Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுயமரியாதையை இழந்து சீட் பெறத் தேவையில்லை-தேர்தலைப் புறக்கணிக்கிறோம்: வைகோ

Featured Replies

சுயமரியாதையை இழந்து சீட் பெறத் தேவையில்லை-தேர்தலைப் புறக்கணிக்கிறோம்: வைகோ

சென்னை: சுயமரியாதையை இழந்து, அதிமுக தரும் தொகுதிகளைப் பெற்று தேர்தலில் போட்டியிட மதிமுக விரும்பவில்லை. எனவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் நாங்கள் பங்கு பெறவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அதிரடியாக அறிவித்துள்ளார்.

வைகோவின் இந்த முடிவு அரசியல் அரங்கில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. வைகோவின் இந்த முடிவால், வைகோ மூலம் அதிமுகவுக்கு ஆதரவான நிலையை எடுத்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும் தேர்தலைப் புறக்கணிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்திய அரசியலில் மிகவும் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான வைகோவையும், அவரது மதிமுகவையும் ஜெயலலிதா நடத்திய விதம் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் நல்ல பாடமாக அமைந்துள்ளது. இதன் விளைவு, வைகோ சட்டசபைத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து விட்டார்.

கடந்த தேர்தலின்போது திமுக கூட்டணியில் தொகுதிகளை ஒதுக்குவதில் திமுக தலைமை தயக்கம் காட்டியதால், அங்கிருந்து விலகி யாரும் எதிர்பாராத வகையில் அதிமுகவில் சேர்ந்தார் வைகோ. அவருக்கு 35 தொகுதிகளைக் கொடுத்தார் ஜெயலலிதா.

இந்த நிலையில் தற்போதயை தேர்தலில் ஜெயலலிதாவின் முக்கியத்துவம் விஜயகாந்த்துக்குப் போய் விட்டதால் முதல் ஆளாக அவரை அழைத்து 41 தொகுதிகளை தூக்கிக் கொடுத்தார். வைகோ கிடப்பில் போட்டு விட்டார்.

ஆரம்பத்தில் 35 தொகுதிகளைக் கேட்டு வந்தார் வைகோ. ஆனால் ஜெயலலிதா முடியாது என்று கூறி விட்டார். பின்னர் வைகோ சற்று இறங்கி வந்து 25, 23, கடைசியில் 21 என்ற அளவுக்கு வந்தார். ஆனால் ஜெயலலிதாவோ 8 அல்லது 9 என்று அடிமாட்டு ரேஞ்சுக்கு போனார்.

இதை மதிமுக ஏற்க முடியாது என்று கூறி விட்டது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் சில அதிரடி நடவடிக்கைகளால் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக கொந்தளித்து விட்டன. இந்தப் பெரும் குழப்பத்தை எதிர்பாராத ஜெயலலிதா, தனது பிரசாரத்தை தள்ளி வைத்து விட்டு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது கூட்டணிக் கட்சியினர் மதிமுகவுக்கும் கெளரவமான இடங்களைத் தர வேண்டும் என்று வலியுறுத்தின. இதனால் வேறு வழியில்லாமல் ஓ.பன்னீர் செல்வத்தையும், செங்கோட்டையனையும் மதிமுக அலுவலகம் சென்று வைகோவிடம் பேசச் செய்தார் ஜெயலலிதா. அவர்களும் நேற்று வைகோவைச் சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்பின்போது தங்களுக்கு 21 தொகுதிகள் கண்டிப்பாக தேவை என்று வைகோ கூறி விட்டார். இதைக் கேட்டுக் கொண்ட அதிமுக குழுவினர், ஜெயலலிதாவிடம் போய் இதைச் சொன்னார்கள்.

இந்த நிலையில், நேற்று மதிமுக உயர் நிலைக் குழுக் கூட்டம் நடந்தது. பின்னர் மாவட்டச் செயலாளர்கள் கூட்டமும் நடந்தது. இக்கூட்டத்தில் அதிமுக தாங்கள் கேட்டபடி சீட்களை ஒதுக்க மறுத்து வருவதால் தேர்தலில் போட்டியிடாமல் விலகி இருப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது.

