Everything posted by ஏராளன்
-
நாம் செல்போன்களை அடிக்கடி மாற்றுவது ஏன்? ஒரு விரிவான அலசல்
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப் படம் கட்டுரை தகவல் பரத் ஷர்மா பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் 'ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் இந்த மொபைலை வாங்கினேன், இப்போது ஹேங் ஆகத் டொடங்கிவிட்டது.' 'கேலரி நிரம்பிவிட்டது, இந்த போனில் ஸ்டோரேஜில் பிரச்னை உள்ளது.' 'என்ன செய்வது என தெரியவில்லை, பழுதுநீக்கம் செய்ய வேண்டுமா?' 'இப்போது தள்ளுபடியில் மொபைல் கிடைக்கிறது, புதிதாக ஒன்றை வாங்கிவிடு.' 'இந்த பழைய மொபைலை என்ன செய்வது?' 'பாட்டிக்கு கொடுத்துவிடு அல்லது புதிய மொபைல் வாங்கும்போது கொடுத்துவிட்டால் எக்சேஞ்ச் ஆஃபரில் குறைந்த விலையிலேயே மொபைல் வாங்கிவிடலாம்.' டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் இருவரிடையே நடந்த இந்த உரையாடல், இந்தியாவில் மொபைல் போன் சந்தை குறித்த வெவ்வேறு சித்திரங்களை உணர்த்துகிறது. ஆனால், இது எப்போதும் இப்படி இருந்ததில்லை. ஜூஐ 31, 1995. இந்தியாவில் முதன்முறையாக மொபைல் போன் அழைப்பு ஒலி கேட்ட நாள் இது. அப்போதைய தொலைத்தொடர்பு அமைச்சர் சுக் ராம் மற்றும் மேற்கு வங்க முதலமைச்சர் ஜோதி பாசு இடையிலான முதல் மொபைல் அழைப்புக்கும் தற்போது 85.5% இந்திய குடும்பங்களில் குறைந்தது ஒருவராவது மொபைல் போன் வைத்துள்ளதற்கும் இடையில், இந்த சாதனம் இந்தியாவில் நீண்ட பயணத்தை சந்தித்துள்ளது. இந்த சாதனம் பேசுவதற்கு மட்டும் இப்போது பயன்படவில்லை. பலருக்கும் அது வங்கி சேவை, கேமரா, விளையாட்டு, வீடியோ அழைப்பு, வகுப்பறை மற்றும் தொலைக்காட்சியாகவும் உள்ளது. உலகளவில் மொபைல் போன் உற்பத்தி செய்யும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது, 300 தொழிற்சாலைகள் மொபைல் போன்களை உற்பத்தி செய்கின்றன என அரசு புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 33 கோடி போன்கள் உற்பத்தியாகின்றன, இதில் இறக்குமதி செய்யப்படும் மொபைல் போன்கள் கணக்கில் சேர்க்கப்படவில்லை. தற்போது, இந்தியாவில் சுமார் 100 கோடி மொபைல் போன்கள் பயன்பாட்டில் உள்ளன. உலகளவில் மூன்றாவது பெரிய ஸ்மார்ட்போன் சந்தையாக இந்தியா தற்போது உள்ளது. மலிவு விலை போன்கள் மற்றும் விலை அதிகமான பிரீமியம் போன்கள் வரை சந்தையில் விற்பனையாகின்றன. மொபைல் போன் மலிவாகிவிட்டதா? பட மூலாதாரம், Getty Images வாடிக்கையாளர்கள் ஏன் தங்கள் மொபைல் போன்களை அடிக்கடி மாற்றுகின்றனர் என்ற கேள்வி மனதில் எழுகிறது. மொபைல் போன்களின் விலை மலிவாகிவிட்டதா? மொபைல் போன்கள் நீடித்து உழைக்கக் கூடியதாக இல்லையா? பழைய மாடல் போன்களை போன்று வலுவானதாக இல்லையா? சாஃப்ட்வேர் அப்டேட்டுகள் மற்றும் ஹார்டுவேர் மாற்றம் ஆகியவற்றால் மொபைல் போன்களை மாற்றுவது அவசியமாகிறதா? வாடிக்கையாளரின் மனநிலை முற்றிலும் மாறிவிட்டதா? அல்லது இந்த அனைத்து விஷயங்களுமே உண்மையா? தொழில்நுட்ப நிபுணர் முகமது ஃபைசல் அலி கவுசா, இதை பெரிய மாற்றத்துடன் தொடர்புபடுத்துகிறார். அவர் கூறுகையில், "எலெக்ட்ரானிக் பொருட்கள் மீதான வாடிக்கையாளர்களின் நடத்தை குறிப்பிடத்தக்க அளவு மாறியுள்ளது. முன்பு, தந்தையோ அல்லது சில சமயங்களில் தாத்தாவோ தொலைக்காட்சியை வாங்குவர், அதையே மகன்கள் மற்றும் பேரக்குழந்தைகள் உபயோகிப்பார்கள். ஆனால், இப்போது ஒவ்வொரு தலைமுறைக்கும் பல தொலைக்காட்சிகள் உள்ளன. இது ஒரு தலைமுறை மாற்றம், அவர்களால் அதனை வாங்கவும் முடிகிறது" என்றார். மொபைல் போன்களை அடிக்கடி ஏன் மாற்றுகிறோம்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, செல்லுலார் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம், மொபைல் போன்களை மாற்றுவதற்கான ஒரு முக்கிய காரணமாகும். இதுகுறித்து கவுசா கூறுகையில், "ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரையில், அதன் தொழில்நுட்பம் தொடர்ந்து மாறிவருகிறது. 3ஜி, 4ஜி மற்றும் 5ஜி ஆகியவை உள்ளன, இன்னும் சில ஆண்டுகளில் 6ஜி வந்துவிடும். இதுதான் மொபைல் போன்களை மாற்றுவதற்கான முக்கிய காரணமாக உள்ளது. போனில் ஏதேனும் பிரச்னை இருக்கும், பேட்டரி சார்ஜ் சரியாக இருக்காது. இத்தகைய காரணங்களால் வாடிக்கையாளர்கள் மொபைல்களை மாற்ற வேண்டும் என கருதுகின்றனர்." என்றார். ஆனால், ஏன் இந்த பிரச்னை ஏற்படுகிறது? மொபைல் போன் பயன்பாடு மிக அதிகமாவதால், அது விரைவிலேயே செயலிழந்துவிடுகிறதா? கவுன்ட்டர்பாயின்ட் ரிசர்ச் எனும் உலகளாவிய தொழில்நுட்ப சந்தை ஆய்வு நிறுவனத்தின் ஆய்வு இயக்குநர் தருண் பதக் இதை சுட்டிக்காட்டுகிறார். அவர் கூறுகையில், "முன்பு, நாம் போனை பேசுவதற்கும் ஒருசில கேம்கள் விளையாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தினோம், சராசரியாக ஒரு நாளைக்கு 2 மணிநேரம் மட்டுமே பயன்படுத்தினோம். ஆனால், இப்போது, இந்தியாவில் சராசரியாக மொபைல் போன் உபயோகிக்கும் நேரம் ஆறு முதல் ஆறரை மணிநேரமாக உள்ளது, அதாவது மும்மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது ஒருநாளில் கால்வாசி நேரத்தை மக்கள் போன்களில் செலவழிக்கின்றனர். அதனால், பல ஆபத்துகளுக்கும் அவர்கள் ஆட்படுகின்றனர்," என்றார். கவுசா கூறுகையில், "ஸ்மார்ட்போன்கள் தொடர்ந்து பயன்பாட்டிலேயே உள்ளன. எப்போதும் அவை உங்கள் கைகளிலேயே உள்ளதால், அவை கீழே விழுவதற்கான வாய்ப்புகள் உள்ளன, இதனால் அவை சேதமாகின்றன. போனை உபயோகிக்கும்போது 19-20 நொடிகள் தாமதமானால் கூட, அதுகுறித்து புகார் கூறுகின்றனர்." என்றார். 2017ம் ஆண்டில், உலகளவில் 140-150 கோடி போன்கள் விற்பனையாகி, ஸ்மார்ட்போன் சந்தை விரிவடைந்தது. அது பின்னர் படிப்படியாக குறைய ஆரம்பித்தது. இப்போது, உலகளவில் 120 கோடி ஸ்மார்ட்போன்கள் என்ற அளவில் உள்ளது. தருண் பதக் பிபிசியிடம் கூறுகையில், "மக்கள் அதிகளவில் போனை பயன்படுத்துகின்றனர் என அர்த்தம். " என்றார். எனினும், வாடிக்கையாளர்கள் மொபைல் போன்களை மாற்றுவதற்கு பல காரணங்கள் இருப்பதாக நிபுணர்கள் ஒப்புக்கொள்கின்றனர். தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்து மதிப்பீடு செய்பவரும், சிஎன்பிசி-டிவி18 தொலைக்காட்சி தொகுப்பாளருமான ஷிபானி கரத் கூறுகையில், சாஃப்ட்வேர் அப்டேட், பேட்டரி செயலிழப்பு மற்றும் ஹார்டுவேர் கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் மொபைல் போன்கள் "பயனற்றதாகி” விடுகின்றன என்கிறார். ”ஆப்கள் மற்றும் செயல்பாட்டு அமைப்புகளுக்கு நாளடைவில் அதிக ஆற்றலும், ஸ்டோரேஜும் தேவைப்படுகின்றன, எனவே பழைய மொபைல் போன்கள் நீடித்து உழைப்பதில்லை" என்றார். ஷிபானியின் கூற்றுப்படி, பழைய மொபைலுக்கு புதிய மொபைலை வாங்குவது அல்லது புதிதாக மொபைல் வாங்குவது என்பது முற்றிலும் இயல்பானது அல்ல, நீண்ட ஆயுளை விட புதிய நவீன வடிவமைப்பை நுகர்வோர் விரும்புவதும் காரணமாகும். வாஷிங் மெஷின் அல்லது மைக்ரோவேவ் போன்றவை பத்தாண்டுகளுக்கு ஒருமுறையே வாங்கப்படுகின்றன, மாறாக, மொபைல் போன் தயாரிப்பு என்பது லாபத்தைத் தொடர்ந்து பெறும் சாதனமாக உள்ளது. "மொபைல் போன்கள் தொடர்ந்து வேலை செய்தாலும், அப்டேட் நின்றுவிட்டால் அவை பயனற்றதாகிவிடுகின்றன," என ஷிபானி பிபிசியிடம் கூறினார். "சில நிறுவனங்கள் ஆறு ஆண்டுகளுக்கு சாஃப்ட்வேர் அப்டேட் மற்றும் பாதுகாப்பு இணைப்புகளை வழங்குகின்றன, ஆனால் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவானது. பலரும் தங்கள் போன்களை 3-5 ஆண்டுகளுக்கு வைத்துக்கொள்கின்றனர். ஆனால், முன்பு போன்களை வாங்குவது செலவுகரமானதாக கருதப்பட்டது, இப்போது அப்படியல்ல." ஷிபானி கருத்துடன் தருண் பதக்கும் ஒப்புக்கொள்வதாக தெரிகிறது. அவர் கூறுகையில், "ஒரு விஷயம் உண்மை: பேட்டரிகளைப் போன்று போனும் நிறைய மாறிவிட்டது. வேகமாக சார்ஜ் ஏற்றும் வசதிகள் வந்துவிட்டன. பேட்டரியை சார்ஜ் செய்யும் சுழற்சிகள் மாறிவிட்டன. பேட்டரி செயல்பாடு 3-4 ஆண்டுகளில் குறைந்துவிடும். சில நிறுவனங்கள் மட்டுமே 5 அல்லது 6 ஆண்டுகளுக்கு சாஃப்ட்வேர் அல்லது பாதுகாப்பு அப்டேட்டுகளை வழங்கும். போன்களின் ஸ்டோரேஜ் தீர்ந்துபோகும் அளவுக்கு அவற்றில் தரவுகள் உள்ளன." என்றார். மொபைல் போன்களை சரிசெய்வது ஏன் அதிக செலவு பிடிக்கிறது? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மொபைலை நீடித்து உழைக்கச் செய்வதற்காக, அது ஒற்றை உடலமைப்பைக் கொண்டதாக மாற்றப்படுகிறது, இதன் காரணமாக அதன் பழுதுபார்ப்பு கடினமாகி வருகிறது. போன் பழுதானால், அதை அந்நிறுவனத்திற்கு சென்று சரிசெய்ய நினைத்தால், அதன் விலையை கேட்கும்போது புதிய போனே வாங்கிவிடலாம் என்று தோன்றுவதாக பலரும் சொல்கின்றனர், இது உண்மையா? ஷிபானி இந்த கேள்விக்கு பதிலளிக்கையில், "போனின் உடைந்த திரையை மாற்றுவதற்கான செலவு, புதிய போனின் விலையில் பாதி இருக்கிறது, அதனால் புதிய மொபைல் ஏன் வாங்கக்கூடாது என வாடிக்கையாளர் நினைக்கிறார். ஆனால், மொபைல் நிறுவனம் கூறும் விலையை விட 10% குறைவான விலையில் சரிசெய்யும் கடைகள் இந்தியாவில் உள்ளன. ஆனால், ஒரு மொபைலுக்கு 1,50,000 ரூபாய் செலவிடுபவர்கள், அதை அம்மாதிரியான கடைகளுக்கு எடுத்துச் செல்ல மாட்டார்கள். " என்றார். மொபைல் பாகங்களின் அதிக விலையை தருண் பதக் சுட்டிக்காட்டுகிறார். அவர் கூறுகையில், "மொபைல் பழுதுநீக்கம் செய்வது ஏன் செலவுகரமானது? ஏனெனில், செமிகண்டக்டர் (semiconductors) விலை அதிகமாக உள்ளது. முன்பு மொபைல் போன்கள் எல்சிடி திரைகளுடன் இருந்தன, இப்போது 60-70% போன்கள் OLED திரைகளுடன் உள்ளன, அவை அதிக விலை கொண்டவை. மொபைல் போன் பாகங்கள் விலை மிகவும் அதிகம். பிராஸசர்கள் மற்றும் கேமராக்களுக்கும் இதே நிலைதான். செலவை பொறுத்து பார்க்கையில், இந்த போக்கு அதிகரித்து வருகிறது." என்றார். எனினும் சில கட்டுப்பாடுகளும் இருப்பதாக பதக் கூறுகிறார். ”போன் ஹார்டுவேர்களில் புதுமையை புகுத்துவது மட்டுப்படுத்தப்பட்டது. கேமராக்களிலும் இதே நிலைதான். அளவு மற்றும் வடிவமைப்பு என சில மாற்றங்களே உள்ளன.” போனை நீடித்து உழைக்கும் வகையில் மாற்றும்போது, அதை சரிசெய்வது மிகவும் கடினமாகிறது. அவர் கூறுகையில், "மக்கள் முன்பு போன்களை எளிதில் கழற்றி, அதன் பேட்டரிகளை அகற்றுவார்கள். ஆனால், இப்போது அப்படியல்ல. பாகங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டதாக உள்ளன. மொபைல் போன்கள் நீடித்து உழைப்பது மற்றும் பழுதுநீக்கம் செய்வது இரண்டும் வெவ்வேறு விஷயங்கள். பாகங்களை பொறுத்து அதன் ஆயுட்காலத்தை நிறுவனங்கள் குறைப்பதாக கூறுவது தவறானது" என்றார். கவுசா இதனை லேப்டாப் உதாரணத்துடன் விளக்குகிறார். லேப்டாப்களில் முன்பு எளிதில் அகற்றக்கூடிய வகையிலான RAM மற்றும் ஸ்டோரேஜ் இருந்தன. RAM மற்றும் ஹார்ட் டிரைவ் ஆகியவை பழுதடைந்தாலும் அவற்றை தனியே மாற்ற முடியும், இப்போது மதர்போர்டுடன் இணைக்கப்பட்டதாகவே அவை வருகின்றன. ஒன்று பழுதானால், மொத்த அமைப்பையும் மாற்ற வேண்டிவரும். வடிவமைப்பை பொறுத்து, பழுது நீக்கத்தைவிட மொத்தமாக மாற்றுவதை நோக்கி வாடிக்கையாளர்கள் நகர்கின்றனர். பழைய மொபைல் போன் சந்தையின் வளர்ச்சி பட மூலாதாரம், Getty Images மக்களின் பழக்கங்கள் மாறிவிட்டதாகவும், மொபைல் போன்களை அடிக்கடி மாற்றுவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். இது உண்மை, ஆனால் ஒரு போனின் ஆயுட்காலம் குறைந்துவிட்டதாக அர்த்தம் இல்லை. தருண் பதக் கூறுகையில், "மக்கள் இப்போது பழைய போன்களை வாங்குகின்றனர், அதற்கான சந்தையும் வேகமாக வளர்ந்துவருகிறது. அதை பயன்படுத்திய பின் வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுக்கின்றனர், அல்லது விற்றுவிடுகின்றனர், அல்லது மாற்றிவிடுகின்றனர். இது போனின் ஆயுட்காலத்தை அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில், போன் முதலில் வாங்கியவரிடத்தில் இருக்கும், பின்னர் அந்த பழைய போனை வாங்கியவர்கள் இரண்டு ஆண்டுகள் உபயோகிப்பார். மக்களின் நடத்தை மாறியுள்ளது, ஆனால் போன்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளது." என்றார். 