Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இஸ்ரேல் vs இரான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

31 ஜூலை 2024

சர்வதேச அரசியலில் எப்போதுமே பதற்றமான பிராந்தியமான மத்திய கிழக்கில் அண்மைய நிகழ்வுகள் நிலைமை மேலும் மோசமாக்கியுள்ளன. ஒருபக்கம் ஹமாஸின் அரசியல் பிரிவு தலைவரான இஸ்மாயின் ஹனியே, இரான் தலைநகர் டெஹ்ரானில் அவரது வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார். மற்றொரு பக்கம் லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் ஹெஸ்பொலா தளபதியை வான்வழி தாக்குதல் மூலம் இஸ்ரேல் கொலை செய்துள்ளது.

ஹெஸ்பொலா தளபதி கொல்லப்பட்டதை இஸ்ரேல் அறிவித்த சில மணி நேரத்தில் ஹமாஸ் தலைவர் கொலை செய்யப்பட்ட தகவல் வெளியானது. காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் மாதக்கணக்கில் நீளும் நிலையில் இந்த நிகழ்வுகள் மத்திய கிழக்கு பிராந்தியத்தை மேலும் பதற்றத்தில் தள்ளியுள்ளன.

ஹமாஸ் தலைவர் கொலையால் காஸா போர் நிறுத்த பேச்சுவார்த்தை கேள்விக்குறியாகியுள்ளது. அடுத்தடுத்த நிகழ்வுகளைத் தொடர்ந்து மத்திய கிழக்கு பிராந்தியத்தில் எத்தகைய சூழல் நிலவுகிறது? இஸ்ரேல் மற்றும் இரான், கத்தார் உள்ளிட்ட நாடுகள் என்ன சொல்கின்றன? மத்திய கிழக்கு பிராந்திய நிகழ்வுகள் குறித்து அமெரிக்கா கூறுவது என்ன? ரஷ்யா, சீனா என்ன சொல்கின்றன? விரிவாகப் பார்க்கலாம்.

ஹமாஸ் கூறுவது என்ன?

ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலைக்குப் பிறகு அந்த அமைப்பு என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஹமாஸ் இயக்கத்தை சேர்ந்த ஒரு மூத்த உறுப்பினர் இதுகுறித்து கூறுகையில், "ஹமாஸ் என்பது ஒரு சித்தாந்தம். ஒரு தலைவரைக் கொலை செய்வதால் ஹமாஸை மாற்றிவிட முடியாது. இதனால் நிச்சயம் ஹமாஸ் சரணடையவோ, இணங்கவோ செய்யாது." என்றார்.

இஸ்மாயில் ஹனியா
படக்குறிப்பு,கொலை செய்யப்பட்ட ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா

‘ஹனியே சிந்திய இரத்தம் வீண் போகாது’ - இரான்

ஹனியே படுகொலைக்குப் பிறகு இரானில் இருந்து அடுத்தடுத்து கருத்துகள் வந்த வண்ணம் உள்ளன. அந்நாட்டின் வெளியுறவு செய்தித்தொடர்பாளர் நாசர் கனானி, 'ஹனியா ஒரு பெருமைமிக்க போராளி’ என்று கூறியுள்ளார்.

இரானின் வெளியுறவு துறை அமைச்சகத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், ‘ஹனியாவின் இரத்தம் நிச்சயம் வீண் போகாது’ என்று அவர் கூறியுள்ளார்.

‘நிச்சயம் இந்த கொலை குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும். இந்த மரணம் இரான் - பாலத்தீன் இடையிலான ஆழமான மற்றும் பிரிக்க முடியாத பிணைப்பை மேலும் வலிமையாக்கும்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 
இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,ஹமாஸ் தலைவர் ஹனியேவுடன் இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன்

இஸ்ரேலுக்கு பதிலடி - இரான் அதிபர் சபதம்

‘ஹனியேவை கோழைத்தனமாக கொலை செய்தமைக்காக இஸ்ரேல் நிச்சயம் வருத்தப்படும்’ என்று இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கூறியுள்ளார். இரான் தனது பிராந்தியத்திற்கான ஒருமைப்பாடு, பெருமை மற்றும் கண்ணியத்தை பாதுகாக்கும் என்று கூறியுள்ளார்.

‘இரானிய அதிபர் ஹனியேவை ஒரு தைரியமான தலைவர்’ என்று குறிப்பிட்டதாக ஏ.எஃப்.பி. செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.

இரானில் உச்ச அதிகாரம் பெற்ற அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனேயி, ‘ஹனியே கொலைக்கு பழிவாங்க வேண்டியது டெஹ்ரானின் கடமை' என்று கூறியுள்ளார்.

கத்தாரில் தங்கியிருந்த இஸ்மாயில் ஹனியே, இரான் அதிபராக பெசெஷ்கிய பதவியேற்ற விழாவில் பங்கேற்க டெஹ்ரான் சென்றிருந்த நிலையில்தான் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் கூறுவது என்ன?

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே மரணத்திற்கு இஸ்ரேலிடம் இருந்து இதுவரை எந்த நேரடி பதிலும் வரவில்லை.

