Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சே..

Featured Replies

சே குவேரா வாழ்க்கையை வேறு எந்த இயக்குனர் படமாக்கியிருந்தாலும், கொஞ்சம் செயற்கைத்தனத்தோடு அதிமனிதராகவே அவரை சித்தரித்திருப்பார். ஏனென்றால் பொதுவில் அவருக்கு இருக்கும் பிம்பம் அத்தகையது. “சே” புரட்சியின், கட்டுடைத்தலின், எதிர்ப்பின், கலகத்தின் மாபெரும் சின்னமாகவே ஆக்கப்பட்டுவிட்டார். ஆனால் இந்தப் படத்தில் மிகமிக யதார்த்தமாக அவரை வடிவமைத்துக் காட்டியிருக்கிறார்கள் இயக்குனர் ஸோடர்பெர்க்-கும் நடிகர் பெனிசியோ டெல் டோரோ-வும். சமகாலத்தில் உலகின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் டெல் டோரோ என்பதை அவர் இந்தப் படத்தில் மீண்டும் நிரூபித்திருக்கிறார். கேண்ஸ் திரைவிழாவில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டாலும், ஆஸ்கார், கோல்டன் குளோப் போன்றவை ஏறிட்டுக்கூடப் பார்க்கவில்லை. சே குவேரா பாத்திரத்தில் நடித்ததிற்கு அந்த அமெரிக்க விருதுகள் ஏன் வழங்கப்படவில்லை என்பது புரிந்துகொள்ளக் கூடியதே.

அதன் முதல் திரையிடல் கேண்ஸ் திரைப்படவிழாவில் தான் நடந்தது, சுமார் நாலரை மணிநேரம் ஓடும் முழுப் படமும் தொடர்ச்சியாகக் காட்டப்பட்டது. பிறகு வெகுஜனப் பார்வைக்கு வெளியிடும்போது இரு பாகங்களாகப் பிரித்து வெளியிடப்பட்டது. முதல் பாகம் சே குவேரா-வின் எழுச்சியையும், இரண்டாம் பாகம் அவரின் வீழ்ச்சியையும் சித்தரிக்கின்றன என்று சுருக்கமாகச் சொல்லலாம். கியூபா புரட்சியை மையமாகக் கொண்டது முதல் பாகம். பொலிவியா நாட்டில் சே நடத்திய கொரில்லா யுத்தத்தை மையமாகக் கொண்டது இரண்டாவது பாகம்.

முதல் பாகம் நேர்கோடற்ற திரைக்கதை அமைப்பு கொண்டது. அர்ஜண்டினா நாட்டைச் சேர்ந்த சே, பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான புரட்சிப் படையில் சேர்ந்து கியூபாவின் சர்வாதிகார அரசைக் களைவதற்காகப் போரிட்டு வெல்வதே முதன்மையான கதை. இடையிடையே, சே அமெரிக்க நியூயார்க் நகரத்துக்கு கியூப அமைச்சராகவும், தூதுவராகவும் பிற்காலத்தில் வந்திருந்ததையும், ஊடகங்களுக்குப் பேட்டியளித்ததையும், ஐ.நா.சபையில் கியுபாவின் தரப்பை சிறப்பாக எடுத்துரைத்ததையும், அவரின் செல்வாக்கு உலகமெங்கும் உயர்ந்ததையும் காட்டும் காட்சித்தொடர் வருகிறது. அதில்தான் நாம் இன்று கொண்டுள்ள பிம்பத்துக்குப் பொருத்தமான சே குவேராவைக் காணமுடிகிறது. முதன்மையான கதையில், மிக யதார்த்தமாகச் சித்தரிக்கப்படும் சே, மிகப் பெரும் ஆளுமையாக வளர்ந்தெழுவதை, சிறுசிறு சம்பவங்கள் வாயிலாகக் காட்டிச் செல்கிறது திரைக்கதை.

