Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சைவ சமயம் - வினாவிடை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

.

திருச்சிற்றம்பலம்

முன்னுரை

நமச்சிவாய என்பார் உளரேல் அவர் தம் அச்ச நீங்கித் தவநெறி சார்தலால் அமைத்துக் கொண்டதோர் வாழ்க்கையனாகிலும் இமைத்து நிற்பது சால அரியதே.

உய்வார்கள் உய்யும் வகை:

“வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி. மதித்திடுமின்!” என்று அறைகூவினர் நாவினுக்கு அரசர். இப்பிறவி பாவமானது அல்ல. இது இறைவன் நமக்குக் கொடுத்த பெருங்கொடை. அரியதாகிய இந்த மனிதப் பிறவியை நாம் பயன்படுத்த முதற்கண் நாம் இதன் நோக்கத்தைப் புரிந்து கொள்ளவேண்டும்.

இவ்வுலக வாழ்வு காரணம் இன்றி இறைவனால் ஏற்படுத்தப்பட்டதன்று. இங்கு நமக்குக் கிடைக்கும் நல்லனவும் தீயனவும் யாவையும் காரணம் இன்றி ஏற்படுவதன்று. இறைவன் காரணம் இன்றி பலவிதமான துயரங்கள் நிலவும் இவ்வுலகில் நம்மை வைத்திருந்தால் அவரை நாம் எப்படிக் “கருணை வடிவானவர்” என்று அழைக்க முடியும்?

சைவ நன்னெறி இதற்குத் தகுந்த விடை கூறி நம்மை உய்விக்கிறது. ஆன்மாக்களாகிய நாம் யாராலும் படைக்கப்படவில்லை. (இறைவனால் படைத்தார் எனில், அவர் படைக்காமல் இருந்திருந்தால் நாம் துன்பத்திற்கு ஆளாயிருக்க மாட்டோம். எனவே அவர் செய்தது கருணை உடையவராகச் செய்ததாக இருக்க முடியாது.) தொன்று தொட்டே ஆணவம் என்ற மலம் ஒட்டுண்ணி போல அழுத்த அழுந்தி இருந்தோம். எப்போதும் பேரின்ப மயமாக உள்ள இறைவன் இவ்வாறு மலத்தால் துன்புறும் உயிர்களுக்கு இரங்கி அவை அம்மலத்தின் பற்றை விட்டு இன்பமயமான தன்னைப் பற்றுதல் பொருட்டு உடல், கருவிகள், உலகங்கள் மற்றும் போகங்களைப் படைத்தார். இறைவன் எல்லா வல்லமை¨யும் உடையவர் என்றாலும் அவரால் இன்பத்தை ஊட்ட முடியுமே அன்றி இன்பத்தை நம்மை நுகர வைக்க முடியாது. அந்த இன்பத்தைப் பருகுதலுக்கு நாம் நம்மை ஆயத்தப் படுத்திக் கொள்ளவேண்டும். (இனிப்பினைப் பிறர் தர வல்லவர் எனினும் நாமே அதன் சுவையை உணரவேண்டும். அச்சுவை பிறரால் நமக்குத் தரமுடியாதது.) அவ்வாறு நாம் சிறிது சிறிதாகப் பக்குவப் படுதல் பொருட்டே மேற்கூறிய உடல் முதலானவை படைக்கப்பட்டன. இவை நமக்குத் தண்ணீரில் தத்தளிக்கும் எறும்புக்கு நீட்டிய குச்சி போல இன்பக் கரை அடைய இறைவன் நமக்கு அளித்த பெருங்கொடைகள் ஆகும்.

இறைவன் இத்தகு கருணை செய்த போதும் நாம் அதன் பெருமை உணராது, குச்சியில் ஏறிய எறும்பு கரை சேரக் கருதாது ஆடி மீண்டும் நீரில் விழுவது போல், நாம் செல்ல வேண்டிய நெறி பற்றாது, இவ்வுடலே நாமென்று மயங்கி, வேண்டிக் கொண்டுவந்த தோண்டியைக் கூத்தாடிப் போட்டுடைக்கின்றோம். இம்மயக்கத்தில் பலர் சேரவேண்டிய சிவகதிக்கும் முயல்வதில்லை, இவ்வுலக வாழ்வையும் அழியாத இன்பமாக்கிக் கொள்வதில்லை. இவ்வாறு நாம் எண்ணும் எண்ணங்களே, செய்யும் செயல்களே நல்வினை மற்றும் தீவினைகளாக இறைவனால் நமக்கு ஊட்டப்படுகின்றன. இறைவன் நமக்கு இவ்வினைகளை ஊட்டுவதன் காரணம் தண்டிப்பதல்ல, திருத்துவதே. (தவறுகளை எல்லாம் தண்டித்தால் அவர் எப்படி அருள் நிறைந்தவர் என்பது?) எவ்வாறு ஒரு தாய் தவறு செய்யும் குழந்தையைப் பழி வாங்கும் எண்ணமின்றித் திருத்தும் நோக்கத்தில் மட்டுமே கடிந்து கொள்கின்றாளோ அது போன்றே தாயினும் நல்ல சிவபெருமான் நம்முடைய பெரிய வினைக்கூட்டத்திலிருந்து சிறிது நமக்கு ஊட்டுகிறார்.

இதனை உணர்ந்து நமது உடல் மற்றும் நமக்குக் கிடைத்த எல்லாமும் நமது அன்று, சிவபெருமானுடையன என உணர்ந்து, அவர் நம் மேல் பொழிந்துள்ள கருணையை நினைந்து நினைந்து பெருகுகின்ற அன்பு என்னும் ஒட்டுப் பொருளினால் அவரைப் பற்றிக்கொண்டால் – இன்பமே எந்நாளும்; துன்பமில்லை. நாம் செய்ய வேண்டுவன அவ்வளவே.

“இவ்வாறு இறைவனின் கதிரொளி போன்ற, இருள் கடந்த பெருமையினை அறிந்து, இங்கு காணும் எல்லாவற்றையும் உண்மை உணர்ந்த உறுதியுடையவன், இறைவனின் பல நாமங்களைக் (பெருமைகளை) கூறி வணங்குகிறான். அவ்வாறு அறிபவன் அமுதத்தை இங்கேயே பெற்றவன் ஆகின்றான். வேறு வழியேதும் அறியப்படவில்லை.” - யசுர் வேதம்.

இத்தகு பெருமக்கள் எப்போதும் இன்பமே வடிவான இறைவனின் தொடர்பிலேயே உள்ளதால் பிற துன்பங்கள் அவர்களால் நுகரப்படுவதில்லை. இவ்வுலக வாழ்விலே சிவ மயமாக - இன்ப மயமாகத் திகழ்ந்து, பின்னர் அவ்வின்பம் அடையத் தேவைப்பட்ட உடல் முதலியன வேண்டாது இன்பம் நீங்காத சிவகதி அடைகின்றனர்.

கரும்பு தின்னக் கூலியுமா வேண்டும்? சிவபெருமான் தூர மந்திரம், “நம:சிவாய” என்ற ஐந்தெழுத்தை ஓதி அவர் மேல் அன்புற்று இன்புறுவோம்.

தண்பொழில் சூழ் சண்பையர்கோன் தமிழ்ஞான சம்பந்தன் விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தனுறை வெண்காட்டைப் பண்பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்திவை வல்லார் மண்பொலிய வாழ்ந்தவர் போய் வான் பொலியப் புகுவாரே.

உலகம் முழுமையும் பரவியிருந்த காலம் கடந்த சமயம் சைவமே. எல்லாம் கடந்தவரும் நம்மை உய்விக்கும் ஒளி வடிவானவரும் ஆன இறைவன் மேல் நம் அன்பை ஒருமுகப் படுத்தும் பொருட்டு சுடர்க்குறியாக (இலிங்கம்) இயல்பாக இறைவனைத் தந்தது இச்சைவம். இச்சைவத்தின் அடிப்படைக் கூறுகள் பலவாறாக - எடுப்போர் வண்ணத்திற்கேற்பவும், காலத்தால் திரிந்தும் உலகின் பலபல சமயங்களில் உள்ளதை ஆய்ந்து உணரலாம்.

இவ்வாறு முதன்மையானதும் தூயதுமான சைவத்தில் வழிவழியாக வந்தவர்கள் தங்களுக்குக் கிடைத்தது, தொட்டதெல்லாம் பொன்னாக்கும் மணியென்று உணராது, பழைய கல் என்று மயங்கி, பயன் பெரிதில்லாத கூழாங்கற்கள் பல தேடி அலைகின்றனர். அத்தகு நமக்கு, “மகிழ்தி மட நெஞ்சே! மானிடரில் நீயும் திகழ்தி!! பெருஞ் சேமம் சேர்ந்தாய்!!!” என்று சைவத்தின் பெரியோர்கள் நம்மைக் காலந்தோறும் இறைவனின் திருவருளால் உண்மை உணர்த்தி வழிப்படுத்தி வருகின்றனர். அத்தகு உண்மைகளைத் தொகுத்து அளித்த யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் அவர்களின் “சைவ வினா விடை”, தருமபுர ஆதீன வெளியீடான “சித்தாந்த சைவ வினா விடை” மற்றும், திருவாவடுதுறை ஆதீன வெளியீடான “சைவ சித்தாந்தத் தடைகளும் விடைகளும்” போன்ற நூல்களைச் சார்ந்து “சைவ சமயம்” பற்றிய வினா விடைகள் இங்கு இடம்பெறுகின்றன.

கடவுள் இயல்

  • உலகத்திற்கு முதலாக இருப்பவர் யார்?

    இறைவன்.

  • இறைவனை எப்பெயர் கொண்டு சிறப்பாக அழைக்கின்றோம்?

    சிவபெருமான்.

  • சிவபெருமான் என்று ஏன் அழைக்கின்றோம்?

    சிவம் என்ற சொல்லுக்கு "செம்மை" (பூரணத்துவம்), "மங்களமானது" என்று பொருள். எல்லாவற்றிற்கும் மேலாக, முழுமையாக, தான் மங்களகரமாகவும் தன்னைச் சார்ந்தவர்களை மங்களகரமாக்குபவரும் ஆன இனிய இறைவனைச் சிவபெருமான் என்று அழைக்கின்றோம்.

  • சிவபெருமான் எப்படிப் பட்டவர்?

    என்றும் உள்ளவர்; எங்கும் நிறைந்தவர்; எல்லாம் அறிபவர்; எல்லாம் வல்லவர்; தூயவர்; அழிவிலா இன்பம் உடையவர்; பிறர்க்கு ஆட்படாதவர்.

  • சிவபெருமானை நாம் ஏன் தொழ வேண்டும்?

    சிவபெருமானைத் தொழுவதால் சிவபெருமானுக்கு எந்தப் பயனும் இல்லை. ஆனால், அழிவில்லாதவரும் இன்ப மயமானவருமான சிவபெருமான் தம்மைத் தொழுபவர்களுக்கு அந்த அழிவில்லாத இன்பத்தை அடைய அருள் புரிவார். உலகியலில் தோன்றும் இன்பங்கள் நிலையானவைகள் அல்ல. ஆனால் சிவபெருமான் அருளும் இன்பத்தைப் பெற்றவர்கள் என்றென்றும் இன்பத்தைப் பெற்று மகிழ்ந்திருப்பர். அதனால் இந்த உடல் எடுத்ததின் பயன் சிவ வழிபாடு செய்து அந்தப் பேரின்பத்தை அடைவதே.

  • சிவபெருமான் ஆன்மாக்களுக்காகச் செய்யும் தொழில்கள் யாவை?

    படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்துமாம்.

  • படைத்தலாவது யாது?

    ஆன்மாக்களுக்குத் தனு கரண புவன போகங்களை முதற் காரணத்தினின்றும் தோற்றுவித்தல்.

  • காத்தலாவது யாது?

    தோற்றுவிக்கப்பட்ட தனு கரண புவன போகங்களை நிறுத்தல்.

  • அழித்தலாவது யாது?

    தனு கரண புவன போகங்களை முதற்காரணத்தில் ஒடுக்குதல்.

  • மறைத்தலாவது யாது?

    ஆன்மாக்களை இருவினைப் பயன்களாகிய போக்கியப் பொருள்களில் அமிழ்த்தல்.

  • அருளலாவது யாது?

    ஆன்மாக்களுக்குப் பாசத்தை நீக்கிச் சிவதத்துவத்தை விளக்குதல்.

  • தனு கரண புவன போகம் என்றது என்ன?

    தனு - உடம்பு, கரணம் - மன முதலிய கருவி, புவனம் - உடம்புக்கு ஆதாரமாகிய உலகம், போகம் - அனுபவிக்கப்படும் பொருள்.

  • சிவபெருமான் இந்த ஐந்து தொழில்களையும் எதைக்கொண்டு செய்வார்?

    தமது சத்தியைக் கொண்டு செய்வார்.

  • சத்தி என்னும் சொல்லுக்குப் பொருள் யாது?

    வல்லமை

  • சிவபெருமானுக்குச் சத்தி யாவர்?

    உமாதேவியார்

  • சிவபெருமான் உயிர்களுக்கு அருள் செய்யும் பொருட்டு உமையோடு எழுந்தருளியுள்ள முதன்மைஇடம் யாது?

    திருக்கயிலை மலை.

  • சிவபெருமான் உயிர்களுக்கு எவ்வெவ்விடங்களில் நின்று அருள் புரிகின்றார்?

    சிவலிங்கம் முதலிய திருமேனிகளிடத்தும், சைவாசாரியாரிடத்திலும், சிவனடியாரிடத்திலும் நின்று அருள் செய்வார்.

  • சிவபெருமானை முழுமுதற் பொருளாக வழிபடும் சமயத்திற்குப் பெயர் யாது?

    சைவம்

  • சைவத்தில் தலையாய நூல்கள் யாவை?

    திருமறைகளும், ஆகமங்களும், திருமுறைகளும்.

  • இவைகளில் விதிக்கப்பட்டன யாவை?

    சிவ புண்ணியமும் சீவ (உயிர்) புண்ணியமுமாம்.

  • சிவ புண்ணியம் யாது?

    சிவமே முதல் எனக் கருதிச் செய்யப்படும் அனைத்தும் சிவ புண்ணியமாம்.

  • உயிர்ப் புண்ணியம் (சீவ நன்மை) யாது?

    1. கடவுளை வழிபடல், 2. தாய், தந்தை, ஆசான் இவர்களைப் பேணுதல், 3. உயிர்க்கு இரங்குதல், 4. உண்மை பேசுதல், 5. செய்நன்றி அறிதல் போன்றன.

  • புண்ணியங்களைச் செய்தவர் எதனை அனுபவிப்பர்?

    சிவ புண்ணியங்களைச் செய்தவர் சிவ இன்பத்தையும், சீவ ( உயிர் ) புண்ணியங்களைச் செய்தவர் சுவர்க்க இன்பத்தையும் அனுபவிப்பர்.

  • பாவங்கள் ஆவன யாவை?

    கொலை, களவு, கள்ளுக் குடித்தல், ஊண் உண்ணல், பொய் பேசுதல், சூதாடுதல்.

  • பாவங்கள் செய்தவர் எதனை அனுபவிப்பர்?

    நரகத்தில் விழுந்து அத்துன்பத்தை அனுபவிப்பர்.

    • பொருளடக்கத்திற்குச் செல்ல இங்கே சொடுக்கவும்

    • நாட்கடன் இயல்

      [*]நாள் தோறும் முறையாக எந்த நேரத்திலே உறக்கம் நீங்கி எழ வேண்டும்?

      சூரியன் உதிக்க ஐந்து நாழிகைக்கு முன்னே உறக்கம் நீங்கி எழ வேண்டும். ( விடியல் 4.00 மணி )

      [*]உறங்கி எழுந்தவுடன் யாது செய்தல் வேண்டும்?

      திருநீறு அணிந்து சிவபெருமானை நினைந்து திருப்பள்ளி எழுச்சி முதலிய திருமுறைப் பாடல்களை ஓத வேண்டும்.

      [*]குளித்த பிறகு யாது செய்தல் வேண்டும்?

      தூய நீர் கொண்டு அனுட்டானம் செய்து திருவைந்தெழுத்தை எண்ணித் திருமறைகள், திருமுறைகள் ஓத வேண்டும்.

      திருநீற்று இயல்

      [*]சைவ சமயத்தோர் உடம்பில் அணிய வேண்டிய அடையாளம் யாது?

      திருநீறு

      [*]திருநீறாவது யாது?

      பசுவின் சாணத்தை நெருப்பில் சுடுதலால் உண்டாகிய திருநீறு.

      [*]எந்த நிறத் திருநீறு பூசத்தக்கது?

      வெள்ளை நிறத் திருநீறு.

      [*]திருநீற்றினை எதில் வைத்துக் கொண்டு அணிய வேண்டும்?

      பட்டுப் பையிலோ, சம்புடத்திலோ வைத்துக் கொண்டு அணிய வேண்டும்.

      [*]திருநீற்றினை எத்திக்கு முகமாக இருந்து அணிதல் வேண்டும்?

      வடக்கு முகமாகவே, கிழக்கு முகமாகவே இருந்து அணியலாம்.

      [*]திருநீற்றினை எப்படி அணிய வேண்டும்?

      நிலத்தில் சிந்தாத வண்ணம் அண்ணாந்து ‘சிவ சிவ' என்று சொல்லி, வலக்கையின் நடுவிரல் மூன்றினாலும் நெற்றியில் அணிதல் வேண்டும்.

      [*]திருநீறு நிலத்தில் சிந்தினால் என்ன செய்ய வேண்டும்?

      சிந்திய திருநீற்றினை எடுத்து விட்டு, அந்த இடத்தைத் தூய்மை செய்ய வேண்டும்.

      [*]திருநீற்றினை நடந்து கொண்டோ, படுத்துக்கொண்டோ பூசலாமா?

      கூடாது.

      [*]திருநீற்றினைக் கட்டாயமாக அணிய வேண்டிய நேரங்கள் யாவை?

      தூங்கப் போகும் போதும், தூங்கி எழுந்த போதும், பல் விளக்கிய உடனும், சூரியன் தோன்றி மறையும் போதும், குளித்த உடனும், உணவு உண்ணும் முன்னும், உண்ட பின்னும் திருநீறு அணிய வேண்டும்.

      [*]ஆசாரியார், சிவனடியார் திருநீறு தந்தால் எப்படி வாங்குதல் வேண்டும்?

      விழுந்து வணங்கி எழுந்து கும்பிட்டு இரண்டு கைகளையும் நீட்டி வாங்குதல் வேண்டும்.

      [*]கடவுள் முன்னும், குரு முன்னும், அடியார் முன்னும் எப்படி நின்று திருநீறு அணிய வேண்டும்?

      முகத்தை திருப்பி நின்று அணிய வேண்டும்.

      [*]திருநீறு அணிதல் எத்தனை வகைப்படும்?

      இரண்டு வகைப்படும், அவை : 1. நீர் கலவாது பொடியாக (உத்தூளனம்) அணிதல், 2. நீர் கலந்து முக்குறியாக ( திரி புண்டரம் ) அணிதல்.

      [*]திரிபுண்டரமாகத் தரிப்பதன் அறிகுறி யென்ன?

      ஆணவம், கன்மம், மாயை யென்னும் மூன்று மலங்களையும் நீக்குமென்கிற குறிப்புத்தோன்றத் தரிப்பதாம்.

      [*]முக்குறியாக அணியத்தக்க இடங்கள் யாவை?

      தலை, நெற்றி, மார்பு, கொப்பூழ், முழந்தாள்கள் இரண்டு, புயங்கள் இரண்டு, முழங்கைகள் இரண்டு, மணிக்கட்டுகள் இரண்டு, விலாப்புறம் இரண்டு, முதுகு, கழுத்து என்னும் பதினாறு இடங்களாம்.

      [*]முக்குறியாக அணியும் போது நெற்றியில் எவ்வளவு நீளம் அணிய வேண்டும்?

      இரண்டு கடைப் புருவ எல்லை வரை அணிய வேண்டும். அதற்குக் கூடாமலும் குறையாமலும் அணிய வேண்டும்.

      [*]மார்பிலும், புயங்களிலும் எவ்வளவு நீளம் அணிய வேண்டும்?

      அவ்வாறங்குல நீளம் அணிய வேண்டும்.

      [*]மற்றைய இடங்களில் எவ்வளவு நீளம் அணிய வேண்டும்?

      ஒவ்வோர் அங்குல நீளம் அணிய வேண்டும்.

      [*]முக்குறிகளின் இடைவெளி எவ்வளவினதாய் இருத்தல் வேண்டும்?

      ஒவ்வோர் அங்குல அளவினதாய் இருத்தல் வேண்டும். ஒன்றை ஒன்று தீண்டலாகாது.

      [*]சைவ சமயத்துக்கு விபூதி ருத்திராக்ஷம் முக்கியமானதற்குக் காரணமென்ன?

      பரமசிவனுடைய திருமேனியிலும் திருநேத்திரத்திலும் உண்டானமையால் முக்கியமாயின.

      [*]அவைக ளுண்டான வகை எப்படி?

      பரமசிவனுடைய அக்கினிபோன்ற திருமேனிமேல் இயல்பாகப் பூத்ததுவே அனாதியான விபூதி. பின்பு தேவர் முதலிய சராசரங்களையெல்லாம் இறுதிக்காலத்தில் நீறாக்கித் தம்முடைய திருமேனியில் தரித்தருளினாரே அது ஆதி விபூதி. நெருப்பின்மேல் நீறுபூத்திருப்பதை இப்போதும் திருஷ்டாந்தமாகக் காணலாம்.

      [*]அதனை அணிவதானால் பயன என்ன?

      மாபாதகங்களெல்லாம் நீங்குமென்றும் அப்படிக்கொத்த விபூதியை பசுவின்சாணத்தினால் விளைக்கவேண்டுமென்றும் அப்படி விளைப்பதில் கற்பம், அநுகற்பம், உபகற்பமென மூன்று விதியுண்டென்றும் அவற்றுள் ஒரு விதிப்படி விளைவித்துத் தரித்துகொள்ள வேண்டுமென்றும் ஆகமங்கள் சொல்லுகின்றன.

      [*]கற்பவிதி யாவ தெப்படிக்கொத்தது?

      பங்குனிமாதத்தில் ஈசானத்தில் மேய்ந்துவந்து நல்லபசுக்களைப் பரிசுத்தமுள்ள தொழுவத்திற் சேர்த்து அவைகளிடுகிற சாணத்தைப் பூமியில் விழவிடாமல் தாமரையிலையி லெடுத்துக் கொண்டு மேலுள்ள வழுவை நீக்கிவிட்டு உண்டையாக்கி முன் விளைத்திருக்கிற சிவாக்கினியிலிட்டுப் பக்குவமாக வெந்த பிற்பாடு எடுத்துப் புதுப்பானையிலிட்டு வேண்டியமட்டில் விபூதிக் கோவிலில் வைத்துக் கொண்டு பூமியில் சிந்தாமல் தரித்துக்கொண்டால் செனன மரணதுக்கம் நீங்கி மோக்ஷமடையலாம். இவ்வாறு விளைவிப்பதுதான் கற்பவிதி. சாணத்தை யேந்தும்போதும் அக்கினியி விடும் போதும் வெந்தபின்பு எடுக்கும்போதும் புதுப்பானையில் வைக்கும்போதும் மந்திரஞ் சொல்லவேண்டும். அதனைச் குருபாலறிக.

      [*]அனுகற்பவிதி எப்படி விளைவிப்பது?

      காட்டிலுலர்ந்த பசுவின் சாணத்தை யுதிர்த்துக்கோசலம் விட்டுப் பிசைந்து சிவாக்கினியி லிட்டுப் பக்குவப்படுத்துவதாம்.

      [*]உபகற்ப விபூதியாவது யாது?

      இயல்பாக வெந்த காட்டுச்சாம்பல் சிவாலய மடைப்பள்ளிச் சாம்பல் இவைகளையெடுத்துக் கோசலம்விட்டுப் பிசைந்து உண்டாக்கி சிவாக்கினியிலிட்டுப் பக்குவப்படுத்தி முன்போல் எடுத்து வைத்துக்கொண்டு தரித்துக்கொள்ளுவதாம்.

      [*]விபூதிக்கோவில் எதனாலமைக்கப்பட்டது?

      வஸ்திரம், புலித்தோல், மான்தோல் இவைகளால் அமைக்கவேண்டும். இவையேயன்றி வேறுமுண்டு.

      [*]எல்லாச் செந்துக்களிலும் பசு சிரேஷ்டமான தென்னை?

      புண்ணியநதி, தீர்த்தங்கள், முனிவர்கள், மேலானதேவர்கள், வாசமாகும்படியான அங்கங்களுடன் உற்பவமானதினாலும் தெய்வலோகத்திலிருக்கின்ற காமதேனுவின் குலமானதாலும் சிரேஷ்டமானது. அன்றி, பசு மலநீக்கத்துக்குக் சூரணமான திருநீற்றினுக்கு முதற்காரணமான கோமயத்தை விளைவித்தலாலுமென வுணர்க.

