Jump to content

Kavi arunasalam

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1735
  • Joined

  • Last visited

  • Days Won

    42

Everything posted by Kavi arunasalam

  1. ஆக குழந்தைகளின் வளர்ப்பு பற்றிய சிந்தனை இல்லை
  2. கட்டுப்பாடற்ற வாழ்க்கைக்குள் இருந்தவள், முற்றிலுமாக மாறி வெற்றிகரமான ஒரு பெண்ணாக இப்பொழுது இருக்கிறாள். காரணம் அவளுடய மகன். சொனி டெய்லர்(39) அவுஸ்திரேலியா சிட்னியைச் சேர்ந்தவள் . ஒரு ஒன்லைன் நிறுவனத்தின் சொந்தக்காரி. மில்லியன் கணக்கில் இன்று சம்பாதிக்கும் அவளது இளமைக் காலம் நன்றாக இருக்கவில்லை. நியூ சவுத் வேல்ஸ்தான் அவளது இருப்பிடம். பெற்றோருடன் அங்கிருந்துதான் அவள் வளர்ந்தாள், படித்தாள். அவளிடம் எப்போதும் ஒரு பயம் கூடவே இருந்தது. அந்தப் பயம் வெளியிடங்களில் மட்டுமல்ல அவளது வீட்டுக்குள்ளேயும் அவளுடன் இணைந்திருந்தது. இந்த உலகம் தனக்குப் பாதுகாப்பானதுதானா? என்ற ஒரு அச்சத்துடன்தான் அவளது பள்ளிப் பருவம் போய்க் கொண்டிருந்தது. பயந்து பயந்து வாழ்ந்து கொண்டிருந்தவள் இன்று எப்படி ஒரு நிறுவனத்தைத் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறாள். அதற்கு ஒரு கதை இருக்கிறது. ஒரே நாளில் எவரும் போதைப் பொருளுக்குள் சடாரென்று வீழ்ந்து விடுவதில்லை. ஒருவர் வாழும் சூழலே அதைத் தீர்மானிக்கிறது.அவளுக்கும் அப்படித்தான். அவள் இருந்த சூழல் அவளை போதைப் பழக்கத்துக்குள் இழுத்துவிட்டது. அவளுடைய காதலன் போதைப் பொருள் பாவித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அவளைவிட போதைப் பொருள் முக்கியமானதாக இருந்தது. அவளுக்கோ அவன்தான் முக்கியம். விளைவு அவனுடன் இணைந்து போதைப் பொருள் பாவிக்க ஆரம்பித்தாள். நாளடைவில் தினமும் தனக்குத் தானே ஊசி மூலம் போதை மருந்தை ஏற்றிக் கொள்ளும் நிலைக்கு அவள் வந்து விட்டாள். பள்ளிப் படிப்பு பாதியிலே போனது. வீட்டை விட்டுத் துரத்தப்பட்டு வீதியிலே வந்து வீழ்ந்தாள். அப்பொழுதுதான் உணர்ந்தாள் தான் தாயாகப் போகிறாள் என்பதை. இந்தக் குழந்தையை நல்லபடி பெற்றெடுக்க வேண்டும். எந்த நிலையிலும் அதை இழக்கக் கூடாது. நல்ல தாயாக இருக்க வேண்டும். இந்தச் சமூகத்தில் அதை நல்ல முறையில் வளர்க்க வேண்டும். அந்தக் குழந்தைக்கு தான் ஒரு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்றெல்லாம் தீர்மானித்துக் கொண்டாள். ஒரு நிறுவனத்தில் சாதாரண பணியாளராக வேலையைத் தொடங்கினாள். அங்கேயே அவளது திறமையால் மேலாளர் நிலைக்கு வந்து, தொடர்ந்து சமூகவியலில் தேர்ச்சி பெற்றாள். அதன் பிறகு பட்டப் படிப்பை மேற்கொண்டாள். வாழ்க்கையைப் பற்றிய பயம் சொனி டெய்லரிடம் இப்பொழுது இல்லை. இன்று ஒரு சொந்த இணைய நிறுவனத்தில் மில்லியன் கணக்கில் பணத்தை ஈட்டுவதற்கு காரணம் சொனி டெய்லரின் ஒரே மகன் ஒஸ்கார் தான் “ஒஸ்கார் எனக்கு மகனாக வந்திருக்காவிட்டால் இன்று இந்த நிலையில் நான் இருந்திருக்க மாட்டேன். அவன்தான் எனக்கு இந்த வழியைக் காண்பித்தான்” என்கிறார் தனி ஒருத்தியாக தன் மகனை வளர்த்து சாதித்த சொனி டெய்லர்.
  3. யூன் மாதம் இது சம்பந்தமான பிபிசியின் செய்தி யாழில் இணைக்கப்பட்டிருந்தது
  4. தவறேதும் இல்லாமல் பெற்றோர்களிடம் இருந்து குழந்தையை யேர்மனியில் பிரிக்க மாட்டார்கள். பிழை பெற்றோரிடம் இருப்பதால்தான் இந்த நிலை வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். இந்தியச் சட்டங்கள் போல் அல்ல யேர்மனியச் சட்டங்கள். எந்த ஒரு நாட்டுக்குப் போனாலும் அந்தந்த நாடுகளின் சட்டங்களுக்கு நாங்கள் கட்டுப்பட வேண்டியவர்கள் என்பதை கவனத்தில் எடுக்க வேண்டும்.
