Everything posted by ஏராளன்
-
களைத்த மனசு களிப்புற ......!
பார்த்தேன் ரசித்தேன் சுவி அண்ணை.
- டாடோ என்கின்ற டாலிபோ
-
துமிந்த சில்வாவின் மன்னிப்பு சட்டவிரோதமானது – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
துமிந்த சில்வாவுக்கு வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு குறித்து உயர்நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு Published By: DIGITAL DESK 3 17 JAN, 2024 | 11:24 AM துமிந்த சில்வாவுக்கு வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டத்துக்கு முரணானது என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்நிலையில், மூவரடங்கிய நீதியரசர் குழாம் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை வழங்க ஏகமனதாக தீர்ப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பையே உயர்நீதிமன்றம் வலிதற்றதாக்கி தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/174136
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அமர்வு தொடர்பான செய்திகள்
மார்ச் மாதம் ஜெனீவா அமர்வில் எழக்கூடிய சவால்களை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளில் இலங்கை தீவிரம் - பிரிட்டனுடன் ரணில் பேச்சுவார்த்தை Published By: RAJEEBAN 17 JAN, 2024 | 10:48 AM ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் சவால்களை எதிர்கொள்வதற்காக இலங்கை புதிய இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. ஆபிரிக்க நாடுகளின் தலைவர்கள் உட்பட பல நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதன் மூலம் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் எதிர்வரும் அமர்வில் எழக்கூடிய சவால்களை எதிர்கொள்வதற்கான புதிய அணுகுமுறைகளை இலங்கை பின்பற்ற ஆரம்பித்துள்ளது. அணிசேரா மாநாட்டிற்காக ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க உகன்டா செல்லவுள்ளார், 19வது அணிசேரா மாநாட்டிற்காக 120 நாடுகளின் தலைவர்கள் உகன்டாவில் கூடியுள்ளனர். இந்த மாநாட்டினை பயன்படுத்தி ஆபிரிக்க தலைவர்கள் உட்பட பல தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் ஒத்துழைப்பு உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயவுள்ளார். மார்ச் மாத அமர்வில் இலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை ஆராயவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை தொடர்பாக பொறுப்புக்கூறும் திட்டத்தினை முன்வைத்த ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் இறுதி தீர்மானத்தை இலங்கை நிராகரித்துள்ளது. இலங்கை தொடர்பான தீர்மானத்தினை முன்வைக்கும் நாடுகளில் பிரதானமானதான பிரிட்டனுடன் இலங்கை ஜெனீவா அமர்வு குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. செங்கடலில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிரான நடவடிக்கைகளிற்கு கப்பல்களை அனுப்புவதற்கு அமெரிக்காவும் பிரிட்டனும் விடுத்த வேண்டுகோள்களை இலங்கை ஏற்றுக்கொண்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள விடயமறிந்த வட்டாரங்கள் ஜெனீவா அமர்விற்கு முன்னர் இந்த நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காகவே ஜனாதிபதி கப்பலை அனுப்ப இணங்கினார் எனதெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/174127
-
தமிழ்நாடு ஏறுதழுவுதல் செய்திகள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விறுவிறுவென பாய்ந்த மாடுபிடி வீரர்களை சுத்தவிடும் காளைகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன் தினம் அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று முடிந்தன. இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் இன்று நடைபெற்று வருகின்றன. தமிழக அரசு இந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை இன்று காலை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இன்றைய போட்டியில் 800 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று வருகின்றனர். இந்தப் போட்டியை நேரில் காண நடிகர் அருண் விஜய் வந்துள்ளார். அமைச்சர் உதயநிதிக்கு அருகில் மேடையில் அமர்ந்திருந்த அவர், ஜல்லிக்கட்டை தான் நேரில் பார்ப்பது இதுதான் முதல் முறை என்றும், தமிழக அரசு சிறப்பான ஏற்பாடுகளுடன் இதை நடத்தி வருகிறது என்றும் தெரிவித்திருந்தார். ஜல்லிக்கட்டுப் போட்டியில் சுமார் எட்டு சுற்றுகள் வரை இருக்கும். ஒவ்வொரு சுற்றிலும் 50 முதல் 75 வீரர்கள் பங்கேற்பார்கள். ஒரு சுற்றில் காளையை அடக்கி வெற்றி பெறும் வீரர்கள் அடுத்தடுத்த சுற்றுகளுக்குத் தகுதி பெறுவர். மூன்றாவது சுற்று வரை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 12 மாடுபிடி வீரர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கான முதலுதவி வழங்க ஜல்லிக்கட்டு நடைபெறும் மைதானத்திலேயே மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர். மேல் சிகிச்சை தேவைப்படுபவர்களை அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்களும் தயாராக உள்ளன. இதுவரை ஒருவருக்குப் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற சுற்றுகளில் எட்டு காளைகளை அடக்கி, அபிசித்தர் முதல் இடத்தில் இருக்கிறார். இந்தப் போட்டியில் வி.கே.சசிகலாவின் காளையும் பங்கேற்றது. அந்தக் காளை மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் வெற்றி பெற்றுள்ளது. வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கும், வெற்றி பெறும் காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க மோதிரம், நாணயம், உள்ளிட்ட பரிசுகளை அமைச்சர் உதயநிதி வழங்கி வருகிறார். ஜல்லிக்கட்டு போட்டிக்கு முன்பாக மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு உடல் தகுதி பரிசோதனை செய்த பின்பே களத்திற்குள் இறங்க அனுமதிக்கப்படுவர். அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் மருத்துவ காரணங்களுக்காக ஏழு மாடுபிடி வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அரசு வழங்கிய டோக்கன்கள் உள்ள ஜல்லிக்கட்டு காளைகள் மட்டுமே களத்திற்குள் அவிழ்க்க அனுமதிக்கப்படும். அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின்படி ஜல்லிக்கட்டு காளைகளின் கொம்பையோ, வாலையோ பிடிக்கக்கூடாது. பிடித்தால் வீரருக்கு எச்சரிக்கை அளிக்கப்படும், அதையும் மீறி அதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் அந்த வீரர் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார். ஜல்லிக்கட்டு போட்டியில் காளை வெற்றி பெற்றதா அல்லது மாடுபிடி வீரர் வெற்றி பெற்றாரா என்பது குறித்து கமிட்டியினர்தான் முடிவு செய்வார்கள். அதேபோல், நீதிமன்றம் அறிவித்துள்ளதன்படி சாதிப் பெயர்களைக் குறிப்பிடுவது கிடையாது என்கிறார், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜன். மதுரையைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவின் பேரில், ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளைகளை அதன் உரிமையாளரின் சாதிப் பெயரை குறிப்பிட்டு அவிழ்க்கக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை பரிசீலனை செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விதிகள் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் என இந்த ஆண்டின் மூன்று ஜல்லிக்கட்டுப் போட்டிகளிலும் கடைப்பிடிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்து வருவதாக விழா பொறுப்பான அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். https://www.bbc.com/tamil/articles/c6p1y69nqmlo
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
மன்னார் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த 18 இந்திய மீனவர்கள் கைது 17 JAN, 2024 | 09:43 AM இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்கள் செவ்வாய்க்கிழமை மாலை (16) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டம் தாழ்வுப்பாடு கடல் பகுதியை அண்மித்த கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக உள்நுழைந்து இரண்டு ரோலர் படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்களே இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கைதான 18 இந்திய மீனவர்களும் அவர்கள் பயன்படுத்திய இரண்டு ரோலர் படகுகளும் கடற்படையினரால் தாழ்வுப்பாடு கடற்படை முகாமுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்பின்னர் 18 இந்திய மீனவர்களும் மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணைகளின் பின்னர் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் இன்று (17) புதன்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். குறித்த இந்திய மீனவர்களின் படகுகளில் இருந்து குஞ்சு மீன்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/174119
-
பாகிஸ்தான் மீது இரான் ஏவுகணை தாக்குதல்: எதற்காக? என்ன நடக்கிறது?
பட மூலாதாரம்,REUTERS 17 ஜனவரி 2024, 03:31 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் செவ்வாய்க்கிழமை அன்று, அண்டை நாடான இரான் நடத்திய தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும் மேலும் மூன்று பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் கூறியுள்ளது. ஜெய்ஷ் அல்-அட்ல் என்ற தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய இரண்டு தளங்களைக் குறி வைத்ததாக இரான் கூறியதாக அந்நாட்டு ராணுவத்துடன் தொடர்புடைய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், பாகிஸ்தான் இதை நிராகரித்துள்ளது. இது “கடுமையான விளைவுகளுக்கு” வழிவகுக்கும் “சட்டவிரோத செயல்” என்று கூறியது. இராக் மற்றும் சிரியாவுக்கு அடுத்தபடியாக கடந்த சில நாட்களில் இரானின் தாக்குதலுக்கு உள்ளான மூன்றாவது நாடு பாகிஸ்தான். பாகிஸ்தான் மீது இரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் முன்னெப்போதும் இல்லாதது. செவ்வாய்க்கிழமை தாக்குதல் இரு நாடுகளின் எல்லையான பலுசிஸ்தானின் பரந்த தென்மேற்கு மாகாணத்தில் இருக்கும் ஒரு கிராமத்தைத் தாக்கியது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், “இரான் தனது வான்வெளியில் தூண்டுதலின்றி அத்துமீறி நுழைந்ததை” கடுமையாகக் கண்டித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தச் சம்பவத்தை “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும் கூறியது. “பாகிஸ்தானுக்கும் இரானுக்கு இடையே பல தகவல்தொடர்பு சேனல்கள் இருந்தபோதிலும் இந்த சட்டவிரோத செயல் நடந்துள்ளது நிலைமையை மேலும் தீவிரமாக்குவதாகவும்” கூறியுள்ளது. இரானின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள இரான் வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவரிடம் பாகிஸ்தான் தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. மேலும், “பாகிஸ்தானின் இறையாண்மை மீதான இந்த அப்பட்டமான மீறல் மற்றும் அதன் விளைவுகளுக்கு இரானே பொறுப்பு,” என்றும் கூறியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES இரான் திங்கட்கிழமை இரவு, வடக்கு இராக்கில் உள்ள நகரமான இர்பிலில் உள்ள இலக்குகளை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடங்கியது. இதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்தது. காஸா நிலப்பகுதியில் இஸ்ரேலுக்கும் இரான் ஆதரவு பெற்றா பாலத்தீனிய குழுவான ஹமாஸ் இடையே அக்டோபர் 7ம் தேதி போர் தொடங்கியதில் இருந்து, மத்திய கிழக்கு முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இரானின் தாக்குதல்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மோதல்களை பெரிதாக்குவதில் ஈடுபட விரும்பவில்லை என்று இரான் அறிவித்திருந்தாலும், அதன் "எதிர்ப்பு அச்சு" என்று அழைக்கப்படும் குழுக்கள் பாலத்தீனியர்களுடன் ஒற்றுமை காட்ட இஸ்ரேலுக்கும் அதன் கூட்டணி நாடுகளுக்கும் எதிராக தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கம் இஸ்ரேலிய படைகளுடன் எல்லை தாண்டிய தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது, ஷியா போராளிகள் இராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்கப் படைகளுக்கு எதிராக ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் தாக்குதல்கள் நடத்தியுள்ளனர். ஏமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் உள்ள கப்பல்களைத் தாக்கியுள்ளனர். ஹமாஸ் தலைவரை லெபனானில் நடத்திய தாக்குதலில் கொன்றுள்ளது இஸ்ரேல். புரட்சிகர காவலர் தளபதி சிரியாவில் நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இராக் மீதான விமானத் தாக்குதலில் இராக் போராளிகள் தலைவரை அமெரிக்கா கொன்றுள்ளது. மேலும், ஏமனில் ஹூத்தி இலக்குகள் மீதும் அமெரிக்கா குண்டுவீசியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் பல காலமாகவே, பாகிஸ்தானும் இரானும், ஜெய்ஷ்-அல்-அத்ல் உள்ளிட்ட ஆயுதம் தாங்கிய பிரிவினைவாத குழுக்களை எதிர்த்து, மக்கள் தொகை குறைவான இந்த எல்லைப் பகுதியில் போராடி வருகின்றன. இரு நாடுகளுக்கும் இடையே சுமார் 900 கி.மீ நீளமுள்ள எல்லைப் பகுதியில் பாதுகாப்பு என்பது இரு அரசுகளுக்கும் நீண்ட காலமாக கவலையாகவே இருந்து வருகிறது. கடந்த மாதம் எல்லைக்கு அருகே நடந்த தாக்குதல்களுக்கு ஜெய்ஷ்-அல்-அத்ல் குழுவை காரணமாக இரான் கூறுகிறது. இந்த தாக்குதல்களில் பல இரானிய காவல் அதிகாரிகள் உயிரிழந்தனர். அப்போது, இரானின் உள்துறை அமைச்சர் அஹ்மத் வஹீடி, இந்த தாக்குதல்களுக்கு காரணமான போராளிகள் பாகிஸ்தானில் இருந்துதான் தங்கள் நாட்டிற்குள் நுழைந்ததாகக் கூறினார். அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநரின் அலுவலகத்தின் தகவலின்படி, ஜெய்ஷ்-அல்-அத்ல் சிஸ்தான்-பலுசிஸ்தானில் இயங்கும் "மிகவும் தீவிரமான மற்றும் செல்வாக்குமிக்க" சுன்னி போராளி குழு ஆகும். https://www.bbc.com/tamil/articles/c3gy513p9xwo
