Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவளது வீடு

Featured Replies

அவளது வீடு - சிறுகதை

 

'வீடு வாடகைக்கு விடப்படும்’ என்ற விளம்பரத்தைப் பேப்பரில் பார்த்ததும், அதன் தொலைபேசி எண்ணைக் குறித்துக்கொண்டாள் அகல்யா. அலுவலகம் முடிந்து போகும் வழியில், 'அந்த வீட்டைப் பார்த்துவிட வேண்டும்’ என்று நினைத்தபடியே, லன்ச் பாக்ஸையும் குடிநீர் பாட்டிலையும் எடுத்து ஹேண்ட்பேகில் வைத்துக்கொண்டு ஸ்கூட்டியில் கிளம்பினாள்.

அவள் வேலை செய்யும் ஆடிட்டர் அலுவலகம், மந்தைவெளியில் இருக்கிறது. மறைமலைநகரில் இருந்து கிளம்பி அலுவலகம் போவதற்கு எப்படியும் 1.30 மணி நேரத்துக்கு மேல் ஆகும். 'நேரத்துக்குள் போகாவிட்டால், அரை நாள் சம்பளத்தைப் பிடித்துக்கொள்வார்கள்’ என நினைத்தபடியே சாலையில் செல்லத் தொடங்கினாள். பேப்பர்களில் வெளியாகும் வாடகை வீடு பற்றிய விளம்பரங்களை, அகல்யா தினமும் தவறாமல் படிப்பாள். பல நேரங்களில் விளம்பரத்தில் உள்ள வீட்டுக்கு, நேரிலேயே சென்று விசாரிப்பது அவளது வழக்கம்.

மறைமலைநகரில், இரண்டு படுக்கைகள் கொண்ட ஃப்ளாட் ஒன்றை லோன் போட்டு வாங்கிக் குடியேறி நான்கு வருடங்கள் கடந்துவிட்டபோதும், அவளுக்குள் வீடு தேடும் ஆசை வடிந்தபாடு இல்லை. திருமணத்தைப் பற்றி கனவு காணத் தொடங்கிய நாட்களிலேயே, வீடு பற்றிய கனவும் அவளுக்குள் உருவாக ஆரம்பித்துவிட்டது. சொந்த வீட்டைப் பற்றி கனவுகொள்ளாத பெண் யார் இருக்கிறார் உலகில்?

பெண்களுக்கு வீடு என்பது, வெறும் வசிப்பிடம் அல்ல; ஒரு மாயத்தோட்டம். வீட்டுக்குள் போனதும் பெண் உருமாறிவிடுகிறாள். ஆண்களால் ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாத விநோதமும் ரகசியமும் சுகந்தமும் வீட்டினுள் இருக்கின்றன. ஆண்கள் வீட்டைப் பயன்படுத்துகிறார்கள்; பெண்கள் வளர்த்தெடுக்கிறார்கள்.

p74.jpg

கல்யாவின் அப்பா மின்சாரத் துறையில் பணியாற்றியவர் என்பதால், அவள் சிறு வயதில் இருந்தே கவர்ன்மென்ட் குவார்ட்டர்ஸில் தான் வாழ்ந்திருக்கிறாள். பழுப்படைந்து காரை உதிரும் சுவர்களும், மூட முடியாத ஜன்னல்களும், தவளைகள் நுழைந்துவிடும் குளியல் அறையும், புகை போக வழியற்ற சமையல் அறையும் கொண்ட அரசுக் குடியிருப்புகளில் வாழ்வது சகிக்கவே முடியாதது.

அரசுக் குடியிருப்பைக் கட்டியவன், அது மனிதர்கள் குடியிருப்பதற்கானது என்ற நினைப்பே இல்லாமல் கட்டியிருப்பான் போலும். வீடு என்ற பெயரில் சற்று உயரமான, பெரிய கல்லறையைப் போலத்தான் அவை உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவளுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து, விசாலமான வீட்டில் குடியிருந்ததே இல்லை. லோயர் கேம்ப்பில் குடியிருந்தபோது, அவர்கள் வீட்டுக்குள் அடிக்கடி பாம்பு நுழைந்துவிடும். அம்மா, பயந்து அலறுவாள். மழை பெய்யத் தொடங்கினால், வீட்டுக்குள் தண்ணீர் சொட்டும். உறங்கும் குழந்தைகளின் முகத்தில் தண்ணீர் சொட்டாமல் இருக்க, அவர்களைத் தள்ளிப் படுக்கவைத்துவிட்டு அலுமினியச் சட்டிகளைக் கொண்டுவந்து வைப்பாள்.

அலுமினியச் சட்டியினுள் மழை பெய்யும் சத்தத்தைக் கேட்டபடியே, அகல்யா பல நாட்கள் படுத்துக்கிடந்திருக்கிறாள். சட்டியின் விளிம்பில் பட்டுத் தெறிக்கும் மழைத்துளி, அவள் கையில் பட்டு சிலிர்ப்பை உண்டாக்கும். அதுபோன்ற நாட்களில், ஒழுகாத அறைகள்கொண்ட பெரிய வீட்டையும், கதகதப்பான படுக்கையையும் பற்றி கனவு காணத் தொடங்குவாள். வீடு பற்றிய கனவு, அவள் கூடவே வளர்ந்துகொண்டிருந்தது.

