Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் செய்திகள் 2023

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Breaking news: ஜனாதிபதியின் அதிகாரங்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு – வர்த்தமானி வெளியானது!

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை தடுத்து வைப்பதற்கு இடைக்காலத் தடை!

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை தடுத்து வைப்பதற்கு இடைக்காலத் தடை விதித்து, நிதியமைச்சர் ரணில் விக்ரமசிங்க மற்றும் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • Replies 76
  • Views 5.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒரு வருடமேனும் பிற்போடப்படும்? பெப்ரல்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒரு வருடமேனும் பிற்போடப்படும்? பெப்ரல்!

உள்ளூராட்சி மன்ற தேர்தல் பல மாதங்கள் அல்லது ஒரு வருடமேனும் பிற்போடப்படும் நிலையே இருப்பதாக, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

தேர்தல் முறையை மாற்றுவதற்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை திகதியின்றி ஒத்திவைப்பதற்கும் அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

வேட்புமனுக்கள் இரத்து செய்யப்படும் அபாயத்தில் உள்ளதாகவும் மீண்டும் வேட்புமனு கோருவதற்கே அதிக வாய்ப்பு காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

நாட்டின் ஜனநாயகத்தை இல்லாமல் செய்வதற்கு அரசாங்கம் மோசமான முறையில் தலையீடு செய்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெற்றால் அரசாங்கத்துக்கு தோல்வி ஏற்படும் என்ற அச்சம் அரசாங்கத்துக்கு இருக்கவேண்டியதில்லை என குறிப்பிட்ட அவர், தேர்தலில் அரசாங்கத்துக்கு பின்னடைவு ஏற்பட்டாலும், அதனால் அரசாங்கத்தை கொண்டு செல்வதற்கு எந்த தடையும் இதன் மூலம் ஏற்படப்போவதில்லை என தெளிவுப்படுத்தினார்.

https://athavannews.com/2023/1326364

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு ஏப்ரல் இடம்பெறலாம் - சன்ன ஜயசுமன

Published By: T. SARANYA

04 MAR, 2023 | 05:34 PM
image

(இராஜதுரை ஹஷான்)

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 07 அல்லது 08 ஆம் திகதிகளில் இடம்பெறும் என எதிர்பார்க்கிறோம். நாட்டு மக்களின் அடிப்படை வாக்குரிமையை உயர்நீதிமன்றம் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை முழுமையாக உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

களுத்துறை பகுதியில் வெள்ளிக்கிழமை (3)  இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு  தேவையான நிதியை விடுவிப்பதை தடுக்கும் வகையில் திறைசேரியின் செயலாளர் செயற்பட்டார். ஜனாதிபதியின் அழுத்தத்தின் பிரகாரமே திறைசேரியின் செயலாளர் செயற்பட்டிருப்பார்.

தேர்தலுக்கு தடையேற்படுத்த வேண்டிய தேவை திறைசேரியின் செயலாளருக்கு கிடையாது. பொருளாதார பாதிப்பு என குறிப்பிட்டுக் கொண்டு உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போடும் தேவை ஜனாதிபதிக்கும்,அரசாங்கத்திற்கும் உண்டு.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகள் அனைத்தும் அரசாங்கத்திற்கு எதிராகவும்,மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு சார்பாகவும் காணப்படுகிறது. நாட்டு மக்களின் அடிப்படை வாக்குரிமையை உயர்நீதிமன்றம் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை முழுமையாக உள்ளது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 07 அல்லது 08 ஆகிய தினங்களில் இடம்பெறும் என எதிர்பார்க்கிறோம்.ஏப்ரல் மாதம் பண்டிகை காலம் என்பதால் தேர்தலை நடத்துவது சிக்கலைத் தோற்றுவிக்கும் என ஆளும் தரப்பினர் குறிப்பிடலாம்.

2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. ஆகவே பண்டிகை காலம் என்பது தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஒரு தடையாக அமையாது.

தேர்தல் இடம்பெறாது என்ற நம்பிக்கையில் ஆளும் தரப்பினர் தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபடாமல் ஜனாதிபதி மீது நம்பிக்கை வைத்த நிலையில் உள்ளார்கள்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறாது என்று குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை முழுமையாக பலவீனப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார் என்றார்.

https://www.virakesari.lk/article/149716

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தீர்க்கமான கலந்துரையாடல்களின் பின்னரே தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்படும் - தேர்தல் ஆணைக்குழு

Published By: DIGITAL DESK 5

04 MAR, 2023 | 05:39 PM
image

(எம்.மனோசித்ரா)

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கு பொறுத்தமான தினம் குறித்து பல தரப்பினராலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் , எதிர்வரும் இரு தினங்களுக்குள் இடம்பெறவுள்ள பல்தரப்பு தீர்க்கமான கலந்துரையாடலின் பின்னரே உத்தியோகபூர்வமாக தினம் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா கேசரிக்கு தெரிவித்தார்.

