இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் - கத்தார், பஹ்ரைனுக்கும் மோதல் பரவுகிறதா? நேரலை
பட மூலாதாரம்,Getty Images
28 பிப்ரவரி 2026, 06:41 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)
இரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதலைத் தொடங்கியுள்ளன, 'பெரிய அளவிலான போர் நடவடிக்கைகள்' நடைபெற்று வருவதை அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.
இரான் மீது தங்களது நாடு முன்னெச்சரிக்கை தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறுகிறார்.
தலைநகர் தெஹ்ரான் உட்பட இரானின் இஸ்ஃபஹான், கோம், கரஜ் மற்றும் கெர்மான்ஷா ஆகிய ஐந்து நகரங்களில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டன - அங்கிருந்து புகை மூட்டம் எழுவதை புகைப்படங்கள் காட்டுகின்றன.
இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக இரான் ஏவுகணைகளை வீசியுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவிக்கிறது.
படக்குறிப்பு,தெஹ்ரானின் ஜோம்ஹோரி சதுக்கம்
தங்கள் மீதான ஏவுகணை தாக்குதலை முறியடித்ததாக கத்தார் தகவல்
டேவிட் கிரிட்டன்
பிபிசி நியூஸ் மத்திய கிழக்கு
கத்தார் தலைநகர் தோஹாவில் வெடிப்புச் சத்தங்கள் மற்றும் வான்வழித் தாக்குதல் சைரன்கள் கேட்டன.
"நாட்டின் எல்லையை குறிவைத்து நடத்தப்பட்ட பல தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்ததாக"
கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் கூறியதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட, எதிரி ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் பேட்ரியாட் அமைப்பு, இரானிய ஏவுகணையை இடைமறித்ததாக கத்தார் அதிகாரி ஒருவர் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய விமானப்படை தளமான அல் உதெய்த் விமான தளம் கத்தாரில் உள்ளது.
பஹ்ரைனுக்கும் மோதல் பரவுகிறதா?
டேவிட் கிரிட்டன்
பிபிசி நியூஸ் மத்திய கிழக்கு
அமெரிக்க கடற்படையின் 5வது பிரிவின் தாயகமான பஹ்ரைன் தலைநகரில் வெடிப்புகள் பதிவாகியுள்ளன
அவசர கால எச்சரிக்கை ஒலி அடுத்தடுத்து எழுந்ததைத் தொடர்ந்து, பஹ்ரைன் உள்துறை அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து தொடர்ச்சியாக பதிவிட்டுளள்து. மக்கள் அமைதி காப்பதுடன் அருகிலுள்ள பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறும் அது கேட்டுக் கொண்டுள்ளது.
படக்குறிப்பு,பஹ்ரைனில் எழும் புகை
பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை சேவை மையம் 'ஏவுகணை தாக்குதலுக்கு இலக்கானது' என்று பஹ்ரைன் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பஹ்ரைனின் தேசிய தொடர்பு மையத்தை மேற்கோள் காட்டி அந்த ஊடகம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
தாக்குதலுக்கு எந்த நாட்டையும் காரணம் கூறாமல், "கூடுதல் விவரங்கள் சரியான நேரத்தில் வழங்கப்படும்," என்று அந்த செய்தி மேலும் கூறுகிறது.
"சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ அதிகாரிகளால் வழங்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றவும், அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு வழிகளில் இருந்து மட்டுமே தகவல்களைப் பெறவும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்." என்றும் அது கூறுகிறது.
பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் 5வது கடற்படை பிரிவின் தலைமையகத்தின் பொறுப்பில் வளைகுடா, செங்கடல், அரபி கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலின் சில பகுதிகள் உள்ளன.
பஹ்ரைனுக்கு ஏவுகணை மற்றும் டிரோன் அச்சுறுத்தல்கள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அமெரிக்க தூதரகம் தங்களது குடிமக்களை பாதுகாப்பான இடத்தில் தஞ்சமடையுமாறு ஏற்கனவே எச்சரித்திருந்தது. ஆனாலும், இந்த தாக்குதல் செய்தி குறித்து அமெரிக்க இராணுவத்திடமிருந்து உடனடி கருத்து எதுவும் இல்லை.
டிரம்ப் கூறியது என்ன?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் வெளியிட்ட காணொளியில், அமெரிக்கா இரானில் 'பெரிய அளவிலான போர் நடவடிக்கைகளை' தொடங்கியுள்ளதாகக் கூறியுள்ளார்.
"நாங்கள் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்க பலமுறை முயன்றோம். நாங்கள் அவர்களின் ஏவுகணைகளை அழித்து, அவர்களின் ஏவுகணைத் துறையை தரைமட்டமாக்கப் போகிறோம். அது முற்றிலுமாக…அழிக்கப்படும்" என்று டிரம்ப் கூறுகிறார்.
பெஞ்சமின் நெதன்யாகு கூறியது என்ன?
