Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    20104
  • Joined

  • Last visited

  • Days Won

    15

Everything posted by ஏராளன்

  1. காதல்: பிரிந்து பிரிந்து சேரும் காதலர்களுக்கு பின்னிருக்கும் உளவியல் என்ன? 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES "நம் இருவருக்கும் இனிமேல் ஒத்துவராது" என்று முகத்தில் கண்ணீர் வழிந்தோடியபடி, ஜார்ஜிடம் சொன்னார் யேன்ஸ். இதைச் சொல்லிவிட்டு இதயம் நொறுங்க, விசும்பலுடன் வீடு திரும்பினார் அவர். ஆனால், இது முதன்முறையல்ல. கடந்த இரண்டு மாத காலத்தில் இது மூன்றாவது முறை. இந்த முறை யேன்ஸ் திரும்பி வரப்போவதில்லை என்றும் சொல்லியிருந்தார். "பழைய நினைவுகளைக் கிண்டிவிட்டு அதில் உழலுவதென்பது மனித வாழ்வில் இயல்பானது. சொல்லப்போனால், மூன்றில் இரண்டு பங்கு கல்லூரி மாணவர்கள் பிரிந்து சேர்ந்த காதலுடன்தான் இருக்கின்றனர். இதில் பாதிப்பேர் தங்கள் காதல் முறிவுக்குப் பிறகும் உடலுறவைத் தொடர்கின்றனர். திருமணத்துக்குப் பிறகும், உறுதிமொழிகள் பரிமாறப்பட்ட பிறகும் கூட, தன் முந்தைய காதலின் நினைவுகள் விவகாரத்திலிருக்கும் தெளிவின்மை தொடரத்தான் செய்கிறது. திருமணமான தம்பதிகளில் ஐந்தில் ஒரு தம்பதி பிரிந்து மீண்டும் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். உலகில் ஏராளமான கவிதைகளுக்கும், நாவல்களுக்கும், சினிமாக்களுக்கும் அடி நாதமாக அமைந்த இந்த - பிரேக் அப் செய்துவிட்டு மன்னிப்பு தேடும் - உணர்ச்சி, நம் உளவியலில் ஆழப்பதிந்துள்ளது என்பதில் ஆச்சரியம் ஏதுமில்லைதான். ஆனால், ஏன் இது நடக்கிறது? முறிந்து போன ஒரு உறவை மீண்டும் மீண்டும் பரிசீலிப்பது ஏன்? பட மூலாதாரம்,JAVIER HIRSCHFELD/ GETTY IMAGES மூளையை ஸ்கேன் செய்யும் "முதல் முதலாக உறவில் முறிவு ஏற்படும்போது, மனம் போராட்டமாக உணர்கிறது. யார் நிராகரித்தார்களோ அவரை மீண்டும் வெல்ல வேண்டும் என்ற வேட்கையில் மனம் துடிக்கிறது" என்கிறார், கின்ஸ்லீ இன்ஸ்டிட்யூட் நரம்பியல் நிபுணரான ஹெலென் ஃபிஷர். ஹெலெனும் அவருடனான விஞ்ஞானிகளும் சுமார் 15 பேரிடம் ஒரு ஆய்வை நடத்தினர். மூளையை ஸ்கேன் செய்யும் (functional magnetic resonance imaging -fMRI) அந்த ஆய்வின்மூலம், அவர்களின் மூளைகள் கண்காணிக்கப்பட்டன. அவர்களிடம், அவரவர்களது முன்னாள் காதலர்களின் புகைப்படங்கள் வழங்கப்பட்டன. அதைப் பார்க்கும்போது, அவர்களது மூளையில் உணர்ச்சியுடனும், காதலுடன் தொடர்புடைய மகிழ்ச்சியான சங்கடமான எல்லா நினைவுகளோடும் தொடர்புள்ள பகுதிகள் புத்துயிர் பெற்றன. நிராகரிப்புக்குப் பிறகு, நீங்கள் அவர்களை காதலிப்பதை நிறுத்துவதில்லை. மாறாக, இன்னும் அதிகமாகக் காதலிக்கிறீர்கள் என்கிறார் ஹெலென். தாய்ப்பால் பரிசுத்தமானதா? ஃபார்முலா பாலை குழந்தைகளுக்கு தரலாமா? மனிதர்கள் ஏன் முத்தமிடுகின்றனர்? - அறிவியல் கூறும் காரணம் இறைச்சி உணவை விட 'வீகன்' உணவு ஆரோக்கியமானதா? படங்களைப் பார்க்கும் அந்த நேரத்தில், நிராகரிக்கப்பட்ட காதலர்களின் உடலில் டோப்பமைன் மற்றும் நோர்ப்ன்ஃப்ரைன் ஆகிய ஹார்மோன்கள் அதிகரிக்கின்றன. மனித உடலில் அதிகரிக்கும் மன அழுத்தத்துடன் தொடர்புடையது இந்த நோர்பைன்ஃப்ரைன். இதனை `விரக்திக்கான ஈர்ப்பு` என்று சொல்கிறார் ஹெலென். நிராகரிக்கப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பாலரிடமும், செயல்பாட்டு நிலையில் இருப்பது நியூக்ளியஸ் அக்யூம்பென்ஸ் ஆகும். இது ஒரு மனிதருடைய, அதீத பற்றுடன் (அடிமையாகும் அளவுக்கு) தொடர்புடைய முக்கியமான மூளைப் பகுதி. மொத்தத்தில், மீண்டும் இணைய வேண்டும் என்ற எண்ணம் எப்போது இருக்கிறது. தன் ஆய்வில் கலந்து கொண்டவர்கள் எல்லோருமே "தங்கள் பிரிந்து போன இணையைப் பற்றி மிகமிக அதிகமாக சிந்தித்தார்கள். அத்துடன் ஒரு உணர்ச்சிவசமான மறுசந்திப்பை எண்ணியும் ஏங்கினர்" என்கிறார் ஹெலென். பட மூலாதாரம்,JAVIER HIRSCHFELD/ GETTY IMAGES பற்று வைத்தலில் மூன்று வகை "ஒரு ஜோடி ஏராளமான குழப்பங்களை எதிர்கொண்டு பிரிந்தபிறகும் மீண்டும் தான் காதலித்துக்கொண்டிருப்பதாகவே கருதிக்கொள்கிறார்கள். எனவே இங்கு பிரச்னைகளோ முரண்களோ சரி செய்யப்பட்டனவா என்பது பொருட்டே அல்ல. வெறுமனே பிரிவு மட்டும் ஏற்பட்டால், தாம் மெல்ல மெல்ல சரியாகிவிட்டதாக உணர்ந்து, மனித மனம் மீண்டும் உறவைத் தொடர்கிறது" என்கிறார், பிரிந்து பிரிந்து சேரும் உறவுகள் குறித்து ஆய்வு செய்த டெக்சாஸ் பல்கலைக்கழக பேராசியர் ரீன் டெய்லி. உளவியலில் மிகவும் பிரபலமான பற்றுதல் விதி (Attachment theory) குறித்தும் ரீன் டெய்லி பேசுகிறார். அதன்படி, பற்று வைத்தலில் மூன்று வகைகள் உண்டு. பாதுகாப்பான பற்று, பதற்றத்துடன் கூடிய பற்று, நிராகரிப்புடன் கூடிய பற்று. முதல் வகையைப் பொறுத்தவரை, ஆரோக்கியமான உணர்ச்சிமிக்க உரையாடல்கள் இடம்பெறும். ஆனால், இரண்டாவது வகையில், சுய சந்தேகங்கள் அதிகமாகி நெருக்கத்தை மீட்டெடுக்க பெரும் முயற்சி செய்பவர்களாக இருப்பர். ஆனால், மூன்றாவது வகையில், தன்னளவில் தன்னிறைவு பெற்ற இவர்கள் உணர்ச்சிவசமான உரையாடல்களுக்கு கிடைக்கமாட்டார்கள். அதேசமயம், நெருக்கத்தை தவிர்க்கும் தன் பழக்கத்துக்காக காரணங்களுடன் வாதிடுபர்களாகவும் இருப்பர். இந்த விதியின்படி, இரண்டு மற்றும் மூன்றாம் வகையினர் ஒருவரையொருவர் ஈர்த்துக்கொண்டு, பின்னர் முழுமையாக பிரியவும் முடியாமல் சிரமப்படுவர் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அதற்கு ஆய்வு ரீதியிலான எந்த ஆதாரங்களும் இல்லை. பட மூலாதாரம்,JAVIER HIRSCHFELD/ ALAMY எப்படி சரி செய்வது? உடைந்த மனதை சரிசெய்வது என்பது போதை பழக்கத்திற்கு சிகிச்சையளிப்பது போன்றது. "நீங்கள் அவர்களின் நினைவான பொருட்களை ஒதுக்கி வையுங்கள். அவர்களது சமூக ஊடகப் பக்கங்களை பார்ப்பதை நிறுத்துங்கள், அவர்களுடன் உங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை" என்று ஹெலென் கூறுகிறார். இதற்கு no-contact rule என்று பெயர். இந்த விதி "சில அறிவியல் அடிப்படைகளைக் கொண்டுள்ளது" என்றும் மியாமி பல்கலைக்கழக பேராசிரியர் ப்ரோகார்ட் கூறுகிறார். அதாவது, காலப்போக்கில் கோபம், துரோகம் மற்றும் பல கசப்பான உணர்ச்சிகள் குறைகின்றன என்கிறார் அவர். "ஒருவரை பிரேக்-அப்பில் இருந்து மீட்க, பயிற்சியாளர்களும் உண்டு. ஆனால், அவர்களின் பரிந்துரைகள் அறிவியல் ரீதியாக நம்பத்தகுந்ததாக இருக்காது. "பிரேக்-அப் பயிற்சியாளர்களுக்கு நரம்பியல், உளவியல், அறிவாற்றல் அறிவியல், தத்துவம் அல்லது சமூகப் பணி போன்ற தொடர்புடைய துறைகளில் சரியான பயிற்சியோ அல்லது கல்வியோ கூட இருக்காது" என்கிறார் ப்ரோகார்ட். பட மூலாதாரம்,GETTY IMAGES பிரேக்-அப் பயிற்சிக்காக பணத்தைச் செலவழிப்பதற்குப் பதிலாக, சரியான தகவல்கள் கொண்ட, உறவுகள் குறித்த இலக்கியங்களைப் படிக்குமாறும் ப்ரோகார்ட் அறிவுறுத்துகிறார். ஆனால், ஒருவரை மீண்டும் வெல்வதற்காக உங்கள் அதிக நேரத்தையும் சக்தியையும் செலவிடுவதை குறித்தும் அவர் எச்சரிக்கிறார். உங்கள் முன்னாள் காதலருடன் நீங்கள் மீண்டும் இணைவதற்கு உத்திகள் எதுவும் இல்லை. ஆனால், தோல்வியுற்ற உறவில் என்ன தவறு நடந்தது என்பதைப் பற்றி நேர்மையுடன் பேச வேண்டும் என்கிறார் அவர். தங்கள் முந்தைய காதலுடன் சமரசம் செய்ய முடியாதவர்களுக்கு, மூளை விரக்தி நிலைக்குச் செல்லலாம். அதன்பிறகுதான், அந்த மனநிலையை ஏற்றுக்கொள்வது, பின் அலட்சியப்படுத்துவது, பின்னர் மீள்வது போன்றவை ஒன்றன்பின் ஒன்றாக நிகழும் என்கிறார் ஹெலென். "நீங்கள் தீவிர வலி மற்றும் கவலையை அனுபவிப்பீர்கள், ஆனால் இறுதியாக அதிலிருந்து மீள்வீர்கள்," என்று நிறைவு செய்யும் ஹெலென், "உங்களைத் தூக்கி எறிந்த நபரை நீங்கள் ஒருபோதும் மறப்பதில்லை. ஆனால், நீங்கள் அதிலிருந்து மீண்டு புதியவரை நேசிப்பீர்கள்" என்றும் தெரிவிக்கிறார். https://www.bbc.com/tamil/science-62027423
  2. இலங்கை பொருளாதார நெருக்கடி: வெறிச்சோடி போன சாலைகள், எரிபொருளுக்கு மேலும் தட்டுப்பாடு 2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையின் பொருளாதார நெருக்கடி தீவிர நிலையில் காணப்படுகின்ற சூழ்நிலையில், நாடு முழுவதும் உள்ள வீதிகள் பெருமளவில் வெறிச்சோடி காணப்படுகின்றன. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, வாகனங்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக இன்றும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக காத்திருக்கின்றன. சுகாதாரம், போக்குவரத்து, அத்தியாவசிய உணவு பொருள் விநியோகம், முப்படை உள்ளிட்ட சில அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை விநியோகிக்க அரசாங்கம் கடந்த வாரம் தீர்மானித்திருந்தது. இதனால், இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. 'ஒரே நாடு, ஒரே சட்டம்' செயலணி: இனவாத ரீதியிலான பரிந்துரைகள் என முஸ்லிம்கள் கண்டனம் இலங்கை: "தமிழக நிவாரணப் பொருட்களை நேர்மையாக வழங்குங்கள்" இந்த நிலையில், இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் வசமுள்ள எரிபொருள் தொகை குறித்து, எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கருத்து தெரிவித்தார். இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனத்தின் கொலன்னாவை களஞ்சியசாலையில் 5274 மெட்ரிக் டன் டீசல் காணப்படுகின்றது. லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்திடமிருந்து 7500 மெட்ரிக் டன் டீசலை பெற்றுக்கொள்வதற்கு, கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் 11 மில்லியன் அமெரிக்க டாலர் செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 12,774 மெட்ரிக் டன் டீசல் கையிருப்பில் உள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிடுகின்றார். அதேபோன்று, 92 ரக பெட்ரோல் 1414 மெட்ரிக் டன்னும் 95 ரக பெட்ரோல் 2647 மெட்ரிக் டன்னும் காணப்படுகின்றது. அத்துடன், சூப்பர் டீசல் 233 மெட்ரிக் டன்னும், விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருள் 500 மெட்ரிக் டன்னும் காணப்படுவதாக அவர் கூறுகின்றார். இந்த நிலையில், அத்தியாவசிய சேவைகளை கூட பூர்த்தி செய்துக்கொள்ள முடியாத அளவிற்கான எரிபொருள்தான் இலங்கை வசம் காணப்படுகின்றது. இதனால், அத்தியாவசிய தேவைகளை தவிர்த்த, ஏனைய தேவைகளுக்கு எரிபொருள் விநியோகம் தற்போது இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனத்தினால் முழுமையாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. எனினும், இலங்கையில் செயற்பட்டு வரும் இந்தியாவிற்கு சொந்தமான லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விநியோகத்தை குறிப்பிட்டளவு மேற்கொண்டு வருவதை காண முடிகின்றது. லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் இலங்கை முழுவதும் சுமார் 211 எரிபொருள் நிரப்பு நிலையங்களை லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் செயற்படுத்தி வருகின்றது. இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனத்தினால் எரிபொருள் விநியோகம் முழுமையாக இடைநிறுத்தியுள்ள இந்த தருணத்தில், லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தமது எரிபொருள் விநியோகத்தை விஸ்தரித்துள்ளதாக நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார். இதன்படி, நேற்றைய தினம் ஒரு மில்லியன் லிட்டர் எரிபொருளை விநியோகித்துள்ளதாக தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். திருகோணமலை பகுதியிலுள்ள ஐ.ஓ.சி நிறுவனத்தின் களஞ்சியசாலையிலிருந்து எரிபொருள் விநியோகம் நாளாந்தம் இடம்பெற்று வருகின்றது. நேற்றைய தினம் விடுமுறை தினம் என்ற போதிலும், திருகோணமலை களஞ்சியசாலையின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் கொள்கலன்கள் மேலதிகமாக ஈடுபடுத்தப்பட்டு, எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பொது போக்குவரத்து முழுமையாக முடங்கும் அபாயம் இலங்கை எதிர்நோக்கியுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பொது போக்குவரத்து சேவைகளுக்கும் தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. 10 வீதத்திற்கும் குறைவான பஸ்களே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவிக்கின்றார். நாடு முழுவதும் சுமார் 1000 தனியார் பஸ்களே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போதிலும், அதன் சேவைகளும் உரிய வகையில் முன்னெடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. பாடசாலைகள் விடுமுறை எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் ஒரு வார காலத்திற்கு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்ச நேற்று அறிவித்துள்ளது. இதன்படி, இன்று முதல் எதிர்வரும் 8ம் தேதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/sri-lanka-62033572
  3. ஆவணப்பட போஸ்டர் சர்ச்சை: வாயில் சிகரெட், கையில் எல்ஜிபிடி கொடியுடன் 'காளி' - சர்ச்சை குறித்து என்ன சொல்கிறார் லீனா மணிமேகலை? நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@LEENAMANIMEKALI கவிஞர், ஆவணப்பட இயக்குநர், சுயாதீன திரைப்பட இயக்குநர் என பன்முகம் கொண்ட லீனா மணிமேகலை, பாலியல் - சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் ஈழப்போராட்டங்கள் குறித்தும் திரைப்படங்களையும், ஆவணப்படங்களையும் இயக்கியுள்ளார். இவருடைய 'மாடத்தி, 'செங்கடல்' போன்ற திரைப்படங்கள் சர்வதேச கவனம் பெற்றன. சர்வதேச அளவிலான பல்வேறு திரைப்பட விழாக்களில் இத்திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன. பல்வேறு சர்வதேச விருதுகளையும் லீனா மணிமேகலை பெற்றுள்ளார். இந்நிலையில், தான் இயக்கியுள்ள 'காளி' என்கிற நிகழ்த்து ஆவணப்படத்தின் (Performance Documentary) 'பர்ஸ்ட் லுக்' போஸ்டரை சமீபத்தில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதுதான் தற்போதைய சர்ச்சையின் மையமாக உள்ளது. அந்த போஸ்டரில் 'காளி' போன்று வேடமணிந்துள்ள பெண், தன் வாயில் சிகரெட்டுடன், கையில் பால்புதுமையினர் (LGBT) கொடியை பிடித்திருப்பது போன்று உள்ளது. Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 இந்த போஸ்டர் வெளியிடப்பட்ட சில மணிநேரங்களிலேயே அதற்கான எதிர்வினைகள் வெளிவரத் தொடங்கின. 'ArrestLeenaManimekalai' என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் தற்போது டிரெண்டாகிவருகிறது. இந்த போஸ்டர் இந்து மதத்தை அவமதிப்பதாகவும், லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் எனவும் சமூக வலைதளங்களில் பலரும் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, ஹரியாணா பாஜகவின் மாநில பொறுப்பாளர் அருண் யாதவ், இதுகுறித்து வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், இந்த ஆவணப்படம் தடை செய்யப்பட வேண்டும் என்றும், அனைவரும் இந்து மத உணர்வுகளை மதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அவரது வீடியோவை ரீட்வீட் செய்து பலரும் ArrestLeenaManimekalai என்ற ஹேஷ்டேகை பதிவிட்டு வருகின்றனர். விஷ்வ இந்து பரிஷத் தலைவர்களுள் ஒருவரான பிராச்சி சாத்வி, தன் ட்விட்டர் பக்கத்தில், "இந்துக்களே விழித்திருங்கள், இந்து மதத்திற்கு எதிரான இயக்குநரை புறக்கணியுங்கள்" என பதிவிட்டுள்ளார். Twitter பதிவை கடந்து செல்ல, 2 Wake Up Hindus . Boycott Anti Hindu Film Director . Retweet Maximum And Demand #ArrestLeenaManimekalai https://t.co/Zx1zyT6dlo — Dr. Prachi Sadhvi (@Sadhvi_prachi) July 3, 2022 Twitter பதிவின் முடிவு, 2 மேலும், இயக்குனர் அஷோக் பண்டிட், ஹரியாணா பாஜகவின் சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர் ஹரிஷ் ஷர்மா உள்ளிட்டோரும் தங்களின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கங்களில் இந்த போஸ்டருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். பட மூலாதாரம்,@LEENAMANIMEKALI/TWITTER நூபுர் ஷர்மா vs முகமது ஜுபைர்: ஒரே பிரிவில் வழக்கு - வெவ்வேறு நடவடிக்கை ஏன்? அமராவதி கொலை: நூபுர் ஷர்மாவை ஆதரித்ததற்காக கொலை செய்யப்பட்டாரா உமேஷ் கோல்ஹே? முஸ்லிம் வெறுப்பால் இந்தியா வெளிநாடுகளில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன? நூபுர் ஷர்மா விவகாரம், அதைத்தொடர்ந்து உதய்பூரில் நிகழ்ந்துள்ள கொலை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் இந்தியாவில் பல விவாதங்களை எழுப்பியுள்ள வேளையில், நாடு முழுவதும் பல்வேறு பெயர்களிலும் வடிவங்களிலும் வணங்கப்படும் 'காளி' ஏன் சர்ச்சையின் மையமாக்கியுள்ளார்? கனடாவில் உள்ள இயக்குனர் லீனா மணிமேகலை இந்த ஆவணப்படம் குறித்தும் அதைத்தொடர்ந்த சர்ச்சை குறித்தும் பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார்: 'காளி' எனும் நிகழ்த்துக்கலை ஆவணப்படத்தின் போஸ்டரில் பெண் தெய்வம் கையில் சிகரெட் மற்றும் கையில் 'பால்புதுமையினர்' கொடியையும் பிடித்திருக்கிறார்... 'காளி' இதன்மூலம் சொல்ல வருவது என்ன? என்னைப் பொருத்தவரை "காளி" பேராற்றல் கொண்ட, கட்டற்ற, அசுரத்தனம் என்று கருதப்படுவதையெல்லாம் காலில் போட்டு மிதிக்கிற, தீமையின் தலைகளையெல்லாம் ஒட்ட நறுக்கி கெட்ட ரத்தமாக ஓடவிடுகிற துடியான ஆதி மனுஷி. அப்படி ஒரு மனுஷி ஒரு மாலை நேரம் எனக்குள் இறங்கி டொரோண்டோ மாநகர வீதிகளில் வலம் வந்தால் என்ன நடக்கும் என்பதை நிகழ்த்திக் காட்டும் படம் தான் காளி. நான் பால்புதுமையராகவும், திரைப்படங்களை இயக்கும் பெண்ணாகவும் இருப்பதாலும் எனக்குள் இறங்கும் காளி, பால்புதுமையர் கொடியையும் கேமராவையும் பிடித்திருக்கிறார். என்ன செய்ய?. என் மேல் இறங்கும் காளி கனடாவில் வாழும் பழங்குடி மக்களோடும், ஆப்பிரிக்க, ஆசிய, யூத, பாரசீக இனங்களை சேர்ந்த மக்களோடும் கலந்து மனித நேயத்தைக் கொண்டாடி மகிழ்ச்சியாக இருக்கிறார். கனடாவில் கஞ்சா சட்டப்பூர்வமானது என்றாலும் விலை அதிகம். பூங்காவில் படுத்துறங்கும் கனடாவின் வீடற்ற ஏழை கறுப்பின உழைக்கும் மக்களிடம் காளியை உபசரிக்க ஒரு சிகரெட் தான் இருக்கிறது. அதை அன்புடன் ஏற்றுக் கொள்கிறார் காளி. பட மூலாதாரம்,@LEENAMANIMEKALI/TWITTER இந்த போஸ்டர் இந்துக்கடவுளை அவமதிப்பதாகவும் மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும் கூறி, ட்விட்டரில் 'ArrestLeenaManimekalai' என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருவதை பார்த்தீர்களா? இதுகுறித்து என்ன நினைக்கிறீர்கள்? இந்திய அரசாங்கம் மத அடிப்படைவாத எதேச்சதிகார அரசாங்கம். சமூக செயற்பாட்டாளர்களையும், பத்திரிகையாளர்களையும், தெருவில் இறங்கிப் போராடும் மாணவர்களையும், கலைஞர்களையும் நசுக்குவதை முழுநேர வேலையாக வைத்திருக்கும் இந்த அரசாங்கத்திற்குப் பெயர் மக்களாட்சி அல்ல, பாசிசம். சிறுபான்மையினரை ஒடுக்கி மதத்தின் பெயரால் மக்களைப் பிரித்து துண்டுதுண்டாக்கி நாட்டை மெல்ல மெல்ல திறந்தவெளி இன அழிப்பு கூடமாக்கி கொண்டிருக்கும் இந்த நாசகார கும்பல் கையில் சிக்கி இந்தியாவின் ஆன்மா தனது இறுதி சுவாசத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறது. கடந்த பதினேழு ஆண்டுகால கலை வாழ்க்கையில் கொலை மிரட்டல், வன்புணர்வு செய்யப்படுவாய்-ஆசிட் அடிக்கப்படுவாய் போன்ற அச்சுறுத்தல்கள், அரசியல் கைதுகள், சென்சார் தலையீடுகள், அவதூறுகள், போலீஸ் புகார்கள், அரசியல் கைதுகள், மீடூ இயக்கத்தில் இணைந்து பாலியல் அத்துமீறல்களைப் பற்றி பேசியதால் தொடுக்கப்பட்ட வழக்குகள், அதன் அடிப்படையில் பாஸ்போர்ட் முடக்கம், அதை முறியடிக்க போராட்டங்கள் - இப்படி எல்லாவற்றையும் பார்த்தாயிற்று. எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. இருக்கும் வரை எதற்கும் அஞ்சாமல் நம்புவதைப் பேசும் குரலோடு இருந்துவிட விரும்புகிறேன். அதற்கு விலை என் உயிர் தான் என்றால் தரலாம். போஸ்டருக்காக மட்டுமே இத்தகைய சர்ச்சை ஏற்படும் என நினைத்தீர்களா? ஆவணப்படம் தடை செய்யப்பட வேண்டும் என கூறுவது குறித்து... படைப்பூக்கத்தில் இருக்கும்போது எந்த நினைப்பும் எனக்குத் தடையாக இருப்பதை நான் அனுமதிப்பதில்லை. சுய தணிக்கையை விட மோசமான தடை கலைக்கு வேறெதுவும் இல்லை. படத்தைப் பார்த்தால் இந்த hashtag கொடூரர்களின் மனம் மாறுவதற்கு வாய்ப்புண்டு. அதனால் தான் தடை செய்ய விரும்புகிறார்கள். இந்த இன்டர்நெட் யுகத்தில் அரசாங்க ரகசியங்களையே எதேச்சிதிகாரங்களால் காப்பாற்ற முடியவில்லை. கலை எப்படியாவது மக்களைப் போய் சேர்ந்து விடும். என் முந்தையப் படைப்புகள், கவிதையாகட்டும், திரைப்படங்களாகட்டும், தடைகளை சந்தித்திருக்கின்றன. அதனால் அவை வாசிக்கப்படாமலோ, பார்க்கப்படாமலோ போனதில்லை. பட மூலாதாரம்,@LEENAMANIMEKALI/TWITTER இந்திய பிரதமர், உள்துறை அமைச்சரையும் டேக் செய்து உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிலர் கூறிவருவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்? இந்தியாவில் மோதியும் அமித்ஷாவும் வைப்பது தான் சட்டம். இது உலகத்திற்கே தெரிந்த விஷயம். அதற்காக, எல்லாரும் மூச்சையும் இயக்கத்தையும் நிறுத்திக் கொள்ள முடியுமா என்ன? பயத்தை அவர்கள் விதைக்கலாம். கலைஞர்கள் அதை அறுவடை செய்ய முடியாது. நூபுர் ஷர்மா விவகாரத்தையடுத்து தேசிய அளவில் பதற்றம் உருவாகியுள்ள நிலையில், இந்த போஸ்டரால் ஏற்பட்டுள்ள சர்ச்சை தவிர்த்திருக்கக்கூடியதா? இந்த போஸ்டரை வெளியிடுவதற்கான தகுந்த நேரம் இதுவென்று கருதுகிறீர்களா? “தீவிரவாதிகளிடமிருந்து இந்து மதத்தை காப்பாற்றுங்கள்” - உதய்பூர் கொலைக்கு எதிராக சர்வதேச அளவில் எழும் கண்டனம் புல்டோசர்கள்: கட்டடங்களை இடிக்கும் ஓர் ஆயுதமாக மாறியதன் பிண்ணனி பிரதமர் நரேந்திர மோதியின் மௌனம் தற்செயலானது அல்ல: ஹமித் அன்சாரி பிபிசிக்கு பேட்டி கனடாவின் யோர்க் பல்கலைக்கழகம் சர்வதேச அரங்கில் திறம்பட இயங்கும் படைப்பாளியென என்னை வரவழைத்து உதவித்தொகை வழங்கி மேலதிக பயிற்சிக்கான களத்தையும் மாஸ்டர்ஸ் டிகிரிக்கான வாய்பையும் வழங்கியது. கனடாவில் சினிமா படிக்கும் கலைஞர்களுள் சிறந்தவர்களைத் தேர்நதெடுத்ததில் - டொரண்டோ மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகம் "பன்முக கலாசாரம்" பற்றிய படமொன்றை எடுக்கும் முகாமில் என்னை இணைத்தது. காளி உருவான கதை அது தான். இந்தப் படத்தை ஒடுக்க நினைப்பவர்கள் கலையோடு நில்லாமல் கல்விப்புலத்தையும் அவமதிக்கிறார்கள். ரொம்ப நாட்கள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இந்த உலகமும் மக்களும் சகித்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என நம்புகிறேன். மதம் குறித்த வெறுப்புணர்வு பேச்சுகளும், குற்றங்களும் அதிகமாகியுள்ள இந்த காலத்தில், ஒரு கலைஞராக நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? இந்த காலகட்டத்தில் 'கலை' என்பது உங்களை பொறுத்தவரை என்ன? செய்வதற்கும் சாவதற்கும் இடையில் கலை ஊசலாடிக்கொண்டிருக்கிறது. எனக்கு அதைவிட பற்றிக் கொள்ள ஏதும் இல்லை. https://www.bbc.com/tamil/india-62033556
