Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம்களின் ’இதயம்’ என்னவாகும்? ஒரு பொதுத் தேர்தல் கணிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்களின் ’இதயம்’ என்னவாகும்? ஒரு பொதுத் தேர்தல் கணிப்பு

 

முகம்மது தம்பி மரைக்கார்  

 

 

நாட்டில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்கள் இரண்டு காணப்படுகின்றன. அவை, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களாகும்.

கடந்த நாடாளுமன்றில், இறுதியாக அங்கம் வகித்த 20 உறுப்பினர்களில் எட்டுப் பேர், இந்த இரு மாவட்டங்களையும் சேர்ந்தவர்களாவர். அதிலும் குறிப்பாக, அம்பாறை மாவட்டத்தை ஐந்து உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்தினர். இவர்களில் இருவர், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாவர்.  

இலங்கை முஸ்லிம்களின் இதயமாக, அம்பாறை மாவட்டம் கருதப்படுகிறது. அதனால்தான், முஸ்லிம் அரசியல் கட்சிகள் அனைத்தும், அம்பாறை மாவட்டத்தைக் குறிவைத்து இயங்கி வருகின்றன. குறிப்பாக, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அத்திபாரமாக அம்பாறை மாவட்டமே உள்ளது.

முஸ்லிம் காங்கிரஸுக்குக் கடந்த நாடாளுமன்றத்தில், அம்பாறை மாவட்டம் சார்பாகத் தெரிவு செய்யப்பட்ட மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். தேசியப்பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் ஒன்றையும் அம்பாறை மாவட்டத்துக்கு, முஸ்லிம் காங்கிரஸ் வழங்கியிருந்தது. ஆக மொத்தம், முஸ்லிம் காங்கிரஸின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.

கடந்த நாடாளுமன்றத்தில், முஸ்லிம் காங்கிரஸுக்கு மொத்தமாக ஏழு பிரதிநிதிகள் இருந்தனர். இவர்களில் ஆறு பேர், ஐக்கிய தேசிய கட்சி சார்பாகப் போட்டியிட்டும், தேசியப்பட்டியல் ஊடாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக வந்தனர். ஒருவர் மட்டும்தான், முஸ்லிம் காங்கிரஸின் மரச்சின்னத்தில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகி இருந்தார்.

கடந்த தேர்தல்

அம்பாறை மாவட்டம், ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டதாகும். கடந்த முறைஇ இந்த மாவட்டத்திலிலிருந்து முஸ்லிம்கள் மூவரும் சிங்களவர் மூவரும் தமிழர் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். குறித்த மூன்று முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்தவர்களாவர். அம்பாறை மாவட்டத்தில், ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணியமைத்து, யானைச் சின்னத்தில், முஸ்லிம் காங்கிரஸ் கடந்த தேர்தலில் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தில், பொதுத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் 10 வேட்பாளர்களைக் களமிறக்க வேண்டும். கடந்த பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணியமைத்து, யானைச் சின்னத்தில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ், தனது சார்பில் மூன்று முஸ்லிம் வேட்பாளர்களை மட்டுமே களமிறக்கியது. யானைச் சின்னத்தில் போட்டியிட்ட ஏனைய ஏழு பேரும், சிங்களம், தமிழ் வேட்பாளர்களாவர்.

கடந்த பொதுத் தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள், யானைச் சின்னத்துக்கு வாக்களித்ததோடு, தமது மூன்று விருப்பு வாக்குகளையும் தமது கட்சி சார்பில் போட்டியிட்ட மூன்று முஸ்லிம் வேட்பாளர்களுக்கும் வழங்கினர். இதன் காரணமாக, அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்றதோடு, யானைச் சின்னத்தில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸின் மூன்று முஸ்லிம் வேட்பாளர்களும் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று, நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகினர். இதேவேளை, யானைச் சின்னத்தில் போட்டியிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு வேட்பாளர் மட்டுமே, அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றார்.

பொத்துவில் தொகுதிக்கான அநீதி

ஆனால், இம்முறை பொதுத் தேர்தலில், சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணியமைத்து, அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுகிறது. இதேவேளை, வழமையாகக் கூட்டணியமைக்கும் போது, மூன்று வேட்பாளர்களை மட்டுமே களமிறக்கும் முஸ்லிம் காங்கிரஸ், இம்முறை ஆறு வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளது. இதனால், முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள், ஒவ்வொருவரும் பெற்றுக் கொள்ளும் விருப்பு வாக்குகள், வீழ்ச்சியடைவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன.

மறுபுறமாக, தொகுதி ரீதியாக வேட்பாளர் பங்கீடு செய்துள்ளமையிலும், இம்முறை மு.கா, அநீதி செய்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன.

