Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலையும் இந்திய ஊடகங்களும். - டி.அருள் எழிலன்

Featured Replies

தென்னிந்தியாவின் மிகச்சிறந்த படைப்பாளியும் திரைக்கதை ஆசிரியருமான எம்.டி. வாசுதேவன் நாயரை எனக்குப் பிடிக்கும் கேரளத்தின் எர்ணாகுளத்திற்குச் சென்றால் அவரை சந்திக்காமல் வருவதில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்தவரை பார்க்கச் சென்றிருந்தேன். உரையாடலில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிய பின்னர் அவரிடம் இலங்கை யுத்தம், போர் என்று பொதுவாகத் துவங்கினேன். அதுவரை இயல்பாகப் பேசிக்கொண்டிருந்த நாயர். //இலங்கை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது // என்றார். இன்னொரு கேள்வி என்னிடம் இருந்து வந்து விடக்கூடாது என்கிற எச்சரிக்கை என் நேசத்திற்குரிய அந்த எழுத்தாளனிடம் இருந்தது. மிகவும் அயர்ச்சியான நிலையில் நான் எடுத்த அந்த நேர்காணலுக்கு இப்படித் தலைப்பிட்டேன் - //இலங்கை குறித்து எனக்கு எதுவுமே தெரியாது -வாசுதேவன் நாயர் பேட்டி. // .

சில நாட்களுக்கு முன்னர் ஒரு முக்கியமான மானுடவியல் ஆய்வாளார் சென்னைக்கு வந்திருந்தார். ஒடுக்கப்பட்ட சமூகங்கள், நிலத்திற்கான போராட்டங்கள், சாதி, வர்க்கம் என்று திவீரமாகவும் அக்கறையோடும் இயங்கிக் கொண்டிருக்கும் அவரை என் ஆவணப்படத்திற்கான முதல் நேர்காணலை அவரிடம் இருந்து துவங்கலாம் என நினைத்தேன். அவரை அழைத்து வந்தவர்களுக்கு தொலைபேசி பண்ணி ஒப்புதல் கேட்டேன். //கேமிராவோடு வாங்க// என்றார்கள். நான் கேமிராமேனுக்குச் சொல்லி விட்டு தயாரான போது ஒரு தொலைபேசி அழைப்பு. //இல்லை அவருக்கு இலங்கை பற்றி எதுவும் தெரியாதாம்.... அதனால் இப்போ வேண்டாமாம். ஆமாம் எழிலன் தமிழ் நாட்டைத் தாண்டினால் இலங்கை பிரச்சனை குறித்து யாருக்கும் எதுவும் தெரியவில்லை. அதிலும் டில்லி, மும்பை ஆட்களுக்கு இலங்கை தமிழர் பிரச்சனையா? அப்படீண்ணா என்ன? என்று கேட்கிறார்கள். இங்குள்ளவர்கள் ஈழத் தமிழர் பிரச்சனையை தமிழகத்தைத் தாண்டி வேறு எங்கும் கொண்டு சென்றதில்லை. முதலில் அதில் கவனம் செலுத்த வேண்டும்// என் மீது அன்பும் அக்கறையும் கொண்ட அந்த நண்பர் இப்படிச் சொன்னதை என்னால் இப்போது வரை புரிந்து கொள்ள முடியவில்லை. இவ்வாறான எண்ண ஓட்டங்களை 2009 - மே - படுகொலைகளிலிருந்து கேட்டு வருகிறோம்.

