Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'பாலிவுட்டில் வெளியாள் போல் உணர்ந்தேன்' – பிபிசிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி

'பாலிவுட்டில் வெளியாள் போல் உணர்ந்தேன்' – ஏ.ஆர்.ரஹ்மான் பிபிசி பேட்டியில் கூறியது என்ன?

பட மூலாதாரம்,BBC Asian Network

5 மணி நேரங்களுக்கு முன்னர்

ஏ.ஆர்.ரஹ்மான், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் எனப் பல்வேறு மொழிகளில், நூற்றுக்கணக்கான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

ஆஸ்கர், கிராமி, கோல்டன் குளோப் உள்படப் பல்வேறு விருதுகளை வென்றுள்ள உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக அறியப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் பிபிசிக்கு பேட்டியளித்துள்ளார்.

பாலிவுட் திரையுலகம் தமிழ் சமூகத்தை எப்படிப் பார்க்கிறது, திரையுலகில் பிளவுக் கருத்துகள் அதிகரித்து வருகின்றனவா, பாலிவுட் திரையுலகில் அவரது அனுபவங்கள் எனப் பல விஷயங்களை அவர் இந்த நேர்காணலில் பகிர்ந்துகொண்டார்.

ஏ.ஆர்.ரஹ்மான் பிபிசி ஆசிய நெட்வொர்க் எடுத்த நேர்காணலில் ஹரூண் ரஷீத்திடம் பேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் என்னென்ன? இங்கு விரிவாகக் காண்போம்.

'நானும் மனிதன்தானே!'

ஹரூண் ரஷீத்: உங்களுக்கு 23 ஆண்டுகளுக்கு முன்பு இதே பர்மிங்ஹாம் சிம்ஃபனி அரங்கத்திற்குள் நுழைந்த ஏ.ஆர்.ரஹ்மானை நினைவுள்ளதா? அப்போது இருந்ததில் இருந்து உங்களில் இப்போது நடந்துள்ள மாற்றங்கள் என்ன?

ஏ.ஆர்.ரஹ்மான்: நான் மிகவும் பயந்து போயிருந்தேன். நான் சென்னையில் இருந்து வந்தவன். அங்கெல்லாம் ஆர்கெஸ்ட்ரா வேறுவிதமாக இருக்கும். இங்கு நடந்த விதம் எனக்கு வித்தியாசமாக இருந்தது.

ஹரூண் ரஷீத்: நீங்கள் பயந்தீர்கள் என்பதைக் கற்பனை செய்வதே கடினமாக உள்ளது. ஆஸ்கர் உள்பட எனக்குத் தெரிந்து கிட்டத்தட்ட அனைத்து விருதுகளையுமே வென்றுவிட்ட நீங்கள் ஓர் அரங்கத்திற்குள் நுழையும்போது பயந்ததாகச் சொல்வதைக் கற்பனைகூடச் செய்ய முடியவில்லை...

ஏ.ஆர்.ரஹ்மான்: நானும் மனிதன்தானே! நம்மைத் தயார்படுத்திக் கொள்வதுதான் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். எவ்வளவு தூரம் தயாராக இருக்கிறோமோ அவ்வளவு தூரம் நிலைமையை திறம்படக் கையாள்வோம். இருப்பினும் சில நேரங்களில் நாம் இதுவரை அறிந்திடாத ஓரிடத்திற்குள் நுழையும்போது பயம் வரவே செய்யும். ஆனால் அதையும் மீறி வாழ்க்கை செல்லத்தானே வேண்டும்.

'பாலிவுட்டில் வெளியாள் போல் உணர்ந்தேன்' – ஏ.ஆர்.ரஹ்மான் பிபிசி பேட்டியில் கூறியது என்ன?

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,கோப்புப் படம்

'ரோஜா படத்துடன் திரைத்துறையை விட்டு விலக நினைத்தேன்'

ஹரூண் ரஷீத்: ரோஜா திரைப்படத்தின் இசை ஆல்பம் வெளியாவதற்கு முந்தைய நாள் எப்படி இருந்தது என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? அது வெளியான பிறகு நடந்த மாற்றம் என்ன?

ரஹ்மான்: ரோஜாவுக்கு இசையமைக்கும் போது மிகவும் ஏமாற்றமாக உணர்ந்தேன். இதை செய்து முடித்துவிட்டு, திரைத்துறையை விட்டு விலகி, என் சொந்த ஆல்பங்களை தயாரிக்க வேண்டுமென நினைத்தேன். ஆனால், நல்வாய்ப்பாக நான் நினைத்துக் கொண்டு இருந்ததற்கு மாறாக அனைத்தும் மாறின.

என் ஸ்டூடியோவில் இசையைப் போட்டுப் பார்க்கும்போது, அதிகபட்ச ஸ்பீக்கர்களில் நன்றாக இருக்கும். அதுவே திரைப்படத்தில் மோனோவில் கேட்கையில் அவ்வளவுதானா என்றிருக்கும். அதனால் நான் மீண்டும் படங்களுக்கு இசையமைக்கவே போவதில்லை என முடிவு செய்வேன். இசையின் தரம் குறைந்துவிடுவதாகக் கருதினேன். நான் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவருடன் பணியாற்றிக் கொண்டிருந்தேன். ஆனால், எதுவும் மாறப் போவதில்லை என்ற எதிர்மறை சிந்தனை என்னைப் பீடித்திருந்தது.

பின்னர் அனைத்தும் மாறியது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் டால்பி, அட்மோஸ், டிஜிட்டல் எனப் பல தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அதிவேகமாக நடந்தன. அதன்பிறகு, சரி இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்று அடுத்தடுத்து பணியாற்றிக் கொண்டே இருந்தேன். பின்னர் பத்து ஆண்டுகள் கழித்து, சரி திரைத்துறையை விட்டு விலக வேண்டுமென்ற முடிவைக் கைவிட்டுவிடுவோம் என்று முடிவு செய்தேன்.

