Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானில் தீவிரமடையும் போராட்டம்: இணைய சேவைகள் முடக்கம்

09 January 2026

ஈரானின் பொருளாதார நெருக்கடி மற்றும் ஆட்சிக்கு எதிரான பொதுமக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதால், நாட்டில் இணைய சேவை மற்றும் தொலைபேசி இணைப்புகளை முற்றிலுமாக நிறுத்தி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இன்று (09) காலை நிலவரப்படி, தலைநகர் தெஹ்ரான் உட்பட பல முக்கிய நகரங்களில் இரவு நேர போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன, அவற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

உள்ளூர் நேரப்படி இரவு 8:00 மணியளவில் போராட்டங்கள் தொடங்கியதிலிருந்து ஈரானில் இணைய சேவைகள் கடுமையாகக் குறைந்துள்ளதாக உலகளாவிய இணைய நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் நெட்ப்ளொக்ஸ் (NetBlocks) உறுதிப்படுத்தியுள்ளது. 

நாடுகடத்தப்பட்ட ஈரானிய பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி(Reza Pahlavi) விடுத்த போராட்ட அழைப்பைத் தொடர்ந்து மக்கள் வீதிகளில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

டுபாய், சிட்னி போன்ற வெளிநாட்டு நகரங்களில் உள்ள ஈரானியர்கள் தங்கள் உறவினர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், வாட்ஸ்அப்(WhatsApp) , ஃபேஸ்டைம்(FaceTime) போன்ற சேவைகளும் முடங்கியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

https://hirunews.lk/tm/439792/intensifying-protests-in-iran-internet-services-suspended

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு வாய் கிழிய கத்தும் இரானில் சுதந்திரம் இல்லை என்பது பொய்த்து பொய் உள்ளது.

அதுவும் மேற்கு, இஸ்ரேல் உள்நாட்டில் குழப்பத்தை ஏற்றப்படுத்தலாம் என்ற சாத்திய கூறுகள் இருந்தும்

இரானின் அதி உச்ச ஆட்சி பீடத்தில் இருந்து அடிவரை சொல்வது, மக்களுக்கு ல மனப்புழுக்கம், மற்றும் குறைகளை வன்முறை இல்லாது சொல்லலாம்,

வன்முறை வந்த்தால், வெளியார் தூண்டியாது என்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேட்ற்கும் அப்படியாந மொழியிலேயே அந்தந்த நாடுகளில் நாடாகும் போராட்டத்துக்கு சொல்வது.

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானில் போராட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 62 ஆக உயர்வு : இணைய சேவை முடக்கம் !

10 Jan, 2026 | 11:37 AM

image

ஈரானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து வெடித்துள்ள மக்கள் போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ள நிலையில், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், 2,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டொலருக்கு நிகராக வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. கடந்த டிசம்பர் 28 ஆம் திகதி, ஒரு அமெரிக்க டொலருக்கு நிகரான ரியால் மதிப்பு 1.42 மில்லியனாக சரிந்தது. இந்த நாணய வீழ்ச்சி, பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனை எதிர்த்து, தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பொதுமக்களும் வியாபாரிகளும் வீதிகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகை குண்டுகளை பயன்படுத்தினர். பல இடங்களில் ஏற்பட்ட மோதல்கள் வன்முறையாக மாறி நிலைமை மேலும் தீவிரமடைந்தது.

நிலைமை கட்டுப்பாட்டை இழந்ததைத் தொடர்ந்து, மத்திய வங்கி ஆளுநர் முகமது ரெசா ஃபர்சின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகள், தொடர்ச்சியான பணவீக்கம் மற்றும் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பெட்ரோல் விலை மாற்றம் ஆகியவையே இந்த நெருக்கடிக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.

தொடர்ந்து இடம்பெறும் போராட்டங்களால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நிலைமையை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் இதுவரை பலனளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, ஈரான் முழுவதும் இணைய சேவைகள் மற்றும் செல்போன் தொடர்பாடல்கள் முடக்கப்பட்டுள்ளன.

ஈரானில் நிலவும் இந்த அரசியல் மற்றும் பொருளாதார பதற்றம், அடுத்தகட்டமாக எத்தகைய திருப்பத்தை எடுக்கும் என்பது குறித்து சர்வதேச சமூகம் கூர்ந்து கவனித்து வருகின்றது.

https://www.virakesari.lk/article/235666

  • கருத்துக்கள உறவுகள்

இரான் மக்கள் அரசுக்கு எதிராகப் போராடுவது ஏன்? உண்மையில் என்ன நடக்கிறது?

மஷாதில் ஒரு குழுவாகத் திரண்ட போராட்டக்காரர்கள்

பட மூலாதாரம்,SOCIAL MEDIA

படக்குறிப்பு,மஷாத்தில் ஒரு குழுவாகத் திரண்ட போராட்டக்காரர்கள், பாதுகாப்புப் படையினரைத் தடுக்கும் வகையில் தரையில் மண்டியிட்டு அமர்ந்தனர்

10 ஜனவரி 2026, 09:26 GMT

புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

ஜனவரி 7ஆம் தேதி நிலவரப்படி 24 மாகாணங்களில் போராட்டங்கள் பதிவாகியுள்ளன. இருப்பினும் அவற்றில் பெரும்பாலானவை சிறிய அளவிலும், ஆங்காங்கே சிதறியவையாகவும் காணப்பட்டன.

தெஹ்ரானில் அதிகப்படியான போராட்டங்கள் பதிவாகி இருந்தாலும், கடந்த சில நாட்களாக சிறிய நகரங்களில் அரிதாக பெரிய அளவிலான கூட்டங்கள் கூடத் தொடங்கியுள்ளன.

இது கவனத்தை தலைநகரில் இருந்து பிற இடங்களுக்கு திருப்பியுள்ளது.