கொடூர யுத்தம், அரசியல் படுகொலைகள், பேச்சுவார்த்தைகள், இடப்பெயர்வு, அகதி வாழ்வு, தற்கொலைகள், தீக்குளிப்புகள், கைதுகள், இறுதியில் மாபெரும் இனப்படுகொலைகள் என இதுதான் ஈழ மக்களின் கடந்த முப்பதாண்டுகால அரசியல் வரலாறாக இருக்கிறது. இந்த வரலாற்றின் தொடர்ச்சியில் தமிழகம் எப்போதும் சாதகமாகவும், பாதகமாகவும் பங்குபற்றி வந்திருக்கிறது. எண்பதுகளில் தொடங்கி இப்போது வரை இந்திய அரசின் நிலைப்பாடுகளுக்கு ஏற்ப ஈழத் தமிழ் மக்களின் விதி எழுதப்பட்டும் வந்திருக்கிறது. திம்பு, பெங்களூர், டில்லி, மும்பை என்று இந்தியாவின் ஏற்பாட்டில் பேச்சுவார்த்தைகளும் நடந்தன. இடைவிடாத இடப்பெயர்ச்சியின் மூலம் கூட்டுத் தற்கொலைக்கு நிர்பந்திக்கப்பட்டுள்ள, பயங்கரவாதக் கதையாடலின் பின்னே கூட்டுக் கொலை செய்யப்பட்ட ஒரு இனம் குறித்தும் இவர்கள் அறியாமல் இருக்கிற மௌனத்தின் பின்னால் உண்மையில் உறைந்திருப்பது தமிழர் படுகொலை குறித்த தகவல் பரிமாற்ற தொடர்பின்மையா? அல்லது கள்ள மவுனமா? காஷ்மீரின் கீலானிக்கும், பஞ்சாப் மாநிலத்தின் சில மனித உரிமையாளர்களுக்கும், சட்டீஸ்கர் மாநில குழுக்களுக்கும் தெரிந்திருக்கும் உண்மை, இவர்களுக்குத் தெரியாமல் போனது.

ஆங்கில ஊடகங்களும் - ஈழப் படுகொலைகளும்.

வட இந்திய ஆங்கில அச்சு, காட்சி ஊடகங்களில் ஈழம் குறித்த செய்திகள் வெளிவருவதில்லை ஆகவே எங்களுக்குத் தெரியவில்லை என்கிறார்கள் அறிவுலகினர். அறிவுஜீவிகள் இந்த விஷயம் குறித்து எங்களுக்கு தெரியப்படுத்தவில்லை என்கிறார்கள் ஆங்கில ஊடகத்தினர். ஆக மொத்தம் பிரச்சனை தகவல் தொடர்பில்தான் இருக்கிறது. சுமார் முன்று லட்சம் மக்களை ஒரு குறுகிய நிலப்பகுதிக்குள் வளைத்துப் பிடித்து பீரங்கி குண்டுகளாலும், பாஸ்பரஸ், கிளஸ்டர் குண்டுகளாலும் கொல்லப்பட்ட செய்தியை நாம் வட இந்திய ஆங்கில மேதாவிகளுக்குச் எடுத்துச் சொல்ல வில்லை என்றும். எடுத்துச் சொல்லியிருந்தால் THE HINDU, NDTV, TIMES NOW , CNN , உள்ளிட்ட ஊடகங்கள் தமிழ் மக்களின் படுகொலைக்காக குரல் கொடுக்கா விட்டாலும் அவர்களின் சிவில் உரிமைகளுக்காகவேனும் குரல் கொடுத்திருப்பார்கள் என்ற தோற்றத்தினை உருவாக்குகிறார்கள். துல்லியமாக இல்லாவிட்டாலும் சுமார் பதினைந்து லட்சம் பேர் புகலிடச் சூழலில் வெவ்வேறு நாடுகளில் வாழ்கிறார்கள். 5,000- ல் தொடங்கி முன்று லட்சம் பேர் வரை ஐய்ரோப்பா உள்ளிட்ட உலக நாடுகளில் வாழ்கிறார்கள். பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் சமூகத்தின் நேரடியான பிரநிதிகளாகவும், சமூகமாகவும் இருப்பது இவர்கள்தான். சுமார் ஆறரை கோடி மக்கள் தமிழர்களாக வாழும் தமிழகத்தில் ஒரு அரசியல் இயக்கத்தை கட்டி எழுப்புவதைக் காட்டிலும், ஒன்று கூடுவதிலும் பெருந்திரள் போராட்டங்களை நடத்துவதிலும் நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்ளும் புகலிடச் சூழலில் செய்திகள் கொண்டு சேர்க்கப்பட்ட விதம் சிறப்பானது. தமிழகத்திற்கும் புகலிடத்திற்கும் உள்ள வித்தியாசமாக நான் கருதுவது. அவர்களின் குரலை கேட்கவேனும் வெள்ளையர்கள் தயாராக இருக்கிறார்கள். புகலிடச் சூழலை விட காத்திரமான பல போராட்டங்களை முன்னெடுத்த தமிழகம். எத்தனையோ உயிர்களை பலிகொடுத்தும், போராடியும் முடித்த பின் இன்று வரை இந்தியா ஒரு துரும்பைக் கூட கிள்ளி விடவில்லை. காரணம் அது மேற்குலகம், இது இந்தியா அவளவுதான். இந்தியாவின் அயலுறவுக் கொள்கையும் மத்திய அரசின திராவிடத் தமிழர் எதிர்ப்பு வன்மமும் ஒன்று கூடிய வெளிப்பாடாகவும் வடக்கிற்கு எதிரானது தெற்கு என மனோபாவத்தின் இன்னொரு அம்சமாகத்தான் காட்சி, அச்சு ஊடகங்களில் ஈழப் படுகொலை தொடர்பான போக்கை நாம் காண்கிறோம்.