5ஜி நெட்வொர்க் வந்தவுடன், இந்தியாவில் பழைய மொபைல்களுக்கான சந்தை திடீரென அதிகரித்தது, அந்த வளர்ச்சி இன்றும் தொடர்கிறது. சிசிஎஸ் இன்சைட்ஸ் நிறுவனத்தின் ஏக்தா மிட்டல் எழுதுகையில், "உலகளவில் பழைய மொபைல் போன்களுக்கான மூன்றாவது பெரிய சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது. சீனாவும் அமெரிக்காவுமே இதில் இந்தியாவைவிட முன்னணியில் உள்ளன. 2024ம் ஆண்டில் 10% என்ற அளவில் இதன் வளர்ச்சி விகிதம் இருந்தது. புதிய போன்களை வாங்குவது இந்தாண்டு குறைந்தாலும் பழைய போன்களின் விற்பனை சந்தை நன்றாகவே உள்ளது" என்கிறார். கவுசா கூறுகையில், போனை பழுதுநீக்கம் செய்வது செலவுகரமானது என்றாலும், இந்த போக்கை வாடிக்கையாளர் நடத்தையுடன் அவர் தொடர்புப்படுத்துகிறார். விற்பனை எனும் பெயரில் ஒவ்வொரு சில மாதங்கள் அல்லது ஆண்டுகளுக்கு வரும் புதிய மொபைல் போன்கள், தொழில்நுட்ப அளவில் மாற்றங்களுடன் வருகின்றனவா? ஷிபானி பதிலளிக்கையில், "கேமரா டிஸ்பிளே, ஏஐ வசதிகள், பேட்டரி திறன் ஆகியவற்றில் கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உள்ளன, ஆனால் ஒவ்வொரு ஆண்டும் அறிமுகமாகும் போன் மாடல்கள் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றத்தை உணர்த்துவதாக இல்லை." என்கிறார். தருண் பதக் கூறுகையில், "பட்டன் முதல் தொடுதிரை வரையிலான மாற்றங்களை பெரிய மாற்றங்களாக மொபைல் போன் உலகில் கருதலாம். ஆனால், தொழில்நுட்பம் மாறுவதில்லை, மாறாக வடிவமைப்பு மட்டுமே மாறுகிறது. போன்கள் மெல்லியதாகவும், கையடக்கமாகவும், வண்ணமயமாகவும் மடிக்கக்கூடியதாகவும் மாறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் போனின் கேமராவை பார்க்கையில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான போனின் கேமராவும் இப்போதுள்ள கேமராக்களுக்கு இணையாக போட்டியிட முடியும். சாஃப்ட்வேரை பொறுத்தவரையில் இப்போது ஏ.ஐ. வசதி வந்துள்ளதை மாற்றம் எனலாம், யு.ஐ. (user interface) அளவிலும் சில மாற்றங்கள் வந்துள்ளன" என்றார். இந்த கட்டுரை ஆரம்பிக்கப்பட்ட இடத்திற்கு செல்லலாம். கவுன்ட்டர்பாயின்ட் இந்தியாவில் வெளியான ஸ்மார்ட்போன் நீடிப்புதன்மை குறித்த ஆய்வில், "79% பயனர்கள் மொபைல்கள் நீடித்திருக்கும் தன்மை மிகவும் முக்கியம் என கூறியுள்ளனர். அதிகம் சூடாகுதல் (41%), பேட்டரி குறைந்துபோதல் (32%) மற்றும் தற்செயலாக சேதமடைதல் (32%) ஆகியவற்றை முக்கிய குறைகளாக கருதுகின்றனர். மேலும், மூன்றில் ஒருவர் ஸ்மார்ட்போன் பழுதுநீக்கம் செய்வதற்கு ரூ. 5,000க்கும் அதிகமாக செலவிடுகிறார். தங்களுடைய போன்கள் செயலிழக்கும்போது தங்களின் தனிப்பட்ட தரவுகள் குறித்து 89% பேர் கவலைகொள்கின்றனர், தங்களின் குடும்பப் புகைப்படங்கள், வங்கி தகவல்களை இழந்துவிடுவோமோ என அவர்கள் நினைக்கின்றனர்." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gjyl09q39o
-
மன்னாரில் பொலிஸ் காவலில் நபரொருவர் உயிரிழப்பு
மன்னார் பேசாலை பொலிஸ் நிலைய தடுப்பு காவலிருந்த 34 வயது நபர் உயிரிழப்பு; பொலிஸார் அடித்ததால் மகன் மரணம் தாய் குற்றச்சாட்டு Published By: Vishnu 04 Oct, 2025 | 04:19 AM மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பேசாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 34 வயதுடைய நபர் ஒருவர் வெள்ளிக்கிழமை (3) காலை பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் வவுனியா மாங்குளத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் கபிலன் (வயது-34) என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,,, பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டாஸ்பத்திரி பகுதியில் வியாழக்கிழமை (2) மாலை போதை பொருள் தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் குறித்த நபர் கைது செய்யப்பட்டார். குறித்த நபரை பேசாலை பொலிஸார் துரத்தி பிடித்ததோடு, இவருடன் இருந்த மற்றொரு நபர் தப்பி ஓடியதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட குறித்த நபரை பொலிஸார் பேசாலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுத்தனர். பின்னர் குறித்த நபர் பொலிஸ் நிலைய கூண்டில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை (3) காலை குறித்த சந்தேக நபர் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (3) காலை 6.30 மணியளவில் சடலம் பேசாலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் மதியம் 12 மணி அளவில் மன்னார் நீதிமன்ற பதில் நீதிவான் ஜெபநேசன் லோகு பேசாலை பிரதேச வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்தார். இதனை அடுத்து பேசாலை பொலிஸ் நிலையத்திற்கும் சென்று பொலிஸ் நிலைய சிறைக் கூடத்தையும் பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்தார். குறித்த சந்தேக நபர் பேசாலை பொலிஸ் நிலையத்தின் முதலாம் இலக்க தடுப்பு காவல் கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலே சடலமாக மீட்கப்பட்டார். உயிரிழந்த குறித்த நபரின் தாய் பேசாலை பிரதேச வைத்தியசாலைக்கு வெள்ளிக்கிழமை (3) காலை வருகை தந்து தனது மகனை பொலிஸார் அடித்து கொலை செய்துள்ளதாக அங்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/226841
-
கோமட் (Comet) பிரவுசர், பெர்ப்ளெக்சிட்டி (Perplexity AI) 31 வயது இந்தியாவின் புதிய இளம் பில்லியனர்
கூகுள் குரோமை விலைக்கு கேட்ட சென்னை தமிழர் - 31 வயதில் கோடீஸ்வரரான இவர் யார்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அரவிந்த் ஸ்ரீனிவாஸ், பெர்ப்ளெக்சிட்டி இணை நிறுவனர் கட்டுரை தகவல் சங்கரநாராயணன் சுடலை பிபிசி தமிழ் 4 அக்டோபர் 2025, 08:07 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் (தமிழர் பெருமை என்ற தலைப்பில் பிபிசி தமிழ் ஒரு சிறப்புக் கட்டுரைத் தொடரை வெளியிடுகிறது. தமிழ் மற்றும் தமிழருக்குப் பெருமை சேர்க்கும் பொருள்கள் குறித்த ஆழமான அலசலாக, சுவை சேர்க்கும் தகவல் திரட்டாக இந்தத் தொடரில் வரும் கட்டுரைகள் அமைய வேண்டும் என்பதே நோக்கம். இது இந்தத் தொடரின் மூன்றாவது கட்டுரை.) நீங்கள் உங்களுக்கு தேவையான மருத்துவ காப்பீடு குறித்த தகவலை கூகுளில் எப்பொழுதாவது தேடியிருக்கிறீர்களா? இப்படிப்பட்ட ஒரு தேடலில்தான், நாம் எளிதானது என நினைக்கும் இணையத் தேடல் மிகவும் சிக்கலானது என்பதை புரிந்து கொண்டுள்ளார் ஒரு இளைஞர். இவர்தான் தகவல் தொழில்நுட்பத்துறையில் ஜாம்பவானான கூகுள் நிறுவனத்திற்கே சவால் விடும் துணிச்சலுடன் வளர்ந்துள்ள, சென்னையைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநரான அரவிந்த் ஸ்ரீனிவாஸ். பொதுவாகவே கூகுள் போன்ற தேடுபொறிகள் விளம்பர வருவாயை பெரிதும் சார்ந்துள்ளன. ஆனால் தான் தொடங்கியிருக்கும் பெர்ப்ளெக்சிட்டி (Perplexity AI) சரியான இணையதளங்களிலிருந்து தரவுகளை தொகுத்து தருவதோடு, இவற்றுக்கான உண்மையான இணைப்புகளையும் தருவதாக நம்புகிறார் அரவிந்த் ஸ்ரீனிவாஸ். இவர் பெர்ப்ளெக்சிட்டி ஏஐ நிறுவனத்தின் இணை நிறுவனர்களில் ஒருவர். ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், மற்ற ஏஐ தொழில்நுட்பங்களிலிருந்து தனது பெர்ப்ளெக்சிட்டி எவ்வாறு தனித்துவமானது என்பதை விளக்கியுள்ளார். "லார்ஜ் லேங்வேஜ் மாடல் என்று அழைக்கப்படும் மற்ற ஏஐ தொழில்நுட்பங்கள், தாங்களாக சிந்தித்து வாடிக்கையாளருக்கு திருப்தி அளிக்கும் முடிவை வழங்க முயற்சிக்கின்றன. இந்த முடிவுகளுக்கான ஆதாரத்தை வழங்குவதில்லை. மாறாக பெர்ப்ளெக்சிட்டி ஆதார இணையதளங்களையும் சேர்த்து வழங்கும்" என்று அரவிந்த் ஸ்ரீனிவாஸ் குறிப்பிடுகிறார். இந்தியாவின் இளம் பில்லியனர் பட மூலாதாரம், Getty Images 2000ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் கூகுள் நிறுவனம், இணையத்தை வசப்படுத்தத் தொடங்கிய நேரத்தில் சென்னையில் கணினி குறித்த கனவுகளோடு வளர்ந்த சிறுவன்தான் அரவிந்த். இன்று 31 வயதேயாகும் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் இந்தியாவின் புதிய இளம் பில்லியனராக வளர்ந்துள்ளார். M3M Hurun India Rich List 2025 தரவுகளின் படி, இவரது சொத்து மதிப்பு சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய். இது மட்டுமல்ல, கூகுள் நிறுவனத்துக்குச் சொந்தமான குரோம் பிரவுசரை விலைக்கு கேட்கும் துணிச்சலும் அரவிந்த் ஸ்ரீனிவாஸ்-க்கு இருக்கிறது. குரோம் பிரவுசரை விலைக்கு விற்கும் நிலையில் கூகுள் நிறுவனம் இல்லை என்றாலும் தமது ஏஐ அடிப்படையிலான கோமட் (Comet) பிரவுசர், குரோமுக்கு கடுமையான சவாலை அளிக்கும் என அரவிந்த் ஸ்ரீனிவாஸ் நம்புகிறார். இது பற்றி குறிப்பிடும் அரவிந்த், "நீங்கள் யார், எங்கிருந்து தேடுகிறீர்கள் என்பது முக்கியமல்ல, மாறாக உங்களின் கேள்வி என்ன என்பது தான் எங்களுக்கு முக்கியம்" என கூறுகிறார். கூகுள் டீப் மைண்ட் மற்றும் ஓபன் ஏஐ ஆகியவற்றில் பணிபுரிந்த பின்னர், இவற்றில் இருக்கும் சிக்கல்களைப் புரிந்து கொண்டு, இதற்கான தீர்வாக பெர்ப்ளெக்சிட்டி மற்றும் கோமட்-ஐ முன்வைக்கிறார் அரவிந்த். முனைவர் பட்டம் பெற்ற சாதனையாளர் பட மூலாதாரம், Getty Images ஸ்ரீனிவாஸின் பயணம் சென்னையில் மற்ற சராசரி மாணவர்களைப் போலவே தொடங்கியது. இந்தியாவின் சிறந்த பொறியியல் கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐஐடி மெட்ராஸில் படிக்க வேண்டும் என்ற தாயின் கனவால் ஊக்குவிக்கப்பட்ட அவர், மின் பொறியியலில் பட்டம் பெற்றார். பின்னர் அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார். தொழில்நுட்ப நிறுவனங்களை தொடங்கிய பலரும் கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் என நகைச்சுவையாக குறிப்பிடும் ஸ்ரீனிவாஸ் பிரபலமான TED Talk நிகழ்வில் பங்கேற்ற போது, "நான் ஒரு கல்வியாளர் என்று நீங்கள் சொல்லலாம்" என்று கூறினார். தனது கல்விப் பின்னணி, செயற்கை நுண்ணறிவு (AI) பற்றியும், நிஜ உலகப் பிரச்னைகளைத் தீர்க்க அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றியுயும் ஆழமாகப் புரிந்துகொள்ள தமக்கு உதவுவதாக ஸ்ரீனிவாஸ் நம்புகிறார். பெர்ப்ளெக்சிட்டியை வேறுபடுத்துவது எது? பட மூலாதாரம், Getty Images நீங்கள் பெர்ப்ளெக்சிட்டியில் ஒரு கேள்வியைக் கேட்கும்போது, அது இணையத்தில் நிகழ்நேரத்தில் தேடுகிறது, செய்தி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் போன்ற நம்பகமான தளங்களிலிருந்து தகவல்களைக் கண்டறிந்து, பின்னர் அதை எளிமையான, படிக்க எளிதான பதிலாகக் குறைக்கிறது. கூடுதலாக, இது அசல் இணையதளங்களுக்கான இணைப்புகளை உள்ளடக்கியது, எனவே உண்மைகளை நீங்களே சரிபார்க்கலாம். பொதுவாக ஏஐ பொறிகள் தகவலை யூகிக்கின்றன அல்லது உருவாக்குகின்றன(Hallucination). இதற்கு பதிலாக, பெர்ப்ளெக்சிட்டி சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை கவனமாக சுருக்கமாகக் கூறுகிறது. "பெர்ப்ளெக்சிட்டியில் உள்ள ஒவ்வொரு பதிலும் மேற்கோள்கள் வடிவில் இணையத்திலிருந்து ஆதாரங்களுடன் வருகின்றன. சிறப்பான அடுத்தடுத்த கேள்விகளைக் கேட்க உங்களை பெர்ப்ளெக்சிட்டி அனுமதிக்கிறது." என்று ஸ்ரீனிவாஸ் தனது TED Talk இல் கூறினார். இதன் பொருள் நீங்கள் ஒரு பதிலைப் பெறும்போது, தகவல் எங்கிருந்து வந்தது என்பதை நீங்கள் சரிபார்க்கலாம், இது நம்பிக்கையை அதிகரிக்கிறது, மேலும் தகவல்களை அறிய உங்களை ஊக்குவிக்கிறது. இது ஒரு பெரிய மாற்றமாகும், ஏனெனில் பல ஏஐ கருவிகள் தகவல்களை எங்கிருந்து பெற்றன என்பதை விளக்காமல் பதில்களை மட்டுமே தருகின்றன. கூகுளுக்கு சவால் விட காரணம் இதுதான்! 2022 இல் தொடங்கப்பட்டதிலிருந்து, பெர்ப்ளெக்சிட்டி (Perplexity) வேகமாக வளர்ந்துள்ளது. இந்த சேவை இப்போது ஒவ்வொரு மாதமும் 780 மில்லியனுக்கும் அதிகமான தேடல்களைக் கையாளுகிறது. (https://www.perplexity.ai/help-center/en/articles/10352155-what-is-perplexity) இந்தியாவைப் பொறுத்தவரையிலும், பாரதி ஏர்டெல் போன்ற நிறுவனங்களுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து மக்களை சென்றடைய முயற்சிக்கிறது. கூகுளுடன் போட்டியிடுவதில் உள்ள சவால்கள் குறித்து ஸ்ரீனிவாஸ் வெளிப்படையாகப் பேசினார், குறிப்பாக விளம்பரங்களைக் காண்பிப்பதன் மூலம் கூகுள் பல பில்லியன்களை சம்பாதிக்கிறது. "அவர்கள் ஏன் Google.com ஐ பெர்ப்ளெக்சிட்டி போல மாற்றக்கூடாது? ஏனென்றால், அப்படி செய்தால் அவர்கள் விளம்பரங்களிலிருந்து வரும் அனைத்து பணத்தையும் இழப்பார்கள்," என்று அவர் ப்ளூம்பெர்க் (Bloomberg) நேர்காணலில் கூறினார். இது தான் கூகுள் குரோமை விலைக்கு கேட்கும் துணிச்சலையும் ஸ்ரீனிவாஸ்க்கு கொடுக்கிறது. பெர்ப்ளெக்சிட்டி போன்ற ஏஐ-க்கள் மனித ஆர்வத்தை ஊக்குவிக்கும், கற்றலை விரைவாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றும் என்று அவர் நம்புகிறார். "ஒவ்வொரு பதிலும் புதிய கேள்விகளுக்கு வழிவகுக்கிறது, ஏஐ அவற்றை முன்பை விட சிறப்பாகவும் வேகமாகவும் கேட்க உதவுகிறது." (TED Talk மற்றும் ப்ளூம்பெர்க் டி.வி.யில் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் பகிர்ந்த தகவல்கள் அடிப்படையில் இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது) இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y8zvpyedro
-
இந்தியா மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் போட்டிகள்
இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி - பேட்டிங், பந்து வீச்சு இரண்டிலும் ஜொலித்த ஜடேஜா பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, முதல் இன்னிங்ஸில் 104 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் எடுத்த ஜடேஜா ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆமதாபாத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ஆமதாபாத்தின் நரேந்திர மோதி மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 2) தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 44.1 ஓவரில் 162 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 448 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. 286 ரன்கள் பின்தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 146 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளும் சிராஜ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்த டெஸ்ட் தொடரில் 0 - 1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோஸ்டன் சேஸ் இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக, ஜான் கேம்பல் மற்றும் டேகனரின் சந்தர்பால் களமிறங்கினர். சந்தர்பால் 3வது ஓவரில், ரன்கள் ஏதும் எடுக்காமல் சிராஜ் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்ததாக 6வது ஓவரில், 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஜான் கேம்பல், பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு சீரான இடைவெளியில், விக்கெட்டுகள் சரியத் தொடங்கின. கேப்டன் ரோஸ்டனும் 24 ரன்கள் மட்டுமே எடுத்து, சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். 44.1 ஓவர்களில் 162 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. இந்திய பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சு, வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களைத் திணறடித்தது. குறிப்பாக, முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் யாருமே 50 பந்துகளுக்கு மேல் எதிர்கொள்ளவில்லை. ஜஸ்டின் கிரீவ்ஸ் மட்டுமே 32 ரன்கள் எடுத்திருந்தார், மற்ற அனைத்து வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும் 30 ரன்களை தாண்டவில்லை. இந்திய அணியில், முகமது சிராஜ் 14 ஓவர்களில் 40 ரன்கள் கொடுத்து, 4 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். பும்ரா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டையும் எடுத்திருந்தனர். இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்தியாவில் நடக்கும் ஒரு டெஸ்ட் போட்டியில் ராகுல் சதமடிப்பது இது இரண்டாவது முறை. இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். சிறப்பான முறையில் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடிய இந்த ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்தது. பின்னர் வெஸ்ட் இண்டீஸ் வீரர் சீல்ஸ் பந்தில், 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார் ஜெய்ஸ்வால். அதன்பிறகு களமிறங்கிய சாய் சுதர்சன், 7 ரன்கள் மட்டுமே எடுத்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோஸ்டன் சேஸ் பந்தில் ஆட்டமிழந்தார். மறுபுறம், சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் சதத்தை பூர்த்தி செய்தார். இந்தியாவில் நடக்கும் ஒரு டெஸ்ட் போட்டியில் ராகுல் சதமடிப்பது இது இரண்டாவது முறை. இதற்கு முன்னர், 2016இல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், அவர் 199 ரன்கள் எடுத்திருந்தார். 197 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து, வாரிக்கன் பந்தில் ஆட்டமிழந்தார் கே.எல்.ராகுல். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, துருவ் ஜூரெல் தனது முதல் டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார். ராகுல் மட்டுமல்லாது, துருவ் ஜூரெல் (125 ரன்கள்), ரவீந்திர ஜடேஜா (104 ரன்கள்) ஆகியோரும் சதமடித்தனர். குறிப்பாக துருவ் ஜூரெல் தனது முதல் டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 128 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 448 ரன்கள் எடுத்தநிலையில் இந்திய அணி டிக்ளேர் செய்தது. ஜடேஜா 104 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 9 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சில் ரோஸ்டன் சேஸ் இரண்டு விக்கெட்டுகளையும், ஜேடன் சீல்ஸ், ஜோமல் வாரிக்கன், காரி பியர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்திய அணியின் வெற்றி பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, டெஸ்ட் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. 286 ரன்கள் பின்தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 100 ரன்களைக் கடப்பதற்கு முன்பாகவே 8 விக்கெட்டுகளை இழந்திருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இறுதியில், 45.1 ஓவர்களில் 146 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்களில் அலிக் அதனேஸ் மட்டுமே 38 ரன்கள் எடுத்திருந்தார். மற்ற அனைவருமே 30 ரன்களுக்கும் குறைவாகவே எடுத்திருந்தனர். இதன்மூலம் இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளும் சிராஜ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். முதல் இன்னிங்ஸில் 104 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் எடுத்த ஜடேஜா ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த வெற்றியின் மூலம் இந்த டெஸ்ட் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. இந்திய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடிய கடைசி 5 டெஸ்ட் போட்டிகளில், இந்திய அணியிடம் தோல்வியடைந்தது மட்டுமல்லாமல், இந்த ஐந்து டெஸ்ட் போட்டிகளில் எதுவும் மூன்றாம் நாளைத் தாண்டி நீடிக்கவில்லை. அதேபோல, 2002க்குப் பிறகு இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையே நடந்த அனைத்து டெஸ்ட் தொடர்களிலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடப்பு டெஸ்ட் தொடரின் 2வது போட்டி அக்டோபர் 10 - 14 தேதிகளில் டெல்லியில் நடைபெறுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg40xj07k2o
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
ABANDONED 5th Match (D/N), Colombo (RPS), October 04, 2025, ICC Women's World Cup Sri Lanka Women Australia Women Match abandoned without a ball bowled
-
கருத்து படங்கள்
அததெரண கருத்துப் படங்கள்.
-
கரூர் நெரிசலில் 11 குழந்தைகளை பறிகொடுத்த குடும்பங்கள் இப்போது என்ன சொல்கின்றன?
படக்குறிப்பு, விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 குழந்தைகள் கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் (எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில விவரிப்புகள் சங்கடம் தரலாம்) செப்டம்பர் 27-ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடத்திய ரோட் ஷோவை ஒட்டி ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 11 பேர் குழந்தைகள். இம்மாதிரியான ஒரு நெரிசல் மிகுந்த கூட்டத்திற்கு குழந்தைகள் எதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர்? குடும்பத்தினர் என்ன சொல்கிறார்கள்? தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மக்கள் சந்திப்பு என்ற பெயரில் செப்டம்பர் 13-ஆம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஒவ்வொரு மாவட்டத்திலும் தனது தொண்டர்கள் மத்தியில் பேசிவந்தார். பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட பேருந்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட இடத்திற்கு இதற்காக வரும் விஜய், அந்த வாகனத்தில் இருந்தபடி மக்கள் மத்தியில் உரையாற்றினார். முதலில் திருச்சியிலும் பிறகு நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களிலும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார். செப்டம்பர் 27ஆம் தேதி நாமக்கல், கரூர் மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி செப்டம்பர் 27ஆம் தேதி நாமக்கல்லில் பிற்பகலில் தனது நிகழ்ச்சியை முடித்துக் கொண்டுவந்த விஜய், அன்று மாலை 7 மணியளவில் கரூருக்கு வந்துசேர்ந்தார். ஆனால், இந்த கரூர் கூட்டத்தில், விஜய் வரும்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதில் 11 பேர் குழந்தைகள் என்பதுதான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. படக்குறிப்பு, ஒன்றே முக்கால் வயதே ஆன குழந்தை துருவிஷ்ணு கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தது. அழக்கூட முடியாத மாற்றுத்திறனாளி தாய் இவ்வளவு நெரிசல் மிகுந்த, ஒரு அரசியல் கூட்டத்திற்கு எப்படி குழந்தைகள் சென்றனர், எதற்காகச் சென்றனர்? இந்தக் கேள்விகளுக்கு பதிலைத் தெரிந்துகொள்ள இந்த நெரிசலில் சிக்கி உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் பிபிசி நேரில் சந்தித்தது. நொறுங்கிப்போன மனதோடு பெற்றோரும் உறவினர்களும் குழந்தைகள் சென்ற பின்னணியை விவரித்தனர். திங்கட்கிழமை. கரூர் நெரிசல் சம்பவம் நடந்த மூன்றாவது நாள். அந்த நிகழ்வு நடந்த இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் இருக்கிறது வடிவேல் நகர். அந்தப் பகுதிக்குள் நுழையும்போதே, ஒரு மூதாட்டியின் கதறல் காதில் விழுகிறது. ஒன்றே முக்கால் வயதேயான பேரன் துருவிஷ்ணுவை இழந்த துக்கத்தில் மூன்றாவது நாளாக கதறி அழுதுகொண்டிருந்தார் அவர். அந்த வீட்டின் வாசலில் குற்ற உணர்வே வடிவெடுத்ததைப்போல அமர்ந்திருக்கிறார் லல்லி. குழந்தையின் அத்தையான இவருடன்தான் அந்தக் கூட்டத்திற்கு துருவிஷ்ணு சென்றிருந்தான். "நான்தான் கூட்டிட்டு போய் வாரிக் கொடுத்துட்டேன்.. நான்தான் கூட்டிட்டுப்போய் வாரிக் கொடுத்துட்டேன்" என்று கதறிக் கொண்டிந்தார் லல்லி. சனிக்கிழமையன்று விஜய் வேலுசாமிபுரத்திற்கு வருகிறார் என்றவுடன் அவரைப் பார்க்க விரும்பினார் லல்லி. ஆகவே தனது குழந்தைகள் மதுமிதா, பரத், தனது சகோதரர் விமலின் குழந்தை துருவிஷ்ணு, தனது கணவர் ஆகியோருடன் சென்றார் லல்லி. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கரூர் நிகழ்வில் உயிரிழந்த 41 பேரில் 11 பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள். "அவனுக்கு விஜய்னா ரொம்ப பிடிக்கும். விஜய் பாட்டைக் கேட்டாலே ஓடிவந்து டான்ஸ் ஆடுவான். என்னை மாதிரியே என் தம்பி பையனும் விஜய் ரசிகனா இருக்கிறானேனு, அவங்க அப்பாகிட்ட சொல்லிட்டு தூக்கிட்டு போனேன். ஐந்து மணிக்கு போனதிலிருந்து தலையில துண்டு கட்டி போட்டோவெல்லாம் எடுத்தான். அப்பவே கூட்டம் இருந்தது. விஜய் வந்த பிறகு மேலே ஏறினார். எல்லோரும் கத்தினார்கள். நான் அவனுக்கு விஜய்யைக் காட்டினேன். டக்குனு கரண்ட் ஆஃப். ஜெனரேட்டர் உடனே போட்டுட்டாங்க. அதுக்குள்ள இப்படி ஒரு நிலவரத்தைக் கொடுக்கும்னு யாரும் நினைச்சுப்பார்க்கல. எனக்கு முன்னாடி இருந்த இருசக்கர வாகனம் கீழே விழுந்துவிட்டது. நானும் விழுந்துட்டேன். எனக்கு மேல் எத்தனை பேர் விழுந்தாங்கன்னு தெரியலை. ஏன்டா இந்தக் கூட்டத்துக்கு வந்தோம்னு ஒரு செகண்ட் யோசிச்சேன். நாமதான் வந்தோம், குழந்தையை ஏன் கூட்டிவந்தோம் என யோசித்தேன். என் அருகில் இருந்த ஒரு பெண், குழந்தையைக் கொடுக்கும்படி சொன்னார். அவர் இடுப்பில் குழந்தையைத் தூக்கிக்கொண்டார். அப்போதெல்லாம் குழந்தை நன்றாக இருந்தான்" என அந்தத் தருணத்தை நினைவுகூர்கிறார் லல்லி. ஆனால், பிறகு தன் சகோதரரின் குழந்தையை அவரால் அரசு மருத்துவமனையில் சடலமாகத்தான் பார்க்க முடிந்தது. குழந்தையின் தாய் மாதேஸ்வரி காது கேட்காத, பேச முடியாத மாற்றுத்திறனாளி. அவரால் குழந்தை இறந்த சோகத்தைச் சொல்லி அழக்கூட முடியவில்லை. "இவ்வளவு துயரத்திலும் எங்களைப் பற்றி சமூக வலைதளங்களில் மிக மோசமாக எழுதுவது பெரும் வேதனையளிக்கிறது" என்கிறார் குழந்தையின் தந்தையான விமல். "உண்மைக்கு தொடர்பே இல்லாத வகையில் எழுதுகிறார்கள். குழந்தையை இழந்த குடும்பம் என்ற ஒரு சிறு கரிசனம்கூட அவர்களிடம் இல்லை. நான் குழந்தையை இழந்தது ஒருபுறமிருந்தாலும் வாழ்நாள் முழுக்க குற்ற உணர்ச்சியில்தான் வாழப் போகிறாள் என் சகோதரி. எப்படி இந்தத் துயரிலிருந்து மீளப்போகிறோம் எனத் தெரியவில்லை" என்கிறார் விமல். படக்குறிப்பு, சிறுமிகள் சாய் ஜீவா (இடது) மற்றும் சாய் லக்ஷணா (வலது) சாய் ஜீவா - சாய் லக்ஷணா இந்தத் துயர நிகழ்வில், ஒரே கிராமத்தைச் சேர்ந்த பலர் உயிரிழந்திருக்கிறார்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் உயிரிழந்திருக்கிறார்கள். அப்படி ஒரு துயரைச் சந்தித்த குடும்பம்தான் ஹேமலதா - ஆனந்தஜோதியின் குடும்பம். இவர்கள் தங்கள் குழந்தைகள் இருவருடன் இந்தக் கூட்டத்திற்கு வந்தனர். கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் ஹேமலதா, குழந்தைகள் சாய் லக்ஷணா, சாய் ஜீவா என மூன்று பேர் உயிரிழந்துவிட்டனர். இதில் சாய் லக்ஷணாவுக்கு எட்டு வயது. சாய் ஜீவாவுக்கு நான்கு வயது. ஆனந்தஜோதியும் அவரது குடும்பத்தினரும் இந்த நிகழ்வைப் பற்றி ஊடகங்களிடம் பேசவே விரும்பவில்லை. "ஊடகங்களிடம் நாங்கள் சொல்வது ஒன்றாக இருக்கிறது, ஆனால், வெளியாவது வேறாக இருக்கிறது" என மனமுடைந்து பேசுகிறார்கள் அவர்கள். 