      உருத்திராக்க இயல்

      [*]விபூதி தரித்துக்கொண்டாலே போதுமே, உருத்திராக்ஷமுந் தரித்துக்கொள்ள வேண்டிய தென்ன?

      விபூதி ருத்திராக்ஷமும் சிவசின்னமாகையால் அவ்விரண்டுமே தரிக்கவேண்டும். இதுவுமின்றி விபூதியானது சிலவேலை வியர்வை மழை முதலியவற்றால் மறைந்துபோனாலும் ருத்திராக்ஷமிருந்தால் தோஷமில்லை. ராக்ஷதரால் பீடிக்கப்படுகிற பாபம் அணுகாது.

      [*]ருத்திராக்ஷம் எவ்விடத்தில் எவ்வாறு உண்டாயது?

      தேவர்கள் திரிபுரத்து அசுரர்களாலே தங்களுக்கு நிகழ்ந்த துன்பத்தை விண்ணப்பம் செய்துகொண்ட பொழுது, திருக்கயிலை உடையாரின் மூன்று திருக்கண்களினின்றும் பொழிந்த நீரில் தோன்றிய மணியாம். இந்தக் காரணத்தினால் அதற்கு ருத்திராக்ஷம் என்கிற பெயருண்டாயது. (ருத்திரன் - சிவன், அக்ஷம் - நேத்திரம். ) அதற்குக் கண்மணியென்றும் பெயர். சிவபூசை செய்கிறவர்கள் கழுத்தில் ருத்திராக்ஷ மில்லாமல் பூசித்தால் அந்தப் பூசையைப் பரமசிவன் அங்கீகரித்துக்கொள்ளமாட்டார். ஆதலால் சிவபூசை செய்கிறவர்கள் ருத்திராக்ஷ கண்டிகை அவசியம் தரித்துக்கொள்ள வேண்டும்.

      [*]எத்தனை ருத்திராக்ஷம் தரித்துக்கொள்ள வேண்டும்?

      உச்சியி லொருமணி, காதொன்றுக்கு ஆறுமணியாக இரண்டு காதுக்கும் பன்னிரண்டு மணி, சிரசில் நாற்பது, கழுத்தில் முப்பத்திரண்டு, மார்பில் நூற்றெட்டு, புயத்தில் முப்பத்திரண்டு, கைகளில் இருபத்துநாலு, இவ்வாறு தரிக்க வேண்டும்.

      [*]ருத்திராக்ஷங்களி னிடைகளில் ஏதாவது மணிகள் கோக்கலாமா?

      இடையிடை பவளம், ஸ்படிகமணி, பொன்மணி யிவைகளைக் கோத்து அணியவேண்டும். இவைகளுமன்றி வில்வப்பழ வோட்டையுஞ் சேர்க்கலாம். இவ்வாறு சேர்க்காமல் ருத்திராக்ஷங்களை மாத்திரம் கோத்துத் தரித்துக்கொண்டால் எத்தனை மணி சேர்த்தாலும் ஒருமணி யணிந்ததா லுண்டாகும் பலனே கிடைக்கும். இந்த ருத்திராக்ஷங்களில் ஒருமுகம், பதினொருமுகம், பதினான்கு முகமுள்ள மணிகளை வைத்துப் பூசித்தாலும் சிவார்ச்சனை செய்ததா லுண்டாகும் பலன் கிடைக்கும்.

      [*]உருத்திராக்கம் அணிவதற்கு தகுதியானவர் யார்?

      மதுபானமும், மாமிச உண்டியும் இல்லாதவராய், ஆசாரம் உடையவராய் உள்ளவர்.

      [*]உருத்திராக்கம் தரித்துக்கொண்டு மதுபானம், மாமிச உண்டி முதலியவை செய்தவர் யாது பெறுவர்?

      நரகத்தில் வீழ்ந்து, துன்பத்தை அனுபவிப்பர்.

      [*]குளிக்கும் காலத்தில் உருத்திராட்சத்தை அணியக் கூடாதா?

      அணியலாம், குளிக்கும் பொழுது உருத்திராட்ச மணியில் பட்டு வடியும் நீர் கங்கை நீருக்குச் சமமாகும்.

      [*]உருத்திராட்சத்தில் எத்தனை முகமணி முதல் எத்தனை முகமணி வரையும் உண்டு?

      ஒருமுக மணி முதல் பதினாறு முக மணி வரையும் உண்டு.

      [*]உருத்திராட்ச மணியை எப்படிக் கோத்துத் தரித்தல் வேண்டும்?

      பொன்னிலாயினும், வெள்ளியிலாயினும், தாமிரத்தாலாயினும், முத்தாயினும், பவளமாயினும், பளிங்காயினும் இடையிடையே இட்டு முகத்தோடு முகமும், அடியோடு அடியும் பொருந்தக் கோத்துத் தரித்தல் வேண்டும்.

      [*]உருத்திராக்கம் தரிக்கத் தக்க இடங்கள் யாவை?

      குடுமி, தலை, காதுகள், கழுத்து, மார்பு, புயங்கள், கைகள், என்பவைகளாம்.

      [*]இன்ன இன்ன இடங்களில் இத்தனை இத்தனை மணி தரித்தல் வேண்டும் என்னும் முறை உண்டோ?

      ஆம். தலையிலே இருபத்தி இரண்டு மணியும், காதுகளிலே ஒவ்வொரு மணியும், கழுத்திலே முப்பத்தி இரண்டு மணியும், புயங்களிலே தனித்தனி பதினாறு மணியும், கைகளிலே தனித்தனி பன்னிரண்டு மணியும், மார்பிலே நூற்றெட்டு மணியும் தரித்தல் வேண்டும்.

      [*]இந்த இடங்கள் எல்லாவற்றிலும் எப்போதும் உருத்திராக்கம் தரித்துக் கொள்ளலாமா?

      காதுகளிலும், கண்டத்திலும் எப்போதும் தரித்துக் கொள்ளலாம், மற்றை இடங்களில் எனில், தூக்கத்திலும் மலசல மோசனத்திலும், நோயிலும் அணிந்து கொள்ளலாகாது.

      [*]உருத்திராக்கம் அணிவது எதற்கு அறிகுறி?

      சிவபெருமானுடைய திருக்கண்ணில் தோன்றும் திருவருட் பேற்றிற்கு அறிகுறி.

      சிவ மூலமந்திர இயல்

      [*]சைவ சமயிகள் முறையாக எண்ண வேண்டிய மூல மந்திரம் யாது?

      திருவைந்தெழுத்து

      [*]திருவைந்தெழுத்தாவது யாது?

      நம:சிவாய என்ற திருவைந்தெழுத்து மந்திரம் வேதத்தின் நடுவனதாகவும், நால்வர் பெருமக்களால் துதிக்கப்பட்டதாகவும் எல்லோரும் எப்போதும் எண்ணத்தக்கதாகவும் உய்தி தருவதாகவும் உள்ள திருவைந்தெழுத்து மந்திரம் ஆகும். இது தூல பஞ்சாக்கரம் எனப்படும். சூக்குமம், காரணம் என்று சிறப்புப் பஞ்சாக்கரங்கள் உண்டு. குருநாதர் மூலம் திருவைந்தெழுத்து உள்ளிருத்தப் பெற்றவர்கள் அந்த திருவைந்தெழுத்து மந்திரத்தை ஓதுவது சாலச் சிறந்தது.

      [*]திருவைந்தெழுத்தைக் எண்ணத் தகுதி உடையவர் யாவர்?

      எந்தப் பாகுபாடும் இன்றி எல்லோரும் மனதில் அன்புடன் திருவைந்தெழுத்தை எண்ணி இருக்க வேண்டும். குறிப்பு: கீழ் வரும் விடைகள் மந்திர ஜபம் செய்யும் முறையைச் சொல்லுகின்றன. மற்றபடி எங்கும் எப்போதும் எல்லோரும் திருவைந்தெழுத்தை எண்ணி இருத்தலே சிறப்பு. துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும் நெஞ்சகம் நைந்து நினைமின் - சம்பந்தர்.

      [*]திருவைந்தெழுத்திலே எத்தனை உரு முறையாகக் கணிக்க வேண்டும்?

      நூற்றெட்டு உருவாயினும், பத்து உருவாயினும் முறையாகக் கணிக்க வேண்டும்.

      [*]எப்படி இருந்து கணிக்க வேண்டும்?

      முழந்தாள் இரண்டையும் மடக்கிக் காலோடு காலை அடக்கி, இடத்தொடையின் உள்ளே வலப்புறங் காலை வைத்து, இரண்டு கண்களும் மூக்கு நுனியைப் பொருந்த நிமிர்ந்திருந்து கொண்டு கணிக்க வேண்டும்.

      [*]திருவைந்தெழுததைக் கணிக்கும் போது மனம் எவ்வாறு இருக்க வேண்டும்?

      மனம் சிவபெருமானிடத்தில் அழுந்திக் கிடக்க வேண்டும்.

      [*]நிற்கும் போதும், நடக்கும் போதும், இருக்கும் போதும், கிடக்கும் போதும், மற்றை எத்தொழிலைச் செய்யும் போதும் மனதை எதில் பதித்தல் வேண்டும்?

      உயிருக்கு உயிராகிய சிவபெருமானுடைய திருவடிகளில் மனதைப் பதித்தல் வேண்டும்.

      [*]மந்திர உபதேசம் பெற்றவர் குருவுக்கு யாது செய்து கொண்டு செபித்தல் வேண்டும்?

      குருவை வழிபட்டு அவருக்கு வருடந்தோறும் இயன்ற தட்சணை கொடுத்து கொண்டே செபித்தல் வேண்டும்.

      [*]திருவைந்தெழுத்தை முறையாக ஒரு காலத்துக்கு எத்தனை உருச் செபித்தல் வேண்டும்?

      நூற்றெட்டு உருவாயினும், ஐம்பது உருவாயினும், இருபத்தைந்து உருவாயினும், பத்து உருவாயினும் நியமமாகச் செபித்தல் வேண்டும்.

      [*]கணித்தற்கு எதைக் கொண்டு உரு எண்ணல் வேண்டும்?

      செபமாலையைக் கொண்டாயினும், வலக்கை விரலிறையைக் கொண்டாயினும் உரு எண்ணல் வேண்டும். ( விரலிறை - கட்டைவிரல் ).

      [*]செபமாலையை என்ன மணி கொண்டு செய்வது உத்தமம்?

      உருத்திராக்க மணி கொண்டு செய்வது உத்தமம்.

      [*]செபமாலைக்கு எத்தனை மணி கொள்ளத் தகும்?

      இல்வாழ்வான் இருபத்தேழு மணியும், துறவி இருபத்தைந்து மணியும் கொள்ளத் தக்கதாகும். இல்வாழ்வான் நூற்றெட்டு மணி, ஐம்பத்து நான்கு மணிகளாலும் செபமாலை செய்து கொள்ளலாம்.

      [*]செபமாலைக்கு எல்லா முகமணியும் ஆகுமா?

      இரண்டு முக மணியும், மூன்று முக மணியும், பன்னிரண்டு முக மணியும், பதின்மூன்று முக மணியும் செபமாலைக்கு ஆகாவாம். அன்றியும் எல்லா மணியும் ஒரே விதமாகிய முகங்களை உடையனவாகவே கொள்ளல் வேண்டும். பல விதமாகிய முகமணிகளையுங் கலந்து கோத்த செபமாலை குற்றமுடையது.

      [*]செபமணிகளை எதினாலே கோத்தல் வேண்டும்?

      வெண்பட்டிலேனும், பருத்தியிலேனும் இருபத்து ஏழிழையினால் ஆக்கிய கயிற்றினாலேனும் கோத்தல் வேண்டும்.

      [*]செபமாலையை எப்படி செய்தல் வேண்டும்?

      முகத்தோடு முகமும் அடியோடு அடியும் பொருந்தக் கோத்து, ஒன்றை ஒன்று தீண்டா வண்ணம் இடையிடையே நாகபாசம், பிரமக்கிரந்தி, சாவித்திரி என்பவைகளுள் இயன்றதொரு முடிச்சை இட்டு, வடநுனி இரண்டையும் ஒன்றாகக் கூட்டி, அதிலே நாயகமணியை ஏறிட்டுக் கோத்து, முடிந்து கொள்ளல் வேண்டும். நாயகமணிக்கு மேரு மணி என்று பெயர்.

      [*]செபமாவது யாது?

      தியானிக்கப்படும் பொருளை எதிர்முகமாக்கும் பொருட்டு அதனை உணர்த்தும் மந்திரத்தை உச்சரித்தலாம்.

      [*]மந்திரம் என்பதற்கு பொருள் யாது?

      நினைப்பவனைக் காப்பது என்பது பொருள். ஆகவே மந்திரம் என்னும் பெயர் நினைப்பவனைக் காக்கும் இயல்புடைய வாச்சியமாகிய சிவத்துக்கும் சிவ சத்திக்குமே செல்லும். ஆயினும் வாக்கியத்துக்கும், வாசகத்துக்கும் செல்லும். எனவே மந்திரம், வாச்சிய மந்திரம், வாசக மந்திரம் என இரு திறப்படும் என்றபடியாயிற்று. ( மந் - நினைப்பவன்; திர - காப்பது ).

      [*]மானசமாவது யாது?

      நா நுனி உதட்டைத் தீண்டாமல், ஒருமை பொருந்தி மனசினாலே செபித்தலாம்.

      [*]உபாஞ்சுவாவது யாது?

      தன் செவிக்கு மாத்திரம் கேட்கும்படி, நா நுனி உதட்டைத் தீண்ட மெல்லச் செபித்தலாம். இதற்கு மந்தம் என்று பெயர்.

      [*]வாசகமாவது யாது?

      அருகிலிருக்கும் பிறர் செவிக்கும் கேட்கும்படி செபித்தலாம். இதற்குப் பாஷ்யம் என்றும் பெயர்.

      [*]இம்மூவகைச் செபமும் பலத்தினால் ஏற்றக்குறைவு உடையனவா?

      ஆம். வாசகம் நூறு மடங்கு பலமும், உபாஞ்சு பதினாயிர மடங்கு பலமும், மானசம் கோடி மடங்கு பலமும் தரும்.

      [*]எந்தத் திக்கு முகமாக எப்படி இருந்து செபித்தல் வேண்டும்?

      வடக்கு முகமாகவேனும், கிழக்கு முகமாகவேனும், மரப்பலகை, துணி, இரத்தினக் கம்பளம், மான்தோல், புலித்தோல், தருப்பை என்னும் ஆசனங்களுள் இயன்றதொன்றிலே முழந்தாள் இரண்டையும் மடக்கி, காலோடு காலை அடக்கி, இடத்தொடையினுள்ளே வலப்புறங்காலை வைத்து, இரண்டு கண்களும் மூக்கு நுனியைப் பொருந்த, நிமிர்ந்திருந்து கொண்டு செபித்தல் வேண்டும்.

      [*]எப்படி இருந்து செபித்தல் ஆகாது?

      சட்டையிட்டுக் கொண்டும், சிரசில் வேட்டிக் கட்டிக் கொண்டும், போர்த்துக் கொண்டும், குடுமியை விரித்துக் கொண்டும், கௌபீனம் தரியாதும், வேட்டி தரியாதும், விரலிலே பவித்திரம் தரியாதும், பேசிக்கொண்டும், இருளில் இருந்து கொண்டும், நாய், கழுதை, பன்றி முதலியவற்றை பார்த்துக் கொண்டும் செபிக்கலாகாது. செபம் செய்யும்போது, கோபம், களிப்பு, கொட்டாவி, தும்மல், நித்திரை, சோம்பல், வாதம் ஆகியவை ஆகாவாம்.

      [*]செபமாலை கொண்டு எப்படி செபித்தல் வேண்டும்?

      பிறர் கண்ணுக்கு புலப்படா வண்ணம் பரிவட்டத்தினால் மூடப்பட்ட செபமாலையை, வாசகமாகச் செபிக்கில் சுட்டுவிரலிலும், மந்தமாகச் செபிக்கின் நடுவிரலிலும், மானசமாகச் செபிக்கின் ஆழிவிரலிலும் வைத்து, சிவபெருமானுடைய திருவடிகளை மனதிலே தியானித்துக் கொண்டு, பெருவிரலினாலே நாயகமணி அடுத்த, முகம் மேனோக்கிய மணியை முதலாகத் தொட்டு, ஒவ்வொரு மணியாகப் போகத்தின் பொருட்டுக் கீழ்நோக்கித் தள்ளியும், முத்தியின் பொருட்டு மேல் நோக்கித் தள்ளியும் செபித்து, பின்பு நாயகமணி கைபபட்டதாயின், அதனைக் கடவாது திரும்ப மறித்து வாங்கி, அதனைத் திரும்பக் கையில் ஏறிட்டுச் செபித்தல் வேண்டும். செபிக்கும்போது, செபமாலையின் மணிகள் ஒன்றோடொன்று ஓசைப்படலாகாது.

      [*]திருவைந்தெழுத்து செபத்தால் பயன் என்ன?

      திருவைந்தெழுத்தின் பொருளை அறிந்து, சிவபெருமான் ஆண்டவன், தான் அடிமையென்னும் முறைமையை மனத்தகத்தே வழுவாமல் இருத்தி, அதனை விதிப்படி மெய்யன்போடு செபித்துக் கொண்டுவரின் விறகினிடத்தே அக்கினி பிரகாசித்தல் போல் ஆன்மாவிடத்தே சிவபெருமான் பிரகாசித்து, மும்மலங்களும் நீங்கும்படி எப்போதும் இன்புற்றிருக்கும் ஞானானந்தத்தைப் பிரசாதித்து அருளுவார்.

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்



  • சிவலிங்க இயல்
  • ஆன்மாக்களாலே பூசித்து வழிபடப்படும் சதாசிவ வடிவம் எது?

    பீடமும் இலிங்கமுமாகிய கன்மசாதாக்கிய வடிவமாம். பீடம் சிவசக்தி, இலிங்கம் சிவம்.
  • இலிங்கம் என்பதற்குப் பொருள் என்ன?

    இதற்குக் குறி என்று பொருள். முகம் கை கால் போன்ற அவயவங்கள் இல்லாமல் இறைவனைக் குறிப்பாக உணர்த்துவதால் இத்திருமேனிக்கு இலிங்கம் எனப் பெயர்.
  • இலிங்கம் எவ்வாறு தோன்றியது?

    பிரமனும், திருமாலும் தம்மிடையே பெரியவர் யார் எனச் சச்சரவிட அவர்கள் முன் சிவபெருமான் சோதி வடிவாகத் தோன்றினார். அவ்விருவரும் அச்சோதியின் முதலும் முடிவும் காணாது வருந்த, அச்சோதி வழிபாட்டிற்கு ஏற்ற சிவலிங்கமாகத் திடமானது. அச்சிவலிங்கத்தை வழிபட்டு அவர்கள் பேறு பெற்றனர். தன்னிலையில் அருவமான பரசிவம் உயிர்களுக்கு இரங்கித் தன் கருணையால் அருவுருவத் திருமேனி கொண்டதே சிவலிங்கத் திருமேனி என்பதை உய்த்துணர்க.
  • சிவபெருமானை ஆன்மாக்கள் வழிபடும் இடங்கள் எவை?

    சிவபெருமான், புறத்தே சிவலிங்கம் முதலிய திருமேனிகளும், குருவும் சங்கமமும் ஆதாரமாகக் கொண்டு நின்றும், அகத்தே உயிர் இடமாகக் கொண்டு நின்றும், ஆன்மாக்கள் செய்யும் வழிபாட்டைக் கொண்டருளுவர். ஆதலால், ஆன்மாக்கள் அவரை வழிபடும் இடங்கள் இவைகளேயாம். சிவத்துக்குப் பெயராகிய இலிங்கம் என்னும் பதம், உபசாரத்தால், அச்சிவம் விளங்கப் பெறும் ஆதாரமாகிய சைல முதலியவற்றிற்கும் வழங்கும்.
  • சிவபெருமான் இவ்விடங்களில் நிற்பர் என்றது அவர், எங்கும் வியாபகர் என்றதனோடு மாறுபடுமன்றோ?

    மாறுபடாது. சிவபெருமான், எங்கும் வியாபகமாய் நிற்பினும், இவ்விடங்களில் மாத்திரமே தயிரில் நெய் போல விளங்கி நிற்பர். மற்றை இடங்களில் எல்லாம் பாலில் நெய் போல வெளிப்படாது நிற்பர்.
  • சிவலிங்கம் எத்தனை வகைப்படும்?

    பரார்த்த லிங்கம், இட்ட லிங்கம் என இருவகைப்படும்.
  • பரார்த்த லிங்கமாவது யாது?

    சிவபெருமான் சங்கார காலம் வரையும் சாந்நித்தியராய் இருந்து ஆன்மாக்களுக்கு அனுக்கிரகிக்கும் போது இலிங்கமாம். இது, தாவரலிங்கம் எனவும் பெயர் பெறும். சாந்நித்யம் - அண்மை, அடுத்தல், வெளிப்படுத்தல். தாவரம் எனினும், ஸ்திரம் எனினும் நிலையியல் பொருள் எனினும் பொருந்தும்.
  • பரார்த்த லிங்கம் எத்தனை வகைப்படும்?

    சுயம்பு லிங்கயம், காண லிங்கம், தைவிக லிங்கம், ஆரிட லிங்கம், மானுட லிங்கம் என ஐவகைப்படும். இவைகளுள்ளே, சுயம்பு லிங்கம் தானே தோன்றியது. காண லிங்கம் விநாயகர், சுப்பிரமணியர் முதலிய கணர்களாலே தாபிக்கப்பட்டது. தைவித லிங்கம் விட்டுணு முதலிய தேவர்களாலே தாபிக்கப்பட்டது. ஆரிட லிங்கம் இருடிகளால் தாபிக்கப்பட்டது. அசுரர், இராக்கதர் முதலாயினரால் தாபிக்கப்பட்டதும், அது மானுட லிங்கம் மனிதரால் தாபிக்கப்பட்டது.
  • ஆனால் தரிசனத்தினா லுண்டாகும் பலன் சமமா யிருக்குமா?

    ஒன்றுக்கொன்று அதிகமாயிருக்கும். மனிதர்களால் ஸ்தாபிக்கப்படும் சிவலிங்கத்தையும் மற்றச் சிவலிங்கங்களுடன் சேர்த்துச் சொல்லியிருப்பதனால் அவர்களைச் சாமானியமாக நினைக்கப்படாது. சேர, சோழ, பாண்டிய ராஜாக்கள் முதலானோர், சிவநேசமும் ராஜநீதி முதலான தருமமும் விசேஷமாயிருந்ததனால் இவர்களுக்குப் பரமசிவனுடைய திருவருள் பூரணமாகக் கிடைத்திருந்தது. இவர்களுக்கும் சாபானுக்கிரகமுண்டு.
  • மற்றமனிதர்களால் ஸ்தாபிக்கப்படாதோ?

    சிவதரிசனத்துக்குச் சமீபத்தில் ஆலயமில்லாத கிராமங்களாயிருந்தால் சிவப்பிரதிஷ்டை செய்ய வேண்டியதுதான். கிலமாக ஆலயங்களிருக்குமானால் அதைத் தள்ளிப் புதிதாகப் பிரதிஷ்டை செய்விக்கலாகாது. நூதனமாக ஆலயமேற்படுத்தி சிவலிங்கம் ஸ்தாபிப்பவர்கள் பக்கத்தில் ஒருலிங்கம் பூசையில்லாமலிருந்தால் அதைக் கொண்டுவந்து ஸ்தாபிக்கலாம். கிரியா லிங்கமாயிருந்தால் ஸ்தாபிக்கலாகாது. சுயம்பு லிங்கமானதாயிருந்தால் கொண்டுவந்து ஸ்தாபிக்கலாம்.
  • சுயம்பு லிங்கம் பூமியில் தானேயுண்டான தாயிருந்தால் அதையெப்படிக் கொண்டுவரலாம்?

    இவ்விடத்தில் சுயம்புலிங்கமென்றது கிரியா லிங்கம்போற் செய்யப்டாமல் உண்டாயிருக்கும். அது காசிலிங்கமென்றும் பாணலிங்கமென்றுஞ் சொல்லப்படும்.
  • திருக்கோயிலுள் இருக்கும் சிவலிங்கம் முதலிய திருமேனிகள் எல்லோராலும் வழிபடற் பாலனவா?

    ஆம். சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு மார்க்கத்தாராலும் வழிபடற்பாலனவே ஆகும். ஆயினும் அவ்வழிபாடு அவரவர் கருத்து வகையால் வேறுபடும். படவே, அவருக்குச் சிவபெருமான் அருள் செய்யும் முறைமையும் வேறுபடும்.
  • சிவலிங்கம் முதலிய திருமேனிகளைச் சரியையாளர்கள் எக்கருத்துப் பற்றி வழிபடுவார்கள்? அவர்களுக்குச் சிவபெருமான் எப்படி நின்று அருள் செய்வார்?