  4. யுபுன் அபேகோன்: "இலங்கையில் யாரும் உதவவில்லை" - 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் புதிய சாதனைப் படைத்த வீரர் 53 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, யுபுன் அபேகோன் 100 மீட்டர் ஓட்ட பந்தயப் போட்டியில் இலங்கையின் தடகள வீரரான யுபுன் அபேகோன், புதிய சாதனையொன்றை படைத்துள்ளார். 100 மீட்டர் ஓட்டப் பந்தயப் போட்யை 9.95 நொடிகளில் கடந்து, இந்த புதிய சாதனையை யுபுன் அபேகோன் நிலைநாட்டியுள்ளார். சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் மெய்வல்லுநர் போட்டியிலேயே, இந்த சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது. இலங்கை சாதனை மற்றும் தெற்காசிய சாதனை, யுபுன் அபேகோனினால் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மகாபலிபுரத்தில் மோதும் ரஷ்யா - யுக்ரேன் - ஆனால், இது வேற மாதிரி செஸ் விளையாட்டில் செயற்கை நுண்ணறிவு சாத்தியமா? - விஸ்வநாதன் ஆனந்த் பேட்டி மித்தாலி ராஜ் ஓய்வு: இந்திய பெண்கள் கிரிக்கெட் ராணியின் சாதனைகள் என்னென்ன? தெற்காசிய வீரர் ஒருவர் 100 மீட்டர் ஓட்டப் போட்டியை, 10 நொடிகளுக்கும் குறைவான காலத்தில் நிறைவு செய்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். பட மூலாதாரம்,YUPUN ABEYKOON'S FACEBOOK PAGE போட்டியை நிறைவு செய்ததன் பின்னர், யுபுன் அபேகோன் தனது சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டு கருத்து தெரிவித்திருந்தார். ''9.95 நொடிகளில் பந்தயத்தை நிறைவு செய்தேன். இலங்கை வரலாற்றை மாற்றி அமைத்தேன். தெற்காசியாவிலும் அதனை நான் செய்தேன். என்னுடன் இருந்தமைக்கு உங்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன். பல தடவைகள் முயற்சி செய்தேன். இன்று அந்த சந்தர்ப்பம் கிடைத்தது. நன்றி. ஒன்றை கூறிக் கொள்ள வேண்டும். இதற்கான உரிமை எனக்கு உள்ளது. அத்துடன், எனது குழுவிற்கு உள்ளது. இலங்கையில் யாரும் இதற்காக உதவி செய்யவில்லை. இதனை நான் கூற வேண்டும். எனது சாதனை நேரம் பலகையில் தென்படுவதை பார்வையிடுவதற்கு காத்திருந்த, எனக்கு வாழ்த்துக்களை தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்" என யுபுன் அபேகோன் தெரிவிக்கின்றார். பட மூலாதாரம்,YUPUN ABEYKOON'S FACEBOOK PAGE யுபுன் அபேகோனுக்கு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 யார் இந்த யுபுன் அபேகோன்? கொழும்பு புறநகர் பகுதியான நீர்கொழும்பு பகுதியில் 1994ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி யுபுன் அபேகோன் பிறந்துள்ளார். பன்னல தேசிய பாடசாலையில் தனது ஆரம்ப கல்வியை தொடர்ந்த அவர், மேல் நிலை கல்வியை வென்னப்புவ பகுதியில் தொடர்ந்துள்ளார். சிறு வயதிலிருந்து விளையாட்டில் ஆர்வம் காட்டிய யுபுன் அபேகோன், ராஞ்சியில் 2013ம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய இளையோர் தடகள போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியிருந்தார். அதனைத் தொடர்ந்து, சர்வதேச ரீதியில் நடைபெற்ற பல்வேறு தடகள போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை யுபுன் அபேகோன் வென்றெடுத்துள்ளார். https://www.bbc.com/tamil/sport-62033769
  5. புதுச்சேரி: பரவும் காலராவை தடுக்க மக்கள் என்ன செய்ய வேண்டும்? - மருத்துவர் பதில்கள் 4 ஜூலை 2022, 01:30 GMT புதுப்பிக்கப்பட்டது 23 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காலரா புதுச்சேரியில் காலராவால் பாதிக்கப்பட்டு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் இணை நோய்களுடன் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் புதுச்சேரி அரசு தெரிவிக்கிறது. நிலைமையின் தீவிரத்தன்மையைக் கணக்கில் கொண்டு, அங்கு பொது சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காலரா பரவலுக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாக, யூனியன் பிரதேச ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பிரதானமாக நீர் மாசுபாட்டால் பரவும் நோயான காலராவுக்கான அறிகுறிகள் என்ன? வரும் முன் காப்பது எப்படி? வந்தால் செய்ய வேண்டியவை என்ன? ஆகியவை குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இது குறித்து எளிமையாக விளக்குகிறார் மருத்துவர் பூபதி ஜான். காலரா பரவுவது எப்படி? acute diarrhoeal disease எனப்படும், வயிற்றுப்போக்குடன் கூடிய உடல் உபாதைகள் வந்தாலே நாம் காலரா குறித்து சந்தேகம் கொள்வது நல்லது. காலரா பரவுவதற்கு இரண்டு முக்கியமான காரணிகள் உண்டு. ஒன்று நீர் மற்றொன்று உணவு. மக்கள் பயன்படுத்தும் நீர் மாசடைந்திருந்தால் அதன் விளைவாக காலரா ஏற்படலாம். அதுபோலவே உணவும் சுகாதாரமற்றதாக இருந்தால் காலரா உருவாகலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES உணவைப் பொறுத்தவரை, ஈக்கள் முதன்மையான மாசுபடுத்திகளாக இருக்கின்றன. குறிப்பாக, லேசாக அழுகிய பழங்களில் சிறுபகுதியை நீக்கிவிட்டு பயன்படுத்துவது, சுத்தமான நீரில் கழுவாமல் பயன்படுத்துவது சுகாதாரமற்ற நீரில் சமைக்கப்பட்ட உணவுகளை உண்பது ஆகியவற்றால் காலரா ஏற்படலாம். காலரா அறிகுறிகள் என்னென்ன? தொடர் வாந்தி அல்லது வாந்தி வருவது போன்ற உணர்வு வயிற்றுப்போக்கு காய்ச்சல் நா வறட்சி உடலில் நீரிழப்பு ஆகியவை காலராவின் பொதுவான அறிகுறிகள். இவை பொதுவான அறிகுறிகள் என்றாலும், காலராவில் சாதாரண நிலை, தீவிர நிலை, அதி தீவிர நிலை என்று மூன்று வகைகள் உண்டு. சாதாரண நிலை: வயிற்றுப்போக்கு வாந்தி காய்ச்சல் ஆகியவை காலராவின் சாதாரண நிலைக்கான அறிகுறிகள் குடல் நாளத்தை நலமுடன் வைத்திருக்க என்ன சாப்பிட வேண்டும்? காரைக்காலில் காலரா, வயிற்றுப்போக்கால் 700 பேர் பாதிப்பு உணவே மருந்து: கொழுப்பை சாப்பிடலாம்... ஆரோக்கியமாக வாழலாம்.. .எப்படி? தீவிர நிலை: வலியுடன் கூடிய அதிதீவிர வயிற்றுப்போக்கு அதீத தாகம் நா வறட்சி குறைந்த ரத்த அழுத்தம், நீரிழப்பால் வரும் உடல் சோர்வு கண்கள் ஒளியிழந்து போதல் கண்ணங்கள் வற்றிப்போதல் அதி தீவிர நிலை: சிறுநீரகம் செயலிழப்பு, மறதி, பார்வை மங்கல், சுயநினைவு இழப்பு ஆகியவை காலராவின் அதிதீவிர நிலையின் அறிகுறிகளாகும். வருமுன் காப்பதற்கான வழிகள் என்ன? சுகாதாரமான நீரும் உணவும்தான் வழி. நீரை எப்போதும் காய்ச்சிக் குடிக்க வேண்டும். காய்ச்சிக் குடிப்பதென்றால், நீர் சூடாகும் அளவுக்கு மட்டுமல்ல. நன்கு கொதிக்க வைத்து ஆறிய பின் பருக வேண்டும். சிலர், வெந்நீரில் சாதாரண நீரைக் கலந்து குடிக்கின்றனர். அது துளிகூட பயனற்றது. கிருமிகள் கொல்லப்பட்ட நீரில், மீண்டும் கிருமிகளைக் கலந்து குடிப்பது போலத்தான் இதுவும். எனவே, கொதிக்க வைத்த நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES பழங்கள், காய்கறிகளை கழுவி பயன்படுத்தும்போதும் கூட வெந்நீரை பயன்படுத்துவது சிறந்தது. குளிர்பதனப் பெட்டியிலிருந்து எடுத்து அப்படியே சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அத்துடன் உங்கள் பயன்பாட்டு நீர் சுகாதாரமாக உள்ளதா என்பதை உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் பரிசோதித்துக் கொள்ளலாம். இப்படியான வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் காலரா உள்ளிட்ட நீரினால் ஏற்படும் நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். ஒருவேளை வந்துவிட்டால் என்ன செய்வது? பயப்பட வேண்டியதில்லை. முதலில் மருத்துவரை அணுக வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்து மாத்திரைகளையும் உட்கொள்ளக்கூடாது. பட மூலாதாரம்,GETTY IMAGES தொடக்க நிலையில் வீட்டிலேயே, ஓ.ஆர்.எஸ் எனப்படும், உப்புக்கரைசல் (சோடியம்) வழங்குவது நீரிழப்பைத் தடுக்கும். பெரும்பாலான நேரங்களில் இந்த ஓ.ஆர்.எஸ். முறை மூலமே சரி செய்ய முடியும். இந்த ஓ.ஆர்.எஸ். பாக்கெட்டுகள் அருகிலுள்ள மருந்துக்கடைகளில் கிடைக்கும். காய்கறிகள், பழங்கள் என நீர்ச்சத்து மிக்க உணவுப்பொருட்கள் சிலவற்றை பரிந்துரையுங்கள் என்றும் சிலர் கேட்கின்றனர். ஆனால், வயிற்றுப்போக்கு இருக்கும் சமயங்களில் திட உணவுகள் பரிந்துரைக்கு ஏற்றவை அல்ல. மருத்துவரை அணுகியபின் நோயின் தீவிரத்தை பொறுத்து அவருக்கு குளுக்கோஸ் மற்றும் உடலுக்குத் தேவையான உப்புச்சத்துகள் உடலுக்குள் செலுத்தப்படும். வயது வந்த பெரியவர்களால் இதனைத் தாங்க முடியும். ஆனால், குழந்தைகள் இதனைத் தாங்க மாட்டர். அவர்களுக்குத்தான் உடனடியாக ஓ.ஆர்.எஸ். வழங்க வேண்டும். நாட்டு வைத்திய முறைகளைப் பின்பற்றுவதாக இலை, தழைகளை வழங்குவர். அது கூடாது. ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் என்றால், உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கிறார் மருத்துவர் பூபதி ஜான். முறையான மருத்துவச் சிகிச்சை வழங்கப்படாவிட்டால், காலரா உயிரைப்பறிக்கும் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியது. காலராவால் ஆண்டுதோறும் 13 லட்சம் முதல் 40 லட்சம் பேர் வரை பாதிக்கப்படுவதாகவும், 21,000 முதல் 1லட்சத்து 43ஆயிரம் பேர் வரை இறப்பதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையம் தெரிவிக்கிறது. https://www.bbc.com/tamil/india-62027418
  6. இலங்கை கச்சத்தீவும் ஸ்டாலின் கருத்தும்: "தவித்த முயலை அடிப்பது போல ஆதாயம் தேடுகிறதா இந்தியா?" யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,INDIA IN SRI LANKA/TWITTER 'இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை, இந்தியா தனது நலன்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி வருவதாக எழும் குற்றச்சாட்டு, இலங்கையில் பல்வேறு தரப்பினராலும் மிகப் பெரிய அளவில் முன்வைக்கப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை? ஏன் இந்த திடீர் சந்தேகம்? 'தவித்த முயலை அடிப்பது போல' இலங்கை விவகாரத்தில் இந்தியா நடந்து கொள்வதாக பலரும் இங்கே குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக, தற்போது நாடு இருக்கும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை வசமுள்ள கச்சதீவை - இந்தியா கைப்பற்றிக் கொள்ள வேண்டுமென்றும், இதுவே அதற்குப் பொருத்தமான சந்தர்ப்பம் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அண்மையில் தெரிவித்திருந்த கருத்து, இத்தகைய குற்றச்சாட்டை முன்வைக்க அவர்களைத் தூண்டியிருக்கிறது. "பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு, நிவாரண உதவிகளை தமிழகம் வழங்கி விட்டு, கச்சதீவை கைப்பற்றிக்கொள்ள முயற்சிப்பது, பசித்த ஒருவருக்கு நிவாரணமாக மாவையும் சீனியையும் பருப்பையும் அனுப்பி விட்டு, அவரின் கிட்னியைப் பிடுங்கி எடுப்பதைப் போன்றதொரு செயலாகும்" என, வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் காத்தலிங்கம் அண்ணாமலை பிபிசி தமிழிடமும் தெரிவித்தார். இலங்கை வந்த இந்தியத் தூதுக்குழு: தொடர்ந்து இந்தியா, தமிழ்நாடு வழங்கும் உதவிகள் என்ன? 'ஒரே நாடு, ஒரே சட்டம்' செயலணி: இனவாத ரீதியிலான பரிந்துரைகள் என முஸ்லிம்கள் கண்டனம் இலங்கையில் எரிபொருள் விற்பனைக்குத் தடை; அத்தியாவசிய சேவைக்கு மட்டும் விலக்கு சில தினங்களுக்கு முன்னர் 'நியூஸ் பெஸ்ட்' உள்ளுர் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த - முன்னிலை சோஷலிச கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்ணம்; "இந்தியா மற்றும் சீனா போன்ற பிராந்திய நாடுகள், இலங்கை நெருக்கடியை தமது தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன" என்று குற்றஞ்சாட்டியிருந்தார். "இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் பாரிய முரண்பாடுகள் உள்ளன. கடந்த மஹிந்த ஆட்சிக் காலத்தில் சீனாவுடன் சேர்ந்தவாறு இலங்கையின் பொருளாதாரத் திட்டங்கள் இருந்தன. தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை, தனது அரசியல் மற்றும் பொருளாதாரத் தேவைகளுக்காக இந்தியா பயன்படுத்திக் கொண்டிருக்கிறது," என அவர் தெரிவித்திருந்தார். மன்னாரில் - பூநகரியில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை, இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்குமாறு - இலங்கை ஜனாதிபதிக்கு இந்தியப் பிரதமர் அழுத்தங்களைக் கொடுத்ததாக, இலங்கை மின்சார சபையின் தலைவராக இருந்த எம்.எம்.சீ. பெர்டினண்டோ அண்மையில் தெரிவித்திருந்தமையும், அதன் பின்னர் அவ்வாறு கூறியமையினை அவர் வாபஸ் பெற்றமையும் நினைவு கொள்ளத்தக்கது. எம்.எம்.சீ. பெர்டினண்டோ வெளியிட்ட அந்த தகவல், இலங்கை மற்றும் இந்திய அரசியலரங்கில் பாரிய அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். மறுபுறம், கடந்த வாரம் இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் குவாத்ரா தலைமையிலான இந்திய நிதியமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளைக் கொண்ட குழுவினர், இலங்கையில் இந்தியா முன்னெடுக்கவுள்ள வேலைத் திட்டங்களை விரைவாக செயற்படுத்துமாறு அழுத்தம் கொடுத்ததாக 'சண்டே டைம்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம்,INDIA IN SRI LANKA/TWITTER மேற்படி இந்திய குழுவினர் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை தனித்தனியாகச் சந்தித்துப் பேசியிருந்தனர். கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வது மற்றும் மன்னார் - பூநகரி பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்பதற்கான திட்டங்கள் இந்தியாவின் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், சம்பூர் அனல்மின் உற்பத்தித் திட்டம் மற்றும் திருகோணமலையில் அதிக எண்ணைத் தாங்கிகளை அமைப்பதற்கான திட்டம் ஆகியவையும் இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. "சந்தர்ப்பம் பார்த்து இந்தியா உள்ளே வந்திருக்கிறது" - பேராசிரியர் பவன் இந்த நிலையில், இந்தியா மீது சுமத்தப்படும் இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கிழக்குப் பல்கலைக்கழக பொருளியல்துறைப் பேராசிரியர் ரி. பவனுடன் - பிபிசி தமிழ் பேசியபோது; "ஒரு நாடு இன்னொரு நாட்டுக்கு எந்தவித எதிர்பார்ப்புகளுமின்றி கடன்களை வழங்கி - உதவிக் கொண்டிருக்க மாட்டாது. ஒவ்வொரு உதவிக்குப் பின்னாலும் பூகோள அரசியலும், பொருளாதார நலன்களும் இருக்கும்" என்கிறார். "ஒரு நாட்டில் இயற்கை அனர்த்தமொன்று ஏற்படும்போது, ஏனைய நாடுகள் ஓரிரு தடவை ஏதிர்பார்ப்புகளின்றி உதவிகளை வழங்குவது வேறு விடயமாகும். ஆனால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலின் பொருட்டு, ஏனைய நாடுகள் தொடர்ச்சியாக உதவிகளை வழங்கும் போது, அந்த நாடுகள் சில விடயங்களை இலங்கையிடமிருந்து எதிர்பார்க்கும்". "இந்தியாவைப் பொறுத்த வரையில் இலங்கை அண்டை நாடாக இருப்பதால், இலங்கைக்கு உதவ வேண்டிய தார்மீகக் கடமையொன்று உள்ளது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் வரலாற்றில் நீண்டகாலமாக தொடர்புகள் இருந்து வருகின்றன. இலங்கை - இந்தியா ஒப்பந்தம் அதற்கு ஓர் உதாரணமாகும்". "இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தி, இலங்கையிலிருந்து சீனாவை - வெளியே அனுப்புவதையும் இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரம், முதலீடு மற்றும் வர்த்தகம் போன்ற விடயங்களில் இதுவரையில் சீனாதான் ஆதிக்கம் செலுத்தி வந்தது. இந்த விடயத்தில் இந்தியா பொறுமை காத்து வந்ததோடு, அவற்றினை 'நாம் அவதானித்துக் கொண்டிருக்கிறோம்' என, இந்தியா பல தடவை கூறி வந்தது. இப்போது சந்தர்ப்பம் பார்த்து இந்தியா உள்ளே வந்திருக்கிறது" எனக் கூறினார். பட மூலாதாரம்,PROF PAVAN "எந்தவித எதிர்ப்பார்ப்புகளுமின்றி, ஒருநாடு நமக்கு உதவிக் கொண்டிருக்கும் என, நாமும் எதிர்பார்க்க முடியாது. இப்போது வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவற்றில் தனது காலினை இலங்கையில் பதிப்பதற்கு இந்தியா முயற்சிக்கும். மின் சக்தி திட்டம், இல்மனைட் ஏற்றுமதி, கச்சதீவு விவகாரங்களில் இந்தியா உள்நுழையலாம். அதேபோன்று, மன்னார் கடற்பரப்பில் எண்ணெய் வளம் உள்ளதாக கூறப்படுகிறது அதிலும் இந்தியா ஆர்வம் காட்டலாம்" என பேராசிரியர் பவன் குறிப்பிட்டார். "இலங்கையின் எல்லாத்துறைகளிலும் மற்றைய நாடுகள் முதலீடு செய்ய முடியாது. அவ்வாறானதொரு கட்டுப்பாடு உள்ளது. உதாரணமாக தேயிலை, ரத்தினக்கல் உள்ளிட்ட சில துறைகளில் மற்றைய நாடுகள் முதலீடு செய்ய முடியாது. சுற்றுலா, ஆடை உற்பத்தி போன்ற துறைகளே முதலீடுகளுக்காக ஏனைய நாடுகளுக்கு திறந்து விடப்பட்டுள்ளன. இந்த நிலையில், இவ்வாறு கட்டுப்பாடுகள் உள்ள துறைகளில் முதலீடு செய்வதற்கான கோரிக்கைகளை இலங்கையிடம் இந்தியா முன்வைக்கக் கூடிய சாத்தியம் உள்ளது. மன்னார் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை அதானி நிறுவனத்துக்கு வழங்குமாறு இலங்கை ஜனாதிபதிக்கு இந்தியப் பிரதமர் அழுத்தங்களை வழங்கியதாக மின்சார சபையின் முன்னாள் தலைவர் கூறி விட்டு, பின்னர் அதனை மறுத்திருந்தாலும், தாங்கள் உதவி செய்யும் நாடொன்றுக்கு அவ்வாறான அழுத்தத்தை இந்தியா வழங்குவதற்கான சாத்தியங்கள் உள்ளதையும் மறுக்க முடியாது" எனவும் அவர் கூறினார். இதேவேளை வடக்கிலிருந்து இந்தியாவுக்கான போக்குவரத்தை ஆரம்பிப்பதிலும் இந்தியாவின் வர்த்தக நோக்கமே உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். இலங்கை: "தமிழக நிவாரணப் பொருட்களை நேர்மையாக வழங்குங்கள்" இலங்கை: தன்பாலின திருமணத்துக்கு முயன்ற இலங்கை பெண்ணை காப்பகத்தில் வைக்க உத்தரவு ரணிலுக்கு எதிராக திரும்பிய இலங்கை போராட்டம் - காரணம் என்ன? வடக்கிலிருந்து இந்தியாவுக்கு கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டு அதன் மூலமாக இந்தியர்கள் இங்கு வந்து வர்த்தக நடவடிக்கைகளைத் தொடங்கினால், அவர்களுடன் நம்மவர்களால் போட்டியிட முடியாமல் போகும். அதாவது இலங்கையின் உள்நாட்டுச் சந்தையை இந்தியாவுக்கு நேரடியாகத் திறந்து விடும் போது, அது இலங்கைக்கு பாதகத்தை ஏற்படுத்தும். ஆனால், வெளிநாடுகளின் முதலீடுகள் இலங்கைக்குத் தேவைதான். வெளிநாட்டு முதலீடுகளை அனுமதிக்கும் போது, அது நூறு வீதம் இலங்கைக்கு சாதமாக அமையும் என எதிர்பாக்க முடியாது. சாதகம், பாதகம் என இரண்டும் இருக்கும். அதற்குள் நாம் எவற்றினைப் பெற்றுக் கொள்ளப் போகிறோம் என்பதுதான் இங்கு முக்கியமானதாகும். 'இந்தியாவே ஒரே நம்பிக்கை' இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் நுழைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை மீனவர்கள் போராட்டங்களை நடத்துவதைப் போல், தமிழக மீனவர்களும் இலங்கையர்களால் தடுக்கப்படுவதாகக் கூறி, உண்ணா விரதங்களை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, தமிழக மீனவர்களுக்கு ஒரு தீர்வை - தமிழக முதல்வர் வழங்க வேண்டியுள்ளது, அல்லது ஒரு வாக்குறுதியை கொடுக்க வேண்டியுள்ளது. அதற்காகத்தான் அவர் கச்சதீவை மீட்க வேண்டுமெனக் கூறியிருக்கின்றார். பட மூலாதாரம்,INDIA IN SRI LANKA/TWITTER மன்னார் காற்றாலை மின் திட்டத்தை வழங்க - திறந்த விலைமனுக் கோராமல், இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளமை இலங்கையில் சர்ச்சைக்குரிய ஒரு விடயமாக மாறியுள்ளது. ஆனாலும், இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில், குறித்த திட்டத்துக்காக, திறந்த விலைமனுக் கோரினாலும் அதற்காக விண்ணப்பிக்க எத்தனை கம்பனிகள் முன்வரும் என்பதும் கேள்விக்குரியதாகும். வெளிநாட்டு முதலீடுகளை உள்வாங்குவதென்றால் அதற்கான சூழ்நிலை சரியாக இருக்க வேண்டும். அதாவது பேரினப் பொருளாதார குறிகாட்டிகள் நிலையான தன்மையுடையவையாக இருக்க வேண்டும். ஆனால் இலங்கையில் பணவீக்கம் உச்சமடைந்துள்ளது, எரிபொருள்கள் இல்லை, மின்சாரத் தடை உள்ளது, அரசியல் மற்றும் சமூக அமைதியின்மை காணப்படுகின்றன. இவ்வாறான நிலையில், இலங்கையில் முதலீடு செய்வதற்கு வெளிநாட்டவர் எவரும் முன்வர மாட்டார்கள். எனவே, இவ்வாறானதொரு சூழ்நிலையில் அதானி நிறுவனம் இலங்கையில் முதலீடு செய்வதற்கு முன்வருகின்றமையினை இலங்கைக்கு சாதகமாகவே நான் பார்க்கிறேன்" என்றும் அவர் கூறினார். "1983க்கு முன்னர் இலங்கையில் முதலீடு செய்வதற்கு வெளிநாட்டவர்கள் பலர் முன்வந்தனர். ஆனால், 83 ஜுலை கலவரத்தையடுத்து, அந்த முதலீட்டாளர்கள் திரும்பிச் சென்று, பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் அந்த முதலீடுகளைச் செய்தனர். இலங்கை விவகாரத்தில் 'தவித்த முயலை அடிப்பது' போன்ற செயலில் இந்தியா ஈடுபட்டாலும் கூட, இப்போதுள்ள நிலையில் இந்தியாதான் இலங்கைக்குள்ள ஒரேயொரு நம்பிக்கையாகும். சீனாவைப் பொறுத்தவரை இலங்கை விவகாரத்தில் வர்த்தக ஈடுபட்டினையே வெளிப்படுத்தி வருகின்றது. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை இலங்கை விவகாரத்தில் வர்த்தக ஈடுபட்டுடன் தார்மீகத்தையும் வெளிப்படுத்தி வருகின்றது. குறிப்பாக, தமிழகத்துக்கும் இலங்கையின் வடக்கு - கிழக்கு மக்களுக்கும் இடையில் ஓர் உறவு உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்த வரையில், இலங்கை விவகாரத்தில் அவர்கள் வேறொரு நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படுகின்றனர். எனவே, இந்தியாவை இப்போதுள்ள நிலையில் இலங்கையினால் தவிர்க்க முடியாது" என, பேராசிரியர் பவன் தெரிவித்தார். இலங்கைக்கான இந்திய உதவிகள் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து, இலங்கைக்கு இந்தியா 3.5 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான உதவியை வழங்கியுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயம் கடந்த வாரம் வெளிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்நியச் செலாவணிக்கு ஆதரவாக 2 பில்லியன் டாலர்களும், கடனுதவியாக 1.5 பில்லியன் டாலர்களுமாக மேற்படி உதவியை இந்தியா வழங்கியுள்ளது. மேலும் 3 பில்லியன் இலங்கை ரூபா மதிப்பிலான அரிசி, பால்மா மற்றும் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட மனிதாபிமான நிவாரணப் பொருட்களையும் இலங்கைக்கு இந்தியா அனுப்பியது. இவை இந்திய மக்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் 24ஆம் தேதி இந்தப் பொருட்கள் இலங்கையை வந்தடைந்தன. தமிழக அரசினால் வழங்கப்படும் 40000 மெட்ரிக் டன் அரிசி, 500 மெட்ரிக் டன் பால்மா மற்றும் மருந்துப் பொருட்கள் உள்ளடங்கிய பாரிய நிவாரணத்தின் இரண்டாம் கட்டமாக - மேற்படி நிவாரணத்தொகுதி அமைந்திருந்ததாகவும் இந்திய தூதரகம் குறிப்பிட்டிருந்தது. https://www.bbc.com/tamil/sri-lanka-62025955
