Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உத்தம வில்லனும், கமலஹாசனும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உத்தம வில்லனும், கமலஹாசனும்

வ.ஸ்ரீநிவாசன்

Uttama-Villain-Official-Trailer-kamal-ha

திரைப்படம் எடுப்பதும் ஒரு வித்தை. இத்தனை வருடங்களாக இதில் இருக்கிறேன் என்பதாலோ, இத்தனை படங்கள் எடுத்திருக்கிறேன் / நடித்திருக்கிறேன் என்பதாலோ அது கை வந்து விடாது.

சீதா தமிழில் சீதையாவதைப் போல் வித்யா, வித்யையாகி உச்சரிப்பில், பழக்கத்தில் வித்தையாகிறது. வித்யா என்றால் கல்வி, கற்றல். கல்விக் கடவுள் ‘கலை’மகள். ஆனால் ‘வித்தை’ என்னும் தமிழ்ச் சொல் பல பொருட்களிலும் வருகிறது. செப்பிடு வித்தை, கண்கட்டு வித்தை. ‘வித்தை காட்டுவது’. சினிமாவைக் கூட இப்படிச் சொல்லலாம். கண்கட்டு வித்தையால் வசனகர்த்தாக்களையும், நடிகர்களையும் முதலமைச்சர்களாக்க முடியும். தமிழில் வித்தை என்பதற்கு அதன் சம்ஸ்க்ருத பொருளையும் தாண்டி, திறன், தந்திரம், ஜாலம் என்றெல்லாம் அர்த்தங்கள் உண்டு.

கற்க வேண்டிய வித்தைகளிலேயே தலையாயது எது? சகல ஜீவராசிகளாலும் வேண்டப்படும் வித்தை எது?

‘சாகா வித்தை.’ இந்தப் படம் அதைப் பற்றியது.

இந்தப் படம் சாவைப் பற்றியது. இது சாவை ஆராய்கிறது; கூர்ந்து நோக்குகிறது. வாழ்வின், சாவின் மையப் புள்ளியை நோக்கி உட்புக முனைகிறது.

மனோரஞ்சன் என்னும், வயதாகிக் கொண்டிருக்கும், சினிமா சூப்பர் ஸ்டார் சற்று நாட்களில் இறக்கப் போகிறோம் என்று திடீரென்று அறிந்ததும் எஞ்சியுள்ள சின்னாட்களை என்ன செய்கிறார் என்பதுதான் படம். தொழில் ரீதியாக வெகு நாட்களாகப் பிரிந்திருக்கும் தன் குருநாதரோடு சேர்ந்து ஒரு படம்பண்ணுகிறார். அதைப் பார்த்து விட்டு வரும் ரசிகர்கள் சிரித்துக் கொண்டே வர வேண்டும் என்று அதைக் ‘காமெடிப் படமா’கச் செய்கிறார். சில நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட காலகட்டப் படம். “உத்தம வில்லன்”. அந்தப் படத்தின் நாயகன், உத்தமன். அவனும் ஒரு நடிகன், கூத்துக் கலைஞன். சந்தர்ப்பவசத்தால் சாகா வரம் பெற்றவன் என்று நம்பப் படுபவன்.

நாம் பார்க்கும் படமும், அந்தப் படத்தில் எடுக்கப்பட்டுக் கொண்டே காட்டப்படும் படமும் என்று இரண்டு படங்கள். இரண்டும் சாவு பற்றி ஆராயும், ஊடுருவிப்பார்க்கும் அது உண்மையில் என்ன என்பதை அறியப் பயணிக்கும் படங்கள். ஒன்று, மனோரஞ்சனின் நிஜமான துக்கமும், தீவிரமும் நிரம்பிய கண்ணெதிர் வாழ்க்கை. இன்னொன்று ஃபான்டஸியான, ஒரு ஃபேரி டேல் போல் இருக்கும் சந்தோஷமான எப்போதும் முடிவிலே இன்பம் என்னும் சுப முடிவு திரைப்பட வாழ்க்கை.

மனோரஞ்சன் வாழ்க்கை தலைவலியாய் இருக்கிறது. அந்தத் தலைவலிதான் சாவின் அழைப்பு மணி. சாவது நிச்சயம். அவனுக்கு அதிருஷ்ட வசமாக வாழ்வின் உயர்வு தாழ்வுகளை, பாவ புண்ணியங்களை, உத்தம, வில்லதனச் செயல்களை சரி செய்ய, ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அதை அவன் செய்கிறான். பிரிந்த குருவோடு ஒரு படம் செய்வதிலிருந்து, மறைந்த காதலிக்குப் பிறந்த தன் குழந்தையோடு இணைவதிலிருந்து, இருக்கும் மனைவியை அணைப்பதிலிருந்து, இளம் காதலியை ஏற்பதிலிருந்து, மகனோடு இணக்கமாவதிலிருந்து, மாமனாரோடு சகஜமாவதிலிருந்து எல்லாமும் செய்கிறான்.

தமிழில் பல்வேறு வகையான படங்கள் வந்துள்ளன. அவற்றில் ஆன்மீகப் போராட்டம் (Spiritual struggle) பற்றிய, அக மாசை அகற்றுவது பற்றிய படங்கள் மிக மிகக் கம்மி. ‘தேவதாஸ்’ சஞ்சலப் பேய் வசப்பட்டு காதலி(பார்வதி)யைப் பறிகொடுத்த ஒருவனின் மீட்சிக்கான தொல்வியுறும் முயற்சி பற்றியது; ‘யாருக்காக அழுதான்’ குற்றம் செய்யாதவன், செய்தவனுக்காகவும் சிந்தும் கண்ணீர் பற்றியது; ‘என்னதான் முடிவு’ குற்றவாளி, வாழ்க்கையின் மூலம் அடையும் தண்டனை மற்றும் பரிகாரம் பற்றியது; ‘பூவே பூச்சூடவா’ கல் மனதையும், அது கக்கும் விஷத்தையும் கரைக்கும் அன்பு பற்றியது. அவ்வரிசையில் ‘உத்தம வில்லன்’, எல்லொருக்குமே, அவர்கள் இப்போது இருக்கும் காட்சியின் அடுத்த காட்சியாக தோளுக்குப் பின்னால் மறைந்து நிற்கும், ஒரு முறை உண்மையாகவே முன்னால் வந்துவிடும் புலி போன்ற மரணம் மற்றும் அதன் வெகு அருகாமை நேரடிப் பார்வையில் ஒருவன் செய்யும் பாவ நிவிர்த்தி பற்றியது.

சாவு பற்றி ஜனரஞ்சக சினிமாக்களில் முன்பும் படங்கள் வந்திருக்கிறன. மேலோட்டமாக, சாவை ரொமான்டிக்காக அணுகும் நீர்க்குமிழி, நீலவானம், ஹ்ருஷிகேஷ் முகர்ஜியின் ஆனந்த் போன்ற படங்கள்;

“Often by a queer process of reasoning, movement was equated with action and action with melodrama” என்பார் சத்யஜித் ராய் (Our films their films) அதை நிரூபணமாக்கும் கண்ணீர் பம்ப் காட்சிகள் கொண்ட யதார்த்தத்துடன் அறவே சம்பந்தமில்லாத கணக்கிலடங்கா மெலோ டிராமாக்கள் வெளிவந்து அவற்றில் பல மாபெரும் வெற்றியும் பலரின் மனதில் நீங்காத இடமும் பெற்றுள்ளன.

உலக அளவில் குரோசாவாவின் ‘இகிரு’ , பெர்க்மனின் ‘செவன்த் ஸீல்’ முதலியவை சாவின் சில நிஜப் பரிமாணங்களைக் காட்டியவை. செவெந்த் ஸீலில் சாவும், மன்னனும் சதுரங்கம் ஆடும் காட்சிகள் மிகப் பிரபலமானவை. இகிரு வில் இன்னும் சில நாட்களில் சாக இருக்கும் ஒரு மாநகராட்சி அதிகாரி தன் வாழ்வை பொருளுள்ளதாக, முழுமையாக்க செய்யும் செய்லகளைக் காட்டும் அற்புதமான படம்.

முதலில் குறிப்பிட்ட ரொமான்டிக் மற்றும் டியர் ஜெர்கர்ஸ் ஆன நடுவாந்திரப் படங்கள் போலல்லாது, ஒரு புதிய அணுகு முறையில் உத்தம வில்லன் எடுக்கப் பட்டுள்ளது, அதன் பல குறை நிறைகளுடன்.

‘ராஜ பார்வை’ கமல்ஹாசனை நிமிர்ந்து பார்க்க வைத்தது. அதில் சில காட்சிகள் வழக்கமான தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் மாறாக இருந்தன; இன்னமும் நினைவில் இருக்கின்றன.

சிறுவன் மேலே பார் (Bar) கம்பியில் தொங்கிக் கொண்டிருக்கும் போது அதில் விளையாட ஏற்றிவிட்ட தகப்பனார் மாரடைப்பு வந்து சாவார். அந்தச் சிறுவன் கை நழுவி அடியற்ற பள்ளத்துக்குள் கீழே விழுந்து கொண்டே இருப்பான்.

‘அந்தி மழை’ப் பாடலைக் காட்சிப் படுத்திய விதம், ‘ரிடிக்யுலஸ்’,என்று சொல்லிக் கொண்டே எப்போதும் எரிச்சலில் இருக்கும் மாதவியின் தந்தை, சித்தியின் கூச்சமுற வைக்கும் பொய்ப்பாசம், அற்புதமான தாத்தா-பேத்தி உறவு – இவை போல், வேறு எந்த கமலஹாசன் படத்திலும் பாசாங்கு இல்லாத, திணிக்கப்படாத, செல்ஃப் கான்ஷியசாக இல்லாத, இயல்பாகவே எழுந்த காட்சிகள் எனக்குக் கிடைத்ததில்லை.

