Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`பரியேறும் பெருமாள்' விமர்சனம்

Featured Replies

பரியà¯à®±à¯à®®à¯ பà¯à®°à¯à®®à®¾à®³à¯à®à®³à¯ à®à®¾à®°à¯à®ªà®¾à® ஸà¯à®ªà¯à®·à®²à¯ à®®à¯à®¤à¯à®¤à®à¯à®à®³à¯ மாரி - `பரியà¯à®±à¯à®®à¯ பà¯à®°à¯à®®à®¾à®³à¯' விமரà¯à®à®©à®®à¯

கண்ணுக்குப் புலப்படாத அதிகாரத்தின் அடுக்குகள் ஏறி மிதிக்க நினைக்கும். `உனக்கெல்லாம் இது ஒரு கேடா?' என ஆயிரமாயிரம் கண்கள் கேள்விகளோடு துளைக்கும். தலைமுறைகளாகத் தொடரும் வறட்டு ஆணவம் தாமிரபரணியின் தண்ணீரில் துரத்தி மூழ்கடிக்கத் துடிக்கும். இவை அனைத்தையும் எதிர்த்துக் கேள்வி கேட்டு நிமிர்ந்து நின்றால்... அவன்தான் `பரியேறும் பெருமாள்.'

வழக்கமாக இங்கே கதை சொல்வதுதான் வழக்கம். ஆனால், இங்கே பரியன் வழியே மாரி செல்வராஜ் சொல்லியிருப்பது பல தலைமுறைகளின் வலிநிறைந்த வாழ்க்கையை... அதை எப்படி அவரால் யதார்த்தமாக இரண்டரை மணிநேர சினிமாவில் சொல்ல முடிந்தது என்பதே ஆச்சர்யமாக இருக்கிறது. ரத்தமும் புழுதியும் கூத்தும் வேட்டையுமான அவ்வளவு அடர்த்தியான வாழ்க்கையை ஒரு சின்னப் பத்திக்குள் அடைக்கவே முடியாது. `இதுதான் கதை' என்ற முன்முடிவுகள் எதுவுமில்லாமல் போய் உட்காருங்கள். நாக்கில் எச்சில் ஊற முதல் காட்சியில் மோப்பம் பிடித்து அலையும் கறுப்பி முதல், இறுதிக் குறியீடாக ஓங்கி நிற்கும் இரண்டு டீ க்ளாஸ்கள் வரை எல்லாமும்... எல்லாரும் உங்களிடம் வலி பகிர்வார்கள், கதை சொல்வார்கள், கதறி அழுவார்கள், சுற்றி நின்று நடனமாடுவார்கள்... கடைசியாகக் குத்திக் கிழிக்கும்படி கேள்வியும் கேட்பார்கள். 

பரியà¯à®±à¯à®®à¯ பà¯à®°à¯à®®à®¾à®³à¯

பரியனாகக் கதிர். அவரை ஒவ்வொரு முறை திரையில் பார்க்கும்போதும் தோன்றும் கேள்வி ஒன்றுதான். `இவ்வளவு திறமை இருந்தும் இவர் ஏன் நிறைய படங்கள் பண்றதில்ல?' பரியேறும் பெருமாளில் கறுப்பியுடனான முதல் காட்சியிலேயே இந்தக் கேள்வியை மீண்டும் உரக்கக் கேட்க வைக்கிறார். டைட்டில் ரோலை ஏற்று நடிப்பது சாதாரணமல்ல. அதுவும் அடர்த்தியான கதை கொண்ட படத்தில் அப்படி நடிப்பது மிகப்பெரிய சவால். மொத்தமாகத் தூக்கி சுமக்கின்றன அவரின் தோள்கள். பரியன்தான் இந்தப் படத்தின் ஆன்மா.

'யப்பா... எவ்ளோ கதை இருக்கு உன்கிட்ட? எனக்கெல்லாம் சொல்ல ஒண்ணுமே இல்ல' - இதுதான் ஆனந்தி. கிராமத்துத் தெருக்களில் இறங்கி நடக்கும்போது எதிர்ப்படும் முதல் முகம். `இந்த உலகத்துல இருக்குற நல்லவங்க எல்லாம் என்னைச் சுத்திதான் இருக்காங்க' என நம்பும் வெகுளிப் பாத்திரத்துக்கு இயல்பாகவே பொருந்திப்போகிறார். நடுவே சில காலம் கமர்ஷியல் சினிமா பக்கம் ஒதுங்கியவரை இழுத்துவந்து `இதுதான் உங்களுக்கான இடம்' என நிறுத்தியிருக்கிறார் மாரி.

à®à®¤à®¿à®°à¯

பரியேறும் பெருமாளைப் பல்லக்கில் வைத்துத் தாங்குகின்றன நான்கு கேரக்டர்கள். முதலாவது ஆர்.கே ராஜா. `நீ படிச்சு மேல வந்துடுய்யா! அதுவரைக்கும் அத்தனை அடியையும் இந்த உடம்பு தாங்கும்' என அவர் சொல்லுமிடத்தில் நமக்குக் கண்களில் முட்டி நிற்கிறது நீர். இரண்டாவது கராத்தே வெங்கடேசன். `குலசாமிக்குப் பண்றமாதிரி நினைச்சுக்கிட்டு இதைப் பண்ணிட்டு இருக்கேன்' எனத் தன் செய்கைகளை அவர் நியாயப்படுத்தும்போது, பாகுபாடில்லாமல் எல்லாருக்குமே ஆத்திரம் பொங்குகிறது.

மூன்றாவது மாரிமுத்து. இடைநிலை சாதியில் கிடந்து அல்லல்படும் சராசரி தகப்பன். `என் மகளையும் சேர்த்துக் கொன்னுடுவாங்கப்பா' என அவர் உடையுமிடத்தில் சாதிப் பெருமையில் ஆர்வமில்லாத, அதேசமயம் சுற்றியிருப்பவர்களின் பேச்சை நிராகரிக்க முடியாத ஒரு ஊஞ்சாலட்டத்தைக் கண்முன் நிறுத்துகிறார் இயக்குநர். நான்காவதும் மிக முக்கியமானதுமான கேரக்டர், கதிரின் அப்பாவாக வரும் தங்கராஜ். பரியனின் பாஷையில் - அம்மா சத்தியமாகச் சொல்லலாம், இப்படி ஒரு பாத்திரப் படைப்பு இதற்கு முன் தமிழ் சினிமாவில் நிகழ்ந்ததே இல்லை. ஒவ்வொரு முறை அவரைப் பார்க்கும்போது நெஞ்சு ஏகத்துக்கும் கனத்துப்போகிறது. இதற்காகவே ஸ்பெஷல் முத்தங்கள் மாரி!