இஸ்ரேல் ராணுவ செய்தித்தொடர்பாளர் டேனியல் ஹகாரி, ‘எங்கள் உள்நாட்டு பாதுகாப்பு கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை’ என்று கூறியுளளார்.

எக்ஸ் தளத்தில் இதுகுறித்து அவர் தனது இடுகையில், ‘இஸ்ரேல் பாதுகாப்பு படை சூழலை மதிப்பீடு செய்து வருகிறது. ஏதேனும் மாற்றம் செய்வதென முடிவெடுத்தால் பொதுமக்களிடம் அறிவிப்போம்’ என பதிவு செய்துள்ளார்.

லெபனானுக்கு இஸ்ரேல் வேண்டுகோள்

இஸ்ரேல் - லெபனான் எல்லையில் ஆயுதக்குழுக்கள் நடமாட்டத்தை தடை செய்யும் ஐ.நா. தீர்மானத்தை அமல்படுத்தினால் ஹெஸ்பொலாவுடன் முழு அளவில் போர் வெடிப்பதை தடுக்க முடியும் என்று இஸ்ரேலின் வெளியுறவுத்துறை அமைச்சர் கட்ஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பான ஐ.நா.வின் 1701 தீர்மானத்தை அமல்படுத்த வலியுறுத்தி டஜன்கணக்கான வெளியுறவு அமைச்சர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேல் - லெபனான் எல்லை மற்றும் லிடானி ஆறுக்கு இடைப்பட்ட 3 கிலோமீட்டர் வரையிலான இடத்தில் லெபனான் ராணுவம், ஐ.நா. அமைதிப்படையைத் தவிர வேறு எந்த ஆயுதக் குழுக்களும் அனுமதிக்கப்படக் கூடாது என்கிறது அந்த ஐ.நா. தீர்மானம்.

இது 2006 ஆம் ஆண்டு ஹெஸ்பொலா - இஸ்ரேல் போரின் முடிவில் நிறைவேற்றப்பட்டதாகும்.

"முழுமையான போரில் இஸ்ரேலுக்கு விருப்பம் இல்லை. ஆனால், அதனை தடுக்க ஐநா தீர்மானம் - 1701ஐ அமல்படுத்துவதே இப்போதைக்கு இருக்கும் ஒரே வழி" என்று கட்ஸ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 
ஆண்டனி பளிங்கென்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பளிங்கென்

‘போர் நிறுத்தம் வேண்டும்’ - அமெரிக்க வெளியுறவு செயலாளர்

அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் ஆண்டனி பளிங்கென் (Antony Blinken) இதுகுறித்து பேசுகையில், ‘ நடந்த நிகழ்வு குறித்து நான் எதுவும் ஊகிக்க விரும்பவில்லை. ஆனால், போர் நிறுத்தம் கொண்டுவர தொடர்ந்து அழுத்தம் தரப்பட வேண்டும்’ என்றார்.

ஹமாஸின் எல்லை தாண்டிய தாக்குதலின் விளைவாக, காஸாவில் உள்ள குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என பாலஸ்தீனர்கள் ஒவ்வொரு நாளும் மோசமான வகையில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். என கூறியுள்ளார்.

போர் நிறுத்தம் எப்படி சாத்தியம்? - கத்தார்

ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே போர்நிறுத்த பேச்சுவார்த்தை நடத்தி வரும் கத்தார், "ஹனியே மரணம் பேச்சுவார்த்தையை ஆபத்தான சூழலுக்கு இட்டுச்செல்லும். பேச்சுவார்த்தையில் ஹனியே முக்கிய பங்காற்றி வந்தார்" என தெரிவித்துள்ளது.

‘பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள ஒரு தரப்பின் பிரதிநிதியை மற்றொரு தரப்பு படுகொலை செய்யும் போது எப்படி பேச்சுவார்த்தை வெற்றிபெற முடியும்? என்ற கேள்வியை முன்வைக்க வேண்டி உள்ளது" என்று கத்தார் பிரதமர் கூறுகிறார் .

இஸ்மாயில் ஹனியே படுகொலையின் பின்னணியில் நாங்கள் தான் இருக்கிறோம் என இதுவரையில் இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சீனா, ஜோர்டான் கண்டனம்

‘ஹமாஸ் தலைவரை படுகொலை செய்த இஸ்ரேலின் செயலால் பதற்றமான சூழல் அதிகரிக்கும். பிரச்னைக்குரிய இடங்களில் குழப்பங்கள் எழ வழிவகுக்கும்’ என்று ஜோர்டான் தனது கண்டனத்தில் தெரிவித்துள்ளது.

சீன வெளியுறவு துறை அமைச்சர் இதுகுறித்து கூறுகையில், ‘இந்த படுகொலையை உறுதியாக கண்டிக்கிறோம். பாதிக்கப்பட்ட பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு குறித்து நாங்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின்

‘போர் வெடிக்காது' - அமெரிக்க பாதுகாப்பு செயலாளர்

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின், "மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரிய அளவில் மோதல் வெடிக்காது" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

‘போர் என்பதை தவிர்க்க முடியாதது அல்ல என்று நினைக்கிறன். அமைதியை நிலைநாட்ட எப்போதும் அதற்கான இடமும் வாய்ப்பும் இருக்கிறது’ என்று தனது பிலிப்பைன்ஸ் சுற்றுப்பயணத்தின் கடைசி நாளில் ஊடகத்திடம் அவர் கூறினார்.

