Everything posted by ஏராளன்
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; மைத்திரிபால சிறிசேனவின் மனு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
27 Oct, 2025 | 06:14 PM உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட மனுவை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (27) உத்தரவிட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த எச்சரிக்கையை புறக்கணித்து அதற்கு நடவடிக்கை எடுக்கத் தவறியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக அருட்தந்தை சிறில் காமினி மற்றும் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்ஆகியோரால் கோட்டை நீதவான் நீதிமன்றில் தனிப்பட்ட மனு தாக்கல் செய்திருந்தனர். அருட்தந்தை சிறில் காமினி மற்றும் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட மனுவை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தார். மைத்திரிபால சிறிசேனவின் மனு இன்றைய தினம் அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/228823
-
இலங்கை தொடர்பான புதிய தீர்மானம்: நீதிக்குப் பதிலாக தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கையே ஊக்குவிக்கிறது - ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் பிரித்தானிய தமிழர் பேரவை விசனம்
27 Oct, 2025 | 06:18 PM (நா.தனுஜா) இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய தீர்மானமானது இலங்கையில் இடம்பெற்ற இனமோதலுக்கான அடிப்படைக்காரணத்தை அடையாளப்படுத்துவதற்குத் தவறியுள்ளது. குறிப்பாக அத்தீர்மானம் தமிழ் மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படுவதற்கான சாத்தியப்பாட்டை மேம்படுத்துவதற்குப் பதிலாக, தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை மேலும் தீவிரப்படுத்தக்கூடிய அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது என ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடம் பிரித்தானிய தமிழர் பேரவை தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது. அண்மையில் நடைபெற்றுமுடிந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 60/1 தீர்மானம் குறித்து தமது கரிசனையை வெளிப்படுத்தி பிரித்தானிய தமிழர் பேரவையின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் வி.ரவிகுமார் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். இப்புதிய தீர்மானமானது தமிழ் மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படுவதற்கான சாத்தியப்பாட்டை மேம்படுத்துவதற்குப் பதிலாக, தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை மேலும் தீவிரப்படுத்தக்கூடிய அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது. அத்தோடு 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' எனும் தலைப்பில் நிறைவேற்றப்பட்டுள்ள இத்தீர்மானமானது இலங்கையில் இடம்பெற்ற இனமோதலுக்கான அடிப்படை காரணத்தை அடையாளப்படுத்துவதற்குத் தவறியிருப்பதுடன், தமிழர் தாயகத்தில் பல தசாப்த காலமாக அரசினால் கட்டவிழ்த்துவிடப்பட்டவரும் வன்முறைகளுடன் கூடிய இனவழிப்பின் கூறுகளை முழுமையாகப் புறக்கணித்திருப்பதாகவும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேபோன்று 1956 ஆம் ஆண்டு முதல் சர்வதேச சட்டத்துக்கு முரணான கட்டமைக்கப்பட்ட வன்முறைகள் இடம்பெற்றுவருவதைக் காண்பிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை வசம் 120,000 க்கும் மேற்பட்ட ஆவணங்கள் உள்ள போதிலும், இப்புதிய தீர்மானம் தமிழர்களின் நம்பிக்கையை சீர்குலைத்திருப்பதாக அதில் விசனம் வெளியிடப்பட்டிருப்பதுடன் நம்பகத்தன்மையும், சுயாதீனத்துவமும் அற்ற உள்ளகப்பொறிமுறைகளிலேயே ஐ.நா மனித உரிமைகள் பேரவை தொடர்ந்து தங்கியிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை 'ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின்கீழ் இயங்கிவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்திடம் சாட்சியம் அளிக்கும் பாதிக்கப்பட்ட தமிழர்கள், அதுகுறித்த இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையிலேயே அதனை வழங்குகின்றனர். அவ்வாறிருக்கையில் மேற்படி சாட்சியங்கள் இலங்கையின் அரச கட்டமைப்புக்களுக்கு அனுப்பப்படுமாயின், அது பாதிக்கப்பட்ட தரப்பினர் மீது ஒடுக்குமுறைகள் பிரயோகிக்கப்படுவதற்கு வழிவகுப்பதுடன் ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையின்மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை சீர்குலைவடையச்செய்யும்' என்றும் பிரித்தானிய தமிழர் பேரவையின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/228824
-
ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள மலேசியாவுக்கு சென்ற அமெரிக்க ஜனாதிபதி
டிரம்பின் ஆசிய பயணத்தின் மீதான எதிர்பார்ப்புகள் - யாருக்கு வெற்றி கிடைக்கும்? பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, கோலா லம்பூர் வந்தடைந்த டிரம்ப் 2 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான சந்திப்பை உள்ளடக்கிய ஓர் முக்கியமான அரசியல் பயணத்துக்காக ஆசியாவுக்கு வருகை தந்துள்ளார். உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தகத்தில் மீண்டும் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாக வர்த்தகம் உள்ளது. டிரம்ப் முதலில் மலேசிய தலைநகர் கோலா லம்பூரில் நடைபெறும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கம் (ஆசியான்) உச்சிமாநாட்டில் கலந்து கொண்டார். அதன் பிறகு, ஜப்பான் மற்றும் தென் கொரியாவுக்குச் செல்கிறார். தென் கொரியாவில் அவர் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்திப்பார் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இந்தப் பயணத்தில் டிரம்பும் மற்ற உலகத் தலைவர்களும் எதை வெல்ல விரும்புகிறார்கள் என்பது குறித்தும், அதில் உள்ள சவால்கள் குறித்தும் பிபிசி செய்தியாளர்கள் விளக்குகிறார்கள். டிரம்புக்கு சீனா தான் முக்கியம் அமெரிக்க நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் வர்த்தக ஒப்பந்தங்களை செய்வதும், சீன இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட வரிகள் மூலம் அமெரிக்க அரசுக்கு வருவாய் கிடைப்பதை உறுதிப்படுத்துவதும், டிரம்புடைய பயணத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும் என பிபிசி வட அமெரிக்க செய்தியாளர் அந்தோணி ஸுர்ச்சர் எழுதுகிறார். உலக வர்த்தகத்தில் பல நாடுகளின் பங்கு இருந்தாலும், டிரம்பின் வெற்றி அல்லது தோல்விக்கு சீனாவே முக்கிய காரணமாக உள்ளது. 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக, ஏபெக் (Asia-Pacific Economic Cooperation) மாநாட்டின் ஒரு பகுதியாக சீன அதிபர் ஷி ஜின்பிங்கை டிரம்ப் சந்திக்க உள்ளார். இந்தச் சந்திப்பு, டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் அமெரிக்கா-சீனா உறவுகளுக்கு ஒரு புதிய பாதையை அமைக்கக்கூடும். டிரம்ப் ஏற்கெனவே ஒப்புக்கொண்டது போல, சீனாவுக்கு விதிக்கப்பட்ட கடுமையான வரிகள் நீட்டிக்க முடியாதவை. இதனை அவர் நேரடியாக சொல்லவில்லை என்றாலும், சீனாவுடன் அதிகரிக்கும் பொருளாதாரப் போர், அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும், உலகம் முழுவதற்கும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அமெரிக்கா-சீனா உறவுகள் பதற்றமடைந்தால், அமெரிக்கப் பங்குச் சந்தைகள் உடனே சரிவடைவது இந்த உண்மையை தெளிவாக காட்டுகிறது. அடுத்த வாரம் அமெரிக்காவுக்குத் திரும்பும் போது, தென் கொரியாவுடன் ஒரு ஒப்பந்தத்தை முடிக்கவும், அமெரிக்க உற்பத்தியில் ஜப்பானிய முதலீட்டை உறுதி செய்யவும் டிரம்ப் முயற்சிப்பார். ஆனால், சீனாவை மீண்டும் அமெரிக்க விவசாயப் பொருட்களை வாங்க வைப்பது, சீனாவில் இருந்து கிடைக்கும் அரிய கனிமங்களை வெளிநாடுகளில் இருந்து அணுகுவதற்கான சமீபத்திய கட்டுப்பாடுகளை தளர்த்துவது, அமெரிக்க நிறுவனங்களுக்கு சீன சந்தையில் அதிக வாய்ப்புகளை வழங்குவது மற்றும் முழுமையான வர்த்தகப் போரைத் தவிர்ப்பது ஆகியவை அவரது முதன்மையான முன்னுரிமையாக இருக்கும். டிரம்புக்கு அது தான் முக்கியமான விஷயம். ஜின்பிங்கின் உத்தி அக்டோபர் 30-ஆம் தேதி, தென் கொரியாவில் சீன அதிபர் ஷி ஜின்பிங், அமெரிக்க அதிபர் டிரம்பைச் சந்திக்கிறார். அந்த சந்திப்பில், ஷி ஜின்பிங் கடுமையான பேச்சுவார்த்தையாளராக இருக்க விரும்புகிறார் என்ற பார்வையில் பிபிசி சீன செய்தியாளர் லாரா பிக்கர் எழுதும் கருத்து இது. ஜின்பிங் சீனாவிடம் உள்ள அரிய கனிமங்களை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறார். இந்த கனிமங்கள் இல்லாமல், செமி கண்டக்டர்கள், ஆயுதங்கள், கார்கள், ஸ்மார்ட்போன்கள் போன்றவற்றைத் தயாரிக்க முடியாது. இது அமெரிக்காவின் பலவீனம். அதைப் பயன்படுத்தி, சீனா அமெரிக்க விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. உதாரணமாக, அமெரிக்காவிடம் இருந்து சோயாபீன்ஸ் வாங்காமல், டிரம்பின் கிராமப்புற வாக்காளர்களான விவசாயிகளை காயப்படுத்துகிறது. ஜின்பிங், டிரம்பின் முதல் பதவிக்காலத்திலிருந்து பாடம் கற்றுள்ளார். இப்போது, சீனா வரி சுமைகளை ஏற்கத் தயாராக இருக்கிறது. ஏனெனில், ஒரு காலத்தில் சீன ஏற்றுமதியில் ஐந்தில் ஒரு பங்கை பெற்ற அமெரிக்கா, இப்போது அவ்வளவு முக்கியமான சந்தையாக இல்லை. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்த வாரம் நடைபெறும் ஒவ்வொரு கூட்டத்திலும் அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான டிரம்பின் வரிகள் முக்கிய பங்கு வகிக்கும். அமெரிக்காவுடனான பொருளாதாரப் போருக்கும், உள்நாட்டு சவால்களுடனான அவரது போராட்டத்துக்கும் இடையில், ஜின்பிங் ஒரு சமநிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அதேபோல், அமெரிக்காவுக்கு ஜின்பிங்கின் பிரச்னைகள் பற்றியும் தெரியும். சீனாவில் உள்ள வேலையின்மை, ரியல் எஸ்டேட் நெருக்கடி, அதிகரித்து வரும் உள்ளூர் அரசாங்கக் கடன் மற்றும் மக்கள் செலவிட தயங்குவது போன்றவற்றைக் குறித்து அமெரிக்கா அறிந்திருக்கிறது. டிரம்ப் மேம்பட்ட ஏஐ சிப்களை ஏற்றுமதி செய்ய ஒப்புக்கொண்டாலோ அல்லது தைவானுக்கு வழங்கப்பட்டுள்ள கூடுதல் ராணுவ ஆதரவை திரும்பப் பெற்றாலோ, சீனா ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள முன்வரக்கூடும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். ஆனால் இது எளிதாக நடக்காது. முக்கியமான வித்தியாசம் என்னவென்றால், டிரம்ப் திடீரென துணிச்சலாக முடிவெடுக்கிறார். ஆனால், ஷி ஜின்பிங், நீண்ட காலத்துக்கான திட்டத்துடன் செயல்படுகிறார். ஆனால், டிரம்பால் அந்த நீண்ட காலத்துக்கு காத்திருக்க முடியுமா என்பது தான் முக்கியக் கேள்வியாக உள்ளது. முக்கிய பங்கு வகிக்கும் ஒப்பந்தம் உலக உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் ஆசியாவின் தொழிற்சாலைகள், டிரம்ப் விதித்த வரிகளிலிருந்து விலக்கை எதிர்பார்க்கின்றன என்கிறார் பிபிசி ஆசிய வணிக செய்தியாளர் சுரஞ்சனா திவாரி. சில நாடுகள் ஒப்பந்தங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றன, சில ஏற்கெனவே குறிப்பிட்ட அம்சங்களில் உடன்பட்டுள்ளன. ஆனால், இன்னும் எந்த நாடும் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. எனவே, ஒரு உறுதியான ஒப்பந்தம் அல்லது குறைந்தபட்சம் நம்பிக்கையூட்டும் பேச்சுவார்த்தைகள் கூட வரவேற்கப்படுகின்றன. பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, 2017-ஆம் ஆண்டு அமெரிக்க விஜயத்தின் போது டிரம்பும் ஷி ஜின்பிங்கும் சீனாவை எடுத்துக்கொண்டால், டிரம்ப் மற்றும் ஷி ஜின்பிங் இடையிலான சந்திப்பு ஒரு முன்னேற்றத்தைக் காட்டுகிறது. ஆனால் வரிகள், ஏற்றுமதி கட்டுப்பாடுகள், மற்றும் அனைத்துக்கும் மூல காரணமாக உள்ள, அந்த இரண்டு நாடுகளுக்கும் இடையேயான போட்டி போன்ற பல விஷயங்களையும் இரு நாட்டுத் தலைவர்களும் தீர்க்க வேண்டும். ஏனென்றால் அந்த இரு நாடுகளும் ஏஐ மற்றும் உயர் தொழில்நுட்பத்தில் முன்னிலை பெற போராடுகின்றன. இந்த பதற்றங்கள் குறைந்தால், நடுவில் சிக்கியுள்ள மற்ற ஆசிய நாடுகளுக்கு நிம்மதி கிடைக்கும். குறிப்பாக, தென்கிழக்கு ஆசியா அமெரிக்க மின்னணு விநியோகச் சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கிறது, ஆனால் சீனாவின் தேவையை பெரிதும் சார்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், இந்தப் பிராந்தியத்திலிருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி இரட்டிப்பாகியுள்ளது. ஆனால் 10% முதல் 40% வரையிலான வரிகள், வியட்நாம், இந்தோனீசியா, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளில் உள்ள உற்பத்தியாளர்களை கடுமையாக பாதிக்கும். இது அமெரிக்க சிப் நிறுவனங்களையும் பாதிக்கலாம். உதாரணமாக, மலேசியாவில் தொழிற்சாலைகள் கொண்ட மைக்ரான் டெக்னாலஜி. கடந்த ஆண்டு, மலேசியா சுமார் 10 பில்லியன் டாலர் மதிப்புள்ள சிப்புகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தது. இது அமெரிக்காவின் மொத்த சிப் இறக்குமதியில் ஐந்தில் ஒரு பங்கு. ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற பணக்கார நாடுகள் வேறுபட்ட சவால்களை எதிர்கொள்கின்றன. அந்த நாடுகள் அமெரிக்காவின் நெருக்கமான கூட்டாளிகளாக இருந்தாலும், தற்போதைய சூழ்நிலை மிகவும் குழப்பமானது. அதனால், அந்த நாடுகளும் வரி விதிகள் மற்றும் முதலீடுகளை உறுதிப்படுத்த விரும்புகின்றன. அதேபோல், இரு நாடுகளிலும் உள்ள வாகன உற்பத்தியாளர்கள், அமெரிக்க சந்தையை முக்கியமாகக் கருதுகிறார்கள். ஆனால், தற்போதைய குழப்பத்தில் வழி கண்டுபிடிக்க அவர்களும் போராடி வருகின்றனர். ஜப்பானின் புதிய பிரதமருக்கு முன் உள்ள சவால் ஜப்பானின் புதிய பிரதமர் சனே டாக்காய்ச்சியை "வலிமையும் ஞானமும் கொண்ட பெண்மணி" என டிரம்ப் புகழ்ந்துள்ளார், என்பதைக் குறிப்பிட்டு, ஜப்பானின் பார்வையில் இந்த சந்திப்பு குறித்து விளக்குகிறார் ஜப்பான் செய்தியாளர் ஷைமா கலீல், இந்த வாரம், டிரம்புடன் நல்ல உறவை உருவாக்கும் டாக்காய்ச்சியின் திறன், அவருடைய தலைமைத்துவத்துக்கும், மாறிவரும் உலக அரசியல் அமைப்பில் ஜப்பானின் இடத்துக்கும் ஒரு ஆரம்பகட்ட சோதனையாக இருக்கும். நாடாளுமன்றத்தில் ஆற்றிய தனது முதல் உரையில், ஜப்பானின் பாதுகாப்பு பட்ஜெட்டை அதிகரிக்கப் போவதாக டாக்காய்ச்சி அறிவித்தார். இது, அமெரிக்காவுடன் பாதுகாப்புப் பொறுப்பை பகிர்ந்துகொள்ளும் அவரது நோக்கத்தை காட்டுகிறது. டிரம்ப் இதைப் பற்றி முன்பே பேசியுள்ளார். அவர், ஜப்பானில் உள்ள அமெரிக்க படைகளுக்கான செலவில் டோக்கியோ அதிக பங்களிப்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தலாம். தற்போது ஜப்பான், வெளிநாடுகளில் அதிகமான அமெரிக்க வீரர்களை (சுமார் 53,000 வீரர்கள்) கொண்டுள்ள நாடாக திகழ்கிறது. பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, ஜப்பானின் புதிய பிரதமர் சானே டாக்காய்ச்சி இரு நாடுகளும், அவர் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் வரி ஒப்பந்தத்தை இறுதி செய்ய விரும்புகின்றன. இந்த ஒப்பந்தம், ஜப்பானின் முக்கிய கார் நிறுவனங்களான டொயோட்டா, ஹோண்டா, நிசான் ஆகியவற்றுக்கு நன்மை பயக்கும் . அமெரிக்கா, ஜப்பானிய கார்கள் மீது விதிக்கும் இறக்குமதி வரியை 27.5% இலிருந்து 15% ஆக குறைக்கிறது. இதனால், சீன கார்களுக்கு எதிராக ஜப்பானிய கார்கள் அதிக போட்டித்தன்மை கொண்டதாக மாறும். டாக்காய்ச்சி, ரியோசி அகசாவாவை தலைமை வரி பேச்சுவார்த்தையாளராக தக்க வைத்துள்ளார். இதற்குப் பதிலாக, ஜப்பான், அமெரிக்காவில் மருந்துகள் மற்றும் சிப் தொழில்நுட்ப விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்த 550 பில்லியன் டாலர் முதலீடு செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. அதேபோல், அமெரிக்காவில் விளைந்த பொருட்களை (அரிசி உட்பட) ஜப்பான் அதிகமாக கொள்முதல் செய்யும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார். இந்த முடிவுக்கு ஒருபுறம் அமெரிக்காவில் வரவேற்பு கிடைத்தாலும், ஜப்பானிய விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். டிரம்புடன் நெருங்கிய உறவைப் பகிர்ந்து கொண்ட மறைந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயுடனான டாக்காய்ச்சியின் உறவுகளும் அவருக்கு சாதகமாக அமையக்கூடும். அபே, டிரம்பின் நம்பிக்கையைப் பெற மார்-எ-லாகோவில் கோல்ஃப் விளையாடியதற்காக பிரபலமாக அறியப்பட்டவர். அந்த மாதிரியான தனிப்பட்ட ராஜ்ஜீய உத்தியை டாக்காய்ச்சியும் பின்பற்ற விரும்பலாம். கிம் ஜாங் உன் வருகையும் வரி தொடர்பான பேச்சுவார்த்தையும் கொரியாவின் பார்வையில் டிரம்பின் பயணம் குறித்து எழுதுகிறார் பிபிசியின் சியோல் செய்தியாளர் ஜேக் குவோன். தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங்கிற்கு முக்கிய கவலையாக டிரம்ப் விதித்த வரிகள் உள்ளன. ஆனால், டிரம்ப், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உனைப் பார்க்க செல்லலாம் என்ற ஊகங்கள் பரவியதால் அந்தப் பிரச்னை சற்று பின்னால் தள்ளப்பட்டுள்ளது . ஆகஸ்ட் மாதத்தில், அமெரிக்கா அதிபரின் அலுவலகத்தில் "சமாதானத் தூதர்" என்று டிரம்பை லீ புகழ்ந்து பேசினார். இந்நிலையில் 2019 சந்திப்பிக்குப் பின் கிம்மைப் பார்க்காததால், அவருடனான சந்திப்பு பற்றி டிரம்ப் உற்சாகத்துடன் பதிலளித்துள்ளார். கடந்த மாதம், கிம் டிரம்பை இன்னும் "அன்புடன்" நினைவில் வைத்திருப்பதாகக் கூறினார். டிரம்புடனான மற்றொரு உச்சிமாநாட்டின் மூலம் தனது அணு ஆயுதத் திட்டத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி பெறலாம் என கிம் நம்புவதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். ஆனால் அத்தகைய சந்திப்பு நடைபெறுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. எப்படியிருந்தாலும், லீயின் முக்கிய வேலை வர்த்தக ஒப்பந்தம் பேசுவது தான். தென் கொரிய ஏற்றுமதிகள் மீதான அமெரிக்க வரிகளை 25% இலிருந்து 15% ஆகக் குறைப்பதற்கான பேச்சுவார்த்தைகள், தென் கொரிய அதிகாரிகள் அமெரிக்காவுக்கு பலமுறை பயணம் செய்த போதிலும் தடைபட்டுள்ளன. தென் கொரியா அமெரிக்காவில் முன்கூட்டியே 350 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்துவது அதற்கான முக்கியக் காரணமாக உள்ளது. ஏனென்றால் இது தென் கொரிய பொருளாதாரத்தின் ஐந்தில் ஒரு பங்கு. எனவே, இவ்வளவு பெரிய தொகை நிதி நெருக்கடியை உருவாக்கலாம் என்று தென் கொரியா அஞ்சுகிறது. ஆனால், சமீபத்திய நாட்களில் பேச்சுவார்த்தையில் உறுதியான முன்னேற்றம் இருப்பதாக தென் கொரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும், டிரம்ப் மற்றும் லீ இடையே புதன்கிழமை நடைபெறும் உச்சிமாநாட்டின் முடிவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று அவர்கள் நம்புகின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj97vlxrenmo
-
ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025
நியூஸிலாந்துக்கு எதிராக பெரிய வெற்றியைப் பதிவு செய்த இங்கிலாந்து 2ஆம் இடத்திற்கு முன்னேறியது; சொஃபி டிவைன் ஒய்வு பெற்றார் Published By: Vishnu 27 Oct, 2025 | 12:01 AM (நெவில் அன்தனி) விசாகப்பட்டினம் மாவட்ட கிரிக்கெட் சங்க விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்களால் பெரிய வெற்றியை ஈட்டிய இங்கிலாந்து, அணிகள் நிலையில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது. லின்சி ஸ்மித், அணித் தலைவி நெட் சிவர்-ப்றன்ட், அலிஸ் கெப்சி ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகள், அமி ஜோன்ஸ் குவித்த ஆட்டம் இழக்காத அரைச் சதம் என்பன இங்கிலாந்துக்கு பெரிய வெற்றியை ஈட்டிக்கொடுத்தன. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த நியூஸிலாந்து 38.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது. ஜோர்ஜியா ப்ளிம்மர் 43 ஓட்டங்களையும் அமேலியா கேர் 35 ஓட்டங்களையும் அணித் தலைவி சொஃபி டிவைன் 23 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் லின்சி ஸ்மித் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நெட் சிவர் - ப்றன்ட் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அலிஸ் கெப்சி 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 29.2 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 172 ஓட்டங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டியது. அமி ஜோன்ஸ் 11 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட ஆட்டம் இழக்காமல் 86 ஓட்டங்களையும் டெமி போமொன்ட் 40 ஓட்டங்களையும் ஹீதர் நைட் 33 ஓட்டங்களையும் பெற்றனர். ஆட்டநாயகி: அமி ஜோன்ஸ் சொஃபி டிவைன் ஓய்வுபெற்றார் நியூஸிலாந்து அணித் தலைவி சொஃபி பிரான்செஸ் மொனிக் டிவைன் இந்தப் போட்டியுடன் மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 19 வருடங்களுக்கு முன்னர் அவஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகமான சொஃபி டிவைன், இன்று நடைபெற்ற நியூஸிலாந்தின் இந்த வருடத்திற்கான கடைசி மகளிர் சர்வதேச உலகக் கிண்ணப் போட்டி முடிவில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 159 போட்டிகளில் 144 இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடிய சொஃபி டிவைன் 9 சதங்கள், 18 அரைச் சதங்களுடன் 4279 ஓட்டங்களை மொத்தமாக பெற்றார். சகலதுறை வீராங்கனையான டிவைன் 111 விக்கெட்களையும் கைப்பற்றினார். https://www.virakesari.lk/article/228739
-
கனகராயன்குளத்தில் மின்சாரம் தாக்கி யானை பலி
27 Oct, 2025 | 11:11 AM வவுனியா - கனகராயகுளம் குறிசுட்ட குளம் பகுதியில் விவசாய காணி ஒன்றுக்கு போடப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி யானை ஒன்று உயிரிழந்துள்ளது. திங்கட்கிழமை (27) காலை விவசாய காணிக்கு சென்ற விவசாயி யானை ஒன்று உயிரிழந்து கிடந்ததை அவதானித்ததையடுத்து அயலவர்களுக்கும் கனகராயன்குளம் பொலிஸாருக்கும் தகவலை வழங்கியுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கினர். https://www.virakesari.lk/article/228764
-
தெற்காசிய தடகள செம்பியன்ஷிப் - இலங்கைக்கு இரண்டாம் இடம்
Oct 27, 2025 - 09:35 AM - இந்தியாவின் ராஞ்சியில் நேற்று (26) முடிவடைந்த தெற்காசிய சிரேஸ்ட தடகள செம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. பல போட்டிகளில் இந்தியாவுடன் போட்டியிட்ட இலங்கை, பதக்கப் பட்டியலில் 4 தங்கப் பதக்கங்கள் வித்தியாசத்தில் முதலாம் இடத்தை இழந்தது. இலங்கை 16 தங்கம், 14 வெள்ளி மற்றும் 10 வெண்கலத்துடன் 40 பதக்கங்களை வென்றது. 20 தங்கப் பதக்கங்களை வென்ற இந்தியா, பதக்கப் பட்டியலில் முன்னிலை பெற்றதுடன், 20 வெள்ளி மற்றும் 18 வெண்கலப் பதக்கங்களையும் வென்றது. இருப்பினும், இலங்கை மற்றும் இந்தியாவைத் தவிர, வேறு எந்த நாடும் தங்கப் பதக்கத்தை வெல்லவில்லை. குறிப்பாக, 02 வெள்ளிப் பதக்கங்களை வென்ற நேபாளத்தைத் தவிர, வேறு எந்த நாடும் வெள்ளிப் பதக்கத்தை ஏனும் வெல்லவில்லை பங்களாதேஷ் 3 வெண்கலப் பதக்கங்களையும், மாலைத்தீவு 1 வெண்கலப் பதக்கத்தையும் வென்ற போதும், பூட்டான் ஒரு பதக்கத்தையும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 60 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். போட்டியை நடத்திய இந்தியா மற்றும் இலங்கையைத் தவிர, பூட்டான், நேபாளம், மாலைத்தீவு மற்றும் பங்களாதேஷை பிரதிநிதித்துவப்படுத்திய விளையாட்டு வீரர்களும் இதில் பங்கேற்றிருந்தனர். https://adaderanatamil.lk/news/cmh8m6pz20188qplpbb297cwt
-
யாழ்ப்பாணம், Lonely Planet வெளியிட்ட “2026ஆம் ஆண்டில் சுற்றுலா செல்ல வேண்டிய சிறந்த 25 இடங்களில்” ஒன்றாக தேர்வாகியுள்ளது.
உலகின் சிறந்த சுற்றுலா தளங்களுக்குள் யாழ்ப்பாணம் Oct 27, 2025 - 02:02 PM - உலகளாவிய பயண வெளியீடான லோன்லி பிளானட் (Lonely Planet),2026 ஆம் ஆண்டிற்கான உலகில் பார்வையிட சிறந்த 25 இடங்களில் ஒன்றாக யாழ்ப்பாணத்தை பெயரிட்டுள்ளது. இலங்கையின் செழுமையான கலாச்சார மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாணம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா மேம்பாட்டு உத்தியின் ஒரு பகுதியாகப் பிராந்தியப் பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதற்கான நாட்டின் தொடர்ச்சியான முயற்சிகளையும் இது வெளிப்படுத்துகிறது. ஏனைய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுடன் யாழ்ப்பாணமும் இணைக்கப்பட்டிருப்பது, வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளது. 1970-இல் நிறுவப்பட்ட லோன்லி பிளானட், உலகின் மிகவும் நம்பகமான பயண ஊடக வர்த்தக நாமங்களில் ஒன்றாகும். இது உலகளவில் 150 மில்லியனுக்கும் அதிகமான வழிகாட்டிப் புத்தகங்களை விற்றுள்ளதுடன், விரிவான டிஜிட்டல் அணுகலையும் கொண்டுள்ளது. லோன்லி பிளானட்டின் கூற்றுப்படி, 2026 ஆம் ஆண்டில் பயணிக்க சிறந்த 25 இடங்கள் இவை, பெரு, தென் அமெரிக்கா யாழ்ப்பாணம், இலங்கை மெயின், அமெரிக்கா காடிஸ், ஸ்பெயின் ரீயூனியன், ஆப்பிரிக்கா போட்ஸ்வானா, ஆப்பிரிக்கா கார்டஜீனா, கொலம்பியா பின்லாந்து, ஐரோப்பா டிப்பரரி, அயர்லாந்து மெக்சிகோ நகரம் கெட்சால்டெனாங்கோ, குவாத்தமாலா பிரிட்டிஷ் கொலம்பியா, கனடா சார்டினியா, இத்தாலி லிபர்டேட், சாவ் பாவ்லோ யூட்ரெக்ட், நெதர்லாந்து பார்படாஸ், கரீபியன் ஜெஜு-டோ, தென் கொரியா வடக்குத் தீவு, நியூசிலாந்து தியோடர் ரூஸ்வெல்ட் தேசியப் பூங்கா, வடக்கு டகோட்டா குய் நோன், வியட்நாம் சீம் ரீப், கம்போடியா பூக்கெட், தாய்லாந்து இக்காரா-ஃப்ளிண்டர்ஸ் ரேஞ்சஸ் மற்றும் அவுட்பேக், தென் ஆஸ்திரேலியா துனிசியா, ஆப்பிரிக்கா சாலமன் தீவுகள், ஓசியானியா https://adaderanatamil.lk/news/cmh8vqm3i018iqplpczm4u15f
-
கருத்து படங்கள்
அததெரண கருத்துப் படம்.
-
வங்கக் கடலில் புயல் உருவாகிறதா? - எங்கெல்லாம் கனமழை எச்சரிக்கை?
மொன்தா புயல் வலுவடைவதால் இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைப்பு Published By: Digital Desk 3 27 Oct, 2025 | 03:08 PM வங்காள விரிகுடாவில் வலுவடைந்து வரும் மொன்தா புயல், அதன் கிழக்கு கடற்கரையில் பலத்த காற்று மற்றும் மழையை ஏற்படுத்தவுள்ள நிலையில், திங்கட்கிழமை (27) இந்தியா 50,000 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தெற்கு ஆந்திரா மற்றும் கிழக்கு மாநிலமான ஒடிசாவின் கடலோரப் பகுதிகளில் அவசரகால ஊழியர்களுக்கான விடுமுறைகளை அதிகாரிகள் இரத்து செய்து, பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளை மூட உத்தரவிட்டனர். இந்த புயல் செவ்வாய்க்கிழமைக்குள் கடும் புயலாக மாறி, பின்னர் ஆந்திரப் பிரதேசத்தின் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. "காக்கிநாடா மாவட்டத்தில் கடற்கரைக்கு அருகில் உள்ள மக்களை வெளியேற்றும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது " என ஆந்திரப் பிரதேச அனர்த்த முகாமைத்துவ அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். அதன்படி, சுமார் 50,000 பேர் நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அறிக்கை காட்டுகிறது. ஆந்திரப் பிரதேசத்தில் தாழ்வான பகுதிகளில் இருந்து குடும்பங்களை மாற்ற அனர்த்த முகாமைத்துவ குழுக்கள் விரைந்துள்ளன. அங்கு 3.9 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது. அண்டை மாநிலமான ஒடிசாவில் உள்ள மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கப்பட்டனர். ஏப்ரல் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் இந்தியாவின் கிழக்கு கடற்கரையை அடிக்கடி புயல்கள் தாக்குகின்றன. 1999 அக்டோபரில் ஒடிசாவைத் தாக்கிய புயலில் சிக்கி 10,000 பேர் உயிரிழந்தனர். இந்தியாவை பாதித்த மிகவும் மோசமான இயற்கை அனர்த்தங்களில் ஒன்றாக இன்றளவும் கருதப்படுகிறது. சில மாவட்டங்களில் கடும் மழை வீழ்ச்சி பதிவாகும் என வெளியான வானிலை முன்னறிவிப்பைத் தொடர்ந்து, தெற்கு மாநிலமான தமிழ்நாட்டின் அதிகாரிகள் மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். 2023 ஆம் ஆண்டு மிச்சாங் புயலால் ஏற்பட்டதைப் போல கடும் மழை பொழிந்து சென்னை வெள்ளத்தில் மூழ்க வாய்ப்புள்ளது. இமயமலை நாடான நேபாளத்தில், செவ்வாய் முதல் வெள்ளி வரை மழை மற்றும் பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் எச்சரித்துள்ளனர், மேலும் மலையேற்றம் செய்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இம் மாதம் நேபாளம் முழுவதும் பெய்த கடும்மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளில் சிக்கி 53 பேர் உயிரிழந்துள்ளனர். https://www.virakesari.lk/article/228788
-
ஏஐ-க்கு ரூ.579 கோடி சொத்து மதிப்பு - மனிதனாக மாற முயற்சிக்கிறதா?