-
க.பொ.த உயர்தர பரீட்சை சம்பந்தமான செய்திகள்
க.பொ. த. உயர்தர விவசாய விஞ்ஞான பாடத்திற்கான புதிய பரீட்சை திகதி அறிவிப்பு Published By: DIGITAL DESK 3 17 JAN, 2024 | 09:32 AM 2023 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர விவசாய விஞ்ஞான பாடத்திற்கான பரீட்சையின் முதலாம் பகுதி வினாத்தாளின் சில வினாக்களும் பரீட்சைக்கு முன்னர் சமூக ஊடக ஊடகங்களில் வெளியானதைக் கண்டறிந்ததை அடுத்து குறித்த பரீட்சை பரீட்சைகள் திணைக்களத்தால் இரத்து செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, இரண்டாம் பகுதி வினாத்தாளின் சில வினாக்கள் பரீட்சைக்கு முன்னர் சமூக ஊடகங்களில் வெளியானதால் 12 ஆம் திகதி இடம்பெறவிருந்த குறித்த பரீட்சையும் இரத்து செய்யப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி அமித் ஜயசுந்தர தெரிவித்தார். அதன்படி, பாட எண் 8 இன் கீழ் உள்ள விவசாய விஞ்ஞானப் பாடத்தின் இரண்டாம் பகுதி வினாத்தாள் பெப்ரவரி முதலாம் திகதி காலை 8.30 மணி முதல் 11.40 மணி வரையில் நடைபெறும். அத்துடன், முதலாம் பகுதி வினாத்தாள் அன்றைய தினம் மதியம் ஒரு மணி முதல் 3 மணி வரை நடைபெறும். பரீட்சை தொடர்பான விபரங்கள் பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான அந்தந்த அதிபர்களுக்கும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் முகவரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/174117
-
முக்கிய நகரை கைப்பற்றியதாகக் கூறும் மியான்மர் கிளர்ச்சியாளர்கள்
இந்திய எல்லைக்கு அருகே உள்ள மியான்மர் நகரை கைப்பற்றியதாகக் கூறும் கிளர்ச்சியாளர்கள் – இந்தியாவுக்கு என்ன பாதிப்பு? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, அரக்கன் ஆர்மியின் தளபதியாக தவண் ம்ராட் நயிங் செயல்பட்டு வருகிறார். கட்டுரை தகவல் எழுதியவர், ஜானதன் ஹெட் மற்றும் ஆலிவர் ஸ்லௌ பதவி, பாங்காக் மற்றும் லண்டனில் இருந்து 16 ஜனவரி 2024 மேற்கு மியான்மரில் செயல்பட்டுவரும் கிளர்ச்சியாளர்கள், ராணுவத்திடம் இருந்து முக்கிய நகரமான பலேத்வாவை (Paletwa) கைப்பற்றியதாக அறிவித்துள்ளனர். இந்தியா-மியான்மர் நாடுகளுக்கு இடையே செல்லும் முக்கியமான சாலை ஒன்றில் இருக்கும் இந்த நகரம் இந்திய எல்லைக்கு அருகில் உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் மியான்மரில் ராணுவத்துக்கு எதிரான இனக் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அரக்கான் ராணுவம் என்பது ஏ.ஏ. (AA - Arakan Army) கிளர்ச்சியாளர்களின் மூன்று குழுக்களில் ஒன்றாகும். இந்த குழு சின் மாநிலத்தின்பலேத்வா நகரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாக கூறுகிறது. தனது டெலிகிராம் குழுவில் இந்த அமைப்பு, முழு பலேத்வா நகரத்திலும் ஒரு ராணுவ கவுன்சில் முகாம் கூட இல்லை எனத்தெரிவித்துள்ளது. இந்தக் கூற்று தொடர்பாக மியான்மர் ராணுவம் இதுவரை எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை. பிப்ரவரி 2021-இல், மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை அகற்றிவிட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போதிருந்து, மியான்மரில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதன் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மியான்மரின் சிட்வே துறைமுகம் அமைந்துள்ள பகுதியில் இருந்து மியான்மர் முழுவதும் சாலை வழியாகப் பயணிக்கமுடியும். இந்திய எல்லைக்கு அருகில் உள்ள பலேத்வா பலேத்வா நகரம் இந்தியா மற்றும் வங்கதேச எல்லைக்கு அருகில் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், இந்தியாவும் இந்த புதிய கிளர்ச்சி இயக்கத்தின் மீது ஒரு கண் வைத்திருக்கவேண்டிய தேவை எழுந்துள்ளது. இந்தியாவின் உதவியுடன் இந்த நகரத்தில் கோடிக்கணக்கான டாலர்கள் மதிப்பிலான வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், தொலைதூர பகுதிகளுக்கான இணைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. மே 2023-இல், இந்தியாவின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் மற்றும் மியான்மரின் துணைப் பிரதமர் அட்மிரல் டின் ஆங் சான் ஆகியோர் இணைந்து கலடன் திட்டத்தின் கீழ் ஒரு புதிய சிட்வே துறைமுகத்தைத் திறந்து வைத்தனர். கொல்கத்தாவின் சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் இருந்து பயணத்தைத் தொடங்கிய முதல் இந்திய சரக்குக் கப்பலை சர்பானந்தா சோனோவால் வரவேற்றார். கலடன் மல்டிமோடல் திட்டம் (Kaladan Multimodal Project) கொல்கத்தா துறைமுகத்தை மியான்மரின் சிட்வே துறைமுகத்தை கடல் வழியாக இணைக்கிறது. இதன் நன்மை என்னவென்றால், இது சிட்வே துறைமுகத்தை கலடனுடனும், பலேத்வா நதி வழியாக பலேத்வாவை இந்திய எல்லையுடனும், மியான்மரை லாங்ட்லாய், மிசோராமிலிருந்து சாலை வழியாகவும் இணைக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராக்கைன் மாநிலத்தில் முகாம்களில் ரோஹிஞ்சா அகதிகள் வசித்து வருகின்றனர். வலுவடையும் கிளர்ச்சியாளர்களின் பிடி தற்போது பலேத்வாவைக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ள குழு, ஏஏ (AA) கிளர்ச்சியாளர்களின் புதிய குழுவாகும். இக்குழுவிடம் ஏராளமான ஆயுதங்களும் உள்ளன. மியான்மரில் பல ஆயுதமேந்திய இனக்குழுக்கள் ராணுவத்துடன் சண்டையிட்டு வருகின்றன. இந்த குழுக்கள் ராக்கைன் மற்றும் சின் போன்ற மாநிலங்களிலும் தங்கள் பிடியை வலுப்படுத்தி வருகின்றன. 2021-இல் ராணுவம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, ஏஏ (AA) போராளிகள் ராக்கைனில் தங்கள் நிலையை பலப்படுத்தியிருந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்த குழுக்கள் மாநிலத்தின் 60% தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகக் கூறின. 2021-இல் ஆட்சிக்கவிழ்ப்பின் போது போர்நிறுத்தம் ஏற்பட்டது என்பதுடன் ராணுவம் இந்த கிளர்ச்சியாளர்களுடன் மோதுவதைத் தவிர்த்து வந்தது. இதனால் சதிப்புரட்சியை எதிர்ப்பவர்கள் மீது தனது கவனத்தை செலுத்த முடியும். இருப்பினும், கடந்த ஆண்டு அக்டோபரில், சகோதரத்துவக் கூட்டணியின் கீழ் ராணுவத்திற்கு எதிரான போராட்டத்தில் இணைவதாக ஏ.ஏ. அறிவித்தது. இதற்குப் பிறகு, இந்த ஏ.ஏ.க்கள் ராணுவத்தின் மீது பல தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தினர். கடந்த 11 வாரங்களில், கிளர்ச்சியாளர்களின் இந்தக் கூட்டணிக்கு எதிராக சீன எல்லைக்கு அருகே மியான்மர் ராணுவம் அவமானகரமான தோல்வியைச் சந்தித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வங்கதேசத்தின் காக்ஸ் பஜாரில் உள்ள முகாமிலும் மியான்மரில் இருந்து வந்த பல லட்சக்கணக்கான அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 2020-இல் நடந்த 42 நாட்கள் போர் கடந்த சனிக்கிழமை, பலேத்வா நகரின் கடைசி ராணுவச் சாவடியான மிவாவையும் ஏ.ஏ. தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. 2020-ஆம் ஆண்டிலும், ஏ.ஏ. அத்தகைய முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் 42 நாட்கள் சண்டையிட்ட பிறகு, இந்த இடத்தை அடைய முடியவில்லை. இந்த நகரத்தின் கட்டுப்பாட்டைப் பெற்றதன் மூலம், கிளர்ச்சியாளர்கள் இப்போது கலடனையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதன் காரணமாக, இந்த கிளர்ச்சியாளர்கள் இப்போது இந்திய எல்லை வரை சாலை மற்றும் நீர் போக்குவரத்தை கட்டுப்படுத்தியுள்ளனர் என்று கூறமுடியும். இந்த கிளர்ச்சியாளர்கள் இப்போது தங்களுக்கென சொந்த தளத்தைக் கொண்டுள்ளனர். அங்கிருந்து அவர்கள் ராக்கைன் மாநிலத்தில் தாக்குதல்களை நடத்தத் திட்டமிடலாம். ரக்கைன் மாநிலத்தில் இனி எந்த நகரங்களையும் இழப்பது மியான்மர் ராணுவத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும். இந்த கிளர்ச்சியாளர்களை சமாளிக்க ராணுவம் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கியோக்த்வாவின் கட்டுப்பாட்டை ஏஏ பெறுவதைத் தடுக்க ராணுவம் முயற்சிக்கும். ஏனெனில் இது ராக்கைனின் தலைநகரான சிட்வே மியான்மர் முழுவதையும் இணைக்கும் பிரதான சாலையில் உள்ளது. இருப்பினும், ஏ.ஏ.வின் அடுத்த கட்டம் என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஏஏ தனது முன்னணியைத் தக்க வைத்துக் கொள்ளவும் மேலும் இழப்புகளைக் குறைக்கவும் முயற்சிக்கும் என்று நம்பப்படுகிறது. கூட்டாட்சிக் கட்டமைப்பிற்குள் ஒருவித சுயாட்சி அல்லது சுதந்திரத்தை அடைவதே கிளர்ச்சியாளர்களின் குறிப்பிடப்படாத குறிக்கோளாக இருக்கும். ஆனால், இதை ராணுவ ஆட்சியை விட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியில் நடத்த வேண்டும் என கிளர்ச்சி தலைமை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. கிளர்ச்சியாளர்கள் பலேத்வாவைக் கைப்பற்றிய பிறகு, மியான்மர் ராணுவம் தனது மன உறுதியை மீட்டெடுக்கவும், எதிர்ப்பை எதிர்த்துப் போராடுவதற்கு வீரர்களை ஊக்குவிக்கவும் முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிப்ரவரி 2021 இல், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை அகற்றிவிட்டு மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போதிருந்து, மியான்மரில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது, இந்தியாவுக்கு என்ன கவலை? கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்ட நகரம் இந்தியாவிற்கு அருகில் உள்ளது. இந்தியாவின் மிசோரம் மாகாணத்திற்கும் மியான்மரின் சின் மாகாணத்திற்கும் இடையே 510 கி.மீ. நீள எல்லை உள்ளது. இருப்பினும், இருபுறமும் உள்ளவர்கள் எளிதாக அங்கும் இங்கும் செல்ல முடியும். இரு திசைகளிலும் 25 கி.மீ. வரை பயணிக்க எந்தத் தடையும் இல்லை. கடந்த ஆண்டு நவம்பரில், இந்தியா-மியான்மர் எல்லைக்கு அருகே மியான்மர் ராணுவம் மற்றும் ராணுவ ஆட்சியை எதிர்க்கும் படைகளுக்கு இடையே நடந்த தீவிர மோதல்களுக்கு மத்தியில் மியான்மரில் இருந்து இடம்பெயர்ந்த சுமார் 5,000 பேர் மிசோரம் மாநிலத்தை அடைந்தனர். 45 மியான்மர் ராணுவ வீரர்களும் மிசோரம் போலீசாரிடம் சரணடைந்தனர். மியான்மரில் ராணுவப் புரட்சிக்குப் பிறகு ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்த வன்முறையில் சிக்கிய ஏராளமானோர் இந்தியா வந்தடைந்தனர். மார்ச் 2022 வரையிலான தரவுகளின்படி, மியான்மரில் இருந்து சுமார் 31,500 அகதிகள் மிசோரம் தலைநகர் ஐஸ்வால் மற்றும் பிற மாவட்டங்களுக்கு வந்து வசித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் சின் மாகாணத்தில் இருந்து வந்தவர்கள். இப்போது கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்ட பலேத்வா நகரம் இந்த சின் மாகாணத்தைச் சேர்ந்தது. https://www.bbc.com/tamil/articles/c51znvx9zgwo
-
நாட்டின் பல பகுதிகளிலும் காற்றின் தரம் குறைந்தது!
