Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிராமியக் கலைகளில் நாட்டுக்கூத்துக்கள் - காத்தவராயன் கூத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிராமியக் கலைகளில் நாட்டுக்கூத்துக்கள் - காத்தவராயன் கூத்து

1593334349_ny10.jpg

காத்தவராயன் கூத்து ஏனைய நாட்டுப்புறக் கூத்துக்களைவிட மூன்று சிறப்பம்சங்களை கொண்டு விளங்குகிறது. ஒன்று இது இலங்கையில் மட்டுமே ஆடப்படும் ஒரு கூத்தாகும். இந்தியாவில் காத்தவராயன் கதை கூத்தாக ஆடப்பட்டாலும் அது அங்கு ஆட்டக்கூத்தாகவே இடம்பெற்று வருகிறது. இலங்கையில் இடம்பெறும் காத்தவராயன் கூத்தில் ஆட்டங்கள் இடம்பெறுவதில்லை. ஆனால் பாடல்களின் தாளத்திற்கேற்ப ஒரு அழகிய துள்ளுநடை இதன் தனித்துவமாகும்.

இரண்டாவது இக்கூத்து கிராமிய சிறு தெய்வ வழிபாட்டுடன் சம்பந்தப்பட்டது. இதன் பிரதான பாத்திரம் முத்துமாரியம்மனாகவும் அடுத்த பாத்திரம் காத்தவராயனாகவுமாகவே விளங்கிவருகின்றனர். இது பெரும்பாலும் அம்மன் கோவில்களிலேயே மேடையேற்றப்படுவதுண்டு. அநேகமாக அம்மன் பருவம் அடைந்த நாளாக கருதப்படும் ஆடிப்பூரம், அம்மன் வழிபாட்டுக்குரிய சித்திரைக்கஞ்சியன்று வரும் சித்திராபௌர்ணமியிலேயே அது மேடையேற்றப்படுவதுண்டு.

மூன்றாவது இந்த நாடகத்தில் வரும் பாடல்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் நாளாந்தம் பாவனையிலுள்ள நாட்டார் பாடல்களின் மெட்டிலேயே அமைந்திருக்கும். அவ்வகையில் தாலாட்டு, ஒப்பாரி, கரகப்பாடல், கும்மி மெட்டு, காவடிச்சிந்து, அம்மானை, அம்பா வகையான கடற்பாட்டு ஆகிய மெட்டுகளிலேயே அமைந்திருக்கும். அதன் காரணமாக இத ஒரு மக்கள் மயப்பட்ட கலையாக விளங்கிவருகிறது. அதன் காரணமாக இக்கூத்தில் நடிக்காதவர்கள் கூட தொழில் செய்யும்போதும், பொழுதுபோக்காகவும் இப்பாடல்களை பாடுவதுண்டு. இக்கூத்திலே பக்கவாத்தியங்களாக உடுக்கு, ஆர்மோனியம், தாளம் என்பன பயன்படுத்தப்படும். உடுக்கு ஒலிக்கு ஒரு வெறியூட்டும் தன்மை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. உடுக்கின் ஓசையையே நடிகர்கள் தாளத்திற்கு ஏற்ற வகையில் துள்ளுநடை போட ஒரு கட்டுப்பாட்டைக்கொடுக்கும் அதே போன்று நடிகர்களின் பாடல்கள் சுருதி தவறவிடாமல் இருக்கும் வண்ணம் ஆர்மோனியம் கட்டுப்படுத்தும் சுருதி தவறாத பாடலும், ஆர்மோனிய இசையும், உடுக்கொலியும் ஒன்றிணைந்து வர நடிகர்களின் பாடலும், நடிப்பும், நடையும் பார்வையாளர்களை தங்களுடன் கட்டிப்போடும்.

இசை நாடகங்கள் ஓரளவுக்காகவாது இசையுடன் பரீட்சயம் உள்ளவர்களே ஆடக்கூடியதாக உள்ள அதே வேளையில் நாட்டுக்கூத்துக்கள் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் போன்ற உழைக்கும் மக்களின் தலைகளாகவே விளங்கிவருகின்றன. அவ்வகையில் காத்தவராயன் கூத்தும் அறுவடை முடிந்து அடுத்த விதைப்பு தொடங்குவதற்கு இடையேயுள்ள காலப்பகுதி மேட்டு நிலப்பயிர்களின் அறுவடை முடிந்து அடுத்த போகம் ஆரம்பிப்பதற்கு இடையேயான காலப்பகுதி என்பவற்றில் ஆடப்படும்.

