Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்253Points88168Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்141Points19289Posts -
Kavi arunasalam
கருத்துக்கள உறவுகள்120Points3008Posts -
ரஞ்சித்
கருத்துக்கள உறவுகள்115Points8922Posts
Popular Content
Showing content with the highest reputation since 12/07/25 in all areas
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள் அண்மையில் இஸ்ரேலுக்குப் பயணம் செய்த தனது அனுபவங்களை திரு நிராஜ் டேவிட் அவர்கள் காணொளிகள் வாயிலாக வெளியிட்டு வருகிறார். அவற்றில் சில காணொளிகளில் அவர் அங்கு தங்கியிருந்த நாட்களில் பயணித்த பலவிடங்களையும் காட்சிப்படுத்தியிருந்தார். அவற்றுள் ஒன்று யூத மக்கள் மீது இரண்டாம் உலக யுத்த காலத்தில் நாசிகளால் மேற்கொள்ளப்பட்ட இனக்கொலை தொடர்பான சாட்சியங்கள், ஆதாரங்கள் ஆகியவற்றினை பாரிய நினைவாலயம் ஒன்றினுள் காட்சிப்படுத்தியிருந்தமை பதிவுசெய்யப்பட்டிருந்தது. தம்மீது நிகழ்த்தப்பட்ட இனக்கொலை தொடர்பாக தமது சந்ததிகள் தொடர்ச்சியாக அறிந்துகொள்ளவேண்டும் என்பதும், இனிமேல் அவ்வாறனதொரு இனக்கொலை தமது இனம் மீது நடக்காது தவிர்ப்பது எந்தளவு முக்கியமானது என்பதையும் தம் இன மக்களுக்கு தொடர்ச்சியாக வலியுறுத்துவதும் இந்நினைவாலயத்தின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். கொல்லப்பட்ட அறுபது இலட்சம் யூதர்களில் ஒரு பகுதியினர் பயன்படுத்திய காலணிகள், அவர்களால் அணியப்பட்ட கறுப்பும் வெள்ளையும் சேர்ந்த வரிரியிலான ஆடைகள், அவர்கள் பயன்படுத்திய உணவருந்தும் பாத்திரங்கள், அவர்களின் புகைப்படங்கள் என்பவற்றோடு அவர்களை வதைப்படுத்திக் கொன்றுபோட்ட பல நாசிப் படைத் தளபதிகளின் புகைப்படங்களும் அங்கு மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இவற்றைத் தனது காணொளிகளில் காண்பித்த டேவிட் அவர்கள், எமதினத்திற்கு நடந்த அக்கிரமங்கள், அழிவுகள் குறித்து நாம் பேசுவதை எம்மில் ஒரு பகுதியினரே தடுத்து வருவதையும், சிங்கள இனத்தோடு நாம் ஒன்றித்து வாழ்வதை இவ்வாறான "பழங்கதைகள் பேசுதல்" எனும் முயற்சி தடுத்துவிடும் என்றும், அது இனவொற்றுமையினைக் குலைத்துவிடும் என்றும் காரணம் கூறிவருவதையும் குறிப்பிட்டு அங்கலாய்த்திருந்தார். யூதர்கள் தமக்கு நடந்த அழிவினைத் தொடர்ச்சியாகப் பேசியும், காட்சிப்படுத்தியும், ஆவணப்படுத்தியும் வரும் நிலையில், நாமோ எம்மீது நடத்தப்பட்ட அழிவுகளை வேண்டுமென்றே மறுத்தோ அல்லது மறைத்தோ வாழத் தலைப்படுதல் ஈற்றில் எமது இருப்பிற்கே முடிவாய் அமைந்துவிடும் என்பதும் அவரது ஆதங்கமாக இருந்தது. இக்காணொளிகளின் இறுதிப்பகுதியில் தமிழ் மக்களை நோக்ல்கி வேண்டுகோள் ஒன்றினை அவர் முன்வைத்தார். அதுதான் நாம் அனைவரும், தனிப்பட்ட ரீதியிலோ அல்லது ஒரு குழுவாகவோ எம்மீது நடத்தப்பட்ட அனைத்து அக்கிரமங்களையும் ஏதோ ஒரு வகையில், ஏதோ ஒருவடிவில் கட்டாயம் ஆவணப்படுத்தியோ அல்லது காட்சிப்படுத்தியோ தீரவேண்டும் என்பது. அவரது காணொளிகளைப் பார்த்தபோது அவர் கூறுவது எனக்குச் சரியென்றே பட்டது. ஏனென்றால், எம்மீது நடத்தப்பட்ட அநீதிகளை நாமே பேசவோ அல்லது காட்சிப்படுத்தவோ மறுப்பின், வேறு யார்தான் இதைச் செய்யப்போகிறார் எனும் கேள்வி எனக்குள் வந்தது. ஆகவேதான் எம்மீது நடத்தப்பட்ட அக்கிரமங்கள் தொடர்பான எனது அனுபவங்களை இங்கு பதிவிடலாம் என்று நினைக்கிறேன். இத்தளத்தில் இருக்கும் ஏனையவர்களும் தமது தனிப்பட்ட அனுபவங்களை இங்கு பகிருமாறும் வேண்டிக்கொள்கிறேன்.16 points
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
நாற்பது, ஐம்பதுகளின் இலங்கையின் இருந்த பிரதேச பாகுபாடுகள் மலையகத் தமிழர்களின் வாழ்க்கையை ஆழமாக பாதித்திருந்தது. குறிப்பாக யாழ்ப்பாணப் பகுதியில் சில யாழ்ப்பாணத் தமிழர்கள், தேயிலைத் தோட்டங்களில் இருந்து மலையகத் தமிழர்களை வீட்டு வேலைக்கும், கழிவுகளை அகற்றும் பணிகளுக்கும் அழைத்து வந்து அமர்த்திய நிகழ்வுகள் நிறைய இருக்கின்றன. அப்பொழுதெல்லாம் யாழ்ப்பாணம் வறண்ட பிரதேசம். மலையகம் செழிப்பான பூமி என்று யாரும் பேசவில்லை. தாய் தந்தையை உறவுகளை மலையகத்திலேயே விட்டு விட்டு,சிறுமியையோ, சிறுவனையோ பிரித்து கூட்டிக் கொண்டு வந்து வேலை செய்ய விட்டு தன் பிள்ளைகளை படிக்க விட்ட போது யாருமே ‘குய்யோ முறையோ’ என்று கத்தவில்லை. தாயக விடுதலைக்காக கரும்புலியாகப் போனவனை, “இது எங்கள் போராட்டம் நீ வளமும், உன் வாழ்வும் உள்ள உன் மலையகத்துக்குப் போ” என்று சொல்ல பிரபாகரனே சொல்லவில்லை. புலிகள் அறிவித்தவுடன், “ஊரில் உழாத மாடு வன்னியில் எப்படி உழும்” என்று சொன்னவர்கள் வன்னிக்கு இடம் பெயர்ந்து வாழவில்லையா? புகையிலைத் தோட்டம், மிளகாய் தோட்டம் என்று வாழ்ந்தவன் இடம் பெயர்ந்து 10,000 கிலோ மீற்றர்கள் பறந்து வந்து சீமையிலே வாழ முடிந்தது என்றால்,தேயிலைத் தோட்டத்தில் வாழ்ந்தவன் உள்ளூரில் இடம் பெயர்ந்து வாழ முடியாதா? சுமந்திரனை நீங்கள் தூற்றுங்கள். பாரளுமன்றத்தில் யாராவது பிரபாகரனுக்கு பிறந்தநாள் சொன்னால் போற்றுங்கள். அது உங்கள் விருப்பம். சுமந்திரன் சொன்னார் என்பதற்காக நல்லதை எதிர்ப்பது எந்தவகையில் நியாயம்? ஒன்று நிச்சயம் கால் மேல் கால் போட்டு மல்லாக்காகப் படுத்திருந்து வானத்தை நோக்கி துப்பிக் கொண்டிருப்பவர்களால் ஈழத் தமிழர்களுக்கு எந்த பிரயோசனமும் கிடையாது.11 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Justin @vaasi @விளங்க நினைப்பவன் @குமாரசாமி @goshan_che @island @விசுகு @நெடுமாறன் @வாத்தியார் @nedukkalapoovan @சுவைப்பிரியன் @suvy @Kavi arunasalam @வாலி @நந்தன் @Kandiah57 @உடையார் @nochchi @புலவர் @ragaa @kandiah Thillaivinayagalingam @satan @புங்கையூரன் @ரசோதரன் @ரஞ்சித் @Sasi_varnam @Sabesh @Maruthankerny @புரட்சிகர தமிழ்தேசியன் @அனைவருக்கும் ✨🎉10 points
-
முன்னோடி அடிப்படை சுகாதார வசதி திட்டம்
கீழ்கண்ட திரியில் ஆலோசித்து ஏற்று கொண்ட வேலைத்திட்டத்தின் அடிப்படையில் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கான திரி. பிகு இதை கேணல் சங்கர் ஞாபகார்த்த அடிப்படை வசதி திட்டம் என பெயர் சூட்ட விரும்புகிறேன்ழ் புலத்தில் மிகபெரிய வசதி வாய்ப்பை உதவி விட்டு நாடு திரும்பிய முதலாவது வான்படை சிறப்புத்தளபதி கேணல் சங்கர் பெயரலால் இதை செய்வதில் அனைவரும் உடன்படுவீர்கள் என நம்புகிறேன். மாற்று கருத்து இருப்பின் தெரியப்படுத்தவும்.9 points
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
உங்களது இந்த வரிகள் எனக்கு இதை எழுத வைத்தது. நன்றி goshan_che அறுபதுகளின் நடுப்பகுதியில், ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா காலத்தில், விசுவமடு, புதுக்குடியிருப்பு பகுதிகளில் “படித்த வாலிபர் திட்டம்” என்ற பெயரில் ஒரு முயற்சி ஆரம்பிக்கப்பட்டது. இன்று பலருக்கு அது நினைவில் கூட இல்லாமல் இருக்காமல். அந்தக் காலத்தில், படித்து முடித்து வேலைவாய்ப்பில்லாமல் இருந்த இளைஞர்கள் பிரச்சினை ஒரு பெரிய சவாலாக இருந்தது. அந்தச் சூழலில்தான், இளைஞர்களுக்கு நிலம் வழங்கி, விவசாயம் மற்றும் குடியிருப்பின் மூலம் வாழ்வாதாரம் உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டிருந்தது. விரல் விட்டு எண்ணக்கூடிய மக்கள் இருந்த விசுவமடு, புதுக்குடியிருப்பு பகுதிகள் குடியேற்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. காட்டுநிலங்கள் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டு, படித்த இளைஞர்கள் அங்கு குடியேற்றப்பட்டனர். இது வேலைவாய்ப்பை சமாளிக்கும் முயற்சியாக மட்டுமன்றி, கிராம அபிவிருத்தியை நோக்கிய அரசின் ஒரு முயற்சியாகவும் பேசப்பட்டது. ஐந்து ஏக்கர் காணிகள், இலவச நீர் வசதி, உலர் உணவுகள், பயிர் செய்வதற்கான பணம் என அரசாங்கம் பல உதவிகளைச் செய்தது. குறிப்பிட்ட சில வருடங்களுக்கு அந்தக் காணிகளை விற்கவோ, குத்தகைக்கு விடவோ முடியாத கட்டுப்பாடுகளும் இருந்தன. பலர் இந்தத் திட்டத்தில் பயன் பெற்றனர். மிளகாய் பயிர் செய்து சில “விவசாய மன்னர்களும்” உருவானார்கள். பணமும் பார்த்தார்கள். ஆனால், இந்த முயற்சி நீண்டகாலம் தொடரவில்லை. அன்றைய அரசியல் மாற்றமும் அதற்கான் காரணமாக இருந்திருக்கலாம். இருந்தாலும், “படித்த வாலிபர் திட்டம்” இலங்கை வரலாற்றில் ஒரு முக்கியமான பாடமாகவே இருக்கிறது. வேலைவாய்ப்பை அரசுப் பணிகளுக்குள் மட்டுப்படுத்தாமல், நிலம், விவசாயம், கிராம அபிவிருத்தி வழியாகத் தீர்வு காண முயன்ற ஒரு காலகட்டத்தின் பிரதிபலிப்பாக இதைப் பார்க்கலாம். ஆயுதப் போராட்டத்துக்கு முன்னரே, அமைதியான சமூக அபிவிருத்தி முயற்சியாக இது செயல்பட்டது என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விடயம். இப்படியான முயற்சிகள் மறக்கப்பட வேண்டியவையல்ல. மீண்டும் சிந்திக்க வேண்டிய விடயங்கள். இதைப் போன்று வெவ்வேறு வடிவங்களில் முயற்சிகள் இருக்கலாம். புலம்பெயர் தமிழர்கள் தாங்கள் வழங்கும் நிதிகளை சரியான வழிகளுக்குத் திசைதிருப்ப முடியும். விதண்டாவாதங்களிலேயே காலத்தைக் கழித்தால், எதிர்காலத்தில் வடமாமணத்தில் ஒரு தமிழன் பாராளுமன்றம் செல்வதே கேள்வியாகி விடலாம். மலையக மக்களிடம், “வாருங்கள், உங்கள் உறவுகள் நாங்கள் இருக்கிறோம்” என்று சொல்வது வெறும் வார்த்தையல்ல. அது அவர்களுக்கு ஒரு ஆறுதலும், ஒரு நம்பிக்கையும். அழைத்தவுடன் எல்லோரும் பெட்டி, படுக்கையுடன் ஓடிவரப் போவதுமில்லை. ஆனால் இது ஒரு விதை. விதை விதைக்கப்படாவிட்டால் பயிர் எப்படி வரும்? “இது சரிவராது” என்று ஆரம்பத்திலேயே எல்லாவற்றையும் தள்ளிவிட்டால், கிடைக்கின்ற அனுகூலங்களையும் இழந்து, தமிழினம் வெறுமையாக நிற்கும் அபாயம் இருக்கிறது. ஒன்று மட்டும் நிச்சயம். புலம்பெயர் தமிழர்களின் அடுத்த சந்ததி, தங்கள் பணத்தை ஊருக்கு அனுப்பப் போவதில்லை. ஆகவே, காலத்தில் விதை விதைப்பதே அறிவு. ‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.’9 points
-
மரப்பாவம்
9 pointsமரப்பாவம் ----------------- 'உங்கள் வீட்டில் நிற்கும் தென்னை மரத்தை நீங்கள் வெட்ட வேண்டும்.........' என்றார் அவர். அவர் பக்கத்து வீட்டில் குடியிருப்பவர். பக்கத்து வீட்டுக்காரரின் மகள். மிகவும் வயதாகிவிட்ட தந்தைக்கு உதவியாக சில மாதங்களின் முன் இங்கு குடி வந்தார். நான் இருக்கும் அமெரிக்காவின் மேற்கு கரையில் ஒரு தென்னை மரம் கூட கிடையாது என்று யாரோ சொல்லக் கேட்டிருக்கின்றேன். மேற்கு கரை எங்கெனும், மேலே கனடா எல்லையில் இருந்து கீழே மெக்சிகோ எல்லையில் வரை உள்ள சில ஆயிரம் மைல்களிலும், தென்னை மரமே இல்லை என்னும் போது, என் வீட்டில் தென்னை மரமா என்ற யோசனையுடன் அவரைப் பார்த்தேன். 'தென்னை மரமா................... என் வீட்டில் இல்லையே..................' 'ஆமாம்.............. அந்த மரம் முன்னர் இங்கிருக்கவில்லை.............. ஆனால் இப்பொழுது ஒரே இரவில் இப்படி வளர்ந்திருக்கின்றது.........' 'என் வீட்டிலா அல்லது உங்கள் வீட்டிலா..............' என்று உண்மையான சந்தேகத்துடன் கேட்டேன். 'என் வீட்டில் மரம் எதுவுமே இல்லை.............. உங்கள் வீட்டில் தான் ஏராளமான மரங்கள் நிற்கின்றன..........' என்றார் கொஞ்சம் கடுமையுடன். என்னுடைய ஆங்கிலத்தின் தொனி தான் அவரை சினமடைய வைத்திருக்க வேண்டும். நான் சாதாரணமாகவே தான் கேட்டேன், ஆனால் ஆங்கிலம் தான் அந்தக் கணத்தில் கையைவிட்டு விட்டது. இரவல் மொழியில் பணிவு இல்லாமல் போய் விட்டது என்று விளக்கம் கொடுக்கவா முடியும். நிறைய காய்களும் தன்னுடைய வீட்டுக்குள் விழுந்திருக்கின்றன என்றார் அவர். அதனால் அவர் வீடு ஒரே குப்பையாகக் கிடக்கின்றது என்றும் குற்றப் பத்திரிகையைத் தொடர்ந்து வாசித்தார். 'தேங்காய்களா.....................' என்றேன் ஆச்சரியத்துடன். இங்கு ஒரு டாலருக்கு விற்ற தேங்காய்கள் இப்பொழுது மூன்று டாலர்கள் ஆகிவிட்டன. ஆனால் என் வீட்டில் எந்த மரத்தில் தேங்காய்கள் காய்க்கின்றன என்று தெரியவில்லையே. 'இல்லை................... அவை மாதுளையின் காய்கள்......................' என்றார். மாதுளை இந்த வருடம் எந்த வருடமும் இல்லாதது போல காய்த்து நிற்கின்றது. நீலி என்ற ஒரு பெண் தெய்வம் பற்றி உங்களுக்கு தெரியுமா. நீலியை ஒரு கொடிய பேய் என்று சொல்பவர்களும் உண்டு. இந்த மாதுளையும் ஒரு பெரும் நீலித் தெய்வம் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு பிரமாண்டமாய் நிற்பது போல நிற்கின்றது. ஆகாயத்தின் ஒரு பகுதியையே மறைத்து அதன் கீழ் முழு நிழலை வைத்திருக்கின்றது. மாதுளை மரம் இப்படியும் வளருமா என்றே நம்ப முடியாமல் இருக்கின்றது. இது அமெரிக்காவில் நின்றாலும், இது அமெரிக்க மாதுளை இல்லை, ஆசிய மாதுளை என்றே ஒரு இடத்தில் விற்றார்கள். ஒவ்வொரு திசையிலும் நூற்றுக் கணக்கான காய்களுடன் ஆயிரம் கண்களுடைய நீலி போல நிற்கும் மாதுளையின் ஒரு பக்கம் பக்கத்து வீட்டுக்குள் சரிந்திருந்தது. 'மன்னிக்க வேண்டும்............... நான் உங்களின் வீட்டுக்குள் வரும் அந்த மாதுளையின் பகுதியை இந்த வாரத்துக்குள் வெட்டி விடுகின்றேன்.............' 'தென்னை மரம்.................?' என்று கேள்வியாக நின்றார். தென்னை மரத்தை தயவு செய்து கொஞ்சம் காட்ட முடியுமா என்றேன். இந்த தடவை வந்த ஆங்கிலத்தில் பணிவு நன்றாகவே இருந்தது. வாருங்கள் என்று அவர் வீட்டின் ஒரு பக்க கதவைத் திறந்து உள்ளே கூட்டிப் போனார். அங்கே பாருங்கள் உங்களின் தென்னை மரத்தை என்று மேலே விரலை உயர்த்திக் காட்டினார். 'இதுவா................. இது தென்னை மரம் இல்லை............. இது வாழை மரம்...............' பல வருடங்களின் முன்னர் ஒரு நாள் இங்கு ஒரு செய்தி நிறுவனம் வட கொரியா எங்கே இருக்கின்றது என்று ஒரு உலக வரைபடத்தில் சுட்டிக் காட்டும்படி பலரை நேரலையில் கேட்டிருந்தார்கள். பல அமெரிக்கர்கள் கனடாவையே வட கொரியா என்று சுட்டிக் காட்டியிருந்தார்கள். எனக்கு வாழை தென்னை ஆகியது அதை விட பெரிய செய்தி. 'இந்த வாழை மரங்கள் என் வளவுக்குள் தானே நிற்கின்றது. இதில் நான் எதை வெட்ட வேண்டும்.................' 