  7. "நீ அதுக்குத்தான் லாயக்கு" - பேராசிரியருக்கு எதிராக மாணவி புகார் - என்ன நடந்தது? பிரசன்னா வெங்கடேஷ் பிபிசி தமிழுக்காக 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES "நீ ஒரு பையனிடம் தவறாக இருந்ததற்கான வீடியோ இருக்கிறது" என்று கூறி, பேராசிரியர் ஒருவர் தன் பெற்றோர் முன்பே தன்னை அவதூறாகப் பேசுவதாக மாணவி ஒருவர் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், "நான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறேன். கடந்த டிசம்பர் மாதம் கல்லூரிக் கட்டணம் கட்டுவதற்காக என் வகுப்புக்கான பொறுப்பு பேராசிரியரை பார்க்க, உரிய பாடவேளை பேராசிரியரின் அனுமதி பெற்று சென்று வகுப்புக்குத் திரும்பி வந்தேன். அப்போது, என்னை வகுப்புக்குள் அனுமதிக்காமல், ஒரு பையனை பார்க்க போனதாக என் மீது அவதூறு குற்றச்சாட்டை துறைத் தலைவர் வைத்தார். அத்தோடு என்னை வகுப்பில் இருந்தும் சஸ்பெண்ட் செய்தார். என்னை ஒழுக்கம் கெட்ட மாணவி என்றும் கடுமையான அவதூறு வார்த்தைகளால் பேசி களங்கப்படுத்தி என் பெற்றோரை அழைத்து வர கட்டளையிட்டார்'' என்று அந்த மாணவி கூறியுள்ளார். "இந்த நிலையில், நீ ஒரு பையனிடம் தவறாக இருந்ததற்கான வீடியோ இருக்கிறது" என்று கூறி, பேராசிரியர் ஒருவர் தன் பெற்றோர் முன்பே தன்னை அவதூறாகப் பேசுவதாக புகார் அளித்துள்ளார். வீடியோ காட்டி மிரட்டல் "நானும் எனது பெற்றோரும் துறைத் தலைவரை பார்ப்பதற்கு வெகு நேரம் காத்திருந்தும் அனுமதிக்காமல் பலமுறை எங்களை காக்க வைத்தார். அவரை பார்க்க அனுமதிக்கப்பட்டபோது, எங்களுடைய மகள் மீது எந்தத் தவறும் இல்லாமல் "ஏன் என் மகளின் கல்விக்கு இடையூறு செய்தீர்கள்" என கேட்டனர். அதற்கு, துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் சேர்ந்து என்னை மிரட்டினார்கள். "நீ ஒரு பையனிடம் தப்பாக இருந்த வீடியோ ஆதாரம் இருக்கிறது என்று கூறி தன் செல்போனில் இருக்கும் ஒரு வீடியோவை காட்டி பேராசிரியர் மிரட்டி அவதூறாக பேசினார். என் பெற்றோர் முன்னிலையிலேயே "நீ எல்லாம், இங்கே படிக்கவா வர்ற, தப்பா நடக்கத்தான் வர்ற, நீ அதுக்குத் தான் லாயக்கு" என்று என்னை மிகவும் அவமானப்படுத்தி அனுப்பி வைத்தனர்" என அந்த மாணவி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES மன உளைச்சலால் தற்கொலைக்கு முயன்றதாகவும் அந்த மாணவி கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கல்லூரி முதல்வரிடம் தான் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிறார் அந்த மாணவி. இந்த நிலையில், தேர்வறையில் தமது ஹால் டிக்கெட்டை பறிப்பது, தேர்வு எழுத விடாமல் இடையூறு செய்வது போன்ற நடவடிக்கைக்கு தாம் உள்ளாவதாகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்த தனக்கு கல்வி ஒன்றே எதிர்காலம். ஆகவே தன்னைப் போன்ற மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மாணவி மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். துறைத் தலைவர் விளக்கம் இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்று சம்பந்தப்பட்ட கல்லூரியின் துறைத்தலைவரிடம் பிபிசி கேட்டது. "பெற்றோருடன் சந்திக்க வந்த மாணவியிடம், "என்ன இருந்தாலும், பேராசிரியரை அவதூறாக பேசியிருக்கக் கூடாது. அதற்காக மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடு என்று தான் கேட்டேன் ஆனால் அந்த மாணவி தற்போது வரை மன்னிப்புக் கடிதம் எழுதி கொடுக்கவில்லை," என்கிறார் துறைத் தலைவர். இதையடுத்து அவரது தரப்பு நிலையை விவரிக்குமாறு கேட்டோம். "அந்த மாணவி வகுப்பறையில் இருந்து வெளியேறிய பிறகு வகுப்பறையில் இருப்பது போல் வருகை பதிவேட்டில் எவ்வாறு குறிப்பிட முடியும்? ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பு? அதனால் சம்பந்தப்பட்ட மாணவியிடம் பேராசிரியர் எங்கே போனீங்க என்று கேட்டதற்கு? வருகைப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டாம் என அலட்சியமாக பதில் கூறி வகுப்பறையை விட்டு வெளியேறி விட்டார். துறைத் தலைவர் என்ற முறையில் சம்பந்தப்பட்ட பேராசிரியர் என்னிடம் இது சம்பந்தமாக கூறியிருந்தார். அதனால் பெற்றோருடன் வகுப்பறைக்கு வரும்படி மாணவியிடம் அறிவுறுத்தியிருந்தேன். இந்தியாவில் கருத்தடையின் சுமையை பெண்களே சுமப்பது ஏன்? உதய்பூர் படுகொலை: "குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும்" - கள நிலவரம் சென்னையில் 5 பேர் மரணம்: பாதாள சாக்கடைக்குள் மனிதர்கள் இறக்கப்படுவது ஏன்? மேலும், அந்த மாணவி ஹால் டிக்கெட்டில் கையொப்பம் வாங்குவதற்கு என்னிடம் கடைசிவரை வரவே இல்லை. மாணவி வராத பட்சத்தில் நான் எவ்வாறு கையெழுத்திட முடியும்? அந்த மாணவி தொடர்பாக வீடியோ எடுப்பதற்கு எங்களிடம் எதுவும் இல்லை. அது அவசியமும் இல்லை என்கிறார் துறைத் தலைவர். "சாதி பாகுபாடு பார்ப்பதாக என் மீது புகார் கொடுக்கிறார்கள். மாணவர்கள் குறிப்பிடும் அதே சாதியை சார்ந்தவர் தான் நான். அப்படி இருக்கும்போது, நான் ஏன் பாகுபாடு பார்க்கப் போகிறேன்? சம்பந்தப்பட்ட மாணவி சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டிருப்பதனால் எங்களால் எதுவும் செய்ய முடியாமல் நிற்கிறோம். இதுதான் யதார்த்த நிலைப்பாடு. அந்த மாணவிக்கு கவுன்சிலிங் நிச்சயம் தேவைப்படுகிறது," என்கிறார் துறைத் தலைவர். இன்னொரு பேராசிரியரே காரணம் "தனது பிரிவில் பணிபுரியும் இன்னொரு பேராசிரியரே பிரச்னைக்கு முழுக்க காரணம்," என்றும் கூறுகிறார் துறைத் தலைவர். அவர் குறித்து கல்லூரி முதல்வரிடம் மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக புகார் அளித்து வந்ததாகவும் தன்னைப் போன்றே பலரும் புகார் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES அவர் குறிப்பிட்ட பேராசிரியரிடம் நாம் பேசினோம். அவரோ, ``பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகார் மீது கல்லூரி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காமலும், சம்பந்தப்பட்ட நபர்கள் மாணவிக்கு உரிய விளக்கம் அளிக்காமலும், மாணவியின் புகாரை திசை திருப்புவதற்காக சம்பந்தமில்லாமல் என் மீது பழி போடுகிறார்கள்," என்கிறார். இந்த நிலையில், மாணவி அளித்த மனித உரிமைகள் ஆணைய புகார் சமூக செயல்பாட்டாளர்களின் கவனத்தையும் பெற்றிருக்கிறது. "கல்லூரி மாணவியிடம் இவ்வாறு நடந்து கொள்வது நிச்சயம் முறை அல்ல, அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என்கிறார் சமூக ஆர்வலர் ஹென்றி திபேன். இது தொடர்பாக அவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், "எந்த பெண்ணையும் அவரது அனுமதி இன்றி புகைப்படம் எடுப்பது தனிமனித உரிமை மீறல். அதிலும் மிரட்டுவது குற்றவியல் தண்டனைக்கு உட்பட்டது. சம்பந்தப்பட்ட மாணவி தலித் மாணவி என்பதனால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நிச்சயம் பழங்குடியினர்/பட்டியல் பிரிவினருக்கு எதிராக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அதில் மாணவி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத கல்லூரி நிர்வாகத்தினரையும் இணைக்க வேண்டும்," என்றார். கடைசியாக பல்கலைக்கழக முதல்வரிடம் பேசியபோது, "மாணவியின் புகார் குறித்து விசாரிக்க குழு அமைத்துள்ளோம். அதன் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. அதன் முடிவில்தான் எதையும் கூற முடியும்," என முடித்துக் கொண்டார். https://www.bbc.com/tamil/india-62019950
  8. இலங்கை: "தமிழக நிவாரணப் பொருட்களை நேர்மையாக வழங்குங்கள்" 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,HIGH COMMISSION OF INDIA IN COLOMBO, SRI LANKA இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று (03/07/2022) வெளியான சில முக்கிய செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தமிழக அரசாங்கத்தால் கிடைக்கப்பெற்ற நிவாரணப் பொருட்கள் எந்த விதமான பாரபட்சமுமின்றி அனைத்து மக்களுக்கும் நேர்மையான முறையில் வழங்கப்பட வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளதாக தமிழ் மிரர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், "முதலாவது தொகுதி நிவாரணப் பொருட்கள் கடந்த மாதம் வந்தடைந்த நேரத்தில், மலையக மக்களுக்கு சரியான முறையில் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருந்தது. இப்போது வந்துள்ள இரண்டாவது தொகுதியில் வந்துள்ள நிவாரணப் பொருட்களை அத்தகைய குறைபாடுகள் எதுவுமின்றி சரியான முறையில் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதோடு, தமிழக அரசியின் நிவாரணப் பொருட்களை வழங்கும் போது, பதுளை மாவட்டத்தில் உள்ள சில பிரதேசங்களில் வாகனப் போக்குவரத்துச் செலவுக்காக சாதாரண மக்களிடம் தலா 50 ரூபா வீதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகிருந்தன. இது வேதனைக்குரிய விடயம் ஆகும்," என்று அவர் தெரிவித்துள்ளார். 'ஒரே நாடு, ஒரே சட்டம்' செயலணி: இனவாத ரீதியிலான பரிந்துரைகள் என முஸ்லிம்கள் கண்டனம் இலங்கையில் எரிபொருள் விற்பனைக்குத் தடை; அத்தியாவசிய சேவைக்கு மட்டும் விலக்கு இலங்கை: தன்பாலின திருமணத்துக்கு முயன்ற இலங்கை பெண்ணை காப்பகத்தில் வைக்க உத்தரவு மேலும், "சாதாரண மக்களின் ஏழ்மை நிலையை அறிந்து நிவாரணம் வழங்குவதற்காக இலவசமாக வழங்கப்பட்டுள்ள பொருட்களுக்கு "வாகனச் செலவு" என்று கூறி பணம் அறவிட்டுள்ளமை கண்டிக்கத்தக்க விடயம் ஆகும். இவ்வாறு செயற்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், ஒரு சிலரின் சமூக விரோத செயல்கள் ஊடாக மலையகத்துக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதோடு, தமிழக அரசுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தி விடும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே, இலவசமாக வழங்கபப்டும் பொருட்களை இலவசமாகவே விநியோகிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். சிலரின் தான்தோன்றித் தனமான செயற்பாடுகள் மூலம் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நிவாரணங்கள் கிடைக்காமல் போகக் கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டால் அது எமது சமூத்துக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்," என்று தெரிவித்துள்ளார் என்கிறது அந்த நாளிதழ் செய்தி. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் போலீஸ் அதிரடிப் படை எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் ஏற்படும் அமைதியின்மையைக் கட்டுப்படுத்த போலீஸ் விசேட அதிரடிப்படையினர் (Special Task Force) ஈடுபடுத்தப்படவுள்ளதாக நியூஸ் ஃபர்ஸ்ட் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில், "அமைதியின்மையில் ஈடுபடுவோர் போலீஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று பொது பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் தெரிவித்தார். இதேவேளை, போலீஸ் உத்தியோகத்தர்களுக்காக 4000 சைக்கிள்களை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், போலீஸாரின் கடமைகளை இலகுவாக்கும் நோக்கில் இந்தத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. எரிபொருள் நெருக்கடி காரணமாக சில விசாரணைகள் மற்றும் களப்பணிகள் தடைபட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இத்தகைய நிலைமையைக் கட்டுப்படுத்தும் வகையில், இந்தத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/sri-lanka-62025665
  9. சென்னையில் 2 நாட்களில் ஐவர் மரணம்: பாதாள சாக்கடைக்குள் மனிதர்கள் இறக்கப்படுவது ஏன்? ஆ.விஜயானந்த் பிபிசி தமிழுக்காக 1 ஜூலை 2022 பட மூலாதாரம்,SUDHARAK படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் சென்னையில் கடந்த 2 நாட்களில் மட்டும் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'சென்னையைப் போலவே கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் இதுபோன்ற பிரச்னைகள் உள்ளன. வேலைவாய்ப்பின்மை காரணமாகத்தான் பலரும் இந்தத் தொழிலுக்கு வருகின்றனர். இவர்களைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை'' என்கின்றன தொழிலாளர் சங்கங்கள். தொடரும் மரணங்கள் சென்னை, மாதவரம் 3-ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட முத்து மாரியம்மன் கோவில் தெருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டது. அதை சரிசெய்யும் பணியில் கடந்த 27ஆம் தேதி நெல்சன் (26), ரவிக்குமார் (40) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது கழிவுநீர்த் தொட்டியின் மூடியைத் திறந்தபோது விஷவாயு தாக்கி நெல்சன் என்பவர் உள்ளே விழுந்து விட்டார். அவரைக் காப்பாற்றுவதற்காகச் சென்ற ரவிக்குமாரும் விஷவாயுவால் தாக்கப்பட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மெட்ரோ வாரிய ஊழியர்கள், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு முயற்சியில் உயிரிழந்த நிலையில் நெல்சன் மீட்கப்பட்டார். மற்றொரு ஊழியரான ரவிக்குமாரை சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ரவிக்குமாரும் இறந்து விட்டார். இந்த விவகாரத்தில், மெட்ரோ வாரியத்தின் ஒப்பந்ததாரர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து இறந்துபோன நெல்சனின் குடும்பத்துக்கு 15 லட்ச ரூபாயை நிவாரணமாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்த சம்பவத்தின் துயரம் அடங்குவதற்குள் சென்னை, பெருங்குடியில் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யச் சென்ற இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதாள சாக்கடை சுத்தம் செய்த யாரும் இறக்கவில்லை என இந்திய அரசு சொல்வது உண்மையா? தமிழ்நாட்டில் தீண்டாமை கொடுமை கடைபிடிக்கும் 445 ஊர்கள்: ஆர்.டி.ஐ மூலம் வெளியான தகவல் என்ன? “பறையா” என்ற ஆங்கில சொற்பிரயோகம் தொடங்கியது எப்படி? – ஒரு வரலாற்றுப் பார்வை பெருங்குடி அதிர்ச்சி பெருங்குடியில் உள்ள காமராஜர் நகரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 20 அடி ஆழமுள்ள கழிவுநீர்த் தொட்டியில் கடந்த 29-ஆம் தேதியன்று இரவு பள்ளிக்கரணையைச் சேர்ந்த பெரியசாமி, தட்சிணாமூர்த்தி ஆகியோர் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் இறங்கினர். அப்போது விஷவாயு தாக்கியதில் இருவரும் மயங்கி விழுந்தனர். இதில் நிகழ்விடத்திலேயே பெரியசாமி இறந்துவிட்டார். மற்றோர் ஊழியரான தட்சிணாமூர்த்தி, மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார். இது தொடர்பாக துரைப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், மடிப்பாக்கத்திலும் ஆவடியிலும் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் பணியின்போது இரண்டு பேர் உயிரிழந்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னையைப் போலவே, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கோவை எனப் பல மாவட்டங்களில் சாக்கடைக் குழிகளில் இறங்கி இறந்து போனவர்களின் எண்ணிக்கை என்பது அதிகரித்தபடியே உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் உள்ள சரவணம்பட்டி பகுதியில் தனியார் குடியிருப்பு ஒன்றில் செப்டிக் குழிக்குள் இறங்கிய மூன்று தூய்மைப் பணியாளர்கள் இறந்துபோன சம்பவம் நடந்தது. அதேபோல், ஸ்ரீபெரும்புதூரில் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும்போது வீட்டின் உரிமையாளர் உள்பட ஆறு பேர் இறந்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 100 பேரில் 35 பேர் யார்? பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் ''சாக்கடையைச் சுத்தம் செய்யும் பணியின்போது மரணமடையும் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தப் பணியை பட்டியலின சமூகத்தினர் செய்வதாகத்தான் பொதுவான பார்வை இருக்கிறது. ஆனால், சென்னை மெட்ரோ குடிநீர் வாரியத்தில் பிற்படுத்தப்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பலரும் இந்த வேலையைச் செய்து வருகின்றனர். இந்தப் பணி செய்கிறவர்களில் 100 பேரில் 35 பேர் பி.சி, எம்.பி.சியாக உள்ளனர். இடஒதுக்கீடு குறித்தெல்லாம் பேசினாலும் இந்தப் பணியைச் செய்யும் பிரிவினரை முறைப்படுத்தும் வேலைகள் நடக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன் ஆவடியில் இறந்துபோனவர், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் தான். கிராமப்புறங்களில் வேலையில்லாமல் நகரத்தை நோக்கி வேலைக்காக வருகின்றனர். இவர்களுக்கு எந்தவித வேலையும் கிடைப்பதில்லை; இந்த வேலைதான் கிடைக்கிறது. அதனாலேயே செப்டிக் குழிகளைச் சுத்தப்படுத்துவதற்கு எந்தவித உபகரணமும் இல்லாமல் இவர்களை இறக்கிவிடுவதால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரிக்கின்றன,'' என்கிறார், சி.பி.எம் கட்சியின் மதுரவாயல் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ பீமாராவ். இவர் சென்னை மெட்ரோ குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கிறார். இது ஒரு சமூகக் குற்றம் பிபிசி தமிழுக்காக சில தகவல்களை பீமாராவ் விவரித்தார். ''மலக் குழிக்குள் இறங்குவதால் ஏற்படும் மரணங்களைத் தடுக்கும் வகையில் நவீன இயந்திரங்களை மெட்ரோ குடிநீர் வாரியம் கொண்டு வந்தது. ஆனால், தனியார் குடியிருப்புப் பகுதிகளில் சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டால் சில தனியார் ஏஜென்சிகள், தொழிலாளர்களைத் தவறாகப் பயன்படுத்துகின்றன. இவ்வாறு குழிக்குள் இறங்கக் கூடாது என்று 2013-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அது சட்டமாகவும் உள்ளது. மனிதனை சாக்கடைக்குள் இறக்கி விட்டால் தண்டனை கொடுக்க வேண்டும் என்பது சட்டமாக இருந்தாலும் அது முறையாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை',' என்கிறார். மாதவரத்தில் சாக்கடைக்குள் இறங்கிய நபர் இறந்தது தொடர்பாகப் பதிவான முதல் தகவல் அறிக்கையில் (FIR No: 433/2022) சட்டப்பிரிவு 337, 304(ஏ) ஆகிய பிரிவுகளில் தற்செயலாக நடந்த விபத்தாகத்தான் பதிவு செய்துள்ளதாகவும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் 'மூச்சுத் திணறல்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால், இதைக் கொலை வழக்காகப் பதிவு செய்யவில்லை எனக் குறிப்பிடும் பீமாராவ், ''இதுபோன்ற மரணங்களின்போது அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்," என்றார். கோவை, மதுரை போன்ற வளர்ந்து வரக்கூடிய பெருநகரங்களில் இதுபோன்ற பிரச்னைகள் வருகின்றன. மாதவரத்தில் உயிரிழந்த நெல்சன் என்ற நபரின் வயது 26 தான். அவருக்கு சிறு வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளன. தற்போது அந்தக் குடும்பம் நிர்கதியாகிவிட்டது. மற்றோர் ஊழியரான ரவிக்குமாரின் குடும்பமும் தவிக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES/SUDHARAK OLWE படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கடந்த 29ஆம் தேதி சென்னை, வானுவம்பேட்டையில் கழிவுநீர் குழாயை சுத்தப்படுத்தும்போது ஒருவர் இறந்துவிட்டார். கடந்த 2 நாள்களில் மட்டும் சாக்கடை குழிக்குள் இறங்கிய வகையில் 5 பேர் இறந்துவிட்டனர். இது மனித சமூகமே வெட்கப்படக் கூடிய ஒன்று. விலங்குகளை வதைப்படுத்தினால் சட்டம் தண்டிக்கிறது. சக மனிதன் மரணிக்கும்போது அதை வேடிக்கை பார்ப்பது என்பது சமூகக் குற்றம். இதுபோன்ற விவகாரங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும் யாரும் தண்டிக்கப்படுவது இல்லை. இந்த வழக்குகளை நீர்த்துப் போக வைக்கும் வேலைகளே நடக்கின்றன,'' என்கிறார். மேலும், ''சென்னையில் 50, 100 வருடங்களாக இதே வேலையை பல தலைமுறைகளாகப் பார்த்து வருகிறவர்களும் உள்ளனர். இதை நவீன சமூகத்தின் அவலமாகத்தான் பார்க்கிறோம். இது வேலைவாய்ப்போடு பின்னப்பட்டது என்பதால் அரசுதான் உரிய தீர்வைக் கொடுக்க வேண்டும்,'' என்கிறார். ''சாக்கடையைச் சுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் ஊதியம் என்பது குறைவாக உள்ளது. நாளொன்றுக்கு 414 ரூபாய் சம்பளமாகக் கிடைக்கிறது. அதுவும் சரியான முறையில் கிடைப்பதில்லை. அதனால் பணிநேரம் போக வேறு எங்காவது வேலை கிடைத்தால் அதை ஏற்றுக் கொண்டு செல்கிறார்கள். அதைத் தவறு எனக் கூறினாலும் அவர்கள் கண்டுகொள்வதில்லை. போதிய வருமானம் இல்லாததால் மது அருந்திவிட்டு வேலைக்குச் செல்கின்றனர். அவர்களை அறிவுறுத்தினாலும் எங்களைத் தவறாக நினைக்கும் போக்கு உள்ளது,'' என்கிறார், சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தின் பொதுச் செயலாளர் சீனிவாசலு. மெட்ரோ குடிநீர் வாரியம் சொல்வது என்ன? இதுதொடர்பாக, சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவரை பிபிசி தமிழுக்காகத் தொடர்பு கொண்டோம். பெயர் குறிப்பிட மறுத்துப் பேசிய அந்த அதிகாரி, '' மாதவரத்தில் மெட்ரோ குடிநீர் வாரியம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணியின்போது ஒருவர் இறந்துபோனார். அங்கு இறந்த நபருக்கு 15 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அங்கு பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மீது காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டு, அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. தற்போது அந்த ஒப்பந்ததாரரைக் கைது செய்துவிட்டனர். மாதவரத்தில் கழிவுநீர்த் தொட்டிக்குள் இறங்கி யாரும் வேலை பார்க்கவில்லை. ஜெட் ராடார் இயந்திரத்தை வைத்துப் பணிகளைத் தொடங்குவதற்கு முன் எட்டிப் பார்த்தபோது அந்த நபர் தவறி விழுந்துவிட்டார். அந்த நபரைக் காப்பாற்றச் சென்ற நபரும் தவறி விழுந்து இறந்துவிட்டார்,'' என்கிறார். அமெரிக்காவில் சாதிப் பாகுபாடு: தேன்மொழி உரையை ரத்து செய்த கூகுள் - பதவி விலகிய அலுவலர் கும்பகோணம் காதல் தம்பதி ஆணவக் கொலை செய்யப்பட்டனரா? - பிபிசி கள ஆய்வில் புதிய தகவல்கள் பிர்ஸா முண்டா: பழங்குடிகளால் கடவுளாக போற்றப்படும் இவர் யார்? தொடர்ந்து பேசியவர், '' உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, மனிதன் இறங்கும் குழியாக (Man hole) இருந்ததை இயந்திரக் குழி (Machine hole) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுவிட்டது. இப்போது யாரும் குழிக்குள் இறங்கி வேலை பார்ப்பதில்லை. அவ்வாறு இயந்திரம் பயன்படுத்தும்போது போதிய உபகரணங்களை அணிந்து கொண்டு வேலை பார்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். சென்னைக்குள் மனிதர்கள் யாரும் சாக்கடைக்குள் இறங்கி வேலை பார்ப்பதில்லை. சென்னை மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடைகள் அமைக்கப்படவில்லை. இதுபோன்ற இடங்களில் மலக் குழிகளை சுத்தப்படுத்துவதற்கு முன் அதன் மூடியைத் திறந்துவிட்டு 15 நிமிடம் காத்திருக்க வேண்டும் என அறிவுரைகளை வழங்கியுள்ளோம். அதற்காகப் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. சில தனியார் ஏஜென்சிகள் மூலமாக சுத்தப்படுத்தும் பணிக்கு ஊழியர்களைப் பயன்படுத்துகின்றனர். இதனால்தான் பிரச்னை ஏற்படுகிறது,'' என்கிறார். ''போதிய சம்பளம் இல்லாததும் ஒரு காரணம் என்கிறார்களே?'' என்றோம். ''சம்பளத்தைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு வேலைக்கும் அடிப்படை சம்பளத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலங்கள் தான் நிர்ணயிக்கின்றன. அதன்படியே கொடுக்கப்படுகிறது. ஊழியர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன. மாதவரத்தில் நடந்த சம்பவம் என்பது ஒரு விபத்து. தவிர, பாதாள சாக்கடை குழிக்குள் யாரும் இறங்குவதில்லை. அதைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம்,'' என்கிறார். https://www.bbc.com/tamil/india-62002014