இந்த அமைதியற்ற சூழல் குறித்து தெளிவான ஒற்றை விளக்கம் என ஏதுமில்லை. சிலர் இது பொருளாதார நெருக்கடியால் தூண்டப்பட்டதாகக் கருதுகின்றனர், மற்றவர்களோ இது நீண்டகால அரசியல் மற்றும் சமூகக் குறைகளின் சமீபத்திய வெளிப்பாடு என்று விவரிக்கின்றனர்.

தற்போதைய அமைதியற்ற சூழல், 2022-ஆம் ஆண்டு நடந்த மாசா அமினி போராட்டங்களின் எண்ணிக்கையைவிட மிகவும் குறைவாகவே உள்ளது. மேலும் அதிகாரிகளும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர்.

போராட்டங்கள் எவ்வளவு பரவலாக நடத்தப்படுகின்றன?

சமீபத்திய போராட்ட அலை இரானின் பெரும் பகுதிகளில் விரிவடைந்துள்ள போதிலும், அதில் மக்கள் பங்கேற்கும் விதம், இடம் மற்றும் காலத்திற்கு ஏற்ப பெருமளவில் மாறுபட்டுள்ளது.

ஆரம்பத்தில் மிகப்பெரிய கூட்டங்களில் ஒன்று டிசம்பர் 28 அன்று, அதாவது போராட்டத்தின் முதல் நாளன்று தெஹ்ரானில் நடைபெற்றது. அப்போது நூற்றுக்கணக்கான கடைக்காரர்களும் வணிகர்களும் வீதிகளில் இறங்கிப் போராடினர்.

அடுத்தடுத்த நாட்களில், போராட்டங்கள் பொதுவாகச் சிறிய அளவிலும், சிதறியும், குறுகிய காலமே நீடிப்பதாகவும் இருந்தன. பெரும்பாலும் இவை இரவில் நடைபெற்றதோடு, சில நபர்களைக் கொண்ட குழுக்களாகவே இருந்தன. இந்த முறையில் சுமார் 10 நாட்களுக்கு போராட்டங்கள் தொடர்ந்தன.

ஜனவரி 6 முதல், போராட்டத்தின் நிலவியல் ரீதியான போக்கு மாறத் தொடங்கியது. பல சிறிய மற்றும் முக்கியத்துவம் குறைவான நகரங்களில் அரிதான பெரிய அளவிலான கூட்டங்கள் காணப்பட்டன. இதுவொரு குறிப்பிடத்தக்க வளர்ச்சி என்று சில உள்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டன.

முக்கிய போராட்ட மையங்களில் ஒன்றான மேற்கு மாகாணமான இலாமில் உள்ள அப்தானனில் பெருந்திரளான மக்கள் கூடினர்.

இரான் மக்கள் அரசுக்கு எதிராகப் போராடுவது ஏன்? உண்மையில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம்,Middle East Images / AFP via Getty Images

ஒரு நாள் கழித்து, சமீபத்திய ஆண்டுகளில் மக்கள் எழுச்சியையே பார்த்திராத வடக்கு கொராசான் மாகாணத்தின் தலைநகரான போஜ்னூர்டில் குறிப்பிடத்தக்க அளவிலான ஆர்ப்பாட்டங்கள் பதிவாகின.

ஜனவரி 7 மாலை வரை பிபிசி மானிட்டரிங் தொகுத்த தரவுகள், ஒட்டுமொத்தமாக தெஹ்ரானில்தான் அதிக எண்ணிக்கையிலான போராட்டங்கள் நடந்துள்ளதைக் காட்டுகின்றன.

இருப்பினும், முதல் நாள் தவிர, தலைநகரில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் பெரும்பாலும் ஆங்காங்கும், அளவில் குறைவாகவுமே இருந்தன. இது சில மாகாண நகரங்களில் காணப்பட்ட செறிவான கூட்டங்களுக்கு மாறாக இருந்தது.

தெஹ்ரானை தாண்டி, ஃபார்ஸ் மாகாணம், குர்திஷ் மக்கள் வசிக்கும் இலாம் மற்றும் கெர்மான்ஷா மாகாணங்கள், தென்மேற்கில் உள்ள சஹார்மஹால்-பக்தியாரி ஆகிய பகுதிகளில் போராட்டங்கள் நடந்ததைத் தெளிவாகக் காண முடிகிறது.

இந்தப் பிராந்தியங்களில் உள்ள பல நகரங்கள் நீண்டகாலப் பொருளாதார வீழ்ச்சி, அதிக வேலையின்மை மற்றும் குறைந்த முதலீடு போன்ற சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றன.

மொத்தத்தில், இரானின் 31 மாகாணங்களில் 24 மாகாணங்களுக்கு உட்பட்ட 80-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் போராட்டங்கள் பதிவாகியுள்ளன.

இரானில் 480-க்கும் மேற்பட்ட மாவட்டங்களும் சுமார் 1,400 நகரங்களும் உள்ளன. இந்தப் போராட்டங்கள் நிலவியல் ரீதியாக விரிவடைந்து இருந்தாலும், அதன் அளவிலும் தீவிரத்திலும் சீரற்றதாகவே உள்ளதை இது குறிக்கிறது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், இந்தப் போராட்டங்கள் முந்தைய நாடு தழுவிய போராட்டங்களைவிட, குறிப்பாக 2022-இல் மாசா அமினியின் மரணத்திற்குப் பிறகு நடந்த போராட்டங்களைவிட மிகச் சிறிய அளவிலேயே உள்ளன.

மஷாத்தின் காணொளிகளில், போராட்டக்காரர்கள் "ஷா நீடூழி வாழ்க" என்று கோஷமிடுவதைக் காண முடியும்.