07slide3.jpg

முக்கியமாகப் பலரும் போற்றும் ‘நாயகன்’ என்னும் ஆழமேயில்லாத பாசாங்குப் படம், அதை விட நல்லதே என்றாலும் திசை தெரியாத, வன்முறையைப் பெரிதும் நம்பி எடுக்கப்பட்ட, மிகச் சிறந்த கடவுள் எதிர்ப்புப் படமாக வந்திருக்க வேண்டிய ‘மகாநதி’.

‘குருதிப் புனல்’ மற்றும் ‘உன்னைப் போல் ஒருவன்’ இரண்டும் ஹிந்திப் படங்களின் தமிழ் ஆக்கங்கள். ‘த்ரோகாலி’ல் இருக்கும் ஆன்மீகப் போராட்டத்தை கமல்ஹாசன் என்னும் நட்சத்திர பிம்பத்தால் முழுதாய் ஸ்வீகரிக்க முடியவில்லை. அதனால்தான் துரோகி, (ஒருவேளை ‘துரோகி கமலஹாசன்’ என்னும் பெயர் வந்து விட வாய்ப்பு இருந்ததால்) என்னும் சரியான பெயர் குருதிப் புனலாய் மாற்றப் பட்டு வந்தது. உன்னைப் போல் ஒருவனில் அசலிலிருந்து மாற்றப்பட்ட விஷயங்கள் பிழை மிகுந்து, படத்தின் தீவிரத் தன்மையைப் பெரிதும் குலைத்து இருந்தன. ‘எ வெட்னஸ்டே’யில் ஷாவின் நடிப்பை வேறு முதலிலேயே பார்த்து விட்டதால் நிலைமை அவருக்கு சாதகமாய்ப் போய் விட்டது.

‘தேவர்மகன்’ வணிக வெற்றியை மட்டுமே நோக்கி எடுக்கப்பட்ட நல்ல படமே போன்ற நடுவாந்திரப் படம். ‘அன்பே சிவம்’ அதை விட அபாயமானது. நல்ல படம் என்று சொல்லி, நல்ல படம் என்று நம்பப் படுகிற மோசமான படம் என்பதால். ஃப்ளாஷ் பேக் ஆரம்பிக்கும் வரையிலான முதல் பகுதி நன்றாகவே இருக்க அப்புறம் முற்போக்குவாதி கமல் வந்து விடுவார். படம் செயற்கையான, திணிக்கப்பட்ட இடது சாரி சிந்தனைகள், நம்ப முடியா சம்பவங்கள், மனிதச் சித்தரிப்புகள், பாசாங்கான நெகிழ்சித் தருணங்கள் என்று எதிர் பார்க்கிற திசையில் கண்றாவியாகப் பயணிக்கும், மெனக்கெட்டு கட்டப் பட்ட செத்த படமாகி விடும். திருடன் யூகி சேதுவிடம், “சம்ஸ்க்ருதம் தெரியுமா” என்று மரியாதை கலந்த ஆச்சர்யத்தோடு எந்த அன்பரசு கேட்பாராம் என்று கமலைச் சந்தித்தால் கேட்க வேண்டும்.

‘ஹே ராமி’ல் ராணி முகர்ஜி வந்து விட்டு இறந்ததும் நடக்கும் நிகழ்வுகளும், நிலையும் சுமார் 20 நிமிடங்களுக்கு ஆச்சர்யமாகத் தீவிரமாக இருக்கும். அப்புறம் கமல், அவரது கொள்கைகள், வலிய புகுத்தப்பட்ட உடன் நிகழ்வுகள், செயற்கைத்தனங்கள் எல்லாம் படத்தை ஆக்ரமிக்கும். குணா, ஆளவந்தான் Disasters. நம்மவரில் நாகேஷ் மட்டும்தான்.

நகைச்சுவைப் படங்கள் பலதிலும் மிகச் சிறப்பாக நடித்திருக்கும் கமலஹாசன், ஒப்பனை மற்றும் தோற்ற மாறுபாடுகளின் உதவியில்லாமல் சாமான்ய மனிதராகவே வந்து நன்றாக நடித்திருந்தது மீண்டும் கோகிலா, மூன்றாம் பிறை போன்ற படங்களில். மூன்றாம் பிறையிலும் கடைசி மெலோடிராமா காட்சி படத்தின் பொதுவான லயத்தோடு பொருந்தாமல் துருத்திக் கொண்டு நிற்கும்.

இவற்றையெல்லாம் போலலல்லாது உத்தம வில்லன் படத்தில்தான் இயல்பான தீவிரமான காட்சிகள் மற்றும் நடிப்பு, குறிப்பாக கமலஹாசனின் நடிப்பு யதார்தமாக மலர்ந்துள்ளன.

அப்போதுதான் அக்கா தம்பி என்று தெரிந்து கொண்ட கமலஹாசனின் மகளும், மகனும் அணைத்துக் கொள்ளும் உணர்ச்சி மிகு தருணத்தில் அங்கு உள்ளே வரும் அந்தப் பையனின் கேர்ல் ஃப்ரெண்ட் அதைத் தப்பாய் எடுத்துக் கொள்ள, விவரம் சொல்லி அவளிடம் விளக்க முற்படும் மகனுக்கு ஓர் உதவியும் செய்யாமல் அவனுடைய தர்ம சங்கடத்தைப் பார்த்து தந்தை கமலஹாசன் சிரிப்பை அடக்க முடியாமல், கையைத் தட்டிக் கொண்டே அறைக்கு வெளியே செல்வதும், உள்ளே நுழையும் ‘என்ன” என்று கேட்கும் ஜெயராமிடம் “போய்ப் பாருங்கள்” என்று சொல்லி சிரிப்பை நிறுத்தாமலே போவதும்.. .. .. இது போன்ற காட்சியைக் கடைசியாக தமிழ்ப் படத்தில் எப்போது பார்த்தோம் என்பதே நினைவில் இல்லை.

தன் மகளும் தன் மகனும் ஒன்று சேர்ந்து விட்டார்கள். அப்போது நியாயமான, ஆனால் அந்தத் தருணத்தில் அபத்தமான, மன உடைவோடு பையனின் சிநேகிதி. இன்னும் சில நொடிகளில் அவள் சந்தேகம் நிவர்த்தியாகப் போகிறது. அதை சரி செய்து கொண்டிருக்க வேண்டிய அவகாசமோ, அவசியமோ தந்தைக்கு இல்லை. தன் மகளும் மகனும் சேர்ந்து விட்டார்கள். மனம் ஒன்றி விட்டார்கள். எந்த சிறுபிள்ளைத்தனமான உராய்வுகளும், வஞ்சிக்கப்பட்டு விட்ட உணர்வுகளும் இல்லை. தன் வாழ்வின் கடைசித் தருணங்கள்தாம். இருந்தாலும் என்ன? என் மகளும் மகனும் சேர்ந்து விட்டார்கள். அந்த சிநேகிதி, இன்னொரு சிறுமி, அவள் சந்தேகம், நியாயமான சந்தேகம் இதோ நிவர்த்தியாகப் போகிறது. இடையில் விளங்கி அவள் சந்தேகத்தை முடிக்கும் வரை கொஞ்ச நேரம் திண்டாடப் போகும் தன் மகன். ஆம் வாழ்வு முடியப் போகும் நேரம். அதுவே துயரம், அதுவே இந்த ஆனந்தம் நிகழக் காரணமும்.

அந்தக் குழந்தைகளும் என்னமாய் நடித்திருக்கிறார்கள். கமலஹாசனின் 50 + வருட அனுபவத்தில் அவர் சீரியஸாக நடித்ததில் இது முதன்மையான காட்சி.

தன் வாழ்வு சாச்வதம் என்கிற அனைவருக்கும் பொதுவான மயக்கத்தில், புகழின் உச்சியில், போதைகளில் வாழும் மனோரஞ்சனின் அந்த ‘ப்ளாக் மெயிலரை’ ஒழிக்கச் சொல்லும் அகம்பாவம், நிலையாமை என்னும் நிதர்சனத்தின் முன் நீங்கி ஜெயராமுடன் முதல் தரம் உட்கார்ந்து உரையாடும் காட்சி. அந்த சதை தொங்கும் கிழ முகத்தின் பரந்த கண்களில்தான் எத்தனை நினைவுகளின் வாசனை சுமக்கும் உணர்ச்சிகள். இந்த மாதிரி க்ளோசப்பில் தைரியமாக நடிக்க இன்று தமிழில் யார் இருக்கிறார்கள்? எவ்வளவு அளவான, தீவிரமான, மிகை எட்டியே பார்க்காத, சப்ட்யூட் என்ற பெயரில் சறுக்கி விழாத கச்சிதமான, அடர்த்தியான, நுட்பமான நடிப்பு. ஜெயராமும் இணையாக நடித்திருக்கிறார்.

கையில் பந்துடன் அப்பாவும், பிள்ளையும் வாழ்க்கையின் உக்கிர கணத்தை நெருங்குகிறார்கள் என்கையில் ஐயோ பாலச்சந்தர் போல நல்ல தருணங்களை ‘டைரக்டோரியல் டச்’ என்று கொலை செய்து விடப் போகிறார்களே என்று நினைத்து பயந்தேன். நல்ல வேளையாகக் க்ளீஷேவாக ஆரம்பிக்கும் கட்சி தன் க்ளீஷே தனத்தைக் களைந்து இயல்பாகி அருமையாக மலர்ந்து விட்டது. மனோகராக வரும் அந்தப் பையன் யார்? நடிக்கவே இல்லை. நம் பக்கத்துத் தெரு பணக்காரப் பையன் போல் இருக்கிறான்.