அரசியலமைப்பின் பிரகாரம் ஏற்கனவே திட்டமிட்ட தினத்தில் தேர்தல் நடத்தப்படாமல் , அதற்கான புதிய தினம் அறிவிக்கப்பட வேண்டுமெனில் பழைய தினத்திலிருந்து 21 நாட்களின் பின்னரே தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கமைய ஏப்ரல் முதலாம் வாரத்தில் தேர்தல் இடம்பெறக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் ஏப்ரல் இரண்டாம் வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நீண்ட விடுமுறை என்பதால் குறித்த காலப்பகுதியில் தேர்தலை நடத்த முடியாதெனக் கூறி தேர்தல் ஆணைக்குழு , அரசாங்கத்திற்கு சார்பாக செயற்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சுமத்தியுள்ளன.

இவ்வாறு பலராலும் பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையிலேயே ஆணைக்குழுவின் தலைவரை தொடர்பு கொண்டு வினவிய போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

தேர்தலை நடத்துவதற்கான புதிய தினம் குறித்து ஆணைக்குழு இன்னும் தீர்மானங்கள் எவற்றையும் எடுக்கவில்லை. இவ்விடயம் கலந்துரையாடல் மட்டத்திலேயே உள்ளது. எனவே தான் அடுத்த வாரம் மீண்டும் கூடி இது தொடர்பில் அறிவிப்பதற்கு தீர்மானித்திருக்கின்றோம். அடுத்த கூட்டத்தில் எம்மால் எடுக்கப்படும் தீர்மானங்கள் குறித்து மாவட்ட தெரிவத்தாட்சி அலுவல்களுடனும் கலந்துரையாடப்பட்ட பின்னரே தினம் உறுதி செய்யப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/149717

  • கருத்துக்கள உறவுகள்

மார்ச் 20க்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்கிறார் சுமந்திரன்

மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்தார்.

தேர்தலுக்கான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என திறைசேரி மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்திற்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழு முறைப்பாடு செய்திருந்த நிலையில், தற்போது உயர் நீதிமன்ற உத்தரவு கிடைத்திருப்பதால், மார்ச் 19 ஆம் திகதிக்கு முன்னதாக தேர்தல் திகதி குறிக்கப்பட வேண்டும் என சுமந்திரன் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தின் படி, மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆகவே, சட்டத்திற்கு இணங்க தேர்தலை நடத்துவதாக இருந்தால்,  மார்ச் 19 ஆம் திகதி அல்லது அதற்கு முன் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
 

 

http://www.samakalam.com/மார்ச்-20க்கு-முன்னர்-தேர்/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

19ஆம் திகதிக்கு முன் தேர்தலை நடத்துவது நடைமுறை சாத்தியமற்றது - தெளிவுபடுத்தத் தயார் என்கிறார் நிமால் புஞ்சிஹேவா

Published By: VISHNU

06 MAR, 2023 | 09:00 PM
image

 

(எம்.மனோசித்ரா)

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை இம்மாதம் 19ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நடத்துமாறு பிரதான எதிர்க்கட்சிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் அவர்கள் கோரும் தினத்தில் தேர்தலை நடத்துவது நடைமுறை சாத்தியமற்றது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா கேசரிக்கு தெரிவித்தார்.

அத்தோடு கடிதம் மூலம் அவர்களால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை ஏற்று , அவர்களை சந்தித்து நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்த தாமும் எதிர்பார்ப்பதாகவும் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா குறிப்பிட்டார்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை எதிர்வரும் 19ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நடத்துமாறு தேசிய மக்கள் சக்தி , சுதந்திர மக்கள் கூட்டணி , தமிழ் முற்போக்கு கூட்டணி , அகில இலங்கை மக்கள் காங்ரஸ் , தமிழ் தேசிய கூட்டமைப்பு , ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட சகல பிரதான எதிர்க்கட்சிகளும் கூட்டாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளன.

அத்தோடு செவ்வாய்க்கிழமை (07) முற்பகல் 9 மணிக்கு ஆணைக்குழுவின் உறுப்பினர்களை சந்திக்க எதிர்பார்ப்பதாகவும் குறித்த கடிதத்தில் அக்கட்சிகள் குறிப்பிட்டுள்ளன.

அதற்கமைய எதிர்க்கட்சிகளால் அனுப்பப்பட்டுள்ள கடிதம் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவாவை தொடர்பு கொண்டு  நிலைப்பாட்டினை வினவிய போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்களால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் எமக்கு கிடைக்கப் பெற்றது. அந்த கடிதத்தில் அவர்கள் எம்மை சந்திக்க எதிர்பார்ப்பதாக விடுத்துள்ள கோரிக்கையை நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம்.

