Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு மனைவியின் கதை

Featured Replies

ஒரு மனைவியின் கதை

jenny1-216x300.jpg

 

சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு. பிரஷ்யா என்று அழைக்கப்பட்ட இன்றைய ஜெர்மனியில் ட்ரியர் நகரம். பிரஷ்ய அரசாங்கத்தில் அதிகாரியாக இருந்தவரும் பரம்பரை பணக்காரருமான ஜான் லுத்விக் வோன் வெஸ்ட்பாலனுக்கும் கரோலின் ஹ்யூபெலுக்கும் 1814-ம் ஆண்டு பிறந்தார் ஜென்னி.

அதே நகரில் நான்கு ஆண்டுகள் கழித்து, 1818-ம் ஆண்டு ஹென்ரிச் மார்க்ஸ் — ப்ரெஸ்பர்க் தம்பதிக்குப் பிறந்தார் கார்ல் மார்க்ஸ்.

ஜென்னியின் குடும்பமும் மார்க்ஸின் குடும்பமும் பக்கத்து பக்கத்து வீடுகளில் வசித்தன. மார்க்ஸின் அக்காவும் ஜென்னியும் பள்ளித் தோழிகள். ஜென்னியின் தம்பியும் மார்க்ஸும் ஒன்றாகப் படித்தாலும் ஜென்னியின் அப்பாதான் மார்க்ஸுக்கு நெருங்கிய நண்பராக இருந்தார்.

அரசியல், சமூகச் சிந்தனைகள், தத்துவம், இலக்கியம் போன்ற பல விஷயங்களை வெஸ்ட்பாலன் மார்க்ஸுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இருவரும் நிறைய விவாதிப்பார்கள்.  ஜென்னிக்கு கவிதைகள் மீது தீராத ஆர்வம்.

அன்பும் பண்பும் திறமையும் கொண்ட ஜென்னியை எல்லோருக்குமே பிடித்துப் போகும். மார்க்ஸுக்கும் ஜென்னியைப் பிடித்ததில் ஆச்சரியம் இல்லை.

பள்ளி இறுதி ஆண்டில், ‘எதிர்கால வேலை’ என்ற தலைப்பில் மாணவர்களைக் கட்டுரை எழுதச் சொன்னார்கள். அதில் மார்க்ஸ் எழுதியவை…

‘மனிதன் என்பவன் தனக்காக மட்டுமே வாழ்பவன் அல்ல. அவன் சக மனிதனுக்காகவும் பாடுபட வேண்டும். தனக்காகப் பாடுபடுபவன் நல்ல சிந்தனையாளராக இருக்கலாம், நல்ல நிர்வாகியாக இருக்கலாம். ஆனால், நல்ல மனிதனாக இருக்க முடியாது.  மனிதகுலத்தின் பெரும்பான்மைக்குப் பயன்படக்கூடிய ஒரு வேலையைச் செய்தால், அதில் வரும் எந்தத் தடையும் நம்மை ஒன்றும் செய்துவிடாது. நம் தியாகத்தால் உலக மக்களுக்கு நன்மை கிடைக்கிறது என்றால் அந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதில் இருக்கும் உண்மையான சந்தோஷம் என்றும் நிலைத்திருக்கும். அதுபோன்ற பணியையே நான் விரும்பி ஏற்கப் போகிறேன்.’

ஜென்னிக்கு மார்க்ஸைப் பிடிக்க அவருடைய அறிவும் மக்களுக்கான சிந்தனைகளும்தான் காரணம்.

தன்னைப் போலவே மார்க்ஸும் வழக்கறிஞராக வேண்டும் என்று அவர் அப்பா நினைத்தார். பெர்லின் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைத்தார். ஜென்னிக்கும் மார்க்ஸுக்கும் பிரிவு துயரத்தை அளித்தாலும் இருவரும் சூழ்நிலையைப் புரிந்துகொண்டனர். மார்க்ஸ் தொடர்ந்து ஜென்னிக்குக் கடிதம் எழுதி அனுப்பினார். அந்தக் கடிதம் முழுவதும் காதல் கவிதைகளால் நிரம்பி வழியும். ஜென்னியும் இலக்கிய ரசம் மிகுந்த, காதல் கடிதங்களை வீட்டுக்குத் தெரியாமல் எழுதுவார்.