ஒழுகும் வீட்டைப் பற்றி அம்மா எவ்வளவு சலித்துக்கொண்டாலும், அப்பா அதைக் கேட்டுக்கொண்டதே இல்லை. அப்பா, தன் வாழ்நாளில் சொந்தமாக ஒரு வீட்டைக் கட்டிக்கொள்ளவே இல்லை. மதுரையில் வீடு வாங்குவதைப் பற்றி அம்மா எத்தனையோ முறை சொல்லியபோதெல்லாம், 'முதுமையில் பூர்வீக கிராமத்தில் உள்ள வீட்டில் போய்த் தங்கிவிடுவோம்’ என்று சொல்லி அப்பா அடக்கிவைத்துவிடுவார்.

அதன் அவசியமே இல்லாமல், 53 வயதில் அப்பா இறந்துவிட்டார். அம்மா பாடுதான் திண்டாட்டம். அவளுக்கு இப்போது வயது 65. மகள் வீட்டில் வந்து தங்கியிருக்க மாட்டேன் என ஒவ்வொரு மகன் வீடாக அலைந்து அவமானப்பட்டுக் கொண்டிருக்கிறாள். 'வீடு அற்றவர்களுக்கு நிம்மதியான உறக்கம் கிடையாது’ என்பார்கள். அம்மா, இதுவரை ஆழ்ந்து உறங்கியவளே இல்லை. இருட்டில் ஓர் இலை உதிரும் சத்தம் கேட்டால்கூட, சட்டென்று எழுந்துவிடுவாள்.

அந்தப் பழக்கம் அகல்யாவுக்கும் இப்போது வந்துவிட்டது. யோசித்துப் பார்த்தால், ஹாஸ்டலில் படிக்கும் நாட்களில் மட்டுமே அகல்யா ஆழ்ந்து உறங்கியிருக்கிறாள். அதுவும் அவளது ஹாஸ்டல், மலையின் அடிவாரத்தில் இருந்தது. ஆகவே, காலையில் ஜில்லெனக் காற்றடிக்கும். படுக்கையைவிட்டு அவளால் எழுந்துகொள்ளவே முடியாது.

அப்போது எல்லாம், 'இதுபோன்ற மலை அடிவாரத்தில்தான் வீடு கட்டிக்கொள்ள வேண்டும்’ என்று நினைத்துக்கொள்வாள். அப்படி நினைக்கத் தொடங்கியதும் அந்த வீடு எப்படி இருக்க வேண்டும், அதன் சுவர்களின் நிறம் என்ன, எந்த மாதிரியான சோபா வாங்கிப் போட வேண்டும் என்றெல்லாம் யோசிப்பாள். மேலும், சமையலறையை, ஹால் சைஸில் விசாலமாகக் கட்ட வேண்டும். அடுப்பின் முன்னால் சுழல் நாற்காலி ஒன்றைப் போட வேண்டும். அப்போதுதான் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் திரும்ப வசதியாக இருக்கும். அந்த அறையில், பெரிய ஜன்னல் கட்டாயமாக இருக்க வேண்டும். பாட்டு கேட்பதற்கு வசதியாக, ரேடியோ ஒன்று வைத்துக்கொள்ள வேண்டும். வீட்டுக்குப் பின்னாடியே காய்கறி, கீரைத் தோட்டம் போட்டுக்கொள்ள வேண்டும். இப்படி, அவள் தனது கனவு வீட்டைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டியபடியே ஹாஸ்டல் அறையில் படுத்துக்கிடப்பாள்.

சில சமயம், 'இது என்ன பைத்தியக்காரத்தனம்?’ என அவளுக்கே தோன்றும். ஆனால், அப்படியான ஒரு வீட்டை தன் வாழ்நாளில் நிச்சயம் உருவாக்க முடியும் என்று அவள் ஆழமாக நம்பினாள்.

அவளது கனவு, இன்று வரை நிறைவேறவே இல்லை. இப்போது அவள் வீடு வாங்கிவிட்டாள். ஆனால், அது 620 சதுர அடி கொண்ட சிறிய ஃப்ளாட். அவ்வளவுதான் அவளால் பணம் புரட்ட முடிந்தது. அதையாவது வாங்கிவிட்டோமே எனச் சமாதானம் ஆனபோதும், கனவில் உருவாக்கிய வீடு, அவளை ஆறாத ரணம் போல வதைத்தது.

கல்யாவுக்குத் திருமணமாகி 21 வருடங்கள் கடந்துவிட்டன. அவளது மூத்த பையன் நந்து, இன்ஜினீரியங் படித்துக்கொண்டிருக்கிறான். இளையவள் சுபத்ரா, இப்போது ஒன்பதாம் வகுப்பில். அடுத்தவன், ஆறாம் வகுப்பு.

திருமணத்துக்கு முன்பாகவே இரண்டு விஷயங்களில் அகல்யா உறுதியாக இருந்தாள். ஒன்று, அரசு ஊழியரைத் திருமணம் செய்துகொள்ளக் கூடாது. சொந்தத் தொழில் நடத்துபவரைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும். அவரால்தான், சம்பாதித்து பெரிய வீடு கட்ட முடியும்; ஒரே ஊரில் வாழ முடியும்.

