Everything posted by கிருபன்
-
மட்டக்களப்பில் சரவணபவனுக்கு வாக்களித்தாலும் யாழ்ப்பாணத்தில் சுமந்திரனே வெல்லுவார்!
பல இளைய சட்டத்தரணிகள் தேர்தலில் போட்டியிடுகின்றார்கள். இவர்கள் சட்டக்கல்லூரிக்குப் போய் பட்டம் எடுப்பது எம்பியாக வரவேண்டும் என்ற நோக்கில் போலத்தான் உள்ளது (இந்தியாவில் கலக்டர் ஆகவேண்டும் என்ற கனவு போல)😄 மக்கள் சேவை என்றால் என்னவென்று தெரியாத சுயநலம் பிடித்த விளம்பரப் பிரியர்களுக்கு பாடம் புகட்டுமளவிற்கு தமிழ் வாக்காளர்கள் உள்ளனரா என்று தெரியவில்லை!
-
வேட்டையன் Review: ஞானவேலின் ‘மெசேஜ்’ + ரஜினியின் ‘மாஸ்’ கலவை எப்படி?
வேட்டையன் – போலி முற்போக்கு மசாலா சினிமா! -தயாளன் ஒரு பக்கா ரஜினி படத்தை சமகால சமூக பிரச்சினைகளை உள்ளடக்கி சொல்ல முயன்றுள்ளனர். வாழைப் பழத்தில் ஊசி சொருகுவது போல, பல விஷமத்தனமான விஷயங்களை அதி சிறந்த தொழில் நுட்பத்தில் மாஸாக காட்டிக் கொண்டே, கடைசியில் முற்போக்கு படம் போன்ற ஒரு பிம்பத்தை கட்டமைக்கிறார் இயக்குனர் ஞானவேல்; ஜெய்பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் முற்போக்கு கருத்துக்களை பேசி வெளியாகி இருக்கிறது வேட்டையன். ஜெய்பீம் படத்தின் மூலம் நல்ல சினிமா படைப்பாளியாக பேசப்பட்டவர் ஞானவேல். படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக போலீஸ்காரர் வேடத்தில் ரஜினி நடித்திருக்கிறார். கொடுரமான குற்றங்களை செய்யும் யாரையும் ஈவிரக்கமில்லாமல் சுட்டுத் தள்ளுகிறார். கதையில் அதியனாக அறிமுகக் காட்சியில் வழக்கமான பில்டப் காட்சிகளுடனும் இரைச்சலான பின்னணி இசையோடு தோன்றுகிறார் ரஜினி. ஸ்டைலிஷ்ஷான கோணங்களும், ஸ்லோமோஷனில் காட்டப்படும் தோற்றங்களுமாக ரஜினி ரசிகர்களின் பேராதரவைக் கோருகிறார் இயக்குனர். படத்தின் முன்னோட்ட காட்சிகளிலேயே என்கவுண்டர் காட்சிகளை ரொமாண்டிசைச் செய்வது தெரிகிறது. ரஜினியின் ஆக்ஷன் காட்சிகளும், ஸ்டைல் காட்சிகளும், பஞ்ச் வசனங்களும் வழக்கமான ரஜினி படத்தை நினைவுபடுத்தியது. படம் நீட் கோச்சிங், போதை, செம்மரம் கடத்தல், பெண்கள் மீதான குற்றம் என்று பல இடங்களுக்கு தாவி முடிவடைகிறது. படம் தொடங்கும் போது, ரஜினி ரசிகர்களுக்கான விருந்தளிக்கும் படத்தைப் போல காட்சியளித்து பின்பு என்கவுண்டர் என்னும் அநீதியை கண்டிப்பதாக முதல் பாதியும், அதன் பின் நீட் கோச்சிங் செண்டர் வணிக அரசியலை பேசுவதாக இரண்டாம் பாதியும் அமைந்துள்ளது. போதை மருந்து கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடித்த கையோடு டெக்னிக்கலாக தப்பிக்க வைத்து சுட்டுக் கொல்கிறார் ரஜினி. கூடவே அவர்களுக்கு உதவிய போலீஸ்காரரும் சாகிறார். ரஜினி விசாரணையில் தப்பி விடுகிறார். ரஜினிக்கு உதவும் துஷாரா வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இதை விசாரிக்கும் போலீஸ் குணா என்பவரை கைது செய்கிறது. ஆனாலும் அவர் தப்பி விடுகிறார். அவரை கொல்ல ரஜினி அழைக்கப்பட்டு என்கவுண்டர் செய்கிறார். ஒரு கட்டத்தில் அப்பாவி ஒருவரை கொலை செய்வதில் மனமாற்றம் அடைகிறார் ரஜினி. அதன் பின் அமிதாப் அறிவுரையில் உண்மை குற்றவாளிகளை தேடி அவர்களுக்கு சட்டப்படியான தண்டனை வாங்கி தருகிறார். என்கவுண்டரை தவறு என்று படம் நல்ல கருத்தைத் தானே பேசுகிறது என்று பொத்தாம் பொதுவாக சொன்னாலும், என்கவுண்டர் காட்சிகளும் அது படமாக்கப்பட்டிருக்கும் விதமும் படத்தின் மையக் கருத்துக்கு நேர் எதிராக இருக்கிறது. பட்டாசு கொளுத்துவது போல் என்கவுண்டர்களை அதிரடியான இசையின் பின்னணியில் கொண்டாட்டமாக காட்டிக் கொண்டே, அப்பாவிகளை என்கவுண்டர் செய்வது தவறு என்று தடாலடியாக கதை சொல்வது இது ஒரு போலியான படம் என்பதை உணர்த்துகிறது. கிராமப்புறங்களில் “கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை” என்று சொலவடை உண்டு. அது வேட்டையன் பட இயக்குனர் ஞானவேலுக்கு பொருந்தும். வேட்டையனை பொறுத்த வரை ரெண்டுங் கெட்டான் நிலையில் மாஸ் படமாகவும் இல்லாமல், கிளாஸ் படமாகவும் இல்லாமல் போலி முற்போக்கு முகமூடி கிழிந்து தொங்குகிறது. சொல்ல வந்த கருத்தில் நேர்மைத் தன்மையுடன் கதையை நம்பி அதற்கான அர்ப்பணிப்புடன் இயக்கி இருந்தால் தமிழின் முக்கியமான படமாக இருந்திருக்கக் கூடும் வேட்டையன். மாஸ் நடிகர்களை நம்பி வணிக வெற்றியும், பான் இந்தியா மோகமுமாக ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்று திசை மாறி, குப்புற கவிந்திருக்கிறார் இயக்குனர் ஞானவேல். இந்த படத்தை ரஜினி, அமிதாப், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியார், ரித்திகா, அபிராமி போன்ற பெரும் நட்சத்திர பட்டாளங்களை நம்பி எடுத்திருக்கிறாரேயன்றி, கதையையோ, கண்டெண்டையோ நம்பியல்ல என்பதிலேயே படம் தோல்வி அடைந்து விடுகிறது. தனது ஜெய்பீம் படத்தில் சூர்யாவை நடிக்க வைத்தாலும், அளவு மீறாமல் கதையை முன்னிலைப்படுத்தி இயக்கியிருந்தார் ஞானவேல். ஆனால்,இதில் கதையின் இயல்புக்கு மாறாக பில்டப் காட்சிகளால் ரஜினியை முன்னிலைப்படுத்தி கதை சொல்லியதால் சறுக்கி இருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த போர்த் தொழில் படத்தில் சரத்குமாரும், அசோக் செல்வனும் கச்சிதமாக காஸ்டிங் செய்யப்பட்டிருந்தனர். பெரும் நடிகரான அமிதாப்பச்சன் ஏதோ துணை நடிகரைப் போல வந்து போகிறார். இன்னொரு மகத்தான நடிகரான பகத் பாசிலை காமெடி நடிகராக்கி, அவரையும் சுட்டுக் கொலை செய்து விடுகின்றனர். அதில் நடித்திருக்கும் ரக்ஷனையே பேட்ரி பாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கலாம். அதற்கு மேல் அந்த பாத்திரத்தில் எதுவுமில்லை. பெண்களிடம் வழிவது, விதம் விதமாக திருடுவது, சின்ன சின்ன காமெடிகளை உதிர்ப்பதற்கு எதற்கு பகத் பாசில்? இது போல், ராணா, ரித்திகா, மஞ்சுவாரியார், அபிராமி ஆகிய அத்தனை பேரின் நடிப்பும் வீணடிக்கப்படிருக்கிறது. எல்லா மொழிகளிலும் ஒவ்வொருவரை நடிக்க வைத்தால் படம் அந்தந்த மாநிலங்களில் வசூலைக் குவிக்கும் என்ற கற்பனைக்கு பலியாகி இருக்கிறார் இயக்குனர். படத்தின் திரைக்கதை வலுவாக முதலில் எழுதப்பட்டு பின்பு ஸ்டார் நடிகர்களின் இமேஜிக்காக திருத்தப்பட்டு, அதன் பலவீனமான நிலையை அடைந்திருக்கக் கூடும் எனத் தோன்றுகிறது. பெரும்பாலான காட்சிகள் வசனங்களாலேயே சொல்லப்படுகின்றன. கதையில் நிகழும் திருப்பங்களை பார்வையாளர்கள் ஏற்கனவே யூகித்து விடுகிறார்கள். ரஜினியின் தோற்றமும், படத்தின் உருவாக்கத்தில் செய்யப்பட்டு இருக்கும் ட்ரீட்மெண்ட்டும் ரஜினியின் முந்தைய படமான ஜெயிலரை நினைவூட்டுகிறது. படத்தின் மையக் கருத்தாக அப்பாவிகளை என்கவுண்டர் செய்ததைத் தான் ஹீரோ தவறு என்று புரிந்து கொள்கிறார். என்கவுண்டர் என்ற சட்ட விரோதத்தை செய்த ஹீரோ எந்த விசாரணைக்குமோ, தண்டனைக்குமோ உள்ளாவதில்லை. ஹீரோ, அப்பாவியை கொலை செய்ததற்கு பிராயசித்தமாக உண்மையான குற்றவாளியை கைது செய்வேன் என்று சத்தியம் செய்து விட்டு, அதே பிஜிஎம், அதே ஹைஸ்பீடு, ஸ்டைலாக கிளம்பி விடுகிறார். இந்த இடத்தில் ரஜினியின் பாத்திரப் படைப்பு நொறுங்கி விடுவதோடு, மொத்த படமும் அதல பாதாளத்தில் சரிகிறது. படத்தின் திரைக்கதையில் தர்க்க ரீதியான ஏராளமான பிழைகள். வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்படும் அந்த காட்சி தேவைக்கும் அதிகமாக மீண்டும், மீண்டும் காட்டப்படுகிறது. அந்த கொலை காட்சிப் படுத்தப்பட்டிருக்கும் விதமும் கேமரா கோணங்களும் குரூரமாக இருக்கிறது. ஒரு நேர்மையான இயக்குனர் நிச்சயம் இவ்விதம் எடுக்கவே மாட்டார். சண்டைக் காட்சிகளில் ரஜினி தனி மனிதனாக நின்ற இடத்தில் இருந்தே அனைவரையும் அடித்து துவைக்கிறார். ஒரு கையை தூக்கினால் ஒருவர் வீழ்கிறார். இன்னொரு கையில் இன்னொருவர். அனிமேஷன் கேம் ஷோ மாதிரி இருக்கிறது. லோகேஷ் கனகராஜ், நெல்சன் படக் காட்சிகளை நினைவூட்டக் கூடியதாக பல காட்சிகள் வருகின்றன. படத்தின் மிகப் பெரிய சாபக் கேடு அனிருத்தின் இசை இரைச்சல். படம் முழுக்க ஒரே லூப் மாதிரியான இசை. ரீ ரீக்கார்டிங் என்ற அம்சத்தையே கேலிக் கூத்தாக்கி இருக்கிறார் அனிருத். ஒரே விதமான பாடலை எத்தனை படத்தில் தான் கேட்பதோ. மனசில்லாயோ என்ற பாட்டை ஏற்கனவே இரண்டு மூன்று படங்களில் கேட்டதை போன்ற நினைவு. ஆழமான கண்டெண்டை எடுத்துக் கொண்டு, நல்ல மெஸேஜ் என்ற பெயரில் மோசமான வணிக சினிமாவை இயக்கி இருக்கிறார் ஞானவேல். இந்த படத்தின் வசூல் இது போன்ற பாசாங்குத்தனமான பல படங்கள் வருவதற்கு வழி வகுக்கலாம். இது தமிழ் சினிமாவுக்கும் நல்லதல்ல. டாஸ்மாக் கடைகளில் “மது குடிப்பது வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு” என்ற வாசகம் இடம் பெற்றிருக்கும். அது எவ்வளவு நகை முரணோ அப்படி இருக்கிறது வேட்டையன். ஒரு புறம் என்கவுண்டரை மிக ஸ்டைலிஷ்ஷாக படமாக்கி, அதை கொண்டாட்டமாக முன்வைத்து விட்டு, “அப்பாவிகளை என்கவுண்டர் செய்வது தவறு” என்று லேபிள் ஒட்டி வியாபாரம் செய்திருக்கிறார்கள். நீட் கோச்சிங் சென்டர்களின் வணிக சூதாட்டத்தை அம்பலப்படுத்திக் கொண்டே, சினிமா சூதாட்டத்தை நுட்பமாகவும், தந்திரமாகவும் செய்திருக்கிறார்கள். தமிழகத்தில் தற்போது கிட்டத்தட்ட அத்தனை திரைகளையும் வேட்டையன் மட்டுமே ஆக்ரமித்திருக்கிறது. எல்லா ஷோவும் எல்லா திரைகளும் வேட்டையன் மட்டுமே. மற்ற எளிய சிறு பட்ஜெட் படங்களுக்கு வாய்ப்பில்லை. ஏற்கனவே நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் சிறந்த படங்களான மெய்யழகன், லப்பர் பந்து போன்ற படங்களை அத்தனை திரையரங்குகளும் தூக்கி விட்டன. வேட்டையன் தனது வசூலை வேட்டையாடி முடிக்கும் வரை வேறு எந்த படத்திற்கும் திரையிட வாய்ப்பில்லை. இது இந்தப் படத்தின் வில்லன் செய்யும் அராஜகத்தை விட மோசமானது. ரஜினியை நம்பி படமெடுத்துள்ள ஞானவேலின் வேட்டையன் கன்டென்டில் மட்டும் முற்போக்கு காட்டுவது போலியானது. ரஜினி சாருக்கு நமது வேண்டுகோள் “போதும் சார் உங்கள் வேட்டை. ஓய்வெடுங்கள். நலம் பெற வாழ்த்துகள்” திரை விமர்சனம்; தயாளன் https://aramonline.in/19458/vettaiyan-rajini-cinema-review/
-
ரத்தன் டாடா காலமானார்: இந்தியத் தொழில்துறையின் முகமாகத் திகழ்ந்தவர்
11,000 வைரங்களால் உருவாக்கப்பட்ட ரத்தன் டாடா உருவப்படம் இந்திய தொழிலதிபர் ரத்தன் டாடா கடந்த வாரம் அவரது 86ஆவது வயதில் காலமானார். இவர் வழிநடத்திய டாடா குழுமம், இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்களில் ஒன்று. பெரிய செல்வந்தராக இருந்தாலும் நல்ல மனிதராகவும் வாழ்ந்தமையால் இவரது மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில் இந்தியாவின் குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் டாடா மீது அதிக அன்பு கொண்டவர். தான் மிகவும் நேசித்த டாடாவின் மரணத்துக்கு தனித்துவமாக அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதற்காக 11,000 அமெரிக்க வைரங்களை பதித்து ரத்தன் டாடா உருவத்தை உருவாக்கி அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த படத்துக்கு பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அவற்றுள், “தன்னிகரற்ற தலைவரை பெருமைப்படுத்த 11,000 வைரங்கள் போதுமானதாக இருக்காது”. “ரத்தன் டாடா தான் உண்மையான வைரம்” “ரத்தன் டாடா எனும் வைரத்துக்கு இந்த 11,000 வைரங்கள் ஈடாகாது” இவ்வாறு மக்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதன் மூலம் ரத்தன் டாடா மீது மக்களுக்கு இருக்கும் அன்பும் மதிப்பும் வெளிப்படுகின்றது. https://oruvan.com/india/2024/10/14/a-unique-tribute-is-the-ratan-tata-portrait-made-of-11000-diamonds
-
பாராளுமன்றத் தேர்தலும் தமிழ் மக்கள் முன்னுள்ள தெரிவுகளும் – ஐ.வி.மகாசேனன்
பாராளுமன்றத் தேர்தலும் தமிழ் மக்கள் முன்னுள்ள தெரிவுகளும் – ஐ.வி.மகாசேனன் October 15, 2024 நவம்பர்-14ஆம் திகதி பாராளுமன்ற தேர்தலுக்கான திகதி இடப்பட்டு உள்ளது. அதேவேளை அக்டோபர் 04-11ஆம் திகதி வேட்புமனு தாக்கல் இடம்பெற்றுள்ளது. நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலை போன்றே, பாராளுமன்ற தேர்தலிலும் அதிகளவு கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் களமிறங்கியுள்ளன. முழு இலங்கைத்தீவிலும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் உள்ளடங்களாக 690 குழுக்கள் போட்டியிடப்போவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வடக்கு-கிழக்கும் பொதுத்தேர்தலை மையப்படுத்தி பெரும் குழப்பகரமான சூழலை எதிர்கொண்டுள்ளது. நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெளிப்படுத்தப்பட்ட தமிழ் மக்களின் தேசிய எழுச்சியை அதுசார்ந்திரட்சியை ஒருங்கிணைக் கும் களத்தை தமிழ் அரசியல் கட்சிகள் பொதுத்தேர்தலில் உருவாக்கி இருக்கவில்லை. கடந்த இரு தசாப்த கால ஈழத்தமிழர்களின் அரசியல் அடையாளமாக காணப்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எனும் பதிவு செய்யப்படாத கட்டமைப்பு முழுமையாக சிதறடிக்கப் பட்டுள்ளது. அதுமட்டுமன்றி தமிழ் அரசியலில் 75 ஆண்டு கால பாரம்பரியத்தை கொண்ட தமிழரசு கட்சிக்குள்ளும் அதிக குழப்பங்களை அவதானிக்க கூடியதாக உள்ளது. இக்குழப்பகரமான நிலையில், தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் எனும் விம்பத்தின் பிரதிபலனை தேசிய மக்கள் சக்தி வடக்கு-கிழக்கிலும் பெற்றுக்கொள்ளுமா எனும் வாதங்களும் பொதுவெளியில் காணப்படுகின்றது. இக்கட்டுரை பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் முன்னுள்ள தெரிவுகளை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வடக்கு-கிழக்கில் யாழ்-கிளிநொச்சி, வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம் பாறை ஆகிய ஐந்து தேர்தல் மாவட்டங்களி லும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் உள்ளடங்கலாக 250இற்கு மேற்பட்ட அணிகள் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளன. வடக்கு-கிழக்கின் தேர்தல் மாவட்டங்களிற்கு முறையே யாழ்-கிளிநொச்சி 6 ஆசனங்கள், வன்னி 6 ஆசனங்கள், திருகோணமலை 4 ஆசனங்கள், மட்டக்களப்பு 5 ஆனங்கள், அம்பாறை 7 ஆனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 28 ஆசனங்களுக்கு ஏறத்தாழ 2500 வேட்பாளர்கள், 250இற்கு மேற் பட்ட அணிகள் போட்டியிடுகின்றன. இதில் ஒரு சில அணிகளில் ஒரே குடும்ப பிரதிநிதிகள், ஒரே தெருக்களில் வசிப்போர் களமிறங்கியுள்ளனர். ஒரு சில அணி அரசியல் அதிகாரத்துக்கு போட்டியிடுவதுடன், பலரும் பிரபல்யம், வெளி நாட்டு விசா என இதர பல காரணங்களுக்காக களமிறங்கியுள்ளனர். இது வாக்குகளை சிதறடிக் கும் செயலாகவே அமைகிறது. யாழ்-கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் மாத்திரமே முழுமையாக தமிழ் பிரதிநித்துவம் பகிரப்படுகிறது. ஏனைய தேர்தல் மாவட்டங்களில் முஸ்லீம் மற்றும் சிங்கள பிரதிநிதித்துவமும் கணிசமாக காணப்படுகின்றது. 