Jump to content

புங்கையூரன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    13561
  • Joined

  • Days Won

    74

Everything posted by புங்கையூரன்

  1. இயற்கையும் தன்னாலான வரை போராடுது? இயலாமல் போனதும் போராட்ட முறையை மாத்திப் பாக்குது! அது தான் கொரோனாவைச் சொன்னேன்!😄 இன்னொரு திரியில் சொல்லப்படுகின்றது...இன்னும் 24 வகை , ஒரு குறுகிய நிலப்பரப்புக்குள் கண்டு பிடிக்கப் பட்டிருக்காம்! ம்ம்...இயற்கையிடம்...இன்னும் பல ஆயுதங்கள் கை வசம் இருக்குது!🥱
  2. பூவாக இருக்கும் வரை தான், அவள் ஒரு பெண்ணாக இருப்பாள்...! புயலாக மாறும் போது, பெண்மை அவளிடமிருந்து விடை பெற்று விடும்...! அர்த்த நாரீஸ்வரம்.....அது தான் முழு உலகத்துக்கும் நல்லது! அது சரி....அமெரிக்க உப ஜனாதிபதி கமலா Harris அவர்களின் காரியாலயத்தில் ஒரு ஆண் கூட இல்லையாமே? இது செருக்கு இல்லையா? இது ஒரு ஆணின் காரியாலத்தில்,நடந்திருந்தால் அவர் என்ன பாடு படுத்தப் பட்டிருப்பார்? இருந்தாலும்...ஆண்கள் மனது பெரிய மனது தான்...! கவிதை....அழகு..!
  3. வணக்கம், விசுகர்! பழையதை நினைப்பது தான் இனி எமது வாழ்வில் வசந்தம்! அப்படியெல்லாம் இல்லை என்று தான் நினைக்கிறேன்! எனது கருத்துப் படி வாழ்வு என்பது அந்த நிமிடத்தில் வாழப்பட வேண்டும்! நாளை..நாளை என்று பின்போட்டுக்கொண்டு போனால், ஒரு நாளும் அந்த நாளை வரப்போவதில்லை! இதை உங்கள் வீட்டுக்குக்கிட்ட வசித்த ஆசிரியை ஒருவர் தான் எனக்குக் கூறி விளங்கப் படுத்தினார்! அவர் இங்கு விடுமுறையில் வந்திருந்த போது, பல இடங்களுக்கு அழைத்துக் கொண்டு சென்றேன்! பணமிருக்கின்றது, வசதியுமிருக்கின்றது. எனினும் உடம்பில் அதை அனுபவிக்கும் வலுவில்லையே தம்பி..! எதையும் உடம்பில் வலுவிருக்கும் போதே அனுபவித்து விட வேண்டும்! வரவுக்கும் கருத்துக்கும் நன்றி, விசுகர்! நன்றி....நிலாக்கா! உடனுக்குடன் பதிலெழுதத் தான் முயற்சிக்கிறேன்! நேரம் வெகு விரைவாக ஓடி விடுகின்றது! வணக்கம் திரு. சு.ப. சோமசுந்தரம்! நேரம் கிடைக்கின்ற போதெல்லாம் தொடர எண்ணியிருக்கின்றேன்! மிக்க நன்றி..! நன்றி...பசுவூர்க்கோபி. தொடருகின்றேன்! வணக்கம், குமாரசாமி அண்ணை! தொடருகின்றேன். நன்றி..!
  4. காசும் போச்சுது….கையிலையிருந்த சுறாவும் போச்சுது…! கண்களில் கண்ணீர் முட்டிய படியே...கரையிலிருந்து சிரிப்பு வந்த திசையை நோக்கிச் சந்திரன் திரும்பவே ...அந்தச் சிரிப்புக்குரியவள் அங்கே நின்று கொண்டிருந்தாள்! மீனவர்களுக்கேயுரிய கொஞ்சம் பரட்டையான தலை மயிர்! நீல நிறம் கொஞ்சம் கலந்த கண்கள்! வெளிர் நிறம்! அந்தக் கண்களில் ஒரு குறும்பு..! வீட்டை விருந்தாளிகள் வந்திருக்கினம் போல கிடக்குது! வெறும் கையோட போகப் போறீங்களோ? விருந்தினர் வீட்டுக்கு வந்தது அவளுக்கு எப்படித் தெரிந்தது என்று சந்திரன் ஆச்சரியப்பட வேண்டியே இருக்கவில்லை! நெடுந்தீவில் அந்தக் காலத்திலிருந்தது ஒரேயொரு இ.போ.ச பஸ் மட்டும் தான், மாவலித் துறைமுகத்திலிருந்து குருக்கள் மடம் வரைக்கும் ஓடுவதுண்டு! யாராவது தூரத்தில் ஓடி வருவதைக் கண்டால், அவர் பஸ்ஸுக்கு வரும் வரைக்கும் அந்த பஸ் காத்திருக்கும்! அதே போலவே குறிகாட்டுவான் போகும் வள்ளமும் பஸ்ஸைக் காணும் வரை காத்திருக்கும்! அதனால் ஊருக்குப் புதிதாக யார் வந்தாலும் அது ஊருக்கே தெரிந்து விடுவதில் ஆச்சரியம் எதுவும் இருப்பதில்லை! சரி...இப்ப என்ன செய்யப் போறீங்கள் என்று கூறியவள் கடலுக்குள் மெல்ல இறங்கினாள்! தண்ணீர் இடுப்பளவில் வரும் வரைக்கும் நடந்து போனவள்...திடீரெனத் தண்ணீருக்குள் புதைந்து போனாள்! செத்தல் தேங்காய்கள் இரண்டைக் கட்டிக்கொண்டு கரையில் நீந்துவதுடன் அவனது நீந்தல் அறிவு மட்டுப் பட்டிருந்தது! கண்களை அகல விரித்த படி ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்களில்...அவள் மீண்டும் தண்ணீருக்கு மேலே வருவது தெரிந்தது! பின்னர் நடந்து கரைக்கு வந்தவளின் கைகளில் ஒரு பெரிய கயல் மீன் இருந்தது! கயல் மீனின் பிடரிப்பக்கம் கறுப்பாக இருக்குமென்ற வரையில்..அவனுக்குத் தெரிந்திருந்தது! எதுவும் பேசாமலே...