மரணம் அணைத்துக் கொள்ள அருகில் நிற்கிறது. பகுத்தறிவு வக்கிரங்களும், மரபு, சரி தப்பு போன்ற பாரச் சுமைகளும் பனி போல் மறைந்து பகா அறிவும், அச்சமற்ற பேரன்பும் நிரம்பி ஒரு காட்சியில் மகன், மகளை அணைத்துக் கொள்ளும் மனோரஞ்சனிடம் மனைவியும் வருவார். அவரையும் அவரால் அணைத்துக் கொள்ள முடிகிறது; அணைத்துக் கொள்வார். அனைத்தையும் அரவணைத்துக் கொள்ளும் மன நிலைக்குப் போயிருப்பார். இன்னும் அர்பணா, சொக்கு, மார்க்க தரிசி, கார் டிரைவர், ஜேகப், மாமனார் எல்லோருக்கும் அவர் அரவணைப்பில் இடம் இருக்கிறது. அருகில் வந்திருந்தால் அவர்களையும், நம்மையுமே கூட அணைத்துக் கொண்டிருப்பார்.

uttama-villain-07.png

இறுதி ஷூட்டிங் முடிந்ததும் ‘அவர்’ என்று சொல்வதற்குப் பதிலாக ‘அது’ என்று சொல்லி விட்டேன், மீண்டும் நடிக்கவா என்று புது மாணவனைப் போல் குற்ற உணர்வுடன், மரியாதை மிகக் கேட்கும் கமலஹாசன், பாலச் சந்தர் ‘வேண்டாம் சரி செய்து கொள்ளலாம்’ என்கையில் மீண்டும் பரவாயில்லையா என்று அதற்கு ஒப்புக் கொள்ளத் தயங்கி தான் செய்த தவறை மீண்டும் சொல்ல முற்படுகையில் வாய் லேசாகாக் குழறும். நாம் முதலில் அதைக் கவனிக்க மாட்டோம். ஒரு புறத்துக் கன்னம் மற்றும் தாடையில் ஒரு மிக நுண்ணிய அசைவுடன் அந்தக் குழறலை அவரிடம் மீண்டும் கவனிக்கும் போது மனம் துணுக்குறும். ஐயோ என்ன ஆச்சு என்று. அந்த வசன உச்சரிப்பையும், அந்த சின்னஞ்சிறு குழறலையும் அதி அற்புதமான இயல்புத் தன்மையோடு கொண்டு வந்திருப்பார்.

ஊர்வசி மார்வலி வந்து படுக்கையில் கணவனிடமும் அருகில் உள்ள ஆண்ட்ரியாவிடமும் பேசும் காட்சி. அவரது க்ளோஸ் அப்கள்.

கடைசிக் காட்சியில் சற்றுத் தொலைவில் டாக்டர் ஆண்ட்ரியா எல்லாம் முடிந்து விட்டது என்பதைப் போல நிற்பதைப் பார்த்து கமலஹாசனின் மகளும், மகனும் அவரிடம் செல்ல அவர் அவர்கள் இருவரையும் அணைத்துக் கொள்வார். மனோரஞ்சனின் இறப்பைவேறு எந்த விதத்திலும் காட்டி கோரமாக்காமல் செய்திருக்கிறார்கள்.

பாலச்சந்தர் நெடுநாள் தொழில் விரோதி விஸ்வநாத்திடம் சாரி சொல்லும் காட்சி. மனோவின் மாமியாரின் வெகு யதார்த்தமான நடமாட்டங்கள்.

கார் காட்சி இன்னொரு அற்புதமான காட்சியாக இருந்திருக்க வேண்டிய ஒன்று. நினைத்த அளவு நன்றாக வர வில்லை என்று தோன்றுகிறது. ஆண்ட்ரியாவை அவர் தன் மடியில் கிடத்திக் கொண்டிருந்தால் ஒரு வேளை இன்னும் பொருத்தமாக இருந்திருக்கலாம்.

மனோரஞ்சனின் காதலி யாமினிக்குப் பிறந்த, ஆனால் பட்டம் பெறும் வயது வரை, யாமினி இறக்கும் வரை அப்படி ஒரு மகள் இருப்பதே மனோரஞ்சனுக்குத் தெரியாத, மகள் மனோன்மணியாக வரும் பார்வதி மேனன் என்னமாய் நடித்திருக்கிறார். ஓர் இளம் நடிகை இவ்வளவு கூர்மையாக, இவ்வளவு பவர்ஃபுல்லாக நடித்திருப்பதும் தமிழ் சினிமாவில் வெகு காலத்துக்குப் பின் நிகழ்ந்துள்ளது. இத்தனைக்கும் அவர் வருவது வெகு சில காட்சிகளில்தான், பேசுவது இரண்டே காட்சிகளில்தான். அந்த இளமைக்கே உரித்த நேர்மை, சுய மரியாதை. அடடா !

எம். எஸ். பாஸ்கர் நன்றாக நடித்திருப்பதை எல்லோரும் சொல்லி விட்டார்கள்; அப்படியும் அது நன்றாக இருந்தது. இவரைப் போல் அருமையான நடிகர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். பயன்படுத்தும் கமலஹாசனுக்குப் பாராட்டு.

கே. பாலசந்தர் பேசுவது – “படவா ராஸ்கல், லாங் லாங் அகோ, ஸோ லாங் அகோ” போன்றவை நாகேஷ் பேசுவது மாதிரியே இருந்து நாகேஷ் இந்தப் படத்தில் இல்லையே என்கிற குறையைத் தீர்த்து விட்டது. இவர் சொல்லிக் கொடுத்துதான் அவர் பேசினாரா அல்லது அவர் தாக்கத்தால் இவர் பேசுகிறாரா என்று தெரியவில்லை. அவர் கே. விஸ்வநாத்தை ‘ராவ்ஜி’ என்று அழைப்பது நாகேஷ் நினைப்பால்தானோ என்னவோ? கே. பி. யின் நடிப்பை அவர் படங்களில் பல நடிக, நடிகைகளிடம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். சிவாஜியைப் போல் தோற்றுப் போன பந்தயக்காரர். 83 வயதில் நன்றாகவே செய்திருக்கிறார்.

ஆனால் பாலச்சந்தரை விட ஓரளவு நன்றாக படம் எடுத்திருக்கும் கே. விஸ்வநாத் அவரை விட நன்றாக நடித்தும் விட்டார். கே. பாலச்சந்தருக்கு மிக உயர்வான வேடம். அவராகவே (ஆனால் வேறு பெயரில்) வருகிறார், ஓர் உத்தமராக. ஆனால் கே. விஸ்வநாத்துக்கு வில்லன் வேடம். அதைச் செய்ய மிகவும் துணிவு வேண்டும். அதற்காகவும், இத்தனை இயல்பாக நடித்திருப்பற்காகவும் அவரைப் பாராட்ட வேண்டும்.

அன்பே சிவத்தில் வரும் ஃப்ளாஷ் பேக் முதலில் வரும் படத்தின் தரத்தைக் குலைத்து விடும். உத்தம வில்லனில் படத்துக்குள் வரும் படமான உத்தமனின் உத்தம வில்லன் வெளியில் வரும் மனோரஞ்சனின் உத்தம வில்லன் படத்துக்கு சமானமான ஆழத்தோடு, நுட்பத்தோடு, முற்றிலும் கான்ட்ராஸ்டான வெளிப்பாட்டில், கற்பனை செய்யப் பட்டு இருக்கிறது. ஆனால் எடுத்த விதத்தில் முதல் 10 நிமிடங்கள் செட்டில் ஆகவேயில்லை. வெகு சீரியசாகப் போய்க் கொண்டிருந்த படம் தொய்ந்து விடுகிறது. ஆனால் அதன் பின் முற்றிலும் புதிய நகைச்சுவைப் பாணியில் (க்ரேஸி மோஹன் நினைவு வராத வண்ணம்) போனாலும் அதிலுள்ள சில விஷயங்கள் தமிழ்ப் பார்வையாளர்களை அந்நியப் படுத்துகிறது.

‘தெய்யம்’ என்கிற பாணியில் எடுத்தது மீசைக்கு பதிலாக வண்ணக் கோடுகளில் நரசிம்மமே நரபூனை ஆகி விடுகிறார். இது ஒரு மாதிரி சீப் ப்ரொடக்ஷன் என்கிற இம்ப்ரெஷனைத் தருகின்றது.

தைரியமாக அமெடியஸ் படத்தில் வரும் ஆபரா காட்சிகளைப் போலவோ, நமக்குப் பரிச்சயமான தெருக் கூத்துப் பாணியில் முற்றிலுமோ எடுத்திருக்கலாம்.