இறுக்கமான கதை நம்மை அழுத்தும்போதெல்லாம் இடையே நுழைந்து நெகிழச் செய்து சிரிப்பு மூட்டுகிறார், யோகிபாபு. வழக்கமான உருவகேலிகள் இதிலில்லை. தனக்கு சீரியஸாக நடிக்கவும் தெரியும் என இரண்டாம் பாதி முழுக்க நிரூபித்திருக்கிறார். நம் எல்லாருக்குமே இப்படி ஒரு நண்பன் இருந்திருப்பான். லிஜீஷ், ஒரே ஒரு காட்சியில் வரும் சண்முகராஜன், `மெட்ராஸ்' ஜானி என எல்லோருமே பக்கா பொருத்தம். 

பரியà¯à®±à¯à®®à¯ பà¯à®°à¯à®®à®¾à®³à¯ விமரà¯à®à®©à®®à¯

படத்தின் ஒவ்வொரு கேரக்டரும் ஒரு குறியீடுதான். ஆர்.கே.ராஜாவின் கேரக்டர் அவமானங்களால் தோல் மரத்துப்போன அடிமைத்தனத்தின் குறியீடு. கராத்தே வெங்கடேசன் சாதியத்தைத் தாங்கிப் பிடிக்கும் பழைமைவாதத்தின் குறியீடு. சட்டக்கல்லூரி முதல்வர், ஒடுக்கப்பட்டவர்களைக் கல்வி மீட்டெடுக்கும் என்பதற்கான குறியீடு. ஓடியாடி அலைந்து தலை சிதறி மரித்துப்போகும் கறுப்பி காலங்காலமாக நிலவிவரும் சாதியச் செருக்கின் குறியீடு.

கதையாக மட்டுமல்லாமல், காட்சிகளாகவும் கனமேற்றுகிறார் மாரி செல்வராஜ். பரியனும் நண்பர்களும் குளித்துவிட்டு வரும் குட்டையில் சிலர் சிறுநீர் கழிப்பது, `நீ அப்பனான்னு பார்ப்போம்' என வக்கிரத்தை வலிமை இல்லாதவரிடம் காட்டுவது, `கோட்டால வந்தா, கோழிமுட்டைதான் போடணும்' என ஆங்கிலத்தை அளவீடாக வைத்து அவமானப்படுத்துவது... `இதென்ன உங்கப்பனுக்குப் புதுசா?' எனக் கண்ணீரோடு சமாதானப்படுத்துவது, யப்பா... எப்படித் தாங்குவது இத்தனை கனத்தை?

இசையை புளியங்குளத்தின் செம்மண்ணிலிருந்து வெட்டியெடுத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். ஓர் இளம் தலைமுறை இசையமைப்பாளர் இப்படியான முயற்சிகளுக்கு உடன் நிற்பது படத்துக்குப் பெரிய பலம் சேர்க்கிறது. நிறைய பரீட்சார்த்த முயற்சிகள். அவை எல்லாமே படத்தை அடுத்தகட்டத்துக்கு உயர்த்தியிருக்கின்றன. ஸ்ரீதரின் ஒளிப்பதிவு, பாலை நிலத்துப் புழுதியையும் பாறைகள் உமிழும் வெப்பத்தையும் அப்படியே கடத்தியிருக்கிறது. பாயின்ட் ஆஃப் வியூ, டாப் வியூ என ஒவ்வொரு கோணமும் காட்சிவழி கதை சொல்கிறது. 

à®à®°à¯à®ªà¯à®ªà®¿

ஆலமரமாய் பரியன் நிற்க, அவனிலிருந்து தொடங்கும் ஒவ்வொரு விழுதும் ஒவ்வொரு கதை சொல்கிறது. அதை அத்தனையையும் எடுத்துக் கோத்த விதத்தில் ஒளிர்கிறார் படத்தொகுப்பாளர் செல்வா. சண்டைக்காட்சிகள் வடிவமைத்த மாதிரியெல்லாம் இல்லை. ஒவ்வோர் அடியுமே நிஜம். தத்ரூபம். `ஸ்டன்னர்' சாமிக்கு இது மிக முக்கியமான படம். திரைக்கதையில் தேவையற்ற காட்சியென்றோ, வசனமென்றோ சொல்ல ஒன்றுகூட இல்லை. படத்தில் நடக்கும் ஒவ்வோர் அசைவுக்குப் பின்னும் ஒரு காரணமிருக்கிறது, அது வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. 

பெயர், ஊருக்கு அடுத்தபடியாக `என்ன சாமி கும்பிடுறீக' என்ற கேள்வியைச் சந்தித்திருக்கிறீர்களா, அதன் பதில் எதிராளியின் முகத்தில் தரும் ஏளனச் சிரிப்பால் கூனிக் குறுகியிருக்கிறீர்களா, பிறப்பால் மட்டுமல்ல... நிறத்தால் நிகழ்த்தப்படும் கொடுமைகளை அனுபவத்திருக்கிறீர்களா, கிழிந்த சதைகளிலிருந்து வெளியேறத் துடிக்கும் ரத்த வெடிப்பில் சிறுநீரின் உவர்ப்பு பட்டு துடித்திருக்கிறீர்களா, முகத்தை மூக்கால் உரசிக் கொஞ்சும் செல்ல நாயை ஆறறிவு(?) மனித மிருகங்களுக்குக் காவு கொடுத்திருக்கிறீர்களா, மிரட்சி ஏற்படுத்தும் இருள் வெளிகளில் சிறு வெளிச்சக் கீற்றாய் தென்படும் தேவதையைப் பார்த்திருக்கிறீர்களா, இதில் ஏதேனும் ஒன்றைச் சந்தித்திருந்தால், நீங்களும்தான் இந்தப் `பரியேறும் பெருமாள்.' இன்னும் உறுதியாக எழுந்து நில்லுங்கள். உங்களுக்கான விடியல் வரும். இது எதுவும் நிகழாத ஆனந்தியின் வாழ்க்கை உங்களுக்கு வாய்த்திருக்கிறதா, உங்கள் அருகில்... உங்கள் நட்பு வட்டத்தில் ஒரு `பரியேறும் பெருமாள்' இருப்பான். அவனை இறுக்க அணைத்துக்கொள்ளுங்கள். தோளோடு தோள் நில்லுங்கள். பல்லாயிரம் ஆண்டுகளாக நிகழ்ந்த கொடுமைகளுக்கு முடிவு நாம் ஒருவருக்கொருவர் நிகழ்த்தும் அணைப்பில்தான் இருக்கிறது. அந்த அணைப்பு எல்லா வித்தியாசங்களையும் அகற்றட்டும்.

மாரி செல்வராஜ் மட்டுமல்ல... தமிழ் சினிமாவே மார்தட்டி சொல்லிக்கொள்ளும்படியான படைப்பு, இந்தப் `பரியேறும் பெருமாள்'.

https://cinema.vikatan.com/movie-review/138320-pariyerum-perumal-movie-review.html

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

பரியேறும் பெருமாளின் கருப்பி, சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி?