கண்களில் மட்டும் நன்றியைக் காட்டிய படியே மீனை வாங்கிக் கொண்டாள்! கோடாலியைத் தொலைத்து விட்டுக் கவலையுடன் குளத்துக் கரையில் குந்திக்கு கொண்டிருந்த குடியானவன் முன்பு தோன்றிய தேவதையின் கதையின் நினைவு வந்தது! எவரோ போட்டு வைத்த களங்கண்டிப் பட்டியிலிருந்து...அந்த மீனை அவள் கள்ளமாகக் களட்டிக் கொண்டு வந்திருக்கிறாள் என்று அப்போது அவனுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை! அதன் பின்னர் அவளைக் காணும் போதெல்லாம் ...அவனுக்குள் ஒரு எதிர்பாராத உணர்வு ஒன்று தோன்றுவது உண்டு! எல்லோரும் அவளைப் பிலோ என்று கூப்பிடுவதால்..அவனும் அவ்வாறே அவளைக் கூப்பிடுவான்! அடிக்கடி ‘பிலோவைக் ’ காணும் சந்தர்ப்பங்களை வேண்டுமென்றே அவன் உருவாக்கிக் கொள்வான்! அப்படியான சந்திப்பு ஒன்றின் போது உனது கண்கள் ஏன் நீலமாக இருக்கின்றன எனச் சந்திரன் கேட்கவே, உண்மையிலேயே நீங்கள் ஒரு அப்பாவி தான் என்று கூறியவள் ஒரு நாட்டுப் பாடலொன்றைப் பதிலாகத் தந்தாள்! என்ன பிடிக்கிறாய் அந்தோனி எலி பிடிக்கிறேன் சிஞ்ஞோரே பொத்திப் பொத்திப் புடி அந்தோனி பூறிக் கொண்டோடிற்று சிஞ்ஞோரே அப்போது அவனுக்கு...அந்தப் பாடலின் கருத்துப் புரியவேயில்லை! அது புரியும் காலத்தில் அவள் அருகில் இருக்கவில்லை!! ஒரு நாள் அருகிலிருந்த தேவாலயத்தில் அவள் பிரார்த்தனையில் இருந்தாள்! சந்திரனும் கண்களை மூடிப் பிரார்த்தித்தான்! தேவாலயங்களில் எப்போதுமே ஒரு அமைதி குடி கொண்டபடி இருப்பதால், அது ஒரு பொதுவான சந்திப்பிடமாக அமைந்தது! கடவுளிடம் என்ன வேண்டிக்கொண்டாய் என அவள் கேட்டாள்! வலசைப் பறவைகளைப் போல எனக்கு இறக்கைகள் வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டேன்! நீ என்ன கேட்டாய்? மீனைப் போல...பூவல்கள் வேண்டுமென்று கேட்டிருப்பாய் என்றான்! இல்லையே...நீ நல்லாயிருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்! நீ நல்லாயிருந்தால் தானே...நான் நல்லாயிருக்க முடியும் என்று அவள் கூறிய போது தான் அவர்களது நட்பு எவ்வளவு தூரம் ஆழமாகி விட்டது என்று அவனுக்குப் புரிந்தது! அதெல்லாம் சரி….எதற்காக வலசைப் பறவைகளைப் போல நீ வலசை போக வேண்டும்? அந்தப் பறவைகள் வாழுகின்ற இடத்தில்...இரவுகள் மிகவும் நீளமானவை! பகல் பொழுதுகள் மிகவும் குறைந்தவை! பனிக்காலம் அதிகம்! கோடை காலம் குறைவு! அதனால் அவை வலசை போக வேண்டியது காலத்தின் கட்டாயம்! வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரும் பறவைகள்…..தென்னிந்தியாவின் வேடந்தாங்கல் சரணாலயம் நிரம்பிய பின்னர்...அவற்றின் கண்களில் அடுத்த தெரிவு நெடுந்தீவு தான்! அதனால் அங்கு வாழும் மக்களின் பேச்சு வழக்கில்..வலசை போகும் பறவைகள் உதாரணமாக அடிக்கடி வருவதுண்டு! தம்பி...தோசைக்குப் போட்டிருக்கிறன்...கொண்டு வரட்டே? அந்தப் பெரியவரின் குரல் அவனது சிந்தனையை மீண்டும் பூமிக்கு கொண்டு வந்தது! சரி...ஐயா ..என்று கூறியவன் பிலோமினா அன்று கூறியது எவ்வளவு உண்மை என்று சிந்தித்தான்! நான் எதற்காக வெளி நாடு போனேன்? இன்று வரையில் அந்தக் கேள்விக்கான பதில் அவனுக்கு கிடைக்கவேயில்லை! எல்லோரும் போகின்றார்களே என்ற ஒரு மந்தை மனநிலையில் தான் சந்திரன் அந்த முடிவை எடுத்திருக்க வேண்டும்! தோசையைக் சாப்பிட்டு விட்டுச் சைக்கிளை எடுத்துக் கொண்டு வீதியில் இறங்கியவன் கொஞ்ச நேரம் காற்றை நன்றாக உள்ளிளுத்து..வெளியே விட்ட படியே சைக்கிளை மிதித்தான்! நீண்ட நாட்களாக ஓடாததால்...கிட்டத் தட்ட ஒரு நீராவி எஞ்சினைப் போலவே, அவனது மூச்சுச் சத்தம் அவனுக்குக் கேட்டது! கொஞ்சம் களைத்துப் போனவன் கண்களில் ஒரு பெட்டிக்கடை தெரிந்தது! சைக்கிளை நிறுத்தி விட்டுக் கடையில் நின்ற சிறுமியிடம் ஒரு சோடா வாங்கிக் குடித்தவன் சிறுமியிடம் காசைக் கொடுக்கக் காசை வாங்கிய சிறுமி மெத்தப் பெரிய உபகாரம் என்றாள்! வெள்ளைக்காரர் கடைகளில் காசு கொடுக்கும் போது அனேகமாகத் தாங்க் யூ என்று சொல்லுவார்கள்! அதைத் தான் அந்தச் சிறுமியும் சொல்லுகின்றாள்! இந்த வழக்கம் ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்திலும் இருந்திருக்குமா? இப்போதெல்லாம் சாமான் ஏதாவது வாங்கினால், ஒரு இடமும் நன்றி