Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள நீதிமன்றம்: குற்றவாளிக் கூண்டில் உலகத்தமிழர்! தீர்ப்பு - உலகத் தமிழர்கள் குற்றவாளிகள்!

குற்றவாளிக் கூண்டில் உலகத்தமிழர்! 61 members have voted

  1. 1. "தாயகத் தமிழீழத்தில் மக்கள் படும் அவலங்களிற்கு, தமிழீழ தாயகத்திற்கு தேவையான தமது கடமைகளைச் செய்யாத உலகத்தமிழர்களின் அசமந்தபோக்கும் காரணமாக அமைகின்றதா?" எனவே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும் பட்சத்தில்...

    • உலகத் தமிழர்கள் சுத்தவாளிகள்!
      21
    • உலகத் தமிழர்கள் குற்றவாளிகள்!
      40

Please sign in or register to vote in this poll.

Featured Replies

yarlcom9thyearcelebratizo9.gif

ஒன்பதாவது அகவையில் யாழ் இணையம்! சிறப்பு நிகழ்வு!

யாழ் கள நீதிமன்றம்

"தாயகத் தமிழீழத்தில் மக்கள் படும் அவலங்களிற்கு, தமிழீழ தாயகத்திற்கு தேவையான தமது கடமைகளைச் செய்யாத உலகத்தமிழர்களின் அசமந்தபோக்கும் காரணமாக அமைகின்றதா?" எனவே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும் பட்சத்தில்

உலகத் தமிழர்கள் சுத்தவாளிகளா? அல்லது உலகத் தமிழர்கள் குற்றவாளிகளா?

தீர்ப்பு தினம்: மார்ச் 30, 2007

நீதிமன்ற விதிமுறைகள்:

1. ஒருவர் ஒருமுறை மட்டுமே கருத்து எழுத முடியும். இரண்டாவது தடவையாக எழுதப்படும் கருத்து நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுக்கப்பட மாட்டாது.

2. ஒருவர் ஒருமுறை எழுதி பிரசுரித்த கருத்தை மீண்டும் எடிட் செய்ய முடியாது. எடிட் செய்யப்பட்ட கருத்து நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுக்கப்பட மாட்டாது.

3. 19 மார்ச், 2007 அல்லது அதற்கு முன் இணைந்த யாழ் கள உறவுகளின் வாதங்கள் மட்டுமே நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுக்கப்படும்.

4. ஒருவர் தனது வாதத்தின் முடிவில் தெளிவாக உலகத்தமிழர்கள் சுத்தவாளிகளா அல்லது குற்றவாளிகளா என்று கூற வேண்டும். மதில்மேல் பூனைபோல் இருந்து அதுவும் சரி, இதுவும் சரி என்று வாதிடுபவர்களின் கருத்துக்கள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுக்கப்படமாட்டாது.

5. நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறுவதற்காக யாழ் இணையத்தில் மிகச்சிறப்பாக நடுவுநிலமையுடன் இருந்து கருத்து எழுதும் ஐந்து நீதிபதிகளின் தனித் தனி தொகுப்புரை மார்ச் 30, 2007 அன்று வெளிவிடப்படும். நீதிபதிகள் வெவ்வேறு தீர்ப்புக்களைக் கூறும் பட்சத்தில், பெரும்பான்மையான நீதிபதிகளின் தெரிவே இறுதித் தீர்ப்பாக அறிவிக்கப்படும். உதாரணமாக மூன்று நீதிபதிகள் உலகத் தமிழர்கள்சுத்தவாளிகள் என்றும், இரண்டு நீதிபதிகள் உலகத்தமிழர்கள் குற்றவாளிகள் என்றும் தீர்ப்பு கூறும்பட்சத்தில் பெரும்பான்மை நீதிபதிகளின் உலகத் தமிழர்கள் சுத்தவாளிகள் என்ற தீர்ப்பே இந்த நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பாக அறிவிக்கப்படும்.

6. நீதிமன்றத்தில் வாதாடுபவர்கள் தமது வாதங்களை வைக்க வேண்டிய கடைசித்திகதி மார்ச் 29, 2007. இதன்பின் வைக்கப்படும் கருத்துக்கள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுக்கப்படமாட்டாது.

7. மார்ச் 30, 2007 வரை நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகளும் யார் என்ற செய்தி இரகசியமாக வைக்கப்படும். மார்ச் 30, 2007 அன்று யாராவது நீதிபதி தனது தொகுப்புரையில் தீர்ப்பை கூறாத பட்சத்தில் மிகுதியாய் இருக்கும் நீதிபதிகளின் தீர்ப்பின் பெரும்பான்மையின் அடிப்படையில் இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்படும். இறுதித் தீர்ப்பில் 02 நீதிபதிகள் உலகத் தமிழர்கள் சுத்தவாளிகள் என்றும், 02 நீதிபதிகள் உலகத் தமிழர்கள் குற்றவாளிகள் என்றும் கூறும்பட்சத்தில், நீதிமன்றத்தினால் நடத்தப்படும் பொதுசன வாக்கெடுப்பின் பெரும்பான்மையின் அடிப்படையில் இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்படும்.

8. நீதிமன்றத்தில் தலைப்புடன் சம்மந்தப்படாத கருத்துக்கள் முன்வைக்கப்படுமிடத்தில், அல்லது வேறு அரட்டையேதாவது செய்யப்பட்டால் குறிப்பிட்ட கருத்தை எழுதியவரின் கருத்து நிருவாகத்தின் உதவியுடன் உடனடியாக அகற்றப்படும்.

9. அநாகரிகமான முறையில் முன்வைக்கப்படும் வாதங்கள், கருத்துக்கள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுக்கப்படமாட்டாது. மேலும், அக்கருத்துக்கள் நிருவாகத்தின் உதவியுடன் நீதிமன்றத்திலிருந்து உடனடியாக அகற்றப்படும்.

10. நீதி மன்றத்தில் வாதங்களை முன்வைக்கும்போது ஏற்கனவே வாதங்களை முன்வைத்த ஒருவரை தாக்க முடியாது. அவரின் பெயரை வாதத்தில் எழுதமுடியாது. குவோட்(Using Quotes), மற்றும் ரீப்பிளை(Using Reply Button) மூலம் வாதங்கள் முன்வைக்கப்படமுடியாது. மேலும், வாதிடுபவர்கள் நீதிமன்றத்தை அவமதிக்க முடியாது.இவ்விதிகள் மீறப்படும் சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட வாதங்கள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுக்கப்படமாட்டாது என்பதோடு, அவை நீதிமன்றத்திலிருந்து நிருவாகத்தின் உதவியுடன் அகற்றப்படும்.

நன்றி!

தங்கள் உண்மையுள்ள,

மாப்பிளை

யாழ் கள நீதிமன்ற ஒருங்கிணைப்பாளர்

Edited by மாப்பிளை

  • Replies 55
  • Views 8.9k
  • Created
  • Last Reply

பொறுளாதார முன்னேற்றத்திற்காகவும் இனவாத அடக்குமுறைக்கு முகம் கொடுக்க முடியாமலும் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்த நாம், இன்று பொருளாதார ரீதியாகவும் பல துறைகளில் அறிவியல் ரீதியாகவும் முன்னேறி பெரும் பலத்துடன் உள்ளோம். ஆனால் இலங்கையில் பல நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ள எமது உறவுகளுக்கு எமது முழு ஆதரவையும் வழங்காமல் இருப்பது குற்றமே. உலகம் முழுவதும் பரந்துள்ள இலட்சக்கணக்கான தமிழர்கள் ஒன்றாகக் குரல் கொடுத்தால் உலகையே அதிர வைக்கலாம்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, இல்லையேல் எல்லார்க்கும் சாவு.

  • தொடங்கியவர்

யாழ் கள நீதி மன்றத்தை அவமதித்து வாதம் செய்ததால் நண்பர் ஒருவர் எழுதிய கருத்து நிருவாகத்திடம் முறையிடப்பட்டு நீதிமன்றத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது.

வாதிடும் நண்பர்கள் தயவு செய்து நீதிமன்ற விதிகளை கடுமையாகப் பின்பற்றவும். இந்த விவாதம் பற்றிய தனிப்பட்ட அபிப்பிராயங்களை நமக்கு தனிமடலில் அறிவிக்கவும்.

உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி!

தங்கள் உண்மையுள்ள,

மாப்பிளை

யாழ் கள நீதிமன்ற ஒருங்கிணைப்பாளர்

கனம் நீதிபதி அவர்களே,

உலகத்தமிழர் சுத்தவாளிகள் அதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம்!

