. ஒரு கணம், என் வீட்டின் சாணம் பூசப்பட்ட தரையும், விறகு அடுப்பில் கழிந்த சிறு வயது வாழ்க்கையும் கண் முன் வந்து போயின. இத்தனை பெரிய, பழங்காலப் பணக்காரத்தனமான வீட்டில், என் அப்பாவின் சந்தோஷம் கூடுதலாகத்தான் இருந்திருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.

பூட்டப்பட்டிருந்த வீட்டின் பக்கத்து வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தவர் என்னைப் பார்த்ததும் எழுந்து வந்தார். அப்பாவின் வயது இருக்கும். 'நீ கந்தசாமி மவனா?’ என்றதற்கு 'ஆமாம்’ எனத் தலையாட்டினேன். 'சாடை தெரிஞ்சுது’ என்றார் லேசாகப் புன்னகைத்தபடி. 'இங்க சுசீலானு ஒருத்தங்க...’ என்று நான் இழுத்ததுமே, 'அதான்... போய்ச் சேந்துட்டாங்களே... மகராசி. கந்தனை விட்டுப் பிரிஞ்சுபோயி 15 நாள் ஆகுது!’ என்றார்.

'பிரிஞ்சுன்னா?’

'சுசீலா செத்துப்போனதைக்கூட ஒன் அப்பன் ஒனக்குச் சொல்லலியா..? அவன் சொல்லித்தான் நீ வந்துருக்கேனு நெனச்சேன்’ என்றார் தொண்டையைச் செருமிக்கொண்டே.

'கொஞ்சம் வெளக்கமாச் சொல்லுங்க... என்னாச்சு அவங்களுக்கு?’ - எனக்கு குழப்பம் கூடியது.

'மார்ல புத்துநோயி வந்து போயிட்டாங்க’ என்றதும் சுரீர் என்றது.

'இல்லீங்கய்யா... எங்க அப்பாவுக்கு இந்த மாதிரி தப்பான தொடர்பு இருக்குனு தெரிஞ்சதுமே, அவரை எங்க வீட்டுல எல்லாருமே வெறுத்துட்டோம். எனக்கு ஒண்ணும் தெரியாது. அவங்களுக்கு வேற சொந்தபந்தம் பசங்க யாரும் இல்லையா?’ என்றதும் என்னை ஏளனமாகப் பார்த்தவர், தன் வீட்டுத் திண்ணைக்கு அழைத்தார்.

'தம்பி... இந்த உலகத்துல நடக்கிற எல்லாத்துக்கும் தப்பு, சரி சொல்ல நாம யார்? சுசீலா, தப்பு இல்லப்பா. கந்தனுக்கு, சுசீலா குலசாமி மாதிரி. இந்த ஊர்ல உள்ள பணக்காரக் குடும்பத்துல ஒருத்தங்கத்தான் சுசீலா. அப்பா, அம்மா, அண்ணன்கள் நாலு பேருனு பெரிய குடும்பம். ஆனா அவங்க விதி, உன் அப்பனை இந்த ஊர் திருவிழாவுல பாத்தப்போ, கந்தனுக்குக் கல்யாணம் ஆகியிருந்துச்சு. நாங்க எல்லாம், அவங்களை ரொம்ப மரியாதையான தூரத்துலதான் பாத்துருக்கோம். சுசீலா, ரொம்பத் துணிச்சல்காரங்க. 'கந்தனோடத்தான் வாழ்வேன்’னு பிடிவாதமா நின்னு, உறவை எதுத்து, இந்த ஓட்டு வீடு போதும்னு, தான் வாழ்ந்த வீட்டைவிட்டு வெளிய வந்தாங்க. எங்களுக்கு, உன் அப்பன் மேல அப்போ அவ்வளவு பொறாமை. 'தாலி கட்டி வாழ்வோம்’னு உன் அப்பன் சொன்னப்போ, அது உன் அம்மாவுக்குச் செய்யுற துரோகம்னு, சுசீலா கடைசி வரைக்கும் தாலியே கட்டிக்கலை. அப்புறம் எங்கேர்ந்து புள்ளைங்க? ஒரு புள்ளை பெத்து, பால் குடுத்து வளத்திருந்தா, அந்த மார்ல புத்துநோய் வந்திருக்காதோ என்னவோ?! உன் அப்பனுக்காக, உன் குடும்பத்துக்காகத் தாலியும் கட்டிக்காம, புள்ளையும் பெத்துக்காம, ஊர் பேசுன கேவலப் பேச்சு எல்லாம் காதுல வாங்கிக்காம வாழ்ந்தாங்க’ என்றார். கொஞ்சம் பெருமூச்சுவிட்டுப் பின் தொடர்ந்து... 'கந்தன் கொழந்தை மாதிரி. என்ன... சாராயம் குடிக்கிற கொழந்தை. குடிச்சாலும் அவன் கொழந்தைதான்.’ என்றார்.