ஹனியே மரணம் குறித்து ஆஸ்டின் கருத்து தெரிவிக்கவில்லை. இந்த விஷயத்தில் கூடுதலாக அளிக்க என்னிடம் எந்த தகவலும் இல்லை என்று அவர் கூறினார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேலை அமெரிக்கா எப்படி ஆதரிக்கிறது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘பதற்றமான சூழலை குறைப்பதே எங்கள் இலக்கு’ என்று ஆஸ்டின் பதில் அளித்தார்.

 
இஸ்ரேல் - இரான் இடையே போர் நிலவும் இடத்தின் வரைப்படம்
படக்குறிப்பு,மத்திய கிழக்கில் பதற்றம் நிலவும் பிராந்தியத்தை காட்டும் வரைபடம்

இரான் எச்சரிக்கையால் மத்திய கிழக்கில் என்ன நிகழும்?

இரானின் அடுத்தக்கட்ட நடவடிக்கை மற்றும் அதன் தாக்கம் என்னவாக இருக்கும் என்பதே இப்போதைய மிகப்பெரிய கவலை என்று பிபிசி பெர்சியாவின் சிறப்பு செய்தியாளர் கஸ்ரா நஜி கூறியுள்ளார்.

ஏப்ரல் மாதத்தில் சிரியாவில் இரானிய தூதரக கட்டிடத்தில் அந்நாட்டின் புரட்சிகர காவலர் படையைச் சேர்ந்த 6 பேரை கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் மீது 300 ஏவுகணைகள் மற்றும் டிரான்கள் கொண்டு இரான் தாக்கியது.

ஹனியே படுகொலை முன்னெப்போதும் இல்லாத நோக்கம் மற்றும் தீவிரத்தை கொண்டிருக்கிறது. ஆகவே, இப்போது இரான் இஸ்ரேல் மீது பெரிய தாக்குதலை கட்டவிழ்த்துவிடலாம்.

இஸ்ரேல் மீது தாக்குதலை முன்னெடுக்குமாறு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள தனது ஆதரவு ஆயுதக்குழுக்களை இரான் கேட்டுக் கொள்ளலாம். இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை முன்னெடுக்க ஹெஸ்பொலாவுக்கு இதுவொரு காரணமாக அமையும்.

இஸ்ரேல் மற்றும் ஹெஸ்பொலா இடையே போர் பதற்றம் புதிய உச்சத்தை எட்டலாம் எனவும், இதுவொரு முழுமையான போராக உருவாக சாத்தியங்கள் உள்ளன என்றும் கருதப்படுகிறது.

"இவை எல்லாம் ஒட்டுமொத்தமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மிகப்பெரிய போர் வெடிக்க வழிவகுக்குமா? என கூறுவது சற்று கடினம் தான். இச்சமயத்தில் இப்படி ஒரு சூழல் உருவாவதை யாரும் விரும்பவில்லை. ஆனால், போர்கள் எப்போதுமே அதன் மோசமான பின்விளைவுகளையும் அபாயங்களையும் பொருட்படுத்தாதவை." என்று பிபிசி பெர்சியாவின் சிறப்பு செய்தியாளர் கஸ்ரா நஜி கூறுகிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் vs இரான்: அமெரிக்க போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் விரைவு - மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?

இரானிடமிருந்து அச்சுறுத்தல்: இஸ்ரேலை பாதுகாக்க கூடுதல் போர் விமானங்களை நிலைநிறுத்தும் அமெரிக்கா
கட்டுரை தகவல்
  • எழுதியவர், கிரேயம் பேக்கர்
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

இரான் மற்றும் அதன் நட்பு நாடுகளின் சாத்தியமான தாக்குதல்களில் இருந்து இஸ்ரேல் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கு உதவியாக, மத்திய கிழக்கில் கூடுதல் போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை நிலைநிறுத்த உள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் கூறியுள்ளது.

இரானில் ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியேவும், லெபனானில் ஹெஸ்பொலா ஆயுதக்குழுவின் முக்கிய தலைவரும் அடுத்தடுத்து கொல்லப்பட்டதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் நீடித்துவருகிறது.

ஏவுகணை பாதுகாப்புப் படைகள் “மிக உறுதியுடன்” இஸ்ரேலை பாதுகாக்கும் என்றும் அவை தயார்நிலையில் உள்ளதாகவும் அமெரிக்க பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

ஹனியேவின் படுகொலைக்கு காரணமான இஸ்ரேலுக்கு “கடுமையான தண்டனை” வழங்கப்படும் என இரான் தலைவர் ஆயதுல்லா அலி காமனேயி சூளுரைத்துள்ளார். அத்துடன், இஸ்மாயில் ஹனியே மரணத்திற்காக மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

தயார் நிலையில் அமெரிக்கா

இஸ்மாயில் ஹனியே

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு,இஸ்மாயில் ஹனியே

ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே டெஹ்ரானில் கடந்த புதன்கிழமை கொல்லப்பட்டார். இரான் மற்றும் காஸாவில் உள்ள அதன் சார்பு குழுக்கள் அக்கொலைக்கு இஸ்ரேல் மீது குற்றம்சுமத்தியுள்ளன. ஆனால், இதுகுறித்து இஸ்ரேல் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

ஹமாஸின் முக்கிய தலைவராக கருதப்பட்ட 62 வயதான ஹனியே, காஸா போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்கு வகித்து வந்தார்.