கூடச் சொல்வதில்லையே! தொலைந்து போகின்ற நல்ல பழக்கங்களில் இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டியது தான் என நினைத்துக் கொண்டான்! எங்கேயோ நிறையக் கிளைகள் விட்ட பனை மரம் ஒன்று நின்றது நினைவிலிருந்தது!! இப்போது அதனைக் காணவில்லை! மகா வித்தியாலயத்தை அண்மித்ததும் அவனது பழைய நினைவுகள் மீண்டும் நினைவுக்கு வந்தன! பிலோமினாவின் வீட்டை அண்மிக்கும் போது, முன்பு கிடுகுகளினால் மேயப் பட்டிருந்த அந்த வீடு, இப்போது ஒரு சின்ன ஒட்டு வீடாக மாறியிருந்ததைக் கண்டு அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது! விறாந்தையில் ஒரு வயசானவர் ஒருவர், சாய் மனைக்கதிரையில் சாய்ந்த படியே, வீரகேசரி வாசித்துக் கொண்டிருந்தார்! தூரத்தில் வரும்போதே அவரை அடையாளம் கண்டு கொண்டவன், சைக்கிளைக் கொண்டு போய்ப் பகிர் வேலியில் சாத்தி வைத்தான்! கண்ணாடியைக் கழட்டியவர் தலையை நிமிர்த்திச் சந்திரனைப் பார்த்தார்! ஆச்சரியத்துடன், தம்பி இண்டைக்குக் காலமையிலையிருந்து இந்தக் காகம் விடாமல் கத்திய படியேயிருந்தது! இண்டைக்கு யாரோ வரப் போகினம் எண்டு எனக்கு அப்பவே தெரியும் என்றவர் தனது இரு கரங்களாலும் அவனைக் கட்டிப் பிடித்துத் தழுவினார்! மிகவும் உணர்ச்சி வசப்பட்டவராக அவர் காணப்பட்டார்! சந்திரனும் தான் கொண்டு வந்த சூட் ஒன்றை அவரிடம் கொடுக்கத் தம்பி...இதைப் போட்டுக் கொண்டு நான் எங்க போறது என்று ஆதங்கப் பட்டார்! ஏன், ஞாயிற்றுக் கிழமைகளில் சேர்ச்சுக்குப் போறதில்லையோ எண்டு கேட்க...அதெல்லாம் முந்திப் போல இல்லை மகன் என்று கூறினார்! அவர் எப்போதுமே சந்திரனை மகன் என்று தான் அழைப்பார்! இப்ப கடலுக்குப் போறதில்லையோ என்று சந்திரன் கேட்க ' இல்லையப்பன், கண்டறியாத சரள வாதம் ஒரு காலில வந்த பிறகு தண்ணிக்குள்ள கன நேரம் நிக்கேலாது! வலது கால் விரல்களில மரத்துப் போன மாதிரி ஒரு விதமான உணர்ச்சியும் இருக்காது! அந்தக் காலத்தில்..அவர் திருக்கைகளைக் கருவாட்டுக்காகக் கீறி எறியும் அழகு இப்போதும் கண் முன்னே தெரிந்தது! பருந்துகள் வானத்தில் வட்டமிட்ட படி...கடலுக்குள் வீசியெறியப் படும் திருக்கைக் குடல்களைத் தூக்கிக் கொண்டு போவதற்காக வட்டம் போட்டுப் போட்டுக் கீழே இறங்கி வருவது, ஒரு சர்வதேச விமான நிலையத்தில் அடிக்கடி விமானங்கள் வந்திறங்குவது போலவே இருப்பதால், சந்திரனும், பிலோமினாவும் அதை எப்போதும் ரசிப்பது உண்டு! அத்துடன் அவளைத் தான் கருவாட்டுக்குக் காவலாக விட்டுப் போவதால் கிடைக்கும் தனிமையையும் சந்திரன் விரும்புவதுண்டு! அங்கு வரும் மீனவர்களின் வலைகளில் சில வேளைகளில் பெரிய சிங்கி றால்கள் சிக்குவதுண்டு! அவ்வாறு கிடைப்பவகளில் பெரிதானவைகளைத் தெரிந்து பிலோவின் அப்பா அவனிடம் கொடுப்பதுமுண்டு! இதை யாழ்ப்பாணம் கொண்டு போனால் நிறையக் காசு வருமே என்று சந்திரன் சில தடவைகளில் அவரிடம் சொல்லும் போது,மகன் இதை யாழ்ப்பாணம் கொண்டு போற காசு இதன் விலையை விடக் கூடவாக இருக்கும் என்று கூறுவதுண்டு! எதுவோ ஒரு பெரிய பொருளாதாரத் தத்துவம் ஒன்றைக் கூறி விட்டது போல, அவரது முகத்தில் ஒரு சிரிப்பொன்று எப்போதும் வந்து போகும்! கருவாடு காய விடும் போது...கொஞ்சம் வெயில் ஏறியதும், கடற்கரை கொஞ்சம் வெறுமையாகத் தொடங்கும்! காய்கின்ற கருவாடுகளை காவலுக்கு நிற்கும் நாய்கள் பார்த்துக் கொள்ள சந்திரனும், பிலோமினாவும் எதிர்பார்க்கும் தனிமை கொஞ்சம் கிடைக்கும்! இன்னும் வரும்....!
  5. அருமையான ஒரு சிந்தனையைச் சீண்டிப் பார்க்கும் ஒரு கவிதை! புத்த பிக்குகள் காலா காலமாகக் கட்டிக் காத்த இலங்கை என்னும் தேசத்தில் கற்பு...மன்னிக்க வேண்டும் அதன் இறைமையும் தன்னாதிக்கமும் நமது கண்ணின் முன்னாலேயே காற்றில் பறக்கின்றது! இன்று சிங்களத்தின் தேசீய கொடி, நாளை புத்த பிரானின் திருவுருவம் அடுத்தவர்களின் காலில் மிதி படும் போது, பொத்திக் கொண்டு இருக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு உள்ளது! இராவணனின் மன நிலையை ஒப்பிடுவதற்கு வார்த்தைகளைத் தேடிய கம்பன், கண்டு பிடித்த ஒப்பீடு இது தான்! கடன் பட்டார் நெஞ்சம் போலக், கலங்கினான் இலங்கை வேந்தன்!