பட மூலாதாரம்,X

படக்குறிப்பு,மஷாத்தின் காணொளிகளில், போராட்டக்காரர்கள் "ஷா நீடூழி வாழ்க" என்று கோஷமிடுவதைக் காண முடியும்.

போராட்டங்களை எவ்வாறு புரிந்து கொள்வது?

தற்போதைய போராட்டங்களை எவ்வாறு புரிந்துகொள்வது என்பதில் ஒருமித்த கருத்து இல்லை.

சில ஆய்வாளர்கள் இதைப் பணவீக்கம், நாணயத்தின் உறுதியற்ற தன்மை, குறைவான வாங்கும் திறன் ஆகியவற்றால் தூண்டப்பட்ட பொருளாதார ரீதியான போராட்டமாகப் பார்க்கிறார்கள். போராட்டத்தின் தொடக்க காலத்தில் வணிகர்கள் இதில் பங்கேற்றது இந்தக் கருத்தை உறுதிப்படுத்துகிறது.

மற்றவர்களோ, இந்தப் போராட்டங்கள் ஆழமான, நீண்டகால அதிருப்தியைப் பிரதிபலிப்பதாகவும், இது அரசியல் ஆட்சிக்கு எதிரான பரந்த, ஆனால் ஒருங்கிணைக்கப்படாத எதிர்ப்பாக இருப்பதாகவும் கூறுகின்றனர். தெளிவான தலைமையோ அல்லது கோரிக்கைகளோ இல்லாதது இந்தப் போராட்டங்களை வரையறுப்பதைக் கடினமாக்குகிறது. இது பொருளாதாரக் குறைபாடுகள், அரசியல் ஒடுக்குமுறை, ஒன்று திரட்டப்பட்ட வெறுப்பு ஆகியவற்றின் கலவையாகத் திகழ்கிறது.

பெண்ணுரிமை மற்றும் சமூக சுதந்திரத்தை மையமாகக் கொண்டு நடந்த 2022-ஆம் ஆண்டு போராட்டங்களைப் போலன்றி, தற்போதைய போராட்டத்தில் ஒரு தெளிவான ஒருங்கிணைந்த கருப்பொருள் இல்லை.

பல இடங்களில், போராட்டக்காரர்கள் மதகுருமார்களின் அமைப்பு மற்றும் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி காமனேயியை இலக்கு வைத்து முழக்கங்களை எழுப்புவதில் கவனம் செலுத்தியுள்ளனர்.

முந்தைய போராட்ட அலைகளுடன் ஒப்பிடுகையில், இரானின் கடைசி ஷாவின் மகனும், தற்போது நாடு கடத்தப்பட்டு வசிப்பவருமான ரெசா பஹ்லவிக்கு ஆதரவான முழக்கங்கள் அதிகரித்துள்ளன.

இது தற்போதைய அரசியல் அமைப்பின் மீதான ஏமாற்றத்தைப் பிரதிபலிக்கிறது.

ரெஸா பஹ்லவி 1967-ஆம் ஆண்டு நடைபெற்ற தமது தந்தையின் முடிசூட்டின் போது (வலது ஓரம் இருக்கையில் இருப்பவர்)

பட மூலாதாரம்,UPI/Bettmann Archive/Getty Images

படக்குறிப்பு,ரெஸா பஹ்லவி 1967-ஆம் ஆண்டு நடைபெற்ற தமது தந்தையின் முடிசூட்டின் போது (வலது ஓரம் இருக்கையில் இருப்பவர்)

போராட்டங்களில் பங்கெடுப்பவர்கள் யார்?

கடைக்காரர்கள் இந்தப் போராட்டங்களைத் தொடங்கி வைத்தாலும், பல இடங்களில் இதில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை விரிவடைந்துள்ளது.

நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் 67 இடங்களில் இருந்து வந்த காணொளிகளை பிபிசி வெரிஃபை உறுதி செய்துள்ளது.

பல நகரங்களில் உள்ள பல்கலைக்கழக வளாகங்களில் மாணவர்கள் முக்கியமாகப் போராட்டங்களில் இணைந்துள்ளனர், இது பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட குழுவைத் தாண்டிப் போராட்டத்தின் வீச்சை விரிவுபடுத்தியுள்ளது.

இருப்பினும், பல்வேறு குழுக்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு குறைவாகவே உள்ளது மற்றும் நகரங்களுக்கு இடையிலான தொடர்ச்சியான, அமைப்பு ரீதியான ஒருங்கிணைப்புக்குரிய சான்றுகளும் குறைவாகவே உள்ளன.

போராட்டத்தின் ஆரம்ப நாட்களில், தப்ரிஸ், இஸ்ஃபஹான், மஷாத், அஹ்வாஸ் உள்ளிட்ட பல வர்த்தக சபைகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டங்களில் இருந்து தங்களை விலக்கிக் கொண்டன.

பொருளாதார அழுத்தங்களை ஒப்புக்கொண்ட போதிலும், "எதிரிக் குழுக்கள்" தங்களைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயல்வதாகக் கவலை தெரிவித்து, போராட்டங்களுக்கு ஆதரவளிக்க மாட்டோம் என்று அவை கூறின.

ஜனவரி 7 அன்று தப்ரிஸில் கடைக்காரர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதாக வந்த செய்திகளை அரசு ஊடகங்கள் உடனடியாக மறுத்தன. தனியாக, குர்திஷ் மக்கள் வாழும் சில பகுதிகளில் ஜனவரி 8 அன்று கடைக்காரர்கள் வேலைநிறுத்தத்தைத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

போராட்டங்களில் மக்கள் பங்கேற்கும் முறைகளும் 2022-இல் இருந்து வேறுபடுவதாகத் தெரிகிறது. சீர்திருத்த ஆதரவு ஆய்வாளர் அப்பாஸ் அப்தி கூறுகையில், மாசா அமினி போராட்டங்களின்போது இருந்ததைவிட இதில் பெண்கள் மிகக் குறைவாகவே பங்கேற்கின்றனர்.

