Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெரரிஸ்ட்

Featured Replies

டெரரிஸ்ட் - சிறுகதை

 
 
ஷான் கருப்பசாமி - ஓவியங்கள்: கோ.ராமமூர்த்தி

 

20 வருடத்துக்கு முன்பான கல்லூரி வாழ்க்கை, வேறொரு பிறவியைப்போல இருக்கிறது. முற்பிறவியிலிருந்து யாரையாவது மீண்டும் சந்திக்கும்போது, நெற்றியைச் சுருக்கி யோசிக்க வேண்டியிருக்கிறது அல்லது விழிகளை விரித்து ஆச்சர்யப்பட வேண்டியிருக்கிறது. சதையைக் கூட்டியோ, சிகையை உதிர்த்தோ அல்லது வெளுத்தோ அவர்கள்மீது விளையாடியிருக்கும் காலம். வெங்கடேஷும் அப்படித்தான் இரண்டு மடங்கு குறுக்கில் வளர்ந்திருந்தான். பாதி முடியை இழந்திருந்தான். கல்லூரியில் எங்களுக்கு ஜூனியர். வெவ்வேறு துறை. ஆனால், ஹைதராபாத்தில் மூன்று நட்சத்திர விடுதியின் வரவேற்புப் பகுதியில் தூரத்தில் பார்த்தபோதே வெங்கடேஷை எனக்கு அடையாளம் தெரிந்துவிட்டது.

இந்த அற்புத நினைவாற்றலுக்குக் காரணமானவன் ரமேஷ். அவனுடைய ஒன்றுவிட்ட சகோதரன்; ஹாஸ்டலில் எனது அறைத் தோழன். ஆனால், `ரமேஷ்’ என்றால் கல்லூரியில் யாருக்கும் தெரியாது. அவனுக்கு இடப்பட்டிருந்த பட்டப்பெயர் `டெரரிஸ்ட்’. சுருக்கமாக `டெரர்’. நான் குமரேசன்.

48p1_1530532963.jpg

டெரர் நிலக்கரிக்கறுப்பு. நெடுநெடுவென்று உயரம். உயரத்துக்குத் தகுந்த உடல். ஒரே வகுப்புதான் என்றாலும் அவன் அருகில் நாங்கள் கொஞ்சம் பொடிசாகத்தான் தெரிவோம். சிவந்த கண்கள். வாயில் எப்போதும் பான்பராக் இருக்கும். அந்த வாசம் அவனுடைய வாசமாகவே மாறிவிட்டிருந்தது. முகத்தில் அலட்சியமான சிரிப்பு. கல்லூரியிலும் ஹாஸ்டலிலும் இருக்கும் எந்த விதியையும் மதிக்காத அவனது நடவடிக்கைகளால் அவனுக்கு `டெரரிஸ்ட்’ என்ற பெயர் நிலைத்துவிட்டது. அவன் பூர்வீகம் தமிழ்தான். தெலுங்கு வாடையுடன் பேசுவான்.

அது 90-களின் முற்பகுதி. எங்கள் அறையில் அவனையும் சேர்த்து ஆறு பேர். நாங்கள், இன்ஜினீயர் ஆவதை வாழ்வின் குறிக்கோளாக வைத்திருந்தவர்கள். சரியான நேரத்தில் எழுந்தோம், குளித்தோம், மணி அடிப்பதற்குள் வகுப்பில் இருந்தோம். பயந்துகொண்டே சைட் அடித்தோம். இரவு உணவுக்கு நாள் தவறாமல் ஹாஸ்டல் வந்தோம். பேராசிரியர்களைக் கிண்டல்செய்து, மறைத்துவைத்து செக்ஸ் புத்தகம் படித்து, அளவாக அரட்டை யடித்துவிட்டு உறங்கினோம். பணம் கேட்டு அப்பா அம்மாவுக்குக் கடிதம் எழுதினோம். ஆனால் டெரர் அப்படியல்ல.

நாங்கள் கல்லூரிக்குக் கிளம்பும்போதும் அசையாமல் தூங்கிக்கொண்டிருப்பான். வகுப்புக்கெல்லாம் வரவே மாட்டான். எப்போதாவது தோன்றினால், கலைந்த தலையுடன் கசங்கிய உடையுடன் தாமதமாக வந்து வாசலில் நிற்பான். அன்றும் பாதியிலேயே எழுந்து போய்விடுவான். இரவு நாங்கள் அறைக்குத் திரும்பிய பிறகும் பெரும்பாலும் டெரர் வந்திருக்க மாட்டான். அவன் கட்டில் காலியாகவே இருக்கும். ஊருக்குள் அறை எடுத்து வசிக்கும் சீனியர் மாணவர்களுடன் நெருக்கமாகி யிருந்தான். லாரிப் பட்டறை வைத்திருக்கும் உள்ளூர் ஆள்களுடனான பழக்கம்வேறு. தினமும் யாராவது அவனுக்கென்று கிடைப்பார்கள். அவர்களோடு சேர்ந்து நன்றாகக் குடித்துவிட்டு அறைக்கு வருவான்.