இந்தியாவிலிருந்து வரும் மாசடைந்த காற்று நாட்டின் சில பகுதிகளில் மூடுபனி போன்று காணப்படும் ; வளிமண்டலவியல் திணைக்களம் Published By: DIGITAL DESK 3 17 JAN, 2024 | 11:16 AM இந்தியாவில் இருந்து வரும் மாசு அடைந்த காற்று இலங்கையின் சில பகுதிகளில் மூடுபனியை போன்று காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து வரும் மாசு அடைந்த காற்றானது, பண்டாரவளை மற்றும் பதுளை போன்ற பகுதிகளில் மூடுபனியை ஏற்படுத்தியுள்ளது என திணைக்களம் தெரிவித்துள்ளது. “புது டெல்லியில் இருந்து காற்று நீரோட்டங்கள் ஒரு வட்ட இயக்கத்தில் இயங்கி வருகிறது. அது டெல்லியில் இருந்து வங்காள விரிகுடாவை நோக்கி பயணிக்கிறது. வங்காள விரிகுடாவில் இருந்து வளைந்து செல்லும் இந்த காற்று கிழக்கிலிருந்து இலங்கைக்குள் நுழைகிறது. இது இலங்கையைப் பாதிக்கிறது” என தெரிவித்துள்ளது. "விரைவில் காற்றுடன் சிறிது ஈரப்பதம் வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், இதன் விளைவாக சிறிதளவில் மழை பெய்யும். இதனால் மூடுபனி குறையும். இருப்பினும் இந்த மாத இறுதிக்குள் இந்தியாவில் இருந்து மேலும் காற்று நீரோட்டங்கள் வரும் என்று தெரிகிறது. தற்போது இலங்கைக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை” என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் நுவரெலியாவில் வெப்பநிலை வீழ்ச்சியடையும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மாகாண மாவட்டத்தில் நேற்று மாலை நிலவரப்படி வெப்பநிலை 6 பாகை செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. இந்நிலையில், கொழும்பு, காலி, யாழ்ப்பாணம், மன்னாரில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாகவும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/174120
-
போர் முழக்கம் - சுப.சோமசுந்தரம்
உங்கள் ஒப்புவமை நன்றாக இருந்தது ஐயா.
-
டாடோ என்கின்ற டாலிபோ
டாடோ உயிரோடு மீள்வாரா?! தொடருங்கோ கவி ஐயா. ஐயா எழுத்தின் அளவை கொஞ்சம் பெரிதாக்கினால் வாசிக்க இலகுவாக இருக்கும்.
-
ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்
ஈராக்கில் மொசாட்டின் தலைமையகம் மீது தாக்குதல் - உரிமை கோரியது ஈரான் இராணுவம் Published By: RAJEEBAN 16 JAN, 2024 | 03:24 PM ஈராக்கில் உள்ள இஸ்ரேலிய இராணுவத்தின் புலனாய்வு பிரிவின் தலைமையகத்தின் மீது ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது. சிரியாவில் உள்ள ஐஎஸ் அமைப்பின் இலக்குகள் மீதும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. ஈராக்கின் அரைசுயாட்சி குர்திஸ் பிரதேசத்தின் தலைநகரான எர்பிலில் பல வெடிப்புசத்தங்கள் கேட்டுள்ளன, நால்வர் கொல்லப்பட்டுள்ளனர், ஆறுபேர் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. புலனாய்வு நிலையங்கள் மற்றும் பிராந்தியத்தில் ஈரான் எதிர்ப்பாளர்கள் கூடும் பகுதிகளை இலக்குவைத்து ஏவுகணைதாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது என அந்த நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது. சியோனிஸ்ட் அரசாங்கத்தின் சமீபத்தைய அநீதிகளுக்கு பதிலடியாக ஈராக்கின் குர்திஸ்தானில் உள்ள மொசாட்டின் புலனாய்வு அலுவலகம் ஏவுகணைகளால் அழிக்கப்பட்டது என தெரிவித்துள்ள ஈரான் இராணுவம் தியாகிகளின் இரத்தத்தின் கடைசி துளிகளிற்கு பதில் வாங்கும் வரை தாக்குதல் தொடரும் என தேசத்திற்கு உறுதியளிப்பதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் மனிதாபிமானமற்றது பயங்கரவாத தாக்குதல் என எர்பில் ஆளுநர் கண்டனம் வெளியிட்டுள்ளார். ஒரு ஏவுகணைவீடொன்றிற்குள் விழுந்து வெடித்ததில் குர்திஸ்தானை சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரும் குடும்பத்தினரும் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்கா கண்டனம் ஈரானின் இந்த தாக்குதலை அமெரிக்கா கண்மூடித்தனமான நடவடிக்கை என வர்ணித்துள்ளது. https://www.virakesari.lk/article/174063
-
தமிழ்நாடு ஏறுதழுவுதல் செய்திகள்
பாலமேடு ஜல்லிக்கட்டு: 1,000 காளைகள், 600 வீரர்கள் பங்கேற்ற போட்டியில் வெற்றி பெற்றது யார்? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலமாக நிறைவடைந்துள்ளது. இந்தப் போட்டியில் 14 காளைகளை அடக்கிய பிரபாகரனுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. மொத்தமாக 49 பேர் காயமடைந்தனர். மதுரை மாவட்டத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளிலேயே அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மிகுந்த பிரசித்தி பெற்றவை. இதில் அவனியாபுரத்தில் பொங்கல் தினத்தன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், மாட்டுப் பொங்கல் தினமான செவ்வாய்க் கிழமையன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. பாலமேடு மஞ்சமலை ஆற்றுத்திடலில் உள்ள வாடிவாசலில் மாவட்ட நிர்வாகமும் பாலமேடு கிராம பொது மகாலிங்க மடத்துக் குழுவும் இணைந்து இந்தப் போட்டியை நடத்தின. இந்தப் போட்டியில் மதுரை மாவட்டத்தில் மட்டுமல்லாமல், மதுரையைச் சுற்றியுள்ள தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருச்சி, சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த காளைகளும் தஞ்சாவூர், புதுக்கோட்டையைச் சேர்ந்த காளைகளும் பங்கேற்றனர். இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாடுகளும் மாடு பிடி வீரர்களும் ஆன்லைனில் பதிவுசெய்ய வேண்டுமென அறிவிக்கப்பட்டது. அதன்படி 3,500-க்கும் மேற்பட்ட காளைகளும் 1,400-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் ஆன்லைனில் பதிவுசெய்தனர். அதில் 1,000 மாடுகளும் 600 மாடுபிடி வீரர்களும் போட்டிக்கு தேர்வுசெய்யப்பட்டனர். போட்டி துவங்குவதற்கு முன்பாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா முன்னிலையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதற்குப் பிறகு வணிகவரித் துறை அமைச்சர் பி. மூர்த்தி போட்டிகளைத் துவக்கிவைத்தார். வெற்றியாளர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்? மொத்தம் பத்து சுற்றுகளாக போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு சுற்றிலும் சுமார் 60 வீரர்கள் களமிறங்கினர். ஒரு சுற்றில் அதிக காளைகளை பிடித்த வீரர்களுக்கு அடுத்த சில சுற்றுகளில் வாய்ப்பளிக்கப்பட்டது. எல்லாக் காளைகளுமே கால்நடைத் துறையினரால் பரிசோதிக்கப்பட்டு போட்டிகளுக்கு அனுமதிக்கப்பட்டன. ஜல்லிக்கட்டுப் போட்டிகளைப் பொறுத்தவரை, மாடு அவிழ்த்துவிடப்பட்ட பிறகு, வீரர்கள் அதன் திமிலைப் பிடித்துக்கொள்ள வேண்டும். மாடு மூன்று சுற்று சுற்றும்வரை பிடித்திருந்தாலோ, 100 மீட்டர் தூரத்திற்கு திமிலைப் பிடித்தபடி சென்றாலோ வீரர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும். இல்லாவிட்டால் மாடு வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும். அதேபோல, இரண்டு பேர் சேர்ந்து ஒரு மாட்டை அடக்க முன்றாலோ, கொம்பைப் பிடித்தாலோ மாடு வெற்றிபெற்றதாகவே அறிவிக்கப்படும். போட்டி ஆரம்பித்து சில சுற்றுகள் வரை, அதிகமாக மாடுகள் பிடிபடவில்லை. இதனால், காளையின் உரிமையாளர்களை அதிகம் பரிசுகளை வென்றுவந்தனர். 