Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு தேர் நாள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வாரம் ஒரு பேப்பரில் யாழ் பிரிய சகி எழுதிய கதைஇது

ஒரு தேர் நாள்

இரவு 8 மணி போல மாமா டெலிபோன் அடிச்சார். " என்ன மாதிரி நாளைக்கு கோயில் வாற பிளான் ஏதும்?" எண்டு கேட்க நானும் உடனே " ஓமோம்..வாறம் வாறம்" எண்டு துள்ளினன். எங்க, எத்தினை மணிக்கு சந்திக்கிறதெண்டு கதைச்சு வைச்சதும் தான் எனக்கு கவலை வந்திச்சு. " இப்ப எந்த உடுப்பு போடுறது?" முதலே தெரிஞ்சிருந்தா 4,5 நாளுக்கு முதலே ரெடியா எடுத்து வைச்சிருக்கலாம் இப்ப என்னத்த போட எண்டு இரவிரவா ஒரே யோசனையில நித்திரையும் சரியா வரேல்ல. காலேல தான் அம்மா சொன்னதை எடுத்துப்போட்டுக்கொண்டு அண்ணரோட கிளம்பிட்டன்.

ஹை வே ஆல இறங்கினதுமே ட்ரஃபிக்! இந்த ட்ரஃபிக்கில விசேசம் என்னவெண்டால் எல்லாம் நம்ம தமிழ் ஆக்களோட வாகனங்கள் எண்டது தான். யன்னலை இறக்கி விட்டுட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு பொலீஸ்காரன் கையை காட்டின பாதையில போய் காரையும் பார்க் பண்ணிட்டு நடக்கத்தொடங்கினன். கோயில் வர 5 நிமிஷ நடை. சரியான கூட்டம். கூட்டத்துக்க நுழைய முதலேயே அண்ணா " கையை விடப்படாது!" எண்டு அறிக்கை விட்டார். சரி எண்டு தலையை ஆட்டிப்போட்டு மாமாவையை தேட தொடங்கினம். நாங்கள் சொன்ன டைமுக்கு வராததால சொன்ன இடத்துல மாமா இல்லை. அங்கையும் இங்கையும் பார்த்துக்கொண்டு நிக்கத்தான் " பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சீலனை, யேர்மன் நாட்டிலிருந்து பிறேம் தேடுகிறார். சொன்ன இடத்தில் வந்து நிற்குமாறு கேட்டுக்கொள்கிறார்!" எண்டு அறிவித்தல் கேட்டிச்சு. அது நாங்களில்லை. ஆனா மாமாக்கு இப்பிடி ஒரு அழைப்பு விடுவமா அல்லது நாளை நமதே போல ஒரு குடும்ப பாட்டு எடுத்து விடுவமா " அதுசரி அப்பிடி ஒரு பாட்டு நமக்கு இருக்கா" எண்டு தேடுற அண்ணாவையும் அலட்டி குழப்பிக்கொண்டு நிண்டன். பிறகு ஒரு மாதிரி மாமாவையை கண்டு பிடிச்சுட்டு கோயிலுக்க போய் அரிச்சனையும் பண்ணி அம்பாளை எனக்கு நல்ல புத்தி தரும்படி கும்பிட்டு வர அம்பாள் அழகா அலங்கரிச்சு தேரில ஏறி இருந்தா. எவ்ளோ நாளைக்கப்புறம் அம்பாள் தரிசனம் எண்டு நினைக்கவும் தேர் நகர அடிச்ச மேளம், நாதஸ்வர ஒலிகளிலும் ஒரு நிமிஷம் மெய் சிலிர்த்தது உண்மை தான்! என் உயரத்துக்கு தெரியாவிட்டாலும் கொஞ்சம் எட்டி எட்டி காவடி ஆடுபவர்களை பார்த்துக்கொண்டு அம்பாள் என்னை கடந்து போக நம்மூர் அம்மன் நினைவோட கும்பிட்டன்.

"தேரோட போறேல்லையா" எண்டு கேட்க

" நீ நடப்பியா அவ்ளோ தூரம் அதுவும் உந்த ஹீலோட?" எண்டு பதில் கேள்வி வந்திச்சு.

