Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மரப்பாவம்
-----------------

large.BananaCoconut.jpg

'உங்கள் வீட்டில் நிற்கும் தென்னை மரத்தை நீங்கள் வெட்ட வேண்டும்.........' என்றார் அவர். 

அவர் பக்கத்து வீட்டில் குடியிருப்பவர். பக்கத்து வீட்டுக்காரரின் மகள். மிகவும் வயதாகிவிட்ட தந்தைக்கு உதவியாக சில மாதங்களின் முன் இங்கு குடி வந்தார். நான் இருக்கும் அமெரிக்காவின் மேற்கு கரையில் ஒரு தென்னை மரம் கூட கிடையாது என்று யாரோ சொல்லக் கேட்டிருக்கின்றேன். மேற்கு கரை எங்கெனும், மேலே கனடா எல்லையில் இருந்து கீழே மெக்சிகோ எல்லையில் வரை உள்ள சில ஆயிரம் மைல்களிலும், தென்னை மரமே இல்லை என்னும் போது, என் வீட்டில் தென்னை மரமா என்ற யோசனையுடன் அவரைப் பார்த்தேன்.

'தென்னை மரமா................... என் வீட்டில் இல்லையே..................'

'ஆமாம்.............. அந்த மரம் முன்னர் இங்கிருக்கவில்லை.............. ஆனால் இப்பொழுது ஒரே இரவில் இப்படி வளர்ந்திருக்கின்றது.........' 

'என் வீட்டிலா அல்லது உங்கள் வீட்டிலா..............' என்று உண்மையான சந்தேகத்துடன் கேட்டேன்.

'என் வீட்டில் மரம் எதுவுமே இல்லை.............. உங்கள் வீட்டில் தான் ஏராளமான மரங்கள் நிற்கின்றன..........' என்றார் கொஞ்சம் கடுமையுடன்.

என்னுடைய ஆங்கிலத்தின் தொனி தான் அவரை சினமடைய வைத்திருக்க வேண்டும். நான் சாதாரணமாகவே தான் கேட்டேன், ஆனால் ஆங்கிலம் தான் அந்தக் கணத்தில் கையைவிட்டு விட்டது. இரவல் மொழியில் பணிவு இல்லாமல் போய் விட்டது என்று விளக்கம் கொடுக்கவா முடியும்.  நிறைய காய்களும் தன்னுடைய வீட்டுக்குள் விழுந்திருக்கின்றன என்றார் அவர். அதனால் அவர் வீடு ஒரே குப்பையாகக் கிடக்கின்றது என்றும் குற்றப் பத்திரிகையைத் தொடர்ந்து வாசித்தார்.

'தேங்காய்களா.....................' என்றேன் ஆச்சரியத்துடன். இங்கு ஒரு டாலருக்கு விற்ற தேங்காய்கள் இப்பொழுது மூன்று டாலர்கள் ஆகிவிட்டன. ஆனால் என் வீட்டில் எந்த மரத்தில் தேங்காய்கள் காய்க்கின்றன என்று தெரியவில்லையே. 

'இல்லை................... அவை மாதுளையின் காய்கள்......................' என்றார்.

மாதுளை இந்த வருடம் எந்த வருடமும் இல்லாதது போல காய்த்து நிற்கின்றது. நீலி என்ற ஒரு பெண் தெய்வம் பற்றி உங்களுக்கு தெரியுமா. நீலியை ஒரு கொடிய பேய் என்று சொல்பவர்களும் உண்டு. இந்த மாதுளையும் ஒரு பெரும் நீலித் தெய்வம் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு பிரமாண்டமாய் நிற்பது போல நிற்கின்றது. ஆகாயத்தின் ஒரு பகுதியையே மறைத்து அதன் கீழ் முழு நிழலை வைத்திருக்கின்றது. மாதுளை மரம் இப்படியும் வளருமா என்றே நம்ப முடியாமல் இருக்கின்றது. இது அமெரிக்காவில் நின்றாலும், இது அமெரிக்க மாதுளை இல்லை, ஆசிய மாதுளை என்றே ஒரு இடத்தில் விற்றார்கள். ஒவ்வொரு திசையிலும் நூற்றுக் கணக்கான காய்களுடன் ஆயிரம் கண்களுடைய நீலி போல நிற்கும் மாதுளையின் ஒரு பக்கம் பக்கத்து வீட்டுக்குள் சரிந்திருந்தது.

