Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

                        எனது நாத்திகம்

                                        - சுப. சோமசுந்தரம்

நாம் விரும்பாமலே நாத்திகம் எனும் வடமொழிச்சொல் வெகுசனத்திடம் பரவிவிட்டதால், இறை மறுப்பை நான் இங்கு ‘நாத்திகம்’ என்றே பதிவிடுகிறேன்.

      ‘கடவுள் உண்டா இல்லையா ?’ என்ற அருதப் பழசான விவாதத்தை ஆரம்பித்து, வாசிப்போரின் கழுத்தில் நரம்பு புடைக்க வைப்பது சாமி சத்தியமாக(!) இவ்வெழுத்தின் நோக்கமல்ல. “உண்டென்பார்க்கு உண்டு, இல்லையென்பார்க்கு இல்லை” என்று ஏனையோரிடம் உரக்கச் சொல்லிவிட்டு, “ஆனால் எனக்குத் தெரியும் இல்லையென்று” என எனக்குள் சொல்லி ‘கடவுளைக்’ கடந்து செல்பவன் நான். (ஆகையால் அது ‘கட உள்’ தானோ?)

      ‘நான் நாத்திகன் ஏன்?’ என்ற பகத்சிங்கின் அளவில் சிறியதொரு பெரிய படைப்பினை வாசித்த அனுபவம் எனது நாத்திகத்தையும் என்னைத் திரும்பிப் பார்க்க வைத்ததோ என்னவோ ! பகத்சிங் தமது சிந்தனையாலும் செயலாலும் தம் படைப்பினை உலகையே வாசிக்க வைத்தவர். குறைந்த பட்சம் நட்பு வாசக வட்டத்தில் அனுபவங்களைப் பகிரும் எண்ணமே எனது இந்த எழுத்து. புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்  கொள்வது நமக்குப் புதிதா என்ன?

      எனக்கு விவரம் தெரிந்து சுமார் பன்னிரெண்டு வயது முதல் நான் நாத்திகன். இது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. என் வீட்டின் ஜனநாயகச் சூழலும், வீட்டில் பெரியாரையும் அண்ணாவையும் சிலர் பேசிக் கொள்ளும் சுமாரான அரசியல் சூழலும், எனக்கு வாய்த்த ஆசிரியர் ஒருவர் அந்நாளைய பள்ளி வரைமுறைகளைத் தாண்டி திராவிட இயக்க விதைகளை அவ்வப்போது தூவியதும் காரணமாய் அமைந்தன எனலாம். பசுமரத்தாணியாய்ப் பதிந்து நிற்கும் பருவம் அது. இறை நம்பிக்கையும் அப்படித்தானே ! குழந்தைப் பருவத்தில், “கண்ணு, சாமி கும்பிடு ! சாமி கும்பிடு !” என்று சொல்லி வளர்ப்பதே இறை, மத நம்பிக்கையாய் முகிழ்க்கும் என்பது எனது ஆழ்ந்த நம்பிக்கை. பின்னர் அந்நம்பிக்கை சார்ந்த பெரியோரிடம் கற்றல், கேட்டல் மூலம் அது வலுப்பெறும். நிற்க.