பா. ஜெயசீலன்

அண்ணன் திருமாவளவனின் உரைகள் அசாத்தியமான கோட்பாட்டு விளக்கங்களை கொண்டவை. சாதி குறித்து பேசுகையில் அவர் பல்வேறு தருணங்களில் சொன்ன விளக்கம் “சாதி என்பது அதிகாரத்தோடு தொடர்புடையது”. அதாவது சாதி ஹிந்துக்கள் சாதியை பயில்வதற்கும், கடைபிடிப்பதற்கும், கட்டி காக்க விரும்புவதற்குமான அடிப்படை காரணம் சாதிய கட்டமைப்பினூடாக அவர்களுக்கு கிடைக்கும் அதிகாரமும், அந்த அதிகாரத்தின் ஊடாக அவர்கள் பெரும் சமூக, அரசியல், பொருளாதார நலன்களும்.

சில நூறு ஆண்டுகளாய் எந்த தகுதியும், தேர்வும் இல்லாமல் சாதி என்னும் இல்லாத ஒன்றை முன்வைத்து ஏரளமான சமூக பொருளாதார அனுகூலங்களை அனுபவித்து வரும் ஒருவனிடம் போய் நீதி கதைகள் சொல்லி அவன் மனதை மாற்றிவிட முடியும் என்று நினைக்கிறீர்களா? அம்பேத்கரின் வார்த்தையில் சொல்வதென்றால் மன்னராட்சி முடிவிற்கு வரவேண்டும் என்று எப்படி இங்கிலாந்து ராணி விரும்பமாட்டாரோ அதே போலத்தான் சாதி ஒழியவேண்டும் என்று சாதி ஹிந்துக்கள் விரும்பமாட்டார்கள்.

ஒரு அரசு பேருந்து அழகான மலையினூடாக சிலநூறு ஆண்டுகளாய் ஓடி கொண்டிருக்கிறது. அந்த பேருந்தில் மூன்று பேர் உட்கார கூடிய ஒரே ஒரு இருக்கை போடப்பட்டிருக்கிறது. அந்த இருக்கையில் தலைமுறை தலைமுறையாக ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் உட்காருவார்கள் உட்காரமுடியும். மற்றவர்கள் பேருந்தின் மேல்தளத்தில் ஏறி வானத்தை பார்த்து உட்கார்ந்துகொண்டுதான் வரவேண்டும். அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் எங்கு வேண்டுமானாலும் பேருந்தில் ஏராளம் இறங்கலாம். அவர்களுக்கு பிடித்த பாடல்களை போடச் சொல்லி கேட்கலாம். வேண்டிய வேகத்தில் பேருந்தை ஓட்டச் சொல்லலாம். இதுமட்டுமில்லாமல் அவர்கள் வண்டியில் ஏறும்பொழுதும் இறங்கும்பொழுதும் பேருந்தின் மேலிருப்பவர்கள் ஐயா நீங்க நல்லாயிருக்கணும் என்றுவேறு சொல்லவேண்டும் .

ஒருநாள் பேருந்தின் மேல்தொங்கிக்கொண்டிருந்த ஒரு நல்ல கதைசொல்லி காலில் கயிற்றை கட்டிக்கொண்டு ஜன்னல் வழியாக தலைகீழாக தொங்கிகொண்டே தங்களது கஷ்டங்கள் குறித்தும், பேருந்தின் ஒரு மூலையில் தாங்களும் உட்கார்ந்துகொண்டால் நன்றாகத்தானே இருக்கும் என்னும் பாவனையில் கதறி அழுதபடி ஒரு நீதிகோரும் கதையை சீட்டில் உட்கார்ந்து கொண்டுவரும் அந்த குடும்பத்திடம் சொல்கிறான். இந்த சோக கதையை கேட்டு அந்த குடும்பமும் கண்ணீர் விடுகிறது.

பேருந்தில் உட்கார்ந்துகொண்டுவரும் திமிர் பிடித்த குடும்பம்தான் சாதி ஹிந்துக்கள். அவர்களிடம் தலைகீழாய் கயிற்றில் தொங்கியபடி நீதி கதைகள் சொன்னவர்தான் மாரி செல்வராஜ். இப்பொழுது நீதி கதையை கேட்ட அந்த குடும்பம் அடுத்த நாளிலோ அல்லது அடுத்த நூற்றாண்டிலோ அந்த பஸ்சை எல்லோரிடமும் பகிர்ந்துகொள்வார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நிச்சயமாக மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் அந்த பேருந்தில் அனுபவித்து வரும் சொகுசு அவர்களுக்கு முந்தைய தலைமுறை இவர்களுக்கு விட்டு சென்றது. இவர்களும் இவர்களது அடுத்த தலைமுறைக்கு இதை அளித்து செல்லவே முயல்வார்கள். முடிந்தால் பேருந்தின் மேல்தளத்திலும் யாரும் ஏறாமல் செய்ய என்ன செய்யலாம் என்று வேண்டுமானால் யோசிப்பார்கள்.

பிறகு, அவர்களை எப்படி சீட்டிலிருந்து கிளப்புவது? மேலிருப்பவர்கள் எப்படி பேருந்துக்குள் வருவது? இதை செய்ய அந்த குடும்பத்தினரிடம் கண்ணை கசக்கி கொண்டு நீதிக்கதைகள் சொல்லாமல் அந்த குடும்பம் அனுபவித்துவரும் அதிகாரத்தை கைவிட ஒரு வலுவான காரணத்தை முன்வைக்கவேண்டும். எங்களை உள்ளே விடவில்லையென்றால் பஸ்ஸை கொளுத்திவிடுவோம். எல்லோரும் நடந்து செல்லலாம் என்று மிரட்டலாம். அல்லது நீங்கள் உங்கள் சீட்டில் எப்பொழுதும் போல உட்கார்ந்துகொண்டுவருங்கள். எங்களுக்கு நாங்களே சீட்டு செய்து அதில் உட்கார்ந்து வருகிறோம் என்று சமாதானம் பேசலாம். அல்லது அந்த பேருந்தைவிட ஒரு பெரிய பேருந்தை வாங்கி நாங்கள் அதில் பயணித்து கொள்கிறோம் என்று சவால் விடலாம். அல்லது உங்கள் குடும்பத்தை கொன்று எங்கள் வஞ்சம் தீர்ப்போம் என்று இறுதி எச்சரிக்கை செய்யலாம். மேல் சொன்ன காரணங்கள் அந்த குடும்பத்திடம் ஒரு சலனத்தை ஏற்படுத்துமா இல்லையா? ஏற்படுத்தும். அதற்கான உதாரணகள்தான் சமீபத்தில் வந்த கபாலி, காலா, மாவீரன் கிட்டு போன்ற படங்கள்.