  10. ஆந்திரா விபத்து - அணில் ஏறினால் உயர் அழுத்த மின் கம்பிகள் அறுந்து விடுமா? ஷங்கர் வடிசேட்டி பிபிசி தெலுங்கு சேவைக்காக 33 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆந்திராவில் உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர். மின் கம்பத்தில் அணில் ஏறியதால் மின் கம்பத்தில் மின் கசிவு ஏற்பட்டு உயர் அழுத்த கம்பிகள் அறுந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். விலங்குகள், பறவைகள் உண்மையாகவே மின் கம்பிகளை சேதப்படுத்துகின்றனவா? ஏதேனும் காரணத்தால் மின்சார கம்பி அறுபட்டால், மின்சாரம் தடைபடுவதற்கான வாய்ப்பு உள்ள நிலையில், சத்தியசாயி மாவட்டம் தாடிமரி மண்டலத்திலுள்ள சில்லகொண்டையப்பள்ளியில் ஜூன் 30-ஆம் தேதி எப்படி ஐவர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்தது? இதுபோன்ற சூழல்களில் மின்சாரத்தைத் துண்டிக்கக்கூடிய பிரேக்கர் கட்டமைப்புகளுக்கு என்ன ஆனது? இது அணிலின் தவறா? இந்தச் சம்பவம் நடந்த சிறிது நேரத்துக்குப் பிறகு, ஆந்திர பிரதேச தெற்கு மின் விநியோக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஹரிநாத ராவ் காணொளி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு, விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறினார். "அணில் ஒன்று மின்கம்பத்தில் ஏறி கம்பியை அறுத்து விட்டதால், அந்த வழியாகச் சென்ற ஆட்டோ மீது மின் கம்பி விழுந்தது. அப்போது தீ பிடித்த ஆட்டோவில் இருந்தவர்கள் உயிரிழந்தனர். அனந்தபூரம் மூத்த பொறியாளரை சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளோம். தொழில்நுட்பக் குழுவிடம் விரிவாக அறிக்கையை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளோம்," என்று அவர் தெரிவித்தார். மேலும் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதாக உறுதியளித்தார். அதன்பிறகு, சம்பவ இடத்திலிருந்த காவல்துறை அதிகாரிகளும் தர்மாவரம் சட்டமன்ற உறுப்பினர் கேதிரெட்டி வெங்கடாமிரெட்டியும் இதே கருத்தை மீண்டும் கூறினர். தமிழ்நாடு மின் தடை: ஓயாத அணில் சர்ச்சை, செல்லூர் ராஜூவை மிஞ்சினாரா செந்தில் பாலாஜி? அண்ணாமலை VS செந்தில் பாலாஜி: ஊழல் தொடர்பாக ட்விட்டரில் தொடரும் மோதல் திருவண்ணாமலையில் விளை நிலங்கள் வழியாக உயர் மின் அழுத்த கம்பிகள்: விவசாயிகள் இழப்பீடு பெற்றது எப்படி? "ஆட்டோவுக்கு மேலிருந்த மேற்கூரை மீது மின் கம்பி விழுந்ததால் இவை அனைத்தும் ஏற்பட்டன," என்று அவர் கூறினார். அரசு அதிகாரிகளும் ஆளும் கட்சித் தலைவர்களும் சாக்குப்போக்கை முன்னிறுத்திய விதம் குறித்து எதிர்கட்சிகள் விமர்சித்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள், தவறான வயரிங் மற்றும் மோசமான பராமரிப்பு காரணமாக விபத்து நடந்ததாகக் குற்றம்சாட்டினர். பட மூலாதாரம்,GETTY IMAGES துணை மின் நிலைய பராமரிப்பின்மை காரணமா? ஆட்டோவில் பயணித்த 13 பேரில் 5 பேர் உயிரிழந்தனர், 6 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், உயர் அழுத்த மின்கம்பிகள் அணில்களால் அறுந்து விழுவது அரிது என்பது மின்சாரத் துறையில் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற டி.வி.ராவின் கருத்து. "அணில்களால் உயர் அழுத்த மின் கம்பிகள் அறுந்து விழும் சம்பவங்களை நான் பார்த்ததில்லை. ஆனால், வயர்களைச் சரிசெய்யும் போது பாம்பு, அணில்களால் விபத்துகள் ஏற்படுகின்றன. அந்தச் சூழ்நிலைகளில், அவற்றைச் சரிசெய்யும் பணியாளர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது. இதுபோன்ற விபத்துகளைக் கட்டுப்படுத்த பிரேக்கர்கள் சமீபகாலமாகப் பயன்படுத்தப்படுகின்றன. அதனால் விபத்துகள் தவிர்க்கப்பட்டுள்ளன. அங்கு விபத்து ஏற்பட்டதற்கு அணில் காரணம் என்று கூறுவது முரணாக உள்ளது. அதிகாரிகளும் அரசியல் தலைவர்களும் அணில் தான் காரணம் என்று கூறியது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. இதற்கு துணை மின்நிலைய நிர்வாகத்தின் பராமரிப்பின்மை தான் காரணம். அந்தப் பிரச்னை அடையாளம் காணப்பட வேண்டும்," என்று பிபிசியிடம் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES பிரேக்கர்களுக்கு என்ன ஆனது? ஏன் வேலை செய்யவில்லை? இயற்கையாகவே காகம், சிட்டுக்குருவி போன்ற பறவைகள் மின் கம்பங்களில் அமர்வதையும் அணில் போன்ற உயிரினங்கள் மின் கம்பங்களில் ஏறிச் செல்வதைக் காணலாம். இதுபோன்ற நேரங்களில் ஏதும் பிரச்னை ஏற்பட்டால், மின் விநியோகத்தைத் தடை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு, அவற்றைச் சரி செய்வது இயற்கையான செயல்முறையாகும். அதன்படி, சில்லகொண்டையப்பள்ளி விபத்தில் அணில் பாய்ந்து கம்பி அறுந்தால் மின் விநியோகத்தை நிறுத்த வேண்டும். அதற்காக நிறுவனப்பட்டிருக்கும் பிரேக்கர்கள் வேலை செய்ய வேண்டும். பன்னாட்டு நிறுவனத்தில் மின்சக்தி பொறியாளராகப் பணியாற்றும் என்.ராம் மோகன், போதிய அளவு பிரேக்கர்கள் இல்லாததும் மின்சாரம் துண்டிக்கப்படாமல் இருந்ததற்கு முக்கியக் காரணம் என்று கருத்து தெரிவிக்கிறார். சென்னையில் 5 பேர் மரணம்: பாதாள சாக்கடைக்குள் மனிதர்கள் இறக்கப்படுவது ஏன்? ஆந்திர அரசியலில் குதிக்கிறாரா நடிகர் விஷால்? அவரே தந்த விளக்கம் நரேந்திர மோதி, அமித் ஷாவின் 'தென்னிந்திய அரசியல்' உத்தி 11 கிலோ வாட் துணை மின்நிலையத்தில் உள்ள பிரேக்கர்கள் ஏதேனும் சிறிய பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக வேலை செய்யும். ஏதேனும் பிரச்னையெனில், 33 கிலோவாட் துணை மின் நிலையத்தில் பிரேக்கர்கள் வேலை செய்ய வேண்டும். இரண்டிலும் ஏதாவது ஒன்றிலாவது வேலை செய்திருந்தால் இவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டிருக்காது. ஏன் பிரேக்கர்கள் வேலை செய்யவில்லை என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். சமீபகாலமாக பிரேக்கர்களை தேவைக்கேற்ப பயன்படுத்துவதில்லை. மூன்று லைன்களுக்கு தனித்தனி பிரேக்கர்கள் இருக்க வேண்டிய இடத்தில் அதற்கு எதிர்மாறாக நடக்கிறது. சில இடங்களில் அவை இருக்கிறதா என்றே தெரியவில்லை. இதுபோன்ற விபத்துகள் நடக்கும்போது, உண்மையில் பிரேக்கர்கள் இருக்கின்றனவா இல்லையா என்ற சந்தேகம் ஏற்படுகிறது," என்று அவர் பிபிசியிடம் கூறினார். ராம் மோகன், சாலையிலுள்ள உயர் அழுத்த மின் கம்பிகளில் ஏதேனும் சிக்கல் இருந்தால், அபாயத்தைக் கட்டுப்படுத்தப் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES தரத்தில் குறைபாடுகள் மின்சார விநியோகத்தில் பயன்படுத்தப்படும் உபகரணங்களின் தரம் பற்றியும் கேள்விகள் எழுகின்றன. குறிப்பாக உயர் அழுத்த கம்பிகளுக்குப் பதிலாகக் குறைந்த அழுத்த கம்பிகளைப் பதித்துள்ளதாகச் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். "மாநிலத்தின் பல இடங்களில் மின்சாரத் துறை பயன்படுத்தும் கருவிகள் குறித்துப் பல புகார்கள் வந்துள்ளன. ஆனால், மின்சாரத் துறை அதில் கவனம் செலுத்தவில்லை. தனியார் ஒப்பந்ததாரர்கள் தன்னிச்சையாகச் செயல்படுவதால், அதிகாரிகளைக் கண்டு கொள்வதில்லை. தரம் குறித்த விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது. ஊழியர்களும் இதனால் சிரமப்படுகின்றனர். சில நேரங்களில் மின் கடத்தில் மிகவும் மோசமாக இருப்பதால் திருப்பி அனுப்பப்படுகின்றன. இன்னும் மின் கம்பிகள், மின் கடத்திகள், மின் கடத்தா பொருட்களின் தரம் குறித்து சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். அவ்வப்போது கண்காணிக்க வேண்டும்," என்றார் மின்வாரிய தொழிலாளர் சங்கத் தலைவர் எல்.ராகவராவ். 1104 சங்கத்தின் தலைவரான ராகவ்ராவ் பிபிசியிடம் பேசியபோது, ஊழியர்கள் பற்றாக்குறை மற்றும் பணி அழுத்தம் போன்ற பிரச்னைகளை அவர்கள் அனைவரும் எதிர்கொள்கின்றனர். விதிகளின்படி, குறைந்தது 1000 இணைப்புகளுக்கு ஒரு மெயின் மைன் இருக்க வேண்டும். ஆனால், தற்போது 5000 இணைப்புகளுக்கு ஒரு மெயின் லைன் தான் இருக்கிறது," என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES "கட்டண உயர்வில் தான கவனம் உள்ளது, பராமரிப்பில் அல்ல" - பவன் கல்யாண் இரண்டு மாதங்களுக்கு முன், எலுரு மாவட்டம், ஜங்காரெட்டி குடேம் அருகே இத்தகைய விபத்து நடந்தது. பைக்கில் சென்ற போது மின்சார கேபிள் அறுந்து விழுந்ததில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சமீபத்திய சம்பவத்தில் 5 பேர் உயிருடன் எரிந்து கருகினர். இதுபோன்ற விபத்துகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஜன சேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் கோரிக்கை விடுத்துள்ளார். "மாநில அரசு மின் கட்டணத்தை உயர்த்துவதில் ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால், மின் கம்பிகளைப் பராமரிப்பதில் அக்கறை காட்டவில்லை. இவ்வளவு பெரிய விபத்துக்கான காரணங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும். இதை மூடி மறைக்க முயல்வது ஏற்புடையதல்ல. அணில் என்ற பெயரில் ஏற்படும் தோல்வி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக, விபத்துகள் மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அரசின் அலட்சியமே விபத்துக்குக் காரணம். நிபுணர்களைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும்," என்றார். அறுந்து விழுந்த மின் கம்பியால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு துணை நிற்கும் என முன்னாள் அமைச்சரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் மாவட்டத் தலைவருமான மு.சங்கரநாராயணா தெரிவித்தார். விபத்து குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது அர்த்தமற்றது என்றார். மணிப்பூர் நிலச்சரிவில் உயரும் பலி எண்ணிக்கை: மனதை உலுக்கும் படங்கள் "அச்சம், கோபம், நிச்சயமற்ற எதிர்காலம்" - புதிய போராட்டத்துக்கு தயாராகும் இந்திய விவசாயிகள் தஞ்சாவூரில் திருடப்பட்ட முதல் தமிழ் பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு "விபத்து நடந்த உடனேயே முதலமைச்சர் வெளிநாட்டில் இருந்தாலும் உடனடியாக பதிலளித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்தார். காயமடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. அடிப்படையில் விபத்து ஒரு பெண்ணால் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. அந்தப் பெண்ணும் மின் கம்பத்தில் காணப்பட்டார். கண்காணிப்பு குழுக்கள் மற்றும் மூத்த பொறியாளரின் அறிக்கை அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்," என்று பிபிசியிடம் விளக்கினார். மின்சார விநியோகத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதைச் சரிசெய்து மக்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்குத் தமது அரசாங்கம் முன்னுரிமை வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார். ஆந்திர பிரதேச தெற்கு மின் விநியோக நிறுவனத்தின் பதில் ஆந்திர பிரதேச தெற்கு மின் விநியோக நிறுவனத்தின் தலைமைப் பொது மேலாளர், மின் வாரியம் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மேற்கொண்ட திட்டங்கள் குறித்தும் விசாரித்து வருவதாகவும் தாடிமரி மண்டலத்தில் விபத்து நடந்த இடத்தை அவர் ஆய்வு செய்ததாகவும் கூறினார். விசாரணைக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழு பல விவரங்களைச் சேகரித்தது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களிடம் பேசி விவரங்களைச் சேகரித்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஷீத், "இந்தப் பகுதியில் மின்வாரிய பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். அனைத்து கோணங்களிலும் விவரங்களைச் சேகரித்து வருகிறோம். இறுதி அறிக்கையில் எங்களுடைய கவனத்திலுள்ள விஷயங்களைக் குறிப்பிடுவோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும்," என்று கூறினார். அணிலுக்குச் செய்யப்பட்ட உடற்கூராய்வு விபத்துக்கு காரணமான அணில் இறந்துவிட்டதாகவும் அந்த அணிலுக்கு உடற்கூராய்வு செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தாடிமரை மண்டல கால்நடை அலுவலர் மேற்பார்வையில் பிரேத பரிசோதனை நடந்தது. உயர் அதிகாரிகளிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை சிஐ மன்சூருத்தீன் பிபிசியிடம் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/india-62022908 அணில் பாலாஜியின் தாக்கம் ஆந்திராவுக்கும் போயிற்றுது.
  11. ஜஸ்பிரித் பும்ரா ஒரே ஓவரில் குவித்த 35 ரன்கள் - பிரையன் லாராவின் உலக சாதனை முறியடிப்பு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய 84வது ஓவரில் 35 ரன்கள் சேர்த்து, இந்திய அணி கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா சாதனை படைத்துள்ளார். இந்தப் போட்டி குறித்த முக்கிய தகவல்கள் இங்கே தொகுத்துள்ளோம். டெஸ்ட் போட்டிக்கு பேர்போன இங்கிலாந்து அணி, கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மோசமான சாதனையை பதிவு செய்திருக்கிறது. டெஸ்ட் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் விளாசிய வீரர் எனும் சாதனை படைத்திருக்கிறார் இந்திய கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான ஜஸ்பிரித் பும்ரா. பும்ராவின் சாதனைக்கு இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட்டின் மோசமான ஒரேயொரு ஓவர் காரணமாகிவிட்டது. இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எட்ஜ்பஸ்டனில் நடைபெற்று வருகிறது. ரோஹித் சர்மாவுக்கு கொரோனா உறுதியானதால், கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவுக்குப் பிறகு இந்திய அணிக்கு வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை கேப்டனாக்கியது பிசிசிஐ. ஏறத்தாழ 35 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வேகப்பந்துவீச்சாளர் தலைமையில் இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்டில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் கடைசி பேட்ஸ்மேனாக களமிறங்கிய கேப்டன் பும்ரா, ஸ்டுவர்ட் பிராட் வீசிய 84வது ஓவரை எதிர்கொண்டார். முதல் பந்தை பும்ரா பவுண்டரிக்கு விளாசினார். அடுத்த பந்து வைடு பவுண்டரியாக அமைந்தது. 3வது பந்தை பும்ரா சிக்சருக்கு விளாச, அது நோ பாலாக மாறியது. அடுத்து போடப்பட்ட 3 பந்துகளிலும் ஹாட்ரிக் பவுண்டரிகள் விளாசினார் பும்ரா. பட மூலாதாரம்,GETTY IMAGES 7வது பந்து சிக்சரும் 8வது பந்தை சிங்கிள்ஸ் ஆடியும் மொத்தம் 6 எக்ஸ்டிராஸ் உள்பட 35 ரன்கள் சேர்த்து இதுவரை யாரும் செய்திராத சாதனையை படைத்தார் ஜஸ்பிரித் பும்ரா. 6 பந்துகளில் முடிய வேண்டிய ஓவரை வைட், நோ பால் என 8 பந்துகளாக ஸ்டுவர்ட் பிராட் வீசியது அவருக்கே சோதனையாக அமைந்துவிட்டது. சர்ஃபராஸ் கான்: டான் பிராட்மேனுடன் ஒப்பிடப்படும் மும்பை கிரிக்கெட் வீரர் மித்தாலி ராஜ் ஓய்வு: இந்திய பெண்கள் கிரிக்கெட் ராணியின் சாதனைகள் என்னென்ன? இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணியில் கிளிநொச்சி தமிழ் மாணவி கலையரசி: யார் இவர்? டெஸ்ட் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா முதலிடத்தில் உள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES 2003ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் பீட்டர்சன் வீசிய ஒரு ஓவரில் பிரையன் லாரா விளாசிய 28 ரன்களே அதிகபட்சமாக இருந்தது. பிரையன் லாராவின் சாதனையை ஆஸ்திரேலிய வீரர் பெய்லே (Bailey), தென்னாப்பிரிக்க வீரர் மஹாராஜ் ஆகியோர் சமன் செய்துள்ளனர். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான பிரையன் லாராவின் சாதனையை ஒரு வேகப்பந்து வீச்சாளர் முறியடித்திருப்பதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறார் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா. https://www.bbc.com/tamil/sport-62022460
  12. பிளாஸ்டிக் பயன்படுத்த தடை: ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கு நீங்கள் என்ன செய்யலாம்? பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஜூலை 1 முதல் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் ஸ்பூன், ஸ்ட்ரா, கொடி உள்ளிட்ட சில பொருட்களை முழுமையாக மத்திய அரசு தடை செய்துள்ளது. பிளாஸ்டிக் ஒழிப்பை நோக்கி, இந்தியாவின் நகர்வாக இதைக் கருதி மக்கள் அன்றாட வாழ்வில் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்கவேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த மாற்றத்திற்கான பயணத்தில் இந்தச் செய்தியை வாசிக்கும் உங்களின் பங்கு என்னவாக இருக்கும்? உங்களுக்கு சில பயனுள்ள குறிப்புக்களை வழங்க நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு மற்றும் தமிழ்நாடு பிளாஸ்டிக் உறுபதியாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களிடம் பேசினோம். பிளாஸ்டிக் கொடிகளுக்கு பதிலாக துணி அல்லது காகித கொடிகளைப் பயன்படுத்தலாம்.⛳️ துணி பேனர்களில் அழகான ஓவியங்கள் வரையலாம். பிளாஸ்டிக் பேனர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். ✋ பிளாஸ்டிக் குச்சிகளுக்குப் பதிலாக மரகுச்சிகளில் பலூன் கட்டலாம். போர்க், ஸ்பூன் ஆகியவற்றில் பிளாஸ்டிக் கரண்டிகளுக்கு பதிலாக உங்கள் விரல்களை பயன்படுத்தலாம் 😊. அல்லது உணவகத்தில் ஸ்டெயின்லெஸ் கரண்டி கேட்கலாம். பிளாஸ்டிக் ஸ்ட்ராவுக்கு மாற்றாக காகித ஸ்ட்ரா, மூங்கில் ஸ்ட்ரா கிடைக்கிறது. 🥤 அடுத்தபடியாக, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஸ்ரா தயாரிப்பு அதிகரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. நீங்கள் சிறுவயதில் 🥤 ஸ்ட்ரா டம்ளர் பயன்படுத்திய ஞாபகம் உங்களுக்கு வரலாம். காது தூய்மை செய்யும் குச்சிக்கு மாற்று என்ன? மரக்குச்சிகளில் அந்தக் குச்சிகள் கிடைக்கின்றன. கைக்குட்டை அளவில் இருந்தாலும் வசதிக்கு ஏற்ப மடக்கி, விரிக்கும் துணிப்பைகள் கிடைக்கின்றன. கடைகளுக்குச் செல்லும் போது, உங்கள் சட்டைப் பையில் வைத்துக் கொள்ளலாம். பிளாஸ்டிக் பைகளைத் தவிர்க்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES அழைப்பிதழ்களில் பளபளவென மின்னும் பிளாஸ்டிக் சீட்டுக்குப் பதிலாக, பனை ஓலை, காகிதம் போன்றவற்றில் அழகாகத் தயாரிக்கலாம். நுகர்வோர் உரிமை ஆர்வலர் சரோஜாவிடம் பேசியபோது, நுகர்வோர் ஒரு தரமான பொருளை வாங்குவதில் கவனமாக இருப்பதைப் போலவே, தடை செய்யப்பட்ட பொருளை வாங்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கவேண்டும் என்கிறார். ''மத்திய அரசு தடை விதித்துள்ளது, சரி. நாமும் அதில் உறுதியாக இருக்கவேண்டிய கட்டத்தில் இருக்கிறோம். கடைகளில் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள் எங்கும் கிடைக்கவில்லை என்ற நிலையில், ஒரு நுகர்வோர் கட்டாயமாகக் கேட்டு வாங்கமுடியாது. அதேநேரம், நம்மிடம் உள்ள பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறிகின்ற யூஸ் அண்ட் த்ரோ மனநிலை மாறவேண்டும்,''என்கிறார் சரோஜா. ''ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாமல் தான் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் நாம் இருந்தோம். அந்த வாழ்க்கை சாத்தியம்தான். எடுத்துக்காட்டாக, பலர் தங்களது சிறுவயதில், உணவகத்திற்குப் போகும்போது, சாம்பார், இட்லி, சட்டினி 🍵 வாங்க தனித் தனியாக பாத்திரங்கள் கொண்டு சென்றதை நினைவு கூறலாம். அதேபோல எண்ணெய், காய்கறி, பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் எடுத்துச் செல்லும் மதிய உணவுக் கூடை எனப் பல பொருட்களை நாம் பயன்படுத்தினோம். அதையெல்லாம் இப்போதும் கடைபிடிக்க முடியும்,'' என்கிறார். காண்டம் முதல் ஷூக்கள் வரை: பிளாஸ்டிக் இல்லாமல் போனால் என்ன நடக்கும்? இந்தியாவில் இன்று முதல் எந்தெந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை தெரியுமா? ஜூலை 1: இந்த நாள் உங்கள் ஊதியம் உள்ளிட்டவற்றில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் - எப்படி? பிளாஸ்டிக் இல்லாத உலகத்தை நாம் கற்பனை கூட செய்ய முடியாது என்பது தமிழக பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த சுவாமிநாதனின் வாதம். ''தமிழகத்தில் சுமார் 8,000 பிளாஸ்டிக் தயாரிப்பு ஆலைகள் உள்ளன. இதில் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரிக்கும் ஆலைகள் சுமார் 10 தான் இருக்கும். இதில் கடந்த ஓராண்டில் பலரும் தயாரிப்பைக் குறைத்து, ஜூலை 1ஆம் தேதி கொண்டு வந்த தடைக்கு ஆதரவாக இருந்தார்கள். ஆனால் எல்லா பிளாஸ்டிக் பொருட்களையும் ஒழித்துவிட முடியாது. அதாவது மாறவேண்டியது, நுகர்வோரின் மனநிலைதான்,'' என்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES ''நாம் பயன்படுத்தும் பொருட்கள் குப்பையாகத் தேங்குவதை தான் நாம் தடுக்கவேண்டும். அதாவது பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாகக் கொண்டு வரும் பொருட்களைப் பயன்படுத்தி குப்பையாகக் குவிக்கக் கூடாது என்ற மனநிலை நமக்கு வேண்டும். மருத்துவ பயன்பாட்டிற்கு இருக்கும் பிளாஸ்டிக், சரியான மைக்ரான் அளவில், மீண்டும் பயன்படுத்தும் நிலையில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் இருக்கும்,'' என்கிறார் சுவாமிநாதன். ஜூலை 1ஆம் தேதி தடை வருவதற்கு முன்பே மஞ்சப்பை இயக்கத்தைத் தொடங்கிவிட்டதால், மேலும் விறுவிறுப்பான பணியில் இருப்பதாகக் கூறுகிறார் தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹு. ''பிளாஸ்டிக் கவர்கள் அதிகளவில் பயன்படுத்தபடும் இடங்களில் துணிப்பை பயன்பாடு அதிகரிக்க வேண்டும். தற்போது கோயம்பேடு மலர் மற்றும் பழங்கள் மார்க்கெட்டில் மஞ்சள் பை இயந்திரம் ஒன்றை வைத்துள்ளோம். இதுவொரு சோதனை ஓட்டம் தான். இதுபோன்ற தானியங்கி துணிப்பை இயந்திரங்களை பல இடங்களில் வணிகர்கள் வைக்கலாம். அரசு வழங்கும் நிவாரண பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் தருவதைப் பெரும்பாலும் துணிப்பைகளில் தருகிறோம். இதுவொரு தொடக்கம். மஞ்சள் பை என்பது ஓர் அடையாளம். நாம் சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பில்லாத பொருட்களைப் பயன்படுத்தவில்லை என்பதைக் காட்டும் அடையாளம்,'' என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பட்டியல் மத்திய சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பட்டியலில் கீழ்க்காணும் பொருட்களை குறிப்பிட்டுள்ளது. பிளாஸ்டிக் தட்டுகள், கண்ணாடிகள், கரண்டிகள், கோப்பைகள், ஸ்ட்ராக்கள், முட்கரண்டிகள் இனிப்புப் பெட்டிகள், உணவுப் பொட்டலங்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கவர்கள் பிளாஸ்டிக் குச்சிகளைக் கொண்ட காது குடையும் குச்சிகள் பலூன்களுக்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குச்சிகள் பிளாஸ்டிக் கொடிகள் சாக்லேட்டுகளுக்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குச்சிகள், லாலிபாப் குச்சிகள் ஐஸ்க்ரீம் குச்சிகள் தெர்மாகோல் 100 மைக்ரான் தடிமனுக்குக் குறைவாக இருக்கும் பிவிசி பேனர்கள் பிளாஸ்டிக் அழைப்பு அட்டைகள் https://www.bbc.com/tamil/india-62016059
  13. நூபுர் ஷர்மா விவகாரம்: "உங்களது பேச்சு மொத்த நாட்டையும் பற்றி எரிய வைத்துள்ளது" - உச்ச நீதிமன்றம் கூறியது என்ன? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,HINDUSTAN TIMES படக்குறிப்பு, நூபுர் ஷர்மா நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்ததாக பல மாநிலங்களில் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து முதல் தகவல் அறிக்கைகளையும் விசாரணைக்காக டெல்லிக்கு மாற்றக் கோரிய பாஜக-வில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட அதன் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மாவின் மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. அந்த விசாரணையின்போது, தான் தெரிவித்த கருத்துக்கு மொத்த இந்தியாவிடமும் நூபுர் ஷர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜெ.பி. பார்டிவாலா அடங்கிய அமர்வு இதுதொடர்பான விசாரணையின்போது தெரிவித்த கருத்துகளை இங்கே தொகுத்தளிக்கிறோம். நூபுர் ஷர்மா நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக இன்றைய விசாரணையின்போது உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. நீதிபதி சூர்ய காந்த், "நூபுர் ஷர்மாவுக்கு அச்சுறுத்தலா அல்லது அவர் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகியுள்ளாரா?" என்று குறிப்பிட்டார். மேலும் அவரைக் கண்டித்த உச்சநீதிமன்றம், அவர் சிந்திக்காமல் பேசிய பேச்சு ஒட்டுமொத்த நாட்டையும் பற்றி எரிய வைத்துள்ளது என்று கூறியது. தொடர்புடைய கட்டுரைகள்: நூபுர் ஷர்மா vs முகமது ஜுபைர்: ஒரே பிரிவில் வழக்கு - வெவ்வேறு நடவடிக்கை ஏன்? நூபுர் ஷர்மா விவகாரம்: அரபு நாடுகளில் எழும் எதிர்ப்பு; இந்தியாவின் பதில் என்ன? உதய்பூர் தையல்காரர் படுகொலை செய்யப்பட்ட துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு அவருடைய இந்தச் செயல் தான் பொறுப்பு என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. "அரசியல் திட்ட நோக்கத்தை விளம்பரப்படுத்துவதைத் தவிர, ஏற்கெனவே நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் ஒரு விஷயத்தைப் பற்றி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விவாதிக்க வேறு என்ன நோக்கம் இருக்க முடியும்?" என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். "நூபுர் ஷர்மாவின் கருத்துகள் 'வருத்தத்தை' உண்டாக்கும் வகையில் உள்ளது. இந்தக் கருத்துகளை அவர் சொல்ல வேண்டியதன் அவசியம் என்ன?" என்றும் நீதிபதிகள் கேட்டனர். பட மூலாதாரம்,REUTERS நூபுர் ஷர்மா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மனீந்தர் சிங், நூபுர் ஷர்மா தன்னுடைய கருத்துகளுக்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டதாகவும் கருத்துகளை உடனடியாகத் திரும்பப் பெற்றதாகவும் கூறினார். ஆனால், மூத்த வழக்கறிஞர் மனீந்தர் சிங் கூறியதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், "நூபுர் ஷர்மா தொலைக்காட்சியில் தோன்றி, ஒட்டுமொத்த இந்திய மக்களிடமும் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்," என்று கூறியதுடன் "அவர் கருத்துகளை திரும்பப் பெற்றபோது அது மிகவும் தாமதமாகிவிட்டது. உணர்வுகள் புண்படுத்தப்பட்டால்... என்பது போன்று மேம்போக்காக தெரிவித்தே அவர் தனது கருத்துகளைத் திரும்பப் பெற்றார்," என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறினர். "நாட்டிலுள்ள நீதிபதிகள் அவரை விட மிகவும் சிறியவர்கள் என்ற அவருடைய ஆணவத்தை இந்த மனு காட்டுகிறது," என்று நூபுர் ஷர்மா பல்வேறு மாநிலங்களில் அவர் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை மொத்தமாக டெல்லிக்கு மாற்றுமாறு கோரிய மனுவை விசாரித்தபோது உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நூபுர் ஷர்மா கருத்துத் தெரிவித்த விதம் குறித்துக் கேள்வியெழுப்பிய உச்சநீதிமன்றம், "நீங்கள் ஒரு கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருப்பது, இதுபோன்ற விஷயங்களைப் பேசுவதற்கான உரிமையை உங்களுக்கு வழங்கவில்லை," என்றும் கூறியுள்ளது. நூபுர் ஷர்மாவின் கோரிக்கை நிராகரிப்பு பட மூலாதாரம்,HINDUSTAN TIMES "இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை ஒரே இடத்தில் நடத்தியிருக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு முதல் தகவல் அறிக்கைகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. நான் எந்த வகையான விசாரணையில் இருந்தும் தப்பி ஓடவில்லை எனச் சொல்கிறேன். எனவே விசாரணையை ஒரே இடத்தில் நடத்த உத்தரவிட வேண்டும் என்று இந்த நீதிமன்றத்தைக் கேட்டுக் கொள்கிறேன்," என்று உச்சநீதிமன்றத்தில் மனீந்தர் சிங் கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், "இந்த பெண் நாடு முழுவதும் உணர்வுகளை தூண்டிய விதம், நாட்டில் நடப்பதற்கு அவர் ஒருவரே பொறுப்பு என்று காட்டுகிறது," என குறிப்பிட்டனர். "நூபுர் ஷர்மா எங்கும் செல்லமாட்டார். எந்த விசாரணைக்கும் தேவைப்படும்போது ஆஜராவார்," என்று மூத்த வழக்கறிஞர் மனீந்தர் சிங் உச்ச நீதிமன்றத்தில் குறிப்பிட்டார். மேலும், பல மாநிலங்களில் தன் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை ஒன்றாக இணைத்து டெல்லியில் விசாரிக்க வேண்டுமென்ற நூபுர் ஷர்மாவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது. நூபுர் ஷர்மா மீது பதிவு செய்யப்பட்ட புகாருக்குப் பிறகு டெல்லி காவல்துறை என்ன செய்தது என்று கேள்வியெழுப்பிய நீதிபதிகள், "அவருடைய புகாரின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டார். ஆனால், பல முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டிருந்தும் அவர் டெல்லி காவல்துறையால் இன்னமும் தொடப்படவில்லை. உங்களைத் தொட யாருக்கும் தைரியம் இல்லை," என்றும் குறிப்பிட்டனர். https://www.bbc.com/tamil/india-62006223