இரண்டாவது, தான் வேலைக்குப் போய்ச் சம்பாதித்து வாழ வேண்டும். ஐந்து ரூபாய்க்குகூட அப்பாவின் கையை எதிர்பார்த்து நின்ற அம்மாதான் அதிலும் அவளுக்கு முன்னுதாரணம். இரண்டுமே அவள் நினைத்தது போலத்தான் நடந்தேறின.

கல்யாவுக்கு, ஆடிட்டர் அலுவலகம் ஒன்றில் கணக்காளராக வேலை கிடைத்தது. அவளது கணவன், அம்பத்தூரில் தவணை முறையில் வீட்டுப் பொருட்கள் விற்கும் கடை ஒன்றை நடத்திக்கொண்டிருந்தார். பெண் பார்க்க அவர்கள் வந்திருந்தபோது, 'உங்களது வீடு சென்னையில் எங்கு உள்ளது?’ என்றுதான் அகல்யா கேட்டாள். பட்டாபிராமில் சொந்த வீட்டில் வசிப்பதாகச் சொன்னார்கள். அந்த ஒன்றுக்காகவே அவள் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டாள்.

p74a.jpgதிருமணமாகி வந்தபோதுதான் தெரிந்தது, அது அவள் ஆசைப்பட்ட வீடு அல்ல; பழைய காலத்து ஓட்டு வீடு என்பது. தலைகுனிந்துதான் நுழைந்து வர வேண்டும். வீட்டில் உள்ளவர்கள், ஹாலில்தான் படுத்துக்கொள்வார்கள். பழைய மரக்கட்டில் போட்ட சிறிய படுக்கை அறை. கையைத் தூக்கினால், மின்விசிறி தட்டும். வீட்டுக்குள் கழிப்பறை கிடையாது. வெளியே தென்னை மரத்தை ஒட்டி டெலிபோன் பூத் போல ஒன்றைக் கட்டிவைத்திருந்தார்கள். கிணற்றில் தண்ணீர் இறைத்துதான் குளிக்க வேண்டும். சமைக்க ஆரம்பித்தால், வீடு முழுவதும் புகை நிரம்பிவிடும். திருமணமாகி வந்த மூன்று நாட்கள், இவற்றை நினைத்துக் கொண்டு அகல்யா அழுதாள். அதை யாரும் 'ஏன்?’ என்றுகூடக் கேட்டுக்கொள்ளவில்லை.

வீடு சிறியது என்பதைவிடவும் அந்த வீட்டுக்குள் ஐந்து ஆண்களும், மூன்று பெண்களும், நான்கு குழந்தைகளும் ஒன்றாக வாழ வேண்டும் என்பது ஆத்திரமாக இருந்தது.

திருமணமான முதல் வாரத்தில் சினிமா பார்க்கப் போகும்போது அகல்யா, தன் கணவனிடம், ''நாம் டவுனுக்குள் வீடு பார்த்துக் குடிபோகலாம்'' என்று சொன்னாள். அகல்யாவின் கணவன், வெறுமனே தலையை மட்டும் ஆட்டினான்.

மறுநாள் காலையில், சமையல் அறையில் இருந்த அவளது மாமியார், ''என்னடி... வந்து 10 நாள்கூட ஆகலை. அதுக்குள்ளே 'தனி வீடு பார்த்துக்கிட்டுப் போகலாம்’னு சொன்னயாமே?! ஒழுக்கமா வீட்டுக்கு அடங்கியிருக்க மாட்டியா?'' எனச் சண்டையிட்டாள்.

அகல்யாவுக்கு, அழுகை முட்டிக்கொண்டு வந்தது. தான் ரகசியமாகச் சொன்ன விஷயத்தை ஏன் இப்படி தன்னுடைய அம்மாவிடம் சொல்லி, தன்னை அவமானப்படுத்தினார் என கணவன் மீது ஆத்திரமாக வந்தது. அன்று முழுவதும் அவரோடு பேசவில்லை. தன் கணவன், ஒரு தலையாட்டும் பொம்மை என்பதை ஆறே மாதங்களில் அகல்யா புரிந்துகொண்டாள். அதன் பிறகே அகல்யா வேலைக்குப் போகத் தொடங்கினாள்.

மந்தைவெளிக்கு வேலைக்குப் போகத் தொடங்கியபோது, அவளுக்குக் கைக்குழந்தை இருந்தது. அதைக் காரணம் காட்டி, முதன்முறையாக வீடு மாறினாள். மிகச் சிறிய வீடு, படுக்கை அறை எனத் தனியாகக் கிடையாது, குறுகலான சமையல் அறை, அதன் ஒரு பக்கம் கழிப்பறை.