படத்தின் முதல் காட்சியே, மெக்ஸிகோவில் ஒரு நண்பரின் வீட்டில் வைத்து, சே குவேரா முதன் முறையாக பிடல் காஸ்ட்ரோவைச் சந்திப்பதுதான். இருவருமே இலட்சியவாதிகள், ஆனால் பிடலின் லட்சியம் கியுபா-வின் விடுதலை என்ற ஒரு மையத்தில் குவிந்தது, சே மொத்த தென்அமெரிக்க நாடுகளின் அரசுகளையும் மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார். பிடல் சரியான திட்டமிடல்களும் முன்தீர்மானங்களும் உள்ளவராக இருக்கிறார், ஆனால் சூழ்நிலைக்கும் தேவைக்கும் ஏற்பவே சே பயணிக்கிறார். பிடல் எடுக்கும் சில அரசியல் முடிவுகள் சே-க்கு பிடிக்காதபோதும், அதற்கு ஏதோ ஒரு சரியான காரணம் இருக்கும் என்று நம்பி, பிடல் சொல்வதை ஏற்றுக்கொள்கிறார் சே. போரின் ஆரம்ப நாட்களில், மற்ற படைவீரர்கள், சே ஒரு டாக்டர் என்கிற அளவில் மட்டுமே மதிக்கிறார்கள், அவருடைய ஆஸ்த்துமா நோய் காரணமாக பெரிய வீரராகவோ தலைவராகவோ ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் பிடல் ஒவ்வொரு முறையும் சே-வுக்கு உரிய மரியாதையையும், முன்னிலையையும் கொடுத்து அவரை முக்கியமானவராக்குகிறார். ஒருமுறை சே-வை பதவியிறக்கமும் செய்கிறார், போர்க்களத்திலிருந்து ஒதுக்கியும் வைக்கிறார், ஆனால் பிறகு சரியான சந்தர்ப்பத்தில் சே-வுக்கு உயரிய பதவி கொடுத்து, தனக்கு அடுத்த இடத்தில் அமர்த்துகிறார் பிடல். கியூபாவின் நிலவியல் அமைப்பு, ஒவ்வொரு பகுதி மக்களுடைய மனநிலைகள், அரசுப் படைவீரர்களின் மனநிலை எல்லாவற்றையும் பிடல் காஸ்ட்ரோ தெளிவாக அறிந்துவைத்திருக்கிறார். இறுதிப் போரில் சே-வின் பங்களிப்பும், அவர் தலைமையிலான படைப் பிரிவின் தீரமுமே வெற்றியைத் தருவது அற்புதமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது

சே மிகுந்த நிதானமுள்ளவர், அழுத்தக்காரர் என்கிற சித்திரமே இந்தப் படத்தின் மூலம் நான் பெற்றது. கோபப்படும் சமயங்களிலும் அதை அவர் வெளிப்படுத்தும் விதம் நிதானமாகவும் கட்டுப்பாட்டோடும் இருக்கிறது. அவர் எதிரிகளிடம் போரிடுவதைவிடவும் தனது உடலோடு (ஆஸ்துமா நோயோடு) போராடுவதே, அவருடைய லட்சியப் பிடிப்பையும் தியாகத்தையும் உயர்த்திக் காட்டுகிறது. ஒரு தலைவன் சந்திக்கும் சவால்கள், அவனுக்கு அவசியம் இருக்க வேண்டிய பண்புகள் எல்லாம் சே-வின் வாழ்க்கையின் ஊடாக நாம் அறிய முடிகிறது. படம் முழுவதும் அவர் தனது வீரர்களுக்குள் வரும் சிறுசிறு சண்டைகளைப் பேசித் தீர்த்தபடியே இருக்கிறார். படையில் புதிதாக சேர வருபவர்களை உடனே சேர்க்காமல், எதிர்மறையாகப் பேசுகிறார், வரக்கூடிய இழப்புகளைப் பற்றி எச்சரிக்கிறார். எந்தப் பெரிய யுத்தத்துக்குக் கிளம்புவதற்கு முன்பும், தன் படையினரை ஒன்றாக நிறுத்தி “யாருக்காவது விலகவேண்டுமென்று தோன்றினால் இப்போதே போய்விடலாம்” என்று சொல்லி, அப்படி முன்வருபவர்களை ஒரு விளக்கமும் கேட்காமல் அனுப்பிவைக்கிறார்.