நேற்று மாலை தொடங்கிய இந்தக் கூட்டம் விடிய விடிய நடந்தது. இன்று அதிகாலை 3 மணி வரை கூட்டம் நடந்தது. இறுதியில்தான் தேர்தலைப் புறக்கணிப்பது என்ற முடிவுக்கு மதிமுக வந்தது. தேர்தலைப் புறக்கணிப்பது தொடர்பாக ஒரு தீர்மானமும் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

இதுதொடர்பாக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில், அதிமுக தலைமை கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளின்போது மதிமுகவை நடத்திய விதத்தால் மதிமுகவினர் ஒவ்வொருவரின் உள்ளமும் காயப்பட்டுப் போனது.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் அணுகுமுறையில் ஆரம்பத்திலிருந்தே எந்த மாற்றமும் இல்லை. அவரது அணுகுமுறையில் அகந்தை, ஆணவம், தன்னிச்சையான போக்கு ஆகியவையே திட்டவட்டமாக புலப்பட்டது.

இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் நீடிப்பதில்லை என்ற முடிவு எடுக்கப்படுகிறது. தமிழக சட்டசபைத் தேர்தலை மதிமுக புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் போவே புதுச்சேரி சட்டசபைத் தேர்தலையும் மதிமுக புறக்கணிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து பின்னர் பேசிய மதிமுக நிர்வாகி மல்லை சத்யா கூறுகையில், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த அனைத்து கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்கிய நிலையில் இறுதிவரை மதிமுக கேட்ட 21தொகுதிக்கு பதிலாக 12 தொகுதிகளை மட்டுமே தரமுடியும் என அதிமுக கூறியதால் இந்த தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்திருக்கிறோம்.

தொகுதி பங்கீட்டில் அதிமுக நடந்து கொண்ட விதம் பிடிக்க வில்லை. மூன்றாவது அணி அமைக்க விருப்பம் இல்லை என்றார்.

மதிமுகவை கரிவேப்பிலை போல பயன்படுத்திக் கொண்டு கடைசியில் அவரை விரட்டி விட்டுள்ள ஜெயலலிதாவின் செயலால் ஒட்டுமொத்த தமிழர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். குறிப்பாக ஈழத் தமிழ் ஆதரவு அமைப்புகள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளன.

www.thatstamil.com

புறக்கணிப்பதால் என்ன வந்து விடப்போகின்றது. உலகம் சுற்றாமல் நின்று விடப்போகின்றதா?

  • கருத்துக்கள உறவுகள்

காயப்படுத்திவிட்டார்கள் : ம.தி.மு.க. தீர்மானம்

வைகோ தலைமையில் நடந்த ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

’’2006 ஆம் ஆண்டு முதல், அ.தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து அங்கம் வகித்து வந்து ம.தி.மு.க., தற்போது நடைபெற இருக்கின்ற தமிழகம், புதுவை சட்ட மன்றப் பொதுத் தேர்தல்களில், தொகுதிப் பங்கீட்டில் எழுந்து உள்ள நிலைமை குறித்து விளக்கம் அளிக்க வேண்டிய நிலைமை உருவாகி இருக்கின்றது.

2006 ஆம் ஆண்டு, சட்ட மன்றப் பொதுத் தேர்தலின் போது, அ.தி.மு.க. அவைத் தலைவர், நினைவில் வாழும் முனைவர் கா. காளிமுத்து, பொதுக்கூட்டத்தின் வாயிலாகவே, அ.தி.மு.க. கூட்டணியில் வந்து சேருமாறு, ம.தி.மு.க.வுக்குப் பகிரங்க அழைப்பு விடுத்தார். அ.தி.மு.க. பொதுக்குழுவில் பேசும்போது, “கூட்டணியில் நீங்கள் எதிர்பார்க்கின்ற ஒரு கட்சி இடம் பெறும்” என்று, அதன் பொதுச் செயலாளர் அறிவிக்கவும் செய்தார்.

