Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரொனால்டோவின் ஹாட்ரிக் கோலால் சௌதி லீக் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் அல் நாசர் அணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரொனால்டோவின் ஹாட்ரிக் கோலால் சௌதி லீக் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் அல் நாசர் அணி

ரொனால்டோ அல் நாசர் கிளப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

அல் நாசர் அணிக்காக இந்த சீசனில் 8 கோல்களை அடித்து அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் ரொனால்டோ இருக்கிறார்.

26 பிப்ரவரி 2023, 05:41 GMT
புதுப்பிக்கப்பட்டது 26 பிப்ரவரி 2023, 06:27 GMT

ரொனால்டோ, கிளப் போட்டிகளில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக நடப்பு சீசனில் 16 ஆட்டங்களில் ஆடி 3 கோல்களை மட்டுமே அவர் அடித்திருந்தார், அதிலும் ஒன்று பெனால்டி மூலம் கிடைத்தது.

இப்போது அல் நாசர் அணிக்காக கடந்த 6 ஆட்டங்களில் 8 கோல்களை அடித்து அசத்தி இருக்கிறார் முன்கள ஆட்டக்காரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ. இது மட்டுமின்றி 2 கோல்கள் அடிக்க உதவி செய்தும்(அசிஸ்ட்-Assit) அசத்தி இருக்கிறார் இந்த நட்சத்திர வீரர்.

அல் நாசர் vs டமக்

ரொனால்டோ அல் நாசர் கிளப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சௌதி அரேபியாவில் நடக்கும் கால்பந்து போட்டியான, 'சௌதி புரோ லீக்' தொடரில் நேற்று (பிப். 25) நடந்த போட்டியில் நட்சத்திர வீரரான ரொனால்டோ விளையாடும் அல் நாசர் அணி, டமக் அணியை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் சௌதி லீக் போட்டிகளில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறலாம் என்ற நம்பிக்கையுடன் அல் நாசர் அணி களம் கண்டது.

அந்த அணியின் முன்கள ஆட்டக்காரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ நல்ல ஃபார்மில் இருந்தது அல் நாசர் அணிக்கு கூடுதல் உத்வேகத்தை வழங்கியிருந்தது.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அல் நாசர் அணி தொடர்ந்து கோல் அடிக்க முயற்சி செய்து வந்தது.

ரொனால்டோவின் பெனால்டி

அல் நாசர் அணியின் கோல் முயற்சிகளை தடுக்க டமக் அணி முயற்சி செய்த போது, ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் டமக் அணியின் கேப்டன் ஒரு சிறிய தவறை செய்தார்.

அல் நாசர் அணியில் கோல் அடிக்கும் முயற்சியின் போது D பாக்ஸில் டமக் அணியின் கேப்டனான இப்ராஹிம் கையில் பந்து பட்டதால், நடுவர் ஹேண்ட் பால் அறிவித்து பெனால்டியை வழங்கினார்.

எதிரணியின் தவறால் கிடைத்த பெனால்டி வாய்ப்பை வீணாக்காமல் கோல் கீப்பரை ஏமாற்றி வலைக்குள் திணித்தார் ரொனால்டோ.

அல் நாசர் அணி 1-0 என முன்னிலை பெற்றாலும், தொடர்ந்து அட்டாங்கிங் செய்து வந்தது.

அந்த அணியின் ஃபார்வர்ட் வீரர்கள் பந்தை தொடர்ந்து எதிரணியின் கோல் ஏரியாவுக்குள்ளேயே வைத்திருந்தனர்.

ஹாட்ரிக் அடித்த ரொனால்டோ

கோல் அடிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்ட அல் நாசர் அணிக்காக இரண்டாவது கோலையும் அடித்து அசத்தினார் ரொனால்டோ.

முதலாவது கோல் அடித்த 5 நிமிடத்திலேயே, இரண்டாவது கோலை தனது weak foot ஆன இடது காலால் லாவகமாக அடித்தார் ரொனால்டோ.

ரொனால்டோ அல் நாசர் கிளப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அவரது கோல் தாகம் அத்துடன் அடங்கவில்லை. ஆட்டத்தின் முதல் பாதி முடிய 1 நிமிடம் இருக்கையில் மீண்டும் ஒரு கோலடித்து அல் நாசர் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப்படுத்தினார்.