'மன்னிக்க வேண்டும்............... நான் உங்களின் வீட்டுக்குள் வரும் அந்த மாதுளையின் பகுதியை இந்த வாரத்துக்குள்  வெட்டி விடுகின்றேன்.............'

'தென்னை மரம்.................?' என்று கேள்வியாக நின்றார்.

தென்னை மரத்தை தயவு செய்து கொஞ்சம் காட்ட முடியுமா என்றேன். இந்த தடவை வந்த ஆங்கிலத்தில் பணிவு நன்றாகவே இருந்தது. வாருங்கள் என்று அவர் வீட்டின் ஒரு பக்க கதவைத் திறந்து உள்ளே கூட்டிப் போனார். அங்கே பாருங்கள் உங்களின் தென்னை மரத்தை என்று மேலே விரலை உயர்த்திக் காட்டினார்.

'இதுவா................. இது தென்னை மரம் இல்லை............. இது வாழை மரம்...............'

பல வருடங்களின் முன்னர் ஒரு நாள் இங்கு ஒரு செய்தி நிறுவனம் வட கொரியா எங்கே இருக்கின்றது என்று ஒரு உலக வரைபடத்தில் சுட்டிக் காட்டும்படி பலரை நேரலையில் கேட்டிருந்தார்கள். பல அமெரிக்கர்கள் கனடாவையே வட கொரியா என்று சுட்டிக் காட்டியிருந்தார்கள். எனக்கு வாழை தென்னை ஆகியது அதை விட பெரிய செய்தி.

'இந்த வாழை மரங்கள் என் வளவுக்குள் தானே நிற்கின்றது. இதில் நான் எதை வெட்ட வேண்டும்.................'

'இந்தப் பக்கம் வரும் இலைகள் எல்லாவற்றையும் நீங்கள் வெட்ட வேண்டும். இவை ஏன் என் வீட்டின் கூரையின் மேல் ஆடிக் கொண்டு நிற்கின்றன.......... என்ன பெரிய இலைகள்...................' என்று சலித்துக் கொண்டே அவரின் கூரைக்கு மேல் போயிருந்த வாழை இலைகளை காட்டினார். அங்கே பார்த்தேன். சமீபத்தில் வீசிய பெருங்காற்றில் வாழை இலைகள் கிழிந்திருந்தன. யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று அவை அயல் வீட்டுக்கார பெண்ணின் கோபம் அறியாமல் அடுத்த வீட்டுக் கூரையின் மேல் காற்றில் ஆடிக் கொண்டிருந்தன. சுற்று முற்றும் பார்த்தேன். மற்ற வீடுகளில் மரங்கள் எல்லாம் அடக்க ஒடுக்கமாகவே நின்று கொண்டிருந்தன. என் வீட்டில் எல்லா மரங்களிலும் நீலித்தெய்வம் குடியேறியிருந்தார்.

ஒரு பிரச்சனையும் இல்லை, வாழை இலைகளை வெட்டி விடுகின்றேன், ஆனால் இரண்டு வாழைகள் குலைகள் போட்டிருப்பதால் உடனடியாக வெட்ட முடியாது என்றேன். எப்போது வெட்ட முடியும் என்று ஒரே பிடியாகவே நின்றார். குளிர்காலம் முடிந்து, வசந்த காலம் வரும் போது குலைகள் மீண்டும் முற்ற ஆரம்பிக்கும் என்று வழக்குக்கு ஒரு வாய்தா கேட்டேன். காற்றும் புயலும் மழையும் மாறி மாறி வருகின்றது, இவை முறிந்து வீட்டுக்கு மேல் விழுந்தால் என்னவாவது என்று ஒரு காப்புறுதி நிறுவனப் பணியாளர் போல கேட்டார். சில வருடங்களின் முன்னர் ஒரு வாழை முற்றிய குலையுடன் அவர்களின் வீட்டுக்குள் விழுந்ததைச் சொன்னேன். வாழை முறிந்து விழுந்தாலும் அதனால் சேதம் எதுவும் ஆகாது என்று உறுதிப்படுத்தவே அதைச் சொன்னேன். அதைக் கேட்டு திடுக்கிட்டவர் அப்பா சொல்லவில்லையே என்றார்.