2004 பொதுத் தேர்தலுக்குப் பின், தி.மு.க. தலைமையின் அணுகுமுறையால் நடை பெற்ற சில நிகழ்வுகளால் ஏற்பட்ட காரணங்களால், ம.தி.மு.க. தொண்டர்களுள் 90 விழுக்காட்டினரும், தலைமை நிர்வாகிகள், முன்னணித் தலைவர்களுள் பெரும்பான்மையோரும், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில், ம.தி.மு.க. இடம் பெறவேண்டும் என்று விரும்பியதன் விளைவாக, அந்தக் கூட்டணியில் கழகம் இடம் பெற்றது.

தமிழகத்தில் 35 இடங்களும், புதுவையில் 2 இடங்களும், ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டன. ம.தி.மு.க. ஒரு ஜனநாயக இயக்கம் என்பதால், கழகத்தில் பெரும்பாலானோருடைய கருத்தினை ஏற்று, அ.தி.மு.க. வுடன் கூட்டணி அமைத்ததால், கழகத்தின் பொதுச் செயலாளர் மீது துளியும் உண்மை இல்லாத பழியும், நிந்தனையும், தி.மு.க. தரப்பில் இருந்து சுமத்தப்பட்டன.

அந்தத் தேர்தலில், ம.தி.மு.க. போட்டியிட்ட தொகுதிகளைக் குறி வைத்து வீழ்த்திட முனைந்த தி.மு.க., தமிழ்நாட்டிலேயே மற்ற தொகுதிகளை விட, கழகம் போட்டியிட்ட தொகுதிகளில்,

பெரும் பணபலத்தைப் பிரயோகித்தது. அந்தத் தேர்தலில், கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, 213 தொகுதிகளில், தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

ஆறு சட்டமன்றத் தொகுதிகளில், ம.தி.மு.க. வெற்றி பெற்றது. பல தொகுதிகளில் குறைந்த வாக்குகளில் தோற்றது.

2001 ஆம் ஆண்டு தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட ம.தி.மு.க.வின் வாக்குகளை மட்டுமே கணக்கிட்டால், 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், 31 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற, ம.தி.மு.க. காரணம் ஆயிற்று. அதனைத் தவிர்த்து, ம.தி.மு.க.வின் நாடு தழுவிய புயல் வேகப்பிரசாரம், அ.தி.மு.க. தொண்டர்களுக்கு ஊக்கம் அளித்ததோடு, நடு நிலை வாக்காளர்களின் ஆதரவையும் கவர்ந்தது என்பது உண்மை ஆகும்.

அந்தத் தேர்தலில், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் தவிர, வேறு கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெறவில்லை. அதற்குப் பின்னர் நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தல் மற்றும் கூட்டுறவுத் தேர்தல்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகளில், அ.தி.மு.க. மேற்கொண்ட முக்கியமான அரசியல் நிலைப்பாடுகளை, ம.தி.மு.க., உறுதியாக ஆதரித்துச் செயல்பட்டது.

தமிழக சட்டமன்றத்தில், அ.தி.மு.க.வை ஆதரித்து முழு மனதோடு இணைந்து செயல்பட்டது. திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், ம.தி.மு.க. வெற்றி பெற்று இருந்த தொகுதி என்றபோதும், அ.தி.மு.க. தானே போட்டியிட வேண்டும் என்று வற்புறுத்தியபோது, அதனை ஏற்றுக்கொண்டது. கம்பம், தொண்டாமுத்தூர் ஆகிய தொகுதிகள் உள்ளிட்ட ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில், தேர்தலைப் புறக்கணிப்பது என்ற அ.தி.மு.க.வின் முடிவை, மதி.மு.க.வும் ஏற்றுக்கொண்டது.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றுவதிலும், அ.தி.மு.க. அரசால் அனுமதிக்கப்பட்டு, தூத்துக்குடியில் அமைந்து உள்ள நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை அகற்றுவதிலும், ம.தி.மு.க.வின் உறுதியான நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது இல்லை.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் உருவாக்கிய மகத்தான இயக்கமான அ.தி. மு.க.வின் அடலேறுகளான தொண்டர்கள், ம.தி. மு.கவின் மீதும், அதன் பொதுச் செயலாளர் வைகோ மீதும், பரிவையும் அன்பையும் தொடர்ந்து காட்டி வந்து உள்ளனர்.