1) ஈழத்தை சேர்ந்த அறிவாழித் தமிழர்கள் பலர் அங்கு பாமர மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை காட்டி தாமாக முயன்று சிலர் தமது சொத்துகளை எல்லாம் விற்று ஐரோப்பிய நாடுகளை நோக்கி தமது வாழ்க்கையை செளிப்பாக்கிக் கொள்வதற்காக வந்தனர். இங்கே வந்ததும்தான் அந்த நாடுகளின் செழிப்பிற்கு அவர்களின் வாழ்க்கை முறையும் உழைப்புமே காரணம் என்பதை அவர்கள் கண்டு கொண்டனர். அங்கு தொடர்ந்து வாழ்வதற்க்காக கடின உழைப்பையும் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளவும் முனைந்தனர். மிகுந்த சிரமத்தின் மத்தியில் விடாது முயன்று தற்போது நன்றாக காலூண்டி விட்டனர். சிலர் தமது நெருங்கிய உறவுகளையும் அங்கு வரவழைத்துக் கொண்டனர். இப்படி ஒரு சந்ததி காலூண்டியதும் அதற்கடுத்த சந்ததி இங்கேயே உருவானது. பெரும்பாலும் அவர்களுக்கு தமிழ் வராது. இனி அவர்கள் தமது பெற்றோரின் நாட்டுக்கு போய் வாழப்போவதும் கிடையாது. போனாலும் அங்கத்தைய கிளைமெட் இவர்களுக்கு ஒத்துக் கொள்ளாது. எனவே அவர்களிடம் சொந்த நாட்டில் உள்ளவர்களுக்கு உதவும் படி கேட்பது தவறானது.

3) அயல் வீட்டில் யார்இருக்கிறார் என்றே தெரியாது மக்கள் இங்கே வாழ்கின்றனர். கண்ணுக்குத்தெரியாத தொலைவில் யாரோ சாவதற்கு இவர்களை குற்றம் சாட்டுவது முற்றிலும் தவறானது.

2) இங்கு இயந்திர மயமான வேகமான வாழ்க்கையில் அவர்கள் 2, 3 வேலை செய்து உழைக்கிறார்கள். அவர்களுக்கு கிடைப்பதோ சிறிய ஓய்வு நேரம். அந்த நேரத்திலும் ஒய்வெடுக்கவிடாது ஊர்வலம் ஆர்ப்பாட்டம் என்று செய்யசொல்லி கேட்பது பெரிய மனித உரிமை மீறல். அவர்கள் பலரின் டாக்டர்கள் கண்டிப்பாக ஓவ்வெடுக்கச் சொல்லியுள்ளர். அல்லது உடல் நலத்திற்கு கூடாதாம்.

3) இருந்தும் கூட பணம் வசுலிப்பவர்களின் தொல்லை தாங்காமல் சிலர் தங்கள் பொழுது போக்கு செலவுகள் போக ஒரு தொகை பணத்தை (அவர்கள் நாட்டில் இது பெரிய தொகை) நன்கொடையாக வழங்கிவருகின்றனர். அது போதாது என்று மீண்டும் மீண்டும் அவர்கள் இவர்களை தொல்லைப்படுத்துகின்றனர். வக்கேசனுக்கு வெள்ளைக்கார பிள்ளைகள் மக்டொனாட்ஸ், தீம்பார்க் என்று எல்லாம் போய் வந்து How to spent my vacation என்ற தலைப்பில் எழுதும் போது இவர்களது பிள்ளைகளும் அது மாதிரி எழுத வேண்டாமா? அந்த நேரம் பார்த்து வாகரை பிள்ளை அழுகுது எண்டு சொல்லிக் கொண்டு ஒரு கூட்டம் வந்து இவர்களை இடைஞ்சல் செய்கிறார்கள்.

4) தமிழகத்தமிழரோ குடிப்பதற்கு தண்ணீர் இன்றி கஸ்டப்படுகின்றனர். ஈழத்தில் உள்ளவர்கள் நல்ல தண்ணீர் இருந்தும் அங்கே குடிக்காமல் இங்கே அகதிகளாக வந்து இருக்கும் கொஞ்சத் தண்ணீரையும் குடித்து முடிக்கின்றனர். தமிழகத்தில் வேலை இல்லாத்திண்டாட்டம், வீடில்லாத்திண்டாட்டம் என்று கஸ்டப்படுகையில் அவர்கள் எப்படி உதவ முடியும்? சரி உதவலாம் எண்டாலும் தடாவில் பிடித்து உள்ளே போடுகிறார்கள். கேபிள் டிவி கனெக்சன் எடுக்கவே காசில்லாமல் திண்டாடும் அவர்கள் எப்படி உதவுவது?

5) மலேசியத்தமிழர்களோ ஈழம் என்றால் ஒரு மேளம் போல் ஒரு வாத்தியக்கருவியா என்றே கேட்கின்றனர். அவர்களிடம் போய் இதைப்பற்றி கதைப்பது பைத்தியகாரத்தனம்.

எனவே இது ஈழத்தமிழர்களின் தலைவிதி எனக்கூறி, உலகத்தமிழர்கள் சுத்தவாளிகள் என்று தீர்பளிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

வணக்கம்.

  • தொடங்கியவர்

திரு சாணக்கியன், மற்றும் கனம் லீசாவின் வாதங்கள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுக்கப்படுகின்றது.

திரு வெங்கட் வைத்த வாதத்தில் யாழ் கள நீதிமன்ற விதிமுறை இலக்கம் 04 மீறப்பட்டுள்ளதால் யாழ் கள நீதிமன்றத்தில் அவர் முன்வைத்த கருத்து செல்லுபடியற்றதாகின்றது.

யாழ் கள நீதிமன்றத்தில் வாதத்தை முன்வைப்பவர்கள் தமது வாதத்தின்முடிவில் "உலகத்தமிழர்கள் சுத்தவாளிகளா" அல்லது "உலகத் தமிழர்கள் குற்றவாளிகளா" என்பதை தெளிவாகச் சொல்லிவிடவும்!

நன்றி!

தங்கள் உண்மையுள்ள,

மாப்பிளை

யாழ் கள நீதிமன்ற ஒருங்கிணைப்பாளர்

  • தொடங்கியவர்

திரு. இன்னுமொருவன் வைத்த வாதத்தில் யாழ் கள நீதிமன்ற விதிமுறை இலக்கம் 04, 10 என்பன மீறப்பட்டுள்ளதால் யாழ் கள நீதிமன்றத்தில் திரு. இன்னுமொருவன் முன்வைத்த கருத்து செல்லுபடியற்றதாகின்றது.

யாழ் கள நீதிமன்றத்தில் வாதத்தை முன்வைப்பவர்கள் தமது வாதத்தின்முடிவில் "உலகத்தமிழர்கள் சுத்தவாளிகளா" அல்லது "உலகத் தமிழர்கள் குற்றவாளிகளா" என்பதை தெளிவாகச் சொல்லிவிடவும்!

பொதுஜன வாக்கெடுப்பில் ஏற்கனவே சுமார் 21 பொதுமக்கள் வாக்கெடுப்பில் கலந்துள்ளார்கள். இது யாழ் கள நீதிமன்றம் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கும், யாழ் கள நீதிமன்றத்தில் விவாதத்திற்கு எடுக்கப்பட்ட வழக்கை வழக்காடுவதற்கு மக்கள் தந்த ஏகோபித்த ஆதரவையும், ஆமோதிப்பையும் பறைசாற்றி நிற்கின்றது.

நன்றி!

தங்கள் உண்மையுள்ள,

மாப்பிளை

யாழ் கள நீதிமன்ற ஒருங்கிணைப்பாளர்

யாழ்கள நீதிமன்றத்தின் கனம் கோட்டார் அவர்களே,

புலம் பெயர்ந்து வாழும் தமிழினம் என்று தாங்கள் குறிப்பிடும் இந்த தமிழ் சமுதாயம் சுதந்திரமுள்ள தனித்தனியான நபர்களை உள்ளடக்கியதாய், தம் அரசியல் மற்றும் சமூக வாழ்வியலில் சுயமாகச் சிந்தித்து முடிவெடுப்பவர்களாய், பிரஜா உரிமையுடன் மனித உரிமை பெற்று ஜனநாயக நாடுகளில் வாழ்ந்து கொண்டு யதார்த்த காரணிகளால் படிப்படியாக தம் தாய்நாட்டுடன் தொப்புள்கொடி உறவுகள் விடுபட்டு காலப்போக்கில் புலம்பெயர்ந்த நாடுகளிலேயே காலூன்றி வாழ எத்தனிக்கும் தனி மனிதங்களை உள்ளடக்கியதான ஒரு பரந்துபட்ட மக்கள் குழுவாகும்.

