Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார பிணையில் விடுவிப்பு! இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக 9 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளதால், தன்னை பிணையில் விடுவிக்கக் கோரி, ஞானசார தேரர் தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. https://www.samakalam.com/சிறைத்தண்டனை-விதிக்கப்-3/
  2. ஜெனிவா கூட்டத் தொடர் ஆரம்பம்; இன்று அமைச்சர் விஜித உரை! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை (24) ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் நிலையில், நேற்றைய தொடக்க அமர்வில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், தொடர்பில் குறிப்பாக எதனையும் பிரஸ்தாபிக்கவில்லை. இருப்பினும் விசேடமாக இஸ்ரேல் – பலஸ்தீன மோதலால் மக்கள் மிகமோசமான துயரத்துக்கு முகங்கொடுத்திருப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், சர்வதேச சட்டங்களுக்கு முரணாக இஸ்ரேலினால் காஸா மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்தும், ஹமால் உள்ளிட்ட ஏனைய பலஸ்தீன ஆயுதக்குழுக்களின் மீறல்கள் குறித்தும் சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்படவேண்டியது அவசியம் என வலியுறுத்தினார். அதேபோன்று சர்வதேச மனித உரிமைகள் நிலைவரம், உலகளாவிய ரீதியில் அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் முகங்கொடுத்துவரும் நெருக்கடிகள், காலநிலை மாற்ற சவால்கள், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் தவறான பிரயோகம் என்பன உள்ளடங்கலாக உலகநாடுகள் மத்தியில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தவல்ல பொதுவான விடயங்கள் குறித்து வோல்கர் டேர்க் அவரது உரையில் சுட்டிக்காட்டினார். இந்நிலையில் இக்கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பங்கேற்றிருக்கும் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், செவ்வாய்க்கிழமை (25) ஜெனிவா நேரப்படி பி.ப 3.40 மணிக்கு உரையாற்றவுள்ளார். இதன்போது பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கும், நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து அவர் தெளிவுபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை இலங்கை தற்போது நடைமுறையிலிருக்கும் தீர்மானத்தை எவ்வாறு அமுல்படுத்துகின்றது என்பது குறித்து எதிர்வரும் 3 ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் வாய்மொழிமூல அறிக்கையை வெளியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.samakalam.com/ஜெனிவா-கூட்டத்-தொடர்-ஆரம-2/
  3. ஊடகவியலாளர்களிடம் பொலிஸார் 6 மணி நேரம் விசாரணை! ‘தையிட்டி விகாரையை இடிக்க வாரீர்’ என முகநூலில் பகிரப்பட்ட பதிவு தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 2 ஊடகவியலாளர்களிடம் பலாலி பொலிஸார் சுமார் 6 மணி நேரம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலங்களை கடந்த வௌ்ளிக்கிழமை (21) பெற்றுள்ளனர். ‘தையிட்டி விகாரையை இடிக்க வாரீர்..’ என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பெயரில் போலி முகநூல்களில் பதிவுகள் பகிரப்பட்டன. குறித்த பதிவுகள் பகிரப்பட்டு சில மணிநேரங்களில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறித்த பதிவு போலியானது என தனது சமூக ஊடகங்களில் பதிவிட்டதுடன், ஊடக சந்திப்பு ஒன்றினையும் நடாத்தி அது போலியான விளம்பரங்கள் என அறிவித்திருந்தார். அந்நிலையில் கடந்த வாரம், ‘விகாரையை இடிக்க வாரீர்’ என போலி முகநூல்களில் விளம்பரப்படுத்தப்பட்ட விடயம் தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் பலாலி பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் யாழ். பிராந்திய ஊடகவியலாளர்களான கந்தசாமி பரதன், தம்பித்துரை பிரதீபன் ஆகிய 2 ஊடகவியலாளர்களிடம் வாக்கு மூலம் பெறுவதற்காக பலாலி பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பிரிவுக்கு அழைத்த பொலிஸார், ஊடகவியலாளர்களை அங்கிருந்து உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பலாலி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 2 ஊடகவியலாளர்களின் தொலைபேசிகளை பெற்று சோதனையிட்டதுடன், அவர்களிடம் சுமார் 6 மணி நேரம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்டனர் பின்னர், குறித்த வழக்கு விசாரணைகள் தொடர்பில் தாம் அழைக்கும் போது நீதிமன்றுக்கு சமூகமளிக்க வேண்டும் எனும் நிபந்தனையுடன் இருவரையும் பொலிஸார் விடுவித்துள்ளனர். அதேவேளை, தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்த, முன்னாள் உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், நல்லூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் வாசுகி சுதாகரன் உள்ளிட்டோரை பலாலி பொலிஸார் வாக்கு மூலம் வழங்க என வியாழக்கிழமை பலாலி பொலிஸ் நிலையத்தின் உப பிரிவுக்கு அழைத்து சுமார் 2 மணி நேரம் காத்திருக்க வைத்த பின்னரே வாக்கு மூலங்களை பெற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.samakalam.com/ஊடகவியலாளர்களிடம்-பொலிஸ/
  4. செவ்வந்தியின் தாயும் சகோதரனும் கைது editorenglishFebruary 25, 2025 கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக மேலும் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதைக் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இஷாரா செவ்வந்தியின் தம்பி மற்றும் தாயாரும் அடங்குகிறார்கள். இஷாரா செவ்வந்தியே கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை வழங்கிய பெண் என அடையாளம் காணப்பட்டுத் தேடப்பட்டு வரும் முக்கிய சந்தேக நபராவார் என்பது குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/212077/
  5. காணாமல்போன மகனைத் தேடி போராடி வந்த ‘மாரி அம்மா’ காலமானார் February 24, 2025 5:27 pm வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சுழற்சி முறைப் போராட்டத்தின் 3000 ஆவது நாளான இன்று, தனது மகனைத் தேடி வந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசித்து வந்த மாரி அம்மா என்றழைக்கப்படும் வேலுசாமி மாரி என்பவரே தனது 79 ஆவது வயதில் இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரின் மகனான வேலுச்சாமி சிவகுமார் 2009 ஆம் ஆண்டு இறுதிப் போரில் காணாமல் ஆக்கப்பட்டார். இந்நிலையில், மாரி அம்மா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு போராட்டங்களில் முன்னின்று போராடியிருந்தார். வவுனியா ஏ – 9 வீதியில் சுழற்சி முறையில் இடம்பெற்று வரும் போராட்டத்திலும் இவர் தொடர்ச்சியாகப் பங்குபற்றியிருந்தார். தனது மரணத்துக்கு முன்பதாக தனது மகனை நேரில் பார்த்து விடுவேன் என ஏங்கிய ஒரு தாயின் ஏக்கம் இன்றுடன் நிறைவேறாமல் முற்றுப் பெற்றுள்ளது. https://oruvan.com/mari-amma-who-fought-to-find-her-missing-son-passes-away/
  6. போட்டி முடிய 60 புள்ளிகள் வித்தியாசம் வந்தாலும் வரலாம்😜
  7. பிரித்தானிய நேரப்படி நாளை செவ்வாய் (25 பெப்) 09:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 7) குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி AUS எதிர் SA 12 அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனவும் 12 பேர் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்! அவுஸ்திரேலியா ஏராளன் சுவி அல்வாயன் தமிழ் சிறி ரசோதரன் வசீ வாத்தியார் நியாயம் வாதவூரான் சுவைப்பிரியன் கோஷான் சே நீர்வேலியான் தென்னாபிரிக்கா ஈழப்பிரியன் வீரப் பையன்26 நிலாமதி நுணாவிலான் நந்தன் செம்பாட்டான் குமாரசாமி எப்போதும் தமிழன் புலவர கந்தப்பு பிரபா கிருபன் இப்போட்டியில் போட்டியில் யார் புள்ளிகளைப் பெறுவார்கள்?
  8. ஆறாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி தொடர்ச்சியாக விக்கெட்டுக்களைப் பறிகொடுத்து இறுதியில் 9 விக்கெட்டுகளை இழந்து சராசரியான 236 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி, இலகுவான ஓட்ட இலக்கை ரச்சின் ரவிந்திராவின் சதத்துடன் 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 240 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. முடிவு: நியூஸிலாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது பங்களாதேஷ் அணி வெல்லும் எனக் கணித்த @ஏராளன் க்குப் புள்ளிகள் இல்லை, மற்றைய அனைவருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  9. பிரித்தானிய நேரப்படி நாளை திங்கள் (24 பெப்) 09:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 6) குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி BAN எதிர் NZ ஒரே ஒருவர் மாத்திரம் பங்களாதேஷ் வெல்லும் எனக் கணித்துள்ளார். ஏனையவர்கள் அனைவரும் நியூஸிலாந்து வெல்லும் எனக் கணித்துள்ளனர். பங்களாதேஷ் ஏராளன் இப்போட்டியில் போட்டியில் ஒருவருக்கு மாத்திரம் முட்டையா அல்லது 23 பேருக்கு முட்டையா?