நடைபெற இருக்கின்ற பொதுத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து, அ.தி.மு.க. குழுவினருடன் ம.தி.மு.க. குழு, நான்கு சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியது. கடந்த முறை போட்டியிட்ட 35 இடங்களை மீண்டும் ஒதுக்கிடுமாறு கேட்டுக் கொண்டது. இரண்டாவது சுற்றுப் பேச்சுக்களின்போது, 30 தொகுதிகளாவது ஒதுக்கப்பட வேண்டுமெனக் கோரியது.

மார்ச் 8 ஆம் நாள் நடைபெற்ற, நான்காவது சுற்று பேச்சுவார்த்தையின் போது தான் ம.தி.மு.க.வுக்கு ஆறு இடங்கள் மட்டுமே ஒதுக்க முடியும் என அ.தி.மு.க தலைமையின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. குறைந்த பட்சம் 23 தொகுதிகளாவது ஒதுக்குமாறு கழகத்தின் தரப்பில் இருந்து கேட்டபோதும், மார்ச் 12-ஆம் தேதியன்று மேலும் ஒரு தொகுதி என ஏழு தொகுதிகள் ஒதுக்குவதாகக் கூறப்பட்டது.

மறுநாள் 13-ஆம் தேதி அ.தி.மு.க தரப்பில் இருந்து இன்னும் ஒரு தொகுதியைச் சேர்த்து 8 தொகுதிகள் மட் டுமே கொடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது. மார்ச் 14-ஆம் தேதி காலை 11 மணி அளவில் கழகப் பொதுச் செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் அ.தி.மு.க. சார்பில் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் மார்ச் 13-ஆம் தேதியன்று அ.தி. மு.க. தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்ட எட்டுத் தொகுதிகளை கொடுக்க இயலாது என்றும், ஒரு தொகுதியை குறைத்து 7 தொகுதிகளே தர முடியும் என்றும், தங்கள் கட்சித் தலைமை தெரிவிக்க சொன்னதாகக் கூறிவிட்டுச் சென்றார்கள்.

இதன்மூலம் ம.தி.மு. க.வைப் புண்படச் செய்து, தாங்களாகவே கூட்டணியை விட்டு வெளியேற வைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. தலைமை திட்டமிட்டதை உணர முடிந்தது. அதன்பின்னர், அதே நாளில், மாலை நான்கு மணியளவில் ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் கழகப் பொதுச் செயலாளர் வைகோவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, முதல்நாள் கூறிய படி 8 தொகுதிகளை ஒதுக்க தயாராக இருப்பதாக

அ.தி. மு.க தலைமையின் சார்பில் கூறினார்கள்.

15-ஆம் தேதி அ.தி.மு.க பொதுச் செயலாளரின் பிரதிநிதிகள் வைகோவை சந்தித்து, அதிகபட்சமாக 9 இடங்கள்தான் தரமுடியும் என்று தெரிவிக்கச் சொன்னதாகக் கூறினார்கள். மறுநாள் 16ஆம் தேதி பிற்பகல் 2 மணி அளவில் மீண்டும் அதே பிரதிநிதிகள் முதல்நாள் இரவில் கூறியதையே திரும்பவும் உறுதிபடுத்தி, இதை ஏற்றுக் கொண்டு உடன்பாட்டில் கையெழுத்து இட வருமாறு, அ.தி.மு.க பொதுச் செயலாளர் அழைத்ததாகக் கூறினார்கள்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ 23 இடங்கள் என்பதில் இரண்டு இடங்களைக் குறைத்துக் கொள்கிறோம். நாங்கள் கேட்கும் 21 இடங்களைத் தருவதாக இருந்தால் உடன்பாடு குறித்துப் பேசுவோம். அதை தவிர்த்து இனி பேசிப் பயன் இல்லை என்று கூறி விட்டார்.