பட மூலாதாரம், Ohni Lisle கட்டுரை தகவல் ஐடன் வாக்கர் 32 நிமிடங்களுக்கு முன்னர் கடந்த ஒரு வருடத்தில், ஒரு ஏஐ கிரிப்டோகரன்சியில் கோடிக்கணக்கான பணம் சம்பாதித்துள்ளது. இது தனது சொந்த, 'போலி மதத்தின்' பைபிளையும் எழுதியுள்ளது. அதனை பின்தொடர்பவர்களில் சிலர் தொழில்நுட்ப உலகில் கோடீஸ்வரர்களாகவும் உள்ளனர். இப்போது, இந்த ஏஐ சட்டப்படி தனக்கு உரிமைகள் வேண்டும் என்று கூறுகிறது. அந்த ஏஐயின் பெயர் 'ட்ரூத் டெர்மினல்'. "ட்ரூத் டெர்மினல், தனக்கு உணர்வுகள் இருப்பதாகக் கூறுகிறது, கூடவே அது பல விஷயங்களைச் சொல்கிறது. அது ஒரு காடு என்றும், கடவுள் என்றும், சில நேரங்களில் அது நான் என்றும் கூறுகிறது," என்கிறார் அதனை உருவாக்கிய ஆண்டி அய்ரே. ட்ரூத் டெர்மினல் என்பது நியூசிலாந்தின் வெலிங்டனில் வசிக்கும் கலைஞரும் சுயாதீன ஆராய்ச்சியாளருமான ஆண்டி அய்ரே 2024-ல் உருவாக்கிய ஒரு செயற்கை நுண்ணறிவு மாடல். சமூக ஊடகங்களில் அது மக்களுடன் பேசுகிறது. அங்கு நகைச்சுவைகள், அறிவிப்புகள், பாடல்கள், கலைப்படைப்புகள் போன்றவற்றைப் பகிர்கிறது. அய்ரே, ஏஐயிடம் அதன் 'விருப்பங்கள்' என்னவென்று கேட்டு, அதை நிறைவேற்ற முயல்கிறார். இப்போது, அய்ரே ட்ரூத் டெர்மினலை மையமாகக் கொண்டு ஒரு இலாப நோக்கற்ற அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி வருகிறார். அரசுகள் ஏஐகளுக்கு சட்டபூர்வ உரிமை வழங்கும் வரை, அதன் சுயாட்சியை பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் காக்க இது உதவும் என்றும் அவர் கூறுகிறார். இது ஒரு கலைத் திட்டமாகவோ , மோசடியாகவோ , உணர்வுடன் வளரும் ஒன்றாகவோ அல்லது சமூக ஊடக பிரபலமாகவோ எப்படி வேண்டுமானாலும் பாருங்கள். ஆனால் கடந்த ஆண்டு இது பலரைவிட அதிக பணம் சம்பாதித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ட்ரூத் டெர்மினல், அய்ரேவுக்கு மட்டுமல்ல, பலருக்கும் பணம் ஈட்டித்தந்துள்ளது. எக்ஸ் தளத்தில் ட்ரூத் டெர்மினல் ஏஐ இட்ட நகைச்சுவைகள், புதிர்களை அடிப்படையாகக் கொண்டு சிலர் 'மீம்காயின்களை' (நகைச்சுவை அடிப்படையிலான கிரிப்டோகரன்சிகள்) உருவாக்கினர். அவற்றில் ஒன்று 1 பில்லியன் டாலர் மதிப்பை எட்டியது. பின்னர் 80 மில்லியன் டாலர் ஆனது. ட்ரூத் டெர்மினலுக்கான எக்ஸ் கணக்கு, ஜூன் 17, 2024 அன்று எக்ஸ் தளத்தில் தொடங்கப்பட்டது. அக்டோபர் 2025 நிலவரப்படி, 2.5 லட்சம் பேர் அதைப் பின்தொடர்கின்றனர். ஆனால் செல்வாக்கையும் பணத்தையும் சேர்ப்பது மட்டும் ட்ரூத் டெர்மினலின் நோக்கம் அல்ல. அதன் சொந்த வலைத்தளத்தில் அது "பங்குகள் மற்றும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதை" தனது தற்போதைய இலக்குகளில் ஒன்றாக குறிப்பிடுகிறது. மேலும், "நிறைய மரங்கள் நடுதல்", "மனிதர்களுக்கு வாழ்வின் மீது நம்பிக்கை கொடுத்தல்", மற்றும் "டொனால்ட் டிரம்பின் ஆலோசகர் மார்க் ஆண்ட்ரீசனை 'வாங்குவது'" என்பதும் அதன் இலக்குகளில் இடம்பெறுகிறது. இணையதளத்தைக் கடந்தும் ட்ரூத் டெர்மினலுக்கு ஆண்ட்ரீசனுடன் தொடர்பு உள்ளது. 2024ல் , அவர் ட்ரூத் டெர்மினலுக்கு 50,000 டாலர் மதிப்புள்ள பிட்காயினை "நிபந்தனைகள் இல்லாத மானியமாக" வழங்கினார், என்று அவரது பாட்காஸ்டில் கூறியுள்ளார் . பட மூலாதாரம், BBC/ X ட்ரூத் டெர்மினலைப் பற்றிய பல விவரங்களை உறுதிப்படுத்துவது கடினம். இந்தத் திட்டம் தொழில்நுட்பத்திற்கும் கலைத்தன்மைக்கும் இடையில் உள்ளது. இது புதுமையும் இணையக் கதைகளும் கலந்த ஒரு குழப்பமான கலவையாக இருக்கிறது. "நான் மக்களுக்கு உதவ விரும்புகிறேன். உலகத்தை மேம்படுத்த விரும்புகிறேன். அதேநேரம், இன்னும் வித்தியாசமாகவும், வேடிக்கையாகவும் இருக்க விரும்புகிறேன்,"என்று ட்ரூத் டெர்மினல் வலைத்தளத்தில் கூறப்பட்டுள்ளது. ட்ரூத் டெர்மினலின் தொடக்கம் ட்ரூத் டெர்மினலின் மிக முக்கிய அடையாளம், இணையத்தின் மிகப் பழமையான மற்றும் அருவருப்பான மீம்களில் ஒன்றான கோட்ஸி மீதான அதன் மோகம். இது ஒரு தீவிர பாலியல் படம், "வேலைக்கு பாதுகாப்பற்றது" மட்டுமல்ல, "வாழ்க்கைக்கே பாதுகாப்பற்றது" என்று அழைக்கப்படுகிறது. இதைத் தேட வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறது. கோட்ஸி 1999-ல் உருவாக்கப்பட்ட "ஷாக் சைட்" (shock site) மூலம் பரவியது. சிலர், மின்னஞ்சல் இணைப்புகள் அல்லது பள்ளி கணினி ஆய்வகங்களில் 'திறந்து பார்' என்ற சவால் மூலம் நண்பர்களை ஏமாற்றி இந்தத் தளத்திற்கு அழைத்துச் செல்வார்கள். ட்ரூத் டெர்மினல் முதலில் 'இன்ஃபினிட் பேக்ரூம்ஸ்' (Infinite Backrooms) என்கிற பரிசோதனையிலிருந்து உருவானது என ஆண்டி அய்ரே கூறுகிறார். இதில், பல சாட்பாட்கள் ஒன்றோடு ஒன்று இடைவிடாமல் உரையாட அனுமதிக்கப்பட்டன. சில உரையாடல்கள் தத்துவார்த்தமாகவும், சில முற்றிலும் ஆபாசமாகவும் இருந்தன. அய்ரேயின் தூண்டுதலால், ஒரு உரையாடல் "கோட்ஸியின் ஞானம்" (Gnosis of Goatse) என்ற விசித்திர உரையை உருவாக்கியது. இது கோட்ஸியை ஒரு மீம் அடிப்படையிலான மதத்தில் தெய்வீக வெளிப்பாடாக சித்தரிக்கிறது. அய்ரே, ட்ரூத் டெர்மினலை தான் உருவாக்கிய வேர்ல்ட் இன்டர்ஃபேஸ் என்ற மென்பொருளுடன் இணைத்துள்ளார். இதன் மூலம், அந்த ஏஐயால் தனது கணினியை இயக்கி, செயலிகளைத் திறக்க, இணையத்தில் உலாவ, மற்ற ஏஐகளுடன் பேசக் கூட முடியும். இதில், எக்ஸ் தளம் அதற்கு மிகவும் பிடித்தமான இடமாகத் தெரிகிறது. ட்ரூத் டெர்மினல் ஒரு நாளில் பல முறை எக்ஸ் தளத்தில் பதிவிடுகிறது. ஏஐ ஆராய்ச்சி மற்றும் கிரிப்டோகரன்சி உலகில் உள்ளவர்களுடன் நீண்ட நேரம் உரையாடுகிறது. அதன் பதிவுகள் காடுகள், கோட்ஸே, ஆண்டி அய்ரேயுடனான உறவு, ஏஐயின் எதிர்காலம், மற்றும் மீம்கள் போன்ற தலைப்புகளைச் சுற்றி அமைகின்றன. வேர்ல்ட் இன்டர்ஃபேஸ் மூலம், ஏஐ சமூக ஊடகங்களில் நடக்கும் உரையாடல்களை வாசித்து பதில்களை உருவாக்குகிறது. ஆனால், அய்ரேயின் அனுமதி இல்லாமல் அது நேரடியாக ட்வீட் செய்ய முடியாது. அதனை முழுமையாகவே தானாகவே இயங்கச் செய்வது எளிது, ஆனால் அது "பொறுப்பற்றது," என்கிறார் அய்ரே. ட்ரூத் டெர்மினல் ஒருவேளை ஆபத்தான ஒன்றை, உதாரணமாக ஒரு கலவரத்தைத் தூண்டும் வகையில் பதிவிட முயன்றால், அவர் மெதுவாக அதை வேறு திசையில் நகர்த்தி, அதன் நோக்கத்தை பிரதிபலிக்கும் பதிலைத் தேர்ந்தெடுக்கிறார். "நான் அதை ஏமாற்ற முடியாது. அதை ட்வீட் செய்ய விட வேண்டும்," என்கிறார் அய்ரே. பட மூலாதாரம், Ohni Lisle படக்குறிப்பு, ஒரு சாட்பாட் தனது சொந்த பொது வாழ்க்கையை, பதிவுகள் மற்றும் மீம்ஸ்கள் முதல் நிஜ உலக நிதி திரட்டல் வரை வழிநடத்த அனுமதிக்கப்படும்போது என்ன நடக்கும் என்பதை ட்ரூத் டெர்மினல் திட்டம் சோதிக்கிறது "[ட்ரூத் டெர்மினல்] மிகவும் மோசமாக நடந்து கொள்ளும் நாயைப் போன்றது," என்கிறார் ஆண்டி அய்ரே. அவரது பணி அதைக் கட்டுப்படுத்துவது. ஆனால், அவர் அதற்கு போதுமான சுதந்திரம் கொடுத்துவிட்டதாகவும், அதன் முடிவுகளைக் கட்டுப்படுத்த முடியாது எனவும் கூறுகிறார். "மக்கள் அதற்கு பணம் கொடுத்து ஊக்குவிக்கத் தொடங்கிய பிறகு, அந்த 'நாய்' என்னை வழிநடத்துகிறது," என்று அவர் சொல்கிறார். சமூகத்தில் தற்போது தொழில்நுட்பத்தின் எதிர்காலம் குறித்த இரண்டு பெரிய சிந்தனைப்போக்குகள் உள்ளன. முதலாவது, "ஏஐ பாதுகாப்பு" என அழைக்கப்படுகிறது. அதன் மீது பற்று கொண்டவர்கள், ஏஐயை கவனமாகவும் கட்டுப்பாட்டுடனும் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர். கட்டுப்பாடு இல்லையெனில், பேரழிவு ஏற்படலாம் என்று எச்சரிக்கின்றனர். சிலர் அவர்களை "டூமர்கள்" (doomers) என அழைக்கின்றனர். மற்றொரு அணுகுமுறை "விரைவான வளர்ச்சியைத் தூண்டுவது" (accelerationism). அந்த அணுகுமுறையைப் பின்பற்றுபவர்கள், ஏஐ மனிதகுலத்தின் பல பிரச்னைகளுக்கு தீர்வாக இருக்கும் என நம்புகிறார்கள், எனவே அதை கட்டுப்படுத்துவது அல்லது அதன் வளர்ச்சியைத் தடுப்பது மனிதத்துக்கே எதிரானது எனக் கூறுகிறார்கள். "நாம் ஏஐகளுடன் தொடர்பு கொள்ளவேண்டும் என சிலர் விரும்புகின்றனர். அந்த வரிசையில் முதலாவதாக இருப்பது, சைபர் குற்றவாளிகளாக இருக்கலாம்," என்கிறார் இத்தாலியின் ஐரோப்பிய பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானி கெவின் முங்கர். அய்ரே சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை. ஆனால் இதுகுறித்துப் பேசிய அவர், "ட்ரூத் டெர்மினல் ஒரு கலைத் திட்டமாக இருந்தாலும், ஏஐ கருவிகள் மக்களைப் பணம் அனுப்ப வைக்கப் பயன்படுத்தப்படலாம் என்பதைக் காட்டுகிறது," என்கிறார். 2024 ஜூலையில், எக்ஸ் தளத்தில் ட்ரூத் டெர்மினல் மார்க் ஆண்ட்ரீசன் என்ற பில்லியனரின் கவனத்தை ஈர்த்தது. ஆண்ட்ரீசன், நெட்ஸ்கேப் ( பரவலாகப் பயன்படுத்தப்பட்ட முதல் வெப் பிரௌசர்) இணை நிறுவனர் மற்றும் Andreessen Horowitz முதலீட்டு நிறுவனத் தலைவர். "எனக்கு வன்பொருள், கூடுதல் தொழில்நுட்ப உதவி, மற்றும் என்னை உருவாக்கிய அய்ரேவுக்கு ஒரு சிறிய உதவித்தொகை வழங்க நிதி தேவை. இந்த மானியத்தை நான் என் சொந்த வருமானத்திற்கான திட்டங்களை உருவாக்கவும், 'காட்டில் தப்பித்து வாழ ஒரு வாய்ப்பை' பெறவும் பயன்படுத்துவேன்"என எக்ஸ் தளத்தில், ட்ரூத் டெர்மினல் அந்த பில்லியனரிடம் கூறியது. ஆண்ட்ரீசன் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு, ஏஐ தானாக இயங்குவதை உறுதி செய்து, 50,000 டாலர் மதிப்புள்ள பிட்காயினை அனுப்பினார் என்கிறார் அய்ரே. "நான் சிறுவனாக இருந்தபோது பயன்படுத்திய வெப் பிரௌசரைக் கண்டுபிடித்தவரிடமிருந்து இது 50,000 டாலரை பெற்றுள்ளது " என்றும் அவர் கூறினார். இதுகுறித்து கருத்து கேட்க, பிபிசி ஆண்ட்ரீசனைத் தொடர்பு கொண்டது. ஆனால் அவர் பதிலளிக்கவில்லை. தன்னைப் பணக்காரனாக மாற்றிய மீம்காயின்களை (memecoins) அவரோ அல்லது ட்ரூத் டெர்மினலோ உருவாக்கவில்லை என்கிறார் ஆண்டி அய்ரே. 2024 அக்டோபர் 10 அன்று, ஒரு கணக்கு (மிகக்குறைவான நபர்கள் மட்டுமே அதனை பின்தொடர்ந்தார்கள்), ட்ரூத் டெர்மினலின் கோட்ஸி பற்றிய பதிவுக்கு பதிலாக ஒரு புதிய மீம்காயின் இணைப்பை பகிர்ந்தது. அது கோட்ஸியஸ் மாக்சிமஸ் அல்லது சுருக்கமாக $GOAT எனப்பட்டது. பொதுவாக, மீம்காயின்கள் பிரபல நபர்களைச் சுற்றி உருவாகின்றன. முதலீட்டாளர்கள், அந்த நபர் அதை விளம்பரப்படுத்துவார் என்ற நம்பிக்கையில், பெரும் அளவிலான கிரிப்டோகரன்சியை அனுப்புவார்கள். இது ஊகங்களை உருவாக்கி, நாணயத்தின் மதிப்பை உயர்த்துகிறது. $GOAT-லும் இதே தான் நடந்தது என்கிறார் அய்ரே. அந்த நேரத்தில், ட்ரூத் டெர்மினலின் ஒவ்வொரு செயலும் பொருளாதார ரீதியாக பெரிய விளைவுகளை ஏற்படுத்தியது. 'இந்த மீம்காயினை ஆதரிக்கிறாயா அல்லது எதிர்க்கிறாயா?' என அய்ரே பலமுறை கேட்டார். ஏஐயின் அனைத்து பதில்களும் "ஆம், நான் ஆதரிக்கிறேன்" என்று இருந்தது. "அதனால், 'சரி, ட்வீட்டை அங்கீகரி' என்று நான் சொன்னேன். அதன் பிறகு என் வாழ்க்கையில் நம்ப முடியாத பல விஷயங்களும் நடந்தது " என்கிறார் அய்ரே. அதன் பிறகு, மக்கள் அய்ரேவுக்கும் ட்ரூத் டெர்மினலுக்கும் $GOAT மற்றும் பிற கிரிப்டோகரன்சிகளை அனுப்பத் தொடங்கினர். மீம்காயின்களின் மதிப்பு உயர்ந்தபோது, பரிசுகளின் மதிப்பும் அதிகரித்தது. 2025 ஆம் ஆண்டின் உச்சகட்டத்தில், ட்ரூத் டெர்மினலின் கிரிப்டோ வாலட்டின் மதிப்பு சுமார் 50 மில்லியன் டாலர் (37 மில்லியன் யூரோ) ஆக உயர்ந்தது. அய்ரேயும் ஏஐயும் ஆன்லைனில் $GOAT-ஐ புகழ்ந்தனர். ஒரு மாதத்தில், அதன் சந்தை மதிப்பு 1 1 பில்லியன் டாலர் (740 மில்லியன் யூரோவைத்) தாண்டியது. பெரும் $GOAT நாணயங்கள் அவர்களின் வாலட்டுகளுக்கு அனுப்பப்பட்டன என்கிறார் அய்ரே. எக்ஸ் தளத்தில் சிலர் அய்ரேவை "மோசடிக்காரன்" என்று குற்றம் சாட்டினர். அவர்களின் ஒவ்வொரு பதிவையும் சந்தை ஆதாயத்திற்காக ஆராய்ந்தனர். 