ஜென்னி – மார்க்ஸ் காதல் மார்க்ஸின் அப்பாவுக்குத் தெரிய வந்தது. உண்மையில் அவர் பயந்து போனார். தன் குடும்பம் மிகவும் சாதாரணமானது. ஜென்னியின் குடும்பம் செல்வாக்கு மிக்க பணக்காரக் குடும்பம். இவர்களின் காதலால் அருமையான நண்பர் வெஸ்ட்பாலனின் நட்பு உடைந்துவிடுமோ என்று நினைத்தார். ஜென்னியிடம் மார்க்ஸைத் திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என்றார். மார்க்ஸிடம் காதலைத் துறந்துவிடும்படி கடிதம் எழுதினார். ஆனால், இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுப்பதாக இல்லை.

***

தத்துவத்தின் மீது மிகவும் ஈடுபாடுகொண்டார் மார்க்ஸ். புரட்சிகரச் சிந்தனையாளர்களின் இளம் ஹெகேலியர் இயக்கத்தில் இணைந்தார். 23 வயதில் டாக்டர் பட்டம் பெற்று ட்ரியர் திரும்பினார் மார்க்ஸ்.

அப்போது மார்க்ஸின் அப்பாவும் ஜென்னியின் அப்பாவும் மறைந்திருந்தார்கள். ஜென்னியின் அம்மாவுக்கு இவர்களின் திருமணத்தில் விருப்பமில்லை. திருமணம் தள்ளிப்போனது. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, 29 வயதில் ஜென்னி தன் அன்புக்குரிய மார்க்ஸை மணந்துகொண்டார்.

‘ரைனிஷ் ஷெய்டுங்’ பத்திரிகையில் அரசியல் விழிப்புணர்வு கட்டுரைகளை எழுதினார் மார்க்ஸ், விரைவில் அந்தப் பத்திரிகையின் ஆசிரியரானார். கோபமுற்ற அரசாங்கம் அந்தப் பத்திரிகையைத் தடை செய்தது. மார்க்ஸை நாட்டை விட்டு வெளியேறச் சொன்னது.

மார்க்ஸும் ஜென்னியும் பிரான்ஸ் சென்றார்கள். சிறிய வீட்டில் மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்தார்கள். அவர்கள் திருமணத்தின் போது கிடைத்த பணத்தை ஒரு பெட்டியில் வைத்திருந்தார் ஜென்னி. அந்தப் பெட்டி எப்போதும் திறந்தே இருக்கும். பணம் தேவைப்படும் நண்பர்கள் அந்தப் பெட்டியிலிருந்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம். தங்களால் பிறருக்கு உதவ முடிவதை நினைத்து ஜென்னியும் மார்க்ஸும் மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.

1844-ம் ஆண்டு ஜென்னி பெண் குழந்தைக்குத் தாயானார். தன் அன்பு மனைவியின் பெயரையே குழந்தைக்கு வைத்தார் மார்க்ஸ்.

ஜெர்மன் – பிரெஞ்சு புத்தகங்கள் தயாரிப்பில் ரூகேயுடன் சேர்ந்து வேலை செய்தார் மார்க்ஸ். அப்போது பிரெடரிக் ஏங்கெல்ஸ் அறிமுகம் கிடைத்தது.

***

இரண்டு ஆண்டுகளில் கையில் இருந்த பணம் காலி. ஜென்னிக்குப் பொருளாதாரக் கஷ்டம் வர ஆரம்பித்தது. அப்போது பிரஷ்யாவில் நெசவாளர்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே பெரிய மோதல் நடைபெற்றது. நெசவாளர்களுக்கு ஆதரவாகக் கட்டுரைகள் எழுதினார் மார்க்ஸ். கோபம் அடைந்த பிரஷ்ய அரசாங்கம், பிரான்ஸில் இருந்து மார்க்ஸை வெளியேற்றும்படி கட்டாயப்படுத்தியது. மார்க்ஸ் பெல்ஜியம் நாட்டில் உள்ள பிரஸ்ஸல்ஸ் நகருக்குச் சென்றார். வீட்டில் இருந்த பொருள்களை விற்று, கிடைத்த பணத்தில் குழந்தைகளுடன் பிரஸ்ஸல்ஸ் போய்ச் சேர்ந்தார் ஜென்னி.