அம்பாறை மாவட்டம் (திகாமடுல்ல தேர்தல் மாவட்டம்), நான்கு தொகுதிகளைக் கொண்டது. அவை, பொத்துவில், சம்மாந்துறை, கல்முனை, அம்பாறை ஆகிய தொகுதிகளாகும். இவற்றில், அம்பாறை சிங்கள வாக்காளர்களையும் ஏனைய மூன்று தொகுதிகள், முஸ்லிம் வாக்காளர்களையும் பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதிகளாகும்.

மேற்படி தொகுதிகளில் பொத்துவில், அம்பாறை ஆகியவை இரட்டை உறுப்புரிமையைக் கொண்ட தொகுதிகளாகும். அந்த வகையில், அம்பாறை மாவட்டத்திலுள்ள நான்கு தொகுதிகளிலும் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாகத் தெரிவு செய்யப்படுவர். அதிக வாக்குகளைப் பெறும் கட்சிக்கு, 'போனஸ்' ஆக - ஓர் உறுப்புரிமை வழங்கப்படும்.

இம்முறை, ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணியமைத்து, 'தொலைபேசி' சின்னத்தில், அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ், தனது ஆறு வேட்பாளர்களில் கல்முனைத் தொகுதியிலிருந்து ஒருவரையும் சம்மாந்துறைத் தொகுதியிலிருந்து ஒருவரையும் தெரிவு செய்துள்ள அதேவேளை, இரட்டை அங்கத்துவமுள்ள பொத்துவில் தொகுதிக்கு, நான்கு வேட்பாளர்களை நியமித்துள்ளது. அதனால்தான், இந்த வேட்பாளர் பங்கீட்டு முறைமை அநீதியானது எனக் கூறப்படுகிறது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் அடிப்படையில், அம்பாறை மாவட்டத்தின் கல்முனைத் தொகுதியில், 74,068 வாக்காளர்கள் உள்ளனர். சம்மாந்துறைத் தொகுதியில், 85,911 வாக்காளர்கள் உள்ளனர். பொத்துவில் தொகுதியில், 159,694 வாக்காளர்கள் இருக்கின்றனர்.

கல்முனைத் தொகுதியில், முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் களமிறக்கப்பட்டுள்ளார். சம்மாந்துறைத் தொகுதியில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், மு.கா சார்பில் போட்டியிடுகிறார். பொத்துவில் தொகுதியில், முஸ்லிம் காங்கிரஸ் சார்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் போட்டியிடும் அதேவேளை, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எல். தவம், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.எம். வாஸித் ஆகியோரும் மு.கா சார்பில் போட்டியிடுகின்றனர்.

'வெட்டுக்குத்து' அரசியல்

இந்த நிலைவரம் காரணமாக, மேற்படி முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களிடையே விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் வகையிலான 'வெட்டுக் குத்து' அரசியல், தேர்தல் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையிலேயே ஆரம்பித்துள்ளமையை, வெளிப்படையாகவே காணக் கூடியதாக உள்ளது.

உதாரணமாக, பொத்துவில் தொகுதியில் மு.கா சார்பாகப் போட்டியிடும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பைஸல் காசிமைஇ அதேதொகுதியில் மு.காங்கிரஸ் சார்பாகப் போட்டியிடும் முன்னாள் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர், வெளிப்படையாகவே எதிர்த்து, அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அதேவேளை, பொத்துவில் தொகுதியில் போட்டியிடும் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எல். தவம், பைசல் காசிமுக்கு ஆதரவாளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த அரசாங்கத்தில், சுகாதார இராஜாங்க அமைச்சராக பைசல் காசிம் இருந்தபோது, அவரின் இணைப்பாளராகத் தவம் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

வேட்பாளர்களிடையே இவ்வாறு 'வெட்டுக்குத்து' அரசியல் ஆரம்பித்துள்ள அதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸுடன் கூட்டணியமைத்துப் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தி, அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று, வெற்றி பெறுமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. கடந்த தேர்தல்களில், ஒன்றாக இணைந்து போட்டியிட்டு வந்த ரணில், சஜித் தரப்பினர், இந்தத் தேர்தலில் இரண்டாகப் பிளவுபட்டுப் போட்டியிடுவதால், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணியமைத்துள்ள சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெறுவதில், சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அபிப்பிராயங்கள் முன்வைக்கப்படுகின்றன.

கணக்கு

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் சஜித் பிரேமதாஸ 259673 வாக்குளையும் (சுமார் 63 வீதம்)இ கோட்டாபய ராஜபக்ஷ 135058 வாக்குகளையும் (கிட்டத்தட்ட 32 வீதம்) பெற்றிருந்தனர். அம்பாறை மாவட்டத்தில், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது பதிவு செய்யப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை, ஐந்து இலட்சத்து 3,790 ஆக இருந்தனர்.