'பாலிவுட்டில் வெளியாள் போல் உணர்ந்தேன்' – ஏ.ஆர்.ரஹ்மான் பிபிசி பேட்டியில் கூறியது என்ன?

'பாலிவுட்டில் வெளியாள் போல் உணர்ந்தேன்'

ரஹ்மான்: உண்மையில், ரோஜா, பாம்பே, தில் சே (உயிரே) ஆகிய மூன்று படங்களுக்கும் இசையமைத்த நேரத்தில் நான் இந்தி திரையுலகில் ஒரு வெளியாள் போலத்தான் உணர்ந்து கொண்டிருந்தேன். தால் திரைப்படம்தான் அதை மாற்றியது.

ஹரூண் ரஷீத்: 1999இல் தால் வெளியாகும் வரை நீங்கள் பாலிவுட்டில் ஒரு வெளியாள் போலவே உணர்ந்ததாகக் கூறினீர்கள். ரோஜா 1992இல் வெளியானது என்றால் அடுத்த ஏழெட்டு ஆண்டுகளுக்கு, பாம்பே, தில் சே, ரங்கீலா, தால் எனப் பல படங்களுக்கு நாட்டிலேயே மிகவும் அற்புதமான இசையை நீங்கள் அளித்துக் கொண்டிருந்தீர்கள். அப்படியிருந்தும் உங்களை ஒரு வெளியாள் என்று விவரிக்கிறீர்கள் என்றால் நீங்கள் அவர்களில் ஒருவராக உணர்ந்ததே இல்லையா?

ரஹ்மான்: அதற்குக் காரணம் நான் இந்தி மொழி பேசியதே இல்லை என்பதுதான் என நினைக்கிறேன். குறிப்பாக ஒரு தமிழருக்கு இந்தி கற்றுக்கொள்வது மிகவும் சிரமமான காரியம். ஏனெனில், எங்களுக்கு தமிழ்ப் பற்று அபரிமிதமாக உள்ளது.

ஆனால், 'எனக்கு உன் இசை மிகவும் பிடித்துள்ளது. நீ இங்கு நீண்டநாள் நீடிக்க வேண்டுமென விரும்புகிறேன். அதற்கு நீ இந்தி மொழியைக் கற்க வேண்டும்' என்று சுபாஷ் காய் கூறினார். நானும் சரியெனக் கூறி, ஒரு படி மேலே சென்று உருது மொழியைக் கற்றுக்கொள்ள முடிவு செய்தேன். ஏனெனில், 60கள், 70களின் இந்தி இசைக்கு தாயாக இருப்பது உருதுதான்.

பின்னர் அதனுடன் ஒத்திருக்கக்கூடிய அரபி மொழியை படிக்கத் தொடங்கினேன். அதிலிருந்து பஞ்சாபி மொழி மீது ஆர்வம் கொண்டேன்.

'பாலிவுட்டில் வெளியாள் போல் உணர்ந்தேன்' – ஏ.ஆர்.ரஹ்மான் பிபிசி பேட்டியில் கூறியது என்ன?

உயிரே படத்தில் கதாபாத்திரத்தையே மாற்றிய ஒரு பாடல்

ஹரூண் ரஷீத்: சமீபத்தில் அந்தந்த மொழிக்குரிய கலாசார பண்புகளுக்கு நீங்கள் உண்மையாக இருப்பதை மக்கள் எவ்வளவு தூரம் விரும்புகிறார்கள் என்பது குறித்த வீடியோக்களை நான் பார்த்தேன். குறிப்பாக, உயிரே திரைப்படத்தில் வரும் நெஞ்சினிலே பாடலில் மலையாள கலாசாரம் கலந்திருக்கும். அது தற்போது அதிகம் விவாதத்திற்கு உள்ளாகிறது. சமீபத்தில் வெளியான பரம் சுந்தரி திரைப்படத்தில் மலையாள சமூகம் காட்டப்பட்ட விதம் விமர்சிக்கப்படுகிறது. 1998இல் ஏ.ஆர்.ரஹ்மானால் கலாசாரத்தை துல்லியமாகக் காட்ட முடிந்தபோது, இப்போது ஏன் முடியவில்லை என்று கேட்கப்படுகிறது.

ரஹ்மான்: மக்கள் மிகவும் உணர்ச்சிமிக்கவர்கள். அவர்களால் முன்பைவிட இப்போது சிறப்பாகத் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள முடிகிறது.

ஹரூண் ரஷீத்: இருப்பினும் 1998இல் நீங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து சமூகங்களுக்கும் நியாயம் செய்ய வேண்டும் என்பது உங்களுக்கு எவ்வளவு முக்கியமானதாக இருந்தது?

ரஹ்மான்: அப்போது என்ன நடந்தது என்றால், மணிரத்னம் இந்த டியூனை எடுத்துக்கொண்டு, எனக்கு கல்யாண கனவு போன்ற ஒன்று வேண்டுமென்றார். சரி, எந்த மரபுப்படி அது இருக்க வேண்டுமென்று நான் கேட்டேன். அவர் என்னையே தேர்ந்தெடுக்கச் சொன்னார். நான் மலையாள முறையைத் தேர்வு செய்தேன். அவர் சரியெனக் கூறி, இரண்டாவது கதாநாயகியை ஒரு மலையாளியாகக் கதையில் மாற்றிவிட்டார்.

ஹரூண் ரஷீத்: அப்படியெனில், ப்ரீத்தி ஜிந்தாவின் பாத்திரம் மலையாளி கதாபாத்திரமாக வடிவமைக்கப்பட்டதே 'நெஞ்சினிலே' பாடலுக்காகத்தானா?

ரஹ்மான்: ஆமாம். அது எதுவாக வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். அவர் அந்த டியூன் மிகவும் சுவாரஸ்யமானது எனக் கருதினார். இன்றும்கூட அந்தப் பாடலை, மலையாளம் புரியவில்லை என்றாலும், பலர் பாடுகிறார்கள்.