அதே போல் இசை. இந்த பின்னணிக்கு, இம்மாதிரி நாட்டார் கலைக்கு ஒரு கே.வி. மகாதேவன், எம். எஸ். விஸ்வநாதன் சரியாக இருந்திருப்பார்கள். முன்னவர் இல்லை. பின்னவர் இசையமத்துக் கொண்டில்லை. அதுதான் இளைய ராஜா இருக்கிறாரே. அவரை வைத்திருந்தால் வேண்டிய மட்டும் செய்திருப்பாரே. கிப்ரான் மோசமில்லை. ஆனால் உத்தமன் கதையின் நகைச்சுவை இசையில் வெளியாக வில்லை. இது என் இசை நுணுக்கங்கள் அறியா பாமரக் கருத்து

ராஜேஷ் கன்னா, நாகேஷ், சிவாஜி போன்றவர்களை ஆரம்ப கால கமலஹசன் நடிப்பில் காணலாம். இன்னொரு மாபெரும் நடிகனான வடிவேலுவையும் உத்தமனில் காண முடிந்தது. நாசர் இருப்பது வேறு 23ம் புலிகேசியை நினைவு படுத்துகிறது.

நாசருக்குப் பதிலாக பிரகாஷ் ராஜ் போன்றவர்களைப் போட்டிருந்தால் இது ஒருவேளை தவிர்க்கப் பட்டிருக்குமோ என்னவோ?

ஒப்பனை, குடுமி, பஞ்சகச்சம், மேக்கப் எல்லாம் தெலுங்கு, கன்னட சாயல். ரேலங்கி காலத்திலிருந்து பிரம்மானந்தம் வரை நினைவுக்கு வருகிறார்கள்.

காட்சிகளும் ப்ரும்மாண்டமாகத் தோன்றவில்லை. கூத்து காட்சிகளைத்தவிர இதர காட்சிகளும் மேடை நாடகம்போலவே உள்ளன. கே. பி. நாடகத்துக்கும், சினிமாவுக்கும் வித்தியாசம் இல்லாமல் முதலில் எல்லாம் படம் எடுத்தாரே, அந்த Terrible habit of theatre ரை நினைவூட்டவோ?

திருவிளையாடல் போன்ற சாதாரண வணிகப் படத்தில் கூட அந்தக் காலத்திலேயே அவ்வளவாக தொழில் நுட்பத்துக்காக பெயர் பெற்றிராத ஏபிஎன் ஒரு பிரும்மாண்டத்தைக் கொண்டு வந்திருப்பார். ஸூம் வசதிகளோ இதர வசதிகளோ இல்லாத காலத்திலேயே ‘ஒருநாள் போதுமா’ காட்சியிலும், திறந்த வெளிக் காட்சிகளிலும் நிறைய ஸ்பேஸ் இருப்பது போல் காட்டியிருப்பார்.

படத்தில் முக்கியமாக வந்திருக்க வேண்டிய இந்தப் பகுதியே ஏதோ பையன்கள் கரியால் சுவரில் ஸ்டம்ப் வரைந்து ஆடும் க்ரிகெட் மாதிரி ஆகி விட்டது. அவர்களுக்கு வெகு சுவாரஸ்யமாக இருக்கும். ஆடியன்ஸுக்கு?

பேராசிரியர் கு. ஞான சம்பந்தம் அமைச்சராகவே தெரிந்தார். இல்லாவிட்டால் நாசரின் நடு சீட்டைப் பிடித்துக் கொண்டு பட்டிமன்ற நடுவராகி விடுவாரோ என்கிற பயம் வந்திருக்கும். அமைச்சர் கட்சி மாறுவதும், இருக்கும் வலக்காதைப் பொத்திக் கொண்டு நாசர் பூஜா குமாரை காமத்தோடு அணுகுவதும், அவருக்கு கமல் ஊட்டுவதும், அவரது வயிற்று உபாதையும் அப்போது வரும் அருவருப்பூட்டிவிடக் கூடிய ஆனால் ஊட்டாத வசனங்களும் கமல் மற்றும் இதரர் நடிப்பும் என்று நன்றாகவே போகிறது. ஆனால் முக்கால்வாசிக்கு மேல் காதில் வசனங்கள் சரியாக விழவில்லை. பாடல்கள் சுத்தமாகக் கேட்கவில்லை. அதில் கமலஹாசன் தன் கொள்கைகளைப் புகுத்தியிருந்தாலும் நல்ல வேளையாக எனக்கு அவை கேட்கவில்லை; ஒருவேளை நன்றாகவே எழுதியிருந்தால் படத்துக்கு இப்படி கேட்காமல் இருப்பது பெரிய அநீதி. சென்னையில் படம் பார்த்த என் நண்பர்களும் இதையே சொன்னார்கள்.

ஜெயகாந்தன் மும்பை எக்ஸ்பிரஸ் பார்த்துவிட்டு “எனக்குப் படம் பிடித்தது; அதுதான் பயமாய் இருக்கிறது’ என்றாராம். அது போல் இந்த உள் படத்தின் காமெடி வேறு திசையில், வேறு தளத்தில் இருக்கிறது. எனக்குப் பிடிக்கிறது; அதுதான் பயமாகவும் இருக்கிறது.

புலி, பூஜா குமார், அப்பாவி உத்தமன், ம்ருத்யுஞ்ச்ய மந்திரம், அரசன், அமைச்சர்கள், சூழ்ச்சி, இறுதியில் ஒரு ட்விஸ்ட் எல்லாம் நன்றாக இருந்தும், புது மாதிரியான நகைச்சுவை இருந்தும், ஏதோ பஞ்சத்தில் அடிபட்டு படம் எடுத்த மாதிரி இருக்கிறது.

ஒரு நல்ல படம் எடுக்க முயன்றிருப்பதால் வேறு சிலதும் சொல்ல வேண்டியிருக்கிறது.

இரண்டு நாள் ஜுரம் அடித்தாலே கண்கள் கருவளையம் சூழ்ந்து, தாடைகள் தொங்கி களைப்பு முகத்தில் குடிகொள்கையில் இவ்வளவு சீரியஸான வியாதிக்கு ஷூட்டிங் இல்லாத சமயங்களாக சில காட்சிகளைக் காட்டி களைப்புற்ற, கொஞ்சம் கொஞ்சமாக சோபை இழந்து கொண்டிருக்கும் மனோரஞ்சனைக் காட்டியிருக்கலாம்.

ஒரு சூப்பர் ஸ்டாருக்கு உடல் நலக் குறைவு என்றால் ஒரு மருத்துவர்களின் பட்டாளமே வந்து விடாதா? இரண்டே மருத்துவர்கள்தான் வருகிறார்கள். வெளி நாடு போக மாட்டாரா? படம் எடுக்கிறேன் என்று இங்குதான் இருப்பாரா?

மனோரஞ்சனின் உத்தம வில்லனிலும் ஒரு சூப்பர் ஸ்டாரின் வாழ்வில் சாதாரணமாகச் சூழ்ந்திருக்கும் ப்ரும்மாண்டம் இல்லை. வீடு, படுக்கை அறை, தோட்டம், ஆஸ்பத்ரி முதற்கொண்டு எல்லாமே ஒரு அப்பர் மிடில் க்ளாஸ் அமைப்பு போல் உள்ளன.

இதற்கா 80 கோடி செலவு?

ஹிரண்ய வதம் நாடகத்தில் “ஹரி ஹரி” என்கையில் “சொறி சொறி” என்று கேலி செய்திருக்கிறார்கள் என்று கேள்விப் பட்டு கமலஹாசனது தீவிர ரசிகைகள் இந்தப் படத்தைப் பார்க்க வரவில்லை. அவர்கள் கமலஹாசனை விட ம்ருத்யுஞ்சயனான நரசிம்மனுக்கு அதிகம் ரசிகைகள். இன்னும் பல கமல் ப்ராண்ட் பிராமண ஜாதி, ஹிந்து மத தாழ்ச்சிகள், பிற மத உயற்சிகள் படத்தில் உண்டு. ஒரு வேளை இவை வேறு யாராவது நடித்திருக்கும் படத்தில் கவனிக்கப் படாமலே பொயிருக்கும். ஆனால், வெண்மணியில் பலிகளின் மீதே குற்றம் கண்டுபிடித்து, திண்ணியம், உத்தபுரத்தில் காட்டும் எதிர்ப்பு முணுமுணுப்பில் கண்ணியத்தை(!)க் கடைபிடித்து, திருப்பித் தாக்க இயலாத ‘சாஃப்ட் டார்கெட்’களை மட்டும் தொடர்ந்து அவமானப் படுத்தும் தமிழக மாவீரர்களின் வரிசையில் வந்த, இவரது கடந்த கால செயல்பாடுகள் இவருக்கு எதிராகவே உள்ளன.

மிகக் கட்டுக் கோப்பாகப் போய்க் கொண்டிருக்கும் மனோரஞ்சனின் கதையில் ஒரு சில வசனங்கள் சற்று பொருந்தாமல் வந்து விழுந்து காட்சிகளின் தீவிரத் தன்மையைத் திசை திருப்புகின்றன. ஊர்வசி மாரடைப்புக்குப் பின் வரும் காட்சியில் கணவனின் நிலையைச் சற்று முன்தான் அறிந்திருப்பவர், வெகு சீக்கிரம் சாகவிருக்கும் தன் கணவர் தன் கண்ணெதிரே எப்போதும் இருக்க வேண்டும் என்கிறவர் நடுவில் தன் உடல் குண்டானதைப் பற்றி புலம்புவது, மனோரஞ்சன் திடீரென்று கமலஹாசனாகி “ஆத்மாவுக்கு காது கேட்காது” என்கையில், தன் பாய் ஃபிரெண்ட் இன்னொரு பெண்ணை அணைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்த பதின் வயது இளம் பெண் (குழந்தை) அதிர்ச்சியால், அருவருப்பால் தாக்கப் பட்ட இடத்தில் ‘உனக்காகத்தான் தலை மயிரை குறைத்துக் கொண்டேன்” என்பது எல்லாமே இன்னமும் கொஞ்சம் கொஞ்சம் பழைய கெட்ட கற்றதும், பெற்றதுமான பழக்கங்கள் இவரிடம் ஒட்டிக் கொண்டிருக்கின்றன என்பதைக் காட்டுகின்றன.