அன்று மாலையிலேயே ஏற்கனவே மற்ற கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 74 இடங்கள் போக, மீதம் உள்ள 160 தொகுதிகளுக்கும் அ.தி. முக. வேட்பாளர்களை அறிவித்ததன் மூலம், கூட்டணியில் ம.தி.மு.க இடம் பெற வில்லை என்பதை அ.தி. மு.க. தலைமை அறிவித்தே விட்டது.

2006-ஆம் ஆண்டில் இருந்து அ.தி.மு.க. கூட்டணியில் நம்பிக்கைக்கு உரிய தோழமையைக் கடைப்பிடித்து வந்த ம.தி.மு.க.வை முதலில் அழைத்துப் பேசி தொகுதி உடன்பாடு செய்திட வேண்டிய அணுகு முறையைக் கடைப்பிடிக்காமல் திட்டமிட்டே உதா சீனப்படுத்தி விட்டது.

ம.தி.மு.க. நடத்தப்பட்ட விதம் குறித்து மக்கள் மன்றத்தில் எழுந்த விமர்சனத்தால் 19-ம் தேதியன்று காலை 10 மணி அளவில் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் ம.தி.மு.க தலைமை நிர்வாகிகளை தாயகத்தில் சந்தித்து 12 தொகுதிகளை தருவதாக அ.தி.மு.க தலைமையின் சார்பில் தெரிவித்தார்கள்.

ஏற்கனவே கூறியபடி, ம.தி.மு.க. கேட்கும் 21 தொகுதிகளை தருவதாக இருந்தால் தொகுதி உடன்பாட்டுக்கு இசைவு அளிக்க முடியும் என்று ம.தி.மு.க. சார்பில் தெரிவிக்கப்பட்டது. தொகுதிப் பங்கீட்டில் அ.தி.மு.க. தலைமை ம.தி. மு.க.வை நடத்திய விதமும், கடைப்பிடித்த போக்கும் கழகத்தின் உள்ளங்களை மிகக் கடுமையாக காயப்படுத்தி விட்டது.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் நடவடிக்கைகளில், அணுகுமுறையில், காலம் தந்த படிப்பினைகளால் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கும் என்று நம்பியது முற்றிலும் பொய்த்துப் போய்விட்டது. அவருடைய போக்கிலும், அணுகுமுறையிலும், எத்தகைய மாற்றமும் ஏற்பட வில்லை. அகந்தையும், ஆணவமும், தன்னிச்சையான அணுகுமுறையும் திட்டவட்டமாகப் புலப்பட்டதற்குப் பிறகு, அவரது தலைமையிலான கூட்டணியில் இனி தொடர்ந்து நீடிப்பதும், வாக்காளர்களை சந்திப்பதும், எவ்விதத்திலும் ஏற்பு உடையது அல்ல.

இந்நிலையில், புதிதாக ஒரு அணியை அமைக்க முயலுவதோ, தனித்துப் போட்டியிடுவதோ, ஏதோ ஒரு தரப்பினரை வெற்றி பெறச் செய்வதற்கு ம.தி. மு.க. கருவியாயிற்று என்ற துளியும் உண்மையற்ற விமர்சனத்துக்கே வழி வகுக்கும்.

கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவதைப் போல, சுயமரியாதையை இழந்து பதவியைப் பெறவேண்டிய தேவை, ம.தி.மு.க.வுக்கு இல்லை.