ஜென்னியின் அம்மா மகளுக்கு உதவி செய்வதற்காக ஹெலன் டெமூத் என்பவரை அனுப்பி வைத்தார். மூன்றாவது குழந்தையாக மகன் பிறந்தான். ஜென்னியும் மார்க்ஸும் அளவற்ற மகிழ்ச்சியடைந்தார்கள்.

அங்கும் அரசாங்கத்தை எதிர்த்து எழுத தடை வந்தது. மார்க்ஸுக்கு வருமானம் குறைந்தது. பிரான்ஸில் மன்னராட்சிக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன. மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் வழிகாட்டலில் அமைந்த கம்யூனிஸ்ட் லீக் போராட்டங்களை ஒன்றிணைத்தது. லூயி மன்னன் நாட்டை விட்டு ஓடினார். இடைக்கால அரசாங்கம் மார்க்ஸை அழைத்தது.

கிளம்புவதற்குள் ஒருநாள் நள்ளிரவு திடீரென்று மார்க்ஸைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். பதறிப்போன ஜென்னி, அவரைப் பின் தொடர்ந்து சென்றார். ஜென்னியையும் கைது செய்து, சிறையில் தள்ளினார்கள். அந்தச் சிறையில் குற்றவாளிகள் நிரம்பியிருந்தனர். ஜென்னிக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. ஒருபுறம் கணவர் கைது, இன்னொரு புறம் குழந்தைகள் தனியாக இருந்தனர். தாங்க முடியாத குளிர். சகிக்க முடியாத இரவாக அமைந்தது. மறுநாள் ஜென்னி மறுநாள் விடுதலை செய்யப்பட்டார். அம்மாவும் அப்பாவும் கைது செய்யப்பட்ட விஷயத்தால் பயந்துபோயிருந்த குழந்தைகள் ஜென்னியைக் கண்டதும் ஓடிவந்து கட்டிக்கொண்டனர். மார்க்ஸும் விடுதலையானார். வீட்டில் இருந்த பொருள்களை விற்று, பிரான்ஸுக்குச் சென்றார்கள்.

***

மீண்டும் அரசியல் சூழ்நிலை மாறியது. மார்க்ஸை வெளியேறும்படிச் சொன்னது. மார்க்ஸ் குடும்பம் லண்டனுக்குக் குடிபெயர்ந்தது. அங்கு ஹென்ரிச் என்ற குழந்தை பிறந்தது. மார்க்ஸ் அரசியல் பொருளாதார ஆராய்ச்சியில் இறங்கினார்.

மார்க்ஸின் கையெழுத்து மிகவும் மோசமாக இருக்கும். அவர் எழுதும் கட்டுரைகள், புத்தகங்களை ஜென்னி பிரதியெடுப்பார். தன்னுடைய கருத்துகளை மார்க்ஸுடன் விவாதிப்பார். மார்க்ஸும் ஜென்னியின் கருத்துகளுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிப்பார்.

1850-ம் வருடம் மிகவும் மோசமான காலகட்டம். பணமில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டனர். உதவி செய்யவும் ஆள்கள் இல்லை. ஜென்னி உதவி கேட்டு நண்பருக்குக் கடிதம் எழுதினார்.

‘சரியான ஆகாரம் இல்லை. முதுகிலும் மார்பிலும் கடுமையான வலி. என் மார்பில் பால் சுரக்கவில்லை. குழந்தை பசியில் பலமாக உறிஞ்சியதில் தோல் வெடித்து, ரத்தம் அவன் வாயில் கொட்டியது… எங்களின் தேவை மிகவும் குறைவானதே. ஆனால், அதைப் பெறுவதுக்குக்கூட நாங்கள் மிகவும் போராட வேண்டியிருக்கிறது…’

ஒருநாள்…

‘ஜென்னி, நான் உனக்குத் தாங்க முடியாத கஷ்டத்தை அளித்து வருகிறேன். எனக்கு வருத்தமாக இருக்கிறது…’

