ஜெயவர்த்தனவின் ஆலோசனைகள்
இந்திரா காந்தியுடனான தனது சந்திப்பு நிறைவுபெற்று மூன்று வாரங்களின் பின்னர் ஆடி 23 ஆம் திகதி சர்வகட்சி மாநாட்டின் கட்சித் தலைவர்களுடன் கூட்டம் ஒன்றினை ஜெயார் நடத்தினார். இணக்கப்பாட்டிற்கு வரமுடியாத இரு விடயங்களினால் சர்வகட்சி மாநாட்டின் கலந்துரையாடல்கள் தடைப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஒருபகுதியினர் மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு மேலதிகமாக எதனையும் கொடுக்கக் கூடாது எனும் வேளை, இன்னொரு பகுதியினர் அதிகாரம் மிக்க பிராந்தியங்களுக்குக் குறைந்த எந்தத் தீர்வையும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறிவருகிறார்கள். ஆகவே, இவ்விரு பகுதியினரினதும் அடிப்படை கொள்கைகளைப் பாதிக்காவண்ணம் இரு பகுதியினரும் சந்திக்கக் கூடிய சமரச நிலைப்பாடு ஒன்றிற்கு வருவது அவசியம் என்று அவர் கூறினார். பின்னர் "இரண்டாவது சபையினை" அமைக்கும் ஆலோசனையினை ஜெயார் முன்மொழிய சர்வகட்சி மாநாட்டு உறுப்பினர்களும் அதனை ஏற்றுக்கொண்டார்கள். மேலும், ஏலவே அமைக்கப்பட்டிருந்த இரு குழுக்களும் சமர்ப்பிக்கவிருக்கும் அறிக்கையினை அடுத்துவரும் அமர்வில் விவாதிக்கலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
ஆனால், ஜெயார் முன்மொழிந்த இரண்டாவது சபை யோசனையினை எதிர்க்கட்சியான சுதந்திரக் கட்சி உடனடியாகவே நிராகரித்தது. "அதனை கருத்திக் கொள்ளக் கூடத் தேவையில்லை" என்று சிறிமாவோ கூறினார். இரண்டாவது சபைக்கான முன்மொழிவை ஆரம்பத்தில் அமிர்தலிங்கமும் அதிகம் விரும்பவில்லை. "இந்த ஆலோசனைகள் தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யப் போதுமானவை என்று நாம் நம்பவில்லை" என்று அமிர் கூறினார். ஆனால் லங்கா சம சமாஜக் கட்சியும், கம்மியூனிஸ்ட் கட்சியும் இந்த ஆலோசனையினை வரவேற்றிருந்ததுடன், நாட்டி வாழும் அனைத்து இனக் குழுமங்களினதும் கருத்துக்களும், விருப்பு வெறுப்புக்களும் இதற்குள் உள்வாங்கப்படவேண்டும் என்றும் அவை கேட்டுக்கொண்டன.
ஆவணி மாதத்தின் முதலிரு வாரத்தில் இரண்டாவது சபை பற்றிய கலந்துரையாடல்கள் இடம்பெற்று வந்தன. ஆவணி 17 ஆம் திகதி அரசியல் நடைமுறைபற்றிய குழுவின் அறிக்கையினை பிரேமதாச மாநாட்டில் முன்வைத்தார். ஆனால், அதிகாரப் பரவலாக்கம் தொடர்பான கலந்துரையாடலினை அவர் வேண்டுமென்றே தவிர்த்திருந்தார். அதிகாரப் பரவலாக்கம் நடைபெறப்போகும் அலகு மாவட்ட சபையா அல்லது மாகாணசபையா என்பதை மாநாட்டு உறுப்பினர்களே தீர்மானிக்க வேண்டும் என்று அவர் கூறினார். பிரேமதாச முன்வைத்த அறிக்கையினை சர்வகட்சி மாநாட்டு உறுப்பினர்கள் நான்கு நாட்களாக விவாதித்தனர்.
ஆவணி 21 ஆம் திகதி தான் வழங்கிய அறிக்கையில், மாவட்ட சபைகளை அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகு என்பதை தான் நிராகரிப்பதாக அமிர்தலிங்கம் கூறியிருந்தார். உயிர்வாழ்தலுக்கான பாதுகாப்பும், தமது சொத்துக்களைப் பாதுகாத்துக்கொள்ளுதலுமே தமிழர்களின் தற்போதைய அதிமுக்கியமான பிரச்சினைகளாக மாறியிருப்பதாக அவர் கூறினார். அன்றைய நாளுக்கு ஒருநாள் முன்னதாகக் கூட கிளிநொச்சியில் இரு விவசாயிகளைச் சுட்டுக் கொன்றுள்ள இராணுவம் இன்னுமொருவரை படுகாயப்படுத்தியிருப்பதாக அவர் குறிப்பிட்டார். அதற்கு முதல்வாரம் மன்னாரின் விவசாயக் கிராமம் ஒன்றிற்குள் நுழைந்த இராணுவம், அங்கிருந்த அப்பாவி மக்களைக் கொன்று, அவர்களின் சொத்துக்களை அழித்து, அவர்களின் பெறுமதியான பொருட்களைக் களவாடிச் சென்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார் (இப்படுகொலைகள் குறித்த மேலதிக விபரங்கள் இனிவரும் அத்தியாயங்களில் விபரிக்கப்படும்).