  10. ஐந்தாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்த்தான் அணி நிலைத்து ஆடமுடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுக்களைப் பறிகொடுத்து 49.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து சராசரியான 241 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய இந்திய அணி, இலகுவான ஓட்ட இலக்கை விராட் கோலியின் சதத்துடன் 42.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 244 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. முடிவு: இந்திய அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது இந்திய அணி வெல்லும் எனக் கணித்த 19 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. பாகிஸ்த்தான் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்கு புள்ளிகள் இல்லை. இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  11. சமாதானம் உருவாகுமா? sudumanal மாறிவரும் பூகோள அரசியல் THanks for image: Aljazeera தான் ஆட்சிக்கு வந்து 24 மணி நேரத்திற்குள் உக்ரைன்-ரசியா போரை சமாதானம் மூலம் முடிவுக்கு கொண்டுவருவேன் என ட்றம்ப் தேர்தலுக்கு முன் கூறிவந்தார். அது அவளவு இலகுவில் முடியாமல் போனது. ஏன், இப்போதும் அது சாத்தியமற்றது என்பதிலிருந்து சாத்தியமானது என்ற எல்லைக்கள் வந்தபாடில்லை. அமெரிக்காவுக்கும் ரசியாவுக்கும் இடையிலான நிழல்யுத்தம் என பலரும் நினைத்திருந்தார்கள். அது உண்மையில் நேற்றோவுக்கும் ரசியாவுக்கும் இடையிலான நிழல்யுத்தம் என்ற வியாபகத்தைக் கொண்டது. அதிலும் குறிப்பாக அமெரிக்காவுக்கான அச்சுறுத்தலாக ரசியா இருக்கிறது என அமெரிக்காவால் ஒருபோதும் பர்க்கப்படவில்லை. மாறாக ஐரோப்பாவிற்கான பாதுகாப்பு அச்சுறுத்தலென உருவாக்கப்பட்ட புனைவுக் கதையாடலைக் கொண்டு போருக்கான சூழலை உருவாக்கி ரசிய ஆக்கிரமிப்பை சாதித்ததுதான் நடந்தது. வரலாற்று ரீதியில் தன்னை ஐரோப்பாவாகவே உணர்ந்து செயற்பட்ட ரசியா 2000 ஆண்டளவில் நேற்றோவில் சேர விண்ணப்பித்திருந்தது. அது நேற்றோவால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதற்கான பௌதீகக் காரணம் ரசியா மிகப் பெரும் பிரதேச அளவைக் கொண்டது என்பது ஆகும். அதேநேரம் அவர்களது மனக்கட்டமைப்பானது ரசியா மீது வரலாற்று ரீதியிலான அச்சம் கொண்டிருக்கிறது. ரசியா கம்யூனிச நாடு இல்லை என்றபோதும் சோவியத் வழி உருவாகிய கம்யூனிச வெறுப்பு மனநிலையின் தொடர்ச்சியும் ஐரோப்பாவை விட்டு அகலவில்லை.. இரண்டாம் உலகப் போரில் ஐரோப்பிய நாடுகளை தோற்கடித்து மொஸ்கோவுக்கு வெறித்தனமாக முன்னேறிய கிட்லரின் படைகளை சோவியத் யூனியன் எதிர்கொண்டு, 27 மில்லியன் மக்களின் உயிர் அர்ப்பணிப்பை பெரும் விலையாகக் கொடுத்து தோற்கடித்திருந்தது. அந்த சாகசம் ஐரோப்பியர்களின் மனக்கட்டமைப்பில் சோவியத் இன் மையமாக செயற்பட்ட ரசியா மீதான கள்ளப் பயம் ஒன்றினையும் ஏற்படுத்தியிருந்தது. ரசியாவை பலவீனப்படுத்தி கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற பிரமை அவர்களை தொற்றிக் கொண்டது. அதனால்தான் 1989 இல் கொர்பச்சேவ் க்கு நேற்றோ கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் ஓர் அங்குலம்கூட நேற்றோ ஜேர்மனை விட்டு ரசியா நோக்கி நகராது என கொர்பச்சேவ் நம்பினார். இந்த பேச்சில் மிக முக்கியமாக அமெரிக்க வெளிநாட்டமைச்சர் ஜேம்ஸ் பெக்கர் அவர்களும் இந்த உறுதிமொழியை வழங்கியிருந்தார். கம்யூனிசத்தை எதிர்கொள்ளவென 1949 இல் உருவாக்கப்பட்ட (அமெரிக்க-மேற்கு ஐரோப்பிய கூட்டான) நேற்றோ கூட்டமைப்புக்கு எதிர்நிலையாக, (சோவியத் யூனியன்- கிழக்கு ஐரோப்பிய கூட்டணியான) வார்சோ கூட்டமைப்பு 1955 இல் உருவாக்கப்பட்டது. 1989 இல் வார்சோவை கலைத்துவிட கொர்பச்சேவ் முடிவுசெய்தபோதுகூட நேற்றோவைக் கலைத்துவிட அவர் கோரவில்லை. சோவியத் இன் வீழ்ச்சி, அதாவது முதலாளித்துவம் காட்டி வெருட்டிய ‘கம்யூனிச’ கட்டமைப்பும் வீழ்ச்சியடைந்தபோது நேற்றோவுக்கான தேவை இல்லாமலாகியது. அது வாழ்வா சாவா என்ற நிலையில் கிடந்தபோது அதை உயிர்ப்பூட்டி வளர்க்க புதிய எதிரிகள் தேவைப்பட்டார்கள். அது ரசியாவாக இருந்தது. எனவே ‘நேற்றோ விரிவாக்கம்’ அதை உயிர்ப்பித்தது. அதற்கெதிராக ரசியா பலமுறை ஆட்சேபம் தெரிவித்திருந்தது. அதையெல்லாம் தனக்கான ரொனிக்காக எடுத்துக் கொண்டு நேற்றோ விரிவாக்கத்தை ரசிய எல்லைவரை கொண்டுபோய் சீண்டுவதன் மூலம் ரசியா எதிரியின் இடத்தில் நிலைநிறுத்தப்பட்டது. சோவியத் வீழ்ச்சிவரை இருதுருவ முகாமாக இருந்த உலகம் அமெரிக்காவின் கையில் ஒருதுருவ உலகமாக மாறியது. 2010 களில் உருவான அரபுவசந்த நிறப் புரட்சியை ரசியாவுக்குள் காண மேற்குலகம் ஆசைப்பட்டது. அல்லது அது நடக்கும் என நம்பியது. இதன் அங்கமாக 2014 இல் ஒறேஞ்ச் புரட்சி என அழைக்கப்பட்ட ‘மைடான்’ கிளர்ச்சியை உருவாக்கி, ஒரு ஆட்சிக் கவிழ்ப்புச் சதியை உக்ரைனில் அமெரிக்கா நிறைவேற்றியது. உக்ரைனும் ரசியாவும் சகோதர நாடுகளாக இருந்ததால் நிறப்புரட்சி ரசியாவுக்குள் இலகுவில் சாத்தியமாகும் என அவர்கள் நம்பி ஏமாந்தனர். அந்த ஆட்சிக் கவிழ்ப்பில் வந்தவர்தான் பெற்றோ புறொசெங்கோ என்பவர். உசாரடைந்த ரசியா மூன்று நாள் போர் தொடுத்து கிரைமியாவை தமதாக்கியது. கிரைமியா செங்கடலால் சூழப்பட்ட ஒரு குடாநாடு. சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த இராணுவ கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த -கடற்படைத்தளமாக இருந்த- இக் குடாவை சோவியத் சிதைவின்போது, ரசியா-உக்ரைன் இடையிலான பாதுகாப்பு உடன்பாட்டின் அடிப்படையில் உக்ரைனுக்கு வழங்க ரசியா ஒப்புக் கொண்டது. எதிர்பாராத விதமாக 2014 ஆட்சிக்கவிழ்ப்புடன் அமெரிக்க சார்பு அரசு உருவாகியதால், தமக்கிடையேயான உடன்படிக்கையை மீறி கிரைமியா அமெரிக்காவின் அல்லது நேற்றோவின் கைக்கு போய்விடலாம் அல்லது அவர்களின் இராணுத் தளமாக மாற்றப்படலாம் என ரசியா அச்சமடைந்தது. போர்தொடுத்து கைப்பற்றியது. புறொசெங்கோவின் அரசு டொன்பாஸ் உள்ளடங்கிய கிழக்கு உக்ரைனில் வாழ்ந்த ரசிய மொழிபேசும் சிறுபான்மையினரை பயங்கரமாக ஒடுக்கியது. சுமார் 14000 பேர் அவரது ஆட்சிக் காலத்தில் கொல்லப்பட்டனர். எல்லாமே அமெரிக்காவினதும் நேற்றோவினதும் நிகழ்ச்சிநிரலுடன் நடத்தப்பட்டது. இதற்கெதிரான ரசிய சிறுபான்மையினப் போராட்டக் குழுக்களுக்கு ரசியா உதவிசெய்தது. 2008 இல் றுமேனியாவில் நடந்த நேற்றோ மாநாட்டில் ஜோர்ஜ் புஸ் யூனியர் உக்ரைனை நேற்றோவோடு இணைக்கும் திட்டத்தை முன்மொழிந்தபோது, அதை வன்மையாக எதிர்த்தவர்கள் ஜேர்மன் சான்சலர் அங்லா மேர்க்கல் உம் பிரான்சின் சாக்கோசியும் ஆவர். இது ரசியாவுடனான மோதலில் கொண்டு போய் நிறுத்தும் என அவர்கள் அன்றே எச்சரித்திருந்தார்கள். அதுவே இறுதியில் நடந்தது. உக்ரேன் நேற்றோவினது ஆடுகளமாக மாறியது. நேற்றோவின் விரிவாக்கத்தை ஆரம்பத்திலிருந்து எச்சரித்து வந்தது ரசியா. அது வரைந்த சிவப்புக் கோட்டுக்குள் நேற்றோ உக்ரைனின் முதுகில் பிடித்து தள்ளி போருக்குள் மாட்டிவிட்டது. ட்றம்பின் வருகைக்குப் பின் ஏற்படுகிற மாற்றங்கள் யாரும் இலகுவில் எதிர்வுகூற முடியாத அதிரடிகளாக வெளிப்படுகிறது. அது அவரின் தனிப்பட்ட குணாம்சமாக எடுத்துக்கொள்ளப்பட முடியுமா என்பது கேள்விக்குறியாக இருப்பினும், சீனாவினதும் பிரிக்ஸ் அமைப்பினதும் எழுச்சி உலக ஒழுங்கையும் ஒருதுருவ உலகையும் அசைத்துப் பார்க்கும் நிலைக்கு வருவதை கவனத்தில் எடுத்து அமெரிக்கா தன்னை தகவமைத்து தனது உலகாதிக்க நிலையை (ஒருதுருவ ஒழுங்கை) பேண சில அசைவுகளை செய்யவேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. அதன் வெளிப்பாடே MAGA (Make America Great Again) என்ற கோசமாகும். அதை