போதை மீறியிருந்தால் ``டேய்... குமரேசா...” எனக் கட்டிப்பிடித்து, கன்னத்தில் முத்தமிடுவான். எனக்கோ பற்றிக்கொண்டுவரும். கோபமாக அவனை உதறிவிட்டு என்னுடைய கட்டிலுக்குத் திரும்பிவிடுவேன். `அந்த அறையை விட்டு வேறு அறைக்கு மாறிவிடலாம்’ எனப் பல நேரம் தோன்றும். ஆனால் சந்திரன், கோபி, செல்வம் என எந்த வம்புதும்புக்கும் போகாத எனக்குப் பிடித்த நண்பர்களும் இங்குதான் இருந்தார்கள்.

எங்கள் வீடுகளில் `வாழ்க்கையில் முன்னேற, படிப்பு மட்டும்தான் ஒரே வழி!’ என்று மண்டைக்குள் ஆணி அடித்து அனுப்பியிருந்தார்கள். டெரர் போன்ற ஒருவனுடன் பழகுகிறோம் எனத் தெரிந்தாலே, வண்டி கட்டிக்கொண்டு வந்துவிடுவார்கள். எனவே, டெரரை எங்கள் அறையிலிருந்து மொத்தமாக வெளியேற்றுவது எனத் திட்டமிட்டோம்.

நேரில் சென்று புகார் செய்ய தைரியமில்லாமல் ரகசியமாக வார்டனுக்கு மொட்டைக்கடிதம் ஒன்றை எழுதினோம். சந்திரனும் செல்வமும் டெரர் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார்கள். ஆனாலும் அவர்கள் மறுப்பு சொல்லவில்லை. கையெழுத்து தெரியக் கூடாதென்று ஆளுக்கு ஒரு வார்த்தையாக நானும் கோபியும் எழுதி, அந்தக் கடிதத்தைத் தயார்செய்தோம். அதில் டெரர் தனது அறையிலேயே குடிப்பதாகவும் சிகரெட் புகைப்பதாகவும், அவன் அங்கே இருப்பது மற்ற மாணவர்களுக்குத் தொந்தரவாக இருப்பதாகவும் எழுதினோம். கல்லூரியிலிருந்து பத்துக் கிலோமீட்டர் தொலைவில் இருந்த நகரத்துக்கு பஸ் பிடித்துச் சென்று தபால்பெட்டியில் போட்டுவிட்டு வந்து காத்திருந்தோம்.

48p2_1530533008.jpg

ஒரு வாரம் எதுவும் நடக்கவில்லை. அதற்குப் பிறகும் எதுவும் நடக்காது என நாங்கள் நம்பிக்கை இழந்திருந்தபோது, ஒரு மாலை வேளையில் வார்டனிடமிருந்து டெரருக்கு அழைப்பு வந்தது. அபூர்வமாக அப்போது அவன் அறையில்வேறு இருந்தான். டெரர் வெளியேறிப் போனதும் நானும் கோபியும் மானசீகமாகக் கைகுலுக்கிக்கொண்டோம். தேர்வு முடிவுக்குக் காத்திருப்பவர்களைப்போல் காத்திருந்தோம். நீண்ட நேரமாகியும் டெரர் திரும்பி வரவேயில்லை. பிறகு, களைத்துப்போய்த் தூங்கிவிட்டோம்.

நள்ளிரவில் கதவு தட்டப்பட்டது. கதவுக்கு அருகில் இருந்த நான்தான் எழுந்து வழக்கம்போல் கதவைத் திறந்தேன். அவன் வழக்கம்போல் குடித்திருந்தான். அமைதியாக உள்ளே வந்து பேன்ட்டைக் கழற்றி லுங்கிக்கு மாறினான். கட்டிலில் ஏறிப் படுத்துக்கொண்டான்.

சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டு, தைரியத்தை வரவழைத்துக் கேட்டேன்... ``வார்டன் என்ன சொன்னாரு?”