2020 பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் முழுமையாக தமிழ்ப் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டதுடன், திருகோணமலையில் நான்காவது ஆசனத்தை மயிரிழையில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் பெற்றுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. யாழ்-கிளிநொச்சி மாவட்ட தேர்தல் தொகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் தமிழரசுக் கட்சி ஆகிய பிரதான தமிழ் அரசியல் கட்சிகள் தமது வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தனர். தமிழரசு கட்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை (06.10.2024) யாழ்-கிளிநொச்சி தேர்தல் மாவட்ட வேட்பாளர் விவரங்களை அறிவித்திருந்தன. அவ்முடிவில் அதிருப்தி அடைந்த தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், கொழும்பு மாவட்ட கிளைத் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா மற்றும் மகளீர் அணி, இளைஞர் அணி செயற்பாட்டாளர்கள் கட்சியை விட்டு வெளியேறி சுயேட்சையாக களமிறங்கி உள்ளனர். யாழ்-கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் தென்னிலங்கை கட்சிகள், தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழு உட்பட ஆகக்குறைந்தது பத்து அணி தாக்கம் செலுத்தக்கூடியதாக அமைகின்றது. எனினும் யாழ்-கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்துக்கு சனத்தொகை விகிதாசார அடிப்படையில் ஆறு ஆசனங்களே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. யாழ்-கிளிநொச்சி தேர்தல் மாவட்ட பிரதிபலிப்புகளே வடக்கில் வன்னித் தேர்தல் தொகுதியிலும் கிழக்கில் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை தேர்தல் தொகுதிகளிலும் காணப்படுகின்றது. வன்னித் தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி சார்பாக முல்லைத்தீவை சார்ந்த இளம் சட்டத்தரணி ஒருவர் களம் இறங்குவதாக முன்னர் அறிவிக் கப்பட்டது. எனினும் தமிழரசு கட்சியின் தமிழ்த் தேசிய நிலைப்பாடு சார்ந்த சந்தேகத்தினை வெளிப்படுத்தி, இளம் சட்டத்தரணி தான் தேர்தலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்துள்ளார். இது வன்னி தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி சார்ந்து எதிரான விமர்சனத்தை உருவாக்கியுள்ளது. திருகோணமலை மற்றும் அம்பாறை தேர்தல் தொகுதியில் தமிழ் பிரதிநிதித்துவம் சார்ந்து எழுந்துள்ள அச்சத்தால் அரசியல் கட்சிகளிடையே கூட்டு முயற்சியை ஏற்படுத்த சிவில் சமூகங்கள் முயற்சியினை மேற்கொண்டிருந்தது. குறிப் பாக திருகோணமலை ஆயர் அவர்களும் இம்முயற்சியில் இறங்கியிருந்தார். எனினும் கட்சிகளின் தேசியப்பட்டியல் ஆசையால், கட்சிகளி டையே பொதுச்சின்னம் என்பதில் உடன்பாடு எட்ட முடியவில்லை. திருகோணமலையில் தமிழரசு கட்சியின் சின்னத்தில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியும் இணைந்து போட்டி யிட இணங்கியது. மாறாக அம்பாறை தேர்தல் தொகுதியில் ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்ட ணியின் சின்னத்தில் தமிழரசு கட்சி இணைந்து செயல்பட மறுத்த நிலையில், அம்பாறையில் கட்சிகள் தனித்தனியாகவே போட்டியிடுகின்றன. பொதுத்தேர்தல் சார்ந்து வடக்கு-கிழக்கில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான நிலைமைகள் தென்இலங்கை கட்சிகளுக்கு வாய்ப்பாகுமா எனும் சந்தேகங்கள் பொதுவெளியில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தென்இலங்கையில் விவாதிக்கப்படும் ஜே.வி.பி-யின் பரிமாணமாகிய தேசிய மக்கள் சக்தியின் மாற்றம் சார்ந்த அரசியல் அலை, வடக்கு-கிழக்கிலும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற வாதம் சமகாலத்தில் மேல் எழுந்துள்ளது. இது அடிப்படையில் தமிழ் அரசியல் கட்சிகளிடையே எழுந்துள்ள பிளவுகளும், அதனால் தமிழ் மக்களிடையே உருவாகியுள்ள அவநம்பிக்கை காரணமாக நோக்கப்படுகின்றது. வடக்கு-கிழக்கு தமிழ் மக்களுக்கு பொதுத் தேர்தல் சார்ந்து உள்ள தெரிவுகளை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகின்றது. முதலாவது, தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டிய தரப்புகளை சரியாக இணங்காணுதல் அவசியமாகிறது. தென்னிலங்கையில் ஏற்பட் டுள்ள மாயமான மாற்றம் எனும் வாதத்தை வடக்கு-கிழக்கிலும் ஏற்படுத்துவதற்கு ஜே.வி.பி அணியினர் முயற்சி செய்து வருகின்றனர். எனினும் தென்இலங்கை உரையாடும் மாற்றம் உறுதியானதா? மற்றும் இம்மாற்றத்தால் ஈழத் தமிழர்கள் நன்மையடைய கூடியதாக உள்ளதா என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டியது அவசியமாகின்றது. இப்பத்தியில், ‘இலங்கையில் ஏற்பட்டுள்ளது அமைப்பு மாற்றமா? ஆட்சி மாற்றமா?’ எனும் தலைப்பில், ஜே.வி.பி ஏற்படுத்தி உள்ள மாற்றம் என்பது வெறுமணமே ஆட்சி மாற்றம் என்பது விவரிக்கப்பட்டுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே கடந்த மூன்று வார கால ஆட்சியின் நடத்தைகளும் அமைந்துள்ளது. தேர்தல் பிரச்சார காலத்தில், தற்போதைய இலங்கையின் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க, தன்னுடைய பெயர் பிறப்புச் சான்றிதழில் மாத்திரம் இருப்பதே தனக்கு போதும் எனவும், முன்னைய ஆட்சியாளர்கள் வீதிகள் அரச கட்டிடங்களில் தமது பெயர் பொறித்துள்ளமையை விமர்சித்திருந்தார். எனினும் தபால் திணைக்களம் தனது 150வது ஆண்டு தினத்தை முன்னிட்டு காபந்து அரசாங்கத்தின் பிரதமர் மற்றும் வெளிவிவாகர அமைச்சரின் புகைப்படங்களை தாங்கிய தபால் முத்திரையை வெளியிட்டுள்ளது. கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பணத்தாளில் தனதுபடத்தை வெளியிட்டமை மற்றும் அரச கட்டிடங்களுக்கு தமது பெயரை சூடியமையையும் ஜே.வி.பி விமர்சித்திருந்தது. ஜே.வி.பி-யின் காபந்து அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தமது படங்களை தபால் முத்திரையில் பதிப்பு செய்வது மாற்றம் சார்ந்த உரையாடலை கேள்விக்கு உட்படுத்துவதாக அமைகின்றது. இது ஜே.வி.பி சார்ந்த அதன் மாற்றம் சார்ந்த அரசியல் உரையாடலின் பொது விம்பப் பிறழ்வை வெளிப்படுத்துகிறது. அதேவேளை ஈழத்தமிழ் அரசியலுக்கு ஜே.வி.பி பொருத்தமானவர்களா என்பதையும் ஈழத் தமிழர்கள் சிந்திக்க வேண்டியுள்ளது. கடந்த காலங்களில் ஜே.வி.பி-யின் இனவிரோத செயற்பாடுகள் தொடர்பில் இப்பத்தியில், ‘ஜே.வி.பி.யின் இனவாத செயற்பாடுகளுக்கு அனுரகுமார திசாநாயக்கா பொறுப்புக்கூறுவாரா?’ மற்றும் :தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி தமிழ் மக்களின் ஆட்சியுரிமையை கோருகிறது!’’ எனும் தலைப்புகளில் நீண்ட விளக்கங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. அது கடந்த காலமாக விமர்சிப்போருக்கு, ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்கு பின்னர் ஜே.வி.பி காபந்து அரசாங்கத்தின் ஈழத்தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை குறிப்பிடுவது பொருத்தமானதாக அமையும். 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை யுத்தத்தில், குறைந்தபட்சம் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட போர் குற்றங் களுக்கு பொறுப்பு கூறல் தொடர்பாக ஐநா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஜே.வி.பி அரசாங்கம் முழுமையாக நிராகரித்துள்ளது. அதேவேளை இனப்படுகொலை குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள முன்னாள் ராணுவ அதிகாரிகளுக்கு ஜே.வி.பி அரசாங்கமும் உயர் பதவிகளை வழங்கி வருகின்றது. திருகோணமலை வதைமுகாமில் மாண வர்கள் கொல்லப்பட்ட வழக்கில் கடற்படை அதிகாரிகளுக்கு உதவிய முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் சிறிமேவன் சரத் சந்திர ரணசிங்க துறைமுக அதிகார சபையின் தலைவராக ஜேவிபி அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறான பின்னணியில், தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுவதுடன், அதேவேளை குறைந்த பட்ச தீர்வுகளையும் ஏற்றுக் கொள்ளாத ஜே.வி.பி அரசாங்கத்தை நிராகரிப்பது ஈழத் தமிழர்களின் தார்மீக பொறுப்பாகும். இரண்டாவது, தமிழ் தேசிய முலாம் பூசப்பட்ட அரசியலுக்குள்ளும் சிலரை அடையா ளம் கண்டு நிராகரிக்க வேண்டிய பொறுப்பு தமிழரிடம் காணப்படுகின்றது. தமிழ் அரசியல் கட்சிகளிடையே தேசியம் என்பது அரசியல் மூலமாகவே காணப்படுகின்றது. அதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தென்இலங்கையுடன் உறவுகளை பேணிக் கொண்டு தமிழ் மக்களை தோற் கடிக்கும் நிகழ்ச்சி நிரலை செயற்படுத்தி வருகின்றனர். தேர்தல் காலங்களில் மாத்திரம் போலியான தமிழ்த்தேசிய விம்பத்தையும் பாரம்பரிய அரசியல் விம்பத்தையும் வைத்துக்கொண்டு தமது அரசியல் அதிகாரத்தை உறுதிப்படுத்த முயல்கின்றார்கள். அதேவேளை தேர்தலுக்குப் முன்னரும் பின்னரு மான செயற்பாடுகளில் தமிழ் மக்களின் தேசிய திரட்சியை சீர்குலைப் பதில் முதன்மையான சக்தி யாகவும் காணப் படுகின்றார்கள். 2001ஆம் ஆண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உருவாக்கம், தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைப்பதன் ஊடாக, அரசியல் ரீதியான திரட்சியை ஏற்படுத்தும் நோக்கிலேயே இடம்பெற்றது. எனினும் 2009ஆம் ஆண்டு ஆயுதப் போராட்ட மௌனிப்புக்கு பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மறைந்த தலைவர் இரா.சம்பந்தன் தமிழ் தேசிய நீக்கத்திற்காக திரட்சியை சீர்குலைத்தார். அவரால் 2009க்கு பின்னர் ஈழத் தமிழ் அரசியலுக்கு அழைத்து வரப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும், தமது குருவின் வழியே தமிழ் தேசிய திரட்சியை சீர்குலைப்பதை முனைப்பு டன் செயல்படுத்தி இருந்தார்கள். அந்தப் பின்னணியிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு மெல்ல மெல்ல உடைக்கப்பட்டது. அதன் உச்சமாக 2022ஆம் ஆண்டு நடைபெறாத உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு தமிழரசு கட்சியை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியே தனியாக கொண்டு செல்வதாக தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ம.ஆ.சுமந்திரன் தெரிவித்திருந்தார். அத்துடன் தமிழ் தேசியக் கூட்ட மைப்பு முழுமையாக சிதைக்கப்பட்டது. தற்போது பொதுத் தேர்தலை முன்னிட்டு வேட்பாளர் தெரிவில் தமிழரசுக்கட்சிக்குள் ம.ஆ.சுமந்திர னின் தன்னிச்சையான செயற்பாடுகள் அதிகரித்துள் ளதாக கூறி, தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் வெளியேறியுள்ளார்கள். இது தமிழரசுக் கட்சியையும் பிளவுபடுத்தியுள்ளது. இவ்வாறான பின்னணியில் தமிழ் தேசியத்தின் திரட்சியை சிதைக்கும் நோக்கில் தமிழ்த் தேசிய முலாம் பூசி, தமிழ் தேசிய பாரம்பரிய அரசியல் கட்சி என்ற விம்பத்துக்குள் சில அரசியல்வாதிகள் காணப்படுகின்றார்கள். இவ்வாறான போலிகளை தமிழ் மக்கள் அடையாளம் கண்டு, நிராகரிக்க வேண்டியது தமிழ் தேசிய அரசியலின் எதிர் காலத்திற்கு அவசியமானதாகும். மூன்றாவது, தமிழ் அரசியல் கட்சிகளில் சிறந்தவர்கள் என்ற தெரிவினை இனங்காட்டு வதும் கடினமானதாகும். தமிழ் அரசியல் பரப்பில் காணப்படும் அரசியல் கட்சிகள் குறைந்தபட்சம் தமிழ் மக்களின் தேசியத்தின் அடிப் படையில் ஒருங்கிணைந்து செயற்பட கூட முன் வராதவர்களாகவே காணப்படுகின்றார்கள். கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் தேசிய எழுச்சியை அது சார்ந்த திரட்சியை உருவாக்குவதற்கே தமிழ் பொது வேட்பாளர் களமிறக்கப்பட்டு இருந்தார். எனினும் தமிழ்ப் பொது வேட்பாளர் சார்ந்து, தமிழ் அரசியல் கட்சிகளிடையே ஒரு இணக்கமான நிலைப்பாடு காணப்படவில்லை. தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தேர்தல் புறக்கணிப்பு சார்ந்து செயற்பட்டிருந்தார்கள். தமிழரசு கட்சி தமிழ் பொது வேட்பாளரை நிராகரித்து, ஒற்றையாட்சிக்கு உட்பட்ட தீர்வை பரிந்துரைத்த தென்இலங்கை கட்சியினை ஆதரித்திருந்தது. அதேவேளை தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்புக்குள் பங்காளர்களாக செயற்பட்டவர்களிலும் புளொட் மற்றும் ரெலோ கட்சியினர் தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவாக மனப்பூர்வமாக செயல்பட்டு இருக்க வில்லை . அதுமட்டுமன்றி ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியாக தமிழ் மக்களின் தேசிய எழுச்சிக்கான பொதுச்சின்னத்தை ஒரு கட்சிக்குள் முடக்கியுள்ளனர். இது தமிழ் மக்களின் தேசிய எழுச்சியை மலினப்படுத்தியுள்ளது. மேலும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் க.வி.விக்னேஸ்வரன் மதுபானசாலை அனுமதிக்கான சிபார்சு வழங்கியமை சர்ச்சைக்குரியதாக அமைகின்றது. இந்த பின்னணியில் தமிழ் அரசியல் கட்சிகளின் தமிழ்த் தேசிய கருத்தாடல் என்பது வெறும் அரசியல் முலாமாகவே அமைகின்றது. இவர்களில் ஒரு அணியை கைநீட்டக்கூடிய நிலை மைகள் இல்லை. கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தல்களில் பயன்படுத்திய ‘தீயதில் குறைந்த தீயதை’ தெரிவு செய்யும் அணுகுமுறையையே, இம்முறை தமிழ் மக்கள் பொதுத் தேர்தலில் கையாள வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது. ஒவ் வொரு அணிகளிலும் இளையோர், முன்னாள் போராளிகளை பிரதான வேட்பாளர்கள் கறிவேப்பிலைக்காக உட்புகுத்தியுள்ளார்கள். இக்கறிவேப் பிலைகளுக்கு தமிழ் மக்கள் அதிகம் முக்கியத்துவம் அளிப்பதால், பழையவர்களையும் தவிர்க்க வேண்டியவர்களையும் நிராகரிப்பதே உசிதமான முடிவாகும். எனவே, 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் தமிழ் மக்களுக்கு கடினமான பாதையையே வெளிப்படுத்தி உள்ளது. இங்கு தமிழ் மக்கள் எதனை தெரிவு செய்கின்றார்கள் என்பதற்கு அப்பால், எதனை நிராகரிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது. தமிழ் தேசிய அரசியலின் இருப்பிற்கு ஆபத்தான சக்திகளை, தமிழ்த்தேசியத்தை அழிப்பதை நிகழ்ச்சி நிரலாக கொண்டு செயற்படுவோரை நிராகரிப்பதன் மூலம் தமிழ் தேசிய அரசியலுக்கு வரக்கூடிய ஆபத்துக்களை குறைக்கக்கூடிய சூழல் காணப்படுகிறது. அதேவேளை குறை வான ஆபத்து சூழலில் எதிர்காலத்தையும் சரியாக கட்டமைக்கக்கூடிய இடைவெளியை பெறக்கூடிய தாக அமையும். தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டிய தரப்புகளை சரியாக அடையாளம் காண்பதும் காண்பிப்பதும் தமிழ்த் தேசிய ஆர்வலர்களின் பொறுப்பாகவும் கடமையாகவும் அமைகின்றது. https://www.ilakku.org/பாராளுமன்றத்-தேர்தலும்-த/
-
அனுர அரசாங்கமும் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகின்றது!
அனுர அரசாங்கமும் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகின்றது! October 14, 2024 அனுரகுமார திசநாயக்க அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகின்றது பொதுவேட்பாளருக்கு சார்பாக செயற்பட்ட ஒருவருக்கு விசாரணைக்கு சமூகமளிக்குமாறு பயங்கரவாத விசாரணை பிரிவினர் உத்தரவு பிறப்பித்துள்ளனர் எனமக்கள் போராட்ட முன்னணியின் உறுப்பினரும் சமூக செயற்பாட்டளருமான ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார் செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-; இந்த ஆட்சியில் இருக்ககூடிய அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவோம் என உறுதியளித்திருந்தது. இன்று இவர்கள் ஆட்சிக்கு வந்து சில நாட்களே ஆகியுள்ள நிலையில் இன்று சிலருக்கு பயங்கரவாத தடுப்புபிரிவிலிருந்து கடிதங்கள் அனுப்பப்பட்டுக்கொண்டிருக்கின்றது. நண்பர் ஒருவர் இந்த முறை தமிழ்பொதுவேட்பாளராக களமிறங்கிய அரியநேந்திரனிற்கு சமூக வலைத்தளத்தில் பணம் செலுத்தி விளம்பரங்கள் செய்துகொண்டிந்தவர். அவ்வாறு பணம் செலுத்தி விளம்பரம் செய்யப்பட்டது ஒரு தீவிரவாத குற்றம் என வரையறை செய்வது போல தீவிரவாத தடுப்பு பிரிவினர் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அவருக்கு கடிதம் அனுப்பி முறைப்பாடு விசாரணையொன்றிற்கு அழைத்துள்ளனர். இந்த விசாரணை தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் இடம்பெற்றிருக்கின்றது, சர்வதேசத்திலிருந்து எப்படி பணம் யாரிடமிருந்து வந்தது போன்ற கேள்விகளை கேட்டுள்ளனர். அனுரகுமாரதிசநாயக்கவிற்கு கூட பல்வேறு நாடுகளில் இருந்து பணம் வருகின்றது,வந்திருக்கின்றது இவற்றையெல்லாம் இவர்கள் என்ன கோணத்தில் விசாரணை செய்யப்போகின்றார்கள் குறிப்பாக தமிழ் மக்கள் மேல் தமிழ் மக்கள் சார்ந்த அரசியல்மேல்,பயங்கரவாதம் என்ற குற்றச்சாட்டும் பயங்கரவாதம் என்ற முத்திரையும்,குத்தப்படுவது அவர்கள் தங்கள் எதிர்கால அரசியலை எந்தவகையிலும் முன்னெடுக்க முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தும் என்பதை இவர்கள் முதலில் புரிந்துகொள்ளவேண்டும். இளைஞர்கள் இந்த அரசியலிற்கு வருவதற்கு அரசியல் பேசுவதற்கு தங்களிற்கு எதிராக நிகழ்ந்துகொண்டிருக்கின்ற அடக்குமுறைக்கு எதிராக குரல்கொடுப்பதற்கு தயங்குவதற்கான ஒரு பிரதான காரணமாக பயங்கரவாத தடை;டச்சட்டம் காணப்படுகின்றது.எனவே இந்த பயங்கரவாத தடைச்சட்டம் என்ற ஒன்றை வைத்துக்கொண்டு,பயங்கரவாத தடுப்பு பிரிவு எங்களின் மேல் தொடர்ச்சியான அடக்குமுறைகளை பிரயோகிப்பது, கட்டவிழ்த்து விடுவது எந்த வகையில் நியாயம் என நான் இந்த அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புகின்றேன். இதேவேளை கிளிநொச்சியில் ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டிற்கு சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அவரின் பெற்றோரிடம் விபரங்களை பெற்றுள்ளனர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். தமிழ் மக்களிற்கு ஆதரவாக செயற்படுகின்றீர்கள் அதனால்,உங்களை விசாரணை செய்கின்றோம் என்ற வகையில் அவருக்கு ஒரு அழைப்பும் சென்றிருக்கின்றது,இந்த அழைப்பின் ஒலிவடிவம் என்னிடம் உள்ளது. இதேபோல அம்பாறை மாவட்ட காணாமல்போனோர் உறவினர்களுடைய அந்த போராட்டத்திற்கு தலைமை தாங்குகின்ற செல்வராணி என்ற பெண்மணியை இரண்டு மூன்று நாட்களிற்கு முன்னர் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர். https://www.ilakku.org/அனுர-அரசாங்கமும்-பயங்கரவ/
-
இந்தியாவை விட்டு கனடா தூதர் வெளியேற உத்தரவு - இரு நாடுகளுக்கும் என்ன பிரச்னை?