      இளம் வயதில் பெரியார், அண்ணாவிடம் படித்த பாடம் கல்லூரி நாட்களிலும் பின்னாளிலும் மேலும் கிடைத்த நூலறிவினால் வாழ்வியலானது. குறிப்பிட்டுச் சொல்வதானால் ஆபிரகாம் கோவூரின் ‘Gods, Demons and Spirits’, பெட்ரன்ட் ரஸலின் ‘Why I am not a Christian’, கிறிஸ்டோபர் ஹிச்சன்ஸின்  ‘God is not great’ என்னை நல்வழிப்படுத்தியவை. ஆயினும் இந்த ஆன்றமைந்த கொள்கைச் சான்றோர் எனக்குப் போதித்ததைப் போல் நாத்திகத்தை நான் யாருக்கும் போதிக்கவில்லை. என் குழந்தைகளுக்குக் கூட, உண்டு அல்லது இல்லை எனப் புகட்டியதில்லை. எனது நடவடிக்கைகள் மூலம் அவர்கள் இறைமறுப்பின்பால் ஈர்க்கப்பட்டது எனக்கான பேறு. அதிலும் அவர்கள் பெண்பிள்ளைகள் என்பது பெரிதினும் பெரிதான பேறு. இதில் இறைநம்பிக்கையுள்ள எனது இல்லாளின் பங்களிப்பு அபரிமிதமானது. அவளும் தன் நம்பிக்கையைக் குழந்தைகளுக்கு ஏற்றியது இல்லை. இந்த ஜனநாயகம் எல்லோருக்கும் வாய்ப்பதிலை. ஆத்திகர்களின் மொழியில் சொல்வதானால், நான் இறை மறுக்க அவர்களது இறைவனாலேயே ஆசீர்வதிக்கப்பட்டவன் போலும்!

      பெரும்பான்மைச் சமூகம் இறை நம்பிக்கை சார்ந்ததால், பெரும்பாலான இறை மறுப்பாளர்கள் தங்களை வெளிக்காட்டுவதில்லை. அது அவரவர் தனிப்பட்ட கருத்து எனும் நிலைப்பாடாக இருக்கலாம். இப்பூவுலகில் இவர்களோடுதானே வாழ வேண்டும் எனும் நடைமுறைச் சித்தாந்தமும் என் போன்றோர்க்கு ஏற்புடையதே. எனக்கு இறை நம்பிக்கை இல்லாவிட்டாலும் சமூகத்தில் பெரும்பாலானோர் அந்த நம்பிக்கையோடு வாழ வேண்டும் என்பது என் உள்ளக்கிடக்கை. அதற்கு நானாக வரித்துக் கொண்ட காரணங்கள் இரண்டு. ஒன்று, ‘மேலே ஒருவன் பார்த்துக் கொண்டிருக்கிறான்’ எனும் பயத்தினால் மட்டும் அதிகம் தவறு செய்யாமல் இருக்கும் வெகுசனம். இரண்டாவது, வாழ்வில் சொல்லொணாத் துயரத்தை எதிர்கொள்ள ‘மேலே இருப்பவன் பார்த்துக்கொள்வான்’ என்று பாரத்தைக் கற்பனையான தோள் மீது இறக்கி வைக்கும் மனோபாவம்; அக்கற்பனை தரும் ஆறுதலை அவர்களுக்கு என்னால் தர இயலாத கையறுநிலை. எனவே அறியாதாரை அறியாமை இருளிலேயே வைத்து நமக்கும் அவர்களுக்கும் துன்பமில்லாமல் வாழ நினைக்கும் சுயநலம் எனது. வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறி மாறி நமக்கும் தான் வரும். அப்போது நமக்கு அந்த கற்பனைத் தோள் வேண்டாமா ? இல்லையென்று நம்பிக்கை(!) ஏற்பட்டு சுமார் ஐம்பது வருடங்களான பிறகு, இல்லாததைக் கற்பனை செய்ய இயலாது. வாழ்வில் ஏற்படும் இன்பத்தை அளவாய்த் துய்க்கத் தெரியும். துன்பத்தில் அழத் தெரியும், விழத் தெரியும், எழத் தெரிய வேண்டும். இது தான் பக்குவம் பெற்ற வாழ்விற்கான இலக்கணம் என்பது எனக்குப் பால பாடம்.