தந்தை பெரியார் அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்களும் உருவாக்கி வளர்த்த தன்மானத்தையும், சுயமரியாதையையும் இரு கண்களாக போற்றும் ம.தி. மு.க. 2011-இல் நடைபெற இருக்கின்ற தமிழ்நாடு, புதுவை சட்டமன்றப் பொதுத் தேர்தலில் மட்டும் போட்டியிடுவது இல்லை என்றும், திராவிட இயக்கத்தின் இலட்சியங்களையும், தாய்த் தமிழகத்தின் உரிமைகளையும் வென்றெடுக்கவும், தமிழ் இனத்தின் நலனைக் காக்கவும் தொடர்ந்து உறுதியோடு பயணத்தை மேற்கொள்வது எனவும், ம.தி. மு.க. உயர்நிலைக் குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சி மன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது’’என்று கூறப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதாவின் ஆணவப் போக்கால்.... வைகோ விலகியதன் மூலம்,

மீண்டும் கருணாநிதியே முதலமைச்சராக வர சந்தர்ப்பம் உள்ளது.

போராட்டக் குணத்தை இழந்த போர்வாள் வைகோ

அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவது என்ற முடிவை மதிமுக எடுத்துள்ளது. நிச்சயம் இது சுயமரியாதை கொஞ்சமாவது மிச்சம் உள்ள எந்த வொரு மனிதரும் எடுக்கும் முடிவே. அந்த வகையில் இப்போதாவது வைகோ தன் சுயமரியாதையை மீட்டதில் சந்தோசமே.

ஆனால் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்பது எந்த அளவிற்கு சரியானது என்று தெரியவில்லை. நாம் ஏற்கனவே முந்தைய தேர்தல் பதிவில் சொன்ன மாதிரி, காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளிலும், மதிமுகவிற்கு வாக்கு வங்கி உள்ள தொகுதிகளிலும் மதிமுக நிற்க வேண்டும் என்பதே தமிழின உணர்வாளர்களின் ஆவல்.

ஏற்கனவே தேர்தல் கமிசனின் அங்கீகாரத்தை இழந்துள்ள நிலையில், இந்தத் தேர்தலை முழுக்க புறக்கணிப்பது கட்சிக்கு நல்லதல்ல. மேலும் மதிமுகவின் நாயக்கர் சமூக ஓட்டை விஜயகாந்த்திற்கு தாரை வார்த்ததாகவே இது ஆகும். ஏற்கனவே பெரும்பாலான நாயக்கர் இன ஓட்டுக்களை விஜயகாந்த கவர்ந்துவிட்ட நிலையில், இந்த முடிவு மதிமுகவிற்கு பெரும் பாதகமாகவே முடியும்.

வேறு வழியின்றியே அதிமுகவை ஆதரிப்பதாக சீமான் போன்றோர் சொல்லி வரும் நிலையில், வைகோ இந்த நல்ல வாய்ப்பை உதறுவது நல்ல முடிவல்ல. வைகோ என்ற போர்வாள் மனதளவில் தளர்ந்து விட்டாரா? தனியே நிற்கக்கூடிய நல்ல வாய்ப்பு வந்துள்ள நிலையிலும் பின் வாங்குவது ஏன்? சீமான், நெடுமாறன் போன்ற உணர்வாளர்கள் வைகோவை இந்தத் தேர்தலில் நிற்குமாறு அறிவுறுத்துவதே சரியாக இருக்கும். அவர்கள் அம்மாவில்ம் விலை போகவில்லை என்பதற்கு அதுவே சாட்சியாகும்!

வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘ஜெயலலிதாவின் அணுகுமுறையில் ஆரம்பத்திலிருந்தே எந்த மாற்றமும் இல்லை. அவரது அணுகுமுறையில் அகந்தை, ஆணவம், தன்னிச்சையான போக்கு ஆகியவையே திட்டவட்டமாகப் புலப்பட்டது’ என்று நேரடியாக ஜெ.வை தாக்கியதிலிருந்தே இனி சமரசத்திற்கு இடமில்லை என்றே படுகிறது.

