'கேரளம்' ஆகும் கேரளா - பெயர் மாற்றத்தின் பின்னணி என்ன?
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம், கேரளம் எனப் பெயரை மாற்றுவதற்கான தீர்மானம் கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
கட்டுரை தகவல்
மோகன்
பிபிசி தமிழ்
26 பிப்ரவரி 2026, 16:38 GMT
புதுப்பிக்கப்பட்டது 5 நிமிடங்களுக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
கேரளா மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என மாற்றுவதற்கான அம்மாநில சட்டப்பேரவையின் தீர்மானத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம், கேரளம் எனப் பெயரை மாற்றுவதற்கான தீர்மானம் கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
"மலையாள மொழியில் நமது மாநிலத்தின் பெயர் 'கேரளம்'. 1956-ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று மாநிலங்கள் மொழி அடிப்படையில் உருவாக்கப்பட்டன. கேரளப் பிறவி தினமும் நவம்பர் 1-ஆம் தேதி வருகிறது. தேசிய விடுதலை போராட்ட காலம் தொட்டு மலையாளம் பேசும் மக்களுக்காக ஒன்றுபட்ட கேரளா உருவாக்கப்பட வேண்டும் என்கிற வலுவான கோரிக்கை இருந்து வந்தது. ஆனால் அரசியலமைப்பின் முதலாவது அட்டவணையில் நமது மாநிலத்தின் பெயர் 'கேரளா' எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் பிரிவு 3-இன் படி 'கேரளம்' எனப் பெயரை மாற்றுவதற்கான அவசர நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசுக்கு இந்தச் சட்டப்பேரவை ஒருமனதாக கோரிக்கை வைக்கிறது," என அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பட மூலாதாரம்,X
படக்குறிப்பு,காங்கிரஸ் எம்பி சசி தரூர் மற்றும் சிபிஎம் எம்பி ஜான் பிரிட்டாஸ்
காங்கிரஸ் - சிபிஎம் கருத்து
இது குறித்து பிப்ரவரி 24-ஆம் தேதி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள திருவனந்தபுரம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் நகைச்சுவையாக சில கேள்விகளையும் முன்வைத்துள்ளார்.
"கேரள மக்களை கேரளைட் மற்றும் கேரளன் என அழைக்கும் பதங்கள் இனி என்னவாகும்? "கேரளமைட்" என்பது ஒரு நுண்ணுயிரி போலவும், "கேரளமியன்" என்பது ஒரு அரிய மண் கனிமம் போலவும் ஒலிக்கிறது." என தனது எக்ஸ் பதிவில் எழுதியுள்ளார்.
அதனை குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ், அடையாளம் என்பது ஒரு எழுத்துப் போட்டி அல்ல எனத் தெரிவித்துள்ளார். "எங்களுடைய நினைவுகளிலும், கவிதைகளிலும், போராட்டங்களிலும் எப்போதுமே எங்களுக்கு கேரளம் என்று தான் இருந்துள்ளது. அதிகாரப்பூர்வமாக இது கேரளா எனச் சுருக்கப்பட்டாலும் பலரும் அதனை மேலும் கேரள் என குறைத்துவிட்டார்கள். அதனால் தான் உங்களுடைய கட்சி சட்டப்பேரவையில் எங்களுடன் ஒன்றாக நின்று கேரளம் என்கிற பெயரை மீட்டெடுக்க ஒருமனதாக தீர்மானித்தது." என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பட மூலாதாரம்,JBP More
படக்குறிப்பு,பேராசிரியரும் எழுத்தாளருமான முனைவர் ஜேபி பிரசாந்த் மோரே.
கேரளம் என்கிற பெயர் தென்னை என்பதிலிருந்தும் சேரளம் என்பதிலிருந்தும் வந்தது என இருவேறு கருத்துக்கள் இருப்பதாகக் கூறுகிறார் பேராசிரியரும் எழுத்தாளருமான முனைவர் ஜேபி பிரசாந்த் மோரே.
இதே கருத்தை வெளிப்படுத்தும் கேரளாவைச் சேர்ந்த வரலாற்றாசிரியரான கே.என்.கணேஷ், கேரளம் என்கிற பெயருக்கு மேலும் பல்வேறு பொருள் வழங்கப்படுவதாகவும் கூறுகிறார்.
2011-ஆம் ஆண்டு தனது புத்தகம் ஒன்றில் கேரளம் என்கிற பெயரை பயன்படுத்தியதற்கு ஆட்சேபனை எழுந்ததாகக் கூறும் எழுத்தாளர் பிரசாந்த் மோரே தற்போது தன்னுடைய முடிவு உறுதியானது என்கிறார்.
கேரள இஸ்லாமியர்கள் பற்றிய இவருடைய புத்தகத்திற்கு 'கேரளமின் முஸ்லிம்களின் தோற்றம் மற்றும் ஆதிகால வரலாறு (Origin and Early History of Muslims of Keralam' எனத் தலைப்பிட்டிருந்தார்.
பட மூலாதாரம்,Other books/JBP More
படக்குறிப்பு,ஜேபி பிரசாந்த் மோரே எழுதிய புத்தகம்
புதுச்சேரியில் பிறந்து வளர்ந்த இவர் தற்போது பிரான்சில் வசித்து வருகிறார். 'மதராஸின் தோற்றம் மற்றும் அடித்தளம் (Origin and Foundation of Madras)' என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.
"கேரளா என்பது ஆங்கிலமயப்பட்ட பெயர், கேரளம் என்பது தான் மலையாள பெயர். நான் எனது புத்தகத்தில் கேரளம் என்பதைப் பயன்படுத்தியபோது ஒரு தரப்பினர் அதற்கு ஆட்சேபனை தெரிவித்தனர். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கேரளா என்பது பொதுவான பெயராக இருந்தது. ஆனால் அப்போதும் கேரளம் என்பது மலையான வழக்கில் பயன்பாட்டில் இருந்துள்ளது." என்றார்.