இரான் ஆதரவு ஆயுதக்குழுவான ஹெஸ்பொலாவின் முக்கிய தளபதியான ஃபுவாத் ஷுக்ரை கொன்றதாக, இஸ்ரேல் கூறிய சில மணிநேரத்தில் ஹனியே கொல்லப்பட்ட தகவல் வெளியானது.

"புதிதாக நிலைநிறுத்தப்படும் போர் விமானங்கள் உள்ளிட்டவை, அமெரிக்கப் படையின் பாதுகாப்பை மேம்படுத்தும், இஸ்ரேல் பாதுகாப்புக்கான ஆதரவை அதிகரிக்கும். மேலும், எதிர்காலத்தில் ஏற்படும் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கவும் அமெரிக்கா தயார் நிலையில் இருப்பதை இது உறுதிசெய்கிறது” என்று பென்டகன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேல் பிரதமர் கூறியது என்ன?

பெஞ்சமின் நெதன்யாகு

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

கடந்த ஏப்ரல் 13 அன்று, இஸ்ரேல் மீது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் கொண்டு இரான் தாக்குதல் நடத்தியதற்கு முன்பும் அமெரிக்கா இதுபோன்று கூடுதலான ராணுவ தளவாடங்களை நிலைநிறுத்தியது. இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகள் அச்சமயத்தில் ஏவப்பட்ட சுமார் 300 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தின.

ஹனியே கொல்லப்பட்டது குறித்து இஸ்ரேல் கருத்து ஏதும் கூறவில்லை. ஆனால், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பெய்ரூட்டில் ஃபுவாத் ஷுக்ர்-ஐ கொன்றது உட்பட தங்கள் நாடு சமீப நாட்களில் எதிரிகளுக்கு “மோசமான அடியை” கொடுத்து வருவதாக தெரிவித்தார்.

“சவாலான நாட்கள் காத்திருக்கின்றன… அனைத்து பக்கங்களிலிருந்தும் நமக்கு தாக்குதல்கள் வருகின்றன. எவ்வித சூழலுக்கும் நாம் தயாராக இருக்கிறோம்.” என்று அவர் கூறியுள்ளார்.

 

போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை

இரானிடமிருந்து அச்சுறுத்தல்: இஸ்ரேலை பாதுகாக்க கூடுதல் போர் விமானங்களை நிலைநிறுத்தும் அமெரிக்கா

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,இஸ்மாயில் ஹனியேவின் கொலை, காஸாவில் போர் நிறுத்த நடவடிக்கைகளில் தொய்வு ஏற்படலாம் என அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

அமெரிக்க பாதுகாப்பு துறை செய்தித் தொடர்பாளர் சப்ரினா சிங் பதற்றம் அதிகரிப்பதை தவிர்க்க முடியாது என்பதை அமெரிக்கா நம்பவில்லை என தெரிவித்தார்.

“பதற்றம் அதிகரிப்பதை நாங்கள் விரும்பவில்லை என்ற உறுதியான செய்தியை நேரடியாக கொடுத்துள்ளதாக நினைக்கிறேன். இந்த சூழலில், போர் நிறுத்த ஒப்பந்தம்தான் இதிலிருந்து வெளியேறுவதற்கான ஒரே வழி” என அவர் தெரிவித்தார்.

காஸா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுவிப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்காக பேச்சுவார்த்தை நடத்த இஸ்ரேல் பிரதிநிதிகள் வரும் நாட்களில் கெய்ரோவுக்கு பயணிக்க உள்ளதாக நெதன்யாகு வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இஸ்ரேல் மீது கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி ஹமாஸ் தாக்குதல் நடத்தியதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இரு தரப்புக்கும் போர் மூண்டது. இஸ்ரேல் காஸாவில் ராணுவ நடவடிக்கையை தொடர்ந்து வருகிறது. இதில், சுமார் 40,000 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எவ்வேளையிலும் இஸ்ரேல் மீது ஈரானும் ஹெஸ்புல்லா அமைப்பும் தாக்குதலை மேற்கொள்ளலாம் - அமெரிக்கா

05 AUG, 2024 | 01:27 PM
image

அடுத்த 24 முதல் 48 மணித்தியாலங்களிற்குள் ஈரானும் ஹெஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொள்ளலாம் என அமெரிக்க இராஜாங்க அமைச்சர் அன்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார்.