அண்ணாவியார் நடிகர்களுக்கு கொப்பி கொடுப்பதுடன் சம்பிரதாயபூர்வமாக கூத்துப்பழக ஆரம்பிப்பார்கள். இதில் முக்கிய விடயம் கூத்து பழகும் போதே நடிகர்களின் உறவினர்கள், அயலவர்கள் எனப்பலரும் பார்வையாளர்களாகக் கூடிவிடுவார்கள். கூத்து மேடையேறும் நாளில் ஊருக்கெ பொதுவான ஒரு விழாவாக ஊரே திரண்டுவிடும். பாய்களும் கொண்டு, கச்சான் கடலையும் வறுத்துக்கொண்டு கூத்துப்பார்க்க குடும்பம் குடும்பமாக பிரசன்னமாகிவிடுவார்கள்.

அங்கு சில தற்காலிக தேனீர் கடைகளும் உருவாகிவிடும். கூத்தில் நடிப்பவர்கள் எவரும் மேடையேறும்போது மது அருந்தமாட்டார்கள். சிலர் விரதமிருந்தே கூத்தாடுவார்கள். முக்கியமாக கடைசி அம்மனாக நடிப்பவர் விரதம் அனுட்டித்தே நடிப்பார்.

முதல்நாள் இரவு எட்டுமணிபோல் ஆரம்பமாகும் கூத்து மறுநாள் காலை சூரியன் உதிக்கும்போது காத்தவராயன், ஆரியமாலை திருமணத்துடன் நிறைவுபெறும். கூத்து நிறைவு பெற்றதும் அனைவரும் பொங்கிப்படைத்து அம்மனை வழிபட்டு அண்ணாவியாருக்கு வேட்டி சால்வை உட்பட தட்சணை பிரதம நடிகரால் வழங்கப்படும். அந்த நாட்களில் இது ஒரு கலைப்படைப்பின் மேடையேற்றம் என்பதை விட ஒரு பக்தி பூர்வமான வழிபாடு எனவும் அம்மை, கொப்பிளிப்பான் போன்ற நோய்கள் வராமல் அம்மன் பாதுகாப்பதற்காக அம்மனை ஆற்றுப்படுத்தும் ஒரு வேண்டுகையாகவும் கருதப்பட்டது.

இக்கூத்து வடபகுதி முழுமைக்கும், கிழக்கின் சில பகுதிகளுக்கும் பொதுவான ஒரு கலையாக இருந்தபோதிலும் இடத்துக்கிடம் சிறுசிறு வேறுபாடுகள் உண்டு. இதன் மூல வடிவத்திற்குள் சில இடைச்சொருகல்கள் இருக்கக்கூடும் எனவும் நம்பப்படுகிறது. அதே போன்று சில பாடல்கள் சில இடங்களில் மத்திம கதியிலும் சில மந்த கதியிலும், அதே பாடல்கள் வேறு சில இடங்களில் துரித கதியிலும் அமைந்திருப்பதை காணமுடியும். ஆனால் பாடல்களிலோ, துள்ளுநடையிலோ எவ்வித பெரும் வேறுபாடுகளும் இல்லை.

