Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அஞ்சலி: ஆ. வேலுப்பிள்ளை (1936 - 2015)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அஞ்சலி: ஆ. வேலுப்பிள்ளை (1936 - 2015)
உறுதிகொண்ட நெஞ்சினர்  

எம்.ஏ. நுஃமான்

 

Prof-Velupillai.jpg

 

தமிழறிஞர், பேராசிரியர் வேலுப்பிள்ளை இன்று நம்முடன் இல்லை. நவம்பர் முதலாம் தேதி அவர் காலமானார் என்ற செய்தியை அவரது மாணவர்களும் தமிழியல் ஆய்வாளர்களும் கவலையோடு எதிர்கொண்டனர். அவர் நெடுநாள் நோய்ப்படுக்கையில் இருக்கவில்லை. அமெரிக்காவில் சன் ஃபிரான்சிஸ்கோவிலுள்ள தனது வீட்டில் குளியலறையில் விழுந்ததனால் ஏற்பட்ட தலைக்காயம் அவரது மரணத்துக்குக் காரணம் எனத் தமிழ்நெற் செய்தி வெளியிட்டிருந்தது. அந்தவகையில் அது எதிர்பாராத திடீர் மரணம்தான். இறக்கும்போது அவருக்கு வயது 79. இன்னும் சில ஆண்டுகளாவது அவர் தன் ஆய்வுப் பணியைத் தொடர்ந்திருக்கலாம். அது முடியாது போனமை தமிழ் ஆய்வுலகுக்கு ஒரு இழப்புதான்.

யாழ்ப்பாணத்தின் மிக நீண்ட கல்விப் பாரம்பரியத்தில் வேலுப்பிள்ளையும் ஒரு முக்கியமான கணு. யாழ்ப்பாணம் தென் புலோலியூரில் பிறந்த வேலுப்பிள்ளை தென் புலோலியூர் மு. கணபதிப்பிள்ளைக்குப் பிறகு, பிறந்த ஊருக்கும் நாட்டுக்கும் புகழ்தேடித் தந்தவர். 1955இல் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் மாணவனாகச் சேர்ந்த வேலுப்பிள்ளை பேராசிரியர் கணபதிப்பிள்ளை, சு. வித்தியானந்தன், வி. செல்வநாயகம் முதலியோரிடம் நான்கு வருடங்கள் தமிழைச் சிறப்புப் பாடமாகப் பயின்று முதல்வகுப்பில் சித்தியடைந்து, 1959 முதல் அங்கேயே உதவி விரிவுரையாளராகப் பணியாற்றத் தொடங்கினார். பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையின் வழிகாட்டுதலில் பிற்காலப் பாண்டிய மன்னர் காலத்துத் தமிழ்ச் சாசனங்களின் மொழிநடை பற்றி ஆராய்ந்து 1962இல் தனது 26ஆவது வயதில் கலாநிதிப் பட்டம் பெற்றார். விரைவிலேயே ஆக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் திராவிட மொழியியல் பேரறிஞர் தோமஸ் பறோவின் வழிகாட்டுதலில் 1964இல் சாசனவியலில் இரண்டாவது கலாநிதிப் பட்டமும் பெற்றார். சு. வித்தியானந்தனுக்குப் பிறகு இளவயதில் கலாநிதிப் பட்டம் பெற்றவர்; முப்பதுவயதுக்குள் இரட்டைக் கலாநிதியானவர் என்ற ஒரு பெருமித உணர்வும் அவருக்கு இருந்தது.

சுமார் 25 வருடங்கள் பேராதனைப் பல்கலைக் கழகத்திலும் ஆறு வருடங்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் அவர் பணியாற்றியிருக்கிறார். 1984இல் அவர் யாழ்ப்பாணம் வந்தார். பேராசிரியர் கைலாசபதியின் மரணத்தினால் வெற்றிடமாகியிருந்த தமிழ்ப் பேராசிரியர் பதவிக்கும் புதிதாக உருவாக்கப்பட்டிருந்த மொழியியல் பேராசிரியர் பதவிக்கும் விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. வேலுப்பிள்ளை இரு பதவிகளுக்கும் விண்ணப்பித்திருந்தார். தமிழ்ப் பேராசிரியர் பதவிக்கு கா. சிவத்தம்பியும் விண்ணப்பித்திருந்தார். ஆனால், சில காரணங்களால் அது வேலுப்பிள்ளைக்கே கிடைத்தது. மொழியியல் பேராசிரியர் பதவிக்கான நேர்முகத் தேர்வுக்கு வேலுப்பிள்ளை போகவில்லை. அது சுசீந்திர ராஜாவுக்கே உரியது, அந்தவகையில் அது அவருக்கே கிடைத்தது.