அல் நாசர் அணியின் கரீப் கொடுத்த வைடு பாஸை பெற்ற அய்மென் யாயா, அதை ரொனால்டோவுக்கு பாஸ் செய்தார். அதை பெற்றுக் கொண்ட ரொனால்டோ நொடியும் தாமதிக்காமல் வலைக்குள் அனுப்பி தனது ஹாட்ரிக் கோலை பதிவு செய்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

அல் நாசர் அணிக்காக ரொனால்டோ இந்த சீசனில் அடிக்கும் இரண்டாவது ஹாட்ரிக் கோல் இதுவாகும். முன்னதாக பிப்ரவரி 9ஆம் தேதி அல் வேதா அணிக்கு எதிரான போட்டியில் 4 கோல் அடித்திருந்தார்.

ரொனால்டோ விளையாடிய கடைசி 3 போட்டிகளில் இரண்டு ஹாட்ரிக் கோல்கள் உட்பட 7 கோல்களை அவர் அடித்துள்ளார். மேலும் கடந்த போட்டியில் 2 அசிஸ்ட் செய்து அல் நாசர் அணி வெற்றி பெற முக்கியமானவராக திகழ்ந்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

புள்ளிப் பட்டியலில் முதலிடம்

டமக் அணியுடனான முதல் பாதியிலேயே 3-0 என்ற கோல் கணக்கில் அல் நாசர் அணி முன்னிலை பெற்று இருந்தது.

அந்த முன்னிலையுடன் இரண்டாவது பாதியில் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை தக்க வைத்தது.

அந்த அணியின் குஸ்டாவோ தடுப்பாட்டத்தை சிறப்பாக கையாண்டார். டமக் அணியை தனது கட்டுப்பாட்டில் பந்தை வைத்திருக்க விடாமல் பாஸ்களை தொடர்ந்து கடத்திக் கொண்டே இருந்தார்.

இதன் காரணமாக டமக் அணியால் பதிலுக்கு ஒரு கோல் கூட போட முடியவில்லை.

இரண்டாவது பாதியிலும் ரொனால்டோ தனது ஆதிக்கத்தை செலுத்தி வலைக்குள் மீண்டும் பந்தை அனுப்பினார். ஆனால் நடுவர் அதை ஆஃப் சைடு என அறிவித்ததால் அது கோலாக எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இறுதியில் அல் நாசர் அணி, 3-0 என்ற கோல் கணக்கில் டமக் அணியை வீழ்த்தியது.

ரொனால்டோ அல் நாசர் கிளப்

பட மூலாதாரம்,SPL.COM

 
படக்குறிப்பு,

அல் நாசர் அணி 13 வெற்றிகளுடன் 43 புள்ளிகள் பெற்று, அல் இட்டிஹாத் அணியை விட 2 புள்ளிகள் முன்னிலையுடன் முதலிடத்தில் இருக்கிறது

இந்த வெற்றியின் மூலம் சௌதி புரோ லீக்கில் அல் நாசர் அணி முதலிடம் பெற்றது.

நேற்று அல் இட்டிஹாத் - அல் ரீத் அணிக்கான போட்டி சமனில் முடிந்ததையடுத்து டமக் அணியுடனான வெற்றியின் மூலம் கிடைத்த 3 புள்ளிகளுடன் அல் நாசர் அணி முதலிடத்தை பிடித்தது.

கோல் போட்டியில் ரொனால்டோ

ரொனால்டோ அல் நாசர் கிளப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

போட்டிக்குப் பிறகு பேசிய ரொனால்டோ, "நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இப்போது அணியுடன் நான் மிகவும் இணக்கமாக இருக்கிறேன். எனது சக வீரர்களின் நகர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அதற்கு ஏற்ப நானும் களத்தில் நகர்கிறேன். இது அணிக்கு மிக முக்கியமானது."

சௌதி புரோ லீக்கில் தற்போது அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 8 கோல்கள் அடித்து நான்காவது இடத்தில் இருக்கிறார். இந்த சீசனில் அல் நாசர் அணிக்காக ஜனவரி மாதம் களமிறங்கிய அவர், 5 போட்டிகளில் 8 கோல்கள் அடித்துள்ளார்.