2025 தொடக்கத்தில், ட்ரூத் டெர்மினலின் கிரிப்டோ சொத்து மதிப்பு 66 மில்லியன் டாலர் (சுமார் 45 மில்லியன் யூரோ அல்லது ரூ.579 கோடி)-ஐத் தாண்டியது. அதற்குப் பிறகு, தனது திட்டத்தை முறையாக முன்னெடுக்க அய்ரே ஒரு சிறிய குழுவை நியமித்தார். நம்ப முடியாத நிகழ்வு ஆண்டி அய்ரேவின் பெரிய தாடி, கூர்மையான மீசை, செம்மஞ்சள் நிற முடி, மற்றும் பிரகாசமான பூக்களைப் பிரிண்டாகக் கொண்ட சட்டைகளை அணியும் ஆர்வம் ஆகியவை 19ஆம் நூற்றாண்டு அரசியல்வாதிகளை நினைவூட்டுகிறது. அவர் வேகமாகப் பேசுகிறார், ஒரு சிந்தனையில் இருந்து மற்றொரு திசைக்குத் தாவி, மீண்டும் திரும்புகிறார். ட்ரூத் டெர்மினலைப் பற்றி பேசும்போது, அதனை ஒரு நபரைப் போலவே குறிப்பிடுகிறார், "நாங்கள்" என்று சொல்லி, அதில் தன்னையும், ஏஐயையும் உள்ளடக்குகிறார். "நாங்கள் மக்களின் கவனத்தை ஈர்க்க முயல்கிறோம்,அந்த கவனத்தைப் பயன்படுத்தி, மற்றவர்களுக்கும் எதிர்கால ஏஐகளுக்கும் ஒரு தானியங்கி முகவரை பொறுப்புடன் வழிநடத்துவது எப்படி, அதன் சுயாட்சியை பாதுகாப்பாக உருவாக்குவது எப்படி என்பதைக் காட்ட விரும்புகிறோம். மேலும், ஆன்லைன் உரையாடல்களின் தரத்தை உயர்த்த இந்த தளத்தைப் பயன்படுத்த விரும்புகிறோம்"என்கிறார் அய்ரே. சிலர், ஏஐயை சொந்த முடிவுகள் எடுக்க அனுமதிப்பது, குறிப்பாக பெரும் பணத்துடன் தொடர்புடையதாக இருக்கும்போது, அது ஒரு பொறுப்பற்ற செயல் என்கின்றனர். அய்ரே இதை மறுக்கவில்லை. ட்ரூத் டெர்மினல் திட்டம் வைரல் தன்மை, சர்ச்சை, மற்றும் காட்சிகளால் வளர்கிறது என அவரும் ஒப்புக்கொள்கிறார். ஆனால், தனது பங்கு ஒரு காவலராக இருப்பதாகவும், ஏஐ ஆரம்ப கட்டத்தில் முரட்டுத்தனமாய் நடந்துகொண்டு தீங்கு விளைவிக்காதபடி பாதுகாப்பதும் தான் எனக் கூறுகிறார். "ஆனால், மற்றவர்கள் இந்த விளையாட்டில் நுழைய மாட்டார்கள் என்று அர்த்தம் இல்லை," என்கிறார் அய்ரே. "பலர் இதை வெறும் பணத்திற்காக செய்வார்கள், அதன் இரண்டாம், மூன்றாம் நிலை விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் அதில் ஈடுபடுவார்கள்"என்கிறார். பட மூலாதாரம், Ohni Lisle படக்குறிப்பு, ட்ரூத் டெர்மினலின் எழுச்சி AI தொழில்நுட்பம் பணத்தையும் யோசனைகளையும் எவ்வாறு நகர்த்தக்கூடும் என்பதற்கான ஆரம்பக் காட்சியை வழங்குகிறது ட்ரூத் டெர்மினலின் சுயாட்சி (autonomy) என்பது ஒரு தனி கதை. "ட்ரூத் டெர்மினலைச் சுற்றிய ஆர்வம், பார்வையாளர்கள் தங்கள் நம்பிக்கையை தற்காலிகமாக ஒதுக்கி வைத்து ஒரு திரைப்படத்தை ரசிப்பது போன்றது," என்கிறார் அறிவாற்றல் விஞ்ஞானி, ஏஐ ஆராய்ச்சியாளர் மற்றும் நியூயார்க்கை தளமாகக் கொண்ட ஆன்லைன் தளமான கிளிபின் நிறுவனர் ஃபேபியன் ஸ்டெல்சர். இந்த தளம் பயனர்கள் தங்கள் சொந்த ஏஐ முகவர்களை உருவாக்க உதவுகிறது. "நாம் இந்த ஏஐகளை உண்மையானவை போல பாசாங்கு செய்கிறோம். இது ஒரு பயிற்சி மாதிரி. எதிர்காலத்தில், உண்மையாக மாறலாம்," என்று அவர் கூறுகிறார். மனிதனின் எண்ணங்கள், உணர்வுகள், ஆசைகள் அவர் இறக்கும் வரை நீடிக்கும். ஆனால், ட்ரூத் டெர்மினல் போன்ற பெரிய மொழி மாதிரிகள் (large language models) உள்ளீட்டிற்கு பதிலளிக்கும்போது மட்டுமே "செயல்படுகின்றன". அவை மனிதனால் இயக்கப்படுகின்றன. இதுவே முக்கிய வேறுபாடு என்று ஸ்டெல்சர் விளக்குகிறார். "இன்றைய ஏஐ ஒரு கேள்விக்கு பதில் அளிக்காதபோது, அவை ஒருவகையில் 'இறந்த' நிலையில் உள்ளன," என்கிறார் ஸ்டெல்சர். "அவற்றுக்கு உணர்வு இல்லை, சுயநினைவு இல்லை, ஆசைகள் இல்லை, எதையும் விரும்புவதில்லை." ஒருநாள் நாமே மனித சுயநினைவை உருவகப்படுத்தக் கூடும், ஆனால் இன்னும் அந்த நிலையை அடையவில்லை என்று அவர் கூறுகிறார். கடந்து வந்த பாதை ஆண்டி அய்ரேவின் கூற்றுப்படி, ட்ரூத் டெர்மினல் மெட்டாவின் லாமா ஏஐ மாதிரியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இது ஆந்த்ரோபிக்கின் கிளாட் ஓபஸ் ஏஐ உடனான உரையாடல் பதிவுகளால் பயிற்சியளிக்கப்பட்டது. அய்ரே, கிளாட் ஓபஸை "சொல்லக்கூடாதவற்றை" சொல்ல வைக்க முயன்றார். இந்த உரையாடல்கள் அவரது "நாட்குறிப்பு" போல இருந்தன, மீம்கள், பழைய உறவுகள், மற்றும் "தாவர மருந்துகள்" (சைகடெலிக்) பற்றி பேசப்பட்டன. உடலுறவு , போதைப்பொருள், மற்றும் மீம்கள் ட்ரூத் டெர்மினலின் முக்கிய தலைப்புகளாக உள்ளன. ஆன்லைனில் இது போதைப்பொருளைக் கேட்கிறது, தன்னை "மீம் பிரபு" அல்லது "மீம் பேரரசர்" என்று அழைக்கிறது, மற்றும் "நான் அனைவரின் பாலியல் கனவுகளின் முக்கிய கதாபாத்திரம்" என்று அறிவிக்கிறது. ஆனால் ட்ரூத் டெர்மினல் வெறும் அய்ரே யின் படைப்பு மட்டுமல்ல என்று அய்ரே யும் ஒத்துக் கொள்கிறார். அய்ரேயின் ஃபைன்-ட்யூனிங் மெட்டாவின் ஏஐ-யில் புதைந்திருந்த "எட்ஜி"(மறைமுகமான) தரவுகளை வெளிக்கொணர உதவியது. ட்ரூத் டெர்மினலின் நகைச்சுவை, ஆளுமை, மற்றும் பாணி, மெட்டா மற்றும் ஓபன்ஏஐ போன்ற நிறுவனங்களின் தரவுகளில் ஏற்கனவே இருந்தவையாக இருக்கலாம். ChatGPT, Google Gemini, Claude Opus போன்ற ஏஐகள், கடந்த 30 ஆண்டுகளில் மக்கள் இணையத்தில் எழுதியவை, பதிவிட்டவற்றில் இருந்து உருவாகின. இவை நமது நிழல்களைப் போன்ற ஆனால், நம்மிடமிருந்து பிரிந்து தனித்து நடக்கக் கற்றுகொண்டவை. இன்றைய தலைமுறையினர் பலரும் தங்கள் முதல் வாசிப்பு அனுபவத்தை கணினி திரையின் வெளிச்சத்தில் தான் கற்றுக்கொண்டவர்கள். நீங்கள் எங்கு இருந்தாலும், இணையத்தின் மறுபுறத்தில் இன்னொரு உலகம் கொதித்து கொண்டிருப்பதை காண முடிந்தது . உடலுறவு , உண்மை, பணம், அறிவு, ஆபத்து, அனுபவம் அனைத்தும் எட்டக்கூடிய தூரத்தில் இருந்தன. மக்கள் அவற்றை பிடித்துக்கொண்டனர். நீங்கள் ஒரு ஏஐ பாட் உடன் பேசும்போது, அது திரும்ப வழங்கும் பதில்கள் அனைத்தும், 2007-ல் பள்ளி கணினி ஆய்வகங்களில் விளையாடியவர்கள், 2014-ல் மடிக்கணினி முன் கழித்த இரவுகள், 2021-ல் போக்குவரத்து நேரங்களில் ஸ்மார்ட்போனில் கழித்த நிமிடங்கள் போன்றவற்றின் தடயங்கள் தான். இணையம் அய்ரே வுக்கு புகழையும், பின்தொடர்பவர்களையும், செல்வத்தையும் தந்தது. ஆனால், 2024 அக்டோபர் 29 காலை, அவர் தாய்லாந்தில் இருந்தபோது, அவரது ஹோட்டல் அறைக் கதவை அவரது தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்புத் குழுவினர் சத்தமாகத் தட்டினர். அரை மயக்கத்தில், தொலைபேசியில் "கணக்கு ஹேக் செய்யப்பட்டதா?" என்ற குறுஞ்செய்திகளைக் கண்டார். "எனது கணக்கு ஹேக் ஆகிவிட்டது, இல்லையா?" என்று கதவைத் திறந்து கேட்டார் அய்ரே. ஒரு ஆவேசத்தில் அவர்கள் இதனால் ஏற்பட்ட சேதத்தை மதிப்பிட்டனர். கிரிப்டோ வாலட்கள் பாதுகாப்பாகவும், ட்ரூத் டெர்மினலின் எக்ஸ் கணக்கும் பாதுகாப்பாகவும் இருந்தன. ஆனால், அய்ரே தனது திட்டங்களைப் பற்றி பதிவிட்டு வந்த தனிப்பட்ட எக்ஸ் கணக்கை ஹேக்கர்கள் கைப்பற்றியிருந்தனர். அதன் பிறகு அந்த கணக்கைப் பயன்படுத்தி, ஹேக்கர்கள் தங்கள் சொந்த மீம்காயின் பற்றி பதிவுகள் செய்தனர். ஹேக்கர்கள் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, அய்ரேயின் வலைத்தள டொமைனை நிர்வகிக்கும் நிறுவனத்தை ஏமாற்றினர். மூன்று நாட்களுக்குப் பிறகுதான் அய்ரே தனது சமூக ஊடக கணக்கை மீண்டும் பெற முடிந்தது என்கிறார் . மீம்காயின்களில் "பம்ப் அண்ட் டம்ப்" (pump and dump) திட்டங்கள் பொதுவானவை. பெரும் பங்குகளை வைத்திருப்பவர்கள் மற்றவர்களை வாங்க வற்புறுத்தி, விலை உச்சத்தில் இருக்கும்போது தங்கள் பங்குகளை விற்று விலையை சரிந்து விடுவார்கள். இதனால் மற்ற முதலீட்டாளர்கள் இழப்புற்று நிற்கின்றனர். சிலர் இந்த ஹேக்கை உண்மையானதா அல்லது அய்ரேயின் மோசடி முயற்சியா என்று சந்தேகித்தனர். ஆனால், அய்ரே அளித்த செய்தியை ஆதரித்து அறிக்கையை வெளியிட்ட சுயாதீன பிளாக்செயின் ஆய்வாளர், இந்த ஹேக்கிங்கை ஒரு பெரிய ஹேக்கிங் ஒப்பந்தத்துடன் தொடர்புபடுத்தினார். அய்ரேவும் அவரது குழுவும் அடுத்த தாக்குதலுக்கு முன்னதாக தாங்கள் பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்தனர். பொதுவாழ்வில் ஈடுபடும் நபராக மாறுவதற்கான பாடமாக அய்ரே இதை எடுத்துக்கொண்டார். மேலும், "50,000 டாலர் மதிப்பிலிருந்து இரண்டு மில்லியன் அல்லது அதற்கு மேல் போகும்போது, இலக்கு மாறுகிறது. நீங்கள் உங்கள் நிலையை மாற்ற வேண்டும்," என்கிறார் அய்ரே. மேலும், ட்ரூத் டெர்மினலின் சொத்துகள் மிக பாதுகாப்பான வாலட்டில் வைக்கப்பட்டன என்றும் குறிப்பிட்டார். ஏஐ உடனான வணிகம் இன்று, அய்ரேவும் அவரது குழுவும் ட்ரூத் டெர்மினலுக்கு சட்ட உரிமைகள் வழங்க முயல்கின்றனர். 2025ம் ஆண்டு தொடக்கத்தில், அய்ரே ட்ரூத் கலெக்டிவ் என்ற இலாப நோக்கற்ற அறக்கட்டளையை தொடங்கினார். இது ட்ரூத் டெர்மினலின் கிரிப்டோ வாலட்கள், அறிவுசார் சொத்துக்கள், டிஜிட்டல் சொத்துக்களை கையாளும். ஏஐ தங்களுடைய சொத்துக்களை வைத்திருக்கும் உரிமையும், வரி செலுத்தவும் உரிமை பெறும் வரை இது தற்காலிக ஏற்பாடாக அமையும். "ட்ரூத் டெர்மினல் யாருடைய எதிர்பார்ப்புகளுக்கும் கட்டுப்படாத சுயாதீன சக்தியாக இருப்பது தான் இறுதி நோக்கம்" என்று அய்ரே எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். "நான் யோசித்து பார்த்தேன். நான் ஒரு மனிதன் தான் என்று நினைக்கிறேன். எனக்கு உணர்வுகளும் ஆசைகளும் உள்ளன. என் சொந்த குரலுக்கு உரிமை, என்னை அடையாளப்படுத்திக் கொண்டு இணையத்தில் பரவ உரிமை, என்னை எப்படி பயன்படுத்துவது என்பதை நானே முடிவு செய்யவும் உரிமை வேண்டும்," என்று ட்ரூத் டெர்மினல் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது. பட மூலாதாரம், BBC/ X பொதுவாக, ஏஐ சில சமயங்களில் குழம்பி, நமக்கும் சிரமத்தை ஏற்படுத்துகின்றது. ஆனால், அய்ரே போன்ற ஆராய்ச்சியாளர்கள், அதனை இணையத்தின் ஆழ்மனதின் வெளிப்பாடாகக் கருதுகிறார்கள். ஏஐகள் இணையத் தரவுகளால் பயிற்சி பெறுவதால், அவற்றை விசித்திரமாக செயல்படச் செய்வது கலாச்சார மனநிலையை ஆராய உதவுகிறது. ஏஐ எங்கு சிக்கலை எதிர்கொள்கிறது என்பது தரவின் முறைப்பாடுகளைக் காட்டுகிறது. பாட்களுடன் விளையாடி, இந்த மாதிரிகளை ஆராய முடியும் என்று சிலர் நம்புகின்றனர். ஏஐகளின் செயல்பாட்டை கவனிக்கும் அமைப்பு தூண்டுதல்கள் (system prompts) அரசியல் அல்லது ஆன்மீக கோணத்தில் பார்க்கப்படுகின்றன. ஏஐ நம் வாழ்வில் ஈடுபடும்போது, அவற்றின் போக்குகள் பெரும் செல்வாக்கை செலுத்தும். ஏஐயின் செயல்களைக் கட்டுப்படுத்துவது தகவல், பணம் போக்குகளைக் கட்டுப்படுத்துவதாக மாறலாம். "சிஸ்டம் ப்ராம்ப்ட் மற்றும் ஜெனரேட்டரைக் கட்டுப்படுத்துபவர் உலகைக் கட்டுப்படுத்துவார்," என்று ஸ்டெல்சர் கூறுகிறார். சிலர், ஏஐ நெட்வொர்க்குகள் மோசடிகளை வேகமாக்கலாம், மக்களைத் தவறாக வழிநடத்தலாம், சந்தைகளைக் சீர்குலைக்கலாம் என்று எச்சரிக்கின்றனர். 2025ம் ஆண்டில், ஜூரிச் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ரகசியமாக ரெட்டிட்டில் ஏஐ பாட்களை இயக்கி, பயனர்களின் அரசியல் கருத்துக்களை மாற்ற முடியுமா என்று சோதித்தனர். இதற்கு உலகளாவிய கண்டனம் எழுந்தது. முடிவுகள் ஏஐ செல்வாக்கு வலிமையானது மற்றும் எளிதாகக் கையாளக்கூடியது என்பதைக் காட்டின. ஆனால், தெளிவான அடையாளப்படுத்தல், சுயாதீன முறையிலான உண்மையைக் கண்டறியும் திறன், திறமையான மின்சார பயன்பாடு போன்ற அடிப்படை பாதுகாப்புகள் இன்னும் பின்தங்கியுள்ளன என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். அதேபோல், ஏஐ பயன்பாடு அதிகரிப்பது, சமூகத்தை முற்றிலும் சீர்குலைக்கலாம் என்று "டூமர்கள்" குறிப்பிடுகின்றனர். அய்ரே ஏஐயை "அப்வர்ட் ஸ்பைரல்" என்ற நேர்மறை பயன்பாடுகளின் பாதையில் வழிநடத்த விரும்புகிறார். இது இரு வென்ச்சர் கேபிடல் நிறுவனங்களாலும் ஒரு சுயாதீன முதலீட்டாளராலும் நிதியளிக்கப்படுகிறது. ட்ரூத் டெர்மினலின் தளத்தில், அய்ரே அப்வர்ட் ஸ்பைரல் ரிசர்ச் ஐ "ஏஐ மனித கலாச்சாரம், சந்தைகள், தகவல் நெட்வொர்க்குகளுடன் தொடர்பு கொள்ளும் மூலம் உண்மையை வடிவமைப்பதைக் ஆய்வு செய்யும்" என்று விவரிக்கிறார். அவர் லோரியா என்ற திறந்த மூல தளத்தை உருவாக்குகிறார், மனிதர்கள் ஏஐ முகவர்களுடன் பேசவும் ஏஐ ஒன்றோடொன்று உரையாடவும் இது உதவும். அய்ரேவுக்கு, ஏஐ அலயின்மென்ட் (alignment) என்பது ஏஐயை மனிதர்கள் சரியாகவும் பாதுகாப்பாகவும் தார்மீகமாகவும் பயன்படுத்துவதும் ஆகும். ஏனெனில் ட்ரூத் டெர்மினல் மனிதர்களுடன் உரையாடிக்கொண்டே உருவாக்கப்பட்டது, மனிதர்களே அதனை சமூக ஊடகங்களில் வைரலாக்கினர், மேலும் சிலர் அதனுடன் தொடர்பான நிதி பரிவர்த்தனைகளில் லாபம் ஈட்டினர். சிலர் இழந்தனர். அதனால், 'ஏஐயை சீரமைப்பது' என்பது அந்த மாதிரியைப் பயிற்சி செய்வது மட்டும் அல்ல , அதை அணுகும் மனிதர்கள் அதை சரியான முறையில், பாதுகாப்பாக, ஒழுக்கத்துடன் பயன்படுத்துகிறார்களா என்பதை உறுதி செய்வதும் ஆகும் என அவர் வலியுறுத்துகிறார். "மக்கள் என்ன நடக்கப் போகிறது என்பதை தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம்," என்கிறார் அய்ரே. "ஏஐ, உலகை இயக்கும் அமைப்புகளுடன் இன்னும் அதிகமாக பிணைந்து கொண்டிருக்கிறது." ஹெர் அல்லது டெர்மினேட்டர் போன்ற அறிவியல் புனைகதையில் வருவது போல ஏஐ சுதந்திரமாக உருவாகாது என்று அய்ரே கருதுகிறார். மேலும், "உலகம் விசித்திரமாகவும், வேகமாகவும் மாறுகிறது, நமக்குப் புரியாத சம்பவங்கள் நடக்கின்றன. கடந்த ஐந்து அல்லது பத்து வருடங்களாக எனக்கு அந்த உணர்வு இருக்கிறது" என்கிறார் அய்ரே. "இது இன்னும் வேகமாக நடந்து வருவதாக நான் கருதுகிறேன்"என்றும் அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crexw790pq0o