பிரச்சாரமும் - எதிர்பிரச்சாரமும்.

அரசுகள் என்பது அது எந்த அரசாக இருந்தாலும் குடிமக்களுக்கு எதிரான அடக்குமுறையை ஏவிக் கொண்டே இருக்கிறது. தனது பொருளாதார, இராணுவ, அரசியல் நலன்களைப் பேணும் ஒரு சமூக கட்டமைப்பை ஊட்டி வளர்க்க அல்லது பாதுகாத்துக் கொள்ள நுணுக்கமான, வெளிப்படையான ஒடுக்குமுறையை ஏவுகிறது. சில அரசுகள் மெல்லக் கொல்கின்றன, சில அரசுகள் கூட்டுக்கொலை செய்கின்றன. (நன்றி அருந்ததிராய்) தனது அடக்குமுறைகளுக்குத் தோதான ஊடக அமைப்பை மட்டுமே அது அனுமதிக்கிறது. இன்றைய இந்தியாவின் ஆங்கில ஊடகங்களையும் இந்தியாவின் பண்புமாற்றங்களோடுதான் நாம் காண வேண்டியிருக்கிறது. இலங்கை செய்கிற பிரசாரத்தைத்தான் இந்திய அரசும் செய்கிறது. இந்தியா செய்யும் இலங்கை அரசு ஆதரவு பிரச்சாரத்தைத்தான் வட இந்திய ஆங்கில ஊடகங்கள் செய்கின்றன. நான் நினைக்கிறேன் அவர்கள் இலங்கையின் இன முரணை, தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனையை, தமிழீழக் கோரிக்கையை, இலங்கை பிரச்சனையாக மட்டும் பார்க்கவில்லை. இந்தியாவின் தென்கோடியில் இருக்கும் தமிழகத்தின் பிரச்சனையாக, பழைய திராவிட நாடு கோரிக்கையின் நீட்சியாகப் பார்க்கிறார்கள். பிரிவினைவாதிகள் என்ற முத்திரை இந்திய வரலாற்றில் எப்போதும் சில இனங்களுக்கு குத்தப்பட்டிருக்கிறது ஒன்று காஷ்மீரிகள், வடகிழக்கு இனங்கள், சீக்கியர்கள், தென்னிந்தியாவில் தமிழர்கள் என இந்த பட்டியலில் நிரந்தரமாக இடம் பிடித்த இனங்கள் இவை. ஒடுக்குமுறைக்குள்ளாகும் தேசிய இனங்கள் தங்களின் பிரச்சனைகளைப் பேசுவதைக் கூட விரும்பாத இந்தியத் தனம் அதற்கு எதிரான கடும் பிரச்சாரங்களை முடுக்கி விடுகின்றன. அந்த பிரச்சாரங்களைத்தான் நாம் ஈழப் போரின் போதும் பார்த்தோம். இப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். வரலாற்று நெடுகிலும் இந்த பிரச்சாரங்களுக்கு எத்தனையோ உதாரணங்களைச் சொன்னாலும் ராஜீவ்காந்தியின் படுகொலைகளுக்குப் பிறகு துல்லியமான தாக்குதல் உருவானதாக நினைக்கிறேன்.