வடமராட்சி மாதனையில் வழக்கத்திலுள்ள கூத்தை அடிப்படையாகக் கொண்டு பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் முயற்சியால் காத்தவராயன் கூத்து நூல் வெளியிடப்பட்டது. அதில் இடைச்செருகல்கள் மிகவும் அவதானமாக அகற்றப்பட்டிருந்தன. மாதனைக்கூத்திலுள்ள சிறப்பம்சம் இசை, நடை, நடிப்பு எல்லாவற்றிலுமே உயர்தரத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும். நயினாதீவு, நெடுந்தீவு போன்ற இடங்களில் ஆடப்படும் கூத்துக்களில் இசை தொடர்பாக கூடிய கவனம் செலுத்தப்படும். தென்மராட்சி பகுதிகளில் மாதனைப்பகுதி போன்றே அமைந்திருக்கும். அதே பாணி கிளிநொச்சி, பரந்தன், கண்டாவளை பகுதிகளிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. முல்லை மாவட்டத்தில் பாடல் மெட்டுக்கள், நடை என்பன துரித கதியில் அமைந்திருப்பதால் கூத்து தொடங்கி முடியும் வரை பார்வையாளர்களை ஒரு உற்சாகமான நிலையில் வைத்திருக்கும். மன்னார் முல்லை மாவட்டங்களின் இந்த துரித கதிக்கு அங்கு நிலவும் ஆட்டக்கூத்துக்களின் தாக்கம் காரணமாக இருக்கலாம் எப்படியும் அவற்றில் ஒரு தனிக்கவர்ச்சி இருப்பதை மறுக்கமுடியாது. புத்தூர் பகுதிகளில் மேடையேற்றப்படும் புதுவை அன்பனின் நாடகங்களிலும் துரித கதியையும் தொடர்ச்சியான எழுச்சியையும் அவதானிக்கமுடியும்.

கூத்து ஆரம்பமாவதற்கு முன்பாக நடிகர்கள் அனைவரும் வேடம் புனைந்து ஒப்பனை செய்ததும் ஆலயத்திற்குச் சென்று தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி, கூத்து சிறப்புற நடைபெற அருள் வேண்டி வணங்குவார்கள்.

அடுத்து நடிகர்கள் அனைவரும் ஒன்றாக மேடையிலேறி இறைவணக்கப்பாடலை பாடுவார்கள். அண்ணாவியார் பாட மற்றைய நடிகர்கள் பிற்பாட்டாக பாடுவார்கள்.

சில கூத்துக்களில் பாத்திர அறிமுகமும், வரவும் ஒரே பாடலில் அமைந்திருக்கும். இங்கு முதல் அம்மன் வரும்போது முதலில் அறிமுகப்பாடலும், பின்பு வரவுப்பாடலும் பாடப்படும் மேடையில் தோன்றும் பாத்திரங்கள் தாமாகப்பாடி அறிமுகம் செய்தாலும் பாடல் வரிகள் இன்னொருவர் கூறுவது போன்று அமைந்திருக்கும்.

“அக்காளும் அக்காளும் தங்காளுமாம் - அந்த ஆயிழைமார் கன்னியர்கள் ஏழுபேராம். இலங்கையிலே மாரி பெண் பிறந்தாள் - அந்த ஏழு பேர்க்கும் அம்மன் நேரிளையாள்” இது அம்மனின் அறிமுகப்பாடலில் சில வரிகள். இவை வேறு ஒருவர் அம்மனை அறிமுகம் செய்வது போன்று அமைந்திருந்தாலும் கூட மேடையில் அம்மன் பாத்திரத்தாலேயே பாடப்படும் இதில் இலங்கையிலே மாரி பெண் பிறந்தாள் என்ற வசனம் இக்கூத்து இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியிலேயே உருவானது என்பதற்கான வலுவான சாட்சியமாகும்.

அடுத்து அம்மனின் வரவுப்பாட்டு இடம்பெறும.; இது கரகாட்டமெட்டில் அமைந்துள்ளபடியால் சில இடங்களில் அம்மன் பாத்திரம் வேப்பிலையை கையிலேந்திக் கரகாட்ட ஆட்டம் ஆடுவதுண்டு. வேறு சில இடங்களில் வரவுப்பாடல் வழமையான துள்ளுநடையாகவே இடம்பெறும்.