தெரிந்தோ தெரியாமலோ மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் சாதி ஹிந்துக்களின் பரிவை கோரும் ஆழமான தாழ்மையுணர்ச்சி கொண்ட ஒரு அடிமையின் மனநிலையை வெளிப்படுத்துகிறது. இதுபோன்ற பரிவைக்கோரும் தலித்துகளின் வெளிப்பாடுகள் சாதி ஹிந்துக்கள் அப்படியே ரசித்து ருசித்து enjoy பண்ணி சாப்பிட கூடிய லட்டுகள். ஜெயமோகனின் “நாயோடிகள்”, முதல் மரியாதையின் “ஒரு உண்ம தெரிஞ்சாகணும் சாமி” கதாபாத்திரம் போன்றவை சாதி ஹிந்துக்களுக்கு இளையராஜாவின் இனிமையான சோக பாடல்களை போல சுகமானவை. பரியேறும் பெருமாள் நெடுக்கவும் கழிவிரக்கமும், தாழ்மையுணர்ச்சியும் பிதுங்கி வழிகிறது. முக்கியமான சிலதை மட்டும் கேள்வியாக்கி நிறுத்தி கொள்கிறேன்.

ruthless assassinஆக வரும் சைத்தான் கி பச்சா பெரியவர் கொலைசெய்ய பணம் தந்தால் இதை பணத்திற்காக செய்யவில்லை குலசாமிக்காக செய்கிறேன் என்கிறார். ஒரு தலித் தன்னை வீழ்த்திவிட்ட பிறகு ஒரு சாமுராயை போல தனது உயிரை மாய்த்துக்கொள்கிறார். அந்த பெரியவரின் கதாபாத்திர கண்ணியம் மிக கவனமாக நிலைநாட்டப்படுகிறது. யோசித்து பார்த்தால் தனது இறுதிமூச்சுவரை தனது நம்பிக்கைக்கு அவர் உண்மையாக இருந்திருக்கிறார். அவரை போன்ற ஒரு சைத்தான் கி பச்சா இந்தப் படத்தை பார்த்தால் இந்த பெரியவர் கதாபாத்திரம் நல்ல inspiration ஆக இருக்கும். இது ஒரு பக்கம் இருக்க ஆணவ கொலைகளில் ஈடுபடும் சில்லறை பசங்கள் எதோ பணம் காசை பற்றி கவலைப்படாமல் லட்சியத்திற்காக மட்டுமே செயல்படும் சொந்த உயிரையும் இழக்க தயங்காத லட்சியவாதிகள் என்னும் தொனியில் கதாபாத்திரம் அமைப்பதற்கான காரணம், தேவை நம் சமூக சூழலில் என்ன? அந்த கதாபாத்திரம் மீது பார்வையாளனுக்கு ஏற்படும் கோபம் கூட பெரியவரின் சாதி வெறி சார்ந்தது அல்ல. அவர் கொல்ல பயன்படுத்தும் யுக்தி. உதவி கோரி, உதவி செய்பவரையே கொலை செய்யும் அந்த பாணிதான் what if it was me என்று பார்வையாளனுக்கு அந்த பெரியவர் மீது காண்டாகிறதே தவிர அவரது சாதி வெறி அல்ல.

தலித் பசங்க படிக்காதவனுங்க. இங்கிலிஷ் பேச தெரியாதவனுங்க. சோத்துக்கு வழியில்லாதவனுங்க. வித்தியாசமான முக ஜாடை அல்லது உடலமைப்பு அல்லது குறைந்தபட்சம் பான்பராக் பற்களோடாவது(தமிழ் திரைப்படங்களில் தலித்துகளின் பற்களின் அரசியல் பற்றியே தனியே ஒரு கட்டுரை எழுதலாம்) தலித்துகளின் குடும்பத்தில் யாராவது இருக்கவேண்டும் என்பது பொது புத்தி. ஒரு சாதி ஹிந்துவின் மனநிலையோடு மாரி, பரியின் கதாபாத்திரத்தை வடிவமைத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த பாரி சாதி ஹிந்துக்களின் எதிர்பார்ப்பை போலவே English பேச தெரியாதவன். அந்த வகுப்பிலிருக்கும் பெரும்பான்மையானவரக்ளுக்கு ஆங்கிலம் தெரியாது என்னும் பொழுது மாரி ஆங்கிலம் தெரியாததின் வலியை பொதிமாடு பரியின் மீதே சுமத்துகிறார். காதல் கொண்டேன் திரைப்படத்தில் கோட்டாவில் வந்தவன்தானே நீ என்று வாத்தியார் திட்டிக்கொண்டிருக்கும் பொழுதே கணக்கை முடிக்கும் வினோத் கதாபாத்திரம் இங்கு நினைகூறத்தக்கது. வினோத்தின் மேதமையை வியக்கும் திவ்யாவிற்கும், a for அம்பிகா என்று jo விடம் காமெடி செய்யும் பரிக்கும் நிறைய வித்தியாசமிருக்கிறது. பரி ஆங்கிலம் தெரிந்தவனாக இருந்து ஜோ ஆங்கிலம் தெரியாததின் வலியை அனுபவித்து பரி உதவி செய்திருந்தாலும் எதுவும் மாறியிருக்காது. ஆனால் பொது புத்தியை ஒத்துப் போனால்தான் கருப்பிக்கு வருக்கி கிடைக்கும் இல்லையா?

Pariyerum Perumal Press Meet Photos இயக்குநர் மாரி செல்வராஜ்

ஒரு கலை படைப்புக்கு நிறைய துரோகங்கள் செய்யலாம். அதில் ஒரு மிக நல்ல துரோகம் நமது இயக்குனர் பாலா செய்வது. பார்வையாளனுக்கு shock value ஏற்படுத்துவது. இதை மாரி பரியின் தந்தை கதாபாத்திரத்தின் மூலம் செய்திருக்கிறார். ஒரு காமெடி காட்சியில் ஆரோக்கியசாமி என்று பெயர் கொண்ட தாடி பாலாஜி தனக்கிருக்கும் நோய்களை அடுக்க அதற்கு விவேக் இந்த சின்ன உடம்பில் இவ்ளோ நோயாடா என்று சொல்வார். அதுபோல பரியின் கதாபாத்திரம் ஏற்கனவே சிறுநீரில் ஊறிய முகத்தோடு திரிய, பார்வையாளர்கள் என்ன ஜி இப்படி ஆகி போச்சு என்று கண்ணை கசக்க மாரி தக்காளி இப்ப இறக்கிறான் பாருங்கடா பெருசா என்னும் தொனியில் தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக என்னும் பாவனையில் பரியின் தந்தையை அறிமுகப்படுத்தி அவரை இவரே கொஞ்சம் காமெடிக்கும் பயன்படுத்திக்கொண்டு பின்பு துகிலுரிக்கிறார். ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்பா. நல்லவேளையாக மாரி பரியின் அம்மா கதாபாத்திரத்தை சேதாரமில்லாமல் விட்டுவிடுகிறார்.