இந்த பட்டியலில் முதலிடத்தை பிடிக்க இன்னும் 5 கோல்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில், விரைவில் இந்த பட்டியலில் முதலிடத்தை பிடிப்பார் என்று அவரது ரசிகர்கள் டிவிட்டரில் தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்த பட்டியலில் ரொனால்டோவின் சக அணி வீரரான ஆண்டர்சன் டலிஸ்கா 14 போட்டிகளில் விளையாடி 13 கோல்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.

https://www.bbc.com/tamil/articles/c1vx6vd7klpo

 

  • கருத்துக்கள உறவுகள்

த‌ல‌ வ‌ய‌தானாலும் வேற‌ லெவ‌ல்...............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, பையன்26 said:

த‌ல‌ வ‌ய‌தானாலும் வேற‌ லெவ‌ல்...............

வயது போகப்போக எப்பவுமே வேற லெவல் தானே அப்பன்....:cool:

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, குமாரசாமி said:

வயது போகப்போக எப்பவுமே வேற லெவல் தானே அப்பன்....:cool:

ஓம் ஆனால் பிரிமியர் லீக், லா லீகா, புண்டஸ்லீகா வில் ஏலாது……

ஏதாவது சவுதி லீக்க்கில் தூள் கிளப்பலாம்🤣

பிகு

அது சரி உங்கட பேரன் @பையன்26 என்ன உக்கல் கலர்ல கொடி போட்டிருக்கிறார்?🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, goshan_che said:

ஓம் ஆனால் பிரிமியர் லீக், லா லீகா, புண்டஸ்லீகா வில் ஏலாது……

ஏதாவது சவுதி லீக்க்கில் தூள் கிளப்பலாம்🤣

பிகு

அது சரி உங்கட பேரன் @பையன்26 என்ன உக்கல் கலர்ல கொடி போட்டிருக்கிறார்?🤣

தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறு என்பது போல்  அவரவர்களுக்கு பிடித்ததை செய்வது அவரவர் சுதந்திரம்.😎

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறு என்பது போல்  அவரவர்களுக்கு பிடித்ததை செய்வது அவரவர் சுதந்திரம்.😎

ச‌ரியா சொன்னீங்க‌ள் தாத்தா❤️🙏😁..............

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறு என்பது போல்  அவரவர்களுக்கு பிடித்ததை செய்வது அவரவர் சுதந்திரம்.😎

அப்படியா தாத்தா?

அப்ப தமிழீழத்தோடு உக்ரேனை ஒப்பிடுவது இனத்துரோகம் எண்டு எழுதியதெல்லாம் - உங்கள் வாரிசுகளுக்கு பொருந்தாதா தாத்தா?🤣

இது கருணாநிதியை வெண்ட வாரிசு அரசியலா இருக்கே🤣

  • கருத்துக்கள உறவுகள்

🤣😁😂...............

12 hours ago, goshan_che said:

ஓம் ஆனால் பிரிமியர் லீக், லா லீகா, புண்டஸ்லீகா வில் ஏலாது……

ஏதாவது சவுதி லீக்க்கில் தூள் கிளப்பலாம்🤣

பிகு

அது சரி உங்கட பேரன் @பையன்26 என்ன உக்கல் கலர்ல கொடி போட்டிருக்கிறார்?🤣

அப்ப‌ இது என்ன‌ Bro சொல்லுங்கோ......................

Screenshot-20230227-135942-Chrome.jpg

 

 

த‌மிழில் கிறுக்கும் போது யோசிச்சு கிறுக்கினா ந‌ல்ல‌ம்🤣😁😂...........................

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

ஓம் ஆனால் பிரிமியர் லீக், லா லீகா, புண்டஸ்லீகா வில் ஏலாது……

ஏதாவது சவுதி லீக்க்கில் தூள் கிளப்பலாம்🤣

 

காசு

பணம்

துட்டு

மணி  மணி???☺️

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பையன்26 said:

🤣😁😂...............

அப்ப‌ இது என்ன‌ Bro சொல்லுங்கோ......................

Screenshot-20230227-135942-Chrome.jpg

 

 

த‌மிழில் கிறுக்கும் போது யோசிச்சு கிறுக்கினா ந‌ல்ல‌ம்🤣😁😂...........................

ஆ…ப்ரோ…

அதென்னெண்டா….உந்த படம் முந்தி ஒரு இருபது வருசமா மஞ்சள் சிவப்பிலதான் இருந்தது. வடிவா பாருங்கோ வடக்கு-கிழக்கு தவிர்ந்த இலங்கை ஒரு ஓநாய் குந்தி இருப்பது போல இருக்கும். அது கறுப்பில் இருக்கும்.