“பட்டாடை தானுடுத்தி முத்துமாரியம்மன் பவுசுடனே வாறாவாம் மாரிதேவி அம்மன் பொன்னாடை பூண்டல்லவோ முத்துமாரி அம்மன் போதரவாய் வாறாளாம் மாரிதேவி அம்மன்” இவ்வாறு அம்மன் தனது வரவை பிறர் கூறுவது போன்ற வார்த்தைகளில் வெளியிடுவாள். மாரியம்மன் காத்தவராயனைப் பாடசாலைக்கு அனுப்பும் கட்டத்தில் - “பள்ளிக்கூடம் போகவேணும் என் மகனே பாலா”, என்ற பாடலுக்கு பதில்பாடலாக காத்தவராயன்,

“சட்டம்பி துட்டனனை பெற்றவளே தாயே! பிரம்பெடுத்து அடித்திடுவான் பெற்றவளே தாயே”, எனப்பாடுவான். சட்டம்பி என்ற சொல்லால் ஒரு காலத்தில் வடபகுதி தமிழ்மக்களால் ஆசிரியர்கள் அழைக்கப்படுவதுண்டு. அதுமட்டுமன்றி அந்நாட்களில் கையில் பிரம்பில்லாத ஆசிரியரைக் காண்பது அரிது. சாதாரண உழைக்கும் மக்களின் பிள்ளைகளுக்கு வீட்டில் படிப்பதற்கோ பாடம் சொல்லிக்கொடுப்பதற்குப் பெரியவர்களோ இருப்பதில்லை. அதனால் அவர்கள் நாளாந்தம் வாத்தியாரிடம் பிரம்படி வாங்கவேண்டி வரும். இப்படியான சம்பவங்களின் பிரதிபலிப்பே அப்பாடல் வரிகளாகும். இதுவும் வடபகுதியில் அக்கூத்து உருவானமைக்கு இன்னுமொரு சாட்சியாகும்.

இது இரவு முழுவதும் இடம்பெறும் கூத்தாகையால் ஒரு பாத்திரத்தை ஒரே நடிகர் தொடர்ந்து பாடி நடிப்பது மிகவும் சிரமமான காரியமாகும். எனவே அம்மன் பாத்திரத்தை முதல் அம்மன், இரண்டாவது அம்மன், மூன்றாவது அம்மன் என மூவர் நடிப்பதுண்டு. இவ்வாறே காத்தவராயன் பாத்திரமும் பால காத்தான் ஒரு சிறுவனாலும், ஏனைய ஆதிகாத்தான், கிளிக்காத்தான், கழுக்காத்தான் என நால்வர் நடிப்பதுண்டு.

முன்பெல்லாம் பெண் பாத்திரங்களையும் ஆண்களே நடிப்பதுண்டு. ஆனால் இப்போது பெண் பாத்திரங்களை பெண்களே நடிப்பது கூத்துக்கு மெருகூட்டும் வகையில் அமைந்துள்ளது. புராண இதிகாசங்களில் வரும் நாரதர் பாத்திரம் இதிலும் வருவதுண்டு. இனிய குரல் வளம் உள்ளவர்களையே இப்பாத்திரத்திற்கு தெரிவு செய்வார்கள். நாரதர் வரவின் போது பாடப்படும்.

“சம்போ சங்கர அட்சய ரூபா – தாள் பணிந்தேன் கைலையின் வாசா ஆனந்தத்தேவா அம்பிகை பாகா - அடிபணிந்தேன் தேவாதிதேவா”, என்ற இப்பாடலில் கர்நாடக இசைக்குரிய அசைவுகள் சங்கதிகள் தொனிப்பதை அவதானிக்கமுடியும் அடுத்துவரும் அவரின் வரவுப்பாடலும் துரித கதியில் அமைந்து பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும். “விரித்த சடையும் முப்பிரி நூலும் பஞ்சாட்சரமும் துலங்கவே வீணை கையில் ஏந்திக்கொண்டு நாரதமாமுனி தோன்றினான்”,

சாதாரணமாக இரவு பதினொருமணியளவில் கட்டுப்படுத்தமுடியாதவாறு தூக்கம் கண்களைச் சுழற்றும் அந்த நேரத்தில் இடம்பெறும் ஆதிக்காத்தானின் வரவு பார்வையாளர்களின் தூக்கத்தை விரட்டிவிடும்.

“ஆதி சிவன் மைந்தனல்லோ - இங்கு ஆதிகாத்தான் ஓடி வாறேன் சபையோரே சோதி சிவ சங்கரனை தாள் பணிந்து சபையோர்க்கு வணக்கம் செய்தேன்”, அதுபோன்றே இரண்டு மூன்று மணியளவில் தூக்கம் தொல்லை கொடுக்கும்போது காத்தான், சின்னான் விவாதப்பட்டுக்கள் உற்சாகத்தை ஏற்படுத்தும்.

