Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காளி - சிறுகதை

Featured Replies

காளி - சிறுகதை

 
 

ச.விசயலட்சுமி - ஓவியங்கள்: செந்தில்

 

விடியக் காத்திருக்கும் வானத்தின் ஒளிக்கீற்றுகள், மெல்லிய நிழலைப் படரவைத்தபடி எட்டிப்பார்க்கக் காத்திருக்கின்றன. இந்தப் பிரதேசத்தின் அமைதியைக் கைவிடப்போகும் மக்களில் சிலர் ஆங்காங்கே நடந்துகொண்டிருந்தனர். கடற்கரை, கூடைகளோடும் மூன்று சக்கர வண்டி வைத்திருப்பவர்களோடும் கல்யாணக்கோலம் பூண்டிருந்தது. ஏமாந்தவர்களிடமிருந்து தனக்கான உணவை அபகரிக்கக் காத்திருந்தன காகங்கள். அவை விடாமல் துரத்திக் கொண்டிருக்கும் மீன் வண்டியோடு ஓட்டமாக நடைபோட்ட காளியின் இடுப்பிலிருந்த சூர்யாவின் கிடுக்கிப்பிடி மூச்சு முட்டச்செய்தது.

``அட சனியனே, ஏன்டா இப்படி என் உயிர எடுக்குற?’’ பட்டென அறைந்தாள். இன்னும் வேகமாக அவள் முடியைப் பிடித்து இழுத்த சூர்யாவை, ஒரு துணிமூட்டையை விட்டெறிவதுபோல பொதுக்கென பிளாட்ஃபாரத்துக்கு விட்டெறிந்தாள்.

``இந்தச் சனியனைப் பெத்ததுலயிருந்து இந்தப் பாடுபடுறேனே... என் தலையெழுத்து இப்படின்னு விதிச்சுட்டான்’’ எனச் சொல்லிக்கொண்டே ஆத்திரம் தீரும்வரை அடிக்கத் தொடங்கினாள். 

ஆவின் பால்பூத்துக்குப் பக்கத்தில் இருந்த நீலநிற பிளாஸ்டிக் கொட்டகையிலிருந்து ஓடிவந்த ஸ்டீபன், ``அக்கா, அடிக்காதக்கா. உனக்கென்ன பைத்தியம் பிடிச்சிருக்கா? சொல்லிட்டே இருக்கேன்... நிறுத்த மாட்டியா?’’ என்றான்.

86p1.jpg

அவனது பேச்சைக் கேட்டதும் இன்னும் வெறி பிடித்தவளாக மாறிப்போன காளி, குழந்தையை யாறுமற்றுப் பராமரிக்க வேண்டியதன் ஆற்றாமையுடன் கூச்சலிட்டாள். ``உனக்கென்ன மசுரு, சொல்லிடுவ. இவனுக்கு செல்லம் குடுத்துக் கெடுக்கிறதே உனுக்கு பொழப்பாப் பூடுச்சு. த பாரு ஸ்டீபனு, காலங்காத்தால எழுந்தாதான் என் பொழப்பு ஓடும். இல்லைன்னா, இந்தப் பய `பசி’ன்னு உயிரெடுத்தா நான் என்ன எழவைக் கொடுக்க முடியும்? இங்கியே படுத்துக்கெடன்னு சொன்னாலும் பிரியாம, என் கூடவே எழுந்து மல்லு குடுக்குறான், கழுத்தை நெரிக்கிறான், தலைமுடியைப் புடிச்சு இழுத்துக் கடிக்கிறான். இப்படி வெறி பிடிச்சாப்புல கிடக்கிறதை வெச்சுக்கிட்டு, ஒரு வேலை பாக்க முடியலை’’  பொலபொலவென விடியத் தொடங்கிவிட்டதை உணர்ந்தவளின் பரபரப்பு இரட்டிப்பானது. 

`இவனை இப்படித் திட்டிக் கொண்டிருக்கிறோமே’ எனக் காளிக்குத் தோன்றியது. இருந்தாலும் வேலைக்குப் போக வேண்டியிருக்கிறது. அங்கே இவனைக் கூடவே அழைத்துப்போகலாம்தான். ஆனால் அங்கே இவனைப் பார்க்காமல் கவனிக்காமல் தான் இருப்பதை அவனால் தாங்க முடியாமல், அவளைத் தாக்கத் தொடங்கிவிடுவான். இதெல்லாம் அவளுக்குப் புரிந்தாலும், அவசரச் செலவுகள் அவளது பொறுமையை நிலைகுலையச் செய்துவிடுகின்றன. அவள் சூர்யாவை இப்படி உடம்பு நோகுமாறு அடித்தது, ஸ்டீபனுக்குக் கோபத்தை அதிகப்படுத்தியது.