இந்தியா தவறு செய்துவிட்டது: கனடா பிரதமர் தெரிவிப்பு October 15, 2024 இந்தியா தவறு செய்துவிட்டது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இது இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசலை அதிகரித்துள்ளது. கனடா நாட்டில் வசித்து வந்த தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியிருந்தார். இதை இந்தியா மறுத்தது. இந்த சூழலில் டெல்லியில் உள்ள கனடா தூதரக பொறுப்பு அதிகாரி ஸ்டூவர்ட் வீலருக்கு மத்திய வெளியுறவு அமைச்சக செயலாளர் (கிழக்கு) நேற்று மாலை சம்மன் அனுப்பினார். இதன் அடிப்படையில் ஆஜரான வீலரிடம் கனடா அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப் பட்டது. இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “கனடா நாட்டு மண்ணில் கனடா மக்களை அச்சுறுத்தும் மற்றும் கொல்லும் வெளிநாட்டு அரசாங்கத்தின் செயலை ஒருபோதும் எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. இது கனடாவின் இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டத்தின் கீழ் ஏற்றுக்கொள்ள முடியாத அத்துமீறல். கடந்த கோடை காலத்தின் தொடக்கம் முதலே எங்களது ‘ஃபைவ் ஐஸ் பார்ட்னர்ஸ்’ (ஆஸ்திரேலியா, கனடா, நியூஸிலாந்து, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா) உடன் இணைந்து நெருக்கமாக பணியாற்றி வருகிறோம். குறிப்பாக இந்தியாவின் இது மாதிரியான செயலை எதிர்கொண்ட அமெரிக்காவுடன் சேர்ந்து இந்த விவகாரத்தில் கவனம் செலுத்துகிறோம்” எனக் கூறியுள்ளார். முன்னதாக, இது தொடர்பாக இந்திய மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில்: கனடாவில் உள்ள இந்திய தூதர் மற்றும் பிற தூதரக அதிகாரிகள் மீது ஆதாரமின்றி குற்றம் சாட்டி இருப்பதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அந்நாட்டு தூதரக பொறுப்பாளரிடம் தெரிவிக்கப்பட்டது. தீவிரவாதம் மற்றும் வன்முறை சூழலில், ட்ரூடோ அரசின் நடவடிக்கைகள் இந்திய அதிகாரிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது. அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் தற்போதைய கனடா அரசின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, அங்குள்ள இந்திய தூதர் மற்றும் பிற அதிகாரிகளை திரும்பப் பெற முடிவு செய்துள்ளோம் என அவரிடம் தெரிவிக்கப்பட்டது. கனடா அரசிடமிருந்து ஒரு தகவல் வந்துள்ளது. அதில் ஒரு வழக்கு விசாரணையில் இந்திய தூதர் மற்றும் இதர தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது என கூறப்பட்டுள்ளது. இந்திய அரசு இந்த அபத்தமான குற்றச்சாட்டுகளை கடுமையாக நிராகரிக்கிறது. ட்ரூடோ தலைமையிலான அரசு, வாக்கு வங்கி அரசியலை கருத்தில் கொண்டு இதுபோன்ற குற்றச்சாட்டை சுமத்தி உள்ளது. இந்தியாவுடன் கனடா பிரதமர் ட்ரூடோ நீண்ட காலமாகவே விரோதப் போக்கை கடைபிடித்து வருகிறார் என்பதற்கு ஆதாரம் உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு வாக்கு வங்கியை அதிகரித்துக் கொள்வதற்காகவே அவர் இந்தியா வந்திருந்தார். மேலும் இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பிரிவினைவாத மற்றும் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அமைச்சர்களாக நியமித்தார். இது தவிர, கடந்த 2020-ம் ஆண்டு இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் (விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு) தலையிட்டார். இதுவே அவரது இந்தியாவுக்கு எதிரான மனநிலையை பிரதிபலித்தது. இந்தியாவுக்கு எதிராக பிரிவினைவாத செயலை வெளிப்படையாக ஆதரிக்கும் ஒரு அரசியல் கட்சியை ட்ரூடோ அரசு நம்பி இருக்கிறது. இந்நிலையில், உள்நாட்டு அரசியலில் வெளிநாட்டு தலையீடு இருப்பதை ட்ரூடோ கண்டுகொள்வதில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இதையடுத்து, வெளிநாட்டு தலையீடு தொடர்பான கமிஷன் முன்பு ட்ரூடோ ஆஜராகி விளக்கமளிக்க இருக்கிறார். இந்நிலையில் இதை திசை திருப்புவதற்காகவே அவர் இந்தியா மீது குற்றம் சுமத்துகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. https://www.ilakku.org/india-has-made-a-mistake-canadian-prime-ministers-statement/
-
மட்டக்களப்பில் சரவணபவனுக்கு வாக்களித்தாலும் யாழ்ப்பாணத்தில் சுமந்திரனே வெல்லுவார்!
மட்டக்களப்பில் சரவணபவனுக்கு வாக்களித்தாலும் யாழ்ப்பாணத்தில் சுமந்திரனே வெல்லுவார்! Vhg அக்டோபர் 14, 2024 சரவணபவானுக்கு வாக்களித்தால் எப்படி சுமந்திரன் வெல்லுவார் என்று நீங்கள் எழுப்புகின்ற கேள்வி புரிகின்றது. ஆனால் அதுதான் உண்மை. மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் மேயர் தான் இந்த சரவணபவன். தமிழரசுக் சின்னத்தில் மட்டக்களப்பில் போட்டியிட்டு மிகக் குறைவான வாக்கைப் பெறுவார் என்று கூறப்படுகின்ற ஒரு வேட்பாளர். ஆனால் மட்டக்களப்பில் நிச்சயம் தோற்பார் என்று கருதப்படுகின்ற இந்த வேட்பாளருக்கு நீங்கள் யாராவது வாக்களித்தால்கூட, அந்த வாக்கில் யாழ்ப்பாணத்தில் போட்டிபோடுகின்ற சுமந்திரன் வெற்றிபெற வாய்ப்பிருக்கின்றது. எப்படி என்று பார்ப்போம். 'யாழ்ப்பாணத்தில் இம்முறை சுமந்திரனை தோற்கடித்தே தீருவது' என்று கங்கணம் கட்டி நின்றுகொண்டிருக்கின்றார்கள் தமிழ் மக்கள். வாக்குகளின் அடிப்படையில் இம்முறை சுமந்திரன் வெல்லுவது என்பது மிக மிகக் கடினம் என்றுதான் பலரும் கூறுகின்றார்கள். ஆனால் அவர் தேசியப் பட்டியலின் மூலம் நாடாளுமன்றம் செல்லமுடியும். தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்துக்கு நீங்கள் அளிக்கக்கூடிய ஒவ்வொரு வாக்கும் சுமந்திரனின் என்கின்ற தமிழ் மக்கள் பெரிதாக விரும்பாத ஒரு நபரை தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் அனுப்பி விடக்கூடிய அபாயத்துக்கு வித்திட்டுவிடும். ஒரு கட்சியின் தேசியப் பட்டியல் நியமனம் என்பது, ஒரு கட்சிக்கு இலங்கை முழுவதும் விழக்கூடிய ஒட்டுமொத்த வாக்குகளில் இருந்து கிடைக்கக்கூடிய ஆசனம். அதனால் அந்தத் தேசியப் பட்டியல் ஆசனத்தின் மூலம் சுமந்திரன் தெரிவாகுவதற்கு சாத்தியம் இருக்கின்றது. உதாரணத்திற்கு, வீட்டுச் சின்னத்தில் போட்டியிரும் எந்த ஒரு வேட்பாளருக்கும் நீங்கள் அம்பாறையில் வாக்களித்தாலும் சரி, மட்டக்களப்பில் வாக்களித்தாலும் சரி, யாழ்ப்பாணத்தில் வாக்களித்தாலும் சரி, சுமந்திரன் தேசியப்பட்டியல் மூலம் உங்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றம் செல்வதற்கு மறைமுகமாக நீங்கள் வாக்களிக்கின்றீர்கள் என்பது தான் உண்மை. எனவே சுமந்திரன் இம்முறை தமிழ் மக்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றம் செல்வதை நீங்கள் விரும்பவில்லை என்றால், வீட்டுச் சின்னத்தில் போட்டிபோடுகின்ற எந்த ஒரு வேட்பாளரையும் நீங்கள் ஆதரிக்க முடியாது என்பதுதான் சமன்பாடு. https://www.battinatham.com/2024/10/blog-post_873.html
-
தாயக அரசியலை தத்தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விரும்பும் புலம்பெயர் நிதி வழங்குனர்கள்
தாயக அரசியலை தத்தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விரும்பும் புலம்பெயர் நிதி வழங்குனர்கள் சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியில் நேரடிக் காலனித்துவ ஆட்சி உலகில் மறைந்துவிட்டபோதிலும் இன்றும் உலகில் முன்னேறிய நாடுகள் பல தத்தமது நோக்கங்களுக்காக ஏனைய நாடுகளை பல்வேறு வழிகளில் மறைமுகமாக நவகாலனித்துவ முறையில் தமது கட்டுப்பாட்டுக்குள் அல்லது சார்பு நிலையில் வைத்திருப்பதையும் வைத்திருக்க முயல்வதையும் காணமுடியும். இதற்கு அந்நாடுகள் பொருளாதார காரணிகளை பிரதான வழிமுறையாகக் கையாண்டாலும் மறைமுகமான, சிலவேளைகளில் நேரடியான அரசியல் தலையீடுகள் மூலமும் இதனைச் சாதிக்க முனைகின்றன. தமக்குச் சார்பான ஆட்சியாளர்களை அதிகாரத்தில் கொண்டுவர முனைவது போலவே முரண்டுபிடிப்போரை அதிகாரத்திலிருந்து அகற்றுதல், சிலவேளைகளில் அவர்களை படுகொலை செய்தல் என்பனவும் அவ்வழிமுறைகளுக்குள் அடங்கும். இன்று பெரும்பாலான நாடுகளில் ஜனநாயகமுறைத் தேர்தல்கள் மூலம் ஆட்சித் தலைவர்கள் தெரிவு செய்யப்படுவதால் தமக்குச் சார்பானவர்களை வெற்றி பெறச் செய்வதற்கு இந்நாடுகள் பல்வேறு உபாயங்களக் கையாளுகின்றன. அதிலொன்று தேர்தல் செலவுகளுக்காக குறித்த நபருக்கு அல்லது கட்சிக்கு நிதியை வாரி வழங்குவது. இலங்கை வரலாற்றிலும் இது நிகழ்ந்தே வந்தாலும் அது தொடர்பான தகவல்கள் அரிதாகவே வெளிவருகின்றன. 2015 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை மீண்டும் பதவியிலமர்த்துவதற்காக சீனா பல கோடி யுவான்களை வழங்கியதான செய்திகள் வெளிவந்ததைப் போலவே ‘அரகலய’ போராட்டத்துக்கு பின்புலத்தில் மேற்குலகம் இருந்தது என்ற செய்திகளும் வெளிவந்திருந்தன. அதேபோல அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்றம்பை வெற்றிபெறச் செய்வதற்கான முறைகேடுகளில் ரஸ்யா ஈடுபட்டதான குற்றச்சாட்டும் உண்டு. 2005 இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் விடுதலைப் புலிகள் மகிந்தவிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு வடக்கு- கிழக்கில் பகிஷ்கரிப்பினூடாக ரணிலைத் தோல்வியடையச் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டும் உண்டு. நாடுகளுக்கிடையில் இவ்வாறு நடப்பதை ஒத்த செயற்பாடுகள் இன்று ஈழத் தமிழ் மக்களின் அரசியலிலும் வேறொரு வடிவில் அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது. குறிப்பாக 2009 ஆம் ஆண்டில் யுத்தம் நிறைவுக்கு வந்ததிலிருந்து இன்றுவரை இலங்கையில் நடந்த அத்தனை தேர்தல்களிலும் அரசியல் கட்சிகளுக்கு கணிசமான நிதி புலம்பெயர் நாடுகளிலிருந்து உட்பாய்ந்த வண்ணமே உள்ளது. ஆரம்ப காலத்தில் இது ஒரு உதவியாகவே கருதப்பட்டாலும் இன்று பல்வேறு வழிகளில் விரிவடைந்து தமிழ் மக்களின் அரசியலைத் தூரவிருந்தே இயக்கும் ஒரு நிலைக்கு அது பரிணாம வளர்ச்சியடைந்து விட்டதை அவதானிக்க முடிகிறது. அதாவது தேர்தல் மற்றும் பிற செயற்பாடுகளுக்கு நிதி வழங்குவதன் மூலம் நிதி வழங்கும் புலம்பெயர் சக்திகள் தாயகத்தின் அரசியலை அது விருப்பத்துக்கு இயக்கும் நிலை வளர்ந்து வருகிறது. இதனால் இன்னுஞ் சிறிது காலத்தில் இங்குள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் அனைவரும் புலம்பெயர் நாடுகளில் இருந்து எம்மவர் சிலரால் இயக்கப்படும் ரோபோக்களாக மாறி விடுவார்களோ என்ற ஐயம் மக்கள் மத்தியில் இன்று பரவலாக எழத்தொடங்கிவிட்டது. இதனால் ஏலவே பலவீனமடைந்துள்ள தமிழ் மக்களின் அரசியலை மேலும் படுகுழிக்குள் தள்ளுவதற்கான மோசமான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளது.தொடக்கத்தில் தமிழ் அரசியல் கட்சி என்ற வகையில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கே புலம்பெயர்ந்தவர்களிடமிருந்து பணம் அனுப்பப்பட்டது. குறிப்பாகத் தமிழரசுக்கட்சியின் கனடாக் கிளையினர் சகல தேர்தலுக்கும் அக்கட்சிக்குப் பணம் திரட்டி அனுப்பி வைத்தனர். இதில் அதிகம் பாடுபட்ட திருகோணமலைக் குகதாசன்தான் தமிழரசுத் தலைவர்களின் பேச்சை நம்பி இலங்கை வந்து இன்று ஓரங்கட்டப்பட்டு நிற்பவர் என்பது பலரும் அறிந்த ஒன்று. பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எவ்,ரெலோ போன்ற கட்சிகளின் முன்னாள் உறுப்பினர்கள் அக்கட்சிகளின் வெளிநாட்டுக் கிளை என்ற பெயரில் பணத்தைத் திரட்டி அக்கட்சிகளின் தேர்தல் செலவுகளுக்கு அனுப்பத் தொடங்கினர். இந்நிதி வரையறுக்கப்பட்ட தொகை மற்றும் தேர்தல் காலச் செலவுகளுக்கான ஒரு ஆதரவு என்ற வகையில் பிரச்சினைக்குரியதாக இருந்ததில்லை என்பதுடன், அவ்வாறு நிதி வழங்கியோர் கட்சிகளின் தீர்மானங்களில் தலையிட்டதுமில்லை. ஆனால் அண்மைக்காலங்களில் தேர்தல்கள், போராட்டங்கள் போன்ற பல்வேறு செயற்பாடுகளுக்கும் யார் யாரிடமிருந்தோ இங்கு எவரெவர்க்கோ பணம் கைமாற்றப்படுவதுடன், அவற்றில் செல்வாக்குச் செலுத்தும் நிலையும் அதிகரித்து வருகிறது. நாங்கள் பணம் அனுப்புகிறோம்; நீங்கள இதைச் செய்யுங்கள் என்றவகையிலான கட்டளைகள்கூட சில சந்தர்ப்பங்களில் பிறப்பிக்கப்படுவதை அறிய முடிகிறது. இங்கு இதுபோன்று புலம்பெயர்ந்தவர்களால் பணம் அனுப்பப்படுவது அல்லது இங்குள்ள கட்சிகளின் தலைவர்களோ, குழுக்களோ அதனைப் பெற்றுக் கொள்வது பிரச்சினையன்று. ஆனால் அவை என்ன நோக்கங்களுக்காக யாரால் அனுப்பப்படுகின்றன என்பதை ஆராயும்போதே தமிழரின் எதிர்கால அரசியல் தொடர்பான கவலைகள் மக்களிடையே அதிகரிக்கின்றன. இவ்வாறான செயற்பாடுகளுக்கு பணம் அனுப்புபவர்கள் யாரெனப் பார்த்தால் முன்னாள் போராளிகள். குறிப்பாக விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் அல்லது அவர்கள் சார்ந்த அமைப்புகள் அல்லது அவர்களது செயற்பாடுகளுடன் இணைந்திருந்தவர்கள், அவர்களின் பெயரைச் சொல்லிக் காரியமாற்றுபவர்கள், புலம்பெயர்ந்தோர் சமூக அமைப்புகள், தனிமனிதர்கள், குழுக்கள் என விரிந்து செல்லும். இவர்களில் பலர் அல்லது சில அமைப்புகள் அரசியல் தேவைகளுக்கு மட்டுமன்றி மக்களுக்கு , குறிப்பாக யுத்தத்தால் பாதிப்படைந்த மக்களுக்கும் போராளிகளுக்கும் அதிகளவு நலன்புரி உதவி செய்பவர்களாகவும் உள்ளனர். ஆனால் இங்குள்ள முக்கிய பிரச்சினை என்னவென்றால், இவர்களுக்கிடையில் ஒத்த கொள்கைகளோ, பொதுவான நோக்கங்களோ, ஒருங்கிணைப்புகளோ அதிகம் இருப்பதில்லை. பதிலாகத் தனியன்களாகவும் எதிரெதிர் செயற்பாடுகளை ஊக்குவிப்பவர்களாகவும் இருப்பதைக் காணமுடிகிறது. புலம்பெயர் நாடுகளில் எவ்வாறு பிரிந்திருக்கிறார்களோ அவ்வாறே இங்கும் மக்களையும் அரசியல் தலைவர்களையும் பிரிப்பவர்களாகவும் அவர்களை அரசியல் எதிரிகளாக மாற்றுபவர்களாகவும் காணப்படுகின்றனர். 13ஐ ஆதரிக்கும் கட்சிகளுக்கு ஒரு தரப்பு நிதி வழங்குகிறது. அதை எதிர்க்கும் கட்சிக்கு இன்னொரு தரப்பு நிதி வழங்குகிறது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளருக்கு சில தரப்புகள் ஆதரவளிக்கின்றன. மறுபுறத்தில் வேறுதரப்புகள் அதனை எதிர்ப்பதற்காக உதவுகின்றன. இதில் ஒரு சில தரப்புகள் ஆதரிக்கும் எதிர்க்கும் இரண்டு தரப்புகளுக்கும் வேறுபட்ட மூலங்களினூடாக நிதி வழங்கி கூத்துப்பார்க்க விரும்புகின்றன. தேர்தல் செலவுகளுக்கு மட்டுமன்றி உரிமைகளுக்கான மக்கள் போராட்டங்களிலும் இதே நிலைமைகளை ஊக்குவிக்கின்றனர். இதன்மூலம் ஒன்றுபட்டு நிற்கும் அமைப்புகளை பிரிக்கவும் முயற்சிக்கின்றனர். இதற்கு நல்ல உதாரணம், ஒன்றுபட்டு நின்ற காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அமைப்பை இரண்டாகப் பிளந்து அதனைப் பலவீனமாக்கியது. ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றாக இணைந்து செயற்பட்ட தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு நாடாளுமன்றத் தேர்தலிலும் இணைந்து போட்டியிடுவது என்று முதலில் எடுத்த தீர்மானத்தை பின்னர் மறுதலித்தமைக்கு நிதி வழங்கிய புலம்பெயர் தரப்புகள், சிவில் அமைப்புகளின்மீது பிரயோகித்த அழுத்தமே காரணமென சில அரசியல் தலைவர்கள் குற்றஞ்சாட்டுவதையும் காணமுடிகிறது. இன்று கட்சிகளின் வேட்பாளர்களாக யாரைப் போடவேண்டும், யாரைப் போடக்கூடாது என்பதையும் அவர்களே தீர்மானிக்கின்றனர். பல சுயேட்சைக் குழுக்களின் பிறப்புக்குப் பின்னாலும் அவர்களே உள்ளனர். முன்னாள் போராளிகள் அல்லது போராட்டத்துடன் இணைந்திருந்த அமைப்புகள் அல்லது சமூக அமைப்புகள் என்றாலும் ஒவ்வொன்றும் வேறான முரண்பட்ட நோக்கங்களுக்கும் செயற்பாடுகளுக்கும் நிதி வழங்கி ஊக்குவிப்பது ஆச்சரியமானது மட்டுமன்றி கவலைப்படவேண்டியதுமாகும். இத்தகைய தவறான விருத்தியின் இன்னொரு பரிணாம வளர்ச்சியாகக் கருதப்படுவது புலம்பெயர் தமிழ் தொழிலதிபரொருவர் தமிழர் அரசியலை முழுமையாகக் குத்தகை எடுக்கவிருப்பதாக வரும் செய்திகளாகும். நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் சில கட்சிகளையும் தலைவர்களையும் இணைத்து புதியவர்களையும் உள்வாங்கி புதிய கட்சியொன்றின் பெயரில் வடக்கு,கிழக்கு, மலையகம், கொழும்பு ஆகிய இடங்களில் பரந்தளவில் தேர்தலில் ஈடுபடுத்துவதற்கு குறித்த தொழிலதிபர் எண்ணியதாகவும் காலம் போதாமையால் அதனைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டு தற்போது தேர்தலில் இறங்கும் சில கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் நிதி வழங்கும் செயற்பாட்டில் இறங்கியிருப்பதாகவும் நம்பிக்கையான வட்டாரங்களிலிருந்து அறிய முடிகிறது. புதிய கட்சி தொடர்பாக ஜனநாயக தமிழ்த்தேசிய முன்னணித் தலைவர்கள் சிலருடனும் தமிழ் மக்கள் கூட்டணியைச் சேர்ந்த ஒருவருடனும் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சிலருடனும் கட்சிசாராத சில முக்கிய பிரமுகர்களுடனும் தொடக்கக் கட்ட பேச்சுவார்த்தைகள் நிறைவு பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்களுள் தற்போது தேர்தலில் போட்டியிடுவோர்க்கு நிதி வழங்கப்பட்டதாகவும் சித்தார்த்தன், சிறிகாந்தா போன்றவர்கள் அதை நிராகரித்துவிட்டதாகவும் அறியக் கிடைக்கிறது. இவரைப்போன்ற பெரும் வர்த்தகப் புள்ளிகள் தங்கள் தொழில் நிறுவனங்களின் பாதுகாப்புக் கருதியும் சலுகைகளுக்காகவும் அரசியல் தலைவர்களின் தேர்தல் செலவுகளுக்காக நிதி வழங்குவது வழமை. நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில், சஜித்துக்கு மட்டுமல்ல மாற்றத்துக்கான வேட்பாளர் அனுரவுக்கும் இவரால் பலகோடி ரூபாக்கள் கொடை வழங்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும் தொழிலதிபர் என்ற வகையில் தனது வர்த்தக நலன்சார்ந்து இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு நிதி வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் தமிழ் அரசியல் தலைவர்களுக்கு தேர்தல் நன்கொடை வழங்குவதன் நோக்கம்தான் என்ன? அதிலும் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கி பணபலத்தால் தமிழ் மக்களின் அரசியலைக் கட்டுப்படுத்த விரும்புவதன் பின்னாலுள்ள தேவைகள் என்ன? இப்பொழுதே விலைபோகத் தொடங்கிவிட்ட நமது அரசியல் தலைவர்கள் எதிர்காலத்தில் என்ன செய்வார்கள் என்று ஊகிப்பது கடினமானதொன்றல்ல. ஏலவே புலம்பெயர் தமிழ் குழுக்களாலும் அமைப்புகளாலும் பணத்தினூடாகச் சின்னாபின்னமாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழர் அரசியலில் இந்த தொழிலதிபரின் தலையீடு ஆரோக்கியமானதொன்றாக இருக்கப் போவதில்லை. தனது வர்த்தக நலனுக்காக தமிழ் மக்களின் ஒட்டுமொத்த அரசியல் நலனையும் இலங்கை ஆட்சியாளரிடம் அடகு வைப்பதற்கான ஒரு முயற்சியாகவே இது கருதப்பட வேண்டும். மக்கள் நலன்கருதி இதற்கு எதிரான நிலைப்பாட்டினை எடுக்கும் நிலையிலும் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் இங்கில்லை. எரிகிற வீட்டில் பிடுங்குகிறது மிச்சம் என்ற மனநிலையிலேயே அவர்கள் உள்ளனர். புலம்பெயர் அமைப்புகள் ஒரேகுடையின் கீழ் ஒரே கொள்கையினடிப்படையில் இயங்குகின்ற போது அல்லது அரசியல் கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் புலம்பெயர் தரப்புகள் வழங்கும் நிதி நிறுத்தப்படும்போது மட்டுமே தமிழ் மக்களின் அரசியல் சரியான பாதையில் செல்வதற்கான வாய்ப்பு ஏற்படும். ஆனால் அதற்கான எதிர்காலம் அண்மையில் இருப்பது போலத் தெரியவில்லை. https://thinakkural.lk/article/310744
-
தேர்தல் செலவுக்கான செலவு அறிக்கையை அரியநேத்திரன் சமர்ப்பிக்கவில்லை!