அதுமட்டுமின்றி நான் மற்றுமொரு விஷயத்தையும் சொல்லியாக வேண்டும். அதுவரைக்கும் எந்தவொரு தென்னிந்திய இசையமைப்பாளரும் எல்லைகளைக் கடந்து இந்தி திரையுலகுக்குச் சென்று, அங்கு நிலைத்தது இல்லை. அது முற்றிலுமாகப் புதிய கலாசாரம். இளையராஜா இரண்டு படங்களைச் செய்திருந்தார்.

அப்படியிருந்த சூழலில் எல்லையைக் கடந்து சென்றது, பின்னர் அவர்கள் என்னை ஏற்றுக்கொண்டது என்பது ஒரு மிகப்பெரிய அனுபவம். இன்னமும் அது நிலைத்திருக்கிறது. அது மிகவும் அற்புதமானது, அதை கௌரவமாகக் கருதுகிறேன்.

காணொளிக் குறிப்பு

தமிழ் சமூகத்திற்கு எதிராக பாலிவுட்டில் பாகுபாடு நிலவுகிறதா?

ஹரூண் ரஷீத்: பாலிவுட்டில் தமிழ் சமூகத்திற்கு எதிராக இன்றும் நிறைய பாகுபாடு நிலவுவதை நான் பார்க்கிறேன். 90களில் அது எப்படி இருந்தது? நீங்கள் எப்போதாவது அதை எதிர்கொண்டீர்களா?

ஏ.ஆர்.ரஹ்மான்: நான் எதிர்கொள்ளாமல் இருந்திருக்கலாம். இந்த விஷயங்கள் எல்லாம் எனக்குத் தெரிய வரவில்லை. ஒருவேளை கடவுள் இவற்றையெல்லாம் மறைத்திருக்கலாம். ஆனால் கடந்த 8 ஆண்டுகளில் இருக்கலாம். ஒருவேளை அதிகார மாற்றம் நடந்திருக்கலாம். முடிவெடுக்கும் அதிகாரம் படைப்பாற்றல் இல்லாதவர்களிடம் இப்போது இருக்கிறது.

இது ஒருவேளை ஒரு சமூகரீதியான விஷயமாகவும் இருந்திருக்கலாம். என் கண் முன்பாக நடக்கவில்லை. ஆனால் இது நடந்தது. 'அவர்கள் உங்களை ஒப்பந்தம் செய்தார்கள், ஆனால் மற்றொரு இசை நிறுவனம் சென்று அந்தப் படத்திற்கு நிதியுதவி செய்து, தங்கள் ஐந்து இசையமைப்பாளர்களைப் பயன்படுத்திக் கொண்டது' என்பன போன்ற கிசுகிசுக்களை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதைக் கேட்கும்போது, 'ஓ நல்லது, எனக்கு ஓய்வு கிடைத்தது. நான் என் குடும்பத்துடன் நிம்மதியாக நேரத்தைச் செலவழிப்பேன்' என்று நினைத்துக்கொள்வேன்.

ஹரூண் ரஷீத்: ஆனால், அதை அப்படி எடுத்துக்கொள்ள உங்களுக்கு மிகவும் நேர்மறையான மனநிலை இருக்க வேண்டும்.

ஏ.ஆர்.ரஹ்மான்: ஏனெனில், வேலையைத் தேடி நான் செல்வதில்லை. வேலை என்னைத் தேடி வரவேண்டுமென விரும்புகிறேன். நான் செய்யும் வேலை, அதிலுள்ள நேர்மை ஆகியவற்றின் மூலம் எனக்கு எல்லாம் கிடைக்க வேண்டுமென்று விரும்புகிறேன். அதைத் தேடிச் செல்வதில்லை. நான் எதையாவது தேடிச் செல்லும்போது அது துரதிர்ஷ்டமாக அமைவதாக உணர்கிறேன். நான் எதற்குத் தகுதியானவனோ அதைக் கடவுளிடம் இருந்து பெறுகிறேன்.

'பாலிவுட்டில் வெளியாள் போல் உணர்ந்தேன்' – ஏ.ஆர்.ரஹ்மான் பிபிசி பேட்டியில் கூறியது என்ன?

பட மூலாதாரம்,BBC Asian Network

சாவா திரைப்படம் பிளவுபடுத்தும் நோக்கம் கொண்டதா?

ஹரூண் ரஷீத்: நீங்கள் நாளுக்கு நாள் மென்மேலும் பிளவுகளை எதிர்கொள்ளும் சூழலில் பணியாற்றுகிறீர்கள்...

ரஹ்மான்: அதனால்தான், கடவுள் நம்மைப் போன்றவர்களுக்கு அதிக சக்தியைக் கொடுக்கிறார் என்று நான் நினைக்கிறேன், அதனால் நாம் சொற்களாலும், செயல்களாலும், கலையாலும் தீமையை நன்மையின் மூலம் மாற்ற முடியும்.

ஹரூண் ரஷீத்: ஆனால் இதன் காரணமாக நீங்கள் தேர்ந்தெடுக்கும் படங்கள் குறித்து அதிக விழிப்புடன் இருக்க வேண்டியுள்ளதா? ஏனெனில், பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, நீங்கள் ஒரு படத்திற்கு உங்கள் இசையை வழங்கும்போது, அந்தப் படத்திற்கு எந்த எதிர்மறைத் தாக்கமும் இல்லை அல்லது எந்தத் தீய நோக்கமும் இல்லை என்பதை ஓரளவுக்கு உறுதியாகத் தெரிந்துகொள்ள முடியும். ஆனால் இன்று ஒரு படத்தின் நோக்கம் என்ன என்பதை அறிவது மிகவும் கடினமாக உள்ளது.

ரஹ்மான்: அது மிகவும் உண்மை. மேலும் சில படங்கள் தவறான நோக்கத்துடனேயே உருவாக்கப்படுகின்றன. அந்தப் படங்களைத் தவிர்க்க முயல்கிறேன்.