2-3 சுற்றுகளுக்குப் பிறகு நிலைமை மாறியது. நான்காவது முறை வெற்றி பெற்ற வீரர் எல்லா ஜல்லிக்கட்டுப் போட்டிகளைப் போலவே இந்தப் போட்டிகளிலும் சில பெண்களும் தங்கள் மாடுகளை அழைத்துவந்து உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். போட்டியின் பத்தாவது மற்றும் இறுதிச் சுற்று மாலை நான்கு மணியளவில் துவங்கியது. சுமார் நாலே முக்கால் மணியளவில் அந்தச் சுற்று நிறைவுக்குவந்தது. அதற்குப் பிறகு இந்தப் போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். மதுரை மாவட்டம் பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் 14 காளைகளை அடக்கி முதலிடத்தைப் பிடித்ததாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு ஒரு கார் பரிசளிக்கப்பட்டது. அலங்காநல்லூருக்கு அருகில் உள்ள சின்னப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். அவர் 11 காளைகளை அடக்கியிருந்தார். அவருக்கு ஒரு மோட்டர் பைக் பரிசளிக்கப்பட்டது. பிரபாகரன் இதற்கு முன்பும் பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறந்த வீரருக்கான பரிசை வென்றிருக்கிறார். பிபிசியிடம் பேசிய அவர், "2020, 21, 22 ஆகிய வருடங்களிலும் நான்தான் அதிக மாடுகளைப் பிடித்தேன். போன ஆண்டு என்னால் 15 மாடுகளைத்தான் பிடிக்க முடிந்தது. இந்த முறை மீண்டும் பரிசை வென்றிருக்கிறேன். ஆன்லைன் பதிவில் நன்றாக மாடு பிடிக்கும் வீரர்கள் சில சமயங்களில் தேர்வாவதில்லை. அதற்கு மாற்றுவழி ஏதாவது செய்ய வேண்டும்," என்றார். சிறந்த காளை பரிசு யாருக்கு? சிறந்த காளையாக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மருதுபாண்டி என்பவரது காளையான சின்னக்கருப்பு என்ற காலை தேர்வுசெய்யப்பட்டது. "மாட்டை வளர்ப்பதில் பெரும் செலவு இருந்தாலும், பெயர்தான் முக்கியம் என்பதால் காளையை வளர்க்கிறேன். கடந்த ஆண்டு எங்களுடைய இன்னொரு மாடு வெற்றிபெற்றது. வீட்டில் திட்டத்தான் செய்வார்கள். ஆனால், பல நேரங்களில் அவர்கள்தான் மாட்டைப் பார்த்துக்கொள்வார்கள்" என்று தெரிவித்தார் மருது பாண்டி. இந்தக் காளையின் உரிமையாளருக்கு கார் பரிசளிக்கப்பட்டது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அமர்நாத் என்பவரின் காளை இரண்டாவது சிறந்த காளையாக தேர்வுசெய்யப்பட்டது. இவருக்கு ஒரு மாடும் கன்றும் பரிசளிக்கப்பட்டது. எத்தனை பேருக்குக் காயம் ஏற்பட்டது? சிறந்த காளைகளைப் பொறுத்தவரை, நீண்ட நேரம் களத்தில் இருப்பதோடு, சுற்றிச்சுற்றிவந்து எந்த வீரரையும் நெருங்கவிடாமல் செய்யவேண்டும். அப்படியாகத்தான் இந்த இரு காளைகளும் தேர்வுசெய்யப்பட்டன. அவனியாபுரம் ஜல்லிக்கட்டைப் போலவே, இந்த ஜல்லிக்கட்டிலும் ஒரு நாய் குறுக்கிட்டது. ஆனால், நீண்ட நேரம் களத்தில் நிற்கவிடாமல் விரட்டப்பட்டது. ஒரு காளைக்கு காயம் ஏற்பட்டது. இன்றைய பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் மொத்தமாக 840 காளைகள் அவிழ்க்கப்பட்டன. 485 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் மொத்தமாக 49 பேர் காயமடைந்தனர். அவர்களில் 20 பேர் மட்டுமே மாடுபிடி வீரர்கள். 15 பேர் மாட்டின் உரிமையாளர்கள். இவர்கள் தவிர, காவலர்கள், பார்வையாளர்கள் ஆகியோரும் காயமடைந்தனர். இவர்களுக்கு பாலமேட்டில் இருந்த மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. 9 பேர் மட்டும் கூடுதல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்த ஜல்லிக்கட்டு போட்டியில், மாடுகளை துன்புறுத்தாமல் இருக்க விதிகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. மாடுகளின் கொம்புகளைப் பிடிக்கக் கூடாது எனவும், அவற்றின் கால்களைப் பின்னுவது கூடாது எனவும் மாடுகளின் திமிலை மட்டுமே பிடிக்க வேண்டும் என வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஒரு வீரர், காளை மூன்று சுற்றுகள் சுற்றும் வரை இறுகப் பற்றியிருந்தாலோ அல்லது 100 மீட்டர் தூரம் வரை திமிலைப் பிடித்தவாறு சென்றாலோ மட்டுமே மாடு பிடி வீரர் வெற்றி பெற்றதாகக் கருதப்படுவார். ஒரே நேரத்தில் பலர் காளையைப் பிடிக்க முயல்வது கூடாது என அறிவுறுத்தப்பட்டது. பார்வையாளர்களுக்கான வசதிகள் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு சுற்று நடைபெறும் எந்தவித இடைவேளை இன்றியும்போட்டி தொடர்ந்து காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். குறைந்தபட்சம் எட்டு சுற்றுகள் நடைபெறும். ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறும் வீரர்கள் அடுத்தடுத்த சுற்றுகளில் பங்குபெற அனுமதிக்கப்படுவர். போட்டியை பார்வையிட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருக்கும் பார்வையாளர்களுக்கு குடிநீர், தற்காலிக கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பேரூராட்சி நிர்வாகம் செய்துள்ளது. இந்தப் போட்டியை பாலமேட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பார்த்து ரசிக்க ஆங்காங்கே எல் இ டி திரைகளை மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ளது. போட்டியின் போது பாதுகாப்பிற்காக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டோங்க்ரே பிரவின் உமேஷ் தலைமையில் 1500 காவல்துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த போட்டி முழுவதும் கண்காணிப்பு கேமிராக்கள் மூலமாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு வசதிகள் மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவக்குழுக்கள், காளைகளுக்கான மருத்துவக்குழுக்கள் மற்றும் காயம் ஏற்படும் வீரர்களை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்ஸ்கள் மற்றும் கால்நடை ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு நிலைய வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. இந்திய செஞ்சிலுவை சங்க தன்னார்வலர்களும் இதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். காளைகள் வாடிவாசலுக்கு வரும் பிறவாடி பகுதிகளிலும், காளைகள் வாடிவாசலில் இருந்து செல்லும் காளை சேகரிப்பு இடத்திலும் (கலெக்சன் பாயிண்ட்) பாதுகாப்புக்காக காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர். இந்தப் போட்டியின் போது காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியை சேர்ந்த காளையின் உரிமையாளர் மாரியப்பனுக்கு கால் பகுதியில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. வேடிக்கை பார்க்க வந்த மேலூர் பகுதியை சேர்ந்த மனிஸ் வலிப்பு நோய் ஏற்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். மாட்டின் உரிமையாளர் ஒருவருக்கும், மாடுபிடி வீரர் ஒருவருக்கும் பேரிக்காடு கம்பி குத்தி படு காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இருவருக்கு காலிலும்., ஒருவருக்கு தொடையிலும், ஒருவருக்கு காதிலும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் ஒருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. https://www.bbc.com/tamil/articles/cv2ljd3nxm0o Avaniyapuram Jallikattu 2024 Highlights: ஆட்டம் காட்டிய காளைகள்; அசத்தியது யார்?
-
டாடோ என்கின்ற டாலிபோ
தொடருங்கோ கவி ஐயா. ஐயாட்ட நாமளும் ஒரு படம் வரையக் கேட்பமோ?!
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தாக்குதல் குறித்து இஸ்ரேல் பெண்கள் படை முன்னரே எச்சரித்தும் நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்?