தேர்தல் செலவுக்கான செலவு அறிக்கையை அரியநேத்திரன் சமர்ப்பிக்கவில்லை! இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலுக்கான பிரச்சார வருமானம் மற்றும் செலவு அறிக்கையை வடக்கு கிழக்கின் தமிழ் பொது வேட்பாளராக சங்கு சின்னத்தில் போட்டியிட்ட அரியநேத்திரன் வழங்கத் தவறியுள்ளார். பத்தரமுல்லை சீலரதன தேரர் மற்றும் சரத் கீர்திரத்ன ஆகியோரும் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. இந்த மூவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இக் குற்றத்திற்கான அபராதத் தொகை 100,000 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தமது பிரச்சார நிதி அறிக்கைகளை சமர்ப்பிக்க நேற்று முன்தினம் (13) நள்ளிரவு வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் செலவின அறிக்கையை 35 வேட்பாளர்கள் வழங்கியுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. http://www.samakalam.com/தேர்தல்-செலவுக்கான-செலவு/
-
இலங்கை தமிழரசுக்கட்சியை உடைக்கவேண்டும், கட்சியை இல்லாமல்செய்யவேண்டும் என சூழ்ச்சிகள் இடம்பெறுகின்றது : இரா. சாணக்கியன் !
இலங்கை தமிழரசுக்கட்சியை உடைக்கவேண்டும், கட்சியை இல்லாமல்செய்யவேண்டும் என சூழ்ச்சிகள் இடம்பெறுகின்றது : இரா. சாணக்கியன் ! kugen இலங்கை தமிழரசுக்கட்சியை உடைக்கவேண்டும்,கட்சியை இல்லாமல்செய்யவேண்டும் என புலம்பெயர் நாடுகளில் உள்ள சில பிரதான தொழிலதிபர்கள்,வர்த்தகர்கள் சில சதிகளை மேற்கொண்டுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் இரா.சாணக்கியனுக்கும் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம்,இலங்கை தமிழரசுக்கட்சியின் பட்டிருப்பு தொகுதி கிளைகளின் முக்கிய உறுப்பினர்களுக்கான சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்த சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன்,இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அணி தலைவி திருமதி க.ரஞ்சனி உட்பட பலர் கலந்துகொண்டனர். இதன்போது இலங்கை பாராளுமன்ற தேர்தலில் தமிழரசுக்கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவது குறித்து தெளிவுபடுத்தப்பட்டதுடன் அது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.இதன்போது கருத்து தெரிவித்த சாணக்கியன் எம்.பி., மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வெற்றியானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாட்டில் தமிழர்கள் அனைத்து உரிமைகளையும் பெற்றுவாழவேண்டும்,அதேபோன்று இந்த நாட்டில் நிகழ்த்தப்பட்ட மீறல்கள்,இனப்படுகொலைக்கு நீதிவேண்டும்ஆகிய கோரிக்கைளை நாங்கள் கடந்த காலத்தில் முன்வைத்து தொடர்ந்து அதனை முன்னிறுத்திவருகின்றோம். தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளைக்கோரக்கூடிய கட்சி இலங்கை தமிழரசுக்கட்சி மட்டுமேயாகும்.ஏனைய கட்சிகள் அழுத்தங்களை வழங்கினாலும் பிரதான விடயங்களை நாங்கள்தான் முன்னெடுத்திருந்தோம்.கடந்த பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் களமிறங்கிபோது இதற்கான தீர்வுகளை பெறலாம் என நினைத்திருந்தோம். துரதிர்ஸ்டவசமான கோத்தபாய ராஜபக்ஸவுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்திருந்தது.அவ்வாறான சூழ்நிலையில் தமிழ் மக்களுக்கான தீர்வுதிட்டத்தினை முன்னிறுத்தகூடிய சூழல் அமையவில்லை. கடந்த நான்கு வருடமாக அதிதீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளியைப்போலவே தமிழ் இனம் இருந்துவந்தது.தவறான ஊசிகளை செலுத்தி அந்த நோயாளியை அழித்துவிடவேண்டும் என்ற வகையிலேயே கோத்தபாயவின் ஆட்சியிருந்தது.பல இடங்களில் அத்துமீறிய குடியேற்றங்களை முன்னெடுத்தார்.தொல் பொருள் என்ற போர்வையில் புதிதாக விகாரைகளை அமைப்பதற்கு முயற்சிகளை முன்னெடுத்தார். கோத்தபாய ராஜபக்ஸ எமது இனத்திற்கு செய்த துரோகத்திற்காக அவரை தெரிவுசெய்த அதே மக்கள் இரண்டு வருடங்களில் வீதிகளிலிறங்கி துரத்தியடித்தனர். கோத்தபாய ராஜபகஸதான் பேரினவாத சிந்தனைகொண்டவர்,தமிழர்களை கொன்றுகுவித்தவர்கள் அவர் அவ்வாறுதான் நடந்துகொள்வார்கள் என்றால் தமிழ் மக்களின் வாக்குகளினால் வெற்றிபெற்றவர் இருவர் இந்த மாவட்டத்தில் ஒருவர் விரைவில் சிறைக்கு செல்வார்.புதிய அரசாங்கத்தில் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ரவீந்திரநாத்தின் வழக்கினை மீள ஆரம்பிக்கப்போகின்றார்கள்,உயிர்த்த ஞாயிறு வழக்கினை மீள ஆரம்பிக்கப்போகின்றார்கள்.நிச்சயமாக அவர் சிறைக்கு செல்வார். இங்கு இருந்த இராஜாங்க அமைச்சர்கள் மண் கடத்துவதினையும் குளங்களை அமைப்பதற்கு பதிலாக மண் எடுத்து குளங்களை உருவாக்கினார்கள்.அதனை நாங்களே தடுத்து நிறுத்தினோம்.வாகரையில் இரால் வளர்ப்பு திட்டம் என்றும் இல்மனைட் அகழ்வு என்றும் மக்களின் வாழ்வாதாரத்தில் கைவைக்கும் நிலைமைகள் காணப்பட்டது. புளுட்டுமானோடையில் சந்திகாந்தன்,பிரசாந்தன் ஆகியோரது குடும்ப உறுப்பினர்களுக்கு காணிகள் வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்டது.இவ்வாறு இந்த மாவட்டங்களில் உள்ள வளங்களை தங்களுக்கும் தங்களது ஆதரவாளர்களுக்கும் குடும்பங்களுக்கும் அபகரிக்கும் வேலைத்திட்டமே இங்கு முன்னெடுக்கப்பட்டது.இந்த மாவட்டங்களில் உள்ள வளங்களை இவ்வாறான கள்வர்களிடமிருந்து காப்பாற்றவேண்டிய பொறுப்பும் எங்களுக்குத்தான் இருந்தது. இதேபோன்று புதிய அரசாங்கத்துடன் பேசி எதிர்வரும் காலத்தில் மிகுதியாகவுள்ள அரசியல் கைதிகளையும் விடுதலைசெய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம். இந்தப் பிரதேச மக்கள் அன்றாடம் அனுபவித்த பிரச்சினைகளுக்காக நாங்கள் தான் குரல் கொடுத்தோம். மின்சாரக் கட்டணம் அதிகரித்த நேரத்திலே கோட்டைக்கல்லாறு, பெரிய கல்லாறு பாலத்திலே தீப்பந்தப் போராட்டம் நடத்தினோம். விலைவாசிகளை குறைக்க வேண்டும் என்று நாங்கள்தான் போராட்டம் நடத்தினோம். கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு பயணிக்கின்ற புலஸ்தி எனப்படுகின்ற புகையிரதமானது ஆரம்பத்தில் பொலன்னறுவை மாவட்டம் மட்டுமே பயணத்தில் ஈடுபட்டது. அந்தப் புகையிரதம் மட்டக்களப்பு வரை பயணிக்க வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தி நான் தான் அதனை மட்டக்களப்பிற்கு கொண்டு வந்தேன். நான் அபிவிருத்தித் திட்டங்கள் எதையும் செய்யவில்லை என்று கூறுகின்றார்கள். மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் என்ற பதவியையும் சில அரச அதிகாரிகளையும் வைத்துக்கொண்டு மக்களுக்கு வரவேண்டிய நிதிகளை இல்லாமல் செய்தனர். அந்த அரச அதிகாரிகளுக்கு இனிவரும் அரசாங்கத்தில் நிச்சயம் தண்டனைகள் வழங்கப்படும். இங்கு அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்ட எத்தனையோ கிலோமீற்றர் கணக்கான வீதிகள் மீண்டும் மத்திய அரசாங்கத்தினால் மீளப்பெறப்பட்டது. ஏனென்றால் சாணக்கியன் சொல்லி அந்த வீதிகள் புனரமைக்கப்பட்டால் மக்கள் சாணக்கியனோடு நிற்பார்கள் என்பதாலாகும். 2020,2021,2022,2023 ஆம் ஆண்டுகளில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகின்ற பன்முகப்படுத்தப்பட்ட நிதிகூட எனக்கு வழங்கப்படவில்லை. மட்டக்களப்பிலுள்ள ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களிலே பிள்ளையானுக்கு ஐந்து கோடி, வியாழேந்திரன் அவர்களுக்கு 5கோடி, நஸீர் அகமட் அவர்களுக்கு 5கோடி, ஜனா அண்ணணுக்கு 5கோடி பிள்ளையானால் வழங்கப்பட்டது. எனக்கு வழங்கப்படவேண்டிய 5கோடி அதாவுல்லாவிற்கு வழங்கப்பட்டது. அதுபற்றி நான் விளக்கம் கேட்டபோது அதாவுல்லா அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர் என்பதால் அவருக்கு வழங்கப்பட்டதாக கூறினார்கள். வெளியில் பேசுவதெல்லாம் முஸ்லிம் விரோதம், முஸ்லிம்களை நாங்கள் அகற்றப்போகின்றோம் என்பதாகும். ஆனால் நஸீர் அகமட் அவர்களுக்கு, அதாவுல்லாவிற்கு ஐந்துகோடி, தமிழ்த் தேசியத் தரப்பிலே அரசியல் செய்கின்ற எனக்கில்லை ஆனால் ஜனா அண்ணணுக்கு 5கோடி வழங்கப்பட்டிருக்கின்றது. அவர்களுக்குள் ஏதும் ஒப்பந்தம் இருக்கின்றதாவென எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு நிதி வழங்கப்படவில்லை. பின்னர் நான் ஜனாதிபதியை சந்தித்து அவருடன் சண்டை பிடித்து ஐந்து கோடி நிதியை கொண்டு வந்தேன். அதனைத் தொடர்ந்து 60கோடி ரூபா நிதியை ஆறுமாத காலத்தினுள் இந்த மாவட்டத்திற்காக கொண்டு வந்தோம். அதனைக்கொண்டு இந்த மாவட்டத்தில் எங்களிடம் கோரப்பட்ட அனைத்து வேலைத்திட்டங்களையும் செய்து முடித்திருந்தோம். அமைச்சர்களாகிய எங்களுக்கே 35கோடி நிதி தான் ஒதுக்கப்படுகின்றது, சாணக்கியனுக்கு எவ்வாறு நீங்கள் 60கோடியை ஒதுக்கலாம் என்று கூறி 60கோடியில் 20கோடியை எங்களுக்கு கிடைக்காமல் செய்துவிட்டார்கள். இதனால் சில கிராமங்களுக்கான நிதிகள் வெட்டப்பட்டன. அமைச்சர்கள் மூன்று வருடங்களாக செய்யாத சில விடயங்களை வெறும் மூன்று மாதங்களில் நான் செய்துகாட்டியிருக்கின்றேன். அரசாங்கம் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி, விமர்சித்து,தட்டிக்கேட்டு, பிழையான அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தித்தான் இந்த வேலைத்திட்டங்களை செய்திருக்கின்றோம். என்றார். https://www.battinews.com/2024/10/blog-post_905.html
-
தமிழரசு கட்சியில் இருந்து பிரிந்தவர்களே இன்று சங்கை ஊதிக்கொண்டு திரிகிறார்கள் : டக்ளஸ் தேவானந்தா !
தமிழரசு கட்சியில் இருந்து பிரிந்தவர்களே இன்று சங்கை ஊதிக்கொண்டு திரிகிறார்கள் : டக்ளஸ் தேவானந்தா ! By kugen தமிழரசு கட்சியில் இருந்து பிரிந்தவர்களே இன்று சங்கை ஊதிக்கொண்டு திரிகிறார்கள் என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட தலைமைக் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை (14 ) காலை கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் வேட்பாளர்கள் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொது மக்கள் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. அக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கொழும்பில் ஏன் நீங்கள் போட்டி போடுகின்றீர்கள் என சிலர் கேட்டிருந்தார்கள் . நீண்டகாலமாக ஐக்கியபட வேண்டும். தமிழ்மக்களின் ஒற்றுமையை தென்னிலங்கைக்கு, இந்தியாவிற்கு, சர்வதேசத்திற்கு காட்டவேண்டும் அப்போதுதான் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கலாம் என கூறிகொண்டிருக்கிறார்கள். இது நேற்று இன்றில்லை 1974ஆம் ஆண்டு தொடக்கம் மக்களை உசுப்பேத்தி விடுவதற்காக கோஷங்களாக அரசியலில் திட்டங்களாக, கருத்தாக இருந்திருக்கின்றது. ஆனால் 74ஆம் ஆண்டில் இருந்து இக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் தமிழ் மக்களுக்கான பிரச்சனைகள் தீர்ந்ததாக இல்லை. தீரா பிரச்சினையாக, பிரச்சினை அதிகரித்துதான் இருக்கின்றது. இடப்பெயர்வு, சொத்துக்கள், உயிர்களை இழக்கவேண்டி வந்திருக்கின்றது. அங்கவீனம், இரத்தம் சிந்துதல் இவ்வாறு பல துன்பங்களுக்கு மத்தியிலே இந்த கோஷங்களை எழுப்பியிருக்கின்றார்கள். இது ஒரு பிழையான சுயநலமான கோஷமாக தான் இருந்திருக்கின்றது. தமிழரசு கட்டிசியினை எடுத்தால் அது இன்று மூன்று கட்சிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. தமிழரசுகட்சி, ஜனநாயக தமிழரசுகட்சி,சுஜேட்சை என பிரிந்திருக்கிறார்கள். தமிழரசு கட்சி என இருப்பவர்களே இரண்டு அணியாக பிரிந்து செயல்படுகின்றார்கள். ஜனநாயகத்தில் கருத்து சுதந்திரம் இருக்க வேண்டும் .அதுதான் அடிப்படை ஆனால் இங்கு நல்ல நோக்கத்திற்காக அந்த சுதந்திரத்தினை பயன்படுத்தாமல் அவர்கள் தம் சுயலாபத்திற்காக தான் பயன்படுத்துகின்றார்கள். அதனைவிட தமிழரசு கட்சியில் இருந்து பிரிந்தவர்கள் இன்று சங்கை ஊதிக்கொண்டு வந்திருக்கிறார்கள். அந்த சின்னத்தில் இருப்பவர்கள் கூறியிருக்கின்றார்கள். நேற்றைய தின தமிழரசு கட்சியின் கலந்துரையாடலில் சங்கு சின்னத்தை கொண்டுவாறவர்கள் கொலை, கொள்ளை, வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் என அதனாலே நாம் வெளியில் விட்டோம் என ஆனால் அது உண்மை அல்ல, சுயலாபத்திற்காகவே இருக்கின்றார்கள். ஆனால் ஈபிடிபி அப்படி அல்ல ஈபிடிபி அதில் இருந்து மாறுபட்டது. ஈபிடிபி கொள்கைகளை நீண்டகாலமாக முன்வைத்து அதனை அடைவதற்கான வேலைத்திட்டங்களை முன்வைத்து வருகின்றது. இன்றும் அதை நோக்கியே செயற்பட்டு வருகின்றது. ஈபிடிபிக்கு போதிய ஆசனங்கள் இல்லை போதிய ஆசனங்கள் இருக்குமாக இருந்தால் மக்களுடைய அபிவிருத்திக்கான, அரசியல் உரிமைக்கான தீர்வு என மூன்று வகையான பிரச்சினைகளையும் தீர்க்க முடியும். எது எவ்வாறு இருந்தாலும் தேசிய நல்லிணக்கத்தினூடாகவே இணக்க அரசியலின் ஊடாக தான் நாம் முன்னெடுப்போம். என்னுடைய முகநூலில் கொழும்பு வேட்பாளர் பட்டியல் பற்றி விமர்சனம் ஒன்று ஒருவர் எழுதியிருந்தார். அவர் கூறியிருந்தார் நீங்கள் விமர்சனத்திற்கு அப்பால் மக்களுக்கு சிறந்த சேவையாற்றிருக்கின்றீர்கள் அதனை நாம் வரவேற்கின்றோம். ஆனால் ஏன் புத்தபிக்குகளை கொழும்பு பட்டியவில் சேர்த்திருக்கிறீர்கள் என கேட்டிருந்தார். ஈபிடிபி 1987 கட்சியில் ஆரம்பிக்கப்பட்டது. இது கல் மண் சுண்ணாம்பு , சீமெந்து இது சேர்ந்த கொங்கிறீட் கலவை இது இறுகினால் உருக்காகத்தான் இருக்கும்.அப்பிடிதான் ஈபிடிபி இருக்குமே ஒளிய அது உதிர்ந்து போகாது என கூறியிருந்தேன். இலங்கை அரசியல் ஊடாக மங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்த்திருக்கின்றோம். இன்னும்பல பிரச்சினைகள் இருக்கின்றது . அதற்கு தீர்வு காண வேண்டியிருக்கின்றது. எங்களுக்கு போதிய ஆசனங்கள் இல்லை . ஆகவே இம் முறை நான் எதிர்பார்கின்றேன் 5 ஆசனங்கள் கிடைக்க வேண்டும் கிடைத்தால் இரண்டு வருடத்திற்குள் பிரச்சினைகளை தீர்க்கமுடியும். எமக்கு 5ஆசனங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.இன்று கூறுகின்றார்கள் டக்ளஸ் தேவானந்தாவின் வாக்கு அசையாது என ,வேட்புமனுதாக்கல் செய்து விட்டு எல்லா கட்சிகளும் முடிவுகளுக்காக காத்திருந்த போது சிலர் கதைத்தார்கள் யாழ் மாவட்டத்தில் 6 ஆசனங்கள் அதில் ஒன்றை தவிர மற்றையது யாருக்கென தெரியாது நான் அதை நம்பவில்லை. எம் உழைப்பு, சேவையூடாக எங்கட கொள்கை ஊடாக மக்கள் அணிதிரண்டு எம்முடன் பயணிக்கவேண்டும் என கேட்டுகொள்கின்றேனே தவிர வாக்குகளை அபகரிக்க முன்வைக்கவில்லை. வேறு கட்சியில் இருபவர்களில் ஒரு உறுப்பினர் ஜனாதிபதியினை சந்தித்திருக்கிறார். அவர் சாராய பார் எடுத்ததாக கதை. அதே கட்சியில் இருக்கும் பிரதான உறுப்பினர் ஜனாதிபதியிடம் கேட்டிருக்கின்றார். பட்டியலை வெளியிடசொல்லி அப்போது சாராய பார் லைசன்ஸ் எடுத்தவர் ஜனாதிபதியிடம் சொல்லியிருக்கின்றார் பட்டியலை வெளியிட வேண்டாம் என ஆனால் எங்களுக்கும் அரசாங்கத்துக்கும் கடந்த காலத்தில் இருந்த உறவு மக்கள் நலன் சார்ந்து கொள்கை நிலப்பாட்டிலையே இருந்தது. 1997ஆம் ஆண்டு சந்திரிக்கா அரசாங்கம் தங்களுக்கு ஆதரவினை கேட்ட நேரம் எமக்கு அமைச்சு பதவி, பணம் தருகின்றோம் ஆதரவு தரவேண்டும் என ஆனால் நான் எமக்கு பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும் என அரசியல் தீர்வு சம்பந்தமாக தீர்வுவேண்டும் என கூறியிருந்தேன் என்றார். https://www.battinews.com/2024/10/blog-post_980.html
-
கட்சி பெயரை திருடியவர்கள் சின்னத்தையும் திருடி விட்டார்கள் : எம்.ஏ.சுமந்திரன் !