நிறைய பொடி வைத்து எழுதப் பட்ட வசனங்கள். கொஞ்சம் ஓவர் லோட். அதே போல் காட்சி மற்றும் கதை அமைப்பு. உதாரணமாக மனோரஞ்சன் கான்சல் செய்யும் படம் ஆதி சங்கரர். அதை நிறுத்தி விட்டுத்தான் உத்தமனைப் பற்றிய உத்தம வில்லனை எடுக்கிறான்.

“புனரபி ஜனனம், புனரபி மரணம்’ என்றிருக்கிற கடக்க முடியாத இப்பிறவிப் பெருங்கடலைக் கடக்க எனக்கு உதவுவாய்” என்று இறைவனை இரைஞ்சிய, “ப்ரம்மமே ஆன ஆத்மாவாகிய உனக்கு பிறப்புமில்லை; இறப்புமில்லை” என்று மரணமிலாப் பெருவாழ்வு பற்றி உலகுக்கு அறிவித்த மஹா ஞானி சங்கரன். அறுதியான இறுதி உறுதியான சாவே அற்ற பிரம்மத்தை உலகுக்கு எடுத்து உணர்த்திய ஆதி சங்கரனை தவிர்த்து விட்டு அதைவிட சிரமமான ஆனால் அதனோடு ஒப்பிடுகையில் அல்பமான ம்ருத்யுஞ்சய மந்திரத்தைத் தேடி அலைகிறான் மனோ.

ம்ருத்யுஞ்சய மந்திரம் உண்டா கிடையாதா என்பதில் தன் நேரடிப் பொருளில் அது இல்லை என்கிற நிலைப்பாட்டை மிருதுவாகத் தெரிவித்திருக்கிறார். அதே சமயம் அதன் எதிரிடையான அது உண்டு என்பதையும் காட்டியிருக்கிறார். (“a truth in art is that whose opposite is also true” –Oscar wilde) மந்திரம் போல் சொல்லின்பம் வேண்டும் (பாரதி) சொற்கள் மந்திரம் அல்ல. மந்திரம் சொல்லாய்த்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லை. சொற்களில் சில மந்திரம் ஆகையில் கற்களில் சில தெய்வமும் ஆகலாம். சொற்கள் எவை அதில் மந்திரம் எவை கற்கள் எவை அதில் தெய்வம் எவை என உணரும் சுத்த அறிவே சிவம். அந்த சிவமே அன்பு. அன்பே ம்ருத்யுஞ்ச்ய மந்திரம்.

ம்ருத்யுஞ்சய மந்திரம் வெறுமனே சொற்களாலான ஒரு மந்திரம் அல்ல என்று உத்தமனே விளக்குகிறான். அந்த வழி முறைகளில் முதல் இரண்டும் கடினமானவையாக இருக்க மூன்றாவதான காலத்தால் அழியாத கலைஞனாக ஆக நாசர் விழைகிறார். ஆம். மிகச் சிறந்த கலைச் செயலால் “பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்டீர்” என்கிறான் உத்தமன். அதாவது மனோரஞ்சன். கமலஹாசன் செய்யத் துணிவதும், இது மாதிரி ஒரு படத்தை எடுத்து, அதுதானே? ஆக அது – ம்ருத்யுஞ்சய மந்திரம் – உள்ளது.

இறுதியில் உத்தமன் வாழ்கிறான். மனோரஞ்சன் இறக்கிறான். எனினும் அவன் நடித்த உத்தமன் பாத்திரம் மூலம் அவனும் சாகாமல் வாழலாம். ம்ருத்யுஞ்சய மந்திரம் அப்படியும் உண்மையாகி விடுகிறது.

உத்தம வில்லன் பார்க்கையில் சத்யஜித் ராயின் ‘நாயக்’, ‘கூபி கய்ன் பாகா பய்ன்’ படங்கள் இரண்டும் ஞாபகம் வந்தன. ஒன்று சொஃபிஸ்டிகேடட் தருணங்களாலான, வசதி நிறைந்த வாழ்வு கிடைத்த மனிதர்களைப் பற்றியது. ஒரு ரயில் பயணம், ஒரு நடிகன், ஒரு பெண் நிரூபர். காதல் கத்தரிக்காய் எல்லாம் கிடையாது. மிகச் சிறந்த அகப் போராட்டங்கள் கொண்ட படம். இரண்டாவது ஃபேரி டேல். ராஜா காலத்து ஃபாண்டஸி. உத்தமன் கதையைப் போல. சங்கீதமே வராத கிராமிய சாமானிய பதின் வயது இளைஞர்கள். அதன் காரணமாகவே நாடு கடத்தப் பட்டு காட்டில் ஒரு தேவதை தந்த வரங்களால் போர்களையும், பஞ்சங்களையும், பசியையும் தீர்த்து மனிதர்களை ஆனந்தமாக்கும் படம். படத்தின் இசை. அதன் வெகுளித் தனம். அதன் அன்பு. அதன் நோக்கம்.

நாயக் மாதிரி மனோரஞ்சனின் சொஃபிஸ்டிகேடட் வாழ்க்கை, எல்லா குழப்பங்களுடனும், ஆத்ம ஹத்தியுடனும் கொந்தளிக்கும் affluence. கூபி கய்ன் மாதிரி இன்னொசென்ஸை மட்டுமே கருவியாய்க் கொண்ட ஒரு அப்பாவியின் கதை. ( இதில் அந்த அப்பாவித்தனம் ஒரு புத்திசாலி அரசனுடைய வேடம் என்று உத்தமனின் கதை முடிகிறது)

அந்தத் தளத்துக்கு இந்தப் படத்தைக் கொண்டு போயிருக்லாம். தவற விட்டு விட்டார்கள். அப்போது ஒருவேளை படம் ஓடியிருக்காது. இப்போதும் நிலைமை என்னவென்று நிச்சயமாகத் தெரியவில்லை.

குணம் குற்றம் இரண்டையும், பிறதையும் நாடியாயிற்று. அவற்றுள் மிகை நாடுதல் கீழே:-

50 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் இருக்கும் கமலஹாசன் நடிப்பார்; விதவிதமாக வருவார்; ஆடுவார்; பாடுவார்; முத்தமிடுவார், யுத்தமிடுவார். எனவே அப்ளாஸ் காட்சிகளை மனதில் வைத்து நரைகூடிக் கிழப்பருவம் எய்திக் கொண்டிருக்கும் ஒரு நடிகன் இளமையாகவே என்றும் தெரிவதற்காக எடுத்துக் கொள்ளும் முயற்சிகளையும், இயற்கைக்கும் அவன் முயற்சிகளுக்குமான போராட்டத்தையும் கூட எடுத்திருக்கலாம்.

ஆனால் அதை ஏற்கனவே நம் காலத்திய சில இந்திய நட்சத்திரங்கள் வாழ்ந்து காட்டி விட்டார்கள்; அமோல் பாலேகர், அனில் சாடர்ஜியை வைத்து நகாப் (Naquab) டி.வி.சீரியல் எடுத்து விட்டார். அந்தப் பேராசையின் உச்ச கட்ட நிர்மூலத்தை ‘ஃபெடொரா’வில் ‘பில்லி வைல்டர்’ காட்டிவிட்டார். சிவாஜி டைரெக்டராக வரும் ‘எது மாதிரியும் இல்லாத புதுமாதிரி’ படம் எடுப்பதாகச் சொன்ன திரு ஏ.எஸ். பிரகாசம் ‘சாதனை’யில் மிகப்பெரிய வாய்ப்பைக் தவற விட்டிருப்பார். அதுபோலவும் ஆகியிருந்திருக்கும். நன்றாக எடுக்கப் பட்டிருந்தால் அவர் ரசிகர்களையும், தயாரிப்பாளர்களையும் திருப்திப் படுத்தியிருக்கும். பத்தோடு பதினொன்றாய்ப் போயிருக்கும். நல்ல வேளையாக அதைச் செய்யாததற்காக.. ..

ஒரு நாவலாக எழுதப் பட்டிருந்தால் தமிழில் எழுதப்பட்ட மிகச் சிறந்த நாவல்களில் ஒன்றாக இருந்திருக்கும். அந்த நாவலைத் திரையில் கடத்துகையில் முழுதாக வெற்றி பெறா விட்டாலும் அந்த முயற்சியை எடுத்ததற்காக.. ..

படத்தில் எடுக்கப்பட்டுள்ள மிகப் பெரிய ரிஸ்கே படத்தின் மிகப் பெரிய பலமாய் அமைந்து விட்டது. தொடர்ந்து மீண்டும் மீண்டும் வரும் க்ளோஸ் அப் காட்சிகள். இதில் நடிக்க அடாத தைரியம் வேண்டும்; தன்னம்பிக்கை வேண்டும். அது கமலிடம் இருக்கிறது. அவரிடம் மட்டும்தான் இருக்கிறது. கரணம் தப்பினால் மரணம். ஒன்று ஓவர் ஆக்டிங் அல்லது செயற்கையான சப்ட்யூட் ஆக்டிங். மெல்லிய கயிறின் மேல் ஆயிரம் அடிகளுக்கு மேலான உயரத்தில் இரண்டு மலைச் சிகரங்களை இணைத்து கீழே வலை கூட கட்டாமல் மிக வெற்றிகரமாக நடந்திருப்பதற்காக.. ..