'உங்களின் அப்பா மிகவும் நல்ல ஒரு மனிதர்..................'

'அவர் சரியான அப்பாவி................... மனிதர்கள் அவரை ஏமாற்றி விடுகின்றார்கள்...............'

எந்தப் பக்கம் போனாலும் கல்லால் எறிவது என்று அவர் முடிவெடுத்து விட்டார் என்று தெரிந்தது. அப்பாவை எங்கே சில நாட்களாக வெளியே காண்வில்லையே என்று கேட்டேன். அப்பா குளியலறையில் வழுக்கி முன் பக்கமாக விழுந்து மிகவும் பலமாக அடிபட்டு, படுத்த படுக்கையாகவே கிடக்கின்றார் என்றார். முன்னர் வாழை ஒன்று முறிந்து அவர்களின் வீட்டுக்குள் விழுந்த போது, அவரின் அப்பா வாழைக்குலையை தான் எடுக்கவா என்று மட்டுமே கேட்டார். சந்தோசத்துடன் சம்மதித்தவுடன், குலையை எடுத்து விட்டு மிகுதியை அவரே வெட்டி எடுத்து அப்புறப்படுத்தினார். இது நல்ல குணமா அல்லது அப்பாவித்தனமா என்று ஏஐயிடம் ஒரு தடவை நான் கேட்டுப் பார்க்கவேண்டும்.

அந்த வாரமே மாதுளையையும், அவர்களின் வீட்டுக்குள் எட்டிப் பார்த்த வேறு சில மரங்களையும் வெட்டினேன். அந்தப் பெண் மிகவும் சந்தோசப்பட்டார். அந்த வீட்டின் சொந்தக்காரியாக ஆவதற்கு அவர் தயாராகி விட்டார் என்றே தெரிந்தது. 

பின்னர் ஒரு நாள் நான் வெளியில் நின்று வேலை செய்து கொண்டிருக்கும் போது அந்தப் பெண்ணின் காரை ஒரு கார் இழுக்கும் வாகனத்தில் கொண்டு வந்து அவருடைய வீட்டின் முன்னே இறக்கினார்கள். அவருடைய காரின் மேற்கூரை முற்றிலும் உள்ளே போயிருந்தது. கார் இழுக்கும் வாகனத்துக்குள் இருந்து அந்தப் பெண்ணும் இறங்கினார்.

'என்ன............... விபத்து ஆகிவிட்டதா..............உங்களுக்கு ஒன்றும் இல்லை தானே.................' என்று கேட்டேன்.

'ஆமாம்............. எனக்கு எதுவும் ஆகவில்லை. நான் காரை விட்டு விட்டுப் போயிருந்தேன்.............. காரின் மேல் ஒரு பெரிய மரக்கிளை முறிந்து விழுந்து விட்டது.................'

'கடவுளின் அருள்......... நீங்கள் அங்கே இல்லாதது.................'

'ஆமாம்....................'

'பெரிய சேதமாக இருக்கின்றதே................ என்ன மரம் உங்களின் கார் மேல் விழுந்தது................'

''             

  • கருத்துக்கள உறவுகள்

விழுந்ததும் தென்னையோ அண்ணை?!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

விழுந்ததும் தென்னையோ அண்ணை?!

அவர் சொல்லாமலேயே போய் விட்டார், ஏராளன். முறைக்காமல் விட்டதே பெரிய விசயம் போல..................🤣.

நாக்கு இடைக்கிடை புத்தியை முந்தி விடுகின்றது.............😜.