பிறகு போன வருடம் சிலர் உக்ரேனில் அடிபாடு தொடங்கின நேரம் உக்ரேனியருடன் solidarity (சகோதரதுவம்) காட்டும் முகமாக இந்த படத்தை உக்ரேன் கலருக்கு மாத்தினவை.

ஆனால் நீங்கள் ரஸ்ய அனுதாபி எல்லோ? அதான் உதை ஏன் வச்சனியள் எண்டு கேட்டனான். தாத்தாக்கு விளங்கி விட்டது. அதான் அவரவர் விருப்பம் எண்டு சொல்லி இருக்கிறார்.

நான் நினைக்கிறன் நீங்கள் பார்க்க மிட்டாஸ் கலரில இருக்கு எண்டு வஞ்சகமில்லாமல் வச்சிருக்கிறியள் போல?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

 

 

நான் நினைக்கிறன் நீங்கள் பார்க்க மிட்டாஸ் கலரில இருக்கு எண்டு வஞ்சகமில்லாமல் வச்சிருக்கிறியள் போல?

❤️🙏.............................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரொனால்டோவை அலறவிட்ட அல் பேட்டின்: அல் நாசரை காப்பாற்றிய கடைசி நிமிட 'மேஜிக்' கோல்கள்

அல்நாசர் - ரொனால்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

4 மணி நேரங்களுக்கு முன்னர்

சௌதி புரோ லீக்கில் அல்-பேட்டின் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியின் விளிம்பில் இருந்த ரொனால்டோவின் அல்-நாசர் அணி, கூடுதல் நேரத்தில் அடுத்தடுத்து 3 கோல்களை அடித்து வெற்றியைத் தன்வசமாக்கியது.

கால்பந்து உலகில் அதிகம் அறியப்படாதிருந்த சௌதி புரோ லீக், நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் வருகைக்குப் பிறகு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த உள்நாட்டுத் தொடர்களில் ஒன்றாக உருவெடுத்துவிட்டது.

வரலாறு காணாத ஊதிய ஒப்பந்தத்துடன் அல்-நாசர் கிளப்பில் இணைந்துள்ள அவர், அந்த அணிக்காக சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார்.

முந்தைய 3 ஆட்டங்களில் இரு முறை ஹாட்ரிக் கோல் அடித்து அசத்திய கிறிஸ்டியானோ ரொனால்டோ, பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த கால்பந்து வீரர் விருதையும் வென்றார்.

 

சௌதி புரோ லீக் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் யாருக்கு என்பதில் அல்-நாசர் அணிக்கும், அல்-இட்டிஹாட் அணிக்கும் இடையேதான் கடும் போட்டி நீடிக்கிறது. அந்தப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள அல்-பேட்டின் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வென்றால் மீண்டும் முதலிடத்தப் பிடிக்கலாம் என்ற நிலையில் அல்-நாசர் அணி இருந்தது.

அல்-நாசர் அணி கடந்த செப்டம்பருக்கு பிறகு இதுவரை ஒரு போட்டியில் கூட தோல்வியடையவே இல்லை. மறுபுறம், அல்பேட்டின் அணியோ நடப்புத் தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இரு அணிகளும் இதுவரை மோதியுள்ள 12 ஆட்டங்களில் அல்-நாசர் அணி 9 முறையும், அல்-பேட்டின் அணி 3 முறையும் வென்றுள்ளன. நடப்புத் தொடரில் 39 கோல்களை அடித்துள்ள அல்-நாசர் அணி சிறந்த தாக்குதல் ஆட்டத்தைக் கொண்ட அணியாக உருவெடுத்துள்ளது. அல்-பேட்டின் அணியோ வெறும் 12 கோல்களுடன் மிகக் குறைந்த கோல்களை அடித்த அணியாக உள்ளது.

அல்நாசர் - ரொனால்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

புள்ளி விவரங்களின்படி பார்த்தால், அல்-பேட்டின் அணியை கிறிஸ்டியானோ ரொனால்டோவை உள்ளடக்கிய அல்-நாசர் அணி எளிதில் வீழ்த்திவிடும் என்றே கால்பந்து வல்லுநர்கள் கணித்திருந்தனர். சிறப்பான ஃபார்மில் இருந்த ரொனால்டோ இந்தப் போட்டியிலும் கோல் மழை பொழிவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

சௌதி அரேபிய தலைநகர் ரியாத்தில் கிங் சௌத் யுனிவெர்சிட்டி ஸ்டேடியத்தில் அல்-நாசர் மற்றும் அல்-பேட்டின் அணிகள் இடையிலான ஆட்டம் நடைபெற்றது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, அல்-நாசர் அணியின் தாக்குதலை அல்-பேட்டின் வீரர்கள் சிறப்பாக எதிர்கொண்டனர்.