கட்சி பெயரை திருடியவர்கள் சின்னத்தையும் திருடி விட்டார்கள் - பிரதான தமிழ் கட்சியாக இருப்பது இலங்கை தமிழரசு கட்சி மட்டுமே : எம்.ஏ.சுமந்திரன் ! kugenOctober 14, 2024 ஒரு காலகட்டத்தில் திருடர்களாக, கப்பம் பெற்றவர்களாக, கடத்தல்காரர்களாக, கொள்ளையர்களாக, கொலையாளிகளாக இருந்தவர்கள் திருந்திவிட்டார்கள் என்று நம்பி சேர்த்து வைத்திருந்தோம். ஆனால் அவர்கள் திருந்தவில்லை. முன்னர் கட்சிப் பெயரை திருடினார்கள் இப்போது சின்னத்தையும் திருடியுள்ளார்கள். இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் அறிமுகவிழா நேற்று (13) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 1956 ஆம் ஆண்டு முதல் இன்று வரை பிரதான தமிழ்க் கட்சியாக இருப்பது இலங்கைத் தமிழரசுக் கட்சி மட்டுமே. வேறு எவருக்கும் எங்களுடைய மக்கள் ஜனநாயக ஆணையைக் கொடுக்கவில்லை. இனியும் கொடுக்கப் போவதுமில்லை. தமிழ் மக்கள் ஒரு தனித் தேசம் என்று அறிவித்து இதுவரை காலமும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்ற கட்சி தான் பலமான அணியாக பாராளுமன்றத்திற்குள் செல்லவேண்டும். மத்தியிலே ஆட்சி அமைத்திருக்கக்கூடிய கட்சிக்கு யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திலே ஒரு ஆசனம் கிடைக்குமாக இருந்தால் அவர்கள் இங்கிருக்கும் மக்கள் எங்களையும் பிரதிநிதியாக ஏற்றி இருக்கிறார்கள் என்று சொல்லுவார்கள். அதற்கு நாம் இடமளிக்கக்கூடாது. ஜனாதிபதித் தேர்தலோடு ஒரு ஆபத்து வந்திருக்கின்றது. பல தடவைகள் நாங்கள் அபாய சங்கை ஊதினோம் அது கைமீறிவிட்டது. பொதுவான சின்னத்தையும் திருடி விட்டார்கள். சின்னத்தை திருடியவர்கள் அதற்கு முன்னர் எங்களுடைய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரை திருடினார்கள். ஒரு காலகட்டத்தில் திருடர்களாக, கப்பம்பெற்றவர்களாக, கடத்தல்காரர்களாக, கொள்ளையர்களாக, கொலையாளிகளாக இருந்தவர்கள் திருந்திவிட்டார்கள் என்று நம்பி கூட்டமைப்பிற்குள் சேர்த்து வைத்திருந்தோம். ஆனால் அவர்கள் திருந்தவில்லை. கட்சிப் பெயரை திருடினார்கள். மக்களுக்கு பொய்யான நம்பிக்கையை ஊட்டி அந்த சின்னத்தையும் திருடி விட்டார்கள். 23ஆம் திகதி நள்ளிரவில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. அதற்கு முன்னர் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த சின்னத்தை நாம் பயன்படுத்த மாட்டோம் என்று. அவர்களுக்கு தங்களின் கையெழுத்தின் பெறுமதி தெரியவில்லை. சின்னத்தை திருட மாட்டோம் என்று கையெழுத்திட்டவர்கள் ஒரு சில மணித்தியாலங்களுக்கு உள்ளேயே குத்துவிளக்கை கைவிட்டு சங்கைத் தருமாறு தேர்தல் திணைக்களத்திற்கு கடிதம் கொடுத்தார்கள். இவ்வாறான கள்ளருக்கு இம்முறை மக்கள் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும். மாம்பழ திருடர்களுக்கும் மக்கள் பாடம் புகட்ட வேண்டும். எங்கள் கட்சியிலிருந்து வெளியேறிய ஒருவர் அபலைப் பெண்ணுக்கு மதுபானசாலை உரிமம் கொடுத்தேன் என்று வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். ஊழலுக்கு எதிரான அரசாங்கம் என்று சொல்லிக் கொண்டிருக்கக் கூடிய இந்த அரசாங்கம் இரண்டு விடயங்களில் தடுக்கி விழுந்து கொண்டிருக்கின்றது. ஒன்று ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமான செலவீனங்களை தேர்தல் திணைக்களத்திற்கு இதுவரை கொடுக்கவில்லை. மற்றையது மதுபான அனுமதி பத்திரங்களை பெற்றவர்களின் பெயர் விவரங்களை மூன்று நாட்களுக்குள் வெளிப்படுத்துவோம் என கூறினார்கள். மூன்று வாரமாகிவிட்டது இன்னும் வெளிப்படுத்தவில்லை. நான் பகிரங்கமாக அரசாங்கத்துக்கு சவால் விடுகிறேன் மதுபான அனுமதிப் பத்திரத்தை பெற்றவர்களின் விபரங்களை வெளிப்படுத்துங்கள். எங்களுடைய கைகள் சுத்தமாக உள்ளது. எங்களை விட்டு வெளியேறிச் சென்றவர்களின் உண்மை முகத்தை மக்களிடம் வெளிக்காட்ட உதவியாக இருக்கும். ஏன் எங்களை விட்டு வெளியேறினார்கள் என்பதற்கு அது ஒரு காரணமாக இருக்கும். தமிழரசு கட்சியின் உடைய வேட்பாளர் தெரிவிலே நாங்கள் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றோம். இளையவர்களுக்கு நாங்கள் முன்னுரிமை வழங்கியிருக்கின்றோம். மக்கள் கேட்கின்ற மாற்றத்திற்கு நாங்களிடம் கொடுத்திருக்கின்றோம். அதற்கு ஈடுகொடுக்கமுடியாதவர்கள் கட்சியை விட்டு வெளியேறியிருக்கிறார். தேர்தலில் ஆசனங்கள் கிடைக்கவில்லை என்பதற்காக தேர்தல் காலங்களில் வெளியேறியிருக்கிறார்கள். கொள்கைப்பிடிப்பில் வெளியேறுவதெனில் தேர்தல் காலத்தில் வெளியேறாமல் வேறு நேரத்தில் வெளியேறிருக்கலாம். தேர்தல் காலங்களில் வெளியேறுவர்களை குறித்து மக்களுக்கு அவதானம் இருக்கின்றது. அதனை நாம் மக்களுக்கு சொல்லத் தேவையில்லை. அவர்களை எல்லாம் ஒரு பொருட்டாக கருத தேவையில்லை என தெரிவித்தார். https://www.battinews.com/2024/10/blog-post_756.html
-
பொதுக்கட்டமைப்பு தற்போது இல்லை – மக்களிடம் மன்னிப்பு கோருகிறோம்
தேசியத்தில் அசலும் போலியும்! October 14, 2024 போலித் தேசியவாதிகளை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பசுமை கட்சியின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்திருக்கின்றார். இது போலி – இது அசல் என்பதை எவ்வாறு வரையறுப்பது- யார் வரையறுப்பது – எப்படி வரையறுப்பது? இந்தக் கேள்விகளுக்கு பதிலிருந்தால் மட்டும்தான் எது போலி – எது அசல் என்பதை ஒருவர் அறிந்து கொள்ள முடியும்? ஒரு குறிப்பிட்ட சூழலில் சிலர் இணைந்து பணியாற்றுகின்றனர். அவ்வாறு பணியாற்றுகின்றபோது, அவர்கள் அனைவருமே தேசியவாதிகளாகவே தங்களை முன்னிறுத்திக் கொள்கின்றனர். அவர்கள் சில காரணங்களால் பிரிந்துவிடும் சந்தர்ப்பத்தில் திடீரென்று ஒருவரை மற்றவர் போலித் தேசியவாதி என்கிறார் – இதன் மூலம் தானே சரியானவன் என்கிறார். நேற்றுத் தேசியவாதிகளாக தெரிந்தவர்கள் திடீரென்று எவ்வாறு போலித் தேசியவாதிகளாக மாற்றமடைய முடியும்? உண்மையில், தமிழ் சூழலில் இடம்பெறும் தேசியம் பற்றிய உரையாடல்கள் சலிப்பூட்டுபவர்களாகவே இருக்கின்றன. தேர்தல் காலத்தில் தேசியம் என்பதும் பின்னர் அடுத்த தேர்தல் வரையில் அமைதியாக இருப்பதும்தானா – தேசியம் பற்றிய கரிசனை என்னும் கேள்வி எழுகின்றது. தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு தொடர்பில் பரவலான நம்பிக்கை நிலவியது. ஏழு கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொள்வதற்கான வாய்ப்புக் கிட்டியது. தமிழ் மக்கள் பொதுச் சபை என்னும் அடிப்படையில் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொண்டிருந்தால் வடக்கு, கிழக்கின் அதிக ஆசனங்களை கைப்பற்றும் அமைப்பாகத் தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு வெளிப்பட்டிருக்கும். ஆனால், ஒரு சில சிவில் சமூகக் குழுக்களின் அரசியல் அறியாமையின் காரணமாக நிலைமைகள் சில தினங்களிலேயே தலைகீழானது. இதன் விளைவாக, தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பாக பயணிக்கும் நம்பிக்கையுடனிருந்தவர்கள் சிதற வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களில் பொ.ஐங்கரநேசனும் ஒருவர். அவர் இப்போது போலித் தேசிய வாதிகளை நிராகரிக்குமாறு கூறுகின்றார். நேற்று வரையில் தான் யாரோடு இணைந்து செயல்பட்டாரோ அவர்களை நோக் கியே கல்லெறிய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார். இதுதான் தமிழ்த் தேசியத்தின் அடிப்படையில் இடம்பெறும் சிக்கலான உரையாடல். கடந்த பதினைந்து வருடங்களாக இதுதான் நடக்கின்றது. ஐங்கரநேசன் போன்றவர்களை இவ்வாறான நிலைக்கு தள்ளிவிட்டமைக்கான பொறுப்பை தமிழ் மக்கள் பொதுச் சபை என்னும் பெயரில் ஒன்றுபட்ட சிவில் சமூகக் குழுக்களும் அவர்களை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்த புத்திஜீவிகளுமே காரணமாவர். ஆனால், இன்றுவரையில் அவர்கள் தங்களின் பொறுப்பின்மைக்கு இதுவரையில் பொறுப்புச் சொல்ல வேண்டிய கடப்பாடு தங்களுக்கு உண்டு என்று கூட உணராமல் இருப்பதுதான் தவறானது. https://eelanadu.lk/தேசியத்தில்-அசலும்-போலிய/
-
பெரும் நெருக்கடிக்குள் சிக்கும் தமிழரசுக் கட்சி! யாழ்.நீதிமன்றில் மீண்டுமொரு வழக்கு
பெரும் நெருக்கடிக்குள் சிக்கும் தமிழரசுக் கட்சி! யாழ்.நீதிமன்றில் மீண்டுமொரு வழக்கு இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக யாழ்.மாவட்டத்தில் வழக்கொன்று தொடரப்பட்டுள்ளது. மட்டக்களப்பு - கோட்டைக் கல்லாறைச் சேர்ந்த முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா என்பவரால் கடந்த 10ஆம் திகதி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எதிராளிகளாக, இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மாவை சேனாதிராஜா, கட்சியின் பதில் பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கம் மற்றும் சேவியர் குலநாயகம் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன்போது, வழக்கை தொடர்ந்துள்ள மார்க்கண்டு நடராசா முன்வைத்துள்ள கோரிக்கைகளாவன, 1 முதல் 3 வரையான எதிராளிகள் 27.01.2024இற்குப் பின்னராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவை கூட்டியமையும் அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் இலங்கை தமிழரசுக் கட்சியின் யாப்புக்கு முரணானவை என்ற வகையில் வெற்றும் வெறிதானவையும் என்ற கட்டளைக்கும் தீர்ப்புக்கும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். https://newuthayan.com/article/பெரும்_நெருக்கடிக்குள்_சிக்கும்_தமிழரசுக்_கட்சி!_யாழ்.நீதிமன்றில்_மீண்டுமொரு_வழக்கு
-
வணக்கம் நான் சின்னக்குட்டி தாசன்
வணக்கம் சின்னக்குட்டியர்! கண்டு கனகாலம்! இதுவும் நீங்கள்தானே?👇🏿 https://yarl.com/forum3/profile/1456-sinnakuddy/
-
பதவி விலகுவதாக ஹிருணிகா அறிவிப்பு
பதவி விலகுவதாக ஹிருணிகா அறிவிப்பு ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பான சமகி வனிதா பலவேகயவின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து விலகுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார். ஆனாலும் கட்சியின் செயற்பாட்டு உறுப்பினராகத் தொடர்ந்தும் பணியாற்றுவதாகவும் பொதுத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது அமைப்பாளர்கள் தமது கடமைகளை நிறைவேற்றவில்லை என கட்சியில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினால் விரக்தி ஏற்பட்டதா இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார். எவ்வாறாயினும்,திர்வரும் தேர்தலில் பொது மக்கள் தன்னை மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்வார்கள் என நம்பிக்கை வெளியிட்டார். ஐக்கிய மக்கள் கூட்டணின் சார்பில் ஹிருணிக்கா கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றார். https://oruvan.com/sri-lanka/2024/10/13/hirunika-resigns-from-sjb-womens-organization-post
-
தமிழரசின் பித்தலாட்டங்களுக்கு நவம்பர் 14 தீர்ப்பு - சபா குகதாஸ் காட்டம்!
தமிழரசின் பித்தலாட்டங்களுக்கு நவம்பர் 14 தீர்ப்பு - சபா குகதாஸ் காட்டம்! விடுதலைப் புலிகளின் தியாகத்தில் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2009 ஆண்டின் பின்னர் தமிழ் மக்கள் சார்பில் நியாயமான அரசியல் தீர்மானங்களை எடுக்காது தமிழ்த் தேசிய அபிலாசைகளை பலவீனப்படுத்தி கூட்டுநாடாளுமன்ற பிரதிநித்தித்துவத்தை சிதைத்து 2023 ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்து 2024 ஆம் ஆண்டில் பல மிதவாத தலைவர்களதும் பொது மக்களதும் அர்ப்பணிப்பில் வளர்க்கப்பட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை பல துண்டுகளாக உடைத்து ஒற்றுமை என்ற இலக்கை சிதைத்துள்ளனர் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த கால தென்னிலங்கையின் அரச நிகழ்ச்சி நிரலில் தமிழ்த் தேசியத்தின் ஒற்றுமைக்கு சாவு மணி அடித்துள்ளனர் தமிழ் அரசுக் கட்சியினர். தாயகத்தில் ஒற்றுமையை பலவீனப் படுத்திய சமநேரத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சர்வதேச நீதி வேண்டிய போராட்டத்தை காட்டிக் கொடுக்கும் வகையில் விடுதலைப் புலிகளையும் விசாரிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைப் பேரவைக்கு அனுப்பி பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை பலவீனப்படுத்தியுள்ளனர். தமிழினத்தின் ஒற்றுமை மற்றும் நீதிப் பொறிமுறையை சிதைத்து விட்டு சுயலாப நோக்கில் போலித் தேசியம் பேசி மக்களை மீண்டும் ஏமாற்ற தயாராகும் தமிழ் அரசுக் கட்சிக்கு வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் நவம்பர் 14 திகதி தீர்ப்பு வழங்குவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. (ப) https://newuthayan.com/article/தமிழரசின்_பித்தலாட்டங்களுக்கு_நவம்பர்_14__தீர்ப்பு -_சபா_குகதாஸ்_காட்டம்!
-
சலாம் போடாததால் வேட்பாளர் தெரிவிலிருந்து நீக்கம்! - தமிழரசு முன்னாள் செயலாளர் மிதிலச்செல்வி காட்டம்
சலாம் போடாததால் வேட்பாளர் தெரிவிலிருந்து நீக்கம்! - தமிழரசு முன்னாள் செயலாளர் மிதிலச்செல்வி தமிழரசு ஊடகப் பேச்சாளருக்கு சலாம் போடவில்லை என்பதால் வேட்பாளர் தெரிவில் நீக்கினார்கள் - தமிழரசு முன்னாள் செயலாளர் மிதிலச்செல்வி காட்டம்! தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளர் என தன்னைத்தான் கூறிக் கொள்ளும் ஒருவரின் கருத்துக்களுக்கு சலாம் போடாத காரணத்தினாலும் தமிழரசு கட்சியில் நீண்ட நாள் பயணித்த ஆளுமை மிக்க பெண்களை போட்டியிட விடாமல் தடுத்தார்கள் எனவும் தமிழரசு கட்சியின் முன்னாள் கொழும்புக் கிளை செயலாளர் மிதிலைச்செல்வி ஸ்ரீ பத்மநாதன் தெரிவித்தார். இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில், தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளர் எனக் கூறுபவர் தமிழரசு கட்சியில் வேட்பாளராக போட்டியிடுவதற்கு பெண்களை தேடினோம் பலரும் பின்னடிக்கிறார்கள் என்ற தோரணையில் கருத்து வெளியிட்டார். அவரது கருத்தை நான் முற்றாக மறுக்கிறேன் தமிழரசு கட்சியில் ஆளுமை மிக்க பெண்கள் இருக்கும்போது எங்கோ எல்லாம் தேடி இரு பெண்களைப் பிடித்து வந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இறக்கி உள்ளனர். தமிழரசு கட்சியில் இருக்கும் என்னைப் போன்ற பெண்கள் ஊடகப் பேச்சாளருக்கு சலாம் போடும் பெண்களாகவோ அல்லது தலையாட்டும் பெண்களாகவோ இருக்காத காரணத்தினால் எம்மை தேர்தலில் நிறுத்தவில்லை. நான் முப்பது வருடங்களுக்கு மேலாக தனியார் காப்புறுத்துறையில் பல பதவி நிலைகளை வசித்துக் கொண்டிருக்கும் நிலையில் தமிழரசு கட்சியின் கொழும்புக் கிளையில் பத்து வருடங்களுக்கு மேலாக பல்வேறு பதவி நிலைகளை வகித்தவள். தமிழரசு கட்சிக்குள் ஜனநாயகம் இல்லாத நிலையில் அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி விக்னேஸ்வரனே தலைவராகக் கொண்ட தமிழ் மக்கள் கூட்டணியில் மான் சின்னத்தில் இம்முறை தேர்தலில் போட்டியிடுகிறேன். தமிழரசு கட்சியினுடைய தலைவராக இருந்த மாவை சேனாதிராஜா அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் ஆளுமை உள்ள பலரை தேர்தலில் போட்டியிடுவதற்காக பிரேரித்த நிலையில் அது நடைபெறவில்லை அதனால் தலைவர் பதவியில் இருந்து விலகினேன் என வெளிப்படையாக பேசி இருந்தார். ஒரு தலைவரால் கட்சியில் செயல்பட முடியாத அளவுக்கு ஒரு சிலரின் செயற்பாடு அத்து மீறிய நிலையில் அந்தக் கட்சிக்குள் இருப்பது தவறு என நினைத்து என்னைப் போன்ற பலர் வெளியேறினர். தமிழ் தேசிய உணர்வுடன் தமிழரசு கட்சிக்குள் பயணித்தவர்கள் கட்சிக்குள் இடம்பெறும் விரும்பத்தகாத செயற்பாடுகள் காரணமாக கட்சியை இருந்து விலகுவதாக எழுத்து மூலம் கடிதங்களை அனுப்பி உள்ளனர். அது மட்டுமல்லாது கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்கள் பலரும் தமிழரசு கட்சியிலிருந்து விலகுவதற்கான தீர்மானங்களை எடுத்த வருகின்றனர். ஆகவே தமிழரசு கட்சி தமிழ் மக்களுக்கான கட்சியாக இனியும் செயல்பட முடியாத நிலையில் தமிழரசு கட்சியின் கொள்கைகளை மாற்றியவர்கள் நிச்சயம் மக்களால் தோற்கடிக்கப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார். https://newuthayan.com/article/சலாம்_போடாததால் வேட்பாளர்_தெரிவிலிருந்து_நீக்கம்!
-
பொதுக்கட்டமைப்பு தற்போது இல்லை – மக்களிடம் மன்னிப்பு கோருகிறோம்
பொதுக்கட்டமைப்பு தற்போது இல்லை – மக்களிடம் மன்னிப்பு கோருகிறோம் adminOctober 13, 2024 மக்கள் நாணயமானவர்களுக்கும், கறைபடியாதவர்களுக்கும் தேச திரட்சிக்காக உழைப்பவர்களுக்கும் மக்கள் வாக்களிக்க வேண்டும் என பொதுக்கட்டமைப்பை சேர்ந்த நிலாந்தன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் பொதுச்சபை ஜனாதிபதி தேர்தலை கையாண்ட போன்று, மற்றைய தேர்தல்களை கையாள முடியாததால் நாடாளுமன்ற தேர்தலில் விலகி இருக்கின்றது. ஜனாதிபதி தேர்தலில் பாவித்த சங்கு சின்னத்தை பாவிக்க வேண்டாம் என கோரினோம். கட்சிகள் விரும்பி இருந்தால் சங்கு சின்னத்தை எடுக்காது இருந்து இருக்கலாம். அதனையும் மீறி எடுத்துள்ளார்கள். சங்கு சின்னத்திற்கும், தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும், பொது கட்டமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை. தமிழ் மக்கள் பேரவையின் கூர்ப்பாகவே தமிழ் மக்கள் பொதுச்சபையாகும். பொதுச் சபை அடுத்த கூர்ப்புக்கு போன பின்னரே தேர்தல்களை எதிர்கொள்ள முடியும். தமிழ் மக்கள் பொதுச்சபை ஜனாதிபதி தேர்தலில் தேச திரட்சியை எதிர்பார்த்து, அதில் வெற்றியும் பெற்றோம். அது சில நாட்களில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புடன் மீள சிதறியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் பலம் தமிழ் மக்கள் பொதுச்சபையிடம் இல்லாததால், அதில் இருந்து விலகி இருக்கிறோம். எனவே மக்கள் நாணயமானவர்களுக்கும் கறைபடியாதவர்களுக்கும் தேச திரட்சிக்காக மக்கள் வாக்களிக்க வேண்டும். சங்கு சின்னம் புனிதமானது இல்லை. அதற்கு யாரும் உரிமை கோர முடியாது. அது ஒரு பொது நிலைப்பாட்டிற்கான குறீயிடு. பொதுக்கட்டமைப்பில் இருந்த பலர் வெளியில் நிற்கும் போது சிலர் மட்டும் அதனை பயன்படுத்துவது அறமில்லை. சங்கு சின்னத்திற்கு, நாடாளுமன்ற தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிடுபவர்கள் மட்டும் உழைக்கவில்லை. பலரின் உழைப்பு அதில் உண்டு. தேர்தல் பிரச்சாரத்திற்கு பலர் முன்னரங்கில் வந்து உழைக்காமல் பின்னின்று உழைத்தவர்களும் உண்டு. தேச திரட்சியை உருவாக்க முயன்று வெற்றி கண்டு சில நாட்களில் அது சிதறுண்டு போயுள்ளது. அதற்காக நாம் மக்களிடம் மன்னிப்பு கோருகிறோம். அத்துடன் பொதுக்கட்டமை தற்போது இல்லை என தெரிவித்தார். https://globaltamilnews.net/2024/207468/
-
தமிழரசுக் கட்சியின் எதிர்காலம் மீட்பா….?அடவா….?