இந்த மாற்றமே சில சம்பவங்கள் அதிக வன்முறையாக மாறியதற்குக் காரணமாக இருக்கலாம் என்று குறிப்பிடுகிறார். இளைஞர்களின் முக்கியப் பங்கை முன்னிலைப்படுத்திய அவர், சமூகப் பிளவு ஆழமடைவதை அது சுட்டிக்காட்டுவதாகவும் கூறினார்.

போராட்டங்களில் மக்கள் பங்கேற்கும் முறைகளும் 2022-லிருந்து வேறுபடுவதாகத் தெரிகிறது. சீர்திருத்த ஆதரவு ஆய்வாளர் அப்பாஸ் அப்தி கூறுகையில், மஹ்சா அமினி போராட்டங்களின் போது இருந்ததை விடப் பெண்கள் இதில் மிகக் குறைவாகவே பங்கேற்கின்றனர். இந்த மாற்றமே சில சம்பவங்கள் அதிக வன்முறையாக மாறியதற்குக் காரணமாக இருக்கலாம் என்று குறிப்பிடுகிறார்.

பட மூலாதாரம்,SOCIAL MEDIA

படக்குறிப்பு,இரானின் இலாம் மாகாணத்தில் உள்ள முக்கிய போராட்ட மையங்களில் ஒன்றான அப்தானனில் பெருந்திரளான மக்கள் கூடினர்

அரசு ஊடகங்களும் பாதுகாப்புப் படைகளும் எவ்வளவு விரைவாக பதிலளித்தன?

இரானிய ஊடகங்கள் முதல் நாளில் இருந்தே இந்தப் போராட்டங்கள் குறித்த செய்திகளை விரைவாக வெளியிடத் தொடங்கின. அரசு ஒளிபரப்பு நிறுவனம் போராட்டங்கள் குறித்து சுருக்கமாகச் செய்தி வெளியிட்டதோடு, பொது மக்களின் குறைகளை ஒப்புக்கொள்ளும் நேர்காணல்களையும் ஒளிபரப்பியது.

இதுபோன்ற போராட்டங்களின்போது இதுவொரு வழக்கத்திற்கு மாறான நடவடிக்கை. அதே நேரத்தில், வெளிநாடுகளில் இருந்து செயல்படும் அதிருப்தியாளர்களின் கருத்துகளுக்குப் பதிலடி கொடுக்க அதிகாரிகள் விரைவாகச் செயல்பட்டனர்.

மூத்த அதிகாரிகள் "நியாயமான" கோரிக்கைகளுக்கும் "கலவரங்களுக்கும்" இடையே வித்தியாசம் இருப்பதாகக் குறிப்பிட்டனர்.

உதாரணமாக, தெஹ்ரானில் ஒரு தனிநபர் போராட்டத்தில் ஈடுபடுவது போன்ற வீடியோ வைரலானதை அடுத்து, காவல்துறை உடனடியாக எதிர் வீடியோ ஒன்றை வெளியிட்டதுடன், அந்தச் செயல் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது என்றும் கூறியது.

பாதுகாப்புப் படையினர் தொடக்கத்தில் நிதானமாகச் செயல்படுவது போலத் தோன்றினாலும், ஜனவரி 3-க்குப் பிறகு தங்கள் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தினர். இது அயதுல்லா காமனேயியின் முதல் பொதுக் கருத்துடன் ஒத்துப் போகிறது.

அதில் அவர் "கலவரக்காரர்கள் அவர்களுக்குரிய இடத்தில் வைக்கப்பட வேண்டும்" என்று எச்சரித்திருந்தார். அதைத் தொடர்ந்து நீதித்துறையும் விரைவான தண்டனை வழங்கப்படும் என மிரட்டல் விடுத்தது.

"பாதுகாப்பு காரணங்களுக்காக" இடையூறுகள் இருப்பதை அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். இணைய போக்குவரத்து சாதாரண நிலையைவிட சுமார் 35% குறைவாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவொரு முழுமையான முடக்கம் என்பதைவிட, ஆங்காங்கே மற்றும் உள்ளூர் ரீதியிலான இடையூறுகள் என்றே அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

இரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள்

படக்குறிப்பு,இரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள்

இணையத்தடை

இரானில் பல இடங்களில் வியாழக்கிழமை மாலை முதல் இணைய சேவை தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆங்காங்கே இணைய சேவை செயல்பாட்டில் இருப்பதாக க்ளௌட் ஃபேர், நெட்ப்ளாக்ஸ் போன்ற இணையதள கண்காணிப்புக் குழுக்கள் தெரிவிக்கின்றன.

"போராடுபவர்கள் மீது அரசு படைகளைப் பயன்படுத்தும் விகிதம் அதிகரித்து வருகிறது. இணைய சேவை தடை செய்யப்பட்ட பிறகு அதிகரித்த வன்முறை மற்றும் போராட்டக்காரர்கள் கொல்லப்படுவதற்கான ஆபத்து அதிகரித்துள்ளது" என இரான் மனித உரிமைகள் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் மஹ்மூத் அமிரை-மோஹத்தாம் அறிக்கை மூலமாகத் தெரிவித்துள்ளார்.

இணைய சேவை முடக்கத்தின்போது படுகொலைகள் நடப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக நோபல் பரிசு பெற்ற ஷிரின் எபாதி எச்சரித்துள்ளார்.

இதுவரை எத்தனை பேர் கொல்லப்பட்டுள்ளனர்?

கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன மற்றும் உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

இருப்பினும் வன்முறையின் அளவு முந்தைய பெரிய அளவிலான போராட்டங்களைவிடக் குறைவாகவே இருப்பதாகத் தெரிகிறது. 2019 நவம்பரில் ஒரு வாரம் நீடித்த போராட்டங்களின்போது குறைந்தது 323 பேர் உயிரிழந்தது குறித்து ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆவணப்படுத்தியது.