பட மூலாதாரம்,EPA/Shutterstock
இரான் மீதான தாக்குதல் குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "இஸ்ரேல் குடிமக்களே, சிறிது நேரத்திற்கு முன்பு, இரானில் உள்ள பயங்கரவாத ஆட்சியால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை அகற்றுவதற்கான நடவடிக்கையில் இஸ்ரேலும் அமெரிக்காவும் இறங்கியுள்ளன" என கூறியுள்ளார்.
மேலும், "எமது சிறந்த நண்பர் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு, அவரது வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமைத்துவத்திற்காக நான் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 47 ஆண்டுகளாக, ஆயத்துல்லா ஆட்சி 'இஸ்ரேலுக்கு அழிவு', 'அமெரிக்காவிற்கு அழிவு' என்று கூச்சலிட்டு வருகிறது."
"அது எங்களது ரத்தத்தைச் சிந்த வைத்துள்ளது, பல அமெரிக்கர்களைக் கொலை செய்துள்ளது மற்றும் தனது சொந்த மக்களையே படுகொலை செய்துள்ளது. இந்த பயங்கரவாத ஆட்சி, ஒட்டுமொத்த மனிதகுலத்தையே அச்சுறுத்த அனுமதிக்கும் அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கக் கூடாது. எங்களது கூட்டு நடவடிக்கை, தைரியமான இரானிய மக்கள் தங்கள் விதியைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதற்கான சூழலை உருவாக்கும்."
"இஸ்ரேல் குடிமக்களாகிய உங்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன், ஹோம் ஃபிரண்ட் கமாண்டின் (Home Front Command) உத்தரவுகளைக் கவனமாகக் கேளுங்கள். வரும் நாட்களில், 'சிங்கத்தின் கர்ஜனை' (The Roar of the Lion) என்ற இந்த நடவடிக்கையில், நாம் அனைவரும் சகிப்புத்தன்மையுடனும் மன உறுதியுடனும் இருக்க வேண்டியது அவசியமாகும்." என அவர் தெரிவித்துள்ளார்.
படக்குறிப்பு,இரானின் இஸ்ஃபஹான், கோம், கராஜ் மற்றும் கெர்மன்ஷா நகரங்களில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக ஃபார்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
'இரானின் பதிலடி தாக்குதல்'
"சிறிது நேரத்திற்கு முன்பு, இரானில் இருந்து இஸ்ரேல் நாட்டின் எல்லையை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் ராணுவம் அடையாளம் கண்டுள்ளது" என்று இஸ்ரேல் ராணுவம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் ராணுவ அறிக்கையில், "இரானில் இருந்து இஸ்ரேல் நாட்டை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பல பகுதிகளில் சைரன்கள் ஒலிக்கப்பட்டன. ஹோம் ஃப்ரண்ட் கமாண்டின் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்."
"இந்த நேரத்தில், இஸ்ரேலிய விமானப்படை அச்சுறுத்தலைத் தடுத்து நிறுத்தவும், தேவையான இடங்களில் தாக்குதல் நடத்தவும் செயல்பட்டு வருகிறது. பாதுகாப்பு என்பது காற்று புகாத அமைப்பு அல்ல, எனவே பொதுமக்கள் ஹோம் ஃப்ரண்ட் கமாண்டின் வழிகாட்டுதல்களை தொடர்ந்து கடைப்பிடிப்பது அவசியம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம்,Fars
படக்குறிப்பு,தெஹ்ரானில் இரண்டு இடங்களில் வெடிச்சத்தங்கள் கேட்டதாக இஸ்லாமிய குடியரசு செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் முழுவதும் ஒலித்த சைரன்
ஹ்யூகோ பச்சேகா
பிபிசி செய்தியாளர், மத்திய கிழக்கு
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் இன்று (பிப்ரவரி 28) காலை வெளியிட்ட அறிக்கையில், "இஸ்ரேல் முழுவதும் ஒரு சிறப்பு மற்றும் நிரந்தர அவசரநிலையை" அறிவித்துள்ளார்.
உள்ளூர் நேரப்படி சுமார் 08:15 மணிக்கு இஸ்ரேல் முழுவதும் சைரன் ஒலிகள் கேட்டன, இது சாத்தியமான ஏவுகணைத் தாக்குதல் அச்சுறுத்தல் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.
இரானின் அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்தவும், போரைத் தவிர்க்கவும் அமெரிக்க மற்றும் இரானிய அதிகாரிகளுக்கு இடையே ஒரு ஒப்பந்தத்திற்கான ராஜதந்திர முயற்சிகளுக்கு மத்தியில் இந்த இஸ்ரேலியத் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. மேலும் பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பேச்சுவார்த்தையில் இரான் சில சலுகைகளை அளித்திருந்தது, இருப்பினும் ஒரு ஒப்பந்தத்தை ஏற்குமாறு அதன் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்க முன்னதாக இரான் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அச்சுறுத்தியிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "பேச்சுவார்த்தைகள் நடக்கும் விதம் குறித்து நேற்று தான் 'மகிழ்ச்சியடைவில்லை'" என்று கூறினார்.