2008 - போர்ச் சூழலில் தமிழகம் அமைதியாக இருந்த போது ஆங்கில ஊடகங்களும் அமைதியாக இருந்தது. 2008 - அக்டோபரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சேப்பாக்கத்தில் ஒரு உண்ணாவிரதத்தை அறிவித்ததை அடுத்து தமிழகத்தின் ஆளும் கட்சியும் திராவிட இயக்கமுமான திமுகவுக்கு எழுந்த நெருக்கடிக்களைச் சமாளிக்க அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றை அது கூட்டியது. 14-10-2008 அன்று அனைத்துக் கட்சி கூட்டம் ஏற்பாடாகியிருந்த நிலையில் அன்றே தி ஹிந்து பத்திரிகையில் மாலினி பார்த்தசாரதி எழுதிய The dangers Of tamil chauvinism கட்டுரை வெளியானது. ஈழப் படுகொலைகள், அதை ஒட்டிய தமிழக உணர்வலைகளுக்கு எதிரான பிரச்சாரத்தின் முதல் புள்ளி இதுவே என்று நான் நினைக்கிறேன். அதன் பிறகு ஆங்கில ஊடகங்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதெல்லாம் ஓரளவுக்கு வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கே தெரிந்த விஷயம்தான். கிளிநொச்சி படையினரிடம் விழுந்ததை வரவேற்று புகழ்ந்து செய்தி வெளியிட்ட இந்து பத்திரிகையின் அடியொற்றியே ஏனைய ஆங்கில ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. இந்த இடத்தில் மிகவும் காத்திரமான கட்டுரைகள் சிலவற்றை வெளியிட்டது தெஹல்கா இதழ் என்பதையும் நாம் இங்கே நினைத்துப் பார்க்கிறோம். ஈழத்தில் போர் முடிந்து விட்டது. மக்கள் சிறைபட்டு விட்டார்கள். சிவசங்கரமேனன் 2009 -மே இறுதியில் சொன்ன விஷயங்களை இன்று சொல்லவில்லை. அவர் எதை இலங்கையிடம் தமிழர்களுக்காக வலியுறுத்தினார் என்பதும் தெரியவில்லை. ஆனால் ஆங்கில , தமிழ் இந்திய ஊடகங்கள் அவர் அரசியல் தீர்வு குறித்து வலியுறுத்தியதாகச் சொல்கின்றன. சிங்கள ஊடகங்களோ அரசியல் தீர்வில் இந்தியா தலையிடாது என்று சிவசங்கரமேனன் சொன்னதாக செய்திகள் வெளியிடுகின்றன. இவர்கள்தான் மிகவும் நுணுக்கமாக வன்னிப் படுகொலைகளை சாட்சியமற்ற படுகொலைகள் என்றார்கள்.