அதற்கமைய அவர்களை சந்தித்து தேர்தல் தினத்தை தீர்மானிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்த நாமும் எதிர்பார்த்துள்ளோம்.

எவ்வாறிருப்பினும் அவர்கள் கோருவதைப் போன்று இம்மாதம் 19ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தேர்தலை நடத்துவது நடைமுறை சாத்தியமற்றது.

திறைசேறி செயலாளர் உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்து அதற்கமையவே தேர்தலை நடத்துவதற்கான தினத்தை தீர்மானிக்க முடியும்.

தேர்தல் இடம்பெற முன்னர் தபால் மூல வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். எனவே அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அவ்வாறன்றி முதலில் தேர்தலை நடத்துவதற்கு சட்டத்திலும் இடமில்லை.

எனவே 19ஆம் திகதி தேர்தலை நடத்துவது நடைமுறை சாத்தியமற்றது என்பதை நாம் அவர்களுக்கு தெளிவுபடுத்துவோம் என்றார்.

https://www.virakesari.lk/article/149859

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி-தேர்தல் ஆணைக்குழு

உள்ளூராட்சிசபைத் தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதி நடத்துவதே சிறந்தது என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

election-commission-300x200.jpg
இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

வாக்குச் சீட்டு அச்சிடுதல் மற்றும் வாக்குப்பதிவு தொடர்பான பிற வசதிகள் தொடர்பான எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத சிக்கல்கள் காரணமாக, மார்ச் 09 ஆம் திகதி உரிய வாக்கெடுப்பை நடத்த முடியவில்லை.

https://thinakkural.lk/article/243671

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

500 மில்லியன் ரூபாய் கிடைக்காத பட்சத்தில் அஞ்சல் மூல வாக்குகளுக்கு புதிய திகதி அறிவிக்கப்படும்!

எதிர்வரும் புதன்கிழமைக்குள் திறைசேரி 500 மில்லியன் ரூபாயை வழங்காவிட்டால் அஞ்சல் மூல வாக்குகளுக்கான புதிய திகதிகளை அறிவிக்க நேரிடும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்காக ஏப்ரல் 25 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அஞ்சல் மூல வாக்களிப்புக்களுக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிவரை காலம் குறிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அஞ்சல் மூல வாக்குகளை அச்சிடுவதற்கு போதிய கால அவகாசம் இல்லை என அரசாங்க அச்சகப் பணிப்பாளர் லியனகேயும் தெரிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில் எதிர்வரும் புதன்கிழமைக்குள் தமது ஆணைக்குழு 500 மில்லியன் ரூபாவை முன்பணமாகப் பெற்றுக் கொள்ளாத பட்சத்தில் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான புதிய திகதிகள் அறிவிக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதற்கு இந்த மாத இறுதிவரை திறைசேரியிலிருந்து மொத்தம் 1,100 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை மார்ச் 20 திங்கட்கிழமைக்குள் பணம் கிடைக்காவிட்டால், தாம் நீதிமன்றத்திற்கு சென்று தமக்கான நிதியை திறைசேரி ஒதுக்கீடு செய்யாதது குறித்து முறையிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து திறைசேரியுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் ஏதும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் அச்சிடும் பணிக்காக 533 மில்லியன் ரூபாய் கோரப்பட்ட போதிலும், 339 மில்லியன் ரூபாய் இன்னும் நிலுவையில் உள்ளதாகவும், அதனால் அச்சடிக்கும் பணியை முன்னெடுக்க முடியவில்லை என்று அரச அச்சக பணிப்பாளர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பான 2,500 அச்சுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையில், இதுவரை 54 பணிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

https://thinakkural.lk/article/244420

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் நடவடிக்கைகளுக்கு எரிபொருள் விநியோகிக்க முடியாது - காஞ்சன விஜேசேகர

Published By: T. SARANYA

13 MAR, 2023 | 03:31 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள தேர்தல் ஆணைக்குழுவுக்கும்,வேட்பாளர்களுக்கும் எரிபொருளை விநியோகிக்க முடியாது.மேலதிகமாக எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான நிதியை திரட்டிக் கொண்டு எரிபொருளை இறக்குமதி செய்ய குறைந்தது மூன்று அல்லது ஆறு மாதங்களேனும் செல்லும்.

ஆகவே விரைவாக எரிபொருள் விநியோகிக்க முடியாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளோம் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

மினுவாங்கொடை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (12) மாலை இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆணைக்குழுவுக்கு எரிபொருளை விநியோகிக்க வலுசக்தி அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை அடிப்படையற்றது.

அரசாங்க தரப்பு வேட்பாளர்கள் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபடாமல் உள்ளார்கள்.