(முன்பெல்லாம், எஸ்.வி. ரங்காராவ், சிவாஜி கணேசன், டி. எஸ். பாலையா, நாகேஷ், ஜெமினி கணேசன், பானுமதி, சாவித்திரி என்று இப்படி தைரியமாக பெருமளவான காட்சிகளில் எமோட் பண்ணுவதற்கு இருந்தார்கள். இப்போது நமக்கு இருக்கும் ஒரே ஒரு கொழுந்து கமலஹாசன்தான்.

தொழில் நுட்பம் மற்றும் உட்பொருள் பற்றிய விவாதம் உலகளாவியது. மிகச் சிறந்த திரைப்படங்களை எடுத்தவர்கள் உட்பொருளின் முக்கியத்துவம் பற்றித் தெரிந்தவர்கள். “it is just because a director has something to say that he finds the form, the skill, the technique to bring it out. If you are concerned only with how you say something without having anything to say then even the way you say something won’t come to anything – Techniques do not enlarge a director. They limit him” – அகிரா குரோசாவா.

தொழில் நுட்பத்திலும் பணம் காரணமாக நாம் நமக்கு எட்டக் கூடிய அரிய உயரங்களை எட்ட முடிவதில்லை. தொழில் நுட்பம் அன்றி உட்பொருளுக்குத் (Content)தான் நல்ல சினிமாவில் முதல் இடம் என்பதை தமிழ் ஜாம்பவான்கள் (!) உணர்ந்ததே இல்லை. ஜாம்பவான்கள் என்று விதந்தோதப் படுபவர்களில் ஒருவர் தங்கத் தாம்பாளத்தில் அரிசியை வைத்து, மலைகா அரோராவையோ, மல்லிகா ஷராவத்தையோ விட்டு “இதுதான் ஐயா சாப்பாடு, சாப்பிடுங்கள்” என்று கொடுக்க வைப்பவர். இன்னொருவர் அதே அரிசியை சேற்றில் புரட்டி எல்லோரும் இப்படித்தான் சாப்பிடுகிறார்கள் என்று ஜோதி லட்சுமியையோ, சிம்ரனையோ ஆட வைத்துக் கொடுப்பவர். நல்ல வேளையாக, அவலை நினைத்து எது எதையோ இடித்துக் கொண்டிருந்த கமலஹாசன், அவர்களைப் போலெல்லாம் இல்லாமல், content டின் முக்கியத்துவத்தை உணர்ந்துவிட்டார். இது எதேச்சையா இல்லை நிரந்தரப் புரிதலா என்பதை அவரது இனி வரும் படங்கள் காட்டிவிடும்.

நம் புதிய இளம் இயக்குனர்களுக்கு உட்பொருள்தான் திரைப்படத்தின் உயிர் என்பது intuitive வாக வாவது புரிந்திருக்கிறது. நலன் குமாரசாமிகளும், கார்த்திக் சுப்பராஜ்களும், கோகுல்களும், விக்ரம் குமார்களும், விஜய் சேதுபதிகளும் இன்று மலர்ந்துள்ள இளம் பட்டாளத்தில் சீரியஸான திறமை மிகு சிலரும் குழுமி நவ தமிழ் சினிமாவின் உதயத்தைக் கொண்டு வந்து விடுவார்கள் போலிருக்கிறதே என்று என்னைப் போன்றவர்கள் ஆவலோடும், ஆன்க்ஸைடியோடும் காத்துக் கிடக்கையில் பல காலம் முன்பே சுஜாதா எதிர்பார்த்த கமலஹாசன் எவ்வளவோ முறை ஏமாற்றிய பின்னும் கூட இன்னமும் பந்தயத்தில் இருக்கிறார் என்பதற்காக.. ..

கே. விஸ்வநாத், மனோகராக நடித்த பையன், பார்வதி மேனன், எம். எஸ். பாஸ்கர், பாலசந்தர், ஊர்வசி, ஜெயராம், ஆண்ட்ரியா, பூஜா குமார், நாசர் என்று எல்லோருக்குமே நடிக்க வாய்ப்பு இருக்கிறது. ஸ்பேஸ் இருக்கிறது. நடிக்கவும் செய்திருக்கிறார்கள். இந்த எல்லாப் பாத்திரங்களுமே ஒற்றைப் பரிமாண கேரக்டர்களாக இல்லாமல் ஒரு ஆழத்தோடு இருப்பதற்காக.. ..

இப்போதெல்லாம் கமலஹாசன் படங்களின் இயக்குனர்கள் யாராக இருந்தாலும் படத்தின் குறை நிறைகளுக்கு கமலஹாசனே காரணம் என்றுதான் பலரும் எண்ணுகிறார்கள். இந்த விமர்சனமும் அந்த விதத்திலேயே அமைந்துள்ளது. படத்தின் அனைத்து அம்சங்களிலும் அவரது ஒப்புதல் இல்லாமல் எதுவும் வர முடியாது என்றே நினைக்கிறோம். ஒரு வேளை ரமேஷ் அரவிந்த்தின் பங்கு நிறைய இருந்தால் நடிப்பு, காட்சியமைப்பு மற்றும் க்ளோஸ் அப்புகளுக்காக அவருக்கும் பாராட்டுகள்.

சாவு, வாழ்வு இரண்டைப் பற்றியும் பலதும் யோசிக்க வைக்கும் ஒரு படம் யோசிக்கவே விடாத தமிழ்ப் பட சூழலில் எடுத்திருப்பதற்காக, 20+ வயதுப் பெண்ணுக்குத் தந்தையாகக் குறைகளும், குற்றங்களும் நிரம்பிய நடிகனாகக் கமலஹாசன் நடிக்கத் துணிந்தமைக்காக.

இதுகாறும் தீவிரமான உணர்ச்சி மிகு நடிப்பு என்றால் இதுதான் என்று இருந்த – அவரே உருவாக்கியவை உட்பட – அனைத்து வரையறைகளையும் கமலஹாசன் தகர்த்து எறிந்ததற்காக, புதிய ஒரு உயரத்தைப் பிற்காலச் சாதனையாளர்களுக்காக ஏற்படுத்தியதற்காக,

உத்தம வில்லனை அவசியம் பார்க்கலாம்.

பாசாங்கு குறைந்திருக்கிறது. கமலஹாசன் இதே திசையில் பயணித்தால், தன் தனிப்பட்ட சாய்வுகளை, சார்புகளை, காழ்ப்புகளை மெனக்கெட்டு கதையில், சம்பவங்களில், வசனங்களில், பாத்திரங்களில் புகுத்தாமல், கதையின், பாத்திரங்களின் மனோ தர்மமும், மனோ தத்துவமும் கெடாமல் படங்களை எடுத்தால் உண்மையிலேயே அவர் மூலம் நல்ல படங்கள் வர வாய்ப்பிருக்கிறது.

அது நிகழ, ஓரு சிறிய ஆலோசனை : சினிமா வித்தையில் சீரியஸ் மாணவரான கமலஹாசனுக்கு மகத்தான திரைக் கலைஞன் ராபர்ட் ப்ரெஸ்ஸான் தனக்குத் தானே சொல்லிக் கொண்ட இந்த வார்த்தைகள் முன்பே தெரிந்திருக்கும். இது ஒரு நினைவூட்டல்தான்:

“Rid myself of the accumulated errors and untruths. Get to know my resources, make sure of them.”

oOo

நன்றி: இந்தக் கட்டுரைக்குத் தேவையான சில தகவல்களைச் சொன்ன திரு. எஸ். பார்த்தசாரதி அவர்களுக்கு.

.- See more at: http://solvanam.com/?p=39859#sthash.KEEf44Kn.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

கமல்....தமிழ் உலகின் ஒப்பற்ற நடிகர்! வேறு என்னத்தைச் சொல்ல ?

  • கருத்துக்கள உறவுகள்

படம் ரொம்ப மோசம் என்று சில நண்பர்கள் சொன்னார்கள். அப்போதே நினைத்தேன் படம் நல்லாய் இருக்கும் என்று.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோஷான் இதையும் படித்துவிட்டு படத்தைப் பார்க்கலாமா என்று முடிவெடுங்கள்! :o

திரைப்படத்தின் ஒன்லைனை எப்படித் தயார் செய்வது..?- ( உத்தம வில்லன் 22 )

பி.ஆர்.மகாதேவன்

இந்தப் படத்தின் திரைக்கதை எப்படி எழுதப்பட்டிருக்கும் என்று பின்னோக்கி ஆராய்ந்து பார்ப்போம்.

முதலில் இந்தப் படத்தின் ஒன் லைன் ஸ்டோரி என்ன?

மனோரஞ்சன் என்ற வணிகத் திரைப்பட நடிகனுக்கு மூளையில் கட்டி வருகிறது (வணிகப் படைப்பாளிகளுக்கும் மூளை உண்டு என்பதை எப்படி நைஸாக நிலைநாட்டிவிட்டார் பாருங்கள். கில்லாடிதான்!); இன்னும் சில மாதங்களுக்குள் இறந்துவிடுவோம் என்பது தெரிந்ததும் அவன் என்னவெல்லாம் செய்கிறான் என்பதுதான் கதை.

நடிகர்களுக்குத் திரையுலக வாழ்க்கை, சொந்த வாழ்க்கை என இரண்டு உண்டு அல்லவா… இரண்டு வாழ்க்கையிலும் சரிசெய்ய வேண்டிய கணக்குகள் சிலவற்றைத் தன் மரணத்துக்குள் செய்து முடிக்க முடிவெடுக்கிறான் மனோரஞ்சன்.