அதே நேரத்தில் 2022 மாசா அமினி போராட்டங்களின்போது 550க்கும் மேற்பட்ட இறப்புகளை மனித உரிமை அமைப்புகள் பதிவு செய்துள்ளன.

இதற்கு நேர்மாறாக, தற்போதைய போராட்டங்களில், பாதுகாப்புப் படையினரின் 14 உறுப்பினர்கள் உள்படக் குறைந்தது 48 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.

நார்வேவில் செயல்படும் இரான் மனித உரிமைகள் என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனம் 9 குழந்தைகள் உள்பட 51 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கிறது.

அத்துடன் 2,277க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதாக அமெரிக்காவை மையமாகக் கொண்ட மனித உரிமை செயற்பாட்டாளர் (Human rights activist) என்ற செய்தி முகமை தெரிவித்துள்ளது.

சர்வதேச சூழல் ஏன் முக்கியமானது?

இஸ்ரேலுடனான ஜூன் மாத போரைத் தொடர்ந்து, பதற்றமான சர்வதேச சூழலில் இந்தப் போராட்டங்கள் விரிவடைந்து வருகின்றன. அந்தப் போரின்போது அமெரிக்கா இரானின் அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுவீசித் தாக்கியிருந்தது.

ஜனவரி 2-ஆம் தேதியன்று, அமைதியாகப் போராடும் போராட்டக்காரர்களை இரானிய பாதுகாப்புப் படையினர் கொன்றால் அமெரிக்கா தலையிடக்கூடும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்தார். மேலும் அமெரிக்கா "ஆயத்த நிலையில்" இருப்பதாகவும் கூறினார்.

ஜனவரி 4 அன்று டிரம்ப் தனது எச்சரிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தினார். இதற்குப் பதிலளித்த இரானிய அதிகாரிகள், அமெரிக்காவும் இஸ்ரேலும்தான் இந்தப் போராட்டத்தைத் தூண்டிவிடுவதாகக் குற்றம் சாட்டியதுடன், இரானின் ஆயுதப் படைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் எச்சரித்தனர்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் முக்கிய பிரமுகர்கள் இந்தப் போராட்டங்களுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, "வீதியில் இறங்கியுள்ள" இரானியர்களுக்கும், அவர்களுடன் "நடந்து செல்லும் ஒவ்வொரு மொசாட் முகவருக்கும்" தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

பாரசீக மொழியில் இயங்கும் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அரசின் சமூக ஊடகக் கணக்குகள் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவளிப்பதில் மிகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.

இத்தகைய வெளிநாட்டுத் தலையீடுகள் சில போராட்டக்காரர்களுக்கு தைரியத்தை அளிக்கக்கூடும். ஆனால் அதேநேரம் இது 'வெளிநாட்டுச் சதி' என்ற அதிகாரிகளின் வாதத்தை வலுப்படுத்துவதோடு, இன்னும் அதிகமான மக்கள் இதில் பங்கேற்பதைத் தடுக்கும் காரணியாகவும் அமையக்கூடும்.

அடுத்து என்ன நடக்கும்?

அரசாங்கத்தின் கவனம் தற்போது பொருளாதாரத் தீர்வுகளை நோக்கித் திரும்புவது போலத் தோன்றுகிறது.

ஜனவரி 3-ஆம் தேதி, அதிபர் மசூத் பெசெஷ்கியன் நிர்வாகம், நாடு தழுவிய அளவில் மின்னணு கூப்பன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. விலைவாசி உயர்வில் இருந்து குடும்பங்களைப் பாதுகாப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இருப்பினும், இணையதளங்களில் இத்திட்டத்திற்குப் பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளன. பலர் இதை "அவமானகரமானது" என்று வர்ணித்துள்ளனர்.

மத்திய வங்கியின் தலைமையில் மாற்றங்கள் செய்யப்பட்ட போதிலும், நாணயத்தின் நிலையற்ற தன்மை தொடர்ந்து நீடிக்கிறது.

ஒருவேளை பொருளாதாரச் சூழல் மேலும் மோசமடைந்து, மக்களின் குறைகளுக்குத் தீர்வு காணப்படாவிட்டால், இந்தப் போராட்டங்கள் ஒரு பெரிய தேசிய இயக்கமாக உருவெடுக்காவிட்டாலும்கூட, தொடர்ந்து நீடிக்க வாய்ப்புள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cqj2dp9vkl8o

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க ராணுவம் ஈரானில் இறங்க தயாராகிறது.

பூட்டினுக்கு இன்னொரு விருந்தாளி கிடைக்கப் போகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் போராட்டம் தீவிரம்: 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் எனத் தகவல்

Published By: Digital Desk 3

12 Jan, 2026 | 10:55 AM

image

ஈரானில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என மனி உரிமைக்குழு ஒன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

ஈரான் நாட்டில் அதிகரித்துள்ள பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி அதிகரிப்பு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் விரக்தி அடைந்துள்ள மக்கள் அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி ஆரம்கபித்த மக்களின் போராட்டம், ஈரானின் 31 மாகாணங்களில் 100 நகரங்களில் 15 நாட்களாக நீடித்து வருகிறது. 

போராட்டக்காரர்களை அடக்க பாதுகாப்பு படையினரை அரசு இறக்கி விட்டு உள்ளது. இதன்படி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். 

வன்முறையை தடுக்கும் நோக்கில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இணையதள சேவையை அரசு முடக்கி வைத்து உள்ளது. சில அரசு ஊடகங்கள் மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 

இந்நிலையில், ஈரானில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகள் அமைப்பு ஒன்று அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது. அவர்களில் 8 குழந்தைகளும் அடங்குவார்கள். 

போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 2,600 பேர் அரசால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த சூழலில், ஈரானின் அட்டார்னி ஜெனரல் முகமது மோவாஹிதி ஆசாத் அரசு தொலைக்காட்சியில் வெளியிட்டு உள்ள அறிக்கையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள், கலகக்காரர்களுக்கு உதவுபவர்கள் அல்லது வன்முறையில் பொருட்களை சூறையாடுபவர்கள் மற்றும் பாதுகாப்பின்மையை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான, விரைவான, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அந்த குற்றவாளிகள் அனைவருக்கும் ஒரேவித தண்டனைதான் கிடைக்கும். 

அவர்களுக்கு எந்தவித கருணையும் காட்ட கூடாது என வழக்கறிஞர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளார். ஈரானின் பதற்ற நிலைக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வருத்தம் தெரிவித்து உள்ளனர். 

இந்நிலையில்,வத்திக்கான நகரில் போப் லியோ இறை வணக்க நிகழ்ச்சிக்கு பின்னர் கூடியிருந்த கூட்டத்தினரின் முன் பேசும்போது, 

ஈரான் மற்றும் சிரியா போன்ற மத்திய கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியான பதற்ற நிலையால், மக்கள் பலர் பலியாகி வருகின்றனர். அவர்களுடன் என்னுடைய எண்ணங்கள் உள்ளன. ஒட்டுமொத்த சமூகத்தின் நலனுக்காக பேச்சுவார்த்தை நடைபெறும் என நம்புகிறேன். அதற்காக வேண்டி கொள்கிறேன் என்றார். இதேபோன்று, பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப் கூறும்போது, வன்முறையை தவிர்க்க வேண்டும் என ஈரானிய அதிகாரிகளை வலியுறுத்தினார். அயர்லாந்து, இஸ்ரேல் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும் ஈரான் சூழல் பற்றி கவலை தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/235808

  • கருத்துக்கள உறவுகள்

இரானில் போராட்டம் தீவிரம்: அரசு நடவடிக்கையில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக தகவல்

இரானில் போராட்டம், ஆட்சி மாற்றம் நடக்குமா?, ரெசா பஹ்லவி, அமெரிக்கா, இஸ்ரேல்

பட மூலாதாரம்,MAHSA / Middle East Images / AFP via Getty Images

கட்டுரை தகவல்

  • ஷயன் சர்தாரிசாதே, ரிச்சர்ட் இர்வின்-பிரௌன்

  • பிபிசி வெரிஃபை

  • 12 ஜனவரி 2026, 03:15 GMT

    புதுப்பிக்கப்பட்டது 54 நிமிடங்களுக்கு முன்னர்

அமெரிக்கா தாக்கினால் பதிலடி கொடுப்போம் என்று இரான் எச்சரித்துள்ளது. இதற்கிடையில், தீவிரமடைந்து வரும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக பிபிசி வட்டாரங்களும் ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.

"இங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது," என்று டெஹ்ரானில் இருந்து ஒருவர் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

"எங்கள் நண்பர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் துப்பாக்கி குண்டுகளால் சுட்டனர். இது ஒரு போர்க்களம் போல இருக்கிறது, தெருக்கள் முழுவதும் இரத்தம் நிரம்பியுள்ளது. அவர்கள் சடலங்களை லாரிகளில் ஏற்றிச் செல்கிறார்கள்." என்றார் அவர்.

டெஹ்ரானுக்கு அருகிலுள்ள ஒரு சவக்கிடங்கு வீடியோவில் சுமார் 180 சடலப் பைகளை பிபிசி எண்ணியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் செய்தி நிறுவனம், இரான் முழுவதும் 495 போராட்டக்காரர்கள் மற்றும் 48 பாதுகாப்புப் படையினரின் மரணங்களை உறுதிப்படுத்தியுள்ளதாகக் கூறுகிறது.

கடந்த இரண்டு வாரங்களாக நீடிக்கும் போராட்டங்கள் எதிரொலியாக மேலும் 10,600 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதற்காக இரான் மீது தாக்குதல் நடத்தப் போவதாக அமெரிக்கா அச்சுறுத்தியுள்ளது. இரான் "சுதந்திரத்தை நோக்கிப் பார்க்கிறது" என்பதால், அமெரிக்கா "உதவத் தயாராக உள்ளது" என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை கூறினார்.

அமெரிக்கா என்ன நடவடிக்கைகளைக் கருத்தில் கொள்கிறது என்பது குறித்து டிரம்ப் விரிவாகக் கூறவில்லை. இரான் மீது இராணுவத் தாக்குதலுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவருக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்று பிபிசியின் அமெரிக்க செய்திக் கூட்டாளியான சிபிஎஸ்-ஸிடம் ஒரு அதிகாரி தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எதிரான இணையவழி ஆதாரங்களை அதிகரிப்பது, இரானிய இராணுவத்திற்கு எதிராக இணைய ஆயுதங்களைப் பயன்படுத்துவது அல்லது மேலும் பொருளாதாரத் தடைகளை விதிப்பது போன்ற பிற அணுகுமுறைகளும் இதில் அடங்கும் என்று அதிகாரிகள் வால் ஸ்ட்ரீட் ஜர்னலிடம் தெரிவித்தனர்.

அமெரிக்கா தாக்கினால், இஸ்ரேல் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவ மற்றும் கப்பல் போக்குவரத்து மையங்கள் இரண்டும் சட்டபூர்வமான இலக்குகளாக மாறும் என்று இரானிய நாடாளுமன்ற சபாநாயகர் எச்சரித்தார்.