அவர் பொருளாதாரப் போராகவே அறிவிக்கிறார். எனவே இதுவரை அரசியல் போராக இருந்த நிலையை மாற்றி போருளாதாரப் போர் என்ற நிலைக்குள் வருகிறபோது, அரசியல் நண்பர்களாகவும் அமெரிக்காவின் இழுவை வண்டிகளாகவும் இருந்த கனடா, ஐரோப்பிய ஒன்றியம் என்பவற்றின் இடம் ஆட்டம்காணத் தொடங்கியிருக்கிறது. இது மீண்டும் தடத்தில் ஓடுமா இல்லையா என்பதை எதிர்வுகூற முடியாதுள்ளது. மூன்று பெரும் ஆதிக்கசக்திகளாக அமெரிக்கா சீனா ரசியா உள்ளன. தன்னை ஐரோப்பா என அடையாளப்படுத்தி உள்ளமைந்திருந்த ரசியாவை ஆசியா நோக்கி தள்ளியதோடல்லாமல் சீனாவின் நண்பனாகவும் ஆக்கியது, நேட்டோவினதும் மேற்குலகத்தினதும் அணுகுமுறை!. இதை ட்றம்ப் சரியாகவே கணித்திருக்கிறார். அவர் ரசியாவை தன் பக்கம் இழுக்க முடியாவிட்டாலும்கூட, ஒருவேளை சீனாவுடன் அமெரிக்கா போர் தொடுக்க வேண்டி ஏற்பட்டால், ரசியாவை அதில் ஈடுபடாமல் பிரித்து வைத்திருக்கவாவது சில தந்திரோபாயங்களை செய்தாக வேண்டி இருக்கிறது. நிக்சன் காலத்தில் அவர் அப்போதைய சோவியத் யூனியனுடன் சீனா உறவு கொண்டுவிடாதபடி சீனாவுடனான உறவைப் பேணிய தந்திரோபாயத்தை செய்தார். அதையொற்றிய வழிமுறையை ட்றம்ப் இப்போ சீனாவின் பக்கமாக ரசியாவை தள்ளாதிருக்க முயற்சி எடுக்கிறார். அது எந்தளவு சாத்தியமாகும் எனத் தெரியாது. ஏனெனில் அமெரிக்கா மீதான அபிப்பிராயத்தை புட்டின் அவளவு இலகுவாக மாற்றிக் கொள்வாரா என்பது கேள்விக்குறி. இது இப்படியிருக்க, ட்றம்ப் இன்னொரு படி மேலே போய் G-7 பணக்கார நாடுகளின் கூட்டமைப்பில் ரசியாவையும் உள்ளடக்கி G-8 அமைப்பாக மாற்றவேண்டும் என ஒரு முன்மொழிவை வைக்கிறார். ரசியாவின் எல்லைவரை நேற்றோவை கொண்டு போனது பிழை என்கிறார். ரசியா அதுகுறித்து பாதுகாப்பு அச்சம் கொண்டதை புரிந்துகொள்ள முடிகிறது என்கிறார். என்னவிதமான குத்துக்கரணம் இது. இவைகளெல்லாம் ட்றம்பின் ஒரு தந்திரோபாய அணுகுமுறை. எனவே உக்ரைனை கைவிட ட்றம்ப் முடிவு செய்திருக்கிறார். உக்ரைன் போரில் அமெரிக்க ஆதிக்கம் அற்ற நேட்டோவை வைத்து ஐரோப்பா என்ன செய்யப் போகிறது என்ற மிகப் பெரும் கேள்வி எழுகிறது. புரூசல்ஸில் 12.2.25 அன்று நடந்த நேற்றோ பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் Pete Hegseth அவர்கள் மிகத் தெளிவான செய்தியொன்றை ஐரோப்பாவுக்கு தெரிவித்துள்ளார். “நாம் நேற்றோவை பலப்படுத்த வேண்டும். அதற்கான பங்களிப்பு ஐரோப்பாவிடமிருந்து அதிகரிக்க வேண்டும்” என்பதை வலியுறுத்திய அதேவேளை, உக்ரைன்-ரசிய போர் சமாதான வழியில் நிறுத்தப்பட வேண்டும் என்றார். 2014 இல் இருந்த உக்ரைன் எல்லையை திரும்ப பெறுவது சாத்தியமில்லை எனவும், கிரைமியாவை உக்ரைன் திரும்பப் பெறுவது சாத்தியமில்லை எனவும், உக்ரைன் நேற்றோவில் சேர்வது என்பது நடைபெறாத காாரியம் எனவும் அவர் சொன்னதோடு மட்டும் நிற்கவில்லை. உக்ரைனின் பாதுகாப்பு உத்தரவாதத்தை ஐரோப்பாதான் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும், “நாம் (அமெரிக்கா) அதில் பங்கேடுக்க மாட்டோம்” என்றும் சொல்லியிருக்கிறார். ஒருவேளை உக்ரைனில் சமாதானப் படையை நிறுத்தும் நிலை உருவானால், அது ஐரோப்பிய, ஐரோப்பியரல்லாத படைகளாக இருக்க வேண்டும். எந்தச் சந்தர்ப்பத்திலும் ‘நேற்றோ’ என்ற லேபலின் கீழ் அது இருக்கக் கூடாது என்றார். இதேநேரம் மூனிச் பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்க துணை ஜனாதிபதி JD Vance அவர்கள் ஐரோப்பாவுக்கு (வெளிப்பாட்டுச் சுதந்திரம் உட்பட) ஜனநாயகம் பற்றி காட்டமாக வகுப்பெடுத்திருக்கிறார். என்னவிதமான கோமாளித்தனமும் அதிகாரத்துவமும் இது!. ஐரோப்பாவை இது அதிரவைத்திருக்கிறது. ஐரோப்பிய-அமெரிக்க உறவை பாதிக்க வைக்கக்கூடியளவு இந்த உரை அமைந்திருக்கிறது பொருளாதார ரீதியாகவும், பாதுகாப்பு ரீதியாகவும், பெரியண்ணன் உறவிலும் அமெரிக்காவில் தங்கியிருக்கும் ஐரோப்பா இந்த அதிரடி கூற்றுகளில் ஆடிப் போயிருக்கிறது. அமெரிக்காவின் இச் செய்தியானது ரசியாவிடம் தாம் தோற்றுப் போய்விட்டதை, அதன் யதார்த்தத்தை- வெளிப்படுத்துவதாக அமைகிறது எனவும், தற்போதைய “ஐரோப்பிய பாதுகாப்புக் கட்டமைப்பு” தகரத் தொடங்கியிருக்கிறது எனவும் அரசியல் விஞ்ஞானி மியர்ஸைமர் அவர்கள் கூறுகிறார். அமெரிக்காவின் மீது தொங்குநிலையில் ஐரோப்பா நிற்பதிலுள்ள ஆபத்தை ஏற்கனவே மக்ரோன் உணர்ந்திருந்ததால், ஐரோப்பாவுக்கான தனி இராணுவத்தை கட்டமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஐரோப்பிய ஒன்றியத்தில் முன்னர் முன்வைத்திருந்தார். அமெரிக்காவில் பாதுகாப்புக்கும்கூட தங்கியிருந்த ஒரு இழுவை வண்டியாக ஐரோப்பா இருக்கிறது. அமெரிக்கா கூப்பிட்ட இடங்களுக்கெல்லாம் இழுபட்டு போர்க்களம் ஏவியவர்கள் ‘நேற்றோ’வினர். அதாவது ஐரோப்பிய நாடுகளும் கனடாவும். இந்தவகை தொங்குநிலைதான் கனடாவையும் 51 வது மாநிலமாக ட்றம்ப் முன்மொழியும் திட்டமாகும் என்பது வேறு கதை. “ரசியாவை பலவீனப்படுத்துவது” என்பது ஐரோப்பிய நலனிலிருந்து எழுந்ததால், அதை அவர்களே பார்த்துக் கொள்ளட்டும் என்றவாறான அணுகுமுறையோடு அமெரிக்கா தன்னை அதற்குள்ளிருந்து வெளியே இழுத்துக்கொண்டுவிட்டது. அது தனது தோல்வியை ஏற்றுக்கொண்டுவிட்டது. எதிர்காலத்தில் தன்னை உலக அதிகார சக்தியாக பேண வேண்டிய அரசியல் வியூகங்களை அது முதன்மைப்படுத்தத் தொடங்கியுள்ளது. அதனால்தான் அது ஐரோப்பாவோடு குடும்பச் சண்டையில் ஈடுபட்டாலும், நேற்றோவை உறுதியாக மேலும் கட்டமைக்கும் உறுதியுடனேயே இருக்கிறது. சமாதானத்தை விட்டுக் கொடுப்புகளுடன் உக்ரைன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்துகிறது. இதை ஐரோப்பா ஏற்றுக் கொண்டால் “ரசியாவைப் பலவீனப்படுத்த வேண்டும்” என்ற ஐரோப்பிய நோக்கத்தை நடுவழியில் விட்ட அவமானம் ஏற்பட்டுவிடும். ட்றம்ப் சொல்வதை ஏற்க மறுத்தால், அமெரிக்கா ஐரேப்பாவின் பாதுகாப்பை நடுவழியில் விடவைத்த தவறை ஐரோப்பா செய்ததாகிவிடும். அதேநேரம் அமெரிக்காவை ஐரோப்பா ட்றம்பின் கண்களுக்கு உள்ளால் பார்க்கவில்லை. “ஒரு ஆழ் அரசின் (deep-state) கட்டுமானத்தை பலவீனப்படுத்தி, அரசு (state) வடிவத்துள் நிறுத்த முனையும் ட்றம்ப் இன் முயற்சி இன்னும் நான்கு வருடங்களுக்குள் காலாவதியாகிவிடும்; மீண்டும் பழைய அமெரிக்க-ஐரோப்பிய தேன்நிலவு நடக்கும்” என ஐரோப்பிய ஒன்றியம் கருத இடமுண்டு. ட்றம்பின் காஸா குறித்த, கனடா குறித்த, கிறீன்லாண்ட் குறித்த, பனாமா கால்வாய் குறித்த அதிரடிகளை அமெரிக்க மக்கள்கூட ஏற்றுக்கொள்வார்களோ தெரியாது. ஆழ் அரசின் (deep state) தலைமைக் காவலரான சிஐஏ அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கையை வகுத்து எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளையும் போருக்குள் தள்ளுகிற வரலாறு கொண்டது. எனவே ‘ஆழ் அரசு’ (deep-state) வடிவத்தின் அழிவை அல்லது அரசு (state) வடிவ உருமாற்றத்தை அது ஏற்றுக்கொள்ளும் என நம்ப இடமில்லை. எல்லாவற்றையும் தொகுத்துப் பார்க்கிறபோது சமாதான இலக்கை ட்றம்ப் சாதிப்பது என்பது ஐரோப்பாவின் (பலவீனப்பட்ட) கைகளில் வந்து நிற்கிறது. இந்த யுத்தத்தை அமெரிக்காவானது நேற்றோ சகிதம் வழிநடத்திக் கொணர்ந்து, இப்போ ஐரோப்பாவையும் பலிக்கடாவான உக்ரைனையும் கைவிட யோசிப்பது ஒரு அவலச்சுவையாக மேடையேறியிருக்கிறது. போர் தொடங்கி சில மாதங்களிலேயே இஸ்தான்புல் பேச்சுவார்த்தையை குழப்பி செலன்ஸ்கியை வெளியேறவைத்தது அமெரிக்காவும் பிரிட்டனும்தான். அப்போது தாம் நேற்றோவில் சேராமல் நடுநிலையாக இருப்போம் என செலன்ஸ்கி உடன்பாட்டுக்கு வர தயாராக இருந்தார். டொன்பாஸ் ரசிய சிறுபான்மையினருக்கான அதிகாரப் பகிர்வை முன்வைத்து வரையப்பட்ட முனிச் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் ரசியா முன்வைத்திருந்தது. செலன்ஸ்கி