தமிழரசுக் கட்சியின் எதிர்காலம் மீட்பா….?அடவா….? October 13, 2024 — அழகு குணசீலன் — மலிந்தால் எல்லாம் சந்தைக்கு வரும் என்று சொல்வார்கள். அதுதான் தமிழரசுக்கட்சியின் தமிழ்த்தேசிய போலி அரசியலுக்கு நடந்திருக்கிறது. சகல தமிழ்த்தேசிய போலிகளும் தனித்தும், கூட்டாகவும் கொள்ளி கொத்துவது போன்று கொத்து…கொத்து…எனக் கொத்தி குறுக்காகவும், நெடுக்காகவும் பிளந்து தமிழரசுக்கு கொள்ளி வைக்கும் நிலைக்கு கொண்டு வந்து சந்திச்சந்தையில் விட்டிருக்கிறார்கள். ஜீ.ஜீ.பொன்னம்பலம், எஸ்.ஜே.வி. செல்வநாயகம் பிரிந்த பழைய கதையை விடுவோம். அதற்கு மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்ட ஒரு நியாயமான காரணம் வெளியில் சொல்லுவதற்கு இருந்தது. அண்மைய கடந்த 20 ஆண்டுகளை, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உருவாக்கத்தில் இருந்து பார்த்தால் புலிகள் இருக்கும் வரை அவர்களின் அனைத்து அடாவடித்தனங்களையும் தேசியத்தின் பெயரால் நியாயப்படுத்தியவர்கள் தமிழரசுக்கட்சி/தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர். அறவழிப் போராட்டம் தோற்றது அதனால் ஆயுதப்போராட்டம் என்றார்கள். அதுவும் முள்ளிவாய்க்காலில் முடிந்த பின்னர். போராட்டம் ஓயாது அதன் வழிமுறைகள்தான் மாறும் என்று பாராளுமன்ற அரசியலுக்கு திரும்புகிறோம் என்று கூறினார்கள். அந்த வழியில் இதுவரை ஒரு எள்ளளவும் சாதித்ததில்லை. ஒன்றை மட்டும் கின்னஸ் சாதனையாகச் சொல்லலாம், அதுதான் தமிழ்த்தேசிய கட்சி அரசியலில் பிரிந்து, கட்சிக்குள் பிரிந்து சாதனை படைத்திருப்பது. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் கதிரைக்கணக்கும், கனவும் எல்லாவற்றையும் விஞ்சி நிற்கிறது. தமிழ்தேசிய ஊடகவியலாளர்கள் சிலர் மனனம் செய்து ஆரம்பப்பள்ளி சிறுபிள்ளைகள் போன்று வாத்தியாருக்கு முன்னால் ஒப்புவித்த “ஊடகப்பாணி” தோல்வியில் முடிந்திருக்கிறது. தமிழர்திரட்சி, தமிழ்தேசிய திரட்சி, தேசத்தின் திரட்சி , அரசற்ற மக்கள், தேசியத்தை கட்டி எழுப்பதல் போன்ற மாயமந்திர வார்த்தைகள் அடிபட்டு போய்விட்டன. ஆனாலும் வீழ்ந்தோம் என்றாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று பொதுவேட்பாளரின் முற்றுமுழுதான தோல்விக்கு வியாக்கியானம் வேறு சொல்கிறார்கள். உண்மையும், நேர்மையும், சுய விமர்சனமும் அற்ற இவர்களின் செயற்பாடுகளும் தமிழ்த்தேசிய அரசியலின் இன்றைய நிலைக்கு காரணம். சிவில் அமைப்புக்கள், பொதுமக்கள் சபை, தமிழ்த்தேசிய பொதுக் கூட்டமைப்பு, P2P, காவி, வெள்ளை மேலங்கி சாமியார்கள் எல்லோரும் தமிழரசுக்கட்சியின் இன்றைய அவலத்திற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள். பௌத்த பிக்குகள் அரசியலில் தலையிடுகிறார்கள் என்று குற்றம் சாட்டிக்கொண்டு தாங்களும் தங்கள் இருப்பை காப்பாற்ற மத ஒழுக்க நெறிகளுக்கு மாறாக அரசியல் செய்கிறார்கள் இந்த தமிழர் மத ஆசாமிகள். கிறிஸ்தவ மதத்தையே தமிழ், சிங்களம் என்று பதவிக்காக பிரித்தவர்கள் இவர்கள். அன்று மக்களை முள்ளிவாய்க்காலில் கொண்டு பலி கொடுத்தவர்கள். இன்று போலித்தேசியத்தை வழிநடத்தி, கட்சிகளை சிதைத்து, தென்னிலங்கை கட்சிகள் வடக்கு, கிழக்கில் குடியேற வீட்டுக்கதவை திறந்து விட்டிருக்கிறார்கள் . தமிழரசுக்கட்சி சின்னா பின்னமாகப் போனதற்கு முன்னாள் பா.உ. சுமந்திரன் மட்டும்தான் காரணமா? இல்லை, புலிகளின் தோல்விக்கு பின்னரான ஒட்டு மொத்த அரசியலும் வெறும் கதிரை அரசியலாக மாறியது காரணமா? உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டபோது “பொறிமுறை” என்ற சுமந்திரனின் வார்த்தை ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உருவாகக் காரணமானது. திருகோணமலை கட்சி மாநாட்டில் இடம்பெற்ற தலைவர் தேர்வு சுமந்திரன், சிறிதரன் என்ற இரு அணிகளை உருவாக்கியது. பொறிமுறை பற்றி பேசிய அதே வாய்கள் தலைவர் தேர்வில் “ஜனநாயக வாக்கெடுப்பு” என்றன. ஆனால் நடந்தவை அனைத்தும் ஜனநாயகத்திற்கு முரணானவை. இறுதியில் இந்த பதவிச்சண்டை தமிழரசுக்கட்சியை குற்றக் கூண்டில் ஏற்றியிருக்கிறது. ஆக முதலில் ஈ.பி.ஆர்.எல்.எப். உள்ளிட்ட ஒரு அணியும், கஜேந்திரகுமார் அணியும் பிரிந்தன. இது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு போட்ட இரட்டைக்குட்டிகள். பின்னர் விக்கினேஸ்வரன் பிரிந்து தமிழ் மக்கள் முன்னணியை அமைத்தார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பு போட்ட அடுத்த குட்டி இது. குத்து விளக்கில் இருந்து சங்காக மாறியிருப்பது கூட்டமைப்பு போட்ட நான்காவது குட்டி. ஜனாதிபதி தேர்தல் வந்தது. வந்ததும் வந்தார் பொதுவேட்பாளர், அவருக்கு பின்னால் நின்றது தமிழ்ப்பொது அமைப்பு. இது தமிழரசுக்கட்சியின் தலைமைக்கான போட்டியின் பிரதிபலிப்பு. சம்பந்தர் -சுமந்திரன் அணி பொதுவேட்பாளரை நிராகரித்தது. சிறிதரன் அணி பொதுவேட்பாளரை ஆதரித்தது. மாவை எல்லாப்பாட்டுக்கும் பாடினார். மண்கௌவியும், மீசையில் மண்ஒட்டவில்லை என்று ஊடகச்சந்திப்புக்களில் மக்களுக்கு கதை விடுகின்ற தமிழ் பொதுக்கூட்டமைப்பும், ஊடகவியலாளர்களும், பொதுவேட்பாளரும் கூட தமிழரசின் தற்போதைய உடைவுக்கு காரணமானவர்கள். பொதுவேட்பாளர் விடயம் “கௌரவப்பிரச்சினையாகி” சுமந்திரன் அணியும், பொதுஅமைப்பு, சிறிதரன் அணியும் விட்டுக்கொடுக்காததினால் ஏற்பட்ட விரிசல் அதிகரித்து வேட்பாளர் தேர்வில் பிரதிபலித்துள்ளது. கே.வி. தவராஜா தலைமையிலான தற்போதைய வெளியேற்றம் -ஜனநாயக தமிழரசுக்கூட்டமைப்பின் தோற்றம். இது தமிழரசு/ தமிழ்த்தேசிய கூட்டமைப்பு போட்ட ஐந்தாவது குட்டி. இதற்கு பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் நியமனம் உடனடிக்காரணமாக அமைந்தாலும் இந்த முரண்பாடு நீண்ட கால பின்னணியைக் கொண்டது. தமிழரசுக்கட்சிக்குள் ஒரு குழுவும் அந்த குழுவின் வாதங்களும் முன்னுரிமை பெற்று இருந்தது வெளிப்படை. இதற்கு இரா.சம்பந்தர் போனாலும் போவேன் ஆனால் பதவியை கட்டிக்கொண்டுதான் போவேன் என்று கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை சவப்பெட்டிக்குள் போகும்வரை கட்டிப்பிடித்து கொண்டு படுத்த படுக்கையாய்க்கிடந்ததும் ஒரு காரணம். சம்பந்தர் நினைத்ததைச் செய்துவிட்டு போய்ச் சேர்ந்துவிட்டார். தனக்கு பின்னர் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும் இருக்காது, தலைமைத்துவமும் இருக்காது. தீர்க்கதரிசனம் மிக்க தமிழ்த்தேசிய தலைமை ஒன்றின் செயலா இது? தமிழரசுக்கட்சியின் இந்த நிலைக்கு சம்பந்தர் தான் முழுப்பொறுப்பு என்றால், செத்தவர் மீது பழியைப்போடுகிறான் என்று “கொடுக்குக்கட்டுவார்கள்”. எம்.ஏ. சுமந்திரன் அப்போது சம்பந்தரை இராஜினாமாச் செய்ய கோரியபோது அதற்கு எதிராக குரல் கொடுத்த மாவை, சிறிதரன், தவராஜா, யோகேஸ்வரன்,சிறிநேசன், சிவஞானம், துரைராசசிங்கம் …. போன்ற பலரும், மௌன விரதம் பூண்டவர்களும் தமிழரசின் இன்றைய நிலைக்கும் பொறுப்பானவர்கள். இவர்கள் சம்பந்தர் கூட்டமைப்பின் தலைமைப்பதவியை செயற்றிறனுடன் செய்ய முடியாது என்று தெரிந்தும் முதுமை, பாரம்பரியம், மரியாதை போன்ற அரசியல் சாரா மனிதாபிமான வார்த்தைகளை பயன்படுத்தி வெறுமனே சுமந்திரன் மீது கொண்டிருந்த காழ்ப்புணர்ச்சியினால், சுமந்திரனுக்கு அந்த பதவி கிடைத்துவிடும் என்ற அச்சத்தினால் எதிர்த்தவர்கள். இந்த சுய இலாப நட்ட கணக்கு தான் தமிழரசை இன்றைய நிலைக்கும் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. புலம்பெயர்ந்த நாடுகளில் அண்மைக்காலமாக ஒரு விடயத்தை அவதானிக்க கூடியதாக இருக்கிறது. அதுதான் புலி எதிர்ப்பு முன்னாள் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் சுமந்திரனின் நிலைப்பாட்டை ஆதரிப்பதும், புலிகளின் கடும்போக்காளர்கள் சுமந்திரனை எதிர்ப்பதுமாகும். புலிகளால் துரோகி பட்டம் சூட்டப்பட்டு, தடைசெய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்தவர்கள் சுமந்திரனை ஆதரிக்கிறார்கள். புலிகளின் தேசபக்த புனிதர்கள் சுமந்திரனை எதிர்க்கிறார்கள். ஆதரிப்பதற்கு ஒரு காரணம் சுமந்திரன் புலிகளை பயங்கரவாத அமைப்பாக கருதுவதும், இனவழிப்பை கேள்விக்குட்படுத்துவதும், கொழும்பு, டெல்கி, சர்வதேசத்தோடு ஒத்தோடுவதுமாக இருக்க முடியும். தீவிர தமிழ்த்தேசிய டயஸ்போரா சுமந்திரனை விமர்சனம் செய்யலாம், சிறிதரன் போன்ற தேசபக்கர்களை கொண்டு சுமந்திரனுக்கு குறுக்கே நிறுத்தலாம், தேர்தலில் சுமந்திரனுக்கு எதிராக பிரச்சாரம் செய்யலாம் ஆனால் தீர்மானம் எடுக்கும் சக்தியாக இன்னும் சுமந்திரனே இருக்கிறார். சுமந்திரன் தன்னைச் சூழ ஒரு ஆதரவு வட்டத்தை உருவாக்கிவிட்டார். இதற்கு காரணம் தமிழரசுக்கட்சியின் பலவீனமான யாப்பு -நிர்வாகக்கட்டமைப்பும், ஒப்பீட்டளவில் சுமந்திரன்,சாணக்கியனை விடவும் எல்லாவகையிலும் பலவீனமான எம்.பி.க்களும் கட்சி முக்கியஸ்தர்களும். இவர்கள் “பட்டியாக” பின்னால் போகிறார்கள். கே.வி. தவராஜா கூட இவ்வளவு காலமும் செய்ய வேண்டியதை செய்யாமல் இப்போது வேட்பாளர் நியமனம் கிடைக்கவில்லை என்பதால் களத்தில் நிற்கிறார். ஆனால் காலம் கடந்து பிறந்த ஞானம் இது. சுமந்திரன் பஸ்சை கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக கோ பைலட் இன்றி தனியாக ஓட்டுகிறார். அப்போது விபத்து ஏற்படும் என்று தெரிந்தும் இவர்கள் அனைவரும் அந்த பஸ்ஸில் ஏறி அமர்ந்தவர்கள். இப்போது பஸ் அடிபட்டுக்கிடக்கிறது இறங்கி ஓடுகிறார்கள் . இருக்க சீற் இல்லையாம். மீண்டும் சீற் கிடைத்தால் இறங்கியவர்கள் அனைவரும் முண்டியடித்து ஏறத்தயங்க மாட்டார்கள். 2020 பாராளுமன்ற தேர்தலில் நடந்த சில நிகழ்வுகளுக்கு 2024 தேர்தல் வேட்பாளர் நியமனத்தால் பதிலளிக்கிறார் சுமந்திரன். 2020 ல் கொழும்பில் இருந்து தனக்கு வேண்டிய இரு பெண்களை வேட்பாளர்களாக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மாவட்டங்களில் நியமிக்க சுமந்திரன் திட்டம் தீட்டினார். ஆனால் பல்வேறு தரப்பாலும் காட்டப்பட்ட எதிர்ப்பினால் அது தடைப்பட்டது. குறிப்பாக விடுதலைப்புலிகளின் மூத்த போராளியும் காக்காவின் கடும் எதிர்ப்புக்கு சுமந்திரன் முகம் கொடுக்க வேண்டியதாயிற்று. யாழ்.தேர்தல் மாவட்டத்தில் ஒரு இலட்சம் விருப்பு வாக்குகளை பெறுவேன் என்ற சுமந்திரனுக்கு முன்னாள் போராளிகளின் எதிர்ப்பிரச்சாரம் அரைவாசியாகக் குறைத்தது. 2020 யாழ்.தேர்தல் மாவட்டத்தில் சசிகலா ரவிராஜ் வேட்பாளராக நியமிக்கப்பட்டார். சுமந்திரனால் இதைத்தடுக்க முடியவில்லை. ஆனால் மட்டக்களப்பில் ஞா.சிறிநேசன், மா.உதயகுமார் ஆகியோரின் ஆதரவுடன் எதிர்பார்க்கப்பட்டிருந்த மங்களா சங்கருக்கான நியமனவாய்ப்பை சுமந்திரனாலும்,சாணக்கியனாலும் தடுக்க முடிந்தது. வேறு வழியின்றி தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஆதரவில் தேர்தலில் பேட்டியிட்டார் மங்களா. இதே நிலைதான் இன்று சசிகலாவுக்கு ஏற்பட்டுள்ளது. சுமந்தினால் தவிர்க்கப்பட்ட அவர் வேறு வழியின்றி சங்கு அணியில் போட்டியிடுகிறார். தவராஜா அணியினர் சற்று துரிதமாக செயற்பட்டிருந்தால் சசிகலாவின் சின்னம் சங்குக்குப்பதிலாக மாம்பழமாக இருந்திருக்கும். 2020 இல் தவராஜா கொழும்பில் போட்டியிட விரும்பினார். ஆனால் மனோகணேசனுடன் சுமந்திரனுக்கு இருந்த டீல் அதைத்தடுத்தது. இம்முறையும் அவர் யாழ்ப்பாணம் இல்லையேல் கொழும்பை விரும்பினார் என்று கூறப்படுகிறது. கொழும்பில் யாழ்ப்பாணம் போன்று ஒரு பாராளுமன்ற அங்கத்துவம் குறைக்கப்பட்டுள்ள நிலையில் மனோ கணேசனின் தேர்வை அது கேள்விக்குள்ளாக்கும் என்பதால் அதுவும் ஒரு டீலில் கைவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கொழும்பில் தமிழரசுக்கட்சி போட்டியிடும் என்று அறிவித்த சுமந்திரன் சஜீத்- மனோ – ஹக்கீம் கூட்டணிக்கு சார்பாக கொழும்பில் போட்டியிடும் முடிவைக் கைவிட்டார். கே.வி.தவராஜா தமிழ்த்தேசிய அரசியலில் 1970 களில் இருந்து ஈடுபாடுடையவர். கொழும்பு தமிழ் இளைஞர் பேரவையில் உமாமகேஸ்வரன், பால சிறிதரன், ஊர்மிளா காலத்தில் இருந்து சட்டக்கல்லூரியில் கற்கும்போதே செயற்பட்டவர். அப்படி இருந்தும் 2010 தேசியப்பட்டியலில் தமிழ்த்தேசிய போராட்ட இழப்போ,பங்களிப்போ இன்றி சம்பந்தரால் புலிகள் இல்லாத நிலையில் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டவர். சசிகலாவுக்கும் ஒரு போராட்டவரலாற்று தொடர்பு இருக்கிறது. யாழ்.பல்கலைக்கழகத்தில் புலிகளின் ஜனநாயக மறுப்புக்களை கண்டித்து ஒரு உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்றது. அன்றைய நிலையில் இதை புளோட் முன்னின்று நடாத்தியது. உண்ணாவிரதத்தை குழப்பும் வகையில் புலிகள் உண்ணாவிரதம் இருந்த பல்கலைக்கழக மாணவிகளை கடத்தி இந்தியாவுக்கு கொண்டு சென்றனர். அன்று உண்ணாவிரதம் இருந்து சசிகலாவுடன் கடத்தப்பட்ட மற்றவர் மதிவதனி. இவர்தான் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி. இந்த வரலாற்று நிகழ்வுகளையும், கடந்த கால தமிழ்த்தேசிய வரலாற்று சுவடுகளையும் மறுத்து செயற்படும் ஒருவராக சுமந்திரன் தொடர்ந்தும் செயற்படுவார். இந்த சுவடுகள் தனக்கு தடையாக அமையும் என்று அவர் கருதுகிறார். அதனால் தட்டவேண்டிய இடத்தில் தட்டி வழியை கிளியர் பண்ணுகிறார். ஆனாலும் தமிழரசு நிர்வாகம் சுமந்திரனுக்கு பின்னாலேயே நிற்கிறது. தமிழரசை வருகின்ற தேர்தலில் மக்கள் சுமந்திரனிடம் இருந்து மீட்கப்போகிறார்களா ………? அடவு வைக்கப்போகிறார்களா…? https://arangamnews.com/?p=11330
-
அநுரகுமார அலை என்ன செய்யும்?