  5. “நான் 12 வருடங்களாக ஒருவனால் சிறை பிடிக்கப்பட்டிருக்கிறேன். என்னைக் காப்பாற்றுங்கள்” என்று ஞாயிற்றுக் கிழமை யேர்மனி வீஸ்பாடன் நகரப் பொலிஸாரின் அவசர இலக்கத்துக்கு ஒரு தொலைபேசி வந்தது.தொலைபேசியில் பேசியது ஒரு பெண். நீண்ட காலமாக ஒரு வீட்டில் அடைக்கப்பட்டிருந்ததாக அவர் தந்த இடத்தின் முகவரி பிரான்ஸ் போர்பாக் (Forbach) என்ற நகரத்தில் இருந்தது. வீஸ்பாடன் பொலிஸாரின் தகவலைப் பெற்று, மறுநாள் திங்கட்கிழமை குறிப்பிட்ட வீட்டுக்கு பிரான்ஸ் பொலிஸார் சென்ற போது அவர்களை வீட்டுக்கு உள்ளே அனுமதிக்க அங்கிருந்த ஆண்(55) கடுமையாக மறுத்தான். ஆனாலும் பொலிஸார் வலுக்கட்டாயமாக வீட்டினுள் சென்று பார்த்த போது, கம்பிகளால் கட்டப் பட்டிருந்த தடுப்பு யன்னலையும், ஒரு வாங்கிலையும் கண்டார்கள். அங்கே சோர்வடைந்த நிலையி்ல், தலை மொட்டையடிக்கப்பட்டு நிர்வாணமாக ஒரு பெண்(53) இருந்தாள் “அந்தப் பெண்ணைப் பார்க்கும் போது குறைந்தளவு உணவே அவளுக்குத் தரப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிந்தது. அவளது எலும்புகளில் முறிவுகள் இருக்கலாம். 2011இல் இருந்து சிறைபிடிக்கப்பட்டு பாலியல் தொல்லைகளை அவள் அனுபவித்திருக்கிறாள் என்பது விசாரணையில் தெரிய வந்தது. அவளுடைய சுகாதார நிலை மோசமாக இருந்ததால் உடனடியாக அவளை வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்திருக்கிறோம். அந்த ஆணைக் கைது செய்து விசாரணை மேற்கொள்கிறோம்” என பொலிஸ் தரப்பில் சொல்லப்பட்டதாக பிரான்ஸ் ஊடகமான BFMTV தெரிவித்திருக்கிறது. “அந்தப் பெண் அவனிடம் இருந்து தொலைபேசியைக் களவாடி அதன் மூலமாக பொலிஸுக்கு அவசர அழைப்பை மேற்கொண்டிருக்கிறாள். அவர்கள் பிரான்ஸ் பொலிஸாருக்குத் தகவலைக் கொடுத்திருக்கிறார்கள். அந்த ஆணும் ஒரு யேரமனியர்தான். சம்பவம் நடந்த இடமான Forbach, யேர்மனி சார்புறூக்கன் நகரில் இருந்து 10 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த ஆண் தான் செய்த செயல்களை எல்லாம் திகதி வாரியாக ஒரு குறிப்பேட்டில் எழுதி வைத்திருந்ததுதான்” என பிரான்ஸ் ஊடகமான RMC குறிப்பிடுகிறது.