``யக்கோ, காத்தாலேயே ஆரம்பிச்சிட்டியா? அவன் அப்படித்தான்னு தெரிஞ்சும் பேசிக் கிட்டிருக்க பாரு... எத்தன தபா சொன்னாலும் உன்னைத் திருத்த முடியாதுக்கா. அவன உங்கூட கூட்டிப்போவாத. இங்கேயே உட்டுட்டுப் போ. பச்சமண்ணைப் போட்டு இப்படி அடிக்கிற, கத்துற. எல்லாம் போதும் நிப்பாட்டிக்க’’ என லுங்கியைத் தூக்கிச் செருகிக்கொண்டு, அவனது கொட்டாய்க்குள் சென்றான். சாலைகளில் வாகனங்கள் முளைவிடத் தொடங்கிவிட்டன.

காளியையும் ஸ்டீபனையும் மாறி மாறிப் பார்த்தான் சூர்யா. அங்கு இருந்த ரோட்டுக்குள் இறங்கினான். தடுமாறி விழுந்துவிடுவதுபோல வேகமாக நடந்தான். ஸ்டீபனிடம் பேசிவிட்டுப் பின்னால் திரும்பிய காளி, இவன் நடந்து போவதைப் பார்த்ததும் ஆத்திரம் பிடுங்கித்தள்ள, அவனை இழுத்துவந்து அருகில் இருந்த பிளாட்ஃபார அம்மன் கோயிலுக்கு முன்னால் கட்டிப்போட்டாள். ‘‘சூர்யா, நீ இங்கியே இரு. நான் வேலைக்குப் போயிட்டு வர்றேன். வரும்போது நாஷ்டா வாங்கியாறேன். இட்லி - வடகறி வாங்கியாறட்டா?’’ இவள் கத்திப் பேசுவதைப் பார்க்காமல் ரோட்டில் வரிசையாகப் போய்க்கொண்டிருந்த வண்டிகளைப் பார்த்துக்கொண்டிருந்தான் சூர்யா. 

அவனுக்கு எல்லாவற்றையும் புரியவைக்க முடியாது என்றாலும், தன் மகனுக்கு எல்லாம் புரியும் என்கிற ஓட்டத்தில் சொல்லி முடித்த திருப்தியோடு, எறா ஷெட் பக்கம் போனாள். அங்கு இருந்த பெட்டிகளில் ஹோட்டல்களுக்கு ஏற்ற மாதிரி எறாக்களை பார்சல் செய்து, ஐஸ் பெட்டிகளுக்குள் வைத்து அடுக்கத் தொடங்கினாள்.

86p5.jpg

சூர்யாவுக்கு, அம்மா தன்னை விட்டுவிட்டு வேலைக்குப் போனதோ, திட்டியதோ பொருட்டாக இல்லை. அவன் கையில் கிடைத்த பொருள்களைத் தட்டி விநோதமான ஒலியெழுப்பிக்கொண்டு விளையாடினான். அவன் சட்டை, பட்டன் இல்லாமல் ஆங்காங்கே கிழிந்திருந்தது. தலைமுடி ஒட்ட வெட்டப்பட்டு, ஆங்காங்கே சில தழும்புகளோடு இருந்தான். அவனுக்குப் பிடித்தது என எதையும் சொல்ல முடியவில்லை. எப்போதாவது காரணம் தெரியாமல் கத்திக்கொண்டிருந்தால், அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் சமாதானப் படுத்தினாலும் அடங்க மாட்டான். காளி ஓடிவந்து மடியில் போட்டுத் தடவிக்கொடுத்தால் தூங்கிவிடுவான். 