புரட்சியாளர்கள் அவசியம் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்று வற்புறுத்தியபடியே இருக்கிறார் சே. பொதுமக்களிடம் தன் படையினர் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்பதில் மிகக் கறாராக இருக்கிறார், அவர்களின் உணவைப் பறிப்பதையோ, பெண்களிடம் தவறாக நடந்துகொள்வதையோ அவர் மன்னிப்பதே இல்லை. “பொதுமக்களுக்காகவே நாம் உயிரைக்கொடுக்கிறோம், ஆனால் அதற்காக அவர்கள் நமக்குக் கடமைப்பட்டவர்கள் என்று நினைத்தால் அது தியாகமே இல்லை” என்கிறார் சே. இதையே முதல் பாகத்தின் இறுதிக் காட்சியும் அழுத்திச் சொல்கிறது. புரட்சி வெற்றியடைந்த பிறகு படைகள் தலைநகர் நோக்கிச் செல்கின்றன. அப்போது சில வீரர்கள் ஒரு விலையுயர்ந்த காரில் கோஷமிட்டபடி வருகிறார்கள். சே அவர்களை மறித்து, “இந்தக் காரை யாரிடம் பறித்தீர்கள்? கொண்டுபோய் திருப்பிக்கொடுத்துவிட்டு, படை வண்டியிலோ, பஸ்ஸிலோ அல்லது நடந்தோ வாருங்கள்” என்று ஆணையிடுகிறார்.

இரண்டாவது பாகம், நேர்க்கோட்டில் அமைந்த திரைக்கதையைக் கொண்டுள்ளது. சே சுமார் எட்டாண்டுகள், புரட்சிக்குப் பின்னான கியூபாவைக் கட்டியெழுப்புவதற்காக, தேசப் பொருளாதாரம், பாதுகாப்பு, வெளியுறவுத் துறைகளில் பணியாற்றிவிட்டு, திடீரென்று ஓர்நாள், ஒரு விளக்கக் கடிதத்தை பிடலுக்கு அனுப்பி, தனது எல்லாப் பதவிகளையும் ராஜினாமா செய்துவிட்டு, கியூபாவிலிருந்தும் வெளியேறிவிட்டார் என்கிற செய்தியோடு ஆரம்பிக்கிறது படம். தனது அடையாளத்தை மாற்றிக்கொண்ட சே கொஞ்சகாலம் அர்ஜண்டினாவில் தனது குடும்பத்தோடு (மனைவி, மூன்று குழந்தைகள்) இருந்துவிட்டு, பிறகு போலிப் பத்திரங்களோடு வேறு பெயரில் ரகசியமாக பொலிவியாவுக்குள் நுழைகிறார். பிடல் பெரும் நிதியுதவியை அங்கு அனுப்பிவைக்க, சே தனது ஆதரவாளர்களை வரவழைத்து, காட்டுக்குள் படைவீடமைத்து, பொலிவிய அரசை ராணுவப் புரட்சியின் மூலம் கைப்பற்றும் பெரும் கனவோடும் நம்பிக்கையோடும் களமிரங்குகிறார்.