ஆனால் கடந்த காலங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்ட போது கறுப்புச் சந்தை ஊடாக எரிபொருளை பதுக்கி வைத்த மக்கள் விடுதலை முன்னணியினரும், ஐக்கிய மக்கள் சக்தியினரும் தற்போது அதனை பயன்படுத்தி முழு நாட்டையும் வலம் வருகிறார்கள்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட 80 ஆயிரத்திற்கும் அதிகமான வேட்பாளர்கள் தயாராக உள்ளார்கள், எரிபொருள் கோட்டாவை அதிகரிக்க வேண்டுமாயின் அனைவருக்கும் கோட்டாவை அதிகரித்துக் கொடுக்க வேண்டும், தற்போதைய நிலையில் மருத்துவ சேவைக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை வழங்க முடியாது.

வேட்பாளர்களுக்கு ஒருவாரத்திற்கு மாத்திரம் 5 லீற்றர் எரிபொருள் வழங்கப்படுகிறது,ஆனால் இவர்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட ஒரு நாளைக்கு 5 லீற்றர் எரிபொருளை விநியோகிக்குமாறு கேட்கிறார்கள்.5 லீற்றர் எரிபொருள் போதாது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்,ஆனால் தற்போது எவருக்கும் எரிபொருள் கோட்டாவை அதிகரித்துக் கொடுக்க முடியாது.

எரிபொருள் இறக்குமதிக்கான டொலரை திரட்டிக் கொண்டு எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்களேனும் செல்லும் என்பதை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளோம்.எரிபொருள் விநியோகம் முழுமையாக வழமைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்துக்கு அமைய எதிர்வரும் மாதம் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுத்த தீர்மானித்துள்ளோம்.

எரிபொருள் விலை குறைவடையும் போது அதன் பயனை மக்களுக்கு நிச்சயம் வழங்குவோம்.மின்சார சபை மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஆகிய அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/150411

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாக்குச்சீட்டு அச்சிடலுக்கு தேவையான நிதியை வழங்குங்கள் - அரச அச்சகத் திணைக்களம் திறைசேரியிடம் மீண்டும் கோரிக்கை

Published By: VISHNU

15 MAR, 2023 | 04:46 PM
image

 

(இராஜதுரை ஹஷான்)

வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகளுகளை மேற்கொள்வதற்கு தேவையான நிதியை விரைவாக வழங்குமாறு அரச அச்சகத் திணைக்களம் திறைசேரியின் செயலாளரிடம் எழுத்து மூலமாக மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ஒன்று நிதி விடுவிக்க வேண்டும் அல்லது நிதி விடுவிப்பு தொடர்பில் உத்தியோகபூர்வமாக ஒரு தீர்மானத்தை அறிவிக்க வேண்டும் என அரச அச்சகத் திணைக்களம் திறைசேரியிடம் சுட்டிக்காட்டியுள்ளது.

வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகளை மேற்கொள்வதற்கு நிதி நெருக்கடி பிரதான தடையாக உள்ளது.நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண திறைசேரி வெளிப்படையாக ஒரு அறிவிப்பை விடுக்க வேண்டும் என அரச அச்சகத் திணைக்கள தலைவர் கங்கானி லியனகே குறிப்பிட்டுள்ளார்.

நிதி விடுவிப்பு தொடர்பில் கடந்த 08 ஆம் திகதி திறைசேரிக்கு அனுப்பிய கடிதத்துக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகளுக்காக மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளுக்கு கூட இதுவரை போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிதி விடுவிப்பு தொடர்பில் அரச அச்சகத் திணைக்கள தலைவர் திறைசேரிக்கு அனுப்பி வைத்த கடிதத்தின் நகல் ஒன்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/150607

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சம்பளமில்லாத விடுமுறையிலுள்ள அரச சேவையாளர்கள் குறித்து இராஜாங்க அமைச்சர் சானக வகும்பரவின் ஆலோசனை

Published By: DIGITAL DESK 5

21 MAR, 2023 | 12:58 PM
image

(எம்.ஆர் எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

சத்திய கடதாசி ஊடாக சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களை நிபந்தனைகளின் அடிப்படையில் சேவையில் இணைத்துக் கொள்வது தொடர்பில் சட்டமாதிபரிடம் ஆலோசனை கோரிள்ளோம். என  மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் சானக வகும்பர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21) தேசிய சுதந்திர முன்னணின் தலைவர் விமல் வீரவன்ச சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்கள் தொடர்பில் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுத்தாக்கல் செய்து சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்கள் தேர்தல் இழுபறியால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த பிரச்சினைக்கு அமைச்சரவை மட்டத்தில் ஒரு தீர்மானத்தை எடுக்க முடியும்.