``இவனுக்கு அம்மா வாசனை மட்டும் நல்லா தெரியுது’’ எனச் சொல்லிக்கொண்டிருக்கும் அன்னம்மா அக்கா, சூர்யாவுக்குப் பசிக்கும் என, தான் சாப்பிட வைத்திருக்கும் பொருளில் ஒரு பங்கை எடுத்துக் கொடுப்பாள். கூடையில் கொஞ்சம் கருவாட்டை வைத்துக்கொண்டு மார்க்கெட் ஓரத்தில் உட்கார்ந்திருப்பாள். காளியைப்போல அன்றாடம் வேலை பார்த்தாக வேண்டியதில்லை. நாள், கிழமைக் காலங்களில் பெரிதாக வியாபாரமிருக்காது எனக் கடை போட மாட்டாள். ஆடி மாதம் என்றால் விற்பனை அதிகம். முன்கூட்டியே சொல்லிவைத்து வாங்கிச் செல்வார்கள். அன்னம்மா, சூர்யாவைப் பார்த்துக்கொள்வது காளிக்குக் கொஞ்சம் ஆறுதலான விஷயம்.

நடிகர் சூர்யா படம் என்றால், காளிக்கு ரொம்பப் பிடிக்கும். குழந்தை பிறப்பதற்கு முன்பே ஆண்பிள்ளை என்றால் `சூர்யா’ எனப் பெயர் சூட்டப்போவதாகச்  சொல்லிக்கொண்டிருந்தாள். சூர்யா நடித்த பட போஸ்டர்களைக் கீழே விரித்துப் படுத்துக்கொள்வாள்.

`சூர்யாவைக் கோயிலுக்கு முன்னால் கட்டிப் போட்டுவிட்டு வந்திருக்கிறோம். சீக்கிரம் போக வேண்டும்’ என்று நினைத்துக்கொண்டே இருந்தாள். காலையில் அனுப்ப வேண்டிய லோடு ஏற்றி, வண்டி கிளம்பியதும் ``அண்ணே, பையனுக்கு நாஷ்டா குடுத்துட்டு வந்திடுறேன்’’ என்று கிளம்பினாள். வடகறியோடு இட்லி வாங்கிக்கொண்டு, பம்பிங் ஸ்டேஷன் குழாயில் பாட்டிலில் தண்ணீர் பிடித்துக்கொண்டு கோயில் பக்கம் சென்றாள். 

கோயிலின் முன் இப்படியும் அப்படியுமாக வேகவேகமாக நடந்துகொண்டிருந்த சூர்யாவைப் பார்த்துப் பதறினாள். ``பிள்ளைக்கு வெறி வந்திருச்சுபோல. தாயி... காப்பாத்தும்மா’’ எனச் சொல்லி முடிப்பதற்குள் அவன் வேகமாக நடந்து சுவரில் பச்சக்கென மோதிக் கொண்டான். அலறத் தொடங்கிவிட்டவனின் தலையிலிருந்து சிவப்பாக வழிந்ததை உற்றுப்பார்த்துக்கொண்டே சாலையைக் கடக்க முயன்றாள்.

காலையில் வாங்கிய இட்லிப் பொட்டலத்தைப் பத்திரமாக வைத்திருந்த ஸ்டீபன், ``அக்கா, இந்த இட்லியைத் துன்னுக்கா. அவனுக்கு சரியாப்போவும். டென்ஷன் படாத’’ என்று அவளது தோளில் கை வைத்ததும், காத்திருந்தவள்போல உடைந்து அழத் தொடங்கினாள். 

``யக்கா இன்னாக்கா... நீ போயி இப்பிடி இருக்கலாமா? எம்மாந்தகிரியமா இருப்ப. இப்பிடி அழுவுறியே. மன்சு கஷ்டமாக் கீது’’ எனத் துடித்தான். 