காத்தான் : விடமாட்டேன் தம்பி நான் விடமாட்டேன். ஆரியமாலையை மாமணம் செய்யாமல் விடமாட்டேன்.

சின்னான் : விடமாட்டேன் அண்ணா நான் விடமாட்டேன். ஆரியமாலையை மாமணம் செய்திடவிடமாட்டேன்.

இவ்வாறு இரவு முழுவதும் உற்சாகம் குன்றாமல் பார்வையாளர்களை தன்னுடன் கூட்டிச்செல்லும் இக்கூத்தில் அதிகாலையில் கோழி கூவும் போது காத்தான் கழுவேறும் காட்சி ஆரம்பமாகும்.

“ஓராம்படி ஏறையிலே பெற்றவளே தாயே – என் உடலோ நடுங்குதனை பெற்றவளே தாயே”, என ஆரம்பமாகும் பாடல் பத்தாம்படி வரை நீளும். இப்பாடல் வரிகளும், பாடல் மெட்டும் பார்வையாளர்களை கண்ணீர்விட வைத்துவிடும் இம்மெட்டு நாட்டார் இசையைச் சேர்ந்தது என்றாலும் கூட முகாரி இராகத்திற்குரிய சோகமயமான அம்சங்கள் தொனிப்பதை அவதானிக்கமுடியும்.

இறுதியில் சூரியன் உதிக்கும் போது காத்தவராயன் ஆரியப்பூமாலை திருமணத்துடன் கூத்து முத்துமாரி வணக்கத்துடன் நிறைவு பெறும்.

“மலரோ மலரெடுத்து காத்தலிங்கம் நானும் மாதாவைத் தெண்டனிட்டேன் மாரிபிள்ளை நானும், மலரோ மலரெடுத்து ஆரியப்பூமாலை மாமியார்க்குச் சூடவந்தேன் ஆரியப்பூமாலை”.

இவ்வாறு மகிழ்ச்சிகரமான முடிவுடன் நிறைவுபெறும் ஒரு இரவு முழுவதும் நடைபெறும் கூத்தை பார்த்து இரசித்த மனநிறைவுடன் மக்கள் அம்மனை வழிபட்டு வீடு செல்வார்கள்.

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்

http://aruvi.com/article/tam/2020/06/28/13775/

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் காத்தவராயன் கூத்து பார்த்திருக்கிறன். ஆனால் முடியும் வரைக்கும் பார்க்கிறேல்லை....அரைவாசியிலையே குப்புற சிலீப்பிங்..:grin:

 

  • கருத்துக்கள உறவுகள்
On 3/7/2020 at 06:26, குமாரசாமி said:

நானும் காத்தவராயன் கூத்து பார்த்திருக்கிறன். ஆனால் முடியும் வரைக்கும் பார்க்கிறேல்லை....அரைவாசியிலையே குப்புற சிலீப்பிங்..:grin:

 

சேம் பிளட் 😂

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டார் கலைகளைக் கட்டிக்காக்கும் வட்டுக்கோட்டை.!

NY.jpg

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி இலங்கையின் பல சிறந்த கல்விமான்களை உருவாக்கிய பெருமை பெற்றது. அது மட்டுமின்றி இலங்கையின் .. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலும் இலங்கை சுதந்திரம் பெற்ற ஆரம்பகாலத்திலும் வழிநடத்தியவர்களில் பலர் இக்கல்லூரியில் கல்வி பயின்றவர்களே.