  14. இலங்கையில் முஸ்லிம்கள் அரசுக்கு கண்டனம்: ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் பரிந்துரைகள் சர்ச்சையானது ஏன்? யூ.எல். மப்ரூக் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PMD இலங்கையில் 'ஒரே நாடு ஒரே சட்டம்' செயலணியின் இறுதி அறிக்கை நேற்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், அதிலுள்ள பரிந்துரைகளில் கணிசமானவை முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. 'ஒரே நாடு ஒரே சட்டம்' செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர், நேற்று முன்தினம் (29) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், தமது செயலணியின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையினை கையளித்தார். எட்டு அத்தியாயங்களைக் கொண்ட அந்த அறிக்கையில் 43 பரிந்துரைகள் அடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்தப் பரிந்துரைகளில் கணிசமானவை முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும், முஸ்லிம் சமூகத்தைக் குறிவைத்தே 'ஒரே நாடு ஒரே சட்டம்' செயலணி உருவாக்கப்பட்டதாகவும் குறித்த அறிக்கை தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசியோர் குறிப்பிடுகின்றனர். 'பொது இடங்களில் முழுமையாக முகத்தை மூடும் வகையில் ஆடை அணிவதற்கு தடை விதிக்க வேண்டும்' என, ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி பரிந்துரைத்துள்ளமையின் மூலம், முஸ்லிம் பெண்கள் - 'புர்கா' அணிவதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. "சாப்பிட எதுவுமில்லை, கடல் நீரை குடித்தோம்" - தனுஷ்கோடியில் இலங்கை தம்பதி கண்ணீர் இலங்கையில் எரிபொருள் விற்பனைக்குத் தடை; அத்தியாவசிய சேவைக்கு மட்டும் விலக்கு ரணிலுக்கு எதிராக திரும்பிய இலங்கை போராட்டம் - காரணம் என்ன? அதேபோன்று, 'அரசப் பணியில் ஈடுபடும் முஸ்லிம் பெண்களுக்கு, அவர்களின் கணவரை இழந்தால் வழங்கப்படும் 'இத்தா' காலத்துக்குரிய 4 மாதங்கள் 10 நாட்களைக் கொண்ட விடுமுறை இல்லாமலாக்கப்பட வேண்டும்' எனவும் - ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தமது கணவர் மரணித்தால் அல்லது விவாகரத்துச் செய்தால் - முஸ்லிம் பெண்கள் 4 மாதம் 10 நாட்கள் அந்நிய ஆண்களுடனான தொடர்புகளைத் தவிர்த்து வீட்டில் இருப்பர். அரசுப் பணியில் ஈடுபடும் முஸ்லிம் பெண்களுக்கு இதற்கான விடுமுறை தற்போது வழங்கப்படுகிறது. செயலணியின் முன்னாள் உறுப்பினர் கருத்து இந்த நிலையில், 'ஒரே நாடு, ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியின் பரிந்துரைகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய, அந்த செயலணியின் முன்னாள் உறுப்பினர் அஸீஸ் நிஸாருத்தீன், "இந்த நாட்டில் அரை நிர்வாணமாக ஆடை அணிவதற்கு இருக்கும் உரிமை, தமது உடலை முழுமையாக மறைப்பவர்களுக்கும் உள்ளது" என்கிறார். "அரை நிர்வாணமாக ஆடை அணிபவர்களை சட்டம் எதுவும் கேட்காதபோது, புர்கா அணிவதை மட்டும் ஏன் தடைசெய்ய வேண்டும்" என அவர் கேள்வியெழுப்பியதோடு, "புர்கா என்பது தனி மனித உரிமை" எனவும் குறிப்பிடுகின்றார். 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியிலிருந்து கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அஸீஸ் நிஸாருத்தீன் ராஜிநாமா செய்தார். "அரசுப் பணியில் இருக்கும் முஸ்லிம் பெண்களுக்கான 'இத்தா' கால விடுமுறையை இல்லாமல் செய்வதற்கான பரிந்துரையானது, 100% இனவாத ரீதியில் எடுக்கப்பட்ட முடிவாகும். முஸ்லிம்களை குறிவைத்து பாதக முடிவுகள் இந்த செயலணியில் எடுக்கப்பட்டபோது, அதனை எதிர்த்து, செயலணிக்குள்ளேயே நான் பேசியிருந்தேன். சிறுபான்மை சமூகமொன்றை இலக்கு வைத்து, இவ்வாறு நடப்பது, இந்த நாட்டில் மேலும் இனமுறுகலை ஏற்படுத்தும் எனவும் கூறியிருந்தேன்" எனவும் நிஸாருத்தீன் குறிப்பிட்டார். படக்குறிப்பு, அஸீஸ் நிஸாருத்தீன் "தேசவழமைச் சட்டம், முஸ்லிம் தனியார் சட்டம் மற்றும் கண்டியச் சட்டம் ஆகியவற்றை இல்லாமலாக்க வேண்டுமென 'ஒரே நாடு ஒரே சட்டம்' செயலணி பரிந்துரைத்துள்ள போதும், கண்டிய சட்டத்துக்குரிய மக்களிடம் எந்தவித கருத்துக்களும் கேட்கப்படவில்லை. இதனை நான் சுட்டிக்காட்டியதோடு, அந்த மக்களிடம் கருத்துக்களைப் பெறும் பணியை எம்மிடம் ஒப்படைக்குமாறும் கேட்டிருந்தேன். ஆனால் அது நடக்கவில்லை". "பௌத்தர்களின் மிக பிரதான ஆலயமான - கண்டி தலதா மாளிகையின் 'தியவதன நிலமே' (பரிபாலகர்) பதவிக்குரிய நபர் வாக்கெடுப்பின் மூலமாகவே தெரிவு செய்யப்படுவார். குறிப்பிட்ட சில அதிகாரிகள் மற்றும் நபர்களுக்கு அதற்கான வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது. உதாரணமாக கண்டி பிரதேச செயலாளர் பதவியை (இது அரச பதவி) வகிக்கும் நபர், 'தியவதன நிலமே' பதவிக்குரியவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிப்பில் கலந்து கொள்ள முடியும். அதேவேளை, அந்த வாக்களிப்பில் பெண்கள் கலந்து கொள்ள முடியாது என, அவர்களின் பாரம்பரியம் கூறுகிறது. அந்த உரிமை பெண்களுக்கு வழங்கப்படவில்லை. இதற்காகவே, கண்டி பிரதேச செயலாளர் பதவிக்கு இதுவரை எந்தவொரு பெண்ணையும் அரசு இதுவரை நியமித்ததில்லை. இதனை 'ஒரே நாடு ஒரே சட்டம்' செயலணி கவனத்தில் எடுத்திருக்க வேண்டும், ஆனால் அதனைச் செய்யவில்லை" என்கிறார் அஸீஸ் நிஸாருத்தீன். வெளிநாடு செல்லும் இலங்கை ஆசிரியர்கள்: கேள்விக்குறியாகும் மாணவர்கள் எதிர்காலம் விலைவாசி உயர்வு: இலங்கையில் ஏற்பட்ட நெருக்கடி உலக நாடுகளுக்கும் பரவுமா? விமானங்கள் நேருக்கு நேர் மோதவிருந்த விபத்து தவிர்க்கப்பட்டதா? உண்மை என்ன? "ஒரே நாடு ஒரே சட்டம் எனும் எண்ணக்கருவானது, 'நாட்டில் சட்டத்தை எல்லோருக்கும் சமமாக நடைமுறைப்படுத்துவதை' நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டுமே தவிர, சமூகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பறித்தெடுக்கும் வகையில் அமையக் கூடாது. ஏழைக்கும் - பணக்காரனுக்கும் இடையில் ஏற்படும் பிரச்னையின் போது, சட்டத்தைச் சாதகமாக்கி பணக்காரன் வெற்றி பெற்று விடுகிறான். அண்மையில் நடந்த ஆர்ப்பாட்டமொன்றின் போது, வீதியை கறுப்பு நிறம் பூசி சேதப்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டி, அதனைச் செய்த ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் கைது செய்தார்கள். ஒரு தடவை நாடாளுமன்றத்தில் நடந்த கைகலப்பின் போது, அங்கிருந்த பெறுமதியான ஒலிவாங்கி (மைக்) ஒன்றை எம்.பி ஒருவர் வேண்டுமேன்றே உடைத்தார். ஆனால், அவரை சட்டம் கண்டு கொள்ளவில்லை. இந்தப் பாகுபாட்டை இல்லாமல் செய்வதே 'ஒரே நாடு ஒரே சட்டம்' செயலணியின் நோக்கமாக இருக்க வேண்டும்." "முஸ்லிம் நாடான கத்தாரிடம், இலங்கையின் எரிபொருள் துறை அமைச்சர் உதவி கோரி சென்றுள்ள சூழ்நிலையில், முஸ்லிம்களுக்கு எதிரான பரிந்துரைகளைக் கொண்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளமையானது புத்திசாலித்தனமற்ற செயற்பாடு" எனவும் நிஸாருத்தீன் குறிப்பிட்டார். உரிமைகளைப் பறிப்பதை அனுமதிக்க முடியாது இந்த அறிக்கை குறித்து மௌலவி எம்.எப்.எம். ரஸ்மின் கருத்து தெரிவிக்கையில், "இத்தா கடமையை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் சில கருத்து வேறுபாடுகள் எமக்கு உள்ளபோதும், முஸ்லிம் பெண்களுக்கு அரசு வழங்கியுள்ள 'இத்தா' விடுமுறை எனும் உரிமையை பறித்தெடுப்பதை அனுமதிக்க முடியாது" என்றார். படக்குறிப்பு, எம்.எப்.எம். ரஸ்மின் "தொப்பி அணிவதற்கான உரிமை மறுக்கப்பட்டபோது, பிரிட்டன் வரை சென்று போராடி, எங்கள் மூதாதையர் அதனை வென்றெடுத்தார்கள். இந்த நிலையில், எங்கள் சமூகத்தின் உரிமைகளை, ஒரு செயலணியின் மூலம் பறித்தெடுப்பதை அனுமதிக்க முடியாது." "புர்கா அணிவது தொடர்பிலும் எமக்கு மாற்றுக் கருத்து உள்ளது. 'இஸ்லாத்தில் முகத்திரை இல்லை' என்பது எமது நிலைப்பாடாகும். அதனை அணிகின்றவர்களுக்கு இது தொடர்பான விளங்கங்களை வழங்கி, அவர்களாகவே அதனைக் கழற்றும்படி செய்ய வேண்டுமே தவிர, வேறுயாரும் அதனை வலுக்கட்டாயமாக தடைசெய்ய முடியாது" என்றும் அவர் கூறினார். முஸ்லிம் நாடுகளின் உதவிகளைத் தடுத்து விடும் முஸ்லிம் கவுன்சில் ஆஃப் சிறிலங்கா அமைப்பின் தலைவரும் மூத்த ஊடகவியலாளருமான என்.எம். அமீன் இது குறித்து பிபிசி தமிழிடம் பேசுகையில், "முகத்தை மறைப்பதைத் தடைசெய்தல் மற்றும் இத்தா கால விடுமுறையை இல்லாமல் செய்தல் போன்றவை முஸ்லிம்களுக்கு எதிரான பரிந்துரைகளாகும்" என்றார். "முஸ்லிம்களின் மூதாதையர்கள் இந்த நாட்டின் ஆட்சியாளர்களுடன் பேசி, முன்வைத்த கோரிக்கைகளுக்கு அமைவாகவே மேற்படி உரிமைகள் முஸ்லிம்களுக்குக் கிடைத்தன. அவற்றினை இல்லாமலாக்குவதென்பது முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளைப் பறிப்பதாகவே அமையும். எனவே, ஒரே நாடு ஒரே சட்டம் முன்வைத்துள்ள இவ்வாறான பரிந்துரைகளை அரசாங்கம் கவனத்தில் எடுக்காது என நம்புகிறோம்" என்றார். பட மூலாதாரம்,AMEEN/FB படக்குறிப்பு, என்.எம். அமீன் "நாடு பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், முஸ்லிம் நாடுகளின் உதவிகள் தற்போது தேவையாக உள்ளது. கத்தாருக்கு எரிபொருள் துறை அமைச்சர் சென்றுள்ளார், ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு விரைவில் ஜனாதிபதி செல்லவுள்ளார். இவ்வாறான சூழ்நிலையில் இந்தப் பரிந்துரைகள் வந்திருக்கக் கூடாது. இவ்வாறான நடவடிக்கைகளால்தான் முஸ்லிம் நாடுகளின் உதவிகளை இலங்கையினால் பெற்றுக் கொள்ள முடியாமல் போனது" எனவும் அவர் குறிப்பிட்டார். 'ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி' என்பது என்ன? 'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்கிற எண்ணக்கருவை இலங்கைக்குள் நடைமுறைப்படுத்தும் பொருட்டு, சட்டமூலம் ஒன்றைத் தயாரிப்பதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக, 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ஆம் தேதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜக்ஷவினால், 'ஒரே நாடு ஒரே சட்டம்' செயலணி உருவாக்கப்பட்டது. இந்த செயலணியின் தலைவராக சர்ச்சைக்குரிய பௌத்த மதகுரு கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டார். 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணிக்கு 6 சிங்களவர்கள், 4 முஸ்லிம்கள், 3 தமிழர்கள் என, 13 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். பின்னர் இந்த செயலணி மீதும், ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் மீதும் அதிருப்தி கொண்டு, 'ஒரே நாடு ஒரே சட்டம்' செயலணியிலிருந்து மூன்று முஸ்லிம் உறுப்பினர்கள் ராஜிநாமா செய்தனர். 1,200க்கும் அதிகமான சாட்சியங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையானது, 8 அத்தியாயங்களையும், 43 பரிந்துரைகளையும் கொண்டுள்ளது. https://www.bbc.com/tamil/sri-lanka-62005962
  15. இலங்கை: “பிச்சை எடுத்து உண்ணும் நிலையில் நாடு” - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 5 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, சஜித் பிரேமதாச இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் சிலவற்றில் இன்று (01/07/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். "திருடர்களான இந்த ஆட்சியாளர்களோடு எந்த விதமான டீலும் அரசியலும் எனக்கு இல்லை" எனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பிச்சை எடுத்து உண்ணும் நிலைக்கு நாடு வந்துவிட்டதாவும் கூறியுள்ளதாக தமிழ் மிரர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியின்படி, "தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதாகக் கூறிக் கொண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம், நாட்டின் தேசிய பாதுகாப்பை முற்றாக ஒழித்து விட்டது. ராணுவத்தின் ஆட்சியையே இவர்கள் தேசிய பாதுகாப்பாகக் கருதினார்கள். தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்ட காரணிகளான பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகிய துறைகளை தேசிய பாதுகாப்பாக இவர்கள் கருதவில்லை," என்று சஜித் பிரேமதாச கூறினார். அதோடு, இதனால் உலகளவில் ஏழ்மையான நாடுகளில் இலங்கையும் இடம் பிடித்துள்ளது எனவும் கூறினார். மேலும், தற்போது வெளிநாடுகளிடமிருந்து பிச்சை எடுத்து உணவை உட்கொள்ளும் நிலைக்கு நாடு வந்துள்ளது. பிச்சை எடுக்கும் நிலையில் நாட்டின் பெருமதிப்பு மிக்க சொத்துகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியிலும் லஞ்ச, ஊழல் செயற்பாடுகளை ஆளும் தரப்பினர் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் கூறினார். இப்படியான ஆட்சியாளர்களுடன் ஒருபோதும் பங்காளிகளாக இணைந்து ஆட்சியை அமைக்க போவதில்லை, அவ்வாறு செய்தால் நாட்டு மக்களின் போராட்டத்தைக் காட்டிக் கொடுப்பது ஆகிவிடும் என்று அவர் கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.. இலங்கையில் எரிபொருள் விற்பனைக்குத் தடை; அத்தியாவசிய சேவைக்கு மட்டும் விலக்கு ரணிலுக்கு எதிராக திரும்பிய இலங்கை போராட்டம் - காரணம் என்ன? அக்னிபத் திட்டம் என்றால் என்ன? இளைஞர்கள் போராடுவது ஏன்? காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவன ஈர்ப்புப் போராட்டம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், வவுனியாவிலும் கிளிநொச்சியிலும் நேற்று கவன ஈர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக ஹிரு நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியின்படி, "வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேநேரம் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நேற்று முற்பகல் கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 1932 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், ஒவ்வொரு மாதமும் 30ஆம் தேதி கவன ஈர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதன் அடிப்படையில், நேற்றைய தினமும் அத்தகைய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. https://www.bbc.com/tamil/global-62005662
  16. புதினின் அரை நிர்வாண படங்கள்: கிண்டல் செய்த தலைவர்கள் - என்ன செய்தார் ரஷ்ய அதிபர்? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, 2009ஆம் ஆண்டில் மேலாடையின்றி குதிரையில் சவாரி செய்யும் புகைப்படம் எடுத்து தமது கட்டுமஸ்தான உடல்வாகை வெளிப்படுத்தினார் விளாதிமிர் புதின். தனது கட்டுமஸ்தான உடல்வாகு குறித்து இந்த வாரம் கிண்டல் செய்த மேற்கு நாடுகளின் தலைவர்களுக்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் எதிர்வினையாற்றியுள்ளார். உங்களின் ஆடையை இப்படிக் கழற்றினால் "பார்க்க சகிக்காது" என்று அவர் கூறியுள்ளார். தமது குதிரை சவாரியின்போது மேல் சட்டையின்றி படங்களுக்கு போஸ் கொடுத்த ரஷ்ய அதிபரின் போக்கை ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்ற சில மேற்கு நாடுகளின் தலைவர்கள் கேலி செய்தனர். இந்த நிலையில், அவர்களுக்குக் கடுமையான முறையில் எதிர்வினையாற்றியிருக்கிறார் ரஷ்ய அதிபர். மேலும், தமது சக தலைவர்களிடம் நீங்கள் எல்லோரும் உங்களுடைய மது அருந்தும் அளவைக் குறைத்துக் கொண்டு அதிக விளையாட்டில் ஈடுபட வேண்டும் என்றும் புதின் அறிவுறுத்தியுள்ளார். தாம் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் யுக்ரேனை புதின் ஆக்கிரமித்திருக்க மாட்டார் என்ற பிரிட்டன் போரிஸ் ஜான்சனின் கருத்துகளையும் புதின் நிராகரித்தார். இது குறித்து ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய புதின், "அந்தக் கூற்று சரியல்ல. மார்கரெட் தாட்சர் (பிரிட்டன் முன்னாள் பிரதமர்) பால்க்லாந்து போரிலேயே "பகையைத் தொடங்க முடிவு செய்துள்ளார்" என்று கூறினார். யுக்ரேன் மீது படையெடுக்கும் ரஷ்ய அதிபர்: யார் இந்த விளாதிமிர் புதின்? யுக்ரேன் போர்: புதின் புகழ்பாட தென்னிந்தியாவில் இருந்து திருடப்பட்ட சமூக ஊடக கணக்குகள் என்ன நடந்தது? ரஷ்ய அதிபர் மேலாடையின்றி படங்களுக்கு காட்சி தருவது அந்நாட்டில் புதிதல்ல. அவர் இதற்கு முன்பும் பல தருணங்களில் குதிரை சவாரி செய்யும்போதும் வேட்டைக்குச் செல்லும்போதும் மீன்பிடிக்கும்போதும் மேல் சட்டையின்றி இருப்பதைக் காட்டும் படங்கள் அந்நாட்டு அரசு ஊடகங்களில் வெளிவந்துள்ளன. ரஷ்யர்களை ஈர்க்கும் வகையிலான ஆண்மை உணர்வை அத்தகைய காட்சிகள் ஏற்படுத்த முயல்வதாக தமது படங்கள் குறித்து புதின் கூறினார். முன்னதாக, இந்த வார தொடக்கத்தில் ஜெர்மனியில் ஜி7 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்றது. அதில் பேசிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ரஷ்ய அதிபர் புதின் தொடர்பாக நையாண்டி செய்தார். அப்போது அவர், "புதினை விட மற்ற தலைவர்கள் வலிமையானவர்கள் என்பதைக் காண்பிக்க வேண்டுமானால், அவர்கள் தங்களுடைய ஆடைகளைக் கழற்ற வேண்டும்," என்று கிண்டலாக பேசினார். பிரிட்டன் பிரதமர், "நாமும் கடுமையானவர்கள் என்பதைக் காட்டுங்கள்" என்று கூறினார். கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, "அப்படியென்றால் திறந்த மார்புடன் குதிரை சவாரி செய்ய வேண்டும்" எனப் பேசினார். காணொளிக் குறிப்பு, Watch: 'Show them our pecs' - G7 leaders mock Putin இந்த நிலையில், துர்க்மெனிஸ்தானில் செய்தியாளர் சந்திப்பின் போது இது குறித்து புதினிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், "அவர்கள் இடுப்புவரை கழற்ற விரும்புகிறார்களா அல்லது இடுப்புக்கு கீழே கழற்ற விரும்பினார்களா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அது எதுவாக இருந்தாலும் அது பார்க்க சகிக்க முடியாத காட்சியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்," என்று பதிலளித்தார். "நீங்கள் ஒரு புத்திசாலியாக இருக்கலாம். உங்கள் நகங்களின் அழகைப் பற்றியும் சிந்திக்கலாம் என ரஷ்ய கவி அலெக்சாண்டர் புஷ்கினின் வரியை மேற்கோள் காட்டிப் பேசிய புதின், "நான் அந்தக் கருத்துடன் நிச்சயமாக உடன்படுகிறேன்; ஒருவர் தமது உடல் மற்றும் ஆன்மாவுடன் இணக்கமாக உணர்வுபூர்வமாக தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால், எல்லாவற்றிலும் அப்படி இருக்க விரும்பினால் முதலில் நீங்கள் போதைக்கு அடிமையாவதிலும் பிற பழக்கங்களில் இருந்தும் விடுபட வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும், விளையாட்டில் ஈடுபட வேண்டும்," என்று தெரிவித்தார். YouTube பதிவை கடந்து செல்ல, 1 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம் YouTube பதிவின் முடிவு, 1 "நீங்கள் குறிப்பிடும் நபர்கள் அனைவரையும் நான் தனிப்பட்ட முறையில் அறிவேன் - எங்கள் உறவுகள் சிறப்பானதாக இல்லை. இது புரிந்துகொள்ளத்தக்கது. ஆனாலும், அவர்கள் அனைவரும் தலைவர்கள். அதாவது அவர்களுக்கு எனத் தனி குணம் உள்ளது. விருப்பம் கொண்டிருந்தால் அவர்கள் நிச்சயமாக விரும்பிய முன்னேற்றத்தை அடைவார்கள். ஆனால் அதற்கு அவர்கள் உழைக்க வேண்டும். அதைப் பற்றிப் பேசுவது கூட ஒருவகையில் நல்லதுதான். இதற்காக நான் அவர்களைப் போற்றுவேன்," என்று புதின் கூறினார். இந்த நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற நேட்டோ செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போரிஸ் ஜான்சனிடம் புதின் கூறிய இந்தக் கருத்துக்கள் காண்பிக்கப்பட்டன. ஆனால், அதற்கு நேரடியாக பதிலளிக்க மறுத்த போரிஸ், யுக்ரேன் மீதான ஆக்கிரமிப்புக்கு மேற்கு நாடுகள் ஒன்றாகச் சேர்ந்து அப்படி எதிர்வினையாற்றியதாகத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சைபீரியாவில் மேல் சட்டையின்றி மீன்பிடிக்கும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் ரஷ்ய அதிபர் யுக்ரேனை ஆக்கிரமித்திருக்க மாட்டார் என்று போரிஸ் ஜான்சன் இந்த வாரம் தெரிவித்த கருத்துகள் குறித்தும் புதினிடம் செய்தியாளர்கள் கேட்டனர். ஜெர்மன் செய்தி நிறுவனமான ZDF உடனான ஒரு நேர்காணலில் ஜான்சன் "யுக்ரேன் மீதான பைத்தியக்காரத்தனமான, ஆடம்பரமான ரஷ்ய படையெடுப்பு 'நச்சு ஆண்மைக்கு சரியான எடுத்துக்காட்டு" என்று கூறினார். மேலும் "அதிகாரப் பதவிகளில் அதிகமான பெண்கள் வர வேண்டும்" என்றும் போரிஸ் அழைப்பு விடுத்தார். அவரது இந்தக் கூற்றுக்கு எதிர்வினையாற்றிய புதின், "1982ஆம் ஆண்டு பால்க்லாந்து தீவுகள் தொடர்பாக பிரிட்டன் மற்றும் அர்ஜென்டீனா இடையே ஏற்பட்ட மோதலை மேற்கோள்காட்டி பதிலளித்தார். ரஷ்ய அதிபர் புதினின் 'காதலி' அலினா கபய்வா - யார் இவர்? யுக்ரேன் - ரஷ்யா மோதலை குழந்தைகளுக்கு எப்படி விளக்குவீர்கள்? அப்போது அவர், "ஃபால்க்லாந்து தீவுகளுக்காக அர்ஜென்டீனாவுக்கு எதிராக மார்கரெட் தாட்சர் ராணுவ ரீதியில் குரோரத்தைத் தொடங்க முடிவு செய்த சமீபத்திய வரலாற்றின் நிகழ்வுகளை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். அப்படியென்றால் ஒரு பெண் விரோதத்தைத் தொடங்க முடிவு செய்திருக்கிறார். அந்த பால்க்லாந்து தீவுகள் எங்கே? பிரிட்டன் எங்கே? அது ஏகாதிபத்திய லட்சியங்கள் மற்றும் ஏகாதிபத்திய நிலையை உறுதிப்படுத்திய மனப்போக்கே தவிர வேறு எதுவும் இல்லை," என்று கூறினார். "எனவே, இன்று என்ன நடக்கிறது என்பதற்கு இது மிகவும் சரியான உவமை அல்ல என்று நான் நினைக்கிறேன். அதுவும் கிரேட் பிரிட்டனின் தற்போதைய பிரதமரிடமிருந்து அது சொல்லப்படுவது சரியல்ல," என்றார் புதின். ஃபால்க்லாந்து மோதல் என்பது என்ன? தென் அட்லான்டிக் பெருங்கடலில் உள்ள பிரிட்டிஷ் காலனியான ஃபால்க்லாந்து தீவுகளை அர்ஜென்டீனாவின் துருப்புகள் 1982ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆக்கிரமித்தபோது, 10 வார ஃபாக்லாந்து மோதல் தொடங்கியது. அர்ஜென்டீனா 1800களில் ஸ்பெயினிடம் இருந்து அந்தத் தீவுகளைப் பெற்றதாகவும் அவற்றை மீட்டெடுக்க விரும்புவதாகவும் கூறியது. அந்தத் தீவுகளை ஆங்கிலேயர்கள் 150 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். மேலும் தீவுகளை மீண்டும் கைப்பற்ற கடல் வழியாக ஆயுதப்படைகளை அனுப்பினர். ஜூன் 14ஆம் தேதி அர்ஜென்டீனாவின் படைகள் சரணடைந்தன. https://www.bbc.com/tamil/global-62000140