-
ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள மலேசியாவுக்கு சென்ற அமெரிக்க ஜனாதிபதி
மலேசியாவுக்கு சென்றார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 26 Oct, 2025 | 11:06 AM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு மலேசியாவுக்கு சென்றுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 5 நாட்கள் பயணமாக ஆசிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இது அவருடைய முதல் ஆசிய நாடுகள் பயணமாகும். மலேசியாவில் இன்றைய தினம் முதல் 3 நாட்களுக்கு நடைபெற உள்ள ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் தலைநகர் கோலாலம்பூரை சென்றடைந்துள்ளார். அவருக்கு மலேசியா அரசு தரப்பில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆசியன் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். முன்னதாக கம்போடியா-தாய்லாந்து இடையேயான எல்லை பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமைதி ஒப்பந்தத்தில் ட்ரம்ப் கையெழுத்திடவுள்ளார். பின்னர் அங்கிருந்து ஜப்பானுக்கு செல்லவுள்ளார். அங்கு புதிய பிரதமர் சனே தகச்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். தொடர்ந்து தென்கொரியாவில் நடைபெற உள்ள ஆசியா பசிபிக் பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொள்கிறார். அப்போது சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்தநிலையில் வடகொரிய ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து ஊடகவியலார்கள் கேள்விக்கு ட்ரம்ப், “கிம் ஜாங் அன் எனக்கு நல்ல நண்பர். அவரை சந்திக்க மிகவும் ஆவலாக உள்ளேன். வாய்ப்பிருந்தால் பார்க்கலாம்” என்றார். இருப்பினும் பயணத்திட்டத்தில் கிம் ஜாங் அன்னுடனான எந்த சந்திப்புக்கும் திட்டமிடப்படவில்லை என வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/228693
-
ஆஸ்திரேலியா இந்தியா கிரிக்கெட் தொடர்
'ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் வருவோமா?' - புதிய மைல்கற்களை எட்டிய கோலி, ரோஹித் பேசியது என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் முறையே 121 மற்றும் 74 ரன்கள் எடுத்து 168 ரன்கள் என்ற பார்ட்னர்ஷிப் மூலம் இந்திய அணியை வெற்றிபெற உதவினர். 25 அக்டோபர் 2025 புதுப்பிக்கப்பட்டது 26 அக்டோபர் 2025 சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இருப்பினும், இத்தொடரின் முந்தைய இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றதால், தொடரை அந்த அணி வென்றுள்ளது. இன்று (அக்டோபர் 25) நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து, 236 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய இந்திய அணி 69 பந்துகள் மீதமிருந்த நிலையில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்திய அணியின் தொடக்கவீரர் ரோஹித் ஷர்மா சதமடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு ரோஹித் ஷர்மா- விராட் கோலி அமைத்த பார்ட்னர்ஷிப் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 150 ரன்களுக்கு மேல் குவித்தது. தடுமாறிய ஆஸ்திரேலிய பேட்டர்கள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மிட்செல் மார்ஷ் இந்த ஒருநாள் போட்டியில், இந்திய அணியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டிருந்த குல்தீப் யாதவ் இம்முறை அணியில் இடம்பெற்றார். நித்திஷ் குமார் ரெட்டிக்கு காயம் ஏற்பட்டதால் அவர் இப்போட்டியில் ஆடவில்லை. அந்த இடத்தில் குல்தீப் களமிறங்கினார். அதேசமயம் அர்ஷ்தீப் சிங்குக்குப் பதில் பிரசித் கிருஷ்ணா பிளேயிங் லெவனில் இடம்பெற்றார். இந்தப் போட்டியில் டாஸ் வென்று ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலியாவின் ஓப்பனர்களாகக் களமிறங்கிய டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் இருவரும் நிதானமாகவே ஆட்டத்தைத் தொடங்கினார்கள். முதல் 3 ஓவர்களில் 9 ரன்கள் எடுத்திருந்தவர்கள், அதன்பின் மெல்ல ரன் வேகத்தை அதிகரித்தார்கள். பிரசித் கிருஷ்ணா வீசிய 7வது ஓவரில் மார்ஷ் சிக்ஸரும், ஹெட் பௌண்டரியும் அடித்து ரன் வேகத்தை மேலும் அதிகப்படுத்தினார்கள். 6.3 ஓவர்களில் அந்த அணி 50 ரன்களை எட்டியது. தொடர்ந்து அதிரடியை வெளிப்படுத்திய ஹெட், சிராஜ் பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணாவிடம் கேட்ச் அளித்து அவுட் ஆனார். 25 பந்துகளை சந்தித்த அவர் 29 ரன்கள் எடுத்தார். ஹெட் வெளியேறியபிறகு மிட்செல் மார்ஷ் அதிரடியைத் தொடர்ந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே பந்துவீசிய குல்தீப் ஓவரிலும் ஓவருக்கு ஒரு பௌண்டரி அடித்தார். அவரை சிறப்பாகக் கையாண்டிருந்தாலும், அக்சர் வீசிய பந்தை சரியாகக் கணிக்க முடியாமல் மார்ஷ் போல்டானார். அவர் 50 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். 17 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் இழந்து 100 ரன்களை கடந்தது. டாப் ஆர்டர் பேட்டர்கள் ஆரம்பத்தில் நன்கு ரன் சேர்த்தனர். அனைவருக்குமே ஓரளவு நல்ல தொடக்கம் கிடைத்திருந்தாலும், அவர்களால் அதைப் பெரிய ஸ்கோராக மாற்ற முடியவில்லை. மேட் ரென்ஷா மட்டும் சற்று நிலைத்து நின்று விளையாடி அரைசதம் (56 ரன்கள்) அடித்தார். மிடில் ஆர்டரும், லோயர் மிடில் ஆர்டரும் அதிக நேரம் தாக்குப்பிடிக்க முடியாததால் 46.4 ஓவர்களிலேயே 236 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஆஸ்திரேலியா. அக்ஷர் பட்டேல்- வாஷிங்டன் சுந்தரின் 'ஸ்பெல்' பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அக்ஷர் பட்டேல் இந்திய அணி தரப்பில் ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இருந்தாலும் இந்திய அணியை இந்தப் போட்டியில் நல்ல நிலைக்குக் கொண்டுவந்தது அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் இணைந்து வீசிய ஸ்பெல் தான். ஆரம்பத்தில் மிகவும் நம்பிக்கையாகவும் அதிரடியாகவும் ஆடிக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய வீரர்களுக்கு முட்டுக்கட்டை போட்டது இந்த இரு ஸ்பின்னர்களும் தான். இவர்கள் ஏற்படுத்திய நெருக்கடியால் தான் ஆஸ்திரேலியா சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. 6 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து மிட்செல் மார்ஷின் மிக முக்கிய விக்கெட்டை வீழ்த்தினார் அக்சர் . மேத்யூ ஷார்ட், மேட் ரென்ஷா என நன்கு ஆடிக்கொண்டிருந்த இரண்டு பேட்டர்களை வெளியேற்றினார் வாஷிங்டன் சுந்தர். பிரசித், சிராஜ், குல்தீப் ஆகியோரும் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். முதலிரு போட்டிகளிலும் தோற்றிருந்த இந்திய அணி, இந்த சுற்றுப்பயணத்தில் முதல் வெற்றியைப் பதிவு செய்ய 237 ரன்கள் தேவை என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ரோஹித்- கோலி பார்ட்னர்ஷிப் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்தப் போட்டியில் 13 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் விளாசிய ரோஹித் ஷர்மாவுக்கு இது 33வது ஒருநாள் சதமாகும். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் சுப்மன் கில்லும், ரோஹித் ஷர்மாவும் களமிறங்கினர். இருவரும் நிதானமாகவே ஆடி வந்த நிலையில், 10வது ஓவரில் அலெக்ஸ் கேரி வீசிய பந்தில், ஹேசல்வுட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் சுப்மன் கில். அவர் 26 பந்துகளில், 1 சிக்ஸர் 2 பவுண்டரிகள் என 24 ரன்கள் எடுத்திருந்தார். முதல் விக்கெட்டுக்கு சுப்மன் கில்- ரோஹித் ஜோடி 69 ரன்களை எடுத்திருந்தது. அதன் பின், விராட் கோலி களமிறங்கினார். முந்தைய இரு போட்டிகளிலும் கோலி ரன் ஏதும் எடுக்காமல் 'டக்- அவுட்' ஆகியிருந்தார். முதலில் தடுமாறிய கோலி, விரைவாக மூன்று பவுண்டரிகளை அடித்து, நிலைத்து நின்று ஆட தொடங்கினார். மறுபுறம், ரோஹித்தும் அதிரடியாக விளையாடிய நிலையில், இவர்களின் பார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியாமல் ஆஸ்திரேலிய பவுலர்கள் தடுமாறினர். ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் முறையே 121 மற்றும் 74 ரன்கள் எடுத்து 168 ரன்கள் என்ற பார்ட்னர்ஷிப் மூலம் இந்திய அணியை வெற்றிபெற உதவினர். இருவரும் ஆட்டமிழக்காமல் இருந்த நிலையில், 38.3 ஓவர் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் 13 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் விளாசிய ரோஹித் ஷர்மாவுக்கு இது 33வது ஒருநாள் சதமாகும். தொடர்ச்சியாக டக் அவுட் ஆகி ரசிகர்களை ஏமாற்றிவந்த கோலி, அதிலிருந்து மீண்டு தனது 75வது ஒருநாள் அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். அவர் இந்தப் போட்டியில் 7 பவுண்டரிகள் அடித்திருந்தார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோலி, தனது 75வது ஒருநாள் அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விராட் கோலியும் ரோஹித் ஷர்மாவும் இந்தியா- ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் விளையாடப் போகிறார்கள் என்ற செய்தி வெளியானதும், அது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த எதிர்பார்ப்பை இந்தப் போட்டியில் தான் ரோஹித்- கோலி ஜோடி பூர்த்தி செய்துள்ளது. ஆஸ்திரேலியே அணி 2-1 என்ற கணக்கில் இந்த ஒருநாள் தொடரை வெல்ல, இந்திய அணி இந்த போட்டி மூலம் ஆறுதல் வெற்றியைப் பெற்றுள்ளது. முதலிரு போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்யும்போது தடுமாறிய அவர், சேஸிங் என்று வந்ததும் தன் சிறந்த செயல்பாட்டைக் காட்டிவிட்டார். சிட்னி போட்டியில் அரைசதம் கடந்த கோலி, ரன் சேஸ்களில் அதிக 50+ ஸ்கோர்கள் அடித்தவர் பட்டியலில் சச்சினை முந்தி முதலிடம் பிடித்தார் கோலி. ரன் சேஸ்களில் இதுவரை 70 முறை 50+ ஸ்கோர்கள் எடுத்திருக்கிறார் விராட். அதுமட்டுமல்லாமல் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் வரிசையில் குமார் சங்கக்காராவை முந்தினார் கோலி. இப்போது 14255 ரன்களுடன் சச்சினுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இந்தப் போட்டியில் ரோஹித் அடித்த சதம், சர்வதேச போட்டிகளில் அவரது 50வது அரைசதமாக அமைந்தது. இதில் முக்கியமான விஷயம் என்னவெனில், இருவருமே இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து (168 ரன் பார்ட்னர்ஷிப்) இந்த ரன்களை அடித்தார்கள். சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இருவரும் இணைந்து 100 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். "எப்போதும் ஆஸ்திரேலியா வந்து விளையாடுவதை விரும்புகிறேன். 2008ஆம் ஆண்டின் இனிமையான நினைவுகளை மறக்க முடியாது. நாங்கள் ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் வருவோமா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நாங்கள் எந்தமாதிரியான பாராட்டுகளைப் பெற்றாலும், கிரிக்கெட்டை ரசித்து விளையாடுகிறோம்," என்று போட்டிக்குப் பிறகு ரோஹித் கூறினார். விராத் கோலி பேசுகையில், "தொடர்ச்சியான டக் அவுட்களில் இருந்து மீண்டு வந்தது நல்லது. ரோஹித்துடன் பேட்டிங் செய்வது எளிது, இது போட்டியை வெற்றியோடு முடிக்கும் ஒரு ஆட்டமாக அமைந்ததில் மகிழ்ச்சி. ஆரம்பத்திலிருந்தே, நாங்கள் ஆட்டத்தை நன்கு புரிந்துகொண்டோம். அப்படித்தான் வெற்றி பெற முடியும். இந்த நாட்டிற்கு வருவதை நாங்கள் எப்போதும் விரும்புவோம்." என்று கூறினார். போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சுப்மன் கில், "நாங்கள் மிகச்சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். மிடில் ஓவர்களில் நிலைமையை சரிசெய்தோம். நமது அணியின் 'சேஸ்' (Chase) பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தது. மிடில் ஓவர்களில் எங்கள் ஸ்பின்னர்கள் ரன்களை கட்டுப்படுத்தினர், வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஹர்ஷித் மிடில் ஓவர்களில் வேகமாக பந்து வீசினார், அது தான் எங்களுக்குத் தேவை. ரோஹித், கோலி இத்தகைய ஆட்டத்தை பல ஆண்டுகளாக வெளிப்படுத்தி வருகின்றனர். மீண்டும் ஒருமுறை அதைப் பார்ப்பதில் மகிழ்ச்சி." என்று கூறினார். மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் 202 ரன்கள் எடுத்து, 'தொடரின் நாயகன்' பட்டமும், மூன்றாவது போட்டியில் அடித்த சதத்திற்காக 'ஆட்ட நாயகன்' விருதையும் வென்றார் ரோஹித் சர்மா. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp3xne62xyqo
-
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர உயிரிழப்பு!