இவ்வாறு காலவளர்ச்சிக்கேற்ற வகையில் கல்விப்புலத்தில் தன்னை ஒரு உயர்மட்டத்தில் நிலைநிறுத்திக் கொண்ட இந்தக் கிராமம் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் விளைந்த ஒரு திருப்பு முனையின் ஒரு தளமாகவும் விளங்கியது. 1986ம் ஆண்டு தமிழரசுக் கட்சியின் மகாநாட்டில் முன்வைக்கப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானம் மூலமே முதன்முதலாகத் தமிழீழக் கோரிக்கை பிரகனப்படுத்தப்பட்டது. இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையிலேயே தமிழீழ விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போரின் போதும், இனப்பிரச்சனைக்கான தீர்வை எட்டும் முகமாக மேற்கொள்ளப்பட்ட பேச்சு வார்த்தைகளின் போதும் அவை அனைத்தும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை அடிப்படையாக வைத்தே முன்னெடுக்கப்பட்டன. எனவே தமிழினத்தின் வரலாற்றில் வட்டுக்கோட்டை தனக்கென ஒரு தனி இடத்தை வகிக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

இவ்வாறு கல்வித்துறையில், உரிமைப்போராட்டத்தில் தனது பெயரை நிலையாக பதித்துள்ள வட்டுக்கோட்டை எமது இனத்துக்குரிய பண்பாட்டு அம்சங்களைக் கட்டிக்காப்பதிலும் முன்னணியிலேயே திகழ்ந்து வந்தது. எந்த ஒரு இனத்தினதும் பாரம்பரிய கலை, இலக்கியங்கள் அந்த இனத்தின் பண்பாட்டின் அடிப்படை அம்சங்களில் ஒன்றாகவும் அவற்றை அழகியல் வடிவத்தில் முன்வைப்பவையாகவும் திகழ்கின்றன. அவ்வகையில் எமக்கே உரிய பாரம்பரிய கலைவடிவங்களை பேணிப்பாதுகாத்து வளர்த்தெடுப்பதில் வட்டுக்கோட்டைக் கிராமம் காத்திரமான பங்கை வகித்துகிறது. இவற்றில் தருமபுத்திரன் நாடகம், விராட நாடகம், குருகேத்திர நாடகம் என்பன முக்கியமான ஆட்டக்கூத்துக்கள் அதில் இவை வடமோடிக்கூத்துகளுக்குரிய பொது முறையை கொண்டிருந்த போதும் வட்டுக்கோட்டைக்குரிய தனித்துவம் இருப்பது அவதானிக்க முடியும். அத்துடன் தமிழரின் முக்கிய கலைகளான குதிரை ஆட்டம், காவடி ஆட்டம், கரகாட்டம், பொம்மலாட்டம், சூரன் ஆட்டம், தயிர் முட்டி அடித்தல் போன்றவற்றை இவ்வூர் கலைஞர்கள் பாதுகாத்து நிகழ்த்தி வருகின்றனர்.

வட்டுக்கோட்டை மோடி

இங்கு நிகழ்த்தப்பட்டுவரும் தருமபுத்திரன் கூத்து, விராடன் கூத்து, குருகேத்திரன் கூத்து என்பன பொதுவாகவே வடமோடிக் கூத்து என்ற வகைக்குள் அடங்குவதாகக் கூறப்படுகிறது. எனினும் இதில் காணப்படும் சில சிறப்பம்சங்கள் காரணமாக இவை வட்டுக்கோட்டை மோடி என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக வட இந்திய இதிகாசக்கதைகளைக் கொண்ட நாடகங்களே வடமோடிக்கூத்துக்கள் என அழைக்கப்படுகின்றன. வட்டுக்கோட்டைக்கூத்துக்களும் வடநாட்டு இதிகாசக் கதைகளையே கொண்டவை. ஆனால் இவற்றின் ஆட்ட ஒழுங்கு முறைகளும், மத்தளத் தாளக் கட்டுக்களும் வழமையான வடமோடிக் கூத்துக்களைவிட வித்தியாசமாக வட்டுமோடி என அழைக்கப்படும் இந்தச் சிந்து புரக்கூத்துக்கள் வேறுபடுகின்றன. அது மட்டுமன்றி இக்கூத்துக்கள் கடுமையான ஆட்டங்களைக் கொண்டிருந்தபோதிலும் மரச்சட்டங்களாலும் கண்ணாடிகள், மணிகள் போள்றவற்றால் செய்யப்பட்ட மிகவும் பாரம் கூடிய உடுப்புகளான கரப்புடுப்புகளை அணிந்து கூத்தாடியதாக அறியமுடிகிறது. இந்தக்கரப்புடுப்பை ஆக்குவதற்கு ஏற்படும் அதிக செலவீனம் காரணமாகவோ அல்லது அதன் பாரம் காரணமாகவோ, அவற்றை ஆக்கக்கூடிய கலைஞர்கள் அருகிப்போய்விட்டதாலோ தற்சமயம் அவை கைவிடப்பட்டு பாரம் குறைந்த துணிகளிலான உடுப்புகளே பாவிக்கப்படுகின்றன.