அதோட மச்சான், மச்சாளும் அவ்ளோ துரம் நடக்க மாட்டினம் எண்டிட்டு போய் கோயிலின் வலது பக்கத்துல ஒரு புல்வெளியில இருந்தன். வீட்டில இருக்கேக்குள்ள சாப்பாடு இருந்தாலும் பசிக்காது ஆனா இப்பிடி எங்காச்சும் வெளிக்கிட்டா ஏதோ 10 நாள் பட்டினி போல பசி வயித்தை கிள்ளும். சரி மாமாவை தானே சாப்பாடு எடுக்க போயிருக்கினம் எண்டு அதில இருந்த புல்லுகளிண்ட தலையை கிள்ளி அதுகளை காயப்படுத்திக்கொண்டு இருந்தன். பசியெண்டு மட்டுமில்லை போகும் போது அண்ணா

" எண்ட தங்கச்சியை கவனமா பாருங்கோ" எண்டு 12 வயசு மச்சான்கிட்ட சொல்லிட்டு போனதும் இதுதான் நேரமெண்டு மச்சான் அதால பெடியங்கள் சும்மா போனாலும் அவையையும் என்னையும் ஒருக்கால் பார்ப்பதும் எரிச்சலா இருந்திச்சு. சரி மனசை வேறு எங்கையும் விடுவம் எண்டா அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்த அறிவித்தல்கள் காதில விழுந்திச்சு. பிள்ளைகளை பெற்றோர் தேடும் காலம் போய் பெற்றோரை பிள்ளைகள் அழுதபடி தேடும் காலம் வந்துட்டுது. காரியாலயத்தில சின்னப்பிள்ளை ஒண்டு பெயர் கூட சரியாக சொல்லத்தெரியாமல் பெற்றோரை தேடி அழுதுகொண்டு நிற்பதாக ஒரு 4,5 தடவை அறிவிச்சாங்க. பிள்ளையின் உடையின் விவரம், கையில் கட்டியிருந்த கடிகாரத்தின் விவரம் சொல்லியே அறிவித்தார்கள். இப்படி அந்த முக்கால் மணி நேரத்துக்குள்ள பல குழந்தைகளின் அறிவித்தல்கள். சில பிள்ளைகள் பெற்றோர் பெயர் சொல்ல தெரிந்தவர்கள் சிலர் தங்கள் பெயர் மட்டும் சொல்ல தெரிந்தவர்கள் எண்டு அறிவித்துக்கொண்டு இருந்தாங்க. இந்த பெற்றோர் ஏன் இப்பிடி கவலயீனமா இருக்கினம் எண்டு விளங்காம இருந்திச்சு. இதுவரைக்கும் ஒண்டோ இரண்டு தடவை தான் சங்கிலி கண்டெடுக்கப்பட்டதாக அறிவிச்சதை கேட்டன்!

மரவெள்ளிக்கிழங்கு, பூசனிக்காய், உருளைக்கிழங்கு குழம்பு, அப்பளம், பொரிச்ச மோர் மிளகாய் அத்தோட ஊறுகாயில் ஒரு சட்னி போல ஒன்று (சரியாக தெரியவில்லை) எல்லாம் சேர்த்து குழைத்த அம்பாள் அன்னதான சோற்றை சொந்தத்தோட வட்டமாக இருந்து சாப்பிடுவதில எத்தனை சந்தோசம். யாரும் மூச்சு விடல. எல்லாரும் சாப்பாட்டில பிசி. அவ்வளவு பசி. அங்க ஒரு பைப்பில கன பேர் கை கழுவிக்கொண்டு நிண்டாங்க. நாங்களும் கை கழுவ போக அடுத்த ரண்டாவது ஆளா நான் கழுவ லைனில நிக்க உபயகாரர் ஒருவர் அறக்க பறக்க ஓடி வந்து

" இதில கை கழுவுறேல்லை. பாருங்கோ இவ்வளவு தண்ணி ஓடி சேறா இருக்கு. உங்கட வீடெண்டா இப்பிடி செய்வியளோ?" எண்டு கோவத்தோட கேட்டதுமில்லாமல் ஒரு கையில பிள்ளையோட கையை கழுவிக்கொண்டிருந்த ஒரு அண்ணாவை பாதி கை கழுவியதோட பைப்பை திருப்பி மூடியும் விட்டார்.