      எனக்கு இலக்கிய ஆர்வம் உண்டாகையால் பக்தி இலக்கியங்களையும் விட்டு வைக்க மனம் வருவதில்லை. நான் உருகவில்லையாயினும் அவர்கள் எப்படி உருகுவார்கள் என்பதை உணரும் அளவு இலக்கியச் சுவை தெரிந்தவன். நாத்திகராயிருந்தும் கோயில்களையும் பக்தி இலக்கியங்களையும் சமயங்களின் அடிப்படைத் தத்துவங்களையும் உணர்ந்த அறிஞர் தொ. பரமசிவன் இவ்விடயத்தில் எனக்கான வழிகாட்டி. இவையனைத்தும் மக்களை வாசிக்க உதவும் கருவிகள் எனக் கொள்ளலாம். பக்தி இலக்கியம் பேசும்பொழுது, எழுதும் பொழுது நமது இறைமறுப்பை வெளிக்காட்டாது அவ்விலக்கியச் சுவை காட்டுவது கயிற்றின் மேல் நடப்பது. “கடவுள் இல்லை; இல்லவே இல்லை” என அறிவித்து மக்கட்சேவை செய்யும் நாத்திகப் பெரியோர் வீரமரபில் தோன்றிய சான்றோர். மக்கள் கூட்டத்திலிருந்து தனித்தியங்கும் ஆற்றல் பெற்றோர். அவ்வகையில் தமிழ்ச் சமூகத்தில் பெரியார் எஞ்சாமி(!). நடிப்பாற்றலால் வெகுசனத்தில் விரவி தன் அடையாளத்தைத் தொலைத்து வாழ்ந்து தொலைக்கும் நான் ஒரு கோழை.

      இதுகாறும் எனது நாத்திகத்தில் பொதுவான விஷயங்களைப் பேசிய நான் இது தொடர்பில் ஒன்றிரண்டு நிகழ்வுகளை நினைவு கூற நினைக்கிறேன். இத்தகைய நிகழ்வுகளும் என்னைப் பெரிதும் செதுக்கியதாக உணர்கிறேன். அவை என் மனதில் காட்சிகளாய் விரிகின்றன.

காட்சி 1: இறை மறுத்து வளர, வாழ எனக்குச் சாதகமான சூழலே அமைந்தது எனக்கான வரம். அவ்வரம் எனக்கு பள்ளி, கல்லூரி வடிவிலும் அமைந்தது கூடுதல் சிறப்பு. உரோமன் கத்தோலிக்க நிறுவனங்களிலேயே நான் வளர்ந்தாலும், தம் மத நம்பிக்கைகளை என்மீது இம்மியளவும் அவர்கள் ஏற்ற முயற்சி செய்ததில்லை. கத்தோலிக்க மாணவர்களுக்கு வாரம் ஒரு மணி நேரம் கத்தோலிக்க மறை வகுப்பு நடைபெறும் பொழுது ஏனையோருக்கு நல்லொழுக்க வகுப்பு நடைபெறும். அவ்வளவே. ஒருமுறை கல்லூரியில் வகுப்புத் தோழன் ஒருவன் வேலைக்கு மனுச் செய்த போது அவனுக்கு நன்னடத்தைச் சான்றிதழ் தேவைப்பட்டது. கிறித்தவனான அவன் எங்களது