'அப்பா, அடிக்கடி இங்க வருவாரே...’ என்றேன்.

p78.jpg'வருவான்... உன் அம்மாவுக்கும் அப்பனுக்கும் என்ன பிரச்னையோ எனக்குத் தெரியாது. ஆனா, இங்க கந்தன் வரும்போது ஏதாவது மனக்கஷ்டத்தோட வந்தாலும், சுசீலாம்மாவைப் பாத்ததும் அவனுக்குக் கவலை எல்லாம் மறந்திடும். பக்கத்து வீடுங்கிறதால என்கூட மட்டும் பேசுவான். சொந்த உறவுமுறையில கட்டுனதால, உன் அம்மாவோட பிடிப்பு இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ்றதாச் சொல்வான். அவன் கல்யாணமே, உன் அம்மா பிடிவாதத்துல நடந்ததாச் சொல்வான். கட்டாயத்துக்குத் தாலி கட்டி சம்பிரதாயத்துக்குப் புள்ள பெத்து... அது வாழ்க்கை இல்லை தம்பி. கந்தசாமிக்கு, சுசீலா பொண்டாட்டி இல்லை... கொழந்தை. ஏதோ சின்னப்புள்ளைங்க மாதிரி வெளையாடிக்கிட்டு இருப்பாங்க. கந்தன் குடிப்பான்; நெறையக் குடிப்பான். மீன்ல இருந்து கறி வரைக்கும் வாங்கி, அவனுக்குச் சமைச்சுப்போடுவாங்க சுசீலாம்மா. எல்லாம் உன் அப்பன் குடுக்கிற காசுலதானே தவிர, அஞ்சு பைசா அவங்க வீட்டு காசு கிடையாது. பேருக்கு ஏத்தாப்புல அற்புதமாப் பாடுவாங்க. ராத்திரி நேரத்துல உன் அப்பனுக்கு மட்டும் கேட்கிற மாதிரி அவங்க பாடுற 'மாலைப் பொழுதின் மயக்கத்திலே...’ பாட்டை, நான் ரெண்டொருவாட்டி ஒட்டுக்கேட்டுருக்கேன் தம்பி’ என்றார் கசந்த சிரிப்புடன்.

'கேன்சருக்கு வைத்தியம் பாக்கலையா?’ என்றேன் தாள முடியாமல்.

'கந்தனுக்குத் தெரியாம, மறைச்சே வாழ்ந்திருக்காங்க சுசீலாம்மா. இந்த விஷயம் அவனுக்குத் தெரிஞ்சா அவன் தன்னோட சந்தோஷத்தை இழந்துருவான்னு, அவன்கிட்ட எதுவும் சொல்லலை. முத்திப்போச்சு... 'ஒண்ணும் பண்ண முடியாது’னு டாக்டருங்க கையை விரிச்சுட்டாங்க. உன் அப்பன்தான் மெனக்கெட்டான். அவ்ளோ வலியிலேயும் உன் அப்பனை, உன் வீட்டுக்குப் போகச் சொல்வாங்க... கந்தன், போக மாட்டான். பிடிவாதமா அனுப்பிவைப்பாங்க. போறப்போ உன் அப்பன் என்கிட்ட சொல்லிட்டுப் போவான். கண்ணு ரெண்டும் கலங்கிக் கிடக்கும். ஆனா, 'செத்தா... உன் அப்பன் கொள்ளி வெச்சாத்தான் வேகும்... என் கட்டை’னு சொல்லிட்டுத்தான் போனாங்க மகராசி. அதுபோல உன் அப்பன்தான் கொள்ளி வெச்சான். 10 நாள் இந்த வீட்டுல இருந்து, எல்லா காரியமும் முடிச்சிட்டுப்போன உன் அப்பன் இன்னும் வரல. நீ வந்து நிக்கிறே’ என்றார்.

எல்லாவற்றையும் ஜீரணிக்க, எனக்கு மிகக் கஷ்டமாக இருந்தது. உங்களைப் பார்க்க வேண்டும்போல இருந்தது. இது என்ன வாழ்வு? இப்பிடி ஒரு வாழ்க்கையை, என் அப்பாவுடன் வாழ்ந்து சாக ஏன் ஆசைப்பட்டீர்கள்? இரண்டு ஊர் தள்ளி நின்று, இத்தனை நாட்களாகப் பல மனிதர்கள் உங்களைக் காரி உமிழ்ந்தது உங்களுக்குத் தெரியுமா? என் அப்பா மீது நீங்கள் வைத்த காதலில், கடைசியில் உங்களுக்கு மிஞ்சியது என்ன? எங்களின் சித்தி என்ற உறவுமுறையைக்கூட வெறுத்து, அப்பாவின் வைப்பாட்டி என்ற சொல்லில் உங்களுக்கு அப்படி என்ன நிறைவு? எல்லாவற்றையும் உங்களிடம் கேட்டு, பதில் பெற விருப்பமாக இருக்கிறது. முகவரி தெரியாத, தெரிந்துகொள்ள விரும்பாத இந்தக் கடிதம் மட்டுமே, கடைசியில் மிச்சமாக ஆனது. அஞ்சல் செய்ய முடியாத இந்தக் கடிதம், என் அப்பா, நீங்கள், நாங்கள் வாழ்ந்த வாழ்வின் சாட்சியாக, கடைசி வரை என் டைரியிலே இருந்துவிட்டுப் போகட்டும்.

இப்படிக்கு,

கந்தசாமியின் மகன்

ராமன்.

https://www.vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒரு உணர்வுபூர்வமான கதை ! இதில் சரி தவறு என்றெல்லாம் அலச நான் யார் ? மனைவியின் கண்ணீர் சுடுகிறது. அச்சூட்டில் மற்றவளின் காதல் உருகுகிறது. நானும் ஒரு பகுத்தறிவுவாதிதான் என்ற எனது கற்பனையைத் தவிடுபொடியாக்கும் தருணங்களில் இதுவும் ஒன்று. தீர்ப்பு எழுத என் நட்பு வட்டத்தில் உணர்ச்சிவசப்படாத ஒரு நிஜப் பகுத்தறிவுவாதியை நியமிக்க வேண்டியதுதான்.

Edited by சுப.சோமசுந்தரம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.