'ஒரே இடத்தில் 11 பேர் பலி' படக்குறிப்பு, 13 வயது சனுஜ் தனது சித்தியுடன் கூட்டத்திற்குச் சென்றுள்ளார். கரூர் அரசு மருத்துவமனையை ஒட்டியுள்ள காந்தி கிராமம் பாரதியார் தெருவைச் சேர்ந்த சனூஜுக்கு 13 வயதுதான். எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தார். சனூஜ் தனது சித்தி வைசூர்யா உள்ளிட்ட மூன்று பேருடன் விஜய்யைப் பார்க்கச் சென்றார். "நண்பகல் 12 மணிக்கே கிளம்பிவிட்டோம். டான்ஸ் எல்லாம் ஆடினோம். அங்கே ஒரு மளிகைக்கடை இருந்தது. அதன் அருகில் நின்றுகொண்டிருந்தோம். விஜய் வண்டி உள்ளே வந்தபோது பெரிய நெரிசல் ஏற்பட்டது. மல்லாந்து விழுந்துவிட்டோம். என்னுடன் இருந்த குழந்தைகளில் ஒரு குழந்தை ஷட்டரில் ஏறிவிட்டது. இன்னொரு பிள்ளையை கொடுக்க முடியவில்லை. அந்த இடத்தில் முதலில் இருவர் விழுந்தனர். அதற்குப் பிறகு பையன் (சனுஜ்) விழுந்தான். அதுக்கு மேல் இரண்டு பேர் விழுந்தார்கள். அதற்கு மேல் அடுக்கடுக்காக விழுந்தார்கள். அரை மணி நேரம் கழித்துத்தான் பிள்ளையைத் தூக்க முடிந்தது. அப்பவே இறந்துவிட்டான். அந்த இடத்தில் மட்டும் 11 பேர் இறந்துவிட்டார்கள்" என்கிறார் வைசூர்யா. சனுஜின் தாயார் திருவளர்செல்வியால் பேசவே முடியவில்லை. இந்த நிகழ்வில் வைசூர்யாவுக்கும் லல்லிக்கும் ஒரே நிலைதான். அதாவது, தன் உடன் பிறந்தவர்களின் குழந்தையை கூட்டத்திற்குக் கூட்டிவந்து பறிகொடுத்தவர்கள். இதன் காரணமாகவே கடுமையான குற்றஉணர்ச்சியில் ஆழ்ந்திருப்பவர்கள். படக்குறிப்பு, ஒரே குடும்பத்தை சேர்ந்த பழனியம்மாளும் (இடது), கோகிலாவும் (வலது) இறந்துவிட்டனர். 'விஜயை பார்க்கவே இல்லை' விஜயைப் பார்க்கச் சென்றவர்கள் தங்களுடன் குழந்தைகளையும் கூட்டிச் சென்றது குறித்து சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு எதற்காக குழந்தைகளை அழைத்துச் செல்கிறார்கள் என்ற கேள்வியும் கேட்கப்படுகிறது. ஆனால், குழந்தைகளுடன் சென்றவர்களில் பலர் விஜயின் ரோட் ஷோ நடந்த வேலுசாமிபுரம் அல்லது அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள். வேறு சிலர், சில கிலோ மீட்டர் தூரத்தில் வசிப்பவர்கள். அவர்கள் தங்கள் பகுதியில் இவ்வளவு பெரிய நிகழ்வு நடப்பது குறித்து தொடர்ந்து ஊடகங்கள் செய்திகளை வழங்கிவரும் நிலையில், அதனை தவறவிட விரும்பாமலேயே இந்தக் கூட்டத்திற்கு வந்தவர்கள். அவர்களில் ஒருவர்தான் செல்வராணி. பட மூலாதாரம், Getty Images செல்வராணியும் அவரது கணவர் பெருமாளும் வேலுசாமிபுரத்தை ஒட்டியுள்ள கோதூர் பகுதியில் வசித்து வருபவர்கள். இந்தத் தம்பதிக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் என நான்கு குழந்தைகள். தங்கள் பகுதிக்கு விஜய் வருவதைக் கேள்விப்பட்டவுடன் செல்வராணி அனைவருடனும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றார். அந்த நெரிசலில் சிக்கி அவருடைய 14 வயது மகள் கோகிலாவும் 11 வயது மகள் பழனியம்மாளும் இறந்துவிட்டனர். காயங்களுடன் உயர் பிழைத்திருக்கிறார் செல்வராணி. உயிரிழந்த தங்கள் இரு குழந்தைகளின் சடலங்களையும் சொந்த ஊரான புங்கம்பட்டியில் அடக்கம் செய்துவிட்டு, மீளாத் துயரில் ஆழ்ந்திருக்கிறது இந்தக் குடும்பம். உயிரிழந்த இரு குழந்தைகளும் விஜயின் தீவிர ரசிகர்கள். "விஜய் இந்தப் பகுதிக்கு வருகிறார் என செய்தி வந்ததிலிருந்தே அங்கு போயாக வேண்டுமென குழந்தைகள் அடம்பிடித்தார்கள். அவர் வரும் இடம் தூரமாக இருந்தால் போக முடியாது என்றேன். ஆனால், அருகிலிருக்கும் வேலுசாமிபுரத்திற்கு வருகிறார் என்றவுடன், அது வீட்டிற்குப் பக்கம்தான் என்பதால் கண்டிப்பாக போகவேண்டும் என்றார்கள். எவ்வளவோ சொன்னேன். கேட்கவில்லை. போயே ஆகனும் என்றார்கள். கடைசியில கூட்டிட்டு போய் பறிகொடுத்ததுதான் மிச்சம். விஜய் வண்டி வந்ததுதான் தெரியும். நாங்கள் அவரைப் பார்க்கவேயில்லை. அவர் பேசியதையும் கேட்கவில்லை. கால் மணி நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்தது. என் கணவர் போக வேண்டாம் என்றுதான் சொன்னார். இவர்களுடைய பிடிவாதத்தால்தான் கூட்டிப்போனேன். கூட்டிப்போகமால் இருந்திருந்தால் என் பிள்ளைகள் எங்கேயும் போயிருக்காது. அங்கே போயிருக்கவே கூடாது. போகாமல் இருந்திருந்தால் இந்நேரம் விளையாடிக் கொண்டிருந்திருப்பார்கள்" என்கிறார் செல்வராணி. படக்குறிப்பு, 7 வயதான க்ருத்திக் ஆதவ் ஒரே கிராமத்தில் மொத்தம் ஐந்து பேர் கரூரின் ஐந்து ரோடு பகுதியைச் சேர்ந்த சரவணன் வெல்டராக வேலைபார்த்து வருகிறார். அவர்களுடைய மகன் 7 வயதேயான க்ருத்திக் ஆதவும் மனைவி சந்திரகலாவும் கூட்டத்திற்குச் சென்றனர். நெரிசலில் சிக்கி க்ருத்திக் ஆதவ் அங்கேயே உயிரிழந்துவிட, படுகாயமடைந்து மீண்டிருக்கிறார் சந்திரகலா. திரும்பத் திரும்ப இதைப் பற்றிப் பேசி ஓய்ந்துபோன சரவணனும் அவரது குடும்பத்தினரும் இது குறித்து பேசவே விரும்பவில்லை. இந்த நெரிசல் மரண சம்பவத்தில் பெரும் இழப்பைச் சந்தித்த பகுதி என்றால் அது ஏமூர் கிராமம்தான். ஒரே கிராமத்தில் மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்திருக்கின்றனர். இவர்களில் இரண்டு பேர் குழந்தைகள். வேலுசாமிபுரத்திற்கு விஜய் வருவதைக் கேள்விப்பட்டவுடன் ஏமூரில் இருந்த பலர் ஒன்று சேர்ந்து ஒரு வாகனத்தை அமர்த்தி விஜயைப் பார்க்கச் சென்றிருக்கின்றனர். படக்குறிப்பு, எட்டாண்டுகள் கழித்துப் பிறந்த தரணிகா உயிரிழந்தார். அந்த கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் டாஸ்மாக்கில் கண்காணிப்பாளராக இருக்கிறார். இவருடைய மனைவி ப்ரியதர்ஷினி. இந்தத் தம்பதிக்கு திருமணமாகி, எட்டாண்டுகள் கழித்துப் பிறந்தவர் தரணிகா. ஒரே மகள். 13 வயதான தரணிகா 9ஆம் வகுப்பு படித்துவந்தார். சனிக்கிழமையன்று சக்திவேல் வேலைக்குச் சென்றுவிட்டார். ப்ரியதர்ஷிணியும் மகள் தரணிகாவும் ஏமூரைச் சேர்ந்த மற்றவர்களுடன் இணைந்து விஜயைப் பார்க்கச் சென்றனர். மாலை ஐந்து மணியளவிலேயே அங்கு கூட்டம் அதிகரித்ததை தொலைக்காட்சிகளில் பார்த்த சக்திவேல், மனைவியைத் தொடர்புகொள்ள முயற்சித்திருக்கிறார். விஜய் வரவிருந்த பகுதியில் கூட்டம் வெகுவாக இருந்ததால் அவரால் ப்ரியதர்ஷினியுடன் தொடர்புகொள்ள முடியவில்லை. இந்த நேரத்தில் ப்ரியதர்ஷினி தாங்கள் விஜயைப் பார்த்துவிட்டு வருவதாகவும் சக்திவேலை வீட்டிற்குச் சென்று சாப்பிடும்படியும் ஒரு பதில் குரல் பதிவை அனுப்பியிருக்கிறார். அதனைக் கேட்ட சக்திவேல் கூட்டம் அதிகமாக இருப்பதால் அந்த இடத்திலிருந்து புறப்படும்படி குரல் பதிவு ஒன்றை அனுப்பினார். அந்த குரல் பதிவை ப்ரியதர்ஷினி கேட்கவேயில்லை. அதற்குள் ப்ரியதர்ஷினியும் குழந்தை தரணிகாவும் நெரிசலில் சிக்கி இறந்துவிட்டனர். ஏற்கெனவே மூன்றாண்டுகளுக்கு முன்பாக ஒரு மகள் இறந்த நிலையில், தரணிகா மீது உயிரையே வைத்திருந்தார் சக்திவேல். "இப்போது என் குடும்பமே அழிந்துவிட்டது. நான் யாரைக் குறைசொல்வது?" என தழுதழுக்கிறார் சக்திவேல். படக்குறிப்பு, பொறியியல் கல்லூரி மாணவர் கிஷோர் (இடது), தனது தாயுடன் சென்றபோது உயிரிழந்த பத்து வயது சிறுவன் ப்ரித்திக் (வலது) 'விஜயின் வாகனத்தை நெருங்கிச் சென்றார்' அதே கிராமத்தைச் சேர்ந்த பத்து வயது ப்ரித்திக்கும் தனது தாயுடன் சென்றபோது உயிரிழந்திருக்கிறான். குழந்தையுடன் தனியாக வசித்துவந்த அவனுடைய தாயார் தற்போது இருந்த ஒரு பிடிமானத்தையும் இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார். இவர்களைச் சந்தித்த போது, காட்சிகளைப் பதிவு செய்ய அனுமதித்தாலும் பேச விரும்பவில்லை. குழந்தைகள் மட்டுமல்லாமல் சுயமாக சென்ற பதின்பருவத்தினரும் தங்கள் உயிரை விலையாகக் கொடுத்துள்ளனர். காந்திகிராமம் வடக்குப் பகுதியைச் சேர்ந்த கிஷோர், ஒரு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்தார். கிஷோருக்கு சிறு வயது முதலே விஜய் மீது பெரும் விருப்பம் உண்டு. தீவிரமான விஜய் ரசிகர் அவர். தனது அபிமானத்திற்குரிய விஜய் கரூருக்கு வருவதைக் கேள்விப்பட்டதும் அவரும் அவருடைய பெரியம்மா மகன் மிதில் பாலாஜியும் வேறு சில நண்பர்களும் வேலுசாமிபுரத்திற்குச் சென்றனர். விஜய் வரும்போது ஏகப்பட்ட நெரிசல் ஏற்பட, அவருடைய அண்ணன், கூட்டத்திலிருந்து விலகிச் சென்றுவிட முடிவெடுத்தார். ஆனால், கிஷோர் திரும்பிச் செல்ல விரும்பவில்லை. தொடர்ந்து முன்னேறி விஜயின் வாகனத்தை நெருங்கிச் சென்றார். பிறகு அவருடைய அண்ணனால் கிஷோரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. "ஏழு மணியளவில் விஜய் வந்தார். அவரைப் பார்த்தவுடன் நாங்கள் வெளியே வந்துவிட்டோம். அவன் வெளியே வராமல் உள்ளே சென்று மாட்டிக்கொண்டான். என்னால் மூச்சுவிட முடியவில்லை. எட்டரை மணிவரை வராததால் அவனுக்கு போன் செய்தோம். போன் ரீச்சாகவில்லை. பிறகு ஊரிலிருந்து ஒரு அக்கா போன் செய்து, ஆஸ்பத்திரிக்குச் சென்று பார்க்கச் சொன்னார். சென்று பார்த்தால் கிஷோர் மார்ச்சுவரியில் இருந்தான். என் கூடவே வந்திருந்தால் இப்போது உயிரோடு இருந்திருப்பான்" என அழுகிறார் மிதில் பாலாஜி. படக்குறிப்பு, 15 வயது ஸ்ரீநாத் மிகத் தீவிரமான விஜய் ரசிகர். '200 ரூபாயுடன் சென்றவர் வீடு திரும்பவில்லை' மேட்டூரைச் சொந்த ஊராகக் கொண்ட 15 வயது ஸ்ரீநாத்தின் குடும்பம் கரூரில் வசித்துவந்தனர். ஸ்ரீநாத் மிகத் தீவிரமான விஜய் ரசிகர். சனிக்கிழமையன்று காலையில் தானே காலை உணவைச் செய்து சாப்பிட்டுவிட்டு, தாய் கொடுத்த 200 ரூபாயுடன் விஜயைப் பார்க்க புறப்பட்டார் ஸ்ரீநாத். ஆனால், மாலையில் வீடுதிரும்பவில்லை. "அந்த சமயத்தில்தான் அவனுடைய டியூஷன் டீச்சர் போன் செய்து ஸ்ரீ எங்கே என்று கேட்டார். எதற்காகக் கேட்கிறீர்கள் என்றேன். விஜயின் கூட்டத்தில் மயங்கி விழுந்த ஒரு பையனைப் பார்க்கும்போது ஸ்ரீ மாதிரியே இருக்கிறது, எனக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றார். அவர் சொன்ன வண்ணத்தில்தான் ஸ்ரீ கால்சட்டை அணிந்திருந்தான். இருந்தாலும் என்னால் நம்ப முடியவில்லை. ஆனால், விரைவிலேயே எங்களுக்குத் தெரிந்த ஒரு போலீஸ்காரர், செய்தியைச் சொல்லிவிட்டார். இப்ப வரைக்கும் எங்கே போனான், விஜயைப் பார்த்தானா, பார்க்கவில்லையா என்றெல்லாம் எனக்குத் தெரியவில்லை. அன்று காலையில் அவ்வளவு சந்தோஷமாக இருந்தான். எத்தனை மணிக்கு இப்படி ஆச்சுன்னு தெரியவில்லை" என்கிறார் ஸ்ரீநாத்தின் தாயார் கோமதி. இதற்கு முந்தைய சம்பவங்கள் தமிழ்நாட்டின் சமீப கால வரலாற்றில் இதற்கு முன்பாக இவ்வளவு பெரிய அளவில் இரண்டு முறை நெரிசல் மரணங்கள் ஏற்பட்டிருக்கின்றன. 1992ல் கும்பகோணம் மகாமகத்தில் ஏற்பட்ட நெரிசலில் சுமார் 50 பேர் வரை உயிரிழந்தனர். அப்போதைய முதல்வர் ஜெ. ஜெயலலிதாவும் அவருடைய தோழி வி.கே. சசிகலாவும் மகாமக குளத்தில் நீராட வந்ததே இந்த நெரிசலுக்குக் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது. இதற்குப் பிறகு, 2005ஆம் ஆண்டு டிசம்பரில் கனமழையை அடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு நிவாரணம் வழங்குவதாக அறிவித்திருந்தது. அதற்கான டோக்கன் டிசம்பர் 18ஆம் தேதி காலை வழங்கப்படும் என செய்திகள் பரவிய நிலையில், அந்த டோக்கனைப் பெற மக்கள் முண்டியடித்ததில் 42 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 25 பேர் பெண்கள். இந்த இரு நிகழ்வுகளிலும் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் குழந்தைகள் சிக்கவில்லை. கரூர் நிகழ்வில் உயிரிழந்த 41 பேரில் 11 பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள். குழந்தைகளை இழந்த குடும்பத்தினரில் ஒரு சிலர் நடுத்தர வர்க்கத்தினர் என்றாலும் பெரும்பாலானவர்கள் பொருளாதார ரீதியில் மிகமிக சாதாரண நிலையில் இருப்பவர்கள். குடும்பத் தலைவர்கள் சாதாரண ஒரு வேலையைச் செய்து குடும்பத்தை பாதுகாத்து வந்திருக்கிறார்கள். உயிரிழந்த குழந்தைகளில் சிலர் பெற்றோருடன் சென்றவர்கள். சில குழந்தைகள் தங்கள் உறவினர்களுடன் சென்றிருக்கிறார்கள். குழந்தைகள் உயிரிழந்துவிட, பெற்றோரும் அழைத்துச் சென்ற உறவினர்களும் மீள முடியாத குற்ற உணர்ச்சியில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏன் இந்தக் கூட்டங்களுக்கு குழந்தைகள் அழைத்துச் செல்லப்பட்டனர்? விஜயைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையைத் தவிர வேறு காரணங்கள் ஏதும் இல்லை. "வீட்டிற்கு பக்கத்திலேயே விஜய் வந்தா யாருதான் போகமாட்டாங்க? டிவியிலேயே பார்ப்பவரை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைச்சா, யாருதான் தவறவிடுவாங்க.. அதுதான் நான் செய்த தப்பு. என் தம்பி குழந்தையை தூக்கிட்டு போனது தப்புதான். அப்ப ஒரு செகண்ட் யோசிச்சிருக்கலாம்" என்கிறார் சகோதரனின் ஒன்றரை வயது குழந்தையை பறிகொடுத்த லல்லி. இந்தத் தருணத்தில் குழந்தைகளை இழந்தவர்கள் பெரும்பாலும் யாரையும் குறைசொல்லும் நிலையில் இல்லை. வாழ்நாள் முழுவதும் மீள முடியாத இந்தத் துயரத்தை எப்படிக் கடப்பது என்பதே அவர்களது மனதை இப்போது அரித்துக் கொண்டிருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c20vy8njgzzo
-
பிரான்சில் கடும் பொருளாதார நெருக்கடி: நாடு தழுவிய வேலைநிறுத்தம் - ஈபிள் கோபுரம் மூடல்!