``இவன் இப்பிடி ஒரு மண்ணும் தெரியாம இருக்கான். இவன எப்பிடி காப்பாத்தப்போறேன்னு தெரியலியே ஸ்டீபனு. அவன் இப்பிடி ரத்தமா கிடக்கிறதைப் பாக்கத் தெம்பில்லை. இன்னா பொயப்பு, வாய் தொறந்து கேக்கத் தெரியல. எதித்தாபோல செவுரு இருக்கிறது தெரியல. போய் மோதி மண்டையை உடைச்சுக்கிறான்; கைகால்  உடைச்சுக்கிறான். இவன் வேகமா நடக்குறான்னு பாத்த உடனயே அல்லு தூக்கிப்போட்டுச்சு. ஏதோ பண்ணிக்கப் போறான்னு நினைச்சேன். அடுத்த நிமிஷமே இப்பிடி உடைச்சுக்கினு கத்துறான். பன்னண்டு தையல் போட்டிருக்கு. இது ஆறங்காட்டியும் இவன்கூட மல்லு கிடக்கணுமே… இதுக்கு எவ்ளோ வலிக்கும். இவனைப்போல புள்ளைங்க எல்லாம் பள்ளிக்கூடத்துல சேந்துட்டுது. இவன சேக்க மாட்டேங்குறாங்க. கடைசித் தெரு நெட்டச்சி மகன், மூளை கலங்கினவனா இருந்தாலும் பள்ளிக் கூடத்துல சேத்துக்கிட்டாங்களாம். யாருக்கும் தொந்தரவு குடுக்கிறதில்ல. சொன்ன இடத்துல மணிக்கணக்கா உக்காந்துக்குனு இருக்கான். ஒரு எழுத்துகூட எழுத மாட்டானாம். வெறிக்கப் பார்த்துக்கினுருப்பானாம். இவன் அப்படி வேடிக்கை பார்த்துக்கினு இருக்க மாட்டான். திடீர்னு கைல கிடைச்சதைத் தூக்கிப் போட்டு அடிச்சிடுறான். அந்தப் பையனபோல எங்கியும் சேத்துக் கிட்டா நல்லாயிருக்கும். புள்ளைங்க கூட இருந்து நல்லது கெட்டது கத்துக்கும்’’ அழுகையை விட்டுவிட்டு, அவனுக்கு அடுத்து செய்ய வேண்டியது குறித்து யோசிக்கத் தொடங்கினாள்.

சூர்யா, தன் நெற்றியில் தையல் போடப்பட்டு முகம் வீங்கிக் கிடந்தான். அரசு மருத்துவமனையில் படுக்கைக்கு இடம் இல்லாமல் தரையில் பாய் விரித்துப் படுக்க வைத்திருந்தார்கள். அவ்வப்போது கேஸ் வருவதும், டிஸ்சார்ஜ் ஆகி வெளியேறுவதுமாகப் பரபரப்போடு இருந்த குழந்தைகள் பிரிவில், காலையில் பாலும் பிரட்டும் கொடுத்திருப்பார்கள். 

``இந்தப் பையன் நாஷ்டாவை வாயிலியே வாங்காம துப்புது. ஸ்டீபனு, ஒரு பன்னு வாங்கியாடா குடுத்துப் பாப்பம்’’ என்றாள். பாதி பன்னை டீயில் தொட்டு ஊட்டி, மாத்திரைகளை விழுங்கச் செய்தாள்.

சூர்யாவுக்கு ஆர்வம் அதிகமானால், இப்படித்தான் கண் மண் தெரியாமல் இடித்துக்கொள்வான்.  தலையெங்கும் ஆங்காங்கே வெட்டுக்காயங்கள். சூர்யா, கண் திறந்து பார்த்தான்; வாய் திறந்து பேச முயன்றான். ஆனால், அவன் குரல் வெளியே எழவில்லை. வாயிலிருந்து வழிந்த ஜொள் அவனுக்குப் பிடிக்கவில்லை போல, கைவைத்துத் துடைத்துக் கொண்டவன், கையை மீண்டும் மீண்டும் உதறினான். முகத்தைச் சுளிக்க முயன்றதும் வலி அதிகமானதில் அமைதியாகிச் சுவரை வெறித்துக்கொண்டிருந்தான்.

காளிக்குக் களைப்பு அழுத்தியது. ``பாவி மனுசன், நிம்மதியா போயிட்டியே’’ எனத் திட்டிக் கொண்டே பாயின் ஓரத்தில் பையனைப் படுக்கவைத்துவிட்டு அவனோடு படுத்துக்கொண்டாள்.

86p2.jpg

காளி வேலைபார்த்த எறா ஷெட்டில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தான் பாலா. 

புதுப்பேட்டையிலிருந்து வந்திருந்தான். வேலை நேரத்தில் சிரிக்கச் சிரிக்கப் பேசும் அழகு அவனைத் தவிர, யாருக்கும் வராது. அவன் ஷெட்டில் இருப்பதை, அங்கு இருக்கும் எல்லோர் முகங்களிலும் தெரியும் சந்தோஷத்தில் உணர்ந்துகொள்ள முடியும். கறுப்பாக இருந்தாலும் களையானவன். காளிக்கும் பாலாவுக்கும் எப்படிப் பற்றிக்கொண்டது எனத் தெரிய வில்லை. பாலாதான் ``கட்டிப்பமா காளி’’ என்று ஆரம்பித்தான். காளிக்கு ஆசையிருந்தாலும் தயக்கமும் பயமும் இருந்தன. பாலா, அப்பா அம்மாவோடு சொந்தக் குடிசையில் இருப்பவன். காளிக்கு என எவரும் இல்லை. இப்படியே ரோட்டோரம் படுப்பதும், அங்கே இருக்கும் அக்காக்களோடு வேலைக்குப் போவதும், சாப்பிடுவதுமாக இருப்பவள். 