இக் குழுமத்தின் பிரிவுகள் பெரும்பான்மையாக அல்லது சிறுபான்மையாக இணைவதனூடாக அல்லது தனி நபர்களாகவோ செய்யும் செயற்பாடுகளை எது விதத்திலும் புலம் பெயர்ந்து வாழும் ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தின் செயற்பாடாகக் கருத முடியாது என்பதே எனது பணிவான விவாதம். எனவே இதன் அடிப்படையில் உலகத்தமிழர்களை ஒட்டுமொத்தமாகக் குற்றவாளிகளாகவோ அல்லது சுற்றவாளிகளாகவோ கண்டு தீர்ப்பு வழங்குவது என்பது உலகத்தமிழினத்தைச் முற்கூட்டியே சபித்து அவர்கள் தமது தாய் நாட்டுக்காக செய்யவேண்டிய தார்மீகக் கடமையிலிருந்து அவர்களை அன்னியப்பட்டவர்களாய் ஆக்குவதற்கு அது காரணமாகிவிடும் என்பது எனது அபிப்பிராயம்.

நீங்கள் வழங்கப்போகும் இத் தீர்ப்பு அது எப்படியாக அமைந்தாலும் அதற்கு காலத்தின் தாக்கம் இருக்கத் தான் போகிறது. இதன்மூலம் நான் சொல்ல வருவது யாதெனில் இன்று உங்கள் நீதிமன்றத்தின் கூண்டில் ஏற்றப்பட்டு நிற்கும் உலகத்தமிழினம் குற்றவாளியா சுற்றவாளி என்பதைக் காலம் தான் எங்களுக்கு காட்டித்தர வேண்டும். இருக்கும் கொஞ்சக்காலத்திலே குற்றவாளிகளுக்கு தகுந்த சந்தர்ப்பம் வழங்கப்படுமிடத்து அவர்கள் தமது தார்மீகக் கடமைகளை சரிவர உணர்ந்து தாமாக திருந்துவதற்கும் சுற்றவாளிகளாகக் காணப்படுபவர்கள் கூட தமது கடமைகளைச் இன்னும் சரிவரச் செய்வதற்கும் மேலும் வாய்ப்பு வழங்கப்படவேண்டும்.

எனவே தான் கனம் நீதிபதி அவர்களே, வழக்கின் அடிப்படைக் காரணிகளை மீள் பரிசீலனை செய்து இந்த வழக்கை உடனடியாக தள்ளுபடி செய்யுமாறு பணிவுடன் வேண்டுகிறேன். அது சாத்திமற்றதென நீங்கள் கருதினால் "தமிழனின் தாகம் தமிழீழ தாயகம்" என்று கூறிக்கொண்டு தமிழீழம் மலரும்வரை இவ்வழக்கில் தீர்ப்பு வழங்குவதை ஒத்தி வைக்கும்படியாக தாழ்மையுடன் தங்களை வேண்டிக்கொண்டு எனது விவாதத்தை நிறைவு செய்கிறேன்.

  • தொடங்கியவர்

திரு. நோர்வேஜியன் யாழ் கள நீதிமன்றத்தில் முன்வைத்த வாதத்தில் யாழ் கள நீதிமன்ற விதிமுறை இலக்கம் 04 மீறப்பட்டு இருந்தாலும், வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என சில ஆதாரங்களை முன்வைத்து, யாழ் கள நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடி நோட்டீஸ் கேட்பதால் திரு.நோர்வேஜியனின் வாதமும் யாழ் கள நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுக்கப்படுகின்றது.

நன்றி!

தங்கள் உண்மையுள்ள,

மாப்பிளை

யாழ் கள நீதிமன்ற ஒருங்கிணைப்பாளர்

Edited by மாப்பிளை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகம் பரந்து வாழ்ந்தாலும் இன்னும் ஈழத்தமிழர் நாம் என்ற உணர்வுடன் வாழ்கின்ற என் சோதரர்கள் சுத்தவாளிகளே என்ற என் வாதத்துக்கான கருத்தை முன் வைக்கின்றேன்.

1. எதற்காக இங்கு வந்தோம் ஏன் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டோம் என்பதை இன்னமும் மறக்காதபடியால் தான் மற்றைய உலகத்தோருக்கு "ஈழம் "என்றொரு நாடு இருப்பதையே அறிய வைத்தோம்.

2. இங்கு வசதி இருக்கின்றது, வாழ்க்கை இருக்கின்றது நமக்கென்ன? என்று நம் வாழ்வை மட்டுமே சிந்திக்கும் நோக்கமாய் நம் வேலை படிப்பென்று ஓடித்திரியும் இயந்திர வாழ்க்கை இருக்கின்றது அந்த வேளையிலும் எம் உறவுகளூக்காக எம் தோழர்களூக்காக நாம் குரல் கொடுக்கின்றோமே மற்றைய இனத்தோரை நம் ஈழத்தமிழரை உற்று நோக்க வைத்திருக்கின்றோமே!

3. வெளிநாட்டு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுத்தான் நாம் இங்கு என்ன நடவடிக்கையும் முன்னெடுக்கலாம். 'எங்கள் அண்ணையே சொல்லி இருக்கின்றார் " போராடத்தானே போறம் என்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு போறதில்லை"...அப்படிப்பார்க்கும் போது நம் செயல்களை நிரூபிக்க வேண்டுமே தவிர விளம்பரப்படுத்தக் கூடாது என்பதை உணர்ந்து எந்த வகையில் எம் உறவுகளை எம் உணர்வுகளை கட்டி எழுப்பலாம் என்ற பணியில் சத்தமில்லாமல் இயங்கிக்கொண்டிருக்கும் எத்தனை எத்தனையோ எம் உறவுகளை நான் அறிவேன். அந்த வகையில் ஈழம் பிரிந்து வந்திருக்கின்றோமே அன்றி மறந்து வரவில்லை என்பதை எம் பரந்து பிரிந்து வேறு நாட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் அறிவார்கள்.

4. உழைக்கும் பணம் இங்கு கடனட்டை, வீட்டு வாடகை, அல்லது வீட்டு வரி என்று போகும் பட்சத்திலும் கூட 'எம் ஈழம் கட்டியெழுப்பப்படவேண்டுமென வீட்டில் ஓர் உண்டியல் வைத்து பணம் சேர்த்து ஈழத்திற்காக அர்ப்பணிக்கும் எத்தனையோ என் இளைய தலைமுறையைக் கண்டிருக்கின்றேன்.

5. எந்த இந்தியனும் இங்கு வந்து கூத்து வைத்து எங்கள் பணத்தை வாரிக்கொண்டு போகும் வேளையிலும் அவர்களைப்பேட்டி எடுக்க வந்தால்..'எம் ஈழத்தின் நிலை பற்றி கேள்வி எழுப்பி அவரை யோசிக்க வைக்கின்ற ஈழத்தமிழனாகிய உலகத்தமிழரை 'இந்தியத் தமிழர்களே நன்கறிவார்கள்!.

6. எங்கள் தேசத்தின் குரல் 'மூச்சு ஓய்ந்த போது அலையெனத் திரண்ட எங்கள் உலகத்தமிழராகிய ஈழத் தமிழர்களே அதற்கு சாட்சி! நாம் சுத்தவாளிகள் என்பதை உணர்த்த பரந்து வாழும் அனைத்து நாட்டில் இருந்தும் ஈழத் தமிழர்களின் ஒற்றுமையை அங்கு நிலை நாட்டினோம்.

7. அண்மையில் ஈழத்திற்கு வந்திருந்த லண்டன் நிரந்தரவதிவுரிமை(PR) பெற்ற ஒருவரை 'கருங்காலிக்கூட்டம் பிடித்து வைத்திருந்த வேளையில் லண்டனில் எம் ஈழத்தமிழர்களாகிய லண்டன் தமிழ்மக்கள் கொடுத்த நெருக்கடியில் அந்தச் சகோதரன் விடுதலை செய்யப்பட்டான்.

8. இன்றும் எம் சகோதரர்கள் அங்கு படும் இன்னல்களை சர்வதேசத்திற்கு எடுத்துரைக்கும் முகமாக , அமைதி ஊர்வலம். பேரணீ, கூட்டம் என்று நாம் கூடி எம் ஒற்றுமையை பலப்படுத்தி நிற்கின்றோம்.

ஆகவே உலகம் பரந்து வாழும் எம் ஈழத்தமிழர்கள் அனைவரும் சுத்தவாளிகள் என்பதை மிக உறுதியுடன் எடுத்துரைக்கின்றேன்.

ஈழத்தமிழரின் தாகம்

தமிழீழத் தாயகம்"

நன்றி!.