வேலுப்பிள்ளை 65 வயதில் ஓய்வு பெறும்வரை யாழ்ப்பாணத்திலேயே இருந்திருக்கலாம். ஆனால், சுவீடன் உப்சலா பல்கலைக்கழகத்தில்அதைவிட அவருக்கு நல்ல வாய்ப்பு இருந்தது. உப்சலா பல்கலைக்கழக மதவரலாற்றுத் துறைப் பேராசிரியர் பீற்றர் ஷல்குடன் வேலுப் பிள்ளைக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. இருவரும் ஈழம் ஆதரவாளர்கள் என்ற வகையிலும் தமிழர் சமயம் தொடர்பான ஆய்வில் ஈடுபாடு உடையவர்கள் என்ற வகையிலும் இந்த நெருக்கம் ஏற்பட்டிருக்கலாம். வேலுப்பிள்ளை 1990இல் உப்சலா சென்றார். பின்னர் அவர் யாழ்ப்பாணம் திரும்பவே இல்லை. பத்து ஆண்டுகள் அவர் உப்சலாவில் அதிதிப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1996இல் உப்சலா பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதிப் பட்டமும் வழங்கி அவரைக் கௌரவித்தது. உப்சலாவிலிருந்து விலகியபின் இரண்டு ஆண்டுகள் வேர்ஜீனியா பல்கலைக்கழகத்திலும் பின்னர், 2009வரை அரிசோனா பல்கலைக்கழகத்திலும் பணியாற்றி ஓய்வுபெற்றார். அரிசோனாவில் அவர் சைவம், வைணவம், சமணம், பௌத்தம் ஆகிய இந்திய மதங்கள் பற்றிக் கற்பித்தார். ஓய்வின் பின்னரும் அவர் ஆராய்ச்சியில் தீவிர அக்கறையுடன் இருந்தார் என்று தெரிகின்றது. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் 50 ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பணியாற்றிய பெருமை வேலுப்பிள்ளைக்கு உண்டு.

வேலுப்பிள்ளையின் பிரதான ஆய்வுத் துறை தமிழ்ச் சாசனவியல்தான். அதனோடு பழந்தமிழ் இலக்கியம், இலக்கணம், மொழியியல், தமிழர் சமயம் ஆகிய துறைகளிலும் அவருக்கு நல்ல புலமை இருந்தது.

book2.jpg

தமிழ்ச் சாசனவியல் தொடர்பான அவரது ஆய்வுகள் முக்கியமானவை. இத்துறைசார்ந்து தமிழிலும், ஆங்கிலத்திலும் அவர் நிறைய எழுதியிருக்கிறார். இது தொடர்பான அவரது முதல் நூல் ‘சாசனமும் தமிழும்‘ 1971இல் வெளிவந்தது. இது ஒரு அறிமுக நூல் என்று அவரே சொல்கிறார். பல்கலைக்கழகங்களில் தமிழ்ச் சாசனவியல் கற்கும் மாணவர்களுக்கும் பொதுவாசகர்களுக்கும் மிகுந்த பயனுடைய நூல் இது. “தமிழ்க்கல்வி தமிழ்ச் சாசன அறிவு இன்றிப் பூரணத்துவம் பெறாது. தமிழ் இலக்கிய வளத்துக்குத் தமிழ்ச்சாசன வளம் குறைந்ததன்று” என்ற கருத்தையும் அவர் கூறுகின்றார். இலங்கையில் தமிழ்ச் சாசனங்களைப் பதிப்பிப்பதில் உள்ள இடையூறுகள் பற்றியும் தான் எதிர்நோக்கிய சிரமங்கள் பற்றியும் இந்நூலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நூலில் தமிழ்ச் சாசனங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ் வரி வடிவம், தமிழ் மொழி அமைப்பு, தமிழர் பண்பாடு, தமிழ் இலக்கியம் என்பன பற்றிய விரிவான தகவல்கள் தரப்பட்டுள்ளன. இலங்கைச் சாசனங்கள் பற்றிய ஒரு தனி அதிகாரம் இதில் உண்டு. தமிழ் சாசனங்களூடு இலங்கைத் தமிழர் வரலாற்றைத் தேடும் ஒரு முயற்சியாகவும் இது அமைகின்றது.