'இந்தப் பக்கம் வரும் இலைகள் எல்லாவற்றையும் நீங்கள் வெட்ட வேண்டும். இவை ஏன் என் வீட்டின் கூரையின் மேல் ஆடிக் கொண்டு நிற்கின்றன.......... என்ன பெரிய இலைகள்...................' என்று சலித்துக் கொண்டே அவரின் கூரைக்கு மேல் போயிருந்த வாழை இலைகளை காட்டினார். அங்கே பார்த்தேன். சமீபத்தில் வீசிய பெருங்காற்றில் வாழை இலைகள் கிழிந்திருந்தன. யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று அவை அயல் வீட்டுக்கார பெண்ணின் கோபம் அறியாமல் அடுத்த வீட்டுக் கூரையின் மேல் காற்றில் ஆடிக் கொண்டிருந்தன. சுற்று முற்றும் பார்த்தேன். மற்ற வீடுகளில் மரங்கள் எல்லாம் அடக்க ஒடுக்கமாகவே நின்று கொண்டிருந்தன. என் வீட்டில் எல்லா மரங்களிலும் நீலித்தெய்வம் குடியேறியிருந்தார். ஒரு பிரச்சனையும் இல்லை, வாழை இலைகளை வெட்டி விடுகின்றேன், ஆனால் இரண்டு வாழைகள் குலைகள் போட்டிருப்பதால் உடனடியாக வெட்ட முடியாது என்றேன். எப்போது வெட்ட முடியும் என்று ஒரே பிடியாகவே நின்றார். குளிர்காலம் முடிந்து, வசந்த காலம் வரும் போது குலைகள் மீண்டும் முற்ற ஆரம்பிக்கும் என்று வழக்குக்கு ஒரு வாய்தா கேட்டேன். காற்றும் புயலும் மழையும் மாறி மாறி வருகின்றது, இவை முறிந்து வீட்டுக்கு மேல் விழுந்தால் என்னவாவது என்று ஒரு காப்புறுதி நிறுவனப் பணியாளர் போல கேட்டார். சில வருடங்களின் முன்னர் ஒரு வாழை முற்றிய குலையுடன் அவர்களின் வீட்டுக்குள் விழுந்ததைச் சொன்னேன். வாழை முறிந்து விழுந்தாலும் அதனால் சேதம் எதுவும் ஆகாது என்று உறுதிப்படுத்தவே அதைச் சொன்னேன். அதைக் கேட்டு திடுக்கிட்டவர் அப்பா சொல்லவில்லையே என்றார். 'உங்களின் அப்பா மிகவும் நல்ல ஒரு மனிதர்..................' 'அவர் சரியான அப்பாவி................... மனிதர்கள் அவரை ஏமாற்றி விடுகின்றார்கள்...............' எந்தப் பக்கம் போனாலும் கல்லால் எறிவது என்று அவர் முடிவெடுத்து விட்டார் என்று தெரிந்தது. அப்பாவை எங்கே சில நாட்களாக வெளியே காண்வில்லையே என்று கேட்டேன். அப்பா குளியலறையில் வழுக்கி முன் பக்கமாக விழுந்து மிகவும் பலமாக அடிபட்டு, படுத்த படுக்கையாகவே கிடக்கின்றார் என்றார். முன்னர் வாழை ஒன்று முறிந்து அவர்களின் வீட்டுக்குள் விழுந்த போது, அவரின் அப்பா வாழைக்குலையை தான் எடுக்கவா என்று மட்டுமே கேட்டார். சந்தோசத்துடன் சம்மதித்தவுடன், குலையை எடுத்து விட்டு மிகுதியை அவரே வெட்டி எடுத்து அப்புறப்படுத்தினார். இது நல்ல குணமா அல்லது அப்பாவித்தனமா என்று ஏஐயிடம் ஒரு தடவை நான் கேட்டுப் பார்க்கவேண்டும். அந்த வாரமே மாதுளையையும், அவர்களின் வீட்டுக்குள் எட்டிப் பார்த்த வேறு சில மரங்களையும் வெட்டினேன். அந்தப் பெண் மிகவும் சந்தோசப்பட்டார். அந்த வீட்டின் சொந்தக்காரியாக ஆவதற்கு அவர் தயாராகி விட்டார் என்றே தெரிந்தது. பின்னர் ஒரு நாள் நான் வெளியில் நின்று வேலை செய்து கொண்டிருக்கும் போது அந்தப் பெண்ணின் காரை ஒரு கார் இழுக்கும் வாகனத்தில் கொண்டு வந்து அவருடைய வீட்டின் முன்னே இறக்கினார்கள். அவருடைய காரின் மேற்கூரை முற்றிலும் உள்ளே போயிருந்தது. கார் இழுக்கும் வாகனத்துக்குள் இருந்து அந்தப் பெண்ணும் இறங்கினார். 'என்ன............... விபத்து ஆகிவிட்டதா..............உங்களுக்கு ஒன்றும் இல்லை தானே.................' என்று கேட்டேன். 'ஆமாம்............. எனக்கு எதுவும் ஆகவில்லை. நான் காரை விட்டு விட்டுப் போயிருந்தேன்.............. காரின் மேல் ஒரு பெரிய மரக்கிளை முறிந்து விழுந்து விட்டது.................' 'கடவுளின் அருள்......... நீங்கள் அங்கே இல்லாதது.................' 'ஆமாம்....................' 'பெரிய சேதமாக இருக்கின்றதே................ என்ன மரம் உங்களின் கார் மேல் விழுந்தது................' ''9 points
-
தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது
தமிழ்சிறி, உங்களுக்கு பதில் எழுதி நிறைய நாளாயிட்டுது. நேற்றைய உங்களின் கருத்துக்குப் பதில் எழுதாமலே என் அடுத்த வேலைக்குப் போகத்தான் முதலில் நினைத்தேன். ஆனால் என்னைப் பார்த்து நீங்கள் பரிதாபப்பட்ட பொழுது, அதுக்கு கொஞ்சம் மதிப்பு கொடுத்து, சரி… கொஞ்சம் நின்று எழுதிட்டுப் போகலாமென்று இதை எழுதுகிறேன்.. தையிட்டியில இருக்கின்ற புத்த விகாரைக்கு எதிரான போராட்டம் என்ற செய்தியில், “பொலிஸ் வருவார்கள், போராட்டம் செய்பவர்களை அகற்றுவார்கள், இல்லை கைதுசெய்வார்கள்” என்பதோடு நான் நிறுத்திவிட்டேன் ஏராளன் இணைத்த செய்தி அப்படயான செய்திதான். ஆனால் நீங்கள் இணைத்த செய்தி அப்படியில்லை. அதிலே என்ன சொல்லப்படுகிறதென்றால், “இதன்போது வேலன் சுவாமிகள், ஒரு பிரதேச சபை தவிசாளர் உட்பட நாலு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்கள். இதன் காரணமா போராட்டக்களத்தில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் நடுவில் கடும் முறுகல் நிலை ஏற்பட்டது ” என்று. மேலும், “அங்கே இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பொலிஸாரால கீழே தள்ளி விழுத்தப்பட்டார்” என்றும் சொல்லப்பட்டிருந்தது. நீங்கள் அடிக்கடி சொல்லும் அந்த ‘வக்கிரம்’ என்று ஒன்று இருக்கே… அதை இந்த இடத்தில் நான் நன்றாகப் புரிந்து கொண்டேன். நீங்கள் போட்டிருந்த செய்தியில், நடந்த ஆர்ப்பாட்டத்தில் சுவாமிகள் பின் தள்ளப்படுறார், சிறீதரன் முன்னுக்கு வருகிறார். ஆனால் சிறீதரன் எம்பி தள்ளப்பட்டு கீழே விழுந்தார் என்று எந்த வீடியோவிலேயும் நான் காணவில்லை. ஆனால் நீங்கள் போட்ட செய்தி அதையே முன்னிலைப் படுத்தி நிற்கின்றது. இதற்கு ஆதாரமான உண்மை இருந்தால், தரவிட்டு காட்டுங்கள். கண்டிப்பா நன்றி சொல்வேன். தன் கட்சிக்குள்ளே நடக்கின்ற பிரச்சினையைக்கூட பாராளுமன்றத்துக்கு கொண்டு போய் நீதி கேட்கின்ற ஆள் சிறீதரன் எம்பி. அப்படிப்பட்டவர், ஒரு பொலிஸ் தள்ளி கீழே விழுந்து விட்டால், பாராளுமன்றத்தை உண்டு இல்லை என்று ஆக்காமல் விடுவாரா? அதனாலே இங்கே அவரைப் பற்றி நான் பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என் பார்வையில், தமிழ் மக்களுக்கு சிறீதரனால் எந்த நலனும் கிடைக்கப் போவதில்லை. தமிழ் மக்களுக்கக அவர் எதுவும் செய்யப் போவதும் இல்லை நேற்றைய விட இன்றைக்கு உங்களிடம் கொஞ்சம் தெளிவு வந்திருப்பதைதையும் நான் கவனிக்கிறேன். “மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரை, மக்கள் போராட்டம் சம்பந்தப்பட்ட நிகழ்வில்… சிங்கள காவல்துறை கீழ தள்ளி விழுத்துது // – இதுதான் செய்தி”என்று சிவப்பு வர்ணத்தில நீங்கள் நேற்று குறிப்பிட்டிருந்தது, இன்று “பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கான வேலன் சுவாமி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதி” என்று வந்திருக்கின்றது. சுவாமி முன்னுக்கு வந்திருக்கிறார். நேற்று வீழ்ந்து எழுந்த எம்பியை இன்றைக்குக் காணோம். ஆனாலும் வேலன் சுவாமிகள் ஒன்றும் லேசுப்பட்ட ஆள் கிடையாது. பொலிஸ் அவரை வாகனத்தில ஏற்றும்போது, அவர் பொலிஸைப் பார்த்து ஏக வசனத்தில சொன்ன வார்த்தையைக் கேட்டு அந்த பொலீஸ்காரனே கொஞ்சம் மிரண்டு போனான். இலங்கையில் பிக்குகள் மேல் பொலிஸ் தாக்குதல் நடந்திருக்கிற கதைகளும், சம்பவங்களும் ஏற்கனவே இருக்கின்றன. இணையத்தில் தேடினால் கண்டிப்பாகக் கிடைக்கும். கிடைத்தால் உங்கள் நண்பர் குமாரசாமியாரோடும் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! மீண்டும் ஒரு நல்ல கருத்தாடலில் சந்திப்போம்.8 points
-
புட்டு கேட்ட கணவனை போட்டு தள்ளிய மனைவி கத்தியுடன் சரண்
வீட்டில் நான்தான் சமையல் என்பதால் எனக்கு ஆபத்து இல்லை.8 points
-
வாழைப்பூ வடை
8 pointsவாழைப்பூ வடை -------------------------- வீட்டுக்கு வெளியே என்னை இருக்க வைத்திருப்பதற்கு அவன் ஏற்கனவே இரண்டு தடவைகள் மன்னிப்பு கேட்டிருந்தான். வீட்டுச் சுற்றுமதிலுக்கும் வெளியே இரண்டு பிளாஸ்டிக் கதிரைகளையும், ஒரு சின்ன பிளாஸ்டிக் மேசையும் போட்டிருந்தான். எனக்கு துடக்கு என்று அவன் சொன்னான். இறந்தவர் எனக்கு ஆண் வழியில் உறவுமுறை என்பதால் இந்த துடக்கு 31 நாட்கள் வரை இருக்கும் என்றான். அவனின் வீட்டில் ஏதோ கோவில் விரதமோ அல்லது மாலை போட்டிருக்கின்றார்கள், அதனால் என்னை வீட்டின் உள்ளே விடவில்லை என்றும் சொன்னான். நான் அதை சரியாகக் கவனிக்கவில்லை. பிளாஸ்டிக் பொருட்கள் அழிவதும் அரிது, அவற்றை துடக்கு கூட தொட முடியாது போல என்று நினைத்துக் கொண்டே கவனமாக கதிரையின் உள்ளே வசதியாக உட்கார முயன்று கொண்டிருந்தேன். நேற்று துக்க வீட்டுக்கு துக்கம் விசாரிக்க வந்த ஒரு குடும்பத்தில் ஒரு மகன் மிகவும் செழிப்பாக இருந்தார். அவர் அங்கிருந்த பிளாஸ்டிக் கதிரைக்குள் மிகவும் சிரமப்பட்டே தன்னை திணித்துக் கொண்டிருந்தார். அவர் ஒரு தடவை எட்டி எடுப்பதற்காக அசைந்த போது அந்தக் கதிரை ஒரு கணம் வளைந்து படீரென்று உடைந்து போனது. துக்கம் விசாரிக்க வந்தவர்கள் பதறிப் போனார்கள், அவர்களின் பிள்ளைக்கு ஏதேனும் அடிபட்டு விட்டதோ என்று. அவனை நான் கடைசியாகப் பார்த்து 35 வருடங்களுக்கு மேல் இருக்கும். சிறு வயதில் ஒரே வகுப்பில் படித்தோம். பாடசாலையிலிருந்து என்னுடைய வீட்டுக்கு வரும் வழியிலேயே அவனுடைய வீடு இருந்தது. அவனுடைய வீட்டுக்கு அடிக்கடி போயிருக்கின்றேன். அங்கே எல்லோருமே அழகாக இருந்தார்கள். பயில்வான்கள் போன்ற உடற்கட்டும் அவர்களுக்கு இருந்தது. படிப்பு தான் சுத்தமாக வரவில்லை. அவனோ அல்லது அவன் வீட்டிலோ அதையிட்டு எவரும் அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. என் வீட்டிலும் அதே நிலைதான். பிள்ளைகள் காலை எழும்பி கண் காணாமல் எங்கேயாவது போனால் போதும் என்றே பல குடும்பங்கள் இருந்தன. தினமும் பாடசாலை முடிந்த பின்னும் நாங்கள் உடனேயே வீடு போய் சேர்ந்ததும் இல்லை. அங்கங்கே நின்று இருந்து என்று வீடு போக பொழுது செக்கல் ஆகிவிடும். எவரும் எவரையும் தேடவில்லை என்பது இப்போது ஆச்சரியமாக இருக்கின்றது. ஒரு நாள் பாடசாலை முடிந்து கடலாலும், கரையாலும் நடந்து வந்து கொண்டிருந்த போது, இரண்டு ஆட்கள் அளவு இருக்கும் பெரிய சுறா மீன் ஒன்றை கடல் தண்ணீரில் வைத்து துண்டு துண்டாக்கிக் கொண்டிருந்தார்கள். நீலக் கடல் செக்கச் சிவந்து இருந்தது அப்போது. பின்னரும் அந்தக் கடல் பல சமயங்களில் சிவப்பாகியது. உலகில் கடல் போல வேறு எதுவும் தன்னைத் தானே உடனடியாக விரைவாகச் சுத்தம் செய்து கொள்வதில்லை. பயில்வான் போன்று இருந்தவன் இப்போது மிகவும் மெலிந்து இருந்தான், ஆனால் முகம் அதே அழகுடன் இருந்தது. அடுத்த கதிரையின் நுனியில் ஒரு எச்சரிக்கையுடன் இருந்து கொண்டே எப்படியடா இருக்கின்றாய் என்று ஆரம்பித்தான். அவன் வீட்டிலேயும் யாரோ ஒரு கதிரையை உடைத்து இருப்பார்கள் போல. நல்லா இருக்கின்றேனடா என்று சொல்ல வேண்டிய பதிலைச் சொன்னேன். மனைவியையும், மகளையும் கூப்பிட்டு அழைத்து என்னை அறிமுகப்படுத்தினான். நாங்கள் சிறு வயது நண்பர்கள் மட்டும் இல்லை, சொந்தக்காரர்கள் கூட என்று அவர்களுக்கு சொன்னான். அவர்கள் கொஞ்சம் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். துக்கம் நடந்த வீட்டுக்கும் அவனுக்கும் போன வாரம் கூட பெரிய சண்டை நடந்து கொண்டிருந்ததாக எனக்கு முன்னரேயே சொல்லி இருந்தார்கள். அவன் வளர்க்கும் கோழிகளை அவர்களின் வீட்டு நாய்கள் கடித்துக் கொன்று விட்டன என்பதே கடைசி சண்டைக்கான காரணம். அவர்களோ தங்களிடம் நாய்களே இல்லை என்கின்றார்கள். ஆனால் தெருவில் போய் வரும் வாழும் எந்த நாய்க்கும், அதன் குட்டிகளுக்கும் அவர்கள் மிஞ்சுவதை போட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களின் வீட்டின் முன்னால் எப்போதும் ஒரு நாலு ஐந்து படுத்தே இருந்தன. எல்லோருமே சொந்தமா என்பதே அவனுடைய மனைவியினதும், மகளினதும் ஆச்சரியமாக இருக்கவேண்டும். தலைமுறை தலைமுறையாக அங்கேயே பிறந்து, அங்கேயே திருமணமும் முடித்தால், அங்கே எல்லோரும் சொந்தமாகத்தானே இருக்கவேண்டும். பிராமண குடும்பங்களில் வழக்கத்தில் இருக்கும் ஒரே கோத்திரத்தில் இருப்பவர்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற முறையை அந்த ஊரில் அறிமுகப்படுத்தினால், அந்த ஊரின் நிலை சிக்கலாகிவிடும். நீ எப்படியடா இருக்கின்றாய் என்று தான் நானும் ஆரம்பித்தேன். வசதிக்கு ஒரு குறைவும் இல்லை என்றே தெரிந்தது. அழகான பெரிய புது வீடு கட்டியிருந்தான். வீட்டின் வெளியே தெருவிலேயே இரண்டு வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு உள்ளூர் சுற்றுலாக்களையும், வாகனங்களையும், ஏனைய வசதிகளையும் செய்து கொடுக்கும் தொழிலில் இருந்தான். தொழிலும் நன்றாகவே போய்க் கொண்டிருந்தது என்றே தெரிந்தது. நான் நினைத்தவற்றையே அவனும் சொன்னான். வாழைப்பூ வடை என்றபடியே அவனுடைய மகள் ஒரு தட்டு நிறைய வடைகளை கொண்டு வந்து பிளாஸ்டிக் மேசையில் வைத்தார். வாழைப்பூ வடை சாப்பிட்டு சில வருடங்கள் ஆகியிருந்தது. தமிழ்நாட்டு நண்பன் ஒருவன் ஒரு நாள் வேலையில் கொண்டு வந்திருந்தான். வீட்டில் செய்ததாக ஞாபகம் இல்லை. வாழைத் தண்டிலும் அவர்கள் கூட்டு அல்லது கறி என்று ஏதோ செய்வார்கள். பல மரக்கறிகளைப் போலவே அதுவும் எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் மிகவும் நல்லது, உடல்நலத்திற்கு உகந்தது என்றார்கள். உடல்நலத்திற்கு உகந்தவை எல்லாம் கொஞ்சம் முயற்சி செய்தே சாப்பிட வேண்டியவை போல, 'கொஞ்சம் சுகர்..........' என்று சொன்னான். அப்பொழுது தான் அவனை கவனமாக உற்றுப் பார்த்தேன். பயில்வான் போல இருந்தவன் மெலிந்து போயிருந்த காரணம் தெரிந்தது. கொஞ்சம் என்றில்லை, மிக நன்றாகவே நீரிழிவு அவனை தாக்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. மருந்து ஏதும் எடுக்கின்றாயா என்றேன். தான் முந்தி ஆங்கில மருந்துகள் எடுத்ததாகவும், ஆனால் இப்போது எடுக்கவில்லை என்றும் சொன்னான். ஆங்கில மருந்துகள் எதுவுமே வேலை செய்யவில்லை என்றான். நல்ல ஒரு நாட்டு வைத்தியர் அங்கே இருப்பதாகவும், அத்துடன் தான் சில பத்தியங்களை பின்பற்றுவதாகவும் சொன்னான். அதில் ஒன்று வாழைப்பூ வடை. உடம்புக்கும், இரத்தத்திற்கும் மிகவும் நல்லது என்றான். சுவையாகவும் இருந்தது. பழங்கள் சாப்பிடாமல்ல் காய்களைச் சாப்பிடுவதாகவும் சொன்னான். மாம்பழம் சாப்பிடாமல்ல் மாங்காய் சாப்பிடுவதாகச் சொன்னான். அதுவும் ஒரு மருந்து என்றான். இதை ஆபிரிக்காவில் ஒரு ஆராய்ச்சியில் கண்டு பிடித்து இருக்கின்றார்கள் என்றான். ஆபிரிக்காவில் மனிதர்கள் தோன்றினார்கள் என்ற தகவலை விட வேறு எந்த தகவலையும் நான் அதுவரை ஆபிரிக்காவுடன் இணைத்து வைத்திருக்கவில்லை. ஆபிரிக்க மாங்காய் புதிய தரவு ஒன்றாக தலைக்குள் போனது. ஒரு சிவராத்திரி பின் இரவில் ஒரு வீட்டு மாமரத்தில் ஏறி மாங்காய்கள் பிடுங்கிக் கொண்டிருந்தோம். நான் தான் மரத்தில் ஏறி இருந்தேன். உச்சியில் நின்று கொண்டிருந்தேன். சத்தம் கேட்டோ அல்லது இயற்கை உபாதை ஒன்றை கழிக்கவோ அந்த வீட்டுக்காரர் எழம்பி அவர்களின் பின் வளவு நோக்கி வந்து கொண்டிருந்தார். கீழே நின்றவர்கள் எல்லோரும் ஓடிவிட்டார்கள். டேய்............டேய்.......... என்று சத்தம் போட்டுக் கொண்டே வீட்டுக்காரர் நடந்து வந்தார். அவருக்கு வயிறு முட்டியிருந்தது போல, அவர் ஓடி வரவில்லை. உச்சியிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த நான் இனிமேல் இறங்குவதற்கு நேரமில்லை என்று ஒரே குதியாகக் குதித்து விழுந்து ஓடினேன். கைகால்கள் எதுவும் உடையவில்லை. சில உடம்புகள் மிகப் பாவம் செய்தவை. அவை சில ஆன்மாக்களிடம் மாட்டுப்பட்டு எந்தக் கவனிப்பும் இல்லாத ஒரு சீரழிந்த வாழ்வை வாழ்கின்றன. அவன் தனக்கு இது எதுவுமே ஞாபகம் இல்லை என்றான். ஆனால் நாங்கள் அப்பவே மாங்காய்கள் நிறைய சாப்பிட்டது நல்ல ஞாபகம் என்றான். சில நாட்களின் பின், நான் திரும்பி வருவதற்கு விமான நிலையம் போவதற்கு அவனுடைய இரண்டு வாகனங்களையே எடுத்திருந்தோம். ஒன்றில் அவனும் வந்தான். அருகே இருந்தான். கோழிச் சண்டைக்காக அங்கே இருந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டான். வழியில் போக்குவரத்து மிகவும் நெரிசலாகி விமான நிலையம் வந்து சேர்வதற்கு மிகவும் தாமதமானது. யாரோ அமைச்சரோ அல்லது பிரபலமான ஒருவர் அந்த வழியால் போய்க் கொண்டிருந்தார் போல. அவசரமாக இறங்கி, இரண்டு வாகனங்களிலும் வந்த சொந்தபந்தங்களிடம் இருந்து விடைபெற்று, ஓடி ஓடி, விமானம் கிளம்பும் கதவடிக்கு வந்த பின் தான் அவனுக்கு நான் போய் விட்டு வருகின்றேன் என்று சொல்லவில்லை, அவனை நான் திரும்பிக் கூட பார்க்கவில்லை என்பது புரிந்தது. அவன் இறந்து விட்டான் என்ற செய்தி சில மாதங்களில் வந்தது.8 points