    சரியையாளர்கள் பகுத்தறிதல் இல்லாது சிவலிங்கம் முதலிய திருமேனியே சிவமெனக் கண்டு வழிபடுவார்கள். அவர்களுக்குச் சிவபெருமான் அங்கே வெளிப்படாது நின்று அருள் செய்வார்.
  • கிரியையாளர்கள் எக்கருத்துப் பற்றி வழிபடுவார்கள்? அவர்களுக்குச் சிவபெருமான் எப்படி நின்று அருள்செய்வர்?

    கிரியையாளர்கள் அருவப் பொருளாகிய சிவபிரான் ஈசானம் முதலிய மந்திரங்களினாலே சிவலிங்க முதலிய திருவுருக் கொண்டார் என்று தெளிந்து, மந்திர நியாசத்தினால் வழிபடுவார்கள். அவர்களுக்குச் சிவபெருமான், கடைந்த பொழுது தோன்றும் அக்கினி போல, அவ்வம்மந்திரங்களினாலும், அவ்வவர் விரும்பிய வடிவமாய், அவ்வத் திருமேனிகளில் அவ்வப்பொழுது தோன்றி நின்று, அருள் செய்வர்.
  • யோகிகள் எக்கருத்துப் பற்றி வழிபடுவார்கள்?

    யோகிகள், தம் இருதயமெங்கும் இருக்கும் சிவபெருமான் இந்தத் திருமேனியிலும் இருந்து பூசை கொண்டருளுவர் என்று தெளிந்து, சாத்திய மந்திரங்களினால் வழிபடுவார்கள்.. அவர்களுக்குச் சிவபெருமான், கறந்த பொழுது தோன்றும் பால் போல, அவ்வம்மந்திரங்களினால் அவ்வவர் விரும்பிய வடிவமாய், அவ்வத் திருமேனிகளில் அவ்வப்பொழுது தோன்றி நின்று, அருள் செய்வர்.
  • ஞானிகள் எக்கருத்துப் பற்றி வழிபடுவார்கள்? அவர்களுக்குச் சிவபெருமான் எப்படி நின்று அருள் செய்வர்?

    ஞானிகள் மேலே சொல்லப்பட்ட முத்திறத்தாரும் போல ஓரிடமாகக் குறியாது, அன்பு மாத்திரத்தால் அங்கே வழிபடுவார்கள். அவர்களுக்குச் சிவபெருமான், கன்றை நினைந்த தலையீற்றுப் பசுவின் முலைப்பால் போலக் கருணை மிகுதியால் அவ்வன்பே தாமாகி, எப்பொழுதும் வெளிப்பட்டு நின்று அங்கே அருள் செய்வர்.
  • இட்டலிங்கமாவது யாது?

    ஆசாரியார் விசேட தீக்கை செய்து, சீடனைப் பார்த்து, “நீ உள்ள அளவும் கைவிடாது இவரை நாள்தோறும் பூசி" என்று அனுமதி செய்து, “அடியேன் இவ்வுடல் உள்ளவரையும் சிவபூசை செய்தன்றி ஒன்றும் உட்கொள்ளே" என்று ஆணை செய்வித்துக் கொண்டு கொடுக்க, அவன் வாங்கிப் பூசிக்கும் இலிங்கமாம் இது. ஆன்மார்த்த லிங்கம் எனவும், சல லிங்கம் பெயர் பெறும்.
  • இட்டலிங்கம் எத்தனை வகைப்படும்?

    வாண லிங்கம், படிக லிங்கம், இரத்தின லிங்கம், சைல லிங்கம், சணிக லிங்கம் எனப் பலவகைப்படும்.
  • சணிக லிங்கமாவது யாது?

    பூசித்தவுடன் விடப்படும் இலிங்கமாகும்.
  • சணிக லிங்கம் எத்தனை வகைப்படும்?

    மண், அரிசி, அன்னம், ஆற்று மணல், கோமயம், வெண்ணெய், உருத்திராக்கம், சந்தனம், கூர்ச்சம், பூ மாலை, சருக்கரை, மா எனப் பன்னிரண்டு வகைப்படும்.
  • சிவபூசை எழுந்தருளப் பண்ணிக் கொண்டவர் பூசை பண்ணாது புசிக்கின் என்னை?

    பூசை பண்ணாது புசிப்பது பெருங் கொடும் பாவம். அப்படிப் புசிக்கும் அன்னம் புழுவுக்கும், பிணத்துக்கும், மலத்துக்கும் சமம். அப்படிப் புசித்தவனைத் தீண்டலோ காண்டலோ பாவம். ஆதலால் ஓரோவிடத்துப் பூசை பண்ணாது புசித்தவர், ஆசாரியாரை அடைந்து அதற்குப் பிராயசித்தஞ் செய்து கொள்ளல் வேண்டும்.
  • வியாதியினாலே தம் கைகால்கள் தம் வசமாகாதிருப்பின் யாது செய்தல் வேண்டும்?

    தம்முடைய ஆசாரியாரைக் கொண்டாயினும், தம்மோடொத்தாரைக் கொண்டாயினும், தம் பூசையைச் செய்வித்துத் தாம் அந்தரியாகஞ் செய்தல் வேண்டும்.
  • சிவபூசை எழுந்தருளப் பண்ணிக் கொண்ட பெண்கள் பூப்பு வந்தபோது யாது செய்தல் வேண்டும்?

    மூன்று நாளும் பிறர் தண்ணீர் தர குளித்து விட்டு, அந்தரியாகம் செய்தல் வேண்டும். நான்காம் நாள் குளித்து விட்டு, ஆனைந்தேனும், பாலேனும் உட்கொண்டு, மீண்டும் குளித்துவிட்டு, சிவபூசை செய்தல் வேண்டும். அம்மூன்று நாளும் அந்தர் யாகம் செய்யாதொழியின், அக்குற்றம் போம்படி அகோரத்தை ஆயிரம் உருச் செபித்தல் வேண்டும்.
  • பெண்கள், தாம் பிரசவித்த சூதகம் தமக்குரியார் இறந்த ஆசௌசம், வியாதி இவைகள்வரின், யாது செய்தல் வேண்டும்?

    தீக்கையால் தம்மோடு ஒத்தவரைக் கொண்டு பூசை செய்வித்தல் வேண்டும்.
  • ஆசௌசம், வியாதி முதலியவை வந்தபோது பிறரைக் கொண்டு பூசை செய்வித்தர் யாவரும், அசௌச முதலியவை நீங்கியபின் யாது செய்தல் வேண்டும்?

    பிராயசித்தத்தின் பொருட்டு அகோரத்தை முந்நூறு உருச் செபித்துத் தாம் பூசை செய்தல் வேண்டும்.
  • சிவலிங்கம் காணாவிடத்து யாது செய்தல் வேண்டும்?

    அந்தரிகயாக பூசை செய்து, பால், பழம் முதலியவற்றை உண்டு, நாற்பது நாள் இருத்தல் வேண்டும். அவ்விலிங்கம் வாராதொழியின் வேறொரு இலிங்கத்தை ஆசாரியார் பிரதிட்டை செய்துதரக் கைக்கொண்டு, பூசை செய்தல் வேண்டும். அதன்பின் வந்ததாயின் அவ்விலிங்கத்தையும் விடாது பூசை செய்தல் வேண்டும்.
  • சிவலிங்கப் பெருமானுக்கு விசேட பூசை செய்யத்தக்க காலங்கள் எவை?

    திருவைந்தெழுத்து இயலிலே சொல்லப்பட்டவை முதலிய புண்ணிய காலங்களும், சென்மத்திரயங்களுமாம். இன்னும் மார்கழி மாச முழுதினும் நாள்தோறும், நித்திய பூசையேயன்றி அதற்குமுன் உசத் கால (விடியற்காலை) பூசையும் பண்ணல் வேண்டும். சிவராத்திரி தினத்திலே பகலில் நித்திய பூசையேயன்றி, இராத்திரியில் நான்கு யாம பூசையும் பண்ணல் வேண்டும். ( சென்மத் திரயங்கள் - பிறந்த நட்சத்திரமும் அதற்குப் பத்தாம் நட்சத்திரமும் அதற்குப் பத்தாம் நட்சத்திரமுமாம் ).
  • இத்தனை முயற்சி செய்து சிவலிங்க வழிபாடு ஏன் செய்ய வேண்டும்?

    இந்த உடல் எடுத்ததின் பயனே முற்றிலும் இன்ப மயமான சிவபெருமானை வணங்கி அவர் திருவருளால் கிடைக்கும் முடிவே இல்லாத அளவில்லாத இன்பத்தை அடைவது தான். அதனால் சிவ வழிபாடு செய்யாமல் இருப்பது உடலை வீணே வளர்த்துக் காக்கைக்கும் மண்ணிற்கும் பலியாக்குவதற்கே ஆகும். கல்வி கற்றவர் அக்கல்வியைத் தொழிற்படுத்தாது, தொழில் செய்யின் கட்டுப்பாடுகள் உண்டே என வீணே இருப்பராகின் அவர் எத்தகு மூடரோ அவர் போன்றவரே சிவ வழிபாடு செய்யாதவர்.
  • சிவபூஜை செய்யத்தக்க மூர்த்தங்ளெவை?

    மானதம், மண்டலம், பலகையிலும் படத்திலும் சுவரிலுமெழுதிய சித்திரங்கள், விக்கிரக சொரூபங்கள், படிகலிங்கம், பாணலிங்கம், க்ஷணிகலிங்கம் இவை முதலியவும் பூசிக்கத் தக்க மூர்த்தங்களாம்.
  • மானத பூசையாவ தென்ன?

    மனதினாலே அபிஷேகமுதலிய பூசையைப் பாவனையாகச் செய்தலாம்.
  • மண்டல பூசையாவ தென்ன?

    மண்டலேசுரரைப் பூசித்தலாம்.
  • க்ஷணிகலிங்க பூசையாவதென்ன?

    பார்த்திபலிங்க பூசையாம்.
  • மேற்கூறிய பூசைகளிற் சிறந்தது எது?

    படிகலிங்க பூசையும் பாணலிங்க பூசையும் சிறந்தது.
  • பாணலிங்கங்களென்பன யாவை?

    பாணனென்னு மொரு அன்பனாலே பூசிக்கப்பட்டவையாம்.
  • இவ்விலிங்கங்கள் எவ்விடத்தில் இருக்கின்றன?

    நர்மதை என்னும் நதியில் இருக்கின்றன.
  • இந்தப் பூசைகளால் அடையும் பலன் என்ன?

    சோடச தானபலனும், இருபத்தொரு யாகபலனும், மகா பாதகவிமோசனமும், ஸ்தலங்கள்தோறுஞ் சென்று தரிசிக்கும் பலனும், கங்கை முதலிய புண்ணிய நதிகளில் ஸ்நானஞ் செய்த பலனும் கிடைக்கும்.
  • சோடச தானம் என்பன எவை?

    அன்னதானம், வஸ்திரதானம், கன்னிகாதானம், பூதானம், இரணியதானம், கோதானம், உபயமுகி தானம், மகிஷதானம், அஸ்வதானம், சுவேதாஸ்வதானம், காலதானம், காளமுகி தானம், மகமேருதானம், கற்பகவிருக்ஷ தானம், வித்தியாதானம், மகாதானம் என்னும் பதினாறுமாம்.
  • யாகம் இருபத்தொன்றாவது யாது?

    அக்கினிட்டோமம், அத்தியக்கினிட்டோமம், உத்தியம், சோடசம், வாசபேயம், அத்திசாத்திரம், அப்தோரியாமம், அக்கினியாதேயம், அக்கினிதோத்திரம், தரிசுபூரணமாசம், சாதூர்மாசியம், நிரூடபசுபந்தம், ஆக்கிரணம், சௌத்திராமணி, அட்டகை, பார்வணம், சிரார்த்தம், சிரவேணி, ஆக்கிரகாயணி, சைத்திரி, ஆசுவயசு என்னும் இருபத்தொன்றுமாம்.
  • மகாபாதகஙகள் என்பன எவை?

    கொலை, களவு, பொய், கள்ளருந்தல், குருநிந்தை என்னும் ஐந்துமாம். இந்தப் பாதகங்களால் நரகவேதனை உண்டாகும். பிறர் மாதரை இச்சித்தல், பிறர் செய்வதைக் கண்டு பொறாமை கொள்ளுதல், அப்பொருளை அபகரிக்க எண்ணுதல், கோபம், கொடுஞ்சொல், மூர்க்கம், வஞ்சகம், ஒருவர் தனக்குச்செய்த உபகாரத்தை மறத்தல், சிநேகத்தைப் பரித்தல், இரக்கமில்லாமை இவைகளாலும் நரகவேதனை உண்டாகும்.


  • ஆசாரியவியல்
  • ஆசாரியராவர் யாவர்?

    பெத்தான்மாக்களாகிய நாம் இருவினை யொப்பு மலபரிபாகம் பெற்று, தானென்னும் போதம் நீங்கித், தன்சொரூபம் பரமேசுவர னடியார்களி னடியார்களுக்கு அடிமைத்திறம் பூண்டு மகிழ்வதே யென்றறிந்து, பிறவிப்பிணி தீர்ந்து, அஞ்ஞானம் நீங்க ஞானமாகிய விளக்கினைக்கொண்டு அருட்பெருஞ்சோதி எம்மையன் நம்மிருதயமாகிய புண்டரீக வீட்டினுள் ஆநந்தத்தாண்டவம் புரிந்தருளும் முறைமையைக் காட்டி, அவ்வாறு ஆடும் நம்பேரருளாளன் ஸ்ரீ குஞ்சிதபாதத்தின் கண்ணே நம்மான்மாக்க ளொடுங்கிச் சதாசிவானுபவத்தை அனுபவிக்கச் செய்யும் பரம கருணாசாலியராம்.
  • அவரெப்படிப்பட்டவர்?

    ஆன்மகோடிகளிலும் ஈசுவரனிலு மதிகனென்றுகொள்ளல் வேண்டும். ஆசாரியன் ஈசுவர ரூபியானாலும் அயப்பிண்டத்துக்கு அக்கினி சம்பந்தத்தாலே அக்கினியைவிட உஷ்ணாதிக்யம் அந்த அயப்பிண்டத்தில் விளங்குவதுபோலும், கதிரவன் வெப்பத்திலும் அவன் கிரணங்கள் காய்ந்த மணலில் வெப்பம் அதிகமா யிருத்தல்போலும் சிவபெருமானிலும் சிவபெருமானா லதிட்டிக்கப்பட்ட ஆசாரியன் அதிகன். இதனால் நம்போலிகளுக்குக் காரிய சித்தியும் அதிகம். கேவலம் பகவத்சொரூபனாம்போது சுவாதந்தரியப் பிரகாசனாகின்றான். அதிட்டிக்குமளவிலே அடியார்கட்கெளிவரும் சுலபனாகின்றான். ஆசாரிய விஷயத்தில் சர்வசித்திகளும் திண்ணமாகையால், ஆசாரியன் பகவத்சொரூபத்திலும் அதிகனென்பது இரகசியபோதகமாயுள்ளது.
  • ஆசாரியன் ஈசுவரரூபி யாவ தெப்படி?

    ஆன்மகோடிகளனைத்தும் அறிவித்தலன்றி அறியாவுளங்கள் என்றமையினாலே ஏனையோர்க்கறிவிக்கும் சக்தியில்லாமை தானே போதரும். அவ்வாறு அறிவிக்கும் சித்து சிற்றம்பலவன் சிற்சபேசன் என்னும் சப்தவாச்சியனாகிய அம்பலவாணர் ஒருவரேயாதலால் அம்மூர்த்தியே தனது காளகண்டம் திரிநேத்திரம் முதலியவற்றை மறைத்து மானைக்காட்டி மானைப்பிடிக்கும் வழக்கம்போல் மானிடச் சட்டை சாத்தி அறிவிக்கப்படும் சித்தாகிய ஆன்மா தன்னையும் தலைவனையும் உணருமாறு அருட்கோலங்கொண்டு எழுந்தருளிய அவதரம் குருமூர்த்தமாதலால் அவர் ஈசுவர ரூபியேயாம்.
  • ஆசாரியனுக் கிருக்கவேண்டிய முக்கிய இலக்கணங்களென்ன?

    சிவபெருமானுடைய அதிசயப் பிரபாவங்களை ஆன்ம கோடிகளுக்கு அற்புதவாயிலாய் நடததிக்காட்டலும், தான் வேறொரு ஆசாரியனை அபேக்ஷியாதிருத்தலுமாம். இன்றேல் முக்காலத்தும் ஆசாரியனாகான்.
  • அவ்வாசிரியன் எவ்வாறு ஆன்மகோடிகளை இரக்ஷிக்கின்றான்?

    சமதமாதி ஆன்மகுணங்க ளுண்டான பின்னும், தானுடைமை அவனுடையவன், உடைமை உடையவளிட்டவழக்காயிருக்கும் என்ற சொரூபஞானமுண்டாய்ச் சொத்தினுடைய லாப நஷ்டம் சொத்துக்காரனுக்கே யென்னு மகாவிசுவாச முண்டானபின்னும் இரக்ஷிக்கிறவன் ஈசுவரன். இவ்விதமான சேதன கிருத்தியத்தைப் பாராது தன்னுடைய நிர்ஹேதுகமான அபிமானத்தினாலேயே மருந்து அருந்தாத சிசுவுக்குச் சங்கிலிட்டு வார்க்கும் தாய்போல இரக்ஷிப்பவன் ஆசாரியன்.
  • ஆசாரியன் ஆன்மகோடிகளின் அஞ்ஞானத்தை எவ்வாறு அகல்விப்பான்?

    ஆசாரியன் உபகாரகாசரியனாம் போது தீக்ஷாக்கிரமத்தினால் தத்துவ நியதிசெய்து ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை யுபதேசித்து, பதி, பசு, பாச, பதார்த்த த்ரயஞானத்தையும் ஆன்மசொரூபம், பிரமசொரூபம், பிரமத்தையடையும் உபாயத்தின் சொரூபம், பிரமத்தை யடையவொட்டாதபடிச் செய்யும் திரோதையின் சொரூபம், ஆன்மாக்களடையும் புருஷார்த்தத்தின் சொரூபம் ஆகிய அர்த்த பஞ்சக ஞானத்தையும் உண்டாக்கி ஈசுவரனே உபாய உபேயமென்று காட்டி யகல்விப்பன். அவன் உத்தாரகாசாரியனாம் போது தன்னுடைய விசேஷாபிமானத்தாலே அவனுக்குச் சொரூபயாதாத்மய ஞானத்தை விளங்கச் செய்து தானேயுபாய உபேயமாகின்றான்.
  • தீக்ஷையாவதென்ன?

    பாசத்தைக் கெடுத்து ஞானத்தைக் கொடுத்தல் என்பது பொருள்.
  • தீக்ஷை யெத்தனை வகைப்படும்?

    சக்ஷுதீக்ஷை, ஸ்பரிசதீக்ஷை, வாசகதீக்ஷை, மானசதீக்ஷை, சாஸ்திரதீக்ஷையென அறுவகையாம்.
  • மேற்கூறிய அறுவகை தீக்ஷைகளையும் விளக்குக?
    (1) அத்துவா மார்க்கம் குறியாது குறித்துச் சுருக்கிப் பாசம் கழலப் பார்த்தல் சக்ஷுதீக்ஷையாம்.
    (2) அப்படிக் குறித்துச் சிவஅத்தம் வைத்தல் ஸ்பரிச தீக்ஷையாம்.
    (3) பதினொரு மந்திரத்தோடு ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை உபதேசித்தல் வாசகதீக்ஷையாம்.
    (4) யோகமார்க்கத்தால் சீஷனது இருதயம் பிரவேசித்துச் சிந்தித்தல் மானசதீக்ஷையாம்.
    (5) ஆகமப்பொருளைச் சுருக்கி உபதேசித்தல் சாஸ்திரதீக்ஷையாம்.
    (6) யோக மார்க்கத்தால் சீஷனிருதயம் பிரவேசித்து நக்ஷத்திரம் போலிருக்கின்ற சீவனை விட்டுப் பாசம் நீங்கப் பார்த்துத் துவாதசாந்தத்தில் சிவனிடத்தில் யோசித்தல் யோகதீக்ஷையாம்.
  • இத்தீக்ஷைகளிற் பேதமுண்டோ?

    நிர்ப்பீஜம், சபீஜம் என இருவகைத்தாம்.
  • இவை முறையே எவ்வெவருக்கு அருகமாம்?

    பாலர், சத்தினிபாத லக்ஷணம் காண்பிவிக்கும் சாமர்த்தியமுடையராய ஆசாரமனுஷ்டிக்கும் சாமர்த்தியமிலராய் நிரம்பவோதி உணராதவர்களாய், பதினாறு வயதுட்பட்டவர்களாய் அனுஷ்டானத்தில் அசக்தராய் உள்ளவர்கள். எழுபது வயதுக்குமேற்பட்டார், சத்தினிபாதத்து மகளிர்கள், யோக வாஞ்சையுள்ளவர்கள், வியாதியாளர்கள், இவர்களுக்குச் செய்யுந்தீக்ஷை நிர்ப்பீஜமாம். ஓதியுணர்ந்து ஒழுக்கம் குறைவுபடாதிருக்கும் உத்தமர்களுக்குச் செய்வது சபீசதீக்ஷையாம்.
  • தீக்ஷையில் பேதமுண்டோ?

    சமயதீக்ஷை, விசேஷதீக்ஷை, நிர்வாணதீக்ஷை எனமூன்று வகை. அவைகளில் சமயதீக்ஷை எவ்வகைப்பட்டவர்களுக்கும் செய்யப்படுவது. மற்ற இரண்டு வகை தீக்ஷையும் சீஷனுடைய பக்குவமறிந்து செய்யத்தக்கது.
  • முதல் தீக்ஷைக்குக் சமயதீக்ஷை என்கிற பெயர் எதனா லுண்டாயது?

    இந்த தீக்ஷை செய்துகொண்டாலே சைவ சமயத்துக்கு உரியவனாகிறான். அதனால் சமயதீக்ஷை என்று பெயர். இந்த சமயதீக்ஷையினுஞ் சிறப்புள்ள தாகையால் விசேஷதீக்ஷை யென்றும், மோக்ஷந் தரத்தக்கதாகையால் நிர்வாண தீக்ஷை யென்றும் மற்ற இரண்டு தீக்ஷைக்கும் பெயருண்டாயது. (நிருவாணமென்பது மோக்ஷத்துக்கொருபெயர்.)
  • விபூதி ருத்திராக்ஷம் தரித்துக் கொள்ளவும் சிவதரிசனம் சிவார்ச்சனை செய்யவும் விவேகமில்லாத மிருக முதலான செந்துக்களுக்குச் சிவபுண்ணிய மெவ்வாறு சித்திக்கும்?

    பரமேசுவரன் அநாதி கேவலத்திற் கிடந்த ஆன்மாக்களை அநாதி சிருஷ்டிசெய்கிற காலத்திலே தான் தலமாகவும் தீர்த்தமாகவும் மூர்த்தியாவும் திருமேனி கொண்டெழுந்தருளிச் சிவஸ்தலங்களிலே புழு முதலானவை சனித்தாலும் நசித்தாலும் சிவபுண்ணியம் உண்டாகவும் தீர்த்தத்திலே மீன் முதலானவை சனித்தாலும் வசித்தாலும் நசித்தாலும், நாற்கால் மிருகங்கள் மனிதர் முதலானவர்கள் பக்ஷிகள் முதலானவைகள் தீர்த்தத்தைக் குடித்தாலும் முழுகினாலும் திவலைகள் தெறிக்கப்பட்டாலும் சிவபுண்ணிய முண்டாகவும் அருளினார். மறு பிறவியில் சிவலிங்கப் பெருமானுக்குச் செய்யும் அபிஷேகம் அருச்சனை நிவேதனம் முதலானவைகளுக்குரிய விருக்ஷ சாதிகளாகவும் நெல் முதலிய பயிர்களாகவும் பசு முதலாகிய மிருக சாதிகளாகவும் சனிப்பித்துச் சிவபுண்ணிய முண்டாக்குவர்.
  • பசு முதலான சில மிருகங்கள் சிவலிங்கப் பெருமானுக்குச் செய்யும் அபிஷேக முதலானவைகளுக்கு எவ்வாறு உதவுகின்றன?

    பசு தன்னிடத்திலுண்டாகும் பஞ்சகவ்வியம் கோரோசனை யிவைகளாலுதவுகின்றது. பச்கவ்வியமாவது, பால், நெய், தயிர், கோமயம், கோசலம் என்பவைகளாம். இவ்வாறு அபிஷேகத்துக் குதவுதலமன்றிப் பால், தயிர், நெய், நிவேதனத்துக்கும் உதவுகின்றது.
  • இன்னும் எதற்கு உதவுகின்றது?