1960களில் இலங்கை அரசு வாகன இலக்கத் தகடுகளில் ஆங்கில எழுத்துக்குப் பதிலாக சிங்கள ஸ்ரீ எழுத்தை அறிமுகப்படுத்தியபோது தமிழரசுக் கட்சி அதற்கு எதிராகப் பெரிய போராட்டம் நடத்தியது. சிங்கள எழுத்தைத் தார் பூசி அழிக்கும் இயக்கமாக அது சிறிது காலம் நீடித்தது. சாசனவியல் வரலாற்று அடிப்படையில் இதை நோக்கும் வேலுப்பிள்ளை அப்போராட்டம் ‘ஒருவகையில் விநோதமானது’ என்று கூறுகிறார். “கிரந்த லிபி என்பது சங்கத மொழியை எழுதுவதற்காகத் தமிழ்நாட்டுப் பிராமணர் முதலியோர் வழங்கிய எழுத்துமுறையாகும். அது சங்கத மொழியைச் சிறப்பாக எழுதுவதற்குப் பயன்பட்டபோதும் தென்னிந்தியாவுக்கே சிறப்பாக உரியது. பல்லவர் காலத் தமிழ்நாட்டு ‘ஸ்ரீ’ இலங்கைக்கு வந்து சிங்கள ‘ஸ்ரீ’யாக நிலைபெற்றுவிட்டது. தமிழ்நாட்டிலிருந்து சிங்களவர் பெற்ற ‘ஸ்ரீ’ வடிவத்துக்கு எதிராகவே தமிழர் போராட்டம் நடத்தியுள்ளனர்” என அவர் சற்று எள்ளலோடு குறிப்பிடுகின்றார். நடைமுறை அரசியலில் இத்தகைய வரலாற்று விநோதங்கள் ஏராளம்.

தமிழ்ச் சாசனவியல் பற்றி வேலுப்பிள்ளை ஆங்கிலத்தில் எழுதிய நூல்கள் கட்டுரைகளில் Pandya Inscriptions : A language Study (1972), Study of the Dialects in Inscriptional Tamil (1976), Epigraphical Evidences for Tamil Studies (1980), “Commonness in Early Old Paleography of Tamilnadu and Sri Lanka” (1981), “Tamil in Ancient Jaffna and Vallipuram Gold Plate” (1981) என்பன முக்கியமானவை. இவற்றோடு இலங்கைத் தமிழ் சாசனங்கள் பலவற்றை இரண்டு தொகுதிகளாக [தொகுதி 1 (1971), தொகுதி 2 (1972)] வெளியிட்டுள்ளார்.

தமிழர் சமயம் பற்றிய ஆய்வில் இளமைக்காலம் முதலே வேலுப்பிள்ளை ஆர்வம் கொண்டிருந்தார். இது தொடர்பாகத் தமிழில் ஏராளமான கட்டுரைகள் எழுதினார். இத்தகைய 25 கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்த இவரது ‘தமிழர் சமய வரலாறு’ (1980) ஒரு முக்கியமான நூல். ‘தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும்’ என்ற நூலிலும் இதுபற்றி விரிவாக ஆராய்ந்திருக்கிறார். இது தொடர்பான மேலும் 12 கட்டுரைகள் கொண்ட ஒரு தொகுப்பு நூல் ‘சைவசமயம்: அன்றும் இன்றும் இங்கும்’ என்ற தலைப்பில் அண்மையில் (2013) வெளிவந்துள்ளது. வரலாற்று முறையில் ஒவ்வொன்றையும் நோக்குவது தனக்கு மிகவும் பிடித்தமானது என்றும், தமிழர் சமய வரலாறு தமிழர் வரலாற்றின் ஒரு முக்கியக் கூறு என்றும், தமிழர் சமய வரலாறு தமிழர்கள் பிற சமயத்தவர்களைப் புரிந்துகொள்வதற்கும் பிற சமயத்தவர்கள் தமிழர்களைப் புரிந்துகொள்வதற்கும் உதவும் என்றும் இந்நூலுக்கு எழுதிய முன்னுரையில் வேலுப்பிள்ளை கூறுகிறார். இந்த நூலில் இடம்பெற்றுள்ள ‘திருவாசகரும் இலங்கைப் பௌத்தமும்’ என்ற கட்டுரை ஒருவகையில் சுவாரசியமானது. மாணிக்க வாசகர் இலங்கைப் பௌத்த குருவை வாதில் வென்று, சிங்கள மன்னனின் ஊமை மகளை வாய்பேசவைத்து, அவனைச் சைவனாக மாற்றியது பற்றிய திருவாதவூரர் புராணக்கதையை ஆராய்கின்றது இக்கட்டுரை. வரலாற்று