நிதி நெருக்கடி என்று குறிப்பிட்டுக் கொண்டு தேர்தல் பணிகளை முன்னெடுக்க அரசாங்கம் நிதி விடுவிக்காமல் இருப்பதால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிச்சயமற்ற நிலையில் உள்ளது, தேர்தலை நாங்கள் பிற்போடவில்லை, ஆகவே சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்கள் தொடர்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்று விமல் வீரவன்ச கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் சானக வகும்பர சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரசசேவையாளர்கள் தொடர்பில் உரிய தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களை நகர சபைகள், பிரதேச சபை தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின்  102 ஆவது உறுப்புரையின் பிரகாரம் அவர்களை தேர்தல் இடம்பெறாத நிலையில் மீண்டும் அரச சேவையில் இணைத்துக் கொள்ள முடியாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களுக்கு அமைச்சரவை ஊடாக நிவாரண கொடுப்பனவு வழங்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு  குறிப்பிட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் சட்டமாதிபரின் ஆலோசனை கோரியுள்ளோம். ஆளும் தரப்பின் சார்பிலும் பெருமளவான அரச சேவையாளர்கள் தேர்தலில் போட்டியிட தயாராகவுள்ளார்கள், ஆகவே இவ்விடயம் தொடர்பில்  அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது என்றார்.

இதன்போது எழுந்து கருத்துரைத்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரசன்ச உள்ளூராட்சிமன்றத் தேர்தல் எப்போது இடம்பெறும் என்று குறிப்பிட முடியாத நிலை உள்ளது, ஆகவே சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள், சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களுக்கு இறுதியில்  அவர்களின் குடும்பத்தாரின் வாக்குகள் கூட கிடைக்காத நிலை தோற்றம் பெறும்.

சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறும் வரை பிறிதொரு தேர்தல் தொகுதியில்  பணிபுரியும் விசேட வழிமுறையை உருவாக்குங்கள், பொருளாதார பாதிக்கப்பட்டுள்ள இவர்களுக்கு புத்தாண்டுக்கு முன்னர்  சிறந்த தீர்வினை வழங்குங்கள் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வேட்பு மனுத்தாக்கல் செய்த ஒட்டுமொத்த வேட்பாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள், சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களுக்கு சம்பளமும் இல்லை,சேவையும் இல்லை ஆகவே மார்ச் மாதம் 09 ஆம் திகதி என்ற வரையறைக்குள் அவர்களுக்கு சம்பளம் வழங்க அரசாங்கம் ஒரு தீர்மானத்தை எடுக்க  வேண்டும்;அதற்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் சானக வகும்பர சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களுக்கு  ஆரம்பக்கட்ட கொடுப்பனவை வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. 

அத்துடன சேவையில் ஈடுபடும் சம்பளமற்ற விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறும் வரை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட கூடாது என்ற சத்தியகடதாசி ஒன்றை பெற்றுக்கொள்வது குறித்து சட்டமாதிபரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க 1987 ஆம் ஆண்டு தேர்தலுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டு 1992 ஆம் ஆண்டு வரை குறித்த தேர்தல் இடம்பெறவில்லை.

அதுவரையான காலப்பகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்து சம்பளமில்லாத விடுமுறையில் இருந்த அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது, ஆகவே சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்குவது பிரச்சினையொன்றுமில்லை என்றார்.

https://www.virakesari.lk/article/151036

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கால வரையறையின்றி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தது ஆணைக்குழு

Published By: VISHNU

23 MAR, 2023 | 05:24 PM
image

 

(எம்.மனோசித்ரா)

கால வரையறையின்றி உள்ளுராட்சி மன்றத் தேர்தலை தேசிய தேர்தல் ஆணைக்குழு மீண்டும் ஒத்தி வைத்துள்ளது. தேர்தலை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டதன் பின்னரே தினம் அறிவிக்கப்படும் என்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் செயலாளர்களுடன் தேர்தல் ஆணைக்குழுவில் இன்று (23) வியாழக்கிழமை இடம்பெற்ற நீண்ட கலந்துரையாடலின் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தக் கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட 4 முக்கிய தீர்மானங்கள் தொடர்பில் தேர்தல் ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தற்போதுள்ள நிலைமைகளின் கீழ் ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாது என்பதால் , உறுதியான தினமொன்றை நியமித்து அதுவரை தேர்தலைக் காலம் தாழ்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு ஆரம்பத்திலேயே தேர்தலுக்கான தினத்தை தீர்மானிக்காது, தேர்தலை நடத்துவதற்கான வசதிகள் மற்றும் சூழல் தொடர்பில் சகல தரப்பினருடனும் கலந்துரையாடி இறுதியாக தினத்தை அறிவிப்பதற்கும் இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்ட தினத்தில் நடத்துவது தொடர்பில் தற்போது நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தரவின் அடிப்படையில் , தேர்தல் காலம் தாழ்த்தப்படுகின்றமை தொடர்பில் சட்ட ரீதியான சிக்கல்கள் காணப்படுகின்றமையால் எந்த வழியிலேனும்

தேர்தலை நடத்துவது தொடர்பில் நிறைவேற்றதிகாரம் , சட்டவாக்கசபை மற்றும் ஏனைய தரப்பினருடன் கலந்துரையாடி அதன் ஊடாக எட்டப்படும் இணக்கப்பாட்டுக்கமைய தேர்தலுக்கான புதிய தினம் தீர்மானிக்கப்படும்.