  17. கமல்ஹாசனுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசின் கோல்டன் விசா: முழு விவரங்கள் 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER திரைப்பட நடிகரும் இயக்குநருமான கமல்ஹாசனுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசின் 'கோல்டன் விசா' வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகாலம் செல்லுபடியாகும் இந்த கோல்டன் விசா மூலம் ஐக்கிய அரபு எமிரேட்சில் தங்கவும், தொழில் செய்யவும் பணிபுரியவும் பல்வேறு சலுகைகள் கிடைக்கும். 2021ஆம் ஆண்டு இயக்குநர் பார்த்திபன் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கோல்டன் விசாவை பெற்ற பொழுது இந்த கௌரவத்தைப் பெற்ற முதல் தமிழ் நடிகர் ஆனார். அதன் பின்னர் விஜய் சேதுபதி, திரிஷா, இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்டோருக்கும் கோல்டன் விசாவை வழங்கி சிறப்பித்து இருக்கிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ். இதேபோல, மலையாள திரையுலகில் மம்மூட்டி, மோகன்லால், பிருத்திவிராஜ் உள்ளிட்டோருக்கும் இதற்கு முன்னர் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 சரி, கோல்டன் விசா என்றால் என்ன? யாருக்கெல்லாம் இது வழங்கப்படும்? அதனால் கிடைக்கும் சலுகைகள் என்னென்ன என்று பார்ப்போம். 'கோல்டன் விசா' என்பது வெளிநாட்டவர்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு வழங்கும் ஒரு கௌரவம் ஆகும். தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், ஒவ்வொரு துறையிலும் தனித்துவம் மிக்க திறன் பெற்றவர்கள், அறிவியலாளர்கள், துறைசார் வல்லுநர்கள், திறன்மிக்க மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள், மனிதாபிமான சேவையாற்றுவோர் உள்ளிட்டோருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்படும் என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசின் அலுவல்பூர்வ இணையதளம் தெரிவிக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கமல்ஹாசனுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசின் கோல்டன் விசா 10 ஆண்டுகாலம் செல்லுபடி ஆகக்கூடிய, தங்கும் அனுமதியான ரெசிடென்ஸ் விசாவும் இதன் மூலம் கிடைக்கும். 10 ஆண்டுகாலம் முடிந்த பின்னர் இதை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம். Twitter பதிவை கடந்து செல்ல, 2 Twitter பதிவின் முடிவு, 2 வழக்கமாக வேறு விசாக்கள் வாங்குபவர்களுக்கு அவர்களைப் பணியமர்த்துவோர் ஸ்பான்சராக இருப்பர். ஆனால், கோல்டன் விசா பெறுபவர்களுக்கு ஸ்பான்சர் தேவையில்லை. ரெசிடென்ஸ் விசா பெற்றவர்கள் தொடர்ந்து ஆறு மாத காலத்துக்கு மேல் அந்நாட்டுக்கு வெளியே வசிக்க முடியாது. அப்படி வசித்தால் அந்த விசா காலாவதியாகிவிடும். ஆனால் கோல்டன் விசா பெற்றவர்கள் ஆறு மாத காலத்துக்கு மேலும் ஐக்கிய அமீரகத்துக்கு வெளியே தங்கலாம். கோல்டன் விசா பெற்றவர்கள் தங்களது குடும்பத்தினரையும் அந்நாட்டில் தங்க வைப்பதற்கு ஸ்பான்சர் செய்யலாம். கோல்டன் விசா செல்லுபடியாகும் காலம் முழுமைக்கும் இதை பெற்றுள்ளவர்களின் குடும்பத்தினர் அங்கு தங்கிக் கொள்ளலாம். இவர்கள் தங்கள் வீட்டுவேலைகளுக்காக, இத்தனை பணியாளர்களைத்தான் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடுகளும் இவர்களுக்கு கிடையாது. Twitter பதிவை கடந்து செல்ல, 3 Twitter பதிவின் முடிவு, 3 நீங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசின் கோல்டன் விசா பெற தகுதியானவரா என்பதை இந்த இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம். உங்களுக்கு கோல்டன் விசா வாங்க பரிந்துரைக் கடிதம் வேண்டும் என்றால் இந்த முகவரியில் விண்ணப்பிக்கலாம். https://www.bbc.com/tamil/arts-and-culture-61991621
  18. மனிதகுலம் தோன்றியது எப்போது? அறிவியல் ஆய்வு சொல்லும் சுவாரசிய தகவல்கள் லியோ சாண்ட்ஸ் பிபிசி நியூஸ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மிஸ்ஸர்ஸ் பிளெஸ் என பெயரிடப்பட்ட ஆரம்பகால குகைவாழ் பெண்ணின் முழுமையான மண்டை ஓடு 1947ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்டது. மனித குலத்தின் மூதாதையர்களின் புதைபடிம எச்சங்கள், ஆராய்ச்சியாளர்கள் முன்பு நினைத்திருந்ததைவிட இன்னும் மிக மிக தொன்மையானவை என புதிய ஆய்வின் வாயிலாக தெரியவந்துள்ளது. இவற்றில், மனிதகுலத்தின் தொட்டில் என அழைக்கப்படும் தென் ஆப்பிரிக்காவின் குகைகளில் புதைக்கப்பட்டிருந்த 'மிஸ்ஸர்ஸ் பிளெஸ்' (Mrs Ples) என அழைக்கப்படும் பண்டைய குகைவாழ் பெண்ணின் புதைபடிம எச்சங்களும் அடக்கம். 34 லட்சம் முதல் 37 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆரம்பகால மனிதர்களின் குழு பூமியில் சுற்றித் திரிந்ததாக, நவீன சோதனை முறைகள் பரிந்துரைக்கின்றன. இந்த புதிய காலவரிசை மனித பரிணாம வளர்ச்சி குறித்த பொதுவான புரிதல்களை மாற்றியமைக்கக்கூடும். நியாண்டர்தால் மனிதர்கள் - நவீன மனிதர்கள் நீண்ட காலம் சேர்ந்து வாழ்ந்தனர்: புது கண்டுபிடிப்பு ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய ஆதி மனித இனம்: மண்டை ஓட்டில் வெளியான ரகசியம் தமிழர்களுக்கு என தனியே மரபணு அமைப்பு உள்ளதா? அறிவியல் சொல்லும் ரகசியம் இதன்மூலம், நமது முன்னோர்கள் ஆரம்பகால மனிதர்களாக பரிணமித்திருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உருவாகியுள்ளன. ஜோஹன்னெஸ்பர்க்குக்கு அருகில் உள்ள ஸ்டெர்க்ஃபோன்டைன் குகைகளில் கண்டெடுக்கப்பட்ட ஆஸ்த்ராலோபிதெகஸ் ஆப்பிரிகானுஸ் (Australopithecus africanus) இனத்தின் புதைபடிம எச்சங்கள், 26 லட்சம் ஆண்டுகளுக்கும் குறைவான வயதுடையவை என பல ஆண்டுகளாக ஆராய்ச்சியாளர்கள் நம்பி வந்தனர். ஆரம்பகால மனிதர்களின் புதைபடிம எச்சங்கள் உலகிலேயே அதிகமாக இங்குதான் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மிஸ்ஸர்ஸ் பிளெஸ் என பெயரிடப்பட்ட ஆரம்பகால குகைவாழ் பெண்ணின் முழுமையான மண்டை ஓடும் 1947ஆம் ஆண்டில் இங்குதான் கண்டெடுக்கப்பட்டது. இரண்டு கால்களால் நடக்கக்கூடிய இந்த அழிந்துபோன இனம், நவீன கால மனிதர்களைவிட உயரம் குறைவானவை என ஸ்மித்சோனியன் அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது. ஆண் இனம் சுமார் 4 அடி 6 இன்ச் (138 செ.மீ.) உயரமும், பெண் இனம் 3 அடி 9 இன்ச் (115 செ.மீ.) உயரமும் கொண்டவர்களாக இருந்துள்ளனர். ஆரம்பகால மனிதர்களின் மூதாதையர்கள் ஆனால், நவீன கதிரியக்க கால தொழில்நுட்ப பரிசோதனைகள் மிஸ்ஸர்ஸ் பிளெஸ் மற்றும் அதனை சுற்றி கண்டெடுக்கப்பட்ட புதைபடிம எச்சங்கள், முன்பு நினைத்திருந்ததை விட உண்மையில் 10 லட்சம் ஆண்டுகள் பழமையானவை என தெரியவந்துள்ளது. புதைபடிமவங்களைச் சுற்றியுள்ள வண்டலைச் சோதித்ததன் மூலம் ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டறிந்துள்ளனர். முன்னதாக ஆஸ்த்ராலோபிதெகஸ் ஆப்பிரிகானுஸ் இனம், 22 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் சுற்றித் திரிந்த நமது முன்னோர்களான ஹோமோஜீனஸ் மனித இனமாக பரிணமித்திருக்க முடியாத அளவுக்கு பழமையானது அல்ல என விஞ்ஞானிகளால் கருதப்பட்டது. தற்போதைய கண்டுபிடிப்பு, அந்த பரிணாம பாய்ச்சலைச் செய்ய அந்த இனத்திற்கு 10 லட்சம் கூடுதல் ஆண்டுகள் இருந்ததாகக் கூறுகின்றன. மேலும், ஆரம்பகால மனிதர்களின் மூதாதையர்களாக மிஸ்ஸர்ஸ் பிளெஸ் மற்றும் அதனை சார்ந்த இனங்கள் இருந்ததாக இந்த ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. ஆரம்பகால மனிதர்களை தோற்றுவித்த இனமாக நீண்டகாலமாக கருதப்பட்டுவந்த ஆப்பிரிக்காவின் ஆஸ்த்ராலோபிதெகஸ் அஃபாரென்சிஸ் இனத்தைச் சேர்ந்த 32 லட்சம் ஆண்டுகள் பழமையான லூசி எனப்படும் குரங்கு இனத்தின் சமகாலத்தில் ஆஸ்த்ராலோபிதெகஸ் ஆப்பிரிகானுஸ் இனமும் வாழ்ந்துள்ளது. இந்த புதிய காலவரிசையால், இவ்விரண்டு இனங்களும் தொடர்புகொண்டு இனப்பெருக்கம் செய்திருக்கக்கூடும் எனக்கூறும் ஆராய்ச்சியாளர்கள், மனிதர்கள் எங்கிருந்து வந்தனர் என்ற நம் புரிதலை சிக்கலுக்குள்ளாக்கியுள்ளனர், மனித இனத்தின் தோற்றம் அவ்வளவு எளிதான பரிணாம கோட்பாடாக இருக்காது என அவர்கள் கூறுகின்றனர். அதாவது, நம்முடைய குடும்ப மரம் "ஒரு புதரைப் போன்றது," என, பிரெஞ்சு ஆராய்ச்சியாளரும் இந்த ஆராய்ச்சியில் பங்கெடுத்தவருமான லாரென்ட் பிரகெஸெல்ஸ் கூறுகிறார். https://www.bbc.com/tamil/science-61986088
  19. நூபுர் ஷர்மா vs முகமது ஜுபைர்: ஒரே பிரிவில் வழக்கு - வெவ்வேறு நடவடிக்கை? சட்டம் என்ன சொல்கிறது? சரோஜ் சிங் பிபிசி செய்தியாளர் 29 ஜூன் 2022 பட மூலாதாரம்,TWITTER/GETTY IMAGES படக்குறிப்பு, முகமது ஜுபைர், நூபுர் ஷர்மா (இடமிருந்து வலம்) நூபுர் ஷர்மா மீதும் முகமது ஜுபைர் மீதும் ஒரே பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்றாலும் நடவடிக்கைகள் வெவ்வேறாக இருப்பது ஏன் என்று சட்ட வல்லுநர்கள் கேள்வி எழுப்புகின்றனர். என்ன நடக்கிறது இந்த விவகாரத்தில்? ஆல்ட் நியூஸ் (Alt News) என்ற உண்மை சரிபார்ப்பு இணையதளத்தின் இணை நிறுவனரான முகமது ஜுபைர், திங்கள்கிழமை இரவு டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153ஏ மற்றும் 295 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ட்விட்டரில், முகமது ஜுபைரின் பதிவு ஒன்றைக் குறிப்பிட்டு, "ஒரு குறிப்பிட்ட மதத்தை அவமதிக்கும் நோக்கத்துடன் இதில் படம் வெளியிடப்பட்டுள்ளது, எனவே இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ஒரு ட்விட்டர் கணக்கில் இருந்து ட்வீட் செய்யப்பட்டுள்ளது. இந்த ட்வீட்டின் அடிப்படையில்தான், முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று டெல்லி காவல்துறை தெரிவிக்கிறது. இந்த இடத்தில் நூபுர் ஷர்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள பிரிவுகளையும் பார்க்க வேண்டும். தலை வெட்டிக்கொல்லப்பட்ட நபர்; பிரதமர் மோதிக்கும் மிரட்டல் - ராஜஸ்தானில் நேற்று நடந்தது என்ன? நூபுர் ஷர்மா விவகாரம்: அரபு நாடுகளில் எழும் எதிர்ப்பு; இந்தியாவின் பதில் என்ன? பாஜக-வின் மத நல்லிணக்க அறிக்கை, நபிகள் பற்றி பேசிய நிர்வாகிகள் நீக்கம்: என்ன நடக்கிறது? நூபுர் ஷர்மா பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மா, முகமது நபிக்கு எதிராக ஆட்சேபத்திற்குரிய கருத்துகளை தெரிவித்தபோது, அவர் மீதும் இதே பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதாவது, இந்திய தண்டனை சட்டம், 153ஏ, 295 மற்றும் 505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அப்படியானால், இருவரது விவகாரங்களிலும் சாட்டப்பட்டுள்ள குற்றங்களும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளும் ஒன்றாகவே இருக்கின்றன. டெல்லி காவல்துறையின் சிறப்பு ஐ.எஃப்.எஸ்.ஓ (IFSO) பிரிவு, இந்த இரண்டு வழக்குகளிலும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துவிட்டது. இதுபோன்ற சூழ்நிலையில், அதாவது இரண்டு எஃப்.ஐ.ஆர்-களிலும் ஒரேமாதிரியான பிரிவுகள் இருக்கும்போது, சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் ஒருவரும், வெளியே ஒருவரும் இருப்பது ஏன் என்று பல சட்ட வல்லுநர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Delhi Police bending over backwards to please sahibs & thumb nose at law.@zoo_bear arrested on trumped up case w/o notice while assisting in case where HC given him protection. While Ms. Fringe Sharma enjoys life of protection at tax payer expense for EXACT same offences. — Mahua Moitra (@MahuaMoitra) June 27, 2022 Twitter பதிவின் முடிவு, 1 இந்திய தண்டனை சட்டத்தின் இந்த இரு பிரிவுகளையும் புரிந்து கொள்ள, பிரபல மூத்த வழக்குரைஞரும் எழுத்தாளருமான நித்யா ராமகிருஷ்ணனிடம் பிபிசி பேசியது. இந்த இரண்டு குற்றப்பிரிவுகளையும் மிக எளிமையான மொழியில் அவர் விளக்கினார். பிரிவு 153A என்றால் என்ன? ஐபிசியின் 153ஏ பிரிவு பற்றி விளக்கிய அவர், "மதம், சாதி, பிறந்த இடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் இருவேறு சமூகத்தினரிடையே வெறுப்பை பரப்பும் நோக்கத்துடன் (பேச்சு மூலமாகவோ, எழுத்து மூலமாகவோ அல்லது அடையாளமாகவோ) செய்யப்படும் செயல்களுக்கு எதிராக இந்தப் பிரிவுவின் கீழ் வழக்குப் பதியப்படலாம். இதன் கீழ் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். இது ஜாமீனில் வெளிவர முடியாத குற்றத்தின் கீழ் வருகிறது," என்று குறிப்பிட்டார். பிரிவு 295 என்றால் என்ன? "ஒரு மதத்தைச் சேர்ந்த வழிபாட்டுத் தலத்திற்கு சேதம், அவமதிப்பு அல்லது அவதூறு ஏற்படுத்தும் நோக்கிலான நடவடிக்கைக்கு இந்தப் பிரிவுவின் கீழ் வழக்குப் பதியப்படலாம்," என்று நித்யா கூறினார். இதில் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். ஜாமீன் பெறுவதற்கான விதிமுறைகளும் இதில் உண்டு. இருப்பினும், நித்யா இன்னும் ஒரு முக்கியமான விஷயத்தை சுட்டிக்காட்டுகிறார். "ஐபிசியின் எந்தப் பிரிவு ஜாமீனில் வெளிவரக்கூடியது அல்லது ஜாமீனில் வெளிவர முடியாதது என்பதைத் தவிர வேறு ஒரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். ஒரு வழக்கில் ஏழு ஆண்டுகளுக்கு குறைவான தண்டனையே இருக்கும்பட்சத்தில், அந்த நபர் கைது செய்யப்படக்கூடாது. உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஒன்றில் இதை தெரிவித்துள்ளது. கடந்த 2-3 தீர்ப்புகளில் இது மீண்டும் சொல்லப்பட்டுள்ளது. காணொளிக் குறிப்பு, ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைர் - டெல்லி போலீஸ் இவரை கைது செய்தது ஏன்? இதுபோன்ற வழக்கில் கைது செய்யப்பட்டாலும் அதற்கான காரணங்களை உறுதி செய்து, ஏன் கைது செய்கிறார்கள் என்பதை எழுத்துப்பூர்வமாக குறிப்பிடவேண்டும். யார் மீது குற்றச்சாட்டு உள்ளதோ, அந்த நபருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இதன் மூலம் அவரை விசாரணைக்கு அழைக்கவும், விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவும் முடியும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது," என்று அவர் கூறுகிறார், இப்படிப்பட்ட நிலையில், முகமது ஜூபைரின் விவகாரம் என்ன, நூபுர் ஷர்மாவின் விவகாரம் என்ன என்பதையும், இரண்டுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகள் என்ன என்பதையும் இங்கே தெரிந்துகொள்வோம். முகமது ஜூபைர் மீது குற்றச்சாட்டு பட மூலாதாரம்,TWITTER/ZOO_BEAR 2018ஆம் ஆண்டில் முகமது ஜுபைர் ஒரு புகைப்படத்தை ட்வீட் செய்திருந்தார். அதில் ஹனிமூன் ஹோட்டல் ஒன்றின் பெயர் இந்து கடவுளின் பெயராக மாற்றப்பட்டதன் படம் இருந்ததாக டெல்லி காவல்துறை தெரிவித்தது. அந்த ட்வீட்டைப் பகிர்ந்த ஒரு ட்விட்டர் பயனர், இது இந்து கடவுளை அவமதிப்பதாக எழுதினார். முகமது ஜூபைர் தனது ட்வீட்டில், அந்த புகைப்படத்தை 2014க்கு முன்னும் பின்னும் இருந்த ஆட்சியுடன் இணைத்து, ஒரு விதத்தில் கிண்டல் செய்திருந்தார். முகமது ஜுபைர் ட்வீட் செய்த புகைப்படமும் ஒரு இந்தி திரைப்படத்தின் காட்சிதான். "முகமது ஜுபைர் ட்வீட் செய்திருப்பது, குறிப்பிட்ட நபர்களால் விரும்பப்படாமல் இருக்கலாம். ஆனால் 153ஏ பிரிவைத் திணிப்பதற்காக, மேலும் பல விஷயங்கள் நிரூபிக்கப்பட வேண்டும். இதன் உள்நோக்கம் என்ன, சமூகங்களுக்கிடையில் பகையை உருவாக்குவதா, பரஸ்பர நல்லிணக்கத்தை சீர்குலைப்பதா போன்றவை நிரூபிக்கப்படவேண்டும். ஒரு குறிப்பிட்ட நபருக்கு மட்டும் பிடிக்கவில்லை என்பதால் அதன் அடிப்படையில் 153ஏவை சுமத்த முடியாது. அதே போல 295 பிரிவை சுமத்துவதற்கு முன், எந்த வழிபாட்டுத் தலத்தை சேதப்படுத்தும் வேலையைச் செய்துள்ளார் என்று கூறப்படவேண்டும்," என்று நித்யா குறிப்பிட்டார். நூபுர் ஷர்மா மீதான குற்றச்சாட்டு பட மூலாதாரம்,HINDUSTAN TIMES படக்குறிப்பு, நூபுர் ஷர்மா பாஜகவின் முன்னாள் தேசிய செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மா மே 26 அன்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முகமது நபிக்கு எதிராக ஆட்சேபத்திற்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இதையடுத்து, நூபுர் ஷர்மாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது, மிரட்டல் விடுக்கப்பட்டது. கான்பூரில் இரு தரப்பினருக்கு இடையே நடந்த வகுப்புவாத வன்முறையில் பலர் கைது செய்யப்பட்டனர். 12க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகள் இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. கத்தார் மற்றும் இரான் இந்திய தூதரை வரச்சொல்லி எதிர்ப்பை பதிவு செய்தன. இந்த விவகாரத்தில் இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கத்தார் கோரியது. நூபுர் ஷர்மாவை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்த பாஜக, நவீன் ஜிண்டலை கட்சியில் இருந்து நீக்கியது. நூபுர் ஷர்மாவுக்கு வந்த மிரட்டல்களை அடுத்து, டெல்லி போலீசார் அவருக்கு பாதுகாப்பு வழங்கினர். டெல்லி போலீசார் நூபுர் ஷர்மா மீது ஐபிசி 153ஏ, 295, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் நூபுர் ஷர்மா இன்னும் கைது செய்யப்படவில்லை. ஒரே பிரிவுகள், நடவடிக்கை வேறு, இது ஏன்? - டெல்லி காவல்துறை பதில் பட மூலாதாரம்,ANI இரண்டு வழக்குகளிலும் உள்ள பிரிவுகள் ஒரே மாதிரியானவை. ஒரு வழக்கில் சம்மந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் நூபுர் ஷர்மா ஏன் கைது செய்யப்படவில்லை? இந்தக் கேள்விக்கு பதிலளித்த நித்யா, "இந்தக் கேள்வியை டெல்லி போலீஸாரிடம் நானும் கேட்க விரும்புகிறேன். இந்தக் கேள்வியை நீங்கள் காவல்துறையிடம்தான் கேட்க வேண்டும்" என்கிறார். டெல்லி காவல்துறையின் ஐஎஃப்எஸ்ஓ (IFSO) டிஜிபி, கேபிஎஸ் மல்ஹோத்ராவின் கருத்தை அறிய பிபிசி பலமுறை அவரை அழைத்தது. அவரது துறைதான் இரண்டு வழக்குகளையும் பதிவு செய்துள்ளது. ஆனால் நேரத்தை உறுதி செய்த பிறகும் அவர் பிபிசியிடம் பேசவில்லை. ஆனால் ஏஎன்ஐ செய்தி முகமைக்கு அவர் அளித்த பேட்டியில், இதே போன்றதொரு கேள்விக்கு பதிலளித்த அவர், "2020ஆம் ஆண்டிலும், முகமது ஜுபைர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இப்போது 2022ஆம் ஆண்டு நடக்கிறது. அதில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது, மற்றவர் மீது இல்லை என்று சொல்வது தவறு. 2020ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கில் நாங்கள் கண்டறிந்ததன் படி, நீதிமன்றத்தில் அறிக்கையை வழங்கியபோது இந்த கேள்வி எழவில்லை. விசாரணையில் வெளியாகி இருப்பதன் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது," என்று கூறினார். சாவர்க்கர் பிரிட்டிஷாரிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்கிறது பா.ஜ.க - இது உண்மையா? 2020ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கில் முகமது ஜுபைர் கைது செய்யப்படுவதில் இருந்து உயர்நீதிமன்றம் அவருக்கு பாதுகாப்பு அளித்துள்ளது என்பதும் உண்மை. "ஆட்சேபனைக்குரிய ட்வீட் காரணமாக ட்விட்டரில் வெறுப்பு பதிவுகள் குவியத்தொடங்கின. இது மத நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும். இந்த வழக்கில் சாதனமும்(Device), நோக்கமும் முக்கியமாக இருந்தன. முகமது ஜுபைர் இவற்றில் இருந்து தப்ப முயற்சி செய்துள்ளார். தொலைபேசி ஃபார்மேட் (Format) செய்யப்பட்டுள்ளது. இது கைதுக்கு அடிப்படையாக அமைந்தது," என்று டிஜிபி கே.பி.எஸ்.மல்ஹோத்ரா கூறினார். முகமது ஜூபைரின் கைது நடவடிக்கை குறித்து எழும் கேள்விகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நூபுர் ஷர்மா முகமது ஜூபைர் மற்றும் நூபுர் ஷர்மா விஷயத்தில் மற்றொரு தொடர்பும் உள்ளது. நூபுர் ஷர்மா மே 26 அன்று தொலைக்காட்சி சேனலில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக முகமது ஜுபைர் வெளியிட்ட ட்வீட்டிற்கு பிறகே நூபுர் ஷர்மா விவகாரம் சூடுபிடிக்க தொடங்கியது. 2018இல் பதிவிட்ட ட்வீட்டிற்காக அவர் 2022இல் கைது செய்யப்பட்டார். அதன் எஃப்ஐஆர் ஜூன் 20 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது. அதாவது, நூபுர் ஷர்மா விவகாரத்துக்குப் பிறகு. முகமது ஜூபைர், வேறு வழக்கின் விசாரணைக்காக அழைக்கப்பட்டு, மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். முகமது ஜுபைரின் கைது நடவடிக்கையின் முழு செயல்முறை குறித்து ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். பலமுறை கேட்டும் எஃப்.ஐ.ஆர் கிடைக்கவில்லை இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஆல்ட் நியூஸின் இணை நிறுவனர் பிரதிக் சின்ஹா, "2020ஆம் ஆண்டின் ஒரு வழக்கு விசாரணைக்காக, தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு முகமது ஜுபைரை திங்கள்கிழமை விசாரணைக்கு அழைத்தது. இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அவர் கைது செய்யப்படாமல் இருப்பதற்கான பாதுகாப்பை வழங்கியது. ஆனால் மற்றொரு எஃப்ஐஆர் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று திங்கள்கிழமை மாலை 6:45 மணிக்கு எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. சட்ட விதிகளின்படி அவர் கைது செய்யப்பட்ட பிரிவுகளின் கீழ் எப்ஐஆரின் நகலை எங்களுக்கு வழங்குவது கட்டாயமாகும். ஆனால் பலமுறை கோரிக்கை விடுத்தும் எப்ஐஆர் நகல் கிடைக்கவில்லை," என்று அவர் குறிப்பிட்டுள்ளார். Twitter பதிவை கடந்து செல்ல, 2 Twitter பதிவின் முடிவு, 2 ஜுபைர் கைது செய்யப்பட்டதில் நடைமுறை மீறல் நடந்துள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்த நெல்சர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் பைசான் முஸ்தபா, "ஜுபைர் வழக்கில் காவல்துறை முன்னரே நோட்டீஸ் கொடுக்கவில்லை. இதனால் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. எப்ஐஆரில் பிரிவு 153ஏ மற்றும் 295 மட்டுமே உள்ள பட்சத்தில் போலீசார் முன்னரே நோட்டீஸ் அனுப்பியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். காவல்துறையும் கைது செய்வதை தவிர்த்திருக்க வேண்டும். ஏழாண்டுகளுக்கு குறைவான தண்டனை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பு இதுவாகும். சாட்சியங்கள் சிதைக்கப்படலாம் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாகலாம் என்ற அச்சம் இல்லாத பட்சத்தில் கைது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்," என்றார். எஃப்.ஐ.ஆரின் நகல் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்த பைசான் முஸ்தபா, "எப்.ஐ.ஆரை பதிவேற்றுவது குற்றம் சாட்டப்பட்டவர்களை மேலும் ஆபத்தில் ஆழ்த்திவிடும் என்று காவல்துறை கருதினால், அப்படிப்பட்ட சூழ்நிலையில், பதிவேற்றம் செய்யாமல் இருப்பது காவல்துறையின் சிறந்த முடிவு. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவராக இருந்தாலும் சரி அல்லது அவரது வழக்குரைஞராக இருந்தாலும் சரி, எப்ஐஆரின் நகலை அவர்களிடம் கண்டிப்பாக கொடுக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் எந்த அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் அவரது வழக்குரைஞர் தங்கள் தரப்பு வாதத்தை தயார் செய்ய முடியும்," என்று கேள்வி எழுப்பினார். 2018இல் பதிவிட்ட ட்வீட் மீது 2022இல் ஏன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. "கிரிமினல் சட்டத்தில் குற்றம் தெரியவரும்போதுதான், அந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க முடியும்," என்கிறார் பைசான் முஸ்தபா. டிஜிட்டல் மெய்நிகர் உலகில் விஷயம் பெரிதாகும்போது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று டிஜிபி மல்ஹோத்ராவும் கூறினார். https://www.bbc.com/tamil/india-61978819