  6. போராட்டம் பற்றிய புலம் பெயர்ந்தவர்களின் கருத்துக்கும், போர்க்களத்தில் நேரடியாக நின்றவர்கள் கருத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன! எமது மாணவப் பருவக் காலங்களில்...நாம் தனி நாடு கோரிப் போராடுவது சாத்தியாமனதா, னாம் தனியாகப் போகும் சந்தர்ப்பம் ஏற்படும் போது எம்மால் பொருளதார ரீதியில் தாக்குப் பிடிக்க முடியுமா, எமது சிறிய நாட்டை எத்தனை உலக நாடுகள் அங்கீகரிக்கக் கூடும், இந்திய தேசத்திந் நிலைப்பாடு எவ்வாறு இருக்கும் என்று பல கேள்விகளும் பதில்களும் பொதுவான சந்திப்புக்களில் எப்போதுமே அலசப் பட்டுக் கொண்டுமிருக்கும்! அந்தக் காலத்தில் பி.பி.சி போன்ற செய்திகளில் ஏதாவது ஒரு செய்தி வந்தாலே, அது மிக முக்கிய செய்தியாகவும், சர்வ தேச அளவில்..எமதினத்தின் சிறு வெற்றியாகவும் பார்க்கப் பட்டது! நீங்கள் நம்பினால் நம்புங்கள்...மட்டக்களப்பான், யாழ்ப்பாணத்தான் என்ற பேதமானது எனக்குத் தெரிந்து அப்போது இருந்தது இல்லை! அப்போதைய விடுதி கல்லூரி நண்பர்களுடன் ஒரே தட்டில் சாப்பிட்டும், ஒரே கட்டிலில் படுத்து உறங்கியும் உள்ளோம் என்பதை,இப்போது வெளிவரும் கருத்துக்களைப் பார்த்து நம்ப முடியவில்லை! ஆக மட்டக்களப்பு ஆக்கள் மந்திரம் போட்டுப் பாய்களில் ஒட்ட வைத்து விடுவார்கள் என்று பகிடியாகக் கூறுவார்கள்! இதன் உண்மையான கருத்தானது மட்டக்களப்பு மான் வளமும், மீன் வளமும் நிறைந்த மண்! மட்டக்களப்புப் பெண்கள் கொஞ்சம் குளுமையாக இருப்பார்கள்! அதனால் மட்டக்களப்பு மாவட்டத்துக்குத் தொழிலின் நிமித்தமாகச் செல்லும் யாழ் இளைஞர்கள் அங்கேயே திருமணம் செய்து செட்டிலாகி விடுவதால்,அந்தப் பாயோடு ஒட்ட வைக்கும் சொல்லடை ஏற்பட்டதாக மட்டக்களப்பு நண்பனே என்னிடம் விளங்கப் படுத்தியிருக்கிறான்! உங்கள் கதையின் ஆரம்பத்தில்....தமிழர்களைப் பற்றி நீங்கள் கூறிய கருத்துக்கள் உண்மையானவை தான் எனினும் அதற்கும் பின்னணனியான காரணங்கள் உண்டு தான்! ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் பரந்திருந்த ஒரு இனம், நகரமைப்பு, கட்டிடக்கலை, யோகக் கலை, பரதக் கலை, வானியல் சாத்திரம் போன்ற துறைகளில் அதிகமான நிபுணத்துவம் கொண்டு வாழ்ந்த ஒரு இனம் எந்தத் தனித்துவமான மதத்தையும் தனது மதமாக ஏற்றுக்கொள்ளாது ஒரு சமாதானமான வாழ்வை வாழ்ந்திருந்தது! சமாதனமே நீண்ட காலங்கள் நிலவியதால்...போருக்கான ஒரு பெரும்படையையோ, பெரும் ஆயுதங்களையோ அது தன்னிடம் கொண்டிருக்கவில்லை! பெரிதாக எதிரிகளும் பெரிதாக இருந்திருக்க நியாயமில்லை! வட திசையிலிருந்து பட்டுப் பாதை வழியாக முதலில் உள் நுழைந்தவர்களால் , அந்த இனக்குழுமம் ஓரளவுக்கு அழிக்கப் பட்டதுடன் தெற்கு நோக்கிய அதன் புலம் பெயர்வும் ஆரம்பித்தது! ஓட,ஓடத் துரத்தப் பட்ட அந்த இனம் ஓட இடமில்லாமல்.....கடலணை மூலம் இலங்கை வந்து சேர்ந்து ஒரு வரண்ட பூமியில் வாழத் துவங்கியது! அதனிடம் வேறு என்ன குணாதிசங்களை எதிர் பார்க்கலாம்! உங்கள் கதையில் ஒரு வரலாறே பொதிந்து போய் இருந்ததால் ..சிறியதாக நான் எழுத நினைத்த கருத்து ஒரு கதயாக நீண்டு போனது! நன்றி...!
  7. உண்மை தான் ஈழப்பிரியன்! நான் சொல்லும் பால் சுறா நீங்கள் வசிக்குமிடத்தில் இருக்குமோ தெரியாது! இந்த வகைச் சுறா ஒரு நாளும் மிகப் பெரிதாக வளர மாட்டாது! அவுஸில் புதிதாக வந்த நேரம்..இங்குள்ள கடற்கரைகளில்...சுறா கவனம் என்று எச்சரிக்கை போட்டிருப்பார்கள்! சீரியசாக ஒரு நாளும் எடுப்பதில்லை! பின்னர் ஒரு நாள் ஒரு சுறாவைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது! சூரன் வாகனம் என்று....ஊரில் ஒரு வாகனம் கோவில்களில் கொண்டு திரிவார்களே தெரியுமா? அந்த வாகனத்தின் கண்களைப் போலவே..மிகவும் பெரிதான கண்கள்! அதன் பின்னர் ஆழமான கடல்களில் இறங்குவதே...இல்லை!😊
  8. பொன்னாலைப் பக்கம் கறையான் பிட்டி ஒன்று ஒரு இடமிருந்தது! வீட்டுக்கு வீடு கள்ளுக் கொட்டல்கள் வைத்திருப்பார்கள்! ஒரு பனங் குத்தியில் இருக்க வைத்து...பெரிய சிரட்டைகளில் ஊத்தித் தருவார்கள்! அப்போது ஆட்டிறைச்சி, மீன் பொரியல் போன்றவற்றை கொறிப்பதற்குத் தருவார்கள்! அந்த மீன்கள் நிச்சயம் பொன்னலை மீன்களாகத் தான் இருந்திருக்கும்! நாங்கள் அனேகமாக, யாழ்ப்பாணத்திலிருந்து ஊருக்குப் போகும் போது, பண்ணைப் பாலத்தில் 'போக்குகள்" (தண்ணீர் ஒரு பக்கமிருந்து மற்றப் பக்கம் போகும் குழாய்கள்) மீது குந்தியிருந்து தூண்டில் போட்டுக்கொண்டிருப்பார்கள்! அவர்களிடமும் எல்லா வகையான மீன்களும் கலந்திருக்கும்! நீங்கள் சொன்னது போல...அது ஒரு கனாக் காலம்!
