Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாந்தமு லேகா

Featured Replies

சாந்தமு லேகா - சிறுகதை

 

 

“ராத்திரி 10 மணிக்கு மேல கேட்டைப் பூட்டிருவோம். கரன்ட் பில் யூனிட்டுக்கு இவ்வளவு குடுக்கணும். வெஜிட்டேரியன்ஸ்க்கு மட்டும்தான் வீடு. சினிமாக்காரங்களுக்கு வீடு கிடையாது. அபார்ட்மென்ட்ல நாய் வளர்க்கக் கூடாது.” இதுபோன்ற எந்த கண்டிஷனும் இல்லாத வீடு சென்னையில் வாடகைக்குக் கிடப்பது கனவிலும் நடக்காத விஷயம். வீடு என்றால் ஃபிளாட். பல மாடிக் கட்டடத்தில் ஒரு ஃபிளாட். சின்மயா நகரிலுள்ள ‘சாந்தலேகா அபார்ட்மென்ட்ஸ்’க்குக் குடிவந்த புதிதில் ஷைலஜாவுக்கு இந்த சுதந்திரத்தை முதலில் நம்பவே முடியவில்லை. முகப்பில் வரையப்பட்டிருந்த வீணை ஓவியத்தைப் பார்த்ததுமே அவள் சௌந்தரிடம் சொல்லி விட்டாள். ‘எனக்கு இதைப் பார்க்கும் போதே நல்லதா தோணுது.’ நல்லதாகத்தான் நடந்தது. ஹவுஸ் ஓனர் சாந்தலேகாவுக்கு 70 வயதிருக்கும். எட்டு வீடுகள் கொண்ட அந்த அபார்ட்மென்டின் முதல் தளத்தில் தனியாக வசித்தார். மஞ்சளில் குளித்த மேனி. நெற்றியில் விபூதி, சந்தன, செந்தூர, குங்குமக் கலவை. ஆனால், எல்லாமே அப்பிக்கொள்ளாமல் அளவாக, அழகாக சிறு தீற்றல்களாகத் துலங்கின. பழைய காலத்து சுங்குடிப் புடவையில் இந்த வயதிலும் ஜொலிப்பாக இருந்தார். ‘இவளால நம்பவே முடியலியாம்மா!’ சௌந்தர் சாந்தலேகாவிடம் சொன்னான். கூச்சத்துடன் சௌந்தரின் கையைப் பிடித்து ஷைலஜா கிள்ளியதைப் பார்த்த சாந்தலேகா, ‘எதை நம்ப முடியலியாம்?’ என்றார். ‘இல்ல. நீங்க வெஜிட்டேரியன். ஆனா நான் - வெஜிடேரியன்ஸ்க்கு வீடு குடுக்கறீங்க. தாராளமா நாய் வளத்துக்கலாம்னு சொல்றீங்க. என்னை மாதிரி சினிமால இருக்கிறவங்களுக்கும் யோசிக்காம சாவியைத் தூக்கிக் குடுத்துட்டீங்க. இதெல்லாம்தான் இவளால நம்ப முடியல. என்னாலயும்தான்’.

`‘தம்பி! அடுத்த மனுஷாளுக்குத் தொந்தரவில்லாம யாரும் எதுவும் செய்யலாம். இதைத் தவிர நான் சொல்றதுக்கு ஒண்ணும் இல்ல.’’