கட்டுரை தகவல் எழுதியவர், ஆலிஸ் கட்டி பதவி, இஸ்ரேல், பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் காஸா எல்லையில் இருக்கும் இவர்கள் 'இஸ்ரேலின் கண்கள்' என அழைக்கப்படுகிறார்கள். இஸ்ரேல்-காஸா எல்லையில், பல ஆண்டுகளாக இந்த இளம் பெண்கள் படைப் பிரிவுக்கு ஒரு வேலை இருந்தது. அது, மணிக்கணக்கில் கண்காணிப்பு தளங்களில் அமர்ந்து, சந்தேகத்திற்கிடமான அறிகுறிகளைப் பார்ப்பதும், அவற்றை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிப்பதும்தான். ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்திய அக்டோபர் 7-ஆம் தேதிக்கு முன், அந்த ஆயுதக்குழுவினர் எல்லையில் இருந்து பார்க்கக்கூடிய தூரத்தில் பயிற்சி மேற்கொள்வது, பணயக்கைதிகளை அழைத்துச் செல்வதுபோல பயிற்சி எடுப்பது, மற்றும் இஸ்ரேல் வேலிக்கு மறுபுறம் உள்ள விவசாயிகள் விசித்திரமாக நடந்துகொள்வது ஆகியவற்றை இந்தப் பெண்கள் பார்த்துள்ளனர். எல்லையில் கண்காணிப்பு பணியில் இருந்த நோவா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிபிசியிடம் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். எல்லையில் தாங்கள் பார்ப்பதை உளவுத்துறையினருக்கும், ராணுவ உயர் அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்த மட்டும்தான் முடியுமே தவிர அதற்கு மேல் எதுவும் செய்வதற்கு அதிகாரமற்று இருந்ததாகக் கூறினார், நோவா. “நாங்கள் வெறும் கண்கள்தான்,” என்றார் அவர். அங்கு கண்காணிப்பில் இருந்த சில பெண்களுக்கு ஹமாஸ் ஆயுதக்குழுவினர் ஏதோ செய்யப்போகிறார்கள் என மிகத் தெளிவாகத் தெரிந்துள்ளது. நோவாவின் வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால், “மிக விரைவில் ஒரு பலூன் வெடிக்கப்போவதை முன்னதாகவே உணர்வதைப்போல இருந்தது,” என்றார். எல்லையில் பாதுகாப்பு பணியில் இருந்த இளம் பெண்களிடம் பிபிசி பேசியது. அந்தப் பெண்கள், அவர்கள் சந்தேகத்திற்கிமான செயல்களை கவனித்தது, அது தொடர்பாக அவர்கள் தாக்கல் செய்ய அறிக்கை, அதற்கு இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் எந்த பதிலும் சொல்லாமல் இருந்தது உள்ளிட்டவை குறித்து பிபிசியிடம் பகிர்ந்துகொண்டனர். ஹமாஸ் தாக்குதல் நடத்தியதற்கு முன்பு, சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்து தங்களுக்குள் பேசிக்கொண்ட வாட்ஸ் அப் உரையாடல்களையும் பிபிசி பார்த்தது. மேலும், ஹமாஸ் தாக்குதல் குறித்து இந்த இளம்பெண்கள் மட்டும் எச்சரிக்கவில்லை, மேலும் சிலரும் இது குறித்து எச்சரித்திருந்ததால், தற்போது அது குறித்து இஸ்ரேல் ராணுவம் எடுத்த நடவடிக்கையும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. இந்த இளம்பெண்களை இழந்த குடும்பங்களிடமும், இந்த பெண்களின் எச்சரிக்கையை பொருட்படுத்ததாத ராணுவத்தின் நடவடிக்கையை உளவுத்துறையின் தோல்விகளில் ஒன்று எனக் கூறும் நிபுணர்களிடமும் பிபிசி பேசியது. "பிரச்னை என்னவென்றால், அவர்கள் [ராணுவம்] தங்களுக்கு கிடைத்த தகவல்களின் புள்ளிகளை இணைக்கவில்லை," என எல்லைப் பாதுகாப்பு படைப் பிரிவு ஒன்றில் பணியாற்றிய முன்னாள் தளபதி ஒருவர் பிபிசியிடம் கூறினார். அவர்கள் தங்களுக்கு கிடைத்த தகவலை சரியாக இணைத்துப் பார்த்திருந்தால், ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்குதலுக்கு தயாராகி வருவதை உணர்ந்திருப்பார்கள் என்றார் அந்த முன்னாள் அதிகாரி. படக்குறிப்பு, ஷாய் ஆஷ்ரம் ராணுவத்தில் பணியாற்றுவதை மிகவும் பெருமையாகக் கருதியதாக அவரின் பெற்றோர் கூறினர். ஷாய் ஆஷ்ரம், 19, அக்டோபர் 7 அன்று பணியில் இருந்த பெண்களில் இவரும் ஒருவர். ஷாய் அவரது குடும்பத்தினருடன் தொலைபேசி அழைப்பில் இந்தபோது, "எங்கள் தளத்தில் பயங்கரவாதிகள் இருக்கிறார்கள், ஒரு பெரிய சம்பவம் நடக்கப் போகிறது," என்று அவர் கூறியுள்ளார். அவர் பேசும்போது பின்னணியில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டுள்ளது. கொல்லப்பட்ட 10-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு வீரர்களில் இவரும் ஒருவர். மற்றவர்கள் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தத் தொடங்கியதும், காஸா எல்லையில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள நஹல் ஓஸில் இருந்த பெண்கள், தங்களுக்கான வாட்ஸ்அப் குழுவில் ‘விடைபெறுகிறேன்’ எனப் பதிவிடத் தொடங்கியுள்ளனர். பணியில் இல்லாத நோவா, வீட்டில் இருந்து அந்த வாட்ஸ் அப் உரையாடல்களை பார்த்தபோது, ‘இது தான் அது’ என நினைத்துள்ளார். அவர்கள் நீண்டகாலமாக அஞ்சிய தாக்குதல் அப்போது நடந்துள்ளது. காஸாவிலிருந்து எல்லைகளை உடைத்துக்கொண்டு வந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினர், இந்தப் பெண்கள் இருக்கும் ராணுத் தளத்திற்குத்தான் முதலில் வந்துள்ளனர். ஏனெனில், இவர்கள் பணியாற்றி வந்த ராணுவத் தளம், எல்லைக்கு மிக அருகில் இருக்கக்கூடியது. 'எல்லா மக்களையும் பாதுகாப்பதே எங்கள் பணி' படக்குறிப்பு, எல்லையின் மறுபுறம் இருந்து ஹமாஸ் ஆயுதக்குழுவினர் வேலிகளை புகைப்படம் எடுத்ததை தான் பார்த்ததாகக் கூறினார் ரோனி. இந்தப் பெண்கள் எல்லைக்கு அருகில் உள்ள அறைகளுக்குள் அமர்ந்து, வேலியில் வைக்கப்பட்டுள்ள கேமராக்கள் மற்றும் காஸா மீது வட்டமிடும் பலூன்கள் மூலம் கைப்பற்றப்பட்ட நேரடி கண்காணிப்பு காட்சிகளை ஒவ்வொரு நாளும் மணிக்கணக்கில் பார்க்கிறார்கள். இந்தப் பெண்கள் பணியாற்றும் ராணுவத்தளத்தைப்போல, காஸாவின் வேலிக்கு அருகில் பல கண்காணிப்பு அறைகள் உள்ளன. அவை அனைத்திலும், இப்படியான இளம்பெண்கள்தான் கண்காணிப்பு பணியில் அமர்த்தப்பட்டனர். இந்தப் பணியில் 18 வயது முதல் 25 வயது வரையிலான பெண்கள் தான் அதிகம் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் யாரும் தங்களுடன் துப்பாக்கிகளை எடுத்துச் செல்வதில்லை. இவர்கள், தங்களது ஓய்வு நேரத்தில் நடனம் கற்றுக்கொண்டும், இரவு உணவை தாங்களே ஒன்றாக இணைந்து சமைத்து சாப்பிட்டுக்கொண்டும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டும் இருந்திருக்கிறார்கள். ராணுவத்தின் இந்தப் படைபிரிவில் பணியாற்றிய பெரும்பாலான பெண்கள், அப்போது தான் முதல் முறையாக தங்களது பெற்றோரை விட்டு தனியாக வாழ்த்துள்ளனர். அதனால், உடன்பணியாற்றும் பெண்களுடன் நல்ல சகோதரத்துவ உறவுகளைக் கொண்டிருந்ததாக் அவர்கள் விவரிக்கிறார்கள். இருந்தபோதிலும், அனைத்துச் சூழல்களிலும், தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பை அவர்கள் மிகத்தீவிரமாக எடுத்துக்கொண்டதாகக் கூறினார்கள். “அனைத்து மக்களையும் பாதுகாப்பதே எங்கள் வேலை. எங்களுக்கு வேலை மிகவும் கடினமாக இருந்தது. நாங்கள் ஷிப்டில் அமர்ந்தால், கண்களை சிறிய அளவில் கூட அந்தப்பக்கம் இந்தப்பக்கம் பார்க்க முடியாது, அதற்கு உங்களை அனுமதிக்கவும் மாட்டார்கள். நாங்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்,” என்றார் நோவா. செப்டம்பர் மாதத்தின் இறுதியில் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவுகளுடன் சேர்ந்து, இந்தப் பெண்கள் இருந்த படைப்பிரிவினருக்குத்தான் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பற்றி அனைத்து தகவல்களும் தெரியும் என குறிப்பிட்டள்ளது. இந்தப் பெண்கள் சந்தேகத்திற்கிடமாக ஏதேனும் கண்டால், அவர்கள் அதனை தங்களின் படைப்பிரிவு தளபதிக்கு முதலில் தெரிவிக்க வேண்டும். பின், அவற்றை தங்களின் கணினி அமைப்பில் பதிவு செய்ய வேண்டும். இவர்கள் கொடுக்கும் தகவல்களைத்தான் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவெடுப்பார்கள். ஓய்வு பெற்ற இஸ்ரேல் ராணுவ தளபதி எய்டன் டாங்கோட் பேசுகையில், “எச்சரிக்கை ஒலி எழுப்புவதில் இந்தப் பெண்கள் படைப்பிரிவுக்குத்தான் முக்கியப் பங்கு இருக்கிறது. அவர்கள் தங்களின் படைப்பிரிவு தளபதியிடம் கூறும் தகவல்களைக் உளவுத்துறை அதிகாரி முதல் அனைத்து அதிகாரிகளுக்கும் அனுப்ப வேண்டும்,” என்றார் அவர். ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்திய முந்தைய மாதங்களில், ஹமாஸின் முந்தைய அச்சுறுத்தல்கள் கட்டுப்படுத்தப்பட்டதாக மூத்த இஸ்ரேலிய பாதுகாப்பு படை அதிகாரி ஒரு அறிக்கையை வெளியிட்டார். ஆனால், அப்போதே, எல்லையில் ஏதோ தவறு நடந்ததற்கான பல அறிகுறிகள் தென்பட்டன. செப்டம்பர் மாதத்தின் இறுதியில், நஹல் ஓஸில் உள்ள ராணுவத்தளத்தில் கண்காணிப்பில் உள்ள ஒரு பெண் தங்களுக்குள்ளான நண்பர்களின் வாட்ஸ் அப் குழுவில், “என்ன, இனியொரு சம்பவம் இருக்கா?” என குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அதற்கு, எல்லையில் பணியாற்றி வந்த மற்றொரு பெண், “நீ எங்க இருக்க? கடந்த இரண்டு வாரங்களாக தினமும் ஒரு சம்பவம் நடந்துள்ளது,” என பதிலளித்துள்ளார். இந்த உரையாடல்கள் அனைத்தும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்துவதற்கு முந்தைய மாதத்தில் அவர்களுக்குள் விவரித்துக்கொண்டது. அவர்கள் அனைவரும் எதோ ஒரு பெரிய தாக்குதல் நடக்கவிருக்கிறது என உணர்ந்திருந்தார்கள். “அவர்கள் நடத்தப்போகும் ‘ரெய்டு’ எப்படி இருக்கும் என ஒவ்வொரு நாளும் அவர்கள் பயிற்சி செய்வதை நாங்கள் பார்ப்போம்,” என்றார் இன்னும் ராணுவத்தில் பணியாற்றி வரும் நோவா. “அவர்கள் பயிற்சியின்போது, ஒரு மாதிரி பீரங்கியைக் கூட வைத்திருந்தார்கள். அதை எப்படி எடுத்து கையாள்வது என்றும் பயிற்சி செய்தார்கள்,” என்றார் நோவா. "அவர்கள் பயிற்சியின்போது, ஆயுதங்களின் மாதிரியை கையில் வைத்து, அவற்றை வேலியில் எப்படி வெடிக்கச் செய்வது, படைகளை எவ்வாறு கைப்பற்றுவது, எப்படி கொலை செய்வது, எப்படி கடத்துவது என்றும் பயிற்சி எடுத்து ஒருங்கிணைப்பார்கள்,”என்றார் நோவா. ராணுவத் தளத்தில் மற்றொரு கண்காணிப்பாளரான ஈடன் ஹதர், தான் பணியில் இருந்தபோது, ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்ததை பார்த்தது குறித்து நினைவு கூர்ந்தார். ஆனால், ஈடன் ஹதர் தாக்குதல் நடப்பதற்கு முன்பாகவே, ஆகஸ்ட் மாதம் ராணுவத்தில் இருந்து