  9. வணக்கம் உடையார்! குழல் புட்டும் சுறா வறையும் யாருக்குத் தான் பிடிக்காது? உங்கட கடல் பக்கம் பால் சுறா கிடைக்குமா? சிட்னிப் பக்கம் பெரிய சுறாவின் சின்னக் குட்டிகளை அதிக விலைக்கு விற்பார்கள்! சில வேளைகளில் ஆசைக்காக வாங்கினாலும்...சுறா உணவுச் சங்கிலியின் அதி உச்சத்தில் உள்ள படியால்...அதிக மேக்கூரி ( இரசம்) இருக்குமெனப் பயமுண்டு..! வரவுக்கும், கருத்துக்கும் நன்றி....!!!
  10. நயினா தீவும் நல்ல ஒரு இடம், தனி! சிலப்பதிகாரத்தில் வரும் மணிபல்லவம் என்னும் பெயருள்ள தீவும் இது தான்! கௌதம புத்தர் நயினாதீவு ஊடாகத் தான்..இலங்கைக்கு வந்தார் என்று...குறிகாட்டுவான் துறையில் எழுதியிருந்தார்கள்! அந்தக் காலத்தில்...இராமர் பாலத்தால் அவர் நடந்து வந்திருக்கும் சாத்தியங்களே அதிகம் உள்ளன! அவரைக் காரில் கொண்டு திரிந்தது போல...இப்போது புத்த பிக்குமார் சிலர் கதை விடுகின்றார்கள்! யாழ், மட்டக்களப்பு இளைஞர்களில் கைகள் குடும்பம் என்னும் கயிறு கொண்டு இறுக்கமாகக் கட்டப்பட்டுள்ளன! கையைக் கொடுத்து அவளைத் தூக்கி விடுவதுடன் கையைக் காட்டி விட வேண்டியது தான்! இப்போது கையைக் காலைக் கொஞ்சம் நீட்ட முடியும் என்று நம்புகின்றேன்!
  11. ஓகே...ஒகே...இப்ப விளங்குது..! இரண்டு கைகள் கறுப்புக் கைகள்....இரண்டு கைகள் வெள்ளைக் கைகள்...! அது தானே சிறியர்?🥶
  12. மிஷேல். ஜேர்மனியில்...லொத்தர் வெண்டான் எண்டு...நான் நினச்சன்! மனுசன் டொலரில காசை....மெசினில போட்டு எண்ணுது! 😆 தொடருங்கோ....சிறியர்!
  13. கதைத் தொடரைக் கொண்டு செல்லும் விதம் அருமை..! மட்டுத் தமிழ் தனித்துவமானது போல உள்ளது! நேரம் கிடைக்கும் மட்டுத் தமிழைப் பற்றிக் கொஞ்சமாவது அறிந்து கொள்ள அவா! தொடருங்கள், தனி...! மகளுக்கு மட்டு மண்ணில் ...ஆனா, ஆவன்னா எழுதிப் பழக்குங்கள்! உங்கள் தட்டச்சுப் பலகையை அடிக்கடி உடைக்க மாட்டாள்! மண்ணில் எழுதி விளையாடிக் கொண்டிருப்பாள்...!😃
  14. தன்னால் எல்லா நேரமும், எல்லா இடத்திலும் இருக்க இயலாது என்பதால் தான் பெண்ணை இறைவன் படைத்தான் என்று கூறுவார்கள்...! வாழ்த்துக்கள்,நிலாக்கா...!
  15. கவிஞனின் கற்பனைக்குக் கரை இருக்கக் கூடாது என்று நம்புவர்களில் நானும் ஒருவன்...! அரும்புகளை ஒப்பிட்ட விதம் அருமை...! மார்பின் மெல்லிய சாய்வுகளில்....நீர்த்துளி தங்கும் போது ...எவ்வாறு இருக்கும் என்ற சிந்தனையிலேயே எனது இன்றைய பொழுது கழியப்போகின்றது...! எனது வீட்டு மாதுளம் மரத்தின்....முதலாவது இலையில்...மெல்லிய மஞ்சள் நிறம் தெரிகின்றது...! மொழியால்...பிறப்பால் ஒரு இனமாகப் பிறந்து....வெவ்வேறு துருவங்களில் வாழ்கின்றோம் என்பதை நினைக்க நம்ப முடியாமல் உள்ளது! இது வளர்ச்சியா...அல்லது இழப்பா என்று முடிவு செய்ய இயலாமல் உள்ளது..! அதே வேளை யாழ் என்னும் பாலம்...எத்தனை பேரை...நூல் அறுந்து போன பட்டங்கள் போல அல்லாது....எவ்வாறு இணைத்து வைத்திருக்கின்றது என்பதையிட்டு மிகவும் பெருமையாக உள்ளது...!
  16. வாசிக்க ஆர்வமாக உள்ளோம்....! எழுதுங்கள், விசுகர்....!
  17. யாயினி...காலத்துக்கு ஏற்ற பதிவு...அதே நேரம் உங்கள் ஆதங்கத்தையும் வெளிப்படுத்துகின்றது....! எமது மனம் சோகமான நிலையில் இருக்கும் போது ...அழுவதற்கு ஒரு தோள் கிடைக்காதா எனத் தேடும் நிலை வரும்போது, உண்மையான நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளும் போது அந்தச் சோகங்கள் கொஞ்சம் குறைவது எனது அனுபவத்தில் நான் படித்தது! மனிதர்களின் செயல்கள்...அவர்களது அப்போதைய மன நிலையையே வெளிப்படுத்தும்! அவர் அப்போது என்ன கொதி மனநிலையில் இருந்தாரோ தெரியாது! மற்றது....மனிதர்கள் எல்லோரும் சமூக விலங்குகளும் இல்லைத் தானே! விதி விலக்குகளும் உண்டு தானே! ஒரு வேளை....மரத்திலிருந்து...நேரே மகிழுந்துக்குள் விழுந்தவராகவும்...அவர் இருக்கக் கூடும்!