இவ்வனைத்து காரணிகளுடன் தேர்தலை நடத்துவதற்கான சட்டம் தொடர்பிலும் அவதானம் செலுத்தி, தேர்தலுக்கான தினத்தை இனிவரும் நாட்களில் ஆணைக்குழு தீர்மானிக்கும்.

அதற்கமைய ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்தப்படவிருந்து உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்கள் இம்மாதம் 28, 29, 30, 31 மற்றும் ஏப்ரல் 3ஆம் திகதிகளில் இடம்பெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/151276

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

கால வரையறையின்றி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தது ஆணைக்குழு

மாபெரும் தோல்வியை சந்திப்பதை விட 

அரசியல்கட்சிகளின் ஆர்ப்பாட்டம் பரவாயில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சம்பளமில்லாத விடுமுறையிலுள்ள அரச சேவையாளர்கள் பிரச்சினைக்கு உறுதியான தீர்வு - சானக வகும்பர

Published By: DIGITAL DESK 5

27 MAR, 2023 | 12:28 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்கள் தொடர்பில் எதிர்வரும் வாரத்திற்குள் உறுதியான தீர்மானம் அறிவிக்கப்படும்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும், பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு இவ்வாரம் இடம்பெறும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் சானக வகும்பர தெரிவித்தார்.

சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்கள் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத்தாக்கல் செய்த 7000 ஆயிரத்திற்கும் அதிகமான அரச ஊழியர்கள் சம்பளமில்லாத விடுமுறையில் உள்ளார்கள்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இழுபறி நிலையில் உள்ளதால் இவர்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்,அத்துடன் அரச நிர்வாக கட்டமைப்பிலும் நெருக்கடி நிலை தோற்றம் பெற்றுள்ளது.

நகர சபைகள் மற்றும் பிரதேச சபை கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களை சேவையில் இணைத்துக் கொள்ள முடியாது.

ஆனால் அவர்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டது.

சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களை சேவையில் இணைர்துக் கொள்ளாமல் ,அவர்களுக்கு எவ்வாறு சம்பளம் வழங்குவது, நிபந்தனைகளின் அடிப்படையில் சத்தியகடதாசி ஊடாக அவர்களை சேவையில் இணைத்துக் கொள்ள முடியுமா என்பது தொடர்பில் சட்டமாதிபரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்கள்,மற்றும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வு தொடர்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இவ்வாரம் இடம்பெறும்.

சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்கள் தொடர்பில் எதிர்வரும் வாரத்திற்குள் உறுதியான தீர்மானம் அறிவிக்கப்படும். விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களின் பிரச்சினைக்கு வெகுவிரைவில் தீர்வு எடுக்காவிட்டால் சமூக கட்டமைப்பில் பாரிய பிரச்சினைகள் தோற்றம் பெறும் என்றார்.

https://www.virakesari.lk/article/151478

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலை நடத்துவதா இல்லையா? ஏப் 4இல் முடிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வதற்காக தேர்தல் ஆணையம் அடுத்த வாரம் மீண்டும் கூடவுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி.புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் பணி இன்று (28) ஆரம்பமாகவுள்ளதாக முன்னர் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் அறிவித்துள்ளது.

அதன்படி ஏப்ரல் 25ம் திகதி உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்படாது.

https://thinakkural.lk/article/246609

  • கருத்துக்கள உறவுகள்

தோல்வி வரும் என்பதால் தேர்தலை நடாத்த பின்னடிக்கிறார்கள். பணம் இல்லை என்பது நொண்டிச்சாட்டு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடவுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு அடிப்படைச் சம்பளத்தை மாத்திரம் வழங்க தீர்மானம்

Published By: DIGITAL DESK 5

04 APR, 2023 | 04:04 PM
image

(எம்.மனோசித்ரா)

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக வேட்பாளர்களாக அரச அலுவலர்கள் 3000 பேர் நியமனப் பத்திரங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

அவர்களுக்கு தாபனக்கோவை விதியின் ஏற்பாடுகளுக்கமைய சம்பளமற்ற விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

ஆனாலும் தேர்தல் தற்போது பிற்போடப்பட்டுள்ளமையால், அவர்களின் சம்பளமற்ற விடுமுறைக்கான காலம் நீடிக்கப்படுகின்றமையால் குறித்த அலுவலர்கள் பொருளாதார ரீதியான சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

அதனால் தேர்தலில் போட்டியிடவுள்ள அரச அலுவலர்களுக்காக கடந்த மார்ச் 9 ஆம் திகதி முதல் இம்மாதம் 25 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குரிய குறித்த அந்தந்த அலுவலர்களின் அடிப்படைச் சம்பளத்தைச் செலுத்துவதற்காக அரச பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

https://www.virakesari.lk/article/152119

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நெருக்கடி : பிரதமரை சந்திக்கிறது தேர்தல்கள் ஆணைக்குழு

Published By: NANTHINI

08 APR, 2023 | 11:41 AM
image

 

(எம்.மனோசித்ரா)

ள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்ந்தும் நெருக்கடியாகவே காணப்படுகின்ற நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் திங்கட்கிழமை (10)  பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்திக்கவுள்ளனர்.