  • தொடங்கியவர்

கனம் தமிழ்தங்கை முன்வைத்த வாதம் யாழ் கள நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுக்கப்படுகின்றது.

நன்றி!

தங்கள் உண்மையுள்ள,

மாப்பிளை

யாழ் கள நீதிமன்ற ஒருங்கிணைப்பாளர்

யாழ் கள நீதிமன்றத்தின் கனம் கோட்டார் அவர்களுக்கு,

எனது வாதத்தை ஏற்றுக்கொண்டமைக்கு தங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்ளும் அதே வேளை நான் எனது வாதத்தின் இறுதியில் "வழக்கின் அடிப்படைக் காரணிகள்" என்று குறிப்பிட்டிருந்ததன் சரியான விளக்கத்தை நீங்கள் என்னை மறுபடி அழைக்கும்போது கனம் கோட்டாருக்கு விரிவாக விளக்கிக்கூறக் காத்திருக்கிறேன். இத்தரவுகள் நீங்கள் வழங்கப்போகும் தீர்ப்புக்கு மிகவும் அவசியமானது என்பது எனது பணிவான கருத்து.

வணக்கம்,

சமுதாய அமைப்பு எப்படி அமைகிறதோ அதை பொருத்துதான் தனி மனித வாழ்வும் அமையும். சுய நலத்தை இகழ்ந்து பொது நலத்தை போற்றினால் தான் பண்பாளர்கள் தோன்றுவார்கள். மனிதன் மனத்தோடும் பணத்தோடும் மட்டுமல்ல மானத்தோடும் வாழவேண்டும். மானம் போனால் மதிப்பு மரியாதை எல்லாம் பறந்து போய்விடும். கால வெள்ளம் எல்லாவற்றையும் அடித்து செல்லும் ஆனால் பழியும் பாவமும் பெயரோடு நிலைத்துவிடும், பாராட்டும் புகழும் கூட அப்படித்தான்.

சேரமான் கணைக்கால் இரும்பொறை என்றொரு மன்னன். அவனை சோழன் கோச்செங்கணான் என்ற மன்னன் போரில் வென்று சிறையில் அடைத்தான். சிறையில் இருந்த மன்னனுக்கு தாகம் ஏற்ப்பட்டது. தண்ணீர் வேண்டும் என்று சிறை காவலனைக் கேட்டான். அதுவரை அரசனாக வாழ்ந்தவனுக்கு ஆணையிட்டே பழக்கம். அவனுடைய குரல் சிறிது ஓங்கி ஒலித்திருக்கலாம். சிறைக்காவலன் அவனை என்ன சொல்லி அவமதித்தானோ நாமறியோம். அவன் அளித்த தண்ணீரை பருகாமல் ஓலை நறுக்கில் ஒரு பாடலை எழுதி வைத்துவிட்டு இறந்து போனான் அந்த பாடலின் பொருள் இதுதான்.

"குழந்தை இறந்தாலும், உருவமற்ற தசை பிண்டமாகவே பிறந்தாலும் அவற்றை வீரன் என்றே கருதுவார்கள், வாளாள் மார்பில் கீரி வீரமரணம் அடைந்ததாக பாவித்து புதைப்பதுதான் வீர மறவர்களுடைய வழக்கம், மரபு, பண்பாடு எல்லாம். நானோ பகைவர்களால் ஒரு நாய் கட்டபடுவது போல் சங்கிலியால் பிணைக்கப்பட்டு சிறையில் கிடக்கின்றேன். கேவலம் நீர் வேட்கையக்கூட தாங்க இயலாது சிறிது தண்ணீருக்காக என்னை சிறையில் அடைத்த பகைவனிடமே மானத்தை இழந்து கையேந்தி விட்டேன். என்னுடைய தன்மானத்திற்க்கு இதைவிட வேறு இழுக்கு வேண்டுமா? என்னை போன்று வலிமை இல்லாமல் மானத்தை இழக்கும் மக்களை இனிமேல் என்னுடைய தாய்த்திருநாடு ஒருபோதும் பெறக்கூடாது."

சோழன் கோச்செங்காணன் கணைக்கால் இரும்பொறையின் பெருமையை கேள்வியுற்று அவனை சிறையிலிருந்து விடுவிக்க ஓடோடி வருகின்றான். ஆனால் அவன் கண்டது இறந்து கிடந்த சேரனையும் இறவாத செந்தமிழ் பாடலையும்தான்.

" குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்

ஆள் அன்றுஎன்று வாளில் தப்பார்

தொடர்படு ஞமலியின் இடர்படுதிரீஇய

கேளல் கேளிர் வேளான் சிறுபதம்

மதுகை இன்றி வயிற்றுத் தீத்தணிய

தாம் இரந்து உண்ணும்

அளவை ஈன்மரோ இவ்வுலகத்தானே"

இவற்றையெல்லாம் மறந்து விட்டோமா அவையெல்லாம் பயண்படா என்று எண்ணி சுயநலத்தால் ஒதுக்கி விட்டோமா?

மரணத்தை கண்டு அஞ்சாதேஎன்றுதான் நம்முடைய சான்றோர்கள் நமக்குச் சொல்லியிருக்கிறார்கள்.

"தண்டாயுதமும் திரிசூலமும் விழத்

தாக்கியுனை திண்டாடி வெட்டி

விழ விடுவேன் - கண்டாயடா

அந்தகா! வந்துபார் சற்று

என் கைக்கெட்டவே"

என்று அருணகிரிநாதர் எமனையே அச்சுருத்துகிறார். அண்ணல் காந்தியடிகள் ரஷ்ய ஞானி டால்ஸ்டாய்க்கு ஒரு கடிதம் எழுதினார்.

" அய்யா, தாங்களுடைய இலக்கிய படைப்புகள் கதையாக இருந்தாலும் கட்டுரையாக இருந்தாலும் அவற்றில் எல்லாம் அன்பு, கருணை, தியாகம், தொண்டு, அறம் ஆகியவை காணப்படுகின்றனவே?எதனுடைய தாக்கம்?

திரு காந்தி அவர்களே, உங்கள் நாட்டில் தமிழ் என்றொரு மொழி இருக்கிறது, அதில் திருக்குறள் என்னும் நூல் ஒன்றுள்ளது அதனுடைய மொழிபெயர்ப்பை படித்ததனால் என்னுடைய எழுத்துக்களில் நீங்கள் குறிப்பிட்ட அத்தனை பண்பாடுகளையும் பார்க்கிறீர்கள்."

ரஷ்ய ஞானி டால்ஸ்டாயின் இந்த கடிதத்தை படித்த பிறகுதான் மகாத்மாவுக்குத் திருக்குறள் என்ற நூலிருப்பது தெரிய வந்தது. திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பை வாங்கி படிதார். ஒரு குறளை படித்ததும் தன்னையே மறந்தார்.

" உறங்குவது போலும் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு"

என்ற குறள்தான் அது. அந்த குறளின் பொருளை உணர்ந்தபோதுதான் அடுத்த பிறவி எனக்கு மனித பிறவியாக இருக்குமானால் நான் தமிழனாக தான் பிறப்பேன், திருக்குறளை தமிழிலேயே படிப்பதற்க்கு" என்று கூறினார். இது வரலாற்று செய்தி!

சமைத்து வைத்தான் சாப்பிட்டான், மனைவியோடு இனிமையாக உரையாடினான். இடது பக்கம் மார்பில் வலி என்றான், படுத்து எழுகிறேன் என்றான் படுத்தே போனான். ஊரெல்லாம் ஒன்று கூடினார்கள் பேரை மாற்றி பிணம் என்று அழைதார்கள். சூரையாங்காட்டிற்க்கு எடுத்து சென்றார்கள் நெருப்பில் இட்டார்கள்.

இறந்தவன் நினைவையும் தமக்கும் இப்படி இருநாள் வரும் என்ற நினைவையும் சேர்த்து கழுவிவிட்டுத் திரும்பினார்கள்.

" அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்

மடக்கொடியாரோடு மந்தணம் கொண்டார்

இடபக்கமே இறை நொந்தது என்றார்

கிடக்கப் படுத்தார் கிடந்து ஒழிந்தாரே

ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்

பேரையும் மாற்றி பிணம் என்று பேரிட்டு

சூரையாங் காட்டிடைக் கொண்டு போய்ச் சுட்டிட்டு

நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே."