டெரரிடமிருந்து களுக்கென்ற சிரிப்பு மட்டும் வந்தது. வேறு பதில் இல்லை. சிறிது நேரம் சென்று நான் தலையைத் தூக்கிப் பார்த்தபோது குப்புறப்படுத்து ஒரு கையைக் கட்டிலுக்கு வெளியே தொங்கவிட்டு உறங்கிப்போயிருந்தான்.

மறுநாள் காலை, அறையில் ஒரே அமளி. எப்போதும் விடியற்காலை யிலேயே எழுந்து மெஸ்ஸின் முதல் பந்தியிலேயே சாப்பிட்டு வந்துவிடும் செல்வம்தான் நிறைய செய்திகளோடு வந்திருந்தான்.

``வார்டனை ஹாஸ்டலை விட்டு அனுப்பிட்டாங்களாம்டா!”

அவனைச் சுற்றி, சிறு கூட்டம் கூடியிருந்தது.

``ஹாஸ்டலுக்குப் பின்னால பாறை பாறையா சின்ன மலை இருக்கில்ல... அது மேல குடிச்சுட்டு மட்டையாகிக் கிடந்தாராம். ராத்திரி யாரோ ஸ்டூடன்ட்டைக் கூட்டிக்கிட்டு அங்கே குடிக்கப் போயிருக்காருன்னு சொல்றாங்க. கரஸ்பாண்டென்ட் வரைக்கும் விஷயம் போய், அவரை வார்டன் போஸ்ட்ல இருந்து தூக்கிட்டாங்களாம். விடியற்காலையி லேயே பொட்டி படுக்கை எல்லாம் எடுத்துட்டுப் போகச் சொல்லிட்டாங்க ளாம். அநேகமா லெக்சரர் வேலையும் போயிரும்னு சொல்றாங்க.”

டெரர் இன்னும் தூங்கிக்கொண்டுதான் இருந்தான். அதன்பிறகு, நக்ஸை வெளியேற்ற நாங்கள் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

திடீரென ஒருநாள் டெரர் சுத்தமாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டையிட்டுக்கொண்டு வகுப்பின் வாசலில் வந்து நின்றான். வாயில் பான்பராக் இல்லை. டெரர் அன்று முழுவதும் வகுப்பில் இருந்தான். பாடங்களைக் கவனித்தான். மாலை எங்களோடு ஒன்றாக ஹாஸ்டலுக்குத் திரும்பினான். ஹாஸ்டலை அடைந்தபோதுதான் எங்களுக்குக் காரணமே விளங்கியது. அவன் அப்பா ஹாஸ்டல் அறையில் கடுகடுவென அமர்ந்திருந்தார். டெரர், அவர் எதிரில் பேசவே பயந்தான். அவர் ஒரு டாக்டர். அறுவைசிகிச்சை நிபுணர்வேறு. தமிழர்தான் என்றாலும் ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர். அவர் மனைவியும் ஒரு டாக்டர்.

``இவனோட அக்கா, அண்ணா ரெண்டு பேருமே மெடிசின்தான். எங்க வீட்டுல இவன் ஒருத்தன்தான் சரியா மார்க் எடுக்காம இப்படி அழிஞ்சுகிட்டிருக்கான். வேற வழியில்லாம இந்த யூஸ்லெஸ் இன்ஜினீயரிங் படிக்கவேண்டிய தாகிடுச்சு. அதுவும் பேமென்ட் கோட்டாவுல. சொந்தத்துக்குள்ள மானம் போச்சு!”

பரோட்டாவைப் பிய்த்துப் போட்டபடி `பொறியியல் படிப்பு’ தனது குடும்பத்துக்கு எவ்வளவு அவமானம் என்று அவர் சொன்னபோது, அதை ஏதோ வாழ்வின் சாதனையாக நினைத்துக்கொண்டிருந்த நாங்கள், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.

டெரர் இதற்கெல்லாம் தொடர்பில்லா தவன்போல அமைதியாகச் சாப்பிட்டுக்கொண்டி ருந்தான்.

அவரை பஸ் ஏற்றிவிடும் முன், அவருடைய கிளினிக் தொலைபேசி எண்ணை எழுதி என்னிடம் கொடுத்தார். நான் அந்த எண்ணைப் புன்னகையுடன் பத்திரப்படுத்துவதை டெரர் ஓரக்கண்களால் கவனித்தான்.

``நல்ல பசங்களா இருக்கீங்க... ஒழுக்கமாப் படிங்க. இந்த ராஸ்கல் ஏதாவது ஏடாகூடம் பண்ணினா எனக்கு போன் பண்ணுங்க” - சொல்லிவிட்டு டெரர் இருந்த பக்கம்கூடத் திரும்பாமல் கிளம்பிவிட்டார். டெரர் அறைக்கு வந்ததும் செய்த முதல் வேலை, என் கையில் இருந்த அந்தத் துண்டுச்சீட்டைக் கிழித்துப்போட்டதுதான்.