தான்தான் இறக்கப்போகிறோம்; ஆனால், அந்த சோகம் தன் பார்வையாளர்களுக்கு இருக்கக்கூடாது. அவர்கள் தன் கடைசிப் படத்தைப் பார்த்துவிட்டு ஜாலியாகச் சிரித்தபடியே போகவேண்டும் என்று ஒரு நகைச்சுவைப் படத்தை எடுக்க முடிவெடுக்கிறான்.

தன்னைத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய இயக்குநருடனே தன் கடைசி படத்தையும் செய்கிறான்.

நாயகன் நாத்திகனும்கூட என்பதால் அந்தக் கதையின் முடிவில் ஒரு அபாரமான ட்விஸ்டும் வைக்கிறான்.

இதனிடையில் மிகச் சரியாக, முதல் காதலி யாமினியும் இறந்துவிடவே அவள் மூலம் மனோரஞ்சனுக்குப் பிறந்த மகளை யாமினியின் கணவன் அவனுக்கு அறிமுகப்படுத்துகிறார். இறந்த யாமினியின் இறுதி ஆசை அது. தன் அம்மாவைக் கைவிட்டுப் போய்விட்டதற்கு மகளுக்கு மனோரஞ்சன் மீது கோபம். முதல் மனைவியை மனோரஞ்சன் கைவிடவில்லை; ஒரு கடிதம் சரியாகக் கொடுக்கப்படாததால் அந்தக் காவியக் காதல் முறிந்திருக்கிறது. இந்த உண்மையைச் சொல்லி மகளின் கோபத்தை மனோரஞ்சன் போக்குகிறான்.

மனைவி முலம் பிறந்த மகனுடைய லட்சியப் படிப்புக்கு வழி செய்து தருகிறான்.

கார் டிரைவருக்கு தன்னைவிட நல்ல முதலாளியை அமைத்துத் தருகிறான்.

இறுதியில், திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே (கற்ற வித்தை முழுவதையும் இறக்கிவைத்த பிறகுதான்) இந்த உலகில் இருந்து விடைபெற்றுச் செல்கிறான்.

இப்போது கதையின் ஒவ்வொரு நிகழ்வுகளும் எதனால் அப்படி உருவாக்கப்பட்டிருக்கின்றன என்று பார்ப்போம்.

கமலுக்கு இருமை (ஈதச்டூடிtதூ) மீது பெரும் காதல் உண்டு. இன்பம் துன்பம், இரவு பகல், ஆண் பெண், நன்மை தீமை என உலகில் அது நீக்கமற நிறைந்திருப்பதால் அவருக்கும் அது பிடித்திருக்கிறது. தான் ஒரு வணிகக் கலைஞன்… அதேநேரம் கலை ஞானியும்கூட(?!)… நல்லவரா கெட்டவரா என்று வகைப்படுத்த முடியாதவன்… கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை… உத்தமனும் நானே வில்லனும் நானே… என அவர் தனக்குள்ளேயே இரண்டும் இருப்பதாக நினைத்துக்கொள்கிறார். எனவே, படத்தில் மரணம் என்ற ஒன்று வந்ததும் மரணத்தை வெல்லுதல் என்ற எதிர் அம்சம் கமலுக்கு மனதில் தோன்றிவிடுகிறது.

விரைவில் இறக்கப் போகிறவன் கலை மூலம் சாவை வெல்ல முடிவெடுக்கிறான். தான் போனாலும் தன் படைப்பு இந்த உலகில் சாகாவரம் பெற்று நிலைக்கவேண்டும்; மக்கள் மனதில் தன் பெயர் என்றும் நிலைத்து நிற்க வேண்டும் என்று முடிவெடுக்கிறான். இதுவரையில் ஓகேதான். ஆனால், சாவை வெல்ல என்ன செய்ய வேண்டும் என்பதில்தான் கமலின் இருமை கேலிக்கூத்தாகிவிடுகிறது. கோடீஸ்வரனாக உங்கள் மகன் ஆகவேண்டுமா… அவனுக்கு கோடீஸ்வரன் என்று பெயர் வைத்துவிடுங்கள் என்ற கடி ஜோக்கின் தரத்தில் சாகாவரம் பெற வேண்டுமென்றால் சாகாவரம் பெற்றவன் என்ற பெயரில் ஒரு நாடகம் நடித்துவிட்டால் போச்சு என்று குழந்தைத்தனமாக முடிவெடுக்கிறார். வயதானால் குழந்தைப் பருவம் மீண்டும் வந்துவிடும் என்பதனாலா, மூளையில் கட்டி வந்துவிட்டதால் அறிவின் அடர்த்தி குறைந்து குழந்தைபோல் சிந்திக்க ஆரம்பித்ததாகக் காட்ட நினைத்தாரா எது எப்படியானாலும் மரணக் கிணறின் படிகளில் இறங்கத் தொடங்கிய ஒருவர் இப்படி ஒரு கதையைத் தன் இறுதிப் படமாக எடுக்க முடிவெடுத்ததைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

முந்தைய அத்தியாயங்களில் சொன்னதுபோல், இந்த ஒன் லைன் தொடர்பாக வேறு என்னென்ன கதைகள், படங்கள் வந்திருக்கின்றன என்று ஆராய்ந்து பார்க்கலாம்.

குரோசோவாவின் இகிருவில் வரும் அரசு அதிகாரியான நாயகனுக்கும் இதுபோன்ற பிரச்னைதான். ஆனால், அவரோ அதுவரை வீணாகக் கழிந்த தன் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தத்தைக் கற்பித்துக்கொண்டு விடைபெறுகிறார். மரணம் என்ற சோகமான தண்டனையை, மாபெரும் பள்ளத்தை சமூகத்துக்குச் செய்யும் ஆத்மார்த்தமான ஒரு நன்மையின் மூலம் கடந்து செல்கிறார். அதுவரையிலான வாழ்க்கையில் தான் செய்திராத அதேநேரம் செய்திருக்க வேண்டிய ஒன்றைச் செய்து முடிக்கிறார். உத்தம வில்லனின் மனோரஞ்சனோ தான் ஏற்கெனவே சற்றும் மனம் தளராமல் செய்துவந்த வணிகப் படம் ஒன்றையே கடைசியாகவும் நடிக்கத் தீர்மானிக்கிறான். கமலால், அது மட்டும்தான் முடியும் என்பதால் மனோரஞ்சனையும் அப்படி சோதாவாகக் காட்டியிருக்கவேண்டாம்.

படத்துக்குள் எடுக்கப்படும் இந்தப் படம் இரண்டு வகையில் பார்வையாளர்களைப் படுத்துகிறது. முதலாவதாக, அந்த சரித்திரப் படத்தில் நகைச்சுவை என்ற பெயரில் செய்யப்பட்டிருப்பவை எல்லாம் கத்துக்குட்டித்தனமாக இருக்கின்றன. அதில் வரும் நாயகி மனநிலை பிறழ்ந்தவள் போல் நடிப்பது, வீரனான நாயகன் விதூஷகன் போல் நடிப்பது என்பதையெல்லாம் நுட்பமாக, பெரிதாக படம் போட்டு பாகங்களை விளக்கிக் கொண்டிருக்காமல் பார்வையாளர்களின் புத்திசாலித்தனத்தை மதித்து எடுத்திருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கும் காட்சிகள் கதைக்கு எந்தவித உயர்வையும் தந்திருக்கவில்லை. அந்த எபிசோட் முழுவதும் இடம்பெற்றிருக்கும் சொறித்தனமான நகைச்சுவைக் காட்சிகள் கமல் மீது பரிதாபத்தையே ஏற்படுத்துகின்றன. எப்படி இருந்த ஆள் இப்படி ஆகிவிட்டாரே..!

மனோரஞ்சனுக்கு மூளையில் கட்டி என்ற வேதனையை கமல் தனக்கு நேர்ந்ததாக நினைத்துக் கதாபாத்திரத்தோடு வெகுவாக ஒன்றிவிட்டதால் கற்பனையும் களைத்துப்போய்விட்டதா… அவசர அவசரமாக எடுக்கப்படும் படம் இப்படித்தான் குப்பையாக இருக்கும் என்பதை நியாயப்படுத்த அப்படிச் செய்தாரா..? அணையப் போகும் விளக்கு அதிகமாகப் பிரகாசிப்பதுதானே இயல்பு. அணைந்த பின் வரும் புகை கூட அழகியதோர் ஓவியமாக நளினமாக இருக்குமே… திரியின் நுனியில் கறுத்து கட்டியாக நிற்கும் கரிபோல் ஒரு படைப்பைத் தர எப்படித்தான் துணிச்சல் வந்ததோ?

இரண்டாவதாக, ‘உணர்ச்சிபூர்வமான’ மனோரஞ்சனின் கதைக்கு நடு நடுவே நகைச்சுவை என்ற பெயரில் சரித்திரக் கதையை இடம்பெறச் செய்திருப்பது படத்துடன் துளியும் ஒன்றவிடாமல் துரத்தியடிக்கிறது. ஒருவேளை அந்த சரித்திரக் கதை தனியாகவும் மனோரஞ்சனின் கதை தனியாகவும் காட்டப்பட்டிருந்தால் சரித்திரக் கதைக்கு கஷ்டப்பட்டு சிரித்திருக்கலாம்; மனோரஞ்சனின் சோகக் கதைக்கு கொஞ்சம் போல கண்ணீர் வந்திருக்கவும்கூடும். இரண்டையும் கலந்து கட்டிக் காட்டியபோதே பல ரசிக நெஞ்சங்கள் வெகுவாக நெகிழ்ந்ததையும் விழுந்து விழுந்து சிரித்ததையும் சமூக வலைதளங்களில் பார்க்க முடிந்தது. அந்த ப(க்)தர் கூட்டம் இன்னும் கூடுதலாக நெகிழவும் சிரிக்கவும் நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கும். சோகத்துக்கு இடையிடையே நகைச்சுவை என பால் பாயாசத்தில் பாகற்காயைப் போட்டுச் சமைத்த சமையல் சொரணையுள்ள நாக்குக்கு ருசியாகவே இல்லை.