ஆதாரங்கள் இல்லாது யூகங்களை முன்வைக்கும் இக்கட்டுரையில் வேலுப்பிள்ளை முடிவுகள் எதையும் கூறவில்லை.

book1.jpg

உப்சலாவுக்குப் போனபின்னர் பீற்றர் ஷல்குடன் இணைந்தும் தனியாகவும் இவர் சமயம்பற்றி விரிவான ஆய்வுகள் மேற்கொண்டார். 1995இல் உப்சலாவில் நடைபெற்ற மணிமேகலை பற்றிய கருத்தரங்கு முக்கியமானது. சி. பத்மநாதன், வேலுப்பிள்ளை முதலான பலர் இதில் கலந்துகொண்டனர். இக்கருத்தரங்கில் மணிமேகலையில் பௌத்தம் அல்லாத மதங்களைப் பற்றிய எதிர்மறை மதிப்பீடு பற்றி வேலுப்பிள்ளை கட்டுரை படித்தார். 2002இல் ‘தமிழில் பௌத்தம்’ (Buddhism in Tamil in Pre Colonial Thamilakam and Ilam) என்ற தலைப்பில் பீற்றர் ஷல்கும் வேலுப்பிள்ளையும் தொகுத்து வெளியிட்ட பலரது கட்டுரைகளைக் கொண்ட மூன்று தொகுதிகளும் தமிழகத்திலும் இலங்கையிலும் தமிழர் மத்தியில் பௌத்தம் நிலவிவந்தமை பற்றிய மிக முக்கியமான வரலாற்றுத் தகவல்களைத் தருகின்றன. சைவம், வைஷ்ணவம், சமணம், பௌத்தம் ஆகிய மதங்களுக்கிடையே தமிழ்நாட்டில் நிலவிய முரண்பாடுகளும் மோதல்களும் பற்றியும் வேலுப்பிள்ளை சற்று விரிவாக ஆரய்ந்திருக்கிறார். இப்பொருள் தொடர்பான பின்வரும் இரண்டு கட்டுரைகள் என் பார்வைக்குக் கிடைத்தன. நீலகேசியில் பௌத்தர்களுக்கு எதிரான சமணர்களின் வாதங்கள் (Jain Polemics against Buddhists in Neelakesi -2000), ‘தென்னிந்திய சமணம் - தமிழில் மத விவாதங்களின் பங்கு’ (South Indian Jainism: The Role of Religious Polemics in Tamil - 2008). இக்கட்டுரை, பொதுவாக தென்னிந்தியாவிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் சமணம் வளர்ந்த வரலாற்றை ஆராய்கின்றது. குறிப்பாக கி.பி. 7ஆம் நூற்றாண்டில் பக்தி இயக்கத்தின் தொடக்கத்துடன் சைவம், வைஷ்ணவம், சமணம், பௌத்தம் ஆகிய மதங்களிடையே மோதல் தொடங்கியதையும் அதன் விளைவுகளையும் இக்கட்டுரை பேசுகின்றது.

வேலுப்பிள்ளையின் ஆர்வத்துக்குரிய பிறிதொரு முக்கியமான துறை மரபுவழித் தமிழ் இலக்கணமும் நவீன மொழியியலும். இத்துறை சார்ந்த அவரது ‘தமிழ் வரலாற்றிலக்கணம்’ (1966) அக்காலகட்டத்தில் ஒரு முன்னோடி முயற்சியாகும். இதுவே அவருடைய முதலாவது நூல் என்று நினைக்கிறேன். தொல்காப்பியம் முதல் பிற்கால இலக்கண நூல்கள்வரை தமிழ் இலக்கணச் சிந்தனை வளர்ந்த வரலாற்றை, அதில் உள்ள பிரச்சினைகள் சிலவற்றைத் திராவிட மொழியியல், நவீன மொழியியல் பின்புலத்தில் ஆராய்ந்து விளக்கும் ஒரு அடிப்படை நூல் இது. தமிழ் வரலாற்று இலக்கணம் பற்றி ஒரு விரிவான, முழுமையான நூல் தோன்றாத நிலையில் இன்றுவரை இதற்கு முக்கியத்துவம் இருக்கின்றது எனலாம்.