48p3_1530533026.jpg

நாங்கள், இரண்டாம் ஆண்டுக்கு உயர்ந்து சீனியர்களானோம். எங்கள் கல்லூரி மாநில எல்லையில் இருந்ததால் ஆந்திராவிலிருந்து மாணவர்கள் வருவார்கள். தமிழ் சீனியர்கள் தெலுங்கு மாணவர்களை ராகிங் செய்யக் கூடாது. அதேபோல அவர்கள் யாரும் தமிழ் மாணவர்களைத் தொட்டுவிட முடியாது. இது எழுதப்படாத ஒப்பந்தம். ஆனால், அந்த ஒப்பந்தத்தை மீறி ராகிங் செய்வதும் அதைத் தொடர்ந்து அடிதடிகளும் ஆண்டுதோறும் நடக்கும்.

இந்தச் சூழலில் மொழிப் பாகுபாடு இல்லாமல் இரண்டு பக்கங்களிலும் டெரருக்குப் பயந்தார்கள். ஆனால், டெரர் யாரையும் ராகிங் செய்தோ மிரட்டியோ நாங்கள் பார்த்ததில்லை.

கோபி போன்ற எங்கள் வகுப்பில் யாராலும் மதிக்கப்படாத மொக்கை ஆசாமிகள்தான் படுபயங்கரமாக ராகிங் செய்பவர்களாக இருந்தார்கள். அவர்களின் தாழ்வு மனப்பான்மையே வாய்ப்பு கிடைத்ததும் இப்படி வேறு ஓர் ஆவேச முகமாக வெளிப்படுகிறது என்று பின்னால் புரிந்தது.
அன்று கோபியை வகுப்பில் எதற்கோ அனைவரும் சேர்ந்து பயங்கரமாக ஓட்டிவிட்டார்கள். அந்தக் கடுப்பில் ஹாஸ்டலுக்கு வந்தவன் கண்ணில் தனியாக ஆந்திர மாணவன் ஒருவன் சிக்கிக்கொண்டான். ஊதினால் உடைந்துவிடுவதுபோல் இருந்த அவனை, கொத்தாகப் பிடித்து அறைக்கு அழைத்து வந்துவிட்டான் கோபி. டெரர், அப்போது அறையில் இல்லை.

``வாட் இஸ் யுவர் நேம்?”

``வெங்கடேஷ் சார்.”

``வென் யூ ஜாயின்?”

``யெஸ்டர்டே சார்.”

ஆரம்பக்கட்ட விசாரணையில், வெங்கடேஷுக்கு சுத்தமாகத் தமிழ் வராது என்பது அவனுக்குப் புரிந்தது. பார்ப்பதற்கு நோஞ்சான்போல் இருந்தாலும், கோபியின் துரதிர்ஷ்டம், அவன் மிகுந்த துணிச்சல்காரனாக இருந்தான். அப்படியானவர்களை ராகிங் செய்தால் அவமானம்தான் மிஞ்சும். புலி வாலைப் பிடித்த கதை. நாங்கள் யாரும் அதில் கலந்துகொள்ளவில்லை.

``சரி... பேன்டைக் கழட்டுடா.”

அவனுக்குப் புரியவில்லை. அமைதியாக நின்றான்.

``ரிமூவ் யுவர் பேன்ட் மேன்...” கோபி கர்ஜித்தான்.

``ஸாரி சார்... நோ!” என்று உறுதியாகச் சொல்லிவிட்டு வெங்கடேஷ் அமைதியாக நின்றான். அதன்பிறகு கோபி சொன்ன எதையுமே அவன் செய்யவில்லை. எங்கோ பார்த்தபடி அலட்சியமாக நின்றான். தெலுங்கு சீனியர்கள் சொல்லிக்கொடுத்திருக்க வேண்டும். பத்து நிமிடம் இப்படியே கடந்தது. கோபி பொறுமையிழந்தான்.

பொளீரென விழுந்த திடீர் அறையில் வெங்கடேஷ் கதிகலங்கிப்போனான். கண்களில் நீர் கட்டி நின்றது. சிவந்த கன்னத்தில் விரல்கள் பதிந்த தடம்.

அவன் கண்ணீருடன் தெலுங்கில் ஏதோ சொன்னான். கேட்டுக்கொண்டி ருந்த எங்களுக்கு அவன் ஏதோ திட்டுகிறான் எனப் புரிந்தது. செல்வம் சும்மா இருக்காமல் சிரித்துவிட்டான்.