கவுசல்யாவின் அப்பாவும் அம்மாவும் இறுதி தீர்ப்புக்கு கோர்ட்டிற்கு அழைத்து வரவைக்கப்பட்டபொழுது அவர்கள் முகத்திலிருந்த புன்னகை நம்மை உறைய வைக்க கூடியது. இது நிஜம். மாரியின் படத்தில் வரும் ஜோவின் அப்பா “உன்ன கொல்றதுமில்லாம என் பொண்ணையும் கொன்னுடுவாங்கடா” என்று கண்ணை கசக்குவது புனைவு. பார்ப்பனர்கள் வந்துதான் இங்கு சாதி வந்தது என்று சொல்பவர்களிடம் ***** அவன் சொன்னா உங்களுக்கு எங்கட போச்சு அறிவு மயிராண்டிகளா என்று கேட்கத்தோன்றுவதை போல சமூக அழுத்தத்தின் காரணமாகத்தான் பெற்றோர் ஆணவ கொலைகள் செய்யும் நிலைக்கு ஆளாகிறார்கள் என்று சொல்பர்களிடமும் கேட்க தோன்றுகிறது. சாய்யிரத்படத்தில் கோமாளியை போல இருக்கும் கதாநாயகியின் அண்ணன் ஒரு தலித்தை உயரம் பத்தாமல் எகிறி அடிப்பான். கோமாளியை போல இருக்கும் அவனுக்கு அவனது சாதி தைரியத்தையும், துணிச்சலையும் அளிக்கிறது என்னும் பொருள்பட அந்தக் காட்சி இருக்கும். இந்தக் காட்சி தலித்துகளின் பார்வையில் அணுகப்படும் ஒரு காட்சிக்கான உதாரணம். ஜோவின் அண்ணன் ஒரு காட்சியில் சொல்கிறான் “அவன் மேல complaint தந்தா என் மீசைக்கு என்னடா மரியாதை” என்று. இது ஒரு சாதி ஹிந்து மனநிலைகொண்ட ஒருவரால் மட்டுமே எழுத முடிந்த வசனம். மாவீரன் கிட்டுவில் கிட்டு தனது காதலை தனது மக்களுக்காக, லட்சியத்திற்காக இழக்க தயாராகிறான். பரி மூஞ்சில் மூத்திரம் விட்டவுடன் ஜோ எனக்கு என் கருப்பி மாதிரி என்கிறான் அழுத்தி கேக்கும் டீச்சரிடம் உங்களுக்கு கூட நான் சொல்றது புரியில இல்ல என்று சாதி ஹிந்துக்களின் மிரட்டலுக்கு முன் மண்டியிடுகிறான். அதனால்தான் சாதி ஹிந்துக்களிடம் மண்டியிடாத இளவரசன் தண்டவாளத்தில்கிடந்த பொழுது வராத, நீல வண்ணம் அடித்த கருப்பி சரியாக பரியை மட்டும் எழுப்பி காப்பாற்றிவிடுகிறது. சாதி ஹிந்துக்கள் சூப்பரப்பு என்று கருப்பி வந்தவுடன் விசிலடிக்கிறார்கள்.

இன்னும் சொல்ல இருந்தாலும் இறுதியாக தீண்டாமையை எதிர்ப்பது சாதி ஹிந்துக்களுடன் ஒரே குளத்தில் குளிக்கவோ, கோவிலுக்குள் நுழையவோ, தெருவில் புழங்கவோ அல்ல. அதனால் எந்த பயனும் ஏற்படபோவுதுமில்லை. தீண்டாமையை எதிர்ப்பதின் நோக்கம் அது தலித்துகளின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு தடையாக அமைந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் என்று அம்பேத்கர் சொல்கிறார். ஓரு ஊரில் இரட்டை குவளை முறை இருந்து அங்கு தலித்துகள் போய் தங்களது காசையும் குடுத்து கொட்டாங்குச்சியில் தேநீர் வாங்கி குடிக்கிறார்கள் என்றால் நாம் அவர்களிடம் போய் இரண்டே இரண்டு வழிமுறைகளைத்தான் சொல்லவேண்டும். ஒன்று தேநீர் போடுவது ஒரு ராக்கெட் சயின்ஸ் கிடையாது, எனவே நீங்களே வீட்டில் போட்டு குடியுங்கள் இரண்டு அந்த தேநீர் கடையை தீவைத்து கொளுத்துங்கள். ஆனால் மாரி ரெண்டு டம்பளரில் தேநீர் ஊற்றி வைத்துக்கொண்டு சாதி ஹிந்துக்களை வாங்க பழகலாம் என்கிறார்கள். கட் செய்தால் “இனிமேல் தலித்துகளின் வீடுகளில் தினம் உணவு உண்பேன்” தமிழிசை அறிவிப்பு என்னும் செய்தியோடு செய்தித்தாள் தொங்குகிறது.

பி.கு.:

சந்தோஷ் நாராயணன் மகா கலைஞன். மாரி செல்வராஜின் அரசியல் போதாமையை தனது இசையால் பிழை நீக்குகிறார். “black panthers” இசையமைப்பாளர் Ludwig Göransson எப்படி ஒரு வெள்ளையினத்தவராக இருந்தாலும் கருப்பினத்தவரின் அரசியல் குரலை இசையால் மொழி பெயர்த்தாரோ அது போல சந்தோஷ் பார்ப்பனராக அறியப்பட்டலும் ஒடுக்கப்பட்டவரின் அரசியல் குரலையும், கலையையும் தொடர்ந்து தனது இசையால் உயர்த்திப்பிடிக்கிறார்.

கருப்பி பாடல் படம்பிடிக்கப்பட்ட விதம் அழகு. நான் பார்த்ததிலேயே இந்த பாடலில் வரும் அந்த குலுங்கும் கொட்டு மேளம்தான் தமிழில் படம்பிடிக்கப்பட்ட அழகான பறையிசை கருவி

மாரி செல்வராஜ் தனது குருவை போலவே செய் நேர்த்தி கொண்டவராகவும் அரசியல் போதாமை கொண்டவராகவும் தன்னை நிறுவுகிறார்.

ஒளிப்பதிவாளரின் பார்வையும் கோணமும் புத்துணர்வு ஊட்டுபவை.

பா. ஜெயசீலன், சினிமா-சமூகம் குறித்து த டைம்ஸ் தமிழில் எழுதிவருகிறார்.

 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

பரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி? பகுதி – 2

பா. ஜெயசீலன்

முழுக்க முழுக்க தலித் விரோத, மிக ஆபத்தானா தலித் கலை/அரசியல் விரோத கருத்துக்களை கொண்டுள்ள பரியேறும் பெருமாள் திரைப்படம் பல்வேறு மட்டங்களில் கேள்விகளற்ற ஏகோபித்த பாராட்டுதலை பெற்று வரும் நிலையில் அந்த படத்தினால் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ள நான் இன்னும் கொஞ்சம் புலம்ப வேண்டிய தேவையிருக்கிறது.