இரானில் போராட்டம், ஆட்சி மாற்றம் நடக்குமா?, ரெசா பஹ்லவி, அமெரிக்கா, இஸ்ரேல்

பட மூலாதாரம்,IRIB/Handout/Anadolu via Getty Images

அதிகரித்து வரும் பணவீக்கம் எதிரொலியாக தொடங்கிய இந்தப் போராட்டங்கள், இப்போது இரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி-யின் மதகுருமார்களின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரும் அளவுக்கு வளர்ந்து நிற்கின்றன.

"போராட்டத்தில் ஈடுபடும் எவரும் கடவுளின் எதிரி என்று கருதப்படுவார்கள். இது மரண தண்டனைக்குரிய குற்றம்" என்று இரானின் அட்டர்னி ஜெனரல் கூறினார். அதே நேரத்தில், டிரம்பை "மகிழ்விக்க" முயலும் "ஒரு கும்பல் குண்டர்கள்" என்று ஆர்ப்பாட்டக்காரர்களை காமனெயி வர்ணித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான இரானிய தேசியப் போரில் கொல்லப்பட்ட "தியாகிகளுக்காக" மூன்று நாள் துக்கம் அனுசரிப்பதாக இரான் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

சமீபத்திய நாட்களில் இறந்த அல்லது காயமடைந்த போராட்டக்காரர்களால் பல மருத்துவமனைகளின் ஊழியர்கள் திக்குமுக்காடிப் போயுள்ளதாக பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை இரவு ராஷ்ட் நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு 70 உடல்கள் கொண்டுவரப்பட்டதை பிபிசி பெர்சியன் சேவை உறுதிப்படுத்தியுள்ளது. அதே சமயம், டெஹ்ரானில் உள்ள ஒரு மருத்துவமனையின் சுகாதாரப் பணியாளர் ஒருவர் பிபிசியிடம், "சுமார் 38 பேர் இறந்தனர். அவர்களில் பலர் அவசர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளுக்கு வந்த உடனேயே உயிரிழந்தனர். இளைஞர்களின் தலைகளிலும், இதயங்களிலும் நேரடியாகச் சுடப்பட்டிருந்தது. பலர் மருத்துவமனைக்கே வந்து சேரவில்லை," என்று கூறினார்.

பிபிசி மற்றும் பெரும்பாலான பிற சர்வதேச செய்தி நிறுவனங்களால் இரானுக்குள் இருந்து செய்திகளை வெளியிட முடியவில்லை. இரானிய அரசாங்கம் வியாழக்கிழமை முதல் இணைய முடக்கத்தை அமல்படுத்தியுள்ளதால், தகவல்களைப் பெறுவதும் சரிபார்ப்பதும் கடினமாக உள்ளது.

இரானில் போராட்டம், ஆட்சி மாற்றம் நடக்குமா?, ரெசா பஹ்லவி, அமெரிக்கா, இஸ்ரேல்

பட மூலாதாரம்,Khoshiran / Middle East Images / AFP via Getty Images

சில காட்சிகள் வெளியாகியுள்ளன, அதில் டெஹ்ரான் மாகாணத்தின் தடயவியல் கண்டறிதல் மற்றும் ஆய்வக மையத்தில் - அதாவது கஹ்ரிசாக்கில் உள்ள ஒரு சவக்கிடங்கில் வரிசையாக வைக்கப்பட்டிருந்த சடலப் பைகளைக் காட்டும் காணொளியும் அடங்கும்.

அந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு காணொளியில், சுமார் 180 போர்வையால் மூடப்பட்ட அல்லது சுற்றப்பட்ட உடல்கள் காணப்படுகின்றன, அவற்றில் பெரும்பாலானவை திறந்தவெளியில் கிடக்கின்றன. தங்கள் அன்புக்குரியவர்களைத் தேடுவது போல் தோன்றும் மக்களின் கூக்குரல்களும் அழுகுரல்களும் கேட்கின்றன.

பிபிசி வெரிஃபை மூலம் சமீபத்தியவை என உறுதிப்படுத்தப்பட்ட பல காணொளிகள், இரானின் இரண்டாவது பெரிய நகரமான மஷ்ஹத்தில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதல்களைக் காட்டுகின்றன.

முகமூடி அணிந்த போராட்டக்காரர்கள் குப்பைத் தொட்டிகள் மற்றும் தீக்குவியல்களுக்குப் பின்னால் தஞ்சம் அடைவதைக் காணலாம், தொலைவில் பாதுகாப்புப் படையினர் வரிசையாக நிற்கின்றனர். ஒரு பேருந்து போல் தோன்றும் வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது.

பல துப்பாக்கிச் சூடு சத்தங்களும், பாத்திரங்களைத் தட்டும் சத்தம் போன்ற ஒலிகளும் கேட்கின்றன.

அருகிலுள்ள ஒரு நடை மேம்பாலத்தில் நிற்கும் ஒருவர், பல திசைகளில் பலமுறை துப்பாக்கியால் சுடுவதைப் போல் தெரிகிறது, அப்போது ஓரிருவர் ஒரு வேலிக்குப் பின்னால் தஞ்சம் அடைகின்றனர்.

டெஹ்ரானில், சனிக்கிழமை இரவு எடுக்கப்பட்ட ஒரு உறுதிப்படுத்தப்பட்ட காணொளியில், கிஷா மாவட்டத்தில் போராட்டக்காரர்கள் தெருக்களைக் கைப்பற்றுவதும், புனாக் சதுக்கத்தில் பாத்திரங்களைத் தட்டும் சத்தமும், ஹெராவி மாவட்டத்தில் ஒரு கூட்டம் பேரணியாகச் சென்று மதகுருமார்களின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முழக்கமிடுவதும் காணப்படுகிறது.