அன்னம்மா அக்கா, ``பாலாவைக் கட்டிக்கிட்டா, நல்லா இருப்படி. சீக்கிரமா கட்டிக்க. இந்த பிளாட்ஃபாரத்துல இருந்தது போதும்’’ என்று பச்சைக்கொடி காட்டினாள். பாலா வீட்டில் கடும் எதிர்ப்பு. ``எதுவும் இல்லாத பிளாட்ஃபாரத்துக்குப் பட்டுக்குஞ்சமா? இதெல்லாம் சரிப்படாதுடா. போறதுன்னா ஒரேயடியாப் போயிடு. இந்தப் பக்கம் அப்பன் ஆத்தான்னு சொல்லிக்கிட்டு வந்துடாத’’ என இறுதியாகச் சொன்ன நாளில், வீட்டைவிட்டு வந்தவன். ஆற்றோரம் குடிசை ஒன்றை வாடகைக்குப் பிடித்துவிட்டு, காளியைப் பார்க்க வந்தான். 

அன்னம்மா அக்காவும் பாலாவும் சேர்ந்து கோயிலில் கல்யாணம் ஏற்பாடு செய்தார்கள். எறா ஷெட்டில் இருந்தவர்கள், அவர்கள் குடும்பக் கல்யாணம்போல கவனித்துக்கொண் டார்கள். காளியை ``இனி வேலைக்குப் போக வேணாம்’’ என்று நிறுத்தி விட்டான்.  குடிசைக்கு முன்னால் தடுப்புத் துணி கட்டி, லைட் போட்டு, ஸ்பீக்கரில் குத்துப் பாடலாகப் போட்டுக் களை கட்டினாலும், பாலாவின் அம்மாவும் அப்பாவும் வரவேயில்லை. அவர்கள் வராததைப் பற்றி சிலர் கேட்கவும் செய்தார்கள். ``பெத்தவங்களுக்குப் புடிக்கலைன்னு சொல்லியும் கட்டியிருக்கன்னா, இவகிட்ட அப்படி இன்னா கண்டுக்கினேன்னு தெரியலை’’ இப்படிக் கேட்டவர்களுக்கு, பிரத்யேகமாகப் பதில் சொல்லாமல், ``அப்படி ஏதும் இல்லாம இப்படி முடிவெடுப்பனா?’’ என்று பேசி நகர்ந்துவிடுவான். 

காளிமீதான அவனது கொள்ளைப் பிரியத்துக்கு அளவில்லை. அதற்குக் காரணம் கேட்டால், அவனுக்குத் தெரியாது. `காளி... காளி’ என சதா அவள் நினைப்பு. 

வேலை முடிந்ததும் ஆல்பர்ட் தியேட்டருக்குப் போவது, பீச்சுக்குப் போவது என அவளை அழைத்துக்கொண்டு சந்தோஷமாகக் கிளம்பிவிடுவான். அவனுடைய பெற்றோரைப் பார்க்க வேண்டும் எனக் காளி சொன்னபோது, பெரிதாக ஆர்வம் காட்டாத பாலாவை தொடர்ந்து நச்சரித்தாள். உண்மையில் அம்மா, அப்பா, குடும்பம் இவற்றின் மீது மிகுந்த விருப்பம் கொண்டவளாக இருந்தாள் காளி. `அவங்க அன்பு செலுத்தியிருந்தா, பாலா எதுக்கு `கட்டிக்கிறேன்’னு என்னாண்ட வந்திருக்கப்போவுது’ என சில சமயம் தோன்றும். `எதுவும் தெரியாம யோசிக்கக் கூடாது. நினைப்புதான் பொழப்பைக் கெடுக்கும்’ என  நினைவுகள் பல திசைகளில் போனாலும், அவர்களைப் பார்த்துவிடத் துடித்தாள். 