யூதர்களை அழித்தொழித்த நாஜிக்கள் யூதர்களிடம் நீங்கள் நன்றாக படித்து ஐன்ஸ்டினை போல ஆகுங்கள் பிறகு நாங்கள் உங்களை கொல்வதை நிறுத்திவிடுகிறோம் என்று சொன்னால் நீங்கள் அந்த நாஜிக்களை பற்றி என்ன நினைப்பீர்கள் ? ஓத்தா அவன் படிச்சானா இல்லையாங்கறது இல்லடா இப்போ பிரச்சனை..நீ என்னா மயித்துக்கு அவன நோண்டுனகரதுதாண்டா பிரச்னை நாயே என்று சொல்ல தோன்றும் இல்லையா? எனக்கும் அப்படித்தான் சாதி ஹிந்துக்கள் அம்பேத்கரை போல ஆகுங்கள் சாதி கொடுமையிலிருந்து தப்பித்துவிடலாம் என்று தலித்துகளுக்கு ஆலோசனை சொல்லும் போதும் தோன்றும்.

ambetkar1.jpg?w=780

அம்பேத்கர் தலித்துகளிடம் கல்வியை வலியுறுத்தியதற்கும் சாதி ஹிந்துக்கள் தலித்துகளுக்கு கல்வி ஆலோசனை தருவதற்க்கும் பெரிய வித்தியாசமிருக்கிறது. அம்பேத்கர் தலித்துகளிடம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நவீன இந்தியாவின் புதிய வேலைவாய்ப்புகளை பெறுவதன் மூலமான பொருளாதாரவலிமையை பெறுவதற்கும், தலித்துகளின் மேல் நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான எதிர்த்தாக்குதல் நடத்துவதற்கான ஒரு வலுவான ஆயுதமாக கல்வியை பார்த்தார், வலியுறுத்தினார். ஆனால் சாதி ஹிந்துக்கள் தங்களிடம் நீதியை, ஜனநாயகத்தை வலியுறுத்தும். தலித்துகளிடம் “தம்பி இப்ப எல்லாம் யாருத்தம்பி சாதி பாக்குறா. அம்பேத்கர் எல்லாம் தலித்தா பொறந்து பெரிய ஆள வரலியா..அதுபோல நீங்களும் நல்லா படிச்சு வாங்க தம்பி” என்று பெரிய மனதோடு ஆலோசனை சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம்.

அதாவது நான் எவ்ளோவ் பெரிய முட்டாள் நாயாக பைசாவுக்கு பெறாதா சாதியை நம்பும் அறிவிலியாக இருந்தாலும் நான் என் சாதி தரும் திமிரோடும் துடுக்கோடும் நடமாடுவேன் ஆனால் நீ என்னிடம் நீதியை கோரினால் நீ அம்பேத்கருக்கு இணையானவனாக இருக்கவேண்டும். அமெரிக்கா, இங்கிலாந்து எல்லாம் சென்று பட்டம் பயின்று வந்தால் போனால் போவுது என்று கொஞ்சமாய் மரியாதை தருவோம் இதுதான் சாதி ஹிந்துக்கள் தலித்துகளுக்கு தரும் ஆலோசனை. இதே ஆலோசனையை மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாளும் தலித்துகளுக்கு அருள்பாலிக்கிறது. மாரி அவருடைய திரைக்கதையின் ஊடாகவும், சாதி ஹிந்துவான கதாநாயகியின் தந்தையின் குரல் மூலமாகவும்(“நல்லா படிங்க தம்பி…எதிர்காலத்துல எது வேணும்னா மாறலாம் இல்லையா”)தலித்துகளுக்கு அருள்பாலிக்கிறார்.

பரியனின் நண்பனாக வரும் சாதி ஹிந்து கதாபாத்திரம் பெரிதும் சிலாகிக்கப்படுகிறது. அந்த பரியனின் நண்பனாக வரும் கதாபாத்திரம்தான் பெரும்பான்மையான சாதி ஹிந்து இளைஞர்களின் மனதை பிரதிபலிப்பதாகவும், அந்த இளைஞன் கதாபாத்திரம் பரியனின் வாழ்க்கையில் வந்த இன்னொரு தேவதை என்றெல்லாம் யார் சொல்கிறார்கள்? சாதி ஹிந்துக்களே சொல்லிக்கொள்கிறார்கள். சரி அந்த கதாபாத்திரத்தை மாரி எப்படி கையாண்டிருக்கிறார்?

pariyerum-perumal-sneak-peek.jpg?w=780&h

கதாநாயகியின் சாதிவெறி அண்ணன் நேர்த்தியான சிகையலங்காரம், மீசை, நெற்றியில் தீற்றிய சந்தனம், கவனமாக அயர்ன் பண்ணப்பட்ட சட்டை என்று புழங்க பரியனின் நண்பன் கதாபாத்திரம் மிக கவனமாக ஒரு கோமாளியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பிதுங்கும் தொந்தி, கோமாளிக்கான முக பாவனைகள், செய்கைகள் என்று அந்த கதாபாத்திரம் ஒரு காமெடி பீஸாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த கதாபாத்திரத்துக்கு என்று எந்த அரசியல் நிலைப்பாடோ, கருத்தோ, கோட்பாடோ, பார்வையோ கிடையாது.ஒரு வகையில் இயக்குனரால் ஒரு ஆழமான தாழ்மையுணர்ச்சி கொண்ட ஒரு உருண்டை பிடித்த சாணியை போல வடிவமைக்கப்பட்டுள்ள பரியின் கதாபாத்திரத்தை போலவே இந்த கதாபாத்திரமும் ஒரு தாழ்மையுணர்ச்சி கொண்ட ஒரு முட்டாள் கோமாளி கதாபாத்திரம் என்று புரிந்துகொள்வதற்கான வெளியை மாரியே உருவாக்கி தந்துள்ளார்.