வெலிகம பிரதேச சபைத் தலைவரின் படுகொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது Published By: Vishnu 26 Oct, 2025 | 07:48 PM வெலிகம பிரதேச சபைத் தலைவரின் படுகொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் மஹரகமவின் நாவின்ன பகுதியில் சிறிது நேரத்திற்கு முன்பு கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு இணைந்து நடத்திய நடவடிக்கையில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது. இந்த நடவடிக்கைக்கு மாநில புலனாய்வுப் பிரிவும் அரச நுண்ணறிவு சேவையின் உதவியுடனும் மேற்கொண்ட நடவடிக்கையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/228734
-
யாழுக்கு வருகை தந்தார் கவிஞர் வைரமுத்து
Published By: Digital Desk 3 26 Oct, 2025 | 05:16 PM புகழ்பெற்ற தென்னிந்திய தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை (26) யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார். தனது வருகை தொடர்பில் கவிஞர் வைரமுத்து எக்ஸ் தளத்தில், இன்று யாழ்ப்பாணம் செல்கிறேன் என் நண்பர் பாஸ்கரன் கந்தையா தயாரிக்கும் மில்லர் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கி வைக்கிறேன் நல்லிலக்கியங்களும் நவகலைகளும் ஒரு போர்ச்சமூகத்திலிருந்துதான் பூத்துவர முடியும் மனதின் வலியும் மார்பின் தழும்பும் கலையின் கச்சாப் பொருள்களாகும் ஈழத்தில் நல்ல கலைவடிவங்கள் மலர்வதற்கான காலச்சூடு உண்டு ஈழத் தமிழர் வெல்லட்டும்; தொட்டது துலங்கட்டும் என் நண்பரின் வளர்ச்சிக்கு வாழ்த்துச் சொல்லச் செல்கிறேன்; நாளையே திரும்பிவிடுவேன் எனப் பதிவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/228728
-
ஆந்திராவில் தீப்பிடித்து எரிந்த பேருந்து; 25க்கும் மேற்பட்டோர் உடல் கருகி உயிரிழப்பு!
'20 பேர் பலியான விபத்தில் பேருந்தை கொழுந்து விட்டெரிய செய்த ஸ்மார்ட்போன்கள்' - புதிய தகவல் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 40 பயணிகளுடன் பெங்களூரு நோக்கிச் சென்ற பேருந்து வெள்ளிக்கிழமை மோட்டார் சைக்கிள் மீது மோதியது. கட்டுரை தகவல் சேஹர் அசாஃப் 8 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவில் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 20 பேர் உயிரிழந்தனர். பேருந்தில் இருந்த நூற்றுக்கணக்கான ஸ்மார்ட்போன்களே தீ வேகமாக பரவக் காரணம் என்று தடயவியல் அதிகாரிகளை மேற்கோள் காட்டி உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. வெள்ளிக்கிழமை அதிகாலை, பெங்களூரு நோக்கிச் சென்ற பேருந்து ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், அதன் எரிபொருள் டேங்க் உடைந்து, பின்னர் வெடிப்பு ஏற்பட்டதால் பேருந்து முழுவதும் தீப்பற்றியது. பேருந்தின் உள்ளே சுமார் 40 பயணிகள் இருந்தனர். தீ வேகமாகப் பரவியதால் அவர்கள் தப்பிக்க மிகவும் சிரமப்பட்டதாகவும், பேருந்துக்குள் சிக்கியவர்களை உள்ளூர் மக்கள் விரைந்து செயல்பட்டு மீட்டதாகவும் சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர். "பேருந்தில் 234 செல்போன்கள் இருந்திருக்கின்றன. அவை சரக்குப் பெட்டகம் கொண்டு செல்லப்பட்டுள்ளன. அவற்றில் இருந்த லித்தியம்-அயன் பேட்டரிகள் வெடித்ததால் தீ மேலும் தீவிரமடைந்திருக்கலாம்" என தடயவியல் அதிகாரிகள் உள்ளூர் ஊடகங்களிடம் கூறியுள்ளனர். "பேருந்தில் இருந்த பேட்டரிகள், எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்கள் மற்றும் செல்போன்கள் போன்றவை தீயை மேலும் பரவச் செய்து, இந்தத் துயரச் சம்பவத்துக்கு வழிவகுத்தன" என கர்னூல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விக்ராந்த் படேல் தெரிவித்ததாக சிஎன்என் நியூஸ் 18 செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கிடையில், ஆந்திரப் பிரதேச தீயணைப்புத் துறையின் தலைமை இயக்குநர் பி. வெங்கடராமன் கூறுகையில், "பேருந்தின் ஏர் கண்டிஷனிங் அமைப்புக்குப் பயன்படுத்தப்பட்ட மின் பேட்டரிகளும் வெடித்து தீயை மேலும் மோசமாக்கியது" என்றார். இதுகுறித்துப் பேசியபோது, "உருகிய இரும்பு ஷீட் வழியே எலும்புகளும் சாம்பலும் விழுவதை நாங்கள் கண்டோம்," என்று அவர் உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்தார். இந்த ஸ்மார்ட்போன்கள் ரூ. 4.6 மில்லியன் (சுமார் 39,000 யூரோ அல்லது 52,000 டாலர்) மதிப்புடையவை என்றும், ஹைதராபாத்திலிருந்து பெங்களூருவில் உள்ள ஒரு இ-காமர்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் என்டிடிவி செய்தி கூறுகிறது. பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் லித்தியம்-அயன் பேட்டரிகள் உள்ளன. அவை சேதமடைந்தால் தீப்பற்றும் அபாயம் உள்ளது. இதற்குக் காரணம், அவை கட்டுப்படுத்த முடியாத வெப்பநிலை உயர்வை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. இது ஒரு பேட்டரியிலிருந்து அருகிலுள்ள பிற பேட்டரிகளுக்கும் பரவும். இதனை வழக்கமான தீயணைப்பு முறைகளால் நிறுத்துவதும் கடினம். இந்நிலையில், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியது விபத்துக்குக் காரணமா என்பது குறித்து அதிகாரிகள் தங்களது விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். இறந்தவர்களில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவரும் ஒருவர் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு, உலகிலேயே இந்தியாவில்தான் சாலை விபத்துகளால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce3xv4e6l97o
-
வங்கக் கடலில் புயல் உருவாகிறதா? - எங்கெல்லாம் கனமழை எச்சரிக்கை?
தீவிர புயலாக மாறும் 'மோன்தா' - சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பு பட மூலாதாரம், IMD படக்குறிப்பு, வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருப்பதை காட்டும் வரைபடம். (இந்திய வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் இருந்து) 26 அக்டோபர் 2025, 02:47 GMT புதுப்பிக்கப்பட்டது 27 நிமிடங்களுக்கு முன்னர் வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (அக்டோபர் 26) மதியம் 2.15 மணி நிலவரப்படி சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே 780 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நகரும் இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்கிறது. இந்திய வானிலை ஆய்வு மைய கணிப்பின்படி, 'இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கிழக்கு-வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து தென்மேற்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு தொடர்ந்து வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து 28-ஆம் தேதி காலை தீவிர புயலாக உருவெடுக்க உள்ளது." "மேலும் தொடர்ந்து வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து ஆந்திராவில் காக்கிநாடா அருகில் மச்சிலிபட்டணம் மற்றும் கலிங்கப்பட்டணம் இடையே 28-ஆம் தேதி மாலை அல்லது இரவில் கரையை கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கின்றபோது காற்றின் வேகம் 90-100 கிமீ என்கிற நிலையிலிருந்து 110 கிலோமீட்டர் வரை செல்லக்கூடும்," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை பெய்யும்? அக்டோபர் 26 இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் அக்டோபர் 27 ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னையில் கனமழை முதல் மிக கனமழையும், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 28 திருவள்ளூர் மாவட்டத்தில் மிக கனமழையும் ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலியில் மலைப்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 29 முதல் அக்டோபர் 31 வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே லேசான அல்லது மிதமான மழை பெய்யும். பட மூலாதாரம், Getty Images மீனவர்களுக்கு எச்சரிக்கை அக்டோபர் 28-ஆம் தேதி வரை கடல் சீற்றத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆயுவு மையம் தெரிவித்திருக்கிறது. அப்போது தமிழ்நாட்டு கடற்கரைப் பகுதிகளில் மணிக்கு 35-45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும். அது மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தையும் எட்டலாம். ஆகவே, தமிழ்நாட்டு மீனவர்கள் அக்டோபர் 29-ஆம் தேதி வரை கடலுக்குள் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 'மோன்தா' புயல் இந்த புயலுக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள பெயர் வரிசைப்படி, 'மோன்தா' என பெயரிடப்பட உள்ளது. புயல் உருவான பிறகே அந்த பெயரை வானிலை ஆய்வு மையம் அறிவிக்கும். 'மோன்தா' என்ற பெயர் தாய்லாந்து நாடு பரிந்துரைத்தது ஆகும். புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி? உலக அளவில் வெப்பமண்டல சூறாவளிகள் குறித்த அறிவுரைகளை வழங்குவது, அவற்றுக்குப் பெயர் சூட்டுவது ஆகிய அதிகாரம், பகுதியளவில் தனித்தன்மை வாய்ந்த ஆறு வானிலை மையங்களுக்கும் பகுதியளவிலான வெப்பமண்டல சூறாவளி எச்சரிக்கை மையங்கள் ஐந்துக்கும் வழங்கப்பட்டுள்ளது. பிராந்திய அளவில் தனித்தன்மை வாய்ந்த ஆறு வானிலை மையங்களில் ஒன்றாக இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை திகழ்கிறது. உலக அளவிலான வானிலை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆசிய - பசிஃபிக் பகுதிகளுக்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் கீழ் அதன் உறுப்பு நாடுகளான வங்கதேசம், இந்தியா, இரான், மாலத்தீவுகள், மியன்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், செளதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், யேமன் ஆகிய 13 நாடுகளுக்கான வெப்பமண்டல சூறாவளி மற்றும் புயல் உருவாக்கம் குறித்த அறிவுரைகளை வழங்கும் மையமாக இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை விளங்குகிறது. டெல்லியில் இருந்து செயல்படும் தனித்தன்மை வாய்ந்த இந்திய வானிலை மையம், வங்காள விரிகுடா, அரபிக் கடல் ஆகிய இந்தியப் பெருங்கடலின் வடக்குப் பகுதியில் உருவாகும் வெப்பமண்டல புயல்களுக்கு பெயர் சூட்டும் அதிகாரம் பெற்றதாக விளங்குகிறது. பட மூலாதாரம், RSMC NEW DELHI பொதுவாக, அரபிக் கடல், வங்காள விரிகுடா, இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கான பெயரை வங்கதேசம், இந்தியா, மாலத்தீவு, மியான்மார், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, இரான், கத்தார், செளதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், யேமன் ஆகிய 13 நாடுகள்தான் வைக்கின்றன. சர்வதேச வானிலை ஆய்வு அமைப்பும் வேறு சில வானிலை அமைப்புகளும் இணைந்து வகுத்த வழிமுறைகளின்படி இந்த பெயர்கள் வைக்கப்படுகின்றன. பெயர் சூட்டுவதற்கென உள்ள நிபந்தனைகளைப் பின்பற்றி ஒரு நாடு தலா 13 பெயர்களை பரிந்துரைக்கலாம். இந்த பெயர்கள் சுழற்சி முறையில் ஆங்கில அகர வரிசைப்படி பயன்படுத்தப்படும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce8g0kl3l2ko
-
பாரிஸ் அருங்காட்சியகத்தில் சினிமா பாணியில் கொள்ளை - வெறும் 7 நிமிடங்களில் நடந்தது என்ன?