" இதில் கை கழுவ கூடாது!" எண்டொரு போர்ட்டை போட்டிருக்கலாம் தானே அப்படியெண்டு நான் சத்தமா சொல்லாம மெல்லமா மாமா காதில சொல்லிட்டு அங்கால போய் கையையும் கழுவிட்டு கடையளை பார்ப்பமெண்டு போனன்.

நுழைவாயிலில் " எல்லாரும் கேளுங்கோ, ஆரும் விடு பட்டா இந்த இடத்தில தான் சந்திக்கிறது என்ன" எண்டு ஏதோ அற்றாக்குக்கு போவது போல கதைச்சுப் பேசிக்கொண்டு நுழைஞ்சம். வாசலிலேயே நல்ல வரவேற்பு " 4 சாறி 100 யூரோ" எண்டு. தொங்கின சாறியளை பார்த்தா எல்லாம் புது மொடலா இருந்திச்சு. மாமியையும் இழுத்துக்கொண்டு போனா இந்த வரவேற்பு எனக்கு மட்டுமில்லை அங்க கன பேருக்கு எண்டு மொச்சுக்கொண்டு நீண்ட கூட்டம் சொல்லிச்சு. என்னால எட்டி கூட பார்க்க முடியல. சரி வேற கடையள் இருக்குத்தானே எண்டு நடந்தன்.

அப்பிடியே நுழையக்கூடிய கடையா பார்த்து நுழைஞ்சு, முடியாத கடையை கொஞ்சம் எட்டி நிண்டு பார்த்துட்டு இல்லை கட்டாயம் அதை ஒருக்கால் பார்க்கணும் எண்டு தோணின கடையை கொஞ்சம் இடிச்சு பிடிச்சு போய் பார்த்துட்டு " என்னடாப்பா மாமி கூட சாரி எடுத்துட்டா, நானும் அம்மாக்கு சாறி எடுத்துட்டன் எனக்குத்தான் கிடைக்குதில்லையே " எண்டு சலிப்பா இருந்திச்சு. எனக்கு எங்காவது இப்பிடி போனால் அங்க ஒரு பொருள் வாங்கிடணும். அப்பத்தான் பிறகு "அட இது அங்க வாங்கினது, இது இங்க வாங்கினது" எண்டு சொல்லிக்கலாம். அப்பிடி முதல் முதல் கோயிலுக்கு வந்திருக்கேன் ஏதும் வாங்குவம் எண்டா முடியலயே எண்டு நெச்சன். மச்சாள் கையை பிடிச்சு இழுத்துக்கிட்டே நிண்டா என்னெண்டு பார்த்தா பச்சைக்கலர் காப்பு பிடிச்சிருக்காம். சரியெண்டு உள்ள போய் காப்பை அவாவோட கையுக்கு அளவு பார்த்துக்கொண்டு நிக்க பக்கத்தில ஒரு ஆண்டி " ஆஆ..." எண்டு கத்தினா. பார்த்தா பின்னால வந்த ஆண்டி பிள்ளையை வைச்சு தள்ளிக்கொண்டு வந்த வண்டி முன் சில்லு இவாவோட காலுக்கு மேல. ஆனால் அந்த ஆண்டி வண்டியை லொக்கில விட்டுட்டு என்னவோ சீரியசா பார்த்துண்டு நிக்குறா. அந்த ஆண்டிக்கிட்ட விசயத்தை சொல்ல ஆண்டியும் லொக்கை தட்ட தட்ட அது எடுபடுதில்லை. என்ன செய்ய எண்டு நானும் பார்த்துக்கொண்டு நிண்டன். அப்பத்தான் கடைக்கார அண்ணா வந்து வண்டில் முன் பக்கத்தை தூக்கி அங்கால வைச்சார். " அட இந்த யோசனை எனக்கு வரலயே " எண்டு நெச்சன். சரி கவனம் கடையில இல்லாம அங்கால எங்கையோ போகுது எண்டு கவலைப்பட்டால் இப்பிடி நல்ல யோசனைகள் வருமோ என்னவோ..!

