எது பிளாஸ்டிக் அரிசி?
உண்மையில் பிளாஸ்டிக் அரிசி என்பது பிளாஸ்டிக்கில் செய்யப்படுவதில்லை. உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்குடன் செயற்கைப் பிசினைக் கலந்து, பிளாஸ்டிக் அரிசி செய்யப்படுவதாகச் சொல்லப்படுகிறது. ஏற்கனவே தங்கள் நாட்டு உயர்ந்த அரிசி வகையிலேயே போலியைத் தயாரித்து விற்பனை செய்த சீனா, தற்போது முழுக்க முழுக்க செயற்கை அரிசியைத் தயாரிக்க ஆரம்பித்துவிட்டது.
எப்படிக் கண்டுபிடிப்பது?
பிளாஸ்டிக் அரிசி தனியாக விற்பனை செய்யப்படுவதில்லை. இவை அரிசியுடன் கலக்கப்பட்டே விற்பனைக்கு வருகின்றன. தவிர, சமைத்தால் மட்டுமே அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப்பட்டிருப்பதைக் கண்டுபிடிக்க முடியும். சமைத்த பிறகு பிளாஸ்டிக் அரிசி முழுவதும் வேகாமல் முரட்டுத்தன்மையுடன் இருக்கும். பொதுவாக அரிசியை வேகவைத்தால் அதிலிருக்கும் ஸ்டார்ச், மேலே படலமாகப் படியும். பிளாஸ்டிக் அரிசி வேகும்போது கண்ணாடி போன்ற படலம் வரும். இதை வெயிலில் காயவைத்தால் மெல்லிய பிளாஸ்டிக் ஷீட் போல மாறிவிடும். பிளாஸ்டிக் அரிசியை நெருப்பில் காட்டினால் சர்க்கரைவள்ளிக் கிழங்கின் மணம் வெளிப்படும்.
சர்க்கரையில் கலந்திருக்கும் ரவையையும், மிளகுடன் கலக்கப்பட்டிருக்கும் பப்பாளி விதையையும் நம்மால் கண்டுபிடித்துவிடுகிற மாதிரி பிளாஸ்டிக் அரிசியை எளிதில் அடையாளம் காணமுடியாது. இதற்கென இருக்கும் ஆய்வகங்களின் துணையோடு மட்டுமே இந்த ரசாயன அரிசியை, திட்டவட்டமாக இனம் காணமுடியும்.