தமிழ் ஆசிரியரும் அவனது விடுதிக் காப்பாளருமான பாதிரியாரிடம் சான்றிதழ் கேட்கப் போகும் பொழுது என்னையும் துணைக்கு அழைத்தான். நன்றாகப் படிக்கும் மாணவன் நல்ல மாணவன் என்ற வேடிக்கையான வரையறை அன்றும் இன்றும் உண்டே ! அதனால் பெரும்பாலான ஆசிரியர் பெருமக்களுக்கு என் மீது அன்பும் மதிப்பும் உண்டு என்பது என் கணிப்பு. பாதிரியார் அவனிடம், “எடேய், நீ ஜெபத்துக்கே வர மாட்டே ! உனக்கு எப்படி நான் காண்டக்ட் (conduct certificate) தரமுடியும்?” என்று கடிந்துகொண்டார். அவன் கூடப் போய் நான் அங்கு நின்றதே அநாகரிகம். அதையும் தாண்டி நான் அதிகப்பிரசங்கித் தனமாக அப்போது இடைமறித்துப் பேச வேறு ஆரம்பித்தேன். அவ்வயதில் எங்களுக்குத் தெரிந்த நாகரிகம் அவ்வளவுதான்.  “ ஃபாதர் ! ஒழுக்கத்திற்கும் ஜெபத்திற்கு என்ன தொடர்பு ? ஜெபம்  ஒருவரின் தனிப்பட்ட விஷயம்தானே ?” – சாதாரணமாக ஒரு பாதிரியாரிடம் சராசரி மனிதர்கள் கேட்காத கேள்வி. என் மீது கொண்ட அன்பினால் அவர் கோபம் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். மாறாக, “நீ சிறிது நேரம் வெளியே நில்!” என்று சாந்தமாகச் சொல்லி அனுப்பிவிட்டு அவனிடம் பேசினார். பின்னர் அவனை அனுப்பிவிட்டு என்னை உள்ளே அழைத்துச் சொன்னார், “நீ சொன்னது உனக்குச் சரி, நான் சொன்னது அவனுக்குச் சரி. படிப்பெல்லாம் எப்படிப் போகிறது ? கம்பனில் நம் பாடப்பகுதியில் உள்ள அந்த சிறு பகுதியை நீ செமினார் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்று வெகு சாதாரணமாய்ப் பேசி, புன்னகை மாறாமல் அனுப்பிவிட்டார். அவர் உள்ளே அழைத்ததும் எனக்கு கடவுள், ஜெபம் பற்றிய பாடம் எடுக்கப் போகிறார் என்று நினைத்தேன். தம் செயல்பாட்டின் மூலமாக அவர் எனக்குத் தந்த பாடம் ஜனநாயகம் என்று நம்புகிறேன். அன்று என்னுள் இருந்த இளைஞன் கபடமின்றி இப்படி யோசித்தான், “அவர் சான்றோர் என்பதில் ஐயமில்லை. கூடவே, அவரும் என்னைப் போல் இச்சமூகத்தில் ஒரு நாத்திக நடிகர்தானோ !”