இது திருமூலர் தரும் மரணம் பற்றிய சுவையான படபிடிப்பு. இப்படி நிலையில்லாத வாழ்வில்

தேடி சோறு நிதம் தின்று - பல

சின்னஞ் சிறு கதைகள் பேசி - மனம்

வாடி துன்பமிக உழன்று - பலர்

வாடப் பல செயல்கள் செய்து - நரை

கூடி கிழப்பருவம் எய்திக் - கொடும்

கூற்றுக்கு இறையெனப் பின் மாயும்

சில வேடிக்கை மனிதர்களை குற்றவாளிகள் என குற்றம் சாட்டுகிறேன். நாட்டு பற்று மிக்க பொருப்புள்ள இளைஞ்சர்களால் தான் ஒரு நாடு உயர முடியும். இதை இன்றல்ல நேற்றல்ல பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அவ்வைப் பாட்டி அழுத்தமாக கூறியுள்ளார்.

நாடானாலும், காடானாலும், மேடானாலும் பள்ளமானாலும் அந்த நாட்டில் உள்ள நல்ல ஆடவர்களால் தான் அந்த நாடு மேன்மையுரும் என்பதை உறக்கச் சொல்லும்.

" நாடாகு ஒன்றோ; காடாகு ஒன்றோ

அவளாகு ஒன்றோ; மிகையாகு ஒன்றோ

எவ்வழி நல்லவர் ஆடவர்

அவ்வழி நல்லை வாழிய நிலனே!"

என்ற பாடலை சிந்திப்பதால் தயக்கமின்றி குற்றம் சாட்டுகிறேன். பாதிக்கப்பட்ட இனத்திலிருந்து தப்பி வந்து தகுதியுடன் இருப்பவர்கள் தம்மினத்தின் துயரை கண்டும் காணாமல் இருந்தால் குற்றவாளிகளே என்று குற்றம் சாட்டுகிறேன்.

" கொலை வாளினை எட்டா - மிகு

கொடியோர் செயல் அறவே"

என நெஞ்சம் குமுறி எழவில்லையாயினும், குறைந்தது

" வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம்

வாடினேன் பசியினால் இளைத்தே

வீடுதோ றிரந்தும் பசியறாது அயர்ந்த

வெற்றாரை கண்டு உளம் பதைத்தேன்

நீடிய பிணியால் வருந்துகின்றோர் -என்

நேர் உறக் கண்டு உளம் துடித்தேன்

ஈடின் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு

இளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்"

என்ற வள்ளலாரின் வழிகாட்டுதலையும் செவிமடுக்காதவர்களை குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டுவதை தவிர எமக்கும் வேறு வழி தெரியவில்லை எனவே குற்றவாளிகள் என்றே குற்றம் சாட்டுகிறேன். ஆனாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அல்லர் மாறாக தடுத்தாட்கொள்ள பட வேண்டியவர்கள் என்பதை இங்கே பதிவு செய்கிறேன்.

நன்றி

சிவராஜா

  • தொடங்கியவர்

திரு சிவராஜா யாழ் கள நீதிமன்றத்தில் முன்வைத்த வாதம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுக்கப்படுகின்றது.

திரு. நோர்வேஜியன் யாழ் கள நீதிமன்றத்தில் முன்வைத்த வாதத்தில் யாழ் கள நீதிமன்ற விதிமுறை இலக்கம் 01 மீறப்பட்டு இருந்தாலும், ஏற்கனவே நீதிமன்றத்தில் அவர் வழக்கு தள்ளுபடி நோட்டீஸ் கேட்டிருப்பதால், வழக்கை தள்ளுபடி செய்வதற்காக யாழ் கள நீதிமன்றத்தில் தனது ஆதாரங்களை முன்வைப்பதற்கு திரு. நோர்வேஜியனுக்கு மீண்டும் ஒருமுறை சந்தர்ப்பம் அளிக்கப்படுகின்றது.

நன்றி!

தங்கள் உண்மையுள்ள,

மாப்பிளை

யாழ் கள நீதிமன்ற ஒருங்கிணைப்பாளர்

கனம் கோட்டார் அவர்களே,

மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை எனக்கு வழங்கியதற்கு நன்றி. ஏற்கனவே நான் தங்களிடம் சமர்ப்பித்திருக்கும் வழக்குத் தள்ளுபடி மனுவுக்குச் சாதகமாக முன்பு தாயகத்தில் வாழ்ந்த காலங்களில் நீதிமன்றம் சம்பந்தமான எனது பழைய அனுபவத்தின் அடிப்படையில் இங்கு நான் முன்வைக்கும் வாதம் "வழக்கின் அடிப்படைக் காரணிகள்" என்ற தலைப்பில் உள்ளது. எந்த ஒரு வழக்கிலும் நல்ல ஒரு பாரபட்சமற்ற நீதியான தீர்ப்புக்கு அடித்தளமாக அமையும் அடிப்படைக் காரணிகள் சட்டம், நீதிபதி, நடுவருடன் கூடிய நீதிமன்று, விசாரணை என்ற நான்குமாகும். இதில் குறைந்த பட்சம் ஏதாவது ஒன்றில் பிழையிருப்பினும் தீர்ப்பு கேள்விக்குறியாகிவிடுவது உண்மை. இங்கு நான் கனம் கோட்டார் முன் வைக்கும் வாதம் என்னவெனில் தாங்கள் கூறுவதுபோல் உலகத் தமிழர்கள் குற்றவாளிகளா? அல்லது சுற்றவாளிகளா? என்பதில் உலகத் தமிழர்கள் என்னும் குறியீடு பொதுவாக ஒரு இனத்தையே குறிக்கிறது. இந்த இனத்துக்குள்ளேயே நானும், பார்வையாளர்களும், வழக்கறிஞர்களும், கோட்டின் நடுவர்களும் அதையும் தாண்டி அனைத்து நீதிபதிகளும் கூட அதில் அங்கத்தவர்களாக இருக்கிறார்கள் என்பது உண்மையல்லவா. எனவே நீதியான தீர்ப்பொன்றை பாரபட்சமின்றி வழங்குவதற்கு இன்று குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கும் உலகத்தமிழினத்தில் ஏற்கனவே அங்கத்தவர்களாயிருக்கும் கனம் கோட்டாரவர்களுக்கு எப்படி முடியும்? என்று மிகத் தாழ்மையுடன் கேட்டு எனது வாதத்தை இத்துடன் நிறைவு செய்து கொள்கிறேன்.

  • தொடங்கியவர்

திரு. நோர்வேஜியன் யாழ் கள நீதிமன்றத்தில் முன்வைத்த வாதம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுக்கப்படுகின்றது.

நன்றி!

தங்கள் உண்மையுள்ள,

மாப்பிளை

யாழ் கள நீதிமன்ற ஒருங்கிணைப்பாளர்

தாய்நாடு என்னும் சொல்லை நோக்கினால்........ அங்கு தாய் எனும் ஒரு ஒரு உறவு கொண்டாடப்படுகிறது. எனவே உதாரணத்துக்கு நாம் வயதிலே மூத்தவர்களாக இரூக்கலாம், அறிவிலே மூத்தவர்களாக இருக்கலாம், அல்லது ஐஸ்வரியத்திலே மூத்தவர்களாக இருக்கலாம். அப்படி நாம் ஏதோ ஒரு வழியிலே செழித்து இருந்து கொண்டு எம்மை பெற்ற தாயையும் தந்தையையும் சகோதரர்களையும் கவனிக்காது விட்டால் அவர்கள் எப்படி வறுமைப்பட்டு வழி தவறி அல்லலுறுவார்கள்? வெளிநாடுகளிலே வாழுகின்ற தமிழர்கள் தத்தம் தாய்மாரையும் தந்தையரையும், சகோதரர்களையும், எம் பிறப்பு முதல் இறப்பு வரை சற்றும் மனம் சலியாமல் எம்மைத்தாங்கும் தாய் நாட்டை முதலில் நேசிக்கவேண்டும். அதனை செயலிலும் காட்டவேண்டும். அந்த ஈழத்தாய் பெற்ற ஏனைய பிள்ளைகள் ஆக்கிரமிப்பாளர்களின் வக்கிரத்தால் நிலைகுலைந்து சிதறி இன்று ஒரு அவல நிலையில் இருக்கும் போது வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்கள் தொப்புள்க்கொடி உறவுக்கு இரங்கவேண்டும் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் இந்த உறவின் பால் செய்யவேண்டும் நாம் தமிழர்கள் என்ற கலாச்சார பிணைப்பின் படி இது அவர்களது தார்மீக கடமையும் வேறு. சாதாரணமாக எவன் ஒருவன் தன் பெற்ற தாயை பார்க்கத்தவறுகிறானோ அவன் ஏனையோரின் வசைச்சொல்லுகு உட்படுகிறான். சமூகத்தால் கேவலமாகா பார்க்கப்படுகிறான். எனவே இது எம் கலாச்சாரத்தின் படி ஒரு குற்றச்செயலே.