காப்பு அளவில்லை எண்டு கவலைப்பட்ட மச்சாளுக்கு இன்னொரு கடையில வாங்கலாம் எண்டு ஆறுதல் சொல்லிக்கொண்டு வந்தா உடுப்பு கடை ஒண்டு, எங்கையோ பார்த்த பெயரா இருக்கே எண்டு மாமியோட ஒரு நோட்டம் விட்டா உள்ளுக்க பிடிச்ச சாறி, பிடிச்ச கலரில என்னை பார்த்து சிரிச்சுது. அவ்ளோ தான். அந்த கடை ஆண்டிக்கிட்ட சாறியை வாங்கி பார்த்தா அந்த ஆண்டியையும் எங்கையோ பார்த்த ஞாபகம். கவனம் சாறில இருந்ததால யோசனையை விட்டுட்டு எல்லாருக்கும் சாறியை காட்டி கெட் பீஸ், போடர், நீளம் கூடவா இல்லை அப்புறம் கட்டிட்டு ரோட்டெல்லாம் கூட்டணுமா எண்டு செக் பண்ணிட்டு இருக்க அந்த ஆண்டி " தங்கச்சி, சாறி எடுக்க போறியளோ? எடுக்கல எண்ட இங்க தாங்கோ" எண்டா கடுகடுப்பான குரலில். அந்த கடுகடுப்பான குரலை கேட்டதும் தான் எனக்கு ஞாபகம் வந்திச்சு அவா யாரெண்டு. உடனே என்னை அறியாமலே என் முகம் மாறிச்சு பாருங்கோ. நானும் விடாமல் " ஓம் எடுக்கப்போறன். அப்போ வடிவா பார்க்கலாம் தானே?" எண்டு அதே தொனியில் சொல்லிவிட்டு பிறகு சாறியையும் வாங்கிகொண்டு வர மாமா நிண்டார். ஓடி வந்து மாமாகிட்ட " மாமா அந்த ஆண்டி ஞாபகம் இருக்கா, அவேண்ட கடையில சாறி எடுக்கும் போது ரண்டு பேரும் கொஞ்சம் முறுகுப்பட்டம். சரியான டென்சன் பார்ட்டி! எப்பிடி மாமா எனக்கு எப்பவும் இவா வந்து வாய்க்குறா?" எண்டு கேட்க மாமா முகத்தில ஒரு ரியாக்சனும் இல்லை. மாமி பின்னால நிண்டு கையில நுள்ளினா. திரும்பினா அங்க மச்சானுக்கு குர்தார் காட்டிக்கொண்டு நிண்டது அந்த ஆண்டியோட ஹஸ்பண்ட்.

" ஐயோ கடவுளே!!"

மாமாக்கு அவர் நல்ல பழக்கம் எண்டதால " தான் சொல்ல முடியாததை நீ சொல்லிட்டா எண்டு சந்தோசப்படுறார்! " எண்டு மாமா நக்கலா சொல்ல அந்த அங்கிளும் கோவிக்காம சிரிச்சது ஆச்சர்யமா இருந்திச்சு. ஆனாலும் அப்பாடி நான் தப்பினதே பெரிய விசயம் எண்டு நடந்தன்.

அதுக்கு மேல என்னால நடக்க முடியல. கால் அவ்ளோ நோவு. நடக்க நடக்க குதி காலில இருந்து முழங்கால் வரை நரம்பு நோகுமெண்டாலும் ஸ்டைலா ஹீல் போடோணும். நோகும் எண்டதுக்காக அதை விடவும் முடியுமா? வெயில் வேற, நாக்கெல்லாம் காஞ்சு போச்சு. எல்லாரும் போய் அந்த பந்தலில வித்த சர்பத் ஒரு கப் வாங்கி குடிச்சம். எனக்கு இனிப்பு பெரிசா பிடிக்காது. ஆனாலும் வறண்ட நாக்குக்கு இதுவே பெரிசு எண்டு குடிக்க அங்கால மோர் குடுத்தாங்க. தயிருக்குள்ள சின்னதா வெங்காயம், மிளகாய் வெட்டிப்போட்டு, ஊறுகாயும் போட்டு பாதி புளிப்பு பாதி உறைப்பா நல்ல டேஸ்ட்டா இருந்திச்சு. மத்த ஒருத்தரும் வேண்டாம் எண்டு பயந்திச்சினம். எனக்கொரு கப்பும் மாமாக்கு ஒரு கப்பும் போய் அந்த கூட்டத்துக்கால கஷ்டப்பட்டு வாங்கி வந்து குடிச்சன். பக்கத்தில இருந்த றோட்டில எல்லாரும் இருந்து களைப்பாறீனம். அப்பாடா எண்டு ஹீலை கழட்டி வைச்சுட்டு காலுக்கு கொஞ்ச நேரம் விடுதலை குடுத்துட்டு நானும் இருந்து போற வாற ஆக்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தன்.