’நாம் என்ன நமக்காகவா போராடுகிறோம்? பாட்டாளி மக்களுக்காகத்தானே போராடுகிறோம். அந்தப் போராட்டம் எந்தவிதத்திலும் என்னை நிலைகுலையச் செய்துவிடாது கார்ல். என்னை நினைத்து வருந்தத் தேவையில்லை. உண்மையில் நான் அதிர்ஷ்டம் செய்தவள். எனக்கு ஆதரவாக அன்பான கணவனாக நீ இருக்கும்போது எந்தக் கஷ்டமும் என்னை ஒன்றும் செய்துவிடாது…’

‘நீ என்ன சொன்னாலும் நம் வாழ்க்கை மிகவும் கடினமானது ஜென்னி.’

‘என்னுடைய கவலை எல்லாம் இதுபோன்ற பிரச்னைகளில் நீ கவலை அடைய வேண்டியிருக்கிறதே என்பதுதான். உன்னுடைய சிந்தனைக்கும் செயலுக்கும் இன்னும் நல்லவிதமான சூழல் அமைந்திருக்கலாம் கார்ல்.’

’நீயும் குழந்தைகளும்தான் என்னுடைய சந்தோஷங்கள் ஜென்னி. உங்களைப் பார்க்கும்போது எந்தக் கவலையும் என்னை அண்டுவதில்லை.’

வாடகை கொடுக்க முடியாததால் பல வீடுகளுக்கு மாற வேண்டிய நிலை ஏற்பட்டது. பிரஷ்ய அரசாங்கம் மார்க்ஸ் மீதும் அவருடைய தோழர்கள் மீதும் பொய்க் குற்றச்சாட்டைச் சுமத்தியது. ஜென்னிக்கு நரம்புத்தளர்ச்சி நோய் வந்தது. சிகிச்சைப் பெற வழியில்லை. சில காலங்களில் எட்வர்டுக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டது. பரிதாபமாகக் குழந்தை இறந்துபோனது. ஜென்னியையும் மார்க்ஸையும் மகனின் இறப்பு மிகவும் பாதித்தது.

ஏங்கெல்ஸ் மற்றும் சில நண்பர்கள் அளித்த உதவியில் குடும்பம் பிழைத்தது. மார்க்ஸ் மீது கொலோன் கம்யூனிஸ்ட் சதி வழக்கு போட்டது பிரஷ்ய அரசாங்கம். அதிலிருந்து மீண்டு வருவதற்காக மார்க்ஸ் நிறைய உழைத்தார்.

சில நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த மகள் பிரான்சிஸ்கா, இறந்து போனாள்.

‘என் அருமை மகள் இறந்த துக்கம் ஒருபுறம். அவளை அடக்கம் செய்வதற்குப் பணமில்லாதது இன்னொருபுறம். ஐயோ… எந்த அம்மாவுக்கும் இந்தக் கொடுமை வாய்க்கக்கூடாது. அன்பு பிரான்சிஸ்கா, நீ பிறந்தபோது தொட்டில் வாங்க பணமில்லை… நீ இறந்தபோது சவப்பெட்டி வாங்க பணமில்லை… எப்படிப்பட்ட பெற்றோர் நாங்கள்!’ ஜென்னி கதறினார்.

வேறுவழியில்லை. பக்கத்து அறையில் இறந்த மகளை வைத்துவிட்டு, மீதிக் குழந்தைகளைக் கட்டிப்பிடித்துக்கொண்டு இரவு முழுவதும் ஜென்னியும் மார்க்ஸும் அழுதனர். நண்பர் ஒருவர் இரண்டு பவுண்ட் கொடுத்து, சவப்பெட்டி வாங்க உதவினார்.

அடுத்த சில ஆண்டுகளில் எட்கர் என்ற 8 வயது மகனும் இறந்துபோனான்.