ஜி7 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டில் அந்த அமைப்பின் வெளிநாட்டு அமைச்சர்களிடம்  பிளிங்கென் இதனை  தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு நேரப்படி திங்கட்கிழமை அதிகாலை தாக்குதல் இடம்பெறலாம் என பிளிங்கென் தனது சகாக்களிடம் தெரிவித்துள்ளார்.

ஈரானும் ஹெஸ்புல்லா அமைப்பும் பதில் தாக்குதலை மேற்கொள்ளக்கூடும் என பிளிங்கென் வலியுறுத்தினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://www.virakesari.lk/article/190319

  • கருத்துக்கள உறவுகள்

பங்கு மார்கெட் சண்டை தொடங்குமுன்பே காலியாக்கி விட்டுள்ளார்கள் இழப்பு அமெரிக்காவுக்குத்தான் .

  • கருத்துக்கள உறவுகள்

இரான் ஏன் இன்னும் துவங்கேல்லை.  யாராச்சும் கெதியா துவங்கச்சொல்லுன்களேன்.  அப்பதான் இஸ்ரேல் முடிசுவைக்கும்! 

இஸ்ரேலின் பாதுகாப்பு அவர்களின் ஆயுதங்களோ அல்லது வான் பாதுகாப்பு சாதனங்களோ அல்ல. இஸ்ரேலின் பாதுகாப்பு the Lord of hosts. 

இதில பரிதாபத்துக்குரிய ஆள் என்டால் புட்டின் தான். 😂

  • கருத்துக்கள உறவுகள்

🤣..........

உலகம் ஈரானை சும்மா உசுப்பி விட்டுக் கொண்டிருக்கின்றது. அவர்களே தாங்கள் வைத்திருக்கின்ற பழைய சாமான்களில் பழுதாகப் போய் விட்ட பாகங்களை புதிதாக எங்கே வாங்கலாம் என்று தேடிக் கொண்டிருக்கின்றார்கள்....... இதில சண்டைக்குப் போ, சண்டைக்கு போ என்றால் அவர்கள் எங்கே போவது........  

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தலை டிரம்பும் நேரலை போய்க்கொண்டிருக்க யாரோ கேட்க இண்டைக்கு இரவுக்குடையில சண்டை ஆரம்பிக்கும் எண்டு சொல்லி இருக்காப்ல..

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

என்ன தலை டிரம்பும் நேரலை போய்க்கொண்டிருக்க யாரோ கேட்க இண்டைக்கு இரவுக்குடையில சண்டை ஆரம்பிக்கும் எண்டு சொல்லி இருக்காப்ல..

😂டிரில்லியன் கணக்கில் பங்கு மார்கட் அடி வாங்கியுள்ளது நான் நினைக்கவில்லை சண்டையை உடனே தொடங்குவார்கள் என்று .

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

என்ன தலை டிரம்பும் நேரலை போய்க்கொண்டிருக்க யாரோ கேட்க இண்டைக்கு இரவுக்குடையில சண்டை ஆரம்பிக்கும் எண்டு சொல்லி இருக்காப்ல..

🤣....

சாஸ்திரியார் குசால் குமாரும் இதையே தான் சொல்லியிருக்கின்றார்............... யாழ் களத்தில் ஏற்கனவே இந்தச் செய்தி வந்துவிட்டது................. ட்ரம்பும் இங்கே களத்தில் இருக்கின்றாரோ.......😜.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரசோதரன் said:

🤣....

சாஸ்திரியார் குசால் குமாரும் இதையே தான் சொல்லியிருக்கின்றார்............... யாழ் களத்தில் ஏற்கனவே இந்தச் செய்தி வந்துவிட்டது................. ட்ரம்பும் இங்கே களத்தில் இருக்கின்றாரோ.......😜.

யார் கண்டது கூகிள் மொழிமாற்றம் ai வைத்து செய்ய போகிறார்களாம் 😃முதன் முதல் ரகள ராவுக்கும் சும்மா வுக்கும் அகேன்னத்துக்கும் ai காலில்  தலையை ஆட்டி அலற போகுது 😂 அதன் பின் ட்ரம் தமிழில் கதைக்க வெளிக்கிட்டால் சிங்களவன் 😂வெண்டுடுவான்.

சும்மாவே கொண்டு வா என்ற கட்டளையை கொன்றுவா என்று கேட்டு தொலைத்து மதுரையை ஏற்கனவே எரித்து தொலைத்து விட்டோம் . இது வேறையா ?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

யார் கண்டது கூகிள் மொழிமாற்றம் ai வைத்து செய்ய போகிறார்களாம் 😃முதன் முதல் ரகள ராவுக்கும் சும்மா வுக்கும் அகேன்னத்துக்கும் ai காலில்  தலையை ஆட்டி அலற போகுது 😂 அதன் பின் ட்ரம் தமிழில் கதைக்க வெளிக்கிட்டால் சிங்களவன் 😂வெண்டுடுவான்.

சும்மாவே கொண்டு வா என்ற கட்டளையை கொன்றுவா என்று கேட்டு தொலைத்து மதுரையை ஏற்கனவே எரித்து தொலைத்து விட்டோம் . இது வேறையா ?

🤣.............