நவீன மொழியியல் நோக்கில் தற்காலத் தமிழ்மொழி அமைப்பின் பல்வேறு அம்சங்களை விளக்கும் அநேக ஆய்வுக் கட்டுரைகளைப் பல்வேறு ஆங்கில ஆய்விதழ்களில் வேலுப்பிள்ளை எழுதியிருக்கிறார். Adjective in Tamil (1966), Some observations on the negative in Tamil (1976), Auxiliary verbs in SriLankan Tamil (1980), Modality in Jaffna Tamil (1983), Opposition and contrast in Tamil (1983), Coordination in Tamil (1983), Cleft sentences in Tamil (1983), Hyponymy and hierarchical structure of Lexemes in Tamil (1984), Locative in Tamil: a semantic and historical study (1985), Colour Terms in Tamil (1985), Sentence connection in Tamil (1986) என்பன முக்கியமானவை. தமிழ் மொழி அமைப்புப் பற்றிய சில புதிய பார்வைகளைத் தரும் இக்கட்டுரைகள் ஒரு நூலாகத் தொகுக்கப்பட்டால் அது தமிழ் மொழியிய லுக்கு வேலுப்பிள்ளையின் முக்கியமான பங்களிப்பாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

இலக்கிய வரலாறு வேலுப்பிள்ளையின் அக்கறைக்குரிய பிறிதொரு விடயம். ‘தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும்’ (1969) என்பது இது தொடர்பான அவரது முக்கியமான நூல். தமிழ் இலக்கிய வரலாற்றைப் பலரும் பலவிதமாக அணுகியுள்ளனர். ‘தமிழில் இலக்கிய வரலாறு’ என்ற தன் நூலில் கா. சிவத்தம்பி இதனை விரிவாக விளக்கியுள்ளார். ஆயினும், வேலுப்பிள்ளையின் நூல்பற்றி அவர் குறிப்பிடவில்லை. வேலுப்பிள்ளை தமிழ் இலக்கிய வரலாற்றை, கருத்துநிலை வளர்ச்சியின் அடிப்படையில் ஐந்து காலகட்டங்களாக வகைப்படுத்துகிறார். இயற்கை நெறிக் காலம், அறநெறிக் காலம், சமய நெறிக் காலம், தத்துவநெறிக் காலம், அறிவியல் நெறிக் காலம் என்பன அவை. இந்நூலில் வெவ்வேறு காலகட்டங்களில் தமிழ் இலக்கியத்தில் வெவ்வேறு கருத்துநிலைகள் ஆதிக்கம்பெற்ற வரலாற்றை விளக்க வேலுப்பிள்ளை முயல்கின்றார். இத்தகைய ஆய்வுகளுக்கு இயக்கவியல் வரலாற்றுப் பொருள்முதல்வாத அணுகுமுறையே மிகுந்த பயனுடையது. ‘பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்’, ‘தமிழ் வீரயுகப் பாடல்கள்’, ‘தமிழ் நாவல் இலக்கியம்’ ஆகிய தனது நூல்களில் இந்த அணுகுமுறையைச் சிறப்பாகப் பயன்படுத்தி, தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதுவதில் ஒரு புதிய திருப்பத்தை கைலாசபதி ஏற்படுத்தினார். வேலுப்பிள்ளையிடம் அந்த அணுகுமுறை இன்மையால் காலத்துக்கும் கருத்துநிலை மாற்றத்துக்கும் இடையே உள்ள சமுதாய அடித்தளத்தை அவரால் சரியாக விளக்க முடியவில்லை. உதாரணமாக சங்ககாலத்தில் நடைபெற்ற தொடர்ச்சியான போர் பற்றிக் குறிப்பிடுகையில் வேலுப்பிள்ளை பின்வருமாறு எழுதுகிறார்:

“சிறுசிறு நிலப்பரப்புகளை ஆண்ட மன்னர்களுக்கு உலகம் முழுவதிலும் தம் ஆணையைச் செலுத்தவேண்டும் என்ற ஆசைமட்டும் மிதமிஞ்சி இருந்திருக்கிறது. அதனாலேயே, அக்காலத் தமிழகமெங்கும் போர்கள் தொடர்ந்தும் நடைபெற்றிருக்கின்றன. வென்று மேம்படும் ஆசையால் உந்தப்பட்ட மன்னர் மோத, அவராட்சியில் அடங்கிய மக்களும் மோதினர்” (பக். 26).