Published By: Digital Desk 1 04 Oct, 2025 | 10:43 AM பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும் விதமாக பிரான்ஸ் அரசாங்கம் வரவு செலவுத் திட்ட செலவினங்களைக் குறைத்தது. சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற அத்தியாவசியத் துறைகளுக்குக் குறைவான நிதி ஒதுக்கப்பட்டதால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்தப் போராட்டங்கள் தீவிரமடைந்த சூழலில், நாட்டின் புதிய பிரதமராக செபாஸ்டியன் லெகோர்னு நியமிக்கப்பட்டார். எனினும், இவரது நியமனம் போராட்டக்காரர்களை மேலும் தூண்டியது. இதன் விளைவாக, போராட்டக்காரர்கள் 'அனைத்தையும் தடுப்போம்' (Block Everything) என்ற இயக்கத்தைத் தொடங்கி, நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். அழைப்பை ஏற்று, தலைநகர் பாரீஸ் உள்ளிட்ட பிரான்ஸின் முக்கிய நகரங்களில் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் திரண்டனர். இந்த வேலைநிறுத்தம் காரணமாக ரயில் மற்றும் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் பாதிக்கப்பட்டன. போராட்டத்தின் எதிரொலியாக, உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஈபிள் கோபுரம் மூடப்பட்டது. கோபுர நிர்வாகத்தின் பணியாளர்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றதால், கோபுரம் திறக்கப்படவில்லை. ஒன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இது குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த அறிவிப்பை அறியாமல் நேரில் வந்த ஏனைய சுற்றுலாப் பயணிகள், ஈபிள் கோபுரத்தைப் பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். பிரான்ஸ் அரசு பொதுச் சேவைகளுக்கான நிதியை அதிகரிக்க வேண்டும் என்றும், அதற்குப் பதிலாகப் பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். https://www.virakesari.lk/article/226857
-
பெரியாருடன் சுய மரியாதை இயக்கத்தை முன்னெடுத்துச் சென்ற தலைவர்கள் யார் யார்?
பட மூலாதாரம், Facebook/DravidarKazhagam கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் சுயமரியாதை இயக்கத்தைத் துவங்கியது பெரியார் என்றாலும் அந்த இயக்கத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதிலும் அதன் சித்தாந்தங்களைத் தொடர்ந்து வடிவமைப்பதிலும் ஆண்களும் பெண்களுமாக பல்வேறு தலைவர்கள் தொடர்ந்து செயல்பட்டனர். அவர்களைப் பற்றி அறிமுகப்படுத்தும் ஒரு தொகுப்பு. (சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டை முன்னிட்டு பிபிசி தமிழ் வெளியிடும் சிறப்புத் தொடரின் மூன்றாவது கட்டுரை இது.) 1925ஆம் ஆண்டில் காங்கிரசில் இருந்து வெளியேறியதும் சுயமரியாதை இயக்கத்தை பெரியார் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் நீதிக் கட்சியினருடன் இணைந்து செயல்பட்டார் பெரியார். பல தருணங்களில் அவர்களுடன் கூட்டங்களில் பங்கேற்றார். அதே தருணத்தில் 1927வரை மகாத்மா காந்தி தொடர்பாக ஆதரவான நிலைப்பாடுகளையே அவர் மேற்கொண்டார். சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாடு 1929 பிப்ரவரியில் நடந்தபோது நீதிக்கட்சியின் பல தலைவர்கள் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். அந்த மாநாட்டில்தான் சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படைக் கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. அடுத்த மாநாடு நடக்கும்வரை இயக்கத்தின் தலைவராக டபிள்யு. பி.ஏ. சௌந்தரபாண்டியன் இருப்பார் என்றும் துணைத் தலைவர்களாக பெரியாரும் சர் ஏ.டி. பன்னீர்செல்வமும் இருப்பார்கள் என்றும் முடிவுசெய்யப்பட்டது. இந்த மாநாட்டில் நாகம்மை, பட்டுக்கோட்டை அழகிரிசாமி, மூவலூர் ராமாமிர்தத்தம்மாள், எஸ்.வி. லிங்கம், கோவை அ. அய்யாமுத்து, எஸ். குருசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதற்கடுத்த காலகட்டங்களில் தொடர்ந்து கி.ஆ.பெ. விஸ்வநாதம், எஸ் குருசாமி, குஞ்சிதம் குருசாமி, ஜே.எஸ். கண்ணப்பர், ப. ஜீவானந்தம், பாரதிதாசன், சாத்தான்குளம் ராகவன் உள்ளிட்டோரும் இயக்க நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்க ஆரம்பித்தனர். 1. டபிள்யு.பி.ஏ. சவுந்தரபாண்டியன் படக்குறிப்பு, 1928 நவம்பர் 4ஆம் தேதியிட்ட குடி அரசு இதழில் டபிள்யு.பி.ஏ. சவுந்தரபாண்டின் சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாட்டில் தலைவராக நியமிக்கப்பட்ட டபிள்யு.பி.ஏ. சவுந்தரபாண்டியனைப் பொறுத்தவரை, அவருடைய அரசியல் செயல்பாடுகள் 1916ல் ஆரம்பிக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கத்திலிருந்துதான் துவங்கியது. 1920ல் அக்கட்சியின் சார்பில் சென்னை மாகாண சட்டமன்றத்திற்கும் தேர்வுசெய்யப்பட்டார். ஆனால், பெரியாருடன் தொடர்ந்து நெருக்கமாக இருந்தவந்த நிலையில், சுயமரியாதை இயக்க ஆதரவாளராகவும் அவர் உருவெடுத்தார். இதன் தொடர்ச்சியாகத்தான் சுயமரியாதை இயக்கத்தின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார் டபிள்யு.பி.ஏ. சவுந்தரபாண்டியன். பிறகு சென்னை மாகாணம் முழுவதும் நடைபெற்ற பல்வேறு மாநாடுகள், கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்றார் இவர். கணவரை இழந்த பெண்களுக்கு மறுமணம் செய்துவைப்பது, சுயமரியாதைத் திருமணங்களைச் செய்துவைப்பது ஆகிவற்றிலும் தீவிர கவனம் செலுத்தினார் டபிள்யு.பி.ஏ. சவுந்தரபாண்டியன். ராமநாதபுரம் நகராட்சிக் கழகத்தின் தலைவராக இருந்தபோது, அந்த மாவட்டத்தில் ஓடிய சில பேருந்துகளில் பட்டியல் பிரிவினர் ஏறுவதற்கு தடை என பயணச் சீட்டுகளிலேயே குறிப்பிடப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டி, அதனை உடனடியாக நீக்க வேண்டுமென்றும் இல்லாவிட்டால் அந்த பேருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் கூறி நடவடிக்கைகளை மேற்கொண்டதாக 'சுயமரியாதைச் சுடரொளிகள்' நூல் குறிப்பிடுகிறது. அதேபோல, முதலாவது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது, அந்தப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுத்தார் சவுந்தரபாண்டியன். சுயமரியாதை இயக்கத்துடன் தொடர்பு நீடித்தாலும், நீதிக்கட்சியின் சார்பிலும் சில செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டுவந்தார் சவுந்தரபாண்டியன். ஆனால், பிற்காலத்தில் இயக்கம் சார்ந்த பணிகளில் இருந்து விலகியே இருந்தார் அவர். 2. எஸ்.ஆர். கண்ணம்மாள் படக்குறிப்பு, எஸ்.ஆர். கண்ணம்மாள், 1933 டிசம்பர் 24, புரட்சி இதழ் சுயமரியாதை இயக்கத்தில் ஆண்களைப் போலவே பெண்களும் ஈடுபட்டனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் எஸ்.ஆர். கண்ணம்மாள். இவர் பெரியாருடன் இணைந்து 'குடி அரசு' இதழின் பதிப்பாளராக இருந்துவந்தார். அந்த இதழில் 1933-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளிவந்த இதழில் "இன்றைய ஆட்சிமுறை ஏன் ஒழிய வேண்டும்?" என்ற ஒரு கட்டுரையை எழுதியதால், அவர் மீது ராஜ நிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு 1933-ஆம் ஆண்டு டிசம்பர் மாதப் பிற்பகுதியில் பெரியாருடன் சேர்த்து கைதுசெய்யப்பட்டு அவருக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. "1933-ஆம் ஆண்டிற்கு முன்பாக, எந்தப் பெண்ணும் பத்திரிகை நடத்தி சிறை தண்டனை பெறவில்லை. ஆங்கில அரசை எதிர்த்து தலையங்கம் வெளியிட்டதற்காக கைதுசெய்யப்பட்ட முதல் பெண் பத்திரிகையாளர் எஸ்.ஆர். கண்ணம்மாள்" என தனது திராவிடப் போராளிகள் நூலில் குறிப்பிடுகிறார் வழக்கறிஞர் அருள்மொழி. பெரியாரின் இளைய சகோதரியான எஸ்.ஆர். கண்ணம்மாள் தனது அண்ணனின் கொள்கைகளில் முழுமையாக ஈடுபாடு கொண்டு அவரது செயல்பாடுகளுக்கு துணையாக இருந்தவர். பெரியார் காங்கிரஸில் இருந்த காலத்தில் காந்தியின் கொள்கைகளை ஏற்று, கள்ளுக்கடை போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களில் எஸ்.ஆர். கண்ணம்மாளும் ஒருவர். பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய பிறகு, தொடர்ந்து பல கூட்டங்களில் மூட நம்பிக்கையை எதிர்த்துப் பேசிவந்தார் கண்ணம்மாள். ஈரோடு நகரசபையின் கவுன்சிலராக இருந்தபோது, பெண்கள் நலனை முன்னிறுத்தி பல தீர்மானங்களை அவர் கொண்டுவந்தார். சீர்திருத்தத் திருமணங்களை நடத்துவதிலும் இவர் மிகுந்த ஆர்வம்காட்டினார். படக்குறிப்பு, சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாடு 1929 பிப்ரவரியில் நடந்தபோது நீதிக்கட்சியின் பல தலைவர்கள் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். 3. ஏ.டி. பன்னீர்செல்வம் டபிள்யு.பி.ஏ. சவுந்தரபாண்டியனைப் போலவே, துவக்கத்தில் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு, பிறகு சுயமரியாதை இயக்கத்தோடு நெருக்கமானவர்களில் ஒருவர் ஏ.டி. பன்னீர்செல்வம். இதன் காரணமாக, செங்கல்பட்டில் நடந்த சுயமரியாதை இயக்க முதல் மாநாட்டில் துணைத் தலைவராக ஏ.டி. பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்குப் பிறகு சுயமரியாதை இயக்க மாநாடுகள், நிகழ்ச்சிகளில் உரையாற்றிவந்தார் ஏ.டி. பன்னீர்செல்வம். தொடர்ந்து பிராமணரல்லாத மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் கவனம் செலுத்திய அவர், சுயமரியாதை இயக்கத்தினரின் வழக்குகளிலும் பங்கேற்றார். 1930களின் இறுதியில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் பொருளாதார ரீதியாகவும் செயல்பாடு ரீதியாகவும் இவரது பங்கு தீவிரமானதாக இருந்தது. 4. பட்டுக்கோட்டை அழகிரிசாமி சுயமரியாதை இயக்கத்தின் பல தலைவர்கள் செல்வந்த குடும்பத்திலிருந்து வந்தவர்களாக இருந்தாலும், மிக சாதாரண பின்னணியில் இருந்து சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டு, அதன் கொள்கைகளைப் பரப்பியவர்களும் நிறையப் பேர் இருந்தனர். அப்படியான தலைவர்களில் ஒருவர்தான் பட்டுக்கோட்டை அழகிரிசாமி. இவர் ஆரம்பத்தில் காந்தி மீதும் காங்கிரசின் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். ஆனால் விரைவிலேயே சுயமரியாதை இயக்கத்தின் பக்கம் திரும்பினார் அழகிரி. சுயமரியாதை இயக்கத்தின் ஆரம்ப காலத்திலிருந்தே அதில் ஈடுபாடு கொண்டிருந்த அழகிரி, தனது மேடைப் பிரச்சாரத்திற்காக பெரிதும் அறியப்பட்டவராக இருந்தார். அதேபோல, சுயமரியாதை இயக்கக் கருத்துகளை முன்வைத்து தீவிரமாக எழுதியும் வந்தார். முதலாம் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தபோது, திருச்சியிலிருந்து சென்னை வரை சுமார் ஒன்றரை மாத காலம் நடைபயணம் மேற்கொண்டார் அழகிரி. இரண்டாம் உலகப் போரின்போது மாவட்ட போர் பிரசார அதிகாரியாக இருந்தபோது, போர் பிரச்சாரத்தின் நடுவே சுயமரியாதை இயக்கக் கருத்துகளையும் பேசியதாக சுயமரியாதை இயக்கச் சுடரொளிகள் நூல் குறிப்பிடுகிறது. சுயமரியாதை இயக்கத்தின் தீவிரத் தொண்டராக இருந்த அழகிரி, 1949-லேயே எலும்புருக்கி நோயால் காலமானார். 5. சாமி சிதரம்பரனார் சுயமரியாதை இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்ட மற்றும் ஒரு சித்தாந்தி, சாமி சிதம்பரனார். சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்ட காலத்தில் குடி அரசு இதழில் தொடர்ந்து எழுதிவந்தார். பெரியார் சுற்றுப் பயணங்களை மேற்கொள்ளும்போது, அந்த இதழின் ஆசிரியராகவும் செயல்பட்டார் சாமி சிதம்பரனார். பெரியார் முன்வைத்த கணவரை இழந்த பெண்களின் மறுமணம் என்ற கொள்கையில் தீவிரமாக இருந்த சாமி சிதம்பரனார், அதைப் போலவே ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். சிறையிலிருந்த காலத்தில் ஒரே மாதத்தில் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதி முடித்தார். பெரியார் தானே தன் வாழ்க்கை வரலாற்றை எழுதாத நிலையில், அந்தப் பணியை தான் செய்ய வேண்டியிருந்ததாக குறிப்பிடுகிறார் சாமி சிதம்பரனார். சுயமரியாதை இயக்க, திராவிட இயக்கத்தின் பல இதழ்களுக்கு ஆசிரியராகவும் அவர் பணியாற்றினார். பெரியார் நீதிக் கட்சியை தீவிரமாக ஆதரிக்க ஆரம்பித்த போது, இயக்கத்திலேயே பலர் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், பெரியாருக்கு ஆதரவாக தொடர்ந்து வாதாடியவர் சாமி சிதம்பரனார். சாதி ஒழிப்பு, புரோகித மறுப்பு, சாதி மறுப்புத் திருமணம், சீர்திருத்தத் திருமணம் போன்ற கொள்கைகளைத் தொடர்ந்து வலியுறுத்தியவராக இருந்தார் சாமி சிதம்பரனார். 