``காலையிலேயே போய் வந்திடலாம். ஷெட்டுக்குப் போணும். ஒரு கல்யாண பார்ட்டிக்கா வேண்டி எக்ஸ்ட்ரா லோடு வருதாம்’’ என அவளைத் துரிதப்படுத்தினான் பாலா. அவனது குடிசைக்கு முன் காளியை நிறுத்தி, ``இங்கயே நில்லு, பாக்கறேன்’’ என்று ``அம்மா... அம்மா...’’ என்றான். இதுவரை இவன் செத்தானா பிழைத்தானா எனத் தேடிப் பார்க்காத அம்மாமீது பீறிட்ட கோபத்தை அடக்கிக்கொண்டான். அம்மா, அப்பா இருவரும் வெளியே வந்து பார்த்து, ஒரு வார்த்தையும் பேசவில்லை.  அம்மா மட்டும் அந்தக் காலையிலும் வெற்றிலை போட்டிருந்தாள். பச்சக்கென துப்பினாள். அத்தனை கோபத்தோடு துப்பியவளை, பயத்தோடு பார்த்தாள் காளி. இவளுக்குப் பயம் என்றால் என்னவென்றே தெரியாது. சொந்தம், பாசம் என்று வந்தால் கூடவே பயமும் வந்துடும்போல... சுதாரித்துக்கொண்டு ``அத்தை’’ என்றாள் . 

``அடியே சிறுக்கி... யாருக்கு யாரு அத்தை? நல்லா இருந்த குடும்பத்தைப் பிரிச்சுப்புட்டு அத்தையாம் அத்தை. அவளக் கூட்டிகினு நடடா... உலகத்துல இல்லாத அழகிய கூட்டியாந்துட்டான்.’’ எனக் காறி உமிழ்ந்தாள்.

86p3.jpg

பாலாவால் பொறுக்க முடியவில்லை. ``அம்மா, அவ மாசமா கீறா. அஞ்சு மாசம்மா. எங்களுக்கு உன்ன உட்டா யாரும்மா கீறா? பழைய கதையெல்லாம் மன்சுல வெச்சுக்காதம்மா... மன்னிச்சிடும்மா. நா உன்னக் கஷ்டப்படுத்திக்கினேன்னு தெரியுது. அவளை லவ் பண்டேன். இன்னாங்கிற...’’ பிள்ளை பேசப் பேச சமாதானமடையாமல், திட்டிய அம்மாவையும் அவளுக்குப் பணிந்ததுபோல் காலையிலேயே  மப்பிலிருந்த அப்பாவையும் மன்னிக்க முடியாதவன் ஆனான்.  

``இவன் குழந்தை நாசமா போவட்டும்’’ என அம்மா மண்ணை வாரித் தூற்றினாள்.  அம்மா சண்டைக்காரிதான் என்றாலும், பாலாவுக்கு எப்போதும் அன்பை மட்டுமே தந்தவள். `என் ராசா… என் மவராசன்… சக்கரவத்தி...’ இப்படிச் சொல்லிக் கூப்பிடுவதுதான் பிடிக்கும். அப்படியே மகனுக்குத் தேவையானதை `இல்லை’ எனச் சொல்லாமல் பார்த்துப் பார்த்துச் செய்தவள். `எட்டாவதுக்கு மேல பள்ளிக்கூடம் போக மாட்டேன்’ என நின்றவனை அடித்த அன்றுதான் அம்மாவின் ஆத்திரத்தைப் பார்த்தான் பாலா. 

காளி பிளாட்ஃபாரத்தில் வளர்ந்தாலும், அம்மா-அப்பா இல்லாதபோதும் அங்கு இருப்பவர்களை `அண்ணே...’ `அக்கா...’ என அழைத்துக்கொண்டு, தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பாள். யாருக்கும் பயப்படாத ரோஷக்காரி. அம்மாவைப்போலவே வீம்பு. அதனால்தான் `இவள் தைரியமான பொண்ணு’ என முடிவெடுத்தான். காளியின் முகம் களையாக இருக்கும். மட்டான கலர் என்றாலும், கன்னம் பூப்போல மெத்தென்று இருக்கும். அதைப் பார்க்க ஆசையாயிருக்கும். 