``இங்கிலீஷ்ல சொல்றா கொல்டி!”

அவன் மறுபடி ஏதோ சொல்ல, கோபிக்கு என்ன புரிந்ததென்று தெரியவில்லை, அவன் மீது பாய்ந்து முகத்திலும் வயிற்றிலும் தாறுமாறாகத் தாக்கத் தொடங்கினான். விவகாரம் கையை மீறிப் போவதை உணர்ந்து கோபியைப் பிடித்து நாங்கள் இழுப்பதற்குள் வெங்கடேஷ் வயிற்றைப் பிடித்தபடி தரையில் சுருண்டிருந்தான்.

``டேய் கோபி... பைத்தியமாடா உனக்கு?” என்றபடி அந்தப் பையனைப் பார்த்தேன். பேச்சு மூச்சு இல்லை. பாட்டிலில் இருந்து தண்ணீரை முகத்தில் அடித்தபோது முகத்தை லேசாகச் சுருக்கினான். ஆனால் விழிக்கவில்லை. வாய் ஒரு பக்கம் கோணி, கண்கள் செருகியிருந்தன. எழுப்பி நிறுத்தினால் மறுபடி தொய்ந்து விழுந்தான். முகம் வீங்கியிருந்தது.

எங்கள் அனைவருக்கும் கால்கள் நடுங்கத் தொடங்கின. கோபிக்கு இப்போது மொத்தமும் தெளிந்திருந்தது. `அந்நியன்’ அம்பியாக மாறி மயக்கத்தில் இருந்த அந்தப் பையனிடம் கெஞ்சிக்கொண்டிருந்தான்.

``டேய்... ஸாரிடா! எந்திரிடா. வெங்கடேஷ்... நீ நடிக்கிறேதானே? இங்க பாரு... நாம ரெண்டு பேரும் இனிமே ஃப்ரெண்ட்ஸ், ஓகே... உன்னை யாரும் ராகிங் பண்ணாம நான் பார்த்துக்கிறேன். ப்ளீஸ்டா. டேய்... ஏதாவது பண்ணுங்கடா!”

``உடனே டாக்டர்கிட்ட காட்டிடு வோம்டா. ஏதாவது ஆகிடுச்சுன்னா ஜெயில்தான்” என்றான் சந்திரன்.

செல்வம் ஓடிச்சென்று ஒரு ஆட்டோ பிடித்து வந்தான். எங்கள் அறை ஹாஸ்டலின் பின்வாசலுக்கு அருகிலேயே இருந்ததால் இருளைப் பயன்படுத்தி யாரும் கவனிக்கும் முன் அவனைக் கைத்தாங்கலாக உள்ளே ஏற்றிவிட்டோம். இடம் இல்லாததால் சந்திரனை ஹாஸ்டலிலேயே விட்டுவிட்டுக் கிளம்பினோம்.

``என்னாச்சு தம்பி?” என்றார் டிரை வர் ஆட்டோவைக் கிளப்பியபடியே.

``நாலு நாளா ஃபீவர்ணே... அதான்” அந்த நடுக்கத்திலும் பொய் சரளமாக வந்தது.

கல்லூரியிலிருந்து ஐந்து கிலோமீட்டரில் ஊருக்குள் ஒரு நர்ஸிங் ஹோமில் `விபத்து’ என்று சொல்லி, அவனை அட்மிட் செய்தோம். அந்த டாக்டர் உள்ளூர் இளைஞர். ஆரம்பக்கட்ட சிகிச்சை செய்து அவனுக்கு சலைன் ஏற்ற ஆரம்பித்து விட்டு, எங்களை அறைக்கு வெளியே சந்தித்தார். மிகவும் கோபமாக இருந்தார்.

``என்ன ஆச்சு இவனுக்கு?”

``படியில உருண்டு விழுந்துட்டான் டாக்டர்” என்றான் கோபி தரையைப் பார்த்தபடி. டாக்டரின் சிவந்த முகம் மேலும் சிவந்தது.

48p4_1530533042.jpg

``ராஸ்கல்ஸ். என்னைப் பார்த்தா லூஸு மாதிரி இருக்கா உங்களுக்கு? அவன் மூஞ்சி முழுக்க வீக்கம். கன்னத்துல விரல் பதிஞ்சிருக்கு. அடிச்சுக் கொண்டுவந்து ஆஸ்பத்திரியில சேர்த்திருக்கீங்க. அவனுக்கு எபிலெப்சியா வேற இருக்கு. வலிப்பு வந்திருக்கு... விட்டிருந்தா செத்திருப்பான். ஐ யம் கோயிங் டு த போலீஸ்.”