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
என்னை பொறுத்தவரையில் இது எப்போதோ நடந்திருக்க வேண்டிய ஒரு காலக் கடமை. 200 வருட அடிமை சாசன வாழ்க்கையில் அந்த பெருந்தோட்ட மக்கள் கூட்டம் அடைந்த முன்னேற்றம் என்பது ஆமை வேகத்தில் தான் நடந்திருக்கிறது. இன்று தேயிலையும் கூட இலங்கையின் ஏற்றுமதி பொருளாதார வருவாய் சுட்டியில் முன்னிலையில் இல்லை. மலையக மக்களின் புதிய சந்ததி ஒன்றும் தேயிலை கூடையை தலையில் மாட்டி.. சாக்கு துணியை இடுப்பில் கட்டி கொழுந்த்து பறிக்கும்தொழிலுக்கு போகப் போவதும் இல்லை. இப்போதே அநேக இளையவர்கள் கொழும்பு, கண்டி என்ற பெரு நகரங்களை நோக்கியும் வெளிநாடு செல்லுவதுமாகத்தான் அவர்கள் வாழ்க்கை இருக்கிறது. சுமந்திரன், மற்றும் தமிழ் அரசியல்வாதிகளின் இந்த வெண்டுகோள் தூர நோக்கில் சரியானதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். நடைமுறையில் நிறைய சிக்கல்கள் வரலாம். அடையாள இழப்பு, பொருளாதார சிக்கல், சமூக சிக்கல் இப்படி பல இன்னல்களை சந்தித்தாலும், ஓரிரு தலைமுறைகளின் பின்னர் இவர்களின் வாழ்வு ஓரளவுக்கு சுபிட்சமாக இருக்கும் என நான் நம்புகிறேன். எனக்கு தெரிந்த பல குடும்பங்கள் 1983 காலங்களிலும், அதன் பின்னரும் மலையகத்தை விட்டு வெளியேறி வடக்கில் குடியேறியவர்கள் ஆரம்பத்தில் பல சிக்கல்களை அனுபவித்தாலும், இன்று வட, கிழக்கு மக்களின் யதார்த்த வாழ்வை போல கல்வி, தொழில், வெளிநாடு, கோயில் குளம் என்று சந்தோசமாக இருக்கிறார்கள். சிங்களத்தின் கருணையில், பச்சாதாபா பிச்சையில் வாழ வில்லை என்ற கௌரவத்தோடு தமிழராக வாழ்கிறார்கள். தவிர இந்த உரையாடல், அரசுக்கு மலையக மக்களுக்கு செய்யவேண்டிய காலம் கடந்த நீதியை செய்ய ஒரு அழுத்தத்தை கொடுக்கும் என்றும் கூட நினைக்கிறன்.8 points
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
சுமார் மதியம் 12 மணியிருக்கலாம். இந்திய இராணுவம் கோண்டாவில்ச் சந்தி நோக்கி முன்னகர ஆரம்பித்தது. முருகேசுவின் தேநீர்க் கடையினை அடுத்துவரும் தோட்டவெளியினை அவர்களது தாங்கி அண்மித்தவேளை புலிகள் தாக்கத் தொடங்கினார்கள். கடுமையான தாக்குதலையடுத்து இந்திய ராணுவத்தின் தாங்கி பின்னால் வர ஆரம்பித்தது. சில நிமிடங்களுக்குப் பின்னர் பொதுமக்களை இரு வரிசைகளில் வீதியின் இருமருங்கிலும் நிற்கும்படி கட்டளையிட்டான் இந்திய படைப்பிரிவின் தளபதிபோன்று காட்சியளித்த ஒருவன். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று சுமார் 50 இல் இருந்து 60 வரையான பொதுமக்களை அவர்கள் வீதியின் இருபுறமும் வரிசையாக நிற்கக் கூறிவிட்டு எமக்குப் பின்னால் அவர்களின் தாங்கி நின்று கொண்டது. தாங்கியின் மேல் அமர்ந்திருந்தவன் எம்மை கோண்டாவில்ச் சந்தி நோக்கி நடக்கும்படி சத்தமிட்டான். வேறு வழியின்றி நடக்கத் தொடங்கினோம். புலிகளின் தாக்குதல்களில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ளவே எம்மை மனிதக் கேடயங்களாக இந்திய இராணுவம் பாவிக்கின்றது என்பதைப் புரிந்துகொண்டோம். ஆனாலும் வேறு வழியில்லை. முன்னால்ப் போனால் சண்டையில் அகப்பட்டு மடிவோம், போகமாட்டோம் என்று மறுத்தால் பின்னாலிருந்து இந்திய இராணுவம் எம்மைச் சுட்டுக் கொல்லும். ஆகவே வேறு வழியின்றி கோண்டாவில்ச் சந்தி நோக்கி நடக்கத் தொடங்கினோம். வமாஸ் பகுதி கடந்து, மதகடி வரும்வரை நடந்திருப்போம். நில்லுங்கள் என்று பின்னாலிருந்து கட்டளை வந்தது. தாங்கியும் எமக்குப் பின்னால் நின்றிருக்க, அதனைச் சூழ இந்திய இராணுவ வீரர்கள் கால்நடையாக வந்துகொண்டிருப்பது தெரிந்தது. சிறிது நேரத்தின் பின்னர் எம்மை மீளவும் நடக்கச் சொன்னார்கள். ஆனால் எம்மைப் பின் தொடர்ந்து இம்முறை அவர்கள் வரவில்லை. வாமாஸ் பகுதியுடன் தாங்கி நின்றுவிட்டது. இந்தியத் தாங்கி நின்றிருந்த இடத்திலிருந்து சுமார் 50 மீட்டர்கள் தூரத்தில் இருந்த வீடுகளின் மதில்களுக்கிடையே புலி வீரர்கள் நின்றிருந்தார்கள். கைகளில் ஆர் பி ஜி. முகத்தில் அச்சமில்லை. வீதியில் நின்ற இந்தியத் தாங்கியே அவ்வீரனது இலக்கு என்பது தெரிந்தது. தன்பக்கம் திரும்பிப் பார்க்காது தொடர்ந்து நடக்குமாறு அவர் கைகளால் சைகை செய்தார். நாம் அப்படியே செய்தோம். அவரைப்போலவே இன்னும் சில புலி வீரர்கள் அப்பகுதியெங்கும் நிலையெடுத்திருந்தார்கள். நாம் கோண்டாவில்ச் சந்தியை அடைந்தபோது அங்கிருந்த புலிகளின் ஒரு அணியினர் எமக்குக் குடிக்க தண்ணீர் கொடுத்தார்கள். தவறாது இந்திய இராணுவத்தின் விபரங்கள் குறித்தும் அறிந்துகொண்டார்கள். அவர்கள் கேட்ட விடயங்களைக் கூறிவிட்டு, பொற்பதி வீதி நோக்கி நடக்கத் தொடங்கினோம்.8 points
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
கண்களில் கொலை வெறி கொப்பளிக்க அவர்கள் அப்பகுதியெங்கும் மனிதர்களைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன் தம்பியின் முதுகில் துப்பாக்கியை வைத்து அழுத்தி, "வீட்டிற்குள் போ, நீங்கள மறைத்துவைத்திருக்கும் ஆயுதங்களை எங்களுக்குக் காட்டு" என்று அதட்டினான். தகப்பானரையும், சிற்றன்னையையும் என்னையும் தலையில் கைகளை வைத்தபடி முழங்காலில் இருக்கவைத்துவிட்டு தம்பியை அழைத்துக்கொண்டு வீட்டினுள் சென்றார்கள் சில இராணுவத்தினர். முதல் நாள் எமது வீட்டிற்கு அருகில் வீழ்ந்து வெடித்த செல்களின் துகள்கள், சில வெற்று ரவைக்கூடுகள் என்று சிலவற்றை அலுமாரியினுள் ஒளித்து வைத்திருந்தது அப்போதுதான் ஞாபகத்திற்கு வந்தது. அடக் கடவுளே, அவற்றைக் காணப்போகிறார்கள், அவைதான் ஆயுதங்கள் என்று கூறிக்கொண்டே எம்மைத் தாக்கப்போகிறார்கள் என்று அச்சப்படத் தொடங்கினேன்.நான் நினைத்தவாறே நாம் ஒளித்துவைத்திருந்த செல்த் துகள்களையும், வெற்று ரவைக் கூடுகளையும் அவர்கள் கண்டார்கள். நான் நினைத்தவாறே அவற்றை எங்கிருந்து எடுத்துவந்தீர்கள் என்று எம்மைப் பார்த்துக் கேட்டார்கள். வீட்டினருகில் வீழ்ந்தவற்றைத்தான் எடுத்துவைத்தோம் என்று நாம் சொல்லியும் அவர்கள் நம்பவில்லை. மறுபடியும் தாக்கத் தொடங்கினார்கள். தமது ஆத்திரம் அடங்கியதும் வரிசையில் எம்மை நிற்கவைத்து, அப்பகுதியில் தாம் கண்டுபிடித்து இழுத்துவந்த இன்னும் சிலரையும் எம்முடன் சேர்ந்து பலாலி வீதி நோக்கி நடக்கச் சொன்னார்கள். ஒழுங்கை வழியே நடந்துகொண்டு இருபுறமும் பார்க்கத் தொடங்கினேன். கட்டிட இடிபாடுகளுக்கிடையில் இரத்தக் காயங்களுடன் தெரிந்த கால்கள் இரண்டு, உடலைக் காணவில்லை. சில மீட்டர்கள் தூரத்தில் உயிரற்றுக் கிடந்த வயோதிபர் ஒருவரது உடல். முகம் முழுதும் இரத்தத்தினால் தோய்ந்திருக்க கடுமையாகக் காயங்களுக்கு அவர் உள்ளாகியிருக்கிறார் என்று தெரிந்தது. பலாலி வீதியை அடைந்த போது அப்பகுதியெங்கும் அன்றிரவு முழுவதும் காந்தியின் பேய்கள் ஆடியிருந்த நரவேட்டை தெளிவாகத் தெரிந்தது. பலாலி வீதியினை அப்பேய்களது தாங்கிகள் உழுது வைத்திருக்க, தெருவோரக் கடைகள் இடிந்துபோய் தரைமட்டமாகியிருக்க அப்பகுதியே சுடுகாடுபோலக் காட்சியளித்தது. பலாலி வீதியின் ஓரத்தின் அமைந்திருந்த சைக்கிள் திருத்தும் கிளியண்ணையின் கடையின் முன்னால் ஏற்கனவே சிலரை இழுத்துவந்து நிறுத்தியிருந்தார்கள். அவர்களுடன் சேர்த்து எம்மையும் சுவரைப் பார்த்தபடி நிற்குமாறு பணித்தார்கள். கோண்டாவில் டிப்போ அருகில் இந்திய ராணுவத்தின் முன்னரங்கு அமைந்திருக்க, அப்பகுதியில் இருந்து சுமார் 200 மீட்டர்கள் தொலைவில், வாமாஸ் பகுதியில் புலிகளின் நிலைகள் அமைந்திருந்தன. பலாலி வீதியின் நடுவே நின்று கொண்டிருந்த தாங்கியிலிருந்து 50 கலிபர் துப்பாக்கியினால் புலிகளின் நிலைகள் நோக்கித் தொடர்ச்சியாகத் தாக்கிக்கொண்டிருந்தது இந்திய ராணுவம். நாம் நிற்கவைக்கப்பட்ட கடையில் இருந்து சுமார் 20 மீட்டர் தொலைவிலேயே தாங்கி நிலையெடுத்திருந்தது. இடையிடையே இந்தியத் தாங்கியை நோக்கி புலிகளும் துப்பாக்கியினால் சுட்டுக்கொண்டிருந்தார்கள். தாங்கியில் பட்டுத் தெறித்த சன்னங்கள் எமக்கருகிலும் வந்து வீழ்ந்தன. இவ்வாறான ஒரு தாக்குதலில் புலிகள் ஆர் பி ஜி உந்துகணையினால் தாக்கியிருக்கவேண்டும், தாங்கி தப்பித்துக்கொண்டது. ஆத்திரமடைந்த இந்திய ராணுவம் நாம் நிற்கவைக்கப்பட்டிருந்த கடையினை நோக்கி தாங்கியின் பீரங்கியினால் தாக்கியது. கடையின் மேற்பகுதிச் சீமேந்துக் கூரை இடிந்து எம்மீது வீழ்ந்தது. அங்கே நின்றிருந்த பலருக்குக் கடுமையான காயம் ஏற்பட்டது. தம்பியின் நெற்றியில் சீமேந்து கிழித்து இரத்தம் கொட்ட ஆரம்பித்தது. எம்மைக் கொல்லப்போகிறார்கள் என்று எண்ணி அலறத் தொடங்கினோம். ஆனால் அவர்களோ எம்மைப் பார்த்துச் சிரித்து எக்காளமிட்டார்கள். காயப்பட்டு கீழே குருதி சொட்டக் கிடந்த பொதுமக்களுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் அவர்களுக்கு சிறிதும் இருக்கவில்லை. எம்மை நோக்கித் தாக்குதல் நடத்தியதே அவர்கள் தான் என்கிறபோது எம்மைக் காப்பாற்ற வேண்டிய தேவையென்ன அவர்களுக்கு? தம்பியின் நெற்றியில் இருந்து வழிந்துகொண்டிருந்த குருதியைக் கட்டுப்படுத்த தனது சட்டையின் கைப்பகுதியைக் கிழித்து தகப்பனார் கட்டுப்போட்டார். இரத்தம் ஓடுவது குறைந்தபோதிலும், முழுதுமாக நிற்கவில்லை. அவன் களைத்துப் போய் மயங்கிவிட்டான். அவனது உடலில் இருந்து உயிர் பிரிந்துவிட்டதென்று ஒருகணம் நாம் அச்சப்பட்டோம். அவனைப்போலவே இன்னும் சிலரும் இரத்தவெள்ளத்தில் கீழே மயக்கமுற்றுக் கிடந்தார்கள். ஒருசிலர் இறந்தும் இருக்கலாம். ஆனால் யாரும் யாரையும் காப்பற்றும் நிலையில் இருக்கவில்லை. தமது உயிருக்கே உத்தரவாதம் இல்லாத நிலையில் அருகில் இருப்பவர் பற்றி எவரும் அதிகம் சிந்திக்கவில்லை. சில மணித்துளிகள் அப்படியே கழிந்துவிட அப்பகுதியெங்கும் இருந்து அங்கு இழுத்துவரப்பட்ட இன்னும் 30 முதல் 40 வரையான பொதுமக்களும் எம்முடன் இணைந்துகொண்டார்கள். உரும்பிராய் தெற்கு, அன்னுங்கை, டிப்போவிற்குப் பின்புறமாக அமைந்திருந்த குடியிருப்புக்கள் என்று பல பகுதிகளில் இந்திய இராணுவத்திடம் மாட்டுப்பட்ட பொதுமக்கள் அவர்கள். ஆண்களை நிற்கவைத்துவிட்டு பெண்களையும் சிறுவர்களையும் அப்போது இருக்கவைத்தது இந்திய இராணுவம். எமக்குள் நாம் பேசத் தொடங்கினோம். அன்று காலை முழுவதும் தாம் கண்ட அகோரங்களை சிலர் வர்ணிக்கத் தொடங்கினார்கள். இந்திய இராணுவத்தின் ஒரு படைப்பிரிவு கத்திகளால் தமது உறவினர்களை வெட்டிக் கொன்றதாகவும், வயது வேறுபாடின்றி சுட்டுப் படுகொலை செய்ததாகவும் அவர்கள் பேசினார்கள். பாமா அக்கா வீட்டில் , "ஐயோ எங்களை வெட்டாதையுங்கோ " என்று யாரோ மன்றாடி அழுதது நினைவிற்கு வந்தது. வீதிகளில் கொல்லப்பட்டிருந்த தமிழர்களின் உடல்களை நாய்கள் இழுத்துச் சென்று உண்டதைத் தாம் கண்டதாக ஒரு பெண்மணி கூறினார். இப்படிப் பலர் தமது அனுபவங்களை மற்றையவர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள். அப்பொழுதுவரை எமது அயல் வீட்டில் அன்றிரவு நடத்தப்பட்ட அகோரத்தை நாம் அறிந்திருக்கவில்லை. சுமார் 3 மாத காலத்தின் பின்னரே அப்படுகொலை குறித்த மொத்தமும் எமக்குத் தெரியவந்தது. அதுகுறித்து பின்வரும் பகுதியில் எழுதுகிறேன்.8 points
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