பெண்பாவம் பொல்லாதது என்பார்கள். ஆண்பாவம் மட்டும் என்னவாம் என்று பாண்டியராஜன் ஒரு படம் எடுத்தார். மரப்பாவம் மட்டும் சும்மாவா..............

அவருடைய காரை காப்புறுதி நிறுவனம் திருத்திக் கொடுத்தார்கள் என்று நினைக்கின்றேன்.............

  • கருத்துக்கள உறவுகள்

வீடுகளில் மரங்களை வைக்கும், அல்லது இருக்கும் மரங்களைப் பேணும் பழக்கம் அருகி வருகிறது.

இரு வீடுகளின் எல்லையில், எங்கள் காணிக்குள் நின்ற ஒரு Pin Oak மரம் இறந்து வரும் அறிகுறிகள் தெரிவதாக அயல் வீட்டுக் காரர் என்னிடம் சொன்னார். முறைப்பாடுகள் செய்யாத நட்பான மனிதர். வெட்டும் செலவில் அரைவாசியை தான் ஏற்றுக் கொள்வதாகவும் சொல்லி, அவரே மரம் தறிக்கும் கம்பனி ஒன்றையும் ஏற்பாடு செய்தார். ஆங்கிலத்தில் ஒரு சொல்லும் தெரியாத மெக்சிக்கன் வேலையாட்கள் வந்து சர சரவென்று 2 மணி நேரங்களில் சாய்த்து விட்டுப் போனார்கள். வீட்டின் முன் பக்கம் நிழல் பெரிய இழப்புத் தான் என்றாலும், புயல் காற்றில் வீட்டின் மேல் சாய்ந்திருந்தால் பெரிய வேலையாக முடிந்திருக்கும்.

எப்போதாவது வரும் புயல், மரம் வீழ்தல், காப்புறுதி என்று வலு சீரியசாக யோசிக்கும் இந்திய அமெரிக்க அயலவர்கள் வீடு வாங்கியவுடன் செய்யும் முதல் பணிகளில் ஒன்று சுற்றி நிற்கும் மரங்களை வெட்டிச் சாய்ப்பது தான்.

  • கருத்துக்கள உறவுகள்

அயலவர் உங்களுக்குத்தானே தொல்லை தந்தார். அப்படிப் பார்த்தால் அது உங்கள் பாவம் என்றுதானே ஆகிவிடும்.

அயலவர்கள் தொல்லை எல்லா இடங்களிலும் உண்டு.

மரப்பாவம் பொல்லாதது என்று நீங்கள் சொல்வதால் மரங்களை நட்டு இயற்கையைப் பாதுகாப்போம். வழமைபோல் நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.👏

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ரசோதரன் said:

'பெரிய சேதமாக இருக்கின்றதே................ என்ன மரம் உங்களின் கார் மேல் விழுந்தது.....

வேற என்ன வாழைமரம் தான்.

காருக்கே இவ்வளவு சேதம் என்றால்

வீட்டின் மேல் விழுந்தால் வீடே நசிந்திருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Justin said:

வீடுகளில் மரங்களை வைக்கும், அல்லது இருக்கும் மரங்களைப் பேணும் பழக்கம் அருகி வருகிறது.

இரு வீடுகளின் எல்லையில், எங்கள் காணிக்குள் நின்ற ஒரு Pin Oak மரம் இறந்து வரும் அறிகுறிகள் தெரிவதாக அயல் வீட்டுக் காரர் என்னிடம் சொன்னார். முறைப்பாடுகள் செய்யாத நட்பான மனிதர். வெட்டும் செலவில் அரைவாசியை தான் ஏற்றுக் கொள்வதாகவும் சொல்லி, அவரே மரம் தறிக்கும் கம்பனி ஒன்றையும் ஏற்பாடு செய்தார். ஆங்கிலத்தில் ஒரு சொல்லும் தெரியாத மெக்சிக்கன் வேலையாட்கள் வந்து சர சரவென்று 2 மணி நேரங்களில் சாய்த்து விட்டுப் போனார்கள். வீட்டின் முன் பக்கம் நிழல் பெரிய இழப்புத் தான் என்றாலும், புயல் காற்றில் வீட்டின் மேல் சாய்ந்திருந்தால் பெரிய வேலையாக முடிந்திருக்கும்.