வெளியேறினார். எல்லையில் உள்ள மற்றொரு ராணுவத் தளத்தில் பணியாற்றிய கேல்(பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தங்களின் பயிற்சியை தினமும் அதிகரித்துக்கொண்டிருந்ததை தானும் பர்த்ததாகப் பகிர்ந்தார். இஸ்ரேலின் கண்காணிப்பு பலூன் வழியாக, ஹமாஸ் ஆயுதக்குழுவினர் எல்லையில் ஒரு தானியங்கி இஸ்ரேலிய ஆயுதத்தின் மாதிரியை காஸாவின் மையப்பகுதியில் வைத்து பயிற்சி எடுப்பதை பார்த்ததாக கேல் கூறினார். இஸ்ரேலின் இருப்புச் சுவர் என விவரிக்கப்படும் வேலியின் அருகே வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு வெடிக்கப்பட்டதாக பல பெண்கள் விவரித்தார்கள். தற்போதும் ராணுவத்தில் இருக்கும் ரோனி லிஃப்ஷிட்ஸ், ஹமாஸ் தாக்குதலின்போது ராணுவத்தில் தான் பணியாற்றியுள்ளார். ஆனால், தாக்குதல் நடந்த அன்று அவர் பணியில் இல்லை. “ஆனால், தாக்குதல் நடந்துவதற்கு முந்தைய வாரத்தில், ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தங்களது வாகனங்களில் வந்து எல்லையில் சோதனையிடுவதை பார்த்தோம்,” என்றார். அவர்கள் பார்த்ததிலேயே மிகவும் கவலைக்குறியது அது தான் என்றார் ரோனி. ஹமாஸ் ஆயுதக்குழுவினர் வேலியின் மறுபுறம் வந்து நின்று பேசுவது, வேலிக்கு மறுபுறம் உள்ள கேமராக்களை சுட்டிக்காட்டி பேசுவது ஆகியவற்றை நினைவு கூர்ந்தார். அவர்கள் அணிந்திருந்த ஆடையை வைத்து, அவர்கள் ஹமாஸின் உயர்மட்ட நுக்பா படையைச் சேர்ந்தவர்கள் என்பதை தன்னால் அடையாளம் காண முடிந்தது என்றார் ரோனி. அக்டோபர் மாதம் நடந்த தாக்குதல்களுக்கு பிறகு, அந்தத் தாக்குதலில் முன்னணியில் இருந்தவர்களில் நுக்பா படையும் ஒன்று என இஸ்ரேல் ராணுவம் கூறியது. கண்காணிப்பு பணியில் இருந்த பெண்கள், எல்லையில் ஊடுருவல் சம்பவம் நடந்தது குறித்தும் பிபிசியிடம் பேசினர். கண்காணிப்பு தளத்தில் பணியாற்றிய ஒரு பெண் ராணுவ வீரர் ஷஹாப் நிசானி, தனது அம்மாவுக்கு ஜூலை மாதம் அனுப்பிய குறுஞ்செய்தியை பகிர்ந்தார். அதில், “காலை வணக்கம், அம்மா. நான் இப்போதுதான் ஷிப்ட் முடித்தேன். இன்று ஒரு எல்லை ஊடுருவல் முயற்சி நடந்தது. அது எனக்கு மிகவும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனை தங்கள் வாழ்நாளில் யாரும் எதிர்கொண்டிருக்கமாட்டார்கள்,” என குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். கண்காணிப்பு பணியில் இருந்த பெண்கள், எல்லையில் பல விசித்திரமான மாற்றங்களையும் காணத் தொடங்கியுள்ளனர். வேலிக்கு மறுபுறம் உள்ள விவசாயிகள், பறவைகளை பிடிப்பவர்கள், ஆடு மேய்ப்பவர்கள் எல்லாம் வேலிக்கு மிக அருகில் வரத் தொடங்கினர். இந்த நபர்கள் தாக்குதல்களுக்கு முன்னதாக உளவுத் தகவல்களை சேகரிப்பதற்காக வந்ததாக கண்காணிப்பு பணியில் இருந்த பெண்கள் நம்புகிறார்கள். “அந்தப் பகுதியில் உள்ள ஒவ்வொருவரையும் நாங்கள் அறிவோம். அவர்களின் வழக்கமான நேரத்தையும் நாங்கள் அறிவோம். ஆனால், திடீரென வந்த பறவை பிடிப்பவர்களையும், விவசாயிகளையும் எங்களுக்கு தெரியவில்லை. அவர்கள் புதிய இடங்களுக்குச் செல்வதை நாங்கள் பார்த்தோம்,” என்றார் கண்காணிப்பு பணியில் இருந்த அந்த பெயர் குறிப்பிட விரும்பாத பெண். அந்த விவசாயிளும், பறவைகளை பிடிப்பவர்களும் வேலிக்கு நெருங்கி வருவதையும் நினைவு கூர்ந்தார் நோவா. “பறவைகளைப் பிடிப்பவர்கள் தங்களின் கூண்டுகளை வேலியின் மேல் வைப்பார்கள். அது விசித்திரமாக இருந்தது. ஏனென்றால், அவர்கள் எங்கு வேண்டுமானாலும் கூண்டு வைக்கலாம். விவசாயிகளும் விவசாயமே செய்யாத பகுதிகளான வேலிக்கு அருகில் உள்ள பகுதிகளுக்கு வந்தனர். இது அனைத்தும் தகவல் சேகரிப்பதற்குத்தானே தவிர வேறு எந்த காரணமும் இல்லை,”என்றார் நோவா. "நாங்கள் அனைத்து நேரங்களிலுமு் அதைப் பற்றி பேசினோம்." பிபிசி அனைத்து பெண் கண்காணிப்பாளர்களிடமும் பேசியது. ஆனால், பிபிசி பேசிய அனைத்துப் பெண்களும் அவர்கள் பார்த்தவையின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கவில்லை. “ஹமாஸ் குழுவினர் எப்போதும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டுதான் இருப்பார்கள். ஆனால், அக்டோபர் 7-ஆம் தேதி நடந்ததைப்போன்ற ஒரு தாக்குதலுக்கு தயாராகிறார்கள் என எங்களுக்கு தெரியவில்லை,” என்றார் ஒரு பெண். ஆனால், ஒரு பெரிய அசம்பாவிதம் நடக்கவிருக்கிறதாக முன்னதாகவே உணர்ந்த பெண்கள், தங்களின் எச்சரிக்கைகள் கவனிக்கப்படவில்லை என வருத்தம் தெரிவித்தனர். எல்லையில் வாகனங்களைப் பார்த்த ரோனி, அதனை முதலில் தன்னுடைய படைப்பிரிவு தளபதிக்கு தெரியப்படுத்துயுள்ளார். “பின், அந்த வாகனம் செல்லும் வரை நான் கண்காணிக்க வேண்டும். அந்த வாகனம் சென்ற பிறகு, அந்த அறிக்கையை கணிணியில் பதிவு செய்ய வேண்டும். ஆனால், அந்த அறிக்கைகள் எல்லாம் இப்போது எங்கு சென்றது எனத் தெரியவில்லை,” என்றார் ரோனி. “அந்த அறிக்கைகள் பெரும்பாலும் உளவுத்துறைக்குத்தான் சென்றிருக்க வேண்டும். ஆனால், அந்த அறிக்கைகள் மீது என்ன நடவடிக்ககைள் எடுத்தார்கள், என்ன ஆனது என்பது பற்றி எங்களுக்கு யாருமே சொல்லவில்லை,” என்றார் ரோனி. ரோனி, தான் எத்தனை முறை இப்படி எச்சரிக்கை அறிக்கை அனுப்பியிருப்பார் என்ற கணக்கே தெரியவில்லை என்றார். “எங்களின் படைப்பிரிவுக்குள் அனைவரும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, கவனமாக உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிவிடுவர், ஆனால், கடைசியில் மேல் அதிகாரிகள் எதுவும் செய்யவில்லை,” என்றார். படக்குறிப்பு, ஷஹாஃபி தன் தயார் இலானாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம். 'யாரும் கேட்கவில்லை என்றால் நாங்கள் ஏன் இங்கே இருக்கிறோம்?' பெண்கள் கண்காணிக்கும் ஒரு ராணுவப்பிரிவின் தளபதியாக உள்ள கேல், “கண்காணிப்பு பணியில் உள்ளவர்கள் தகவல் அனுப்புவார்கள். அதை எனது உயர் அதிகாரிகளுக்கு அனுப்புவேன். அவர்கள் அந்த அறிக்கைகள் குறித்து விவாதிப்பார்கள். ஆனால், அதற்கு மேல் ஒன்றும் செய்யவில்லை,” என்றார். பல பெண்கள் தங்களின் விரக்தியையும், கவலையையும், தங்களின் குடும்பத்தினருடன் பகிர்ந்ததாகக் கூறினர். “யாரும் கேட்கமாட்டார்கள் என்றால், நாங்கள் ஏன் இங்கே இருக்கிறோம்,” என தன் மகள் சொன்னதாக நினைவு கூர்ந்தார் ஷஹாஃபின் தயார் இலானா. “அவள் அங்கு குழப்பம் இருப்பதை என்னிடம் சொன்னாள். நீங்கள் புகார் செய்தீர்களா எனக் கேட்டேன். எனக்கு ராணுவத்தைப் பற்றி சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், மேலே உள்ளவர்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை மட்டும் புரிந்துகொண்டேன்,”என்றார். தன் மகள் குறித்த கவலை இருந்தாலும், இலானாவின் குடும்பத்தினரும் மற்றவர்களைப்போலவே இஸ்ரேல் ராணுவம் மற்றும் இஸ்ரேலிய அரசின் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தனர். “கடந்த மாதங்களில் அவர் மீண்டும் மீண்டும் சொன்னாள். ஒரு போர் நடக்கும், நீங்கள் பார்ப்பீர்கள் என்று. நாங்கள் அவளை மிகைப்படுத்தி சிரித்தோம்,” எனக் கூறி தன் பேச்சுக்கு நடுவில் பெருமூச்சுவிட்டார் இலானா. அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நஹல் ஓஸைக் பகுதியைக் கைப்பற்றியபோது கொல்லப்பட்ட முதல் நபர்கிளில் ஷஹாஃபும் ஒருவர். இஸ்ரேல் அரசின் தகவல்படி, ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் 1,300 பேர் கொல்லப்பட்டனர், 240 பேர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்திய வான் மற்றும் தரைவழித் தாக்குதல்களில் காஸாவில் 23,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. https://www.bbc.com/tamil/articles/c882xd56x35o
-
பிக்குகள் மாத்திரம் காவி உடையணியும் சட்டம் வேண்டும்: ஒரு சில தேரர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து கோடிக்கணக்கில் நிதி கிடைக்கிறது! - உதய கம்மன்பில
Published By: VISHNU 16 JAN, 2024 | 05:14 PM (இராஜதுரை ஹஷான்) பௌத்த மதத்தை இல்லாதொழிக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த நாட்டில் காவி உடை அணிவதை பிக்குகளுக்கு மாத்திரம் வரையறுக்கும் சட்டம் இயற்றப்பட வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் காரியாலயத்தில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பௌத்த மத கோட்பாடுகளை திரிபுபடுத்தி, பௌத்த மதத்தை இல்லாதொழிக்கும் வகையிலான திட்டமிட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கு புலம்பெயர் அமைப்புக்கள் நிதியுதவி வழங்குகின்றன. பௌத்த மதத்தை அவதிக்கும் வகையிலான கருத்துக்களை இன்று பல்வேறு தரப்பினர் குறிப்பிடுகின்றனர். பௌத்த கோட்பாட்டை திரிபுபடுத்தும் கருத்துக்களை குறிப்பிடும் ஒரு சில பௌத்த தேரர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் நிதி கிடைக்கிறது. ஒரு சிலர் தம்மை பிக்கு என்று அடையாளப்படுத்திக் கொண்டு பௌத்த மதத்தை அவமதிக்கிறார்கள். காவி உடையை அனைவரும் அணியும் நிலை இன்று காணப்படுகிறது. இவ்வாறானவர்களை கைது செய்யவும் முடியாது.பிக்கு ஒருவர் காவி உடை தரிக்க வேண்டும் என்று ஒழுக்கச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் ஏனையோர் காவி உடைய அணிய முடியாது என்று சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆகவே காவி உடை அணிந்தவர்கள் எதை செய்தாலும் அவர்களை உடனடியாக கைது செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. தான் விரும்பும் ஆடைகளை அணிந்து கொள்ளும் உரிமை அனைவருக்கும் உண்டு. 2300 வருட கால தொன்மையை கொண்டுள்ள பௌத்த கோட்பாட்டை பாதுகாக்க வேண்டுமாயின் இந்த நாட்டில் காவி உடை அணிவதை பிக்குகளுக்கு மாத்திரம் வரையறைக்கும் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/174088
-
40% வேலைகளை பாதிக்கப்போகும் செயற்கை நுண்ணறிவு - அதிக பாதிப்பு யாருக்கு? புதிய ஆய்வு கூறும் தகவல்