எங்களின் தமிழ் மொழி மட்டும் ஏன் இவ்வளவு சிக்கலானதாக இருக்கின்றது என்று இடைக்கிடை நான் யோசிப்பதுண்டு. சாதாரண புணர்ச்சி விதிகளே தொண்டைக்குள் 'க்' என்ற எழுத்தை கொண்டு போய் செருகின மாதிரி சில்லெடுத்தவை.

ஆனால், இப்ப தான் தெரியுது, இந்த செயற்கை நுண்ணறிவிடம் இருந்து இந்த மொழியைக் காப்பாற்றவே எங்கள் முன்னோர்கள் அப்பவே திட்டம் போட்டே இதைச் செய்திருக்கின்றார்கள் என்று...........🤣.  

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரசோதரன் said:

🤣.............

எங்களின் தமிழ் மொழி மட்டும் ஏன் இவ்வளவு சிக்கலானதாக இருக்கின்றது என்று இடைக்கிடை நான் யோசிப்பதுண்டு. சாதாரண புணர்ச்சி விதிகளே தொண்டைக்குள் 'க்' என்ற எழுத்தை கொண்டு போய் செருகின மாதிரி சில்லெடுத்தவை.

ஆனால், இப்ப தான் தெரியுது, இந்த செயற்கை நுண்ணறிவிடம் இருந்து இந்த மொழியைக் காப்பாற்றவே எங்கள் முன்னோர்கள் அப்பவே திட்டம் போட்டே இதைச் செய்திருக்கின்றார்கள் என்று...........🤣.  

கால பயணத்தில் பின்நோக்கி போனால் 15௦௦ ஆண்டுகளுக்கு பின்னால போனாலும் எங்கள் தமிழ் மொழியை இலகுவாக புரிந்து கொள்ள முடியும் காரணம் க் ஞ போன்ற வை இன்னும் தொடர்கின்றன .

மற்ற மொழிகள் எப்படி என்று தெரியவில்லை ?

ஆனால் தமிழின்  சுவை அறியாத கொஞ்சம் இங்கும் உள்ளார்கள் வந்து காவடி எடுப்பார்கள் பாருங்க .😃

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாலி said:

இரான் ஏன் இன்னும் துவங்கேல்லை.  யாராச்சும் கெதியா துவங்கச்சொல்லுன்களேன்.  அப்பதான் இஸ்ரேல் முடிசுவைக்கும்! 

இஸ்ரேலின் பாதுகாப்பு அவர்களின் ஆயுதங்களோ அல்லது வான் பாதுகாப்பு சாதனங்களோ அல்ல. இஸ்ரேலின் பாதுகாப்பு the Lord of hosts. 

இதில பரிதாபத்துக்குரிய ஆள் என்டால் புட்டின் தான். 😂

 

ஏன் இஸ்ரேல் ஈரானை இழுப்பான். ஆட்டநாயகன் அமெரிக்கா தானே. தொடக்கி வைப்பதும் முடித்து வைப்பதும் அதுதானே. 

தனது ஆயுத கருவிகள் எல்லாம் சரியாக வேலை செய்யிதோ என்று பரிசோதித்து பார்க்க அமெரிக்காவுக்கு இது நல்ல களம். 

எல்லா காலமும் காற்று ஒரே மாதிரியாக அடிக்காது. நமது காலத்தில் என்னென்ன மாற்றங்கள் நடைபெறும் என தொடர்ந்து நோக்குவோம். 

ஈரான் வான்பறப்பில் NOTAMS பிரசுரம் செய்ய்யப்பட்டு உள்ளது என ஒரு செய்தி பார்த்தேன். இதன் அர்த்தம் தாக்குதல் எந்த நேரமும் நடைபெறலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நியாயம் said:

 

ஏன் இஸ்ரேல் ஈரானை இழுப்பான். ஆட்டநாயகன் அமெரிக்கா தானே. தொடக்கி வைப்பதும் முடித்து வைப்பதும் அதுதானே. 

தனது ஆயுத கருவிகள் எல்லாம் சரியாக வேலை செய்யிதோ என்று பரிசோதித்து பார்க்க அமெரிக்காவுக்கு இது நல்ல களம். 

எல்லா காலமும் காற்று ஒரே மாதிரியாக அடிக்காது. நமது காலத்தில் என்னென்ன மாற்றங்கள் நடைபெறும் என தொடர்ந்து நோக்குவோம். 

ஈரான் வான்பறப்பில் NOTAMS பிரசுரம் செய்ய்யப்பட்டு உள்ளது என ஒரு செய்தி பார்த்தேன். இதன் அர்த்தம் தாக்குதல் எந்த நேரமும் நடைபெறலாம். 