எப்போதாவது வரும் புயல், மரம் வீழ்தல், காப்புறுதி என்று வலு சீரியசாக யோசிக்கும் இந்திய அமெரிக்க அயலவர்கள் வீடு வாங்கியவுடன் செய்யும் முதல் பணிகளில் ஒன்று சுற்றி நிற்கும் மரங்களை வெட்டிச் சாய்ப்பது தான்.

மரங்களை பராமரிப்பது கடினமானதும், உடனடிப் பிரயோசனம் அற்றதுமான ஒன்று என்றே பலரும் நினைக்கின்றார்கள் போல. வீடுகளில் முன்னும், பின்னும் இருக்கும் நிலங்களை காங்கிரீட் அல்லது டைல்ஸ் அல்லது அழகான கற்களால் மூடி விடுவதும் இங்கு ஒரு வழமையாகிவிட்டது. நிலமும் மூச்சு விடக்கூடாது.............🤣.

இந்தப் பக்கம் முழுவதும் வீட்டுத்தோட்ட வேலைகளை செய்வதும் அவர்களே. அவர்கள் தங்களுக்கு ஆங்கிலம் தேவையில்லை என்று கூடி முடிவெடுத்து இருக்கின்றார்கள் போல.

முன்னர் ஒரு அயலவர் இருந்தார். அப்பவே வயதான ஒரு இந்தியர். அவர் எந்த மரத்தை, செடியை அவர் வீட்டில் வைத்தாலும், அது வளருவதேயில்லை. ஆனால் அங்கு தோட்டவேலைகள் செய்பவர் அந்த வீட்டில் எதை வைத்தாலும் அது நன்றாக வளர்ந்தது. அவர்கள் ஒரு செடியை அல்லது மரத்தை தலைகீழாக நட்டாலும் அவை துளிர்க்கும், அவர்களின் கைராசி அப்படி என்று அவர் அடிக்கடி சொல்லுவார்.

என் வீட்டில் மனைவி சில செடிகளை அங்கிருந்து இங்கு, இங்கிருந்து அங்கு என்று இடம் மாற்றுவார். ஒரு நாள் அந்த அயலவர் என்னைக் கூப்பிட்டு, 'மரங்களும் மனிதர்கள் போலவே. மண்ணுடன் ஒட்டினால் மட்டுமே அவை பிழைக்கும். அடிக்கடி இடம் மாற்றினால் அவை எங்கும் ஒட்டாமல் போய் விடும்................' என்றார். அவர் செடிகளைத் தான் சொன்னார், ஆனால் அதுவே எங்கள் வாழ்க்கையின் பாடமும் கூட.................

Edited by ரசோதரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

அயலவர் உங்களுக்குத்தானே தொல்லை தந்தார். அப்படிப் பார்த்தால் அது உங்கள் பாவம் என்றுதானே ஆகிவிடும்.

அயலவர்கள் தொல்லை எல்லா இடங்களிலும் உண்டு.

மரப்பாவம் பொல்லாதது என்று நீங்கள் சொல்வதால் மரங்களை நட்டு இயற்கையைப் பாதுகாப்போம். வழமைபோல் நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.👏

அடுத்ததாக 'உங்கள் பாவம்.......' என்ற தலைப்பில் ஒன்றை எழுதலாம் என்று நினைக்கின்றேன்......................🤣.

இதற்கு முன்னர் எழுதிய சில ஆக்கங்கள் இறுதியில் துயரமாக முடிந்து இருந்ததால், இந்த ஆக்கத்தை ஒரு இலகுவானதாக எழுத வேண்டும் என்று நினைத்தே இப்படியான ஒன்றை தெரிவு செய்திருந்தேன்..............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மரங்கள் என்றாலே என்ன மரங்கள் என தெரியாதவர்களை கலாய்த்திருக்கின்றீர்கள் என நினைக்கின்றேன்.