ஆதிகாலத்தில் வேட்டைகள், விளைச்சல்கள் என்பனவற்றில் நல்ல பலன் கிடைக்கும்போது தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும், தெய்வங்களை திருப்திப்படுத்தும் வழிபாடுகளின் போதும் மக்கள் ஆடிப்பாடினார்களெனவும், காலப்போக்கில் அவற்றின் வளர்ச்சியே முதலில் ஆடல்களாகவும், பின்பு பாடல்களாகவும், அதையடுத்து ஆடல்களும் பாடல்களும் சேர்ந்து கூத்துகளாகவும் பரிணாம வளர்ச்சி பெற்றன எனக்கருதப்படுகிறது.

அவ்வகையில் இந்த வட்டுமோடி இங்கேயே உருவான கூத்தா அல்லது இந்தியாவின் தென்பகுதியில் இருந்து வந்ததா என்பதை அறியுமளவிற்கு எந்த ஆவணங்களும் இருப்பதாக தெரியவில்லை. எனினும் இக்கூத்தில் மலையாளத்தில் நிலவி வரும் கதகளி ஆட்டத்திற்குரிய தாளக்கட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இப்பகுதி மக்கள் தாங்கள் சிந்து நதிக்கரையிலிருந்து வந்தவர்கள் எனக்கூறி இக்கூத்தை சிந்துபுரக்கூத்தென அழைக்கின்றனர்.

எனினும் தருமபுத்திரன் என்ற மகாபாரதக் கதையைத் தழுவி எழுதப்பட்ட கூத்தை அப்போது வட்டுக்கோட்டை மணியகாரனாக இருந்த சுவாமிநாத முதலியாரே எழுதினார் எனவும் அவ்வூரில் திறமையாக மத்தளம் வாசிக்கக்கூடியவராக இருந்த வேலுப்பிள்ளை என்பவர் மூலம் அதை ஏனையோருக்கு பழக்கி அரங்கேற்றினார் எனவும் கூறப்படுகிறது.

வேலுப்பிள்ளையே அவ்வூரில் உள்ளவர்களையும் சேர்த்து தானே அண்ணாவியாராக மற்றவர்களுக்கு இந்த ஆட்டக்கூத்தை மிகுந்த முயற்சியுடன் பழக்கினார். இடையிடையே மணியகாரன் வந்து ஆட்டமுறைகள் தாளங்கள் என்பவற்றை சொல்லிக்கொடுப்பதும் திருத்துவதுமாக மீண்டும் மீண்டும் இக்கூத்து பழக்கத்தின்போதே மெருகேற்றப்பட்டது. அதன் காரணமாக இதை அண்ணாவி மரபு வழிக்கூத்து என அழைப்பதுண்டு.

இலுப்பையடி முத்துமாரி அம்மன் கோவில் முன்றலிலேயே முதன்முதலாக இக்கூத்து மேடையேற்றப்பட்டதாக தெரிகிறது. சுவாமிநாத முதலியார் கூத்தர்களுக்கும் அண்ணாவியாருக்கும் ஆடைகளையும், பணமுடிப்புகளையும் வழங்கி சால்வைகளை போர்த்திக் கௌரவித்தார்.

ஏற்கனவே இலங்கையைச் சேர்ந்த கந்தசாமிப் புலவர் என்பவர் 1660ல் திருச்செந்தூர் நொண்டி நாடகம் என்ற கூத்தை எழுதினார் எனவும் அதையொட்டி தென்னிந்தியாவில் பல நொண்டி நாடகங்கள் ஆடப்பட்டதாகவும் அறியமுடிகிறது. அதன் பின்பு இக்காலகட்டத்திலேயே முக்கூடற்பள்ளு, குற்றாலக்குறிவஞ்சி போன்ற கூத்துகள் உருவாக்கப்பட்டன.