அமெரிக்கா இந்த போரினை தடுத்து  நிறுத்துவதிலேதான் ஆர்வம் காட்டும், அமெரிக்க பொருளாதாரம் பெரும் நெருக்கடியில் உள்ளது, இந்த போர் நிகழ்ந்தால் அது அமெரிக்க பொருளாதாரத்தினை மட்டுமல்ல உலக பொருளாதாரத்திற்கும் பெரும் பாதிப்பு அதனால் அமெரிக்கா என்ன விலை கொடுத்தாவது இந்த போர் நிகழ்வதை தடுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 6/8/2024 at 15:57, vasee said:

அமெரிக்கா இந்த போரினை தடுத்து  நிறுத்துவதிலேதான் ஆர்வம் காட்டும், அமெரிக்க பொருளாதாரம் பெரும் நெருக்கடியில் உள்ளது, இந்த போர் நிகழ்ந்தால் அது அமெரிக்க பொருளாதாரத்தினை மட்டுமல்ல உலக பொருளாதாரத்திற்கும் பெரும் பாதிப்பு அதனால் அமெரிக்கா என்ன விலை கொடுத்தாவது இந்த போர் நிகழ்வதை தடுக்கும்.

 

அமெரிக்கா நினைத்தால் இரஷ்யா உக்ரைன் போர், இஸ்ரேல் பாலஸ்தீனம் பிரச்சனை எல்லாவற்றையுமே முடிவுக்கு கொண்டு வரலாம். அவர்கள் பிரச்சனைகளை வைத்துத்தானே தமது இருப்பை தொடர்கின்றார்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்
On 7/8/2024 at 20:33, நியாயம் said:

 

அமெரிக்கா நினைத்தால் இரஷ்யா உக்ரைன் போர், இஸ்ரேல் பாலஸ்தீனம் பிரச்சனை எல்லாவற்றையுமே முடிவுக்கு கொண்டு வரலாம். அவர்கள் பிரச்சனைகளை வைத்துத்தானே தமது இருப்பை தொடர்கின்றார்கள்? 

உக்கிரேனும் இஸ்ரேலும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்து விலகி நீண்ட தூரம் வந்துவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே அமெரிக்காவின் பலநூறு தாக்குதல் விமானங்களுடன்  4 விமானம் தாங்கி கப்பல்கள் மற்றும்  நாசகாரிகள் ஈரானின் தாக்குதலை எதிர்கொண்டு இஸ்ரேலை காக்கும் நடவடிக்கையில் அங்கு தரித்து நிற்க......,

முதல் தடவையாக உலகில் யாருக்கும் அமெரிக்காவால் விற்பனை செய்யப்படாத,  முதன் முதலாக ஒரு நாட்டுக்கெதிராக தாக்குதலுக்கு தயாராக  மத்திய கிழக்கை நோக்கி பெரும் எண்ணிக்கையில்  புறப்பட்டு செல்லும் F-22 Raptor விமானங்கள்

பின்விளைவுகளை நன்கறிந்து  ஒப்புக்கு சில ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தாக்குதலை தவிர்த்து ஈரான் நீண்ட பெரும் போர் ஒன்றில் இஸ்ரேலுக்கெதிராக ஈடுபடாது என்று நினைக்கிறேன்,

மாறாக ஹிஸ்புல்லாவையும் ஏற்கனவே குற்றுயிராய் போன காமசையும்(நேற்றும் ஒரு முக்கிய தளபதி காலி என்று தகவல்) , ஹுத்தியையும் முன்னுக்கு தள்ளிவிட்டு அவர்கள் எண்ணிக்கையை குறைக்கும் அமெரிக்க இஸ்ரேல்  நடவடிக்கையில் அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டலாம் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏவுகணை தாக்குதலில் ஈடுபடக்கூடிய நீர்மூழ்கிகளை மத்திய கிழக்கிற்கு செல்லுமாறு அமெரிக்கா உத்தரவு - போர்க்கப்பலை விரைவாக செல்லுமாறு வேண்டுகோள்

12 AUG, 2024 | 03:00 PM
image

ஈரான் அடுத்த சில நாட்களில் தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளதை தொடர்ந்து மத்திய கிழக்கிற்குஏவுகணைகளை செலுத்தக்கூடிய நீர்மூழ்கிகளை அனுப்புமாறு அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் உத்தரவிட்டுள்ளார்.

பென்டகன் இதனை தெரிவித்துள்ளது.

எவ்35 போர்விமானங்களுடன் கூடிய யுஎஸ்எஸ் ஏபிரஹாம் லிங்கனை மத்திய கிழக்கிற்கு வேகமாக செல்லுமாறும் அன்டனி பிளிங்கென் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை அமெரிக்க இராஜாங்க செயலாளருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ள இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ்கலன்ட் ஈரானின் இராணுவதயாரிப்புகள் அந்த நாடு இஸ்ரேலிற்கு எதிராக பாரிய தாக்குதலை திட்டமிடுவதை வெளிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலை பாதுகாப்பதற்காக அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுப்பது குறித்த தனது அர்ப்பணிப்பை  வெளியிட்டுள்ள அன்டனி பிளிங்கென் அதிகரித்து வரும் பதற்றத்தின் மத்தியில் மத்திய கிழக்கில் அமெரிக்கா படையினரை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை பிராந்திய ஸ்திரதன்மையை உறுதி செய்வதற்காக இஸ்ரேலிற்கு எதிராக பொருத்தமான தடுக்கும் நடவடிக்கையை எடுப்பதற்கான உரிமை ஈரானிற்குள்ளது என ஈரானின் பதில் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/190899