அதையும் ஒப்புக்கொண்டிருக்கவோ அல்லது மாற்று தீர்வுகளை நோக்கியோ போக இந்த பேச்சுவார்த்தை வழியாட்டியிருக்கவும் கூடும். இவைகள் நடந்திருந்தால், உக்ரைனில் இவளவு அழிவுகளும் உயிர்ப்பலிகளும் ஏற்படாமல் செலன்ஸ்கியால் தவிர்த்திருக்க முடியும். மேற்குலகின் பலிக்கடாவாகப் போய், வந்தடைந்திருக்கும் ஒரு துயர வரலாறை எழுத வேண்டி வந்திராது. ஐரோப்பாவுக்குள்கூட சுவிஸ் உம் ஆஸ்திரியாவும் நேற்றோவில் இணையாமல் நடுநிலையாக இருக்கின்றன. ரசியாவின் சகோதர நாடாக இருந்த உக்ரைனுக்கு ஏன் முடியாமல் போனது. அது ஐரோப்பாவினதும் நேற்றோவினதும் சூழ்ச்சியால் நிகழ்ந்தது. அந்த சூழ்ச்சி 2014 இல் அரங்கேறி அதன் தொடர்விளைவுகள் 2022 போரில் கொணர்ந்து நிறுத்தியது. உக்ரைன் அதிபர் இந்த சூழ்ச்சி வலைக்குள் மாட்டுப்பட்டு தனது நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்றார். இன்று இருபது வீத நிலப் பிரதேசங்களை ரசியாவிடம் பறிகொடுத்து, நேற்றோ அங்கத்துவமும் இல்லாமல் தொடங்கிய இடத்தில் வந்து நிற்கிற அவலம் நிகழ்ந்துள்ளது. இவையெல்லாம் உக்ரைன் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய இடத்திற்கு அருகாமையில் செலன்ஸ்கியை நிறுத்தியிருக்கிறது. ட்றம்பின் தீர்வை அவர் ஏற்றுக்கொள்வும் முடியாத நிலையில் மேற்குலகம் அவரை சூழ்நிலையின் கைதியாக மாற்றியுள்ளது. மறுகரையில் ரசியாவை பொருளாதார ரீதியில் பலவீனப்படுத்த வகைதொகையின்றி போட்ட பொருளாதாரத் தடை ‘பூமராங்க்’ ஆக மாறி ஐரோப்பாவை தாக்கியுள்ளது. மிக முக்கியமாக தொழில்நுட்ப ரீதியில் பலமாக தன்னை நிலைநிறுத்தி வைத்திருந்த ஜேர்மனி பலத்த அடிக்கு உள்ளாகியிருக்கிறது. ட்றம்பின் சமதானத் திட்டத்தை செலன்ஸ்கி ஏற்றுக்கொள்ள மறுக்கும் இடத்து, 2014 இல் நிகழ்த்தியதுபோல் இன்னொரு ஆட்சிமாற்றத்தை அமெரிக்கா நிகழ்த்தி தனது பெரியண்ணன் பாத்திரத்தை நிரூபிக்கவும் இடமுண்டு. அதன் அறிகுறியாக அண்மையில் உக்ரைன் பாராளுமன்றத்தில் -2014 இன் அமெரிக்க சதிநாயகன்- புறொசெங்கோவின் ஆதரவாளர்கள் குழப்பம் விளைவித்ததையும், செலன்ஸ்கிக்கு எதிராக கோசம் எழுப்பியதையும் கண்டோம். இவ்வாறான நிலைமைகளை பார்க்கும்போது, உக்ரைனுக்கு சமாதானம் அவளவு எளிதில் கைகூடுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. உக்ரைனின் இறைமையை ரசியா அங்கீகரிக்கும் விதத்திலும், ரசியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உக்ரைன் நேற்றோவின் களமாக அமையாத உத்தரவாதத்துடனும், டொன்பாஸ் ரசிய சிறுபான்மையினர் குறித்த உடன்பாடுகளுடனும் இருபக்க விட்டுக் கொடுப்புகளுடன் சமாதானம் உருவாகுமா? ravindran.pa சுடுமணல்சமாதானம் உருவாகுமா?மாறிவரும் பூகோள அரசியல் THanks for image: Aljazeera தான் ஆட்சிக்கு வந்து 24 மணி நேரத்திற்குள் உக்ரைன்-ரசியா போரை சமாதானம் மூலம் முடிவுக்கு கொண்டுவருவேன் என ட்றம்ப் தேர்தலுக்கு முன் கூறிவந்தார். அது…
  12. தேர்தல் ஆண்டில் தையிட்டி விகாரை - நிலாந்தன் அரசியல் சமூகச் செயற்பாட்டாளரான செல்வின் அண்மையில் சொன்னார், பலாலியில் தரையிறங்கும் ஒரு விமானத்தின் பருந்துப் பார்வையில் முதலில் தெரியப் போவது தையிட்டி விகாரைதான். பகலில் சூரிய ஒளியிலும் இரவில் இருளின் பின்னணியில் மின்னொளியில் முழிப்பாகத் தெரியப்போவதும் விகாரையாகத்தான் இருக்கும்.எனவே பலாலி விமான நிலையத்தில் தரையிறங்கும் ஒரு விமானப் பயணிக்கு யாழ்ப்பாணத்தின் தரை தோற்றத்தில் முதலில் முழிப்பாகத் தெரியபோவது தையிட்டித் தாதுகோபமா ? தையிட்டியிலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாதகல் சம்பில் துறை ஏற்கனவே ஜம்புகோளப் பட்டினமாக பெயர் மாற்றப்பட்டு சிங்கள பவுத்த மயப்படுத்தப்பட்டு விட்டது.அங்கே ஒரு பெரிய விருந்தினர் விடுதி உண்டு. அது யுத்த வெற்றிவாதத்தின் சுற்றுலாவிகளாக வரும் சிங்கள பௌத்த பயணிகளைக் கவரும் நோக்கிலானது.அதையும் படைத்தரப்பே பரிபாலித்து வருகிறது.அங்கேயும் தனியார் காணிகள் பறிக்கப்பட்டிருப்பதாக குற்றச் சாட்டுக்கள் உண்டு. இப்படிப்பட்டதோர் நிலப்பறிப்பு மற்றும் சிங்கள பௌத்த மயமாக்கற் பின்னணியில் தையிட்டி விகாரையை விட்டுக் கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்குமா ? அண்மையில் உயிர் நீத்த ஊடகவியலாளராகிய பாரதியின் இறுதி நிகழ்வுக்கு வந்திருந்த கொழும்பை மையமாகக் கொண்ட ஊடகவியலாளர் ஒருவர் என்னிடம் பின்வருமாறு சொன்னார்,”தையிட்டி விகாரையின் மையப் பகுதி அதாவது தாதுகோபம் அமைந்திருக்கும் காணி ஒரு மலேசிய ஓய்வூதியருக்குரியது, அவருடைய உறவினராகிய ஒரு பெண் மலேசியாவில் வசிக்கிறார்,அவர் சில ஆண்டுகளுக்கு முன் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பொழுது அவரைச் சந்தித்து அது தொடர்பாக உரையாடியிருக்கிறார்.அதன் பின் அவர் அப்போதிருந்த தளபதி சவேந்திர சில்வாவையும் சந்தித்ததாகத் தகவல் உண்டு” என்று. இந்த விடயத்தை நான்,அண்மையில் யாழ்.திண்ணை விடுதியில் நடந்த ஐநாவின் விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட சுமந்திரனைக் கண்ட பொழுது கேட்டேன்.அவர் அத்தகவல்கள் உண்மையானவை என்று சொன்னார்.அந்தப் பெண் கிட்டத்தட்ட 80 வயதைக் கடந்தவர் என்று கூறப்படுகிறது.அவர் இப்பொழுது எங்கே இருக்கிறார் அல்லது அவர் இருக்கிறாரா இல்லையா போன்ற விவரங்கள் சுமந்திரனுக்குத் தெரியவில்லை. ஆனால்,காணி உரிமையாளர் வெளிநாட்டில் என்பது உண்மையான தகவல் அல்ல என்று சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி சபையின் முன்னாள் உறுப்பினர் சசீவன் கூறுகிறார்.அப்போதிருந்த தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி மன்றத் தலைவர் இது தொடர்பில் பொறுப்பாக நடந்து கொள்ளவில்லை என்றும், விகாரை கட்டப்பட்டதற்கு அவரும் பொறுப்பு என்று சசீவன் குற்றஞ் சாட்டுகிறார். காணி உரிமையாளர் மலேசியாவில் என்று கூறப்படுவதை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வட்டாரங்கள் வேறுவிதமாகப் பார்க்கின்றன. தையிட்டிப் போராட்டத்தின் எழுச்சியை திசைதிருப்பும் நோக்கத்தைக் கொண்ட தகவல்கள் இவை என்று அவர்கள் கருதக்கூடும். அவர்கள் தையிட்டி விகாரையை ஒரு சட்டவிரோத கட்டுமானம் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் அதை சட்டரீதியாக மட்டும் அணுகக்கூடாது. அதை ஏன் தனிய சட்ட ரீதியாக மட்டும் அணுகக்கூடாது? ஏனென்றால் சட்டவிரோதமானது பிழையானது என்றால் சட்ட ரீதியானது சரியானது என்பதே தர்க்கம். சட்ட ரீதியானது சரியானது என்றால் சிங்கள பௌத்த அரசு கட்டமைப்பின் சட்டக் கட்டமைப்பு தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தரும் என்று நம்பலாமா? இல்லை. தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பின் கருவிகளில் சட்டமும் ஒன்று. அண்மையில் அரசியல் பேசும் இளையோர் என்ற அமைப்பின் மெய்நிகர் சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டதுபோல,திருகோணமலையில் பஸ் நிலையத்தில் கட்டப்பட்ட இரண்டு புத்தர் சிலைகளுக்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய கட்டளை உண்டு.அனால் சிலைகள் அகற்றப்படவில்லை.கிழக்கில் மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக நீதிமன்றக் கட்டளை உண்டு.முல்லைத்தீவில், நீராவியடியில்,நீதிமன்றத் கட்டளையை மீறி பிள்ளையார் ஆலய வளாகத்தில் ஒரு பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டது.அதுபோல பல இடங்களில் நீதிமன்றக் கட்டளைகளை மீறி சிங்கள பௌத்த மயமாக்கலும் நில ஆக்கிரமிப்பும் நடந்திருக்கிறது.நடந்து கொண்டிருக்கிறது.