  6. கொஞ்ச நாட்களாக கோபிசங்கரை காணவில்லை என்று யோசித்தேன். இப்பொழுதுதான் தெரிகிறது டொக்டருக்கு காய்ச்சல் என்று. இதை வாசிக்கும் போது, பழைய நினைவுகள் வந்து போகிறது. காய்ச்சல் என்றவுடன், பாலில் சீனி கலந்து அதற்குள் பாணை ஊறவைத்து,அதை தோசைச்சட்டியில் வாட்டி எடுத்துத் தரும் அம்மா முன்னால் வந்து நிற்கிறார். நன்றி Dr.கோபிசங்கர்
  7. பெரிய தொழில் நிறுவனங்களை வாடிக்கையாளர்களாகக் கொண்டிருந்ததுதான் புரொசேகுயர் என்ற நிறுவனம் . யேர்மனியில் ஸ்ருட்கார்ட் நகரில் அமைந்திருந்த அந்த நிறுவனம், தனது வாடிக்கையாளர்களின் நிலையங்களுக்கு சென்று அவர்களின் பணங்களைத் திரட்டி பாதுகாப்பாக வைத்திருந்து அவர்கள் தேவைக்கு ஏற்ப மீண்டும் வழங்கிக் கொண்டிருந்தது. அந்த நிறுவனத்தில்தான் மியர்னேசா வேலை செய்து கொண்டிருந்தாள். 42 வயதான மியர்னேசா தன்னை எப்பொழுதும் அழகாகக் காட்டிக் கொண்டாள்.. வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்பது அவள் விருப்பம். ஆனாலும் துணையின்றித் தனியாகத்தான் வாழ்ந்து கொண்டிருந்தாள். 28 வயதான ரோபேர்ட் அவளைத் தேடி வந்த போது, அமைதியான நதியாக இருந்த அவளது வாழ்க்கையில் ஆனந்த அலைகள் எழ ஆரம்பித்தன. ஒரு மாலை நேரம் மியர்னேசா நகர மையத்தில் உள்ள ‘பார்’ ஒன்றில் தனியாக இருந்து மதுவைச் சுவைத்துக் கொண்டிருந்தாள். எந்தவித அனுமதியும் பெறாமல் அவளுக்கு அருகில் இருந்த இருக்கையில் ஒரு இளைஞன் வந்து அமர்ந்தான். “ஹலோ, தனிமையில் இனிமையா?” நீண்ட நாள் பழகிய நண்பர்களிடம் இருந்து வரும் வார்த்தைகள் அந்த இளைஞனின் கேள்வியில் இருந்தன. முன்பின் தெரியாத ஒரு அழகான இளைஞன். அவனைப் பார்த்ததும், அவன் தன்னைவிட வயதில் குறைந்தவன் என்பது மியர்னேசாவுக்குத் தெரிந்தது. சிரித்துக் கொண்டாள். “உங்கள் தனிமைக்கு நான் இடைஞ்சல் செய்கிறேன் என்றால் சொல்லுங்கள் போய்விடுகிறேன்” “இல்லை. பிரச்சினை இல்லை. நீங்கள் இருக்கலாம்” அவள் தன்னை அறியாமல் அதைச் சொன்னாள். ஏதோ ஒன்று அந்த இளைஞனிடம் இருந்து அவளை ஈர்த்தது. “நன்றி. என்பெயர் ரோபேர்ட்……” அந்தச் சந்திப்பின் பின்னர், அடிக்கடி ரோபேர்ட்டை, மியர்னேசா சந்தித்தாள்.எப்போதும் அந்தச் சந்திப்புகள் எதேச்சையாக நடந்ததாகவே அவள் நம்பினாள். இப்பொழுதெல்லாம் மியர்னேசா தனது தனிமையை உணர்வதில்லை. ரோபேர்ட் அவளுடன் கூடவே இருந்தான். சந்தர்ப்பம் கிடைக்கும் நேரம் எல்லாம் மியர்னேசோவின் அழகை ரோபேர்ட் புகழ்ந்தான். “காதலுக்கு வயதில்லை. பிரான்ஸ் ஜனாதிபதியைப் பார்த்தியா?” என்று அவளுக்கு நம்பிக்கை தந்தான். மியர்னேசாவைச் சந்திக்குப் போதெல்லாம் ஏதாவது ஒரு உயர்ந்த பரிசுப் பொருள் ஒன்று ரோபேர்ட்டின் கையில் இருக்கும். “வாழ்க்கை இனிமையானதுதான். பணம் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். நீயாவது வேலை இடத்தில் கட்டுக் கட்டாகப் பணத்தைப் பார்க்கிறாய். நாலு நோட்டுக்களை ஒரு சேரப் பார்ப்பதே எனக்கு குதிரைக் கொம்பு” “பணம் இருந்தால் நல்லதுதான். அது சும்மா கிடைக்காது” “கிடைக்கும். நீ நினைச்சால்” “எப்பிடி?” “உன் வேலை இடத்தில் இருந்து எடுத்திடு” “எனக்கு சினிமா காட்டுறியா? எவ்வளவு கமரா அங்கே இருக்கு? ஒரு ‘தாள்’ கூட எடுக்கேலாது” பணத்தைப் பற்றிய முதல்நாள் பேச்சில் அவள் கொஞ்சம் நகர்ந்திருப்பதை ரோபேர்ட் உணர்ந்தான். தொடர்ந்த சந்திப்புகளில் அவன், அவள் அழகைப் பற்றி பேசிவிட்டு அடுத்ததாகப் பணத்துக்கு தாவிவிடுவான். கொஞ்சம் கொஞ்சமாக ரோபேர்ட்டின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் மியர்னேசா