பெற்றமனமோ பெரும் அங்கலாய்ப்பில் காத்திருக்கும் சகோதரர்களின் எதிர்பார்போ சொல்லில் அடங்காதது அப்படியிருக்க மூத்தவர்களாகிய நாம் அவர்களை கவனியாது எமது சுய நலனிலேயே மட்டும் அக்கறையாக இருந்தால் அவர்களை ஏமாற்றி மாபெரும் வரலாற்று உறவுத்துரோகம் செய்த குற்றத்திற்கு ஆளாவோம். இதையே மறுபுறமாக எமது தேசத்தையும் இங்குள்ள எமது தொப்புள்கொடி உறவுகளையும் பார்த்தோம் என்றால் தமிழனாய் பிறந்து நாம் எம் தேசத்துக்கு என்ன செய்தோம் உறவுகளுக்கு என்ன செய்தோம் எனும் கேள்வி எம் மனதிலே எழும். எனவே நாம் சுயநலமாக வாழ்ந்தால் ஈற்றில் அல்லலுறும் தேசத்தையும் உறவுகளையும் துரோகித்து தேசத்துரோகிகள் எனும் கடும் பாவத்துக்கு ஆளாவோம்.

நாம் தமிழர்கள் எமக்கென்று ஒரு கலாச்சாரம் இருக்கிறது எனவே வேற்று இனத்தவரோடு எம்மை நாம் ஒப்பிட்டு பார்க்க கூடாது.

எனவே வெளிநாட்டில் உள்ள தமிழீழத்து தமிழர்களோ அல்லது முகவரி தேடித்திரியும் உலக தமிழர்களோ சரி குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படும் பட்சத்தில் இவ்வாறு உறவுத்துரோகம் செய்தவர்கள் எனில் அவர்கள் குற்றவாளிகளாகவே கருத்தப்படுவார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேள்வி: தாயகத் தமிழீழத்தில் மக்கள் படும் அவலங்களிற்கு, தமிழீழ தாயகத்திற்கு தேவையான தமது கடமைகளைச் செய்யாத உலகத்தமிழர்களின் அசமந்தபோக்கும் காரணமாக அமைகின்றதா?

உலகத் தமிழரை பின்வருமாறு பிரிக்கிறேன்:

  1. தமது கடமையை சரிவர செய்தோர்
  2. தமது கடமையை செய்தோர், ஆனால் சரிவர அல்ல (அதாவது சரிவர செய்யாதோர, கடமைக்குக் கடமை செய்தோர்)
  3. தமது கடமையை அறவே செய்யாதோர்
மேலும் இந்த மூன்று பிரிவினரிலும் வெளிநாடுகளில் பிறந்து வளர்ந்தோரை நான் அடக்கவில்லை. அவர்கள் குற்றவாளிகள் இல்லை என்பது எனது கருத்து.

என்னைப் பொறுத்தவரை கடமையய் சரிவரச் செய்யாதோரும் கடமையை செய்யாதோரிலேயே அடங்குவர்.

இனி விடயத்துக்கு வருவோம்.

இந்த கடமையை செய்யாதோர் கூட்டத்தை நான் இனி கயவர் கூட்டம் என்று இந்த விவாதத்தில் அழைப்பதாகுக.

இந்தக் கயவர் கூட்டம் தாயகத்தில் வாழ்ந்தவர்கள். அங்கு நடக்கும் இன்னல் பற்றி நன்றாக அறிந்தவர்கள். இன்று ஒரு குண்டு வீச்சு என்றால் அது எப்படி இருக்கும் என்று அறிந்தவர்கள். ஆட்கடத்தல் என்றால் என்ன என்று இவர்களுக்குத் தெரியும். ஆனால் இன்று தங்களுக்கு அப்படிஒரு பிரச்சனை ஏதுமில்லை என்றவுடன் தமது சகோதரர் படும் துன்பத்தை அசட்டை செய்து வாழ்கின்றனர். இது கயமைத்தனம். இவர்கள் தமது கடமையை முழுமனதுடன் செய்திருந்தால் எங்கள் நிலை எவ்வளவோ பலமாக இருந்திருக்கும். இன்று இவ்வளவு துன்பம் வந்திருக்காது. இவர்கள் தமது கடமையை சரிவர செய்யவில்லை. கிடைத்த கப்பில் தங்கள் சொந்த லாபங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தாயகத்தினை நினைக்க மறந்தனர். எனவே தான் இந்த அவல நிலை. இரண்டுங்கெட்டான் நிலை.

தவறு தவறு தான். ஆனல், எந்த ஒரு பிழைக்கும் மன்னிப்பு உள்ளது. இந்தக் குற்றவாளிகள் எல்லாரும் திருந்தவேன்டுமென்பதே எனது அவா.

நன்றி.

  • தொடங்கியவர்

கனம் மாதுகா, திரு. பண்டிதர் ஆகியோர் முன்வைத்த வாதங்கள் யாழ் கள நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுக்கப்படுகின்றது.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த, இந்த சிக்கலான வழக்கிற்கு தீர்ப்பு கூறப்போகும், ஐந்து - யாழ் கள நீதிபதிகளையும் பற்றிய அறிமுகவுரையும், அவர்கள் யாழ் கள நீதிமன்றின் குறிப்பிட்ட இவ்வழக்கில் நீதிபதிகளாக இருப்பதற்கான, தகுதிகளை பற்றிய -விளக்கவுரையும், யாழ் கள நீதிமன்ற ஒருங்கிணைப்பாளராகிய என்னால் மார்ச் 30, 2007 அன்று அறிவிக்கப்படும்.

நன்றி!

தங்கள் உண்மையுள்ள,

மாப்பிளை

யாழ் கள நீதிமன்ற ஒருங்கிணைப்பாளர்

நாடு விட்டு நாடு வந்து

நாடோடியாய் அலையுமிந்த

நாடோடி கூட்டத்திற்கு

நாட்டின் மீது நாட்டம் முண்டோ...??

உற்றம் சுற்ற உறவிழந்து

ஊரவனின் கோடியுள்ளே

அகதியாகி அலையுமிந்த

அடிமையர்க்கு

அண்ணை மண்ணில் பாசமுண்டோ...??

தேடி இல்லம் தனை - நாடி

தேச நிதி தனை கேட்டால்

ஒப்பாரி வைத்து அங்கு

ஓல ஒலி எழுப்புமந்த

மானிடரின் மனிசினிலே

மண் பற்று ஏதும் உண்டோ...???எந்த நாடு உந்தன் நாடு

என்று அங்கு தனை கேட்டால்

இந்த நாடு எங்களது

சொந்த நாடு என்றுரைக்கும்

அந்த நாட்டு மனிதர்களா

அன்னை மண்ணில் பாசம் கொண்டார்...??

விந்தை கொண்ட உலகமதில்

விந்தை கொண்ட மனிதரிவர்

விசம்மத்து விமர்சனங்கள்

விதப்பதனை நீயறியாய்..??

தான் வாழ உயிர் கொடுத்து

தனை வளர்த்த தாய் மண்ணை

இகழ்துரைக்கின்ற இழியாரை

நீ .............காணாய்...??

சுத்த வாளி தான் என்று

சுத்தமாக சொல்லு மந்த

குற்றவாளியை நீ பிடித்து

கூண்டில் விட்டு நீ கொல்லு...

தாய் மொழியாம்

தமிழ் மொழியை

தானறிய உள்ள பிள்ளை

எத்தனை லட்சம் உள்ளதென்று

எண்ணி நீ பார்த்ததுண்டோ...???

உன் மொழியை நீ உரைக்க

உனக்கு இன்று வெட்க்க மென்றால்

எம் மொழியை நீயின்று

எங்கினுமே தாய் என்பாய்..???

நீ ஆண்டு வந்த மண்ணதுவை

அபகரித்து அங்கொருவன்

குத்தகைக்கு விட்டங்கு- அன்னியனை

குடியமர்த்தி அங்கு விட்டான்....

இத்தனையும் காணமல்

இங்கொரு கூட்டம் வாழ்குது காண்

இவரை யெல்லாம் சுத்தவாளி

என்று சொன்னால் தகுமோ....??

நாடறிந்த உண்மையிது

நலமுடனே சொல்விட்டேன்

உலகமதில் ஏறியின்று

உரக்க இதை சொல்லிவிடும்...

வழக்காடு வள்ளுனரே

வாதடா வந்தவரே

எங்களணி வாதமதை

என்னவென்று சொல்லிடுவீர்...???

தீப்பெழுத வருகின்ற

தீர்க தரிசிகளே

தீர்ப்பதை எம்மணிகாய்

தீர்த்தே எழுதி விடும்...

சுத்தமாக வந்திங்கு

சத்தமிட்டு சொல்லிவிடும்

குற்ற வாளிகளே குற்றவாளியென்று

கூசமால் செப்பிவிடும்...

