அஜீவன், தென்னிந்தியத் திரைப்படத்துறையில் இருந்தவர். மறைந்த நடிகர் முரளியின் நண்பன். யாழ் இணையத்தில்தான் அவருடனான தொடர்பு எனக்கு ஏற்பட்டது. சஞ்சீவ்காந்துடன் (இளைஞன்) என்னையும் என் மனைவியையும் சந்திப்பதற்காக ஒருதடவை யேர்மனிக்கு வந்திருந்தார். பழகுவதற்கு இனியவர். குறும்படங்கள் வெளிவரத் தொடங்கிய நேரம். ஐரோப்பாவில், ஜேர்மனி, பிரான்ஸ், சுவிஸ், லண்டன் போன்ற நாடுகளில் எம்மவர்கள் குறும்படங்களைத் தயாரித்து வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தத் தயாரிப்புகளில் அஜீவனின் குறும்படங்கள் தனித்துவமானவை. அவை புலம்பெயர் வாழ்க்கையை அழகாக வடிவமைத்ததும், திரைப்படக் கலைஞராக அவரது திறமையை வெளிப்படுத்தியதும் உண்மை. அஜீவனின் திறமையும், திரைத்துறையில் அவர் பெற்ற அனுபவங்களும், அவர் எளிதில் ஈழத்துக்கான சினிமாவில் ஒரு உயர்ந்த நிலையை அடையக் கூடியவையாக இருந்தன. ஆனால், அதற்காக அஜீவன் மிகுந்த முயற்சி எடுக்கவில்லை. அவரின் அரசியல் தொடர்புகள், தனிமை, பொருளாதாரச் சிக்கல்கள், ஊக்கம் தராத நண்பர்கள் போன்றவை அதற்கான காரணங்களாக இருந்திருக்க வேண்டும். ஒரு திறமையான கலைஞனை இழந்திருக்கின்றோம். வாழும் போதெல்லாம் அவரின் திறமையை ப் பெரிதும் பாராட்டாமலும், மதிக்காமலும் இருந்துள்ளோம். அது தான் ஒரு கலைஞரின் வாழ்க்கையில் அவமானமாக இருக்கக்கூடிய ஒரு நிலை. அஜீவனின் எச்சில் போர்வை குறும்படத்துக்கு நான் எழுதிய விமர்சனம் (யாழ் இணையம் 27.09.2003) சப்பாத்தை அநாயசமாகக் கழட்டிவிட்டு சோர்வுடன் நடக்கும் கால்களுடன் வீட்டுக்குள் கமரா நுளைகிறது, கூடவே நாங்களும் நுளைவது போன்ற பிரமை. ஜக்கற்றை கழட்டி கட்டிலில் போடுவது, கடித உறையைக் கிழித்து கிழித்த துண்டைக் கீழே போடுவது போன்ற சிறு சிறு விசயங்களில் கூட நிறைய கவனம் செலுத்தப்பட்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. ஒரு வார்த்தை பேச வேண்டிய அவசியமே நாயகனுக்கில்லை. கமராவும் ஒளியமைப்பும் அவனுக்காகப் பேசுகின்றன. கதையை நகர்த்த பின்னணியில் குரல்கள் பேசுகின்றன. லுயிஸை சுவிசிற்கு அனுப்பிவிட்டு, ஒரு கடிதம் மூலமும், தொலைபேசி அழைப்பின் மூலமும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பை சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார் இதை ஆக்கியவன். ஒரு இலட்சம் அனுப்பு என்ற கடித வாசகத்தைப் பார்த்து (கேட்டு) லுயிஸ் பெருமூச்சு விடுவதும், இன்னும் இரண்டு கிழமைக்குள் பணம் அனுப்பு என்று சொல்லி துண்டிக்கப்படும் தொலைபேசியின் பின்னணிச் சத்தமும், இருளையே பார்த்து நிற்கும் லுயிஸின் இலயாமையும் நன்றாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. அதேபோல் லுயிஸிற்கு தொலைபேசி வந்திருப்பதாகச் சொல்ல வருபவரைக் காட்டாது அவரின் நிழலை லுயிஸின் முதுகில் காட்டி மறையவிடுவது தேர்ந்த கலைஞனின் ஒளியமைப்பினூடான கமராப் பார்வை. கலாச்சாரம், சினிமா என்ற வெட்டிப் பேச்சுக்களின் பின்னணியில் லுயிஸ் லிப்றில் 10வது மாடிக்குப் போவதும், பின்னணியில் நண்பனின் அறிவுரை ஒலிக்க மீண்டும் லிப்றில் கீழே பயணிப்பதும் நல்ல சேர்க்கை. யாழ்ப்பாண நிலமைகள், தங்கையின் கடிதம், தொலைபேசியில் ஒலிக்கும் தந்தையின் குரல், வெட்டிப்பேச்சு பேசும் குரல்கள் எல்லாம் மாறிமாறி ஒலிக்கும்போது, லுயிஸ் தனது வலது கைப் பெருவிரலை அசைப்பது சொல்ல வேண்டியதைச் சொல்லி நிற்கின்றது. முற்பகுதியில் இயற்கையான ஒலியுடனும் பிற்பகுதியில் வாத்திய இசையுடனும் பின்னணி சேர்த்திருப்பது அருமை. கதையின் நாயகனை விட்டு நாங்கள் அகலாத வண்ணம் எங்களை வைத்திருப்பதற்காக வேறு பாத்திரங்களை காட்டாதது உங்கள் எண்ணமானால், அறிவுரை தரும் நண்பனின் காலைக் காட்டுவதையும் தவிர்த்திருக்கலாமே. புலம்பெயர் தமிழ் இளைஞனே உன் தோளில் இத்தனை சுமைகளா? அழகாகச் சொல்லியிருக்கிறார் ஆக்கியவன் அஜீவன்.