ஹரூண் ரஷீத்: ஆனால், 'சாவா' படத்தின் இசையைப் பற்றி நீங்கள் மிகவும் பெருமைப்படுவதாகக் கூறியுள்ளீர்கள். அது உண்மையிலேயே ஒரு நல்ல இசை. இருப்பினும் அதுவொரு பிளவுபடுத்தும் படம்?

ஏ.ஆர். ரஹ்மான்: ஆமாம்.

ஹரூண் ரஷீத்: நானும் அந்தப் படத்தைப் பார்த்தேன். உங்களிடம் நான் மிகவும் நேர்மையாகச் சொல்கிறேன்.

ஏ.ஆர். ரஹ்மான்: அது பிளவுபடுத்தும் படம்தான். அது பிளவுபடுத்தும் தன்மையை வைத்துப் பணம் சம்பாதித்ததாக நான் நினைக்கிறேன். ஆனால் அதன் மையக்கருத்தாக வீரம் இருந்ததாகக் கருதுகிறேன். ஏனென்றால், இயக்குநரிடம் நான், 'இந்தப் படத்திற்கு நான் ஏன் தேவை?' என்று கேட்டபோது, 'இந்தப் படத்திற்கு நீங்கள் மட்டும்தான் தேவை' என்று கூறினார்.

'பாலிவுட்டில் வெளியாள் போல் உணர்ந்தேன்' – ஏ.ஆர்.ரஹ்மான் பிபிசி பேட்டியில் கூறியது என்ன?

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,கோப்புப் படம்

மேலும் அதன் முடிவும் ரசிக்கக் கூடியதாக இருந்தது. ஆனால் நிச்சயமாக, மக்கள் அதைவிட புத்திசாலிகள் என்று நினைக்கிறேன். மக்கள் திரைப்படங்களால் பாதிக்கப்படுவார்கள் என்று நினைக்கிறீர்களா? அவர்களுக்கு உள்மனசாட்சி என்ற ஒன்று உள்ளது. எது உண்மை, எது திரிக்கப்பட்டது என்பதை அதனால் அறிய முடியும்.

ஹரூண் ரஷீத்: வரலாற்றுத் திரைப்படங்கள் உருவாக்கப்படுவது பிரச்னையல்ல. அவை உருவாக்கப்படுவது உண்மையில் ஓர் அற்புதமான விஷயம். அது வரலாற்றைக் கொண்டாடுகிறது. அது கதாநாயகர்களைக் கொண்டாடுகிறது. அந்தப் படங்களுக்குள் இருக்கும் சில குறிப்பிட்ட காட்சிகள்தான் சிக்கலானவையாக இருக்கக்கூடும், இல்லையா?

ஏ.ஆர். ரஹ்மான்: சாவா மிகவும் கொண்டாடப்படும் கதாபாத்திரங்களில் ஒன்று. அது ஒவ்வொரு மராட்டியரின் ரத்தம் போன்றது. படம் முடிந்ததும், பெண்கள் அந்த அழகான கவிதைகளைச் சொல்வதைப் பார்க்கிறோம். அதைப் பார்க்க மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. அந்தப் படத்திற்கு இசையமைத்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

ஹரூண் ரஷீத்: இது மாதிரியான படங்களில் எனக்கு இருக்கும் பிரச்னை என்னவென்றால், திரையில் ஒவ்வொரு முறை ஒரு எதிர்மறை விஷயம் நடக்கும்போதும், கதாபாத்திரம் 'சுப்ஹானல்லாஹ், மாஷா அல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ்' போன்றவை வருகின்றன. இந்தப் படத்தில் மட்டும் சொல்லவில்லை; பிற படங்களிலும் இப்படியெல்லாம் காட்டப்படுகின்றன.

ரஹ்மான்: ஆம், ஆனால் எனக்கு மக்கள் மீது மிகப்பெரிய மரியாதை உள்ளது. இத்தகைய தவறான தகவல்களால் ஈர்க்கப்படுவதற்கு அவர்கள் ஒன்றும் முட்டாள் இல்லை. எனக்கு மனிதத்தின் மீது அபார நம்பிக்கை உள்ளது.

ஹரூண் ரஷீத்: ஆனால், இத்தகைய விஷயங்கள் நீங்கள் மேலும் கவனமாக இருக்க வேண்டியிருப்பதைக் காட்டுகிறதா?

ரஹ்மான்: ஆம். அதோடு மக்கள் மிகவும் புத்திசாலிகள் என்று நினைக்கிறேன். மக்களுக்கு இதயம் இருக்கிறது, அன்பு இருக்கிறது, இரக்கம் இருக்கிறது. தினசரி காலையில் எழுந்து 'இன்று எத்தனை பேரை நான் வெறுக்கப் போகிறேன்' என்று கருதுவோமா? இல்லை. அது உங்கள் இதயத்தில் இருக்கும் அமிலத்தைப் போன்றது. அது இதயத்தையே அழித்துவிடும்.

'பிராமணப் பள்ளியில் படித்தேன்'

ஹரூண் ரஷீத்: சமீபத்தில் நீங்கள் ராமாயணம் படத்திற்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறீர்கள். மத ரீதியான நூல் ஒன்று திரைப்படமாக வடிவம் எடுக்கிறது. ஆனால் நீங்கள் நன்கு அறியப்பட்ட ஒரு முஸ்லிம். அப்படியிருக்க இந்தப் படத்தில் உங்கள் பங்கு இருப்பதை விரும்பாதவர்களும் இருக்கலாம். இது ஏதாவது வகையில் உங்களை பாதித்துள்ளதா?

ரஹ்மான்: நான் படித்தது ஒரு பிராமணப் பள்ளியில். அங்கு ஒவ்வோர் ஆண்டும் ராமாயணம், மகாபாரதம் இருக்கும். எனவே எனக்கு முழு கதையும் நன்கு தெரியும்.