அநுரகுமார அலை என்ன செய்யும்? October 13, 2024 — கருணாகரன் — அனுரகுமார திசநாயக்கவின் வெற்றி, புதிய அலையொன்றை அல்லது புதிய சூழலொன்றை உருவாக்கியுள்ளது. அது சிங்களம், முஸ்லிம், தமிழ், மலையகம் என எந்த வேறுபாடுகளும் இல்லாமல் நாடுமுழுவதிலும் உருவாகியிருக்கும் புதிய அலையாகும். இதனால் சிங்களத் தேசியம், தமிழ்த்தேசியம், முஸ்லிம்தேசியம், மலையகத் தேசியம் என்பவற்றைக் கடந்து பெருவாரியான மக்கள் NPP எனப்படும் தேசிய மக்கள் சக்தியின் பக்கம் திரளும் நிலை உருவாகியிருக்கிறது. சரியாகச் சொல்வதென்றால், அனுரவின் பக்கமாகத் திரள்கிறது என்பதே சரியாகும். ஏனெனில் இந்த அலையோ, இந்தத் திரட்சியோ JVP அல்லது NPP என்பவற்றின் சித்தாந்தத்தைப் புரிந்து கொண்டு எழுந்ததில்லை. இதுவரையிலான அரசியற் செல்நெறியில் ஒரு மாற்றம் வேண்டும், அதை அனுர தரப்புச் செயற்படுத்தும், அதற்கொரு வாய்ப்பைக் கொடுத்துப் பார்ப்போம் என்ற நம்பிக்கையினால் ஏற்பட்டிருப்பது. இதையே பெரும்பாலான அனுர ஆதரவாளர்கள் வெளிப்படையாகக் கூறுகிறார்கள். ஜனாதிபதித் தேர்தலின்போது “நாடு அனுரவோடு” என்ற வாக்கியத்தைக் கொண்ட சுவரொட்டிகள் நாடெங்கும் காணப்பட்டன. அது உண்மையோ என்று யோசிக்கக் கூடிய அளவுக்கே தற்போதைய சூழல் உள்ளது. வரலாறு சிலவேளை இப்படியான வரலாற்றுப் பாத்திரங்களின் வழியாக அதிசயங்களை நிகழ்த்துவதுண்டு. “அனுர” என்ற இந்த வரலாற்றுப் பாத்திரம், அப்படியான அதிசயத்தை உருவாக்குகிறது போலும். அல்லது வரலாற்றுப் பாத்திரமாக அனுர மாறவும் கூடும். இந்த மதிப்பீட்டுக்கு நாம் இன்னும் கொஞ்சம் பொறுத்திருக்க வேண்டும். அனுரவின் மூலம் தேசிய மக்கள் சக்தி (NPP) க்கு இதுவரையில்லாத அளவுக்குப் பேராதரவு பெருகியிருக்கிறது என்பது உண்மையே! இன்னொரு நிலையில் இது தமிழ், முஸ்லிம், மலையக, சிங்களத் தேசியங்கள் என்ற அடையாளக் கோடுகளைத் தகர்த்து, ஐக்கிய இலங்கை என்ற பொதுப் பரப்பிற்குள் சொல்லாமற் கொள்ளாமல் எல்லோரையும் இழுத்து விடப்பார்க்கிறது. இது, இதுவரையிலும் ஆட்சியிலிருந்தோர் ஐக்கிய இலங்கைக்குள் – ஒன்று பட்ட இலங்கைக்குள் – அனைத்துத் தேசிய இனங்களையும் கட்டிப்போடுவது எனச் சூழ்ச்சிகளின் மூலம் மேற்கொண்ட முயற்சிகளை விட இலகுவாக அனுர விக்கெற்றுகளை வீழ்த்தியிருக்கிறார் எனலாம். இதை விளங்கியோ விளங்காமலோ தமிழ், முஸ்லிம், மலையகச் சமூகங்கள் அனுர அலையில் உள்ளீர்க்கப்படுகின்றன. இதற்கு இன்னொரு காரணம், தெற்கிலே உள்ள ஏனைய அரசியற் சக்திகள் தோற்றதைப்போல தமிழ், முஸ்லிம், மலையகக் கட்சிகள் தோற்றுப் போனதுமாகும். அதாவது அவற்றின் நம்பகத்தன்மை குறைவடைந்தமையாகும். இதனால் தற்போது உருவாகியிருக்கும் NPP க்கு ஆதரவான அலையைக் குறித்தோ அல்லது NPP ஐப் பற்றியோ யாரும் விமர்சிக்கவும் முடியாது. மதம், அரசியல், கலை போன்றவற்றில் மக்களுக்கு ஈர்ப்பு ஏற்பட்டு, அது தீவிரப் பற்றாக வளர்ச்சியடைந்து பேரபிமானமாக மாறிவிடுவதுண்டு. இந்த ஈர்ப்பு அமைப்புகள், கட்சிகளிடம் மட்டுமல்ல, தனி நபர்களில் மீதும் உருவாகும். அப்படி உருவாகி விட்டால் அதற்குப் பிறகு அந்த அமைப்பையோ, அந்தத் தலைவரையோ யாரும் கேள்வி கேட்கவும் முடியாது, விமர்சிக்கவும் முடியாது. அப்படி விமர்சித்தால் அல்லது கேள்வி கேட்டால், விமர்சிப்போரும் கேள்வி கேட்போரும் துரோகிகளாகவே நோக்கப்படுவர். இப்படியான ஒரு நிலை இப்போது உருவாகியுள்ளது. அந்தளவுக்கு NPP மீதான பேரபிமானம் சகல தரப்பு மக்களிடமும் மேலோங்கியுள்ளது. இந்த அபிமானம் நாட்டிற்குள் மட்டுமல்ல, நாட்டுக்கு வெளியே புலம்பெயர்ந்து வாழ்கின்ற இலங்கையர்களிடத்திலும் பரவியுள்ளது. இதனால் பாராளுமன்றத் தேர்தலில் NPP ஐ வெற்றியடைய வைப்பதற்குக் களப்பணியாற்றுவதற்கென்று இலங்கைக்குப் பயணித்துக் கொண்டுள்ளனர். இந்தப் பேரார்வத்துக்குக் காரணம், இலங்கையில் மாற்றம் நிகழ்த்தப்பட வேண்டும். புதிய அரசியற் பண்பாடொன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற விருப்பமேயாகும். இந்த விருப்பம் நீண்ட காலமாகப் பலருடைய மனதிலும் நிறைவேறாமலிருந்த மாபெரும் கனவாகும். அந்தக் கனவை நனவாக்குவதற்கான வரலாற்றுத் தருணம் இதுவெனப் பலரும் கருதுகின்றனர். ஆகவேதான் அதற்கான பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்று செயலாற்ற விளைகின்றனர். இந்த நிலையை உருவாக்கியது கடந்த காலத்தில் ஆட்சியதிகாரத்திலிருந்த தரப்புகளேயாகும். அவற்றின் கூட்டுத் தவறுகளே “அரகலய” (எழுச்சி). அதுவே NPP க்கான மாபெரும் ஆதரவு அலையை உருவாக்கியுள்ளது. இப்போது NPP எதிர்பாத்திராத அளவுக்கு இந்த அலை உச்சமடைகிறது. NPP சும்மா இருக்கவே வேலை நடக்கிறது என்று சொல்வார்களல்லவா, அப்படிச் சொல்லுமளவுக்கான நிலைமை – சூழல் – NPP க்குச் சாதகமாக உருவாகியுள்ளது. பேராளுமைகள் அல்லது வரலாற்றுச் சூழலைக் கையாளத் தெரிந்த ஆற்றலர்கள் எழுச்சியடையும்போது இவ்வாறான “மாற்றச் சூழல்” (Condition of Change)அமைவதுண்டு. இது எப்படி அமையும் என்பது NPP யின் அடுத்த கட்ட நகர்வைப் பொறுத்தே தெரியும். ஏனென்றால், NPP யோ அனுரவோ புரட்சிகரப் போராட்டத்தின் மூலமாக அதிகாரத்தைக் கைப்பற்றவில்லை. தேர்தல் ஜனநாயக விதிமுறைகளின் வழியாகவே – சட்ட வரம்புக்குட்பட்டே (Legal definition) – ஆட்சியதிகாரம் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆகவே அந்த விதிகளின்படி, அந்த வரையறைகளுக்குட்பட்டே மாற்றங்களை நிகழ்த்த முடியும். அதற்குக் கால அவகாசமும் வரையறுக்கப்பட்ட மட்டுப்பாடுகளும் இருக்கும். ஆனாலும் தமக்குக் கிடைத்த வரலாற்றுத் தருணத்தை அனுரவும் NPP யும் எப்படிப் பயன்படுத்திக் கொள்ளப்போகின்றன? எவ்வாறு மதிப்பைக் கூட்டப்போகின்றன என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும். இதற்கு அது பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற வேண்டும். இப்போது அனுர தலைமையிலான மூவர் கொண்ட அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவையில் அதிரடியாகச் சில வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பாராளுமன்றக் கலைப்பு, அமைச்சரவை நியமனம், அமைச்சுச் செயலாளர்கள் நியமனம், இழுபறியிலிருந்து பதில் பொலிஸ்மா அதிபர் நியமனம், சுற்றுலாப்பயணிகளுக்கு விசா பெறுவதில் இருந்த நெருக்கடிகளை மாற்றியமைத்தமை, அநாவசியச் செலவுகளைக் குறைக்கும் வகையிலான நடவடிக்கைகள், மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் எரிபொருள் விலைக்குறைப்பு, உர மானியம் போன்றவற்றை வழங்குவதற்கான ஏற்பாடு போன்றவற்றைப் புதிய அமைச்சரவை செய்துள்ளது. இது NPP க்கு மேலும் ஒரு சிறிய கவர்ச்சியையும் நம்பிக்கையையும் உண்டாக்கியிருக்கிறது. ஆனாலும் எதிர்பார்க்கப்பட்ட ஊழல்வாதிளின் மீதான நடவடிக்கை, ஈஸ்டர் குண்டு வெடிப்பின் சூத்திரதாரிகளைக் கண்டறிவதும் நடவடிக்கை எடுப்பதும் போன்றவற்றில் எந்த முன்னேற்றத்தையும் காணவில்லை. அதைப்போல வடக்குக் கிழக்கில் உள்ள படைத்தரப்பின் உயர்பாதுகாப்பு வலயத்தை நீக்குதல், காணிகளை விடுவித்தல் போன்றவற்றிலும் எந்த மாற்றமும் முன்னேற்றமும் நிகழவில்லை. அதைப்பற்றி அனுர – NPP யின் நிலைப்பாடு என்னவென்றும் தெரியாது. ஏனென்றால் அதைப்பற்றிய பேச்சுகளே அந்தத் தரப்பின் வாயிலிருந்து வரவில்லை. பதிலாக பௌத்த பீடங்களிடம் ஆசி வாங்கும் அனுசரணையைப் பெறும் காட்சிகளே வெளியாகின்றன. இது அனுரவும் NPP யும் மக்களை முன்னிலைப்படுத்துவதை விடவும் பௌத்த பீடங்களைக் குளிர்ச்சியடையச் செய்வதற்கு எடுத்துக் கொள்ளும் பிரயத்தனத்தைக் காட்டுகிறது. அப்படியானால் மாற்றம் எந்த அடிப்படையில் நிகழப்போகிறது? அதனுடைய எல்லைகள் எப்படியாக இருக்கப்போகின்றன என்ற ஒரு தெளிவான காட்சியை இப்பொழுதே நாம் உணரக் கூடியதாக உள்ளது. ஆனாலும் இதையெல்லாம் கடந்து இப்பொழுது பலருடைய வாயிலும் உச்சரிக்கப்படும் பெயராக அனுரகுமார திசநாயக்க மாறியிருக்கிறார். “AKD” என்று அனுரவைச் செல்லமாக – உரிமையோடு அழைக்கிறார்கள். தங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரைப்போல அல்லது நெருங்கிய நண்பரைப்போல அனுரவைப் பற்றி நெருக்கமாகப் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொருவரும் அவருடைய Profile ஐ தேடி அறிந்து கொண்டிருக்கிறார்கள். அனுரவின் வீடிருக்கும் “தம்பேத்கம” என்ற சிறிய – ஆழக் கிராமத்தை நோக்கி YouTuper’s குவிகின்றனர். சமூக வலைத்தளங்களில் அனுரவின் படங்களும் நிகழ் காட்சிகளும் செய்திகளுமே நிறைந்து கிடக்கின்றன. ஒரு YouTupe காட்சியில் அவருக்கு MakeUp போடுகின்ற காட்சியைக் கூடப் பார்க்கக் கூடியதாக இருந்தது. சினிமாக் கதாநாயகர்களுக்கிருக்கும் கவர்ச்சிக்கு நிகரானது இது. தேர்தலில் பெற்ற வெற்றியின் மூலம் ஜனாதிபதியாகியது மட்டுமல்ல, ஒரே நாளில் பெரியதொரு கதாநாயகனாகவே அனுரகுமார திசநாயக்கவின் பிம்பம் மேலெழுந்துள்ளது. ஆம், இலங்கையின் அண்மைய வரலாற்றில் மிக உச்சமான செல்வாக்கைப் பெற்ற தலைவராகியிருக்கிறார் அனுர. இப்படி அனுர புகழடைந்த அளவுக்கு அவருடைய தேசிய மக்கள் சக்தி அறிமுகமாகிருக்கிறதா? புகழடைந்திருக்கிறதா? அதனுடைய கொள்கை தெளிவாக்கப்பட்டிருக்கிறதா? என்றால், இன்னுமில்லையென்றே சொல்ல வேண்டும். இன்னும் அதற்கு நாடு முழுவதிலும் கட்டமைக்கப்பட்ட செல்வாக்கு மண்டலம் உருவாகவில்லை. இன்னும் அதைப்பற்றிய தெளிவான சித்திரம் பலருக்கும் தெரியாது. ஆக இதொரு திடீர் வீக்கமாகவே உள்ளது. என்னதான் ஆதரவு அலை NPP க்கு உருவாகியிருந்தாலும் பாராளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்துவதற்கு அது பொருத்தமான ஆட்களை தேடிக்கொண்டேயிருக்க வேண்டிய நிலை. இதனால் வடக்குக் கிழக்கிலும் மலையகத்திலும் அரசியலே என்னவென்று தெரியாதவர்களும் சில பிரமுகர்களும் நிறுத்தப்பட்டுள்ளனர். தெற்கில் ஓரளவுக்குச் சமாளிக்கக் கூடியதாக இருந்தாலும் வடக்குக் கிழக்கில் தகுதியான ஆட்களைத் தேடுவதில் அதற்குப் பிரச்சினை உண்டு. இதனால் வடிகட்டலைச் செய்ய முடியாமல் போய் விட்டது NPP க்கு. ஆக அனுரவின் மூலம், அவருடைய வெற்றியின் வழியே இப்பொழுது தேசிய மக்கள் சக்தி (NPP) பரவலாக அறியப்பட்டு வருகிறது. அதாவது ஏற்கனவே அது பெற்றிருந்த அறிமுகப் பரப்பை விட இப்போழுது அதனுடைய பரப்பெல்லை விரிவடைந்துள்ளது என்பது உண்மையே. பலரும் தங்களுடைய அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதற்கு முற்படுகின்றனர். இதனால் அடுத்து வரவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூடுதலான ஆசனங்களைப் பெறக் கூடிய வாய்ப்புகள் உண்டு. அது எந்தளவுக்கு என்பதை இப்பொழுது சரியாக மதிப்பிட முடியாது விட்டாலும் ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற வாக்குகளை விட கூடுதலான வாக்குகளை தேசிய மக்கள் சக்தி பெறும் என்பது உறுதி. அதில் வடக்குக் கிழக்கு வாக்குகளும் சேரக் கூடிய சூழலுண்டு. இது வடக்குக் கிழக்கில் தமிழ்த்தேசியவாதச் சக்திகளைப் பின்னுக்குத் தள்ளக் கூடியதாக அமையும். ஆகவே NPP ஆட்சியை வலுப்படுத்தக் கூடிய நிலையை நோக்கி நகர்கிறது எனலாம். அப்படி அமைந்தால் அது எப்படியான நிலை இலங்கையில் உருவாகும்? என்ற கேள்வி முக்கியமானது. “வலுவான ஆதரவுத் தளம் இருந்தால்தான் NPP குறிப்பிட்டதைப்போல அல்லது திட்டமிட்டிருப்பதைப்போல மாற்றத்தை நோக்கிய முழுமையான ஆட்சியை வழங்க முடியும். மாற்று அரசியல் பண்பாடொன்று எழுச்சியடையும். ஊழல்வாதிகளின்மீது துணிந்து நடவடிக்கை எடுக்கக் கூடியதாக இருக்கும். அப்படி அமையவில்லை என்றால், பலவீனமான அரசாங்கத்தினால் எதையும் செய்ய முடியாது போய்விடும். இழுபறிகளே தொடரும். அது இலங்கைக்கு நல்லதல்ல. பதிலாகப் பிராந்திய சக்திகளுக்கும் வல்லரசுகளுக்குமே (பிற சக்திகளுக்கு) மிக வாய்ப்பாகி விடும். இதை நோக்கியே இந்தியாவும் அமெரிக்காவும் காய்களை நகர்த்துகின்றன” என்பது ஒரு சாராருடைய கருத்து. இதில் உண்மையுண்டு. இப்போதே பிராந்திய சக்திகளும் சர்வதேச வல்லரசுகளும் அதைச் செய்யத் தொடங்கி விட்டன. இதற்கு மாற்றுப் பார்வையுமுண்டு. NPP க்குப் பேராதரவு கிடைக்குமாக இருந்தால் அது இரண்டு விதமாக நிலைமையை உருவாக்கும். ஒன்று, 1977 இல் ஜே.ஆர். ஜெயவர்த்தனவுக்குக் கிடைத்த பலத்தைப்போன்ற ஒரு சூழலை ஏற்படுத்தும். அதற்குப் பிறகு கேள்விக்கிடமில்லாத வகையில் அது தனக்கேற்ற வகையில் அனைத்துத் தீர்மானங்களையும் அனைத்துத்திட்டங்களையும் தனித்து முன்னெடுக்கும். அதை விமர்சிக்கவோ தவறெனில் தடுத்து நிறுத்தவோ பிற சக்திகளால் இயலாமற் போய் விடும். இதனால் ஜனநாயகச் சூழல் கெட்டுவிடும். NPP யின் வரலாறு என்பது ஜே.வி.பியினுடைய வரலாறாகும். ஜே.வி.பி என்பது ஆயுதம் தாங்கியதோர் அமைப்பு. ஆயுதம் தாங்கிய அமைப்பில் என்னதான் ஜனநாயகத்தைப் பற்றிப் பேசினாலும் அதற்கப்பால் அதற்குள் ஒரு மூடுண்ட நிலை எப்போதுமிருக்கும். ஜே.வி.வி ஆயுத அரசியலை விட்டுப் பல ஆண்டுகளாகினாலும் அதனிடத்தில் இன்னும் அந்தக் கூறுகள் நிறைய உண்டு. அதாவது ஆயுதமேந்திய இயக்கம் என்ற உள்ளுணர்வு. தன்னையே புனிதத் தரப்பாகக் கட்டமைத்துக்கொள்ளும் தன்மை. தாம் திட்டமிடுவதும் தீர்மானிப்பதுமே சரி. மற்றதெல்லாம் தவறு என்ற உணர்வு அவர்களிடம் எப்போதுமுண்டு. இதனால்தான் அது எவரோடும் கூட்டு வைத்துக் கொள்ளாமல் தனித்தே நிற்கிறது. தன்னைத்தூய்மையானதாகக் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறது. இதெல்லாம் ஜனநாயக அரசியலை முன்னெடுக்கும் தரப்பினருக்கு (கட்சியினருக்கு) பொருத்தமானதல்ல. ஆனாலும் இதைப் புரிந்து கொண்டு தம்மை விரித்துக் கொள்வதற்கு தேசிய மக்கள் சக்தியினால் முடியாதிருக்கிறது. இந்த நிலையைக் கடக்க வேண்டிய யதார்த்தை NPP எதிர்கொள்ள வேண்டும். ஆட்சிக்கு வெளியே நின்று பேசுவது இலகு. ஆட்சியில் செயற்படுவது கடினம் என்ற உண்மையை NPP இப்பொழுது உணர வேண்டும். இதேவேளை இப்பொழுது நாட்டில் இரண்டு வகையான அரசியல் போக்கு உருவாகியுள்ளது. NPP யின் எழுச்சி அல்லது அலை. இந்தப் போக்கே இனிச் சில காலத்துக்குத் தொடரும். அடுத்த தேர்தலிலும் இந்த அடிப்படையிலான தேர்வே உண்டு. எப்படியென்றால் – ஊழல்வாதிகள் – நேர்மையானோர் சரியானவர்கள் – தப்பானவர்கள் நல்லவர்கள் – கெட்டவர்கள் கறுப்பு – வெள்ளை தனித்துத் தனித்துவமாக நிற்போர் – கூட்டு வைத்திருப்போர் கூட்டணிகள் என. இந்த எதிரொலிப்பு நாடு முழுவதிலும் பரவியுள்ளது. இதனால்தான் பல தலைவர்கள் தேர்தலிலேயே போட்டியிடாமலே ஒதுங்கியிருக்கின்றனர். மிஞ்சியோர் தேர்தல் மூலமாக ஓரங்கட்டப்படுவர். தமிழ்ப்பரப்பிலும் NPP யின் தாக்கத்தை உணர முடிகிறது. மாவை சேனாதிராஜா, விக்னேஸ்வரன் போன்றோர் ஒதுங்கியதும் இந்தத் தாக்கத்தினால்தான். இப்போது தமிழ்த்தேசியக் கட்சிகளே NPP யைக் கண்டு அஞ்சுகின்றன. நிச்சயமாக பொதுத் தேர்தலில் இதனுடைய பிரதிபலிப்பைக் காணலாம். அடுத்த வரப்போகிற மாகாணசபை, உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் எப்படியான தெரிவை மக்கள் செய்யப்போகிறார்கள்? என்பதே இலங்கையின் – NPP யின் – அனுரவின் வெற்றி – தோல்வியை முழுதாகத் தீர்மானிக்கும். https://arangamnews.com/?p=11327
-
சங்கு சின்னமும் அரசியலில் அறமும்!