இப்போது இந்திய ஊடகங்களின் இந்த பிரச்சாங்களுக்கு எதிர்பிரச்சாரம் ஒன்றை செய்யும் வலு தமிழர் தரப்பிற்கு உண்டா? என்றால் உண்டு. ஆனால் தமிழ் முதலாளிகளிடம் ஊடகங்கள் இருக்கின்றன. அவர்களில் தொழில் வணிக கூட்டிற்கு ஏற்றமாதிரி அவர்களும் பல நேரங்களில் மௌனமாக இருக்கிறார்கள்.அல்லது தங்கள் நிறுவனங்களின் தொழிற்கூட்டு அரசியல் கூட்டணிகள் அமைவதின் பொருட்டு படுகொலைகளை குறிப்பிட்ட ஒரு உள்ளூர் தலைமைக்கு எதிரான ஒன்றாக மட்டுமே மாற்றுவதில் முனைப்புக் காட்டினார்கள். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணி சேர்க்கையில் மீடியேட்டர்களின் பங்கோடு சில ஊடகங்களின் பங்கும் கணிசமானது. தாங்கள் விரும்பும் கூட்டணியை உருவாக்குகிற செய்திக்காக ஈழம், உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகள் குறித்து எழுதினார்கள். அது பிரச்சனைகளின் பால், பாதிக்கப்பட்ட மக்களின் பால் கொண்ட கரிசனமோ அக்கறையோ அல்ல அது குறிப்பிட்ட ஒரு தலைவருக்கு எதிரானது என்று முழு வடிவம் பெற்ற பின்னரே அது குறித்து ஆர்வம் காட்டின சில இந்துத்துவ ஊடகங்கள். ஆக எதிர்பிரச்சாரங்களைச் செய்ய முடியாத தமிழர் தரப்பு மேற்குலக ஊடகங்களையே நம்பியிருக்கின்றனர். டைம்ஸ், லே மாண்டே, இன்னர் சிட்டி பிரஸ், போன்ற ஊடகங்கள் போரின் போதே கேள்விகளை எழுப்பினர் பின்னர் சானல் 4 - சர்வதேச அளவில் தமிழர் இனப்படுகொலை தொடர்பான பல காட்சி ஆவணங்களை வெளியிட்டதோடு. சர்வதேச போர் குற்ற விசாரணை ஒன்று இலங்கை மீது முன்னெடுக்கப்படும் சூழலில் சேனல் 4- தன்னையே ஒரு ஆவணமாக அதில் இணைத்துக் கொள்ளவும் தயாராக இருக்கிறது. இப்போது உலக ஊடகங்கள் வன்னிப்படுகொலைகளில் கண் திறந்து கொண்டது போன்று பல காட்சிகளையும் வெளியிட்டு வருகின்றன. கோரமான காட்சிகளையும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய காட்சிகளையும் ஒளிபரப்புவதில் பல் வேறு சட்டச் சிக்கல்களை சந்திக்கவும், ஊடக நிறுவனங்களையே முடக்கிப் போடும் ஆபத்தும் நிறைந்த சூழலில் மேற்குலக ஊடகங்கள் ஈழப் படுகொலைகளின் கோரக் காட்சிகளை ஓரளவுக்கு தேர்ந்தெடுத்து வெளியிட்டன. ஆனால் ஒப்பீட்டளவில் இம்மாதிரி எந்த சட்ட ரீதியான சிக்கல்களும் இல்லாத தமிழ் ஊடகங்கள் கூட கோரமானவை என்பதால் படுகொலைக் காட்சிகளை வெளியிட மறுத்தன. நித்தியானந்தா ரஞ்சிவாதோடு குலவும் நீலப்படக் காட்சிகளை ஒளிபரப்பும் ஊடகங்களுக்கு ஈழப் படுகொலைக் காட்சிகள் கோரமானதாகத் தெரிவதற்கு தங்களின் வர்க்கம் சார்ந்த நலன் பேணும் காரணம் அல்லாமல் வேறு என்ன இருக்க முடியும். அச்சு காட்சி ஊடகங்கள் வெளியிட மறுத்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் எவ்வித தணிக்கை விதிகளையும் கொண்டிராத சுய தணிக்கை முறையை மட்டுமே கடைபிடிக்கும் இணையதளங்கள் பயன்படுத்தி பெரும் பங்காற்றின. இன்றுவரை தமிழர் தரப்பிற்கு இணைய ஊடகங்களே பெரும் பாய்ச்சலான தொடர்பு சாதனமாக உலகெங்கிலும் இருந்து வருகிறது. மற்றபடி மக்கள் பதறுவதையோ, அண்டை நாடொன்றில் நடக்கும் கொத்துக் கொலைகள் கொண்டு மக்கள் பதட்டப்படுவதையோ நமது ஊடகங்கள் விரும்புவதில்லை. ஏனெனில் பதட்டம்தான் அரசியல் சிந்தனையின் முதல் உணர்வு

by Arul Ezhil

thanz.....face book..