1709 தொட்டு 1784 வரையான காலப்பகுதியில் வட்டுக்கோட்டையை சேர்ந்த கந்தசாமி ஐயர் என்பவர் அலங்கார ரூபன் என்ற கூத்தை இயற்றி வட்டுக்கோட்டை மக்களால் அது ஆடப்பட்டு வந்தது. மேலும் அவரால் வேறு சில ஆட்டக்கூத்துகளும் எழுதப்பட்டு அப்பகுதி மக்களால் மேடையேற்றப்பட்டதாக அறியமுடிகிறது. இக்கூத்துகள் அவரால் ஏட்டில் எழுதப்பட்ட போதிலும் அக்கால மக்களில் பெரும்பான்மையோர் கல்வி அறிவற்றவர்களாக இருந்தமையால் இவை வாய்மொழி இலக்கியங்களாகவே நிலைத்திருந்தன. ஆனால் இவற்றின் பாடல்கள் கூத்தர்களால் மட்டுமன்றி ஊரிலுள்ள பெரும்பான்மையான மக்களால் மனனம் செய்யப்பட்டு பாடப்படும் அளவிற்கு இக்கூத்துகள் மக்கள் மயப்பட்டிருந்தன.

ஆரம்பத்தில் வட்டுக்கோடடையின் மணியகாரனாக இருந்த சுவாமிநாத முதலியார் எழுதி அதை ஆடும்படி பலரை வேண்டியபோதும் அதை சரியாக செய்யமுடியுமோ என்ற பயத்தில் பலர் ஆடுமறுத்துவிட்டனர். இறுதியில் சிறந்த மத்தள வாசிப்பாளரான வேலுப்பிள்ளையே கூத்தையாட முன்வந்தார்.

அவர் நல்ல உடற்கட்டும், குரல் வளமும் பொருந்தியவர்களை தெரிவுசெய்து அவர்களுக்கு கூத்துகளைப் பழக்கினார். அந்த ஊரில் உள்ள 22 இரத்த உறவு கொண்ட குடும்பங்களிலிருந்தே நடிகர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். ஒரு பாத்திரத்தில் நடிப்பவருக்கு வயது முதிர்ச்சி காரணமாகவோ அல்லது வேறு ஏதாவது விதத்திலோ கூத்தாட இயலாமல் போனால் அவரின் மகனோ அல்லது சகோதரனோ அப்பாத்திரத்தில் நடிக்கவேண்டுமென்பது கட்டாண விதியாக்கப்பட்டிருந்தது. அதன் மூலம் ஒவ்வொரு பாத்திரமும் ஒவ்வொரு குடும்பத்தின் பரம்பரை உரிமையாகப் பேணப்பட்டு வந்தது.

இதையடுத்து வட்டுக்கோட்டையில் நாட்டுக்கூத்துகளில் புதிய யுகம் ஆரம்பமாகியது.

அதில் கலாபூசணம் கந்தையா நாகப்பூ வட்டுக்கோட்டை கூத்துகளை ஒரு உயர்ந்த கட்டத்திற்கு இட்டுச்சென்றதுடன் அவற்றை நாடு முழுவதிலும் பிரபலப்படுத்துவதிலும் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டார்.

தர்மபுத்திரன,; விராட நாடகம், குருகேத்திரன் கூத்து என்பன இவரின் முயற்சியால் நாடுபரந்தளவில் புகழ் பெறும் நிலைமை ஏற்பட்டதுடன் பல்கலைக்கழகங்களில் மாணவர்களால் மெருகுபடுத்தப்ட்டு மேடையேற்றப்படும் வாய்ப்புகளும் உருவாகின.

எமது இனத்தின் கலாச்சார அடையாளங்களாக நாட்டார் கலைகள் முழங்கி வருகின்றன. வட்டுக்கோட்டை மக்கள் நாட்டுக்கூத்துகளை மட்டுமன்றி காவடியாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் போன்ற கிராமியக்கலைகளையும் பேணிப்பாதுகாத்து வருகின்றனர் என்பது எமது இனத்தின் தனித்துவத்தை நிலைநாட்டும் பணியில் ஒரு மகத்தான பங்களிப்பாகும்.

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.