எனவே இலங்கைத்தீவின் சட்டக் கட்டமைப்பு தமிழ் மக்களுக்கு நீதியைத் தரும் என்ற தோற்றத்தை ஏற்படுத்த முடியாது. மாறாக தையிட்டி விகாரை விடயத்தை நிலப்பறிப்பு,சிங்கள பௌத்த மயமாக்கல் இந்த நிகழ்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும்; அணுக வேண்டும்; அதற்கு எதிராகப் போராட வேண்டும். கடந்த பௌர்ணமி நாளன்று நடந்த போராட்டம் குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒவ்வொரு பௌர்ணமி நாளில் மட்டும் போராட்டலாமென்றால் அது மிகப் பலவீனமானது.ஏனென்றால் நிலப்பறிப்பும் சிங்கள பௌத்த மயமாக்கலும் பௌர்ணமிகளுக்காக காத்திருப்பதில்லை.அவை மிகவும் நிறுவனமயப்பட்ட நடவடிக்கைகள்.இக்கட்டுரை எழுதப்படுகையில்கூட எங்காவது ஒரு சிறு குன்றில் ஏதாவது ஒரு விகாரைக்கு ஒரு செங்கல் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும். எனவே ஒவ்வொரு போயா தினத்தன்றும் போராடி தையிட்டியை மீட்க முடியாது. நில அபகரிப்புக்கும் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கும் எதிரான போராட்டம் மாதத்தில் ஒரு தடவை மட்டும் நடத்தப்படும் ஒன்றாக இருக்க முடியாது. ஏனென்றால் நில அபகரிப்பும் சிங்கள பௌத்த மயமாக்கலும் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பின் தொடர் நடவடிக்கைகள்.பல தசாப்தகால தொடர்ச்சியான நடவடிக்கைகள்.மிகவும் நிறுவனமயப்பட்ட, அதிக வளம் பொருந்திய அரசு உபகரணங்களால் முன்னெடுக்கப்படுகின்ற தொடர்ச்சியான நடவடிக்கைகள். அதாவது சிங்கள பௌத்த மயமாக்கல் நடவடிக்கைகள்-அதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால்-தமிழ் மக்களின் தேசிய இருப்பை அழிக்கும் நடவடிக்கைகள் கடந்த பல தசாப்தங்களாக தொடர்ச்சியாக முன் னெடுக்கப்பட்டு வருகின்றன.குறிப்பாக 2009க்குப் பின்னரும் அது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.ஆனால் தமிழ் எதிர்ப்புத்தான் குறைந்து போய்விட்டது. இப்படிப்பட்டதோர் பின்னணியில் நில அபகரிப்புக்கும் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கும் எதிராகத் தொடர்ச்சியாகப் போராட வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் தமிழ்த் தரப்புக்கு உண்டு.அடுத்த பௌர்ணமிவரை இன்னுமொரு எழுச்சிக்காகக் காத்திருப்பது பலமானது அல்ல. தமிழ் மக்களுடைய போராட்டத்தின் அளவுதான் இந்த விடயத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முடிவையும் தீர்மானிக்கும். ஏனென்றால் இது ஒரு தேர்தல் ஆண்டு. இந்த ஆண்டில் சிங்கள பௌத்த வாக்காளர்களின் வாக்குகளைக் கவர்வதா? அல்லது தமிழ் மக்களுடைய பயங்களை நீக்குவதா? என்று பார்த்தால், அரசாங்கம் சிங்கள பௌத்த வாக்காளர்களின் கூட்டு உணர்வை பாதுகாக்கவே முன் நிற்கும். தையிட்டிப் போராட்டத்தின் பின்னணியில் அரசுத் தலைவர் வல்வெட்டித் துறைக்கு வருகிறார். பிரதமர் வலிகாமத்தின் பல பகுதிகளுக்கும் வருகிறார். மானிப்பாயில் வைத்து பிரதமர் கூறுகிறார், இது தமிழ் மக்களாலும் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் என்று. அதேசமயம் அமைச்சர் சந்திரசேகரன் மீனவக் கிராமங்கள் தோறும் தீயாக வேலை செய்கிறார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த விடயத்தில் ஒருவித இந்திய எதிர்ப்பை லோக்கலாக வெளிப்படுத்துகின்றது. இந்திய மீனவர்களுக்கு எதிராகத் திட்டவட்டமான நிலைப்பாட்டை எடுப்பதன்மூலம் தமிழ் கடல் தொழிலாளர் சங்கங்களைக் கவர்வது அவர்களுடைய உள்நோக்கம். அண்மையில் வெளியிடப்பட்ட வரவு செலவுத் திட்ட அறிக்கையும் தமிழ் மக்களைக் கவரும் நோக்கிலானது. ரணில் விக்கிரமசிங்க எரித்த நூலகத்தை நாங்கள் அபிவிருத்தி செய்கிறோம் என்ற பொருள்பட சந்திரசேகரன் முகநூலில் ஒரு பதிவை போட்டிருக்கிறார். நூலக எரிப்புக்கு ரணில் எப்பொழுதோ மன்னிப்புக் கேட்டு விட்டார்.ஆனால் வடக்குக் கிழக்கை பிரித்தமைக்கு; சுனாமிப் பொதுக்கட்டமைப்பு எனப்படும் மனிதநேயக் கட்டமைப்பை எதிர்த்தமைக்கு; இறுதிக்கட்டப் போரில் மகிந்தவைப் பலப்படுத்தியதற்கு ஜேவிபி இன்றுவரை மன்னிப்புக் கேட்கவே இல்லை.நூலகத்துக்கு நிதி ஒதுக்கியதன்மூலம் படித்த தமிழ் நடுத்தர வர்க்கத்தைக் தவறலாமா என்று அரசாங்கம் முயற்சிக்கின்றது. அதாவது விரைவில் வரக்கூடிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல்,பின்னர் வரக்கூடிய மாகாண சபைத் தேர்தல் ஆகியவற்றை இலக்கு வைத்துத் தமிழ் வாக்குகளைக் கவரும் நோக்கத்தோடு அரசாங்கம் தமிழ்ப் பகுதிகளில் இறங்கி வேலை செய்கின்றது. ஆனால் பிரதமர் ஹரிணி கூறுவது போல இந்த அரசாங்கம் தமிழ் மக்களாலும் தெரிவு செய்யப்பட்டது என்றால்,தையிட்டி விகாரை விடயத்தில் தமிழ் மக்களின் பயத்தையா அல்லது சிங்களபௌத்த கூட்டு உளவியலையா அதிகமாக மதிக்கும்? வரவுசெலவுத் திட்ட அறிக்கையை முன்வைத்து உரையாற்றிய அனுர பின்வருமாறு கூறுகிறார்…”எங்களில் யாரும் லஞ்சம் எடுப்பதில்லை. அப்படி எடுத்தால் அவர்களுக்கு எந்த மன்னிப்பும் கிடையாது. ஊழல் இல்லாத ஆட்சியை உருவாக்குவேன்.லஞ்சம் வாங்கப் பயப்படும் நாட்டை உருவாக்குவேன்.அப்படிப்பட்ட ஆட்சியால் மட்டும்தான் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும்.” அவர் கூறுவது சிங்கள மக்களுக்குப் பொருந்தலாம். ஆனால் தமிழ் மக்களுக்குப் பொருந்தாது.தமிழ் மக்கள் ஊழலுக்கு எதிராகவோ அரசு நிர்வாக துஷ்பிரயோகங்களுக்கு எதிராகவோ போராடவில்லை. நமது தேசிய இருப்பை அழிக்க முற்படும் இன ஒடுக்குமுறைக்கு எதிராகத்தான் போராடி வருகிறார்கள். எனவே தமிழ் மக்கள் கேட்பது தமது தேசிய இருப்பைப் பாதுகாக்க வேண்டும் என்றுதான். ஊழலற்ற ஆட்சியால்தான் நாட்டைக் கட்டியெழுப்பலாம் என்று கூறுவது தவறு. இனவாதமற்ற,இன அழிப்புக்கு பரிகாரம் தரத் தயாராக உள்ள,அதாவது, இனப் பிரச்சினையைத் தீர்க்கத் தேவையான அரசியல் திடசித்தத்தை- “பொலிட்டிக்கல் வில்லைக்”-கொண்டிருக்கும் ஒரு அரசாங்கத்தால் மட்டுந்தான் இச்சிறிய தீவைக் கட்டியெழுப்ப முடியும். https://www.nillanthan.com/7186/
  13. இஸ்ரேலிய சிறைகளில் உள்ள 600 பாலஸ்தீனியர்கள் விடுதலை - இஸ்ரேலிய பிரதமர் சர்ச்சைக்குரிய அறிவிப்பு 23 Feb, 2025 | 11:41 AM இஸ்ரேலிய சிறைச்சாலையில் உள்ள பாலஸ்தீனியர்கள் 600 பேரை விடுதலை செய்வதை காலவரையறையின்றி ஒத்திவைப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. 2023 ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் அமைப்பினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்கள் உட்பட ஆறு இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்துள்ள நிலையிலேயே இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பணயக்கைதிகளை விடுதலை செய்யும்போது ஹமாஸ் அவர்களை அவமானப்படுத்தும் நிகழ்வுகளை நடத்தியதாக தெரிவித்துள்ள அவர் அவ்வாறான நிகழ்வுகள்இல்லாமல் அடுத்த கட்ட பணயக்கைதிகள் விடுதலை இடம்பெறும்வரை பாலஸ்தீனியர்களை விடுதலை செய்யப்போவதில்லை என பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார். முதல்கட்ட உடன்படிக்கையின் படி ஹமாஸ் அமைப்பு இன்னமும் நான்கு கைதிகளை மாத்திரம் விடுதலை செய்யவேண்டும்.பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவேளை உயிரிழந்த நால்வரின் உடல்களை ஒப்படைக்கவேண்டும். ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளை பிரச்சாரத்திற்காக பயன்படுத்துவது உட்பட பல உடன்படிக்கை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/207436