‘நம் அன்பு குழந்தைகள் நான்கு பேரை இழந்த துயரம் என்னால் எப்போதும் தாங்கமுடியாத வலியைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது கார்ல். அவர்களை நினைக்கும்போது என் ஆயுள் நீடிப்பதில் எனக்கு விருப்பமே இல்லை…’

ஏழில் மூன்று பெண் குழந்தைகள் மட்டுமே உயிருடன் இருந்தனர். ஏங்கெல்ஸ் அழைப்பின் பேரில் மார்க்ஸும் ஜென்னியும் சில காலம் அவர் வீட்டில் தங்கியிருந்தனர். மார்க்ஸ் ‘மூலதனம்’ எழுத ஆரம்பித்தார். ஒவ்வொன்றையும் சளைக்காமல் பல முறை பிரதி எடுத்துக் கொடுத்தார் ஜென்னி.

ஜென்னியின் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று தகவல் வந்தவுடன் ஜென்னியும் குழந்தைகளும் அங்கு சென்றனர். பேத்திகளைக் கண்ட ஜென்னியின் அம்மா மகிழ்ந்து போனார். அங்கு சில காலம் தங்கியிருந்தார் ஜென்னி.

ஜென்னியின் பிரிவைத் தாங்க முடியாத மார்க்ஸ் கடிதம் எழுதினார். ‘அன்பு நிறைந்த ஒரு பெண்ணிடம் காதல் கொள்வது ஒரு மனிதனை மீண்டும் மனிதனாக்குகிறது!’

தாய் இறந்த பிறகு அவருக்குக் கிடைத்த சொத்துடன் வந்து சேர்ந்தார் ஜென்னி. ஓராண்டு பொருளாதாரப் பிரச்னையின்றி வாழ்ந்தனர். நண்பர்கள், அகதிகள் போன்றவர்களுக்குத் தேடிப் போய்ப் பண உதவி செய்தார் ஜென்னி…

***

அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. மார்க்ஸ் எழுதி வந்த கட்டுரைகள் குறைந்து போயின. அழையா விருந்தாளியாக வறுமை வந்து உட்கார்ந்துகொண்டது. வளர்ந்த குழந்தைகள் வீட்டில் இருந்தே படித்தனர். நாள்கள் செல்லச் செல்ல நிலைமை மோசமானது. மார்க்ஸ் வேலை தேடினார். கையெழுத்து மோசமாக இருந்ததால் வேலை கிடைக்கவில்லை. குழந்தைகளைத் தத்து கொடுத்துவிட்டு, ஏழைகள் வசிக்கும் இல்லத்தில் தானும் ஜென்னியும் சேர்ந்துவிடலாம் என்று கூட நினைத்தார் மார்க்ஸ்.

மீண்டும் உதவிக்கு வந்தார் ஏங்கெல்ஸ். நண்பர் ஒருவர் மார்க்ஸுக்கு சொத்து எழுதி வைத்து, இறந்து போனார். அதன் மூலம் மூலதனம் நூல் வெளியிடப்பட்டது.

‘இன்று மகத்தான நாள் கார்ல். நம் உழைப்புக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.’

***

மார்க்ஸின் இரண்டு பெண்களும் கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த தோழர்களைத் திருமணம் செய்துகொண்டார்கள். சில ஆண்டுகளில் பேரன், பேத்திகள் என்று மார்க்ஸின் குடும்பம் விரிவடைந்தது. மார்க்ஸ் வீட்டுக்கு அருகிலேயே ஏங்கெல்ஸும் குடிவந்தார். ஒருவழியாக வறுமை விலகியிருந்தது. வாழ்க்கையில் இனிமை வந்து சேர்ந்தது.

1880-ல் ஜென்னி நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அது குணமளிக்க முடியாத நோய் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். மார்க்ஸ் இடிந்துபோனார். ஜென்னியின் அருகிலேயே இருந்து கவனித்துக்கொண்டார். தன் பொருட்டு தன் கணவரோ, குழந்தைகளோ வருத்தப்படக்கூடாது என்று நினைத்த ஜென்னி, தன் நோயின் வலியை மறைத்துக்கொண்டு, நகைச்சுவையாகப் பேசினார்.

விரைவிலேயே மார்க்ஸும் நுரையீரல் நோயால் தாக்கப்பட்டார். தனியறையில் வைக்கப்பட்டார். பல வாரங்கள் ஜென்னியும் மார்க்ஸும் ஒருவரை ஒருவர் பார்க்க முடியவில்லை. ஓரளவு நோய் குணமானதும் மார்க்ஸ் ஜென்னியிடம் வந்தார்.