ஆனால், கடந்த ஜனாதிபதித் தேர்தலில், சஜித் பிரேமதாஸவுக்குக் கிடைத்த வாக்குகளில், தமிழர்களின் அதிகப்படியான வாக்குகள், இம்முறை தமிழ்க் கட்சிகளுக்கே போய்ச் சேரும். அவ்வாறான வாக்குகளின் எண்ணிக்கையை, சுமார் 50 ஆயிரமாகக் கணிப்பிடலாம். அதேவேளை, கடந்த ஜனாதிபதித் தேர்தலில், சஜித் பிரேமதாஸவுக்குக் கிடைத்த, ரணில் அணி சார்பானவர்களின் வாக்குகள் இம்முறை, அநேகமாக ஐக்கிய தேசிய கட்சிக்கே கிடைக்கும்.

மறுபுறமாக, அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களில், அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ், ரிஷாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய முஸ்லிம் கட்சிகளும், ஐக்கிய தேசியக் கட்சி, பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளின் சார்பில் முஸ்லிம் வேட்பாளர்களும், இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதனால், குறித்ததொரு கட்சிக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் வாக்குகளிலும் சரிவு ஏற்படுவதற்கான சாத்தியங்களும் உள்ளன.

இவற்றை எல்லாம், மொத்தமாகக் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது, சஜித் பிரேமதாஸ தலைமை தாங்கும் ஐக்கிய மக்கள் சக்தி, அம்பாறை மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று, வெற்றி பெறுமா என்கிற கேள்விகள் உள்ளன. 

அம்பாறை மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியால் அதிகூடிய வாக்குகளைப் பெற்று, வெற்றிபெற முடியாமல் போனால், முஸ்லிம் காங்கிரஸால் அதிகபட்சமாக இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைத்தான் அந்த மாவட்டத்தில் வெற்றிகொள்ள முடியும் என்கிற கணிப்பீடுகளும் உள்ளன.

அம்பாறையில் இணையாத 'கை'கள்

இதேவேளை, அநேகமான மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்ணியமைத்தும், புத்தளம் மாவட்டத்தில், முஸ்லிம் காங்கிரஸுடனும் கூட்டணியமைத்து, எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் ரிஷாட் பதியுதீன் தலைமயிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அம்பாறை மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடுகிறது.

இதன் காரணமாகவும், அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக் கொள்ளும் வாக்குகளில் சரிவு ஏற்படும். கடந்த பொதுத் தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், 33,102 வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில், பகை அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் கடந்த அரசாங்கத்தில் ஏற்பட்ட 52 நாள் அரசியல் குழப்பம் காரணமாக, கைகோர்த்துக் கொண்டு நட்புறவுடன் செயற்படத் தொடங்கின. இதனால், புத்தளம் மாவட்டத்தில் மேற்படி இரண்டு முஸ்லிம் கட்சிகளும் கூட்டணியமைத்து, எதிர்வரும் பொதுத் தேர்தலில் தராசு சின்னத்தில் போட்டியிடுகின்றன.

மேற்படி தராசு, 'முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு' எனும் கட்சியின் சின்னமாகும். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், ரவூப் ஹக்கீமுடைய மச்சானும் (மாமி மகன்) அவரின் பிரத்தியேகச் செயலாளருமான எம். நயீமுல்லா என்பவர், இந்தக் கட்சியின் செயலாளராகப் பதவி வகிக்கின்றார்.

எவ்வாறாயினும், புத்தளம் மாவட்டத்தில் கூட்டணியமைத்துப் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இலங்கை முஸ்லிம்களின் இதயமாகக் கருதப்படும் அம்பாறை மாவட்டத்தில் பிரிந்து நின்று, எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றமையானது, என்ன வகையான அரசியல் என்று, சமூக அக்கறையுள்ள முஸ்லிம் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில், முஸ்லிம் காங்கிரஸுடன் கூட்டணியமைத்துப் போட்டியிடுவதற்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒரு கட்டத்தில் தயாராக இருந்ததாகவும், ஆனால் மக்கள் காங்கிரஸ் எதிர்பார்த்த வேட்பாளர் எண்ணிக்கையை வழங்குவதற்கு, முஸ்லிம் காங்கிரஸ் சம்மதிக்காமையால்தான், மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் தீர்மானத்தை எடுத்ததாகவும் அறிய முடிகிறது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, தேர்தல் எப்போது நடைபெறும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. எவ்வாறாயினும், அதிக காலத்துக்குத் தேர்தல் தள்ளிப் போகவும் மாட்டாது என்கிற பேச்சுகளும் உள்ளன.