எமது வீட்டின் முன்னால் வந்து நின்ற இந்திய இராணுவ அணி வீட்டின் மீது சரமாரியாகத் துப்பாக்கியினால்ச் சுடத் தொடங்கியது. சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் அவரை தொடர்ச்சியான துப்பாக்கி வேட்டுக்கள் எமது வீடு நோக்கி நடத்தப்பட்டன. அந்த இருள்வேளையிலும் எமது வீடு திருவிழாக் கோல போலக் காட்சியளித்தது. சிறிது நேரத்தில் அவர்கள் வீட்டினுள் புகுந்தார்கள். எவரையும் காணாததால் எமது அயல் வீட்டிற்குச் சென்றார்கள். ஆனால் அவர்கள் எல்லோரு நல்லூரிற்குப் போய்விட்டார்கள் என்று நாம் எண்ணியிருக்க, "ஐயோ, பிள்ளைகள் இருக்கினம், சுடாதேயுங்கோ, வெட்டாதையுங்கோ" என்று அவலக் குரல்கள் கேட்கத் தொடங்கின. "அடக் கடவுளே, அவர்கள் எவரும் நல்லூரிற்குப் போகவில்லை" என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். அந்த அவலக் குரல்கள் எவையுமே இந்திய இராணுவத்தின் காதுகளுக்கு ஏறவில்லை. சரமாரியாகச் சுடத்தொடங்கியது இந்தியாவின் சாத்தான் படை. இடைவிடாது 30 நிமிடங்கள் வரை துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. அதன்பின்னர் எந்த அழுகுரலும் எமக்குக் கேட்கவில்லை. சுமார் காலை 4 மணியிருக்கலாம். கிழக்கில் கீற்றலான வெளிச்சம் பரவத் தொடங்கியிருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் நாமிருக்கும் பகுதியும் வெளிச்சமாகி விடும். நிச்சயம் எம்மைக் காண்பார்கள், நாமும் கொல்லப்படுவோம் என்பது உறுதி என்பது புரிந்தது. "சரி, இனி இதுக்குள்ள இருக்கேலாது, கையை தலைக்கு மேலால தூக்கிக்கொண்டு வெளியில போவம்" என்று தந்தையார் மெல்லிய குரலில் கூறிக்கொண்டிருக்க, "யாராவது இன்னும் உள்ளே ஒளிந்திருந்தால் இப்போதே வெளியே வாருங்கள், அல்லது நாம் உள்ளே வந்து சுட்டுக் கொல்வோம்" என்று ஆங்கிலத்தில் ஒருவன் கத்தினான். "வேறு வழியில்லை, இனிமேல் இருந்தால் கொன்றுவிடுவார்கள், சரி வெளியில் வரலாம்" என்று தந்தையார் கூறவும், இருந்த இடத்திலிருந்து எழுந்து, கைகளைத் தலைக்கு மேலே தூக்கிப் பிடித்தபடி, "நாம் சிவிலியன்கள், எங்களைச் சுடவேண்டாம்" என்று அழுதபடியே வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினோம். சில அடிகள்தான் முன்னால் எடுத்து வைத்திருப்போம். எங்கிருந்து வந்தார்கள் என்று தெரியவில்லை, சுமார் 30 அல்லது 40 இந்திய இராணுவத்தினர் எம்மைச் சூழ்ந்துகொண்டார்கள். சிலர் துப்பாக்கிகளை எமக்கு நேரே பிடித்தபடி சுட ஆயத்தமாவது தெரிந்தது. எமது வாழ்க்கை முடிவிற்கு வரப்போவது தெரியவே அழத்தொடங்கினோம். அவர்களுள் ஒருவன் முன்னால் வந்தான். சுமார் 50 இல் இருந்து 55 வயது வரை இருக்கலாம், ஹிந்தியில் ஏனைய இராணுவத்தினருக்கு ஏதோவொன்றைச் சொல்லிவிட்டு, "நீ புலிதானே, எங்கே ஆயுதங்களை ஒளித்து வைத்திருக்கிறாய்?" என்று கேட்டுக்கொண்டே தந்தையாரை துப்பாக்கியின் பின்புறத்தால் கடுமையாகத் தாக்கத் தொடங்கினான். அடியின் அகோரம் தாங்காது அவர் கீழே வீழ்ந்தபடி, "நான் ஒரு தபால் அதிபர், எனக்கும் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பில்லை" என்று ஆங்கிலத்தில் அலறத் தொடங்கினார். அருகில் நின்ற இன்னொரு இராணுவத்தினன் எனது பிடரியில் ஓங்கி அறைந்தான், சிறிதுநேரம் கண்கள் கலங்கி தலைசுற்றத் தொடங்கியது. தந்தையார் தன்னை தபால் அதிபர் என்று கூறியதும் அதுவரை அவரைத் தாக்கிக்கொண்டிருந்தவன் தாக்குவதை நிறுத்திவிட்டு பேசத் தொடங்கினான். "இங்கிருந்துதான் புலிகள் தாக்கினார்கள். உனக்குத் தெரியாமல் அவர்கள் இங்கு இருந்திருக்க முடியாது. அவர்களை எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய் என்று சொல். ஆயுதங்களைக் காட்டு, அல்லது உங்கள் அனைவரையும் சுட்டுக் கொல்லப்போகிறேன்" என்று அதட்டினான். நாம் புலிகள் இல்லை, எம்மிடம் ஆயுதங்களும் இல்லை என்று நாம் கூறியதை அவர்கள் கேட்கும் நிலையில் இல்லை. காலை நன்றாக விடிந்திருந்த அவ்வேளையில் எம்மைச் சுற்றி நடந்திருந்த அகோரங்களை அப்போதுதான் நான் கண்டுகொண்டேன். எமது வீட்டின் முற்பகுதி முற்றாக இடிந்துபோயிருக்க, இந்திய இராணுவத்தின் தாங்கியொன்று வீட்டின் முன்னால் நின்றிருந்தது. கூரை முற்றாக எரிந்து போய் கீழே வீழ்ந்து காணப்பட்டது. ஒழுங்கையின் முழு நீளத்திற்கும் கட்டப்பட்டிருந்த மதில்கள் முற்றாக இடிந்து தரைமட்டத்துடன் சேர்ந்திருக்க, மின்கம்பங்கள், வேலிகள், மரங்கள் என்று அனைத்துமே முற்றாகத் தறிக்கப்பட்டு அப்பகுதி முற்றான அழிவினைக் கண்டிருந்தது.8 points
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
சுமார் 8 அல்லது 9 மணியிருக்கலாம். செல்வீச்சின் அகோரம் குறைந்துபோயிருந்தது. இடையிடையே வீழ்ந்து வெடிக்கும் செல்களைத்தவிர அதிகளவான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுவிட்டன. "அவங்கள் அப்படியே ரோட்டால போயிட்டாங்கள் போலக் கிடக்கு, இனிப்பிரச்சினையில்லை, அவங்கள் சனத்துக்கு ஒண்டும் செய்யம்மாட்டங்கள், பயங்கரவாதிகள் சுரண்டினால் ஒழிய அவங்கள் ஏன் சனத்தைச் சுடப்போறாங்கள்"? என்று தந்தையார் கூறினார். நாம் எதுவும் பேசவில்லை. இப்படியே சில மணித்துளிகள் போயிருக்கும். செல்வீச்சின் அகோரம் முற்றாக நின்று போயிருக்க, துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் கேட்கத் தொடங்கின. தூரத்தே கேட்க ஆரம்பித்த அச்சத்தம் நேரம் செல்லச் செல்ல எம்மை நோக்கி நகர்ந்துவருவது தெளிவாகத் தெரிந்தது. புலிகள் பயன்படுத்தும் ஏ கே 47 துப்பாக்கியின் ஒலி நான் நன்றாக அறிந்தது. ஆனால் அதனைக் காட்டிலும் வேறு வகை ஒலியொன்று தொடர்ச்சியாகக் கேட்க ஆரம்பித்தது. அன்று இரவுவரை எமது வீட்டின் முன்னால் நின்று பேசிக்கொண்டிருந்த புலிகளின் குரல்கள் அப்போது கேட்கவில்லை. அவர்கள் போயிருக்கலாம். அல்லது கொல்லப்பட்டிருக்கலாம். தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டிருந்த துப்பாக்கி வேட்டுக்களைத் தவிர இன்னொரு ஒலியும் தற்போது கேட்கத் தொடங்கியிருந்தது. பாரிய இரும்புச் சங்கிலியொன்றினை யாரோ வீதியால் இழுத்துவருவது போன்ற ஒரு ஒலி. இது நான் அதுவரை கேட்டிராதது. அது என்னவாக இருக்கும் என்று யோசிக்கத் தொடங்கினேன். சிலவேளை நல்லூர்க் கோயில் நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் சனங்கள் தமது பொருட்களை இழுத்துச் செல்கிறார்களோ என்னவோ என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். அவ்வொலியும் விட்டு விட்டு கேட்டுக்கொண்டிருக்க, கனர இயந்திரத் துப்பாக்கியின் ஒலியும் தற்போது மிக அருகில் கேட்கத் தொடங்கியிருந்தது. இலங்கை விமானப்படை வானிலிருந்து நடத்தும் 50 கலிபர் தாக்குலின்போது எழுப்பப்படும் தொடர்ச்சியான தாக்குதல் ஒலியினை ஒத்த ஒலி மிக அருகில் கேட்கத் தொடங்கியது. இரவு 11 அல்லது 12 ஐக் கடந்திருக்கலாம். திடீரென்று வீட்டின் மத்திய பகுதியில் செல்லொன்று வந்து வீழ்ந்து வெடித்தது. வெடிப்பின் தாக்கத்தின் பெரும்பகுதியைக் கூரை தாங்கிக்கொண்டதால் கூரையின் உச்சிப்பகுதி வீட்டினுள் வந்து வீழ்ந்தது. இனிமேல் தொடர்ந்தும் வீட்டில் இருப்பது ஆபத்தானது என்பதை உணர்ந்த நாம் பின்னால் இருந்த மரவள்ளித் தோட்டத்தினுள் சென்று படுத்துக்கொண்டோம். அன்று காலையில்த்தான் நீர்ப்பாய்ச்சப்பட்டிருக்கவேண்டும், தோட்டாம் முழுவதுமாக சேறாயிருக்க வேறு வழியின்றி குப்புரப் படுத்துக்கொண்டோம். சிறிது நேரத்தில் எமது வீட்டின் முன்னால் யாரோ சத்தமாகப் பேசுவது கேட்டது. அது இந்திய இராணுவம்தான் என்பது எமக்குத் தெரிந்தது. "வீட்டிலிருப்பவர்கள் வெளியே வாருங்கள்" என்று சத்தமாகக் கத்திக்கொண்டிருந்தான் ஒருவன். நாம் அசையவில்லை. நடுச் சாம இருளில் அவர்கள் முன்னால் செல்லும்போது எமக்கு என்ன நடக்கும் என்பது எமக்கு நன்றாகவே தெரிந்திருந்தது, ஆகவே சத்தமின்றி அங்கேயே படுத்துக் கிடந்தோம். நாம் படுத்திருந்த தோட்டவெளிக்கும் இந்திய இராணுவ அணிக்கும் இடையிலான தூரம் சுமார் 25 அல்லது 30 மீட்டர்கள் மட்டுமே இருக்கும். இருளும், உயர்ந்து வளர்ந்திருந்த மரவள்ளிக் கன்றுகளும் எம்மை முற்றாக மறைத்துவிட்டிருந்தன. அங்கு படுத்திருந்தவாறே எம்மைச் சுற்றி நடக்கும் படுகொலைகளைப் பார்க்கத் தொடங்கினோம்.8 points
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
சாத்தானின் படையுடனான எனது அனுபவம் இடம்: கோண்டாவில், யாழ்ப்பாணம் காலம் : ஐப்பசி, 1987 அது ஒரு மாலை வேளை. பலாலி வீதியூடாக இந்திய இராணுவம் பலாலியில் இருந்து யாழ்நகர் நோக்கி நகர்ந்துவருவதாக அயலில் பேசிக்கொண்டார்கள். மிகக்கடுமையான செல்வீச்சு எமது பகுதிநோக்கி நடத்தப்பட்டுக்கொண்டிருந்தது. காலையில் இருந்து அயலில் உள்ளவர்கள் நல்லூர் கந்தசுவாமிக் கோயிலுக்குப் போவதற்கான ஆயத்தங்களைச் செய்துகொண்டிருந்தனர். "நீங்கள் போக இல்லையோ? இருக்கவே போரியள்? வந்தாங்கள் எண்டால் சுட்டுக் கொண்டு போடுவாங்கள். உரும்பிராயில நியாயமான சனத்தைக் கொண்டுட்டாங்களாம். நாங்கள் போகப்போறம். கொப்பரிட்டைக் கேட்டுப்போடு நீங்களும் வாங்கோ" என்று பக்கத்துவீட்டு பாமா அக்கா கூறிவிட்டுச் சென்றார். அவர் சொன்னதை தகப்பனாரிடம் கூறினேன். "தேவையில்லை, அவை போறதெண்டால் போகட்டும், நாங்கள் வீட்டிலை இருப்பம்" என்று ஒரே போடாய்ப் போட்டுவிட்டார். முதல் நாள் மாலையில் இருந்து எமது ஒழுங்கையில் சில போராளிகள் ஆயுதங்களோடு தரித்து நின்றிருந்தார்கள் நான்கு அல்லது ஐந்து பேர் இருக்கலாம். எமது வீட்டின் முன்னால் அமர்ந்திருந்த அவர்களுக்கு தேநீரும் சில உணவுப் பொருட்களையும் கொண்டுபோய்க் கொடுத்தேன். என்னைப்போலவே அருகில் இருந்தவர்களும் அவர்களைக் கவனித்துக் கொண்டார்கள். தகப்பனாரின் முகத்தில் ஈயாடவில்லை, வேறு நேரமாக இருந்திருந்தால் என்னை கொடுமையாகத் தாக்கியிருப்பார், ஆனால் புலிகளின் பிரசன்னம் அவரைத் தடுத்து விட்டிருந்தது. உரும்பிராய்ப் பகுதியை வட்டமடித்தபடி இந்திய விமானப்படையில் எம் ஐ 24 உலங்குவானூர்திகள் வானிலிருந்து மிகக்கடுமையான கனரக பீரங்கித் தாக்குதலையும் இயந்திரத் துப்பாக்கித் தாக்குதலையும் நடத்தத் தொடங்கியிருந்தன. அவை வானில் வட்டமடித்தவேளை கோண்டாவில் டிப்போவின் மேலாகவும் வந்துபோயின. புலிகள் அப்பகுதியில் நிற்பதைக் கண்டால் எமது பகுதிமீதும் தாக்குதல் நடக்கலாம் என்று அஞ்சிய நாம் வீட்டினுள் புகுந்துகொண்டோம். சில நாட்களாகவே மின்சாரம் தடைப்பட்டு இருந்தது. சந்தைகளும் இயங்கவில்லை. வீட்டில் கிடந்த பொருட்களைச் சேர்த்து சிற்றன்னையார் சமைத்திருந்ததை மதியம் அனைவரும் உட்கொண்டோம். மதியவேளைக்குப் பின்னர் செவீச்சின் உக்கிரம் அதிமானது. ஒவ்வொரு செல்லும் ஏவப்படும் போது எழுப்பும் ஒலியும், அது வீழ்ந்து வெடிக்கும்போதும் எழும்பும் ஒலியும் மிகத் துல்லியமாக இப்போது கேட்கத் தொடங்கின. ஒரு சில கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்தே அவற்றினை ஏவுகிறார்கள் என்பது தெரிந்தது. சுமார் பத்து செக்கன்களுக்கு ஒன்று என்ற ரீதியில் செல்கள் வந்து வீழ்ந்து வெடிக்க ஆரம்பித்தன. எமது வீட்டின் மேலாகப் பறந்துசென்று கோண்டாவில்ச் சந்திப்பகுதியில் அவை வீழ்ந்து வெடித்தன. ஒவ்வொருமுறையும் அவை வந்து வெடிக்கும்போது எங்கள் வீட்டின் கூரைகள் சலசலத்து, கீழே வீழ்ந்து நொறுங்குவது தெரிந்தது. வீட்டின் பின்புறத்தில் ஒடுங்கலான பகுதியொன்றில் சீமேந்தினால் கட்டப்பட்ட கூரைப்பகுதியின் கீழ் நாங்கள் நின்றுகொண்டோம். வீட்டின்மீது செல் வீழ்ந்தாலும் நாம் நின்றபகுதி பாதுகாப்பானது என்பது எமது எண்ணம். சுமார் பகல் 2 மணியிலிருந்து இரவு 8 மணிவரை அவ்விடத்திலேயே அசையாது அமர்ந்திருந்தோம். இடைவிடாது நடத்தப்பட்ட செல்வீச்சினால் மனதளவிலும், உடலலளவிலும் அச்சத்துடன் நடங்கியபடி அங்கு அமர்ந்திருந்தோம். இரவாகியிருந்தாலும் கூட செல்கள் எமக்கு மேலால் பறந்து சென்று வெடித்தபோது மின்னல் பாய்ச்சியதுபோன்ற வெளிச்சத்தை ஏற்படுத்திச் சென்றது. ஒவ்வொருமுறையும் வீழ்ந்து வெடிக்கும் செல்களினூடு இதயமும் நின்று மீளவும் இயங்கியதுபோன்ற வலி.8 points
-
முன்னோடி அடிப்படை சுகாதார வசதி திட்டம்
7 points
- வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
வடக்குக் கிழக்கில் மலையகத் தமிழர்கள் வந்து குடியமர்வது நண்மையான விடயம். இது எமது இனச்செறிவை எமது தாயகத்தில் அதிகரிக்கும். மலையகத்தில் அவர்கள் வாழ்ந்தபோதிலும், எப்போதுமே சிங்களவர்கள் மத்தியில் வாழ்கிறோம் என்கிற அச்சமும், அடிக்கொருதடவை சிங்களவர்களால் மேற்கொள்ளப்படுகின்ற இனவன்முறைகளுக்கு அவர்கள் முகம் கொடுப்பதும் நடக்கிறது. ஆகவே அவர்கள் வடக்குக் கிழக்கில் குடியேறுவது அவர்களுக்குப் பாதுகாப்பானது. அடுத்ததாக, வடக்குக் கிழக்கில் காணப்படும் பெருமளவிலான அரச காணிகளில் தொல்லியல் திணைக்களமும், வன ஜீவராசித் திணைக்களமும் கட்டம்போட்டு அபகரித்துவரும் நிலையில், இப்பகுதிகளில் மலையகத் தமிழர்கள் குடியேறுவது என்பது சிங்கள பெளத்த மயமாக்கலினைத் தடுக்க உதவும். 80 களின் ஆரம்பகாலத்தில் இது நடந்திருக்கிறது. தமிழர் தாயகத்தின் எல்லைகளில் பல மலையகத் தமிழர்களும், யாழ்ப்பாணத் தமிழர்களும் குடியேறினார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆகவே இப்போதும் இது நடப்பதென்பது எமக்கு நண்மையே. நிச்சயமாக நடக்க வேண்டும்.7 points- பூரணநாயகி
7 pointsஅழைப்பு மணியின் சத்தம் கேட்டு அவசரமாகக் கதவைத் திறந்தாள், றீட்டா காபென்பிறாண்ட்ல். கதவைத் திறந்தவள் முன்னால் எட்டுப் பேர்கள் நின்றிருந்தனர். நிறத்தால் வேறுபட்ட அந்நிய நாட்டவர்கள். அந்த எண்மரில் ஒருவர் பெண்ணாக இருந்தார். அந்தப் பெண்ணின் முகத்தில் ஒட்டியிருந்த சோகம், குளமாயிருந்த அவளது கண்கள், றீட்டாவின் மனதை கலங்க வைத்தது. "நாங்கள்….."அவர்களில் ஒரு ஆண் அங்கு நிலவிய நிசப்தத்தை நீக்க முயற்சித்தான். றீட்டா அந்த சத்தம் வந்த திசையை நோக்கித் தன் பார்வையைத் திருப்பினாள். வந்திருந்த பெண் மட்டுமல்ல, ஆண்களும் சோகத்தில்தான் இருந்தார்கள். “இலங்கைத் தமிழர்கள். பாரிசிலிருந்து வருகின்றோம். பூரணநாயகியின் விசயம் கேள்விப்பட்டு….” பேச்சை அவர்கள் முடிக்கவில்லை. இல்லை, அவர்களால் மேற்கொண்டு பேச முடியவில்லை என்பதே சரியாக இருக்கும். இதயத்தின் அடியில் இருந்து எழுந்த அந்தச் சோகம், தொடர்ந்து சொற்களை வரவிடாமல், விழுங்கிக் கொண்டிருந்தது. றீட்டா புரிந்து கொண்டாள், இவர்கள் ஏன் வந்திருக்கிறார்கள் என்று. “உள்ளே வாருங்கள்” அன்பாக அவர்களை அழைத்தாள். மேற்கொண்டு றீட்டா எதுவும் பேசவில்லை. பேசக்கூடிய நிலையில் அவளும் இப்போதில்லை. அவர்களது சோகம் அவளிடமும் சேர்ந்து கொண்டது. சூடான உணவுகளையும், தேநீரையும் அவர்கள் முன் கொண்டு வந்து வைத்தாள் றீட்டா. "நீண்ட தூரப் பயணத்துக்கும், குளிரான இந்த நேரத்துக்கும், இச்சூடான உணவும், தேநீரும் உங்களுக்கு இதமாக இருக்கும். தயவு செய்து உணவருந்துங்கள். “நீங்கள் உணவருந்தி முடிவதற்குள் நான் 'போன்' செய்து பாதர் அம்ரொஸ் றூமரை இங்கு வரவழைக்கிறேன். அவர் உங்களுக்கு முழு விபரமும் தருவார். நான் அவரது வீட்டுச்சமையல் வேலை செய்பவள். எனது பெயர் ரீட்டா காபென்பிறான்ட்ல்." டிசம்பர் 7ம் திகதி செக் நாட்டில் இருந்து ஜேர்மனியில் உள்ள பயர்ன் மாநில எல்லையை நோக்கி முழங்கால் வரை புதையும் உறைபனியூடாக நால்வர் நடந்து வந்து கொண்டிருந்தனர். அதில் பூரணநாயகியும் இருந்தாள். அவளுடன் இன்னும் ஒரு தமிழ் இளைஞனும், இரண்டு ஏஜென்சிகளும் நடந்து வந்தனர். இரண்டு ஈழத் தமிழர்களதும் அணிந்திருந்த உடைகள் குளிர்காலத்திற்கு ஏற்றவை அல்ல. . பனிக்குளிர், பூரணநாயகி அணிந்திருந்த மெல்லிய உடுப்புகளுக்கூடாகவும், அவளது சாதாரண சப்பாத்துக்கூடாகவும் உட்புகுந்து, அவளது உடலின் ஒவ்வொரு பாகத்தையும் உறையச் செய்து கொண்டிருந்தது. இவர்களது திசை ஓசர் மலையை நோக்கிய குறுகிய ஒரு பாதையாக இருந்தது. ஒரு கிலோமீற்றர் உயர மலையை ஒரு விதமாகச் சென்றடைந்தார்கள். அந்த மலையின் முடிவில் ஆரம்பமாகியது ஜேர்மனிய எல்லை. முழங்கால் வரை உள்ள பனியில் காலை வைத்து திரும்ப எடுத்து நடப்பதே பெரும் சிரமமாக இருந்தது. இப்படி ஒரு தடவை காலை பனியில் வைத்து எடுக்கும் போது காலில் போட்டிருந்த இளைஞனின் சப்பாத்து பனிக்குள் புதைந்து போனது அதைத்தேடி எடுக்க அந்த இளைஞனுக்கு அவகாசமில்லை. முன்னால் சென்று கொண்டிருக்கும் அந்த ஏஜென்சிகள் தங்கள் பாட்டுக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். பின்னால் வரும் இவ் இருவரைப் பற்றிய கவலைகள், அவர்கள் படும் வேதனைகள் அவர்களுக்குத் தேவையில்லாதிருந்தது. அவர்களுக்குத் தேவையான 'தரகு'ப் பணம் அவர்களுக்குக் கிடைத்து விட்டது. ஜெர்மனிய எல்லைக்குள் இருவரையும் விட்டுவிட்டால் ஏஜென்சிகளின் வேலை முடிந்து விடும். இருட்டுநேரம் பார்வையைத் தவறவிட்டால் ஏஜென்சிகள் மறைந்து விடுவார்கள். இளைஞன் சப்பாத்தைப் பனிக்குள் விட்டுவிட்டு காலில் போட்டிருந்த காலுறையுடன் தனது பயணத்தைத் தொடர்ந்தான் பூரண நாயகியால் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. ஜேர்மனிய எல்லைக்குள், 500 மீட்டர் தூரத்தில் இருந்த ஹோட்டல் ஒன்றின் வெளிச்சம் கண்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது. பூரணநாயகியால் மேற்கொண்டு நடக்க முடியாத நிலையில் அந்த பனிக்குள் தள்ளாடியபடி இருந்து விட்டார். மறுநாள் பொழுது வழமைபோல் விடிந்தது. ஹோட்டல் உரிமையாளர் யூர்கன் கோல்ஸ், தனது ஹோட்டலின் முன்பாக நின்ற இளைஞனை உற்று நோக்கினார். ஒரு காலில் Cowboy Stiefelம், மறுகாலில் வெறும் காலுறையும் அணிந்து கொண்டு, பயத்துடன் என்ன செய்வது? என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த அந்த இளைஞனை அநுதாபத்துடன் அணுகினார். "ஏதாவது உதவி வேண்டுமா?" என்று அந்தத் தமிழ் இளைஞனை பார்த்து அவர் ஜேர்மனிய மொழியில் கேட்டதை, அந்த தமிழ் இளைஞன் விளங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை.ஆனாலும் தான் ஒரு தடவை தொலைபேசியில் கதைக்கவேண்டுமென்று தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் அந்த இளைஞன் கேட்டான். அதைப் புரிந்து கொண்ட யூர்கன் கோல்ஸ், அவனைத் தனது தொலைபேசியைப் பாவிக்க அநுமதித்தாரர். தொலைபேசியில் அந்த இளைஞன் கதைத்து முடித்தபின் யூர்கன் கோல்ஸிற்கு தனது நன்றிகளைத் தெரிவித்து விட்டு வெளியில் நடக்கத் தொடங்கினான். காட்டுப் பாதையொன்றில் திடீரென வந்த ஜேர்மனியப் பொலிஸாரின் கண்களில் அந்த இளைஞன் பட்டு விடுகிறான். கேள்விகளுக்கு மேல் அவர்கள் அந்தத் தமிழ் இளைஞனை கேட்கத் தொடங்கினார்கள். அவனும் எதையும் மறைக்க விரும்பவில்லை நடந்தவற்றை அப்படியே. ஒப்புவித்தான். பூரணநாயகியைத் தனது சகோதரியெனச் சொல்லி வைத்தான். ஆனால் உண்மையிலேயே பூரணநாயகி அவன் சொந்தச் சகோதரியல்ல. நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்ட பொலிஸார், அந்த இளைஞனையும் கூட்டிக் கொண்டு பூரணநாயகியைத் தேடிச் சென்றார்கள். அவர்கள் கண்டது, பனிகளுடன் உறைந்து போயிருந்த பூரணநாயகியின் உடலைத்தான். ஜேர்மனியப் பத்திரிகைகள், இத்தகவலை பத்திரிகைகளில் பிரசுரித்த போதும், யாருமே பூரணநாயகியைப் பற்றி உரிமை கோராத பட்சத்தில், அவரது பூதவுடல் கிறிஸ்தவ தேவாலயத்தின் பின்புறமாக இருந்த சேமக் காலையில் டிசம்பர் 14ந் திகதி கத்தோலிக்க முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது. அவளின் கல்லறையில் "அமைதியாக உறங்கு" என்ற வாசகங்கள் பொருந்திய மரத்தினால் செய்த சிலுவையை வைத்து, அந்த நகரத்து மக்கள் பூக்களினால் அஞ்சலி செய்தனர். "நான் கத்தோலிக்க பாதிரியார் அம்புரோஸ் ரூமர்" பாதிரியார் தன்னை அந்த எட்டுப் பேருக்கும்" அறிமுகம் செய்து கொண்டார். தன்னுடன் கூடவந்த அந்த நகரத்து மேயர் ஜோகன் முல்பவுரையும் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் எல்லோருமாக பூரண நாயகியை அடக்கம் செய்த இடத்துக்குச் சென்றனர். நன்றாக இருண்டு விட்ட நேரத்திலும், பயங்கரமான குளிருக்கு மத்தியிலும் எல்லோரும் பூரணநாயகியின் கல்லறை முன் நின்றனர். எண்மரில் ஒருவரான ஒரு பெண், இவர் பூரண நாயகியின் மூத்த சகோதரி, கல்லறை மேல் விழுந்து கதறியழுத காட்சி மேஐரை கரைத்துவிட்டது. "ஒரு பெண்ணின் சடலம். இறந்தது டிசம்பர் 7ந் திகதி காலை 9.45 மணிக்கு, என்ற தகவலே எனக்குத் தெரியும். ஆனால்...... இப்படி ....இதன் பின்னால் ஒரு மனித சோகத்தை நான் எதிர்பர்க்க வில்லை." என்று மேஜர் கண்கள் கலங்க அந்த இடத்தில் கூறினார். "பூரண நாயகி ஒரு இந்துவாக இருந்த போதிலும், அவரை அடக்கம் செய்து அஞ்சலி செய்வது எங்களது கடமை. நான் அரசியல்வாதியாகவோ, காவல் துறையிலோ இருக்க விரும்பவில்லை. அகதிகளாக அல்லல் பட்டு, உயிர் வாழ நம்பிக்கையுடன் ஓடி வரும் மக்களை அரவணைத்து ஆதரவு தரவே விரும்புகிறேன" எனப் பாதிரியார் அம்புரோஸ் ரூமர் தனது உரையில் தெரிவித்தார். ஏஜென்சிகளை நம்பி, ஜேர்மன் எல்லையில் ஆற்றைக் கடக்கும் போதும், குளிரினாலும் பல அகதிகள் இறந்து கொண்டிருக்கிறார்கள் லொறிகளில் அடைத்து வரப்பட்டு மூச்சுத்திணறியும் பலர் இறந்திருக்கிறார்கள். 1995ம் ஆண்டு ரூமேனியாவில் இருந்து ஹங்கேரி ஊடாக ஜேர்மனிக்கு கொண்டு வரப்பட்ட 18 அகதிகள் லொறிக்குள் மூச்சுத் திணறி இறந்திருக்கிறார்கள். கண்மூடித்தனமாக ஏஜென்சிகளை நம்பி, பெரும் பணத்தைக் கொடுத்து, உயிரைப் பணயம் வைக்கும் செயல் இதுவென ஜேர்மனிய காவல்துறை தெரிவித்திருந்தது. ஐரோப்பிய நாடுகள், அகதிகளாக வரும் வெளி நாட்டவர்கள், தங்கள் நாடுகளுக்குள் நுளைய முயலும் ஒவ்வொரு வழிகளையும் கண்டறிந்து மூடி வருகிறார்கள். ஆனாலும் அகதிகளாக வருபவர்கள் ஏதாவது வழியில் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். கிருபன் இணைத்திருந்த ஷோபா சக்தியின் “பொப்பி என்பது புனை பெயர்” கதையை வாசித்த போது, எனக்கு நினைவுக்கு வந்தது பூரணநாயகியின் சம்பவம்தான். 1995ம் ஆண்டு நடந்த உண்மைச் சம்பவம். நான் நினைக்கிறேன், ஐரோப்பிய நாட்டுக்குள் நுளையும் ஈழத் தமிழர்களின் முதல் மரணம் பூரணநாயகியினுடையதாகவே இருக்க வேண்டும். 07.12.1995இல் நிகழ்ந்த அந்த மரணத்தைப் பற்றி அப்பொழுது நான் எழுதியது இது. சரியாக முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு (07.12.2025) கிருபன் பூரணநாயகியை நினைவூட்டியிருக்கின்றார்.7 points- வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
இவ் வகையான குடியேற்றங்கள் முன்னரும் நிகழ்ந்தது. டேவிட் ஐயாவின் 'காந்தியம்' அமைப்பு, 1970கள் மற்றும் 1980களில் வன்னிப் பகுதியில் இடம்பெயர்ந்த மலையகத் தமிழர்களை மீள்குடியேற்றம் செய்தது. 1977 ஆம் ஆண்டில் மருத்துவர் சோ. இராஜசுந்தரத்துடன் இணைந்து டேவிட் ஐயா (எஸ். ஏ. டேவிட்) இந்த அமைப்பை நிறுவி அதன் மூலம் 1970களில் ஏற்பட்ட இன வன்முறைகளால் / இனப்படுகொலைகளா; இடம்பெயர்ந்த சுமார் 5000 மலையக (இந்திய வம்சாவளி) தமிழர்களை வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மற்றும் திருகோணமலை போன்ற தமிழ்ப் பிரதேசங்களில் குடியமர்த்தினர். 80 களின் பின் வன்னியில் பிறந்து போராட்டத்தில் இணைந்து மாவீரர்களான பலரின் முழுப்பெயரை கவனித்தால் தெரியும், அதில் பலரது தந்தையின் பெயர் மலையக / இந்திய வம்சாவளி தமிழர்களின் பெயர்களாக இருக்கும். வன்னி மண்ணின் வீரத்துக்கும் தியாகத்துக்கும் இவர்களின் பங்களிப்பும் ஒரு காரணமாக இருந்தது. தாயகத் தமிழர்கள் வாஞ்சையுடன் இவர்களை அணைத்து அரவணைத்து உள் வாங்கிக் கொள்ள வேண்டும்.7 points- யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!
https://www.karainagar.org/about-us முதலில் இரு ஊரோடு ஆரம்பிப்போம் அண்ணை. தெளிவாக இந்த திரியில் மட்டும் வேலைகளை ஒருங்கிணைப்போம். இப்போதைக்கு இந்த இரு ஊர்களிலும் மலசல கூடம் இல்லாத அத்தனை குடும்பத்துக்கும் கட்டி கொடுப்போம். ஊர்கள் காரை நகர் சுழிபுரம் வாத்தியார் அண்ணா மேலே உள்ள காரைநகர் அமைப்போடு ஆரம்ப தொடர்பை ஏற்படுத்தி தருவார் எனில், ஏராளன் தனது அமைப்பின் மூலம் இதையே சுழிபுரத்தில் செய்வாராயின் - நீங்கள் பணத்தை திரட்டி இந்த நம்பகமான அமைபுக்களிடம் கட்டம் கட்டமாக கையளித்து வேலையை முடிக்கலாம். தயவு செய்து வாத்தியார் அண்ணா, ஏராளனுக்கு @ போட்டு விடவும். அவர்கள் செய்ய வேண்டியது முதற்கட்டமாக தலா 5 குடும்பங்களை இனம் கண்டு, மலசல கூடம் கட்டி கொடுக்கும் பொறுப்பை ஏற்க இந்த அமைப்புகள் சம்ம்யிக்கிறனவா என்பதை கேட்டு சொல்வதே. வேறு யாரும் யாழ்கள உறவுகள் தமது ஊர் பாடசாலை சங்கம் மூலமும் இதை செய்ய முன்வந்தால் அதையும் செய்யலாம். உதாரணம் விசுகு அண்ணா, புலவர், நந்தன் போன்றோர் இப்படியான சங்காங்கலில் இருப்பார்கள் என நினைக்கிறேன். எனது உலக மகா சோம்பேறித்தனத்தை கொஞ்சம் ஒதுக்கி இதில் நான் ஒருங்கிணைப்பு பணியை மேற்கொள்ள சித்தமாய் உள்ளேன். பிகு சங்கங்கள் சம்பதிக்கும் போது, அதன் பொறுப்பானவர்களோடு இமெயில், போன் தொடர்புகளை பேணவும் நான் தயார். நேரடி சந்திப்புகள், பணம் (money handling) இவை மட்டும் என்னால் முடியாது.6 points- முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
6 points- நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
அட பாவி இந்த முடிவை 3 வருடத்துக்கு முதலே எடுத்திருக்கலாமே? பட்டுத்தான்…. புத்தி வரவேண்டும் என்பது விதி. ஆரும் பப்பா மரத்தில் ஏற்றி விட்டால்,கண்ணை மூடிக் கொண்டு ஏறும் ஆள்தான்… செலென்ஸ்கி. இப்ப… நாரி முறிய, கீழே விழுந்து கிடக்கிறார். சுய புத்தியும் தேவை. இந்த திரியில் கண்ட வசனங்கள் இவை. 😂 இவை அத்தனையும் முகக்கண்ணீடி முன் நின்று தமிழர்கள் தம்மை தாமே கேட்டிருக்க வேண்டியவை அல்லவா! கச்சிதமாய பொருந்துது எமக்கும். 😂6 points- ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
கோண்டாவில்ச் சந்தியில் இருந்து வலதுபுறம் திரும்பி, பொற்பதி வீதி நோக்கி நடக்கத் தொடங்கினோம். வீதியில் சனநடமாட்டம் பெரிதாக இருக்கவில்லை. அப்பகுதியில் செல்கள் வந்து வீழ்ந்து வெடித்த அடையாளங்கள் தெரிந்தன. ஆனாலும் சில வீடுகளில் மக்கள் இருந்தார்கள். எம்மைக் கண்டதும் தங்கள் வீடுகளுக்குள் அழைத்துச் சென்று உண்ண உணவும் நீரும் கொடுத்தார்கள். எமக்கு என்ன நடந்தது என்பதுபற்றி அறிந்துகொள்ளும் ஆவல் அவர்களிடம் இருந்தது. முடிந்தவரையில் அவர்களிடம் கூறிவிட்டு எம் வழியே நடக்கத் தொடங்கினோம். செல்லும் வழியில் எம்மைப்போன்றே வெளியேற்றப்பட்ட இன்னும் பலர். எல்லோரது பயணமும் நல்லூர்க் கோயிலை நோக்கியெ அமைந்திருந்தது. நல்லூர்க் கோயிலை அண்மித்தபோது அங்கு ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான மக்கள் அடைக்கலம் புகுந்திருப்பது தெரிந்தது. மேலும் பலருக்கு அடைக்கலம் கொடுப்பதென்பது அங்கு பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு கடிணமானதாகப் பட்டதனால், உறவினர்கள் வீடுகள் இருந்தால் அங்கே செல்லுங்களேன் என்று கேட்டுக்கொண்டார்கள். தகப்பனாரின் சகோதரர் ஒருவர் கொய்யாத்தோட்டத்தில் வசித்து வந்தார். ஆகவே அங்கே போகலாம் என்று எண்ணி தொடர்ந்து நடந்தோம். நாம் கொய்யத்தோட்டத்தை அடைந்தபோது கோண்டாவில், உரும்பிராய் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட படுகொலைகள் பற்றி அவர்கள் ஓரளவிற்கு ஏற்கனவே அறிந்து இருந்தமையினால் எம்மை உயிருடன் கண்டது அவர்களுக்கு ஆறுதலைத் தந்திருக்க வேண்டும். சில நாட்கள் அங்கு தங்கலாம், பின்னர் நிலைமையினை அவதானித்து முடிவெடுக்கலாம் என்று தங்கினோம். ஒருவாரம் தங்கியிருப்போம் என்று நினைக்கிறேன். அங்கும் செல்த்தாக்குதல்கள் கடுமையாக நடத்தப்படத் தொடங்கின. இடைவிடாது பெய்த மழையினால் கொய்யத்தோட்டம், குருநகர் ஆகிய பகுதிகளில் வெள்ளம் போட்டுவிட, மக்கள் தஞ்சம் அடைவதற்குத் தன்னும் இடமின்றி அங்கலாய்த்தபடி இருந்தார்கள். இடைவிடாத மழையினூடே செல்த்தாக்குதல்கள் உச்சம் பெறத் தொடங்கின. யாழ்நகர் நோக்கி மிகக் கடுமையான செல்த்தாக்குதலை இந்திய இராணுவம் மேற்கொள்ளத் தொடங்கியது. கொய்யத்தோட்டம், சுண்டுக்குளி, ஈச்சமொட்டை ஆகிய பகுதிகளில் பரவலாக செல்கள் வந்து விழத் தொடங்கின. பல மணிநேரம் தொடர்ச்சியாக நடத்தப்படும் இத்தாக்குதல்கள் மதியமளவில் சற்று ஓய்வுக்கு வரும். அந்த ஓய்வு வேளையினைப் பாவித்து வீதிகளில் இறந்தும் காயப்பட்டும் கிடந்தவர்களை ஊர்மக்கள் எடுத்து வந்தார்கள். கொய்யத்தோட்டத்திலிருந்து ஈச்சமொட்டை செல்லும் வழியில் கொல்லப்பட்ட சுமார் 8 பொதுமக்களின் உடல்களை மாட்டு வண்டியில் கிடத்தி தென்னை ஓலைகளால் போர்த்திக்கொண்டு வந்தார்கள். மழை நீரில் முற்றாக நனைந்திருந்த உடல்களில் இருந்து இரத்தம் சொட்டச் சொட்ட மட்டு வண்டிகளில் உடல்கள் நாம் தங்கியிருந்த வீட்டின் முன்னால் எடுத்துச் செல்வதை அச்சத்தோடு பார்த்துக்கொண்டிருந்தோம். பழைய பூங்கா வீதியிலிருந்து பாசையூர் நோக்கிச் செல்லும் வழியில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியின் ஓரத்தில் சரிந்துகிடக்க அதில் பயணம் செய்தவர் உடல் கடுமையாகச் சேதமாக்கப்பட்டு மழிநீரில் நனைந்தபடி இருந்தது. இப்படியே அப்பகுதியெங்கும் பலர் கொல்லப்பட்டார்கள். சில நாட்களின் பின்னர் நாமிருந்த வீட்டுப் பகுதியின் சுற்றத்திலும் செல்கள் வீழ்ந்து வெடிக்கத் தொடங்கவே கொய்யாத்தோட்டத்தில் அமைந்திருக்கும் கிறிஸ்த்து ராசா ஆலயத்தில் அகதிமுகாம் ஒன்றினை அமைத்திருக்கிறார்கள், அங்கு சென்றால் தப்பித்துக்கொள்ளலாம் என்று யாரோ சொல்லவே, இருள் சூழ்ந்திருந்த பொழுதொன்றில் அங்கு சென்று அடைக்கலமானோம். ஆனால் அங்கு நாமிருந்த சில மணிநேரத்திலேயே மிகக் கொடூரமான செல்த்தாக்குதலை இந்திய ராணுவம் அப்பகுதி மீது நடத்தியது. பல நூற்றுக்கணக்கான மக்கள், குழந்தைகள், வயோதிபர்கள் என்று கூடியிருந்த கூட்டம் ஒப்பாரி வைக்குமாற்போல் கூக்குரலிட்டு அழத் தொடங்கியது. அங்கிருந்த அனைவரும் கொல்லப்படப்போகிறோம் என்கிற எம்மை ஆட்கொண்டது. இனி இங்கே இருந்தால் நிச்சயம் கொல்லப்படுவோம், வேறு எங்காவது சென்றாக வேண்டும் என்று பலர் பேசத் தொடங்கினர். புதிதாக அப்பகுதிக்கு அடைக்கலம் தேடி வந்தவர்கள் கூறத்தொடங்கிய கதைகளைக் கேட்டபோது இந்திய ராணுவம் மிகப்பெரும் படுகொலை ஒன்றினை நடத்தவே யாழ்நகர் நோக்கி முன்னேறி வருவது என்று பலர் பேசத் தொடங்கினர்.6 points- மேல் மாடிகளை கட்டுவதை விடுத்து முதலீடுகள் செய்வதற்கு முன்வரவேண்டும்
முதலீடு என்றால் பார் திறப்பதுதானே ?5 points- யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!