கோபிக்கு சப்த நாடிகளும் ஒடுங்கிவிட்டன.

``டாக்டர்... ப்ளீஸ் டாக்டர்... வீட்டுக்குத் தெரிஞ்சா, என் அப்பா என்னைக் கொன்னே போட்டுடுவாரு.”

``அதெல்லாம் ஒரு சின்னப்  பையனை மாட்டை அடிக்கிற மாதிரி அடிக்கிறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும். சொல்லு, உன் பேரு, விவரம் எல்லாம் சொல்லு.”

எனக்கும் செல்வத்துக்கும் எங்கள் வீடு நினைவுக்குவந்தது. ஏதாவது நடந்து கல்லூரியிலிருந்து தூக்கிவிட்டால், யோசிக்காமல் எங்களைக் கொன்றுவிடுவார்கள். என்ன செய்வதெனத் தெரியாமல் கையைப் பிசைந்து நின்று கொண்டிருந்த வேளையில், ஒரு புயலைப்போல டெரர் உள்ளே நுழைந்தான். அப்படியோர் அசாதாரணமான சூழலில் அவனைப் பார்த்ததும் புதிரான ஒரு நிம்மதி வந்தது. நேராக அறைக்குள் சென்று வெங்கடேஷைப் பார்த்துவிட்டு வந்தான்.

அவனிடம் ஏதோ பேச நான் வாயெடுப்பதற்குள் நேராக கோபியை நெருங்கியவன், அவன் கன்னத்தில் விட்டான் ஓர் அறை. அந்த அறையின் வேகத்தில் கோபி தரையில் விழுந்துவிட்டான். மேலும் அவனை மிதிக்கப் போனவனை டாக்டர் இழுத்துப் பிடித்தார்.

``ஏய், யாருப்பா நீ... எதுக்கு இவனை அடிக்கிறே? ஸ்டாப் இட்!”

எங்களுக்கு வெலவெலத்துப்போனது. தெலுங்கில் ஏதேதோ கத்திக்கொண்டிருந்தான் டெரர்.

``கேன் யூ ஸ்பீக் இன் டமில்?”

``டாக்டர், வெங்கடேஷ் என் கசின். ராகிங் பண்றேன்னு இப்படிப் பண்ணி வெச்சிருக்கானுங்க. இப்போ அவன் பேரன்ட்ஸுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்?”

டெரர் சொல்லச் சொல்ல எனக்கு மயக்கமே வரும்போல இருந்தது, `போயும் போயும் இவன் சொந்தக்காரனையா அடித்துவைத்திருக்கிறான் இந்தப் படுபாவி கோபி!’

``சும்மா விடக் கூடாது சார் இவங்களை. கேஸ் போட்டு உள்ளே தள்ளணும். காலேஜை விட்டே துரத்தணும்.”

டெரர் ஆத்திரத்தில் துள்ளிக்கொண்டிருக்க, டாக்டர் அவனை சமாதானம் செய்யத் தொடங்கியிருந்தார். வழக்கு என்றால் அவருக்கும் தலைவலிதான் எனத் தோன்றியிருக்க வேண்டும்.

``இங்க பாருங்க மிஸ்டர்...”

``எம் பேர் ரமேஷ் டாக்டர்... நானும் ஸ்டூடன்ட்தான்.”

``சரி ரமேஷ், கொஞ்சம் பொறுமையா இரு. உன் தம்பி வெங்கடேஷுக்கு சீரியஸா ஒண்ணுமில்லை. எபிலெப்சி இருந்ததால லேசா மயங்கிட்டான். ரெண்டு நாள்ல வீக்கமெல்லாம் போயிடும். இந்தப் பசங்களும் ஏதோ தெரியாமப் பண்ணிட்டாங்க. நீயும் ஸ்டூடன்ட்தானே, வயசு அப்படி!”

``அப்படியெல்லாம் சும்மா விட முடியாது சார். எப்படிப் போட்டு அடிச்சிருக்கானுங்க. சரி, போலீஸ் வேணாம். அவங்க பேரன்ட்ஸையாவது வரச்சொல்லி இவனுங்களை உதைக்கச் சொல்லணும்.”

அதற்கு போலீஸே தேவலாம். எனக்கு அழுகையாக வந்தது.

``ரமேஷ் கம் வித் மீ...” டாக்டர் அவர் அறைக்குள் டெரரை அழைத்துச் சென்றார். உள்ளே இருவரும் பேசிக்கொள்வது எதுவும் கேட்கவில்லை. சில நிமிடத்துக்குப் பிறகு எங்களை உள்ளே அழைத்தார் டாக்டர்.