எனவே இரண்டு தாழ்மையுணர்ச்சி கொண்டுள்ள உருட்டப்பட்ட சாணி உருண்டைகள் நட்பு பாராட்டுவதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது? ஒடுக்கப்பட்டவரின் அரசியல் பேச விரும்பிய மாரிக்கு கதாநாயகியின் சாதிவெறி அண்ணன் கதாபாத்திரம் கோமாளியாகவும் பரிக்கு தோள்கொடுக்கும் நண்பன் கதாபாத்திரம் கம்பீரமானவனாகவும் ஏன் தோன்றவில்லை என்பதை நீங்கள் யோசித்தால் இந்த திரைப்படம் ஏன் தலித்துகளின் கலை அரசியலை சிறிதும் உள்வாங்கவில்லை என்பதும் இன்னும் சொன்னால் எப்படி தலித்துகளின் கலை அரசியலுக்கு எதிராக செயல்பட்டிருக்கிறது என்பதையும் உணரமுடியும்.

divya-ilavarasan.jpg?w=780

இளவரசன், சங்கர், கோகுல்ராஜ் போன்ற எல்லா சம்பவங்களின் போதும் தொலைக்காட்சிகளில் ஏராளமான விவாத நிகழ்ச்சிகள் நடந்தன. அவை எல்லாவற்றிலும் சாதி வெறி பன்றிகள் திரும்ப திரும்ப முன்வைத்த பொறுக்கித்தனமான வாதங்களில் ஒன்று வசதியாக வளர்ந்த எங்கள் சாதி பெண்கள் தலித்துகளை திருமணம் செய்துகொண்டு சென்றால் சிரமப்படுவார்கள்.தலித்துகளால் எங்கள் பெண்களை பார்த்து கொள்ள முடியாது என்பது. எதோ தமிழகத்து சாதி ஹிந்துக்கள் forbes வெளியிடும் உலக கோடீஸ்வரர் பட்டியலில் தொடர்ந்து இடம்பிடித்து வருபவர்களை போலவும் தமிழகத்திலேயே ஏழைகள் உள்ள சாதி என்று உள்ளதென்றால் அது தலித் சாதிதான் என்னும் பொருள்பட பேசுவதை கேட்கிறோம். ஆனால் உண்மை என்னவென்று நமக்கு தெரியும். வன்னியர்களும், தேவர்களும், கௌண்டர்களும் தங்கள் சாதிக்குள் சோற்றுக்கு வழியில்லாத எத்தனை பேர் உள்ளனர் என்று தெரிந்தும் தலித்துகள் தங்கள் வீட்டு பெண்களை மணம்முடித்துக்கொள்ள முடியாத பொருளாதார நிலையில் உள்ளனர் என்று நம்புவதையே விரும்புகிறார்கள்.

பரியின் அப்பா icici வங்கியில் மானேஜராக இருந்து ஜோவின் அப்பா ஆடுதிருடுபவராக இருந்திருந்தாலும் பரியின் முகத்தில் மூத்திரம்தான் விட்டுயிருப்பார்கள். ஏனென்றால் இங்கு பிரச்சனை என்பது சாதி வெறியும் சாதியை நம்பும் பன்றிகளும்தான். மாரிக்கு இந்த அடிப்படை பிரச்னையை எதிர்கொள்ள நேர்மையோ, அறிவோ, தைரியமோ இல்லை. அதனால் சாதி ஹிந்துக்கள் அச்சச்சோ என்று உச்சு கொட்டக்கூடிய ஒரு ஆபாசமான உலகை கட்டிமைக்கிறார். அதாவது குலசாமிக்காக மட்டுமே ஆணவ கொலைகள் செய்யும் பெரியவரும், எம்பொண்ணையும் கொன்னுருவாங்கடா என்று பரியிடம் அழும் தகப்பன்களும் புழங்கும் அதிரிபுதிரியான கற்பனா உலகம் மாரியினுடையது. மாரி பரியின் கதாபாத்திரத்தை சோற்றிற்கு வழியில்லாத ஒருவனாகவும் கதாநாயகி ஜோ தனது பெயரில் ஒரு கல்யாண மண்டபத்தை கொண்ட ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தவளாகவும் வடிமைக்கிறார். இளவரசன் திவ்யா விஷயத்தில் இளவரசனின் பொருளாதார நிலை என்பது திவ்யாவை விட மேலானதாக இருந்ததாகவே நாம் அறிந்தோம். இருந்தும் இளவரசனுக்கு நடந்ததை நாம் அறிவோம். சமீபத்தில் ஆந்திராவில் நடந்த ஆணவ கொலையில் கூட அந்த பைய்யன் நல்ல பொருளாதார பின்னணியையும், கல்வியையும் கொண்டவனாகவே இருக்கிறான். இருந்தும் அவன் கொல்லப்பட்டான்.

நிலைமை இப்படியிருக்க மாரி படைக்கும் பரி சோற்றிற்கு வழியில்லாத, தனது பென்சாயல் கொண்ட கூத்தாடி தகப்பனை வண்டிக்காரராக புனையும் கதாபாத்திரமாக வடிவமைத்து சாதி ஹிந்துக்கள் நிஜத்தில் வைக்கும் புனைவான கருத்துருவாக்கத்திற்கு இவர் புனைவில் நிஜம் சேர்க்கிறார். sairat திரைப்படத்தின் மீதும் எனக்கு இதே விமர்சனம் உண்டு. ஆனால் sairat படத்தில் அந்த பையன் தனக்கு ஏற்பட்டுள்ளது காதல் என்று பிரகடனப்படுத்தும் தைரியத்தோடுவாது இருந்தான். மாரியின் பரி வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா உருண்டையும் உருளுதடி என்று கடைசிவரை காதல் என்ற வார்த்தையை குறிப்பாக மூஞ்சில் மூத்திரம் விட்டவுடன் சொல்ல அஞ்சுகிறான்.

pari.jpg?w=780&h=439

மூஞ்சில் மூத்திரம் விட்டதுக்கு revenge எடுக்க வகுப்பறை பெஞ்சில் பெயர் எழுதிவைப்பது, “FLAMES” விளையாட்டு விளையாடும் தேவதை சாதிஹிண்டு நண்பனிடம் கோபித்துக்கொள்வது, பெண்கள் கழிவறையில் தள்ளிவிட்டு தாழ்ப்போட்டு சிறுபிள்ளைத்தனமான ரௌடியிசம் செய்வது, சென்னை சட்டக்கல்லூரி வன்முறையை ஒத்த காட்சிகளை சம்மந்தமில்லாமல் ட்ரைலரிலும், படத்திலும் பயன்படுத்தியது, இளவரசனின் சாவிற்கு எந்தவகையிலும் நீதி கோராதா ஒரு கதையில் இளவரசனின் கதையை சாதி ஹிந்துக்கள் விசிலடிக்கும் வியாபாரமாக்கியது என்று எத்தனையோ பிழைகள், எரிச்சல்கள். இருந்தாலும் இறுதியாக பரிக்கும், ஜோவிற்குமான என்னவென்று பெயர்வைக்கமுடியாத அந்த உன்னதமான, புனிதமான, காவியமான, கலாபூர்வமான, ஸ்ஸ்ப்ப்ப்ப்பா உறவை மாரி மிகக்கவனமாக பெயரிடாமல் தன்னுடைய படத்தையும் மதித்து படம் பார்க்கவரும் சாதி ஹிந்துக்கள் கிஞ்சித்தும் டென்ஷன் ஆவாதபடி தவிர்த்துள்ளார்.