வந்து சேர்ந்து விட்டாள். ஒரு வெள்ளிக்கிழமை, மதியம் தாண்டி, நேரம் மெதுவாக மாலைக்குள் நகர்ந்து கொண்டிருந்தது. மியர்னேசா நேரத்தைப் பார்த்தாள் 15:10. வார விடுமுறை வருவதால் பலர் 3மணிக்கே வேலையை முடித்து விட்டுப் போய் விட்டார்கள். அவளும் மூன்று மணிக்கு வேலையை முடித்து வீட்டுக்குப் போயிருக்க வேண்டும். ஆனால் அன்று அவள் பத்து நிமிடங்கள் கூடுதலாக எடுத்துக் கொண்டாள். பணம் இருக்கும் அறைக்குள் சென்று பணப் பாதுகாப்புப் பெட்டகத்தைத் திறந்து அங்கிருந்த பணத்தை எடுத்து ஒரு அட்டைப் பெட்டிக்குள் அடுக்கிக் கொண்டாள். உடை மாற்றும் அறைக்குள் போய் அந்தப் பணக்கட்டுகளை தனது sports bagக்குள் மாற்றிக் கொண்டாள். கட்டுக் கட்டாக இதுவரை பார்த்த பணம், இப்பொழுது அவள் தோள் பட்டையில் தொங்கிக் கொண்டிருந்த பைக்குள் இருந்தன. வழமைபோல் காவலாளிக்கு மாலை வாழ்த்துக்களை சொல்லிப் போகிறவள் அன்று வார இறுதி நாட்களுக்கும் சேர்த்து வாழ்த்துச் சொல்லி விட்டு, வீதியில் நின்ற ரோபேர்டடின் காரில் ஏறிக் கொண்டாள். “குற்றம் என்று தெரிஞ்சும் பிழையான வேலை ஒன்றை செய்திட்டன். உன்னால்தான் எல்லாம். எனக்குப் பயமாக இருக்கு” “இது உனக்கு முதல் களவு…” “அப்பிடி எண்டால் நீ முந்தியும் களவு செய்திருக்கிறாயா?” ரோபேர்ட் பெரிதாகச் சிரித்தான். “அப்பிடி எல்லாம் இல்லை. நான் உன்னைப் போல பதட்டப்பட இல்லை அவ்வளவுதான்” “அங்கே கமராவிலே எல்லாமே பதிஞ்சிருக்கும்” “நாங்கள்தானே எங்களுடைய அடையாளங்களை மாற்றிக் கொள்ளப் போகிறோமே! பயப்படுறதுக்கு எதுவுமே இல்லை. வழக்கம் போலை பூட்டிப் போட்டு வந்தனிதானே? பணத்தைக் காணவில்லை எண்டு தெரிஞ்சாப் போலைதான் கமராவைப் பாப்பாங்கள். அதுவரை எங்களுக்கு நேரம் இருக்கு. அதாவது திங்கட்கிழமை காலை மட்டும்” “இப்ப எங்கே போகிறோம்?” “சேர்பியாவுக்கு” சேர்பியாவுக்குப் போய் அங்கே பெயர்மாற்றம் செய்யப்பட்ட கடவுச் சீட்டைப் பயன்படுத்தி வேறு ஒரு நாட்டில் புது வாழ்வை தொடங்குவதுதான் அவர்களின் திட்டமாக இருந்தது. சேர்பியாவிற்கு போனதன் பின்னர் மியர்னேசாவுக்கு, அவன் தன்மேல் கொண்டிருப்பது காதல் அல்ல என்பது புரிய ஆரம்பித்தது. ஆடம்பரமாக தன்னுடைய வாழ்க்கையை கற்பனை செய்தவளுக்கு, எல்லாமே இடிந்து போய்விட்டது. ரோபேர்ட் அவளைத் தவிர்க்க விரும்புவது மெதுவாகப் புரிய ஆரம்பித்தது. எப்பொழுதும் அவளது அழகைப் புகழ்ந்து பேசுபவன், அவளது முகத்தைப் பார்ப்பதையே இப்பொழுது தவிர்த்தான். வேறு ஒரு பெயரில் அவளுக்கு கடவுச் சீட்டு ஏற்பாடு செய்து தருவதாகச் சொன்னவன், இப்போது அதைப் பற்றிக் கேட்டால் சத்தம் போட ஆரம்பித்தான். அவளை அவன் பார்க்கும் பார்வையில் ஏளனம் மிகுந்திருந்தது. அவனது உதட்டில் தெரிந்த இழிவான புன்னகை அவளைப் பயமுறுத்தியது. அவனுடன் தொடர்ந்து இருப்பது ஆபத்தானது என்பது அவளுக்குப் புரிய ஆரம்பித்தது. காதல் என்பது அவனுக்குப் பணத்தின் மேல்தான். இப்போது அவனது கையில் அது வந்து சேர்ந்து விட்டது. இனி அவள், அவன் மடியில் தேவையில்லை. பணத்துக்காகத்தான் தன்னுடன் அவன் பழகி இருக்கிறான் என்பது அவளுக்குத் தெளிவானது. அமைதியான நதியாக இருந்து, அலைகள் எழுந்து இப்பொழுது தேங்கி நின்ற நீராகி வாழ்வு அவளுக்குச் சகதியாகிப் போனது. “ஒருவேளை அவன் தன்னை ஏதாவது செய்துவிட்டால்? யாருடைய துணையும் இல்லாமல் தனியாக இருக்கிறேன். குற்றவாளியாகத் தேடப்படும் பட்டியலில் என் பெயர் இருக்கிறது” நினைக்கும் போதே அவளுக்கு