அத்துடன், யாருமே எதிர்பார்க்காத வகையில் ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் அல்-பேட்டின் அணி கோல் அடித்து முன்னிலையும் பெற்றது. அந்த அணி வீரர் ரென்சோ லோபெஸ் எதிரணி வீரர்களை ஏமாற்றி தனது அணிக்கான முதல் கோலை அடித்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

கோல் வாங்கிய அதிர்ச்சியில் இருந்து மீண்டு, பதில் கோல் அடிக்க அல்-நாசர் அணி வீரர்கள் கடுமையாகப் போராடினர். குறிப்பாக, நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடிக்கடி எதிரணியின் கோல் கம்பத்தை முற்றுகையிட்டபடி இருந்தார்.

ஒரு கட்டத்தில் பந்தை ரொனால்டோ கோல் வளைக்குள் திணிக்கவும் செய்தார். ஆனால், அதை ஆஃப்சைடு என்று நடுவர்கள் அறிவித்ததால் அவர் ஏமாற்றமடைந்தார்.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் அல்-நாசர் அணி வீரர்கள் கோல் அடித்து ஆட்டத்தைச் சமநிலைக்குக் கொண்டு வர தீவிரமாக முயன்றனர். தாக்குதல் ஆட்டத்தைத் தலைமை தாங்கி வழிநடத்திய ரொனால்டோ, சில கோல் வாய்ப்புகளை உருவாக்கவும் செய்தார்.

ஆனால், அல்-பேட்டின் அணியின் தற்காப்பு மிகவும் வலுவாக இருந்ததால், அவை எதுவும் கோலாக மாறவில்லை. அல்-பேட்டின் அணியின் கோல் கீப்பர் மார்ட்டின் கம்பானா தனி ஒருவனாக மலை போல் நின்று அல்-நாசர் அணியின் முயற்சிகளைத் தடுத்து நிறுத்தினார்.

அல்நாசர் - ரொனால்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிட ஆட்ட நேரத்தில் அல்-பேட்டின் ஒரு கோல் அடித்து முன்னிலையில் இருந்தது. வலுவான அல்-நாசர் அணியோ கோல் அடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தது. இதனால், அல்-நாசர் அணிக்கு அல்-பேட்டின் அணி அதிர்ச்சி கொடுக்கக்கூடும் என்ற நிலையே இருந்தது.

ஆனால், ஆட்டத்தின்போது வீணான நேரத்தை ஈடுகட்டுவதற்காக வழங்கப்பட்ட கூடுதலான 12 நிமிடங்களில் ஆட்டமே தலைகீழாக மாறிப் போனது. கூடுதல் நேரத்தின் மூன்றாவது நிமிடத்தில் அல்-நாசர் அணியின் இடைவிடாத முயற்சிக்குப் பலன் கிடைத்தது.

அல்-பேட்டின் அணியின் கோல் கம்பத்தை அந்த அணி முற்றுகையிட்டிருந்தபோது கிடைத்த வாய்ப்பை அல்துல் ரஹ்மான் காரீப் கோலாக மாற்றினார். இதனால், ஆட்டம் சமநிலைக்கு நகர்ந்தது.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

இன்னும் 9 நிமிடங்கள் எஞ்சியிருந்ததால் இரு அணிகளுமே கோல் அடித்து வெற்றியை வசப்படுத்திவிடத் துடித்தன. ஆனால், திரில்லிங்கான இந்தக் கட்டத்தில் வலுவான அல்-நாசர் அணி தனது அனுபவத்தைப் பயன்படுத்தி முத்திரை பதித்தது.

பரபரப்பான இறுதிக்கட்டத்தில், அல்-நாசர் அணிக்கு சப்ஸ்டிடியூட் வீரராக உள்ளே வந்த முகமது அல்-ஃபேட்டில் கோல் அடித்து அசத்தினார். ஆட்டம் முடிவடைய 3 நிமிடங்கள் மட்டுமே இருந்தபோது அவர் அடித்த கோல் அல்-நாசர் அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தது.