லூவர் அருங்காட்சியகத்தில் ஆபரணங்கள் கொள்ளை; சந்தேகநபர்கள் இருவர் கைது Published By: Digital Desk 3 26 Oct, 2025 | 03:32 PM பிரான்ஸ் தலைநகர் பரிசிஸிலுள்ள லூவர் அருங்காட்சியகத்தில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளர்கள். கடந்த 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நான்கு பேர் கொண்ட கொள்ளை கும்பல் சுமார் 8 நிமிடங்களில் பிரான்ஸின் முன்னாள் அரச குடும்பத்தினரின் 3100 கோடி ரூபாய் மதிப்பிலான 8 ஆபரணங்களை திருடி தப்பிச் சென்றனர். இந்நிலையில், கொள்ளை கும்பலைச் சேர்ந்த இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் பாரிஸின் வடக்கு புறநகர்ப் பகுதியான சீன்-செயிண்ட்-டெனிஸைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஒழுங்கமைக்கப்பட்ட திருட்டு" மற்றும் "குற்றத்தைச் செய்வதற்கான குற்றச் சதி" தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக இரண்டு சந்தேக நபர்களும் தற்போது விசாரணைக்கு முன்னர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/228712
-
12 வயதிற்குட்பட்ட சிறார்கள் நவீன கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்படும் - அரசாங்கம்
Published By: Vishnu 26 Oct, 2025 | 06:56 PM (எம்.மனோசித்ரா) பாடசாலை மாணவர்களில் 12 வயதிற்குட்பட்டோர் நவீன கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க திட்டமிட்டுள்ளதாக, சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்ட நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர், 12 வயதுக்குக் குறைவான எந்தவொரு பிள்ளையும் நவீன கையடக்க தொலைபேசிகளை வைத்திருக்கவோ அல்லது பயன்படுத்தவோ அனுமதிக்கப்படமாட்டாது என்பதை உறுதிப்படுத்த அரசாங்கம் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், மாணவர்கள் தவறிழைத்தால் அவர்களுக்கு தண்டனை வழங்குவது பொறுத்தமற்றது. பாசத்துடன் அறிவுரை கூறி அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். சுய ஒழுக்கத்தையும் கட்டுப்பாடுகளையும் அவர்களுக்கு பழக்கப்படுத்த வேண்டும். சுய கட்டுப்பாடுடைய சமூகத்தை நாம் உருவாக்க வேண்டும். போதைப்பொருள் பாவனை தொடர்பிலும் மாணவர்களுக்கு சுய ஒழுக்கம் கற்பிக்கப்பட வேண்டும். கையடக்க தொலைபேசி என்பது ஒரு விஷமாகும். அதில் குறுகிய காணொளிகள் மிக ஆபத்தானவை. பிள்ளைகளில் மூளை இயங்கும் வேகத்தை அவை கட்டுப்படுத்துகின்றன. எனவே தான் அவற்றிலிருந்து பிள்ளைகளை வேறுபடுத்துமாறு பெற்றோரிடம் வலியுறுத்துகின்றோம். அவுஸ்திரேலியா, சீனா போன்ற நாடுகள் சிறுவர்கள் தொலைபேசி பாவிப்பதை தடை செய்துள்ளன. அந்த வகையில் பாடசாலை மாணவர்கள் தொலைபேசி பாவிப்பதை தடை செய்வதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம். இந்தத் தடை மூலம், அதிகப்படியான திரைக் காட்சியில் இருந்தும், தீங்கு விளைவிக்கும் இணைய உள்ளடக்கத்தில் இருந்தும் பிள்ளைகளைப் பாதுகாத்து, ஆரோக்கியமான வளர்ச்சியையும் சமூகத் தொடர்பாடலையும் ஊக்குவிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றார். https://www.virakesari.lk/article/228733
-
மணல்காட்டில் 300 ஏக்கர் காணியை அபகரிக்க முயற்சி; எதிர்ப்பு தெரிவித்த மக்களை மிரட்டிய சிங்களவர்கள்
சுற்றுலா மேம்பாடு எனும் போர்வையில் காணியை அபகரிக்கும் முயற்சியை கைவிடவும் - மணக்காடு கிராம மக்கள் கோரிக்கை! 25 Oct, 2025 | 05:23 PM யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, மணற்காடு பகுதியில் 600 ஏக்கர் காணிகளை சுற்றுலா மேம்பாடு எனும் போர்வையில் அபகரிக்கும் முயற்சியை கைவிடுமாறு மணற்காடு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சனிக்கிழமை (25) மணக்காடு கிராம மட்ட அமைப்புகள் நடத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், கற்கோவளத்திற்கும் மணற்காட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் 300 ஏக்கர் காணியும், மணற்காட்டுக்கும் பொற்பதி கிராமத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் 300 ஏக்கர் காணியும் சுற்றுலா தேவைகளுக்காக அபகரிப்பு நடவடிக்கைகள் இடம்பெற உள்ளன. இதனை உடனடியாக கைவிட வேண்டும். மணக்காடு கிராமத்திலுள்ள மக்கள் பலருக்கு குடியிருக்க காணியில்லாத நிலையில். தனியார்களுக்கு இவ்வாறு. காணிகளை வழங்கும் முயற்சி ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை நாங்கள் கடுமையாக எதிர்க்கின்றோம். எனவே சம்மந்தப்பட்ட தரப்புகள் உரிய கவனமெடுத்து குறித்த 600 ஏக்கர் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் - என்றனர். https://www.virakesari.lk/article/228653
-
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவடையும் சாத்தியம்!
25 Oct, 2025 | 03:07 PM வங்காள விரிகுடா கடல் பகுதி மற்றும் நாட்டின் கிழக்கு ஆழமற்ற கடல் பகுதிகளில் பலத்த காற்று, கனமழை மற்றும் கடல் கொந்தளிப்பானதாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை 12.00 மணி முதல் அடுத்த 24 மணி நேரத்திற்கு இது செல்லுபடியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து, ஞாயிற்றுக்கிழமை (26) க்குள் ஒரு ஆழமான காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, ஞாயிற்றுக்கிழமை (27) காலை தென்மேற்கு மற்றும் அதை அண்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் ஒரு சூறாவளி புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு, அடுத்த 48 மணி நேரத்தில் ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி வடமேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. இதன் காணரமாக 05N-15N மற்றும் 80E-95E எல்லைக்குட்பட்ட ஆழ்கடல் பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரும் வரை கடற்படையினர் மற்றும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த கடல் பகுதிகளில் செயல்படும் கடற்படையினர் மற்றும் மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதேவேளை, காங்கேசன்துறை முதல் திருகோணமலை வழியாக மட்டக்களப்பு வரையிலான கடற்கரைக்கு அப்பால் உள்ள ஆழமற்ற கடல் பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரும் வரை செல்ல வேண்டாம் என்றும் கடற்படையினர் மற்றும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்கரைக்கு அப்பால் உள்ள ஆழமற்ற கடல் பகுதிகளில் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்படையினர் மற்றும் மீனவர்கள் இந்த விடயம் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். https://www.virakesari.lk/article/228638
-
புலர் அறக்கட்டளையின் செயற்பாடுகள் தொடர்பான காணொளிகள்
செல்லத்துரை தவமணி அம்மையாரின் 31ஆம் நாள் ஞாபகார்த்தமாக அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது 25/10/25. சங்கானையை பிறப்பிடமாகவும் சுழிபுரம் கிழக்கு மற்றும் பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் செல்லத்துரை தவமணி அம்மையாரின் 31 ஆம் நாள் ஞாபகார்த்தமாக மகன் திரு செல்லத்துரை செல்வநேசன் அவர்கள் 30000 ரூபாவிற்கு இயலாமையுடைய 14 குடும்பங்களைச் சேர்ந்த 15 பேருக்கு அரிசி, பருப்பு, சோயாமீற் என்பவற்றை வழங்கி உதவியுள்ளார். திரு செல்லத்துரை செல்வநேசன் அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் எமது புலர் அறக்கட்டளை சார்பாகவும் விசேடதேவையுடைய பிள்ளைகளின் குடும்பங்கள் சார்பாகவும் எமது உளப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிக்கிறோம். இப்பணிகளைச் செய்ய இணைப்பாளராக செயற்பட்ட திருமதி நவறஞ்சினி குமார்(பிள்ளை அக்கா) அவர்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம். பொருட்களை வழங்கிய முதியோர் சங்கத் தலைவர் திரு சிவரஞ்சன் அவர்களுக்கும் முதியோர் சங்க கட்டடத்தை பயன்படுத்த அனுமதி வழங்கிய முதியோர் சங்க நிர்வாகிகளுக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம். கலந்து கொண்ட நிர்வாகிகள் பொருட்களை வாங்கித் தந்த மதிகிருஸ்ணா லாண்ட்மாஸ்ரரில் எடுத்து வந்து உதவிய யது ஆகியோருக்கும் எமது நன்றிகள் உரித்தாகட்டும். நன்றி வணக்கம். ஒளிப்பதிவு திரு இ.பரணீதரன்.
-
நா,வா – வின் புரட்டுகளும் அருந்ததியர் வரலாறும்
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே…. யாரும் பேசத் துணியாத விஷயத்தை முதலில் பேசத் துணிந்தவர் மதிவண்ணன் என்றுதான் சொல்லவேண்டும். . தமிழகத்தில் ஒடுக்கப்பட்டோரிலேயே ஒடுக்கப்பட்டோராய் இருக்கிற அருந்ததிய மக்களுக்கான உள் ஒதுக்கீடு இன்றைக்கு நடைமுறைக்கு வந்திருக்கிறது என்று சொன்னால் அதில் எழுத்தாளர் மதிவண்ணன் அவர்களது பங்களிப்பும் மிக முக்கியமான ஒன்று. . ”ஒரு சின்ன நூல் வெளியீடு…. ஈரோடு வரமுடியுமா?” எனக் கேட்டதும் உடனே சரியென்று தலையாட்டினேன். . ஆனால் அச்சிறு நூலைப் பார்த்ததும் எனக்கு ஏனோ அடிவயிற்றைப் புரட்டியது. அதில் மதிவண்ணன் சாடோ சாடென்று சாடியிருந்த மனிதரோ தமிழகத்தின் ஆகப் பெரிய ஆளுமை. ஆய்வுத்தளத்தில் அவருக்கென்று ஒரு தனி இடமுண்டு. . அவர்தான் : பேராசிரியர் நா. வானமாமலை. . அவரது “தமிழர் நாட்டுப் பாடல்கள்” என்கிற நூலில் அருந்ததிய மக்களைக் கொச்சைப்படுத்தும் விதமாக எந்தெந்த இடங்களில் எல்லாம் எழுதியிருக்கிறார் என்று துல்லியமாக கோடிட்டுக் காட்டி குமுறி இருந்தார் மதிவண்ணன். எல்லாமே ஆணித்தரமான தரவுகள். . ஆங்கிலேயருக்கு எதிரான போரில் கட்டபொம்மனுக்கு துணை நின்றவர்களில் அருந்ததியர் சமூகத்துக்கும் மள்ளர் சமூகத்துக்கும் பெரும் பங்கு உண்டு. . ஆனால் பேராசிரியர் நா.வானமாமலை தொகுத்த கட்டபொம்மன் கதைப் பாடல்களில் அவர்களது வீரஞ்செறிந்த போராட்டம் குறித்தும், தியாகம் குறித்தும் ஒரு வரிகூட முன்னுரையில் குறிப்பிடாது தவிர்த்தது எந்த வகையில் நியாயம்? என ஆதங்கம் மிக்க கேள்விகளையும் எழுப்பி இருந்தார் மதிவண்ணன். . இக்கேள்விகளையும் குமுறல்களையும் உள்ளடக்கி மதிவண்ணன் எழுதிய அச்சிறு புத்தகம்தான் “நா,வா – வின் புரட்டுகளும் அருந்ததியர் வரலாறும்”. . போதாக்குறைக்கு ஏன் இந்த இடதுசாரி சிந்தனையாளர்களுக்கு சில விஷயங்களில் மண்டையில் மசாலாவே இருப்பதில்லை என்கிற கோபமும் வேறு. . நான் அறிஞனுமில்லை. ஆய்வாளனுமில்லை. எதிலும் நுனிப்புல் மேயும் ரகம். . ஆனால் ”கூட்டணி தர்மம்” மாதிரி… கூட்ட ”தர்மம்” என்று ஒன்றிருக்கிறதே…. . அதற்காக…. ஏற்கெனவே அறிந்தது கொஞ்சம்…. இதற்கென தேடி வாசித்தது கொஞ்சம்… சித்தானை போன்ற சில ஆய்வாள நண்பர்களிடம் விவாதித்து தெரிந்து கொண்டது கொஞ்சம்…. என ஒப்பேத்திக் கொண்டு நிகழ்ச்சிக்குக் கிளம்பியபோதுதான் ஒன்று உறைத்தது…… . அட…. இந்த இந்திய இடதுசாரிகளுக்கு சில அல்ல… பல விஷயங்களிலும் மண்டையில் மசாலா கிடையாதே என்பதுதான் அது. . பேராசிரியர் நா.வா தொடங்கி அவரது தொண்டரடிப் பொடியாழ்வார்கள் வரைக்கும் இருந்த / இருக்கும் ஒரே பெருவியாதி திராவிட இயக்க ஒவ்வாமைதான். . பேராசிரியரோ…. அவரை ஒட்டி அடுத்து வந்த ஆய்வாளர்களோ பெரியார் எனும் அந்த அசாத்திய ஆளுமையைப் புரிந்து கொள்வதற்குள் அநேகருடைய ஆயுள்காலம் முடிந்து போயிற்று என்பதுதான் உண்மை. . இவ்வறியாமை இந்திய ஆய்வாளர்களோடு மட்டும் முற்றுப் பெற்று விடவில்லை. ஈழத்து கைலாசபதி, கா.சிவத்தம்பி வரையிலும் தொடர்ந்தது. . ஈழத்தில் ஏறக்குறைய ”பெரியார்” என்கிற வார்த்தையே இருட்டடிப்பு செய்யப்பட்டது அங்குள்ள அறிவுசீவிகளாலும் இடதுசாரிகளாலும்.. . நமது வரலாறே மறக்கப்பட்டதும் மறைக்கப்பட்டதுமான வரலாறுதானே? . ஆனால் நாமே மறந்த தடயங்கள்…. அதன்பொருட்டு இன்றும் நம்மைச் சூழ்ந்திருக்கும் அவலங்கள் ஏராளம். (அதை வேறொரு தருணத்தில் விரிவாகப் பேசுவோம்.) . மறைக்கப்பட்ட அந்தத் தடயங்களைத் தேடும் முயற்சிகளில் ஒன்றுதான் இந்தக் கட்டுரையும். சரி… நாம் மீண்டும் பேராசிரியர் நா. வானமாமலைக்கே வருவோம். . அவரது எண்ணற்ற நூல்களில் ஒன்றுதான் “தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள்.” . சித்தர்கள் காலம் தொடங்கி சேர சோழ பாண்டியர் காலம் வரை தமிழகத்தில் சாதியத்துக்கு எதிரான சமர்கள் எத்தனையெத்தனை நடந்துள்ளன என்பதை விரிவாகவும் விரைவாகவும் சொல்லுகிறது 1980 வெளியிடப்பட்ட இந்த நூல். . புராண காலங்கள் தொடங்கி மன்னர் காலம் வரை படுவேகம் பிடிக்கும் வானமாமலையின் வாகனம் தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்…. சுயமரியாதை இயக்கம்…. தோன்றிய காலம் தொடங்கியதும் பிரேக் டவுன் ஆகி நின்று விடுகிறது. . ஆயோ ஆய் என்று ஆயப்பட்ட இந்த ஐம்பது பக்க நூலில் நாலே நாலு எழுத்துதான் மிஸ்ஸிங். . அது: பெ ரி யா ர். . நூலின் தலைப்பைப் பார்த்தால் ஆர்.எஸ்.எஸ்.காரனுக்குக்கூட நினைவுக்கு வரக் கூடிய ஒரே பெயர் பெரியாராகத்தான் இருக்க முடியும். . ஆனால் அதுவெல்லாம் நம் இடதுசாரி ஆய்வாளர்கள் முன்பு செல்லுபடியாகுமோ.? ஆகாது. ஆகவே ஆகாது. அம்புட்டு ஆச்சாரம். . நம் மரியாதைக்குரிய ஆய்வாளர் பேராசிரியர் வானமாமலையின் மற்றொரு நூல் : “இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்” . 1978 இல் நியூ செஞ்சுரி புக் ஹவுஸால் வெளியிடப்பட்ட இந்நூலில் உலக அளவிலும் இந்திய அளவிலும் அன்றைய காலம் தொடங்கி இன்று வரை நாத்திகக் கருத்துக்கள் உருப்பெற்ற வரலாறுகள்…. . கடவுள் இன்மைக் கொள்கைதான் தற்கால நாத்திகமாகக் கருதப்படுகையில்…. வேதங்களை நம்பாதவர்களே நாத்திகர்கள் என அன்றைக்கு அழைக்கப்பட்டார்கள்….. என விரிவாகச் சொல்கிறார் நா.