தவிர்க்க முடியாத காரணிகளால் கடந்த வாரம் பிரதமருடனான சந்திப்பு இடம்பெறவில்லை என்பதால், இவ்வாரம் நிச்சயம் குறித்த சந்திப்பு இடம்பெறுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் பிரதமரை சந்திக்கவுள்ளதாக கூறப்பட்ட போதிலும், அவ்வாறு எந்தவொரு சந்திப்பும் இடம்பெறாமை குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

நாளை மறுதினம் பிரதமருடன் நிச்சயம் சந்திப்பு இடம்பெறும். கடந்த வாரம் தவிர்க்க முடியாத காரணிகளால் சந்திப்பு இடம்பெறவில்லை. 

இந்த சந்திப்பின்போது நிதி நெருக்கடியின் காரணமாக எம்மால் அடுத்த கட்டமாக எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்க முடியாத நிலைமை காணப்படுகின்றமை தொடர்பில் பிரதமருக்கு தெளிவுபடுத்தப்படும்.

அதற்கமைய எடுக்கப்படும் முடிவுகளுக்கமையவே வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் பணிகள், தபால் மூல வாக்கெடுப்பு உள்ளிட்டவை தொடர்பில் தீர்மானிக்க முடியும். 

இது குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் வருகிற செவ்வாய்க்கிழமை இடம்பெறும். 

இதன்போது தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முதலில் கடந்த மார்ச்சில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு, பின்னர் ஏப்ரல் வரை காலம் தாழ்த்தப்பட்டது. 

இம்மாதம் 25ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், தமக்கான நிதி திறைசேரியினால் வழங்கப்படாமையின் காரணமாக இந்த திகதியிலும் தேர்தலை நடத்த முடியாது என ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எவ்வாறிருப்பினும், இரண்டாவது முறையாகவும் கால வரையறையின்றி தேர்தல் காலம் தாழ்த்தப்பட்டுள்ளமையால், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரால் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரதமர், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும், இரு வாரங்கள் கடந்துள்ள போதிலும், பிரதமருக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் இடையில் இதுவரை சந்திப்பொன்று இடம்பெறவில்லை. 

கடந்த வாரம் இந்த சந்திப்பு இடம்பெறும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டிருந்த போதிலும், கடந்த வாரமும் சந்திப்பு இடம்பெறவில்லை. 

இந்நிலையிலேயே நாளை மறுதினம் திங்கட்கிழமை நிச்சயம் பிரதமருடனான சந்திப்பு இடம்பெறும் என்று அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/152392

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் ஆணையம் எதிர்வரும் 11ஆம் திகதி கூடுகிறது

உள்ளூராட்சி சபைத் தேர்தல் திகதி தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (11) கூடவுள்ளது.

தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகளிடம் தொடர்ந்து பணம் கோரியதற்கு உரிய பதில் இதுவரை கிடைக்கவில்லை என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் இரண்டு தினங்களில் பிரதமருடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள ஆணைக்குழு எதிர்பார்த்துள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தல் நடைபெறாது – ஜனக்க வக்கும்புர

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திட்டமிட்டபடி ஏப்ரல் 25ஆம் திகதி நடத்தப்படாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இச்சந்திப்பை தொடர்ந்து இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர, தற்போதைய நிலவரப்படி இம்மாதம் 25ஆம் திகதி தேர்தல் நடத்தப்படாது என்றார்.

திட்டமிட்டபடி தபால் மூல வாக்களிப்பு நடைபெறாததாலும், ஏனைய தேவைகள் காரணமாகவும் ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குதல், தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஆஜராகாதமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் திறைசேரி அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்றும் நடத்தப்படும் என்றார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனஅவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/248761

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதில் பல நெருக்கடிகள் : 2 ஆவது தடவையாகவும் தேர்தலை ஒத்திவைத்தது ஆணைக்குழு

Published By: DIGITAL DESK 5

11 APR, 2023 | 03:02 PM
image

(எம்.மனோசித்ரா)

நிதி கிடைக்கப் பெறாமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இரண்டாவது முறையாகவும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை ஒத்தி வைப்பதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தலுக்கான நிதி கிடைக்கப் பெறும் தினம் அல்லது நீதிமன்ற தீர்ப்பு என்பவற்றின் அடிப்படையிலேயே தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்படும் என்றும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் குறித்து திங்கட்கிழமை (10) பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்குமிடையில் தீர்க்கமான சந்திப்பு இடம்பெற்றது.