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அனபெல் லியாங் பதவி, வணிகச் செய்தியாளர் 16 ஜனவரி 2024, 11:15 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் செயற்கை நுண்ணறிவு (AI) கிட்டத்தட்ட 40% பணிகளை பாதிக்கக்கூடும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் புதிய ஆய்வு கூறுகிறது. வளர்ச்சியடைந்த பொருளாதாரம் உள்ள நாடுகளில் 60% வேலைகளை செயற்கை நுண்ணறிவு பாதிக்கும் என்று இந்த ஆய்வு கூறுகிறது. இதில் பாதி சந்தர்ப்பங்களில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மனிதர்களின் உற்பத்தித்திறன் மேம்படும். ஆனால் மறுபக்கம், ஏற்கனவே மனிதர்களால் செய்யப்படும் சில முக்கியமான வேலகளைச் செயற்கை நுண்ணறிவு செய்யத்துவங்கும். இது மனித பணியாளர்களுக்கான தேவையைக் குறைக்கும், ஊதியத்தை பாதிக்கும், மேல்லும் சில வேலைகளை இல்லாமலே செய்துவிடும் என்று இந்த ஆய்வு கூறுகிறது. அதேசமயம் வளர்ந்துவரும் நாடுகளில் செயற்கை நுண்ணறிவு 26% வேலைகளை பாதிக்கும் என்று இந்த ஆய்வு கூறுகிறது. பட மூலாதாரம்,IMF ‘ஏற்றத்தாழ்வுகள் மோசமடையக்கூடும்’ இதனால், ஏற்கனவே இருக்கும் பொதுவான ஏற்றத்தாழ்வுகள் மேலும் மோசமடையும் என்கிறார் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டினா ஜார்ஜியேவா. சட்டம் இயற்றுபவர்கள் இந்த ‘கவலையளிக்கும்’ விஷயத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்றார். இல்லையெனில் சமூகச் சிக்கல்கள் மேலும் மோசமடையும் என்றார். “[வளர்ந்துவரும் நாடுகள்] செயற்கை நுண்ணறிவின் பலன்களை உபயோகித்துக்கொள்ளும் அளவுக்கு உட்கட்டமைப்போ திறன்மிக்க பணியாளர்களோ இல்லை. இதனால் நாடுகளுக்கிடையே ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கக் கூடும்,” என்கிறார் ஜார்ஜியேவா. இந்த ஆய்வு முடிவுகள், கோல்ட்மன் சாக்ஸ் நிறுவனத்தின் 2023-ஆம் ஆண்டு அறிக்கை முடிவுகளை ஒத்திருக்கிறது. அந்த அறிக்கை, 30 கோடி முழுநேர வேலைகளைக் காலி செய்துவிடும் என்று கூறியிருந்தது. ஆனால், அதற்கேற்றாற்போல் புதிய வேலைகளும் உற்பத்தித்திற்ன் பெருக்கமும் இருக்கும் என்று கூறியிருந்தது. யாரெல்லாம் அதிகம் பாதிக்கப்படுவார்கள்? பொதுவாக அதிக ஊதியம் பெறுபவர்கள், இளைஞர்கள் ஆகியோரின் ஊதியம் செயற்கை நுண்ணறிவினால் மிக அதிகமாக உயரும். ஆனால் குறைந்த ஊதியமுள்ளவர்கள் முதியவர்கள் ஆகியோரின் ஊதியம் குறையலாம் என்கிறது சர்வதேச நாணய நிதியம். “இதனால் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களையும், பாதிக்கப்படக்கூடிய பணியாளர்களுக்கு பயிற்சித்திட்டங்களையும் உலகநாடுகள் உருவாக்க வேண்டும்,” எ ந்கிறார் ஜார்ஜியா. “அப்படிச் செய்தால் செயற்கை நுண்ணறிவுக்கான மாற்றம் அனைவரையும் உள்ளடக்கியதாகவும், வாழ்வாதாரங்களை பாதுகாப்பதாகவும், எற்றத்தாழ்வுகளை குறைப்பதகவும் அமையும்,” என்கிறார் ஜார்ஜியேவா. ஸ்விட்சர்லாந்தின் தாவோஸ் நகரில் நடக்கும் உலகப் பொருளாதார மன்றத்தைப் பொருட்டு சர்வதேச நாணய நிதியத்தின் இந்த அய்வு வெளிவருகிறது. இந்த மன்றத்தில் உலக அரசியல் தலைவர்கள் மற்றும் தொழில்நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த மன்றத்தில், ChatGPT போன்ற செயலிகளின் வளர்ச்சி குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் செயற்கை நுண்ணறிவு பாதுகப்பு குறித்த சட்டங்கள் இயற்றியுள்ளன செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு குறித்த சட்டங்கள் பல நாடுகளும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த சட்டங்களை இயற்றி வருகின்றன. கடந்த மாதம் ஐரோப்பிய யூனியன் அதிகாரிகள் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான உலகின் முதல் சட்டங்களை முதற்கட்டமாக முடிவுசெய்தனர். தேசிய அளவில் செயற்கை நுண்ணறிவுச் சட்டங்களை முதலில் அமுல்படுத்தியது சீனா. இந்தச் சட்டங்கள் அல்காரிதம் எவ்வாறு உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும் என்பதையும் சொல்கிறது. கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்க அதிபர் பைடன் மென்பொருள் உருவாக்குபவர்கள் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பாதுகாப்புத் தரவுகளை அரசாங்கத்துடன் பகிருந்துகொள்ளுமாறு ஒரு நிர்வாக உத்தரவைப் பிறப்பித்தார். அதற்கு அடுத்த மாதம், இங்கிலாந்து செயற்கை நுண்ணறிவு பாதுகாப்புக் கூட்டத்தை நடத்தியது. அதில் பல நாடுகளும் பாதுகாப்பான தொழில்நுட்பம் சார்ந்த பிரகடனத்தில் கையெழுத்திட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது? செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது ஒரு கணினியை கிட்டத்தட்ட ஒரு மனிதனைப் போலவே செயல்படவும், எதிர்வினை ஆற்றவும் வைக்கிறது. மனிதனைப் போலவே ஒரு விஷயத்தை கணித்து, பிரச்னைகளுக்கு தீர்வு காணும் ஆற்றலை கணினிகளுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அளிக்கிறது. கணினியைக் கொண்டு ஒரு பணியை முடிப்பதற்காக அவசியம் பின்பற்றப்பட வேண்டிய முறையான விதிமுறைகளின் தொகுப்பையும் (Algoritms), தரவுகளையும் செயற்கை நுண்ணறிவு பெரிதும் நம்பியுள்ளது. அலெக்சா மற்றும் சிரி போன்ற மெய்நிகர் முறையில் செயல்படும் தொழில்நுட்பங்களின் பின்னணியிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளது. இதனை கொண்டு ஸ்பாட்டிஃபை, யூடியூப் மற்றும் பிபிசி ப்ளேயரில் செயல்பாடுகளை வழிநடத்தலாம். அத்துடன் பயனாளர்களுக்கு எந்த பதிவைகளை அளிக்க வேண்டும் என்பது தொடர்பாக ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களுக்கும் இத்தொழில்நுட்பம் உதவலாம். வாடிக்கையாளர்களின் வாங்கும் பழக்கத்தை பகுப்பாய்வு செய்ய அமேசான் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உபயோகிக்கிறது. அத்துடன் போலி ரிவ்யூகளை களையவும் இந்த நவீன தொழில்நுட்பத்தை அமேசான் நிறுவனம் பயன்படுத்தி வருகிறது. https://www.bbc.com/tamil/articles/c25y40x2xj0o
-
ஸ்ரீலங்கா டெலிகொமில் முதலீடு செய்வது குறித்து முகேஸ் அம்பானி ஆர்வம் - இந்திய ஊடகம்
Published By: RAJEEBAN 16 JAN, 2024 | 04:52 PM இந்திய கோடீஸ்வரர் முகேஸ்அம்பானி ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்வதற்கு ஆர்வத்தினைவெளியிட்டுள்ளார் என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தனது ஜியோ பிளாட்போர்ம் நிறுவனத்தின் ஊடாக தொலைத்தொடர்பு வர்த்தகத்திற்குள் ஆழமாக கால்பதிக்க எண்ணியுள்ள முகேஸ் அம்பானி ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்வதற்கு ஆர்வத்தினைவெளியிட்டுள்ளார் என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய ஊடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது. சமீபத்தைய நிதி நெருக்கடிகாரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்திற்கு புத்துயுர் கொடுப்பதற்காக அதிகாரிகள் பல நிறுவனங்களை தனியார் மயமாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில் நஸ்டத்தில் இயங்கும் ஸ்ரீலங்கா டெலிகொம் தொடர்பில் இலங்கை பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. ஸ்ரீலங்கா டெலிகொமின் பங்குகளை கொள்வனவு செய்வதற்காக நவம்பர் பத்தாம் திகதிக்குள் இலங்கை விண்ணப்பங்களை கோரிய நிலையில் முகேஸ் அம்பானியின் ஜியோ பிளட்போர்ம் இது குறித்து ஆர்வம் வெளியிட்டுள்ளது. ஜனவரி 12ம் திகதி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இலங்கை அரசாங்கம் ஸ்ரீலங்கா டெலிகொமின் பங்குகளை கொள்வனவு செய்வதற்கு ஆர்வம் வெளியிட்டுள்ளவர்களில் ஜியோ பிளாட்போர்மும் உள்ளதாக தெரிவித்துள்ளது. இலங்கையில் முதலீடு செய்வதன் மூலம் ரிலையன்சின் ஜியோ உலகளாவிய தொலைத்தொடர்பு சந்தையில் நுழைந்து ஆதிக்கம் செலுத்தலாம் என நம்புகின்றது . தற்போது ஜியோ இந்திய சந்தையில் முன்னணியில் காணப்படுகின்றது. https://www.virakesari.lk/article/174082
-
தமது வீதியை புனரமைத்து தருமாறு வடமாகாண ஆளுநருக்கு 96 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பியுள்ள மக்கள்
- ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்
ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவின் தலைமையகத்தை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் - நால்வர் பலி Published By: RAJEEBAN 16 JAN, 2024 | 12:49 PM ஈராக்கில் உள்ள இஸ்ரேலின் புலனாய்வு பிரிவின் தலைமையகத்தினை இலக்குவைத்து ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்திலுள்ள இஸ்ரேலின் இரகசியபுலனாய்வு பிரிவின் தலைமையகத்தை இலக்கு வைத்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. எனினும் இதுவரை இதனை உறுதி செய்ய முடியவில்லை என கார்டியன் தெரிவித்துள்ளது. எனினும் குறிப்பிட்ட பகுதியில் வெடிப்பு சத்தங்களை கேட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் துணைதூதரகம் மற்றும் பொதுமக்கள் வாழும் பகுதியிலேயே இந்த வெடிப்பு சத்தங்கள் கேட்டுள்ளன. https://www.virakesari.lk/article/174045- தமது வீதியை புனரமைத்து தருமாறு வடமாகாண ஆளுநருக்கு 96 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பியுள்ள மக்கள்