இந்த அதிர்ச்சியில் இருந்து அல்-பேட்டின் அணி மீளும் முன்பே, ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் மேலும் ஒரு கோலையும் அடித்து, 'சௌதி புரோ லீக்கில் யார் மாஸ்' என்று அல்-நாசர் அணி நிரூபித்தது. முகமது மாறன் இந்த கோலை அடித்து அல்-நாசர் அணிக்கு வலுவான முன்னிலையைப் பெற்றுக் கொடுத்தார்.

இதன்மூலம் அல்-நாசர் அணி 3-1 என்ற கோல் கணக்கில் அல்-பேட்டின் அணியை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. அந்த அணி 19 ஆட்டங்களில் 46 புள்ளிகளைச் சேர்த்துள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள அல்-இட்டிஹாட் அணியைக் காட்டிலும் அல்-நாசர் 2 புள்ளிகள் அதிகம் பெற்றுள்ளது.

நேற்றைய ஆட்டத்தில், கூடுதல் நேரமாக 12 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது குறித்து ரசிகர்கள் பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். பலரும் சமூக ஊடகங்களில் தங்களது அதிருப்தியைப் பதிவு செய்திருந்தனர். அதில் ஒருவர், ரொனால்டோ கோல் அடித்த பின்னரே ஆட்டம் முடிவுக்கு வரும் என்று கிண்டலாக பதிவு செய்திருந்ததைக் காண முடிந்தது.

அல்நாசர் - ரொனல்டோ

பட மூலாதாரம்,TWITTER/LOGAN

அரபு மண்ணில் கால் பதித்த பின்னர், சௌதி ப்ரோ லீக் தொடரில் ரொனால்டோ இதுவரை 8 கோல்களை அடித்துள்ளார்.

முந்தைய ஆட்டங்களில் அசத்திய அவருக்கு நேற்றைய ஆட்டத்தில் கோல் அடிக்காதது ஏமாற்றமே. போட்டியின் முடிவு அவரது அணிக்கு சாதகமாக அமைந்துவிட்டதால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் ஏதும் எழவில்லை.

சௌதி ப்ரோ லீக்கில், புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை வகிக்கும் அல்-நாசர் அணியும், அல்-இட்டிஹாட் அணியும் வரும் 9-ஆம் தேதி நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்துகின்றன.

அல்-பேட்டின் அணிக்கு எதிராக ஏமாற்றம் தந்த ரொனால்டோ அடுத்த ஆட்டத்தில் மாயாஜாலம் நிகழ்த்துவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/cne3nlwnp0vo

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனல் பறந்த ஆட்டம், ரொனால்டோவின் அநாயசமான கோல் - ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி

போர்ச்சுகல் அணியில் மீண்டும் ரொனால்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

சர்வதேச கால்பந்தில் போர்ச்சுகல் தேசிய அணியில் மீண்டும் இடம் கிடைத்த உற்சாகத்தில், சௌதி ப்ரோ லீக்கில் அல்-நாசர் அணிக்காக நட்சத்திர வீரர் ரொனால்டோ அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதன் மூலம், ஆபா அணியை வீழ்த்திய அல்-நாசர் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை நெருங்கியுள்ளது.

கால்பந்து உலகில் அதிகம் அறியப்படாதிருந்த சௌதி ப்ரோ லீக் தொடர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் வருகைக்குப் பின்னர் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குரிய ஒன்றாகிவிட்டது.

வரலாறு காணாத ஊதிய ஒப்பந்தத்துடன் அந்த அணியில் இணைந்துள்ள அவர், அந்த அணிக்காக அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதன்மூலம் தனக்கு மட்டுமின்றி, சௌதி ப்ரோ லீக் தொடருக்கும் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் மதிப்பு கிடைத்துள்ளது.

 

போர்ச்சுகல் அணியில் மீண்டும் இடம்

இதன் எதிரொலியாக, போர்ச்சுகல் தேசிய அணியில் ரொனால்டோ மீண்டும் இடம் பிடித்துள்ளார்.

ரொனால்டோவுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்த, கத்தார் உலகக்கோப்பையில் போர்ச்சுகல் அணி விளையாடிய 2 நாக்அவுட் போட்டிகளிலும் அவர் தொடக்கத்திலேயே களமிறங்க அப்போதைய பயிற்சியாளர் பெர்னாண்டோ சான்டோஸ் வாய்ப்பு அளிக்கவில்லை.