  14. மன்னார் மறை மாவட்டத்தின் 4வது ஆயராக அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் adminFebruary 22, 2025 மன்னார் மறை மாவட்டத்தின் 4 வது ஆயராக தெரிவு செய்யப்பட்ட பேரருட் திரு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அடிகளார் இன்றைய தினம் சனிக்கிழமை (22) ஆயராக அருட்பொழிவு செய்யப்பட்டுள்ளார். மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த பேரருட்திரு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அடிகளார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக தெரிவு செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார் மடு திருத்தலத்தில் வைத்து ஆயராக அருட்பொழிவு செய்யும் நிகழ்வு நிகழ்வு இடம்பெற்றது. மன்னார் மறை மாவட்டத்தின் தற்போதைய ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் அபிஷேக நிகழ்வு மற்றும் திருப்பலி இடம் பெற்றது. குறித்த நிகழ்வில் பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி பிறைன் உடைக்வே ஆண்டகை, கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயர் மல்கம் காடினல் ரஞ்சித் ஆண்டகை, மற்றும் இலங்கையின் அனைத்து மறைமாவட்ட ஆயர்களும் கலந்து கொண்டனர். -மன்னார் மறைமாவட்டத்தின் 4 வது ஆயராக பேரருட் திரு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 14ஆம் திகதி நியமிக்கப்பட்டார். பரிசுத்த பாப்பரசரினால் புதிய ஆயருக்கான நியமனம் வழங்கப்பட்டது.அதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை மன்னார் மறை மாவட்டத்தின் தற்போதைய ஆயராக உள்ள இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை விடுத்திருந்தார். இந்த நிலையிலே இன்றைய தினம் சனிக்கிழமை(22) காலை 9.30 மணியளவில் மன்னார் மறைமாவட்டத்தின் 4 வது புதிய ஆயராக அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அடிகளார் அருட்பொழிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/211936/
  15. ஆனந்தி அக்காவுக்கு அஞ்சலிகள்.. ஒரு சில கூட்டங்களிலும், நிகழ்வுகளிலும் ஆனந்தி அக்காவின் அழகான தமிழை நேரடியாகக் கேட்கும் வாய்ப்பு கிட்டியது. பிபிசி ஆனந்தி அக்கா காலமானார். பிப்ரவரி 22, 2025 பிபிசி ஆனந்தி அக்கா நேற்று இரவு காலமானார்.(பிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி’! -என்றவர்- பிபிசி ஆனந்தி ) திருமதி ஆனந்தி சூரியபிரகாசம் நேற்று அமைதியான முறையில் காலமானார் . "ஆனந்தி அக்கா" என்று அன்புடன் அழைக்கப்படும் திருமதி சூரியபிரகாசம், தமிழ் ஒளிபரப்பில் ஒரு முன்னோடி நபராக இருந்தார், பிபிசி தமிழ் சேவையில் இணைந்த முதல் தமிழ்ப் பெண்மணியாக தடைகளைத் தாண்டி பிபிசி தமிழோசியின் இயக்குநராக உயர்ந்தார். அவர் டிடிஏ யுகேவின் அறங்காவலராகவும் பணியாற்றினார். ==== விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை, பிபிசியின் சார்பில் முதன் முதலாக சந்தித்து நேர்காணல் செய்ய மூத்த ஊடகவியலாளர் ஆனந்தி சூரியப்பிரகாசத்துடனான நேர்காணல் ஒன்றை இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. லண்டனிலிருந்து கொழும்பு சென்றதுமே இலங்கை அரசின் கெடுபிடி ஆரம்பித்து விட்டது. எனது பயணத்திட்டம் என்ன, பயணத்தின் நோக்கம் என்ன என்பது பற்றி எல்லாம் துருவித்துருவி விசாரிக்க ஆரம்பித்தார்கள். என்னைத் தொடர்ந்து கண்காணிக்கவும் செய்தார்கள். அப்போது கிட்டதட்ட வவுனியாவுக்கு முன் வரை மட்டுமே இலங்கை படைகளின் ஆதிக்கம் இருக்கும். அதுவரை சென்றேன். அதன் பிறகு புலிகளின் ஆதிக்கப்பகுதி. அதற்குள் வருவதற்குள் பல்வேறு தடைகள். அதையெல்லாம் மீறி புலிகள் ஆதிக்கப்பகுதிக்கு வந்தேன். பிறகு யாழ்ப்பாணம் சென்றேன். அங்குதான் அப்போது பிரபாகரன் இருந்தார். யாழ்ப்பானத்தில் அப்போது ஞானம் என்ற ஒரே ஒரு உணவு விடுதிதான் இருந்தது. அங்கே அறை எடுத்தேன். குளித்து முடித்து, புலிகளுக்க தகவல் சொல்லலாம் என்பது எனது திட்டம். நான் குளித்து வருவதற்கும், கதவு தட்டப்படுவதற்கும் சரியாக இருந்தது. திறந்தால், சுப. தமிழ்ச்செல்வன் உட்பட சில புலிகள் நிற்கிறார்கள். என்னைக்குறித்து விசாரிக்கிறார்கள். நான் ஆச்சரிப்பட்டுப் போனேன். நான் வந்த தகவல் அதற்குள் அவர்களுக்கு சென்றுவிட்டது. இதிலிருந்து ஒரு விடயத்தை என்னால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது. ஈழ மக்கள், புலிகளின் மீது நம்பிக்கை கொண்டிருந்தனர். புதிதாக ஒருவர் வந்தால், புலிகளுக்கு தகவல் தெரிவித்து விடுவார்கள். பிரபாகரனுடனான சந்திப்பு எப்படி இருந்தது? பிரபாகரனை அவரது வீட்டில் வைத்து சந்திக்கச் சென்றேன். வாசலுக்கே வந்து அன்போடு வரவேற்றார். பலரும் நினைப்போது போல அவர் எப்போதுமே சீரியஸ் ஆன பேர்வழியாக இருப்பதில்லை. சகஜமாக பழகுவார். சில முறை நான் ஜோக் அடித்த போது கூட ரசித்து சிரித்தார். தானே எனக்கு நண்டு, இறால் என கடல் உணவுகளை சமைத்துக்கொடுத்தார். மிக அன்பான மனுசர் அவர். தனக்கு எதிராக வைக்கப்படும் கேள்விகளை அவர் எப்படி எதிர்கொண்டார்? விமர்சனங்களை அவர் வரவேற்றார். சந்திரிகா- புலிகள் குறுகிய கால சமாதானப் பேச்சுக் காலத்திலும் வன்னிக்குச் சென்று பிரபாகரனை சந்தித்தேன். அவரிடம் சில கேள்விகள் கேட்கணும் என்றுதான் நானும் போனேன். ஆனால், அங்கு அவர் கட்டி வைத்திருந்த “செஞ்சோலை குழந்தைகள் இல்ல”த்தைப் பார்த்த பிறகு எனக்குள்ளேயே என்னையுமறியாத ஒரு மாற்றம் ஏற்பட்டது. தாய் தந்தையரை உறவுகளை இழந்த குழந்தைகளுக்காக எத்தனை அக்கறையுடன் அந்த இல்லதைப் பிரபாகரன் அமைத்திருந்தார்! நெஞ்சு முழுக்க ஈரம் உள்ள மனுசனால் மட்டுமே அப்படி அமைக்க முடியும்! அந்த செஞ்சோலை இல்லத்தை கண்டபோதே, என் மனதில் இருந்த கசடுகள் எல்லாம் கழுவப்பட்டு புதிதாக பிறந்த உணர்வு ஏற்பட்டது. வன்னியிலிருந்து திரும்பியதும், பி.பி.சியில் செஞ்சோலை பற்றிய நிகழ்ச்சி தயாரித்து “என் தெய்வம் வாழும் திருக்கோயில் நின்றேன்’ என்றுதான் தலைப்பிட்டேன். பிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி. என்ன வசீகரமென்றே எனக்கு விளங்கவில்லை. நேரில் சந்தித்தபோது இவரா இத்தனை பெரிய போராளி அமைப்பின் தலைவர்.. குழந்தை முகமாக இருக்கிறாரே என்றுதான் தோன்றும். அவரை சந்தித்தபோது, “உங்கள் போராட்டத்தில் எத்தனை மக்களுக்கு, குழந்தைகளுக்கு கஷ்டம்” என்றுகூட கேட்க நினைத்தேன். ஆனால் அவரைப் பார்க்கும் போது அந்த கேள்வியே எழவில்லை. சரி, புலிகளின் ஆதிக்கத்தில் ஈழம் இருந்தபோது சர்வாதிகாரம் நிலவியதாக ஒரு விமர்சனம் உண்டு! உண்மை அதுவல்ல. போராளிகளுக்கும் மக்களுக்கும் இடையேயான ஆழமான அன்பு, உறவு இருந்தது. மக்கள் தலைமை மீது கொண்டிருக்கும் நம்பிக்கையும் மிக உறுதியானது. அங்குள்ளவர்களிடம் பேசியபோது ஒரு தகவல் கிடைத்தது. எப்போதாவது உணர்ச்சி வசப்பட்டு போராளிகள் பொதுமக்களை அடித்தால் கூட “தலைவர் உங்களை இப்படி அடிக்கச் சொல்லித் தந்தவரோ?’ என்றுதான் கேட்பார்கள். அந்தளவுக்கு தலைமை மீது மக்களுக்கு நம்பிக்கை உண்டு. அது மட்டுமல்ல.. போராளியாக இருப்பவர் தனது ஆயுதங்களைத் தவறாகப் பயன்படுத்தினால் உடனடியாக அமைப்பிலிருந்து நீக்கப்படுவார். அதோடு, அவர் தமிழீழ சிவில் நிர்வாக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார். சிவில் சட்டங்களின் படி அவருக்குத் தண்டனை வழங்கப்படும். பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர்., இந்திரா ஆகியோரிடம் மிகுந்த மரியாதை உண்டு என்று சொல்லப்படுவது உண்டு! ஆமாம்.. எம்.ஜி.ஆர். மீது மிகுந்த பற்று வைத்திருந்தவர் பிரபாகரன். ஈழ மக்கள் அனைவருமே அப்படித்தான். எம்.ஜி.