`வராமலேயே இருந்திருக்கலாம்’ என நினைத்தபடி இவளை வீட்டில் விட்டுவிட்டு, லோடு பின்னாலேயே கூட்டாளியோடு வண்டியின் பின்னால் உட்கார்ந்து சென்றவன், அத்தனை வருத்தத்தில் இருந்தான். எப்போதும் சந்தோஷமாக இருக்கும் இவனைத் தேற்ற முடியாமல் பேசிக்கொண்டே வந்த நண்பன், ஸ்பீட் பிரேக்கரைக் கடக்கும் சமயத்தில் குறுக்கே வந்த நாய்மீது மோதிவிடப்போகிறோம் என பிரேக்போட்டான். வண்டி ஓரத்தில் இருந்த முருங்கைமரத்தின் பின்னால் இருந்து வந்த வண்டியோடு நேருக்குநேர் மோத, வண்டி ஓட்டியவன் இடித்தவனைத் திட்டிவிட்டு பாலாவைப் பார்த்தான். கீழே விழுந்து  கிடந்த பாலா பின் மண்டையைத் தேய்த்தான். பாலாவுக்குத் தண்ணீர் வாங்கிக் கொடுத்துவிட்டு, வீட்டில் விடுவதாகச் சொன்னவனிடம் அடம்பிடித்து, `லோடு பார்த்துட்டு வந்திடலாம்’ எனச் சென்றுவிட்டுத் திரும்பியதும், குடோன் பூட்டி ஓனரிடம் சாவி கொடுத்தான். 

வீட்டுக்குச் சென்றவனுக்கு, சாப்பிடப் பிடிக்கவில்லை. நம்மைப் போல அவனுக்கும் மனக்கஷ்டம் எனச் சாப்பிடக் கூப்பிட்டுப் பார்த்தவள், அவன் வராததால் `தூங்கி எழுந்தா, மனசு லேசாகிடும். சொந்தபந்தம் இல்லாத நமக்கே இப்படி ஃபீலிங் இருக்கும்போது, இவனுக்கு இன்னும் அதிகமிருக்கும்’ என விட்டுவிட்டாள். 

அடுத்த நாள் எவ்வளவு கூப்பாடு போட்டும் எழாதவனை அவனின் நண்பர்களும் முதலாளியும் அள்ளிக் கொண்டு ஜி.ஹெச்சுக்குக் கூட்டிப் போனார்கள். காளிக்கு எதுவுமே புரியவில்லை...

காளி, சூர்யாவை அமைதிப்படுத்தித் தூங்கவைத்தாள். அவன் போக்கில் அங்கு இருக்கும் நோயாளிகளுடன் நடப்பது, குதிப்பது எனப் பெரும் சேட்டைகளை நிகழ்த்திக்கொண்டிருந் தான். அவனுக்குக் கோபம் வந்து `உய்ய்’யென கத்த ஆரம்பித்தால், அந்த வார்டு முழுவதும் அவனைச் சமாதானப்படுத்தக் கூடிவிடும். அவன் அழ, காரணம் புரியாமல் திணறும் சமயங்களில், மற்ற குழந்தைக்கும் அம்மாவுக்குமான பேச்சும் சிரிப்பும் இவளுக்கு ஏக்கத்தை ஏற்படுத்தின. மனச்சோர்வு அதிகரித்துக்கொண்டேபோன இந்த நாள்களின் பிடியிலிருந்து மீண்டுவிட நினைத்து `டிஸ்சார்ஜ் செய்யச் சொல்வோமா’ என எழுந்த நினைப்பை, சில நொடிகளில் மாற்றிக்கொள்வாள். `அங்கே போலீஸ் ஸ்டேஷன் மரத்தடி நிழல்லதான் இவனை வெச்சுக்கணும். அதுக்கு இதுவே பரவாயில்லை. ரோட்டோரம் தூசி. கட்டுப்போட ஓபி-க்கு வரணும். இதுக்கு நிம்மதியா இங்கேயே பாத்துக்கலாம். முதலாளி பாவப்பட்டு வெச்சிருக்கிறதால முடியுது. இல்லாங்காட்டி பொயப்பு நாறிடும். இவனைப் பெத்ததுலேயிருந்து இப்படியே இருக்கேனே’ என, தனக்குள் பேசிக்கொண்டாள்.

86p4.jpg

இரவு கனவில் பாலா வந்தான். இவள் வயிற்றில் இருந்த ஐந்து மாதக் குழந்தையுடன் பேசினான். குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்ற, அவனது ஆசைகளைக் கூறி, அவன் அம்மாவை நினைத்துக் கலங்கினான். கலங்கிய கண்கள் அவளைப்  பார்த்துக் கொண்டிருக்கும்போதே `அம்மா...’ என அலறிக் கொண்டே மறைந்தான். உடல் சில்லிட, திடுக்கிட்டு எழுந்தாள்.