பயம் ஏற்பட்டது. அவளைப் பற்றிய தகவல் தந்தால் 50,000யூரோக்கள் சன்மானம் தருவதாக அறிவிப்பும் வந்திருந்தது. அவளது உயரம்,அகலம் தொட்டு அங்க அடையாளம், உடலில் எங்கெல்லாம் பச்சை குத்தியிருக்கிறாள் என்ற விபரங்களோடு புகைப்படமும் இணையத்தில் வெளியிட்டிருந்தார்கள். வெளியில் அவளால் நடமாட முடியவில்லை. வீட்டின் உள்ளே மரணபயம். ரோபேர்ட்டை விட்டு ஓடிவிடு என்ற எச்சரிக்கையை அவள் மூளை விடுத்தது. மொன்ரனேர்குரோவுக்கு இடம் மாறி, மியர்னேசா தன்னை மறைத்துக் கொண்டாள். ஒரு சட்டத்தரணியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது நிலமையைச் சொன்னாள். “எனது கட்சிக்கார், கொள்ளைக்காகத் தூண்டப்பட்டார். அவர் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டதை முழுமையாக ஒப்புக் கொள்கிறார்” என்று சட்டத்தரணி யேர்மனிய பொலிஸுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். ஸ்ருட்கார்ட் நகர நீதிபதியின் ஒப்புதல் மற்றும் மொன்ரனேர்குரோ அரசாங்கத்தின் உதவியுடன் யேர்மனியப் பொலிஸார் மியர்னேசாவுக்கான பயண ஒழுங்கைச் செய்தார்கள். ஸ்ருட்கார்ட் விமான நிலையத்தில் வந்து இறங்கிய மியர்னேசாவை சந்திக்க பொலீஸார் காத்து நின்றார்கள். மியர்னேசாவுக்கு ஏழு மாதங்கள் தடுப்புக் காவலில் போனது. ஏழு மாதங்களின் பின்னர் நடந்த வழக்கில், “சில கண்மூடித் தனமான காதல்கள் முட்டாள்தனமான முடிவுகளை எடுக்கும். மியர்னேசாவுக்கு மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை” என நீதிபதி தீர்ப்பு வழங்கினார். ரோபேர்ட்? அவன் விரும்பிய வாழ்க்கை அவனுக்கு கிடைத்து விட்டது. அப்படியானால் மியர்னேசாவுக்கு? ஒருவேளை, அவள் பணத்தை எங்காவது மறைத்து வைத்திருந்தால், விடுதலைக்குப் பின்னர் அவள் விரும்பிய வாழ்வு அவளுக்குக் கிடைக்கும். அது அவளுக்குமட்டும் தெரியும். உண்மைச் சம்பவம்
  8. தவறுதான் நிலாமதி. சுட்டிக்காட்டயதற்கு நன்றி. ஆங்கிலத்தில் ஜரினா என்பதே சரி. உக்ரைன் மொழியில் இறினா என வரவேண்டும்
  9. இறினா பிலோற்சேர்கோவெற்ஸ் (Iryna Bilotserkovets) உக்ரைனில் பெரிதும் அறியப்பட்டவள். சத்திரச்சிகிச்சை நிபுணர், தொலைக்காட்சித் தொகுப்பாளர், மொடல் அழகி எனப் பல பின்ணணிகள் உள்ள மூன்று பிள்ளைகளின் தாய். ரஸியா, உக்ரைன் போர் தொடங்கி மூன்றாவது நாள் தனது மூன்று பிள்ளைகளுடன் Kiew வீதியில் காரில் சென்று கொண்டிருக்கும் போது நடந்த தாக்குதலில் படுகாயம் அடைந்திருந்தாள். அதிர்ஷ்டவசமாக அவளது பிள்ளைகள் எதுவித காயங்களும் இன்றி தப்பித்துக் கொண்டார்கள். தாக்குதலில் இறினா தனது ஒரு கண்ணை இழந்திருந்தாள். அவளுக்கு நாலு தடவைகள் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவள் இனி உயிர்வாழ்வது கேள்விக்குறிதான் என வைத்தியர்கள் சொன்ன போதும், வாழவேண்டும் என்று அவள் உறுதியாக இருந்தாள். யேர்மனிக்கு அழைத்து வரப்பட்டு, பேர்லினில் இறினாவுக்குச் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப் பட்டது. மொடலாக இருப்பதால் அவளுக்கு நடந்தது அழகுக்கான சத்திரசிகிச்சை அல்ல, அது அவளை வாழ வைப்பதற்காக நடந்த சத்திரசிகிச்சை. சத்திரசிகிச்சைக்காக அவளது தலைமயிர் மழுங்க வழிக்கப்பட்டிருந்தது. ஒரு கண் இல்லை. உடல் முழுக்க வயர்களும் குழாய்களும் பொருத்தப்பட்டிருந்தன. காயங்களின் தழும்புகள், ஆங்காங்கே உடம்பில் போடப்பட்டிருந்த தையல்கள், மரக்கிளை போல் இரண்டாகப் பிரிந்திருந்த தாடை என எல்லாமே அவளைப் பயமுறுத்திய போதும், அவள் தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொண்டாள். இறந்து