112p1.jpg

சாந்தலேகாவுக்கு வாழ்க்கை குறித்த தெளிவான பார்வை இருந்தது. சக மனிதர்கள் அனைவரிடமும் அன்பு காட்டினார். தன் வீட்டில் வாடகைக்கு இருப்பவர்கள் அனைவரையும் உறவினர்கள் போலவே பாசாங்கில்லாமல் நடத்தினார். தன் ஒரே மகள் ஹைதராபாத்துக்கு வந்துவிடச் சொல்லி எவ்வளவோ வற்புறுத்தியும் சாந்தலேகா மறுத்துவிட்டார். செக்யூரிட்டி மூர்த்திக்கும், அவரது குடும்பத்துக்கும் கார் பார்க்கிங் ஏரியாவை ஒட்டி ஒரு சிறு அவுட் ஹவுஸ் கட்டிக்கொடுத்திருக்கிறார். சாந்தலேகாவுக்கு மூர்த்தி ஒரு மகன்தான். கொஞ்சம்கூட ஆடம்பரமேயில்லாமல் எளிமையாக வாழும் சாந்தலேகாவின் ஃபிளாட்டில் ஒரு புகைப்படம் கூட இருக்காது. பூஜையறையில்கூட அத்தனை அலங்காரங்கள் இல்லை. ராமரின் பட்டாபிஷேகத்தைக் குறிக்கும் ராமர், சீதை, லட்சுமணர், அனுமன் விக்கிரகங்களுடன் ஒரு தம்பூரா இருக்கும். அவ்வளவுதான்.  இவையெல்லாம் சௌந்தரும் ஷைலஜாவும் அங்கு குடிவந்ததும் தெரிந்துகொண்ட விஷயங்கள்.

சாந்தலேகா அபார்ட்மென்ட்ஸில் குடியேறிய பிறகு சௌந்தருக்கும் ஷைலஜாவுக்கும் எல்லா விதத்திலும் நிறைவாக இருந்தது. ‘`எனக்கென்னவோ இந்த வீட்டுக்கு வந்த நேரம் உங்க படம் ஸ்டார்ட் ஆயிரும்னு தோணுது’’ என்றாள், ஷைலஜா. சௌந்தர் இயக்கிய முதல் படம் சுமாராகத்தான் போனது. இரண்டாம் படத்துக்கான முனைப்புகளில் இருக்கிறான். காதல் திருமணம் செய்த தம்பதிக்குக் குழந்தைகள் இல்லை. இல்லையென்றால் பெற்றுக்கொள்ளவில்லை. வாழ்வில் வெற்றியை ருசித்த பின்தான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென்கிற வைராக்கியம் சௌந்தருக்கு. ஷைலஜாவுக்கும் அதில் சம்மதமே. இருவருமே நாய் வளர்ப்பதில் பிரியம் உள்ளவர்கள். பைரவை யாரும் நாய் என்று சொல்வதை அனுமதிக்க மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரைக்கும் பைரவ், அவர்களின் மகன். ஒன்றரை வயதில் வாட்டசாட்டமாக வளர்ந்து நிற்கும் லாபரடார் வகை நாய். ஷைலஜாவையும்விட பைரவ் சாந்தலேகாவுக்கு நெருக்கமாகிப்போனான். ‘`நீங்க ரெண்டு பேரும் எங்கேயாவது வெளியே போறதா இருந்தா, பைரவை இங்கே விட்டுட்டுப் போங்கம்மா. நான் தனியாத்தானே இருக்கேன். பாத்துக்கறேன்’’ என்றார் சாந்தலேகா.
குடியிருக்கும் குடும்பங்களில் யார் வீட்டில் என்ன சண்டை சச்சரவென்றாலும் யாருக்கும் வலிக்காத வண்ணம் பேசி சமாதானம் செய்து வைப்பார், சாந்தலேகா. தினமும் சௌந்தரிடம் புதிது புதிதாக சாந்தலேகாவைப் பற்றிய ஆச்சர்யங்களைச் சொல்வாள், ஷைலஜா. ‘சொன்னா நம்ப மாட்டீங்க. எட்டு வீட்டுலயும் யார் எங்கே போனாலும் அவங்க குழந்தைங்கள ஹவுஸ் ஓனர் ஆன்ட்டிகிட்டதான் விட்டுட்டுப் போறாங்க. அது பரவாயில்ல. அந்தக் கன்னியாகுமரி ஃபேமிலி ஏதோ டெத்துன்னு ஊருக்குக் கெளம்பிட்டாங்க. அவங்க வீட்டு ‘ஸ்நூஃபி’யை ஆன்ட்டிதான் பாத்துக்கறாங்க. நேத்து பருப்புப்பொடி குடுக்கறதுக்காக அவங்க ஃபிளாட்டுக்குப் போனா, ‘ஸ்நூஃபி’ அவங்ககூட சோஃபால உக்காந்து ‘பிக்பாஸ்’ பாத்துக்கிட்டிருக்கு.’