ஆனால் கேரளம் என்கிற பெயர் கோரிக்கைக்குப் பின்னால் ஒருங்கிணைந்த இயக்கம் இல்லை என்று குறிப்பிடும் அவர் தனது புத்தகத்திற்கு முதலில் கேரளம் என்பதைப் பயன்படுத்த முடிவு செய்த பின்னணியையும் விவரிக்கிறார்.
18-ஆம் நூற்றாண்டு பிரெஞ்சுக் குறிப்பில் கேரளம்
புதுச்சேரியில் 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தியவியலாளரான மரிதாஸ் பவுல் தன்னுடைய கையெழுத்துப் பிரதிகளில் கேரளம் எனக் குறிப்பிட்டதாகக் கூறுகிறார் பிரசாந்த் மோரே. அவரின் கட்டுரைகளைத் தொகுத்து புத்தகமாக பிரசாந்த் மோரே வெளியிட்டுள்ளார்.
"பாரிஸில் உள்ள தேசிய பிரெஞ்சு நூலகத்தில் நான் அவருடைய கையெழுத்துப் பிரதிகளைக் கண்டெடுத்தேன். பிரெஞ்சு காலனியாக இருந்த புதுச்சேரியில் அவர் மொழிபெயர்ப்பாளராக இருந்துளார். அந்த குறிப்புகளில் கேரளத்தை ஆண்ட மன்னனுக்குப் பல பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கேரளன் என்பதும் ஒன்று, அதன் பொருள் 'கேரளம்' நாட்டு மக்களின் தலைவன். அதிலிருந்து தான் நான் கேரளம் என்பதை தேர்வு செய்தேன். பாண்டிச்சேரி-புதுச்சேரி, மதராஸ்-சென்னை, பம்பாய்-மும்பை என மாறியதைப் போலத் தான் இந்தப் பெயர் மாற்றத்தையும் ஒரு அடையாளம் சார்ந்ததாகவே பார்க்க முடிகிறது. இதில் அரசியல் கணக்குகள் இல்லாமல் இருக்காது," என்றார்.
பட மூலாதாரம்,JBP More
படக்குறிப்பு,மரிதாஸ் பவுலின் கட்டுரைகளைத் தொகுத்து புத்தகமாக பிரசாந்த் மோரே வெளியிட்டுள்ளார்.
மலையாளமயப்படுத்தப்படும் ஆங்கிலப் பெயர்கள்
கேரளாவில் கொச்சி உட்பட பல்வேறு ஊர்களின் பெயர்கள் ஆங்கிலமயப்படுத்தப்பட்டு பின்னர் மலையாள பயன்பாட்டிற்கு மாறியுள்ளன. அந்த வரிசையில் தற்போது மாநிலத்தின் பெயரும் மாற்றப்படுகிறது என்றார் கே.என் கணேஷ்.
அரசு திட்டங்கள் கூட ஆங்கிலத்தில் கேரளா என அழைக்கப்பட்டாலும் மலையாளத்தில் கேரளம் என்றே தொடர்ந்து அழைக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
"திருவனந்தபுரம், Trivandrum என்றும் கொச்சி, Kochin என்றும் கோழிக்கோடு, Calicut என அழைக்கப்பட்டது. இவை காலப்போக்கில் அதன் உண்மையான மலையாளப் பெயர்களைப் பெற்றன. அந்த வரிசையில் தற்போது கேரளம் என்பதும் வருகிறது." எனத் தெரிவித்தார்.
'' கேரளாவில் ஓர் எழுத்து மட்டுமே சேர்வதாகத் தெரிந்தாலும் கலாசார உணர்வு கொண்டவர்களுக்கு இது முக்கியமானதாக உள்ளது." என்று தெரிவிக்கிறார் அவர்.
பல்வேறு பொருள் கொண்ட 'கேரளம்'
பட மூலாதாரம்,Getty Images
"அசோக மன்னரின் கல்வெட்டில் கேரள புத்திரர் என்கிற குறிப்பு உள்ளது. கேரளம் என்பது சேர மகன், சேர மக்கள் என்கிற பொருள்படும் சமஸ்கிருத அர்த்தம் கொண்ட பெயர். 18-ஆம் நூற்றாண்டு மலையாள புத்தகங்களில் கேரளநாட்டார் என்கிற குறிப்பு உள்ளது. தென்னை என்பதற்கு மலையாளத்தில் கேரம் என்று பொருள், அதனால் தென்னை அதிகம் விளையும் நிலம் என்கிற பொருளும் உள்ளது .சேரல், சேரநாடு என இப்படி பல்வேறு அர்த்தங்களில் பல பெயர்கள் வழங்கப்பட்டாலும் காலப்போக்கில் கேரளம் என்கிற சமஸ்கிருதமயப்பட்ட பெயர் நிலைத்துவிட்டது," என்றார் கே.என் கணேஷ்.
"திருவிதாங்கூர், கொச்சி மற்றும் மலபார் சமஸ்தானங்களை இணைத்து ஒன்றுபட்ட மலையாள மொழி பேசும் பிரதேசத்துக்கான கோரிக்கை எழுந்தது. கேரளம் என்பது ஒட்டுமொத்த மலையாள மொழி பேசும் பிரதேசத்துக்கான அடையாளமாக மாறிப்போனது." என்றார் அவர்.
மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு, மசோதா நிறைவேறிய பிறகு குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறப்படும். பின்னர் கேரளாவின் பெயர் கேரளம் என மாறும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/c4g2k02py2no
By
ஏராளன் ·