பஞ்சத்தில் வாழ்ந்தாலும்

பழமையதை நாம் மறவோம்

கஞ்சமில்லாமல்

கருணையதை காட்டிடுவோம்...

நெஞ்சத்தில் கை வைத்து

நெசமாக சொல்லிவிடும்

குற்றவாளிகளே குற்றவர் என்ற கூற்றை

கூனமால் சொல்லிவிடும்...

உள்ளம் விட்டொரு

உண்மையது சொன்னால்

உலகத் தமிழரெல்லாம்

உண்மையில் குற்றவாளி....!!! :angry:

  • கருத்துக்கள உறவுகள்

மதிப்பு மிகு யாழ் இணையத்தள கோட்டார் அவர்கட்கும், இதில் விவாதித்துக் கொண்டிருக்கும் அனைத்துத் தமிழ் நெஞ்சங்களிற்கும் எனது அன்பு வணக்கம்.

இன்று உங்களால் விவாதித்திற்கு எடுத்துக் கொள்ளப் பட்ட தலைப்பின் படி, எனது விவாதம் என்னவென்றால் தாயகத்தில் எமது மக்களின் அவலத்திற்கு எமது அதாவது புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் அசமந்தப் போக்கும் ஒரு முக்கிய காரணம் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.

எனது விவாதத்திற்கு வரு முன்பு புலம் பெயர்ந்தாலும் எமது தாயக மக்களின் நினைவுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு சில தூய நெஞ்சங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு நகர விரும்புகிறேன். தமிழ் மக்களுடன் தாயகச் செயல்பாட்டிற்காக அதிகம் நெருங்கிப் பழகுகிறவன் என்ற முறையில் சொல்லுகிறேன் புலம் பெயர்ந்த தமிழர்களிடம் அதாவது பெரும் பான்மையினரிடம் தமிழ் தேசியத்தில், எமது விடுதலையில், அக்கறையென்பது மிக மிகக் குறைவு. தாயகத்தில் எமது மக்கள் படும் துன்பங்களையும், கலாச்சாரச் சீரழிவுகளையும் பெரும்பான்மையானோர் ஒரு செய்தியாகத் தான் நோக்குகின்றனர். புலம்பெயர்ந்த நாடுகளில் நடாத்தப்படும் ஆர்ப்பாட்டங்களிலும் மாவீரர் தினம் போன்ற கொண்டாட்டங்களிலும் வரும் மக்களின் எண்ணிக்கையை விகிதாசாரப்படி பார்த்தீர்களென்றால் உண்மை புரியும். அங்கு வரும் மக்களையும் வரவழைப்பதிற்காக நாங்கள் படும் பாடும், அவர்களிடம் கேட்கும் திட்டுக்களும் கொஞ்ச வஞ்சமல்ல. ஒரு சினிமாக்காரன் இங்கு வந்தால் வீடு வீடாகவா போய் மக்களை வரவழைக்கிறார்கள்? இல்லை ஆனால் வரும் ஜனக்கூட்டமோ சொல்லில் அடங்காதவை. ஆனால் நாங்கள் அகதிகள் சம்பந்தமாக ஒரு நிதி சேகரிப்பில் ஈடுபடும்போது எங்களை ஒரு இழிவான பார்வையில் நோக்கும் மக்களே அதிகம் இருக்கிறார்கள் என்பது நூற்றுக்கு நூறு வீதம் உண்மை. ஆகவே புலம்பெயர்ந்த பெரும்பான்மையான மக்கள் அசமந்தப் போக்கிலையே இருக்கிறார்கள், உலக நாடுகள் எங்கள் கோரிக்கைகளை செவி மடுக்காததிற்கு முக்கிய காரணம் இது தான். புலம் பெயர்ந்த நாடுகளில் ஒரு தேர்தல் வந்தால் கூட எமது தனிப்பட்ட நலனில் தான் கண்ணும் கருத்துமாக இருக்கிறோமே தவிர எமது தாயக மக்களின் சார்பாக குரல் கொடுக்கும் கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் மிக மிகக் குறைவு என்பது தான் உண்மை. சில நேரத்தில் நீங்கள் ஒரு கருத்தை முன் வைக்கலாம் அதாவது தேசியத்தலைவரின் 2006ம் ஆண்டு மாவிரர் உரையின் போது புலம் பெயர்ந்த மக்களிற்கு தெரிவித்த நன்றியுரை, ஜயா அது அவரின் மேலோட்டமான கருத்து. ஆனால் விகிதாசாரப்படி பார்த்தால் மேலே கூறப்பட்டவை தான் உண்மை.

ஆகவே எங்களது அசமந்தப் போக்கில் இருந்து விலகி அங்கிருப்பவர்களும் எமது உடன்பிறப்புக்கள் என்று உணரும் வரை நாம் குற்றவாளிகள் குற்றவாளிகள் தான்.

Edited by Valvai Mainthan

  • தொடங்கியவர்

திரு. வன்னிமைந்தன், திரு. வல்வைமைந்தன் ஆகியோர் முன்வைத்த வாதங்கள் யாழ் கள நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுக்கப்படுகின்றது.

நன்றி!

தங்கள் உண்மையுள்ள,

மாப்பிளை

யாழ் கள நீதிமன்ற ஒருங்கிணைப்பாளர்

  • கருத்துக்கள உறவுகள்

நாடிழந்த நாடு காக்க நாதியற்ற நாடோடிக் கூட்டம் உலகத்தமிழர்கள். அவர்கள் மன்னிக்கப்படுகிறார்களோ இல்லையோ உலகம் காட்டும் இரக்கத்தில் இரந்து வாழ்ந்து காலத்தை ஓட்டி.. கதையளந்தே கெளரவம் காக்கும் உலகப் பிச்சைக்காரர்கள்..!

தமிழகம் இந்திய ஆளுமையின் கீழ்...

ஈழம்.. சிங்கள ஆளுமையின் கீழ்...

சிங்கையில் மலேசியாவில் சிங்கி (சீனர்களின்) களின் ஆளுமையின் கீழ்...

புலம்பெயர் தமிழர்கள் அந்தந்த நாடுகள் வழங்கும் வாழ்க்கைப் பிச்சையின் கீழ் வீணி வடித்தபடி வசதிக்கு மல்லாக்காய் படு என்றால் மல்லாக்காவும் குப்புறப்படு என்றால் குப்புறவும் படுக்கக் கூடிய முதுகெலும்பற்ற வெள்ளைக்கார எஜமான் ஆளுமையின் கீழ் உள்ள விசேட கூட்டம்...!

மொத்தத்தில் உலகத்தமிழன் உலகின் முதலாளித்துவ ஜனநாயக சர்வாதிகார ஏய்ப்பர்களின் கூலித் தொழிலாளி. தனக்காய் தேசம் மொழி பண்பாடு கலாசாரம் எல்லாம் இருந்தும் வெட்டிக் கெளரவத்துக்காக தன்னிலை தொலைத்து கூலிக்கு மாரடிக்கும் வீரமற்ற கூட்டத்துக்கு மன்னிப்பு... கடவுள் தான் வழங்க வேண்டும்..! மனித உரிமைகள் உச்சரிக்கப்படும் வரை மட்டுமே தமிழன் வாழ்வான்..அதன் பின்னர் அவன் அடையாளமே இருக்காது. அவன் வேறோரு அடையாளத்தில் மிங்கிளாகி இருப்பான்..!

உலகத்தமிழர்கள் எப்போதுமே தமிழன் என்று சொந்த மண்ணில் அடுத்தவரின் ஆளுமைக்குள் வாழாதிருப்பவர்களால் அதாவது வீரத்தமிழர்களால் மன்னிக்கப்பட முடியாத முட்டாள்கள்..!

உலகில் தன்னிலையை தக்க தக்கவைக்க திராணியற்று அடுத்தவரின் சொகுசுக்காக நாட்டை மொழியை பண்பாட்டை கலாசாரத்தை கட்டிக்காத்த விழுமியங்களை வீசி எறிந்துவிட்டு நாக்கைத் தொங்கப்போட்டு, பண்டைத்தமிழன் போலன்றி உயிருக்குப் பயந்து ஓடும்... பகட்டுக்கு அலையும் நாய்க் கூட்டம்..!

போற இடத்தில் எஜமானருக்கு விசுவாசமாக இருந்து வயிறு வளர்க்கும் நாய்க் கூட்டத்துக்கு... மன்னிப்பு... எதற்கு. நாய்க்குத்தானே நன்றி விசுவாசம் இருக்கே.. அது பிழைச்சுக் கொள்ளும்..!