ஒவ்வொரு நாளின் இரவும், சுழலும் மின்விசிறியை வெறித்துப் பார்த்தபடியே, 'ஏன் இப்படியான ஒரு வீட்டில் வசிக்கிறோம்?’ என நினைத்து அழுவாள். அவள் கணவனோ, படுத்த உடனேயே உறங்கிவிடுவான். 'குழந்தைக்குத் தொட்டில் போட ஓர் இரும்பு வளையம்கூட இல்லாத வீடு எதற்கு?’ என ஆத்திரமாக இருக்கும். சேலையை மடித்துப் போட்டு, அதில்தான் குழந்தையை உறங்கவைப்பாள்.

அப்போது வீட்டில் ஒரு நாற்காலிகூடக் கிடையாது. யாராவது விருந்தினர் வந்தால் பாயைப் போட்டுதான் உட்காரச் சொல்ல வேண்டும். அதுபோன்ற நேரங்களில் அவள் கூனிக் குறுகிவிடுவாள். விருந்தினர்கள் வெளியேறியதும் தனியே உட்கார்ந்துகொண்டு அழுவாள். அவளுக்கு, யாரைக் குற்றம் சொல்வது எனப் புரியாது.

சுபத்ரா பிறந்தபோது, அந்த வீட்டில் இருந்து அடையாறுக்கு மாறினாள். அது மாடி வீடு. வீட்டின் முன்னால் பூந்தொட்டிகள் வைத்துக்கொள்ளும் அளவுக்குக் கொஞ்சம் இடம் இருந்தது. அதில் நாலைந்து பூச்செடிகள் வாங்கிவைத்ததோடு, வீட்டு ஓனர் பயன்படுத்தாமல் போட்டிருந்த மரநாற்காலியைச் சரிசெய்து போட்டுக்கொண்டாள். வேலைவிட்டு வந்தவுடன் அந்த நாற்காலியில் உட்கார்ந்தபடியே வீதியைப் பார்த்துக்கொண்டிருப்பாள்.

உயர உயரமாக அடுக்குமாடி வீடுகள் உருவாவதையும், பெரிய பங்களாக்களையும் கடந்து போகும்போது, அவளது மனம் அடித்துக்கொள்ளும். சில சமயம், சாலையில் நடக்கும்போது மூடப்பட்ட பெரிய இரும்பு கதவுகொண்ட வீடுகளின் முன்பு போய் நின்றபடியே அது தன்னுடைய வீடு என்று கற்பனை செய்துகொள்வாள். 'எப்போது இதுபோன்ற வீட்டில் வாழப்போகிறோம்?’ என மனம் அடித்துக்கொள்ளும். இயலாமை, அது உன்னால் முடியாது என்ற உண்மையைச் சொல்லி, அவளைப் பரிகாசம் செய்யும். விசாலமான எந்த வீட்டைக் கண்டாலும் அவளிடம் இருந்து ஒரு பெருமூச்சு வருவதைத் தடுக்கவே முடியாது.

சைதாப்பேட்டை, வடபழநி, கிண்டி, நந்தனம், குரோம்பேட்டை, ராமபுரம்... என அகல்யா 15 வீடுகளுக்கும் மேல் மாறியிருந்தாள்.

றைமலைநகரில் சொந்த வீடு வாங்கி பால் காய்ச்சிய நாளில் வீட்டைப் பார்த்த அம்மா, ''என்னடி... புறாக்கூடு போல இருக்கு?'' என்று கேட்டதற்கு, ''உன் புருஷன் அதைக்கூட வாங்க முடியாமல்தானே செத்துப்போனான்...'' என்று ஆத்திரத்துடன் அகல்யா சண்டையிட்டாள். அத்தனை பேர் முன்னிலையில் அம்மா அழுதபோது, அகல்யா அவளைச் சமாதானப்படுத்தவில்லை. அம்மா அழுவது மனதுக்குச் சந்தோஷம் தருவதாகவே உணர்ந்தாள்.

அன்று இரவு, சொந்த வீட்டில் படுத்தபோதும் அவளுக்கு உறக்கம் வரவில்லை. இது இல்லை நாம் நினைத்த வீடு. நமக்கு வாய்த்து இருப்பது இவ்வளவுதான். இந்த வீட்டில் இருந்துகொண்டு நகருக்குள் பெரிய வீடு ஒன்றை வாங்கிவிட வேண்டும் என மனதுக்குள் சமாதானம் சொல்லிக்கொண்டாள். பிறகு, அது நடக்கவே நடக்காது என உணர்ந்தவள் போல அழுதாள்.

''ஏம்மா அழறே?'' என மகள் கேட்டபோதும், அவள் பதில் பேசவில்லை.

மனதுக்குள் அவள் கட்டிய கற்பனை வீடு, அவளைச் சத்தமாகக் கேலி செய்யத் தொடங்கியது. அதை அடக்க வேண்டும் என்பதற்காகவே, பேப்பரில் வரும் விளம்பரங்களைப் பார்த்து வாடகைக்கு வீடு தேடுவதை தனது விருப்பமாக மாற்றிக்கொள்ள ஆரம்பித்தாள்.

வீட்டை வாடகைக்குக் கேட்பது போல சும்மா விசாரித்துச் சுற்றிப் பார்ப்பது, அவளுக்குப் பிடித்தமானதாக இருந்தது. சில சமயம், வீட்டு உரிமையாளர் சாவியை அவளிடமே தந்து, 'நீங்களே பார்த்து வாருங்கள்’ எனும்போது, அவள் அந்த வீடு தன்னுடையது என்பது போலவே உணருவாள்.