யாரையும் நம்பி அல்லது அவர்கள் செய்வார்கள் என்று இந்தத் திட்டத்திற்க்குள் நான் என்னை இனைத்துத்துக் கொள்ள விரும்பவில்லை சங்கங்களின் நிலைமையை அறிந்தவன் என்பதாலும் அவற்றை விமர்சிக்க விரும்பாததாலும் அதற்கு அப்பால் சென்று இப்படியான ஒரு உதவி காரைநகர் மக்களுக்கு கிடைத்தால் அதை நானே முன் நின்று செய்து முடிப்பேன் என்று உறுதியாக கூற முடியும் . இப்படியான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வேளை எனது காத்திரமான நிதிப் பங்களிப்பும் நிச்சயமாக இருக்கும். கோஷான் 👍🙏5 points- முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
டங்க டலீவர் டக்கா அவர்களையும், ரணில் போல ஒரு “நிக்காத வழக்கில்” அனுர அரசு கைது செய்து நாடகம் ஆடுகிறது. ரணில், டக்லசை எல்லாம் தண்டிப்பது அல்ல அனுரவின் நோக்கம். டக்காவும் அனுரவும் ஒரே கூட்டணியில் இருந்தோர்தான். #ஈயம் பூசுனா மாரியும் இருக்கோணும், பூசவும் கூடாது5 points- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
"ஒழுங்கா" மகிழ்ச்சியோ இன்பமோ ஒழுங்கா என்பதில் ஒருபோதும் இல்லை. அதை எப்போது மீறுகிறோமோ அங்கேதான் இன்பம் துளிர்க்கும். அப்படி இல்லையெனில் எப்படி ரோலர்கோஸ்ட்டர் பாரக்குகள் பணம் பார்க்க முடியும்? ஒரு திரில் எப்படி வரும். கள்ள காதலாகவே இருந்தாலும் ஓடு கழட்டி அதை கோவில் கர்ப்பகிரகத்திற்கும் அரேங்கேற்றும்போதுதான் சிவன் - பார்வதியின் ஆசிர்வாதத்துடன் முழுமை அடையும். சிவனுக்கும் பார்வதிக்கும் அவர்கள் படைத்த ஒரு ஆணும் பெண்ணும் தங்கள் சம்மத்துடன் இன்பம் ஈர்க்கிறார்கள் அதில் அவர்கள் படைப்பின் உன்னதம் மட்டுமே தெரியும். மனிதர்களுக்கு அவர்களே எழுதாத அவர்களுக்கே புரியாத ஒரு ஆயிரம் வருடம் முன்பு யாரோ யாருக்கோ எதுக்காகவோ எழுதிய வரைமுறைகளை வழக்குகளும் வரையறைகளும் குறுக்கே நிற்கும். புத்தானே பல ஆயிரம் வருடங்கள் முன்பு சொல்லி இருக்கிறான் ....... "நீ பயத்தை எப்போது விடுகிறாயோ அந்த நொடியில் இருந்து வாழ தொடங்குகிறாய்" என்று அவர்கள் வாழ்ந்து இறந்து இருக்கிறார்கள் ........ நாங்கள் சாப்பிட்டுவிட்டு சுவாசித்துக்கொண்டு இருக்கிறோம்5 points- ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
பலருக்கு பிரஜைகள் குழு என்றால் என்ன என்று இப்போது விளங்குமா என தெரியவில்லை. நான் நினைக்கின்றேன் பிரஜைகள் குழு 1986/7 ம் ஆண்டளவில் விடுதலை புலிகள் அமைப்பினால் தோற்றுவிக்கப்பட்டது. குறிப்பாக உளவாளிகள் நடமாட்டம், கிராமங்களிற்கு வரும் வெளியார் பற்றிய தகவல் இவர்களினால் பெறப்பட்டு ஒரு விழிப்புணர்வு குழுவாக செயற்பட்டது. காலப்போக்கில் பிரஜைகள் குழுவின் செயற்பாடுகள் விஸ்தாரணம் பெற்றது என நினைக்கின்றேன். எனது தகவல் சிலவேளைகளில் தவறாகவும் அமையலாம் ஏன் என்றால் நான் நீண்ட காலத்தின் பின் பழைய நினைவுகளை கிரகிக்கின்றேன். பிரஜைகள் குழு பற்றிய விரிவான விளக்கம் தெரிந்தவர்கள்/ஏக காலத்தில் அப்போது ஊரில் வாழ்ந்தவர்கள் உங்கள் கருத்தை பகருங்கள். இந்திய அமைதிப்படை காலத்தில் பிரஜைகள் குழு உறுப்பினர்கள் கொலை செய்யப்படுவது வழமையாக நடைபெற்றது. பிரஜைகள் குழு தலைவர்களும் முக்கியமாக குறி வைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். வலிகாமம் பிரதேசத்து பிரஜைகள் குழு தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நினைவு சாதுவாக உள்ளது. அவர் பெயர் நினைவில்லை. பிரஜைகள் குழுவில் அங்கத்தவம் பெற்ற சிலர் பின்னர் இலங்கை தேர்தல்களிலும் நின்று வென்றார்கள் எனும் நினைவும் வருகின்றது. விடுதலை புலிகள் அமைப்பின் ஆதவாளர்கள் அல்லாத ஒருவர் பிரஜைகள் குழு உறுப்பினராகவோ தலைவராகவோ விளங்க முடியாது என நினைக்கின்றேன். இவை எனது பழைய நினைவு மீட்டல்கள் மட்டுமே. எனது தகவல் தவறாகவும் அமையக்கூடும்.5 points- வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
அண்ணா, பிரதேசவாதமும், பிரதேச மேட்டிமைவாதமும் வேறுபட்டவை. உலகெங்கும் பெரும்பாலான மனிதர்கள் தங்களுக்கென்ற சில அடையாளங்களுடனேயே வாழ்கின்றார்கள். அது இனம், மொழி,மதம், பிரதேசம் என்று பல வகைகளில் இருக்கலாம். குலம், கோத்திரம் என்று கூட இந்த அடையாளங்கள் இருப்பதுண்டு. தங்களின் அடையாளங்களுக்கு விசுவாசமாகவும், தங்களின் அடையாளங்களை முன்னிறுத்தியும் மனிதர்கள் வாழத் தலைப்படுகின்றார்கள். ஆனால் தங்களை நிகர்த்த அடையாளங்கள் இல்லாதவர்கள் கீழானவர்கள், இழிவானவர்கள், திறமையற்றவர்கள், வீரம் அற்றவர்கள் என்பது போன்ற ஒப்பீடுகளும், கணிப்புகளும் மேட்டிமைவாதம் என்னும் வகையிலேயே வருகின்றது. பிறப்பினாலேயே தங்களை மேலானவர்கள் என்று நினைத்துக் கொள்வது மட்டும் இல்லாமல், அப்படியே நடந்து கொள்வதும் மேட்டுமைவாதமே. இந்த பிரதேச மேட்டுமைவாதமே இலங்கையில் சில பிரதேச மக்களிடம் இருக்கின்றன என்று தான் நான் சொல்ல முயன்றிருந்தேன். உதாரணம்: யாழ்ப்பாண தமிழ் மக்கள், கண்டி சிங்கள மக்கள். இவர்கள் இருவரும் இந்த விடயத்தில் வெளிப்படுத்தும் மேட்டுமைவாதத்தை இலங்கையில் வேறு எவரும் வெளிப்படுத்துவதில்லை என்பதே என் அனுபவம். பிறப்பினாலேயே ஒருவர் சிறந்தவர் ஆகி விடுகின்றார் என்றால், இங்கே எதற்குமே பொருள் இல்லை என்று ஆகிவிடுகின்றது அல்லவா.5 points- வாழைப்பூ வடை
5 pointsஇது எங்கள் தமிழ் ஆட்களிடம் தனித்துவமாக இருக்கும் கிரகிப்புக் குறைபாடோ தெரியவில்லை. மருத்துவர்கள் "வாழைத் தண்டிலும் பூவிலும் நிறைய நார்த்தன்மை இருக்கிறது, எனவே கிளைசீமிக் இண்டெக்ஸ்" குறைவு, அதனால் சாப்பிட்டாலும் சுகர் ஏறாது" என்று எழுதினால், வாசிப்போர் "வாழைத்தண்டு, வாழைப்பூ சுகர் வருத்தத்தைக் குணப் படுத்தும் மருந்து" என்று பெருப்பித்து விளங்கிக் கொள்கிறார்கள்! சுகர் வருத்தத்திற்கான மருந்து என்பது இன்சுலின் சுரப்பையோ அல்லது சுரக்கும் இன்சுலின் தொழில்பாட்டையோ அதிகரிக்கும் வேலையைச் செய்தால் மட்டுமே அது சுகர் வருத்தத்திற்கான மருந்து. தற்போதைக்கு மெற்போமின் போன்ற ஆங்கில மருந்துகள் மட்டும் தான் இந்த வேலையைச் செய்கின்றன. வேறெந்த மந்திர மாயமும் நாட்டு வைத்தியமும் இந்த வேலையைச் செய்வதாக ஆதாரங்கள் இல்லை! இந்த கிரகிப்புக் குறைபாட்டை வேறு பல வடிவங்களிலும் காண்கிறேன். அண்மையில் ஒரு நண்பர் தான் வொட்கா குடிக்க ஆரம்பித்திருப்பதாகச் சொன்னார். "நீங்கள் அல்கஹோல் குடிப்பதில்லையே, இப்போது புதிதாக ஆரம்பித்திருக்கிறீர்களா?" என்று கேட்ட போது "வொட்கா குடித்தால் இரத்த சுகர் ஏறாது என்பதால் குடிக்கிறேன்" என்றார்😂. நடந்தது என்னவென்றால், "உடலில் சுகரை ஏற்றாமல் எந்த மதுபானத்தைக் குடிக்கலாம் டொக்ரர்?" என்று எங்கள் தமிழ் நோயாளிகள் கேட்கும் போது சில டொக்ரர் மார் "வொட்காவில் சுகர் இல்லை, எனவே கொஞ்சம் குடிக்கலாம்" என்று பதில் சொல்கிறார்கள். இதனைத் தான் "வொட்கா குடித்தால் சுகர் ஏறாது" என சிலர் விளங்கிக் கொண்டிருப்பதாகத்தெரிகிறது.5 points- ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
எம்முடன் கூட வந்த இந்திய ராணுவத்தினன் பலாலி வீதியுடன் நின்றுவிட நானும் தகப்பனாரும் மெதுவாக எமது ஒழுங்கைக்குள் நுழைந்தோம். அப்பகுதி அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போயிருந்தது. மதில்கள் ஒழுங்கையின் நீளத்திற்கு வீழ்ந்துகிடக்க, ஒழுங்கையின் இருபக்கமும் பற்றைகள் வளர்ந்து ஒழுங்கையினை மறைத்தபடி நின்றது. அங்கிருந்த 5 வீடுகளில் ஒன்றேனும் தப்பியிருக்கவில்லை. இந்திய இராணுவம் இப்பகுதியில் நிலைகொண்ட பின்னர் மீதமாயிருந்த வீடுகளையும் இடித்துத் தள்ளியிருக்க வேண்டும். எல்லாமே அழிவுகளைச் சுமந்து காணப்பட்டன. ஆளுயரத்திற்கு மேலாய் வளர்ந்திருந்த பற்றைகளைத் தாண்டி எமது வீட்டினை அடைந்தோம். வீட்டின் பெரும்பகுதி எரியூட்டப்பட்டது போலக் காணப்பட்டது. முதலாவது அறையில் இந்திய ராணுவம் தங்கியிருக்கிறது என்பது தெரிந்தது. அவர்கள் பாவித்த சில பொருட்கள், இந்தியாவின் ப்ரூ கோப்பி என்று சில இந்தியப் பொருட்களும், அயலில் உள்ள வீடுகளில் இருந்து அவர்கள் எடுத்து வந்திருந்த தளபாடங்களும் அவ்வறையில் பரவிக் கிடந்தன. இடிந்த மதில்களின் கற்களை எடுத்துவந்து காப்பரண் கட்டியிருந்தார்கள். இவ்வீடுகளில் மக்கள் வாழ்ந்தார்கள் என்பதோ அல்லது இவ்வீடுகளை அவர்கள் தமது வாழ்நாள் உழைப்பின் மூலமே கட்டியிருந்தார்கள் என்பதோ அவர்களுக்கு ஒரு பொருட்டாக இருந்திருக்காது. நாம் வெகு நேரம் அங்கு நிற்க விரும்பவில்லை. 30 நிமிட நேரமே இருக்கமுடியும், அதற்குள் எடுத்துக்கொள்ள முடியுமானவற்றை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடவேண்டும் என்று அந்த அதிகாரி பணித்தது எமக்கு நினைவில் இருந்தது. ஆகவே சில தேங்காய்கள், சமயலறையில் இன்னமும் மீதமாயிருந்த மாப்பியன் அரிசி, வாழைக்காய் என்று சிலவற்றையும் ஓரிரு பாத்திரங்களையும் எடுத்துக்கொண்டு எமது சைக்கிள்களில் கட்டிக்கொண்டோம். இவற்றுக்கு மத்தியில் அப்பகுதியெங்கும் துர்நாற்றம் வீசுவதை நான் அவதானித்தேன். இறந்த விலங்குகளின் உடல்களாக இருக்கலாம் என்று எண்ணினேன். அவை மனிதர்களின் உடல்களாகவும் இருக்கலாம். ஆனால் பற்றைகளுக்குள் என்னவிருக்கின்றது என்று பார்க்கும் துணிவு எனக்கு இருக்கவில்லை. வீட்டிலிருந்து துரத்தப்பட்டபோது எம்முடைய மூன்று நாய்கள் பற்றி நாம் யோசிக்கவில்லை. ஆனால் மீண்டும் அங்கு சென்றபோது அவற்றுக்கு என்னவாகியிருக்கும் என்று எண்ணத்தொடங்கினேன். அப்பகுதியில் இருந்த இந்திய ராணுவத்தினரின் காதுகளுக்கு எட்டாத வகையில் அவற்றின் பெயர் சொல்லி அழைத்தேன், எவையுமே வரவில்லை. எமது வீட்டைச் சுற்றிப் படர்ந்திருந்த பற்றைகளும், துர்நாற்றமும், அயல்வீடுகளில் இருந்து வந்த உய்த்தறிய முடியாத சத்தங்களும் அச்சத்தை ஏற்படுத்தின. பேய்நகரம் போன்று காட்சியளித்த அப்பகுதியில் தொடர்ந்தும் நிற்க விரும்பாது அங்கிருந்து வெளியேறினோம். மீண்டும் பலாலி வீதி, கோண்டாவில்ச் சந்தி என்று இந்திய ராணுவ நிலைகளூடாக வெளியேறி சைக்கிள்களைத் தள்ளிக்கொண்டே பாசையூரை வந்தடைந்தோம்.5 points- ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
அன்றிரவு முழுதும் நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல்களில் யாழ்நகர், குருநகர், பாசையூர், சின்னக்கடை, கொழும்புத்துறை, சுண்டுக்குளி ஆகிய பகுதிகளில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். இதில் வேதனை என்னவென்றால் அப்பகுதியெங்கிலும் புலிகளையோ அல்லது அவர்களது முகாம்களையோ நாம் காணவில்லை என்பதுதான். பழைய பூங்கா பகுதியில் அமைந்திருந்தத் புலிகளின் பயிற்சிமுகாமும் அன்றைய நாட்களில் இயங்கியிருக்க வாய்ப்பில்லை. அப்படியிருந்தபோதிலும், சனநெரிசல் மிகவும் அதிகமான அப்பகுதி மீது மிகவும் கண்மூடித்தனமான முறையில் செல்த்தாக்குதலை இந்தியாவின் சாத்தான்படை சகட்டுமேனிக்கு நடத்திக்கொண்டிருந்தது. நாம் பாசையூரில் அடைக்கலமாயிருந்த சில நாட்களில் யாழ்நகரினை இந்தியப் படை ஆக்கிரமித்துக்கொண்டது. வீதிகளில் ரோந்துவரும் இந்திய ராணுவத்தினை தூரத்திலேயே ஊர் நாய்கள் காட்டிக் கொடுத்துவிட சனமெல்லாம் வீடுகளுக்குள் அடைந்துவிடும். இந்திய ராணுவத்தின் பிரசன்னம் வீதியில் இருப்பது தெரியாது வீடுகளுக்கு வெளியே வந்தவர்கள் சிலர் வீதிகளிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பல மணிநேரமாக வீதிகளில் கிடந்த உடல்களை இந்திய ராணுவம் சென்றபின்னர் ஊரில் இருப்பவர்கள் எடுத்துவந்து அடக்கம் செய்தார்கள். சில சடலங்களின் மேலால் இந்திய ராணுவ வாகனங்கள் ஏறிச்சென்ற அடையாளங்களும் காணப்பட்டன. சுமார் ஒன்று அல்லது ஒன்றரை மாத காலம் பாசையூரில் இருந்திருப்போம், கோண்டாவில், இருபாலை ஆகிய பகுதிகளில் மக்கள் தமது வீடுகளுக்குச் சென்று தேவையான பொருட்களை எடுத்து வர இந்திய ராணுவம் அனுமதியளித்திருக்கிறது என்று யாரோ சொன்னார்கள். ஆகவே பாசையூரில் நாம் தங்கியிருந்த வீட்டில் ஒரு சைக்கிளை கேட்டு எடுத்துக்கொண்டு கோண்டாவிலுக்குச் செல்லலாம் என்று தந்தையார் சொல்லவே, நானும் ஆம் என்றேன். பலாலி வீதியால் செல்லாதீர்கள். தின்னைவேலியில் இன்னும் சண்டை நடக்கிறதாம். பிரதான வீதிகளைத் தவிர்த்துவிடுங்கள் என்று ஆளாளுக்கு அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தார்கள். அவர்கள் கூறியவாறே குச்சொழுங்கைகளுக்கூடாக எமது பயணத்தை ஆரம்பித்தோம். பின்னர் ஆலய வீதி வழியே சென்று தின்னைவேலியில் ஆடியபாதம் வீதி, பாற்பண்ணை, மாதிரிக்கிராமம் என்று முழுவதுமாக உள் வீதிகளுக்கூடாக நுழைந்து கோண்டாவில்ச் சந்திக்கும், பாமர்ஸ் ஸ்கூல் (கமல நல சேவைகள் நிலையம்) அமைந்திருந்த பகுதிக்கும் இடைப்ப்ட்ட பகுதியில், பலாலி வீதி கண்ணுக்குத் தென்படும் தூரத்தில் நாம் வந்தபோது, கோண்டாவில்ச் சந்தியில் இருந்து தின்னைவேலி நோக்கி இந்திய ராணுவத்தின் வாகனத் தொடரணி போய்க்கொண்டிருந்தது. வீதியின் இடதுபுறத்தில், சுமார் 50 மீட்டர்கள் தொலைவில் நின்றிருந்த எம்மைக் கண்டதும் வாகனத் தொடரணியை நிறுத்திவிட்டு துப்பாக்கிகளை நீட்டியவாறு பாய்ந்து வந்தது இந்திய ராணுவம். எனது கையில் ஒரு ஷொப்பிங் பை நிறைய தேசிக்காய்கள், வழியில் வரும்போது யாரோ ஒருவருடைய மரத்தில் பிடுங்கி எடுத்துக்கொண்டது. அப்பகுதியெங்கும் பற்றைக்காடுகளாய் மூடி வளர்ந்திருக்க, எம்மைக் கொன்றாலும் எவருக்குமே தெரியப்போவதில்லை என்று உணர்ந்துகொண்ட நாம், இந்திய ராணுவம் கட்டளையிட்டவாறே நிலத்தில் விழுந்து படுத்துக்கொண்டோம். எம்மைச் சுற்றிவளைத்த அவர்கள், "நீங்கள் புலிகளா, இங்கு ஏன் வந்தீர்கள், எங்கே போகிறீர்கள்?" என்று சரமாரியாக கேள்விகளை அடுக்கிக் கொண்டு போனார்கள். "நாம் புலிகள் இல்லை, பொதுமக்கள், எமது வீடுகளைப் பார்க்க