இதன் போது ஏற்கனவே திட்டமிட்ட படி இம்மாதம் 25ஆம் திகதி தேர்தலை நடத்துவது கடினமானது என அரசாங்க தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இது குறித்து செவ்வாய்கிழமை (11) ஆணைக்குழு உறுப்பினர்களுக்கிடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலின் போதே மீண்டும் தேர்தலை ஒத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை உரியவாறு நடத்துவதற்காக தேர்தல் ஆணைக்குழு அதன் பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்தது.

தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதி கிடைக்கப் பெறாமை மற்றும் ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட விதத்திலான விடயங்களின் காரணமாக இம்மாதம் 25ஆம் திகதி நடத்தப்படவிருந்த தேர்தலை இரண்டாவது முறையாகவும் ஒத்தி வைக்க வேண்டியேற்பட்டுள்ளது.

எனவே உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களை நடத்துவதற்கு தேவையான நிதி கிடைக்கப் பெறுகின்ற ஸ்திரமான தினம் அல்லது உயர் நீதிமன்றத்தில் காணப்படுகின்ற வழக்குகளுக்கமைய நீதிமன்றத்தினால் வழங்கப்படுகின்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே திகதியைத் தீர்மானிக்க முடியும்.

எவ்வாறிருப்பினும் தேர்தல் ஆணைக்குழு உள்ளூராட்சிமன்றத் தேர்தலை துரிதமாக நடத்துவதற்கு தேவையான சகல முயற்சிகளையும் , அதற்கான செயற்பாடுகளையும் முன்னெடுத்துச் செல்லும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/152661

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்படுகிறது!

election-1.jpg

புதிய எல்லை நிர்ணய அறிக்கையின்படி, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 4,714 ஆக குறைக்கப்படுகிறது.

தேசிய எல்லை நிர்ணய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனைத் தெரிவித்துள்ளார்.

எல்லை நிர்ணய தேசிய குழு தமது அறிக்கையின் இரண்டாம் அலகை பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் இன்று கையளித்தது.

தற்போது 8 ஆயிரமாக உள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க இந்த அறிக்கையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/248933

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திறைசேரி நிதி ஒதுக்கிய பின்னரே தேர்தல் குறித்து அறிவிக்கப்படும்

Published By: T. SARANYA

19 APR, 2023 | 02:58 PM
image

(எம்.மனோசித்ரா)

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை ஏப்ரல் மாதத்தில் நடத்த முடியாது என அனைத்து மாவட்டங்களினதும் தெரிவத்தாட்சி அலுவலர்களால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலின்படி, எதிர்வரும் 25ஆம் திகதி திட்டமிட்டபடி தேர்தலை நடத்த முடியாது என்று மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

திறைசேரி நிதி ஒதுக்கிய பின்னர் அல்லது உயர் நீதிமன்றத்தினால் நிலுவையில் உள்ள வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் தேர்தலுக்கான புதிய திகதி அறிவிக்கப்படும் என வர்த்தமானி அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முதலில் மார்ச்  9 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும், தேர்தலை நடாத்துவதற்கு நிதி வழங்கப்படாத காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் இரண்டாவது முறையாக இம்மாதம் 25 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், நிதி நெருக்கடி காரணமாக காலவரையறையின்றி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/153228

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் போட்டியிடும் அரசு ஊழியர்கள் பற்றிய தீர்மானம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை சமர்ப்பித்த அரச ஊழியர்கள் தாங்கள் போட்டியிடும் மாவட்டத்தைத் தவிர அருகிலுள்ள உள்ளூராட்சிப் பிரிவில் பணியாற்றுவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கான தேர்தல் வரை மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அவதானிப்புகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புரவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர நேற்று (02) விடுத்துள்ள அறிக்கையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு சிபாரிசுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தேவையான அறிவுறுத்தல்கள் மாகாண ஆளுநர்கள் ஊடாக அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/251845

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த அரச ஊழியர்களுக்கு விசேட சலுகை!

bandula-gunawardena-1.jpg

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த அரச ஊழியர்கள், தாங்கள் போட்டியிடும் வட்டாரத்திலுள்ள அரச நிறுவனங்களை தவிர்த்து, அருகிலுள்ள வேறு வட்டாரங்களில், இடமாற்றம் மூலம் சேவையில் ஈடுபட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் என்ற அடிப்படையில், பிரதமர் தினேஸ் குணவர்தன இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.

இந்த அனுமதி மூலம் குறித்த அரச ஊழியர்கள் தமது வட்டாரம் தவிர்த்து, வேறு வட்டாரங்களில் கடமையாற்ற சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/251839

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.