காலியாக உள்ள வீட்டின் தரையில் படுத்துக்கொள்வாள் அல்லது பாத்ரூம் குழாயைத் திறந்துவிட்டு போதும் போதுமென முகம் கழுவுவாள். சில வீடுகளில்,  ஹேர்பின்னால் தனது பெயரை எழுதிவைத்துவிட்டு வருவாள். விஸ்தாரமான வீடு, விஸ்தாரமான மனத்தை உருவாக்கிவிடும் என நம்பினாள் அகல்யா. இப்படியாக மாதம் 10, 20 வீடுகளை வெறுமனே பார்த்து வருவதை வழக்கமாக்கிக்கொண்ட பிறகு, அவளது இயல்பு மாறியது.

ஒவ்வொரு வீட்டு உரிமையாளர் தன்னைப் பற்றி கேட்கும்போதும், அவள் புதிதாக ஒரு கதை சொல்ல ஆரம்பித்தாள். தனது கணவர் அமெரிக்காவில் வேலை செய்கிறார். தனக்கு ஒரே பெண் என்று சொல்வாள். சில சமயம், இப்போதுதான் முதன்முறையாக சென்னைக்கு வருகிறோம். இதுவரை திண்டுக்கல்லில் குடியிருந்தோம் எனப் பொய் சொல்வாள். ஒரு வீட்டில், 'நாங்கள் சிங்கப்பூரில் 15 வருடங்கள் வாழ்ந்துவிட்டு, இப்போது சென்னை திரும்பியிருக்கிறோம்’ என்று பொய் சொன்னாள். இந்தப் பொய்கள் அவளுக்குப் பிடித்திருந்தன. ரசித்துச் சொன்ன பொய்கள் எல்லாம், நிஜமாக இருக்கக் கூடாதா என ஆசைப்பட்டாள்.

பிடித்தமான சில வீடுகளை, தனது செல்போன் கேமராவில் புகைப்படம் எடுத்தும் வைத்துக்கொண்டாள். அதை, தனியே இருக்கும்போது பார்த்துக்கொண்டே இருப்பாள். இந்த ரகசியத் தேடுதல், அவளுக்குள் இனம் புரியாத சந்தோஷத்தை உருவாக்கியது.

ப்படித்தான் அன்று மாலையிலும், அசோக் நகரில் இருந்த ஒரு வீட்டை வாடகைக்குக் கேட்க, தேடிச் சென்று காலிங் பெல்லை அழுத்தினாள். நிறைய மாமரங்கள் உள்ள வீடு. ஒரு முதியவர், கதவைத் திறந்து விசாரித்தார். அவள் விளம்பரத்தைப் பற்றி சொன்னதும், வீட்டுக்குள் வரச்சொன்னார்.

தூண்கள் கொண்ட பழைய காலத்து வீடு. உள்ளே ஓர் அறையில் ஆண்கள் சட்டை அணிந்த வயதான ஒரு பெண், படுக்கையில் சோர்வுடன் எழுந்து உட்கார்ந்திருப்பது தெரிந்தது.

''அந்தப் பெண் யாரு?'' என, பலவீனமான குரலில் கேட்டார்.

''வீடு பார்க்க வந்திருக்காங்க'' என்று குரல் கொடுத்தபடியே முதியவர் சாவியைத் தேடிக்கொண்டிருந்தார். படுக்கையில் இருந்த பெண் கிழே இறங்கப் பார்த்துத் தடுமாறுவதைக் கண்டாள் அகல்யா.

கையில் சாவியோடு நின்றிருந்த முதியவர் சொன்னார், ''என் வொய்ஃப்க்குக் கிட்னி பிராப்ளம். 10 வருஷங்களா படுக்கையில் கிடக்குறா. பிள்ளைகள், அமெரிக்கா போயிட்டாங்க. நானும் இவளும்தான் இருக்கோம். அதனாலதான் மாடியை வாடகைக்கு விட்டிருக்கேன். பார்த்துட்டு வாங்க'' என்று சாவியை அவளிடம் தந்தார்.

அகலமான படிக்கட்டுகள். மாடி ஏறிப் போனதும் மாமரத்தின் கிளை, வீட்டு ஜன்னலை உரசிக்கொண்டிருப்பது, சந்தோஷமாக இருந்தது. ஒரு மாவிலையைப் பறித்து முகர்ந்தபடியே அவள் கதவைத் திறந்தாள். ஹாலில் சிறிய மர ஊஞ்சல். அகலமான ஹால். சுவரில் பதிக்கப்பட்ட ஆளுயரக் கண்ணாடி. யார் இங்கே வசித்தார்கள் எனத் தெரியவில்லை. ரசனையாகக் கட்டப்பட்டிருந்தது.

குளியல் அறையைத் திறந்து பார்த்தாள். சந்தன நிறத்தில் பெரிய குளியல் தொட்டி இருந்தது. திரைப்படங்களில்தான் இதுபோன்ற குளியல் தொட்டியில், நுரை வழிய கதாநாயகி குளிப்பதைக் கண்டிருக்கிறாள். குளியல் அறையே ஒரு ஹால் போல பெரிதாக இருந்தது. சமையல் அறைக்குள் போய்ப் பார்த்தாள்.