வந்திருக்கிறோம்" என்று தந்தையார் கூறவும், எனது பக்கம் திரும்பி, "பையில் என்ன வைத்திருக்கிறாய்?" என்று ஒருவன் ஆங்கிலத்தில் கேட்டான். தேசிக்காய் என்று நான் கூறவும், அதனை நம்பாது பையைப் பறித்து நோட்டமிட்டான். பின்னர் எங்கள் இருவரையும் இழுத்துக்கொண்ம்டு பலாலி வீதிக்கு வந்தார்கள். வீதியின் நீளத்திற்குக் காப்பரண்களும், இந்திய ராணுவ வாகனங்களும் தென்பட்டன. கோண்டாவில்ச் சந்திப்பகுதியில், வீதியினை மறித்து பாரிய ராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. எம்மை அங்கு கொண்டு சென்றார்கள். நிலத்தில் இருத்திவைக்கப்பட்ட எம்மை அவர்களின் அதிகாரியொருவன் வந்து பார்த்தான். ஆங்கிலத்தில் தந்தையாருடன் பேச்சுக்கொடுக்கவே, தன்னை மீளவும் தபால் அதிபர் என்று அவர் கூறியபோது, "என்னை ஞாபகம் இருக்கிறதா?" என்று அவர் கேட்டான். எமது வீட்டிற்கு வந்து, எம்மை வெளியே இழுத்துவந்து தாக்கிய அதே அதிகாரிதான் அவன். "உங்களின் புலிகள் எங்களில் பலரைக் கொன்றுவிட்டார்கள், நாம் அவர்களை விடப்போவதில்லை, அழித்தே தீருவோம்' என்று கர்வத்துடன் கூறிவிட்டு, "ஏன் இங்கே வந்தீர்கள்? இன்னமும் உங்களது வீட்டுப்பகுதியில் சண்டை நடக்கிறது, நீங்கள் அங்கு போகமுடியாது" என்று அவன் கூறினான். "வீட்டில் சமைப்பதற்குக் கூடப் பாத்திரங்கள் இல்லை, எமது சைக்கிள்களும் எமக்குத் தேவை. வீட்டிலிருந்து சில தேங்காய்களையும், மரக்கறிகளையும் எடுத்துவரத்தான் வந்திருக்கிறோம். ஒரு 30 நிமிடத்திற்குள் முடித்துவிட்டுக் கிளம்பிவிடுவோம்" என்று தந்தையார் மன்றாட்டமாகக் கேட்கவும், "நாம் உங்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, சண்டையில் அகப்பட்டு வீணாகச் சாகப்போகிறீர்கள், உங்கள் விருப்பம்" என்று கூறிவிட்டு, எமது வீடு அமைந்திருந்த ஒழுங்கை வரை எம்மை அழைத்துச் செல்லுமாறு ஒரு ராணுவ வீரனைப் பணித்தான். அவன் எங்களை அங்கு அழைத்துச் செல்லும்போது அப்பகுதியெங்கும் நிலையெடுத்திருந்த ஏனைய இந்திய ராணுவத்தினர் ஏதோ ஜந்துக்களைப் பார்ப்பது போன்று பார்த்துக்கொண்டார்கள்.5 points- ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
சுமார் நான்கு அல்லது ஐந்து மணித்தியாலங்கள் கிறீஸ்த்து ராசா கோயிலில் தங்கியிருந்தோம். செல்த்தாக்குதல் மெது மெதுவாக குறையத் தொடங்கியது. அதிகாலை 4 மணியளவில் மீளவும் கொய்யத்தோட்டத்தில் அமைந்திருந்த வீட்டிற்கு வந்தோம். ஆனால் வழமைபோல மறு நாள் மாலையும் செல்த்தாக்குதல்கள் ஆரம்பித்தன. அதே கொடூரமான, இடைவிடாத தாக்குதல்கள். பாசையூர் அந்தோணியார் ஆலயத்தை அகதிகள் முகாமாக அறிவித்திருக்கிறார்கள். இந்திய இராணுவம் அப்பகுதி மீது தாம் தாக்குதல் நடத்தப்போவதில்லை என்று உறுதியளித்திருக்கிறது. ஆகவே அங்கே போகலாம் என்று யாரோ சொன்னார்கள். ஆகவே இரவு 8 மணியளவில் சில உடுதுணிகளை எடுத்துக்கொண்டு பாசையூர் நோக்கிச் சென்றோம். எதிர்பார்த்ததுபோலவே அப்பகுதியெங்கும் சனக்கூட்டம். கோயிலின் உட்பகுதிக்குச் செல்ல முடியவில்லை, முற்றாக மக்களால் நிரம்பி வழிந்தது. ஆகவே ஆலய முன்றலில், கொடிக்கம்பத்தைச் சுற்றியிருந்த மணற்றரையில் அமர்ந்திருந்த பல நூற்றுக்கணக்கான மக்களுடன் நாமும் அமர்ந்துகொண்டோம். பாய்கள், படுக்கை விரிப்புக்கள் என்று கைகளில் அகப்பட்டதை மணலில் விரித்து குடும்பம் குடும்பமாக மக்கள் அமர்ந்திருந்தார்கள். யாழ்நகர் நோக்கி முன்னேறிவரும் இந்திய ராணுவம் அப்பகுதி நோக்கிக் கடுமையான செல்த்தாக்குதலைனை நடத்திக்கொண்ன்டிருந்தவேளை, கடலில் இருந்து கரையோரப் பகுதிகள் மீது கடுமையான பீரங்கித் தாக்குதலினை இலங்கை கடற்படை மேற்கொண்டு வந்தது. குறிப்பாக குருநகர், பாசையூர், கொழும்புத்துறை ஆகிய பகுதிகளில் அமைந்திருந்த குடியிருப்புக்களை இலக்குவைத்தே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பாசையூர் அந்தோணியார் ஆலயத்தில் அகதிகள் தஞ்சமடைந்திருப்பது இலங்கைக் கடற்படைக்குத் தெரியுமாதலால், அப்பகுதி இலக்குவைக்கப்படலாம் என்று பலர் கருதினர். ஆகவே சில குடும்பங்கள் அங்கிருந்து வேறு பகுதிநோக்கி கிளம்பிச் செல்ல ஆரம்பித்தன. தொடர்ச்சியாகப் பெய்துகொண்டிருந்த மழை, ஆலயமும் இலக்குவைக்கப்படலாம் என்கிற அச்சம் ஆகியவை எம்மை ஆட்கொள்ள நாமும் ஆலயத்திலிருந்துந்து புறப்பட்டு கொழும்புத்துறை நோக்கிச் செல்லும் வீதியில் ஒரு வீட்டில் அடைக்கலமானோம். அவ்வீட்டில் வசிப்பவர்கள், அன்றிரவு அங்கு வந்து அடைக்கலமானவர்கள் என்று சுமார் 30 அல்லது 40 வரையான மக்கள் அன்றிரவு அங்கு அச்சத்துடன் அமர்ந்திருந்தோம். செல்த்தாக்குதல் மீளவும் ஆரம்பமானது. ஒவ்வொரு இரவும் நடத்தப்படும் இத்தாக்குதல்களில் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டார்கள். அன்றிரவும் அப்படித்தான். அப்பகுதியெங்கும் பல வீடுகள் செல்பட்டு உடைந்து நொறுங்குவது எமக்குக் கேட்டது. பாசையூர் அந்தோணியார் ஆலயத்திலிருந்து ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்திலேயே நாம் அடைக்கலமாகியிருந்த வீடு அமைந்திருந்தது. இரவு 10 அல்லது 11 மணியிருக்கலாம், ஆலயப்பகுதியினை இலக்கு வைத்து கடுமையான தாக்குதலினை இந்திய ராணுவமும், இலங்கைக் கடற்படையும் நடத்தின. ஆலய முன்றலில் வீழ்ந்து வெடித்த செல்களினால் அங்கிருந்த பலர் துடிதுடித்து இறந்து போனார்கள். குறைந்தது 30 பேராவது கொல்லப்பட்டிருக்கலாம், பலர் காயப்பட்டார்கள் என்று அங்கிருந்து வெளியே ஓடிவந்தவர்கள் கூறியபோது, சில மணிநேரத்திற்கு முன்னர் நாம் அமர்ந்திருந்த இடமே தாக்குதலுக்கு உள்ளானது என்று அறிந்தபோது நாம் அச்சத்தில் உறைந்துபோனோம்.5 points- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026 வணக்கம், T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் இந்த வருடம் இந்தியாவிலும் சிறிலங்காவிலும் நடைபெற உள்ளது. போட்டிகள் 07 பெப் 2026 அன்று முதல் சுற்று குழு நிலைகளில் ஆரம்பித்து 08 மார்ச் 2026 அன்று இறுதிப் போட்டியில் முடிவுறுகின்றது. முதல் சுற்று: முதல் சுற்றில் பங்கு பற்றும் 20 அணிகளும் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 5 அணிகள் விளையாடுகின்றன. அவை தரநிலைப்படி கீழே தரப்பட்டுள்ளன: குழு A: A1 இந்தியா IND A2 பாகிஸ்தான் PAK A3 ஐக்கிய அமெரிக்கா USA A4 நெதர்லாந்து NED A5 நமீபியா NAM குழு B: B1 அவுஸ்திரேலியா AUS B2 சிறிலங்கா SL B3 அயர்லாந்து IRE B4 ஸிம்பாப்வே ZIM B5 ஓமான் OMA குழு C : C1 இங்கிலாந்து ENG C2 மேற்கிந்தியத் தீவுகள் WI C3 பங்களாதேஷ் BAN C4 நேபாளம் NEP C5 இத்தாலி ITA குழு D : D1 நியூஸிலாந்து NZ D2 தென்னாபிரிக்கா SA D3 ஆப்கானிஸ்தான் AFG D4 கனடா CAN D5 ஐக்கிய அமீரகம் UAE முதல் சுற்றில் விளையாடும் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் 07 பெப் முதல் 20 பெப் வரை நடைபெறவுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் தரநிலைகளில் முதலாவதாகவும் இரண்டாவதாகவும் வரும் இரு அணிகளும் சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேறவுள்ளன. சுப்பர் 8 சுற்று: சுப்பர் 8 சுற்று போட்டிகளுக்குத் தேர்வாகும் அணிகள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் முதல் சுற்றில் முதலாவதாக வரும் இரு அணிகளும், இரண்டாவதாக வரும் இரு அணிகளும் இடம்பெறுகின்றன. அவை கீழே உள்ளவாறு பிரிக்கப்படும். குழு 1: X1 இந்தியா X2 அவுஸ்திரேலியா X3 மேற்கிந்தியத் தீவுகள் X4 தென்னாபிரிக்கா குழு 2: Y1 இங்கிலாந்து Y2 நியூஸிலாந்து Y3 பாகிஸ்தான் Y4 சிறிலங்கா சுப்பர் 8 சுற்றில் மேலுள்ள அணிகளில் சில தெரிவாகாத பட்சத்தில் அவற்றின் இடத்தை (X1..X4, Y1...Y4) முதல் இரு இடத்திற்கு வரும் பிற அணிகளில் ஒன்று எடுத்துக்கொள்ளும். உதாரணமாக குழு C இல் சுப்பர் 8 க்கு பங்களாதேஷ் தெரிவாகியும் மேற்கிந்தியத் தீவுகள் தெரிவாகாமலும் இருந்தால் X3 இடத்தை பங்களாதேஷ் எடுத்துக்கொள்ளும். சுப்பர் 8 சுற்றில் விளையாடும் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் 21 பெப் முதல் 01 மார்ச் வரை நடைபெறவுள்ளன. நொக்கவுட் போட்டிகள் அரையிறுதிப் போட்டிகள்: அரையிறுதித் போட்டிகளில் குழு 1 இல் முதல் இரு இடங்களில் வரும் அணிகளும், குழு 2 இல் முதல் இரு இடங்களில் வரும் அணிகளும் பின்வருமாறு மோதும். சுப்பர் 8 குழு 1 முதல் இடம் எதிர் சுப்பர் 8 குழு 2 இரண்டாவது இடம் சுப்பர் 8 குழு 2 முதல் இடம் எதிர் சுப்பர் 8 குழு 2 இரண்டாவது இடம் முதலாவது அரையிறுதிப் போட்டி 04 மார்ச் அன்று ஏடென் கார்டன்ஸில் அல்லது கொழும்பு (RPS) இலும், இரண்டாவது அரையிறுதிப் போட்டி 05 மார்ச் அன்று வாங்கெடேயிலும் நடைபெறவுள்ளன. * பாகிஸ்தான் அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவானால் பாகிஸ்தான் அணி விளையாடும் போட்டி கொழும்பில் நடைபெறும். இல்லையேல் கொல்கத்தா ஏடென் கார்டன்ஸில் நடைபெறும். இறுதிப் போட்டி: அரையிறுதிப் போட்டிகளில் வெல்லும் அணிகள் 08 மார்ச் அன்று அஹமதாபாத்தில் அல்லது கொழும்பு (RPS) இல் மோதவுள்ளன. * பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்குத் தெரிவானால் இறுதிப் போட்டி கொழும்பில் நடைபெறும். இல்லையேல் அஹமதாபாத்தில் நடைபெறும். கேள்விக்கொத்து பின்னர் வெளியிடப்படும்.4 points- முன்னோடி அடிப்படை சுகாதார வசதி திட்டம்
அண்ணை, புலர் அறக்கட்டளைக்கு ஊடாக இயலாமை உடையவர்களை மட்டுமே முன்னுரிமை கொடுத்து செயற்படுகிறோம். ஆனால் அந்த வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பினால் பணத்தை மீளப்பெற நிர்வாக அனுமதி கோரவேண்டும். அடிக்கடி பணத்தை மீளப்பெற நிர்வாகிகளை (அதிபர், ஆசிரியர்) தொந்தரவு செய்யவேண்டும். அதனால் தான் பயனாளிகளின் வங்கிக் கணக்கை பெற்று தர விரும்பினேன். இது சிரமம் என்றால் ஒரு வங்கிக் கணக்கை திறந்து தருகிறேன், அதனை "முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம் 2026" மட்டுமே பயன்படுத்தும் வகையிலும் இணைய வங்கிச்சேவை, குறுஞ்செய்தி வசதி, வங்கி வரவு, செலவு அறிக்கை என்பவற்றை பெறக்கூடிய வகையிலும் செயற்படுத்தி தருவேன். மாதம் மாதம் வங்கி அறிக்கையை இங்கே வெளிப்படையாக பகிர்கிறேன். அரசு கண்காணிப்பு(ஒரு தடவையில் 10 இலட்சத்திற்கு மேல் அனுப்புவது) இருப்பதால் கவனமாக நிதியை கையாளவேண்டும்.4 points- யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!
நன்றி அண்ணை. எனக்கு சம்பளம் தர விரும்பினால் அதனை புலர் அறக்கட்டளைக்கு உங்கள் நன்கொடையாக தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். (உண்மையில் சேவைக்கு ஊதியம் தேவையில்லை அண்ணை) என்னை இப்பணியில் ஈடுபட கேட்பது எனக்கு மிக மகிழ்ச்சி தருவது. ஏனெனில் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நான் இந்தப்பணிகளுக்காக வெளியே பயணிப்பதில் அளவிட முடியாத மகிழ்வடைவேன். புதிய மூன்று சக்கர வாகனம் ஒன்றும் எனது கனடிய நண்பர் வாங்கித்தந்துள்ளார். ஒரே ஒரு பிரச்சனை நினைத்தவுடன் புறப்பட முடியாது. இன்னொருவர் வந்து வாகனத்தில் ஏற்றிவிடவேண்டும், முன்னர் தந்தையார் ஏற்றி விடுவார். உதவிக்கு வருபவர் பின்னேரம் தான் வருவார். இவையெல்லாவற்றையும் தாண்டி பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு உதவுவதில் ஆத்ம திருப்தி அடைகிறேன்.4 points- நயினாதீவு விகாராதிபதி தையிட்டிக்கு விஜயம்
ஒரு சிலர் தடம்புரள்வது என்பது வழமையான ஒன்று. இப்படி பார்த்தால் கொசாவோ வாக்கெடுப்பு நடந்திருக்காது. கிழக்கு திமோர் வாக்கெடுப்பு நடந்திருக்காது... தென் சூடான் வாக்கெடுப்பு நடந்திருக்காது. ஏன் தென்னாபிரிக்கா விடுதலைப் போராட்டம் வெற்றி பெற்றிருக்காது. அல்ஜீரியாவில் பிரான்ஸ் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்திருக்காது. ஆக நாம் எமது தார்மீக உரிமைகளையும் கோரிக்கைகளையும் தொடர்ந்து முன்னிறுத்தாமல்.. சர்வதேசத்திடம் இதைச் செய் அதை செய் என்று கோரி நிற்க முடியாது. எல்லா நாட்டிலும் எல்லா இனத்திலும் கோடரிக்காம்புகள் உண்டு. அவற்றை விஞ்சி தான் எல்லா உரிமைப் போராட்டங்களும் வெற்றிகளைப் பெற்றுள்ளன. ஆயுதப் போராட்டம் தோற்ற நிலையிலும்.. பல போராட்டங்கள் தொடர் உரிமைக்குரலால் வெற்றி பெற்றதே யதார்த்தம். எமது ஆயுதப் போராட்டம் தேவையான அளவுக்கு எமது உரிமைக்குரலை சர்வதேச மயப்படுத்தி இருக்குது. ஆனாலும் தொடர்ந்து நாம் எமது உரிமைக்குரலுக்கு அதற்கான நியாயத்திற்கு முன்னுரிமை வழங்கி சர்வதேசத்தின் முன் தொடர்ந்து எம்மை முன்னிறுத்தாமல்.. எமக்கான உரிமையை தேச விடுதலையை சாத்தியமாக்க முடியாது. தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் எப்போதையும் விட இப்போது இன்னும் இன்னும் முன்னிறுத்த வேண்டியதும் அதை தொடர வேண்டியதும் மிக அவசியமாகும்.4 points- யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!
துளி துளியாய் பகுதியில் இதற்கென ஒரு தனித்திரி திறந்து விடுங்கள். அதனை pin பண்ணி விடுகின்றேன். திரி சரியான விதத்தில் சென்றால் முகப்பிலும் இணைப்பை கொடுக்க முடியும்.4 points- இலங்கையில் பிறந்த தமிழ் கல்வியாளருக்கு இங்கிலாந்தில் கெளரவ பட்டம்!
துரை இது என்ன அர்ச்சனா இராமநாதன் போல் பேசுகின்றீர்கள். அவர்தான் ஓ எல் படிச்சனியா யூனிவசிட்டி போனியா என்று கேட்பார். யூரியூப் காணொளி பார்த்தேன். அதில் கிங்க் சார்ல்ஸ் பிரம்பால் தோளின் இரண்டு பக்கமும் தட்டி பார்த்துவிட்டு கழுத்தில் மாலை போட்டுவிடுகின்றார். கழுத்தில் மாட்டப்படும் மாலையின் பாரத்தை ஆள் தாங்குவாரோ என உறுதிப்படுத்த தோளில் தட்டி பார்க்கின்றார்கள் என நினைக்கின்றேன்.4 points- யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!