112p2.jpg

சினிமாவில் இருப்பதால் சௌந்தருக்கு சாந்தலேகா ஒரு முன்னாள் நடிகை என்பது தெரியும். மிகக் குறைவான படங்கள் நடித்திருப்பவர் என்பதும், அவர் கணவர் ஒரு காலத்தில் தெலுங்குப் படவுலகில் கொடிகட்டிப் பறந்த இசையமைப்பாளர் என்பதையும் ஒரு தகவலாக ஷைலஜாவிடம் சொல்லி வைத்தான்.

‘`டிரெட்மில் வாங்குற ஐடியாவை விட்டுருங்க. நான் ஹவுஸ் ஓனரம்மா கூட டெய்லி மொட்டை மாடில வாக்கிங் போறேன். கூட பைரவும் வந்து நடக்கறான். `ஒரு கல்யாண வீட்டு விருந்தையே ஷாமியானா போட்டு இந்த மொட்டை மாடில நடத்திடலாம். இதுல நடக்கறதை விட்டுட்டு உனக்கெதுக்கு டிரெட்மில்? நாலு நாளைக்கப்புறம் எப்படியும் அதுல துணிதான் காயப் போடப் போறே’ன்னு சத்தம் போட்டுட்டாங்க’’ என்றாள் ஷைலஜா.

வாக்கிங்கின்போது சாந்தலேகா மெல்லிய குரலில் பாடுவார். சில சமயங்களில் ஷைலஜா நடக்கும்போது, வாட்டர் டாங்குக்குக் கீழ் நிழலாக உள்ள கல்பெஞ்சின் மேல் அமர்ந்து கண்களை மூடிப் பாடுவார். அவரது காலடியில் படுத்துக் கிடப்பான் பைரவ். ‘நீங்க பாடினதுல பைரவே சொக்கிட்டான் ஆன்ட்டி’ ஷைலஜா சிரித்தபடி வேர்வையைத் துடைத்துக் கொண்டு அவரருகே உட்கார்ந்தாள்.

‘ஆன்ட்டி! நான் உங்களை ஒண்ணு கேக்கலாமா?’A7.jpg

‘கேளும்மா! நேரே கேக்க வேண்டியதுதானே? எதுக்கு பெர்மிஷன்?’

‘இல்ல. உங்க வீட்ல உங்க குணத்தைப் பாத்துட்டு சாந்தலேகான்னு பேர் வச்சாங்களா? இல்ல இந்தப் பேர் வச்சதுனால நீங்க இவ்வளவு சாந்தமா இருக்கீங்களா?’

கொஞ்சமும் புன்னகை மாறாத முகத்துடன் சாந்தலேகா சொல்ல ஆரம்பித்தார்.

 ‘`எங்க அப்பா அம்மா எனக்கு வச்ச பேரு  பாலம்மா. அது எங்க பாட்டி பேரு. அப்ப நான் தியாகராஜ ஸ்வாமியோட தெலுங்குக் கீர்த்தனை ‘சாந்தமு லேகா’ ரொம்ப நல்லா பாடுவேன். அப்பா பாட்டு வாத்தியார். அவர்கிட்ட பாட்டு சொல்லிக்க வந்தவர்தான் என் வீட்டுக்காரர். அப்ப யாருக்கும் தெரியாம என்னை சாந்தலேகான்னு கூப்பிடுவார்’ சாந்தலேகா சொல்லிக்கொண்டிருக்கும் போதே சடசடவென மழை கொட்டத் தொடங்கியதால் அன்றைக்குப் பேச்சு தடைப்பட்டுவிட்டது. அதில் ஷைலஜாவுக்கு அத்தனை வருத்தம். ‘அன்னைக்கு ஹவுஸ் ஓனர் ஆன்ட்டி நல்ல மூடுல இருந்தாங்க. இன்னும் என்னென்னவோ சொல்லியிருப்பாங்க. மழை வந்து கெடுத்திருச்சு’’ சலிப்புடன் சொன்னாள் ஷைலஜா.