    பசுவும் அதனினமாகிய எருதும் பேரி மத்தள முதலான தோற்கருவி மூலமாகவும் யாழ் முதலான நரம்புக்கருவி மூலமாகவும் உதவுகின்றது.
  • மற்ற எந்த மிருகம் இவ்வாறு உதவுகின்றது?

    புனுகுபூனை கஸ்தூரிமிருகம் இவைகளும் உதவுகின்றன. மயில் விசிறிரூபமா யுதவுகின்றது.
  • விருக்ஷசாதிகளெவ்வாறு உதவுகின்றன?

    வாழை, பலா, மா, தெங்கு முதலிய சில விருக்ஷங்கள் அபிஷேகத்துக்கும் நிவேதனத்துக்கும் உரிய கனிவர்க்க மூலமாகவும் எலுமிச்சை, நாரத்தை முதலாகிய மரங்கள் அபிஷேகத்துக்கும் நிவேதனத்துக்கும் கனிமூலமாகவுமுதவுகின்றன. இதவுமின்றி திருமஞ்சனத்திரவிய மூலமாக உதவுகின்ற விருக்ஷங்கள் செடிகள் கொடிகள் சிவார்ச்சனைக்குரிய திருப்பள்ளித்தாம மூலமாக உதவுகின்றன. (திருப்பள்ளித்தாமமாவது பத்திர புஷ்பம். இந்தப் புஷ்பங்கள் கோட்டுப்பூ, சொடிப்பூ, நீர்ப்பூ, புகர்ப்பூ என நாலுவகையாயிருக்கின்றன.)
  • இதற்கு உதாரணமாகச் சரித்திரங்களுண்டோ?

    பல விசேஷத்தினால் கரிக்குரவி நாரையென்னும் பக்ஷிகளும் பன்றியும் மோக்ஷமடைந்தன. இதுவுமின்றி யானை, நாகம், சிலந்தி, வானரம், தவளை, அணில், எறும்பு முதலியவைகள் மோக்ஷமடைந்தன. திருஞானசம்பந்த சுவாமிகள் ஆண்பனை பெண்பனையாகும்படிப் பதிக மருளிச்செய்த போது அந்தப்பனைக்கு மோக்ஷங்கிடைத்தது. சந்தானாசாரியர்களிலொருவராகிய உமாபதிசிவாசாரியார் சிதம்பரத்தில் ஒரு முள்ளிச்செடிக்குத் தீக்ஷைசெய்ய அச்செடி அப்போதே தீய்ந்து மோக்ஷமடைந்தது.
  • வீடுபேறாகிய முத்தியைப் பெறுவதற்கு நேர்வழி யாது?

    (1) ஞானத்தை உயிர்க்கு ஏற்படுத்தும் பன்னிரு திருமுறைகளையும் பதினான்கு சாத்திரங்களையும் முதலில் தான் கற்க வேண்டும்; (2) பின்பு பிறர்க்கு கற்பிக்க வேண்டும்; (3) அவற்றில் உள்ள சிறந்த பொருள் நுட்பங்களை நல்லாசிரியரிடம்தான் கேட்க வேண்டும்; (4) பின்பு பிறர்க்கு எளிமையாக எடுத்துரைக்க வேண்டும்; (5) அத்தகு அரிய பெரிய பொருள்களைப்பற்றிய சிந்தனையுடன் இருக்க வேண்டும். இந்த ஐந்து வழிகளும் இறைவன் திருவடியாகிய முத்திப்பேற்றினை அடைவதற்கு உரிய மேலான நேர்வழிகளாகும்.
    இதற்குப் பிரமாணம் வருமாறு :-
    “ஞானநூல் தனைஓதல்; ஓதுவித்தல்;
    நற்பொருளைக் கேட்பித்தல்; தான் கேட்டல், நன்றாய்
    ஈனமிலாப் பொருளதனைச் சிந்தித்தல் ஐந்தும்
    இறைவன் அடி அடைவிக்கும் எழில் ஞானபூசை" - சித்தியார் (275)
  • இத்தகு ஞானம் உயிர்க்கு எப்போது கிட்டும்?

    முதலில், ஞானத்தைப் பெறவேண்டும் என்னும் வேட்கையைப் பெருக்கும் (வேணவா) உயிர்க்கு ஏற்பட வேண்டும். அந்த வேட்கை பெருகப் பெருக, உயிர்கள் பல சிவப்பணிகளில் ஈடுபடும். அத்தகைய ஈடுபாடு, உயிர்க்கு மலபரிபாகம், இருவினை ஒப்பு, சத்திநிபாதம் ஆகியவற்றை நிகழ்த்தும். அப்போது உயிர்க்கு ஞானம் கிட்டும்.
  • மலபரிபாகம் என்பது யாது?

    ஆணவமலத்தின் ஆற்றல், ஆன்மாவின் அறிவு இச்சை செயல்களை மறைக்க இயலாமல், நிற்கும் நிலையே, “மலபரிபாகம்" எனப்படும். (மலம் - ஆணவமலம், பரி - உபசர்க்கம்; பாகம் - திரிவு; பக்குவம்) அ•தாவது ஆணவமலத்தின் காரியங்கள் ஆகிய மோகம், மதம், இராகம், கவலை, தாபம், வாட்டம், விசித்திரம், என்னும் கெட்ட குணங்கள் ஆன்ம அறிவை விட்டு நீங்குதல். மலபரிபாகத்தின் பயன் இருவினை ஒப்பு.
  • இருவினை ஒப்பு என்பது யாது?

    ஒருவன் தான் செய்த நல்வினைப் பயன் ஆகிய இன்பத்தில் விருப்பும், தீவினைப் பயன் ஆகிய துன்பத்தில் வெறுப்பும் கொள்ளாமல் இரண்டு பயன்களையும் சமமாகக் கருதும் நிலையை எய்துவதே, ‘இருவினை ஒப்பு' எனப்படும். இருவினை ஒப்பின் பயனாகச் சத்திநிபாதம் நிகழும்.
  • சத்திநிபாதம் என்பது யாது?

    சத்தி - இறையருள்; நிபாதம் - வீழ்ச்சி உயிரின் அறிவு இச்சை செயல்களைத் திரோதானமாய் நின்று, மறைப்பைச் செய்து வந்த இறைவனது அருளாற்றல், மலபரிபாகமும் இருவினை ஒப்பும் எய்தப்பெற்ற உயிரின் மீது பதிதல், “சத்திநிபாதம்" எனப்படும். அதன் பயன், சிவபுண்ணியம் ஆகிய தவம் ஆகும்.
  • புண்ணியம் எத்தனை வகைப்படும்?

    புண்ணியம், பதிபுண்ணியம், பசுபுண்ணியம் என இருவகைப்படும். பதி புண்ணியம் சிவபுண்ணியம் எனவும்படும். பசு புண்ணியம் உயிர்புண்ணியம் எனவும் படும்.
  • இருவகைப் புண்ணியங்களின் இயல்பு யாது?

    பதி புண்ணியம், சிவபெருமானை நோக்கிச் செய்யப்படும் நற்செயல்கள் ஆகும். சிவபெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் நோக்கிச் செய்யும் நற்செயல்கள் அனைத்தும் பசுபுண்ணியம் ஆகும். பதி புண்ணியங்கள் ஒருபோதும் அழிவில்லாமல் என்றும் நின்று முத்தியைக் கொடுக்கும். பசு புண்ணியங்களுக்கும் பயன் உண்டு; ஆனால், அப்பயன் அனுபவித்து முடிந்ததும் அழிந்துவிடும். பதி புண்ணியப்பயன் சிவபெருமானால் அனுபவிக்கப் படாததால், அழிவதில்லை. அதன் பயன், உயிர்களுக்கு நிலையான இன்பத்தைத் தருவதே ஆகும்.
    பசு புண்ணியம் பயன் அழிந்துவிடுவதற்கு ஓர் எடுத்துக் காட்டு வருமாறு :-
    பசியோடு இருக்கும் ஒருவனுக்கு உணவு கொடுப்பது பசு புண்ணியம்; அவ்வுணவின் பயனாக, அவனுக்குள்ள பசி ஆறுகிறது. அவனுக்கு மீண்டும் பசி வரும்போது, முன்புண்ட உணவின் பயன் அனுபவிக்கப்பட்டுவிட்டதால், அவனுக்குச் செய்த பசு புண்ணியமும் அத்தோடு அழிந்துவிடுகிறது.
    இவ்வுண்மையைச் சிவஞானபோதம் எட்டாம் சூத்திரம் முதல் அதிகரணத்தில் உள்ள வெண்பாவில்,
    “பசித்து உண்டு, பின்னும் புசிப்பானை ஒக்கும்
    இசைத்து வருவினையில் இன்பம்." என்று மெய்கண்டார் தெளிவுற அருளிச்செய்துள்ளார்.
    உயிர்களுக்கு செய்யும் நல்வினைகள், இறைவனை நினைந்து, அவனருளால் செய்யப்படுவதாகக் கருதிச் செய்வோமானால், அவை பதி புண்ணியங்களாகும்.
  • இத்தகு சிவப்புண்ணியங்களில் ஈடுபடுதற்கு வழியாது?

    இத்தகு சிவ புண்ணியங்களில் ஈடுபடுவதற்கு நற்குருவை நாட வேண்டுவது முதற்கண் செய்யவேண்டியது ஆகும். அத்தகு குருவருளில் நின்று ஒழுகினால், தவ முயற்சியாகிய சிவ புண்ணியத்தில் ஈடுபாடு ஏற்படும்.
  • நற்குரு என்பவர் யார்?

    சரியை, கிரியை, யோகம் ஆகிய நெறிமுறைகளை உணர்த்துபவர் ‘கிரியாகுரு' எனப்படுவார்; ஞானத்தை உணர்த்துபவர் ‘ஞானகுரு' எனப்படுவார். ஞானத்தைச் சிவபெருமான் ஒருவனே உணர்த்துவான். எனவே, அவனே “ஞானகுரு" ஆவான்.
  • கிரியா குரு, சரியை முதலியவற்றை எவ்வாறு உணர்த்துவார்?

    சமய தீக்கை, விசேட தீக்கை முதலியவற்றைத் தவமுயற்சியில் ஈடுபடும் மாணவர்க்கு அளித்து, சரியை முதலியவற்றை உணர்த்துவார்.
  • தீக்கை என்பது யாது? அது எத்தனை வகைப்படும்?

    தீட்சை (தீக்ஷை) என்ற வடசொல் திரிந்து தீக்கை ஆயிற்று. தீ - கெடுத்தல்; க்ஷை - கொடுத்தல். அ•தாவது பாசத்தைக் கெடுத்து மோட்சத்தைத் தரும்பொருட்டு குருவிடமிருந்து பெறும் மந்திர உபதேசம் பொதுவாகத் ‘தீக்கை' எனப்படும்.
    தீக்கையில் பல வகைகள் உள்ளன.அவற்றுள் மூன்று முக்கியமானவை. அவை வருமாறு :-
    1. சமயத்தீக்கை:- ‘உபநயனம்' எனப்படும் பூணூல் போடுவது எவ்வளவு இன்றியமையாததோ அதுபோல ‘சைவசமயி' என்பவருக்குச் சமயத்தீக்கை அவசியமாகும். பூணூல் அணியாதவர், வேதியர் ஆகார்; அவ்வாறே “சமயதீக்கைபெறாதவர் சைவசமய ஆகார்." இது சமய நுழைவுக்கு அனுமதி பெறுவதாகும்.(It is just like an entrance to the saivism)
    2. விசேட தீக்கை:- கிரியாபாத யோகபாத முறைகளில் செய்யப்படுவது. இந்தத் தீக்கை பெற்றவரே சிவலிங்க மூர்த்தியையோ, மகேசுவர மூர்த்தியையோ எழுந்தருளச் செய்து குருவிடம் பெற்றுச் ‘சிவபூசை' செய்வதற்குரிய தகுதி உடையவர் ஆவார். இந்த தீக்கையினைப் பெற்ற பின்னர் செய்யப்படும் புறப்பூசை மற்றும் அகப்பூசைகளில், சிவபெருமான் முனைந்து நின்று அருளை வழங்குகிறான் என்று சிவாகமங்கள் கூறுகின்றன.
    3. நிருவாண தீக்கை:- பாசபந்தம் அனைத்தையும நீக்கிச் சிவபெருமான் திருவடியை அடையும்படி செய்யும் தீக்கை நிருவாண தீக்கையாகும். இந்தத் தீக்கையில் குருநாதர், சீடனது மலத்தை நீக்கும் பொருட்டு, ஆறு அத்துவாக்களிலும் சஞ்சிதமாயிருக்கும் கன்மங்களை எல்லாம் போக்குவார். கன்மம் நீங்கவே மாயாகாரியங்களும் ஆணவத்தடையும் அறவே நீங்கும்; அப்போது திரோதான சத்தி அருட்சத்தியாக மாறி, ஞானத்தை வழங்கும். இவற்றைப் பற்றிய விரிவான விளக்கங்களை சிவஞானபாடியத்தில் காணலாம்.
  • தீக்கையின்போது, உச்சரிக்கும் பொருட்டு மந்திரங்கள் உள்ளனவா?

    சமயத்தீக்கையின்போது, அணிந்துகொள்ள வேண்டிய ஒவ்வொரு அங்கத்திலும் உரிய மந்திரம் சொல்லி, திருநீற்றைத் தண்ணீரில் குழைத்து இட்டுக்கொள்ள வேண்டும். பின்பு உருத்திராட்சிரமாலையைக் கொண்டு, குருநாதர் உபதேசித்தபடி அஞ்செழுத்து மந்திரத்தை மனத்தில் நூற்றெட்டுமுறை எண்ணவேண்டும். இவ்வாறு ஒவ்வொரு தீக்கைக்கும் ஒவ்வொரு வகை மந்திரம் உண்டு. தீக்கைகளின்போது, கைவிரல்களால் செய்யப்படும் பல்வேறு முத்திரைகளும் உண்டு. இவற்றை எல்லாம் சற்று முயன்று கற்க வேண்டும்.
  • இதனைப் படிக்கும்போதே தலைசுற்றுகிறதே! சிவபுண்ணியத்தில் ஈடுபடுவதற்கு இவ்வளவு சிரமம் மேற்கொள்ள வேண்டுவது அவசியமா?

    சிவபுண்ணியம் என்பது சிவனை நினைந்து செய்யும் நற்செயல்கள் என்று முன்பே கூறப்பட்டது நினைவிருக்கலாம். தீக்கை முறைகள் அனைத்தும் நமது உள்ளத்தைப் பக்குவப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட சடங்குகளே ஆகும். பலர் சடங்கு மாத்திரையாக இவற்றை எல்லாம் செய்வார்கள். ஆனால் சிவனை நினைந்து நற்கருமம் செய்தல் என்னும் முதன்மையான விதியை மட்டும் கடைப்பிக்காமல் ஒழுகுவர். தாம் கற்ற சாத்திர அறிவைப் பற்றிப் பெருமை அடித்துக் கொண்டிருப்பார்கள். அந்த அறிவே சிவனருனால் நமக்குக் கிடைத்தது என்ற உணர்வு மறந்து திரிவர்.
    எனவே சடங்குகளை நினைந்து திகைப்படைய வேண்டா. சமய தீக்கை மட்டுமோ அல்லது விசேட தீக்கையுமோ பெற்று அளவோடு மந்திரங்களையும் முத்திரைகயும் கற்றுக்கொண்டு, இறையுணர்வோடு எப்போதும் ஒழுகி வந்தால் போதும். அதுவே தவம் ஆகும். தன்முனைப்பு சிறிது சிறிதாக அடங்கவேண்டும் ‘எல்லாம் அவன் செயல்; சிவன் செயல்' என்ற உணர்வு தலைப்பட வேண்டும். அஞ்செழுத்தை சதா எண்ணிக்கொண்டே இருக்கவேண்டும். அதுவே போதும்.
    சமயத்தீக்கை அஞ்செழுத்தை விதிப்படி எண்ணும் பழக்கத்தை நமக்கு ஏற்படுத்துகிறது. விசேட தீக்கை நம்மை அன்றாடம் சிவபூசையில் பழக்குகிறது. எனவே இவ்விரு தீக்கைகளும் இன்றியமையாதனவே ஆகும். இவ்விரண்டிற்கும் நாள் ஒன்றுக்கு ஒருமணி நேரம் ஆகும். அ•தாவது நாம் செய்யலாம் அல்லவா? நம் உள்ளத்தில் சிவநினைவு ஒன்றே எப்போதும் வேண்டற்பாலது. பிற சடங்குகளில் எல்லாம் அவ்வளவு நாட்டம் தேவை இல்லை என்னும் உண்மையைச்,
    “சாத்தி ரம்பல பேசும் குழக்கர்காள்
    கோத்தி ரமும் சலமும்கொண்டு என்செய்வீர்?
    பாத்தி ரம்சிவம் என்று பணிதிரேல்
    மாத்தி ரைக்குள் அருளும்மாற் பேறரே" (5-60-3)
    என்று அப்பரடிகள் நமக்கு அருளிச்செய்துள்ள திருவாக்கிலிருந்து உணரலாம். அவரே,
    “இருந்து சொல்லுவன் கேண்மின்கள் - அஞ்செழுத்து ஓதினால் அருந்தவம் தரும்" (5-60-4) என்று குருநாதராக அமர்ந்து கூறியதால் அதுவே நமக்குப் பரமப் பிரமாணமாக உள்ளது.
  • சரியை கிரியை யோகம் ஆகியவற்றைச் செய்தால் முத்தி கிடைக்குமா? அல்லது ஞானம் பெற்றால்தான் முத்தியைப் பெற முடியுமா?

    ‘ஞானம்' என்பது சரியை முதலிய தவங்களின் விளைவே ஆகும். சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன முறையே அரும்பு, மலர், காய், கனி போன்றவை என்பதைத் தெளிவுபடுத்தி,
    “விரும்பும் சரியைமுதல் மெய்ஞ்ஞானம் நான்கும்
    அரும்பு மலர் காய் கனிபோல அன்றோ பராபரமே"
    என்று ‘தவராஜசிங்கம்' தாயுமானவர் அருளிச் செய்துள்ளார்.
    சில நோய்களுக்கு அரும்பை மட்டும் உண்டால் அந்நோய் நீங்குவதைக் காண்கிறோம்.வேறு சில நோய்களுக்கு மலரை மட்டுமோ காயை மட்டுமோ உண்டாலே நோய் நீங்குகின்றது. அவ்வாறே சரியை நெறியில் நின்றாலும் மலநீக்கம் பெற்று வீடுபேறு எய்தலாம். கிரியை யோகம் ஆகிய நெறிகளில் நின்றாலும் முத்தி பெறலாம். ஞானம் கனி எனப் போற்றப்பட்டிருப்பதற்குக் காரணம் இறைவனை நினைந்து கலந்த அன்பாகிக் கசிந்து உள்ளுருகும் நிலைக்கு அது நம்மை இட்டுச் செல்வதாலேயே ஆகும்.
    அந்நிலை ஞானத்தில் சரியை முதலியன உடையவருக்கும் உண்டு எனவேதான், “ஞானம் ஈசன்பால் அன்பே" (சம்பந்தர் புராணம் - பெ.பு) என்று சேக்கிழார் அருளிச் செய்தார்.
    சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு நெறிகளில் ஏதேனும் ஒரு நெறியில் உறைப்போடு நின்றால் வீடுவேறு பெறமுடியும் என்பதை மெய்ப்படுத்தும் பொருட்டே அப்பர், சம்பந்தர், சுந்தரர், மணிவாசகர் ஆகிய நால்வர் பெருமக்களையும் நம் முன்பு தோன்றச் செய்து இறைவன் நமக்கு வழிகாட்டியுள்ளான். இந்நான்கும் சிவனை அடைவிக்கும் சிவநெறிகள் எனவே, இவற்றைக் கடைப்பிடிப்பவர்கள் சிவனடியார்கள் எனப்படுகிறார்கள்.
    இவ்வுண்மையைச் சிவஞானசித்தியாரில்,
    “ஞானம், யோகம், கிரியை, சரியை நாலும்
    நாதன்தன் பணி ஞான நாலினுக்கும் உரியன்."

    என்று அருணந்திசிவம் அருளிச்செய்துள்ளார்.

    • பொருளடக்கத்திற்குச் செல்ல இங்கே சொடுக்கவும்
    • வழிபடும் முறை (சாதனஇயல்)

      [*]இறைவனை வழிபடுவதற்கான வழிமுறைகள் யாவை?

      சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்குமே இறைவனை வழிபடுவதற்கான நெறிகள் ஆகும்.

      இவற்றுள் சரியை என்பது, உடலால் வழிபடுவது. அ•தாவது திருக்கோயிலை வலம் வருவது, திருக்கோயிலுக்குப் பூ மாலைகொடுப்பது, திருக்கோயிலில் துப்புரவுப் பணி செய்வது முதலியன உடலால் வழிபடுவது ஆகும்.

      கிரியை என்பது வாயினால் வழிபடுவது. அதாவது அஞ்செழுத்து மந்திரங்களை ஓதுவது, திருமுறைகளை நாள்தவறாமல் படனம் செய்வது, சாத்திர தோத்திரக் கருத்துக்களைப் பிறர்க்கு எடுத்துரைப்பது முதலியன வாயினால் செய்யும் வழிபாடு ஆகும்.

      யோகம் என்பது மனத்தினால் வழிபடுவது. அதாவது வழிபடு தெய்வத்தின் வடிவத்தை மனத்தில் வைத்து தியானிப்பது. அந்தரியாக பூசை செய்வது, அஞ்செழுத்து மந்திரத்தை உள்ளத்தால் அக்குமாலை கொண்டு எண்ணுவது முதலியன மனத்தினால் செய்யும் வழிபாடு ஆகும்.

      இம்மூவகை வழிபாடுகளையும் தவறாமல் செய்து வந்தல், இறைவன் நமக்கு ஞானத்தை உணர்த்துவான். அவ்வாறு உணர்த்தும்போது, சீவன்முத்தர்களை அதிட்டித்து நின்றோ, குருநாதனாக வந்தோ, மானுடச் சட்டை போத்தியோ வந்து உணர்த்துவான். எனவே, குருபீடத்தில் அமர்ந்துள்ள ஞானிகளை வழிபடுவது ஞானநெறியில் செய்யும் வழிபாடாகும்.

      மனம், வாக்கு, காயங்களால் சிவபெருமானை வழிபட வேண்டும் என்பதற்காகவே இந்த மனிதப் பிறவி நமக்கு வழங்கப்பட்டது. இவ்வுண்மையைத் தெளிவுபடுத்திச் சிவஞானசித்தியாரில்,

      “மானுடப்பிறவி தானும் வகுத்தது மனம் வாக்குக் காயம்

      ஆன இடத்து ஐந்து ஆகும் அரன்பணிக் காக அன்றோ" (182)

      என்று அருணந்திசிவம் அருளிச்செய்துள்ளார்.

      [*]தெய்வ வழிபாடு என்பது யாது?

      ஒவ்வொருவரும் தாம் வழிபடுவதற்கு என ஒரு தெய்வவடிவத்தை மேற்கொள்ள வேண்டும். அத்தகு தெய்வ வடிவம், மகேசுவர மூர்த்தங்கள் இருபத்தைந்தனுள் ஒன்றாகவோ, சதாசிவ வடிவமாகிய சிவலிங்க வடிவாகவோ இருக்க வேண்டும். அந்த வடிவத்தையே மனத்தினால் எப்போதும் நினைக்க வேண்டும். அந்த தெய்வத்தைக் குறித்த பாடல்களை வாயினால் ஓத வேண்டும். அத்தெய்வத்திற்குரிய மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். அவ்வாறு வழிபட்டு வருவோமானால், சிவபெருமான் அத்தெய்வவடிவில் நின்று, நமக்கு வேண்டுவன யாவற்றையும் செய்தருள்வான்.

      இவ்வுண்மையைச் சிவஞானசித்தியார்,

      ‘‘மனமது நினைய வாக்கு வழுத்த மந்திரங்கள் சொல்ல

      இனமலர் கையில் கொண்டு அங்கு, இச்சித்த தெய்வம் போற்றிச்

      சினம் முதல் அகற்றி வாழும் செயல் அறம் ஆனால் யார்க்கும்

      மனம் ஒரு தெய்வம் எங்கும் செய்தற்கு முன் நிலையாம் அன்றே"(114)

      என்று தெளிவுபடுத்தியுள்ளது.

      ‘இச்சித்த தெய்வம்' என்பது வழிபடுவதற்குத் தேர்ந்து எடுத்துக்கொண்ட வடிவம் என்பதாகும். ‘செயல் அறம்' என்பது, (122) ஆம் தடைக்குள்ள விடையில் கூறியுள்ள பதினாறு சைவ ஒழுக்கங்கள் ஆகும்.

      [*]மகேசுவர வடிவங்கள் இருபத்தைந்தையும் சிவலிங்க வடிவத்தையும் மட்டுமே, வழிபடு தெய்வமாகக் கொள்ள வேண்டும் என்பதற்கு என்ன காரணம்?