ஆர். இறந்தபோது, ஈழமக்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டது. அதே போல இந்திராகாந்தி மறைந்த போதும் ஈழமக்கள் மிகுந்த துயர் அடைந்தார்கள். உங்களது ஈழப்பயணங்களின் போது வியக்க வைத்தது எது? பல விடயங்களைச் சொல்லலாம். முக்கியமாக நான் ஈழ மக்களிடம் கேட்க விரும்பியது, சந்திரிகாவின் ஐந்தாண்டு கால தொடர் போர் மற்றும் கடுமையான பொருளாதாரத் தடையிலிருந்து எப்படி 5 லட்சம் மக்களை புலிகள் காப்பாற்றினார்கள் என்பதைத்தான். அதற்கு அம்மக்கள் கொடுத்த விடை நெகிழ்வூட்டியது. “ இப்படிப்பட்ட சூழலை தலைவர் பிரபாகரன் முன்னதாகவே அனுமானித்தார். தனக்கு அடுத்தபடியாக இருந்த இயக்க தலைவர்களை அழைத்தார். அப்போது அவர் முதலில் பேசியது மக்களுக்கான உணவு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு பற்றித்தான். அதன்படி எங்கள் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் விவசாயம் செய்யத் தகுதியுள்ள நிலங்களையெல்லாம் கவனத்துடன் கணக்கெடுத்தோம். பணப்பயிர்களைத் தடை செய்தோம். விதை நெல்கள் சேமித்தோம். இயற்கை விவசாயத்துக்கு பழகினோம். மேலும், எமது ஐந்து லட்சம் மக்களுக்கும் தேவையான வைட்டமின், புரதச் சத்து தேவைகளுக்கேற்றபடி பிற காய்கறி வகை களையும் விவசாயம் செய்ய வைத்தோம். இப்ப டித்தான் சந்திரிகாவின் கொடுமை யான பொருளாதாரத் தடையினை வெற்றி கண்டோம்” என்றனர். புலிகளை ஏதோ வன்முறையாளர் என்றே உருவகம் கொடுத்திருக்கும் பெரும்பாலான ஊடகங்களுக்கு இது தெரியாது. புலிகள், விவசாயம், அமைப்பு நிர்வாகம், கலை- பண்பாடு, நீர்வள மேலாண்மை என்று பல்வேறு துறைகளில் திட்டமிட்டு அரசாகவே இயங்கினர் என்பதே உண்மை. https://www.battinatham.com/2025/02/blog-post_696.html
  16. இன்று ஜெனிவாவுக்கு செல்லும் விஜித தலைமையிலான குழு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திர சிறப்பு குழுவினர் ஞாயிற்றுக்கிழமை (23) அன்று ஜெனிவாவுக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது கூட்டத்தொடர் நாளை 24ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாக உள்ள நிலையிலேயே குறித்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர். இதன்போது, இலங்கைக்கு எதிரான போர் குற்றச்சாட்டுகள் குறித்து விசேட அறிக்கையை இலங்கை தரப்பு சமர்பிக்க உள்ளதுடன், சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்க புதிய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பான நீண்ட தெளிவுப்படுத்தலை முன்வைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் பங்கேற்பதற்காக ஜெனிவா செல்லும் இலங்கையின் உயர்மட்ட இராஜதந்திர சிறப்பு குழு, எதிர்வரும் 28ஆம் திகதி வரை ஐ.நா. மனித உரிமைகள் அமர்வுகளில் கலந்துக்கொள்ள உள்ளதுடன், நட்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளை பிரத்தியேகமாக சந்தித்து இலங்கை தரப்பு கலந்துரையாடவுள்ளது. மனித உரிமை பேரவையின் அமர்வில் சமர்ப்பிக்கப்படும் எந்த தீர்மானத்தின் 51/1 நகல் வடிவையும் இலங்கை தொடர்ந்து எதிர்க்கவும், இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற போர் குற்றங்கள் குறித்து ஆதாரங்களை சேகரிக்கும் வெளிப்புற பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கும் தீர்மானத்தை நிராகரிக்கவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் பிரகாரம், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இறுதி அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தின் நகல் வடிவை நிராகரிப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி கூடிய அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, உள்நாட்டுப் பொறிமுறை மூலம் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை பிரச்சனைகளுக்கு தீர்வை காண்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக உறுதியளித்துள்ளது. ஆனால், ஜெனிவா தீர்மானத்தில் உள்ள பல விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறானதொரு நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகி உள்ளமையினால் இலங்கை தொடர்பான செயன்முறையை முன்னெடுத்துச் செல்வதில் பின்னடைவுகள் ஏற்படக்கூடும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் நிரந்தர உறுப்புரிமைகளை கொண்ட சர்வதேச அமைப்புகள் எச்சரித்துள்ளன. அத்துடன், அமெரிக்கா விலகியமையை சுட்டிக்காட்டி, 51/1 நகல்வடிவையும், இலங்கைக்கு எதிராக 2014 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் வலுவிழக்க வைக்கும் கோரிக்கையை ஜெனிவாவில் முன்வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் நட்பு நாடுகளான சீனா, ரஷ்யா, பாக்கிஸ்தான் மற்றும் கியூபா போன்ற நாடுகளின் ஆதரவையும் இலங்கை கோரியுள்ளது. எவ்வாறாயினும் இறுதிக்கட்ட போரில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற பாரதூரமான மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையிலான நேர்மையான அறிக்கையை ஜெனிவாவுக்கு பதிலளிப்பதாக மாத்திரம் அல்லாது எமது அரசாங்கத்தின் நிலைப்பாட்டை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்த முன்வைப்பதாக அரசாங்கம் ஏற்கெனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (S. https://www.tamilmirror.lk/செய்திகள்/இன்று-ஜெனிவாவுக்கு-செல்லும்-விஜித-தலைமையிலான-குழு/175-352476
  17. ரயில்கள் மீது கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்ட சிறுவர்கள் மூவர் கைது யாழ்ப்பாணத்தில் ரயில்கள் மீது கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டு வந்த மூன்று சிறுவர்களை யாழ்ப்பாண பொலிஸார் நேற்று (22) கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் பயணிக்கும் ரயில்கள் மீது கடந்த சில தினங்களாக அரியாலை பகுதியில் வைத்து கல்வீச்சு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்துள்ளன. கல்வீச்சு தாக்குதலில் ரயில்களின் கண்ணாடிகள் சேதமடைந்தும், பயணி ஒருவர் காயமடைந்தும் இருந்தார். தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் ரயில் நிலைய அதிபரினால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் ரயில் பயணி ஒருவர் தனது கையடக்க தொலைபேசியில் எடுத்த காணொளி ஒன்றில் மூன்று சிறுவர்கள் ரயில் மீது கல்வீச்சு தாக்குதலை நடாத்துவது பதிவாகி இருந்தது. குறித்த காணொளியில் அடிப்படையில், மூன்று சிறுவர்களும் அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சிறுவர்களை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://adaderanatamil.lk/news/cm7ha0din000ohmzcpb5u6lzi
  18. தேசிய பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை - ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு இன்று (23) விஜயம் செய்த போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதலாகும் என்றும், அதனை அடக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார். https://adaderanatamil.lk/news/cm7hao8q2001adpm4f49zbf8a
  19. @vasee , முதல்வராக வர உளமார விருப்பம் இருக்கவேண்டும்! நீங்கள் முதல்வர் பதவியை பத்தடிக்கு அங்கால் நின்று பார்ப்பேன் என்று அடம்பிடித்தால் நம்ம கதி என்னாவது?🤨
  20. நாளைக்கு பாகிஸ்தான் வெல்லுது! @vasee ஐ முதல்வர் ஆக்கிறம் 😁
  21. பிரித்தானிய நேரப்படி நாளை ஞாயிறு (23 பெப்) 09:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 5) குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் PAK எதிர் IND 05 பேர் மாத்திரம் பாகிஸ்தான் அணி வெல்லும் எனவும் ஏனைய 19 பேரும் இந்திய அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். பாகிஸ்தான் ரசோதரன் நுணாவிலான் வசீ நந்தன் கிருபன் இந்தியா ஈழப்பிரியன் ஏராளன் வீரப் பையன்26 சுவி அல்வாயன் தமிழ் சிறி நிலாமதி வாத்தியார் செம்பாட்டான் குமாரசாமி நியாயம் வாதவூரான் சுவைப்பிரியன் எப்போதும் தமிழன் புலவர் கோஷான் சே நீர்வேலியான் கந்தப்பு பிரபா இந்தப் போட்டியில் புள்ளிகளை யாருக்குப் புள்ளிகள் கிட்டும்?