காட்சி 2 : அடிப்படைக் கணிதக் கோட்பாடுகளை அழகுற எடுத்துச்சொல்லி அத்துறையில் நான் நானாக பெரிதும் காரணமானவர் எனது கணிதப் பேராசிரியர் திரு. ஜோதிமணி அவர்கள். இலக்கிய ஆர்வமும் உள்ளவர். சிந்தனைச் சிற்பியான அவர் வாழ்வியலிலும் எனக்கு ஆசான். பல்துறை சார்ந்த அறிவே சான்றாண்மை என்பதை எடுத்துக் காட்டியவர். கல்லூரிப் படிப்பை முடித்த பிறகும் அவருடன் தொடர்பில் இருந்தேன். நான் எங்கள் ஊரிலேயே புதிதாகத் தோன்றிய பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியனாய்ப் பணி அமர்ந்ததால் நாங்கள் குடும்ப நண்பர்கள் ஆனோம். அவர் ஞாயிறு தவறாமல் தேவாலயம் செல்லும் கிறித்தவர். வழியில் மாரி அம்மனையும் வணங்கும் விந்தை மனிதர். பேராசிரியர் தொ.ப விற்கு அடுத்தபடியாக சைவமும் வைணவமும் அவரிடம்தான் கேட்டிருக்கிறேன். இவ்வாறு நிரம்பிய நூலுடையோர் கேண்மை வாய்த்தது எனக்கான அடுத்த பேறாக அடுக்குவது, கூறியது கூறலாகவும் தம்பட்டம் ஆகவும் அமையும் என்பதால் தவிர்க்கிறேன் (!!!). பேரா. ஜோதிமணி அவர்களுக்கு என்னிடம் ஒரு சிறிய மனக்குறை உண்டு. அது என் இறை மறுப்பு. தம் கருத்தை மற்றவர்களிடம் வலிந்து திணிக்கும் இயல்புக்கு எதிரானவர் அவர். எனினும் இறையருளில் பரிபூரண நம்பிக்கை அவருக்கு இருந்ததால் அவ்வருள் எனக்குக் கிடைக்காமல் போய்விடுமோ என்ற ஆதங்கம் அவருக்கு. சமயக் கருத்துகளையும் பக்தி இலக்கியத்தையும் அவர் மேற்கோள் காட்டும்போது மிகுந்த (நடிப்பில்லாத) ஆர்வத்துடன் நான் கேட்பதுண்டு. ஆகையால் இறைவன்பால் ஒரு நாள் என்னை ஈர்க்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாகக் கூறினார். அவர் நம்பிக்கை அவருக்கு. சவால் விடும் தொனியில்  இல்லாமல் நான் அவருக்குப் பதில் சொன்னேன், “இறையுணர்வை இத்துணைப் பகுத்தறிவுடன் அணுகும் உங்களை இறைமறுப்பின்பால் திருப்ப முடியும் என்று எனக்கும் தோன்றுகிறது”. இது குரு, சிஷ்யன் இருவரின் தன்னம்பிக்கையையும் ஒருவர் மற்றவர் மீது வைத்துள்ள நம்பிக்கையையும் குறிக்கிறது. இருவருமே தோற்கக்கூடாது என்பது இயற்கையின் நியதியோ என்னவோ, திடீரென்று ஒரு நாள் அவர் தமது கர்த்தருக்குள் நித்திரை கொண்டார். அந்த நேரத்தில் என் கைபேசியும் காலாவதியானதால் ஒரு வாரம் கழித்துப் புதிய கைபேசி வாங்கலாம் என்று சோம்பேறித்தனமாய் இருந்துவிட்டேன். அந்த நேரத்தில் அந்தப் படுபாவி காலன் என் கண்ணையும் காதையும் மறைத்து அவரைக் காவு கொண்டான். மரணச்செய்தி நேரில் ஆள் மூலம் வந்ததும் சென்றேன். எனினும் அவர் மருத்துவமனையில் இருந்த கடைசி நேரத்தில் அவரிடம் பேச முடியாத வருத்தம் எனக்கு நிரந்தரமாகி விட்டது. சோகத்திலும் கவித்துவமாய் அவலச் சுவையில் சொல்வதாய் இருந்தால் அவரது விருப்பத்திற்கு மாறாக நான் இறை மறுத்ததால் அவரது இறைவன் எனக்கு அளித்த தண்டனையோ ! அவர் சீக்கிரம் விடை பெறுவார் என்று எனக்குத் தெரிந்திருந்தால், நான் தோற்று விட்டதாக - அவரது இறைக் கொள்கையை ஏற்றுக் கொண்டதாக – நடித்திருப்பேன். உலகத்தாரிடம் அங்கங்கே நடிக்கும்போது எனது குருவானவரின் இறுதி நாட்களில் அவரது மன நிறைவுக்காக நடிக்கக் கூடாதா, என்ன ? ஆனால் அவர் அதை நம்புவது ஐயப்பாடே ! எனது குருவை நான் அறிந்தது போல் அவருக்கும் தமது சீடனைத் தெரியும். மேலும் தமது ஞானபுத்திரனாய் அவரால் அறிவிக்கப்பட்ட நான் கருத்தியலில் அவரிடம் தோற்பதை அவரே விரும்ப மாட்டார். அவரும் எஞ்சாமி !