16 JAN, 2024 | 03:12 PM தமது வீதியை விரைந்து புனரமைத்து தருமாறு தமது ஒரு நாள் வேதனத்தை வடமாகாண ஆளுநருக்கு அனுப்பி மீசாலை மக்கள் வைத்துள்ளனர். யாழ்ப்பாணம் - மீசாலை வடக்கு, இராமாவில் பகுதியில் உள்ள தட்டாங்குளம் பிள்ளையார் வீதியை புனரமைத்து தருமாறு, கோரியே 96 பேர் தமது ஒரு நாள் ஊதியமான 1000 ரூபாய் வீதம் 96 ரூபாய் காசோலையை வடமாகாண ஆளுநர் பி.எம்.எஸ், சார்ள்ஸ்க்கு அனுப்பி வைத்துள்ளனர். காசோலையுடன் கோரிக்கை கடிதம் ஒன்றினையும் அனுப்பி வைத்துள்ளனர். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தென்மராட்சி பிரதேச செயலக பிரிவின் ஜே.320 மற்றும் ஜே.321 ஆகிய கிராம சேவகர் பிரிவுக்கு நடுவே அமைந்துள்ள தட்டாங்குளம் பிள்ளையார் வீதியை மேற்குறித்த இரு கிராம சேவகர் பிரிவில் உள்ள மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இரு கிராம சேவகர் பிரிவு மக்கள் தவிர்த்த அயல் கிராமங்களில் உள்ள சுமார் 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வீரசிங்கம் மத்திய கல்லூரி, வீரசிங்கம் ஆரம்ப பாடசாலை ஆகியவற்றி செல்வதற்கும் இந்த வீதியினையே பயன்படுத்தி வருகின்றனர். பயணிக்கவே முடியாத நிலையில் பொரிய குழிகளுடன் இவ்வீதி காணப்படுகிறது. இவ்வாறான பாரிய குழிகளால் மழை காலங்களில் அதிக விபத்துக்களும் நடைபெறுகின்றன. கடந்த 18 வருடங்களாக புணரமைப்பு செய்யப்படாமல் காணப்படும் இவ்வீதியினை புனரமைத்து தருமாறு சகல தரப்பினர்களிடம் பல கோரிக்கைகள் முன்வைத்துள்ளோம். இருப்பினும் இது வரை எந்தவிதமான சிறு புனரமைப்புக் கூட செய்யப்படாமல் பயன்படுத்தவே முடியாத வீதியாக எமது வீதி மாற்றமடைந்து வருகின்றது. நாளுக்கு நாள் மிக மோசமான வீதியாக மாறி வரும் இவ்வீதியை உடனடியாக புணரமைத்து தர வேண்டும் என்று கோரிக்கையினை முன்வைக்கின்றோம். இவ்வீதி புணரமைப்பிற்காக எமது பகுதியில் வசிக்கும் ஒவ்வொருவரிடமும் இருந்து அவர்களின் ஒரு நாள் வேதனமான (ஆயிரம் ரூபாவை) சேகரித்து வங்கியூடாக சுமார் 96 ஆயிரம் ரூபாவினை காசோலையாக அனுப்பி வைத்துள்ளோம். அப்பணத்தினையும் புணரமைப்பு பணிகளுக்கான செலவு நிதியில் சேர்த்துக் கொள்வதோடு, வீதியின் புனரமைப்பு பணிகளை துரித கதியில் முன்னெடுக்குமாறு மீண்டும் கோரிக்கை முன்வைக்கின்றோம் என்றுள்ளது. அதேவேளை அக் கோரிக்கை கடிதத்தின் பிரதிகள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்த்தன, யாழ்.மாவட்ட செயலர், சாவகச்சேரி பிரதேச செயலர், கொடிகாமம் பிரதேச சபை செயலாளர் உள்ளிட்டோருக்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/174057- நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்த ஆசிய இணைய அமைப்புகள் கரிசனை - டிரான் அலஸ் தெரிவிப்பது என்ன?
Published By: RAJEEBAN 16 JAN, 2024 | 02:13 PM உலகின் பிரபல தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளடக்கிய ஆசிய இணைய கூட்டமைப்பு விடுத்துள்ள வேண்டுகோள்களை ஆராய்ந்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். இணைய கூட்டமைப்பு முன்வைத்துள்ள வேண்டுகோள்களை ஆராய்ந்த பின்னர் உள்வாங்க கூடியளவிற்கு அவற்றை உள்வாங்க தயார் என அவர் தெரிவித்துள்ளார். முதலில் அவர்களின் பரிந்துரைகளில் எவற்றை உள்வாங்க முடியும் என பார்க்கவேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் நிகழ்நிலை பாதுகாப்பு சட்ட மூலத்தை நிறைவேற்றுவதற்கு முன்னர் விரிவான திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் என கூகுள், மெட்டா, அமேசன் உட்பட பாரிய தொழில்நுட்ப நிறுவனங்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஆசிய இணைய கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசிற்கு எழுதியுள்ள கடிதத்தில் ஆசிய இணைய கூட்டமைப்பு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. உத்தேச சட்டமூலம் அதன் வடிவத்தில் தற்போது பல ஆபத்துக்களை கொண்டுள்ளது என ஆசிய இணைய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நிகழ்நிலை பாதுகாப்பு சட்ட மூலம் "தடை செய்யப்பட்ட அறிக்கைகள்" என்பதை பரந்துபட்ட அளவில் வரையறை செய்கின்றது. இணையவழி கருத்துப் பரிமாற்றத்தை சட்ட விரோதமாக்குகின்றது என ஆசிய இணைய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தணிக்கை மற்றும் கருத்து வேறுபாடுகளை அடக்குதல் குறித்த கரிசனைகள் எழுந்துள்ளன எனவும் தெரிவித்துள்ளது. உத்தேச சட்டமூலத்தில் காணப்படும் குற்றங்கள் என தெரிவிக்கப்படும் விடயங்கள் பல ஏற்கனவே சட்டத்தில் உள்ளன. இதன் காரணமாக சட்ட நிச்சயமற்ற தன்மை தேவைக்கு அதிகமான தன்மை காணப்படுகின்றது எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. தவறான அல்லது தீங்கு ஏற்படுத்தும் இணையவழி உள்ளடக்கங்களை குற்றமாக்குவது என்பது கருத்துச் சுதந்திரத்தின் மீதான கடுமையான மற்றும் தேவையற்ற தடையாகும் எனவும் என ஆசிய இணைய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நிகழ்நிலை பாதுகாப்பு ஆணைக்குழு என்ற கட்டமைப்பு குறித்து புதிய சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள இந்த அமைப்பு இது அரசியல் தலையீடுகள் அதிகார துஸ்பிரயோகம் குறித்த அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் வளர்ச்சியடைந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு இதனால் பாதிப்பு ஏற்படலாம் என தெரிவித்துள்ள பாரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் கட்டுப்பாட்டு சட்டங்கள் புத்தாக்கத்தையும் முதலீட்டையும் பாதிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/174056- வைத்தியசாலை சுகாதாரதுறை ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு; நோயாளர்கள் பெரும் அவதி
Published By: DIGITAL DESK 3 16 JAN, 2024 | 02:38 PM நாடளாவிய ரீதியில் சுகாதார ஊழியர்கள் இணைந்த பல்வேறு தொழிற்சங்கங்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமையால் நோயாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மருத்துவ சேவைகளுக்கு வழங்கப்படும் 35,000 ரூபாய் கொடுப்பனவை ஏனைய சேவைகளுக்கும் வழங்குமாறு கோரி, நாடளாவிய ரீதியில் இருக்கும் வைத்தியசாலையில் பணியாற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி சுகாதார முகாமைத்துவ உதவியாளர்கள், வைத்தியசாலை மேற்பார்வையாளர்கள், தொலைபேசி இயக்குனர்கள், பரிசாரகர்கள், சுகாதாரப் பணி உதவியாளர்கள் ஆகிய அனைத்து சுகாதார ஊழியர்கள் உட்பட இணைந்த சுகாதார தொழிற்சங்கங்களால் சுகயீன விடுமுறை போராட்டம் இன்று (16) முன்னெடுக்கப்படுவதாக சுகாதார தொழிற்சங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு ஆதரவு தெரிவித்து இன்றைய தினம் காலை 6.30 மணி மணியிலிருந்து நாளை புதன்கிழமை (17) காலை 6.30 மணி வரை வேலை நிறுத்த போராட்டம் இடம்பெறவுள்ளது. வவுனியா வவுனியா வைத்தியசாலை சுகாதார ஊழியர்களும் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். இவ் பணிபகிஸ்கரிப்பு காரணமாக வவுனியா வைத்தியசாலை பல ஸ்தம்பிதம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. முல்லைத்தீவு முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையிலும் பணிப்பகிஸ்கரிப்பும் , கவனயீர்ப்பு போராட்டமும் இன்று இடம்பெற்றிருந்தது. குறிப்பாக பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்பட நிலையில் தமக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கபடவில்லை. எனவே அரசாங்கத்தின் அநீதியான பொருளாதார கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார ஊழியர்கள் தெரிவித்தனர். புத்தளம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் துனை மருத்துவர்கள் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி இன்று காலை முதல் பணிபகிஷகரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிளினிக் நோயாளர் பிரிவு, வெளிநோயாளர் பிரிவு ஆகியன மூடிய நிலையில் காட்சியளிக்கின்றன. இதனால் நோயாளர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகிய நிலையில் திரும்பிச் செல்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. மன்னார் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சேவையை தவிர ஏனைய அனைத்து சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. இதன் காரணமாக தூர இடங்களில் இருந்து வருகை தந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர். மேலும், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள் காலை 10 மணி முதல் 11 மணி வரை மன்னார் மாவட்ட வைத்தியசாலை முன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது. நுவரெலியா நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நுழைவாயில் முன்பாக செவ்வாய்க்கிழமை (16) மதியம் அரசுக்கு எதிரான வாசகங்கள் பொறித்த பதாகைகளை ஏந்தி, கோஷங்கள் எழுப்பி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன் காரணமாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வெளி நோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் என்பன பாதிக்கப்பட்டன. வைத்தியசாலையில் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதற்காக சென்றிருந்த நோயாளர்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டதுடன், தமது எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர். அதேவேளை நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சை, மகப்பேறு என்பன வழமை போல் இயங்குகின்றன. இதன் காரணமாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் கடமைகளை ஈடுசெய்ய இராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/174055- யாழ். இளவாலையில் கைக்குண்டுடன் சந்தேகநபர் கைது !
யாழில் கைக்குண்டுடன் இளைஞன் கைது; கைக்குண்டை வழங்கிய இராணுவ சிப்பாய் ? 16 JAN, 2024 | 01:46 PM யாழ்ப்பாணம் - இளவாலை பகுதியில் கடந்த 14 ஆம் திகதி கைக்குண்டுடன் கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு இராணுவ சிப்பாய் ஒருவரே கைக்குண்டை வழங்கியதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த போது, பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையமை தெரிய வந்ததையடுத்து அவர் வைத்திருந்த கைக்குண்டை இராணுவ சிப்பாய் ஒருவரே தனக்கு வழங்கியதாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவிதுள்ளார். அதுமாத்திரமின்றி கைது செய்யப்பட்ட இளைஞனால் திருடப்பட்ட பொருட்களை வாங்கிய குற்றச்சாட்டில் நேற்று திங்கட்கிழமை (15) சாவகச்சேரி பகுதியை சேர்ந்த மற்றுமொரு இளைஞனை பொலிஸார் கைது செய்தனர். அத்துடன் திருடப்பட்ட இலத்திரனியல் பொருட்களை பொலிஸார் கைப்பற்றியதுடன் இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/174043 - ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்
Important Information
By using this site, you agree to our Terms of Use.