      இறைவன் பிறப்பு இறப்பு இல்லாதவன்; உயிர்கள் அனைத்தும் பிறப்புக்கு உட்படுவன. பிறவித் துன்பத்தைப் போக்கிக் கொள்ளும் பொருட்டு வழிபடுகின்ற நாம், பிறப்பு இறப்புக்கு உட்படாத இறைவனின் வடிவங்களையே வழிபடவேண்டும். அவ்வடிவங்களில் மட்டுமே இறைவன் முனைந்து நின்று நமக்கு அருள் பாலிக்கிறான். இவற்றைத்தவிர, பிற தெய்வ வடிவங்கள் வழிபாட்டுக்கு உரியனவல்ல. இதற்குக் காரணம், அவ்வடிவங்களை உடைய தெய்வங்கள் உயிர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள், ஒவ்வொரு பிறப்பிலும் துன்பப்படுகிறார்கள்; அடுத்துப் பிறப்பதற்குரிய வினைகளைச் செய்கிறார்கள். எனவே அத்தெய்வங்களால் நமக்கு அருளை வழங்க முடியாது. எனவே மகேசுவர வடிவங்கள் இருபத்தைந்தையும் சதாசிவ வடிவத்தையும் மட்டுமே வழிபட வேண்டும் என்பது தெளிவாகிறது.

      இவ்வுண்மையைச் சிவஞானசித்தியாரில்,

      “யாதொரு தெய்வம் கொண்டிர் அத்தெய்வம் ஆகி ஆங்கே

      மாதொரு பாகனார்தாம் வருவர்; மற்றத் தெய்வங்கள்

      வேதனைப்படும்; பிறக்கும்; மேல்வினையும் செய்யும்;

      ஆதலால் இவை இலாதான் அறிந்து அருள் செய்வன் அன்றே"(115)

      என்று அருணந்திசிவம் அருளிச் செய்துள்ளார்.

      இன்னும், அந்தத் தெய்வங்கள் அவரவர் நிலையில் நின்று பயன் தருவார்களே அல்லாமல், நமக்கு வேண்டுவனவற்றை எல்லாம் வழங்க, அவற்றால், இயலாது. இதற்கு, “அத்தெய்வம் அத்தனைக் காண்" என்னும் பிரமாணம் தெளிவாக உள்ளது.

      [*]அறநூல்களில் சொல்லப்பட்ட விதிகளின்படி நடந்துகொண்டால் போதாதா? இறைவழிபாடு வேறு செய்ய வேண்டுமா?

      அறநூல்களில் சொல்லப்பட்ட விதிகள் அனைத்தும் இறைவனால் வேதாகமங்களில் கூறப்பட்டவையே ஆகும். அவ்விதிகளின்படி ஒழுகுபவர்களுக்கு உள்ள பயன்களை இறைவனே வழங்க வேண்டியுள்ளது. அறச் செயல்களில் சிறந்தது, இறைவன் கருணையை நினைந்து அவனை வழிபடுவதே ஆகும். எனவே, இறைவன் திருவருளை மறந்துவிட்டுச் செய்யும் அறச்செயல்கள் அனைத்தும் பயனற்றவையே ஆகும். அறநூல்களில் சொல்லப்பட்ட விதிகளின்படி ஒழுகுவதோடு, இறைவழிபாடு செய்வதும் இன்றியமையாதது என்பது இதனால் பெறப்பட்டது.

      இவ்வுண்மையைத் தெளிவுபடுத்திச் சிவஞானசித்தியாரில்,

      “காண்பவன் சிவனேயானால், அவனடிக்கு அன்பு செய்கை,

      மாண்புஅறம்; அரன்தன் பாதம் மறந்துசெய் அறங்கள் எல்லாம்

      வீண்செயல்; இறைவன் சொன்ன விதி அறம்; விருப்பு ஒன்று இல்லான்;

      பூண்டனன் வேண்டல் செய்யும் பூசனை புரிந்து கொள்ளே"

      என்று அருளிச் செய்துள்ளார்.

      [*]சிவபெருமானை எவ்வாறு வழிபட வேண்டும்?

      சிவலிங்கம், சிவனடியார் என்னும் இரு திருமேனிகளையும் ஆதாரமாகக் கொண்டு, சிவபெருமான் உயிர்களின் புறப்பூசையினையும் அகப்பூசையினையும் ஏற்று உயிர்களுக்கு அருள் செய்வான்.

      இவ்விரு பூசைகளுள் அகப்பூசையினைப் பரிபூரண பூசையாக ஏற்று; உயிர்களின் அகத்தே முன் நின்று அருள் செய்வான். இவ்வாறு, சிவபெருமானை வழிபட வேண்டும்.

      இவ்வுண்மையைச் சிவஞானசித்தியாரில்,

      “தாபர சங்கமங்கள் என்று இரண்டு உருவில் நின்று

      மாபரன் பூசைகொண்டு மன்உணிர்க்கு அருளை வைப்பன்;

      நீ, பரன்தன்னை நெஞ்சில் நினைவையேல், நிறைந்த பூசை

      ஆய், பரம்பொருளை நாளும் அர்ச்சி; நீ அன்பு செய்தே"

      [*]அகப்பூசை செய்யும் முறையும் அதனால் பெறும் பயனும் யாவை?

      அகப்பூசை செய்யும் முறை வருமாறு :-

      நமது இதயத்தை அதற்குரிய இடமாகக் கொள்க. நமது கொப்பூழிலிருந்து எட்டு அங்குல நீளமுள் ஒரு தண்டு இருப்பதாகக் கருதுக. அத்தண்டின் முடிச்சில் எட்டு இதழ்கள் இருப்பதாகக் கொள்க. அந்நிலையில் ஒரு தாமரை மலர் இருப்பதாகக் கருதுக. அந்தத் தாமரை மலரின் நடுவே, வழிபடு தெய்வத்தின் வடிவத்தை நிலைபெறச்செய்க.

      அந்த வழிபடு வடிவத்திற்கு வாசனைத் திரவியங்கள், பால், தயிர், நெய், கோசலம், கோமயம், ஆகிய பஞ்சகவ்வியங்களால் திருமுழுக்குச் செய்க. பின்னர், உயர்ந்த ஆடை ஆபரணங்களால் அழகு செய்க. அதன் பிறகு மலர்மாலைகள் சூட்டுக, பின்பு விடுமலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்க. அதன்பிறகு திருவமுது படைத்து ஊட்டுக; பின்பு தூபம் காட்டுக. இவற்றை எல்லாம் மனத்தினாலே கருதிக்கொண்டு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வது ‘அந்தரியாக பூசை' எனப்படும். இ•தே அகப்பூசை செய்யும் முறையாகும்.

      இதனால் பெறும் பயன் வருமாறு :-

      கண்ணாடியை விளக்க விளக்க, மாசு நீங்கி மேலிட்டு வரும் ஒளி போன்று ஆன்மா சுத்தி அடைவதால் சிவபெருமான் நம் வழிபடு தெய்வ வடிவில் நின்று விளங்கித் தோன்றுவான். அதன் பயனாக மும்மலங்களும் நீங்கி ஞானம் தோன்றும். இதுவே ஆன்ம முத்திக்குரிய உயர்ந்த சாதனமாகும்.

      இதற்குப் பிரமாணம் :-

      சிவஞானசித்தியார் (300) மற்றும் (301).

      [*]சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கு நெறிகளில் இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவுமுறை எத்தகையதாக இருக்கும்?

      சரியை நெறியில், இறைவனுக்கும் நமக்கும் உள்ள உளவு முறை, ஆண்டானுக்கும் அடிமைக்கும் உள்ளது போன்றது. கிரியை நெறியில், தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவு முறை போன்றது. யோக நெறியில், தோழனுக்கும் தோழனுக்கும் உள்ள உறவு முறை போன்றது. ஞானநெறியில், குருவுக்கும் சீடனுக்கும் உள்ள உறவுமுறை போன்றது. இந்நெறியில் உள்ள உறவு முறை நாயகனுக்கும் நாயகிக்கும் உள்ளது போன்றதென சிலர் கூறுகிறார்கள்.

      இந்நால்வகை நெறிகளில் உள்ள உறவுமுறை பற்றிய உண்மையைச் சிவஞானசித்தியாரில்,

      “சன்மார்க்கம், சகமார்க்கம், சற்புத்திர மார்க்கம்,

      தாதமார்க்கம் என்றும் சங்கரனை அடையும்

      நன்மார்க்கம் நால், அவைதாம் ஞான யோக

      நற்கிரியா சரியை என நவிற்றுவதும் செய்வர்"

      என்று அருணந்திசிவம் தெளிவுறுத்தியுள்ளார்.

      [*]சரியை நெறியாகிய உடலால் செய்யும் வழிபாட்டில் என்னென்ன சிவப்பணிகள் செய்ய வேண்டும்?

      உடலால் செய்யும் வழிபாடு வருமாறு :-

      1. திருக்கோயில்களில் உள்ளும் புறமும் பெருக்கித் துப்புரவு செய்தல்

      2. திருக்கோயிலில் உள்ள தரையைச் சுத்தமான பசுவின் சாணம் கொண்டு மெழுகுதல்.

      3. அதிகாலையில் எழுந்து, குளித்து, வண்டுகள் மொய்வதற்கு முன், கைநகம் படாமல் மலர்களை கொய்து திருக்கோயிலில் கொடுத்தல்.

      4. பூமாலை தொடுக்கத் தெரியுமானால், இண்டை, தொடை, கண்ணி, பந்து, தண்டிற் கட்டுமாலை முதலிய பூமாலைகளைத் தொடுத்துத் திருக்கோயிலில் சேர்ப்பித்தல்.

      5. பன்னிரு திருமுறைப் பாடல்களை வாயினால் பத்தி பரவசத்துடன் பாடுதல்.

      6. பசுவின் நெய், எள் எண்ணெய் முதலியவற்றால் தீபம் ஏற்றுதல்.

      7. மலர்தரும் மரங்களை கொண்ட திருநந்தவனம் அமைத்தல்.

      8. சிவவேடப் பொலிவு உடையவரைச் சிவனாகவே நினைந்து வழிபடுதல். இதற்குப் பிரமாணம், சிவஞானசித்தியார் (271) ஆகும்.

      [*]கிரியைநெறி ஆகிய மனமும் உடலும் கொண்டு செய்யும் வழிபாட்டில் (பெரும்பாலும் வாயினால் செய்வது) என்னென்ன சிவப்பணிகள் செய்ய வேண்டும்?

      இ•து, ஏறத்தாழ நமது இல்லங்களில் செய்யும் வழிபாடு ஆகும். வீட்டிலுள்ளவர்களது உதவியோடு வேண்டிய உபகரணங்களை அமைத்துக்கொண்டு, வழிபடு தெய்வத்தை (உபாசன மூர்த்தம்) வீட்டில் நிறுவி வழிபடுவது. அப்போது திருமுறைகளைக் கலந்த அன்பாகிக் கசிந்துருகிப் பாடவேண்டும்.

      வீட்டில் என்னென்ன முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்பதை சிவஞான சித்தியாரில் (272) அருணந்திசிவம் அழகுற அருளிச்செய்துள்ளார்.

      [*]யோகநெறி ஆகிய மனத்தினால் செய்யும் வழிபாட்டில் என்னென்ன சிவப்பணிகள் செய்ய வேண்டும்?

      இது சிவயோகம் ஆகும். பொறி புலன்களை ஒடுக்கி, சுவாசத்தை ஒருவழிப்படுத்தி, ஏறத்தாழ அகப்பூசை செய்யும் முறையில் சிவபெருமானோடு ஒன்றிய உணர்வோடு மனத்தைப் பழக்குவதே, யோக நெறியில் செய்யும் பணியாகும். இதற்குப் பிரமாணம் சிவஞானசித்தியார் - (272)

      [*]ஞானநெறியில் செய்ய வேண்டுவது யாது?

      இது சைவம் கூறும் சன்மார்க்கம். இந்நெறியில் நிற்பவர்கள், சிவாகமங்களில் கூறப்பட்ட பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களின் உண்மையையம் இயல்பையும் தெளிவாக அறிதல் வேண்டும். அவ்வறிவின் பயனால், ஞானம் ஏற்படும். அப்போது சிவபெருமானை அறியும் உணர்வு தலைப்படும். அந்நிலையிலும், ஆன்மா தன்னையோ, தனது அறிவையோ, தன்னால் அறியப்படும் சிவனையோ வேறுபடுத்தி உணராமல், சிவனருளில் அழுந்தி நிற்கும் பயிற்சினை மேற்கொள்ள வேண்டும். இதற்குப் பிரமாணம் சிவஞானசித்தியாரி - (274)


  • வழிபாட்டின் பயன்
  • சரியை முதலிய வழிபாடுகளின் பயன் யாது?

    சரியை நெறியில் நின்று வழிபாடுகள் செய்தவர்கள் சிவலோகத்திற்குச் சென்று அவ்வுலகத்தில் உள்ள போகங்களை அனுபவிப்பர்.
    கிரியை நெறியில் நின்றவர்கள் சிவலோக போகத்தை அனுபவிப்பதோடு, சிவபெருமானுக்கு அருகில் இருக்கும் பேற்றைப் பெறுவர்.
    யோக நெறியாளர்கள் சிவபெருமான் கொண்டுள்ள திருமேனிகளில் ஒன்றைப் பெற்று சிவலோகத்தில் சிவபோக அனுபவம் உடையவராய் வாழ்வர்.
    ஞான நெறியில் நின்றவர்கள் சிவபெருமான் திருவடியில் இரண்டறக் கலந்து நின்று நித்தியானந்தத்தை அனுபவித்து வாழ்வர்.
    இந்நான்கு பயன்களையும் முறையே சாலோக, சாமீப, சாரூப, சாயுச்சிய முத்திகள் எனக் கூறுவர்.
  • இந்த ஒரு பிறப்பிலேயே முத்தியைப் பெற்றிவிட முடியுமா?

    சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய சிவபுண்ணிய நெறிகளில் உள்ளன்போடு ஒழுகி வருபவர்கள் இந்தப் பிறப்பிலேயே முத்தியைப் பெற்றுவிட முடியும் என்று சைவசித்தாந்தத்தில் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு ஒழுகி வருபவர்களின் மும்மல அழுக்கை நீக்கி அவர்களை ஞானசாகரத்தில் மூழ்குவித்துச் சிவானந்தம் மேலிடச் செய்து மேல் வரும் பிறப்பை ஒழித்து இறைவன் முத்தியைத் தந்தருள்வான் என்று சிவாகமங்கள் ஆகிய சித்தாந்தத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.எனவே சிவாகம நெறியின் படி நடப்பவர்கள் இப்பிறப்பிலேயே முத்தியைப் பெறலாம் என்பது தெளிவு.
  • சரியை முதலிய நெறிகளில் நின்று எவ்வாறு ஒழுகினால் இப்பிறப்பிலேயே முத்திகிட்டும்?

    சரியையில் சரியை, சரியையில் கிரியை முதலிய பதினாறு வகைகளில், ஞானத்தில் சரியை ஞானத்தில் கிரியை முதலிய நான்கு வழிகளில் நின்று ஒழுகினால் இப்பிறப்பிலேயே முத்தி கிட்டும்.
    அந் நான்கு வழிகள் வருமாறு :-
    ‘ஞானத்தில் சரியை' என்பது, திருமுறைகள் மற்றும் சைவசித்தாந்தப் பொருள்களைப்பற்றித் தக்கவர்களிடம் ‘கேட்டல்' ஆகும்.
    ‘ஞானத்தில் கிரியை' என்பது, அவற்றைக் காரண காரிய இயைபுபடுத்தி எடுத்துக்காட்டுக்களையும் கருத்தில் கொண்டு ‘சிந்தித்தல்' ஆகும்.
    ‘ஞானத்தில் யோகம்' என்பது அவற்றைச் சந்தேகமோ விபரீதமோ இன்றித் தெளிதல் ஆகும்.
    ‘ஞானத்தில் ஞானம்' என்பது, அவ்வாறு தெளிவடைந்த பிறகு, சிவபெருமானின் திருவருளையன்றி நமக்கு எந்தவிதச் செயலும் இல்லை; அறிவும் இல்லை; என்று நினைந்த ‘சிவபெருமானையே சதாகாலமும் நினைந்திருத்தல்' ஆகும். இதனை ‘நிட்டை கூடுதல்' என்று சாத்திரங்கள் பேசும்.
    சாத்திரங்களைக் கற்றலும், பதி, பசு, பாச உண்மைகளை ஆராய்தலும் பர ஞானம் எனப்படும். சரியை முதலிய நான்கனுள் ஈற்றில் உள்ள ஞானத்தை இருவகையாகப் புரிந்து கொள்ளவேண்டும். ஒன்று அபரஞானம்; மற்றொன்று பரஞானம்.
    அபர ஞானம், பரஞானத்தைக் கூடுவிக்கும்; சாத்திரங்களைக் கற்பதோடு அமையக் கூடாது; சரியை, கிரியை, யோகங்களுக்கு அங்கமாகத்தான் சாத்திரங்களை ஓத வேண்டும். சரியை, கிரியை, யோகங்களின் மூலமும் சாத்திர ஞானத்தின் மூலமும் நாம் இறைவனிடத்து, பத்தியை (அன்பை) மிகுவித்துக் கொள்ள வேண்டும். அன்பின் முதிர்வில் இறைவன் குருநாதனாக வந்து ‘பரஞானம்' ஆகிய வியாபக உணர்வை நமக்கு உணர்த்துவான். வியாபக உணர்வின் மூலந்தான், இறைவனோடு இரண்டறக் கலந்து, பேரின்பத்தை அனுபவிக்க முடியும். எனவே பரஞானத்திற்கு பத்தி மிகவும் இன்றியமையாதது என்பதை நாம் நன்றாக உணரவேண்டும்.
    இந்நால்வழிகளும் உயிர்கள் முத்தி பெறும்பொருட்டே உள்ளமையால் சைவசித்தாந்த சாத்திரங்களைக் கற்க வேண்டுவது இன்றியமையாததாகும்.
    இவ்வுண்மையைத் தெளிவுபடுத்திச் சிவஞானசித்தியாரில்,
    “கேட்டலுடன் சிந்தித்தல் தெளிதல் நிட்டை
    கிளத்தல் என ஈர் இரண்டாம்; கிளக்கின் ஞானம்
    வீட்டை அடைந்திடுவர்" (276)
    என்று அருணந்திசிவம் அருளிச் செய்துள்ளார்.
    ‘ஞானம் கிளக்கின்' என்பது ஞானத்தில் சரியை என விரித்துக் சுறுமிடத்து என்பது பொருள். ‘நிட்டை கிளத்தல்' என்பது, ‘நிட்டை கூடுதல்' ஆகும்.

    • பொருளடக்கத்திற்குச் செல்ல இங்கே சொடுக்கவும்
    • திருக்கோயில் வழிபாட்டு இயல்

      [*]திருக்கோயிலுக்கு எப்படிப் போதல் வேண்டும்?

      குளித்துத் தூய்மையான ஆடை அணிந்து, திருநீறு அணிந்து, திருமுறைகளை ஓதிச் சிவ சிந்தனையுடன் செல்லல் வேண்டும்.

      [*]திருக்கோயிலுக்கு அண்மையில் சென்றவுடன் யாது செய்தல் வேண்டும்?

      தூல இலிங்கமாகிய திருக்கோபுரத்தை வழிபட்டு, இரண்டு கைகளையும் தலைமேல் குவித்து இறைவன் புகழ்பாடிக் கொண்டு உள்ளே புகுதல் வேண்டும்.

      [*]திருக்கோயிலுக்கு உள்ளே போனவுடன் யாது செய்தல் வேண்டும்?

      பலி பீடத்துக்கு முன் வீழ்ந்து வணங்க வேண்டும்.

      [*]கிழக்கு நோக்கிய திருக்கோயிலிலும் மேற்கு நோக்கிய திருக்கோயிலிலும் எந்தத் திக்கிலே தலை வைத்து வணங்க வேண்டும்?

      வடக்கே தலை வைத்து வணங்க வேண்டும்.

      [*]தெற்கு நோக்கிய திருக்கோயிலிலும் வடக்கு நோக்கிய திருக்கோயிலிலும் எந்தத் திக்கிலே தலை வைத்து வணங்க வேண்டும்?

      கிழக்கே தலை வைத்து வணங்க வேண்டும்.

      [*]எந்தத் திக்குகளில் கால் நீட்டி வணங்கக் கூடாது?

      கிழக்கிலும் வடக்கிலும் கால் நீட்டி வணங்கல் ஆகாது.

      [*]ஆடவர்கள் எப்படி வணங்க வேண்டும்?

      எட்டு உறுப்புக்கள் நிலம் தோய வணங்க வேண்டும்.

      [*]எட்டு உறுப்பு வணக்கமாவது யாது?

      தலை, கை இரண்டு, செவி இரண்டு, மோவாய், புயங்கள் இரண்டு என்னும் எட்டு உறுப்புக்களும் நிலத்தில் பொருந்தும்படி வணங்குதல்.

      [*]பெண்டிர் எப்படி வணங்க வேண்டும்?

      ஐந்து உறுப்புகள் நிலம் தோய வணங்க வேண்டும்.

      [*]ஐந்து உறுப்பு வணக்கமாவது யாது?

      தலை, கை இரண்டு, முழந்தாள் இரண்டு என்னும் ஐந்து உறுப்புக்களும் நிலத்தில் பொருந்தும்படி வணங்குதல்.

      [*]எத்தனை முறை விழுந்து வணங்க வேண்டும்?

      மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது முறை விழுந்து வணங்க வேண்டும். ஒரு முறை, இருமுறை வணங்கலாகாது.

      [*]விழுந்து வணங்கிய பின் யாது செய்தல் வேண்டும்?

      திருக்கோயில் திருச்சுற்றினை வலம் வரல் வேண்டும்.

      [*]எவ்வாறு வலம் வரல் வேண்டும்?

      இரண்டு கைகளையும் தலையிலாவது, மார்பிலாவது குவித்து வைத்து சிவப் பெயர்களை உச்சரித்துக் கொண்டு, கால்களை மெல்ல வைத்து வலம் வரல் வேண்டும்

      [*]எத்தனை முறை வலம் வரல் வேண்டும்?

      மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது முறை வலம் வர வேண்டும்.

      [*]திருக்கோயிலில் எந்த முறையாக வழிபாடு செய்ய வேண்டும்?

      முதலில் விநாயகரை வழிபட்டுப் பின் பெருமானையும் உமையம்மையையும் வழிபாடு செய்து, திருநீறு வாங்கிக் கொண்டு அதன்பின் அம்பலவாணர், தென்முகப் பரமன் (தக்ஷிணாமூர்த்தி), சேயிடைச் செல்வர், பிறைமுடிப் பெருமான், முருகப் பெருமான் முதலிய திருமேனிகளை வழிபட வேண்டும்.

      [*]விநாயகரை எவ்வாறு வழிபட வேண்டும்?

      முட்டியாகப் பிடித்த இரண்டு கைகளினாலும் நெற்றியிலே மூன்று முறை குட்டி, வலக்காதை இடக்கையினாலும், இடக் காதை வலக்கையினாலும் பிடித்துக்கொண்டு, மூன்று முறை தாழ்ந்தெழுந்து கும்பிடல் வேண்டும்.

      [*]திருக்கோயிலில் வழிபாடு செய்யும்போது என்ன செய்ய வேண்டும்?

      இரண்டு கைகளையும் தலையிலோ, மார்பிலோ குவித்துக் கொண்டு மனம் கசிந்துருக வழிபாடு செய்தல் வேண்டும்.

      [*]எந்தக் காலத்தில் வழிபாடு செய்தல் கூடாது?

      திருமஞ்சனம், அமுது செய்வித்தல் காலங்களில் வழிபாடு செய்தல் கூடாது.

      [*]திருமஞ்சன( அபிடேக ) நேரத்தில் திருச்சுற்றினை வலம் வரலாமா?

      உள் திருச்சுற்றினை வலம் வரல் ஆகாது. வந்தால் இறைவர் திருமஞ்சன நீர் செல்லும் பாதையைக் கடவாமல் அப்புனித நீரை மிதியாமல் முழுதாகாத பிறை வட்டம் போன்று வலம் வர வேண்டும்.

      [*]வழிபாடு முடிந்தவுடன் யாது செய்தல் வேண்டும்?

      சண்டேசுரர் கோயிலை அடைந்து கும்பிட்டு, இறைவர் பிரசாதம் கோயிலிலிருந்து எடுத்துச் செல்ல இருப்பின் அவர் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு இல்லையெனின் கைகளைத் தடவி ஏதும் கொண்டு செல்லவில்லையெனத் தெரிவித்துச் சிவவழிபாட்டுப் பலனைத் தரும்படி வேண்ட வேண்டும்.

      [*]ஏன் சண்டேசர் வழிபாட்டில் இவ்வாறு செய்யல் வேண்டும்?