"தமிழர்களின் தாயகத்தின் ஒருமைப்பாட்டையும், தனித்தன்மையினையும் பாதுகாப்பதூடாகவே தமிழர்கள் தமது வாழ்தலுக்கான பாதுகாப்பையும், சொத்துக்களுக்கான பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்" என்று அமிர்தலிங்கம் அங்கு கூறினார். "தமிழ் மக்கள் தமது தாயகத்தில் அரசியல் அதிகாரத்தையும், உள்ளக சட்டம் ஒழுங்கு மீதான அதிகாரத்தையும், பொருளாதார அபிவிருத்தி மற்றும் காணி பிரச்சினைகள் தொடர்பாக தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தையும் கொண்டிருப்பது அவசியமாகும். இத்தகைய பொறிமுறையினை உள்ளடக்கிய ஆலோசனையொன்றினை சர்வகட்சி மாநாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்வைத்திருக்கிறது. ஆகவே, இந்த பொறிமுறையினைக் கொண்டிராத எந்த அரசியல்த் தீர்வையும் தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அவர் மேலும் கூறினார்.
மேலும் இரண்டாவது சபைக்கான முன்மொழிவையும் இரு காரணங்களை முன்வைத்து அமிர்தலிங்கம் எதிர்த்திருந்தார். முதலாவது காரணம், இரண்டாவது சபை எனும் கருதுகோள் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் அடிப்படை நிர்வாக அலகான மாவட்ட சபைகளை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டிருந்தது. இரண்டாவது காரணம், இரண்டாவது சபை உருவாக்கப்படுவதன் நோக்கமே மத்தியில் குவிக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தினை உறுதிப்படுத்தி அதனை மேலும் பலப்படுத்தும் நோக்கத்திற்காகவே முன்வைக்கப்படுகிறது என்பதாகும்.
அமிர்தலிங்கம் கூறியதன்படி, இரண்டாவது சபையின் முன்மொழிவே மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்தை பலப்படுத்துவதும், நடைமுறையில் இருக்கும் பொறிமுறையினை நீட்டிப்பதும்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், இரண்டாவது சபை எனும் அமைப்பை வெறும் பிரச்சார அழகுப் பொருளாகவே அரசாங்கம் பாவிக்க விரும்பியது. சிங்கள மக்களுக்கு இருக்கும் முற்றான ஆட்சியதிகாரத்தினை பரவலாக்குவதற்குப் பதிலாக, அதனை மேலும் மேலும் மத்திய அரசின் கைக்குள் இறுகச் செய்வதுதான் இதன் உண்மையான நோக்கம். மாவட்ட அதிகார சபைகளுக்கும் அப்பால் சென்று இலங்கையரசு தமிழர்களுக்கு அதிகாரங்களை வழங்கவே இரண்டாவது சபையினை உருவாக்கியிருக்கிறது என்று சர்வதேசத்தை அரசு ஏமாற்ற முயலும் அதேவேளை சிங்களவர்கள் ஏற்கனவே கொண்டிருக்கும் நாடு முழுவதற்குமான ஆட்சியதிகாரத்தை மேலும் மேலும் பலப்படுத்திக் கொள்ளவும் இதனைப் பாவிக்க நினைத்தது.
தன்னால் அமைக்கப்பட்ட குழுக்கள் முன்வைத்த அறிக்கையினையும், இரண்டாவது சபைக்கான கருத்துக்கள் தொடர்பாகவும் ஆவணி 21, 29 மற்றும் புரட்டாதி 1, 3 ஆகிய நாட்களில் சர்வகட்சி மாநாட்டு கட்சிப் பிரதிநிதிகளுடன் ஜெயார் உரையாடினார். இறுதிநாளான புரட்டாதி 3 ஆம் திகதி அதிகாரப் பரவலாக்கம் செய்யப்படவேண்டிய அலகு குறித்து சபை உறுப்பினர்களால் விவாதிக்கப்பட்டது.