வீரயுக, குலக்குழுச் சமூகங்களில் அரசுருவாக்கத்துக்காக நடைபெற்ற முடிவற்ற போர்களைத் தனிப்பட்ட மன்னர்களின் பேராசைக்காக நடந்த போர்களாக விவரிப்பது அக்கால வரலாற்றின் இயக்கவியலின் முழுப் பரிமாணத்தையும் வேலுப்பிள்ளை புரிந்துகொள்ளவில்லை என்பதையே காட்டுகின்றது. இதுபற்றி வேலுப்பிள்ளை மேலும் எழுதுகிறார்:

“பிறரெல்லாம் தமக்கு அடிபணிய வேண்டும் என்ற அவாவால் உந்தப்பெற்ற அக்கால மன்னர், தமிழ் வாலிபர்களைப் பலியிட்ட கதையே புறநானூற்றிற் பெரும்பான்மையாகக் கூறப்படுகின்றது. வெற்றிதோல்வி எவரையடைந்த போதிலும் இருகட்சியிலும் சிந்தியது தமிழ் இரத்தமே. போர் என்றாற் கொலையும் கொள்ளையும் ஒருபுறம், கண்ணீரும் இரத்தமும் மறுபுறம். பகைவரும் தமிழரே என்ற ஈவு இரக்கங்காட்டி நடந்ததற்குப் புறநானூற்றிற் சான்றரிது. தமிழரில் ஒருசாரார் இரத்தஞ் சிந்த, மற்றொரு சாரார் வெற்றிவிழாக் கொண்டாடினர்” (பக்.28-29)

சங்ககால சமூக உருவாக்கத்தையும் புறநானூற்றுத் தகவல்களையும் கொண்டு பார்க்கும்போது

அக்காலத்தில் தமிழர் என்ற இனத்துவ அடையாளம் உருவாகி இருக்கவில்லை என்றே தோன்றுகின்றது. அது பிற்காலத்துக்கு உரியது. நமது காலத்து நிலைமையை மனங்கொண்டு பண்டைக்கால வரலாற்றைக் கட்டமைப்பது பல விபரீதங்களை ஏற்படுத்தும் என்பதற்கு இதை ஒரு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

பேராசிரியர் வேலுப்பிள்ளை தமிழ்த் தேசியக் கருத்துநிலையிலும் ஈழ ஆதரவு நிலைப்பாட்டிலும் உறுதியாக இருந்தவர் என்பதில் தவறில்லை என்றே நினைக்கின்றேன். அவர் வாழ்ந்த காலம் அத்தகையது. அதனால் தமிழர் வரலாறு, பண்பாடு, கல்வெட்டியல் ஆய்வுகளில் அவர் அறிந்தும்அறியாமலும் ஒரு சார்புநிலை ஏற்படுவது தவிர்க்கமுடியாததே.

இதுதொடர்பாக வேலுப்பிள்ளையின் ‘ஈழத்துப் பழைய இலக்கியங்கள் - வரலாறு தேடல்’ (2009) என்ற நூலில் இடம்பெற்றுள்ள ‘தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும்’ என்ற கட்டுரை பற்றிச் சிறிது குறிப்பிட வேண்டும். இக்கட்டுரையில் ஈழத்துப் பூதந்தேவனார் பற்றி வேலுப்பிள்ளை ஆராய்கிறார். ஈழத்துப் பூதந்தேவனார், மதுரை ஈழத்துப் பூதந்தேவனார் என்போர் பாடியதாக குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு ஆகிய தொகுதிகளில் ஏழு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஈழத்துத் தமிழ்ப் புலவர் சரித்திரம் எழுதிய சி. கணேசையர் பூதந்தேவனாரைத் தன்பட்டியலில் சேர்த்திருக்கிறார். எனினும், ‘ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு’ எழுதிய கே. எஸ். நடராசா, பொ. பூலோகசிங்கம் ஆகியோர் இவரை ஈழத்தவராகக் கொள்வதற்குச் சான்றுகள் இல்லை என்று வாதிடுவர். இவர்கள் வாதத்தை மறுக்கும் வேலுப்பிள்ளை, ஈழத்துப் பூதந்தேவனார், மதுரை ஈழத்துப் பூதந்தேவனார் இருவரும் ஒருவரே என்றும், அவர் ஈழத்தவரே என்றும் அவருடைய பாடல்களில் இடம்பெறும் செய்திகளின் அடிப்படையில் அவர் ஈழத்தின் எப்பகுதியில் வாழ்ந்திருக்கலாம், அவரது பாடல்களில் காலவரிசையில் எது முந்தியது எது பிந்தியது என்றும் ஆராய்ந்து நிறுவ முனைந்திருக்கிறார். இது முற்றிலும் வேலுப்பிள்ளையின் வாதத் திறமையையும் யூகத்தையுமே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. வேறு சான்றுகள் எவையும் இல்லை.