      சண்டேசரே இறைவனுடைய உண்டதும் உடுப்பதுமான அனைத்து பிரசாதங்களுக்கும் அதிபதி. எனவே அவரது அனுமதி இன்றி எந்தப் பிரசாதத்தையும் சிவாலயத்திலிருந்து எடுத்து வருதல் குற்றம்.

      [*]சண்டேசர் வழிபாட்டின் பின் யாது செய்தல் வேண்டும்?

      கொடிமரம் முன்னர்ச் சென்று விழுந்து வணங்கி திருவைந்தெழுத்தை இயன்றவரை கணித்து எழுந்து வீட்டுக்குச் செல்ல வேண்டும்.

      [*]திருக்கோயிலில் செய்யத் தகாதன யாவை?

      ஒழுக்கம் இல்லாது போதல், கால் கழுவாது போதல், எச்சில் உமிழ்தல், மலசலங் கடித்தல், மூக்கு நீர் சிந்துதல், ஆசனத்து இருத்தல், மயிர் போதி முடித்தல், சூதாடல், பாக்கு வெற்றிலை கொள்ளல், தலையில் ஆடை தரித்துக் கொள்ளுதல், தோளிலே துண்டு இட்டுக் கொள்ளுதல், சட்டை இட்டுக் கொள்ளுதல், காலணி இட்டுக் கொள்ளுதல், பூசித்து கழித்த பொருள்களைக் கடத்தல், பூசித்து கழித்த பொருள்களை மிதித்தல், கொடி மரம், பலி பீடம், திருமேனி என்னும் இவைகளின் நிழலை மித்தல், வீண் வார்த்தை பேசுதல், இறைவருக்கும் பலி பீடத்துக்கும் குறுக்கே போதல் முதலியவைகளாம்.

      [*]சிவஸ்தலங்களைத் தரிசனஞ் செய்ய வேண்டிய முறைமை யெப்படி?

      விநாயகமூர்த்தி, மூலலிங்கம், சபாபதிமூர்த்தம், சோமாஸ்கந்தமூர்த்தம், பரிவார தேவர்கள், மூலஸ்தானம், அம்மையார், சண்டேசுரர், பயிரவர் என்னும் மூர்த்தங்களைக் கிரமமாகத் தரிசிக்கவேண்டும். முதல் விநாயகமூர்த்தியைத் தரிசித்தவுடன் நந்திதேவரிடத்தில் விடைபெற்றுக்கொண்டு மூலலிங்க முதலாகத் தரிசிக்க வேண்டும்.

      [*]பரிவார தேவர்கள் யார்?

      இருபத்தைந்து மூர்த்தங்களில் சபாபதியும் சோமாஸ்கந்தமூர்த்தமுந் தவிரச் சந்திரசேகரர் முதலிய இருபத்து மூன்று மூர்த்தமுமாம். பிரமதேவன், விஷ்ணு, துர்க்கை, சுப்பிரமணியர், வீரபத்திரர், நவக்கிரகங்கள், வாமாதி அஷ்ட சத்திகள் பரமேசுவரர்களுமாம்.

      [*]எந்தப்புறத்திலிருந்து தரிசிக்க வேண்டும்?

      கிழக்கு நோக்கிய சந்நிதியானால் சிவபெருமானுடைய வலப்பக்கமாகத் தென்புறத்தில் நின்று தரிசிக்க வேண்டும். தெற்கு நோக்கிய சந்நிதியானால் சிவபெருமானுக்கு வலப்பாகமாக மேற்புறத்தில் நின்றும், மேற்கு நோக்கிய சந்நிதியானால் சிவபெருமானுக்கு இடப்பாகமாகத் தென்புறத்தில் நின்றும், வடக்குநோக்கிய சந்நிதியானால் சிவபெருமானுக்கு இடப்பாகமாக மேற்புறத்தில் நின்றும் தரிசிக்கவேண்டும்.

      [*]துவஜஸ்தம்பத்தில் பணியவேண்டிய கிரமமெப்படி?

      கிழக்கு நோக்கிய சந்நிதியானால் பலிபீடத்தின் அக்கினி மூலைக்கு எதிராகச் சமீபத்தில் சிரசுவைத்து மார்பு பூமியிலேபடும்படி இரண்டு கைகளையும் வடக்காக நேரே நீட்டிப் பின்பு தோள்களிலே மண்படும்படி இரண்டு கைகளையும் தெற்கே நீட்டி இரண்டு காதுகளையும் பூமியிலே பொருந்தச் செய்து அஷ்டாங்கவந்தனஞ் செய்யவேண்டும். கைகளைத் தெற்கே நீட்டும்போது முன்னதாக வலக்கை நீட்டிப் பின்பு இடக்கை நீட்டவேண்டும். காது மண்ணில் பொருந்தச் செய்யும்போது முந்தி வலக்காதும் பின்பு இடக்காதும் பொருந்தவேண்டும். தெற்கு நோக்கிய சந்நிதியானாலும் மேற்கு நோக்கிய சந்நிதியானாலும் பலிபீடத்தின் நிருதிமூலையில் முன்சொன்ன முறைமைப்படியே சிரசுவைத்து நமஸ்காரம் செய்தல்வேண்டும். வடக்கு நோக்கிய சந்நிதியானால் பலிபீடத்தின் வாயுமூலையில் சிரசுவைத்துக் காலை மேற்காக நீட்டி முன்சொன்னப்படிப் பணியவேண்டும். ஆனால் பகல் பதினைந்து நாழிகைக்கு மேற்பட்ட காலத்தில் தரிசிக்கப்போனால் மேற்கே காலை நீட்டக்கூடாமையினாலே அஷ்டாங்க பஞ்சாங்கத்துடன் பணியாமல் நின்றபடி இரண்டு கைகளையுங்குவித்து உச்சியின் மேல் வைததுக்கொண்டு தரிசிக்க வேண்டும்.

      [*]பகல் பதினைந்து நாழிகைக்குமேல் தரிசனம் செய்வதற்குக் காரணமென்ன?

      சூரியகிரகணம், மகரசங்கராந்தி முதலாகிய புண்ணிய காலங்கள் பகல் பதினைந்து நாழிகைக்குமேல் வருமானால் தரிசிக்கப்போக வேண்டும்.

      [*]சூரிய அஸ்தமனத்தின்பின் தரிசிக்கப்போனால் எப்படிப் பணியவேண்டும்.

      பகல் பதினைந்து நாழிகைக்குமேல் சூரிய அஸ்தமனமாவதற்கு முன்வரையில், அஷ்டாங்கத்துடன் பணியலாகாதேயன்றி மற்றக் காலங்களிலே யெல்லாம் அஷ்டாங்கத்துடனே தான் பணியவேண்டும்.

      [*]அஷ்டாங்க பஞ்சாங்க மென்பதை யல்லாமல் வேறு விதமான நமஸ்காரங்களுமுண்டோ?

      ஏகாங்கம், துவிதாங்கம், திரிவிதாங்கம் என மூன்றுமாம்.

      [*]மேற்கூறிய நமஸ்காரங்களை முறையே விளக்குக?

      சிரசினால் மாத்திரம் வணங்குவது ஏகாங்கமாம். சிரசின் மேல் வலக்கரத்தைக் குவித்து வணங்குவது துவிதாங்கமாம். இரண்டு கைகளையும் சிரசின்மேல் குவித்து வணங்குவது திரிவிதாங்கமாம். பஞ்சாங்கமாவது சிரமும், இரண்டு வைகளும், இரண்டு முழந்தாள்களும் பூமியின்மேல் படும்படி வணங்குதலாம். அஷ்டாங்கமாவது சிரம், இரண்டு கைகள், இரண்டு முழந்தாள்கள், இரண்டு காதுகள், நெற்றி இவைகள் பூமியிற்படிய வணங்குதலாம்.

      [*]பிரதக்ஷணம் செய்யவேண்டிய முறைமை யெப்படி?

      காமியத்தை விரும்பினர்வள் வலமாகவும், மோக்ஷத்தை விரும்பினவர்கள் இடமாகவும், காமியத்தையும், மோக்ஷத்தையும் விரும்பினவர்கள் வலமிடமாகவும் பூரணகர்பபவதி எண்ணெய் நிறைந்த குடத்தைச் சிரசின்மேல் வைத்துக்கொண்டு காலில் விலங்கு பூட்டப்பட்டவளாய் நடப்பதுபோல அதிக மெதுவாய்ப் பிரதக்ஷணஞ் செய்யவேண்டும். அப்போது பரமசிவனது பாதங்களைச் சிந்தித்துக்கொண்டும செபவடங் கையிலே வைத்துக்கொண்டும் பஞ்சாக்ஷரசெபஞ் செய்து கொண்டும் இரண்டு கைகளையும் மார்புக்குச்சரியாக வைத்துக்கொண்டும் வரவேண்டும்.

      [*]சிவசந்நிதியில் எத்தனை பிரதக்ஷணம் செய்ய வேண்டும்?

      மூன்று அல்லது ஏழு பிரதக்ஷணஞ் செய்ய வேண்டும். இந்தத் தொகைக்கு மேற்படவும் செய்யலாம்.

      [*]எந்தக் காலங்களில் ஆலயத்துக்குப் போக வேண்டும்?

      காலை, உச்சி, அந்தி யென்னும் திரிசந்தி காலங்களிலும் போகலாம்.

      [*]இந்த மூன்று கால மல்லாத காலத்தில் தரிசனஞ்செய்ய ஆலயத்துக்குப் போகலாகாதோ?

      கிரகண புண்ணியகாலம், சங்கராந்தி புண்ணியகாலம் நேரிடுமானால் தரிசனஞ்செய்யப் போகலாம்.

      [*]எந்த ஆவரணங்களில் பிரதக்ஷணம் செய்ய வேண்டும்?

      முதலாவரணந் (கருவறை) தவிர மற்ற ஆவணங்களில் பிரதக்ஷணஞ் செய்யலாம்.

      [*]ஆவரணங்களின் முறைமை யெப்படி?

      சிவலிங்கப் பெருமானைக் கெர்ப்பக்கிரகத்தில் சூழ்ந்து வரத்தக்கதாக இருப்பதே முதலாவரணம். மற்றைய ஒன்றின்பின்னொன்றாய் இரண்டு முதல் ஐந்து ஆவரணங்களாம். அதற்கப்பால் ஊரின்புலமே ஆறா மாவரணம்.

      இப்படி வரும் ஆவரணங்களில் ஸ்தூபி நிழலாவது துவஜஸ்தம்ப நிழலாவது நேரிடுவதாயிருந்தால் அந்த ஆவரணத்தைவிட்டு அப்புறத்திலிருக்கும் ஆவரணத்தில் பிரதக்ஷணஞ் செய்யவேண்டும். சுவாமி உத்சவங்கொண்டருளுகின்ற காலத்தில் சுவாமியின் பின்வரும்போது மேற்சொன்ன நிழலிருக்குமானாலும் குற்றமில்லை.

      [*]பிரதக்ஷணம் இத்தனை நாழிகை செய்ய வேண்டு மென்கிற நியதியுண்டோ?

      ஒரு ஜாமப் பொழுதளவு செய்யவேண்டும்; அவ்வாறு செய்தால் ஜெனனமரணம் நீங்கிச் சிவலோகம் அடைவார்கள்.

      [*]சோமசூக்தப் பிரதக்ஷணமென்பது யாது?

      அதாவது பிரதக்ஷணஞ்செய்யத் தொடங்கும்போது நந்திதேவரைத் தரிசித்துக்கொண்டு அங்கிருந்தபடியே யிடமாகச் சென்று சண்டேச நாயனாரைத் தரிசித்துச் சென்ற வழியே திரும்பிவந்து மறுபடியும் நந்திதேவரைத் தரிசித்து அங்கிருந்து வலமாகச் சென்று சண்டேச நாயனாரைத் தரிசித்துத் திரும்பிவந்து நந்திதேவரைத் தரிசித்துப் பின்பு சிவலிங்க தரிசனஞ் செய்து பணியவேண்டும். இவ்வாறு ஒரு பிரதக்ஷணஞ் செய்தால் அனந்தம் பலனுண்டு. பிரிந்து வருகின்றபடியே பிரதக்ஷணஞ் செய்யவேண்டும். இந்தப் பிரதக்ஷணம் பிரதோஷ காலத்திற் செய்தால் விசேஷமான பலனுண்டு.

      [*]பிரதோஷ காலமாவது எது?

      பகல் இருபத்தாறேகால் நாழிகைக்கு மேற்பட்ட மூன்றே முக்கால் நாழிகையளவும் சூரியாஸ்தமனமான மூன்றே முக்கால் நாழிகைக்கு உட்பட்டதுமான காலம் பிரதோஷகாலம். இக்காலத்திற் சிவதரிசனஞ் செய்வது முக்கிய மானதால் சிவனடியார்களாயுள்ளாரியவரும் அவசியம் சிவதரிசனம் செய்யவேண்டும்.

      [*]பிரதோஷமென்பதற்குப் பொருளென்ன?

      இராத்திரியின் முன் என்பதாகும். சம்ஸ்கிருதத்தில் ரசனி முகமென்று சொல்லப்படுகின்றது. இவ்வாறு சொல்லப்படுகின்ற பிரதோஷகாலம் திரியோதசி திதியிற் சிறந்தது. பிரதோஷ விரதமும் இந்தத் திதியிலனுஷ்டிக்க வேண்டும்.

      [*]திரயோதசி திதியிற் சிறந்ததற்குக் காரணமென்ன?

      கங்காதர மூர்த்தியாகிய பரமசிவம் ஆலகால விஷமுண்டருளியபோது ஒரு க்ஷணநேரம் சும்மாவிருந்தார். அன்று ஏகாதசிதிதி. அப்போது தேவாகள் பரமசிவனை அருச்சித்துக் கொண்டிருந்து மறுநாள் துவாதசி திதியில் பாரணஞ்செய்து பூர்த்தியடைந்தார்கள். அன்று மறுநாள் திரயோதசி திதி பிரதோஷகாலத்தில் பரமசிவன் பராசத்தி யெதிரில் சூலஞ் சுழற்றிக்கொண்டு கயிலாசகிரியில் ஒரு ஜாமம் நடனஞ்செய்தருளினார். இந்தக் காரணத்தினால் திரயோதசி திதி பிரதோஷகாலத்தில் சிவதரிசனஞ் செய்கின்றவர்கள் நந்திதேவரைப் பரிசித்து நந்திதேவருடைய இரண்டு கொம்பு மத்தியில் பிரணவ சகிதமாக அரகரவென்று சொல்லிக்கொண்டு சிவலிங்க தரிசனஞ் செய்யவேண்டும். இவ்வாறு தரிசிக்கும் சிவனடியார்கள் சிவசாரூபம் பெறுவார்கள். சனிப்பிரதோஷம் மிகுந்த சிறப்புள்ளதாக ஆகமம் சொல்லுகின்றது. சிவலிங்க தரிசனஞ் செய்கின்றவர்கள் வில்வத்தினால் சிவார்ச்சனை செய்விக்கவேண்டும். பிரதோஷவிரத மனுஷ்டிப்பவர்கள் சிவனடியார்களுக்கு அமுது படைத்துப் பின்பு புசிப்பது உத்தமம்.

      [*]பிரதோஷ விரத மனுஷ்டித்துப் பேறு பெற்றவர்கள் யாவர்?

      உஜ்ஜயினி மாகாளமென்னும் நகரத்துக்கு அரசனாகிய சந்திரசேன மகாராஜன் சனிப்பிரதோஷ விரத மனுஷ்டித்து இம்மையில் அரசர்களெல்லாம் தன்னை வணங்கும்படி செங்கோல் செலுத்திச் சிவபதம் பெற்றான். இந்த ராஜன் பூஜை செய்ததைப்பார்த்த ஒரு இடைப்பிள்ளைக்குப் பக்தியுண்டாகி வீதியில் மணலினால் ஆலயமுதலானவைகளும் அமைத்துக்கொண்டு ஒரு சிலையை நாடிச் சிவலிங்கமாகப் பாவித்துப் பூசைசெய்து பேறுபெற்றான். இன்னும் பலர் இவ்விரத மனுஷ்டித்துப் பேறுபெற்றார்கள்.

      [*]இவ்விரதம் நிறுத்திவிடுவதானால் யாது செய்தல் வேண்டும்?

      பிரதோஷவிரத மிருப்பவர்கள் தேக அசக்தியினால் நிறுத்திவிடுகிறதாயிருந்தாலும், மேலுமிடைவிடாமல் அனுஷ்டிப்பதாயிருந்தாலும் உடனுக்குடன் உத்தியாபனஞ் செய்ய செய்யவேண்டும். அப்படிச் செய்யாமலிருந்து தேகம் நழுவிவிடுமானால் விரத பலன் சித்தியில்லையாம். ஆதலினால் ஆகம விசாரணையுள்ளவர்களால் தெரிந்துகொண்டு நடக்கவேண்டும்.

      [*]சிவதரிசனஞ் செய்யும்போது நந்திதேவருக்கும் சிவலிங்கப் பெருமானுக்கும் மத்தியில் ஏன் போகலாகாது?

      அப்படிப்போவது முப்பத்திரண்டு குற்றங்களிலொன்றாம். ஆதலால் போகலாகாது.

      [*]மேற்கூறிய முப்பத்திரண்டு குற்றங்கள் யாவை?

      நந்திதேவருக்கும் சிவலிங்கப்பெருமானுக்கும் மத்தியிற் போதல், தரிசனை செய்தபின் புறங்காட்டிவருதல், ஒருகை குவித்து தரிசித்தல், ஒரு பிரதக்ஷணஞ் செய்தல், மேலே யுத்தரீயம் போட்டுக்கொண்டு தரிசித்தல், கோபுரச்சாயையைக் கடத்தல், கோயிலிலுண்ணுதல், நித்திரைசெய்தல், நின்மாலியத்தைத் தாண்டுதல், அதனைத் தீண்டுதல், கையினால் விக்கிரகங்களைத் தீண்டுதல், ருத்திரகணிகையரைக் கையினால் தீண்டுதல், அவர்களோடு பேசுதல், நோக்குதல், வீணான வார்த்தைகள் பேசுதல், கோயிற்காரிய மல்லாத சொல்லைச் சொல்லுதல், தான் சொல்லாவிட்டாலும் ஒருவர் சொல்லுவதைக் கேட்டல், உத்தமர்களை யவமதித்தல், அற்பர்களை மதித்துப்பேசுதல், அவ்விடத்திலிருக்கும் சிவசொத்தாகிய பொருளையபேக்ஷித்துப் பார்த்தல், வேதங்களால் சொல்லப்படாத சிறுதெய்வங்களைப் பணிதல், வேதமுதலான கலைகள் பாடமோதுதல், உன்னதஸ்தானத்திலிருத்தல், ஆசனத்திலிருத்தல், ஒருவரைப் பார்த்து நகைத்தல், பிணங்குதல் முதலான துர்க்குணங்களைப் பாராட்டுதல், அருட்பாக்களையன்றி மற்றப்பாடலை மதித்துக்கேட்டல், சண்டேசுரரிடத்தில் வஸ்திரத்தின் நூல் கிழித்துவைத்தல், பலிபீடத்துக்கும் சந்நிதானத்துக்கும் மத்தியில் மற்றவரை வணங்குதல், திருக்கோயிலினுள் பொடிமுதலிய போடுதல், திரிசந்தியல்லாத காலங்களில் ஆலயத்திற் செல்லுதல், இரண்டொரு பிரதக்ஷணஞ்செய்தல், சிரேஷ்டமல்லாத கீர்ததனங்கள் பாடுதல் என்னுமிவையாம்.

      [*]அன்றி சிவதீர்த்தத்திலும் நந்தன வனத்திலும் செய்யத்தகாத காரியமென்ன?

      சிவ தீர்த்தத்தில் உமிழ்நீர் துப்பலாகாது. மூக்குச் சிந்தலாகாது. மற்றுமுள்ள அசுசியான காரியஞ் செய்யலாகாது. நந்தனவனத்தும் இப்படியே.

      [*]நந்தனவனம் சிரேஷ்டமானதற்குக் காரணமென்ன?

      சிவார்ச்சனைக்கு யோக்கியமான பூச்செடிகளையுடையதாகையால் சிரேஷ்டமாயது. இதுவுமன்றிப் பரமசிவம் சில மலர்களிலும் பராசக்தி சில மலர்களிலும் வாசமாயிருப்பதனாலும் சிரேஷ்டமாயது. இதன் விபரம் புட்பவிதியில் கண்டு கொள்க.

      [*]பாடல்பெற்ற ஸ்தலங்களிலிருக்கும் ஆலயங்களுக்கு அபாயம் நேரிடுவதாயிருந்தால் என்செய்வது?

      அக்காலங்களி லங்கிருக்கும் சுயம்புமூர்த்தி சலனப்படுத்தத் தக்கதாயிருந்தால் வேறே ஆலயமேற்படுத்தி, அந்தச் சிவலிங்கத்தைக் கொண்டுவந்து ஸ்தாபிக்கலாம். சலனப்படுத்தக் கூடாததாயிருந்தால் வேறே லிங்கம் ஸ்தாபிக்கப்பட்டாலும் சுயம்பு மூர்த்தியேயாம்.

      [*]பரமசிவன் எந்தச்சிவலிங்கத்தினிடத்தில விசேஷமாய் மூர்த்திகரித்திருக்கிறார்?

      சுயம்புலிங்கத்தில் சர்வதா காலமும் மூர்த்திகரித்திருக்கிறார்.

      [*]பரமசிவன் எங்கும் பரிபூரணமாயிருக்க சிவாலயத்தில் சிவலிங்கத்தினிடமாக மூர்த்திகரித் திருருக்கிறாரென்பதற்குத் திருஷ்டாந்த மென்ன?

      பசுவின் சரீரமெங்கும் பாலானது வியாபித்திருந்தாலும், அதன்முலைக் காம்பினாலேயேயன்றி அப்பாலையடைவது கூடாததுபோல சிவலிங்கத்தினிடத்திலே யன்றி அப்பெருமானையடைவது கூடாது.

      [*]திரிசந்தி காலங்களில் சிவதரிசனஞ் செய்வதில் இன்னகால தரிசனத்தினால் இன்ன பலன் சித்தியாமென்கிறது உண்டா?

      காலையில் சந்தியில் தரிசித்தால் அன்று நேரிடும் பாவம் நிவர்த்தியென்றும், உச்சிக்கால தரிசனத்தால் அந்தச் சென்மத்தில் நேரிடும் பாவம் நிவர்த்தியென்றும், சாயங்கால தரிசனத்தால் செனனங்கள்தோறும் நேரிட்டபாவங்கள் நிவர்த்தியென்றும் அறிந்துகொள்க.

....

கடவுள் இயல்

  • உலகத்திற்கு முதலாக இருப்பவர் யார்?

    இறைவன்.


  • இறைவனை எப்பெயர் கொண்டு சிறப்பாக அழைக்கின்றோம்?

    சிவபெருமான்.


  • சிவபெருமான் என்று ஏன் அழைக்கின்றோம்?

    சிவம் என்ற சொல்லுக்கு "செம்மை" (பூரணத்துவம்), "மங்களமானது" என்று பொருள். எல்லாவற்றிற்கும் மேலாக, முழுமையாக, தான் மங்களகரமாகவும் தன்னைச் சார்ந்தவர்களை மங்களகரமாக்குபவரும் ஆன இனிய இறைவனைச் சிவபெருமான் என்று அழைக்கின்றோம்.


  • சிவபெருமான் எப்படிப் பட்டவர்?

    என்றும் உள்ளவர்; எங்கும் நிறைந்தவர்; எல்லாம் அறிபவர்; எல்லாம் வல்லவர்; தூயவர்; அழிவிலா இன்பம் உடையவர்; பிறர்க்கு ஆட்படாதவர்.


  • சிவபெருமானை நாம் ஏன் தொழ வேண்டும்?

    சிவபெருமானைத் தொழுவதால் சிவபெருமானுக்கு எந்தப் பயனும் இல்லை. ஆனால், அழிவில்லாதவரும் இன்ப மயமானவருமான சிவபெருமான் தம்மைத் தொழுபவர்களுக்கு அந்த அழிவில்லாத இன்பத்தை அடைய அருள் புரிவார். உலகியலில் தோன்றும் இன்பங்கள் நிலையானவைகள் அல்ல. ஆனால் சிவபெருமான் அருளும் இன்பத்தைப் பெற்றவர்கள் என்றென்றும் இன்பத்தைப் பெற்று மகிழ்ந்திருப்பர். அதனால் இந்த உடல் எடுத்ததின் பயன் சிவ வழிபாடு செய்து அந்தப் பேரின்பத்தை அடைவதே.


  • சிவபெருமான் ஆன்மாக்களுக்காகச் செய்யும் தொழில்கள் யாவை?

    படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்துமாம்.


  • படைத்தலாவது யாது?

    ஆன்மாக்களுக்குத் தனு கரண புவன போகங்களை முதற் காரணத்தினின்றும் தோற்றுவித்தல்.