112p3.jpg

‘`நீங்க ஹவுஸ் ஓனர் ஆன்ட்டி ஒரு நடிகைன்னுதானே சொன்னீங்க? ஆனா அவங்க பாடுவேன்னு சொல்றாங்க!’’ சௌந்தரிடம் கேட்டாள் ஷைலஜா. ‘`அவங்க நடிகைதான். கொஞ்ச படங்கள் பண்ணிட்டு அப்புறமா அந்த மியூஸிக் டைரக்டரைக் கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆயிட்டாங்கன்னு கேள்விப்பட்டேன். அவங்க யாரா இருந்தா என்ன? நமக்கு அவங்க ஹவுஸ் ஓனர். நம்மகிட்ட பிரியமா இருக்காங்க. அவ்வளவுதான் நமக்கு வேணும். ஒரு வாரம் நான் வெளியூர் போறேன் தெரியும்ல! அவங்க இருக்கிற தைரியத்துலதான் கிளம்பறேன். அதுக்காக நீ அவங்களை சும்மா சும்மா தொந்தரவு பண்ணிக்கிட்டிருக்காதே!’’ என்றான் சௌந்தர்.

சௌந்தர் கிளம்பிப் போன இரண்டாவது நாள் ஷைலஜா கடும் ஜுரம் வந்து நடக்க முடியாமல் படுத்துவிட்டாள். சாந்தலேகாதான் அருகில் இருந்து பார்த்துக்கொண்டார். காரில் அவரும் கூடவே வந்து டாக்டரிடம் காண்பித்தார். வேளாவேளைக்கு மருந்து, மாத்திரை சாப்பிட உதவினார். ‘உன் வீட்டுக்காரர் ஏதோ வேலையா வெளியூர்ல இருக்கார். அவர் போன் பண்ணும்போது உனக்கு உடம்பு சரியில்லேன்னு சொல்லாதே. பாவம் அவர் மனசு கஷ்டப்படும்’ என்றார். மூன்று நாள்களில் ஷைலஜாவால் ஓரளவு எழுந்து நடமாட முடிந்தது. நான்காவது நாளன்று திடீரென்று மதியம் 12 மணிவாக்கில் பவர் கட் ஆனது. சாந்தலேகா  ஃபிளாட்டின் கதவைத் தட்டினாள். நீண்ட நேரத்துக்குப் பின் வந்து கதவைத் திறந்த சாந்தலேகாவின் முகத்தில் அத்தனை எரிச்சல் தெரிந்தது. உரத்த குரலில் ‘`என்ன?’’ என்றார். ஷைலஜாவால் அந்தக் கேள்வியை கண் கொண்டு வாங்க இயலவில்லை. `‘என்ன? சொல்லித்தொலை’’ என்றார் சாந்தலேகா. இப்போது முகத்தில் அத்தனை வெறுப்பு. அதிர்ச்சியில் வாய் திறந்து பேச இயலாத ஷைலஜாவின் முகத்தில் அறைந்தாற்போல கதவை ஓங்கிச் சாத்திக் கொண்டார் சாந்தலேகா. படிக்கட்டில் கண்களைத் துடைத்தபடி கீழ்த் தளத்துக்கு வந்து செக்யூரிட்டி மூர்த்தியிடம், ‘`பவர் இல்லீங்க. என்னாச்சு?’’ என்றாள் ஷைலஜா. ‘`கரன்ட் பாக்ஸ்ல எல்லாத்தையும் புதுசா மாத்தணும். பீஸைப் புடுங்கிப் போடுன்னு அம்மா சொல்லிட்டாங்கம்மா’’ என்றார் மூர்த்தி.