வேலுப்பிள்ளை சொல்வதுபோல அகழ்வாராய்ச்சி, சாசனவியல் சான்றுகளின் அடிப்படையில் சங்ககாலப் பெருங்கற் பண்பாட்டுக்குரிய மக்கள் அதே காலப்பகுதியில் ஈழத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்திருக்கிறார்கள், அங்கு தமிழ் வழங்கியிருக்கின்றது, ஆகவே, தமிழ்ப் புலவர்களும் வாழ்ந்திருக்கலாம் என்று சொல்ல முடியுமே தவிர, ஈழத்துப் பூதந்தேவனார் என்ற பெயரில் அறியப்படுபவர் ஈழத்தவர்தான் என்று நிறுவுவதற்கு வேறு சான்றுகள் இல்லை.

சங்கப் புலவர்களாக 473பேர் அறியப்பட்டிருக்கிறார்கள். இவர்களுள் அணிலாடு முன்றிலார், ஓரேருழவனார் போன்று பாடல் வரிகளால் பெயரிடப்பெற்ற 35 புலவர்களும் அடங்குகின்றனர். மிகச் சில சங்கப் புலவர்களின் பெயர்களே கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன என அறிகிறோம். ஏனைய புலவர்களின் பெயர்கள் எவ்வாறு அறியப்பட்டன? அவை உண்மைப் பெயர்களா, கற்பனைப் பெயர்களா? இவைபற்றி நமக்கு எதுவும் தெரியாது. சங்கப் பாடல்கள் நீண்டகாலமாக வாய்மொழி மரபாகப் பயின்று வந்தவை என்பதைப் பெரும்பாலான ஆய்வாளர்கள் இன்று ஏற்றுக்கொள்கின்றனர். வாய்மொழி மரபில் பயின்றுவரும் பாடல்கள் ஆசிரியரின் பெயர்களுடன் பயின்றுவருவதில்லை. இன்று கிடைக்கும் சங்கப் பாடல்கள் அனைத்தும் சங்ககாலம் முடிந்தபின் ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பின்னரே தொகுக்கப்பட்டன என்பதிலும் அறிஞர் மத்தியில் பெரிதும் கருத்துவேறுபாடு இல்லை. அந்தவகையில் சங்கப் பாடல்களின் ஆசிரியத்துவம் கேள்விக்குரியதுதான். ஆயினும், நாம் யாரும் அதைக் கேள்விக்கு உட்படுத்துவதில்லை. தொல்காப்பியர் என்று ஒருவர் இருந்தாரா என்று பல அறிஞர்கள் கேள்வி எழுப்பிய பின்னரும் நாம் தொல்காப்பியரை வைத்திருப்பது போல்தான் சங்கப் புலவர்களையும் வைத்திருக்கிறோம். ஈழத்துப் பூதந்தேவனார் இதற்கு விலக்கல்ல. தமிழ் ஈழத்தின் தொன்மையை நிறுவுவதற்கு வேலுப்பிள்ளை ஈழத்துப் பூதந்தேவனாரைப் பயன்படுத்தியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.

கடந்த தசாப்தங்களில் இலங்கை வரலாற்றைக் கட்டமைப்பதில் சிங்கள தேசியவாதிகளும் தமிழ்த் தேசியவாதிகளும் எதிரெதிராகச் செயற்பட்டனர். தங்களுக்குச் சார்பான ஒரு வரலாற்றை உருவாக்க அவர்கள் முயன்றனர். இதுபற்றி ‘இனமுரண்பாடும் வரலாற்றியலும்: தற்கால இலங்கையில் கடந்தகாலம் பற்றிய கட்டமைப்பு’ (Historiography in a Time of Ethnic Conflict: Construction of the Past in Contemporary Sri Lanka, 1995, தமிழாக்கம் எம். ஏ. நுஃமான், 2000) என்ற நூலில் இடதுசாரி வரலாற்று அறிஞரான ஆர். ஏ. எல். எச். குணவர்தனா விரிவாக ஆராய்ந்துள்ளார். தமிழரின் இத்தகைய வரலாற்று ஆய்வுக்கு எடுத்துக்காட்டாக அவர் வேலுப்பிள்ளையின் ‘பண்டைய யாழ்ப்பாணத்தில் தமிழும் வல்லிபுரம் செப்பேடும்’ என்ற கட்டுரையையே எடுத்துக்கொள்கிறார். யாழ்ப்பாணத்தில் கண்டு பிடிக்கப்பட்ட, கி.பி. முதலாம் நூற் றாண்டுக்குரியதாகக் கருதப்படும் இச்சாசனத்தில் உள்ள மொழி சிங்களமே என்று சிலர் வாதிட, சிங்கள மொழி உருவாக்கத்தில் ஒரு ‘திராவிடக் கீழடுக்கு (Dravidian substratum)’ இருந்ததை அது காட்டுவதாக வேலுப்பிள்ளை வாதிட்டார். இதைவிட முக்கியமானது இச்சாசனத்திலுள்ள இசி என்ற வடிவத்தை அவர் ஈழம் என்று வாசித்ததாகும். இவ்வாசிப்பின் அடிப்படையில் “யாழ்ப்பாணக் குடாநாட்டில் பண்டைய ஈழ அரசு ஒன்றைக் கண்டுபிடிப்பதற்கு வேலுப்பிள்ளை வல்லிபுரம் சாசனத்தைப் பயன்படுத்துகிறார் என்றும், இதுவே வேலுப்பிள்ளையின் ஆய்வில் மிகுந்த சர்ச்சைக்குரிய பகுதியாகும் என்றும் கூறும் குணவர்த்தன, மிகப் பண்டைக்காலம் பற்றிய ஆராய்ச்சியில்கூட சமகால இனமுரண்பாட்டின் பாதகமான செல்வாக்கு செயற் பட்டிருப்பதை அவரது ஆய்வில் பயன்படுத்தப்பட்டுள்ள ஆய்வுமுறை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது” என்றும் கூறுகின்றார் (தமிழாக்கம் பக். 12-25).