இருந்தாலும் நாய்க்குக் கூட நாடு வேண்டும் என்று சொன்ன போதும் கூட கட்டை அவிழ்த்து காட்டிக் கொடுத்து ஓடிய புலம்பெயர் தமிழர்களை மன்னிக்க முடியாது. புலிகள் மன்னிக்கலாம்.. காரணம் காசு வாற படியா.. ஆனால்... உண்மைத்தமிழன்.. இனத்துவம் காக்கும் மனிதன் மன்னிக்க மாட்டான்..! மன்னிக்கக் கூடாது. இவர்கள் இனத்தின் அவமானச் சின்னங்களாக கருதப்பட வேண்டியவர்கள்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சிவமயம்

"நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும்

நடப்பவை நல்லவையாகவே இருக்கட்டும்"

நாம் கடந்த மூன்று வருடங்களுக்குள் நடந்த ஈழம் சம்பந்தமான ஊர்வலங்கள், போராட்டங்கள், நிகழ்வுகள், கலைநிகழ்ச்சிகள் யாவையும் கவனித்துப்பார்த்தால் மிகவும் பெருமளவிலான புலம்பெயர்ந்த மக்கள் உளப்பூர்வமாகப் பங்குபற்றுவதைக் காணக்கூடியதாகவிருக்கின்றது. சுமார் 16, 17 வயதுக்குட்பட்ட பல இளம்சமூகத்தினர் கூட ஆர்வமுடனும் அக்கறையுடனும் இச் சம்பவங்களில் பங்குபற்றுவதைவும் சேவைகள் செய்வதையும் பார்க்கக் கூடியதாகவிருக்கின்றது. அப்பிள்ளைகளில் பலருக்கு தத்தம் நாட்டுப் பாசை தவிர தமிழ் சரியாக பேச,எழுத,படிக்கத் தெரியாது. அல்லது சரியாக வராது. (பலர் இப்போதுதான் ஆர்வமாகப் படிக்கிறார்கள்). ஆயினும் அவ்அவ் பிள்ளைகளினது பெற்றோரின் ஊக்கமும் ஆதரவும் இல்லையெனில் அவர்கள் அவ்வாறு சேவைகள் புரிவது கடினமே. ஆதலால் பலகாலத்துக்கு முன் புலம் பெயர்ந்து வந்தவர்களிலிருந்து சமீபகாலங்களில் வந்தவர்கள் வரை பலர் எமது நாட்டு அவலங்களை வெளியுலகுக்குத் தெரியப்படுத்துவதிலும் சரி, ஐ. நா போன்ற இன்னும் பல வெளிநாட்டு அலுவலகங்களுக்கு கடிதங்கள் கையொப்பங்கள் போட்டு அனுப்பியும் மற்றும் பதாதைகளுடன் கூடிய ஊர்வலங்கள், தொடர் உண்ணாவிரதங்கள், மாவீரர் நிகழ்வுகளிலும் சரி பலப்பலவிதமான கலைநிகழ்ச்சிகளுக்கூடாகவும் ஆத்மார்த்தமாக பங்களிப்புகள் செய்வதை நாம் கண்கூடாகக் காண்கின்றோம். (இதுபோன்ற மாற்றங்களை மக்களிடையே ஏற்படுத்தியதில் தமிழ் ஊடகங்கள்,பத்திரிகைகள், இணையங்கள் ஆகியவை பெரும் பங்கு வகிக்கின்றன என்பதைக் கூறியேயாக வேண்டும்.). இவற்றிற்கெல்லாம் சிகரம்போல் “தேசத்தின்குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களின் இறுதியூர்வலம் அமைந்ததுவென்றால் மிகையாகாது. (இதன்நிமித்தம் பல கண்டங்களிலிருந்தெல்லாம் வந்திருந்ததை கனம் யாழ்கள நீதிபதிகள் ஐவரும்அறிந்து, தெரிந்து, புரிந்து கொன்டிருப்பார்கள்.

எப்படியாயினும் “நதிமூலம் ரிசிமூலம் பார்க்கக்கூடாது” என பெரியோர் உரைப்பர். அம்மூதுரைக்கேற்ப எப்போதோ! எப்படியெப்படியோ!! புலம் பெயர்ந்த நாடுகளில் விழுந்த விதைகளெல்லாம் இப்போது ஒன்றுசேர்ந்து பலன் தருவதற்கு பாளை விரிக்கின்றன. “மொட்டுக்கள் மலர்வதற்கு முகிழ்கின்றன”. இச்செய்தியை சென்ற 2006 மாவீரர் நாள் உரையில் நமது தேசியத் தலைவரே அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளபடியால் உயர்நீதிமன்றத்திலும் இத்தீர்ப்புக்கு அப்பீலே கிடையாது.

ஆகவே புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள்

சுத்தவாளிகளே! சுத்தவாளிகளே!!.

நடந்ததை மறப்போம், நடப்பதை நினைப்போம் என்று கூறி

வாய்ப்பளித்த யாழ்களத்துக்கு நன்றி சொல்லி விடைபெறுகின்றேன்.

  • தொடங்கியவர்

கனம் சுவி முன்வைத்த வாதம் யாழ் கள நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுக்கப்படுகின்றது.

யாழ் கள நீதிமன்றத்தின் முக்கிய அறிவிப்பு

குறிப்பிட்ட இந்த வழக்கிற்குரிய தீர்ப்பு தினம் மார்ச் 30, 2007 என அறிவிக்கப்பட்டிருந்தாலும், ஏற்கனவே பல வாதங்கள் யாழ் கள நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதால், அதன் அடிப்படையில் யாழ் கள நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகளில் ஒருவரான உயர்திரு. நெடுக்காலபோவான் அவர்கள் குறிப்பிட்ட வழக்கு சம்மந்தமான தனது முதலாவது அபிப்பிராயத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.

யாழ் கள நீதிமன்ற ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், ஏற்கனவே கூறியுள்ளபடி, உயர்திரு. நெடுக்காலபோவான் அவர்களை யாழ் கள நீதிமன்றத்தில் அறிமுகப்படுத்தி வைக்க வேண்டிய பொறுப்பும், அவர் நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகளில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டதற்கான காரணத்தையும் அறிவிக்க வேண்டிய பொறுப்பும் நீதிமன்ற ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எனக்கு உண்டு.

உயர்திரு. நெடுக்காலபோவானின் அறிமுகமும், யாழ் கள நீதிமன்றத்தின் ஒரு நீதிபதியாக அவர் தெரிவு செய்யப்பட்டதற்கான காரணமும்:

1. இவர் எல்லோரையும் போல் ஒற்றையடிப் பாதையில் போகாது, வித்தியாசமான முறைகளில் சிந்தித்து யாழ் களத்தில் கருத்துக்கள் எழுதுபவர்களில் முக்கியமான ஒருவர்.

2. யாழ் களத்திற்கு தினமும் வருகை தரும் ஒரு அக்ட்டீவான உறுப்பினர். எனவே இவருக்கு யாழ் களம் பற்றிய நல்ல அனுபவம் உண்டு.

3. தான் சொல்லும் கருத்தில், வாதத்தில் உறுதியாக நிலைத்து நிற்கக்கூடிய ஒருவர். மற்றவர்கள் விரும்பவில்லை என்பதற்காக தான் நியாயம் என்று கருதும் கருத்துக்களை விட்டுக் கொடுக்காதவர்.

4. யாழ் களத்தில் நடைபெற்ற மிகச் சிக்கலான பல வாதங்களில் தனிமனிதனாக இருந்து ஏராளமான பல சிந்தனைக்குரிய விடயங்களை துணிந்து கூறியவர்.

5. மற்றவர்களிற்கு பயந்து நியாயம் என்று தான் நினைப்பவற்றை மனதினுள் பூட்டி மறைக்காது, அவற்றை பகிரங்கமாக வெளிப்படுத்திய ஒருவர்.

6. யாழ் இணையத்தின் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் மிகுந்த அக்கறை செலுத்துபவர்.

7. இன்னும் பல....

மேலும், யாழ் கள நீதிமன்றத்தின் நீதிபதிகளிற்கு எந்நேரமும் யாழ் கள நீதிமன்றத்தில் பிரசன்னமாகி தமது கருத்துக்களை கூறுவதற்கு உரிமை உண்டு என்பதை மகா ஜனங்களிற்கும், யாழ் கள நீதிமன்றத்தில் ஏற்கனவே வாதங்களை முன்வைத்த, முன்வைக்கப்போகும் பெரியவர்களிற்கும் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

நன்றி!

தங்கள் உண்மையுள்ள,

மாப்பிளை

யாழ் கள நீதிமன்ற ஒருங்கிணைப்பாளர்

Edited by மாப்பிளை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.