உள்நாட்டின் கம்யூனிஸ்ட் இயக்கம் தன்னோடு இணையுமென்று முதலில் அவர் நம்புகிறார். ஆனால் ரஸ்யாவின் ரகஸிய ஆணை காரணமாக அவர்கள் சே-வை நிராகரிக்கிறார்கள் (ரஸ்யா சீனாவுக்கிடையே உறவு முறிந்தபோது, சே மாவோவை ஆதரித்தார்). வெகுசில உள்ளூர்க்காரர்களையே படையில் சேர்க்க முடிகிறது. ‘போகப்போக நிலைமை மாறும், சிறு வெற்றிகளைப் பெற ஆரம்பித்தால் படை திரளும்’ என்று அவர் நம்புகிறார். ஆனால் பொதுமக்கள் இந்தப் படையினரை அந்நியர்களாகவே பார்க்கிறார்கள். அதனுடன் பொலிவிய அரசு திட்டமிட்டுப் பரப்பும் அவதூறுகளும் வதந்திகளும் சேர்ந்துகொள்ள, பொதுமக்கள் இவர்களை அஞ்சவும் செய்கிறார்கள். அமெரிக்காவின் பெரும் அளவிலான ஆயுத உதவிகளையும் சிஐஏ உளவையும் பயன்படுத்தி பொலிவிய அரசு புரட்சிப் படையை முற்றிலுமாக அழிக்கிறது. சே குவேரா கைதுசெய்யப்பட்டு, பிறகு சுட்டுக் கொல்லப்படுகிறார்.

உணவு வரத்தும் உதவிகளும், ஒருகட்டத்தில் காட்டுக்குள் இருக்கும் படைக்குக் கிடைக்காமல் போகும்போது, அவர்கள் படும் அவலம் கொஞ்சமல்ல. கையில் ஆயுதம் இருந்துகூட கிராமவாசிகளிடம் எதையும் பறிக்காமல், உணவுப்பொருட்களைப் பணம் கொடுத்தே வாங்குகிறார் சே. படையில் வந்துசேரும் பொலிவிய ஆட்கள், புரட்சிக்கான எவ்வித மனத்தயாரிப்பும் இன்றியும், கொள்கையற்றவர்களாகவும் இருப்பதே சே-வை ஒவ்வொரு முறையும் சிக்கலில் ஆழ்த்துகிறது. சிறந்த உதாரணம், துப்பாக்கியைக் கையில் கொடுத்து “சமைப்பதற்கு எதையாவது வேட்டையாடி வாருங்கள்’ என்று இரு இளைஞர்களை அனுப்பிய உடனேயே, அவர்கள் ஓடிப்போய்விடுகிறார்கள், இராணுவத்திடம் புரட்சியாளர்களைக் காட்டியும் கொடுக்கிறார்கள்.

கியுபாவில் இருந்திருந்தால், காரும் பங்களாவும், அமைச்சருக்கான மரியாதைகளையும் பெற்றிருக்கக் கூடிய சே, காலில் புண்ணோடு மூச்சிறைத்தபடி காட்டில் அலைந்து திரிவது வேதனையானது. படத்தின் இறுதியில், சே சுடப்பட்ட பின்பு, ‘ஃப்ளாஷ் கட்’டில், முதல் பாகத்தின் ஆரம்பத்தில் சே குவேரா-வும் பிடல் காஸ்ட்ரோ-வும் ஒரு சிறிய படையோடு மெக்ஸிகோவிலிர்ந்து கியூபாவுக்கு படகில் வரும் காட்சி மீண்டும் காட்டப்படுகிறது. அதில் சே சிறிது விலகி நின்று, கடலைப் பார்த்தபடி இருக்கும் பிடல்-ஐ வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டே இருக்கிறார். அத்துடன் படம் முடிகிறது. இதன் மூலம் சொல்லப்படுவது என்ன என்பது ஓரளவு புரிந்தாலும், தென்அமெரிக்க வரலாற்றையும் சே, காஸ்ட்ரோ பற்றியும் மேலும் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றே நினைத்துக்கொண்டேன்.

நான் இரு பாகங்களையும் டிவிடி-யில் அடுத்தடுத்து தொடர்ந்து பார்த்தேன். அப்படிப் பார்ப்பதே சிறந்தது என்று பார்க்காதவர்களுக்குப் பரிந்துரைக்கிறேன். பல இடங்களில் புல்லரிப்பை உணர்ந்தேன், சில இடங்களில் கண்கலங்கினேன். அப்படியொன்றும் உணர்ச்சிகரமோ, மெலோ-டிராமாவோ இல்லாத, ஆவணப்படம் போன்ற திரைமொழியில் இது எப்படி சாத்தியமாயிற்று என்று வியக்காமலிருக்க முடியவில்லை. ஒரு சிறந்த நடிகரும், சிறந்த இயக்குனரும், ஒரு நிஜ வரலாற்றைப் படமாக்கினால் எத்தகைய உயிரோட்டத்தைத் திரையில் உருவாக்கமுடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் இந்தப் படம்.