  20. புதிய தொழிலாளர் சட்ட விதிகள்: ஊதியம், பணிநேரம், பிஎஃப் குறித்து என்ன சொல்கின்றன? பத்மா மீனாட்சி பிபிசி 29 ஜூன் 2022, 00:44 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அரசு வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகளை அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. நான்கு பிரிவுகளின் கீழ் 29 சட்ட விதிமுறைகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த 29 சட்ட விதிகளில் ஊதியம் பிரிவின் கீழ் 4 சட்ட விதிமுறைகளும், சமூக பாதுகாப்பின் கீழ் 9 சட்ட விதிமுறைகளும், பணிப் பாதுகாப்பு, உடல்நலம், பணிச்சூழல் ஆகிய பிரிவுகளின் கீழ் 13 சட்ட விதிமுறைகளும் உள்ளன. தொழில் உறவுகள் பிரிவின்கீழ் மற்ற மூன்று சட்ட விதிமுறைகளும் உள்ளன. இந்த சட்ட விதிகளின் பலன்கள் அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா ஊழியர்கள் என அனைத்துத் தரப்பு பணியாளர்களையும் சென்றடைய வேண்டும் என அரசு கருதும் நிலையில், இச்சட்ட விதிமுறைகள் ஊழியர்களுக்கு இழப்பையே ஏற்படுத்தும் என தொழிலாளர் சங்கங்களின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சட்ட விதிமுறைகள் மாநில அரசுகள் மற்றும் இந்திய அரசு பணிகளில் உள்ள ஊழியர்களுக்குப் பொருந்தாது. இந்த விதிமுறைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள முக்கியமான மாற்றங்கள் குறித்துப் பார்ப்போம். தமிழ்நாட்டில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் குறிவைக்கப்படுகிறார்களா? தமிழ்நாட்டில் மூடப்படும் ஃபோர்டு ஆலை: கலங்கும் தொழிலாளர் குடும்பங்கள் மதுரை கூட்டுக் குடிநீர் திட்டம்: தொழிலாளர்கள், விவசாயிகள் எதிர்ப்பது ஏன்? ஊதியம் புதிய விதியின்படி, ஊழியர்களின் 50% வருமானம் அடிப்படை சம்பளமாக காட்டப்பட வேண்டும். இதன்மூலம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் (பி.எஃப்) ஊழியர்களின் பங்கு அதிகரிக்கும். இதனால், தனியார் துறையில் பணிபுரிபவர்களின் 'டேக் ஹோம்' வருமானம் குறையும் என, தொழிலாளர் சங்கங்களின் தலைவர்கள் கூறுகின்றனர். ஆனால், இந்த மாற்றத்தால் அவர்களின் ஓய்வுக்குப் பின்னர் கிடைக்கும் பி.எஃப் மற்றும் கிராஜூவிட்டி தொகை உயர்ந்து அவர்கள் மதிப்பான வாழ்க்கையை வாழ உதவும் என அரசு கூறுகிறது. "வருமானத்தில் 50 சதவீதத்தை அடிப்படை சம்பளமாகவும், மீதம் உள்ள 50 சதவீதத்தை அலவன்ஸாகவும் பெறும்போது புதிய விதிகள் உங்களை பாதிக்காது," என வரிகள் குறித்த நிபுணரான கௌரி சத்தா பிபிசியிடம் முன்பு தெரிவித்திருந்தார். புதிய விதிகளின்படி, ஆண்கள், பெண்கள் இருவருக்குமே சமமாக ஊதியம் வழங்கப்பட வேண்டும். இந்த மாற்றங்கள் நிறுவனங்கள் மற்றும் அரசுக்கு மட்டுமே பலனளிக்கும் என, சிஐடியூ தொழிற்சங்கத்தின் தேசிய செயலாளர் சிந்து பிபிசியிடம் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES பணிநேரம் புதிய விதிகள் அமலுக்கு வந்தால், ஊழியர்கள் எத்தனை மணிநேரம் பணிபுரிய வேண்டும் என்பதிலும் மாற்றங்கள் வரும். தற்போது பெரும்பாலான நிறுவனங்களில் பணிநேரம் 8-9 மணிநேரங்களாக உள்ளது. ஆனால், புதிய விதிகளின்படி இது 12 மணிநேரமாக நீட்டிக்கப்படலாம் என, சிஐடியூவின் ஆந்திரபிரதேச மாநில தலைவர் நரசிங் ராவ் கூறுகிறார். "வார பணிநேரமான 48 மணிநேரம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்," என ஐதராபாத்தை சேர்ந்த நிதி ஆய்வாளர் கே.நாகேந்திர சாய் பிபிசியிடம் தெரிவித்தார். "புதிய விதிகளின்படி இந்த 48 மணிநேரம் என்பது நீட்டிக்கப்படாது. எனவே, ஒருவர் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் வேலை செய்தால் அவர்களுக்கு மூன்று நாட்கள் வார விடுப்பு வழங்கப்பட வேண்டும். தனிப்பட்ட நிறுவனங்களைப் பொறுத்து இந்த 48 மணிநேர பணி என்பது 4 நாட்கள், 5 நாட்கள் அல்லது 6 நாட்களில் பிரித்து வழங்கப்படலாம். இது ஒரு ஊழியரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையை பாதிக்கலாம், இம்மாற்றம் அவர்களுக்கு பலனளிக்காது," என்றார் அவர். பாதுகாப்பு, உடல் நலம், பணிச்சூழல் (தொழில் பாதுகாப்பு, உடல் நலம், பணிச் சூழல் விதிமுறைகள்) குறித்துப் பேசும் சட்டப்பிரிவு 25 (1)இன் கீழ், ஊழியர்களை ஒரு நாளைக்கு 8 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்ய வைக்கக் கூடாது. ஆனால், பிரிவு 25(1)(பி)இன் படி, நிறுவனங்கள் அவர்களை 12 மணிநேரம் வரை வேலை செய்ய வைக்க முடியும். பிரிவு 26(1)இன் படி, ஊழியர்கள் வாரத்தில் ஆறு நாட்களுக்கு மேல் வேலை செய்யக் கூடாது. இந்த விதியை தளர்த்தும் அதிகாரம், பிரிவு 26(2)இன் படி அரசுக்கு உள்ளது. ஊழியர்களுக்கு வார விடுமுறை வழங்கப்படவில்லையென்றால், அவர்களுக்கு இரண்டு மாதங்களுக்குள் அந்த விடுமுறைகளை ஈடுகட்ட வேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES அதிக நேர பணி (ஓவர் டைம்) அதிக நேரம் பணி செய்தல் முன்பு மாதத்திற்கு 50 மணிநேரங்களாக இருந்தது, இது 125 மணிநேரங்களாக அதிகரிக்கலாம். அதிக நேரம் பணி செய்வதற்கான ஊழியர்களின் விருப்பம், புதிய விதிகளின்படி தேவைப்படாது. அதிக நேர பணிநேரங்கள் குறித்து எவ்வித குறிப்பிட்ட விதிமுறைகளும் இந்த மாற்றங்களில் இல்லை என, தொழிலாளர் சங்க தலைவர்கள் கூறுகின்றனர். ஊழியர்கள் கூடுதல் நேரம் பணி செய்வது குறித்து முடிவெடுக்கும் முழு உரிமையும் நிர்வாகத்திற்கே இருக்கும். அதிக நேரம் பணி செய்ததற்காக வழங்கப்படும் ஊதியம் குறித்து புதிய விதிமுறைகளில் வரையறுக்கப்படவில்லை என, நரசிங் ராவ் கூறுகிறார். புதிய விதிகளின்படி, விடுமுறைகள் பெறுவதற்கு ஊழியர் ஒருவர் ஆண்டில் 180 நாட்கள் வேலை செய்திருக்க வேண்டும், இது முன்பு 240 நாட்களாக இருந்தது. ஊழியர்களுக்கான மொத்த விடுப்பு எண்ணிக்கையில் மாற்றம் இருக்காது. பட மூலாதாரம்,DIGVIJAY SINGH பெண்கள் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பணிபுரிவதற்கான வாய்ப்புகளை புதிய விதிமுறைகள் வழங்குகின்றன. பெண்களின் ஒப்புதலுடன் அவர்களை இரவு நேர பணியிலும் அனுமதிக்கலாம். ஆனால், நிறுவனங்கள் அவர்களுக்கான போதுமான பாதுகாப்பு மற்றும் பணியிட வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும். பி.எஃப் இந்தியாவில் பெரும்பாலான நிறுவனங்கள் பி.எஃப்-ல் 12 சதவீதத்தை தன் பங்காக வழங்குகிறது. புதிய விதிகளின்படி, ஊழியர்களின் அடிப்படை ஊதியம் உயர்த்தப்படும். "அடிப்படை தேவை மொத்த வருமானத்தில் 50 சதவீதமாக இருக்க வேண்டும் என்பதால், நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களின் பி.எஃப் பங்களிப்பு அதிகரிக்கும். இது நிறுவனங்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தலாம். எனினும், ஊழியர்களின் ஓய்வுக்கு பிந்தைய பலன்கள் அதிகரிக்கும். பி.எஃப் பங்களிப்பு அதிகரிப்பதால், அரசாங்கத்தின் கருவூலத்திற்கு வரவு அதிகரிக்கும்," என நாகேந்திர சாய் தெரிவித்தார். புதிய விதிகளின்படி கிராஜூவிட்டி பங்கும் அதிகரிக்கும். எனவே புதிய விதிகளின்படி கிராஜூவிட்டியை கணக்கிடும் நடைமுறைகளில் மாற்றங்கள் இருக்கும். கிராஜூவிட்டி தொகையை ஊழியர்களுக்கு வழங்குவதற்கான குறைந்தபட்ச பணி ஆண்டுகள் நீக்கப்பட்டுள்ளது. இது ஒப்பந்த ஊழியர்களுக்கும் பொருந்தும். மேலும், அவர்களுக்கு நிரந்தர ஊழியர்களுக்குக் கிடைக்கும் சமூக பாதுகாப்புப் பலன்களும் கிடைக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES சுகாதார காப்பீடு அனைத்துத் துறைகளிலும் பணிபுரியும் ஊழியர்கள் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சையையும் இ.எஸ்.ஐ வரம்புக்குட்பட்ட கிளினிக்குகளிலும் பெறுவார்கள். இஎஸ்ஐ மருத்துவமனைகள் மற்றும் அதன் கிளைகள் மாவட்ட அளவிலும் நீட்டிக்கப்படும். இஎஸ்ஐ பலன்கள் தோட்ட தொழிலாளர்களுக்கும் நீட்டிக்கப்படும் என அரசு கூறியுள்ளது. இ.எஸ்.ஐ, பி.எஃப் இரண்டுக்கும் யூ.ஏ.என் எண் உள்ளது. இந்த எண் ஆதாருடன் இணைக்கப்படும். ஒப்பந்த பணிகள் தொழில் உறவுகள் சட்டப்பிரிவு 2, ஒப்பந்தப் பணிகளை சட்டப்பூர்வமாக்குகிறது. இதன்கீழ் நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு ஊழியர்களை நியமிக்கலாம். அந்த காலம் முடிந்தவுடன், எவ்வித முன்கூட்டிய நோட்டீஸோ அல்லது இழப்பீடோ இல்லாமல் அவர்களை பணியிலிருந்து நீக்கலாம். ஆனால், அவர்கள் ஒராண்டை நிறைவு செய்திருந்தால், நிரந்தர பணியாளர்களை போன்றே அவர்களுக்கும் கிராஜூவிட்டி பலன் உண்டு. "11 மாதங்களுக்கு மட்டுமே ஒப்பந்த பணி வழங்கப்பட்டிருந்தால், கிராஜூவிட்டிக்கான தகுதி இருக்காது. இந்த நடைமுறையை நிர்வாகங்கள், தங்கள் ஆதாயத்திற்காக பயன்படுத்திக்கொள்ளும்" என்கிறார், சிந்து. "பாலியல் தொழில் வருமானத்தில்தான் என் மகனை வளர்த்தேன்" - ஒரு பாலியல் தொழிலாளியின் டைரி விற்பனைக்கு வந்தது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை "16 தறி ஓட்டினாலும் கூலி பத்தலை" - விசைத்தறி தொழிலாளர்களின் கவலைகள் தேசிய இணையதளம் இதற்கான தேசிய இணையதளத்தில் அனைத்து ஊழியர்களும் தங்களை மாநிலங்களுக்கு இடையேயான புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக பதிவு செய்து கொள்ளலாம். இதன்மூலம் தேசியளவில் செயல்படுத்தப்படும் சமூக பாதுகாப்பு திட்டங்களின் பலன்களை அவர்கள் பெற முடியும். இவ்விதியின்கீழ், வேறு மாநிலங்களில் பணி செய்துவரும் ஊழியர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக அவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை போக்குவரத்துச் செலவுகள் வழங்கப்பட வேண்டும். அனைத்து ஊழியர்களுக்கும் பணியில் இணைந்ததற்கான நியமன கடிதங்கள் வழங்கப்பட வேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES வீட்டிலிருந்து பணி வீட்டில் இருந்து பணிசெய்யும் ஊழியர்களை, வீட்டிலிருந்து பணி செய்ய அனுமதிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. "இந்தச் சட்டங்களைச் செயல்படுத்துவதற்கு, எந்த ஒரு மாநிலமும் சிறப்புத் தொழிலாளர் சட்டங்களை இயற்றுவதும் பெரும் தடையாக அமையலாம். நிறுவனங்கள் அந்தந்த மாநிலங்களின் வணிக நிறுவனங்களின் சட்டத்தின் கீழ் தங்களைப் பதிவுசெய்தால், அவை மாநில சட்டங்களின் வரம்புக்கு உட்பட்டவை. நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்த நிறுவனங்களில், பணியாளர்கள் ஒரு நாளைக்கு 9 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யக்கூடாது", என்கிறார் சாய். https://www.bbc.com/tamil/india-61972369
  21. சிங்கப்பூர் உணவுப் பற்றாக்குறை: எப்படி சமாளிக்கிறது சின்னஞ்சிறு நாடு? சதீஷ் பார்த்திபன் பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிங்கப்பூர் சிக்கன் ரைஸ் உணவுப் பாதுகாப்பு, விநியோகச் சங்கிலி ஆகியவை குறித்து சாமானியர்களும் பேசத் தொடங்கி உள்ளனர். இவ்வாறு பேச வைத்திருக்கிறது கொரோனா கொள்ளை நோய் நெருக்கடி. வளர்ந்த நாடுகளிலும்கூட உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் என்று கூறப்படும் வேளையில், சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகள் இத்தகைய சவால்களை எதிர்கொள்வது அவ்வளவு எளிதல்ல. சாலைகள்தோறும் திறந்தவெளி உணவகங்கள், அவற்றில் பரிமாறப்படும் விதவிதமான உணவு வகைகள், நிறைந்திருக்கும் வாடிக்கையாளர்கள் என்பது சிங்கப்பூரின் அடையாளங்களில் ஒன்றாக இன்றளவும் நீடித்து நிற்கிறது. இந்நிலையில், அந்தத் தீவு நாட்டில் உணவுப் பாதுகாப்பு குறித்த பேச்சும் கவலையும் அதிகரித்துள்ளது. யுக்ரேன் போரால் உலக அளவில் உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம்: உலக வர்த்தக அமைப்பு எச்சரிக்கை விலைவாசி உயர்வு: இலங்கையில் ஏற்பட்ட நெருக்கடி உலக நாடுகளுக்கும் பரவுமா? "சாப்பிட எதுவுமில்லை, கடல் நீரை குடித்தோம்" - தனுஷ்கோடியில் இலங்கை தம்பதி கண்ணீர் இறக்குமதியை நம்பியுள்ள சிங்கப்பூர் உலகின் மிகச் சிறிய தீவு நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரில் இயற்கை வளங்கள் மிகவும் குறைவு. இதனால் தனது உணவுத்தேவையை பூர்த்தி செய்துகொள்ள 90 விழுக்காடு உணவுப் பொருட்களை இறக்குமதி செய்கிறது. இதற்காக சுமார் 170 நாடுகளைச் சார்ந்துள்ளது. கொரோனா நெருக்கடி காரணமாக, உலகெங்கும் விநியோகச் சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பொருட்களின் விலை உயர்வு என்பது தவிர்க்க முடியாததாக உள்ளது. அந்த வகையில் சிங்கப்பூரில் உணவுப் பொருட்களின் விலை, ஒப்பீட்டு அளவில், கடந்த ஆண்டைவிட நடப்பாண்டின் ஏப்ரல் மாதம் 4.1%ஆக அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் இது 3.3% ஆக இருந்தது என சிங்கப்பூர் வர்த்தக, தொழில் அமைச்சகம் தெரிவித்துள்ளது. உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும் கண்காணிக்கவும் சிங்கப்பூர் உணவு முகமையை (Singapore Food Agency) கடந்த ஆண்டு அமைத்தது சிங்கப்பூர் அரசு. தற்போது இத்தீவு நாட்டின் உணவு உற்பத்தி பத்து விழுக்காடாக உள்ள நிலையில், அதை 30 விழுக்காடாக அதிகரிப்பது என்பது இந்த முகமையின் பணிகளில் ஒன்றாக உள்ளது. இதையடுத்து, பல்வேறு விதமான பண்ணைகள் தொடங்கி ஹைட்ரோபோனிக்ஸ் வரை அனைத்து விதமான நவீன உத்திகளிலும் முதலீடு செய்கிறது சிங்கப்பூர் அரசு. படக்குறிப்பு, கோப்புப்படம் ஏற்றுமதி தடைகளால் கவலைப்படும் சிங்கப்பூர் இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகள், உள்நாட்டுத் தேவையை முதலில் ஈடுகட்டும் விதமாக பல்வேறு உணவுப் பொருட்களின் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளன. இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான வேளையில், பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதித்தது இந்தோனேசியா. மறுபக்கம், மலேசியாவும் கோழிகளை ஏற்றுமதி செய்ய தடை விதித்தது. சிங்கப்பூருக்கு திடீர் நெருக்கடியை ஏற்படுத்தியது. ஏனெனில், இத்தீவு நாட்டின் கோழிகளுக்கான தேவையில் சுமார் 34 விழுக்காட்டை பூர்த்தி செய்வது மலேசியாதான். 48% கோழிகள் பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. மலேசியாவில் இருந்து புதிதாக கோழிகளை இறக்குமதி செய்ய முடியாவிட்டாலும், ஏற்கெனவே இறக்குமதி செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட கோழிகளை வைத்து நிலைமையைச் சமாளிக்கிறது சிங்கப்பூர். ஆனால், அந்த கோழிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவு வகைகளில் வழக்கமான சுவை இல்லை என வாடிக்கையாளர்கள் புலம்புவதாக உணவகம் நடத்துவோர் தெரிவிக்கின்றனர். ஏற்றுமதி, இறக்குமதி விவகாரங்களால் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பும் தவிர்க்க முடியாததாக உள்ளது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் சமையல் எண்ணெய், முட்டை, இறைச்சி ஆகியவற்றின் விலை, முப்பது முதல் 45 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் கூறுகின்றனர். நிலைமை இவ்வாறு இருக்க, உணவுகளின் விலையை உயர்த்தாமல் இருப்பது இயலாத காரியம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக அண்மையில் தனது உணவகத்தில் பரிமாறப்படும் சில உணவு வகைகளின் விலையை உயர்த்தியபோது வாடிக்கையாளர்கள் அதை ஏற்றுக்கொள்வார்களா என்ற தயக்கமும் அச்சமும் தமக்கு இருந்ததாகச் சொல்கிறார் சிங்கப்பூரில் ஜப்பானிய உணவகத்தை நடத்தி வரும் சியோ. உணவு வகைகளின் விலையை குறைந்தபட்சம் 20 முதல் 35 விழுக்காடு வரை உயர்த்தினால் மட்டுமே இத்தொழிலில் தாக்குப்பிடிக்கவும் நிலைத்து நிற்கவும் முடியும் என்ற நிலை காணப்படுவதாக சியோ சொல்கிறார். ஆனால், இந்த அளவு விலையை உயர்த்தும் பட்சத்தில், தமது வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஆதரிப்பார்களா எனும் சந்தேகம் எழுவதாக அவர் கவலைப்படுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் உணவுப் பண வீக்கத்தின் தாக்கத்தை உணர்கிறது சிங்கப்பூர் உணவுப் பண வீக்கத்தின் (food inflation) தாக்கத்தை சிங்கப்பூரர்கள் நன்கு உணர்ந்து வருவதாக பொருளியல் நிபுணர்கள் கூறுகின்றனர். கொரோனா நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் அனைத்துலக அளவில் உணவுப் பொருட்களின் விலை ஏற்கெனவே அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. இந்நிலையில், உக்ரேன், ரஷ்யா போரின் காரணமாக நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. எனவே, உணவுப் பற்றாக்குறை என்பது அடுத்த ஓரிரு ஆண்டுகளுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். சில நாடுகள் உணவுப் பொருட்களின் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளன எனில், அதனால் ஏற்படக்கூடிய வெற்றிடத்தை வேறு நாடுகளின் மூலம் நிரப்பிவிட இயலாது என்பதையும் துறைசார் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ரஷ்யா, உக்ரேன் நாடுகளால் உணவு, உணவுப்பொருள் சந்தையில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை வேறு ஏற்பாடுகளின் மூலம் நிரப்ப குறைந்தபட்சம் ஓராண்டு ஆகும் என்கிறார்கள் நிபுணர்கள். ஏற்றுமதி தொடர்பாக உக்ரேனுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் அனைத்துலக உணவு விநியோகச் சங்கிலிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது ஒருபுறம் இருக்க, உக்ரேன், ரஷ்யா இடையேயான போர் முடிவுக்கு வந்துவிட்டாலும்கூட, உணவுப்பொருட்களின் விலைகள் போருக்கு முந்தைய நிலைக்கு உடனடியாகத் திரும்ப வாய்ப்பில்லை என்பதும் பொருளியல் நிபுணர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது. எரிபொருள் விலை உயர்வு, தொழிலாளர் பற்றாக்குறை விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு ஆகியன ஏற்கெனவே நிலவும் உணவுப் பற்றாக்குறையையும் உணவுப் பொருட்களின் விலையும் மேலும் அதிகரிக்கச் செய்யும் என்பதே இந்நிபுணர்களின் எச்சரிக்கையாக உள்ளது. உணவுகளின் விலை சுமார் 20 விழுக்காடு வரை அதிகரிக்கும் என உலக வங்கியின் ஆய்வு தெரிவிக்கிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சவாலான சூழ்நிலையில், சிங்கப்பூர் அரசாங்கம் தன் குடிமக்களுக்கான உணவுப் பாதுகாப்பை நல்லவிதமாக உறுதி செய்து வருகிறது என்றபோதிலும், அதன் எதிர்கால நிலை குறித்து இப்போதே கணிக்க இயலாது என நிபுணர்கள் சிலர் கூறுகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES 30க்குள் 30 : சிங்கப்பூர் அரசாங்கம் நிர்ணயித்துள்ள புதிய இலக்கு எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் 30 விழுக்காடு உணவுப் பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும் என சிங்கப்பூர் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக 30க்குள் - 30 (30 by 30) என்ற திட்டத்தை வகுத்துள்ளது. இந்த சுய உற்பத்தித் திட்டமானது, நெருக்கடியான தருணங்களில் ஓரளவு கைகொடுக்கும் என்றாலும், அந்நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதிகளுக்கு மாற்றாக அமைந்துவிடாது என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். "ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியையும், குடும்பங்களின் சராசரி வருமான்தையும் அதிகரிப்பதற்கான திட்டங்களில் முதலீடு செய்வதிலேயே சிங்கப்பூர் அரசாங்கம் முனைப்பு காட்டி வருகிறது. மாறாக, வேளாண் நடவடிக்கைகளில் முதலீடுகள் செய்யப்படவில்லை. "எனவே, பணம் இருக்கும் வரையிலும் விநியோகச் சங்கிலியில் எந்தவித தடையும் ஏற்படாத வரையிலும் தேவையான உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய இயலும் என்பதே சிங்கப்பூர் அரசாங்கத்தின் திட்டமாக இருக்கக்கூடும்," என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, சிங்கப்பூரில் செயற்கை உணவுப் பொருள் திட்டம் குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதன் எதிரொலியாக, மிகப்பெரிய செயற்கைக் கோழி இறைச்சி உற்பத்தி மையம் ஒன்று நிறுவப்பட உள்ளது. முப்பது விழுக்காடு உணவுப் பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான திட்டத்துக்கு இத்தகைய முயற்சிகள் கைகொடுக்கும் என்றாலும், இயற்கையான உணவுக்கு முன்னுரிமை என்று மக்கள் முடிவெடுக்கும்போது சிக்கல் எழக்கூடும். மேலும், உள்நாட்டில் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களின் விலையானது, இறக்குமதி செய்யப்படும் பொருட்களைவிட குறைவாக இருப்பதும் முக்கியம். இல்லையெனில், மக்கள் உள்நாட்டு உணவுப் பொருட்களை ஒதுக்கும் வாய்ப்புண்டு. இல்லையெனில், அப்பொருட்களுக்கு அரசாங்கம் மானியம் அளிக்க வேண்டியிருக்கும் என்பதும் நிபுணர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது. ஆப்கானிஸ்தான் நெருக்கடி: வீசிய ரொட்டித் துண்டுகளை உண்டு வாழும் மக்கள் யுக்ரேன் போரால் உலகம் உணவு சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் - எச்சரித்த ஐ.நா இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் பிறந்த கதை தெரியுமா? உணவுப் பற்றாக்குறையை சமாளிக்கும் சிங்கப்பூர் உணவுப் பற்றாக்குறையை சிங்கப்பூர் எப்படி சமாளித்தது என்பது முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியாக உருவெடுத்துள்ளது. உணவுப் பற்றாக்குறை எனும் பிரச்சினை தலைதூக்கும் என்பதை முன்கூட்டியே சிங்கப்பூர் கணித்துவிட்டதாக அந்நாட்டின் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். எனவே, உணவுப் பொருட்களுக்கான ஏற்றுமதி தடை சிங்கப்பூருக்கு கவலை தந்தாலும், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று அவர் கூறியுள்ளார். சிங்கப்பூர் போன்ற இறக்குமதி செய்யப்படும் உணவு, உணவுப்பொருட்களைச் சார்ந்துள்ள நாடுகளுக்கு தற்போதைய நிலை நிச்சயம் பெரும் சவாலாக இருக்கும் என்று ஒப்புக்கொண்டுள்ள பிரதமர் லீ சியன் லூங், கொரோனா கொள்ளைநோய்ப் பரவல் தொடங்கிய நாள் முதலே, இதுபோன்ற பிரச்சினைகள் எழும் வாய்ப்புள்ளதை சிங்கப்பூர் எதிர்பார்த்திருந்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, சிங்கப்பூர் அரசாங்கம் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே இன்று அந்நாடு உணவுப் பற்றாக்குறையைச் சமாளிக்க காரணமாக அமைந்தன. கோழி, முட்டை, காய்கறிகள் உட்பட பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்வதில் சிக்கல்கள் ஏற்படலாம் என்பதை முன்பே கணித்த சிங்கப்பூர் அரசு, அவற்றின் கையிருப்பு அளவை அதிகப்படுத்தி உள்ளது. வழக்கமாக பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளைத் தவிர, மேலும் பல பகுதிகளில் இருந்து தேவையான பொருட்களை இறக்குமதி செய்ததாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். பிரேசில், உக்ரேன், போலந்து ஆகிய நாடுகளில் இருந்து கோழிகளையும் முட்டைகளையும் அதிக அளவில் இறக்குமதி செய்துள்ள சிங்கப்பூர், காய்கறிகளை இறக்குமதி செய்வதற்கு ஏற்ற சில நாடுகளை அடையாளம் கண்டு இறக்குமதியாளரை அதிகரிக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. https://www.bbc.com/tamil/global-61973629