வேலுப்பிள்ளை ஈழ அரசியல் பற்றி வெளிப்படையாக அதிகம் எழுதியவரல்ல. எனினும், சமீபகாலத்தில் அத்தகைய சில கட்டுரைகள் அவர் எழுதியிருப்பதாகத் தெரிகின்றது. அதில் முக்கியமானதாக மஹிந்த தீகல்ல தொகுத்த ‘Buddhism, Conflict and Violence in Modern Sri Lanka’ என்ற நூலில் அவர் எழுதியுள்ள ‘Sinhala Fears of Tamil Demand (pp.93-113)’ (தமிழ்க் கோரிக்கை பற்றிய சிங்களவரின் அச்சங்கள்) என்ற கட்டுரையைக் குறிப்பிட லாம். இன முரண்பாட்டுப் பின்னணியில் சிங்களவரின் மனோபாவத்தை அதில் அவர் விளக்க முயல்கின்றார்.

விடுதலைப் புலிகள் இயக்கம் வெளியிட்ட புலிகளின் தலைவர் பிரபாகரனின் மேற்கோள்கள் அடங்கிய ‘தலைவரின் சிந்தனைகள்’ என்ற நூலை மூல ஆவணங்கள் என்ற அடிப்படையில் பீற்றர் ஷல்க் உப்சலா பல்கலைக் கழகத்தின்மூலம் ஆங்கிலம், ஜேர்மன், சுவீடிஷ், சிங்களம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பித்து இணைய வெளியீடாக வெளியிட்டுள்ளார். அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு ‘Reflections of the Leader: Quotes by Veluppillai Pirapakaran’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. இம் மொழிபெயர்ப்பை பீற்றர் ஷல்குடன் இணைந்து செய்தவர் பேராசிரியர் வேலுப்பிள்ளை. புலிகள் இயக்கத்துக்கு வேலுப்பிள்ளையின் நேரடியான பங்களிப்பாக இது கருதப்படலாம்.

பேராசிரியர் வேலுப்பிள்ளையுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 1984 முதல் 1990வரை ஆறு ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறேன். அவர் தமிழ்த் துறையிலும் நான் மொழியியல் துறையிலும் இருந்தோம். முதல் மூன்று ஆண்டுகள் நான் விடுப்பில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வில் ஈடுபட்டிருந்தேன். வருடத்தில் ஓரிரு முறைதான் யாழ்ப்பாணம் செல்வேன். 1990இல் அவர் உப்சலா சென்றார். நான் இடம்பெயர்ந்து பேராதனை சென்றேன். ஆக சுமார் மூன்று ஆண்டுகள்தான் நாங்கள் ஒரே இடத்தில் பணிபுரிந்திருப்போம். அக்காலகட்டத்தில் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு இருக்கவில்லை. அவரும் எல்லாருடனும் நெருங்கிப் பழகக் கூடியவருமல்ல. என்றாலும், அவர் ஒரு சிறந்த தமிழியல் அறிஞர் என்ற மதிப்பு எனக்கு அப்போதும் இருந்தது, இப்போதும் இருக்கின்றது. அவரது ஆய்வுப்பணிகளை நினைவுகூரும் இக்கட்டுரையே அவருக்கான எனது அஞ்சலி.

 

http://www.kalachuvadu.com/issue-192/page64.asp

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்...!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.