2003-இல் அமெரிக்கா தலைமையிலான இராக் மீதான படையெடுப்பிற்குப் பிறகு மத்திய கிழக்கில் மிகப்பெரிய அமெரிக்க ராணுவக் குவிப்பிற்கு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார், ஆனால் இப்போது ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்படக்கூடும் என்பதை விளக்க அவர் அதிகம் எதையும் செய்யவில்லை. இதற்கிடையில், அத்தகைய தாக்குதலுக்கு முழு பலத்துடன் பதிலடி கொடுப்போம் என இரான் கூறியுள்ளது.
பட மூலாதாரம்,Reuters
படக்குறிப்பு,வெடிப்புச் சத்தங்கள் கேட்டதால், தெஹ்ரானில் பதற்றம் நிலவுகிறது.
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், "இந்த 'முன்னெச்சரிக்கை தாக்குதல்' (pre-emptive strike) இஸ்ரேல் நாட்டிற்கு எதிரான அச்சுறுத்தல்களை அகற்றுவதற்காக" என்று கூறினார்.
கடந்த ஜூன் மாதம், இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தியது, இது 12 நாள் போருக்கு வழிவகுத்தது. அமெரிக்காவும் இறுதியில் மோதலில் இஸ்ரேலுடன் இணைந்து கொண்டு, இரானின் அணுசக்தி நிலையங்களை இலக்கு வைத்தது.
சமீபத்தில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகளால் தனது நாட்டிற்கு ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து எச்சரித்திருந்தார், மேலும் இரானின் அணுசக்தித் திட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தும் ஒப்பந்தத்திற்குத் தனது எதிர்ப்பைத் தெரிவித்தார்.
இரான் தனது ஏவுகணைத் திட்டத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து விவாதிப்பதையும், காஸாவில் ஹமாஸ், லெபனானில் ஹெஸ்பொலா, இராக்கின் போராளிகள் மற்றும் ஏமனில் ஹூத்திகள் உள்ளிட்ட பிராந்தியத்தில் உள்ள அமைப்புகளுக்கான ஆதரவை முடிவுக்குக் கொண்டுவருவதையும் நிராகரித்தது, அந்தக் கோரிக்கைகள் அதன் இறையாண்மையை மீறுவதாகக் கூறியது.
பட மூலாதாரம்,Ehsan / Middle East Images / AFP via Getty
படக்குறிப்பு,இரானின் தலைநகர் தெஹ்ரான் உட்பட பல இடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை
இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேலில் வசிக்கும் இந்தியக் குடிமக்கள் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறும், தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறும் இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
டெல் அவிவ் நகரில் உள்ள இந்தியத் தூதரகம் இது தொடர்பான ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
"இப்பகுதியில் நிலவும் தற்போதைய பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்தியக் குடிமக்களும் மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்," எனத் தெரிவித்தது.
இத்துடன், இஸ்ரேலிய அதிகாரிகள் மற்றும் ஹோம் ஃபிரண்ட் கமாண்ட் (Home Front Command) மூலம் வெளியிடப்பட்ட பாதுகாப்பு வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றுமாறு குடிமக்களைத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
அனைத்துக் குடிமக்களும் பாதுகாப்புப் புகலிடங்களுக்கு அருகிலேயே இருக்குமாறும், தங்களது வீடுகள் அல்லது அலுவலகங்களுக்கு அருகிலுள்ள பாதுகாப்பான இடங்கள் குறித்துத் தெரிந்து வைத்திருக்குமாறும் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
"மறு அறிவிப்பு வரும் வரை இஸ்ரேலுக்குள் அவசியமற்ற அனைத்துப் பயணங்களையும் தவிர்க்குமாறு இந்தியக் குடிமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்," என இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இத்துடன், இந்தியத் தூதரகம் குடிமக்களுக்காக 24x7 உதவி எண் மற்றும் மின்னஞ்சலை வெளியிட்டுள்ளதுடன், அவசர காலங்களில் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.
உதவி எண்: +972-54-7520711
மின்னஞ்சல்: cons1.telaviv@mea.gov.in
படக்குறிப்பு,இரானின் ஹசன் அபாத் சதுக்கம்
வான் பரப்பை மூடிய இரான், இஸ்ரேல்
சனிக்கிழமை காலை இரான் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் தனது வான்வெளியை பொதுமக்களுக்கான விமானங்களுக்கு மூடியுள்ளது என்று இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்லாமிய புரட்சிகர காவல்படையுடன் தொடர்புடைய தஸ்னிம் செய்தி முகமை, இரானின் வான்வெளியும் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் - கத்தார், பஹ்ரைனுக்கும் மோதல் பரவுகிறதா? நேரலை
By
ஏராளன் ·