  22. உடல் அறிவியல்: இதய, நீரிழிவு நோய்களுக்கும் தண்ணீரில் நனைவதால் விரல்களில் ஏற்படும் சுருக்கங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NEIL JUGGINS/ALAMY சில நிமிடங்கள் தண்ணீரில் நனைத்தாலும் நமது கை, கால் விரல்களில் சுருக்கங்கள் ஏற்படுகின்றன. இந்த சுருக்கங்கள் நம் பரிணாம வளர்ச்சிக்கு உதவியதா? உங்களின் ஆரோக்கியம் குறித்து இந்த சுருக்கங்கள் சொல்வது என்ன? இந்த சுருக்கங்கள் குழப்பமான ஒன்று. தண்ணீரில் நனையும்போதும் நம் விரல்களில் மட்டுமே சுருக்கங்கள் ஏற்படுகின்றன. கால்கள், கைகள், முகம் என மற்ற உடல் பாகங்களில் சுருக்கங்கள் ஏற்படுவதில்லை. வெந்நீரில் 40 டிகிரி செல்சியஸ் சூட்டில் (104 ஃபேரன்ஹீட்) கை, கால் விரல்கள் சுருங்குவதற்கு சுமார் 3.5 நிமிடங்கள் போதும். குளிர்ந்த நீரில் சுமார் 20 டிகிரி செல்சியஸ் (68 ஃபேரன்ஹீட்) சூட்டில், இதே மாற்றம் நிகழ்வதற்கு 10 நிமிடங்களாகும். கை, கால் விரல்கள் அதிகபட்ச சுருக்கத்தை அடைவதற்கு சுமார் 30 நிமிடங்களாகும் என்கிறது பல ஆய்வுகள். சவ்வூடுபரவல் எனப்படும் ஒரு செயல்முறையின் மூலம் செல்களுக்குள் நீர் பாய்வதால், தோலின் மேல் அடுக்குகள் வீங்கி, இருபுறமும் உள்ள கரைசல்களின் செறிவை சமப்படுத்த ஒரு சவ்வு முழுவதும் நீர் மூலக்கூறுகள் நகரும் போது, விரல் நுனியில் சுருக்கம் ஏற்படுவதாக பொதுவாக நம்பப்பட்டு வந்தது. ஆனால், 1935 வரையிலான நீண்ட காலத்திற்கு முன்பே, இந்த மாற்றத்திற்கு அதிக செயல்முறைகள் நிகழ்ந்திருக்கும் என, விஞ்ஞானிகள் சந்தேகித்தனர். காதலா, காமமா - உங்களுக்கு வந்திருப்பது என்ன? பிரேக்-அப் ஏன் நடக்கிறது? அறிவியல் விளக்கம் உடற்பயிற்சி செய்ய உகந்த நேரம் எது? 100 ஆண்டுகள் வாழ என்ன செய்ய வேண்டும்? "நரம்பு மண்டலத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது" மேற்கையிலிருந்து செல்லும் முக்கிய நரம்புகளில் ஒன்றான இடைநிலை நரம்பில் பலத்த காயம் ஏற்பட்டவர்களின் விரல்களில் இத்தகைய சுருக்கங்கள் ஏற்படவில்லை என்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். வியர்த்தல், ரத்தக் குழாய்களில் சுருக்கங்கள் ஏற்படுதல் போன்றவற்றை கட்டுப்படுத்துவதில் இந்த இடைநிலை நரம்பு உதவுகிறது. இதன்மூலம், தண்ணீரில் நனைவதால் ஏற்படும் இத்தகைய சுருக்கங்கள் நரம்பு மண்டலத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை கண்டறிந்துள்ளனர். பட மூலாதாரம்,ANDRII BILETSKYI/ALAMY சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் பணிபுரியும் நரம்பியல் நிபுணர்கள் ஈனர் வைல்டர் ஸ்மித் மற்றும் அடெலின் சொவ் இருவரும் 2003ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களின் விரல்களில் சுருக்கங்கள் ஏற்பட தொடங்கும்போது, விரல்களில் ரத்த ஓட்டம் பெருமளவு குறைவதை கண்டறிந்துள்ளனர். "விரல்கள் சுருங்கும்போது அதன் நிறம் வெளிரிப்போகும். இது அப்பகுதியில் ரத்த ஓட்டம் குறைவதால் ஏற்படுகிறது," என, மான்செஸ்டர் மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் நிபுணரும் உளவியலாளருமான நிக் டேவிஸ் கூறுகிறார். "விரல்களில் சுருக்கங்கள் ஏற்படுவது நரம்புகளால் கட்டுப்படுத்தப்படுகிறது என்றால், அதுவொரு காரணத்திற்காக நடைபெறுகிறது என்று அர்த்தம். அதாவது, இந்த சுருக்கங்கள் சில பலன்களை அளிக்கின்றன" என டேவிஸ் கூறுகிறார். பட மூலாதாரம்,ALAMY பொருளை இறுகப்பிடிப்பதில் உதவுகிறதா? 2020ஆம் ஆண்டில் லண்டன் அறிவியல் அருங்காட்சியகத்தில் 500 பேர் பங்கேற்ற ஆய்வு ஒன்றில், ஒரு பிளாஸ்டிக் பொருளை இறுகப்பிடிக்க எவ்வளவு ஆற்றல் தேவை என்பதை டேவிஸ் கணக்கிட்டார். அப்போது, விரல்கள் ஈரமாக இல்லாமல் இருந்தவர்களுக்கு விரல்களில் இத்தகைய சுருக்கங்களுடன் இருந்தவர்களுடன் ஒப்பிடுகையில் குறைவான ஆற்றலே தேவையாக இருந்தது. ஆனால், இதுவே ஈரமான பொருட்களை இத்தகைய சுருக்கங்களை கொண்ட விரல்கள் கையாளும்போது எளிதாக இருப்பது தெரியவந்தது. "நீங்கள் எதையாவது இறுகப்பிடிக்க கடினமாக அழுத்த வேண்டிய அவசியமில்லை என்றால், உங்கள் கைகளில் உள்ள தசைகள் சோர்வடையும், எனவே, நீங்கள் அந்த கடினமான வேலையை நீண்ட நேரம் செய்யலாம்," என்று அவர் கூறுகிறார். அவருடைய இந்த முடிவுகள், மற்ற ஆராய்ச்சியாளர்களின் முடிவுகளுடன் ஒத்துப்போனது. அதாவது, ஈரமான பொருட்களை கையாள்வதை, நம் கைகளில் ஏற்படும் இத்தகைய சுருக்கங்கள் எளிதாக்குவது தெரியவந்துள்ளது. 2013ஆம் ஆண்டில் பிரிட்டனில் உள்ள நியூகேசில் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் விஞ்ஞானிகள் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அதில், ஒரு கொள்கலனில் உள்ள வெவ்வேறு வடிவிலான கண்ணாடி மார்பிள்களையும் தூண்டில் வெயிட்டுகளையும் மற்றொரு கொள்கலனுக்கு மாற்ற வேண்டும். இதில், ஒரு கொள்கலனில் உள்ள பொருட்கள் ஈரமானவை அல்ல. ஆனால், மற்றொரு கொள்கலனில் உள்ள பொருட்கள் தண்ணீருக்கு அடியில் வைக்கப்பட்டிருந்தன. விரல்களில் சுருக்கம் இல்லாமல் செய்தபோது அப்பொருட்களை வேறு கொள்கலனுக்கு மாற்ற 17 சதவீதம் அதிகமாக நேரம் எடுத்தது. ஆனால், விரல்களில் சுருக்கத்துடன் செய்தபோது 12 சதவீதம் விரைவாக அவற்றை வேறுகொள்கலனுக்கு மாற்றினர். ஆனால், ஈரமில்லாத பொருட்களை வேறு கொள்கலனுக்கு மாற்றுவதில் விரல்களில் சுருக்கத்துடன் செய்ததற்கும் அவை இல்லாமல் செய்ததற்குமான கால அவகாசத்தில் மாற்றம் இல்லை. நாம் சரியான நேரத்தில் சாப்பிடவில்லை என்றால் என்ன நடக்கும்? டீடாக்ஸ் டயட்டால் உடலில் நச்சுகளை வெளியேற்ற முடியுமா? என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? மனிதன் மரணத்தை வெல்வது சாத்தியமா? நீடித்த இளமையை நோக்கி முன்னேறும் அறிவியல் பரிணாம மாற்றதால் ஏற்பட்டதா? ஈரமான பொருட்களையும் அதன் மேற்பரப்பையும் இறுகப்பிடிக்க உதவுவதற்காக மனிதர்கள் கடந்த காலத்தில் சில சமயங்களில் விரல் சுருக்கங்களை பரிணாம மாற்றத்தின் வழியாக அடைந்திருக்கலாம் என்பதை இந்த ஆய்வுகளின் முடிவுகள் பரிந்துரைக்கின்றன. நம் முன்னோர்கள் ஈரமான பாறைகளில் நடப்பதற்கோ, மரங்களின் கிளைகளை இறுகப்பிடிப்பதற்கோ, அல்லது ஷெல் மீன்கள் உள்ளிட்ட இரையை பிடிப்பதற்கோ இது உதவியிருக்கலாம். மனிதக்குரங்குகளிடத்தில் இப்படி தண்ணீரில் நனையும்போது விரல்கள் சுருங்குகிறதா என்பது குறித்து இனிதான் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். ஆனால், வெந்நீரில் அதிக நேரத்திற்கு குளிக்கும் ஜப்பானின் மகாக்வே குரங்குகளுக்கு இத்தகைய சுருக்கங்கள் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், மற்ற விலங்குகளிடத்திலும் இது நடக்கிறதா என்பதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை. ஆனால், இதன் அர்த்தம் மற்ற விலங்குகளிடத்தில் இது நடக்காது என்பது அல்ல. விரல்கள் சுருக்கமடைவது நன்னீரைவிட உவர் நீரில் குறைவாகவே ஏற்படுகிறது. இதன்காரணமாக, முன்னோர்கள் கடற்கரைகளை ஒட்டி வாழ்வதை விட நன்னீரை ஒட்டிய சூழல்களில் வாழ உதவிய ஒரு தழுவலாக இவை இருக்கலாம். ஆனால், இவை எதற்கும் உறுதியான பதில்கள் இல்லை. இது தற்செயலான உடலியல் விளைவாகவும் இருக்கலாம் என சிலர் நம்புகின்றனர். பட மூலாதாரம்,BENJAMIN TORODE/GETTY IMAGES உடல்நலனுக்கும் சுருக்கங்களுக்கும் என்ன தொடர்பு? இத்தகைய சுருக்கங்கள் நம் உடல் ஆரோக்கியம் குறித்த ஆச்சர்யமான தகவல்களையும் வழங்குகிறது. சொரியாசிஸ், வெண்படலம் உள்ளிட்ட தோல் நோய்கள் உள்ளவர்களுக்கு இத்தகைய சுருக்கங்கள் ஏற்படுவதற்கு அதிக நேரம் எடுக்கிறது. சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் உள்ளவர்களுக்கு உள்ளங்கைகள் மற்றும் விரல்களில் அதிக சுருக்கங்கள் ஏற்படுகின்றன. மேலும், இந்த நோயை மரபு ரீதியாக கடத்துபவர்களிடத்திலும் இது ஏற்படுகிறது. டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சில சமயங்களில் குறைவான சுருக்கங்களே ஏற்படுகின்றன. இதயம் செயலிழந்தவர்களிடத்திலும் சுருக்கம் குறைவாகவே காணப்படுகிறது. இதய செயல்பாடுகளில் ஏற்படும் சில தடைகளால் இவ்வாறு ஏற்படுகிறது. ஒரு கையில் ஏற்படும் சுருக்கம், இன்னொரு கையில் ஏற்படுவதை விட குறைவாக ஏற்படுவது, பார்கின்சன் நோய்க்கான ஆரம்ப அறிகுறியாக கருதப்படுகிறது. அதாவது, உடலின் ஒரு பாகத்தில் அனுதாப நரம்பு மண்டலம் சரியாக செயல்படாததால் இது ஏற்படுகிறது. (பிபிசி ஃப்யூச்சர் பகுதியில் ரிச்சர்ட் க்ரே என்பவர் எழுதியது) https://www.bbc.com/tamil/science-61972598
  23. இலங்கை போதைப் பழக்க நீக்க மையம்: 600 பேர் தப்பியோடியதன் பின்னணி 29 ஜூன் 2022, 10:49 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,COMMISSIONER GENERAL OF REHABILITATION இலங்கையின் பொலன்னறுவை - கந்தகாடு பகுதியிலுள்ள போதை புனர்வாழ்வு மத்திய நிலையமொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 500 முதல் 600 வரையானோர் தப்பியோடியுள்ளனர். புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இரு குழுக்களுக்கு இடையில் நேற்றிரவு 8 மணியளவில் மோதலொன்று இடம்பெற்றதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. இந்த அமைதியின்மையின்போது, 36 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்குள் தொடர்ந்து அமைதியின்மை வலுப் பெற்றதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு அமைதியின்மை வலுப் பெற்றதை தொடர்ந்து, புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் பிரதான நுழைவாயிலை, சிலர் உடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், சுமார் 500 முதல் 600 பேர் வரையானோர், பிரதான நுழைவாயிலின் ஊடாக அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இலங்கையில் எரிபொருள் விற்பனைக்குத் தடை; அத்தியாவசிய சேவைக்கு மட்டும் விலக்கு இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது ஏன்? - முழுமையான விளக்கம் இவ்வாறு தப்பியோடியவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை போலீஸார் ஆரம்பித்துள்ளனர். கந்தகாடு பகுதியில் தற்போது போலீஸார் மற்றும் ராணுவத்தினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டு, நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. தப்பியோடிவர்கள் யார்? போதைப்பொருளுக்கு அடிமையாகும் நபர்களை தடுத்து வைத்து, புனர்வாழ்வு அளிக்கும் நிலையமாக கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையம் விளங்குகின்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞர், யுவதிகளை மீட்டெடுக்கும் வகையில் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட திட்டத்திற்கு அமைய, கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் கீழ் இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. போதைப்பொருள் பாவனை, போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கு அமைய சிறை வைக்கப்படுபவர்கள், இந்த புனர்வாழ்வு திட்டத்திற்குள் கொண்டுவரப்படுகின்றனர். போதைப்பொருள் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறை வைக்கப்படுபவர்களின் கல்வி நிலை, சமூகம் மற்றும் பொருளாதாரம் ஆகிய பின்னணிக்கு ஏற்ற வகையில், இந்த புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு அளிக்கப்படும். உளவியல் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, அவர்களை போதைப்பொருள் பழக்கத்திலிருந்து படிப்படியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கும் திட்டங்கள், கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் முன்னெடுக்கப்படும் என புனர்வாழ்வு மத்திய நிலையம் தெரிவிக்கின்றது. கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில், சுமார் 1000 பேர் புனர்வாழ்வுக்கான ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையிலேயே, அங்கிருந்து சிலர் தப்பியோடியுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. https://www.bbc.com/tamil/sri-lanka-61973679
  24. இலங்கையில் விடுதலைப் புலிகளை விடுவிக்க, தன்பாலின உறவை அனுமதிக்க 'ஒரே நாடு - ஒரே சட்டம்' செயலணி பரிந்துரை ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக, இலங்கையில் இருந்து 29 ஜூன் 2022, 13:19 GMT புதுப்பிக்கப்பட்டது 34 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PMD இலங்கையில் தன்பாலின உறவு கொள்வதற்கு அனுமதி வழங்குதல், யுத்த குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்தல், மத மாற்றத்தை தடை செய்தல் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை, ''ஒரே நாடு - ஒரே சட்டம்" ஜனாதிபதி செயலணி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளது. கொழும்பு - கோட்டை பகுதியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரினால், இந்த அறிக்கை, ஜனாதிபதியிடம் இன்று (29) முற்பகல் கையளிக்கப்பட்டது. இலங்கையில் ''ஒரே நாடு - ஒரே சட்டம்" என்ற கருத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில், பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பெற்று, இலங்கைக்கு தனித்துவமான கருத்தியல் கட்டமைப்பொன்றை உருவாக்குவது தொடர்பிலான ஆலோசனைகளை வழங்குவதற்கு ஜனாதிபதியினால், 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 மற்றும் 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆகிய தேதிகளில் அதிவிசேட வர்த்தமானி ஊடாக இந்த செயலணி ஸ்தாபிக்கப்பட்டது. தொழில் வல்லுநர்கள், அரசு சாரா அமைப்புக்கள், மதக் குழுக்கள், பல்வேறு இனக்குழுக்கள், பல்கலைக்கழக சமூகம் மற்றும் சட்ட வல்லுநர்கள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய வகையில் 1,200ற்கும் அதிகமான சாட்சிகளை உள்ளடக்கிய, 43 பரிந்துரைகளுடனான 8 அத்தியாயங்களை கொண்டு, இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனாதிபதியிடம் இன்று கையளிக்கப்பட்ட நிலையில், அந்த அறிக்கையில் உள்ளடங்கியுள்ள பிரதான பரிந்துரைகள் குறித்து, பிபிசி தமிழ் ஆராய்ந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பின் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற மே மாதம் இலங்கையில் போதைப் பழக்க நீக்க மையத்தில் இருந்து 600 பேர் தப்பியோட்டம் இலங்கையில் தன்பாலின உறவு கொள்ளுதல் மற்றும் தனிபாலின திருமணம் ஆகியவற்றிற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தன்பாலின உறவு கொள்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு, ''ஒரே நாடு - ஒரு சட்டம்" ஜனாதிபதி செயலணி, தமது அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது. எனினும், தன்பாலின திருமணத்திற்கு அனுமதி வழங்க கூடாது என பரிந்துரை செய்துள்ள ஜனாதிபதி செயலணி, அவ்வாறு தன்பாலின திருமணத்திற்கு அனுமதி வழங்கினால், அது தன்பாலின உறவுகளை ஊக்குவிக்க வலிவகுக்கும் என சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன், யுத்த குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் உள்ளிட்ட தரப்பினர் மற்றும் ராணுவத்தினரை, உரிய புனர்வாழ்வு திட்டத்தின் கீழ், ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,PMD யுத்த குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு தம்மால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சாதகமான பதிலை வழங்கியதாக, ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர், பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். 'ஒரே நாடு - ஒரே சட்டம்' செயலணி பரிந்துரைத்தவை என்னென்ன? 1.அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகளின் தேர்தல்களுக்கு பயன்படுத்தும் நிதி, எங்கிருந்து கிடைத்தது என்பது தொடர்பில் ஆராய்ந்து, கணக்காய்வு செய்வதற்கு புதிய சட்டமொன்று எதிர்வரும் தேர்தலுக்கு முன்னதாக உருவாக்கப்பட வேண்டும். 2. நீதிமன்ற நடவடிக்கையின் ஊடாக, குற்றவியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளவர்களின் வழக்கு விசாரணைகள் நிறைவு பெறும் வரை, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சு பொறுப்புக்களை அவர்களுக்கு வழங்காத வகையில் புதிய சட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும்;. குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டவர்களை மக்கள் பிரதிநிதிகளாக, மக்களே தெரிவு செய்யும் பட்சத்தில், அவர்களை உறுப்பினர் பதவியில் மாத்திரம் இருக்க அனுமதி வழங்க முடியும். 3. அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள் தொடர்பிலான கணக்காய்வுகளை நடத்துவதற்கு, கணக்காய்வு ஆணையாளர் நாயகத்திற்கு அதிகாரத்தை வழங்க வேண்டும். அரசியல்வாதிகளின் சொத்துக்கள் குறித்த தகவல்களை பொதுமக்களுக்கும் காட்சிப்படுத்த அனுமதி வழங்கப்பட வேண்டும். 4. மதங்களின் சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில், மத மாற்று நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கும் புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும். 5. தன்பாலின உறவு கொள்வது தவறு என குற்றவியல் கோவை சட்டத்தின் 365 ''அ" சரத்தில் உள்ளது. அந்த சரத்தை, குற்றவியல் கோவை சட்டத்திலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனினும், தன்பாலின திருமணத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 6. திருநங்கை சமூகத்தின் பாலினம், சமூக அந்தஸ்த்து ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளும் வகையிலான அடையாள சான்றிதழ் ஒன்றை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் திருநங்கை சமூகம், சட்டத்திற்கு அமைவாக தற்போது ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், அவர்களை ஏற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேணடும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 7. திருநங்கை சமூகத்தின் நலத்திட்டத்திற்கு, அரச தலையீட்டில் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட வேண்டும். 8. யுத்தக் குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள ராணுவம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலி தரப்பினரை சமூகமயப்படுத்தும், புனர்வாழ்வு திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டு, அவர்கள் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட வேண்டும். (இந்த குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்கள், சமூகமயப்படுத்தலின் போது, சமூகத்தில் வாழக்கூடியவர்கள் என்பதை புனர்வாழ்வு நடவடிக்கைகளின் போது உறுதிப்படுத்தியதன் பின்னரே விடுவிக்க வேண்டும்) பட மூலாதாரம்,GETTY IMAGES 9. நீதிமன்ற நடவடிக்கைகளை ஒளி மற்றும் ஒலி வடிவில் பதிவு செய்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். 10. மொழி, இனம் என்ற அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்ய அனுமதி வழங்கக்கூடாது. அவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிகளின் பெயர்களை மாற்றுவதற்கு காலவகாசம் வழங்கி, கட்சிகளின் பெயர்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு கட்சிகளின் பெயர்களை மாற்றாத பட்சத்தில், கட்சியை தடை செய்ய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 11. நீதிமன்ற அவமதிப்பு குறித்த தண்டனைக்கான காலம் உள்ளிட்ட விடயங்களை நிர்ணயம் செய்யும் வகையிலான புதிய சட்டமொன்று கொண்டு வரப்பட வேண்டும். 12. கல்வி அமைச்சின் விடயதானங்களுக்கு அமைய, அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி கற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. (இலங்கையில் சில குழந்தைகள் மதம் சார்ந்த கல்வியை மாத்திரம் கற்பதை தவிர்த்து, 16 வயது வரை கல்வி அமைச்சின் விடயதானங்களுக்கு அமைய, பாடசாலை கட்டாய கல்வி அவசியம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கட்டாய கல்விக்கு மேலதிகமாக வேறு கல்விகளை கற்க முடியும்) 13. விற்பனை நிலையங்களில் ஹலால் பொருட்களுக்கு வேறு பிரிவொன்றை ஆரம்பிக்க வேண்டும். (2020ம் ஆண்டு பெப்ரவரி மாதம், தேசிய பாதுகாப்பு தொடர்பிலான கண்காணிப்பு குழுவொன்றினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.) 14. பொது இடங்களில் முழுமையாக முகத்தை மூடும் வகையில் ஆடை அணிவதற்கு தடை விதிக்க வேண்டும். 15. ஜாதியை வெளிப்படுத்தி, ஊடகங்களில் விளம்பரம் பிரசுரிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். YouTube பதிவை கடந்து செல்ல, 1 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம் YouTube பதிவின் முடிவு, 1 16. விசேட தேவையுடையவர்களின் உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சட்டத்திற்கு அமைவானதாக, விசேட தேவையுடையவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டமொன்று கொண்டு வரப்பட வேண்டும். விசேட தேவையுடைவர்களுக்கான தற்போது காணப்படுகின்ற பிரத்தியேக பாடசாலைகளை தவிர்த்து, அவர்களை ஏனைய மாணவர்களுடன் கல்வி கற்க சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். 17. ஆதிவாசி சமூகத்தின் கலாசாரத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வன பாதுகாப்பு கட்டளை சட்டம் திருத்தப்பட வேண்டும். (ஆதிவாசிகள் வனப் பகுதிக்கு சென்றால், தற்போது கைது செய்வதற்கான அதிகாரம் பாதுகாப்பு பிரிவிற்கு உள்ளது). இந்த கட்டளை சட்டம் திருத்தப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆதிவாசிகளுக்கான அதிகார சபையொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும். 18. கைதிகளுக்கான சுகாதாரம், இடவசதி, உணவு போன்ற விடயங்களை உறுதி செய்து, ஐக்கிய நாடுகள் சபையின் கைதிகள் தொடர்பிலான சட்டத்தை பின்பற்றி, சிறைச்சாலைகள் மறுசீரமைக்கப்பட வேண்டும். 19. தந்தை சொத்துக்களை தமது பிள்ளைகளுக்கு கையளிக்காது உயிரிழக்கும் பட்சத்தில், அந்த சொத்து மூத்த ஆண் பிள்ளைக்கு சேரும் என்ற சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்து, மூத்த பிள்ளைக்கு சொத்துக்கள் சேர வேண்டும் என்பதை உறுதிப்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES 20. தனது கணவர் உயிரிழக்கும் பட்சத்தில், இஸ்லாமிய பெண்களுக்கு 4 மாதங்கள், 10 நாட்களுக்கு வழங்கப்படும் விடுமுறை தொடர்பான சட்டம் திருத்தப்பட்டு, மத வேறுபாடுகள், கணவர் அல்லது மனைவி என்ற வேறுபாடுகள் இன்றி, ஒரு மாத கால விடுமுறை வழங்கப்பட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வருடமொன்றில் வழங்கப்படும் விடுமுறைகளில் இந்த விடுமுறை உள்வாங்கப்பட வேண்டும். 21. மீண்டும் இணைந்து வாழ முடியாது என இரண்டு தரப்பினரும் இணக்கம் தெரிவிப்பார்களாயின், அவர்களுக்கு விவாகரத்தை வழங்கும் வகையில் சட்டம் திருத்தப்பட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. (தவறான நடத்தை மற்றும் பாலியல் பிரச்சினைகளுக்கு மாத்திரமே தற்போது விவாகரத்து செய்ய அனுமதிக்கப்படுகின்றது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.) 22. தேசவழமை சட்டம், முஸ்லிம் சட்டம், மலைநாட்டு சட்டம் ஆகியன முழுமையாக நீக்கப்பட்டு, பொது சட்டத்தின் கீழ், அந்த சட்டங்கள் உள்வாங்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ''ஒரே நாடு - ஒரே சட்டம்" ஜனாதிபதி செயலணியினால் கையளிக்கப்பட்டுள்ள அறிக்கையை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அமைச்சரவை, நாடாளுமன்றத்தில் சமர்பித்து, அதற்கான அனுமதிகளை பெற இணக்கம் தெரிவித்ததாக ஜனாதிபதி செயலணி தெரிவிக்கின்றது. https://www.bbc.com/tamil/sri-lanka-61983001
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.