இறுதிக்காட்சியில் கூட அது என்னானு தெரியத்துக்குள்ளாற அத பிச்சு போட்டிங்களே பாஸு என்றுதான் பரி சொல்கிறானே தவிர ஆமாம் எனக்கு அவளை பிடித்திருக்கிறது அவளை காதலிக்கிறேன் என்று சொல்லவில்லை. மாரி கேட்கும் நீதி என்பது உங்கள் பெண்களை எங்கள் பையன்கள் காதலித்தால் என்ன தப்பு என்பதை அல்ல..மாறாக எங்கள் பையன்கள் சும்மா தமாஸுக்கு உங்கள் பெண்களிடம் பேசினால் கூட அடித்து எங்கள் மூஞ்சில் மூத்திரம் விட்டு உங்கள் மூத்திரத்தை வீண்செய்யலாமா? உங்களுக்கு எதாவது urinal infection வந்துவிடப்போகிறது என்கின்ற அக்கறையில்தான் சொல்கிறேன் என்கின்ற ரீதியில் படத்தை முடிக்கிறார்.

இறுதிவரியாக “நீங்கள் நீங்களா இருக்கிற வர நாங்க நாயா இருக்கணும்னு நீங்க நினைக்கிற வர எதுவும் மாறாது” என்ற வசனத்தை விட ஒரு ஆபாசமான வசனத்தை யாரும் எழுதிவிட முடியாது. இந்த வசனம் சாதிஇந்துக்களின் மனநிலையிலும் தலித்துகளின் மனநிலையிலும் என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்தும் என்று மாரி யோசித்துதான் எழுதினாரா..என்னுமோ மயிரு போங்க..

காலாவில் ஒரு அசாத்தியமான பாய்ச்சலை நிகழ்த்தி, தலித் கலையிலக்கிய தளத்தில் ஒரு தவிர்க்கமுடியாத ஆளுமையாக தன்னை நிறுவிய ரஞ்சித் இந்தப் படத்தை தயாரித்துள்ளது உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது. ரஞ்சித் அடிக்கடி “நான் கடினப்பட்டு இழுத்துவந்த தேரை முன்னிழுக்கவில்லையென்றாலும் பரவாயில்லை..பின்னுழுத்து விடாதீர்கள்” என்ற அம்பேத்கரின் வரியை மேற்கோள் காட்டுவார். தலித் கலையிலக்கிய தளத்தில் ரஞ்சித் ஒரு அடி முன்நகர்த்திய தேரை தலைவன் மாரி ஒத்தையாளாக 10 அடி பின்னிழுத்து விட்டிருக்கிறார்.

பா. ஜெயசீலன், சினிமா-சமூகம் குறித்து த டைம்ஸ் தமிழில் எழுதிவருகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

தீயை கூட அணைத்திடலாம் சாதியை ?? 

  • 2 weeks later...

எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம். சத்தமிலாமல் சாதியம் பற்றி மண்மணம் வீச அளிக்கை செய்த விதம் அருமை. 

  • கருத்துக்கள உறவுகள்

மேலோட்டமாகப் பார்த்தால் மிகவும் அருமையான ஒரு பதிவு. சாதிக்கொடுமையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகத்தான் தோன்றுகிறது. ஆனால் படம் நெடுகிலும் மெல்லியதாக இழையோடப்பட்டிருக்கும் உயர் சாதியினரை அனுசரித்துப் போகவேண்டும் அல்லது, ஒதுங்கிப் போகவேண்டும் என்கிற கருத்து பலராலும் பார்க்கப்படமலேயே நகர்த்தப்படுகிறது.

உதாரணத்திற்கு, முதலாவது காட்சியிலேயே பரியேறும் பெருமாள் உற்பட்ட கீழ்ச்சாதி ஆண்கள் ஒரு சிறிய குட்டையில் கால் நனைத்து அமர்ந்திருப்பதும், உயர்சாதி குழுவொன்று அவ்விடத்திற்கு வரும்போது, எந்த எதிர்ப்புமில்லாமல் எழுந்து விலகிச் செல்வதும் காட்டப்படுகிறது. இடையில் நாயகன் கேட்கும் "அவங்களுக்காக நாம் ஏன் எழுந்து போகணும்?" என்கிற கேள்விக்குக் கூட இருக்கும் இன்னொரு கீழ்ச்சதி ஆணினால், "அது அப்படித்தான், எதுக்கு வம்பு?" என்கிற பதிலுடன் உயர்சாதியின் ஆணவம் ஏற்கப்பட்டுவிடுகிறது. 

இதுபோலவே, நாயகனை திருமண வீட்டிற்கு வரப்பண்ணித் தாக்கும்போது, நாயகியின் தந்தை "உன்னால் என் மகளையும் கொன்று விடுவார்கள்" என்று நாயகனிடம் கெஞ்சுவதுடன் அவரின்பால் எமக்கு அனுதாபத்தை ஏற்படுத்த முனைவதுமுதல், இறுதிச் சண்டையில் தனது பெறாமகன் மற்றும் மகன்கள் நாயகனுடன் சண்டையிடும்போது அவர்களை ஏற்றி காரில் அனுப்புவதும், இறுதியில் நாயகனுடன் சமரசம் பேசுவதும், நாயகன் மழுப்பலான பாணியில் அவரது சாதியை விமர்சிப்பதும் சுத்த கோழைத்தனம்.

தமிழ்நாட்டில் சாதிக்கொடுமை இன்றும் மிகவும் உயிர்ப்புடனும் வெறியுடனும் கொண்டாடப்படுகிறது. சாதிக்கொடுமையாலும், சாதி ஆணவத் திமிரினாலும் நாளாந்தம் இளைஞர்கள் கொல்லப்படுவதைக் காட்டுவதற்கு கையாலாகாத, உயர் சாதியை எதிர்க்கத் துணிவில்லாத கீழ்ச்சாதி பரியேறும் பெருமாளை இயக்குனர் பாவித்திருப்பது உண்மையிலேயே சாதிக்கொடுமையை எதிர்த்துத்தானா அல்லது உயர் சாதியின் நல்ல பக்கத்தை காட்டுவதற்கா என்று தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

ஒடுக்குமுறை செய்யும் மேல்சாதியிடம் வன்மத்தை வளர்க்காமல் அவனது மனசாட்சியை உலுக்குவது விவேகம்.. கோழைத்தனம் இல்லை என நினைக்கிறேன். இயற்கை அளித்த உடல் வலிமையே வீரம் எனும் நாகரிமடையாத காலத்திலா நாம் வாழ்கிறோம்? சமூக மாற்றத்திற்கான அறைகூவல் விடுக்கும் பக்குவம் படம் முழுவதும் விரவிக் கிடக்கக் காணலாம். நாயகனை நிதானமாகச் செயல்பட வைத்து நம்மைக் குமுற வைக்கிறாரே, அதுவே இயக்குநரின் வெற்றி.  இளைய வயதினரான மாரி செல்வராஜின் எழுத்தைப் போல் அவரது திரைப்படத்திலும் முதிர்ச்சி ஒளிர்கிறது. 

Edited by சுப.சோமசுந்தரம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.