வாட்ஸப் குழுமம் ஒன்றில் எனது தாயக நண்பனுக்கும் அரியத்தாருக்கும் நடந்த உரையாடலில் இருந்து.. அரியம் வீட்டுக்கு புள்ளடி இடு என்று போட்ட பதிவு.. நண்பன்: *வீட்டுக்கு புள்ளடி இடு* என்று வந்திருக்க வேண்டுமா *வீட்டுக்கு புள்ளடி இடாதே* என்று வந்திருக்க வேண்டுமா. தயவுசெய்து சரியாக சொல்லுங்கள். உங்களை நம்பி நாங்கள் சங்கு சின்னத்துக்கு ஊதினோம். இப்ப சங்குக்கு ஊதுறதா வீட்டுக்கு ஊதுறதா? அரியம்: சங்கு சின்னம் ஜனாதிபதி தமிழ் பொதுவேட்பாளருக்காக நான் எடுத்த சின்னம்.. அதை பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பாவிப்பதற்கு நான் கொடுக்கவும் இல்லை.. என்னிடம் இருந்து அவர்கள் பெறவும் இல்லை.. சின்னத்தை கொடுத்தது தேர்தல் ஆணைக்குழு.. எனவே நான் ஜனாதிபதி தேர்தலுக்காக சுயேட்சை சின்னமாக பாவித்ததை அரசியல் கட்சி ஒன்று தன்னிச்சையாக பெற்றதால் அதை நான் ஆதரிக்கவேண்டும் என்று இல்லை.. அதனை பற்றி எனக்கு விரல் நீட்ட எவருக்கும் உரிமை இல்லை..! புரிந்தால் நல்லது ஐயா.. ! நண்பன்: நன்றி. நல்லது. ஆனால் பாரம்பரியமாக தமிழரசு கட்சியிலோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலோ இருந்தீர்கள் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்பது நியாயமானதா?. பொது சின்னத்தில் போட்டியிட்ட நீங்கள் ஏன் எல்லோரும் ஒன்று படுத்துவதற்கு ஒரு முயற்சியை செய்யக்கூடாது? அரியம்: இதை கேட்கவேண்டியது பொதுகட்டமைப்பு என்ற அமைப்பு பிரமுகர்களிடமே.. நான் பொதுக்கட்டமைப்பு உறுப்பினரும் இல்லை, அந்த ஏழுகட்சி அங்கத்தவனும் இல்லை. நான் தமிழரசுகட்சி உறுப்பினர் மட்டுமே.. ஒரு கொள்கையின் அடிப்படையில் பலருடைய அன்பு கட்டளைகளை மதித்து ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக களம் இறங்கி அந்த தேர்தல் முடிவு அறிவித்ததன் (22/09/2024) பின்னர் எனது பணி நிறைவடைந்துவிட்டது.. அந்த 83, சமூக அமைப்புகள் 07, தமிழ்தேசிய கட்சிகள் செய்த ஒப்பந்தம், பேசிய விடயங்கள் என்பன தொடர்பாக எனக்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.. இன்னொரு நண்பன்: இது ஒரு நிறைவான பதிலாகத்தெரியவில்லை. பின்னர் அரியம் தனது நம்பரைக் கொடுத்து அதற்கு கோல் எடுத்தால் நிறைவான பதிலைத் தருவதாகச் சொன்னார்! எனது அப்பாவின் பேச்சுவழக்கில் அரியம் ஒரு உலக்கை அல்லது ஒரு போடுதடி (அது என்ன சாமான் என்று அப்பா விளக்கம் தரவில்லை! அவர் இருக்கும்போது நான் கேட்கவும் இல்லை)
-
7cfa931f-37c4-4527-9c29-8faff9b78c3b.jpeg
From the album: கிருபன்
-
ஜனாதிபதி தேர்தலில் மக்கள் புகட்டிய பாடத்தினால் பாராளுமன்ற தேர்தலில் இருந்து ஒதுங்கிய பெருவாரியான அரசியல்வாதிகள்
ஜனாதிபதி தேர்தலில் மக்கள் புகட்டிய பாடத்தினால் பாராளுமன்ற தேர்தலில் இருந்து ஒதுங்கிய பெருவாரியான அரசியல்வாதிகள் October 13, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — நாட்டின் நலன்களில் உண்மையான அக்கறை கொண்டவர்களையும் பொதுவாழ்வில் ஊழல் முறைகேடுகளுக்கு இடமளிக்காமல் தூய்மையைப் பேணவேண்டும் என்ற குறிக்கோளைக் கொண்டவர்களையும் தங்களது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யவேண்டும் என்று முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு மக்கள் மத்தியில் அக்கறை அதிகரித்திருக்கும் ஒரு நேரத்தில் இந்தத் தடவை பாராளுமன்ற தேர்தல் நடைபெறவிருப்பது முக்கியமான ஒரு மாற்றமாகும். தவறான ஆட்சி முறையையும் ஊழல் முறைகேடுகளையும் ஒழித்து புதியதொரு அரசியல் கலாசாரத்தை தோற்றுவிக்கப்போவதாக வாக்குறுதி அளித்து ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று அதிகாரத்துக்கு வந்திருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்கவிடம் மக்கள் பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கிறார்கள். பாரம்பரிய அரசியல் அதிகார வர்க்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்த பழைய பிரதான அரசியல் கட்சிகளை நிராகரித்து எளிமையான குடும்பப் பின்னணியைக் கொண்ட ஒரு இடதுசாரி இயக்கத் தலைவரை நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவிக்குக் கொண்டு வந்ததன் மூலமாக மக்கள் வெளிக்காட்டிய மாற்றத்துக்கான வேட்கையை உரியமுறையில் புரிந்துகொண்டு தனது நிருவாகத்தை நடத்தவேண்டிய பாரிய பொறுப்பை ஜனாதிபதி திசாநாயக்க கொண்டிருக்கிறார். அவருக்கு முன்னால் உள்ள சவால்கள் மிகவும் பாரதூரமானவை. பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு மகத்தான வெற்றியைத் தருவதன் மூலமாக உறுதியான அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு மக்கள் ஒத்துழைப்பைத் தரவேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். பதவிக்கு வந்த பின்னரான மூன்று வாரங்களில் அவரது அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் ஊழலற்ற நிருவாகம் ஒன்றை நடத்துவதில் அவருக்கு இருக்கும் உறுதிப்பாட்டை வெளிக்காட்டுவனவாக அமைந்திருக்கின்றன. ஜனாதிபதி தேர்தலில் திசாநாயக்கவுக்கு அளித்த ஆதரவையும் விட கூடுதலான ஆதரவை மக்கள் பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வழங்குவதற்கு தயாராகிறார்கள் என்பதற்கான அறிகுறிகள் பெருமளவுக்கு தெரிகின்றன. தேசிய மக்கள் சக்திக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்கள் கிடைக்குமா இல்லையா என்ற வாதப் பிரதிவாதங்களும் மூண்டிருக்கிறது. ஜனாதிபதி தேர்தலில் திசாநாயக்கவுக்கும் மற்றைய இரு பிரதான வேட்பாளர்களுக்கும் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் நோக்கும்போது தேசிய மக்கள் சக்திக்கு பாராளுமன்ற தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை கிடைப்பது சாத்தியமில்லை என்று கூறியவர்களும் இருக்கிறார்கள். அதேவேளை, தேசிய மக்கள் சக்திக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்கள் கிடைத்தால் அது ஆபத்தாக அமையும் என்று வேறு சிலர் எச்சரிக்கையும் செய்கிறார்கள். ஆனால், தற்போதைய அரசியல் நிலைவரத்தை நோக்கும்போது தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்குமா இல்லையா என்பது அவர்கள் சகல மாவட்டங்களிலும் நிறுத்தியிருக்கும் வேட்பாளர்களை மக்கள் எவ்வாறு நோக்குகிறார்கள் என்பதிலேயே பெருமளவுக்கு தங்கியிருக்கிறது. கடந்த வெள்ளிக் கிழமையுடன் நியமனப்பத்திரங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் நிறைவடைந்து விட்டன. சிறந்த கல்வியையும் அனுபவத்தையும் கொண்ட ஊழலற்ற வேட்பாளர்களையே சகல தேர்தல் மாவட்டங்களிலும் தாங்கள் நிறுத்தியிருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி. ) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கூறினார். “நாம் களமிறக்கியிருக்கும் வேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள் இதுவரையில் அரசியலில் ஈடுபடாதவர்கள். புதிய பாராளுமன்றம் புதிய முகங்களையும் வித்தியாசமான அணியையும் கொண்டதாக அமையும். அவர்கள் மீது நம்பிக்கை வைக்குமாறு நாட்டு மக்களைக் கேட்டுக் கொள்கிறோம். எமதுவேட்பாளர் பட்டியல்கள் கல்விமான்களையும் தொழில்சார் நிபுணர்களையும் சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்களையும் கொண்டதாக இருக்கின்றது” என்று அவர் மேலும் கூறினார். இதுவரையில் பொதுவெளியில் தெரிந்திராத புதுமுகங்கள் பெரும் எண்ணிக்கையில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருப்பதால் அவர்களுக்கு மக்கள் அமோக ஆதரவை வழங்குவார்களா என்ற கேள்வியும் எழவே செய்கிறது. ஆனால், இதுவரை காலமும் பதவிகளில் இருந்த அரசியல்வாதிகள் மீது மக்கள் கடுமையான வெறுப்படைந்திருக்கும் சூழ்நிலையில், புதியவர்களை பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்வதில் கூடுதல் முனைப்பை அவர்கள் காட்டுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் எனலாம். பொதுவாழ்வைத் தூய்மைப்படுத்தப் போவதாக சூளுரைத்திருக்கும் ஜனாதிபதி திசாநாயக்க மீதான நம்பிக்கையை வெளிக்காட்டும் முறையிலேயே மீண்டும் மக்கள் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். கடந்த காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள் நடத்திய காடைத்தனங்களையும் மக்கள் மனதில் நிச்சயம் வைத்திருப்பார்கள். சபை நடவடிக்கைகளை பார்வையிடுவதற்கு பாடசாலை மாணவர்களை அனுமதிப்பதை சபாநாயகர் இடைநிறுத்திய ஒரு காலகட்டமும் இருந்தது. மதுவுக்கும் போதைப் பொருளுக்கும் அடிமையானவர்கள் பிறகு அவற்றை உற்பத்தி செய்வதையே தொழிலாகக் கொண்டு பெரும்பணம் சம்பாதித்து இறுதியில் பாராளுமன்றத்திற்குள்ளும் வந்துவிட்டார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஒரு தடவை கூறியது நன்றாக நினைவிருக்கிறது. மக்கள் தங்களை நிச்சயம் நிராகரிப்பார்கள் என்ற பயத்தில் பல அரசியல் வாதிகள் இந்த தடவை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தவர்களில் முப்பத்தைந்துக்கும் அதிகமானவர்கள் மீண்டும் போட்டியிட முன்வரவில்லை. அதேவேளை, சிலர் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாகவும் அறிவித்திருக்கிறார்கள். விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி, சம்பிக்க ரணவக்கவின் ஐக்கிய குடியரசு முன்னணி போன்ற கட்சிகள் தேர்தலில் இருந்து முற்றாகவே ஒதுங்கிவிட்டன. வயதுமுதிர்ந்தும் கூட அரசியலில் இருந்து ஓய்வுபெறவிரும்பாத சில அரசியல்வாதிகள் மாத்திரமல்ல, இளைய அரசியல்வாதிகள் சிலரும் கூட தங்களது கட்சிகளின் தேசியப்பட்டியலின் ஊடாக பாராளுமன்றத்துக்கு மீண்டும் வருவதற்கு தீர்மானித்திருக்கிறார்கள். தேசிய மக்கள் சக்தி பெருமளவில் புதிய வேட்பாளர்களை களமிறக்கியதால் ஏனைய அரசியல் கட்சிகளும் அவற்றின் வேட்பாளர்கள் தெரிவில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டன. ஆனால், பழைய பாரம்பரிய கட்சிகளினால் பெருமளவுக்கு புதியவர்களை களமிறக்கக்கூடியதாக இருக்கவில்லை. புதியவர்கள் அந்த கட்சிகளின் சார்பில் போட்டியிடுவதற்கு விருப்பத்தைக் காண்பிக்கவில்லை. அதனால் அந்த கட்சிகளின் வேட்பாளர் பட்டியல்கள் பெருமளவுக்கு பழைய முகங்களால் நிறைந்தவையாகவே இருக்கின்றன. ஊழல் மிகுந்த அரசியல் கலாசாரத்துக்கு எதிராக வாக்களிப்பதற்கு மக்கள் உறுதிபூண்டிருப்பதால் பாராளுமன்ற தேர்தலில் தரம்வாய்ந்த வேட்பாளர்களை களமிறக்காவிட்டால் பிரதான கட்சிகள் மக்களினால் முற்றாக நிராகரிக்கப்பட்டு வரலாறாகிவிடக்கூடிய ஆபத்து இருக்கிறது என்று சிவில் சமூக அமைப்புக்கள் ஏற்கெனவே எச்சரிக்கை செய்திருந்தன. தேர்தல்களில் போட்டியிடுவதற்கு நேர்மையான வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கை மக்களிடமிருந்து இப்போதுதான் வருகிறது என்றில்லை. முன்னரும் மக்கள் அவ்வாறே விரும்பினார்கள். ஆனால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மக்களின் விருப்பத்தை மதிக்கவில்லை. பொதுவாழ்வுக்கு பொருத்தமில்லாதவர்களையும் சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களையும் அவர்கள் திரும்பத் திரும்ப வேட்பாளர்களாக நியமித்து பாராளுமன்றத்தின் தரத்தை குறைத்தார்கள். கொலைக் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலும் சில அரசியல்வாதிகள் கூடுதல் விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவானதை நாம் கண்டிருக்கிறோம். பணபலமும் அடியாள் பலமும் கோலோச்சுகின்ற அரசியலில் பழிபாவத்துக்கு அஞ்சாத அத்தகைய பேர்வழிகள் கட்சிகளின் தலைவர்களுக்கு தேவைப்பட்டார்கள். பாதாள உலகக் கும்பல்களுக்கு அரசியல் உயர்மட்டத்தில் செல்வாக்கு இருப்பதற்கு அதுவே அடிப்படைக் காரணம். நாட்டின் அதியுயர் சட்டவாக்க சபையான பாராளுமன்றத்தில் அண்மைக்காலத்தில் அங்கம் வகித்தவர்களில் பலர் சபையில் நிறைவேற்றப்படுகின்ற சட்டங்களை விளங்கிக்கொள்ள முடியாதவர்களாகவும் பாராளுமன்ற விவாதங்களில் உருப்படியான பங்களிப்பைச் செய்ய இயலாதவர்களாகவும் இருந்தனர். வெறுமனே அதிகாரத்தில் இருந்த ஜனாதிபதிகள் மீதான குருட்டுத்தனமான விசுவாசம் காரணமாகவே சட்டங்களுக்கு ஆதரவளித்தார்கள். கடந்த இரு தசாப்தங்களுக்கும் அதிகமான காலப்பகுதியில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்புச் செய்வதற்கும் அதிகரிப்பதற்கும் என்று மாறிமாறி கொண்டு வரப்பட்ட ஐந்து அரசியலமைப்பு திருத்தங்களையும் மனச்சாட்சியின் உறுத்தலின்றி ஆதரித்த பாராளுமன்ற உறுப்பினர்களை நாம் கண்டோம். அவர்களில் சில சட்டமேதைகளும் இருந்தார்கள். நாட்டின் மிகவும் உயர்ந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை வகித்த பிறகு சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக மீண்டும் அரசியலில் ஈடுபடும் ஒரு தரந்தாழ்ந்த நடைமுறையை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 2015 பாராளுமன்ற தேர்தலில் ஆரம்பித்துவைத்தார். அதற்கு பிறகு இன்னொரு முன்னாள் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவும் 2020 தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு வந்தார். தற்போது நாட்டில் ஐந்து முன்னாள் ஜனாதிபதிகள் இருக்கிறார்கள். அவர்களில் திருமதி குமாரதுங்க பதவியில் இருந்து இறங்கிய பிறகு அரசியலில் ஆர்வம் காட்டினாலும் கூட பாராளுமன்றத்துக்கு வருவதற்கு ஒருபோதும் அவர் முயற்சிக்கவில்லை. மற்றையவர்களில் எவருமே இந்த தடவை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. மகிந்த மாத்திரமல்ல, சுமார் இருபது வருடங்களுக்கு பிறகு ராஜபக்ச சகோதரர்களில் எவருமே களத்தில் நிற்காத தேர்தலாகவும் இது அமைகிறது. 2022 மக்கள் கிளர்ச்சிக்கு பிறகு தங்களது வாக்குரிமையை பயன்படுத்துவதற்கு கிடைத்த முதல் வாய்ப்பைப் பயன்படுத்தி மக்கள் நல்ல பாடத்தை புகட்டியதன் காரணமாகவே இந்த முன்னாள் ஜனாதிபதிகள் மீண்டும் பாராளுமன்றத்துக்கு வரும் ஆசையை அடக்கிக் கொண்டார்கள். பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு மேலும் பல அரசியல்வாதிகள் தங்களது ஓய்வை அறிவிப்பார்கள் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலாம். தங்களது எதிர்காலத்தைப் பாழாக்காத ஒரு பாராளுமன்றத்தை தெரிவுசெய்வதில் மக்கள் இந்த தடவை மிகவும் விவேகத்துடன் நடந்துகொள்ளவேண்டும் . தங்களது தவறான ஆட்சிமுறைக்கு அரசியல்வாதிகள் மக்களைக் குறை கூறியதும் உண்டு. மக்கள் கிளர்ச்சியின் உச்சக்கட்டத்தில் 2022 ஜூன் 9 ஆம் திகதி தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்த முன்னாள் நிதியமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தாபகருமான பசில் ராஜபக்ச தங்களுக்கு வாக்களித்து ஆட்சிக்கு கொண்டு வந்த மக்களும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று செய்தியாளர்கள் மகாநாட்டில் கூறியதை எவரும் மறந்திருக்கமாட்டார்கள். தங்களது தவறுகளுக்காக மக்கள் மீது ஊழல்தனமான அரசியல்வாதிகள் பழிசுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றபோதிலும், மீண்டும் மீண்டும் மக்கள் தவறான ஆட்சியாளர்களை தெரிவுசெய்து வந்திருக்கிறார்கள் என்ற உண்மையையும் மறுப்பதற்கில்லை. மக்கள் கிளர்ச்சிக்கு பின்னரான காலப்பகுதியில் மக்களின் அரசியல் சிந்தனைகளில் ஏற்பட்ட மாற்றத்தை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தெளிவாகப் பிரதிபலித்தன. அதன் பின்புலத்தில், மக்கள் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பெருமளவுக்கு விவேகமான முடிவை எடுப்பதற்கான தெளிவான அறிகுறிகள் தென்படுகின்றன. நேர்மையானவர்களை மாத்திரமல்ல, கொள்கை வகுக்கும் செயன்முறைகளில் பயனுறுதியுடைய பங்களிப்புகளை வழங்கக்கூடியதாக பாராளுமன்ற விவகாரங்களில் அறிவைக் கொண்டவர்களையும் மக்கள் தெரிவுசெய்ய வேண்டும். சட்டமூலங்களில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதையோ அல்லது சபையில் விவாதிக்கப்படும் விடயம் என்ன என்பதையோ விளக்கிக்கொள்ள முடியாதவர்களும் மக்கள் பிரதிநிதிகளாக சலுகைகளை அனுபவித்துக்கொண்டு இருந்தார்கள். வெறுமனே உணர்ச்சிவசமான சுலோகங்களுக்கு எடுபடுகின்ற போக்கில் இருந்து மக்கள் முற்றாக விடுபடவேண்டும். பொதுவாழ்வைத் தூய்மைப்படுத்துவதற்கு படிப்படியாக முன்னெடுக்கப்படவேண்டிய பணிகளில் மக்கள் விவேகமான முறையில் தங்கள் பங்களிப்பை வழங்குவதற்கு கிடைத்திருக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக இந்த தடவை பாராளுமன்ற தேர்தல் அமைகிறது. (ஈழநாடு ) https://arangamnews.com/?p=11324
-
திருகோணமலை: புனித பூமி என்ற போர்வையில் ஜனாஸாவை அடக்கம் செய்ய விடாமல் பௌத்த பிக்கு அட்டகாசம்!
திருகோணமலை: புனித பூமி என்ற போர்வையில் ஜனாஸாவை அடக்கம் செய்ய விடாமல் பௌத்த பிக்கு அட்டகாசம்! October 13, 2024 திருகோணமலை ,குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புல்மோட்டை – பொன்மலைக்குடா பகுதியில் ஜனாஸா நல்லடக்கத்திற்கு பௌத்த பிக்கு தடை விதித்ததால் அப்பகுதியில் பதற்றமான நிலை தோன்றியது. குறித்த சம்பவம் இடம்பெற்ற்றுள்ளது. புல்மோட்டை பொன்மலைக்குடா பகுதியில் முஸ்லீம் பெண் ஒருவர் மரணமாகியிருந்த நிலையில் குறித்த ஜனாஸாவை நல்லடக்கம் செய்வதற்காக குறித்த பகுதியில் மயானத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த காணியில் ஜனாஸா நல்லடக்கம் செய்வதற்காக குழி தோண்டப்பட்டது. இதன்போது புல்மோட்டை அரிசிமலை விகாரையின் விகாராதிபதி குறித்த காணி “பூஜா பூமி” என புல்மோட்டை காவல்துறை சிலரை அப்பகுதிக்கு அனுப்பி ஜனாஸா நல்லடக்கத்தை தடை செய்திருந்தார். இதனையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழல் தோன்றியது. பின்னர் குறித்த விடயம் பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து குறித்த 2 ஏக்கர் காணியானது மயானத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள காணி எனவும் குறித்த பகுதியில் ஜனாஸாவை நல்லடக்கம் செய்யுமாறு பிரதேச செயலாளர் தெரிவித்ததையடுத்து குறித்த பகுதியில் இருந்து காவல்துறையினர் வெளியேற்றப்பட்டு அப்பகுதியில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது. குறித்த பகுதியை நீண்டகாலமாக மையவாடியாக தாம் பயன்படுத்தி வருவதாகவும் இதில் பல ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த பகுதியில் உள்ள மக்களுடைய காணிகளை பூஜா பூமி என்றுகூறி அரிசிமலை விகாராதிபதி அபகரித்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். https://www.ilakku.org/திருகோணமலை-புனித-பூமி-என/