http://vaarthaikal.wordpress.com

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி வீணா.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு இணைப்பு நன்றி வீணா நானும் இந்தப் படத்தை பார்க்க வேண்டும்...இறுதிப் போரில் இதில் உள்ள சிலவற்றை நாம் கடைப் பிடிக்காததும் எமது வீழ்ச்சிக்கு காரணம் என நான் நினைக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த யாழ் களத்திலேயே ஒரு பத்து காரணங்கள் எழுதிவிட்டீர்கள்.......

தோல்விக்கான காரணம் காரணம் என்று இப்ப இது வேற புதுசா.

இன்னும் இருக்க இல்ல அப்பப்ப எடுத்து விடுவிங்களா?

நான் இந்தப்படத்தை பார்த்த எமது போராட்டம் தான் கண்ணுக்குள் வந்தது ,என்னவொரு மாறுபாடு. மிக நீண்ட படம் நான் பார்த்து ஒரு வருடம் இருக்கும் ,யாழிலும் அது பற்றி எழுதினதாக நினைவு .

  • கருத்துக்கள உறவுகள்

இந்த யாழ் களத்திலேயே ஒரு பத்து காரணங்கள் எழுதிவிட்டீர்கள்.......

தோல்விக்கான காரணம் காரணம் என்று இப்ப இது வேற புதுசா.

இன்னும் இருக்க இல்ல அப்பப்ப எடுத்து விடுவிங்களா?

சரி அண்ணா இப்படித் தான் கேள்வி கேட்க கூடாது,விமர்சிக்க கூடாது,கருத்துக்கள் கூறக் கூடாது என சொல்லி முள்ளி வாய்க்கால் அழிவில் கொண்டு வந்து விட்டுட்டீங்கள் இனி மேல் எங்கே கொண்டு போறதாக உத்தேசம்?

  • கருத்துக்கள உறவுகள்

சரி அண்ணா இப்படித் தான் கேள்வி கேட்க கூடாது,விமர்சிக்க கூடாது,கருத்துக்கள் கூறக் கூடாது என சொல்லி முள்ளி வாய்க்கால் அழிவில் கொண்டு வந்து விட்டுட்டீங்கள் இனி மேல் எங்கே கொண்டு போறதாக உத்தேசம்?

கருது சொல்ல கூடாது பேசக்கூடாது............ இதெல்லாம் எங்க இருந்து வாசிக்கின்றின்களோ??

அரசியல் யாப்பு வரையவேனும்....

இராணுவ கட்டமைப்பை ஒழுங்குபடுத்த வேண்டும்.......

விவசாயத்தில் விஞ்ஞானத்தை புகுத்த வேண்டும்...........

சமூக சாரளத்தை சீர்படுத்த வேண்டும்............

எல்லா வற்றுக்கும் மேலாக போராளிகள் பற்றகுறயையும் ஒருக்கா பாருங்கோ .............

என்று கத்தின நேரம் .............

எங்க ஜெயமோகனின் காட்டுக்குள்ளையோ நின்டநீங்கள்???

முள்ளிவாய்க் காலில் கொண்டுவந்து விட்டேனா? நினைக்க பெருமையா இருக்கு நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவேளை மருதங்கேணி அமெரிக்காவில் இருக்கின்றார். 2009க்கு முன்னர் ஊரில் இருந்திருந்தார் பிள்ளைபிடிகாரனாக இருந்திருப்பார்..

ஜெயமோகனின் காட்டுக்கள் இருந்தவர்கள் இப்பவும் உயிர் தப்பி இருக்கின்றார்கள் ஆனால் வன்னியில் இருந்தவர்கள்??