அமெரிக்கா, இஸ்ரேலை சாடும் இரான்

இரானில் போராட்டம், ஆட்சி மாற்றம் நடக்குமா?, ரெசா பஹ்லவி, அமெரிக்கா, இஸ்ரேல்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் (கோப்புப் படம்)

இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் இந்த அமைதியின்மைக்கு அமெரிக்காவும், இஸ்ரேலுமே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

"அவர்கள் நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் சில நபர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளனர், வெளிநாட்டிலிருந்து பயங்கரவாதிகளை கொண்டு வந்துள்ளனர், மசூதிகளுக்குத் தீ வைத்துள்ளனர், ராஷ்டில் உள்ள சந்தைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களைத் தாக்கி, சந்தையை எரித்துள்ளனர்," என்று எந்த ஆதாரத்தையும் வெளியிடாமல் அவர் கூறினார்.

இருப்பினும், பிபிசி பெர்சியன் மற்றும் பிபிசி வெரிஃபை மூலம் உறுதி செய்யப்பட்ட காட்சிகள், இரானின் பாதுகாப்பு அதிகாரிகள் பல பகுதிகளில் போராட்டக்காரர்களின் கூட்டங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை உறுதிப்படுத்துகின்றன. அவற்றில் டெஹ்ரான், மேற்கு கெர்மன்ஷா மாகாணம் மற்றும் தெற்கு புஷேர் பகுதி ஆகியவை அடங்கும்.

கடந்த வார இறுதியில் மேற்கு நகரமான இலாமின் மையத்தில் படமாக்கப்பட்ட பல உறுதிப்படுத்தப்பட்ட காணொளிகள், போராட்டக்காரர்கள் பேரணி நடத்திக் கொண்டிருந்த இமாம் காமனெயி மருத்துவமனையை நோக்கி பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவதையும் காட்டுகின்றன.

இரானில் இணைய சேவை பெரும்பாலும் உள்நாட்டு இன்ட்ராநெட்டுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, வெளி உலகத்துடனான இணைப்புகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் தற்போதைய போராட்டங்களின் போது, அதிகாரிகள் முதல் முறையாக அதையும் கடுமையாகக் கட்டுப்படுத்தியுள்ளனர்.

2022ஆம் ஆண்டில் நடந்த "பெண், வாழ்க்கை, சுதந்திரம்" எழுச்சியின் போது இருந்ததை விட இந்த இணைய முடக்கம் மிகவும் கடுமையானது என்று ஒரு நிபுணர் பிபிசி பெர்சியன் சேவையிடம் தெரிவித்தார்.

இணைய ஆராய்ச்சியாளரான அலிரேசா மனாஃபி, வெளி உலகத்துடன் இணைவதற்கான ஒரே சாத்தியமான வழி ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் வழியாகத்தான் என்று கூறினார், ஆனால் இதுபோன்ற இணைப்புகளை அரசாங்கத்தால் கண்டறிய முடியும் என்பதால், பயனர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர் எச்சரித்தார்.

'விரைவில் உங்களுடன் இருப்பேன்' - ஷா மன்னரின் மகன்

இரானில் போராட்டம், ஆட்சி மாற்றம் நடக்குமா?, ரெசா பஹ்லவி, அமெரிக்கா, இஸ்ரேல்

பட மூலாதாரம்,Norvik Alaverdian/NurPhoto via Getty Images

படக்குறிப்பு,இரானிய அரசுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற போராட்டத்தில் ரெசா பஹ்லவியின் புகைப்படம்.

இரானில் போராட்டக்காரர்களால் நாடு திரும்ப வேண்டும் என்று விரும்பப்படுபவரும், அமெரிக்காவில் வசிப்பவருமான இரானின் கடைசி ஷா மன்னரின் நாடு கடத்தப்பட்ட மகனான ரெசா பஹ்லவி, ஞாயிற்றுக்கிழமை சமூக ஊடகப் பதிவு ஒன்றில், டிரம்ப் "உங்கள் விவரிக்க முடியாத வீரத்தை கவனமாகக் கவனித்துள்ளார்" என்று ஆர்ப்பாட்டக்காரர்களிடம் தெரிவித்தார்.

"உலகம் முழுவதும் உள்ள இரான் மக்கள் உங்கள் குரலை பெருமையுடன் முழங்குகிறார்கள்," என்று குறிப்பிட்டுள்ள அவர், "நான் விரைவில் உங்கள் பக்கம் இருப்பேன் என்பதை நான் அறிவேன்" என்று தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியக் குடியரசு "கூலிப்படையினரின் கடுமையான பற்றாக்குறையை" எதிர்கொள்வதாகவும், "பல ஆயுத மற்றும் பாதுகாப்புப் படைகள் தங்கள் பணியிடங்களை விட்டு வெளியேறியுள்ளன அல்லது மக்களை அடக்குவதற்கான உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிய மறுத்துவிட்டன" என்றும் பஹ்லவி கூறியுள்ளார். அவரது இந்த கூற்றுகளை பிபிசியால் சரிபார்க்க முடியவில்லை.

ஞாயிற்றுக்கிழமை மாலை போராட்டங்களைத் தொடருமாறு அவர் மக்களை ஊக்குவித்தார், ஆனால் குழுக்களாக அல்லது கூட்டத்துடன் இருக்குமாறும், "உங்கள் உயிரைப் பணயம் வைக்க வேண்டாம்" என்றும் கேட்டுக்கொண்டார்.

பிரிட்டனில், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் லண்டனில் உள்ள இரானிய தூதரகத்தின் பால்கனியில் இருந்து போராட்டக்காரர்கள் இரானியக் கொடியை அகற்றுவது போன்ற காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகளில் காணப்படுகின்றன.

இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, டெஹ்ரானில் உள்ள பிரிட்டன் தூதரை இரான் வரவழைத்துள்ளதாக இரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கூடுதல் தகவல்கள்: சௌரூஷ் பக்ஜாத் மற்றும் ரோஜா அசாடி

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c17zrrl1jzwo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.