``இதோ பாருங்கப்பா... நான் ஏதோ பேசிகீசி ரமேஷைச் சமாதானப்படுத்தியிருக்கேன். இனிமே இந்த மாதிரி ஏதாவது செஞ்சீங்கன்னு தெரிஞ்சா, நான் வெங்கடேஷுக்கு டிரீட்மென்ட் கொடுத்த ரெக்கார்டைவெச்சு நேரா போலீஸுக்குப் போயிடுவேன்.”

``சத்தியமா இனிமேல் இப்படிச் செய்ய மாட்டோம் டாக்டர்” என்றான் கோபி. டெரர் மறுபடி உறுமினான்.

``டாக்டர், அவங்களை மொதல்ல இங்கிருந்து போகச் சொல்லுங்க. அவனுங்க மூஞ்சியைப் பார்த்தாலே வெறி ஏறுது. என் பிரதரை எனக்குப் பார்த்துக்கத் தெரியும்.”

டாக்டர் எங்களைச் செல்லும்படி சைகை செய்தார். அவருக்கு உடல்மொழியில் நன்றி சொல்லிவிட்டு நாங்கள் எந்த வேகத்தில் வெளியேறி வந்தோம், எந்த வேகத்தில் ஹாஸ்டல் வந்து சேர்ந்தோம் என்றே தெரியவில்லை. பஸ்ஸில் வரும்போதுகூட கால்கள் தடதடத்து ஆடிக்கொண்டிருந்தன. கோபி பயத்தில் அழுதுகொண்டே வந்தான்.    

டெரர், இரண்டு நாள் அறைக்கு வரவே இல்லை. மூன்றாவது நாள் காலையில் அந்தப் பையனோடு அறைக்கு வந்தான். வெங்கடேஷ் இப்போது முழுதாகத் தேறித் தெளிவாக இருந்தான்.

``யாருடா உன்னை அடிச்சது?”

அவன் கை, கோபியை நோக்கி நீண்டது.

``டேய்... கோபி உன்னோட புது லோட்டோ ஷூ சைஸ் என்ன?”

“எட்டு.”

“சரியாத்தான் இருக்கும். அதை வெங்கடேஷூக்குக் கொடு.”

கோபி அதிர்ச்சியடைந்தான்.

“முடியாது... புதுசு... எங்க அப்பாவோட கிஃப்டு. ”

48p5_1530533055.jpg

“அப்ப நான் அவர்கிட்டயே கேட்டுக்கிறேன். `உங்க பையன் இந்த மாதிரி ரௌடித்தனம் பண்ணி ஒரு பையனை சாவடி அடிச்சிட்டான். அதுக்கு என்ன பண்ணப்போறீங்க?’னு கேட்டுக்கிறேன்.”

கோபியின் லோட்டோ உடனுக்குடன் கை மாறியது.

``நீ ரூமுக்குப் போ. இனிமே உனக்கு என்ன வேணும்னாலும் என்கிட்ட சொல்லு, தெரியுதா” என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டு எங்களைப் பார்த்தான் டெரர்.

``டேய் குமரேசா... ஒரு பேப்பர்ல உங்க எல்லாருடைய வீட்டு போன் நம்பரும் எழுதி என்கிட்ட கொடு. எதுக்கும் இருக்கட்டும்.”

தயக்கத்துடன் எழுதிக் கொடுத்ததை வாங்கி பத்திரமாகப் பெட்டியில் வைத்துக்கொண்டான்.

அதன் பிறகு ஒவ்வொரு நாளும் எங்களுக்கு பயத்திலேயே கழிந்தது. அந்த ஆண்டு முழுவதும் வெங்கடேஷுக்குப் பணிவிடை செய்வது எங்களின் அன்றாடக் கடமையானது. எது வாங்கினாலும் வெங்கடேஷுக்கும் ஒன்று சேர்த்து வாங்கும் நிலைக்கு ஆளானோம். எங்கள் உள்ளாடைகளை மட்டும்தான் அவன் பயன்படுத்தாமல் விட்டுவைத்திருந்தான். சினிமாவுக்குச் சென்றால் அவனையும் அழைத்துச் செல்லவேண்டியிருந்தது. டெரர் எதற்கும் வர மாட்டான். ஒருகட்டத்துக்குமேல் பரிதாபப்பட்டு `இதெல்லாம் வேண்டாம் சார்’ என்று வெங்கடேஷ் சொல்லிவிட்டான். ஆனால், அதற்குள் அவன் நெருக்கமாகியிருந்தான்.