  • காத்தலாவது யாது?

    தோற்றுவிக்கப்பட்ட தனு கரண புவன போகங்களை நிறுத்தல்.


  • அழித்தலாவது யாது?

    தனு கரண புவன போகங்களை முதற்காரணத்தில் ஒடுக்குதல்.


  • மறைத்தலாவது யாது?

    ஆன்மாக்களை இருவினைப் பயன்களாகிய போக்கியப் பொருள்களில் அமிழ்த்தல்.


  • அருளலாவது யாது?

    ஆன்மாக்களுக்குப் பாசத்தை நீக்கிச் சிவதத்துவத்தை விளக்குதல்.


  • தனு கரண புவன போகம் என்றது என்ன?

    தனு - உடம்பு, கரணம் - மன முதலிய கருவி, புவனம் - உடம்புக்கு ஆதாரமாகிய உலகம், போகம் - அனுபவிக்கப்படும் பொருள்.


  • சிவபெருமான் இந்த ஐந்து தொழில்களையும் எதைக்கொண்டு செய்வார்?

    தமது சத்தியைக் கொண்டு செய்வார்.


  • சத்தி என்னும் சொல்லுக்குப் பொருள் யாது?

    வல்லமை

    ....

மற்றைய மதங்களைப் பற்றி அறிந்து கொள்வதில் சிறு ஆர்வம்...

இதுவரைக்கும் புரிகிறது...

....

கடவுள் இயல்

...

  • சிவபெருமானுக்குச் சத்தி யாவர்?

    உமாதேவியார்

    ....

ஒரு சின்ன சந்தேகம், சிவபெருமானுக்கு சத்தி (சக்தி?) உமாதேவியானால், உமாதேவி தான் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளாவது போன்றவற்றை செய்கிறாரா?

(அல்லது ஆண் பெண் சமநிலை கோட்ப்பாடா?)

அறியும் ஆர்வத்தில் தான் கேட்கிறேன்... நன்றி :)

WOW!!!

படைத்தல் பிரம்மா செய்வதும், காத்தல் விஷ்ணு செய்வதும் என்றும் படிப்பித்தார்கள். அப்ப அது பிழையா? :)

  • கருத்துக்கள உறவுகள்

மற்றைய மதங்களைப் பற்றி அறிந்து கொள்வதில் சிறு ஆர்வம்...

இதுவரைக்கும் புரிகிறது...

ஒரு சின்ன சந்தேகம், சிவபெருமானுக்கு சத்தி (சக்தி?) உமாதேவியானால், உமாதேவி தான் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளாவது போன்றவற்றை செய்கிறாரா?

(அல்லது ஆண் பெண் சமநிலை கோட்ப்பாடா?)

அறியும் ஆர்வத்தில் தான் கேட்கிறேன்... நன்றி :)

குட்டி, சைவைத்தின் உண்மையான விளக்கம் இதுவென நினைக்கின்றேன்!

இதை, அர்த்த நாரீஸ்வர வடிவம் என அழைப்பார்கள்!

அர்த்தம் என்பது, அரை எனப் பொருள்படும்!

நாரி என்பது பெண்ணைக் குறிக்கும்!

ஈஸ்வரன் என்பது சிவனைக் குறிக்கும்!

Irattayapan-960x447.png

இதன் கருத்தே,சக்தியின்றியேல், சிவம் இயங்காது!

சிவமின்றிச் சக்தியும் இயங்காது!

சிவலிங்கத்தின் தத்துவம், ஏறத்தாழ இந்த இருமுனைத் தத்துவத்தையே விளக்குகின்றது!

இதன் விளக்கத்தை, யாராவது களப் பெருசுகளிடம் கேழுங்கள்!

நுணாவிற்கும் நன்றிகள்!

குட்டி, சைவைத்தின் உண்மையான விளக்கம் இதுவென நினைக்கின்றேன்!

இதை, அர்த்த நாரீஸ்வர வடிவம் என அழைப்பார்கள்!

அர்த்தம் என்பது, அரை எனப் பொருள்படும்!

நாரி என்பது பெண்ணைக் குறிக்கும்!

ஈஸ்வரன் என்பது சிவனைக் குறிக்கும்!

Irattayapan-960x447.png

இதன் கருத்தே,சக்தியின்றியேல், சிவம் இயங்காது!

சிவமின்றிச் சக்தியும் இயங்காது!

சிவலிங்கத்தின் தத்துவம், ஏறத்தாழ இந்த இருமுனைத் தத்துவத்தையே விளக்குகின்றது!

இதன் விளக்கத்தை, யாராவது களப் பெருசுகளிடம் கேழுங்கள்!

நுணாவிற்கும் நன்றிகள்!

மிக்க நன்றி புங்கையூரன் உங்கள் நேரத்திற்கும் விளக்கத்திற்கும்!

இந்தப் படத்தை முன்னம் பார்க்கும் போது சிவன் பாதி, பார்வதி பாதி என்று நினைத்திருந்தேன்... இப்போது தான் ஓரளவு புரிகிறது (அதில் உள்ளவர் பார்வதி இல்லை என்று)

கல்விக்கு, செல்வத்திற்கு என்று இந்து மதத்தில் பெண் தெய்வங்களை வழிபடுதைப் பார்த்துள்ளேன், ஆனால் பொதுவாக எல்லா முகங்களுமே ஒரே மாதிரியாக இருக்கும், பெரிதாக வித்தியாசங்களை அவதானிப்பதில்லை.

மற்றைய மதங்களைப் பற்றி அறிந்து கொள்வதில் சிறு ஆர்வம்...

இதுவரைக்கும் புரிகிறது...

ஒரு சின்ன சந்தேகம், சிவபெருமானுக்கு சத்தி (சக்தி?) உமாதேவியானால், உமாதேவி தான் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளாவது போன்றவற்றை செய்கிறாரா?

(அல்லது ஆண் பெண் சமநிலை கோட்ப்பாடா?)

அறியும் ஆர்வத்தில் தான் கேட்கிறேன்... நன்றி :)

குட்டி,

சைவசமயிகள் ஆணையும் பெண்ணையயும் சரிநிகர் சமானமாக கருதி இருக்கின்றனர். ஆனால் நடைமுறையில் அப்படி இருக்கின்றதா? தெரியவில்லை. இந்த படத்தை மேலோட்டமாக பார்ப்பவர்கள் இப்படியான முடிவுக்கு வரலாம்.

இதன் தெளிவுரைகள் பல்வேறு வடிவங்களில் வந்திருக்கின்றன. ஊரில் நடைமுறை வழக்காக “சக்தி இருந்தால் செய். இல்லையேல் சிவனே என்று இரு” என்று ஒரு பதம் இருக்கின்றது. எதையும் செய்யாமல் பற்றறு இருப்பது சிவம். கருமங்களை ஆற்ற உந்துதல் அளிப்பது சக்தி. செயலற்ற தன்மையில் தான் செயலும் இருப்பதால் சிவத்தில் இருந்து சக்தி வந்தது. மகாப்ரளய காலத்தில் சக்தி (நாதம், விந்து) ஒடுங்கி சிவத்துள் ஐக்கியமாகி விடுவதாக வேத ஆகமங்கள் கூறுகின்றன.

இதே பொருள்படும்வண்ணம், ஹடயோகிகள் குண்டலினி பற்றி கூறும்போதும், மூலாதாரத்தில் இருக்கும் சக்தி சுழுமுனை நாடியூடாக ஆக்ஞா சக்கரத்தை அடையும் நோக்கில் மேலேறும்போது அது சிவனை நோக்கி செல்வதாகவே கூறுகின்றனர். சிவன் இருப்பது ஆக்ஞா சக்கரத்தில்.

எப்படி விளக்கம் வந்த போதிலும், சிவனும் சக்தியும் சேர்ந்த நிலை அர்த்தநாரீஸ்வரர் திருவுருவம்.

குட்டி,

சைவசமயிகள் ஆணையும் பெண்ணையயும் சரிநிகர் சமானமாக கருதி இருக்கின்றனர். ஆனால் நடைமுறையில் அப்படி இருக்கின்றதா? தெரியவில்லை. இந்த படத்தை மேலோட்டமாக பார்ப்பவர்கள் இப்படியான முடிவுக்கு வரலாம்.

இதன் தெளிவுரைகள் பல்வேறு வடிவங்களில் வந்திருக்கின்றன. ஊரில் நடைமுறை வழக்காக “சக்தி இருந்தால் செய். இல்லையேல் சிவனே என்று இரு” என்று ஒரு பதம் இருக்கின்றது. எதையும் செய்யாமல் பற்றறு இருப்பது சிவம். கருமங்களை ஆற்ற உந்துதல் அளிப்பது சக்தி. செயலற்ற தன்மையில் தான் செயலும் இருப்பதால் சிவத்தில் இருந்து சக்தி வந்தது. மகாப்ரளய காலத்தில் சக்தி (நாதம், விந்து) ஒடுங்கி சிவத்துள் ஐக்கியமாகி விடுவதாக வேத ஆகமங்கள் கூறுகின்றன.

இதே பொருள்படும்வண்ணம், ஹடயோகிகள் குண்டலினி பற்றி கூறும்போதும், மூலாதாரத்தில் இருக்கும் சக்தி சுழுமுனை நாடியூடாக ஆக்ஞா சக்கரத்தை அடையும் நோக்கில் மேலேறும்போது அது சிவனை நோக்கி செல்வதாகவே கூறுகின்றனர். சிவன் இருப்பது ஆக்ஞா சக்கரத்தில்.

எப்படி விளக்கம் வந்த போதிலும், சிவனும் சக்தியும் சேர்ந்த நிலை அர்த்தநாரீஸ்வரர் திருவுருவம்.

முக்கிய மதங்களில் பெண்ணை ஆணுக்கு சமமாகவே கருதியுள்ளார்கள் என்று தான் தெரிகிறது.

மேலுள்ள பதத்தை நானும் கேள்விப் பட்டிருக்கிறேன், ஆனால் இதற்குள் இவ்வளவு பொருள் அடக்கம் உள்ளதென்று அறியவில்லை. நீங்கள் குறிப்பிட்டுள்ள சில சொற்களின் அர்த்ததங்கள் விளங்குவது சிரமாக இருப்பினும் மேலோட்டமாகப் புரிகிறது. உங்கள் நேரத்திற்கும் விளக்கத்திற்கும் மிக்க நன்றி ஈழத்திருமகன்.

சிவபெருமானின் துணைவியார் பார்வதி அவரும் கடவுளின் ஒரு வடிவம் தானே? (அப்படித் என்று தான் நான் நினைத்துள்ளேன்...) சிவபெருமான், சக்தியை பார்வதிக்குக் கொடுக்காமல் உமாதேவிக்குக் கொடுத்தமைக்கு ஏதும் காரணங்கள் உண்டா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நுணாவிலானுக்கும்,கேள்வி கேட்ட குட்டியருக்கும் ஒரு அரோகரா :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சந்த்யாந்ருத்த மூர்த்தி

தேவர்கள் சிவபெருமானின் உதவியில்லாமல் பாற்கடலைக் கடைந்தனர். அதில் மந்திரமலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் கொண்டு கடைந்தனர். இதில் வாசுகியின் வாயையும் வாலையும் தேவர்களும், அசுரர்களும் இழுக்கும் பொருட்டு வாசுகி கொடிய ஆலகால விஷத்தைத் துப்பியது அவ்விஷம் அனைவரையும் எதிர்த்தது, எதிர்ப்பட்ட திருமாலும் அதன் முன் உடல் கருகினார். இதனைக் கண்ட தேவர்கள் கைலாயம் சென்று சிவபெருமானிடம் முறையிட்டனர்.

சிவபெருமானும் தேவர்களின் துயரைப் போக்க அவ்விஷத்தை உண்டார். அதனால் அவர்க்கு ஒன்றும் நேரவில்லை எனினும் ஒரு விளையாட்டை நிகழ்த்தினார். அவ்விஷம் அவரைத் தாக்கியது போல், மயங்குவது போல் உமா தேவியின் முன்பு மௌனமாய் உறங்குவது போல் இருந்தார். இதனைக் கண்ட தேவர்கள் அவரை அர்ச்சித்து அன்று முழுவதும் உறக்கம், உணவின்றி இருந்தனர். அந்தத் திதியை நாம் ஏகாதசி என்போம். மறுநாளாகிய துவாதசியில் தேவர்கள் பாராயணஞ் செய்தனர். அதற்கு மேற்ப்பட்ட திதியான திரயோதசியில் சிவயபெருமான் சூலம், உடுக்கை சகிதம் ஒரு சாமகாலம் திருநடனம் செய்தார். அந்த காலத்தை நாம் பிரதோஷம் என்போம். அதாவது பதினைந்து தினங்களுக்கொருமுறை வரும் திரயோதசியை நாம் மாத பிரதோஷம் என்றும், வருடத்திற்கொருமுறை வரும் மகா சிவராத்திரியை வருடப் பிரதோஷம் என்றும், தினசரி மாலை முடிந்து இரவு ஆரம்பிக்கும் நேரத்தையும் நாம் பிரதோஷ காலமாகக கொள்ளலாம்.

சிவபெருமான் நிருத்தம்(நிருத்தம் - நடனம்) செய்வதைக் கண்ட தேவர்கள் மனம் மகிழ்ந்தனர். தனது கரங்களை சிரத்திற்கு மேல் தூக்கி சிவசிவ என்று ஆர்ப்பரித்தனர். ஆடினர், பாடினர், தேவர்கள் அவர் நடனத்திற்கு ஏற்றவாறு வாத்தியங்களும், விஷ்ணு மிருதங்கமும் வாசித்தனர். பிரதோஷ காலத்தில் சிவபெருமான் நடனம் ஆடியதால் அவரது பெயர் சந்த்யாந்ருத்த மூர்த்தி என்றானது. அவரை தரிசிக்க மதுரை செல்ல வேண்டும். சதாசிவமூர்த்தியின் உச்சியில் அமைந்துள்ள ஈசான முகத்திலிருந்து தோன்றிய வடிவமே நடராஜமூர்த்தி யாவார். அவரது வடிவமே சந்த்யாந்ருத்த மூர்த்தி போன்ற பல வடிவமாகப் பறந்து விரிந்தது. மதுரை வெள்ளியம்பலத்தில் உள்ள இவரை வணங்குவோமானால் நம் தொழில்களை காப்பதுடன் பலகலைகளில் சிறப்பு பெற உதவுவார். செந்தாமரையால் அர்ச்சனையும், தேங்காய் சாத நைவேத்தியமும் திங்கள், புதன் கிழமை மாலையில் செய்ய தடங்கள் அகழும், விரோதிகள் ஒழிவர். நன்மை பாராட்டுவர். மதுரை நடராஜ பெருமானுக்கு பன்னீரால் அபிசேகம் செய்தால் கல்வியறிவு மேன்மையடையும் என்பது ஐதீகம்.

ip.gif
Logged

singnature.gif

16. சதா நிருத்த மூர்த்தி

சிவபெருமான் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் பஞ்சாட்சரத்தையே தன் மேனியாகக் கொண்டு இருப்பவர். அவரது மூன்று கரங்களும், இருபாதங்களும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து செயல்களை செய்கிறது. அது எப்படியெனில் டமருகம் தாங்கிய கரத்தினால் படைத்தலும், அமைந்த கரத்தினால் காத்தலும், மழு தாங்கிய கரத்தினால் அழித்தலும், முயலகன் முதுகில் ஊன்றிய திருப்பாதங்களால் மறைத்தலும், அனவரத நடனம் புரியும் அடிப் பாதத்தினால் அருளலும் புரிகின்றார்.

மேலும் உலக உயிர்கள் அனைத்தும் எங்கும் நிறைந்துள்ள இறைவனுடன் ஐக்கியமாவதைக் குறிக்கிறது. இந்த நடனத்தை இடது புறமாக நின்று தரிசிக்கும் உமாதேவியாரின் தோற்றம். சிவபெருமான் திருத்தக் கோலம் கொண்டு நடனம் புரியும் திருவடியில் நகரமும், திருவயிற்றின் மீது ம கரமும், திருத்தோளின் மீது சி கரமும், திருமுகத்தில் வா கரமும், திருமுடியின் மீது ய கரமும் கொண்டு கருணையால் இயற்றினார். சிவபெருமான் பல காரணங்களால் பல முறை நடனம் புரிந்துள்ளார். இருப்பினும் உமாதேவியார் தரிசிக்கும் நிலையில் தேவர்கள், சிவகணங்கள் நத்திதேவர் போன்றவர்களோடும், இசைவாத்தியங்களோடும், பஞ்சாட்சரமேனியோடு எப்பொழுதும் திருநடனம் புரிந்து கொண்டே இருப்பதால் இவரது பெயர் சதா நிருத்த மூர்த்தி யாகும்.

சிதம்பரத்திலுள்ள பொன்னம்பலத்தில் சிவபெருமான் எப்பொழுதும் ஆனந்த தாண்டவம் ஆடிக்கொண்டேயுள்ளார். எங்கெங்கெலாம் நடராஜர் இருப்பினும் அவர்களனைவரும் இரவில் இங்கு வருவதாக ஐதீகம். எனவே இத்தலத்தில் நடராஜ பெருமானுக்கு செய்ய வேண்டிய பரிகாரங்களை செய்யலாம். இறைவனைக் கூத்தபிரான் என்றும், இறைவியை சிவகாம சுந்தரி என்றும் அழைப்பர். கவியாற்றுவதற்கும், வாதப் போர்புரிவதற்கும், தடைபெற்ற தேர் திருவிழா மறுபடியும் நடைபெறவும், இவரை வணங்கினால் தடை நீங்கி நடைபெறும் என்பது கண் கூடு. இவருக்கு முல்லைப்பூ அர்ச்சனையும், வெண்பொங்கல் நைவேத்தியமும் திங்கள், வியாழக் கிழமைகளில் செய்ய விரோதியும் நண்பனாவான். மேலும் இங்குள்ள கூத்தப்பிரானுக்கு அன்ன அபிசேகம் செய்ய கைவிட் அரசுரிமையும் கிடைக்கும்.

L

திருவாலங்காட்டில் மகிமையை உணர்ந்த சுனந்த முனிவர் அங்கு தாண்டவ நடத்தைக் காட்ட வேண்டிய தவமியற்றினார். அப்போது சிவபெருமானின் கைவிரலில் உள்ள பாம்பு அவரது திருவிரலில் விஷம் கக்கியது. இதனைக் கண்ட இடபம் நீ செய்த தீமைக்காக திருக்கைலையை விட்டு நீங்குமாறு கார்கோடகனிடம் கூறியது. கார்கோடகனும் பயந்து சிவனிடம் முறையிட்டது. உடன் சிவபெருமான் திருவாலங்காட்டில் தவமியற்றும் சுனந்தருடன் சேர்ந்து சண்டதாண்டவத்தை தரிசித்த உடன் கைலை வருவாயாக என்றார். திருவாலங்காடு சென்ற கார்கோடகன் சுனந்தருடன் சேர்ந்து தவமியற்றியது. அப்போது சும்பன், நிசும்பன் எனும் இரு அசுரர்கள் அனைவரையும் கொடுமைபடுத்தி வந்தார்கள். இதனைக் கண்ட தேவர்கள் பார்வதி தேவியிடம் முறையிட்டனர். பார்வதியும் சப்தமாதர்கள், சிவகணங்களுடன் சாமுண்டி என்ற சக்தியாக மாறி அவர்கள் இருவரையும் கொன்றனர். அவர்களிருவரின் சகோதரியான குரோதி என்பவளின் மகன் இரத்த பீசன்.

அவனது ஒவ்வொரு சொட்டு இரத்தமும் நிலத்தில் விழுந்தால் அதுவொரு இரத்தபீசனாக மாறீவிடும். இத்தகைய வரம் பெற்ற அவனை அழிக்க வேண்டி பார்வதி காளி தேவியை தோற்றுவித்தாள். காளி அவனது ஒரு சொட்டு இரத்தம் கூட நிலத்தில் சிந்த விடாமல் பருகினாள். போர் நல்லபடியாக முடிந்தது. பார்வதி சண்டியாகிய காளி தேவி சிவபெருமானிடம் நடனம் செய்து அவருடன் வசிக்கும் வரத்தையும் வழங்கிவிட்டு சென்றார். அசுரனின் மாமிசத்தையும், இரத்தத்தையும் குடித்ததால் காளிதேவி யாருக்கும் அடங்காமல் வனங்களில் அரசாட்சி புரிந்து வந்தார். அவ்வாறே திருவாலங்காடு வந்து சேர்ந்தார். அங்கு வந்த காளி அட்டகாசத்தை ஆரம்பித்தார். இச் செய்தி முனிவர் மூலம் நாரதரிடம் தெரிவிக்கப் பட்டது. நாரதர் மூலம் சிவபெருமானிடம் தெரிவிக்கப்பட்டது. சிவபெருமான் உடன் பைரவராக மாறி போர் புரிந்தார். காளி தேவி தோற்றுவிட்டார். தோற்றக் காளி நடனப் போர்புரிய பைரவரை அழைத்தார். பைரவரும் சம்மதித்து தேவர்களின் வாத்திய இசைக்கு ஏற்ப நடனம் ஆடினார். நவரசங்கள் ததும்ப இருவரும் சலைக்காமல் ஆடினர். இந்த சண்ட தாண்டவம் நடை பெறும் போது சிவனின் குண்டலம் கீழே விழ, அதைத்தன் காலால் எடுத்துக் காதில் பொருத்தினார் போட்டியாக ஆடிய காளி வெட்கத்துடன் தன் தோல்வியை ஒப்புக்கொண்டார்.

காளியின் செருக்கும் அழிந்தது. சுனந்தர், கார்கோடகன், உற்பட அனைத்து தேவர், முனிவர்களும் எல்லாக் காலமும் காணும்படி தாண்டவக் கோலத்தை அருளினார். இக்காரணத்தால் அவரை சண்ட தாண்டவ மூர்த்தி என்கிறோம். கும்பகோணம் பேருந்து நிலையம் அருகேயுள்ளது கீழ்க் கோட்டம். இறைவன் பெயர் நாகநாதர், இறைவி பெயர் பெரியநாயகி ஆவார். இங்குள்ள நடராஜ மண்டபத்தை நாம் பேரம்பலம் என்போம். இங்கமைந்த மூர்த்தியை வணங்கி சிவ தியானம் செய்தால் தாண்டவ ஒலியைக் கேட்கலாம். முல்லைப்பூ அர்ச்சனையும், வெண்சாத நைவேத்தியமும் சோமவாரங்களில் கொடுத்தோமானால் நடனம், பாட்டு, நட்டுவாங்கம், என அனைத்தும் கைவரும். மேலும் இங்குள்ள மூலவரை கும்பநீரால் அபிசேகம் செய்து வழிபட்டால் பிறவிப் பயன் பெறமுடியும்.

18. கங்காதர மூர்த்தி

திருக்கைலையிலுள்ள ஓரு தோட்டத்தில் சிவபெருமான் நடைபயின்றுக் கொண்டிருந்தார். பார்வதி தேவி ஓசைப்படாமல் சென்று அவரது இரு கண்களையும் விளையாட்டாய் பற்றினார். உடன் உலக உயிர்கள் அனைத்திற்கும் அளவிலாத துன்பம் ஏற்பட்டது. அதனால் உலகம் முழுவதும் பேரிருள் சூழ்ந்தது. இதனையறிந்த சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணைத் திறந்து அனைவரையும் காத்தார். ஒளி வந்ததால் அனைத்து உயிர்களும் துன்பம் நீங்கி இன்பமடைந்தனர். அனைவரும் சிவபெருமானைப் போற்றினர். இதனைக் கேள்விப் பட்ட பார்வதி தேவி அவசரமாக தன் கைகளை நொடிப்பொழுதில் எடுத்தார். இதனால் இவரது பத்து கைவிரலில் இருந்த வியர்வைத் துளிகள் பத்தும் கங்கையாக மாறி மூவுலம் முழுவதும் பரவி பெருத்த சேதத்தையும், அழிவையும் உண்டாக்கியது. இதனைக் கண்ட முவுலகத்தினரும் சிவபெருமானிடம் முறையிட்டனர்.

சிவபெருமானும் அவ்வெள்ளத்தை அடக்கி அதனை தனது சிரசில் ஓர் மயிர் முனையில் தரித்தார். இதனைக்கண்ட அனைவரும் சிவபெருமானைப் போற்றித் துதித்தனர். நான்முகன், இந்திரன், திருமால் ஆகிய மூவரும் சிவபெருமானிடம் சென்று நாதா பார்வதி தேவியின் கைவிரல் வியர்வையால் உண்டான கங்கை பெரும் புனிதமானது, அதை உங்கள் முடியில் தரித்ததால் அது மேலும் புனிதமடைகிறது. அத்தகைய புனிதப் பொருளை எங்களுக்கும் கொஞ்சம் கொடுத்தருள வேண்டும் என்றனர். அதன்படியே இந்திரன் தனது அமராவதி நகருக்கும், நான்முகன் தனது மனோவதி நகருக்கும், திருமால் தனது வைகுண்டத்திற்கும் கங்கையைக் கொண்டு சேர்த்தனர்.