பக்கத்தில ஒரு வெள்ளைக்காரி சாறி கட்டி இருந்தா. இல்லை..இல்லை கட்டப் பழகி இருக்கா. அவவோட அந்த வெள்ளைக்கலருக்கு குங்கும கலர் சாறி நல்ல வடிவா இருந்திச்சு. உள் மனம் சொன்னாலும் வெளியில அதை ஒத்துக்க முடியாம அவா சாறி கஷ்டப்பட்டு கட்டியிருப்பதை நக்கல் அடிச்சுக்கொண்டு இருந்தன். கொஞ்ச நேரத்தால அவா எழும்பி போக பார்த்தா அவா இருந்தது " ஒரு பேப்பர்" மேல. "எல்லாம் நேரம்" எண்டு நான் சொல்ல மச்சான் " அவா அதை ஏதோ " ஒரு பேப்பர்" எண்டு நெச்சு இருந்திருப்பா" எண்டு சொல்ல சரியெண்டு பேப்பரை பிரிச்சு வாசிச்சன். பொறுமையில்லாம அங்கையும் இங்கையும் எண்டு பறந்து பறந்து தான் படிச்சன். அப்பத்தான் எங்களுக்கு தெரிந்த ஒருவரின் " மறந்த நாள்" கதைகண்ணில பட்டிச்சு. என்னடாப்பா பிறந்த நாள் இருக்கு இதென்ன புதுசா மறந்த நாள் எண்டு நினைச்சுக்கொண்டு படிச்சா, தொடர்ச்சி எண்டு இன்னொரு பக்கத்தை காட்ட அதையும் எடுத்து வாசிக்க மச்சான் ஒரு பஞ்சு மிட்டாயை வாங்கி வந்து

" இப்ப எடுத்தா சரி பிறகு இல்லை" எண்டு வெருட்ட.

" ஏன் இவ்ளோத்தையும் நீரே சாப்பிடும் ஐடியாவோ?" எண்டு கொஞ்சம் வாயாடிட்டு படிக்க தொடங்கினா மாமா " ஏதும் வெட்டுக்குத்து ஐடியாவோ தெரியா. வெளிக்கிடுவம்" எண்டு சொன்னார்.

பேப்பரை எடுத்து மடிச்சு பாக்குள்ள வைச்சுக்கொண்டு நடந்தன். பாக் புல் எண்டதால பேப்பர் கொஞ்சம் வெளிய விட்டு பூட்டாம ஹீலையும் போட்டுக்கொண்டு மாமாவையிடம் விடை பெற்றுக்கொண்டு நடந்தன். ஆக்கள் குறைவான இடம் எண்டால் கொஞ்சம் கெந்தி கெந்தி நடந்து கொண்டு காரை தேடி பிடிச்சு வெளிக்கிட்டம். திருப்பம் ஒண்டில அண்ணா " வலது பக்கம் போகணும் என்ன" எண்டு கேட்க " ஓமோம்" எண்டு உறுதியா சொன்னன். கொஞ்ச தூரம் போக, வரும் போது பார்க்காத இடங்கள் வந்திச்சு. " சரி...பாதையை மாறி சொல்லிட்டன். வாங்கி கட்ட முதல் நானே சொல்லுறது பெட்டர் " எண்டு நினைச்சுப்போட்டு " இது வேற பாதை போல கிடக்கு " எண்டு மெல்ல சொன்னன். " எனக்கு அப்பவே தெரியும். திருப்புறதுக்கு ஒரு பாதை பார்த்துக்கொண்டு தான் இவ்வளவு தூரம் ஓடுறன் " எண்டார் அண்ணா கோவமா. அதுக்கும் வழிஞ்சு ஒருக்கால் சிரிச்சுப்போட்டு பாதை திருப்பி சரியான பாதையில போக மிச்ச கதையை வாசிப்பமெண்டு பாக்கை எடுத்தா அந்த " ஒரு பேப்பரை" காணேல்லை. கெந்தி கெந்தி நடந்ததில எங்கையோ விழுந்திட்டுது. கதையில காலேல இருந்தே ஒரே பிரச்சனை. பிறகு என்ன தான் நடந்திச்சு? அந்த மறந்த நாள் தான் எது? எண்டு தலையை பிய்ச்சுப் போட்டு நம்மூர் தேர் ஞாபகங்களை ஒருக்கால் மீட்டுப் பார்த்தன்...