இந்தப் பின்னணிகளில், பொதுத் தேர்தலொன்று நடந்தால், தாங்கள் கடந்த முறை பெற்றுக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில், பாரிய வீழ்ச்சி ஏற்படலாம் என்ற அச்சம், முஸ்லிம்களிடம் உள்ளது.

ஆனால், முஸ்லிம்களின் விமோசனம், வெறுமனே நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் இல்லை என்று, வாதிடுவோரும் உள்ளனர்.

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/முஸ்லிம்களின்-இதயம்-என்னவாகும்-ஒரு-பொதுத்-தேர்தல்-கணிப்பு/91-250884

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்கள் இரண்டு காணப்படுகின்றன. அவை, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களாகும்.

மன்னாரை விட்டாச்சு? என்னாச்சு? 🤔

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இதயம் இருந்தால் தானே

2 hours ago, Nathamuni said:

நாட்டில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்கள் இரண்டு காணப்படுகின்றன. அவை, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களாகும்.

மன்னாரை விட்டாச்சு? என்னாச்சு? 🤔

2012 ஆம் சனத்தொகைக் கணக்கீட்டின் படி முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை மூன்றாவதாகவே உள்ளது. அதன் பின்னரான எட்டு வருடங்களில் நான்கு வருடங்கள் மகிந்தவின் ஆட்சி இல்லாமையால், முஸ்லிம்களின் குடியேற்றங்கள் பெரியளவில் இடம்பெற்று இருக்காது என நினைக்கின்றேன். ஆகவே இப்பவும் அவர்கள் 3 ஆவதாகத்தான் இருக்கும் சாத்தியம் அதிகம்.

https://en.wikipedia.org/wiki/Mannar_District

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, நிழலி said:

2012 ஆம் சனத்தொகைக் கணக்கீட்டின் படி முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை மூன்றாவதாகவே உள்ளது. அதன் பின்னரான எட்டு வருடங்களில் நான்கு வருடங்கள் மகிந்தவின் ஆட்சி இல்லாமையால், முஸ்லிம்களின் குடியேற்றங்கள் பெரியளவில் இடம்பெற்று இருக்காது என நினைக்கின்றேன். ஆகவே இப்பவும் அவர்கள் 3 ஆவதாகத்தான் இருக்கும் சாத்தியம் அதிகம்.

https://en.wikipedia.org/wiki/Mannar_District

மூன்றாவதா? அப்ப இரண்டாவது யாரு? 🤔

1 hour ago, Nathamuni said:

மூன்றாவதா? அப்ப இரண்டாவது யாரு? 🤔

மத ரீதியில் முதலாவது கிறிஸ்தவர்கள் (57.48 %). இரண்டாவது இந்துக்கள் (23.69%), மூன்றாவது இஸ்லாமியர்கள் (16.71%).

இன ரீதியில் தமிழர்கள் முதலாம் இடம் (81.34 %), முஸ்லிம்கள் இரண்டாம் இடம் (16.24 %), சிங்களவர்கள் மூன்றாம் இடம் (1.98%) 

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்களின் ’இதயம்’ என்னவாகும்? ஒரு பொதுத் தேர்தல் கணிப்பு

ஆறுமுகம் தொண்டமான்போல்..வீட்டில் விழுந்து ..ஆசுப்பத்திரியில் உயி போகும்...

6 hours ago, நிழலி said:

மத ரீதியில் முதலாவது கிறிஸ்தவர்கள் (57.48 %). இரண்டாவது இந்துக்கள் (23.69%), மூன்றாவது இஸ்லாமியர்கள் (16.71%).

இன ரீதியில் தமிழர்கள் முதலாம் இடம் (81.34 %), முஸ்லிம்கள் இரண்டாம் இடம் (16.24 %), சிங்களவர்கள் மூன்றாம் இடம் (1.98%) 

சைனீசு இரண்டாமிடம்....மத இனரீதியில்....வெகு விரைவில்..

15 hours ago, நிழலி said:

மத ரீதியில் முதலாவது கிறிஸ்தவர்கள் (57.48 %). இரண்டாவது இந்துக்கள் (23.69%), மூன்றாவது இஸ்லாமியர்கள் (16.71%).

இன ரீதியில் தமிழர்கள் முதலாம் இடம் (81.34 %), முஸ்லிம்கள் இரண்டாம் இடம் (16.24 %), சிங்களவர்கள் மூன்றாம் இடம் (1.98%) 

இப்பொழுது இன ரீதியில் 44% மேல். நீங்கள் குறிப்பிட்டது பழைய  2012 கணக்கெடுப்பு. ஆனால் 2018ம் ஆண்டு உத்தியோக்ச்பூர்வற்ற கணக்கெடுப்பின்படி மத ரீதியாக முதலாமிடம் என்று நினைக்கிறேன். ஆதாரத்தை பிறகு இணைக்கிறன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.