போவாள் எனப் பலராலும் கணிக்கப்பட்டவள் மெதுவாகத் தேறி வந்தாள். ஒரு கண்ணை மறைக்கும் இதய வடிவான உலோக மூடியுடன் உலோக பிக்னி அணிந்து உக்ரைன் பிளே போய் அட்டைப் படத்தில், கதாநாயகி ஆன மொடல் என்று இப்பொழுது காட்சி தருகிறாள். போர்ச் சூழலில் இடைநிறைத்தப்பட்டிருந்த உக்ரைன் பிளே போய், 18 மாதங்கள் கழித்து வெளியிட்ட முதல் சஞ்சிகையில் ‘பலமான பெண்கள்’ என்ற தலைப்பில் இறினாவின் அட்டைப்படத்தை வெளியிட்டிருக்கிறது. “போரில் காயம் அடைந்தாலும் வாழ்க்கையின் தாகத்தை இழக்காமல் எழுந்து வரும் உக்ரைனின் பெண்கள் என பிளே போய் காண்பிக்கிறது” எனச் சொல்லும் இறினா, தன் முக அழகை இழந்திருக்கலாம். உடல் அழகை இழக்கவில்லை எனக் கூறுகிறார். இறினா இப்பொழுது உக்ரைன் படைகளுக்கான நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
  10. நேற்று ஊர்வசி நடித்த அப்பாத்தா திரைப்படம் பார்த்தேன். ஊர்வசியின் 700வது திரைப்படம் என்று விளம்பரம் செய்திருந்தார்கள். படம் ஆரம்பத்தில் அமைதியாகப் போய்க் கொண்டிருந்தது. தனது மகன் கேட்டுக் கொண்டதற்காக சென்னை வருகிறார் ஊர்வசி. மகன் பாசத்தால் தாயைக் கூப்பிடவில்லை மாறாக அவன் குடும்பத்துடன் சுற்றுலா போகும் போது தனது நாயை கவனிக்கவே கூப்பிடுகிறான் என்ற கட்டத்தில் இருந்து படம் கலகலப்பாகப் போகிறது. ‘ஊர்வசி ஒரு நடிப்பு ராட்சசி’ என்று கமல்ஹாசன் ஒருதடவை சொல்லியிருந்தார். அது இந்தப் படத்திலும் தெரிகிறது. படத்தை பிரியதர்சன் இயக்கி இருந்தார். பழைய பாணியிலேயே படம் இருந்தது. ஆனாலும் பார்க்கும் போது அடுத்தது என்ன என்ற ஆர்வம் இருந்தது. குடும்பமாகப் பார்க்கலாம்.
  11. போடலாம். பிறகு அவர்களுடைய வீட்டில் பிரச்சனையாகிப் போய்விடும் சொல்லலாம். தமிழ்சிறி கோவிக்காமல் இருந்தால்.
  12. சமீப காலமாக ஆபிரிக்க நாடுகளில் இருந்து பலர் புது வாழ்வு தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு வருவது அதிகரித்துள்ளது. பலமில்லாத அரசுகள், பண வீக்கத்தின் உயரங்கள், வரண்டு போன நிலங்கள், வாழ்வில்லாத அவலங்கள், உள்நாட்டுக் கலவரங்கள் என அவர்கள் நிலமை மிகவும் மோசமானது. பல அபாயகரமான கடல் பயணங்கள் மூலம்தான் அவர்களது ஐரோப்பிய வருகை இப்பொழுது தொடர்கிறது. நைஜீரியா நாட்டில் இருந்து ஐரோப்பிய நாட்டுக்கு பயணிக்க விரும்பிய நால்வரைப் பற்றிய கதைதான் இது. நைஜீரியா நாட்டுத் துறைமுகத்தில் இருந்து யூன் 27 இல் புறப்பட இருந்த ஒரு சரக்குக் கப்பலின் சுங்கான்( rudder ) இல் நான்கு இளைஞர்கள் களவாக ஏறி அமர்ந்து கொண்டார்கள். அவர்களிடம் கடவுச் சீட்டு இல்லை. பணம் இல்லை. பத்து நாட்களுக்குப் போதுமான உணவும், ஐரோப்பாவை சென்றடைந்து விடுவோம் என்ற நம்பிக்கையும்தான் இருந்தது. ஆனாலும், கப்பல் பணியாளர்களால் தாங்கள் கண்டு பிடிக்கப் பட்டால் அவர்கள் தங்களை கடலில் தள்ளி விடுவார்களோ என்றொரு பயமும் இருந்தது. நான்கு பேர் சேர்ந்திருக்க நெரிசலான இடமாக சுங்கான் இருந்தது. கப்பல் நகர்ந்ததும், நான்கு பேரும் தண்ணீரில் விழுவதைத் தடுக்க, சுங்கான் பக்கத்தில் வலை இருந்த பகுதியில் தங்களைக் கயிற்றால் கட்டிக்கொண்டனர். ஆழ்ந்த தூக்கம் ஆபத்தானது என்பதாலும் இயந்திரத்தின் இரைச்சல் காரணமாகவும், அவர்களுக்குத் தூக்கம் குறைந்து போனது. குளிர், காற்று, கப்பலுடன் அலைகள் மோதித் தெறிக்கும் தண்ணீர் என இவைகளின் மத்தியில் பத்து நாட்கள் தாக்குப்பிடித்தார்கள். கொண்டுவந்த உணவும் தீர்ந்து விட்டது. இன்னும் எத்தனை