மதிமுக தொண்டர்களை இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கச் சொன்னாலும், நடைமுறையில் அவர்கள் வேறு யாருக்காவது ஓட்டுப் போடவே செய்வர். அதனால் மதிமுக தேர்தலில் நிற்பதன் மூலமே எஞ்சியிருக்கும் தொண்டர்களைத் தக்க வைக்க முடியும். இல்லையென்றால் கட்சி கரைந்து விடும் என்பதே யதார்த்தம்.

பாஜக, பகுஜன் சமாஜ் கட்சி, கார்த்திக்கின் ஏதோவொரு டப்பா கட்சி எல்லாம் இந்தத் தேர்தலில் துணிந்து நிற்கும்போது வைகோ தயங்குவது ஏன்? காங்கிரஸுக்கு எதிரான ஓட்டு சிதறக்கூடாது என்பதனாலா? இனியும் ஜெ.வைப் பற்றி வைகோ கவலைப்படலாமா?

அதிமுக, திமுக வின் மேல் வெறுப்பில் இருக்கும் சில நடுநிலையாளர்கள், வைகோ என்ற தனி மனிதருக்காக மதிமுகவிற்கு ஓட்டுப் போடுவதைக் கண்டிருக்கிறேன். அவர்களுக்கு இருக்கும் அந்த ஆப்சனையும் வைகோ மூடுவது சரியா? நல்ல மனிதர்களும் அரசியலை விட்டு ஒதுங்கும் நிலையில், மிக்ஸியும் கிரண்டரும் தான் எங்கள் தலைவிதியா?

தனியாக நின்றால் கேவலமாகத் தோற்க வேண்டியிருக்கும் எனப் பயப்படுகிறாரா? நல்ல அரசியலுக்காக ஏங்கும் எம் போன்ற சாமானியர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் தோற்றுக் கொண்டுதானே இருக்கிறோம். எங்களோடு சேர்ந்து நீங்களும் தோற்பது, உண்மையில் கௌரவமே!

மதிமுக தேர்தலில் நிற்க வேண்டும். அதற்கு தமிழின உணர்வாளர்கள் முயற்சி எடுக்க வேண்டும். இல்லையென்றால் மதிமுக என்ற கட்சி இத்தோடு அழிந்து போகும்!

http://sengovi.blogspot.com/2011/03/blog-post_20.html

Edited by Subiththiran

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் அதிமுக வென்றாலும் திமுக வென்றாலும் ஒன்றுதான்.ஆகவே புறக்கணிக்காமல் தனித்து நின்று தன்னடைய வாக்கு வங்கியைக் காட்டலாம்.சில தொகுதிகளின் வெற்றி வாய்ப்பைப் பறித்தது மதிமுக தான் மற்றைய கட்சிகளுக்கு உணர்த்தலாம்.அதை விட்டு தேர்தலைப் புறக்கணிப்பது மதிமுக தொண்டர்களின் உற்சாகத்தைக் கெடுப்பதுடன் மீண்டும் அதிமுக சார்பான நிலையை எடுத்திருக்கிறார்.தேர்தலைப் புறக்கணிப்பது அரசியல் தற்கொலைக்கு ஒப்பான முயற்சியாகும்.தமிழ்நாட்டைத் பொறுத்தவரை நேர்மையான அரசியல் செய்பவர்களுக்கு மரியாதை இல்லை. மருத்துவர் ராமதாஸ் போல் எந்த நேரத்திலும் எந்தக் கூட்டணிக்கும் தாவத் தயாராக இருக்க வேண்டும் வெட்கப்பட ஒன்றுமில்லை.எல்லோருமே வெட்கம்கெட்டவர்கள்தானே.ஆகவே வைகோ அவர்களே தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் அதிமுக வென்றாலும் திமுக வென்றாலும் ஒன்றுதான்.ஆகவே புறக்கணிக்காமல் தனித்து நின்று தன்னடைய வாக்கு வங்கியைக் காட்டலாம்.சில தொகுதிகளின் வெற்றி வாய்ப்பைப் பறித்தது மதிமுக தான் மற்றைய கட்சிகளுக்கு உணர்த்தலாம்.அதை விட்டு தேர்தலைப் புறக்கணிப்பது மதிமுக தொண்டர்களின் உற்சாகத்தைக் கெடுப்பதுடன் மீண்டும் அதிமுக சார்பான நிலையை எடுத்திருக்கிறார்.தேர்தலைப் புறக்கணிப்பது அரசியல் தற்கொலைக்கு ஒப்பான முயற்சியாகும்.தமிழ்நாட்டைத் பொறுத்தவரை நேர்மையான அரசியல் செய்பவர்களுக்கு மரியாதை இல்லை. மருத்துவர் ராமதாஸ் போல் எந்த நேரத்திலும் எந்தக் கூட்டணிக்கும் தாவத் தயாராக இருக்க வேண்டும் வெட்கப்பட ஒன்றுமில்லை.எல்லோருமே வெட்கம்கெட்டவர்கள்தானே.ஆகவே வைகோ அவர்களே தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்.