மர கொப்புகள் அடுத்தவர் காணிக்குள் நின்றால் அதை தங்கள் சொத்தாக நினைக்கும் ஈழ மண்ணிலிருந்துதான் நாங்களும் வந்திருக்கின்றோம். எனவே வீட்டுக்கு வீடு வாசற்படி மருவி நாட்டுக்கு நாடு வாசற்படி என வந்து நிற்கின்றோம்.

இருந்தாலும் உள ரீதியாக தர்ம அடி வாங்கிய உங்களுக்கு என் அனுதாபங்கள்.😂

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான கதை அண்ணை. கடைசி வரியில் சிறப்பான(!) சம்பவம் ஒன்றோடு முடித்திருக்கிறீர்கள் 😁. உங்கள் கதைகளில் உரையாடல்கள் மிகவும் இயற்கையாக அமைவது ஒரு நல்லியல்பு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, villavan said:

சிறப்பான கதை அண்ணை. கடைசி வரியில் சிறப்பான(!) சம்பவம் ஒன்றோடு முடித்திருக்கிறீர்கள் 😁. உங்கள் கதைகளில் உரையாடல்கள் மிகவும் இயற்கையாக அமைவது ஒரு நல்லியல்பு.

மிக்க நன்றி வில்லவன்.

அவரை கடைசியில் அப்படிக் கேட்டிருக்கக் கூடாது போல, ஆனால் பழைய சங்கதிகள் எதையும் மனதில் வைத்து அப்படிக் கேட்கவில்லை.

4 hours ago, ஈழப்பிரியன் said:

வேற என்ன வாழைமரம் தான்.

காருக்கே இவ்வளவு சேதம் என்றால்

வீட்டின் மேல் விழுந்தால் வீடே நசிந்திருக்கும்.

🤣.............

எக் காலத்திலும் உங்களை அவருக்கு நான் அறிமுகப்படுத்தி வைப்பதாக இல்லை, அண்ணா................. நீங்கள் சொல்வதைக் கேட்டால், அவர் ஒரு வழக்கே தாக்கல் செய்துவிடுவார்..................🤣.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ரசோதரன் said:

முன்னர் வாழை ஒன்று முறிந்து அவர்களின் வீட்டுக்குள் விழுந்த போது, அவரின் அப்பா வாழைக்குலையை தான் எடுக்கவா என்று மட்டுமே கேட்டார். சந்தோசத்துடன் சம்மதித்தவுடன், குலையை எடுத்து விட்டு மிகுதியை அவரே வெட்டி எடுத்து அப்புறப்படுத்தினார்

கதையின் நகர்வு மிக்கது திறமையாக இருந்தது

எங்கள் ஊரில் ஒரு வீட்டில் ஒரு மாமரம் இருந்தது. அதன் கொப்புகள் இரண்டு அயல் வீட்டாரின் வேலிக்கு மேலாக சென்று அவர்களின் காணிக்குள் நீண்டு இருந்தது,

அவர்கள் இரு குடும்பத்திற்கும் இடையில் நல்ல சுமுகமான உறவு இருக்கும் வரை மாமரம் காய்க்கும் போது பக்கத்து வீட்டுக்காரர் அதை அனுபவித்து வந்தனர் .

சில காலங்களின் பின்னர் இரு குடும்பத்தாருக்கும் இடையில் உறவு ஏதோ ஒரு காரணத்தால் முறிந்து விட்டது.

அடுத்த நாள் அந்த மாமரத்தின் இரு கொப்புக்களும் மரத்தின் உரிமையாளரால் வெட்டப்பட்டு விட்டன.

இதில் ஒரு முக்கியமான விடையம்..... அந்த இரு குடும்பத்தவர்களும் ஒரே பெற்றோருக்குப் பிறந்த இரு சகோதரிகள்😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, வாத்தியார் said:

இதில் ஒரு முக்கியமான விடையம்..... அந்த இரு குடும்பத்தவர்களும் ஒரே பெற்றோருக்குப் பிறந்த இரு சகோதரிகள்😂

🤣................

உடன்பிறப்பே பகையானால் அது கொஞ்சம் பொல்லாமை கூடியது தான் போல...................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.