மேலும், அந்தக் கதை நற்பண்பு, உயர்ந்த லட்சியங்கள் போன்ற விஷயங்கள் பற்றியது. மக்கள் பல விதமாக வாதிடலாம், ஆனால் அந்த நல்ல விஷயங்கள் அனைத்தையும் நான் மதிக்கிறேன். கற்றுக்கொள்ள வேண்டிய எந்தவொரு நல்ல விஷயத்தையும் விட்டுவிடக் கூடாது என்கிறார் நபிகளார். அறிவு என்பது மிகவும் மதிப்புமிக்க ஒன்று.

அதை நீங்கள் எல்லாவற்றில் இருந்தும், அன்றாட வாழ்க்கையில் இருந்தும், ஒரு யாசகனிடம் இருந்து அரசன் வரை, எதிர்மறை செயல்களில் இருந்து நேர்மறை செயல்கள் வரை அனைத்திலும் கற்றுக்கொள்ளலாம். அறிவு என்பது எல்லா இடங்களிலும் கற்றுக்கொள்ள வேண்டிய விலைமதிப்பற்ற ஒன்று.

அதனால், 'நான் எதையும் கற்றுக்கொள்ள விரும்பவில்லை' என்றோ, 'இங்கிருந்து நான் நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ள விரும்பவில்லை' என்றோ ஒருவரால் ஒதுக்கிவிட முடியாது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c9vxdzkmpk2o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'கடந்த 8 ஆண்டுகளில் எனக்கு பாலிவுட் வாய்ப்பு நின்றுவிட்டது' - ஏ.ஆர். ரஹ்மான் பேட்டி குறித்து பாலிவுட் கலைஞர்கள் கருத்து

ஏ.ஆர்.ரஹ்மான், ஷான் மற்றும் ஜாவேத் அக்தர்

படக்குறிப்பு,பிபிசி நேர்காணலில் ஏ.ஆர். ரஹ்மான் கூறிய கருத்து குறித்து பாலிவுட்டின் ஷான் மற்றும் ஜாவேத் அக்தர் போன்ற பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

18 ஜனவரி 2026

புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

பிபிசி-யுடனான ஒரு சிறப்பு நேர்காணலில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், 'கடந்த எட்டு ஆண்டுகளில் பாலிவுட்டில் தமக்கு வாய்ப்பு கிடைப்பது நின்றுவிட்டது' என்று கூறியுள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மானின் கூற்றுக்குத் திரையுலகைச் சேர்ந்த பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

"இதில் எந்தவொரு மதவாதப் பிரச்னையும் இருப்பதாக நான் கருதவில்லை" என பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் கூறினார்.

பாடகர் ஷான் கூறுகையில், "கலையில் எந்தவொரு மதவாத அல்லது சிறுபான்மையினர் அம்சம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அப்படி ஒரு விஷயம் இருந்திருந்தால், கடந்த முப்பது ஆண்டுகளாக இருக்கும் நமது மூன்று சூப்பர் ஸ்டார்களும் சிறுபான்மையினரே, ஆனால் அவர்களின் ரசிகர்கள் அதிகரித்துக்கொண்டேதான் போகிறார்கள்," என்றார்.

நாவலாசிரியர் ஷோபா டே

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,பாலிவுட் மதவாதமற்ற ஓர் இடம் என்று ஷோபா டே கூறுகிறார்.

ஏ.ஆர். ரஹ்மானின் கூற்று குறித்து நாவலாசிரியர் ஷோபா டே கூறுகையில், "இது மிகவும் ஆபத்தான கருத்து.. நான் ஐம்பது ஆண்டுகளாகப் பாலிவுட்டைப் பார்த்து வருகிறேன். மதவாதமில்லாத ஏதேனும் ஓரிடத்தை நான் பார்த்திருக்கிறேன் என்றால், அது பாலிவுட் தான். உங்களிடம் திறமை இருந்தால் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்," என்றார்.

"உங்களிடம் திறமை இல்லை என்றால், உங்கள் மதம் காரணமாகத்தான் உங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுவதில்லை என்ற கேள்வியே இல்லை. அவர் மிகவும் வெற்றிகரமான மற்றும் முதிர்ச்சியான நபர். அவர் கூறியவற்றை அவர் பேசியிருக்கக் கூடாது. ஒருவேளை அவருக்கு இதற்கான காரணம் இருக்கலாம்.. இது குறித்து நீங்கள் அவரிடமே கேட்க வேண்டும்," என அவர் மேலும் கூறினார்.

இந்த விவகாரம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த பாடகர் சங்கர் மகாதேவன் கூறுகையில், "பாடல் உருவாக்குபவரும், அந்தப் பாடலைக் கொண்டு செல்ல வேண்டுமா இல்லையா, அதைச் சந்தைப்படுத்த வேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மானிப்பவரும் வெவ்வேறு நபர்கள் என்று நான் சொல்வேன். அதைத் தீர்மானிப்பவர்கள் இசைத்துறையைச் சேர்ந்தவர்கள் அல்ல," என்றார்.

ஏ.ஆர். ரஹ்மான் பிபிசி-யிடம் என்ன கூறினார்?

ஏ.ஆர். ரஹ்மான்

படக்குறிப்பு,கடந்த எட்டு ஆண்டுகளில் அதிகாரச் சமநிலை மாற்றம் நேர்மறையானதாக இல்லை என்று பிபிசி நேர்காணலில் ஏ.ஆர். ரஹ்மான் கூறினார்.

பல பாலிவுட் படங்களுக்கு மறக்கமுடியாத இசையளித்த ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், பிபிசி உடனான ஒரு சிறப்பு நேர்காணலில் தனது இசைப் பயணம், மாறிவரும் சினிமா, எதிர்காலத் திட்டங்கள் மற்றும் சமூகத்தின் தற்போதைய சூழல் குறித்து வெளிப்படையாகப் பேசினார்.