சில மாதங்களுக்குள் அற்புதமான வாழ்க்கை ஒன்றைக் கொடுத்துப் பறித்துக் கொண்டதன் இயலாமை, அவளை அவ்வப்போது கலங்கவைத்தது. ருசி அறியாத காலத்தில், சுய பச்சாதாபம் தோன்றியதே இல்லை. ருசித்த வாழ்க்கை அவ்வப்போது ஞாபகத்துக்கு வந்து இடையூறு செய்தது. ``பாவம் பிள்ளை’’ என சூர்யாவின் வியர்வையைத் துடைத்துவிட்டாள். ``மத்த குழந்தையெல்லாம் வளந்திடும்.  எம்புள்ள எப்பவும் எனக்குக் குழந்தையா இருக்கும். யாரு, என்ன நினச்சா நமக்கு என்ன? நம்ம புள்ளய நாமே `சீ’ன்னு சொல்லிடக் கூடாது. அது எங்க போவும்? அவனுக்கு எல்லாமே நான்தான்’’ என்றபோது மனம் பாரம் குறைந்து லேசாவதை அவளால் உணர முடிந்தது. 

வராண்டாவுக்கு வந்தவள், நின்று இருந்த நர்ஸிடம் பையனைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, ஐ.சி.யூனிட் பக்கம் போனாள். அங்கு இரண்டாம் நம்பர் பெட்டை கண்ணாடி வழியே எட்டிப்பார்த்தாள். அதோ அந்த பெட்டில்தான் பாலா கொஞ்சநாள் படுத்துக்கிடந்து, இவளுக்கு எனப் பிரத்யேகமாக எந்த வார்த்தையும் சொல்லாமல் பிரிந்தான் .  பாலாவின் அம்மா ஆஸ்பத்திரிக்கு வந்து வண்டை வண்டையாகப் பேசினாள். அவன் இறந்தபிறகு `இவளுக்கு உரிமையில்லை’ எனச் சொல்லி,  அவன் உடலைக் கொண்டு போய் தடபுடலாகச் செலவுசெய்து, போஸ்டர் ஒட்டி வழியனுப்பினாள். `அவன் செத்ததுக்கு காளிதான் காரணம்’ என, பார்ப்பவர்களிடம் எல்லாம் சொல்லித்தீர்த்தாள். ஒருநாள், பாலா வேலை செய்த எறா ஷெட்டில்தான் இவள் வேலை செய்கிறாள் என்பது தெரிந்து, ஷெட்டின் சுவர் எங்கும் துப்பிவிட்டுப் போனாள்.

பாலா குட்டியாகிக் கையில் தவழ்ந்து கொண்டிருந்தான். அவனைப் பார்க்கும் போதெல்லாம் குழைந்து மென்மையாக மாறிவிட்டதாக உடலும் மனசும் இருக்கும். உறவு என்று யாரையும் தெரியாமல், சுற்றியிருக்கும் சிலரை உறவுகளாக அழைக்கத் தொடங்கிய வாழ்வில் புதிதாக முளைத்திருக்கும் உறவு. `காலத்துக்கும் நீ தனியா இல்லை. உனக்கு ஒரு துணை இருக்கு’ என பாலா கொடுத்த உறவு. பிளாட்ஃபாரத்தில் பிழைக்கிற வாழ்க்கை, நெருப்பில் நிற்பதுபோல அன்றாடம் சமாளிக்க வேண்டிய வாழ்க்கை. பொம்பளைங்களை டீசன்ட்டா பார்க்கத் தெரியாதவர்களுக்கிடையில் இவ்வளவு அற்புதமான கனவாக நின்ற வாழ்க்கை. கண் கலங்கியது. 

டிஸ்சார்ஜ் ஆகி, இவளது பிளாட்ஃபாரத்துக்கு ஆட்டோவில் வந்து இறங்கினாள். ஸ்டீபன் அவனது கொட்டகையில் படுக்கவைக்கச் சொன்னான். ``இனிமே இவனை இங்க விட்டுட்டுப் போ. வெளிய வெயில்ல போட்டுட்டுப் போவாத. இந்த வெயில்லயே பையன் மூளை கலங்கிடும்’’ என உரிமையாகச் சொல்லிவிட்டு, கையில் வைத்திருந்த ரஸ்னா பாக்கெட்டைக் கொடுத்தான். சூர்யா, அந்த பாக்கெட்டைத் தொடும் போதெல்லாம் தலையை ஆட்டி ஆட்டிச் சிரித்தான்!

http://www.vikatan.com/

  • கருத்துக்கள உறவுகள்

விஜயலச்சுமி ஒரு தீர்வும் சொல்லாமல் காளி இதோட நீ காலி என்று சொல்லிட்டுப் போறா.....!  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.