அம்மன் தேர் எண்டால் நண்பியோடு கதைச்சுப்பேசி கலர் காட்டவென்றே ஒரே கலர் சட்டை போடுவது, கை நோக நோக தேர் இழுப்பது, கச்சானோடு அரச மர நிழலில இருந்து கதை அளப்பது என்று பல ஞாபகங்கள் வந்திச்சு....

அப்போ தான் " நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்" எண்ட ஏதோ ஒரு பாட்டின் வரி எவ்ளோ உண்மை என்றும் விளங்கிச்சு...

சகி தேர்த் திருவிழாக்கதை நல்லா எழுதியிருக்கிறீங்கள்....இங்கய

இந்த வாரம் ஒரு பேப்பரில் யாழ் பிரிய சகி எழுதிய கதைஇது

ஒரு தேர் நாள்

" எண்ட தங்கச்சியை கவனமா பாருங்கோ" எண்டு 12 வயசு மச்சான்கிட்ட சொல்லிட்டு போனதும் இதுதான் நேரமெண்டு மச்சான் அதால பெடியங்கள் சும்மா போனாலும் அவையையும் என்னையும் ஒருக்கால் பார்ப்பதும் எரிச்சலா இருந்திச்சு. .

நான் பாக்கேலையே.. பாத்திருந்தாலும் பிரச்சினையப்பா.. நல்ல காலம்!! :huh: :P

// பிறகு ஒரு மாதிரி மாமாவையை கண்டு பிடிச்சுட்டு கோயிலுக்க போய் அரிச்சனையும் பண்ணி அம்பாளை

எனக்கு நல்ல புத்தி தரும்படி கும்பிட்டு வர அம்பாள் அழகா அலங்கரிச்சு தேரில ஏறி இருந்தா :) //

சகி எழுதிய கதையை சாத்திரித் தாத்தா சுட்டுப் போட்டதுக்கு நன்றீங்கோ :)

தேர் அனுபவம் அருமை.... :)

சகி அக்காவின்ட தேர் நாள் அனுபவம் நல்லா தான் இருக்கு ஆனாலும் உங்க அண்ணா 12 வயசு மச்சானிட்ட உங்களை பார்க்க சொல்லிட்டு போனது சூப்பர்............ :P

  • கருத்துக்கள உறவுகள்

பிரிய சகியின் அழகான கதையை சுத்திய சாத்திரி ஸாரி ஸாரி சுட்டுப்போட்ட சாத்திரிக்கு நன்றிங்க.

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்கு மேல என்னால நடக்க முடியல. கால் அவ்ளோ நோவு. நடக்க நடக்க குதி காலில இருந்து முழங்கால் வரை நரம்பு நோகுமெண்டாலும் ஸ்டைலா ஹீல் போடோணும். நோகும் எண்டதுக்காக அதை விடவும் முடியுமா?

நல்ல திருவிழாதான். சின்னச் சின்ன விசயங்களையும் நுட்பமாகக் கவனித்து எழுதியுள்ளீர்கள். :):D

சகி தேர் நாள் அனுபவம் நன்னாயிருக்கு....! தொடர்ந்து எழுதுங்க...! :)

கூட்டத்துக்க நுழைய முதலேயே அண்ணா " கையை விடப்படாது!" எண்டு அறிக்கை விட்டார்.

நல்ல அண்ணா ;)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.