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈரானின் பதிலடி இவ்வாரம் - வெள்ளை மாளிகை

Published By: RAJEEBAN   13 AUG, 2024 | 12:26 PM

image
 

இஸ்ரேல் மீது ஈரானும் அதன் ஆதரவு குழுக்களும் இவ்வாரம் தாக்குதலை மேற்கொள்ளலாம் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

குறிப்பிடத்தக்க தாக்குதல்களிற்காக நாங்கள் தயாராகயிருக்கவேண்டும் என வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் கேர்பி தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே நாங்கள் கடந்த சில நாட்களாக பிராந்தியத்தில் எனது பிரசன்னத்தை வலுப்படுத்தி வருகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் தலைவர், ஹெஸ்புல்லா அமைப்பின் தளபதி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டமைக்கு  பதிலடி கொடுக்கும் விதத்தில் ஈரான் எவ்வேளையிலும் இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொள்ளக்கூடும் என்ற அச்சம் கடந்த சில வாரங்களாக மத்திய கிழக்கில் காண்ப்படுகின்றமை  குறிப்பிடத்தக்கது.

ஈரான் அடுத்த சில நாட்களில் தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளதை தொடர்ந்து மத்திய கிழக்கிற்கு ஏவுகணைகளை செலுத்தக்கூடிய நீர்மூழ்கிகளை அனுப்புமாறு அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் உத்தரவிட்டுள்ளார்.

பென்டகன் இதனை தெரிவித்துள்ளது.

எவ்35 போர்விமானங்களுடன் கூடிய யுஎஸ்எஸ் ஏபிரஹாம் லிங்கனை மத்திய கிழக்கிற்கு வேகமாக செல்லுமாறும் அன்டனி பிளிங்கென் உத்தரவிட்டுள்ளார்

இதேவேளை அமெரிக்க இராஜாங்க செயலாளருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ள இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ்கலன்ட் ஈரானின் இராணுவதயாரிப்புகள் அந்த நாடு இஸ்ரேலிற்கு எதிராக பாரிய தாக்குதலை திட்டமிடுவதை வெளிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலை பாதுகாப்பதற்காக அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுப்பது குறித்த தனது அர்ப்பணிப்பை  வெளியிட்டுள்ள அன்டனி பிளிங்கென் அதிகரித்து வரும் பதற்றத்தின் மத்தியில் மத்திய கிழக்கில் அமெரிக்கா படையினரை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை பிராந்திய ஸ்திரதன்மையை உறுதி செய்வதற்காக இஸ்ரேலிற்கு எதிராக பொருத்தமான தடுக்கும் நடவடிக்கையை எடுப்பதற்கான உரிமை ஈரானிற்குள்ளது என ஈரானின் பதில் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/190983

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"ஆக்கிரமிப்பாளனுக்கு தண்டனை வழங்குவது ஒருதேசத்தின் உரிமை" - இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொள்வதை நியாயப்படுத்தினார் ஈரான் ஜனாதிபதி

Published By: RAJEEBAN   13 AUG, 2024 | 04:14 PM

image
 

ஹமாஸ் தலைவரை கொலை செய்தமைக்காக இஸ்ரேலிற்கு எதிராக பதில் தாக்குதலை மேற்கொள்ளவேண்டும் என ஈரான் சிந்திப்பது சரியான விடயம் என அந்த நாட்டின் ஜனாதிபதி மசூட் பெசெஸ்கியான் தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஸ் பிரதமர் கெய்ர் ஸ்டாமெருடனான தொலைபேசி உரையாடலின் போது ஈரான் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

ஆக்கிரமிப்பாளனுக்கு தண்டனை வழங்குவது ஒருதேசத்தின் உரிமை என தெரிவித்துள்ள ஈரான் ஜனாதிபதி இவ்வாறான நடவடிக்கை குற்றங்களை ஆக்கிரமிப்பை நிறுத்துவதற்கு தீர்வு எனவும் தெரிவித்துள்ளார்.

காசாவிலும் வேறு பகுதிகளிலும் இஸ்ரேலின் முன்னொருபோதும் இல்லாத மனிதாபிமான குற்றங்கள் குறித்த மேற்குலகின் மௌனம் பொறுப்புணர்வற்றது என தெரிவித்துள்ள ஈரான் ஜனாதிபதி இஸ்ரேலின் இந்த நடவடிக்கை பிராந்திய சர்வதேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை  ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் இஸ்ரேல் ஈடுபடுவதற்கு தூண்டுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/191007

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென்லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் - பத்துபேர் பலி

17 AUG, 2024 | 07:07 PM
image
 

தென்லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் பத்துக்கும் மேற்கொண்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலிய தாக்குதலை தொடர்ந்து ஹெஸ்புல்லா ரொக்கட் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் சிரிய பிரஜைகள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொல்லப்பட்டவர்களில் பெண்ணொருவரும் அவரதுஇரண்டு பிள்ளைகளும் உள்ளனர் என லெபானின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐந்துபேர் இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளனர்,இருவர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹெஸ்புல்லா அமைப்பின் ஆயுதகிடங்குகளை இலக்குவைத்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/191337

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.