  18. நன்றி....காவலூர் கண்மணி..! வட துருவத்தில் பிறந்த துருவக் கரடிக்கு.....மைனஸ் மூன்று....பாகை தானே....கோடை காலம்...! தீவகத்தில் பிறந்தவனுக்குக் கடலின் அலைகள் எழுப்பும் சத்தம் தானே...சங்கீதம்?
  19. இந்த இடத்தில்.....ராசுக் குட்டி, ஒரு கவிஞனாக மாறுகின்றார் போல கிடக்கு..! ஒரு நல்ல படிப்பினைக் கதை...!
  20. இதைத் தான் ....பொன் மாலைப் பொழுது...என்று கூறுவார்கள் போலும்....காவலூரின் கண்மணி..! எனக்கென்னவோ....அணைக்கட்டிலிருக்கும்...கண்ணா மரமாக இருக்கத் தான்...ஆசை...! பொன் மாலைப் பொழுதுகளை மட்டுமல்ல,,,,,,,,,அதி காலைப் பொழுதுகளையும் தரிசித்த படியே....வேர் தடவும் மீன்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்ளலாம்...! கவிதைக்கு நன்றி...!
  21. பூமியில் பிறந்த எல்லா உயிர்களுக்கும்...அவர்கள் பிறந்து வளரும் சூழலுக்கேற்பச் சில ஆசைகளும் ...எதிர் பார்ப்புகளும் இருக்கும்! அவற்றை நோக்கிய பயணம் தானே வாழ்க்கை, சிறியர்? அவற்றை அடைந்த பின்னரும்...ஒரு முழுமையான மனத் திருப்தி ஏற்பட மாட்டாது...! அதை விடவும் புதிய ஆசை ஒன்று தோன்றும்..! காரே இல்லாதவன்....காருக்காக ஏங்குவான்..! பென்ஸ் கார் வைத்திருப்பவன்....வீதியில் போகும் லம்போகினிக்காக ஏங்குவான்! இதையெல்லாம் கடந்தவன்....ஞானியாகின்றான்..! தொடருங்கள்....!
  22. வித்தையைக் கற்றுத் தருவது....பிரச்சனையில்லை,நிழலி! காதலை ஒரு நாளும் சுருக்கக் கூடாது! உடன் படுகின்றேன்! முன்னர் அலைமகள் என்று உறவு யாழில் இருந்தார்...உங்கட கனடாப் பக்கம் என்று தான் நினைவு! அவர் எழுதிய கருத்தொன்று அப்படியே ....மனதில் பதிந்து போய் விட்டது! யாரோ எழுதிய காதல் கதையொன்றுக்கு அவர் எழுதிய கருத்து இது தான்...! குளிர் காலம் வந்து விட்டால்....எல்லோருடைய பழைய காதலிகளும் வரிசையில....வரத் துவங்குவினம்! அந்தக் கருத்துத் தான்....இந்தக் கதையை எழுத உந்து கோலாக இருந்தது....! உங்கள் ஆலோசனைப் படி....விதி விட்ட வழியே நடக்கட்டும் என்று முடிவெடுத்து விட்டேன்! 🥰 வணக்கம்.....நிலாக்கா! உங்களுடைய கருத்தைப் பார்த்த பின்னர்.....கையைக் காலை நீட்டிக் கருத்தெழுதக் கொஞ்சம் பயமாய்க் கிடக்கு!😀 விரிக்கக் கூடிய அளவுக்கு விரிவாக எழுத முயற்சிக்கிறேன்!நன்றியும்...அன்பும்....!
  23. நன்றி.... பசுவூர்க் கோபி..! சந்திரனை உங்களுக்குத் தெரியும் போல உள்ளதா? மிகவும் நல்லது! சந்திரன் அடுத்த முறை...அங்கு வரும்போது உங்களைக் கட்டாயம் சந்திக்கும் படி சொல்லி விடுகின்றேன்...! 😀
  24. ஊரில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும்,…..நெடுந்தீவின் அடிப்படை அடையாளங்கள் இன்னும் மாறாது அப்படியேயிருந்தன ! கற்களால் அடுக்குப்பட்ட பயிர் வேலிகள், எவரோ தாட்டு விட்டுப் கிழங்கு பிடுங்க மறந்து போன பனம் பாத்திகளிலிருந்து முளைத்த பனங்கூடல்கள், மாட்டு வண்டித் தடங்கள் என்பன இன்னும் இருந்தன! முள்ளிவாய்க்காலில் மரணித்துப் போனவர்களில், விகிதாசார அடிப்படையில் பார்த்தால், நெடுந்தீவு தான் அதிக விலை கொடுத்தாக இருக்கும் என்பது சந்திரனின் அனுமானமாக இருந்தது! ஸ்ரீ மாவோ அம்மையார் கொண்டு வந்த மரவள்ளி வளர்க்கும் திட்டத்தினாலும் , முத்தையன்கட்டுப் பிரதேசத்தில் இலவசக் காணி பகிர்ந்தளிப்புத் திட்டத்தினாலும் கவரப்பட்டு அங்கு சென்றவர்களில் பலரும் , அவர்களது சந்ததியினரில் சிலரும் அவர்களுக்குள் அடங்குவர்! குறிப்பாக, இசைப்பிரியா போன்றவர்களின் இழப்பு அவனை மிகவும் பாதித்திருந்தது! தம்பி, இஞ்சையோ நிக்கிறியள் என்று கேட்ட படியே, குறிகாட்டுவானில் வள்ளத்துக்கு வரும்படி கூப்பிட்ட அந்தப் பெரியவர் அருகில் வந்தார்! வந்தவர், எங்க தங்கப் போறீங்கள் தம்பி என்று கேட்டார் ! மகா வித்தியாலயத்துக்குப் பக்கத்தில , எங்கையாவது ஒரு ஹோட்டல்ல நிக்கலாம் எண்டு யோசிக்கிறன்! தம்பி, இப்ப வெளிநாட்டுக் காசு புழக்கத்துக்கு வந்த பிறகு எல்லாம் அவையின்ர ஹோட்டல்களாய்த் தான் இருக்குது! தம்பிக்குக் கனநாள் நிக்கிற பிளானோ? அந்தப் பெரியவரது பேச்சின் சாராம்சம் அவனுக்குள் ஓடி வெளிப்பதற்கு அவனுக்குக் கொஞ்சக் கால அவகாசம் தேவைப் பட்டது! அவையின்ர என்றால்…...