  22. நான்காவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி பென் டக்கெற்றின் 165 ஓட்டங்களுடன் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 351 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி, ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும் ஜொஷ் இங்லிஸின் அதிரடியான 120 ஓட்டங்களின் உதவியுடன் 47.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழப்பிற்கு 356 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. முடிவு: அவுஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்த 13 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 11 பேருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  23. பிரான்ஸ் ஜனாதிபதியும் பிரித்தானிய பிரதமரும் யுக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர எதுவும் செய்யவில்லை - அமெரிக்க ஜனாதிபதி விமர்சனம்! பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவெல் மெக்ரோனும் பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் யுக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக 'எதனையும் செய்யவில்லை" என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். அடுத்த வாரம் இரு நாட்டுத் தலைவர்களும் வெள்ளை மாளிகைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் கருத்துரைத்த அவர், யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலென்ஸ்கி அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவேண்டிய அவசியமில்லை எனத் தாம் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார். எனினும் முன்னதாக யுக்ரைன் ஜனாதிபதியுடன் சந்திப்பை நடத்திய டொனால்ட் ட்ரம்ப்பின் தூதுவர் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டிருந்தார். யுக்ரைன் ஜனாதிபதிக்கும் தமக்கும் இடையே விரிவான மற்றும் நேர்மறையான விவாதங்கள் இடம்பெற்றதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தூதுவர் குறிப்பிட்டிருந்தார். அண்மையில் யுக்ரைன் ஜனாதிபதியை 'சர்வாதிகாரி" என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்திருந்த நிலையில், அவரின் தூதுவர் யுக்ரைன் ஜனாதிபதியை 'தைரியமான தலைவர்" எனக் குறிப்பிட்டுள்ளார். https://www.hirunews.lk/tamil/397638/பிரான்ஸ்-ஜனாதிபதியும்-பிரித்தானிய-பிரதமரும்-யுக்ரைன்-போரை-முடிவுக்கு-கொண்டு-வர-எதுவும்-செய்யவில்லை-அமெரிக்க-ஜனாதிபதி-விமர்சனம்
  24. 2025இல் 17 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு – பொலிஸ்மா அதிபர் வெளிப்படுத்திய முக்கிய தகவல் February 22, 2025 11:46 am 2025இல் 17 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், ”பாதாள உலகக் குழுக்களின் செயல்பாடுகளுக்கு கடந்தகாலத்தில் அரசியல் ஆதரவு இருந்தது. அதனால் அவர்களை பொலிஸில் கூட இணைத்துக்கொண்ட சந்தர்ப்பங்கள் இருந்தன. பாதாள உலகக் குழுக்களுக்கு தற்போது அரசியல் ஆதரவு இல்லாதுபோயுள்ளது. தமது செயல்பாடுகளை செய்ய முடியாதென்பதால் அவர்கள் வெளிநாடுகளில் பதுங்கியுள்ளனர். அதனால் அவர்கள் வெளிநாடுகளில் இருந்து செயல்படுகின்றனர். 58 பாதாள உலகக் குழுக்களை நாம் அடையாளம் கண்டுள்ளோம். அந்த குழுக்களில் 1400 பேர்வரை உள்ளனர். இந்த குழுக்களின் தலைவர்கள் வெளிநாடுகளில் இருந்து செயல்படுகின்றனனர். 2024ஆம் ஆண்டுடில் 75 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும், 18 வாள்வெட்டு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. 2025ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 17 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. வாள்வெட்டு சம்பவங்கள் 5 என மொத்தம் 22 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த சம்பவங்களில் 17 விசாரணைகள் இறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவங்களில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்களில் பின்புலத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பொலிஸார் அல்லது இராணுவத்தினர் உட்பட பாதுகாப்பு துறையினரின் ஆதரவு இருந்துள்ளது. இவர்களை இலகுவாக அடையாளம் காண முடியும். தற்போதைய அரசாங்கத்தின் கீழ் டி56 ரக துப்பாக்கிகள் உட்பட பல ஆயுதங்களை கைப்பற்றியுள்ளோம். பொலிஸாரின் செயல்பாடுகளுக்கு தற்போது எவ்வித அரசியல் அழுத்தங்களும் இல்லை. கடந்தகாலத்தில் எவ்வாறு இருந்தது என அனைவருக்கும் தெரியும். சர்வதேச ஆதரவுடன் குற்றவாளிகளை பிடிக்கும் செயல்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. அதேபோன்று சிறைசாலைகளில் இருந்து செயல்படுத்தப்படும் குற்றச் செயல்கள் குறித்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சில சந்தேகநபர்கள் படகுகள் மூலம் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தொடர்பில் கடற்படையினருக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பாதாள உலகக் குழுக்களுக்கு செயல்பட முடியாது போயுள்ளதால் வெளிநாடுகளுக்குச் சென்று வழிநடத்த முற்படுகின்றனர். பல ஆயுதங்கள் சமூகத்தில் உள்ளன. அவற்றை பெற்றுக்கொள்ளும் முயற்சிகளும் இடம்பெற்று வருகின்றன. பொது மக்கள் இவை தொடர்பில் ரகசியமான தகவலை 1997 என்ற இலக்கத்துக்கு வழங்க முடியும். டி56 ரக துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தொடர்பில் தகவல் வழங்கினால் 10 இலட்சம் வரை பரிசை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த செயல்பாடுகளுக்கு பொது மக்களின் ஆதரவு அவசியமாகும். தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில், 13 T56 ரக துப்பாக்கிகள், 15 ரிவால்வர்கள், 21 கைத்துப்பாக்கிகள், 75 12-போர துப்பாக்கிகள், 7 உட்பட பல துப்பாக்கிகள் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.” என்றார். https://oruvan.com/17-shooting-incidents-recorded-in-2025-important-information-revealed-by-the-inspector-general-of-police/
  25. மிரட்டலால் சீமான் மீதான வழக்கை வாபஸ் பெற்ற விஜயலட்சுமி : உயர்நீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம்! 22 Feb 2025, 10:15 AM மிரட்டலின் அடிப்படையில் தான் சீமானுக்கு எதிரான புகாரை நடிகை விஜயலட்சுமி வாபஸ் பெற்றுள்ளார் என சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை காதலித்து திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டார் என்று விஜயலட்சுமி 2011ஆம் ஆண்டு புகார் அளித்தார். சீமான் மீது கடந்த ஆண்டும் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் விஜயலட்சுமி மீண்டும் புகார் அளித்தார். இதுதொடர்பாக சீமான் நேரில் ஆஜராக காவல்துறையினர் சம்மன் அனுப்பினர். ஆனால், வழக்கை திடீரென வாபஸ் பெற்றுக் கொண்ட விஜயலட்சுமி, இனி தான் சென்னைக்கே வர மாட்டேன் என்று கூறி பெங்களூரு சென்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து விஜயலட்சுமி அளித்த புகாரில் தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் சீமான் மனுதாக்கல் செய்தார். தனது மனுவில், “2011ஆம் ஆண்டு அளித்த புகாரை 2012ஆம் ஆண்டே விஜயலட்சுமி வாபஸ் பெற்றார். அதன் பேரில் வழக்கு விசாரணையை காவல் துறையினர் முடித்து வைத்தனர். இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளது. அதனை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார். இரு தரப்பு வாதங்களும் முடிந்த பிறகு அண்மையில் தீர்ப்பளித்த நீதிபதி இளந்திரையன், விஜயலட்சுமி தனது புகாரை திரும்பப் பெற்றாலும் கூட, பாலியல் வன்கொடுமை சட்டப் பிரிவின் கீழ் சீமானுக்கு எதிரான புகாரை காவல் துறை விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டார். சீமானின் மனுவையும் தள்ளுபடி செய்தார். இந்த தீர்ப்பின் முழு விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதில், “மிரட்டலின் அடிப்படையில் தான் சீமானுக்கு எதிரான புகாரை விஜயலட்சுமி திரும்பப் பெற்றுள்ளார். பாலியல் வன்கொடுமை புகார் என்பது தீவிரமானது. அதனை தன்னிச்சையாக திரும்பப் பெற முடியாது. விஜயலட்சுமி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ள புகார்கள், சீமானுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் விதத்தில் உள்ளன. வழக்கை ஆராய்ந்ததில் விஜயலட்சுமிக்கு சீமான் மீது எந்த காதலும் இல்லை. குடும்பம் மற்றும் திரைத் துறை பிரச்னை காரணமாக சீமானை விஜயலட்சுமி குடும்பத்தினர் அணுகியுள்ளனர். சீமான் வற்புறுத்தியதால் தான் ஆறு முறை கருக்கலைப்பு செய்தேன் எனவும், தன்னிடம் இருந்து சீமான் பெருந்தொகையை பெற்றுள்ளதாகவும் விஜயலட்சுமி புகாரில் தெரிவித்துள்ளார்” என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மேலும், புகார் தொடர்பான விசாரணையை 12 வாரங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் எனவும் காவல் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. https://minnambalam.com/political-news/seeman-vijayalakshmi-case-judgement/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.