 

          

இப்படியாய், வாழ்வை சுதந்திரமாய் வாழும் சூழலைத் தோற்றுவித்த திராவிடப் பெரியாரும், பேரறிஞர் அண்ணா வும் உழுது பண்படுத்திய மண்ணில் உதித்த இரு கிறித்தவப் பாதிரிமார்கள் கிறித்துவரல்லாத மாணவர்களை எவ்வாறு கண்ணியமாக அவரவர் பாதைகளில் சுதந்திரமாக வாழ வழி நடத்தினர் என்பது தமிழ்ச் சமூகத்தில் திராவிட இயக்கத்தின் தாக்கம் என்றால் மிகையில்லை.   திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் தமிழ் மண்ணில் விளைந்த பன்முகத் தன்மைக்கோர் நற்சான்று இந்நிகழ்வுகள். "நீ சொன்னது உனக்குச் சரி. நான் சொன்னது அவனுக்குச் சரி" என்ற இரு வரிகள் எவ்வளவு பட்டவர்த்தனமான வாழ்வியல் யதார்த்தம்.

உளவியல் அடிப்படையில், மதவாதம் பேசும் பிஜேபி ஏன் தமிழ் மண்ணில் காலூன்ற இயலவில்லை என்பதை இக்கட்டுரையை வாசிப்போர்க்கு நன்கு விளங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, சுப.சோமசுந்தரம் said:

குழந்தைப் பருவத்தில், “கண்ணு, சாமி கும்பிடு ! சாமி கும்பிடு !” என்று சொல்லி வளர்ப்பதே இறை, மத நம்பிக்கையாய் முகிழ்க்கும் என்பது எனது ஆழ்ந்த நம்பிக்கை.

உண்மையும் அது தான் ஐயா.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சுப.சோமசுந்தரம் said:

எனக்கு விவரம் தெரிந்து சுமார் பன்னிரெண்டு வயது முதல் நான் நாத்திகன்.

நானும் அப்படித்தான். அவ்வளவுக்கும் எனது தந்தையார் பெரிய பக்திமான்.  

நல்லதோர் பதிவு. தற்செயலாக உருவான பிரபஞ்சத்தில் தற்செயலாக உருவான பூமிப்பந்தில் தற்செயலாக உருவான உயிரிகளில் நாங்களும் அடக்கம்!

எனக்கு தமிழ் கற்பித்த பண்டிதர் சதாசிவம் திருநீற்றுப் பூச்சும், சந்தனப் பொட்டும், பூவும் தவறாமல் இட்டு வருவார். அதேவேளை பாடசாலையில் சைவசமயம் கற்பித்த பண்டிதர் பரந்தாமன் சமயநம்பிக்கை இல்லாதவராக இருந்தபோதும் கணீர் என்ற குரலில் சைவ சமய தத்துவங்களை சொல்லுவார்.

பக்திக்கு அப்பால் சைவ/இந்து சமய தத்துவங்களில் ஈடுபாடு வர அவரது கற்பித்தல்முறைதான் காரணம்.

இருந்தா நல்லா இருக்கும்னு சொல்றீங்க 😁

நீவீர் இறைமறுப்பு பாதையில் சென்றதற்கும், மற்றையவர் இறை பாதையில் சென்றதற்க்கும் சிறிய வயதில் கிடைக்கும் தூண்டுதலே காரணம் என்பதை அழகான மொழியில் விவரித்துள்ளீர். நன்று 🤝

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டத்தட்ட எனது நிலைப்பாடும் இப்படி தான் போய்க்கொண்டு இருக்கிறது

ஒவ்வொரு பந்தியும் ஏதோ ஒரு வகையில் நாம் கடந்து வந்த பாதையை நினைவு படுத்தி செல்கிறது

பிறப்பால் சைவசமயம் 

கோயில் தர்மகர்த்தா பரம்பரை

ஆனால் சிறு வயது முதல்

அதன் மீதான கேள்விகள் மறுப்புகள் 

மூடநம்பிக்கைகள் சார்ந்து முட்டுதல்கள் 

பிள்ளைகளுக்கு எதையும் புகுத்தாமல் அவர்களே அவர்களுக்கானதை தேட வழிவிடுதல் 

ஆனாலும் பரம்பரைக்கோயில் திருவிழா மற்றும் பராமரிப்புக்கு பணம் அனுப்புதல்

வீட்டில் பெரியோர்களின் ஞாபகார்த்தங்களுக்கு ஐயர் வருதல் உட்பட அது இன்னொரு பக்கம் போய்க்கொண்டே தான் இருக்கிறது

நீங்கள் சொன்னது போல எனது நிலைப்பாடு என்னுடன் மட்டுமே

ஏனெனில் எனது நிலைப்பாட்டை விட பெரும்பான்மையோர் என் முன்னே உள்ளனர்.

அவர்களின் நம்பிக்கைகளை நான் மதிக்காவிட்டால் நான் மனிதனாக கூட இருக்கமுடியாதே??? அப்புறம் தானே கடவுள்??