உண்மைதான் புலவர். தேர்தலைப் புறக்கணிப்பதன் மூலம் இவர் சாதிக்கப் போவது எதுவும் இல்லை.

மேலும் விஜயகாந்த்குக்கு இதுவரை விழ்ந்த வாக்குகளில் பெரும்பாலானவை பெரிய திராவிடக் கட்சிகளின் விரக்தி வாக்குகளே.

இப்போ... விஜயகாந்த் அ.தி.மு.க.வில் இருப்பதால் அந்த வாக்குகளையும் ம.தி.மு.க. கவர முடியும்.

இவர் போட்டியிடுவதால் வாக்குகளை சிதறவிட்டு காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகளின் வெற்றியை கேள்விக்குறியாக்க முடியும்.

இதற்குப் பயந்தாவது மற்றைய கட்சிகள் இவரை தம்முடன் அணைக்க விரும்பும்.

தேர்தலை புறக்கணித்து நின்றால்... வரும் தேர்தலில் எவரும் இவரை கணக்கெடுக்க மாட்டார்கள்.

காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளிலாவது நிண்டிருக்கலாம்.

தமிழன் தொடர்ந்து தவறுகளை செய்வதில் விண்ணன் என்பதை நிரூபித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருகாலத்தில் தேர்தல்களில் தனித்து நின்ற ஒரு கட்சிதான் மதிமுக. ஒரு சில ஆயிரம் வாக்குகளே விழுந்தன. இந்தப் பாடத்தை வைகோ மறந்திருக்க வாய்ப்பில்லை. :rolleyes:

அன்றிருந்ததைவிட இன்று வைகோவின் செல்வாக்கு உயர்ந்துவிடவில்லை. தமிழக வாக்காளர்கள் திமுக இல்லாவிட்டால் அதிமுக என்கிற குறுகிய நிலைப்பாட்டில் இருப்பதால் நேர்வழியில் செல்ல நினைப்பவர்களுக்கும் வேறு போக்கிடம் கிடையாது.

தர்போதைய சூழலில் காங்கிரஸ் ஒழிக்கப்பட வேண்டும். அதற்கு வைகோவின் நிலைப்பாடே சரியானது. :D

வை. கோ. போன்ற தலைவர்களுக்கு தமிழக / இந்திய மக்களாட்சியில் இடமில்லை.

இந்த புறக்கணிப்பானது மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வையும் ஒரு மாற்று தலைமையையும் உருவாக்கினால் மட்டுமே இந்த புறக்கணிப்பு உண்மையான வெற்றியாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த புறக்கணிப்பானது மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வையும் ஒரு மாற்று தலைமையையும்

http://www.youtube.com/watch?v=odAROcD1UG0&NR=1

biryani.jpg

old_monk_rum_new_small.jpg

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.