ஒரு பக்கச் சுவரில் கிருஷ்ணன் வெண்ணெய்ப் பானையை உருட்டுவது போன்ற அழகிய ஓவியம் வரையப்பட்டு இருந்தது. பெரிய மர அலமாரி, உள்ளே இழுப்பறைகள். உட்கார்ந்து சமைக்க வசதியாக உயரமான முக்காலி. கிழக்கு பார்த்த பூஜை அறை. இளம்பச்சை நிற வண்ணம், வீடு முழுவதும் அடிக்கபட்டிருந்தது.

அந்த வீட்டின் ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடும்போது, வாசலில் கையில் ஒரு காபி டம்ளருடன் முதியவர் நிற்பது தெரிந்தது. அவள் ஊஞ்சல் ஆடுவதை நிறுத்திவிட்டு, கூச்சத்துடன் எழுந்துகொண்டபோது முதியவர் சொன்னார், ''நல்லா ஆடுங்க... என்ன கூச்சம்? காபி எடுத்துக்கோங்க'' என்றபடி சிரித்தார்.

''வீடு அழகா இருக்கு'' என்றாள் அகல்யா.

''டான்சர் ரேவதி சுப்ரமணியம் குடியிருந்தாங்க. இப்போ பெசன்ட் நகர்ல வீடு கட்டிக்கிட்டுப் போயிட்டாங்க. உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்... எங்க வேலை?'' என்று கேட்டார்.

என்ன பொய் சொல்வது என அகல்யா யோசிக்கத் தொடங்கினாள். பிறகு சொன்னாள், ''கனரா வங்கில வேலை பார்க்கிறேன். ஹஸ்பண்ட் மதுரையில் இன்ஜினீயர். ஒரே பையன், மெடிக்கல் படிக்கிறான்.''

''மாச வாடகை 20,000. அட்வான்ஸ் ரெண்டு லட்சம்'' என்றார் முதியவர்.

''என்னாலே உடனே அட்வான்ஸ் தர முடியாது. ஹஸ்பண்ட் அடுத்த மாசம் அஞ்சாம் தேதிதான் வர்றார். டோக்கன் அட்வான்ஸ் வேணும்னா தர்றேன்'' என்றாள்.

''அதுக்கு என்ன பரவாயில்லை. உங்களை எனக்குப் பிடிச்சுப்போச்சு. வீடு பிடிச்சிருக்கா?'' என்றார்.

சந்தோஷத்துடன் தலையாட்டினாள் அகல்யா.

''டோக்கன் அட்வான்ஸ் குடுத்துட்டு, சாவி வாங்கிக்கோங்க'' என்றார் முதியவர்.

தலையாட்டியபடியே வெளியே வந்தாள்.

p74b.jpgந்த வீட்டை எப்படியாவது வாடகைக்கு எடுத்துவிட வேண்டும் என மனம் அடித்துக்கொண்டது. 'எதற்காக அந்த வீடு, யார் குடியிருப்பது?’ என்று அவளுக்குக் குழப்பமாக இருந்தது. அன்று இரவு முழுவதும் அதைப் பற்றியே யோசித்தாள்.

மறுநாள் வங்கியில் இருந்து 20,000 பணத்தை எடுத்துக்கொண்டு, அந்த வீட்டுக்குப் போய் டோக்கன் அட்வான்ஸ் கொடுத்தாள்.

முதியவர், சாவியை அவளிடம் தந்து, ''வீட்டுச் சாமான்கள் எப்போ வருது?'' எனக் கேட்டார்.

''10 நாள் ஆகும்'' என்றாள் அகல்யா.

''மாடிக்குப் போறதுக்கு தனி கேட் இருக்கு. எங்களாலே உங்களுக்கு ஒரு தொல்லையும் வராது. ஏதாவது தேவைனா, கூச்சப்படாமல் கேளுங்க'' என்றார்.

வீட்டுச் சாவியைக் கையில் வாங்கியபோது, 'இது என்ன பைத்தியக்காரத்தனம்!’ என்று தோன்றியது. சாவியோடு மாடிக்குப் போனபோது, இது தன்னுடைய வீடு என சந்தோஷமாக இருந்தது.

அவள் ஆசை தீர ஊஞ்சல் ஆடினாள். பிறகு அருகில் உள்ள கடைக்குப் போய், ஒரேயொரு பாய் மட்டும் வாங்கி வந்தாள். ஹாலில் பாயைப் போட்டு படுத்துக்கொண்டாள். இது தனது வீடு. தனக்கு மட்டுமேயான வீடு. இப்படி ஒரு வீடு தனக்கு இருப்பது யாருக்கும் தெரியக் கூடாது. இந்த வீட்டில் தன்னோடு யாரும் குடியிருக்கப்போவது இல்லை. இங்கே தான் மட்டுமே வாழப்போகிறேன் என அவளுக்குச் சந்தோஷமாக இருந்தது.