ம்ம்ம்….இன்னும் நெடுந்தீவு மாறவேயில்லை என்று தனக்குள் நினைத்துக் கொண்டான்! அது சரி…..இவருக்கு எப்படித் தெரிந்தது , நான் அவையின்ர ஆக்களில் ஒருவன் இல்லையென்று…! அவன் யோசிக்கும் போதே பெரியவர் தொடர்ந்தார்! தம்பி, நெழுவினிப் பிள்ளையார் கோவிலடிக்குப் பக்கத்தில ஒரு வீடு இருக்குது! வீட்டுக்காரர் எல்லாரும் வெளிநாட்டிலை தான் இருக்கினம்! இப்ப வீடு சும்மாதான் கிடக்குது! உங்களுக்கு விருப்பமெண்டால் தாராளமாக அங்கு நிற்கலாம்! வேணுமெண்டால் என்னிட்ட ஒரு மோட்டச் சைக்கிளும் இருக்குது! உங்களுக்குத் தேவையான இடத்தில நான் கொண்டுபோய் இறக்கி விடுவன் என்றும் கூறினார்! சரி பெரியவர், எவ்வளவு காசு எண்டும் பேசுவமே என்று சந்திரன் சொல்லவும், என்னடா தம்பி….மீன் கரைஞ்சா எங்க போகப்போகுது….ஆணத்துக்கை தானே கிடக்கப் போகுது! நீங்களாய்ப் பாத்துத் தாறதைத் தாங்கோவன் எண்டு சொல்லவும் சந்திரனுக்கு கொஞ்சம் உதறலெடுக்கத் தொடங்கியது! ஒரு வேளை பெரியவர் தன்னைப் பற்றி ஏதாவது மணந்து கிணந்து இருப்பாரோ? இருந்தாலும் குறுக்கால வந்த தெய்வத்தையும் திருப்பி அனுப்ப மனம் வரவில்லை! பெரியவரே, நான் நீங்கள் சொல்லுற இடத்தில நிக்கிறன்! ஆனால் ஒரு கொண்டிசன்! எனக்கு உங்கட பழைய சைக்கிள் ஏதாவது இருந்தால் அதைத் தந்தால் போதும்! சாப்பாட்டுக்கு கிட்டடியில கடையள் ஏதாவது இருக்கும் தானே...என்று கேட்கவும்….என்ன தம்பி நீர், நாங்கள் என்னத்துக்கு இருக்கிறம்? நீர் என்ன விருப்பம் எண்டு சொல்லும் , நான் செய்விச்சுத் தாறன் எண்டு சொல்ல சந்திரனும் சம்மதித்தான்! இருந்தாலும் , பெரியவரை ஒரு முறை ரெஸ்ற் பண்ணிப் பார்க்கவேணும் என்று நினைத்தவனாக, ஐயா….ஒருக்கால் ஈச்சங்காட்டுப் பக்கம் போகவேணும், கொண்டு போய் விடுவீங்களோ எண்டு கேட்கவும் , பெரியவர் திடுக்கிட்டவர் போலச் சந்திரனைப் பார்த்தார்! தம்பிக்கு இடங்கள் தெரியுமோ என்று மிகவும் ஆச்சரியமாகக் கேட்கவும்….இவனுக்கு கொஞ்சம் மனதில் நிம்மதி வந்தது! இல்லை ஐயா, எனது நண்பனொருவன் தன்னுடைய பழைய வீடடைப் பார்த்து வரும்படி சொல்லியிருந்தான்! ஈச்சங்காட்டில எவடம்? விளாத்தி மரத்துக்கு கிட்டவாக! சரி, எதுக்கும் இதை வைச்சிருங்கோ எண்டு சொல்லி கொஞ்சக் காசை அவரிடம் கொடுக்க, அவர் என்ன தம்பி இப்பவே எண்டு சொல்லிக் சிரிக்கப் பெரியவருக்கு கடவாய்ப்பற்கள் ஒன்று கூட இல்லை என்பதும் அவனுக்கு நன்றாகத் தெரிந்தது! உடனேயே அங்கே நின்ற பெடியன் ஒருவனைக் கூப்பிட்டுத் தம்பி இந்த ஐயாவைக் கொண்டு போய் ஈச்சங்காட்டிலே இறக்கி விடு என்று கூற…..அவனும் பின்னால் திரும்பிப் பார்த்து விட்டுத் தான் தான் அந்த ஐயா என்று உறுதி படுத்திய பின்னர் மோட்டார் சைக்கிளில் லாவகமாக ஏறி அமர்ந்து கொண்டான்! ஈச்சங்காட்டில் ஒரு ஈச்ச மரங்களையும் இப்போது காணவில்லை! விளாத்தி மரத்தடியில் வீடு இருந்த இடம் வெறிச்சோடிப்போய்க் கிடந்தது! அந்த விளாத்தி மரம் மட்டும் இன்னும் அப்படியே நின்றது! தனது மூதாதைகளின் மூச்சுக்காற்றை இந்த மரமும் சுவாசித்திருக்கும் என்ற நினைவே...அவனுக்கு இதமாக இருந்தது! இங்கு தான் இந்தக் கதையின் கதாநாயகியை அடிக்கடி சந்திரன் இரகசியமாகச் சந்திப்பதுண்டு! இவன் கதைகள் சொல்லும்போது விழிகளை அகல விரித்தபடியே...அவள் கேட்டுக் கொண்டிருப்பாள்! இந்த விளாம்பழங்களை யானை எப்படிச் சாப்பிடும் எண்டு உனக்குத் தெரியுமா? இல்லை என்று அவள் தலையாட்ட ‘ஒரு சின்ன ஓட்டை மட்டும் போட்டுவிட்டு, அதன் உள்ளடையை அப்படியே உறிஞ்சி எடுத்து விடும்! அப்போ விதைகளை என்ன செய்யும்? அதை அப்படியே பழத்துக்குள் விட்டு விடும்! அவள் , அது உனக்கெப்படித் தெரியும்? சாப்பிட்ட பழத்தை யானை ஒருமுறை குலுக்கிப் பார்க்கும்! அப்போது அருகில் நிற்பவர்களுக்குக் கிலுக்கட்டி கிலுக்குவது போல ஒரு சத்தம் கேட்கும்! இதிலிருந்து உனக்கு என்ன தெரிகின்றது? அவளின் பதில் உடனடியாகவே வந்தது! யானை தனது அடுத்த தலைமுறையை மனதில் கொண்டு….