இதனால், 35 வயதை எட்டிவிட்ட ரொனால்டோவின் சர்வதேச கால்பந்து வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாகவே நிபுணர்கள் பலரும் கணித்தனர்.

ஆனால், போர்ச்சுகல் அணியின் புதிய பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுள்ள ரொபர்டோ மார்டினெஸ் அந்தக் கணிப்புகளை பொய்யாக்கியுள்ளார். ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தகுதிச்சுற்றுப் போட்டிக்கான போர்ச்சுகல் தேசிய அணியில் ரொனால்டோவுக்கு அவர் வாய்ப்பளித்துள்ளார்.

போர்ச்சுகல் அணியில் மீண்டும் ரொனால்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

சௌதி ப்ரோ லீக்கில் அசத்திய ரொனால்டோ

போர்ச்சுகல் அணியில் இடம்பிடித்த ரொனால்டோ, சௌதி ப்ரோ லீக் தொடரிலும் புதிய மைல் கல்லை எட்டும் வாய்ப்புடன், ஆபா அணிக்கு எதிரான ஆட்டத்தில் அல்-நாசர் அணிக்காக உற்சாகத்துடன் களமிறங்கினார்.

நடப்புத் தொடரில் அல்-நாசர் அணிக்காக 9 போட்டிகளில் 8 கோல்களை அடித்து இரண்டாவது இடத்தில் இருந்த அவர், முதலிடத்தில் இருந்த பிரேசிலின் ஆண்டர்சன் தலிஸ்காவை முந்தும் வாய்ப்பு இருந்தது.

இதற்கேற்ப, ஆட்டத்தின் தொடக்கம் முதலே ரொனால்டோ புது உத்வேகத்துடன் ஆடியதைப் பார்க்க முடிந்தது. அல்-நாசர் அணி தொடக்கத்திலேயே தாக்குதல் பாணி ஆட்டத்தைக் கையில் எடுத்தது.

பெரும்பாலான நேரம் அந்த அணி வீரர்கள் வசமே பந்து இருந்தது. தங்களுக்குள் அற்புதமாக பாஸ் செய்து கொண்ட அவர்கள், அடிக்கடி ஆபா அணியின் கோல் கம்பத்தை முற்றுகையிட்ட படி இருந்தனர்.

ஆட்டத்தின் 16வது நிமிடத்திலேயே அல்-நாசர் அணிக்கு கோலடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆபா அணியின் கோல் கம்பத்திற்கு மிக நெருக்கமாக ரொனால்டோ எதிரணி வீரர்களால் தடுக்கப்பட்டு கீழே விழ, பெனால்டி கேட்டு நடுவரிடம் முறையிட்டார். ஆனால், நடுவர் அதை நிராகரித்துவிட்டார்.

போர்ச்சுகல் அணியில் மீண்டும் ரொனால்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆபா அணி முதல் கோல் அடித்து முன்னிலை

இதைத் தொடர்ந்து ஆபா அணியும் தாக்குதல் பாணியை கைக்கொள்ள, ஆட்டத்தில் அனல் பறந்தது. பந்து இரு அணிகளின் கோல் கம்பங்களின் பக்கமும் மாறி மாறிச் சென்ற வண்ணம் இருந்தது. ஆனால், கோல் ஏதும் விழவில்லை.

ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் அந்தத் திருப்புமுனை நிகழ்ந்தது. அல்-நாசர் அணியின் தாக்குதலை முறியடித்த ஆபா அணி வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். அந்த அணியின் சாட் பிகுயிர் கொடுத்த அற்புதமான பாஸை பெற்ற முன்கள வீரர் ஆடம் அதைத் திறமையாக கோலுக்குள் திணித்தார்.

இதன்மூலம் ஆபா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் முதல் கோலை அடித்த வீரர் ஆடம், கடன் முறையில் அல்-நாசர் அணியிடம் இருந்து ஆபா அணியால் பெறப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் கோலை வாங்கிய அதிர்ச்சியில் இருந்து மீண்டு, பதில் கோல் அடிக்க அல்-நாசர் அணி வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகளை ஆபா அணி வீரர்கள் சிறப்பான தடுப்பாட்டத்தின் மூலம் முறியடித்தனர்.