பல்வேறு கதைகளை கருத்துக்களை ஞாபகங்களை மீண்டும் மீண்டும் எம்முள் விதைத்த தங்கள் ஆக்கத்திற்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நாத்திகம் என்றால் என்ன......!

வெறுமனே கடவுள் இல்லை என்று சொன்னால் மட்டும் நாத்திகமா......

அதைத் தவிர்த்து அல்லது அதையும் தாண்டி நாத்திகத்துக்கு வேறு ஏதாவது அறிகுறிகள் இருக்கா.....

நாத்திகர்களுக்கு என்று தனியான கொள்கைகள் உண்டா இருந்தால் அவை யாவை.......

தெரிந்து கொள்வதற்காக மட்டுமே கேட்கிறேன்.......!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, suvy said:

நாத்திகம் என்றால் என்ன......!

எனக்கு தெரிந்த வரையில்  நாத்திகம் கதைப்பவர்கள் கடவுள் இல்லை என்ற மதம் கொண்டவர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

நாத்திகம் என்றால் என்ன......!

வெறுமனே கடவுள் இல்லை என்று சொன்னால் மட்டும் நாத்திகமா......

அதைத் தவிர்த்து அல்லது அதையும் தாண்டி நாத்திகத்துக்கு வேறு ஏதாவது அறிகுறிகள் இருக்கா.....

நாத்திகர்களுக்கு என்று தனியான கொள்கைகள் உண்டா இருந்தால் அவை யாவை.......

தெரிந்து கொள்வதற்காக மட்டுமே கேட்கிறேன்.......!

மனிதனால் உருவாக்கபட்ட  புலுடாக்களை ஏற்று கொள்ளாதவர்களை, கேள்வி கேட்பவர்களை தமிழில் நாத்திகர் என்று அழைப்பார்கள் என்று நினைக்கிறேன்.

Edited by விளங்க நினைப்பவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

நாத்திகம் என்றால் என்ன......!

சொல்லாக்கத்தின் (etymology) வழி பார்த்தால், 'அஸ்தித்வ' என்ற வடமொழிச் சொல்லுக்கு 'இருப்பு' (existence) என்பது பொருள். ஆகையால் (இறை) இருப்பில் நம்பிக்கை கொண்டோர் 'ஆஸ்திக்' என வடமொழியில் வழங்கலாயினர். தமிழில் ஆத்திகர் ஆயினர். சொல்லின் முன் ந சேர்த்து எதிர்மறைப் பொருளாக்குவர். எனவே 'நாஸ்திக்' இறை மறுப்பாளர். தமிழில் நாத்திகர். தமிழில் வழக்கிலும் இன்று 'நாத்திகர்' இறைமறுப்பாளரையே குறிக்கிறது. இடைக்காலத்தில் ஸ்மார்த்தர்கள்  (இறையை மறுப்பர்; வேதங்களை ஏற்பர்) நாத்திகர் எனப்பட்டதாக வாசித்திருக்கிறேன். இடையில் வந்தது இடையிலேயே போகட்டுமே. ஆகையால்தான் கட்டுரையின் தொடக்கத்திலேயே தற்போது வழக்கில் உள்ளவாறு 'நாத்திகம்' என்ற சொல்லை இறை மறுப்பிற்குப் பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளேன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, விளங்க நினைப்பவன் said:

மனிதனால் உருவாக்கபட்ட  புலுடாக்களை ஏற்று கொள்ளாதவர்களை, கேள்வி கேட்பவர்களை தமிழில் நாத்திகர் என்று அழைப்பார்கள் என்று நினைக்கிறேன்

இந்த விளக்கம் எனக்குப் பிடித்திருக்கிறது என்பது தனிப்பட்ட விடயம். இறை நம்பிக்கையையும்  'புலுடா' என்று சொல்லி மக்களைச் சங்கடப்படுத்த விரும்பாத நான், நண்பர் ஒருவர் சொல்லும்போது ரசிக்கும் உரிமை எனக்கு உண்டு என்று நினைக்கிறேன். 🤭

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.