`‘ஏங்க? எங்ககிட்ட இன்வெர்ட்டர்கூட இல்லீங்க! சீக்கிரமா போட்டு விடுங்க!’’

‘`இன்ஜினீயர் சம்சாரம் இப்பதான் கத்திட்டுப் போகுது. என்னால ஒண்ணும் செய்ய முடியாதும்மா. என்னாச்சுன்னே தெரியல. மத்தியானத்திலிருந்தே அம்மாக்கிட்ட முகம் குடுத்துப் பேச முடியல’’ என்றார் மூர்த்தி.

112p4.jpg

அதற்கு மேல் ஷைலஜாவுக்கு ஒன்றும் சொல்லவோ, கேட்கவோ தோன்றவில்லை. அன்றைய நாள் முழுதும் மின்சாரம் இல்லாமல் இரவு வந்தது. சௌந்தர் போன் பண்ணியபோது இதைச் சொல்லலாமா, வேண்டாமா என்று குழம்பியவாறே ஏதேதோ பேசினாள். கடைசியில் சௌந்தரே கேட்டான். ‘`ஆன்ட்டி எப்படி இருக்காங்க? நீ அவங்க வீட்லதான் இருக்கியா?’’

அதற்கு மேல் ஷைலஜாவால் பொறுக்க முடியவில்லை. மதியம் நடந்த அத்தனையையும் கொட்டித் தீர்த்தாள். அழுகை கலந்த குரலுடன், ‘`என் மூஞ்சிக்கு நேரா அவ்வளவு கோபத்தைக் காட்டினாங்க, சௌந்தர். டப்புன்னு கதவைச் சாத்திட்டாங்க. இனிமேல் அந்தப் பொம்பள மூஞ்சில நான் முழிக்கப்போறதில்ல. தேதி ஒண்ணானா வாடகை குடுக்கப்போறோம். ஒரு ஹவுஸ் ஓனர், டெனன்ட்டைத் தாண்டி நமக்கும் அவங்களுக்கும் என்ன இருக்கு? முடிஞ்சா நீ வந்த உடனே வேற வீடு பாத்துரலாம். நமக்கென்ன வேற வீடா இல்ல? கொஞ்சமாவது ஒரு இது வேண்டாம்! நாம என்ன அவங்ககிட்ட கடனா வாங்கியிருக்கோம்! என்னமோ அவங்க வீட்டுச் சொத்தை எடுத்துட்ட மாதிரி இப்படி அவமானப்படுத்தினா என்ன அர்த்தம்? நான் உனக்காகத்தான் பாக்கறேன். இல்லேன்னா இப்பவே போயி அந்தக் கிழவியைக் கிழிச்சுத் தொங்க விட்டிருவேன்.’’

இடையில் எங்கும் குறுக்கே பேசிவிடாமல் ஷைலஜா பொங்கிவழியும் வரைக்கும் பொறுமையாக அவள் சொல்வதையெல்லாம் கேட்டுவிட்டு சௌந்தர் சொன்னான்.

‘`இன்னிக்குத் தெலுங்கு சானல்ல அந்தம்மா நடிச்ச படம் வந்தது. அதுல ரொம்ப கிளாமரா நடிச்சிருந்தாங்க. அந்தக் காலத்துல தெலுங்குல ரொம்ப ஹிட் படம். இவங்களோட கிளாமருக்காகவே ஓடியிருக்கு. நீ ஒண்ணும் கேட்டுக்காதே. காலைல சரியாயிருவாங்க. படுத்துத் தூங்கு.’’

http://www.vikatan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.