நாட்கள் பயணம் என்றும் அவர்களுக்குத் தெரியாது. கப்பல் எப்பொழுது துறைமுகத்தை போய்ச் சேரும்? என்று யாரையும் கேட்க முடியாது. அடுத்து வந்த நாட்கள் பட்டினியுடன் போனது. ஒருவாறாக 14வது நாள் கப்பல் துறைமுகம் ஒன்றில் வந்து சேர்ந்தது. சுங்கானில் இருந்த நால்வரையும் கண்டு பிடித்துக் காப்பாற்றிக் கரையேற்றினார்கள். தங்களைச் சுற்றி நின்ற பொலிஸாரிடம் "இது எந்த நாடு?" என்று கேட்டார்கள். “பிரேஸில்” என்று பதில் வந்தது. நைஜீரியாவில் இருந்து ஏறக்குறைய 5600 கிலோ மீற்றர் தூரம் வரை, உயிரைப் பணயம் வைத்து, 14 நாட்கள் பயணித்து அட்லாண்டிக் கடலின் மறுபுறமாக பிரேஸிலின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள விற்றோரியா துறைமுகத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். பிள்ளையாரைப் பிடிக்கப் போய் குரங்கைப் பிடித்துக் கொண்டு நின்றார்கள். எங்களது பயணம் ஐரோப்பாவை நோக்கி இருந்தது. ஆகவே தங்களை திருப்பி நைஜீரியாவுக்கே அனுப்பி விடுங்கள் என நால்வரில் இருவர் பிரேஸில் அரசாங்கத்தைக் கேட்க, அவர்களுக்கான பயணத்தை பிரேஸில் அரசு செய்து கொடுத்தது. மற்ற இருவர்களான Matthew Yeye(38), Roman Ebimene(35) இருவரும் பிரேஸிலில் அரசிடம் அகதிக்கான விண்ணப்பங்களைக் கொடுத்துவிட்டு நம்பிக்கையுடன் காத்து நிற்கிறார்கள். ஒரு புது வாழ்வுக்காக, கற்பனை செய்து பார்க்க முடியாததும் மிகவும் பயங்கரமானாதும் ஆபத்தானதுமான வழிகளை மக்கள் தேர்ந்தெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்
  13. கம்பராமாயணம் படித்ததால் கண்ணதாசன் ஆத்திகரானார் என்பதெல்லாம் சும்மா. ஆனால் கம்பராமாயணத்தில் இருந்து எடுத்து பல திரைப்பாடல்களை எழுதி கண்ணதாசன் பணம் பார்த்தார் என்பதுதான் உண்மை. உதாரணத்துக்கு, பால் வண்ணம் பருவம் கண்டு…. நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றமில்லை… இட்ட அடி சிவந்திருக்க எடுத்த அடி கனிந்திருக்க… இப்படிப் பல இருக்கிறது
  14. பழங்கள்,சூரியகாந்தி விதைகளின் முளைகள், பழக்களிகள்,பழச்சாறுகள் போன்றவைதான் அவளது உணவாக இருந்தது. சைவ உணவு (vegan) உண்பவர் என்று சமூக வலைத்தளங்களில் பெரிதும் அறியப்பட்ட, ரஸ்யாவைச் சேர்ந்த Zhanna Samsonova இப்பொழுது உயிருடன் இல்லை. இறக்கும் போது அவளது வயது 39 மட்டுமே. ஐந்து வருடங்களாக கடுமையான உணவுக் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்த Zhanna Samsonova, அதை வலைத்தளங்களில் Zhanna D’Art என்ற பெயரில் பதிந்து வந்திருக்கிறார். அவர் எதனால் மரணமடைந்தார் என்பது அதிகாரபூர்வமாக இன்னும் வெளியிடப்படவில்லை. ரஸ்யாவில் இருந்து வெளிவரும் Vechernyaya Kazan பத்திரிகைக்கு அவரது தாயார், கொலோரா போன்ற ஒரு நோயால் Zhanna இறந்திருக்கிறாள் எனக் கூறியிருக்கிறார். அவள் சோர்வாக இருந்தாள். அவளது எடை சமீபத்தில் வெறும் 41 கிலோதான். அவள் கடைப்பிடித்த உணவுப் பழக்க வழங்கள் அதன் காரணியாக இருக்க வேண்டும் என அவர் பத்திரிக்கைக்கு மேலும் சொல்லியிருக்கிறார். “Zhanna அதிகமாக ஆசிய நாடுகளிலையே அதிலும் குறிப்பாக தாய்லாந்தில் அதிக நாட்களைச் செலவழித்திருக்கிறாள். சில மாதங்களுக்கு முன்னர் அவளை சிறீலங்காவில் நான் பார்த்த போது சோர்வு மிக்கவளாக இருந்தாள். ஒரு வைத்தியரைப் போய்ப் பார்க்கச் சொன்னேன். அதை அவள் கேட்கவில்லை. அவள் இறக்கும் நாளன்று ரஸ்யாவுக்குத் திரும்பத் தீர்மானித்திருந்தாள். ஆனால் அவள் திரும்பிவர முடியாத இடத்துக்குப் போய்விட்டாள்” என்று அவளது நண்பி தனது கவலையை வெளியிட்டிருக்கிறாள். உண்மையில் vegan ஆரோக்கியமானதா? vegan உணவு முறையை அதிலும் தீவிரமாக அதைக் கடைப்பிடிப்பவர்கள் இறைச்சி, மீன்,முட்டை,பால்,சீஸ்,தேன் போன்றவற்றை ஒதுக்கி விடுகிறார்கள். அவர்கள் முக்கிய ஊட்டச்சத்துக்களான விற்றமின் B12, விற்றமின் D, இரும்புச்சத்து, ஒமேகா-3, புரதம் ஆகியனஉடலில் சேருவதற்கான வழிகளைத் தேடவேண்டும். 02.08.2023