போர்ச்சுகல் அணியில் மீண்டும் ரொனால்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதனால், முதல் பாதி ஆட்டநேர முடிவில் ஆபா அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியது முதலே பதில் கோல் அடித்து ஆட்டத்தைச் சமநிலைக்குக் கொண்டு வர அல்-நாசர் அணி முனைப்புடன் செயல்பட்டது. அந்த அணி வீரர்கள் களத்தில் இதற்காகத் துடிப்புடன் மோதினார்கள்.

சில நிமிடங்களிலேயே அல்-நாசர் அணிக்கு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைக்க, ஆபா அணியின் சிறப்பான தடுப்பாட்டத்தை மீறி பந்து உள்ளே செல்ல முடியவில்லை. இதேபோல் அல்-நாசர் அணி வீரர்களுக்குக் கிடைத்த சில வாய்ப்புகள் அடுத்தடுத்து கைநழுவிப் போயின.

பந்து அதிக நேரம் அல்-நாசர் அணியின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. அந்த அணியின் கையே ஓங்கியிருப்பது போலத் தோன்றினாலும், ஆபா அணியின் தடுப்பரணை அவர்களால் உடைக்க முடியவில்லை.

முடிவில், ஆட்டத்தின் 78வது நிமிடத்தில் அல்-நாசர் அணியின் இடையறாத போராட்டத்திற்குப் பலன் கிடைத்தது. அந்த அணிக்கு கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பில் நட்சத்திர வீரர் ரொனால்டோ 35 மீட்டர் தொலைவில் இருந்து அநாயசமாக பந்தை கோல் வலைக்குள் திணித்து அசத்தினார்.

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

ரொனால்டோ அடித்த கோலால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலைக்கு வந்தது. இதனால், வெற்றி மதில்மேல் பூனையாகிப் போனது.

அடுத்த நிமிடத்திலேயே ஆபா வீரர் ஒருவர் சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றப்பட்டதால் அந்த அணி 10 வீரர்களுடன் விளையாடும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இது அல்-நாசர் அணிக்குச் சாதகமான அம்சமாக மாறியது.

ஆட்டத்தின் 84-வது நிமிடத்தில் அல்-நாசர் அணிக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை அந்த அணிக்காக விளையாடும் பிரேசிலை சேர்ந்த ஆண்டர்சர் தலிஸ்கா கோலாக மாற்றினார்.

போர்ச்சுகல் அணியில் மீண்டும் ரொனால்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

அல்-நாசர் அணி வீரர் ஆண்டர்சன் தலிகா கோல் அடித்த காட்சி

ஆபா அணி பதில் கோல் அடிக்க மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை. ஆட்டத்தின் இறுதிவரை இரு அணிகளுமே மேற்கொண்டு கோல் எதுவம் அடிக்கவில்லை. இதனால், அல்-நாசர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஆபா அணியை வீழ்த்தியது.

இந்த வெற்றி மூலம் சௌதி ப்ரோ லீக் தொடரில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள அல்-இதிஹாட் அணியை ரொனால்டோவின் அல்-நாசர் அணி நெருங்கியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே வெறும் ஒரு புள்ளி மட்டுமே வித்தியாசம் இருக்கிறது.

போர்ச்சுகல் தேசிய அணியில் இடம் பிடித்ததன் மூலம் சர்வதேச கால்பந்து வாழ்க்கையைத் தொடரவுள்ள ரொனால்டோ, எதிர்வரும் வியாழக்கிழமையன்று (மார்ச் 23) லிச்டென்ஸ்டெய்ன் அணிக்கு எதிரான ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தகுதிச்சுற்றுப் போட்டியில் பங்கேற்கிறார்.

சர்வதேச கால்பந்தில் 196 போட்டிகளில் 118 கோல்களை அடித்து அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனை சிகரத்தில் அமர்ந்துள்ள ரொனால்டோ, தனது கோல் எண்ணிக்கையை மேலும் உயர்த்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c1vqg4662dvo

  • கருத்துக்கள உறவுகள்

"ரொனால்டோ " அசாத்தியமான ஒரு வீரன்.........!   💐

நன்றி ஏராளன் .........! 

  • கருத்துக்கள உறவுகள்

த‌ல‌ கால் வைச்ச‌ இட‌ம் எல்லாம் வெற்றி

இன்னும் ப‌ல‌ கோல் அடிக்க‌ த‌ல‌க்கு வாழ்த்துக்க‌ள்......................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.