அன்று முதல், அவள் அலுவலகம் விட்டதும் நேராக இந்த வீட்டுக்கு வந்துவிடுவாள். ஒரு பையில் மாற்று உடைகள் சிலவற்றைக் கொண்டுவந்து வைத்துக்கொண்டாள். இரண்டு ஸ்பூன், ஒரு ஃப்ளாஸ்க், டம்ளர், பழம் வெட்டும் கத்தி ஒன்று... என அவசியமான சில பொருட்களை மட்டும் கொண்டுவந்து வைத்துக்கொண்டாள்.

வீடு, பொருட்களால் நிரப்பப்படாமல் இருப்பது சந்தோஷம் தருவதாக இருந்தது. ஆப்பிள் வாங்கி வந்து, சிறிய துண்டுகளாக்கி வைத்துக்கொண்டு பாட்டு கேட்டபடியே சாப்பிடுவாள். தனி ஆளாகச் சோழிகளை உருட்டிப்போட்டு தாயம் ஆடுவாள். சிறிய மண்பானை வாங்கிவைத்து, அதில் தண்ணீர் குடித்தாள். பாக்கெட் ரேடியோ வாங்கிவந்து பாட்டு கேட்டாள்.

ஒருநாள், குளியல் தொட்டியில் சோப்பு நுரைகளை நிறைத்து அதில் ஆசை தீரக் குளித்தாள். கண்ணாடியில் தன்னைப் பார்த்தபோது, வயது கரைந்துபோய்விட்டது போல அவளுக்குத் தோன்றியது. வீட்டுக்குத் தெரியாமல், தனியாக ஒரு வீடு எடுத்துக்கொண்டு ரகசியமாக வாழ்வது அவளுக்குச் சந்தோஷமாக இருந்தது. அதே நேரம், எங்கே கண்டுபிடித்துவிடுவார்களோ என பயமாகவும் இருந்தது.

வீட்டில் யாருமே அவளது மாற்றத்தைக் கண்டுகொள்ளவில்லை. ஞாயிறு அன்றுகூட தனக்கு ஆபீஸ் வேலை இருக்கிறது என்று சொல்லி, தன் வீட்டுக்குப் போய்ப் புழங்கத் தொடங்கினாள்.

ருநாள், அலுவலகம்விட்டு வரும்போது சந்தன மணமுடைய ஊதுவத்திக் கட்டு ஒன்றை வாங்கிக்கொண்டு போனாள். வீட்டில் ஊதுவத்திக் கொளுத்தி வைத்துவிட்டு, ஊஞ்சலில் சுருண்டு படுத்துக்கொண்டாள். அந்த வாசனை வீடு முழுவதும் பரவி நிரம்பியது. எவ்வளவு அற்புதமான சுகந்தம் என நுகர்ந்தபடியே அவள் படுத்துக்கிடந்தாள். தனக்கு, புதிதாகச் சிறகு முளைத்திருப்பது போல அவள் சந்தோஷம் கொண்டாள். அன்றைக்கு, சந்தோஷத்தில் அழ வேண்டும் போல் இருந்தது.

20 நாட்கள், அவள் தன் இஷ்டம் போல அந்த வீட்டை ஆண்டாள். சிறுமியைப் போல வீட்டில் உருண்டு படுத்து உறங்கினாள். அதிக நேரம், தனக்கான வீட்டில் கழிக்க வேண்டும் என்பதற்காகவே பொய் காரணங்களைச் சொல்லத் தொடங்கினாள்.

தனக்கென அவள் உருவாக்கிக்கொண்ட வீட்டுக்கு, ஒருநாள் தனது மகளை மட்டும் அழைத்துக்கொண்டு வந்தாள் அகல்யா.

''யார் வீடும்மா இது?'' எனப் புரியாமல் கேட்டாள் சுபத்ரா.

''என் வீடு'' என்றாள் அகல்யா.

''நாம இங்கே மாறப்போறோமா?'' எனக் கேட்டாள் சுபத்ரா.

''இல்லை. எனக்குனு ஒரு வீடு வேணும்னு தோணுச்சு. அதான் பிடிச்சிருக்கேன்'' என்றாள் அகல்யா.

''எதுக்கு?'' என்றாள் சுபத்ரா.

''அது உனக்கு இப்போ புரியாது. வீடு நல்லா இருக்கா?'' எனக் கேட்டாள் அகல்யா.

அம்மா ஏதோ தப்பு செய்கிறாள் என உணர்ந்தவளைப் போல முறைத்தபடியே, ''உனக்கு எதுக்கு வீடு... இங்கே என்ன செய்யப்போறே?'' எனக் கோபத்துடன் கேட்டாள் சுபத்ரா.

''ஒண்ணும் பண்ண மாட்டேன். ஆனா, இது என் வீடு. நான் மட்டும் இருக்கிற வீடு. அந்த நினைப்பு தர்ற சந்தோஷத்தைச் சொல்லிப் புரியவைக்க முடியாது'' என்றாள் அகல்யா.

''நான் கிளம்பறேன்'' என, படி இறங்கினாள் சுபத்ரா.