இந்த உரையாடலில் திரைத்துறையைப் பற்றி ரஹ்மான் கூறுகையில், "கடந்த 8 ஆண்டுகளில் அநேகமாக அதிகாரச் சமநிலை மாறியிருக்கலாம் மற்றும் படைப்பாற்றல் இல்லாதவர்கள் முடிவுகளை எடுக்கிறார்கள். ஒருவேளை இதற்கு மதவாத கோணமும் இருக்கலாம், ஆனால் என் முன்னால் யாரும் அவ்வாறு கூறவில்லை," என்றார்.

இருப்பினும் தனக்கு இப்போது வேலை வருவதில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

அவர் மேலும் கூறுகையில், "ஆமாம், சில விஷயங்கள் என் காதுகளுக்கு வந்தன. உதாரணமாக, நீங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டீர்கள், ஆனால் மற்றொரு இசை நிறுவனம் படத்திற்கு நிதி வழங்கியதால் அவர்கள் தங்களுக்குப் பிடித்த இசையமைப்பாளரைக் கொண்டு வந்தனர். நான் சரி என்று சொல்கிறேன், நான் ஓய்வெடுப்பேன், குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுவேன். நான் வேலையைத் தேடிச் செல்லவில்லை. வேலை என்னைத் தேடி வர வேண்டும் என்று விரும்புகிறேன். எனது உழைப்பும் நேர்மையும் எனக்குப் பலன்களைத் தர வேண்டும் என்று விரும்புகிறேன்." என்றார்.

ரஹ்மான் கூறுகையில், "ஆனால் நான் இதைப் பற்றி அதிகம் சிந்திப்பதில்லை, ஏனென்றால் இதில் தனிப்பட்ட விஷயம் எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் சிந்தனை மற்றும் விருப்பம் உள்ளது. நமக்கு எவ்வளவு வேலை கிடைக்க வேண்டும் என்பது நம் கையில் இல்லை," என்றார்.

ஜாவேத் அக்தரின் பதில்

ஜாவேத் அக்தர்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சிறிய தயாரிப்பாளர்கள் ஏ.ஆர். ரஹ்மானிடம் செல்லக்கூடப் பயப்படுகிறார்கள் என்று ஜாவேத் அக்தர் கூறினார் (கோப்புப் படம்).

செய்தி நிறுவனமான ஐஏஎன்எஸ் உடனான உரையாடலில் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் ஏ.ஆர். ரஹ்மானின் கூற்றுக்குத் தனது எதிர்வினையை அளித்தார்.

அவர் கூறுகையில், "எனக்கு ஒருபோதும் அப்படித் தோன்றியதில்லை. நான் மும்பையில் உள்ள அனைவரையும் சந்திக்கிறேன். மக்கள் அவருக்கு (ஏ.ஆர். ரஹ்மானுக்கு) மிகுந்த மரியாதை அளிக்கிறார்கள். ஒருவேளை பலரும் அவர் (ரஹ்மான்) இப்போது மேற்கத்திய நாடுகளில் அதிக வேலையாக இருப்பதாக நினைக்கலாம். அவருடைய நிகழ்ச்சிகள் மிகப்பெரியதாக இருப்பதாலும், அதற்கு அதிக நேரம் தேவைப்படுவதாலும் அவர்கள் அவ்வாறு நினைக்கலாம்," என்றார்.

ஜாவேத் அக்தர் மேலும் கூறுகையில், "ரஹ்மான் எவ்வளவு பெரிய மனிதர் என்றால், சிறிய தயாரிப்பாளர்கள் அவரிடம் செல்லக்கூடப் பயப்படுகிறார்கள். ஆனால், இதில் எந்தவொரு மதவாத அம்சமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை."

நிதேஷ் திவாரியின் வரவிருக்கும் 'ராமாயணா' படத்தின் பாடல்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். மாற்று மதத்தைச் சேர்ந்தவர் என்ற போதிலும் இப்படத்திற்கு இசையமைப்பது தொடர்பான கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.

கடந்த ஆண்டு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த 'சாவா' படம் வெளியானது. இந்தப் படம் உண்மைகளைத் திரித்துக் கூறுவதாகவும் பிரிவினைவாதமாகவும் இருப்பதாகப் பல வரலாற்று ஆய்வாளர்கள் கூறியிருந்தனர். படம் வெளியான நேரத்தில் மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் வன்முறை வெடித்தது.

"மூன்று சூப்பர் ஸ்டார்களும் சிறுபான்மையினரே"

ஷான்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,தனக்கும் வேலை கிடைப்பதில்லை என்று ஷான் கூறினார்.

பாடகர் ஷான் திரைத்துறை மற்றும் இசைத் துறையில் எந்தவொரு 'மதவாத அல்லது சிறுபான்மையினர் கோணம் இருப்பதை மறுத்துள்ளார்.

ஐ.ஏ.என்.எஸ்-உடனான உரையாடலில் ஷான் கூறுகையில், "வேலை கிடைக்காததைப் பொறுத்தவரை, நான் உங்கள் முன்னால் நிற்கிறேன். நான் இத்தனை ஆண்டுகளில் எவ்வளவோ பாடியிருக்கிறேன், ஆனாலும் எனக்கும் வேலை கிடைப்பதில்லை. இசையில் எந்தவொரு மதவாத அல்லது சிறுபான்மையினர் கோணம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அப்படி ஒரு விஷயம் இருந்திருந்தால், கடந்த முப்பது ஆண்டுகளாக இருக்கும் நமது மூன்று சூப்பர் ஸ்டார்களும் சிறுபான்மையினரே, ஆனால் அவர்களின் ரசிகர்கள் யாருக்கும் குறைவா என்ன? அவர்கள் அதிகரித்துக்கொண்டேதான் போகிறார்கள்," என்றார்.

அனைவரும் நல்ல வேலைகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் இந்த விஷயங்களைப் பற்றிச் சிந்திக்கக் கூடாது என்றும் ஷான் கூறினார். அவர் ஏ.ஆர். ரஹ்மானின் பணியைப் பாராட்டவும் செய்தார். ஏ.ஆர். ரஹ்மான் அற்புதமான இசையமைப்பாளர் என்றும், அவருடைய பாணி தனித்துவமானது என்றும் அவர் கூறினார்.