  15. யேர்மனியில் உள்ள Spalt நகரத்தில், ஓய்வூதியம் பெற்றுக் கொண்டிருக்கும் முதியவர் ஒருவர் குப்பைத் தொட்டிக்குள் காகிதக் கைக்குட்டையைப் போட்டதால் அவருக்கு 78 யூரோக்கள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. 10.06.2023 அன்று Klaus-Dieter Heidmann (65) க்கும் Marlies (66)க்கும் 40வது திருமணநாள். மதியம் ரெஸ்ரோரண்டில் சாப்பிட்டுவிட்டு Brombachsee அருகே கொஞ்சம் காற்று வாங்கிக் கொண்டு நடந்து வரலாம் என்று அவர்கள் தீர்மானித்துக் கொண்டார்கள். அவர்களுக்கு மதியச் சாப்பாடு சுவையாக இருந்தது. அடுத்தது நடைப்பயணம். நடந்து போகும் போது Enderndorf என்ற இடத்தில் Klaus-Dieter மூக்கைச் சீறி, காகிதக் கைக்குட்டையால் துடைத்து அங்கிருந்த குப்பைத் தொட்டிக்குள் போட்டார். அங்கேதான் பிரச்சனை உருவானது. நாய் மற்றும் குழந்தைகளது கழிவுப் பொருட்களைப் போடுவதற்காக Enderndorf இல் புதிதாக ஒரு குப்பைத் தொட்டி அமைக்கப் பட்டிருந்தது. அதற்குள்தான் அவர் தனது கைக்குட்டையைப் போட்டிருந்தார். அதை அவதானித்த நகரசபை ஊழியர்கள் "குப்பைகளைப் போடுவதற்கென்று தனியாக ஒரு குப்பைத் தொட்டி இருக்கிறது.. அதை விடுத்து இதற்குள் போட்டிருக்கக் கூடாது" என எதிர்ப்புத் தெரிவித்தார்கள். "வேண்டுமானால் அந்தக் காகிதக் கைக்குட்டையை நான் திருப்ப எடுத்து விடுகிறேன்" என Marlies சொல்லியிருக்கிறார்.அதற்கு அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. Klaus-Dieter, “குப்பையை வீதியில் போட்டால்தான் குற்றம். அது சுகாதாரக் கேடு. ஆனால் நான் குப்பைத் தொட்டிக்குள்தானே போட்டேன்” என்று அவர்களுடன் எவ்வளவோ வாதாடிப் பார்த்தார். நால்வரும் அவரது கூற்றைச் செவிமடுக்கவில்லை. அவரது அடையாள அட்டையை வாங்கி அவரது தகவல்களைப் பதிவு செய்து கொண்டு போய்விட்டார்கள். “நாயின் கழிவுப் பைகள் மற்றும் குழந்தைகள் டியப்பேர்ஸ்(diapers) போடுவதற்காக பிரத்தியேகமாக குப்பைத் தொட்டி அமைக்கப் பட்டிருக்கிறது. அதில் நீங்கள் குப்பையைப் போட்டது தவறு. அதற்கான குற்றப் பணமாக 78யூரோக்களை செலுத்துங்கள்” என நகரசபையிலிருந்து அவருக்குக் கடிதம் போட்டுள்ளார்கள். மேலும் இந்தத் தீர்ப்புக்கு எதிராக நீங்கள் எதிர் மனுத்தாக்கல் செய்யலாம் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்கள் . Klaus-Dieter ,“குழந்தை டியப்பேர்ஸ், காகிதம் எல்லாம் cellulose ஆல் ஆனதுதானே. நான் போட்ட காகிதக் கைக்குட்டையை மூக்கின் டியப்பேர்ஸ் என்று கருதலாம்தானே” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். நான் ஓய்வூதியம் பெறுபவன். என்னிடம் போதிய பணம் இல்லை. இப்பொழுது மேன் முறையீடு என்று போனால் அதற்குப் புறம்பாக பணம் செலவழிக்க வேண்டும் என்று எனது மனைவி சொல்கிறாள். போனது போகட்டும் என்று 78 யூரோக்களை தண்டமாக செலுத்தப் போகிறேன்” என்று அவர் மேலும் சொல்கிறார். தம்பதிகள் இருவரும்அடுத்த வருடம் தங்களின் 41வது திருமணநாளை வீட்டில்தான் கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.