மாவட்ட சபை மற்றும் மாகாண சபை நடைமுறையினை முற்றாக நிராகரித்த அமிர்தலிங்கம், அதிகாரம் மிக்க பிராந்திய அலகே தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியது என்று கூறினார். "அதிகாரம் மிக்க பிராந்திய அலகு எனும் தமிழர்களின் கோரிக்கை அரசால் நிராகரிக்கப்படுமிடத்து, தமிழர்களின் உயிர்களைப் பாதுகாக்கவும் அவர்களது உடமைகளைப் பாதுகாக்கவும் ஒன்றுபட்ட, தனியான தமிழர்களின் தாயகத்தினை விடுவிப்பதற்கான சாத்வீக வழிப் போராட்டத்திற்குள் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதைத் தவிர தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வேறு தெரிவுகள் இல்லை" என்று அவர் மேலும் அரசை எச்சரித்தார். அமிர்தலிங்கம் முன்வைத்த பிராந்திய அலகுக் கோரிக்கையினை குமார் பொன்னம்பலமும் தொண்டைமானும் ஏற்றுக்கொண்டனர்.
சர்வகட்சி மாநாட்டின் அடுத்த அமர்வு புரட்டாதி 21 ஆம் திகதி இடம்பெற்றது. தனது அறிக்கையினை சபையில் முன்வைத்த ஜெயார், புரட்டாதி 30 ஆம் திகதிக்கு அதனை ஒத்திவைத்தார். எட்டுப் பக்கங்கள் அடங்கிய அவரது அறிக்கை கடந்த எட்டு மாதங்களாக இடம்பெற்றுவரும் மாநாட்டில் எட்டப்பட்ட விடயங்கள் குறித்துப் பேசியிருந்தது. மேலும், நான்கு விடயங்கள் குறித்து உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். அவையாவன,
1. அடிமட்ட ஜனநாயக வழி அமைப்புக்களுக்கான அதிகாரம் அதிகப்படுத்தப்பட்டிருக்கிறது.
2. நாடற்றவர்கள் எனும் நிலையினை ஒழிப்பது.
3. பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் முற்றாக அழிப்பது.
4. இரண்டாவது சபையினை உருவாக்குவது.
ஒரு மாகாணத்திற்கு இருக்கும் ஒன்றிற்கு மேற்பட்ட மாவட்ட சபைகள் இணைந்து, ஒருங்கிணைந்த மாவட்டங்களாக செயற்பட முடியும் என்றும், இவ்வாறான மாவட்ட சபைகளுக்கு இரண்டாவது சபையினூடாக சட்டவாக்கல் அதிகாரங்கள் வழங்கப்பட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
சர்வகட்சி மாநாட்டின் மிகப்பெரிய வெற்றி என்று இதனை அரச ஆதரவாளர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகு குறித்து பேச்சுக்களில் முன்னேற்றம் கண்டிருப்பதாக டெயிலி நியூஸ் எக்காளப்படுத்திச் செய்தி வெளியிட்டிருந்தது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியோ இதுகுறித்து மிகுந்த அதிருப்தியடைந்திருந்தது.
புரட்டாதி 30 ஆம் திகதி அமிர்தலிங்கம் தனது அதிருப்தியை வெளியிட்டார். மாவட்ட அபிவிருத்திச் சபைகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட முடியுமென்றாலும் கூட, அவை தற்போதும் வெறும் அடிப்படை அலகுகள்தான் என்று அவர் கூறினார். மாவட்டங்களுக்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும் கூட, ஒருங்கிணைந்த மாவட்டங்களின் அலகுகளுக்கு தனியான அதிகாரம் ஏதும் பகிரப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். ஆனாலும், முன்வைக்கப்பட்டிருக்கும் பரிந்துரைகளை முற்றாக நிராகரித்துவிடவும் அவர் விரும்பவில்லை. இவற்றினை முற்றாக நிராகரிக்காது இருப்பதன் மூலம் தொடர்ச்சியான பேரம்பேசலுக்கான கதவுகளை திறந்தே வைத்திருக்கலாம் என்று அவர் எண்ணினார்.
வடக்கையும் கிழக்கையும் இணைத்த தமிழ்பேசும் தனியான அதிகாரம் மிக்க அலகே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வாக அமையும் என்று அவர் ஆணித்தரமாக விவாதித்தார்.
இதன்பின்னர் மாநாட்டினை கார்த்திகை 15 ஆம் திகதிவரை ஜெயார் ஒத்திவைத்தார். ஆனால், ஜெயார் எதிர்பார்த்ததற்கு மாறாக புரட்டாதி, ஐப்பசி ஆகிய மாதங்களில் வன்முறை தலை விரித்தாடியது. குறிப்பாக கிழக்கிற்கும் வன்முறைகள் பரவத் தொடங்கியிருந்தன.