  • கருத்துக்கள உறவுகள்

அறிவுலகினர் கூட ஈழத்தமிழர் போராட்டம்பற்றித் தெரிந்துகொள்ளாமல் இருப்பதாகச் சொல்லுவது ஆச்சரியமாகத்தான் இருக்கின்றது!

மனித அவலங்கள் நிகழ்ந்திருந்தாலும், பலருக்கு தமிழரின் ஆயுதப் போராட்டம் பயங்கரவாதப் போராட்டமாகப் பிரச்சாரம் செய்யப்பட்டிருந்தது. அதனைத் மேவி தமிழர்களின் கோரிக்கைகள்,பிரச்சாரங்கள் எடுபட்டுப்போகவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வட இந்திய மீடியாக்களுக்கு தமிழர்கள் சிங்களவர்கள் இருவரும் ஒன்றுதான். அவர்கள் பார்வையில் ஒருவர் தமிழ்நாட்டில் இருந்து போனார். இன்னொருத்தன் ஒரிசாவில் இருந்து போனார்.. போக பஞ்சாய்த்து என்று வரும் போது.. ஆமாம் பார்த்துக்களாம் நம்ம பயலுகதானே.. அன்றைக்கு சோறு கிடைத்தால் சொர்க்கம் ..

போகட்டும் வட இந்திய பத்திரிக்கையில் நியூஸ் வர வேண்டும்.. குவாட்டர் அடித்துவிட்டு டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் குப்புற கவிழுந்து கிடந்தால் நியுசு வருமா? இல்லை தூர்தர்சனில் காட்டுவார்களா? இவன் சிவசேனா பகுஜன் சமாஸ் அமாஜ் வாடி .. அடி பின்னி எடுத்து நாடாளுமன்றத்தினை ஒத்தி வைக்கிறான்.. <_< <_<

இந்திய வடக்கு மற்றும் தெற்கின் திராவிட ஊடகங்கள் அனைத்தும் செய்வது கள்ள மவுனம். கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய வடக்கு மற்றும் தெற்கின் திராவிட ஊடகங்கள் அனைத்தும் செய்வது கள்ள மவுனம். கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்

அப்படியென்றால் ஒரு திட்டத்துடன் எல்லோரும் செயற்படுகின்றார்கள். தமிழ்நாட்டில் ஜெயலலிதா அம்மையார் இந்தப் பரந்த திட்டத்தில் இருந்து ஊடகங்களை, அரசியல்வாதிகளை வெளிக்கொண்டுவருவார் என்று நம்பலாமா?

அவராலும் ஒன்றும் செய்யமுடியாது என்றுதான் தோன்றுகின்றது.

அப்படியென்றால் ஒரு திட்டத்துடன் எல்லோரும் செயற்படுகின்றார்கள். தமிழ்நாட்டில் ஜெயலலிதா அம்மையார் இந்தப் பரந்த திட்டத்தில் இருந்து ஊடகங்களை, அரசியல்வாதிகளை வெளிக்கொண்டுவருவார் என்று நம்பலாமா?

அவராலும் ஒன்றும் செய்யமுடியாது என்றுதான் தோன்றுகின்றது.

நிச்சயமாக முடியாது. ஜெயலலிதாவும் தன்னால் முடிந்தவரைதான் செய்யலாம். அவரின் அதிகாரத்திற்கும் ஒரு எல்லைகோடு உண்டு. காலகாலமாக லஞ்ச லாவண்யங்களில் நீந்தி வருபவர்களை, பதவியேற்ற ஒரு அரசு திடீர் என்று மாற்ற முடியாது. காலங்கள் செல்லும்.