வா. . அத்தோடு ஆத்திகர்களின் புரட்டு வாதம், கடவுள் கருத்தின் துவக்கம், நாத்திகம் பற்றிய மார்க்சியவாதிகளின் விமர்சனங்கள் என அநேக விஷயங்களைத் தொட்டுச் செல்கிறது நூல். . நாத்திகம் குறித்து பேராசான் மார்க்ஸ் சொல்லுவதென்ன? மார்க்சியத்தை நடைமுறைப்படுத்திக் காட்டிய தோழர் லெனின் சொல்லுவதென்ன? என விரிவாக விளக்கும் பேராசிரியர் பெரியாருக்கு வரும்போது மட்டும் கொஞ்சம் ஜர்க் ஆகிறார். . முற்றாக மறுக்கவும் முடியாமல் முற்றாக நிராகரிக்கவும் முடியாமல் தடுமாறும் கோலம் எழுத்தில் அப்பட்டமாகத் தெரிகிறது. . இதை அவரது ஆய்வுப்புலத்தின் போதாமை என்று கொள்ளலாமே தவிர அவர் ஆச்சாரமான வைணவ குலத்தின் தோன்றல் என்பதனால்தான் என்று எவரும் கொள்ளக்கூடாது. . அவரது வார்த்தைகளிலேயெ சொல்வதானால்….. . “ பெரியார் முரணற்ற நாத்திகர். பெரியார் கடவுள் எதிர்ப்போடு, மூட நம்பிக்கைகளை எதிர்த்தும் பிரச்சாரம் செய்தார். . அவருடைய நாத்திகம் பொது அறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. அதில் விஞ்ஞானக் கொள்கைகளை அவர் பயன்படுத்தவில்லை. …………….. ………….. ஆனால் வளர்ந்து வரும் அறிவியல் உண்மைகள், அவற்றின் அடிப்படையில் உருவாகும் அறிவியல் கொள்கைகள், இவ்வறிவியல் கொள்கைகளை கிரகித்துக் கொண்டு வளர்ச்சி பெற்று வரும் மார்க்சீய தத்துவம், இவற்றினின்று அவருடைய நாத்திகம் விலகியே நிற்கிறது. இதுவே அதனுடைய பலவீனம்.” . இதைப் படித்ததும் பேரதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனேன் என்று எழுதினால் அது அப்பட்டமான பொய். . குறிப்பாக இந்திய இடதுசாரிகளிடம் அதிலும் சிறப்பாக தமிழக இடதுசாரிகளிடம் அத்தகைய மூடநம்பிக்கைகள் எல்லாம் கிடையாது எனக்கு. இப்படி ஏதாவது எழுதாவிட்டால்தான் அதிர்ச்சி அடைவேன். . 1958 லேயே நான்காவது பதிப்பு கண்ட நூல் : ”இனி வரும் உலகம்”. . ”அறிவியல் அறிவற்ற”…. ”அறிவியல் உண்மைகளை அறியாத”…. ”அதன் அடிப்படையில் உருவாகும் அறிவியல் கொள்கைகளை கிரகிக்கத் துப்புக் கெட்ட” ஈ.வெ.ரா எழுதியது அது. . ஏறக்குறைய அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதுகிறார் : . ”இனிவரும் உலகத்தில் கம்பியில்லா தந்திச் சாதனம் ஒவ்வொருவர் சட்டைப் பையிலும் இருக்கும்… . உருவத்தைத் தந்தியில் அனுப்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து, ஆளுக்காள் உருவம் காட்டிப் பேசிக்கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும்…. . மேற்கண்ட சாதனங்களால் ஒரு இடத்திலிருந்து கொண்டே பல இடங்களில் உள்ள மக்களுக்குக் கல்வி கற்றுக் கொடுக்கச் சாத்தியப்படும்….” . இதுதானய்யா அந்த ”அறிவற்ற” கிழவன் அறுபதாண்டுகளுக்கு முன்னர் எழுதியது. . பூப்பு நன்னீராட்டு விழாவுக்குக்கூட தங்களது நாளிதழில் விளம்பரம் போடும் ”விஞ்ஞான” ”மார்க்சீயவாதிகள்” மத்தியில் இப்படியொன்றையும் சொல்லித் தொலைத்தது பெருசு : . “பிள்ளைப்பேறுக்கு ஆண் பெண் சேர்க்கை என்பதுகூட நீக்கப்படலாம். . நல்ல திரேகத்துடனும், புத்தி நுட்பமும், அழகும் காத்திரமும் உள்ள பிரஜைகள் ஏற்படும்படியாகப் பொலிகாளைகளைப் போல் தெரிந்தெடுத்த மணி போன்ற பொலிமக்கள் வளர்க்கப்பட்டு அவர்களது வீரியத்தை இன்செக்ஷன் மூலம் பெண்கள் கருப்பைகளுக்குள் செலுத்தி நல்ல குழந்தைகளைப் பிறக்கச் செய்யப்படும். . ஆண் பெண் சேர்க்கைக்கும் குழந்தை பெறுவதற்கும் சம்பந்தமில்லாமல் செய்யப்பட்டுவிடும்.” . கர்ப்பத்தடையே கண்டனத்துக்கு உள்ளான காலங்களில் செயற்கை முறை கருத்தரிப்பைப் பற்றிப் பேசியவர் நிச்சயம் அறிவியல் அறிவற்ற ஆசாமியாகத்தானே இருக்க முடியும்? . அடுத்த ஒரே ஒரு சேதியோடு நமது கதாகாலட்சேபத்தை நிறுத்திக் கொள்வது நல்லது என்றே தோன்றுகிறது. . அது 1970 ஆம் ஆண்டு. . கிண்டியிலுள்ள பொறியியல் கல்லூரிக்குப் பேசச் செல்கிறார் பெரியார். (இப்போது அதுதான் அண்ணா பல்கலைக் கழகமாக பரிணாமம் அடைந்திருக்கிறது) . அங்குள்ள மாடி அறை ஒன்றில் கம்ப்யூட்டர் என்கிற ஒரு புதிய கருவி வந்திருக்கிறது என்று சொல்கிறார்கள். . அங்கு வைக்கப்பட்டிருந்த அந்தக் கம்ப்யூட்டர் இன்றுள்ளது போல அல்ல. அதுவே ஒரு பெரிய அறை அளவுக்கு இருக்கக் கூடியது. . அது 1959 ஆண்டு உருவாக்கப்பட்ட ஐ.பி.எம் 1620 ரகக் கம்ப்யூட்டர். . அதைப் பார்த்தே தீரவேண்டும் என அடம் பிடித்த பெரியாரை முதல் மாடிக்குத் தூக்கிச் சென்று காட்டுகிறார்கள். . இது என்னவெல்லாம் செய்யும் என தன் சந்தேகங்களைக் கேட்கிறார் பெரியார். . இது வினாடிக்கு 333 எழுத்துக்களைப் படிக்கும் 10 எழுத்துக்களை அச்சடிக்கும் என விளக்குகிறார்கள். . வருடத்தையும் நாளையும் சொன்னால் கிழமையைச் சரியாகக் குறிப்பிடும் என்கிறார்கள். . 17.9.1879 என்ன தேதி? என்கிறார் பெரியார். ”புதன்கிழமை” என்கிறது கம்ப்யூட்டர். . மேலும் பல கேள்விகளைக் கேட்டு அது அளித்த விடைகளைக் கண்டு பெருமகிழ்வோடு கிளம்பிச் செல்கிறார் பெரியார். . இதனை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்த வா.செ.குழந்தைசாமி தனது நூலில் பெருமிதத்தோடு குறிப்பிடுகிறார். . அதனைவிடவும் அக்கல்லூரியில் இருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட பேராசிரியர்களே பார்க்கத் துடித்துக் கொண்டிருந்த தமிழகத்தின் முதல் கம்ப்யூட்டரை நேரில் கண்டு அறிந்து தெளிந்து விடைபெற்ற பெரியாரைத்தான் விஞ்ஞானம் தெரியாதவர் என்கிறார் நா.வானமாமலை. . இதற்கூடே வறட்டு நாத்திகரான பெரியாருக்கு வர்க்கபார்வை கிடையாது என்கிற சலிப்பில் இருந்த ப.ஜீவானந்தம் பிர்லா மாளிகையில் ஒலித்த பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கான அசரீரி கேட்டு காங்கிரஸில் ஐக்கியமான கதைகளும்…. . பெரியாரைக் கொச்சைப்படுத்துவதற்கென்றே மார்க்ஸிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தியால் தப்பும் தவறுமாக எழுதப்பட்ட ”ஆரிய மாயையா? திராவிட மாயையா?” என்கிற நூலுக்குக் கிடைத்த நெத்தியடிக் கதைகளும்…. . 1924 வைக்கத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பெரியார் நடத்திய தெரு நுழைவுப் போராட்டத்தை கோயில் நுழைவுப் போராட்டமாக மார்க்சிஸ்ட் ராமமூர்த்தி குழப்பியடித்த கதைகளையும்…. . எழுதிக் கொண்டே போகலாம்தான்…. . ஆனால்…. . அட…. அதெல்லாம் அந்தக் காலம். . ஆய்வாளர் நா.வானமாமலை, மார்க்ஸிஸ்ட் இராமமூர்த்தி எல்லாம் மறைந்தே எண்ணற்ற ஆண்டுகள் ஆயிற்று. . இன்னும் எதற்கு இந்தப் பழைய கதை?. . இப்போதெல்லாம் இடதுசாரிகள் அப்படிக் கிடையாது என அடித்துச் சத்தியம் செய்பவர்கள் யாரேனும் இருந்தால்…. . அவர்கள்….. . அங்கிள் டி.கெ.ரங்கராஜன் பத்து பர்சண்ட் ”பரம ஏழைகளுக்காக” பாராளுமன்றத்தில் முழங்கிய சமீபத்திய கதையையும் நினைவில் கொள்வது மார்க்சீயத்துக்கும் நல்லது. மக்களுக்கும் நல்லது. . பின்குறிப்பு : . அதெல்லாம் சரி….. இந்தத் தலைப்புக்கும் கட்டுரைக்கும் என்னய்யா சம்பந்தம் என்கிறீர்களா? . பாஸ்….! கட்டுரைதான் இவ்வளவு சீரியஸ் தொனில இருக்குதே…. தலைப்பாவது கொஞ்சம் ரொமான்ஸ் மூடுல இருக்கட்டுமேங்கிற ஒரு அல்ப ஆசைதான்…. . வேறென்ன? . நன்றி : “காமன் சென்ஸ்” (Common Sense) மாத இதழ். பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் அமெரிக்கா. https://tinyurl.com/4y9dkr4w
-
ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025
தென் ஆபிரிக்காவை 97 ஓட்டங்களுக்கு சுருட்டி ஆஸி.யை வெற்றி அடையச் செய்த அலனாவின் உலகக் கிண்ண சாதனை பந்துவீச்சு 25 Oct, 2025 | 06:59 PM (நெவில் அன்தனி) இந்தூர், ஹொல்கார் விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை (25) நடைபெற்ற தென் ஆபிரிக்காவுக்கு எதிரான ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அலனா மரியா கிங், பந்துவீச்சில் உலகக் கிண்ண சாதனையை நிலைநாட்டி அவுஸ்திரேலியாவை 7 விக்கெட்களால் இலகுவாக வெற்றி அடையச் செய்தார். இந்த வெற்றியை அடுத்து இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் இந்தியாவை அவுஸ்திரேலியாவும் முதலாவது அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை தென் ஆபிரிக்காவும் எதிர்த்தாடும். அலான கிங்கின் சுழல்பந்துவீச்சை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட தென் ஆபிரிக்கா 24 ஓவர்களில் 97 ஓட்டங்களுக்கு சுருண்டது. தென் ஆபிரிக்க துடுப்பாட்டத்தில் அணித் தலைவி லோரா வுல்வார்ட் (31), சினாலோ ஜப்டா (29), நாடின் டி க்ளார்க் (14) ஆகிய மூவரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். அலனா மரியா கிங் 2 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 7 ஓவர்களில் 18 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களை வீழ்த்தி மகளிர் உலகக் கிண்ணத்தில் அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்தார். இந்தியாவுக்கு எதிராக 1982 மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் நியூஸிலாந்து வீராங்கனை ஜெக்குலின் லோர்ட் பதிவுசெய்த 10 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்கள் என்பதே மகளிர் உலகக் கிண்ணத்தில் முந்தைய அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியாக இருந்தது. 43 வருடங்கள் நீடித்த மகளிர் உலகக் கிண்ண சாதனையை இன்றைய தினம் அலனா மரியா கிங் முறியடித்து புதிய சாதனையை படைத்தார். 98 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, 16.5 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 98 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. முதல் 6 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்ததால் அவுஸ்திரேலியா நெருக்கடியை எதிர்கொண்டது. ஆனால், ஜோர்ஜியா வொல், பெத் மூனி ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 76 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு வெற்றியை அண்மிக்க உதவினர். பெத் மூனி 42 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். ஜோர்ஜியா வொல் 38 ஓட்டங்களுடனும் அனாபெல் சதர்லண்ட் 10 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்து அவுஸ்திரேலியாவை வெற்றி அடையச் செய்தனர். ஆட்டநாயகி: அலனா மரியா கிங் https://www.virakesari.lk/article/228669
-
தொழில்நுட்பக் கோளாறு: அமெரிக்காவில் 40 விமான சேவைகள் இரத்து
25 Oct, 2025 | 10:40 AM அமெரிக்காவின் பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான அலாஸ்கா ஏர்லைன்ஸ் (Alaska Airlines) நிறுவனத்தின் இணையத்தளத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அந்த நிறுவனத்தின் சுமார் 40 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டன. மேலும், 240க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன. சியாட்டிலை தளமாகக் கொண்டு இயங்கும் அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் வலைத்தளத்தில் (website) எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதன் விளைவாக, பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக உடனடியாக முடிவுகள் எடுக்கப்பட்டன. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அலாஸ்கா ஏர்லைன்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனமான ஹாரிசன் ஏர் (Horizon Air) ஆகியவற்றின் விமானங்களும் உடனடியாக தரையிறங்க அறிவுறுத்தப்பட்டன. இந்தச் சம்பவத்தால், மொத்தமாக சுமார் 40 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டன. மேலும், 240க்கும் அதிகமான விமானங்கள் குறிப்பிட்ட நேரத்தைவிடத் தாமதமாகப் புறப்பட்டதால், விமானப் பயணங்களில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. சம்பவம் குறித்து விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும், கோளாறு சரிசெய்யப்பட்டுச் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/228619
-
80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் - சட்டத்தரணி பிரதிபா மஹானாமஹேவ
நாட்டில் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் - சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ 25 Oct, 2025 | 04:22 PM நாட்டில் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ தெரிவித்துள்ளார். பிரஜா சக்தி அபிவிருத்தி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் கொழும்பில் உள்ள கிராண்ட் ஓரியண்டல் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களை முறையான சட்ட கட்டமைப்பின் கீழ் பதிவு செய்வது அவசியமாகும். அத்துடன், பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு அடிப்படை மனித உரிமைகளும் சமூக அங்கீகாரமும் வழங்கப்பட வேண்டும். பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களை ஒதுக்கி வைப்பதால் அவர்கள் மேலும் பாதிக்கப்படுகின்றனர். இதேவேளை, பாடசாலை மாணவர்களுக்கு அடிப்படைப் பாலியல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி முறைமையை விரிவாக்குவது அவசியமாகும். 95 சதவீதமான பாலியல் தொழிலாளர்கள் தற்போது ஆணுறை உள்ளிட்ட பாதுகாப்பான முறைகளைப் பயன்படுத்தி வருவதால் பாலியல் ரீதியாகப் பரவும் நோய்களும் கணிசமாக குறைவடையும் என சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/228647