6. மூவலூர் ராமாமிர்தத்தம்மாள் பட மூலாதாரம், Dravidian Stock படக்குறிப்பு, மூவலூர் ராமாமிர்தத்தம்மாள் எழுதிய 'தாசிகள் மோச வலை அல்லது மதி பெற்ற மைனர்'. சுயமரியாதை இயக்கத்தில் தீவிரமாக பங்கெடுத்த மற்றொரு பெண் தலைவர் மூவலூர் ராமாமிருதத்தம்மாள். இசை வேளாளர் குடும்பத்தில் பிறந்த ராமாமிர்தத்தம்மாளின் இளம் பருவம் வறுமை மிக்கதாக, பெற்றோரால் கைவிடப்பட்டதாக இருந்தாலும், இந்தத் துயர்களைத் தாண்டி மற்றவர்களுக்காகப் போராடும் மன உறுதியைப் பெற்றிருந்தார் அவர். துவக்க காலத்தில் காங்கிரஸ் மீது பற்றுக் கொண்டிருந்த ராமாமிர்தத்தம்மாள், பிற்காலத்தில் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு காட்ட ஆரம்பித்தார். செங்கல்பட்டில் சுயமரியாதை இயக்க முதல் மாநாடு நடந்தபோது, 'தேவதாசிகள்' என அந்தக் காலகட்டத்தில் அழைக்கப்பட்ட பெண்களை அந்த மாநாட்டின் பார்வையாளர்களாக கொண்டுவந்தார். சுயமரியாதை இயக்க இரண்டாவது மாநாட்டில் உரை நிகழ்த்தும் வாய்ப்பு இவருக்கு வழங்கப்பட்டது. முதலாவது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது திருச்சி முதல் சென்னை வரை சுயமரியாதை இயக்கத்தினர் மேற்கொண்ட நடைபயணத்திலும் இவர் கலந்துகொண்டார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. குடி அரசில் தொடர்ந்து எழுதிவந்த ராமாமிர்தத்தம்மையார் தேவதாசிகள் குறித்து தான் அறிந்தவற்றை வைத்து எழுதிய 'தாசிகளின் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்' என்ற நூலை எழுதினார். 20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப கால இலக்கியத்தில் இந்த நூல், மிகுந்த முக்கியத்துவம் பெற்ற நூல். பல சுயமரியாதைத் திருமணங்களையும் இவர் நடத்திவைத்தார். இந்தத் தலைவர்கள் தவிர, பெரியாரின் முதல் மனைவியான நாகம்மை, மீனாம்பாள் சிவராஜ், குத்தூசி குருசாமி, கோவை அய்யாமுத்து, கி.ஆ.பெ. விஸ்வநாதம், என். சிவராஜ், சிவகங்கை ராமச்சந்திரன், செ.தெ. நாயகம் உள்ளிட்ட தலைவர்களும் சுயமரியாதை இயக்கச் செயல்பாடுகளில் தீவிரம் காட்டினர். இந்தத் தலைவர்களில் சிலர், பிற்காலத்தில் வேறு அரசியல் சித்தாந்தங்களைத் தேர்வுசெய்தாலும், சுயமரியாதை இயக்கத்தின் ஆரம்பகாலச் செயல்பாடுகளில் இவர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cj6xg0xer38o
-
யாழ். இளைஞர்களை நேர்மை மற்றும் ஒழுக்கமிக்க நிலைமைக்கு கொண்டு வர வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது ; ஸ்ரீ பவானந்தராஜா
04 Oct, 2025 | 11:38 AM கல்வி, ஒழுக்கம், நேர்மை, கண்ணியம், உழைப்பு போன்றவற்றிற்கு யாழ்ப்பாண மக்கள் ஒரு காலத்தில் பெயர் போனவர்கள். ஆனால் கடந்த ஆட்சிகளில் ஏற்பட்ட போதைப்பழக்கம், தொலைபேசி பாவனை காரணமாக இளைஞர்கள் திசைமாறி சீரழிந்து கொண்டிருக்கின்றது. எனவே அவர்களை ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது என்ன நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - சங்கானை வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை (03) நடைபெற்ற நடைபெற்ற நல்லொழுக்க தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், சமூக மாற்றங்கள் எவ்வாறு ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது என்று அனைவருக்கும் தெரியும். ஒழுக்கமின்மையே இதற்கெல்லாம் காரணம். ஒழுக்கமானது குடும்பத்தில் ஆரம்பித்து, பின்னர் கிராமத்திற்கு பரப்பப்பட்டு, அது நாடு நோக்கி நகர வேண்டும். பழைய அரசாங்கங்களின் செயற்பாடுகளால் அவை தலை மாறி போயிருக்கின்றன. கடந்த கால அரசாங்கத்தில் மதுபானசாலை அனுமதி பத்திரங்களை அரசியல்வாதிகள் பெற்று கிளிநொச்சியிலும் சரி யாழ்ப்பாணத்திலும் சரி மதுபானசாலைகளை திறந்து இருக்கின்றார்கள். சாப்பாட்டுக் கடைகளை விட மதுபானசாலைகளே அதிகமாக இருக்கின்றன. பெரிய ஒரு அரசியல் கட்சியின் ஆதாரவாளர்கள் ஒரு போதைப்பொருள் தொழிற்சாலையையே உருவாக்கும் அளவிற்கு போதைப் பொருட்களை கொண்டு வந்து தெற்கில் வைத்திருக்கின்றார்கள். இதனைக் கடந்த அரசாங்கங்கள் கண்டும் காணாமல் தான் விட்டிருந்தன. ஆனால் எமது ஜனாதிபதி இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து அனைவரையும் கைது செய்துள்ளார். இவ்வாறானவர்கள் உண்மையிலேயே 15-20 வருடங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு கைது செய்யாமையால்தான் அவர்கள் போதைப் பொருட்களை வீடு வீடாக விநியோகிக்கும் அளவிற்கு திறமை பெற்றிருக்கின்றார்கள். ஒரு அரசாங்கத்திற்கு நிழல் அரசாங்கமாக செயல்படும் அளவிற்கு அவர்கள் போதைப்பொருள் வியாபாரத்தில் கொடி கட்டிப் பறந்தார்கள். எனவே அவர்களை அடக்குவது எமது அரசாங்கத்தின் கடமை. அதனை நாங்கள் செய்வோம் என்றார். https://www.virakesari.lk/article/226863
-
யாழில் மாடியில் இருந்து குதித்த பாடசாலை மாணவி!
இதன் வேர் சாதி என்று நான் நினைக்கிறேன். மாணவ மாணவிகள் விளையாட்டின் ஊடாக மனவுறுதி மற்றும் வெற்றி தோல்வியை ஏற்கும் மனப்பக்குவம் பெறுவார்கள். ஆசிரியர்கள் மாணவர்களை அரவணைத்து ஊக்குவிப்பவர்களாக இருக்கவேண்டும்.
-
காசாவில் குண்டுவெடிப்பை உடனடியாக நிறுத்துமாறு டிரம்ப் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டார்
காசாவில் குண்டுவீச்சை உடனடியாக நிறுத்த இஸ்ரேலுக்கு டிரம்ப் உத்தரவு காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த அமைதித் திட்டத்திற்கு ஹமாஸ் சாதகமாக பதிலளித்துள்ளது. இதன் அடிப்படையில், நீடித்த அமைதிக்கான பாதையில் நம்பிக்கை தோன்றியுள்ளதாகக் கூறி, டிரம்ப் இஸ்ரேலுக்கு காசாவில் குண்டுவீச்சை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டுள்ளார். கடந்த திங்களன்று அமெரிக்கா விரைந்த இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஜனாதிபதி டிரம்ப் முன்மொழிந்த 20 அம்ச காசா அமைதி திட்டத்தை ஏற்றுக்கொண்டார். இதன் பின் ஹமாஸ் இதில் விரைந்து முடிவெடுக்க வரும் ஞாயிற்றுக்கிழமை வரை டிரம்ப் காலக்கெடு விதித்தார். இந்நிலையில் இதுதொடர்பாக ஆலோசித்து வந்த ஹமாஸ் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இஸ்ரேல் பிடித்து வைத்துள்ள பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக உயிருடன் இருக்கும் இஸ்ரேலிய பணயக்கைதிகளையும், இறந்த கைதிகளின் உடல்களையும் திரும்ப ஒப்படைக்க சம்மதிப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் ஒப்பந்தத்தில் உறுதியளிக்கப்பட்டபடி, ஒருமித்த கருத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு சுயாதீன தொழில்நுட்ப வல்லுநர் குழுவிடம் காசா பகுதியை நிர்வகிக்கும் பொறுப்புகளை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், கைதிகளை பரிமாறிக்கொள்வதற்கும், உடனடி உதவி வழங்குவதற்கும், அரபு, இஸ்லாமிய நாடுகள் மற்றும் டிரம்பின் முயற்சிகளைப் பாராட்டுவதாக ஹமாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இருப்பினும் திட்டத்தின் பிற விபரங்களை விவாதிக்க மத்தியஸ்தர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக ஹமாஸ் கூறியுள்ளது. டிரம்பின் 20 அம்ச அமைதி திட்டத்தில் உடனடி போர்நிறுத்தம், கைதிகள் பரிமாற்றம், காசாவிலிருந்து இஸ்ரேலியப் படைகளை படிப்படியாக திரும்பப் பெறுதல், ஹமாஸ் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு அரசியலில் இருந்து வெளியேறுவது மற்றும் சர்வதேச மேற்பார்வையின் கீழ் ஒரு இடைக்கால அரசாங்கத்தை நிறுவுதல் ஆகியவை அடங்கும். ஆயுதத்தை கைவிடுவது உள்ளிட்ட அம்சங்களை ஹமாஸ் ஏற்க தயங்குவதாக கூறப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cmgbkklj600tdo29nsk902bng
-
6 குழந்தைகளின் உயிர்களை பலியெடுத்த இருமல் மருந்து!
03 Oct, 2025 | 05:17 PM இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் 'கோல்ட்ரிப்' (Coldrip) எனப்படும் இருமல் மருந்தை உட்கொண்டதனால் 6 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் இந்த மருந்து விற்பனைக்கும் விநியோகத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தற்காலிகத் தடை உத்தரவை தமிழக மருந்து கட்டுப்பாட்டுத் துறை பிறப்பித்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில், கடந்த 15 நாட்களுக்குள் 1 முதல் 7 வயதுக்குட்பட்ட 6 குழந்தைகள் அடுத்தடுத்து சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்தன. திடீரென ஏற்பட்ட சிறுநீரகச் செயலிழப்பு அதற்குக் காரணம் என்பது தெரியவந்தது. உயிரிழந்த அந்தக் குழந்தைகள் அனைவரும் 'கோல்ட் ரிப்' உள்ளிட்ட இருமல் மருந்துகளை உட்கொண்டிருந்தமை விசாரணையில் கண்டறியப்பட்டது. விசாரணையில், அந்தக் குழந்தைகளின் சிறுநீரகத் திசுவில் டை எத்திலீன் கிளைகால் (Diethylene Glycol) எனப்படும் இரசாயன வேதிப்பொருள் இருந்தது ஆய்வறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டது. பெயிண்ட், மை போன்றவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இந்த இரசாயனம், சம்பந்தப்பட்ட இருமல் மருந்துகளில் கலந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழக மருந்து கட்டுப்பாட்டுத் துறை துணை இயக்குநர் தலைமையிலான குழுவினர், இந்த மருந்தை உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவுகள் வெளியாகும் வரை, பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் ‘கோல்ட் ரிப்’ மருந்து விற்பனையையும் விநியோகத்தையும் நிறுத்தி வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச துயரச் சம்பவத்தின் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழகத்தில் இந்தத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/226821
-
மன்னாரில் பொலிஸ் காவலில் நபரொருவர் உயிரிழப்பு
மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் போதைப்பொருள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, பேசாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட 34 வயது நபர், இன்று (03) காலை தடுப்புக்காவலில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர், வவுனியா கூமாங்குளத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் கபிலன் (34) என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து தெரியவருகையில், பேசாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டாஸ்பத்திரி பகுதியில் நேற்று (02) மாலை, போதைப்பொருள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ராஜேந்திரன் கபிலன் என்ற நபர் கைது செய்யப்பட்டார். பொலிஸார் அவரைத் துரத்திப் பிடித்த நிலையில், அவருடன் இருந்த மற்றொரு நபர் தப்பி ஓடியதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட கபிலனை பொலிஸார் பேசாலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, தடுப்புக்காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டனர். பின்னர், பொலிஸ் நிலையத்தின் கூண்டில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில், இன்று (03) காலை அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். இன்று காலை 6:30 மணியளவில், அவரது சடலம் பேசாலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. மதியம் 12 மணியளவில், மன்னார் நீதிமன்ற பதில் நீதிவான் ஜெபநேசன் லோகு, பேசாலை பிரதேச வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டார். அதன் பின், அவர் பேசாலை பொலிஸ் நிலையத்திற்கும் சென்று, பொலிஸ் நிலைய சிறைக் கூடத்தைப் பார்வையிட்டு விசாரணைகளைத் தொடர்ந்தார். இந்நிலையில், உயிரிழந்த நபரின் தாய், இன்று (03) காலை பேசாலை பிரதேச வைத்தியசாலைக்கு வந்து, பொலிஸார் தனது மகனை அடித்துக் கொன்றதாகக் குற்றம் சாட்டியுள்ளார். -மன்னார் நிருபர் லெம்பட்- https://adaderanatamil.lk/news/cmgb3c26e00tco29nzci5q8wh
-
11 ஆயிரம் அடி உயரத்திலிருந்து விழுந்த இளைஞன் : உயிர் தப்பிய அதிசயம்!