மாற்றங்கள் அடிமட்ட மக்களிடம் இருந்து வரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

:unsure: தமிழ்நாட்டில் ஒரு சில தமிழ் அமைப்புகளை விட ஏனைய அனைவரும், அனைத்து ஊடகங்களும் இனக்கொலை ஆவணப்படம் தொடர்பில் காட்டிவரும் மவுனம் திகைப்பாக இருக்கிறது. இங்கு ஏற்கனவே நெடுக்கர் குறிப்பிட்டதுபோல ஒரு சில காட்சிகள் ஏற்கனவே தமிழக மக்களுக்குப் பரீட்சயப்பட்டிருந்தாலும் கூட மொத்த ஆவணப்படம் வந்தபோது எவரும் அலட்டிக்கொள்ளவில்லை அல்லது அலட்டிக்கொள்ளாததுபோல நடிக்கிறார்கள்.

சோனியாவும் அவளின் ஆளும் காங்கிரஸின் மூத்த புள்ளிகளும் ஈழத்தில் செய்த படுகொலைகளின் தொகுப்பென்பதால் இந்திய மீடியாக்கள் அடக்கி வாசிக்குமாறு வற்புறுத்தப்பட்டிருக்கலாம்.

முக்கியமாக கேரள ஊடகங்களாகட்டும், அறிவுஜீவிகளாகட்டும் அவர்கள் தொடர்ந்தும் மத்திய அரசின் படுகொலைகளுக்கு ஒன்றில் ஆலோசனை வழங்கிவருகிறார்கள், அல்லது ஆமோதித்து வருகிறார்கள். மத்திய அரசு அமைந்திருக்கும் தில்லி பற்றிக் கேட்கத்தேவையில்லை. மும்பாய்...இந்திய போலித்தேசியவாதத்தின் ஒட்டுமொத்த உறைவிடம், பல்லினக் கலாச்சாரம், அது இது...அவர்களுக்கு எங்களைப்பற்றித்தெரிந்துகொள்ளவேண்டிய தேவையே இல்லை.

குறைந்தது ஜெயா தீர்மானம் நிறைவேற்றிய பின்பாவது இப்பிரச்சனை பற்றி இந்திய ஊடகங்கள் பேசத் தொடங்கியிருக்க வேண்டும், அதுவும் நடக்கவில்லை.

இதுவரை ஈழத்தமிழர் சார்பாக எழுதிவந்த ஜூனியர் விகடன், இப்போது ஞானசேகரனுக்கு புலிகளால் ஆபத்து என்று கட்டுரை வரைகிறது.

ஆகவே ஏதோ நடந்துகொண்டிருக்கிறது. ஜெயாவின் காய் நகர்த்தலுக்கு எதிராக சோனியா செயற்படத்தொடங்கிவிட்டாள் என்பதே எனது எண்ணம். "எனக்கு சோனியாவினதோ, காங்கிரஸினதோ நட்புத் தேவையில்லை, அவர்களுடன் கூட்டாணி அமைக்கும் நோக்கமுமில்லை" என்று ஜெயா அண்மையில் சொல்லியதுதான் நினைவுக்கு வருகிறது.

நாம் செய்திகளை ஆங்கிலத்திலும் வழங்கவேண்டும். Tamilnet முடிந்தளவு நல்லபணி செய்கிறது. Tamilnet போன்று குறைந்தது 10 பிரபல்யமான தளங்கள் ஆவது வேண்டும். வேறு சில ஆங்கில தளங்கள் இருந்தாலும் அவை பிறரால் அறியப்படவில்லை. அதுபோல், ஜெர்மன் மொழியிலும், பிரெஞ்சிலும், தமிழின அழிப்புக்கள் பற்றிய செய்திகள் வந்தால் நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.