கல்லூரி இறுதியாண்டில் டெரர் ஹாஸ்டலை விட்டு வெளியேறி சீனியர்களோடு தங்கிக்கொண்டான். எல்லா வருடத்திலும் எல்லாப் பாடத்திலும் அரியர் இருந்தது அவனுக்கு. இறுதி ஆண்டில் எங்களுக்கு வேலை குறித்த பயம்வேறு சேர்ந்துகொண்டதால், அவனை நாங்கள் மெள்ள மறக்கத் தொடங்கியிருந்தோம். இறுதி நாள் ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்தபோதுகூட நாங்கள் டெரரை அழைத்திருக்கவில்லை. கல்லூரி முடித்தபோது மூட்டை அவிழ்த்த சோள மணிகள் மாதிரி சிதறிப்போனோம்.

இரண்டு வருடத்துக்கு முன்பு எங்கள் வகுப்புக்காக வாட்ஸ்அப் குரூப் ஒன்றை அமைத்தபோது, எங்கள் வருடத்தில் படித்த அனைவரும் ஏதோ ஒரு பெரிய நிறுவனத்தில் நல்ல வேலையில்தான் இருந்தார்கள். யாரும் சோடைபோயிருக்கவில்லை, டெரர் தவிர. அவனைப் பற்றி யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. வைத்திருந்த அரியர்களில் ஒன்றைக்கூட அவன் எழுத முயலவே இல்லை எனத் தெரியவந்தது.

கல்லூரி முடித்து வெளியுலகத்தை தரிசித்த இந்த இருபது ஆண்டில், டெரர் மீதான எங்கள் வெறுப்பின் காரணம் எனக்குப் புரிந்திருந்தது. நாங்கள் நம்பிக்கொண்டிருந்த வாழ்க்கையின் கட்டுமானத்தை அவன் எங்கள் கண் முன்னாலேயே உடைத்துக்கொண்டிருந்தான். அந்தக் கட்டுமானங்களில்தான் எங்கள் பிடிப்பை வைத்திருந்தோம். அதைச் சிதைக்கும் அவனைப் பார்த்து நாங்கள் அச்சம்கொண்டிருந்தோம். அவன் அப்போது வாழ்க்கை குறித்த அச்சமின்றி இருந்தான். இப்போதும் இருப்பானா என்ற கேள்வி எழுந்தபடியிருந்தது.

சம்பிரதாய விசாரிப்புகளுக்குப் பிறகு வெங்கடேஷ் வெளியேறிக்கொண்டிருந்தான். எனக்குள் பொறி தட்டியது. அவனுக்கு டெரர் பற்றி நிச்சயமாகத் தெரிந்திருக்கும்.

வரவேற்புப் பகுதிக்கு வெளியே தனது காருக்காகக் காத்துக்கொண்டிருந்தவனை மூச்சிரைக்க ஓடிச்சென்று தோளைத் தொட்டுத் திருப்பினேன்.

``வெங்கடேஷ்... ரமேஷ் எங்கே வேலைசெய்றான்னு தெரியுமா?”

``ரமேஷ்...” என்று இழுத்தபடி யோசித்தான்.

``உன்னோட கசின் பிரதர்... டெரர்னு கூப்பிடுவோமே!”

அவன் நினைவு வந்தவனாகச் சிரித்தான்.

``ஓ டெரர் சாரா... அவரைப் பத்தி எதுவும் தெரியாது. கடைசியா காலேஜ்ல பார்த்ததுதான்” என்றான். அவன் கார் வந்துவிட்டது.

எனக்கு ஏமாற்றமாகிவிட்டது. கார் கதவைத் திறந்து ஒரு விநாடி தயங்கிவிட்டுப் பிறகு சொன்னான் வெங்கடேஷ், ``அப்புறம்... அவர் என் பிரதரெல்லாம் இல்லை. ஹாஸ்பிட்டல்லதான் அவரை மொதமொதல்ல பார்த்தேன். சும்மா அப்படியே மெயின்டெயின் பண்ணச் சொன்னார்... ஸாரி!”
காரில் ஏறி, கதவைச் சாத்திக்கொண்டு அவன் சென்றுவிட்டான்.

எனக்கு இப்போது டெரரைப் பார்க்கவேண்டும்போலிருந்தது.

https://www.vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்

டெரர் எல்லாம் வெளியிலதான் உள்ளே பலாப்பழம், வகுப்புகளில் ஒவ்வொரு குரூப்பிலையும் இப்படி ஒரு டெரர் இருப்பார்.....!  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.