03 Oct, 2025 | 12:43 PM அமெரிக்காவின் நெவடா மாகாணத்தில் உள்ள லோஸ் வேகாஸில் பாராசூட் சாகச விளையாட்டில் ஈடுபட்டிருந்த 25 வயதுடைய இளைஞர், பாராசூட் திடீரென செயலிழந்ததால் சுமார் 11 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். அதிர்ஷ்டவசமாக அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். சாகச விளையாட்டுகளுக்குப் பிரபலமான லோஸ் வேகாஸ் நகரில், மிட்செல் டீக்கின் (வயது 25) என்ற இளைஞன் பாராசூட் சாகசத்தில் ஈடுபட்டிருந்தார். அவருடன் அவரது பயிற்றுவிப்பாளரும் சென்றிருந்தார். அவர்கள் ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, துரதிர்ஷ்டவசமாக பாராசூட் திடீரெனச் செயலிழந்தது. இதன் காரணமாக, மிட்செல் டீக்கின் மற்றும் அவரது பயிற்றுவிப்பாளர் இருவரும் சுமார் 11 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே விழும் அபாயகரமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்த விபத்தில், இளைஞரான மிட்செல் டீக்கின் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இருப்பினும், அவருடன் சென்ற பயிற்றுவிப்பாளருக்கு படுகாயம் ஏற்பட்டது. விபத்து குறித்த தகவல் அறிந்ததும், மீட்புக் குழுவினர் விரைந்து சென்று, கீழே விழுந்த இருவரையும் விமானம் மூலம் மீட்டனர். உடனடியாக அவர்கள் இருவரும் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். பாராசூட் செயலிழந்ததற்கான காரணம் குறித்து லோஸ் வேகாஸ் பொலிஸார் மற்றும் சாகச விளையாட்டுத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/226772
-
இலங்கையில் தினமும் 100 புற்றுநோய் நோயாளிகள் பதிவு
இலங்கையில் தினமும் சுமார் 100 புற்றுநோய் நோயாளிகள் பதிவாவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 35,000 புற்றுநோய் நோயாளிகள் பதிவாகின்றனர். இவர்களில் 35% (அதாவது, சுமார் 13,000 பேர்) மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக அவர் கூறினார். கண்டி மாவட்டம், பொல்கொல்லவில் நேற்று (02) நடைபெற்ற நான்காவது ஆரோக்கிய நல மையத்தின் திறப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றிய அமைச்சர் இதனைத் தெரிவித்தார். வருடாந்த மருந்து செலவில் 30% புற்றுநோய் சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படுவதாகவும், இதைக் கட்டுப்படுத்த ஆரம்ப கட்டத்தில் நோயைக் கண்டறிவது ஒரே வழி எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 30 முதல் 70 வயதுக்குட்பட்ட ஆண்களிடையே மரணத்திற்கு தொற்றாத நோய்கள் முக்கிய காரணமாகவும், அதே வயதுடைய பெண்களிடையே புற்றுநோய் முக்கிய காரணமாகவும் உள்ளதாக சுகாதாரத் தரவுகள் வெளிப்படுத்துவதாக அமைச்சர் குறிப்பிட்டார். இருப்பினும், இந்த நிலைமை மாறி வருவதாகவும், தொற்றாத நோய்களால் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் மக்களின் உயிர்கள் இழக்கப்படுவது வருந்தத்தக்கது எனவும் அவர் கூறினார். இந்த சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்கள், மக்களுக்கு சுகாதார ஆலோசனை மற்றும் மருந்துகளை வழங்குவது மட்டுமல்லாமல், உள்ளூர் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை சேவைகளையும் படிப்படியாக அறிமுகப்படுத்தும் என்றும், உடற்பயிற்சி, யோகா, இசை சிகிச்சை போன்றவற்றை உள்ளடக்கிய இடமாக மாற்றப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmgavogg600smqplpggf8ww2q
-
பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த இலங்கையர்கள் இந்தோனேசியாவில் கைது!
கெஹல்பத்தர பத்மேவின் தாயார் ரிட் மனு தாக்கல் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கெஹல்பத்தர பத்மேவின் தாயார், தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படும் தனது மகன் தொடர்பில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். மகனுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட தடுப்பு உத்தரவு சட்டவிரோதமானது என அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, ஆட்கொணர்வு மற்றும் ரிட் நீதிமன்ற அதிகாரத்தின் கீழ் உத்தரவு ஒன்றைக் கோரி இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கின் இறுதி முடிவு எடுக்கப்படும் வரை, கைதியை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வெளியே உள்ள எந்த இடத்திற்கும் மாற்றுவதைத் தடுக்க, இடைக்கால நிவாரணத்தைக் அவர் கோரியுள்ளார். அதன்படி, இந்த விவகாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வழக்கின் விடயங்கள் ஆராயப்பட்டு உறுதிப்படுத்தப்படும் வரை கைதி வேறு இடத்திற்கு மாற்றப்பட மாட்டார் என சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்த சட்டத்தரணி நீதிமன்றத்தில் உறுதியளித்தார். கைதியை திணைக்கள வளாகத்தில் தடுத்து வைத்திருக்கும் போது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நடத்தப்படும் அனைத்து விசாரணைகளும் அங்கேயே நடத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். இந்த வழக்கு எதிர்வரும் 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. https://adaderanatamil.lk/news/cmgawabc200snqplpog9ybsvl
-
இலங்கை தொடர்பில் ஒரு நாட்டுக்கே உரிய சிறப்பு அறிக்கையாளர் நியமிக்கப்படவேண்டும் - சிவஞானம் சிறிதரன்
Published By: Vishnu 03 Oct, 2025 | 08:08 PM பல சாட்சியாளர்களும், மீறல்களிலிருந்து உயிர் தப்பியவர்களின் குடும்பத்தினரும் வயது முதிர்வடைந்திருப்பதுடன் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் அச்சத்திலும், நம்பிக்கை இழந்தும் வாழ்ந்துவருகின்றனர். எனவே பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதியை நிலைநாட்டும் வகையில் இலங்கை தொடர்பில் ஒரு நாட்டுக்கே உரிய சிறப்பு அறிக்கையாளர் நியமிக்கப்படவேண்டும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரின் பக்க நிகழ்வில் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரின் ஓரங்கமாக நடைபெற்ற பக்க நிகழ்வில் உரையாற்றியபோதே சிறிதரன் மேற்கண்டவாறு வலியுறுத்தினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது; சமாதானம் நிலவும் தற்காலத்திலும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இராணுவத்தினரின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு குறித்த எனது நீண்டகாலக் கவலையை வெளிப்படுத்த விரும்புகிறேன். இத்தகைய பகுதிகளில் வாழும் மக்கள் இன்றும் மனித உரிமைகளை ஒடுக்கக்கூடிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் கொடுங்கோன்மையான விதிகளுக்குப் பலியாகி வருகின்றனர். தற்போது செம்மணியில் கண்டறியப்பட்ட மனிதப்புதைகுழி தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவந்த நீதித்துறை விசாரணைக்கான அரசாங்க நிதி நிறுத்தப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி சாட்சியாளர்கள் மீதான ஒடுக்குமுறைகள், ஊடகவியலாளர்கள் கைதுசெய்யப்படல் போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாகப் பதிவாகிவருகின்றன. நான் 2013 ஆம் ஆண்டு முதல் ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணைப்பொறிமுறையை நிறுவவேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்திவருகிறேன். குறிப்பாக 2009 ஆம் ஆண்டு மேமாதம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்ற மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் முறையான நிபுணத்துவம் உடையவர்களால் சுயாதீனமானதும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும். எனவே இலங்கை தொடர்பில் ஒரு நாட்டுக்கே உரிய சிறப்பு அறிக்கையாளர் நியமிக்கப்படவேண்டும் என்ற விடயம் பேரவையில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்தில் உள்வாங்கப்படவேண்டும் என வலியுறுத்துகிறேன். அத்தோடு இடைக்கால நீதிப்பொறிமுறையின் ஓரங்கமாக மிகமோசமான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராகக் கடுமையான தடைகள் விதிக்கப்படவேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட தரப்பினர் நீதிக்கான அணுகலை மேற்கொள்வதற்கும், இழப்பீட்டைப் பெறுவதற்கும், விசாரணைகளில் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் பங்கேற்பதற்குமான வாய்ப்பு கிட்டவேண்டும். ஏனெனில் தமிழர் பகுதிகள் முழுமையாக இராணுவமயமாக்கப்பட்டிருப்பதனால், பாதிக்கப்பட்ட தரப்பினர் இலங்கை அரசாங்கத்தின் மீது அச்சம் கொண்டிருக்கின்றனர். துரதிர்ஷ்டவசமாக பல சாட்சியாளர்களும், மீறல்களிலிருந்து உயிர் தப்பியவர்களின் குடும்பத்தினரும் வயது முதிர்வடைந்திருப்பதுடன் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் அச்சத்திலும், நம்பிக்கை இழந்தும் வாழ்ந்துவருகின்றனர். எனவே இவ்விவகாரத்தில் நீதியை நிலைநாட்டுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/226833
-
யாழில் மாடியில் இருந்து குதித்த பாடசாலை மாணவி!
யாழ்ப்பாணம் - உடுவில் மகளிர் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் விளையாட்டு ஒன்றில் முதலிடம் பெற்றதால் அவரது வகுப்பு மாணவிகள் அவரிமிருந்து விலகி இருந்ததால் குறித்த மாணவி 2வது மாடியில் இருந்து குதித்ததால் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவமானது நேற்றையதினம் (02) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவை சேர்ந்த 14 வயதுடைய குறித்த மாணவி உடுவில் மகளிர் கல்லூரியின் மாணவிகள் விடுதியில் கடந்த ஒரு வருட காலமாக தங்கி நின்று கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் அவர் விளையாட்டு ஒன்றில் பங்குபற்றி முதலிடம் பெற்றுள்ளார். இதனால் அவரது வகுப்பு மாணவிகள் அவரிடம் இருந்து விலகி இருந்தனர். இதன் காரணமாக மனமுடைந்த மாணவி விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்ததால் காலில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது தனது வாக்குமூலத்தில் குறித்த மாணவி இதனை தெரிவித்துள்ளார். படுகாயம்டைந்த மாணவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். https://adaderanatamil.lk/news/cmgb1vtva00soqplpq3rp82y3
-
“கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக அரசு அஞ்சுகிறதா?” - திருமாவளவன்
'மறைமுக ஒப்பந்தம்' குற்றச்சாட்டு: விஜய் மீது நடவடிக்கை எடுக்க திமுக தயங்குகிறதா? பட மூலாதாரம், TVK படக்குறிப்பு, செப்டெம்பர் 27 நடந்த விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 3 அக்டோபர் 2025 "தவெக தலைவர் விஜய் மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பதன் பின்னணியில் மறைமுக ஒப்பந்தம் உள்ளது என சொல்லலாமா? விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டாம் என அழுத்தம் கொடுத்தது யார்?" என, அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியுள்ளார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். திருச்சியில் அக்டோபர் 2 அன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, கரூர் சம்பவத்தில் தவெக மீதான அரசின் அணுகுமுறையை அவர் விமர்சித்தார். "ஆனால், அப்படியெல்லாம் ஓர் அரசாங்கம் நடந்து கொள்ள முடியாது" என தி.மு.க செய்தித் தொடர்புத்துறை தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகிறார். கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் மீது வழக்குப் பதிவு செய்வதற்கு தி.மு.க அரசு பயப்படுகிறதா? விமர்சனம் எழுவது ஏன்? கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டெம்பர் 27 அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் ஐந்து பிரிவுகளின் கீழ் தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், தவெக இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் மற்றும் தவெக நிர்வாகிகள் பலர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதில் மதியழகன், நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. என்.ஆனந்த், சி.டி.ஆர்.நிர்மல்குமார் ஆகியோரின் முன் ஜாமின் மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது. கூட்ட நெரிசலால் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பாக விசாரிப்பதற்கு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. "கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் கைது செய்யப்படுவாரா?" என, முதலமைச்சர் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை அறிக்கை கிடைத்த பிறகு அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று மட்டும் பதில் அளித்தார். 'தமிழ்நாடு அரசு அச்சப்படுகிறதா?' படக்குறிப்பு, விஜய் மீது நடவடிக்கை எடுக்க அரசு அச்சப்படுகிறதா என திருமாவளவன் கேள்வி இந்தநிலையில், கரூர் உயிரிழப்புகள் தொடர்பாக தவெக தலைவர் விஜய் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தமிழ்நாடு அரசு அச்சப்படுகிறதா என்ற கேள்வியை வி.சி.க தலைவர் திருமாவளவன் எழுப்பியுள்ளார். திருச்சியில் அக்டோபர் 2 அன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கரூர் சம்பவத்தில் அரசு முறையாக இயங்கவில்லை எனக் குற்றம் சுமத்தி அதன் மூலம் அரசியல் செய்வதில் விஜய் குறியாக இருக்கிறார் என்பதைக் காண்பதற்கு அதிர்ச்சியாக உள்ளது" எனக் கூறினார். "கரூர் உயிரிழப்புகள் தொடர்பாக துளியும் வருத்தமோ, குற்ற உணர்வோ அவரிடம் இருப்பதாக தெரியவில்லை. ஆட்சியாளர்கள் மீது பழிபோடுவதால் அவர் எவ்வளவு ஆபத்தானவர் அல்லது ஆபத்தானவர்களின் ககைகளில் சிக்கியிருக்கிறார் என்பதைக் காணும்போது கவலையளிக்கிறது" எனவும் திருமாவளவன் தெரிவித்தார். கரூர் விவகாரத்தில் காவல்துறையின் மெத்தனம் அதிர்ச்சியளிப்பதாகக் கூறிய திருமாவளவன், "அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்வதற்கு உள்ள முகாந்திரம் விஜய்க்கு இல்லையா?" எனக் கேள்வி எழுப்பினார். 