கங்கையின் வெள்ளத்தையும், வேகத்தையும் குறைத்து தனது சடைமுடியில் தாங்கியிருப்பதால் சிவபெருமானுக்கு கங்காதர மூர்த்தி என்ற பெயர் ஏற்பட்டது. கங்காதர மூர்த்தியை தரிசிக்க இமயத்திற்கு தான் செல்ல வேண்டும். இமயமலையே கங்காதர மூர்த்தியின் இருப்பிடமாகும். அங்கு சென்று கங்காதர மூர்த்தியை மானசீகமாய் வணங்கி அங்கு கிடைக்கும் கங்கை நீரை வீட்டிற்கு எடுத்து வந்து தெளிக்க இடம் புனிதமாகும். கங்காதர மூர்த்தியை மல்லிப்பூ அர்ச்சனையும், பாலில் செய்த இனிப்பு பண்ட நைவேத்தியமும் சோமவாரத்தில் சந்தியா காலத்தில் செய்தோமானால் செல்வசெழிப்பும் இனியோரு பிறவி இல்லா நிலையும் ஏற்படும். இந்த கங்கை நீரை வீட்டில் கலசத்தில் வைத்து வழிபட லஷ்மி கடாட்சம் கிடைக்கும்.

ip.gif
Logged

singnature.gif

19. கங்கா விசர்ஜன மூர்த்தி

சகரன் எனும் அரசன் அயோத்தி நகரை ஆண்டுவந்தான். அவன் அஸ்வமேத யாகம் செய்ய ஒரு குதிரையைக் கொணர்ந்தான். அக்குதிரை இருந்தால் தானே யாகம் நடைபெறும் அதைத் தடுக்க வேண்டி குதிரையை பாதாளத்தில் கபில முனிவர் அருகே கட்டி வைத்தான். அயோத்தி மன்னன் குதிரையைத்தேடி கொண்டுவரும் படி தமது அறுபதினாயிரம் மக்களையும் பணிந்தார். பாதாளத்தில் முனிவர் அருகே குதிரைக் கண்ட அவர்கள் முனிவரே கள்வன் என முடிவு கட்டினர். உடன் முனிவர் கண்விழிக்க, அனைவரும் சாம்பலானாகள். இச் செய்தி கேள்விப்பட்ட மன்னன் தன் மகன் அஞ்சுமானை அனுப்பினார். அஞ்சுமானும் கபிலரிடம் சென்று உண்மையைக் கூறி குதிரையை மீட்டு தன் தந்தையின் யாகம் நிøவேற உதவினான். அவனது வம்சாவளியிலே வந்தவனே பகிரதன் ஆவான். அவன் தனது முன்னோர்க்கு ஏற்பட்ட நிலையை எண்ணி நான்முகனை நோக்கி தவமிருந்தான். நான்முகன் தோன்றி கங்கையால் உன் முன்னோர்கள் மோட்சமடைவர் எவனே சிவனை நோக்கி தவமிக்க சொல்லி மறைந்தார். சிவனை நோக்கி தவமிருந்தான் பகிரதன்.

சிவபெருமான் கேட்ட வரம் கொடுத்தார். பின் கங்கையை நோக்கி தவமிருந்தான். கங்கையோ தன்னை அடக்க சிவபெருமானால் மட்டுமே முடியும் எனவே மறுபடியும் சிவனை நோக்கி தவமியற்றும் படி கூறினார். மறுபடியும் சிவன் கேட்ட வரம் கொடுத்தார், உடன் கங்கை வந்தார். சிவபெருமான் அவரை அடக்கும் பொருட்டு தனது தலை முடியில் அணிந்தார். இதனையறியா பகிரதன் பதறினார். பின் சிவபெருமான் தன் தலை முடியில் இருந்த கங்கையில் இருந்து சிலதுளிகள் பகிரதன் கைகளில் விட்டார். அந்த சில துளிகளும் வேகத்துடன் வந்து ஐந்து முனிவர்கள் இயற்றிய யாகத்தை அழித்தது, அதனால் அம்முனிவர்கள் கங்கையை தம் உள்ளங்கையில் வாங்கி உட்கொண்டனர். பகிரதன் கங்கையைக் காணாது திகைத்தான். பின் முனிவர்களை வணங்கி நடந்ததைச் சொல்லி கங்கையைத் திருப்பிதர வேண்டினான். அம்முனிவர்களும் இசைந்து தம் செவி வழியாக விட்டனர். அதனால் கங்கைக்கு ஜானவி என்ற பெயர் ஏற்பட்டது. பகிரதன் கங்கையை தம் முன்னோர்களின் சாம்பல் மீது தெளிக்க அவர்கள் சொர்க்கம் அடைந்தனர்.

பகிரதன் கொண்டு வந்ததால் கங்கைக்கு பகீரதி என்ற பெயர் ஏற்பட்டது. கங்கையை தனது சடையில் ஏற்று வழிபாட்டிற்கே சிறு துளி கொடுத்து வழி காட்டியதால் சிவபெருமானுக்கு கங்கா விசர்ஜன மூர்த்தி என்ற பெயர் ஏற்பட்டது. அவரை தரிசிக்க கேதார் நாத் செல்ல வேண்டும். ஆறு மாத காலம் கோயிலில் வழிபாடுகள் நடைபெறும். பனிமழையால் ஆறுமாதம் மூடப்பட்டிருக்கும். உமை சிவனிடம் இடபாகம் பெற்ற தலமே கோதார்நாத் ஆகும். இங்கு கோயில் கொண்டுள்ள கோதாரேஸ்வரரை வணங்கி அங்குள்ள புனித நீரை வீட்டில் நடைபெறும் சுபகாரியங்களுக்கு பயன்படுத்தினால் சுபமாகும். வெண்தாமரை அர்ச்சனையும், எள்ளோதரை நைவேத்தியமும் அமாவாசை, திங்கள் கிழமைகளில் செய்தோமானால் பிதுர் தோஷம் சரியாகும். அவர்கள் சொர்க்கம் செல்வர். மேலும் இங்கிருந்து கொண்டு செல்லும் நீரை வெள்ளிக்கலசத்தில் வைத்து பூஜிக்க குபேர சம்பத்து கிட்டும் என்பது ஐதீகம்.

20. திரிபுராந்தக மூர்த்தி

தாரகாசுரனின் மூன்று மகன்களும் நான்முகனை நோக்கி நெடுங்காலம் தவமியற்றி வந்தனர். நான்முகனும் காட்சிக் கொடுத்தார் உடன் அவர்கள் என்றும் அழியாத வரம் வேண்டும் என்றனர். உடன் நான்முகனோ அது முடியாத காரியம் அனைவரும் அனைவரும் ஒரு நாள் அழிந்தே தீருவோம். எனவே மோட்சமாவது கேளுங்கள் கிடைக்கும். இவ்வுலகில் என்றும் அழியாமல் இருப்பவர் சிவபெருமான் மட்டுமே என்றார். உடனே அம்மூவரும் அப்படியானால் பொன், வெள்ளி, இரும்பினால் ஆன சுவருடைய முப்புரம் வேண்டும். அவை நாங்கள் நினைத்த இடத்திற்கு மாற வேண்டும். அவற்றை எங்களையும் சிவபெருமான் தவிர வேறொருவர் அழிக்க முடியாத வரத்தை கேட்டனர். நான்முகனும் கொடுத்து விட்டு மறைந்தார். அம்மூவரும் தங்கள் சுயரூபத்தை சிவனிடம் காட்டாமல் மற்ற அனைவரிடத்திலும் காட்டினர். தேவர்கள் அவர்களது தொல்லை தாளாமல் திருமாலிடமும், இந்திரனிடமும் முறையிட, அவர்கள் அசுரர்களிடம் தோற்று திரும்பினர். பின்னர் சிவனை நோக்கி தவமிருந்தனர். சிவபெருமான் அவர்கள் தமது அடியார் எனவேக் கொல்ல முடியாது என்றார். மீண்டும் கடுமையான தவத்தை திருமால், இந்திரன், நரதர் மேற்க்கொண்டனர். உடன் சிவபெருமான் அப்படியானால் தேர் முதலான பேர் கருவிகளைத் தயார் செய்யும் படி தேவர்களிடம் கூறினார்.

தேவர்களும் அவ்வாறே தயார் செய்தனர். தேரில் மந்திர மலையை அச்சாகவும், சந்திர, சூரியர் சக்கரமாகவும், நதிகள் தேர்க் கொடியாகவும், அஷ்டபர்வதங்கள் தேரின் தூண்களாகவும், புண்ணிய நதிகள் சாமரம் வீசவும், தேவகணத்தினர் வாத்தியங்கள் இசைத்தப்படி உடன் வர தேர் தயாரானது. சிவபெருமான் பார்வதியுடன் இடபவாகணத்தில் இருந்து தேரில் கால் எடுத்து வைத்தவுடன் தேரின் அச்சு முறிந்தது. உடன் இடபமாக மாறி திருமால் தேரைத் தாங்கினார். ஆனாலும் தேர் மேலும் சாய அனைவரும் முதற்கடவுளை வேண்ட, தேர் பழைய படி சரியானது. பின் தேவகணங்கள் படைசூழ, இந்திரன், திருமால், முருகன், வினாயகன் என அனைவரும் தங்களது வாகனம் ஏறி முடிவில் அனைவரின் எண்ணப்படி மேருமலையை வில்லாகக் கொண்டு, வாசுகியை அம்பாகக் கொண்டு நாணேற்றினார். பின் திடிரென அவற்றை வைத்து விட்டு முப்புறங்களையும் பார்த்து ஒரு புன்னகைப் புரிந்தார். முப்புறங்களும் எரிந்து சாம்பலாயின.

உடன் அசுரர்கள் மூவரும் ( தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி) சிவபெருமானிடம் மன்னிப்புப் கேட்க. அவரும் அவர்களை மன்னித்து துவார பாலகராக வைத்துக் கொண்டார். தேவர்களின் துயர்துடைத்து முப்புரங்களையும் எரித்ததால் சிவபெருமானுக்கு திரிபு ராந்தக மூர்த்தி என்னும் பெயர் ஏற்பட்டது. இவரை தரிசிக்க நாம் செல்ல வேணடிய தலம் கடலூரில் உள்ள திருஅதிகையாகும். இங்குள்ள இறைவன் பெயர் திரிபுராந்தக மூர்த்தி, அதிகைநாதர் என்பதும், இறைவி பெயர் திரிபுரசுந்தரியாகும். இவர்க்கு கெடில நதியால் அபிசேகமும் வில்வார்ச்சனையும் செய்ய பகைவர் பகை ஒழிந்து நண்பராவார்கள். சூலை நோய் இருப்பின் இந்த சுவாமியை வழிபட நோய் குறைந்து உடல் நலம் சீராகும். மேலும் இங்குள்ள சிவபெருமானுக்கு திருமஞ்சனத்தூள் அபிசேகம் செய்ய எவ்வகை நோயும் குணமடையும் என்பது ஐதீகம்.

கல்யாண சுந்தர மூர்த்தி

திருக்கைலையில் அனைத்து தேவர்குழாமுடன் சிவபெருமான் வீற்றிருக்கையில் பார்வதி தேவியார் எழுந்து இறைமுன் சென்று தக்கன் மகளால் தாட்சாயிணி என்ற பெயர் பெற்றேன். அந்த அவப்பெயரை மாற்ற தங்கள் தயவு வேண்டும் என்றார். உடன் சிவபெருமானும் பார்வதி பர்வத மன்னன் உன்னை மகளாக அடைய தவம் இயற்றுகிறான். நீ அவரிடம் குழந்தையாக பிறப்பாயாக. பிறகு உன்னை நான் மணமுடிப்பேன் என்றார். அதன்படி பர்வத மன்னரிடம் மூன்று வயதுள்ள குழந்தையாக வந்து சேர்ந்தார். அக்குழந்தையை அவர்கள் சீராட்டி வளர்த்தனர். பார்வதிதேவி அருகில் இல்லாததால் சிவபெருமான் யோகத்தில் இருந்தார். அதனால் உலக இயக்கம் ஸ்தம்பித்தது. உடன் தேவர்களின் ஆலோசனைப்படி மன்மதன் சிவபெருமானின் யோகத்தைக் கலைக்க பாணம் விட்டார். இதனால் கோபமுற்ற சிவபெருமான் அவரை நெற்றிக் கண்ணால் எரித்தார். இதனால் கவலையுற்ற ரதி சிவனிடம் சரணடைந்தார். அவரும் பொருத்திருக்கச் சொன்னார்.

இதற்கிடையே பர்வத ராஜனிடம் வளரும் பார்வதிதேவி சிவனை மணாளனாக அடைய வேண்டித் தவமிருந்தார். பார்வதி முன் அந்தணராகத் தோன்றி தன்னை மணம் புரியும் படி வேண்டினார். பார்வதி அதை மறுத்து சிவபெருமானை மணம் செய்யவே தான் தவமிருப்பதாகக் கூறினார். உடன் அந்தண வேடம் கலைந்து இடபத்துடன் சிவபெருமான் காட்சிக்கொடுத்தார். விரைவில் வந்து மணம் புரிவேன் என்று கூறி மறைந்தார். பார்வதி தேவி தன் தந்தையிடம் நடந்தவற்றைக் கூறினார். அங்கே சிவபெருமான் சப்தரிஷிகளிடம் தனக்கு மலையரசன் மகளை மணம் பேசச் சொன்னார். இருவீட்டாரும் பேசி திருமணத்திற்கு நாள் குறித்தனர். பங்குனி உத்திர தினம் மணநாளாக குறிக்கப்பட்டது. தேவருலகத்தினர் படைசூழ சிவபெருமான் பர்வதம் விரைந்தார். அனைவரும் அங்கே குவிந்ததால் வடதிசை தாழ்ந்தது. உடன் சிவபெருமான் அகத்திய முனிவரை தென்திசை சென்று நிற்கும் படி வேண்டினார். அவர் தயங்கவும் உமக்கு எம் திருமணக்கோலத்தை காட்டுவோம் எனவே தென்திசை செல்க என்று பணிந்தார். அகத்தியரும் அவ்வாறு சென்றார். உடன் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. அப்பொழுது ரதி தனது கணவனை உயிர்ப்பிக்க வேண்டினார்.

சிவபெருமானும் அவ்வாறே மன்மதனை உயிர்ப்பித்தார். பின் ரதியின் கண்களுக்கு மட்டும் உருவத்துடனும், மற்றொர்க்கு அருபமாகவும் காட்சியளிக்கும் படி வேண்டினார். பின் அவரவர், அவரவர் இருப்பிடம் திரும்பினர். பார்வதி தேவியை திருமணம் செய்ய சிவபெருமான் எடுத்த கோலமே கல்யாண சுந்தர மூர்த்தியாகும். அவரை தரிசிக்க தாம் செல்ல வேண்டிய தலம் திருவாரூர் அருகேயுள்ள திருவீழிமலையாகும். இங்கு மூலவர் பெயர் விழியழகர், இறைவி பெயர் சுந்தர குஜாம்பிகை யாகும். இங்கு உற்சவ மூர்த்தியாக கல்யாண சுந்தரர் காட்சியளிக்கிறார். இங்குள்ள கல்யாண சுந்தரருக்கு அர்ச்சனை செய்த மாங்கல்யத்தை தானமாகப் பெற, கொடுக்க திருமணம் தங்குதடையின்றி நடைபெறும். மேலும் பிரதோஷ தரிசனமும் சிறப்பானதாகும். மல்லிகைப்பூ அர்ச்சனையும், சர்க்ககரைப் பொங்கல் நைவேத்தியமும் திங்கள், குருவாரங்களில் கொடுக்க திருமணத்தடை விலகும். கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும். மேலுமொரு சிறப்பாக கல்யாண சுந்தரருக்கு ரோஜாமாலை அணிவித்துப் பூச்செண்டு கொடுத்தால் கல்யாணம் இளம்பெண்களுக்கு கூடி வரும். இங்குள்ள மூலவரின் பின் புறம் சிவபெருமான் உமை திருமணக்கோலம் உள்ளது.

ip.gif
Logged

22. அர்த்த நாரீஸ்வர மூர்த்தி

திருக்கைலையில் சிவபெருமானை தரிசிக்க திருமால், நான்முகன், இந்திரன் என அனைத்தும் தேவருலகத்தினரும் திரண்டிருந்தனர். அவர்களை வரிசைப்படி நந்தி தேவர் அனுப்பிக் கொண்டிருந்தார். அனைவரும் பார்வதி தேவியையும், சிவபெருமானையும் தனித்தனியாக வணங்கி வேண்டும் வரங்களைப் பெற்றுச் சென்றனர். பின்னர் வந்த முனிகுமாரர்களில் ஒருவரான பிருங்கி முனிவர் பார்வதி தேவியை சட்டைச் செய்யாமல் சிவபெருமானை மட்டுமே வணங்கிய படிச் சென்றார். இதனைக் கண்ணுற்ற பார்வதிதேவி அவரது உடலிலுள்ள சதையை தனது மூச்சுக் காற்றால் இழுத்துக் கொண்டார். இதனையும் சட்டை செய்யாத பிருங்கி முனிவர் எழும்பும் தோலுமாகவே சிவபெருமானை துதித்தார். சிவபெருமான் தன்னை மட்டும் வணங்கியதால் பார்வதிதேவியின் திருவிளையாடல் என்பதை புரிந்து மேலும் ஒரு காலை முனிவருக்கு வழங்கினார். முனிவர் அகன்றவுடன் பார்வதி தேவி தான் தவமியற்றப் போவதாகக் கூறி கைலாயத்தை விட்டு நீங்கி வினாயகன், முருகன், சப்த மாதர்கள் படைசூழ ஒரு மலைச்சாரலில் உறுதியான தூண் மீது நின்றவாறு தவம் இயற்றினார். கடுமையான உறுதியான தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான் தனது படைபரிவாரங்களுடன் தேவி தவமியற்றும் இடத்திற்கு வந்தார். உடன் அவர் தேவி உனக்கு என்ன வேண்டும் கேள் என்றார். உடன் தேவி இறைவா நான் தனியாகவும் நீங்கள் தனியாகவும் இருப்பதால் தானே இந்தப் பிரச்சனை. எனவே தங்களது இடபாகமாக நானிருக்கும்படியான வரத்தைத் தாருங்கள் என்றார்.

சிவபெருமானும் அவ்வாறே தந்து தனது இடப்பாகத்தில் தேவியை ஏந்தினார். வலப்பக்கம் சிவனுமாக, இடப்பக்கம் பார்வதியாக உள்ள திருக்கோலமே அர்த்த நாரீஸ்வர மூர்த்தி யாகும். அவரை தரிசிக்க நாம் செல்ல வேண்டிய தலம் திருக்கோடாகும். ஈரோடு அருகேயுள்ள இத்தலம் சிவபெருமானுடையது என்றாலும் இளைய பிள்ளையாரான முருகனுக்கு உகந்தது ஆகும். இங்குள்ள இறைவன் பெயர் அர்த்த நாரீஸ்வரர், இறைவி பெயர் பாகம்பிரியாள் என்பதாகும். ஆணாகவும், பெண்ணாகவும் இங்குள்ள இறைவன் காட்சியளிக்கிறார். கணவன் - மணைவி இருவரும் ஒருவர்க்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழவும், குடும்பத்தில் ஒற்றுமை, அமைதி நிலவவும் இந்த மூர்த்தியை வணங்கினால் கைகூடும். வில்வ, தும்பை, கொன்றை மலர் அர்ச்சனையும், சர்க்கரைப் பொங்கல் (அல்லது) நெய்யன்ன நைவேத்தியமும், திங்கள், பிரதோஷ, பௌர்ணமி தினங்களில் கொடுக்க பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர் என்பது ஐதீகம். மேலும் இங்குள்ள சிவபெருமானுக்கு பசும்பால் அபிசேகம் செய்தால் குடும்பம் ஒற்றுமையுடன் காணப்படும்.

ip.gif
Logged



23. கஜயுக்த மூர்த்தி

கயாசுரன் எனும் அசுரன் காளமேகம் போன்றதொரு யானை உருவம் ஏற்றவன். அவன் மேருமலையின் மேல் நான்முகனை நினைத்து கடும்தவம் மேற்க்கொண்டான். உடன் நான்முகன் தோன்றினான் கயாசுரன் யாராலும் அழிவில்லா நிலையும் எதிலும் வெற்றி கிடைக்கவும் வரம் கேட்டான். உடன் கிடைத்தது. ஆனால் சிவனை மட்டும் எதிர்ப்பாயானால் நீ இறப்பாய் என்ற கடுமையான தண்டனையும் கிடைத்தது. அவன் தனதுவேலைகளைக் காட்டத் தொடங்கினான். சிவபெருமானை விடுத்து அனைவரிடத்திலும் தன் தொல்லைகளையும், கொடுமைகளையும் தொடர்ந்தான். இந்திரனும் அவனிடம் போரிட முடியாமல் தோற்றான். உடன் அவனது வாகனமான ஐராவத்தின் வாலைப் பிடித்திழுத்து தூர எறிந்தான். பின் அமராவதி நகரை அழித்தான். அதோடு தன் குலத்தாரையும், இராட்சதக் கூட்டத்தினரையும் உலகமக்கள் அனைவரையும் கொடுமைப் படுத்தினான். பாதிக்கப்பட்டோர் சிவபெருமானிடம் சரணடைந்தனர். அவரைத் தேடி காசிக்கு சென்றனர். அங்கே யொரு ஆலயத்தில் சிவபெருமான் பார்வதி தேவியிடன் வீற்றிருந்தார். வந்தவர்கள் அனைவரும் சிவபெருமான் முன் இறைவா! எங்களைக் காக்க வேண்டும். நான்முகனிடம் அழியாவரம் வாங்கிய தயாசுரன் இங்கு வந்து கொண்டுள்ளான். அவனை அழித்து எங்களைக் காக்க வேண்டும் என்று மன்றாடினர். பின்னாலேயே வந்த கயாசுரன் தான் எதிர்க்கக் கூடாதது சிவபெருமான் என்பதை அக்கணத்தில் மறந்தான். ஆலயவாசல் முன் நின்று அனைவரும் பயப்படும் படியாக கர்ண கொடுரமாக சத்தமிட்டான். இதனைக் கேட்டோர் சிவபெருமானைத் தழுவிக்கொண்டனர். அவர்களுக்கு ஆறுதல் கூறியபடியே தேவகணத்தினரே பயப்படும் படியாகப் பெரிய வடிவம் எடுத்தார். அனைவரும் பயப்படும் படி கண்களின் வழியே தீ சுவாலைகள் தெரித்தது.

கயாசுரனை தனது திருவடியால் உதைக்க, அவன் கழிந்த கோலத்தில் உலகின் மீது விழுந்தான். மற்றொரு திருவடியால் அவனது தலையை மிதித்து தொடையில் ஊன்றியவாறே தனது நகங்களால் பிளந்து அவனது தோலை கதறக் கதற உரித்திழுத்தார். அச்சமயத்தில் பார்வதி தேவியே அஞ்சினார். அவரது தோற்றத்தைக் கண்டோர் கண்ணொளி இழந்தனர். கயாசுரனின் தோலை தன் மீது போர்த்தி சாந்த மடைந்தார். கயாசுரனின் தொல்லை நீக்கப் பெற்றோர் நிம்மதியுடன் தங்களது இருப்பிடம் சென்றனர். கஜாசுரனுடன் சண்டையிட்டு வென்றதால் அவரது பெயர் அவரது பெயர் கஜயுக்த மூர்த்தி யாகும். அவரை தரிசிக்க திருவழுவுர் செல்ல வேண்டும். இங்கே தாரகாபுரத்து முனிவர்கள் யாகத்தில் தோன்றிய யானையைச் சிவனாரே அழிக்க ஏவினார். சிவபெருமான் இதனால் அணிமாசித்தி மூலம் யானையின் உடலில் சென்று, பின் உடலைக் கிழித்தப் படி வெளி வந்தார். எனவே அவரை கஜசம்கார மூர்த்தி என்றும் அழைப்போம். இங்குள்ள கஜசம்ஹார மூர்த்திக்கு அபிசேக ஆராதனை செய்ய சனீஸ்வர தோஷம் விலகும். ஏழரை சனியின் கொடுமையில் இருந்து தப்பிக்கலாம். 12 அமாவாசை காலையில் விஸ்வ ரூப தரிசனம் பார்த்தால் குழந்தை பாக்கியம் கிட்டும். அருகம்புல் அர்ச்சனையும், பாயாச நைவேத்தியமும் சோம வாரங்களில் கொடுக்க எதிரி தொல்லை தீரும். கஜசம்கார மூர்த்திக்கு எழுமிச்சை சாறு அபிசேகம் செய்தால் மரண பயம் தீரும்.

http://www.friendstamilchat.com/forum/index.php?topic=4819.15

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.