அரசியல் வட்டாரங்களின் எதிர்வினை

சிவசேனாவைச் சேர்ந்த ஷைனா என்.சி.

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,ஏ.ஆர். ரஹ்மானின் அறிக்கையைத் துரதிர்ஷ்டவசமானது என்று சிவசேனா தலைவர் ஷைனா என்.சி. கூறினார்.

ஏ.ஆர். ரஹ்மானின் கருத்துக்குப் பிறகு அரசியல் வட்டாரங்களிலிருந்தும் எதிர்வினைகள் வரத் தொடங்கியுள்ளன.

சிவசேனா (ஷிண்டே) தலைவர் ஷைனா என்.சி. கூறுகையில், "ஏ.ஆர். ரஹ்மான் திரைத்துறை மதவாதமாக இருப்பதாகப் பேசுவது துரதிர்ஷ்டவசமானது என்று நான் நினைக்கிறேன். அவருக்கு எல்லாவிதமான வாய்ப்புகளும் கிடைத்துள்ளன, இந்தியாவின் அழகே வேற்றுமையில் ஒற்றுமைதான்," என்றார்.

"ஏதேனும் ஒரு வழி மூடப்பட்டிருந்தால், தகுதியால் எல்லாத் தடைகளையும் நீக்க முடியும் என்பதையும், உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது உங்கள் திறமையைக் காட்ட வேண்டும் என்பதையும் நாம் நிச்சயம் புரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் சமமான முன்னுரிமை அளிக்கப்படுவதுதான் நமது நாட்டின் பெருமை."

அதே சமயம் பஜன் பாடகர் அனூப் ஜலோட்டா கூறுகையில், "அப்படி எதுவுமில்லை. உண்மை என்னவென்றால் அவர் ஐந்து ஆண்டுகளில் இருபத்தைந்து ஆண்டுகால வேலையைச் செய்து முடித்துவிட்டார். இப்போது என்ன செய்வது. அவர் நிறைய வேலை செய்துள்ளார், அதுவும் மிகச் சிறந்த வேலைகளைச் செய்துள்ளார். மக்கள் மனதில் அவருக்கு மிகுந்த மரியாதை உள்ளது," என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cly3lywrd49o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'இந்தியாவின் வைரமாக போற்றப்பட்ட ஏ.ஆர் ரஹ்மான் இன்று துரோகி என முத்திரை குத்தப்படுகிறார்' – ஒரு பார்வை

ஒரு நாள் இந்தியாவின் பெருமை என்றும் மறுநாள் துரோகி என்றும் முத்திரை குத்தப்படும் ஏ.ஆர். ரஹ்மான்

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • முகமது ஹனீஃப்

  • மூத்த பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர்

  • 22 ஜனவரி 2026, 12:56 GMT

    புதுப்பிக்கப்பட்டது 29 நிமிடங்களுக்கு முன்னர்

ஒரு நேர்காணலில் மனம் திறந்து பேசியதற்காக இப்படிப்பட்ட சிக்கலில் சிக்கிக்கொள்வோம் என்று ஏ.ஆர். ரஹ்மான் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

ஒரு காலத்தில் அவர் இந்தியாவின் வைரமாக போற்றப்பட்டார். உலகம் முழுவதும் அவரைப் பற்றி பேசப்பட்டது.

பிலிம்பேர், தேசிய விருதுகள், கோல்டன் குளோப், ஆஸ்கார் என நீங்கள் எந்த விருதைப் பற்றிக் கூறினாலும், அவை எல்லாம் அவரைத் தேடி வந்த காலம் இருந்தது.

இந்தியாவின் அடையாளமாக ஏ.ஆர். ரஹ்மான் திகழ்ந்தார். உலகம் முழுவதும் தனது இசையை ஒலிக்கச் செய்து, மக்களை நடனமாட வைத்தார். பின்னர் 'தாய் மண்ணே வணக்கம்' பாடி உலகெங்கும் இந்தியாவின் கொடியை ஏற்றினார்.

அந்த நேர்காணலில், பாலிவுட்டின் அதிகாரப் போக்கு மாறிவிட்டதாகவும், தற்போது தன்னிடம் வரும் பணிகள் குறைந்துவிட்டதாகவும் ரஹ்மான் கூறினார். இதற்குக் காரணம் மதவாதமாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இப்போது அனைவரும் அவரைப் பற்றிப் பேசத் தொடங்கியுள்ளனர். 'வளர்த்துவிட்ட கையை கடிக்கிறீர்கள்' எனக் கூறுகிறார்கள். அவருக்கு 'துரோகி' என்ற முத்திரையும் குத்தப்பட்டது.

ஏ.ஆர். ரஹ்மான் விளக்கமும் அளித்துவிட்டார். இருந்தும் 'இந்தியாவைப் பிடிக்கவில்லை என்றால், நாட்டை விட்டு வெளியேறுங்கள்' என்று சொல்லும் குரல்கள் அடங்கவில்லை.

காணொளிக் குறிப்பு,"வேலையைத் தேடி நான் போக மாட்டேன்" - பிபிசியிடம் மனம்விட்டு பேசிய ஏ.ஆர்.ரஹ்மான்

'பலர் கவனிக்கவில்லை'

ஆனால் அந்த நேர்காணலில் அவர் கூறிய இன்னொரு விஷயத்தை பலர் கவனிக்கவோ நினைவில் வைத்துக்கொள்ளவோ இல்லை.

ரஹ்மான் மும்பைக்கு வந்த காலத்தைப் பற்றி அதில் பேசியிருந்தார்.

மும்பைக்கு முதன்முறையாக வந்தபோது தனக்கு ஹிந்தி தெரியாது என்றும், தமிழர்களுக்கு ஹிந்தி கற்றுக்கொள்வது கடினம் என்றும் அவர் கூறினார்.

ஆனால் சுபாஷ் காய் சாஹிப் அவரிடம், 'இங்கு வேலை செய்ய விரும்பினால், இந்தி கற்க வேண்டும்' என்று விளக்கியுள்ளார்.