தனது ரத்தம் என்றபோதும் அப்பாவின் குணம்தான் அவளுக்கும் இருக்கிறது என்ற நினைப்போடு, ''உங்க அப்பாகிட்ட சொல்லாதே'' என்றாள் அகல்யா.

சுபத்ரா, பதில் சொல்லவில்லை!

ன்று இரவு அகல்யாவின் கணவன் ஆங்காரமான குரலில் கேட்டான், ''உனக்கு என்ன பைத்தியமாடி? எவ்வளவு திமிர் இருந்தா தனியா வாடகைக்கு வீடு பிடிச்சிருப்பே? தனியா இருக்கியா... இல்லை கூட எவனாவது இருக்கானா?''

''அது ஆம்பளைங்க பழக்கம். நான் தனியாத்தான் இருக்கேன்'' என்றாள் அகல்யா.

''என்னடி... சம்பாதிக்கிறோங்கிற திமிரா? இந்த வீட்ல உனக்கு என்னடி குறைச்சல்?'' எனக் கேட்டான்.

''எனக்குனு ஒரு வீடு வேணும். அதை என்னாலே கட்ட முடியலை. இது உங்க வீடு. இதுல நான் ஒரு வேலைக்காரி, சமையல்காரி அவ்வளவுதான்'' என்றாள்.

p74(1).jpgபளார் என அவளுக்கு ஓர் அறை விழுந்தது. காதில் கேட்கக் கூசும் வசைகளுடன் கத்திக்கொண்டிருந்தான் அகல்யாவின் கணவன்.

பதிலுக்குச் சண்டையிட முடியாமல் விம்மியபடியே சொன்னாள், ''ஒரு வீடுகூட நான் நினைச்சபடி அமைச்சுக்க முடியலே. இப்பவே எனக்கு வயசு 44. பாதி வாழ்க்கை முடிஞ்சுபோச்சு. எனக்குனு நான் எதையும் ஆசைப்படக் கூடாதா... அது தப்பா?''

''எப்போ நீ புக்கு படிக்க ஆரம்பிச்சியோ, அப்பவே இப்படிப் புத்தி கெட்டுப் போகத்தான்டி செய்யும். உனக்கு எதுக்குடி புருஷன், பிள்ளைகள்?'' எனக் கத்தினான். பிள்ளைகளும் சேர்ந்துகொண்டு அவளைத் திட்டினார்கள்.

''முதல்ல அந்த வீட்டைக் காலி பண்ணிட்டு வந்தாத்தான், இந்த வீட்ல இடம். இல்லே... வெளியே போ'' என அவளது துணிகளை அள்ளி வெளியே வீசினான் கணவன்.

வீட்டில் அவளுக்காக யாரும் பரிந்து பேசவில்லை. அகல்யா, தான் வாடகைக்கு எடுத்திருந்த வீட்டுச் சாவியைத் தூக்கி எறிந்தாள்.

ன்றிரவு அவள் கணவன், வாடகைக்கு வீடு கொடுத்த முதியவரிடம் தரக்குறைவாகப் பேசி சண்டையிட்டு, அகல்யா கொடுத்த அட்வான்ஸ் பணத்தைத் திரும்ப வாங்கிக்கொண்டு வந்திருந்தான்.

''அம்மாவுக்கு, மனநலம் கெட்டுவிட்டது. இனி வேலைக்குப் போக வேண்டாம்'' என்றாள் மகள்.

மூத்த மகன், அம்மாவை ''லூஸு'' எனத் திட்டினான்.

படுக்கையில் சுருண்டபடியே அகல்யா அழுதாள். எதை எதையோ நினைத்துக்கொண்டு அழுதாள்.

10 நாட்களுக்குப் பிறகு, அவள் சமாதானம் அடைந்து அலுவலகம் கிளம்பியபோது, அவளது ஸ்கூட்டியை விற்றிருந்தான் கணவன்.

''பஸ்ல போயிட்டு வந்தாத்தான் குடும்பக் கஷ்டம்னா என்னன்னு தெரியும்'' என்றான்.

பஸ் பிடித்துப் போய் வரத் தொடங்கிய அகல்யா, திடீரென ஒருநாள் மாலை, தான் வாடகைக்குப் பிடித்த வீட்டைப் பார்ப்பதற்காக ஆட்டோவில் போய் இறங்கினாள். யாரோ அந்த வீட்டுக்குக் குடிவந்திருந்தார்கள். குழந்தைகளின் ஆடைகள் கொடியில் உலர்ந்துகொண்டு இருந்தன. வெளியே நின்றபடியே அந்த வீட்டை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அந்த வீட்டில் இருந்து வாசனை கசிந்து வந்துகொண்டிருந்தது. அது அவள் வாங்கி வைத்த சந்தன மணம் கமழும் ஊதுவத்தி. அந்த வாசனை அவளுக்குள் ஆழமான பெருமூச்சையும் அழுகையையும் ஏற்படுத்தியது. கர்சீஃப்பால் கண்களைத் துடைத்தபடியே தெருவில் நடக்க ஆரம்பித்தாள்.

சாவு வீட்டுக்குப் போய்விட்டுத் திரும்பி வருவதுபோல் இருந்தது அவளது நடை!

http://www.vikatan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.