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவேளை மருதங்கேணி அமெரிக்காவில் இருக்கின்றார். 2009க்கு முன்னர் ஊரில் இருந்திருந்தார் பிள்ளைபிடிகாரனாக இருந்திருப்பார்..

ஜெயமோகனின் காட்டுக்கள் இருந்தவர்கள் இப்பவும் உயிர் தப்பி இருக்கின்றார்கள் ஆனால் வன்னியில் இருந்தவர்கள்??

நானும் நீங்களும் எங்கே கிடந்தோம் என்பது முக்கியமல்ல................

எல்லாவற்றையும் வன்னியில் இருந்தவர்கள் தோள்களில் சுமத்திவிட்டு இருந்தோம் என்பதே உண்மை.

எதோ ஈழத்தில் இருந்தபோது நாம் எல்லாம் எதோ டிக்கெட் எடுத்து சிங்கபூர் பூய் அங்குதான் பேசியதாகவும். ஈழத்தில் இருந்தவர்கள் பேசவில்லை என்றும்.............

ஜெயமோகனின் காட்டுக்குள் நின்ற வேதாளங்களுக்கு வேண்டுமானால் கதை அளக்கலாம் ......... அனால் நாமும் ஈழத்தில் பிறந்தோம் என்பதையே எழுதி இருக்கிறேன்.

அங்கு எல்லா உரிமையும் எமக்கு இருந்தது ..............

எல்லா தேவைகளும் இருந்தது..............

வாருங்கள் பேசுங்கள் கொஞ்சம் சுமைகளை சுமவுங்கள் என்ற சத்தம் யுத்த சத்ததிற்கு மேலாக இருந்ததது.

எமது போராட்டத்தில் முக்கிய பங்கை புலிகள் வகித்தாலும் ,ஏன் போராட்டம் தோற்றது என நினைக்கும் போது எல்லோரிலும் தான் கோபம் .

தோழர் என்று வாயால் மட்டுமே உச்சரித்தார்களே ஒழிய அதன் அர்த்தம அவர்களுக்கு தெரியவில்லை."சே" பார்க்கும்போது அதன் அர்த்தம் அவர்களுக்கிடையில் தெரிந்தது.

எமது கலாச்சார பின்னணியும் எமது பின்னடைவுகளுக்கு காரணமாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

எமது போராட்டத்தில் முக்கிய பங்கை புலிகள் வகித்தாலும் ,ஏன் போராட்டம் தோற்றது என நினைக்கும் போது எல்லோரிலும் தான் கோபம் .

தோழர் என்று வாயால் மட்டுமே உச்சரித்தார்களே ஒழிய அதன் அர்த்தம அவர்களுக்கு தெரியவில்லை."சே" பார்க்கும்போது அதன் அர்த்தம் அவர்களுக்கிடையில் தெரிந்தது.

எமது கலாச்சார பின்னணியும் எமது பின்னடைவுகளுக்கு காரணமாக இருக்கலாம்.

உண்மைதான்...........

உங்களுடைய தற்போதைய கருத்துகளில் பல மாற்றங்களை காண கூடியதாக இருக்கின்றது.

புலிகள் பிழையே செய்யவில்லை என்பது எங்களுடைய வாதமில்லை நாம் கூட இருந்து பார்த்தவர்கள் தவறும் தெரியும் .......... அதற்கான காரணங்களும் தெரியும்.

புலிகள் தவறை மட்டுமே செய்தார்கள் ...........

அங்கே செய்த அரசியல் தவறு........

இங்கே செய்த போர் முறை பழசு.........

என்ற வந்திகளைதான் வெறுக்கிறேன் . புலிகள் தோற்கவில்லை தமிழன் தோற்றான்!

இந்த அடிப்பையில் நின்றால்தான் உண்மை பேச முடியும்! தற்போது உங்களுடிய கருத்துக்களில் அதை காண கூடியதாக உள்ளது.

மாற்றம் ஒன்றுதான் இந்த உலகில் மாறாத ஒன்றாம். உண்மையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.