ரஹ்மான், தான் இந்தி கற்றது மட்டுமல்லாமல் ஒரு படி மேலே சென்று உருது மொழியையும் கற்றேன் என கூறுகிறார். அதன்பிறகு, உஸ்தாத் நுஸ்ரத் ஃபதே அலி கானின் மிகப்பெரிய ரசிகராக இருந்ததால் பஞ்சாபி மொழியையும் கற்றதாகக் கூறுகிறார்.

இதைக் கேட்டபோது, இதுதான் ஒரு உண்மையான கலைஞனின் பண்பு என்று எனக்குத் தோன்றியது.

நாடுகளை ஒன்றிணைக்க இதுவே சரியான வழி என்று எனக்குத் தோன்றியது.

ரஹ்மான், தான் இந்தி கற்பது மட்டுமல்லாமல் ஒரு படி மேலே சென்று உருது மொழியையும் கற்பேன் என்று கூறியுள்ளார்.

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஏ.ஆர். ரஹ்மான்

ஒவ்வொரு மனநிலைக்கும், ஒவ்வொரு மகிழ்ச்சிக்கும், ஒவ்வொரு துக்கத்திற்கும், ஒவ்வொரு கொண்டாட்டத்திற்கும், ஒவ்வொரு இரங்கலுக்கும், ஒவ்வொரு சோகத்திற்கும் ஒரு ஏ.ஆர். ரஹ்மான் பாடல் இருக்கிறது. அது எல்லா மொழிகளிலும் கிடைக்கிறது.

மேலும், முன்பெல்லாம் கலைத் திறமை மிக்கவர்களால் திரைப்படங்கள் எடுக்கப்பட்டன, ஆனால் இப்போது எந்தத் திரைப்படம் எடுக்கப்பட வேண்டும், அது எப்படி இருக்க வேண்டும் என்ற முடிவுகள் பெரும் செல்வந்தர்களின் அலுவலக அறைகளிலும், கணக்காளர்களாலும் எடுக்கப்படுகின்றன என்று பாலிவுட் இயக்குநர்களான அனுராக் காஷ்யப், சுபாஷ் காய் மற்றும் ராம் கோபால் வர்மா போன்றவர்கள் கூறிய ஒரு கருத்தையும் ரஹ்மான் குறிப்பிட்டார்.

ஏ.ஆர். ரஹ்மான்

பாலிவுட்டில் ஒருவேளை மதவாதம் நுழைந்திருக்கலாம் என்றும், அரசியல், சமூகம் மற்றும் சொத்துச் சந்தை ஆகியவற்றில் அது நுழைந்திருக்கும்போது, பாலிவுட்டிலும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு நுழைந்திருக்க வாய்ப்புள்ளது என்றும் ரஹ்மான் கூறினார்.

அவரை நன்றிகெட்டவர் என்றும் துரோகி என்றும் அழைப்பவர்கள், "உங்கள் பெயர் அல்லா ரக்கா ரஹ்மான் என்பது எங்களுக்குத் தெரியும். 'வந்தே மாதரம்' பாட அனுமதித்ததற்கே நீங்கள் நன்றியுடன் இருக்க வேண்டும். இசையமைப்பதோடு வேலையை நிறுத்திக்கொள்ளுங்கள். இவற்றைப் பற்றி பேச உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்?" என்று சொல்ல நினைக்கிறார்கள்.

மறுபுறம், ஏ.ஆர். ரஹ்மான் முன்பிருந்தது போல இப்போது இல்லை, அவரது இசை சலிப்பைத் தருகிறது, அவரது பாடல்கள் ஹிட் ஆவதில்லை என்று சிலர் ஒரு காரணத்தைச் சொல்கிறார்கள்.

ஆனால் ரஹ்மானின் உழைப்பு குறையவில்லை.

ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் மிகப்பெரிய திரைப்படத்திற்கும், பல சர்வதேசத் திரைப்படங்களுக்கும் அவர்தான் இசையமைக்கிறார்.

'சம்கிலா' திரைப்படம் வெளியாகி அதிக காலம் ஆகவில்லை, அதற்கு ரஹ்மான்தான் இசையமைத்தார். அப்போது பஞ்சாபில் இருந்த ஒவ்வொருவரும் "மேன் ஹூன் பஞ்சாப், மேன் ஹூன் பஞ்சாப்" என்றுதான் பாடிக்கொண்டிருந்தார்கள்.

அந்த நேரத்தில் யாரும், "நீங்கள் ஒரு தமிழர் தானே, ஏன் பஞ்சாபி படத்திற்கு இசையமைக்கிறீர்கள்?" என்று கேட்கவில்லை.

உங்களுக்கு "துரோகி, துரோகி" என்று கூச்சலிட வேண்டுமென்றால், தாராளமாகச் செய்யுங்கள்.

ஆனால் முதலில் ஒரு ஐந்து நிமிடம் அமைதி காத்து, ஏ.ஆர். ரஹ்மானின் ஏதோ ஒரு பாடலைக் கேளுங்கள். ஒவ்வொருவருக்கும் அவரது பாடல்களில் குறைந்தது ஒன்றாவது பிடித்திருக்கும். உங்களுக்கு அவரது ஒரு பாடல் கூடப் பிடிக்கவில்லை என்றால், பிறகு தாராளமாக உங்கள் வசைச்சொற்களை வீசுங்கள்.

இறைவன், ஏ.ஆர். ரஹ்மானையும் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c8rmme12pjpo

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் என்பதை பெருமையாய் பறைசாற்றும் ரஹ்மான்…

உலக தமிழர் மனதில் எப்போதும் வைரம்தான்…

இவனுகள் எல்லாம் வருட கணக்கா முக்கிகிட்டு கிடக்க, அசால்டா ரெண்டு ஆஸ்கார கொண்டந்த சிங்கம் அவர்.

#ஹிந்தி தெரியாது போடா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.