நீங்கள் தான் பல மக்கள் நலன்புரி அமைப்புகள் வட பகுதிகளில் வெற்றிகரமாக இயங்குவதாக எழுதினீர்களே. அந்த அமைப்புகளுக்கு தாங்கள் கடிதம் எழுத முடியாதா? இல்லையேல் தந்தியாவது அடிக்க முடியாதா? கோபுரம்,சுற்றுமதில் கட்டும் புலம்பெயர்ந்தவனுக்கு தங்கள் உடன் பிறந்தவர்களுக்கு கக்கூஸ் கட்டிக்கொடுப்பதில் எவ்வித பிரச்சனையும் இருக்கப்போவதில்லை. இதற்கென ஒரு அமைப்பை உருவாக்குங்கள்.....இல்லையேல் இருக்கும் அமைப்பின் விலாசத்தை தாருங்கள். 10 குடும்பத்திற்கு மலசலம் கட்டும் நிதியை நான் திரட்டி தருகின்றேன்.4 points- ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
மொறட்டுவை பொலீஸ் நிலையம் போகும் வழியில் அன்று மாலை நடந்த விடயங்களையும், வாகனத்தில் இருந்த தமிழ் மாணவர்கள் இழுத்துவரப்பட்ட விடயங்களையும் ஓரளவிற்கு அறிந்துகொண்டேன். பல்கலைக்கழக விடுதிகளில் இருந்தவர்கள், பல்கலைக்கழகத்திற்கு வெளியே தனியார் வீடுகளில் வாடகைக்குத் தங்கியிருந்த மாணவர்கள், பேரூந்துகளில் பல்கலைக் கழகத்திற்கு வந்திறங்கிய மாணவர்கள் என்று பலர் இழுத்துவரப்பட்டிருந்தார்கள். வெகுசிலரைத் தவிர அநேகமானோர் ஒன்றில் சறத்துடன் மட்டும் அல்லது சறமும் மேலங்கியும் அணிந்து காணப்பட்டார்கள். சுமார் 15 நிமிட பயணத்திற்குப் பின்னர் பொலீஸ் வாகனங்கள் மொறட்டுவைப் பொலீஸ் நிலையத்தைச் சென்றடைந்தன. வாகனங்கள் நிறுத்தப்பட்டதும் கீழே இறங்குமாறு பணிக்கப்பட்டோம். பின்னர் பொலீஸ் நிலையத்தின் முற்பக்கத்தில் இருந்த சிறிய அறையொன்றினுள் எம்மை நிற்கச் சொன்னார்கள். நள்ளிரவு வேளையாதலால் சில மாணவர்கள் தரையில் அமர்ந்து உறங்க ஆரம்பித்தார்கள். எம்மை அறையினுள் நிற்கச் சொல்லிவிட்டுச் சென்ற பொலீஸ் அதிகாரி மீண்டும் அங்கே வந்தான். எம்மில் சிலர் உறங்குவதைக் கண்டுவிட்டு கத்தத் தொடங்கினான். வாயிலின் அருகில் நான் அமர்ந்திருந்தமையினால் என்னை நோக்கியே அவனது ஆத்திரம் திரும்பியிருந்தது. கோபம் கொண்டு காலால் என்னை உதைந்த அவன் பேசத் தொடங்கினான். "நீங்கள் எல்லாம் புலிகள், பிரபாகரன் உங்களை இங்கே அனுப்பியிருப்பது பொறியியல் கற்றுக்கொண்டு அங்கு சென்று தனக்கு உதவுவதற்காகத் தான். நாம் இங்கே எமது உயிரைக் கொடுத்து நாட்டைப் பாதுகாக்கிறோம். எமது அரசாங்கம், நாம் கட்டும் வரிப்பணத்தில் உங்களைப் படிப்பிக்கிறது. எமது சிங்கள மக்களுக்குச் செல்லவேண்டிய பணம் பயங்கரவாதிகளான உங்களுக்கு கல்விகற்கப் பாவிக்கப்படுகிறது. உங்களை இனிமேல் விடமாட்டோம், நீங்கள் இங்கிருந்து தப்பிக்க முடியாது" என்று சிறிதுநேரம் கர்ஜனை செய்துவிட்டு, "பிரபாகரனின் ஆட்சியில் உனக்கு என்ன பதவி தருவதாகக் கூறியிருக்கிறான்?" என்று என்னைப் பார்த்துக் கேட்டான். நிலைமையின் தீவிரம் உணராது, "தெரியவில்லை, என்னிடம் அவர் எதுவும் கூறவில்லை" என்று நான் பதிலளிக்கவும் மிகுந்த கோபம் கொண்ட அவன் என்னைத் தாக்கினான். எனக்குச் சிங்களம் தெரியும் என்று நினைத்து அவனுடன் பேசியதன் பலனை நான் அங்கு அனுபவித்தேன். அவன் மட்டுமல்ல, அன்றிரவு அப்பொலீஸ் நிலையத்தில் இருந்த இன்னும் சில பொலீஸ் அதிகாரிகளும் தமது பங்கிற்கு தவறாது வந்து எம்மீது வசைமாறி பொழிந்துவிட்டுச் சென்றார்கள். ஒருசிலர் தாக்கினார்கள். ஏனென்று கேட்பாரின்றி சுமார் 60 தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் சிறிய அறையொன்றினுள் தடுத்துவைக்கப்பட்டு போவோர் வருவோர் என்று வேறுபாடின்றி உடலாலும், மனதாலும் கடுமையான தாக்கத்திற்கு உள்ளானோம்.4 points- வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
வடக்கேயிருந்து வருகின்ற சத்தம் கிழக்கே இல்லையே. ஏன்?4 points- நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
இதன் பின்னால் உள்ள இராஜதந்திர முஸ்தீபை புரிந்து கொள்ளும் இயலுமை ஈழத்தமிழருக்கு இருந்திருதால்…. சிங்களவன் ஒன்பதுவாயில்களிலும் பிதுக்கி விட்டிருக்கும் அவல நிலையை அவர்கள் அடைந்திருக்க மாட்டார்கள்.4 points- வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
மன்னிக்கவும் அண்ணா... உங்களுடைய இந்த கருத்து பண்பற்ற ஒன்றாக எனக்குப் படவில்லை . நனைகிற ஆடு... குளிர் காய்கிற ஓநாய் ... உண்மையில் மலையகத்து மக்களின் யதார்த்த லயத்து வாழ்க்கை நிலை, இற்றை திகதி வரைக்கும் எஸ்டேட்ட தோரை, கங்காணி, ஆராச்சி (கிராம சேவகர்) இப்படி வரிசையாக அந்த அப்பாவி மக்களை மனிதர்களாக கூட மதிக்காமல் நடத்தும் நடப்பு உங்களுக்கு தெரியுமா? இன்று அனைத்தையும் இழந்து நிட்கும் அந்த மக்களை பற்றி பேசுகிற ஒரு தலைப்பில் நீங்கள் ஓநாய் வேட்டையில் புளங்காகிதம் அடைகிறீர்கள். மலையகத்து மண் வளமாக இருக்கிறது... அந்த மலையகத்தை பெருந்தோட்டமாக உருவாக்கிய மக்கள் இன்றுவரை வளமாக இருக்கிறார்களா? சுமந்திரனை கழுவி ஊத்த மலையக மக்களின் கண்ணீர் வேண்டாமே. 🤲4 points- வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
விவிலியத்தைப் படித்தது கிடையாது. தோழர் ஷோபாசக்தி போன்றோ அல்லது எனது நெருங்கிய நண்பன் போன்றோ சிறையில் விவிலியத்தை பலதடவை படித்த அனுபவம் இல்லை! AI ஐக் கேட்டபோது விவிலியத்தில் சிவிங்கி பற்றிய குறிப்பு இல்லை என்றது. ஆனால் மேலே உள்ளதைக் காட்டியது😀 மலையக மக்களும் கிழக்கு, வன்னி மக்களும் கடும் உழைப்பாளிகள். அவர்களை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்து சோம்பேறிக் கூட்டமாக மாற்றவேண்டாம்!4 points- ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
குருவானவர் சந்திரா பெர்ணான்டோ அவர்களின் படுகொலை காலம் : ஆனி, 1988 இடம் : மட்டக்களப்பு , மரியண்ணை பேராலயம் நான் மட்டக்களப்பில் தங்கி வசிக்கத் தொடங்கியிருந்த காலம். மரியாள் ஆண்கள் விடுதியில் இன்னும் 40 மாணவர்களுடன் தங்கி பாடசாலை சென்று வந்தேன். விடுதி கத்தோலிக்க பாதிரிகளால் நடத்தப்பட்டு வந்தமையினால் பெரும்பாலான மாணவர்கள் கத்தோலிக்கர்கள், ஓரிருவரைத் தவிர. ஆகவே ஒவ்வொரு காலையும் தவறாது 6 மணிக்கு அருகில் அமைந்திருந்த புனித மரியண்ணை தேவாலயத்திற்கு காலைத் திருப்பலிக்காகச் செல்வது எமது நாளாந்தக் கடமைகளில் முதலாவது. சுமார் 30 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் திருப்பலியினை ஒவ்வொரு நாளும் அத்தேவாலயத்தின் பங்குத் தந்தையான, குருவானவர் சந்திரா பெர்ணான்டோவே நடத்துவார். அவரது கனிவான முகவும், மென்மையான குரலும், அவர் திருப்பலியினை நடத்திச் செல்லும் விதமும் ஈர்ப்பினை உருவாக்கும். நாம் மிக்கேல் கல்லூரியின் மாணவர்கள் என்பதை அறிந்த அவர் எம்முடன் சிலவேளைகளில் பேசுவதுண்டு. எமது விடுதி நடத்துனரும், குருவானவர் சந்திராவும் நண்பர்கள் ஆதலால் திருப்பலி முடிந்தபின்னர் சிலவேளைகளில் அவர்கள் பேசும்வரை நாம் காத்திருப்போம். வார விடுமுறை நாளான சனி காலையில் அவரது திருப்பலி முடிந்தவுடன், சிசிலியா பெண்கள் பாடசாலையில் நடைபெறும் கத்தோலிக்க வகுப்புகளுக்கு நாம் செல்வோம். அங்கு தவறாது குருவானவர் சந்திராவும் கலந்துகொள்வார். சிலவேளைகளில் வகுப்புகளுக்கு வந்து மாணவர்களுடன் பேசுவதும் நடக்கும். இவ்வாறு மாணவர்களாலும், ஆசிரியர்கள், பெற்றோர்களாலும் நன்கு அறியப்பட்ட ஒருவர் சந்திரா அவர்கள். புலிகள் தொடர்பாக மென்மையான போக்கினைக் கொண்டிருந்தவர் என்று அறியப்பட்ட சந்திரா அவர்கள், அக்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவந்த மனிதவுரிமை மீறல்கள் குறித்து தனது கருத்துக்களை வெளிப்படையாகப் பேசிவந்தவர். மட்டக்களப்பில் இயங்கிய பிரஜைகள் குழுவின் தலைவராகவும் அக்காலத்தில் பணியாற்றியவர். இராணுவத்தினராலும், துணைராணுவக் குழுவினராலும் கைதுசெய்யப்பட்ட பல இளைஞர்களை மீட்கும் காரியங்களில் அவர் ஈடுபட்டிருக்கிறார். ஆகவே கத்தோலிக்கர்கள் மட்டுமல்லாமல் மட்டகளப்பு வாழ் தமிழர்கள் அனைவராலும் நேசிக்கப்படும் ஒரு மனிதராக அவர் வலம்வந்தார். இவ்வாறான ஒரு நாள், ஆனி மாதம் 6 ஆம் திகதி மாலை வேளையில், விடுதி மாணவர்கள் சிலருடன் எமது விடுதிக்கு முன்னால் இருந்த வெற்றுக் காணியில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தேன். விடுதி நடத்துனரான ஸ்டீபன், ஒவ்வொரு நாளும் பத்திரிக்கை படிப்பதை வாடிக்கையாகக் கொண்டவர். ஆகவே அவர் படிக்கும் வீரகேசரிப் பத்திரிக்கையினை வழக்கமாக போல் என்று அழைக்கப்படும் ஒரு மாணவனே மட்டக்களப்பு நகருக்குச் சென்று வாங்கிவருவான். அன்று வழமை போல போல் நகருக்கு பத்திரிக்கை வாங்கச் சென்றான்.சென்ற சிறிது நேரத்திலேயே அதிர்ச்சி மேலிட்டவனாக திரும்பி வந்தான். "பாதர் சந்திராவைச் சுட்டுப் போட்டாங்கள். கோயிலுக்குள்ள நிறைய ஆக்கள் நிக்கிறாங்கள்" என்று படபடக்கக் கூறினான். மரியாள் பேராலயம், எமது விடுதியில் இருந்து பார்க்கும் தூரத்திலேயே இருக்கிறது. ஓடிச்சென்றால் இரு நிமிடங்களில் ஆலயத்தை அடைந்துவிட முடியும். ஆகவே அவன் கூறியவுடன் மைதானத்தில் நின்ற அனைவரும் தேவாலயம் நோக்கி ஓடினோம். தேவாலயம் பூட்டிக் கிடந்தது. ஆனால் அதன் அருகில் இருக்கும் குருவானவர் சந்திரா பெர்ணான்டோவின் அலுவலகம் சனக்கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. ஒருவாறு சனக்கூட்டத்தினுள் நுழைந்து, அவரது அறையினுள்ச் சென்றோம். எனக்கு நன்கு பரிச்சயமான ஒருவரை, நாம் மதிக்கும் ஒருவரை, இரத்த வெள்ளத்தில் நான் முதன் முதலாகப் பார்த்தது அங்கேதான். குருவானவர் தனது கதிரையில் அமர்ந்தபடி கொல்லப்பட்டிருந்தார். அவரது உடல் கதிரையில் இருந்து பின்புறமாகச் சரிந்திருக்க, நெற்றியின் அருகிலிருந்து குருதி வழிந்தோடி அவரது ஆசனம் இருந்த அறையின் பகுதியை நனைத்திருந்தது. அவர் சுடப்பட்டு வெகுநேரமாக இருக்கமுடியாது, ஏனென்றால் குருதி இன்னமும் காயாது அப்படியே கிடந்தது. அவர் அணிந்திருந்த வெண்ணிற ஆடை குருதியில் நனைந்திருக்க அவர் அங்கு கிடந்த காட்சி பார்த்த அனைவரையும் மிகுந்த துன்பத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியிருந்தது. எவ்வளவு நேரம் அங்கிருந்தோம் என்று நினைவில் இல்லை. அதிர்ச்சியும், பயமும் எம்மை ஆட்கொள்ள மெதுமெதுவாக விடுதி நோக்கி நடக்க ஆரம்பித்தோம். இதனை யார் செய்திருப்பார்கள் என்கிற கேள்வியே எம்மிடம் அன்று இருந்தது. குருவானவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் அவரைச் சந்திக்கவென்று இருவர் வந்ததை தேவாலயத்தில் தோட்டவேலைகளில் ஈடுபட்டு வரும் ஒருவர் பார்த்திருக்கிறார். குருவானவருடன் வந்த இருவரும் முரண்பாட்டுடன் சத்தமாகப் பேசுவது கேட்டிருக்கிறது. அதன்பின்னரே அவர்கள் குருவானவின் நெற்றியில், மிக அருகில் நின்று சுட்டிருக்கிறார்கள். மரியாள் பேராலயம் அமைந்திருந்த பகுதி இந்திய ராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டில் இருந்த ஒரு பகுதியாகும். இப்பகுதியில் அமைந்திருந்த ஒவ்வொரு இந்திய இராணுவ முகாமின் முன்னாலும் தவறாது தமிழ் துணை ராணுவக் குழுவினரின் பிரசன்னமும் அக்காலத்தில் இடம்பெற்றிருக்கும். குருவானவர் கொல்லப்பட்டு சில நாட்கள் கடந்தபின்னர் அவரைக் கொன்றது இந்திய ராணுவத்துடன் மட்டக்களப்பு நகரில் இயங்கிவந்த புளோட் மற்றும் ஈ பி ஆர் எல் எப் துணை ராணுவக் குழுவினரே என்று பேசிக்கொண்டார்கள். குருவானவரைக் கொன்றவர்கள் மிக நிதானமாகவே அப்பகுதியில் இருந்து வெளியேறிச் சென்றிருக்கிறார்கள். தாம் அகப்பட்டுவிடுவோம் என்றோ, அருகில் அமைந்திருக்கும் இந்திய ராணுவ முகாமில் தடுக்கப்படுவோம் என்றோ அவர்கள் கலவரம் அடைந்திருந்ததாகத் தெரியவில்லை. இந்திய இராணுவத்தினதும், துணை ராணுவக் குழுக்களினதும் மனிதவுரிமை மீறல்கள் குறித்துத் தொடர்ச்சியாகப் பேசிவந்த குருவானவர் சந்திராவின் குரலை அடக்கவேண்டிய தேவை இந்திய இராணுவத்திற்கும் இருந்தமையினால், அவர்களின் பூரண ஆசீர்வாதத்துடனேயே சந்திரா துணை ராணுவக் குழு உறுப்பினர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். குருவானவர் சந்திராவின் இறுதிக் கிரியைகள் மட்டக்களப்பில் நடைபெற்றன. மிகப்பெருந்திரளான மக்கள் மத வேறுபாடின்றி அதில் கலந்துகொண்டார்கள். நானும் அந்த இறுதிநிகழ்வில் கலந்துகொண்டேன்.4 points- வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
உள்நாட்டு யுத்தத்தால், புலம் பெயர்ந்து தமிழர்கள் இலட்சக்கணக்கில் இடம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழமுடியுமென்ற நிலை இருக்கும் போது. இது முடியாதா என்ன? சுமந்திரனுக்கு ஒரு ‘சபாஸ்’👏4 points- “பிரித்தானியா ஒரு கிறிஸ்தவ நாடு” என இஸ்லாமிய மாணவரிடத்தில் கூறிய ஆசிரியர் பணிநீக்கம்!
இவர் கூறியதில் என்ன தவறு இருக்கின்றது? தாம் இஸ்லாம் என கிறிஸ்தவ நாடுகளில் வரிந்துகட்டிக்கொண்டு நிற்பவர்களின் அஜாரகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.... அவர்கள் கை கழுவும் தொட்டிகளில் காலை தூக்கி கழுவியிருக்கிறார்கள். அந்த இடம் எப்படி இருக்கும் என்பதை நீங்களே சிந்தித்து பாருங்கள்.4 points- யாழ். சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினையை வைத்து அரசியல் செய்து பாராளுமன்றம் வந்தவர் இன்றுவரை அந்த மக்களுக்கு எந்த உதவியும் செய்ய செல்லவில்லை - இளங்குமரன்
இவர்தான் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒருமுறை வடக்குக்கு ஒதுக்கப்பட்ட பணம் பயன்படுத்தப்படாமல் திரும்பி சென்றது இதுகளை எல்லாம் எலெக்சனில் வென்று மாற்றி காட்டோணும் எண்டு பேசியதாக நினைவு இப்போ இவரே வடக்குக்கு பணம் வேண்டாம் எங்கிறார். கடந்த தேர்தலில் வடக்கில் அதிக ஆசனங்களை வென்றது தேசிய மக்கள் சக்தி அவர்களிடம் பணத்தை கொடுக்காமல் யாரிடம் கொடுப்பார்கள்? ஓரிருவாரங்கள் முன்னர்தான் தேசிய தலைவருக்கும் மாவீரர்களுக்கும் மரியாதை செலுத்துகிறேன் என்று பாராளு மன்றத்தில் குதியோ குதியெண்டு குதிச்சார் இப்போ அதே வாயால தலைவரையும் போராளீகளையும் மக்களையும் கொன்று குவித்தவர்களை ராணுவவீரர்கள் என்று அவர்களை மரியாதையாக அழைக்கோணும் எண்டுறார். ஒரு தொகுதியில் மாத்திரம் வென்ற இவர் முழு வடக்குக்கும் பணம் தேவையில்லை என்று சொல்ல யாரிடமிருந்து அதிகாரத்தை பெற்றார்? அத்துடன் அநுர ஒருதடவை யாழ்வந்து நகரசபை கூட்டத்தில் கலந்து கொண்டபோது தையிட்டியில் விகாரை அமைத்தது சரி அதை வரவேற்கிறோம் அகற்ற தேவையில்லைஎன்று அர்ச்சுனா கூறியது காணொலி பதிவாக வந்தது. இந்த மூன்று விஷயங்களுமே கடந்தகால ஆட்சியாளர்கள் செய்ய நினைத்த ஒன்று, அர்ச்ச்சுனாவை உள்ளே போட்டபோது நாமல் ஓடி வந்தார் இப்போலாம் அரசல் புரசலாக அர்ச்சுனா நாமலின் பினாமி என்று சமூக வலைதளங்களில் ஒரு செய்தி உலாவருகிறது , அறிஞ்சு தெரிஞ்சவனுகதான் அப்படி உலவவிடுறாங்களோ யார் அறிவாரோ? இப்போலாம் வடக்கின் பிரதிநிதிகள் என்று பாராளுமன்றத்தில் குதிப்பவர்கள் வடக்கு மக்களுக்காக பேசுகிறார்கள் என்றா நினைக்கிறோம்? உண்மையில் அங்கே நடப்பது இளங்குமரனுக்கும் அர்ச்சுனாவுக்கும் இடையில் உள்ள தனிப்பட்ட வன்மம். ஒரு இயற்கைகோரத்தின் பின்னர் தமது பாகுதிகளை சீரமைக்க வேறுபாடுகளை மறந்து சிங்களவர்கள் முஸ்லீம்கள் எதிர்கட்சிகள் என அனைவருமே ஒன்றிணைந்து நிக்கிறார்கள், நமது வெண்ணெய்வெட்டி வீரர்கள் மூண்டுநாலுபேர் இருந்துகொண்டு இந்த நேரத்திலும் தங்கட பிரச்சனைகளை பேசுறதுக்கு பாராளுமன்றத்தை பாவிக்கும் நகைச்சுவை செய்துகொண்டிருக்கிறார்கள். காலங்களும் காட்சிகளும் ஆட்சிகளும் மாறிக்கொண்டேயிருக்கு ஆனால் அந்தகாலத்திலிருந்து இந்தக்காலம்வரை தமிழர் பிரதிநிதிகள் என்று தெரிவு செய்யப்பட்டு சிங்கள சபைக்கு செல்லும் தமிழர்கள் அன்றிலிருந்து இன்றுவரை அதே குணங்களுடன் தான் அலைகிறார்கள். நாட்கள்தான் மாறிவிட்டது ஆட்கள் மாறவில்லை. இந்த லட்சணத்தில் எங்களுக்கு எதுவும் செய்யவில்லையென்று அமிர்தலிங்கம், சிவ சிதம்பரம் மாவை சம்பந்தனை திட்டி என்ன பிரயோசனம், அவர்களை திட்டிய அதே இளம் தலைமுறையும் அவர்களைவிட கேவலமாகதானே நடக்கிறது. இந்த கோமாளி கூட்டத்தின் செயற்பாடுகளால் எதிர்காலத்தில் யாழ்மண்ணில் சிங்களவனே நேரடியாக தேர்தலில் போட்டியிட்டு வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.4 points- முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
4 pointsஇரண்டு வரியிலேயே முடித்திருக்க வேண்டிய கறுத்தது வீணாக இரண்டு பந்திகள் உதவி செய்ய போனவன் பொருட்களுடன் போகிறான் படம் பிடிக்க போனவன் காமெராவுடன் போகிறான்4 points - வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
Important Information
By using this site, you agree to our Terms of Use.