'விஜய் மீது வழக்குப் பதிவு செய்யலாம்' பட மூலாதாரம், Vijayan படக்குறிப்பு, விஜய் மீது வழக்குப் பதிவு செய்யலாம் என்கிறார் மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் "தவெகவின் தலைவராக விஜய் இருக்கிறார். நெரிசலுக்கு கூட்டம் கூடுவதில் ஏற்பட்ட குறைபாடுதான் பிரதான காரணமாக உள்ளது. அதிக மக்கள் கூடும்போது எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அக்கட்சி எடுக்கவில்லை" எனக் கூறுகிறார், மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன், "இதனை அரசாங்கம் செய்ய முடியாது" எனக் கூறும் கே.எம்.விஜயன், " அவரது கட்சியை அவர் தான் கவனிக்க வேண்டும். ஒரு கட்டடம் கட்டும்போது விபத்து ஏற்பட்டால் வீட்டு உரிமையாளர், ஒப்பந்ததாரர் மீதுதான் வழக்குப் போடுவார்கள். அந்தவகையில் கரூர் சம்பவத்துக்கு அக்கட்சியே பொறுப்பாக முடியும்" என்கிறார். தொடர்ந்து பேசிய கே.எம்.விஜயன், "எந்த இடத்தில் அதிக கூட்டம் கூடினாலும் அங்கு குழப்பம் இருக்கும். அதை சரிசெய்யும் வகையில் ஒருங்கிணைப்பதற்கு கட்சி நிர்வாகிகளுக்கு தெரிந்திருக்க வேண்டும்" எனக் கூறுகிறார். "அவ்வாறு ஒருங்கிணைக்காமல் இருந்திருந்தால் விஜய் மீது வழக்குப் பதிவு செய்யலாம்" எனவும் குறிப்பிட்டார். தி.மு.க அரசு அமைதியாக இருப்பது ஏன்? பட மூலாதாரம், TVK படக்குறிப்பு, விஜய் மீது தி.மு.க அரசு நடவடிக்கை எடுத்தால் அது அரசியலாக்கப்படும் என்கிறார் விஜயன் "விஜய் மீது தி.மு.க அரசு நடவடிக்கை எடுத்தால் அது அரசியலாக்கப்படும். விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது நீதித்துறை சார்ந்து விசாரணை நடந்ததாக பார்க்கப்படும்" எனக் கூறுகிறார் கே.எம்.விஜயன். "அரசு, அவசரப்பட்டு பழிவாங்கும் நடவடிக்கையை எடுக்கவில்லை என்பதைக் காட்டுவதற்காக அமைதியாக உள்ளனர். இவ்வாறு அரசு கையாள்வது என்பது சாதாரண விஷயம்" எனவும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய கே.எம்.விஜயன், "ஒரு நபரைக் கைது செய்து தேவையற்ற பிரபலத்தைக் கொடுக்காமல் தடுக்கும் வகையில் அரசு செயல்படுவதாகவும் பார்க்கலாம்" என்கிறார். "நடவடிக்கை எடுப்பதற்கு ஆதாரம் இல்லை என்று அர்த்தம் இல்லை. அந்த நடவடிக்கையை கண்ணியத்துடன் எடுக்கப்பட்டதைப் போன்ற கற்பிதத்தை ஏற்படுத்தும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளதாகவே பார்க்கிறேன்" எனவும் கே.எம்.விஜயன் தெரிவித்தார். ஆனால், "இந்த விவகாரத்தில் விஜய் மீது நடவடிக்கை எடுப்பது சாத்தியமில்லை" எனக் கூறுகிறார், மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன். விஜய் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா? படக்குறிப்பு, மாவட்ட நிர்வாகம் தான் பொறுப்பேற்க வேண்டும் என்கிறார் மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன். பிபிசி தமிழிடம் பேசிய ராதாகிருஷ்ணன், " ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுவிட்டது. ஆணையத்தின் அறிக்கை வரும் வரையில் யார் பொறுப்பு என யாரையும் குறிப்பிட முடியாது. கரூர் விவகாரத்தில் சம்பவம் நடந்த உடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் எஸ்.பி மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்" எனக் கூறுகிறார். "விஜய் குற்றவாளியா... இல்லையா என்பதைக் கூற முடியாது. அவரின் கூட்டத்துக்கு அனுமதி கொடுக்கும்போதே அந்த இடத்துக்கு எவ்வளவு பேர் வர முடியும் என்பதை உணர்ந்து அனுமதியை மறுத்திருக்கலாம்" எனவும் அவர் குறிப்பிட்டார். "மக்களைப் பாதுகாப்பது தான் அரசு நிர்வாகத்துக்கு முக்கியமானது" எனக் கூறுகிறார். ராதாகிருஷ்ணன். தொடர்ந்து பேசிய ராதாகிருஷ்ணன், "பரப்புரை நடந்த இடத்துக்கு தாமதமாக விஜய் வந்தததை ஒரு காரணமாக கூற முடியாது. எவ்வளவு கூட்டம் வந்தாலும் அதைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு நிர்வாகம் தயாராக இருந்திருக்க வேண்டும். மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு ஆட்சியர் தான் தலைவராக இருக்கிறார்" என்கிறார். "குற்றம் சுமத்துவதைவிட இவ்வளவு பெரிய தோல்வி யாரால் ஏற்பட்டது என்பதைப் பார்க்க வேண்டும்" எனவும் தெரிவித்தார். "வழக்கில் விஜய் பெயரை சேர்த்தாலும் எடுபடுவதற்கு வாய்ப்பில்லை. கூட்டத்துக்கு வந்தது மட்டும்தான் அவர் செய்த ஒரே வேலை. அதன்பிறகு என்ன நடக்கும் என்பதை மாவட்ட நிர்வாகம் தான் ஊகித்திருக்க வேண்டும். அந்தவகையில் அரசு இயந்திரம் தோல்வியடைந்துவிட்டது" எனக் கூறுகிறார் ராதாகிருஷ்ணன். பட மூலாதாரம், Ravikumar படக்குறிப்பு, விஜய் தன்னை அரசுக்கும் மேலானவராக காட்டிக் கொள்ள முற்படுவதாக கூறுகிறார் ரவிக்குமார். 'முதல்வரை பலவீனமாக காட்டுகிறார்' "இந்த விவகாரத்தில் அரசு நியாயமான அணுகுமுறையுடன் நடந்து கொள்ளவில்லை" எனக் கூறுகிறார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும் விழுப்புரம் தொகுதி எம்.பியுமான ரவிக்குமார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இறப்புகளுக்கு விஜய்தான் பொறுப்பு என்பது தெளிவாக தெரிகிறது. சிலர் இறந்துவிட்டதாக கூறியபோதும் அதைக் காது கொடுத்துக் கேட்காமல் சென்றுவிட்டார்" எனக் கூறுகிறார். முதலமைச்சரை பலவீனமான நபராக காட்டுவதைத்தான் விஜய் விரும்புவதாகக் கூறும் ரவிக்குமார், "தன்னை அரசுக்கும் மேலானவராக காட்டிக் கொள்ள முற்படுகிறார். அரசு பத்து லட்சம் அறிவித்தால் தான் 20 லட்சம் தரப் போவதாக கூறுகிறார்" என்கிறார். "ஆளும் அரசை பலவீனமானதாக தனது பேச்சில் காட்டுகிறார். தி.மு.க ஆட்சியின் அணுகுமுறையும் அதையொட்டியே இருக்கிறது. அவரைப் பார்த்து ஆளும்கட்சி பயப்படுவதாகவே அக்கட்சியின் தொண்டர்கள் பார்ப்பார்கள்" எனவும் ரவிக்குமார் கூறுகிறார். "இது அரசாங்கத்துக்கு பலவீனமானதாக முடியும்" எனக் கூறும் ரவிக்குமார், " மாவட்ட நிர்வாகத்துக்கு பொறுப்பு எனக் கூற முடியாது. விஜயைத்தான் பொறுப்பானவராக வழக்கில் கொண்டு வந்திருக்க வேண்டும்" என்கிறார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, விஜயைத்தான் பொறுப்பானவராக வழக்கில் கொண்டு வந்திருக்க வேண்டும்" என்கிறார் ரவிக்குமார். 'கூட்டணிக் கட்சிகள் மீது மட்டும் நடவடிக்கை' "தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தினால் அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது. கொடிக்கம்பம் அகற்றும் விவகாரத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது வி.சி.க கொடிக் கம்பங்கள்தான்" எனவும் ரவிக்குமார் தெரிவித்தார். மேலும், "கூட்டணிக் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கும்போது தயங்காத முதலமைச்சர், 41 பேர் மரணத்துக்குக் காரணமான விஜய் மீது நடவடிக்கை எடுப்பதற்குத் தயங்குவதாகவே பார்க்க முடியும்" என்கிறார் ரவிக்குமார் எம்.பி. பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, தி.மு.க செய்தித் தொடர்புக் குழுத் தலைவரும் முன்னாள் எம்.பியுமான டி.கே.எஸ்.இளங்கோவன் 'அப்படியெல்லாம் செயல்பட முடியாது' - டி.கே.எஸ்.இளங்கோவன் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கும் தி.மு.க செய்தித் தொடர்புக் குழுத் தலைவரும் முன்னாள் எம்.பியுமான டி.கே.எஸ்.இளங்கோவன், "விஜயை கைது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் திருமாவளவன் பேசுகிறார். அப்படியெல்லாம் ஓர் அரசாங்கம் நடந்து கொள்ள முடியாது" எனக் கூறுகிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "நாங்கள் அரசியல் கட்சியை மட்டும் நடத்தவில்லை. ஓர் அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். அரசு நியாயமாக நடந்து கொள்ளும் வகையில் ஓய்வுபெற்ற நீதிபதியைக் கொண்டு ஆணையம் அமைத்துள்ளது. அதன்படி அரசு நடவடிக்கை எடுக்கும்" என்கிறார். தொடர்ந்து பேசிய டி.கே.எஸ்.இளங்கோவன், " கரூரில் தவெக பரப்புரை நடந்த அதே இடத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி கொடுத்துள்ளோம். ஒரு கட்சிக்கு அனுமதி கொடுத்துவிட்டு மற்ற கட்சிக்கு கொடுக்காவிட்டால் அக்கட்சியைப் பார்த்து நாங்கள் பயந்துவிட்டதாக பரப்புவார்கள்" எனக் கூறுகிறார். "கரூர் பரப்புரைக்கு பத்தாயிரம் பேர் கூடுவார்கள் எனக் கூறியதால் அவர்கள் முதலில் கேட்ட இடங்களை மறுத்துவிட்டு வேலுசாமிபுரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதை அரசியலாக பார்க்க வேண்டியதில்லை" எனவும் டி.கே.எஸ்.இளங்கோவன் குறிப்பிட்டார். பட மூலாதாரம், TVK படக்குறிப்பு, இதை அரசியலாக பார்க்க வேண்டியதில்லை என்கிறார் டி.கே.எஸ்.இளங்கோவன். தி.மு.க - தவெக இடையே ரகசிய உடன்பாடா? கரூர் பரப்புரை தொடர்பாக அனைத்தையும் விசாரித்த பின்னரே காவல்துறை அனுமதி கொடுத்ததாகக் கூறும் டி.கே.எஸ்.இளங்கோவன், "அங்கு கூடிய கூட்டம் ஜெனரேட்டர் அறையை உடைத்தது. மதியம் வரவேண்டிய தவெக தலைவர் இரவு தான் வந்தார். வெயில் காரணமாகவும் தண்ணீர், உணவு இல்லாமலும் மக்கள் மயக்கம் போட்டு விழுந்தனர்" என்கிறார். "விசாரணை ஆணையம் என்ன கூறுகிறது என்பதைப் பார்த்துவிட்டுத் தான் நடவடிக்கை எடுக்க முடியும். ஏன் தாமதமாக வந்தார் எனக் கேள்வி எழுப்பி நாங்களாக நடவடிக்கை எடுக்க முடியாது" எனவும் அவர் தெரிவித்தார். தி.மு.கவுக்கும் தவெகவுக்கும் ரகசிய உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் எழுவதாக திருமாவளவன் கூறுவது குறித்துக் கேட்டபோது, " அதை ஏற்க முடியாது. 'எங்களின் ஒரே எதிரி தி.மு.க தான்' என விஜய் பேசி வருகிறார். அவருடன் நாங்கள் எப்படி அனுசரித்து செல்ல முடியும்?" எனக் கேள்வி எழுப்புகிறார், டி.கே.எஸ்.இளங்கோவன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gzy53dpl9o
-
சட்டவிரோத சொத்துக்களை அரசு பறிமுதல் செய்ய முடியும் - ரங்க திஸாநாயக்க
03 Oct, 2025 | 10:15 AM சட்டவிரோத சொத்துக்களை பறிமுதல் செய்யும் புதிய சட்டத்தின் கீழ் அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளால் சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட சொகுசு விடுதி மற்றும் வீடுகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சட்டவிரோத சொத்துக்களை பறிமுதல் செய்யும் புதிய சட்டமூலம் அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த சட்டத்தின்படி, உரிமையாளர்கள் தங்களது சொத்துக்களை சேகரித்த வழிமுறையை நியாயப்படுத்த தவறினால் அல்லது முடியாவிட்டால், அவற்றை அரசு பறிமுதல் செய்ய முடியும். அதன்படி, சொத்துக்களின் உரிமையாளர்கள் தங்களது சொத்துக்கள் தொடர்பான சட்டபூர்வமான மூலங்களை நிரூபிக்க வேண்டும். இல்லை என்றால் தண்டனை விதிக்கப்படாமலேயே, சொத்துக்களை இழக்க நேரிடும் என இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/226755
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
பையன் முன்பும் ஒரு திரியில் எழுதி இருந்தவர், அவரது தனிமையை கலைத்து மாற்றம் வரவே இந்த போட்டிகளில் பங்குபற்ற வேண்டுகோள் விடுத்தேன். அதோட பையன் இல்லாத போட்டித் திரிகளில் கலகலப்பிருக்காதே!
-
பாகிஸ்தானில் தொடர் மழை, வெள்ளத்தால் 275 சிறுவர்கள் பலி : உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது!
02 Oct, 2025 | 01:05 PM பாகிஸ்தானில் நடப்பு ஆண்டில் பெய்து வரும் தொடர் மழையாலும், அதனால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்காலும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 1,006ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) தெரிவித்துள்ளது. கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு, கைபர் பக்துன்குவா, பஞ்சாப், சிந்த், கில்ஜித்-பல்திஸ்தான், பலுசிஸ்தான், ஆசாத் ஜம்மு காஷ்மீர் மற்றும் இஸ்லாமாபாத் தலைநகர் பிரதேசம் ஆகிய மாகாணங்களை கடுமையாகப் பாதித்துள்ளது. இதனால் பலியானவர்களில் 275 குழந்தைகள், 163 பெண்கள் மற்றும் 568 ஆண்கள் அடங்குவர். வெள்ளம் தொடர்பான அனர்த்தங்களில் மொத்தம் 1,063 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 321 குழந்தைகள், 450 ஆண்கள் மற்றும் 292 பெண்கள் அடங்குவர். பஞ்சாப் மாகாணத்தில் அதிகபட்சமாக 661 பேர் காயமடைந்துள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றது. பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும், சேதத்தின் அளவை மதிப்பிடவும் அதிகாரிகள் போராடி வருகின்றனர். இந்த வெள்ளப் பாதிப்பின் தொடர்ச்சியாக, நாட்டில் பணவீக்கம் தற்காலிக அடிப்படையில் அதிகரிக்கும் என்றும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இந்த இயற்கை சீற்றம் பாகிஸ்தானில் பெரும் அழிவையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/226671
-
மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவில் கைது!
Published By: Digital Desk 1 02 Oct, 2025 | 02:29 PM முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி இலஞ்சம் மற்று் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று வியாழக்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளார். நெவில் வன்னியாராச்சி வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகிய போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத சொத்து சேர்ப்பு தொடர்பான விசாரணை தொடர்பில் நெவில் வன்னியாராச்சி கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது அவர், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் விசாரணைக்குட்படுத்தபட்டு வருகின்றார். அதனையடுத்து நெவில் வன்னியாராச்சி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/226676
-
மீண்டும் உச்சத்தை தொட்ட தேசிக்காய் விலை!
02 Oct, 2025 | 02:28 PM தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ தேசிக்காய் 1,700 ரூபாய் முதல் 1,800 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய வர்த்தக சங்கத்தின் தலைவர் சி. எஸ்.சிறிவர்தன தெரிவித்துள்ளார். தேசிக்காயின் அறுவடை குறைந்ததாலும் தேவைக்கு ஏற்ப விநியோகிக்க முடியாததாலும் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/226681