விதைகளைச் சாப்பிடாமல் அப்படியே விட்டு விடுகிறது…! அடுத்து வரும் மழைக்கு விளாம்பழத்தின் கோது உடைய விளாத்தி மரங்கள் முளைக்கும்! இப்படியான பதில்கள் தான்...சந்திரனுக்கு அவளிடம் ஒரு விதமான ஈர்ப்பை உருவாக்கியிருக்க வேண்டும்! அவளை முதலில் சந்தித்த சம்பவம் இன்னும் தெளிவாகவே அவனது நினைவில் இருந்தது! வீட்டில் விருந்தினர்கள் வந்திறங்கியிருந்தார்கள்! பொழுது பின்னேரமாகி விட்டிருந்தது! சந்திரனின் தாயார் சந்திரனிடம் கொஞ்சம் காசைக் கொடுத்துத் தம்பி, கடற்கரைக்குப் போய் மீன் ஏதாவது வாங்கிக் கொண்டு வா என்று கூற….அம்மா உங்களுக்கென்ன விசரே, இந்த நேரத்தில கடற்கரையிலே ஒரு வள்ளமும் வராது என்று பின்னடிக்க அம்மாவும், ஆராவது வீச்சு வலைக்காரர் நிப்பாங்கள், போய்ப்பார் என்று சொல்லத் தயக்கத்துடன் கடலுக்குப் போனவனுக்கு ஆச்சரியமாக இருந்தது! அவன் அம்மா சொன்ன மாதிரியே ஒரு வீச்சு வலைக்காரன் நின்று கொண்டிருந்தான்! அவனது இடுப்பில் தொங்கிய பறியும் காற்றில் அசையவில்லை! ம்ம்ம்...பறிக்குள்ள என்னவோ பாரமான சாமான் என்னவோ கிடக்குது! பிரச்சனை என்னவென்றால், அவன் கரைக்கு வரும் வரை பார்த்துக் கொண்டிருந்தால், கரையில் கன சனம் நிண்டு...மீனுக்கு விலையைக் கூட்டிப் போடும்! கடல் கொஞ்சம் வத்தாக இருந்ததால்...மீன் காரனிடம் நடந்தே போக முடிவு செய்தான்! மீன் காரனுக்கு கிட்டப் போனதும் அவனது அதிஸ்ட்டத்தை நினைத்து...தனது முதுகில் தட்டித் தன்னைத் தானே பாராட்டியும் கொண்டான்! ஆம், அந்த மீன் பறிக்குள் ஒரு பால் சுறாவும் இருந்தது! பால் சுறா, அதுவும் ஆண் சுறா எல்லாருக்கும் பிடிக்குமென அவனுக்குத் தெரியும்! பின்னேரமானதால் ….குழல் புட்டும் அவித்து சுறா வறையும் வைக்க அந்த மாதிரி இருக்கும்! விலையும் சரியாக இருக்கவே...வாலைப் பிடித்த படி...அந்தப் பால் சுறாவைத்...தண்ணீருக்குள் விட்ட படி இழுத்துக் கொண்டு கரைக்கு நடந்து வந்தான்! அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன! ,முதலாவது சுறா பழுது படாமல் இருக்கும்! இரண்டாவது…..தமிழர்களுக்கே ,,தனித்துவமான குணமான...ஆற்றையும் கண்பட்டு விடக்கூடாது என்ற ஆதங்கமும் தான்! கரைக்கு ஒரு இருபதடி தூரம் கூட இருக்காது! ‘கிளிக்’ என்றொரு சத்தம் கேட்டது! தண்ணீரில் ஒரு வட்டம் போட்டுவிட்டுப் பால் சுறா, அவைனப் பார்த்துக் கண்ணை ஒரு முறை அடித்து நன்றி சொல்லி விட்டுப் போயே விட்டது! இப்போது அவனிடம் காசுமில்லை! கறிக்குச் சுறாவுமில்லை! கண்ணீரும் கட்டுப்படுத்த முடியாமல்…...வரத் தொடங்கியது! அப்போது ‘கிளுக்” என்று யாரோ கரையில் நின்று சிரிப்பதும் தெளிவாகச் சந்திரனுக்குக் கேட்டது! அடுத்த பகுதியில் தொடரும்….!
  25. சூனா...பானா, உங்கள் மகள் எழுதிய கதைகளை வாசித்துள்ளேன்! இன்று உங்கள் கதையையும் வாசிக்கக் கிடைத்தது! சம்பிரதாயங்களும், சமூக நம்பிக்கைகளும் காலத்திற்கேற்ப மாற வேண்டும்! இல்லா விட்டால், அவையும் காலா வதியாகி விடும்..! ஒருவரது மன மகிழ்ச்சி என்பது பணத்திலோ, பதவி உயர்விலோ தங்கியிருப்பதில்லை என்றே நானும் கருதுகின்றேன்! பிரபல மோட்டார் கார் கம்பனியின் உரிமையாளரான கென்றி போர்ட் என்பவர்...தனது கம்பனியில் தொழில் பார்க்கும் கறுப்பினத்தவஒ ஒருவன்... அவனது மதிய உணவை அருந்தும் போது, அவன் முகத்திலிருக்கும் மகிழ்ச்சியைக் கண்டு தனக்குப் பொறாமை வருவதாக எழுதியுள்ளார்! அவ்வளவுக்கும் அவன் சாப்பிடுவதோ....வெறும் காய்ந்து போன பாண் துண்டுகள் மட்டுமே!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.