‘பக்கத்து பக்கத்து அறைகளில் இருந்தும் நம்மால் பார்க்க முடியாதது கொடுமையான விஷயம் ஜென்னி.’

‘ஆமாம் கார்ல். எவ்வளவோ காலம் நாம் பிரிந்து வசித்திருக்கிறோம். அப்போதெல்லாம் இந்தப் பிரிவு இவ்வளவு வலியைத் தந்தது இல்லை. உன் ஒரு கடிதம் அத்தனை துன்பத்தையும் மாயமாக்கிவிடும்.’

‘அன்பு ஜென்னி, நம் வாழ்க்கையில் நீ இன்பத்தை விட துன்பத்தையே அதிகம் பெற்றிருக்கிறாய். மிகவும் வருத்தமாக இருக்கிறது…’

‘இந்த வாழ்க்கை எனக்கு மிகவும் நிறைவைத் தந்திருக்கிறது கார்ல். சக மனிதனின் உயர்வுக்குப் பாடுபடுபவனே சிறந்த மனிதன். அதுபோன்ற வேலையில் கிடைக்கும் சந்தோஷமும் நிம்மதியும் வேறு எதிலும் கிடைக்காது என்று நீதானே சொல்லியிருக்கிறாய். நாம் இருவரும் அந்த வாழ்க்கையைத்தானே விரும்பி வாழ்ந்திருக்கிறோம்.’

பதில் சொல்லாமல் மார்க்ஸ் ஜென்னியின் கைகளைப் பிடித்தபடி அமர்ந்திருந்தார்.

‘நம் கஷ்டங்களை மறந்துவிட்டேன் கார்ல். மீண்டும் ஒருமுறை வாழும் வாய்ப்புக் கிடைத்தால், நீயே கணவனாகவும், இதே கஷ்டங்களுடனும்தான் வாழ விரும்புகிறேன், கார்ல்.

மூலதனம் நூல் ஜெர்மனியில் மூன்றாம் பதிப்பு வர இருப்பதாகக் கேள்விப்பட்டேன். லண்டன் பத்திரிகை உன்னை சோசலிச சிந்தனையாளர் என்று கூறியிருக்கிறது. ஜெர்மன் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. இவை எல்லாவாற்றையும் விட சந்தோஷம் வேறு உண்டா கார்ல்? நம் உழைப்பு வீணாகிவிடவில்லை. உலகம் முழுவதும் உன் சிந்தனை பரவும், பாட்டாளி வர்க்கம் பயன்பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.’

1881. டிசம்பர் 2. ஜென்னி இறந்து போனார். மார்க்ஸ் சுயநினைவிழந்தார். ஜென்னியின் இறுதிச் சடங்குகளை ஏங்கெல்ஸ்தான் செய்தார். ஜென்னியின் மறைவுக்குப் பிறகு மார்க்ஸ் தன்னை இழந்துவிட்டார். 15 மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் ஜென்னியின் புகைப்படத்தை கையில் வைத்து, சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தபோது அவர் உயிர் பிரிந்தது.

***

ஜென்னி நினைத்தது போலவே மார்க்ஸ் உலகம் முழுவதும் அறியப்பட்டார். மார்க்ஸின் சிந்தனையால் உலகம் பல மாற்றங்களைக் கண்டது. பிபிசி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில், கடந்த ஆயிரம் ஆண்டில் தலைசிறந்த சிந்தனையாளர் யார் என்ற கேள்விக்கு, கார்ல் மார்க்ஸை உலக மக்கள் தேர்ந்தெடுத்தனர்

 

 

http://www.tamilpaper.net/?cat=33

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்பிற்கு நன்றி வந்தியர்.

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தான் முழுவதும் வாசித்தேன் வந்தி!

 

மார்க்சின் மூலதனத்தைப் பல தடவைகள் வாசித்திருந்தும், அவரது தனிப்பட்ட வாழ்வைப் பற்றி, நான் அவ்வளவு அறிந்திருக்கவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

மார்க்ஸ் சரியா கஸ்டப்பட்டிருக்கிறார்.....ஆனால் எங்கன்ட சனம் அந்தாளின் பெயரை சொல்லி அரசியல் நடத்தினம்...

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி வந்தி

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.