அடுத்ததாக, அந்த எபிசோடில் இடம்பெறும் தெய்யம் – வில்லுப்பாட்டு கிம்மிக்ஸ்கள். ஃப்யூஷன் என்று முதலிலேயே சொல்லிவிட்டதன் மூலம், தான் செய்யும் அனைத்து அமெச்சூர்த்தனங்களுக்கும் முன்ஜாமீன் வாங்கிக்கொண்டுவிடுகிறார். பாரம்பரிய தெய்யம் கலைக்குப் பின்னணியாக மேற்கத்திய இசைக்கருவிகளா..? தமிழ் கதையில் கேரளக் கலை வடிவங்களா..? என்ற எந்தக் கேள்வியுமே கேட்கவே முடியாது. உண்மையில் தெய்யத்தை கமல் இந்தப் படத்தில் இடம்பெறச் செய்திருப்பதற்கான காரணம் மிகவும் பரிதாபத்துக்குரியது. அந்தக் கதையில் வரும் இரண்ய சரித்திரம் (?) நாடகத்தில் வில்லனாக வருபவர் நரசிம்மர் வேடம் போட்டுக் கொள்வதால், நரசிம்மரே இறந்துபோவதாகக் காட்டவேண்டிய கட்டாயம் வருகிறது. கமலின் அசட்டு நாத்திகத்தின் வெளிப்பாடு இது. என்னதான் முன்னாள் வைஷ்ணவன் என்று சொல்லிக் கொண்டாலும் அவர் உடம்பில் ஹையங்கார் ரத்தமே ஓடுவதால், சிங்க முகத்துடனான நரசிம்ம மூர்த்தியை இறப்பதாகக் காட்ட மனம் ஒப்பவில்லை. எனவே, நரசிம்மரின் டிரேட் மார்க் உருவத்தைக் காட்டாமல் சமாளிக்க முடிவெடுக்கிறார். தெய்யம் அவருக்குக் கை கொடுக்கிறது. அதோடு அதற்குத் தேவைப்படும் மேக்கப் சாகசம் கமலுடைய ‘கலைப் பசி’க்குத் தீனி போடுவதாகவும் இருப்பதால் தெய்யம் கலைஞராகவே அடம்பிடித்து அவதாரம் எடுத்துவிடுகிறார். கழைக்கூத்தாடி போலவோ கண் தெரியாத புல்லாங்குழல் இசைக் கலைஞனைப் போலவோ வித்தை காட்டத் தெரியாதவன் சாட்டையாலடித்துக் கொண்டு நம் பரிதாபத்தைக் கையேந்திப் பெறுவதுபோல் பத்து மணி நேர மேக்கப் ஆக்கும்… சாப்பிடக் கஷ்டம்… உட்காரக் கஷ்டம்… ஒண்ணுக்குப் போகக் கஷ்டம் என்று சொல்லி நம் இளகிய கலை மனதை பிளாக் மெயில் செய்கிறார். செக்கு மாட்டுக்குப் பழகிய பாதையில் வட்டமடிக்க மட்டும்தானே தெரியும்?

அதிலும் வில்லனான மன்னனைக் கொல்ல விதுஷகன் போல் மாறுவேடத்தில் வரும் பக்கத்து நாட்டு மன்னன், அதற்கான ஆயிரம் வாய்ப்புகள் வந்த பிறகும் அதையெலாம் விட்டுவிட்டு ஒரு நாடகத்தை எழுதி அதில் வில்லனை நடிக்கச் செய்து அவன் நகத்தில் விஷம் வைத்து அவனாகவே உடம்பைச் சொறிந்துகொள்ளும்போது சாவதாகக் காட்டுகிறார். கொக்கு தலையில் வெண்ணெயை வைத்து அது உருகி கண்ணை மறைக்கும்போது பிடித்தால்கூடப் பரவாயில்லை. அந்த உருகிய வெண்ணெய் முழுவதும் கண்ணில் இருந்து போய், அந்த கொக்கு பல குளங்களில் மீனைப் பிடித்துச் சாப்பிட்டு, குழந்தை குட்டிகள் பெற்றெடுத்து ஒரு நாள் ஓய்வாக மரத்தில் சற்று கண்ணயர்ந்து இருக்கும்போது போய்ப் பிடிப்பதுபோல் விட்ட்ட்ட்ட்டுப் பிடிப்பதற்குச் சமம்.

ஏற்கெனவே தீர்மானித்த படத்தை விட்டுவிட்டு அந்திம காலத்தில் இருக்கும் பாலசந்தரை நடிக்க வைத்து ஒரு புதிய படத்தை எடுக்கப் போவதாகச் சொன்னபோது தயாரிப்பாளர் லிங்குசாமி எந்த மறுப்பும் சொல்லாமல் ஒப்புக்கொண்டதாக கமல் பாராட்டியிருந்தார். அந்தப் பெருந்தன்மையில், நம்பிக்கையில் ஆயிரத்தில் ஒரு பங்கையாவது கமல் கதையில் காட்டியிருக்கக்கூடாதா?

இதுதான் இப்படியென்றால், உணர்ச்சிமயமான கதையோ மேலும் பயமுறுத்துகிறது.

எடுத்த எடுப்பிலேயே நிரடல்கள் ஆரம்பிக்கின்றன. திடீரென்று குறுக்கிடும் மரணம் என்ற சினிமாத்தனமான தொடக்கம் போதாதென்று முதல் காதலியின் இந்நாள் கணவர் மிகச் சரியாக படத்துக்குள் நுழைகிறார். அதைக்கூட மென்று முழுங்கிக்கொள்ளலாம். முதல் காதலியை விட்டுப் பிரிய நேர்ந்ததற்குச் சொல்லியிருக்கும் காரணம் மிக அபத்தமாக இருக்கிறது. ஒரே ஒரு கடிதம் பரிமாறிக் கொள்ளப்படாததால் அந்த உறவு முறிந்துவிடுகிறதாம்.

இந்த இடத்தில் திரைக்கதை எழுதுவதன் அடிப்படைப் பாடமான புத்திசாலித்தனமான கேள்விகளைக் கேள்; அதை விட புத்திசாலித்தனமான பதில்களைக் கண்டுபிடி என்ற பொன் விதியைப் பயன்படுத்திப் பார்ப்போம்.

அந்தக் காதல் முறிய இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. அப்போது இளம் கதாநாயகனாக உருவாகி வந்த மனோரஞ்சன் திருமணம் செய்து கொள்ள லேசாகத் தயங்கியிருக்கிறார். இரண்டாவதாக, ஒரு தயாரிப்பாளர் அவனை பிளாக் மெயில் செய்கிறார். அவரைப் பகைத்துக்கொண்டால் திரையுலகில் இருக்க முடியாது என்ற நிலை இருக்கிறது. அதனால் அவருடைய மகளைத் திருமணம் செய்து கொள்வதற்காகக் காதலியைக் கைவிடுகிறார்.

இந்த இரண்டு காரணங்களுமே இட்டுக்கட்டிச் சொல்லப்பட்டிருக்கின்றன. காதல் இளவரசன் இமேஜுக்கு இடைஞ்சல் வருமென்றால் நான் போய்விடுகிறேன் என்று முதல் காதலி சொல்கிறாள். ஆனால், தயாரிப்பாளரின் மகளைத் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார் என்பது அவளுக்குத் தெரியவருகிறது. அப்படிச் செய்தாலும் காதல் நாயகன் இமேஜுக்கு இடைஞ்சல் வரத்தானே செய்யும். மேலும் நடிகைகளுக்குத்தான் திருமணமானால் அவர்களுடைய கேரியர் பாதிக்கப்படும். நாயகர்களுக்கு அப்படி இல்லை. லட்சிய குடும்பஸ்தன்தான் நம் நாட்டுப் பெண்களின் எதிர்பார்ப்பு. எனவே, ஒரு நாயகன் திருமணம் செய்து கொண்டால் அவனுடைய கேரியர் எந்தவகையிலும் பாதிக்கப்படாது என்பதுதான் தமிழ் சூழலின் யதார்த்தம். ஆனால், அதைப் போய் ஒரு காரணமாக முன்வைக்கிறார் கமல்.

இரண்டாவதாக, ஒரு தயாரிப்பாளரின் கட்டுப்பாட்டில் என்றைக்காவது எந்த நடிகராவது இருக்க நேர்ந்திருக்கிறதா? அதுவும் ஐந்து கிளாசிக் படங்களை மார்க்கதரிசியுடன் சேர்ந்து கொடுத்த நிலையில் பூர்ண சந்திரராவின் பிடியில் சிக்கியதாக எப்படிச் சொல்கிறார்? ஒரு தயாரிப்பாளர் இல்லையென்றால் இன்னொருவர்… தமிழ் திரையுலகம் மட்டுமல்ல எந்த திரையுலகமும் ஒற்றை அதிகார மையத்தின் கீழ் என்றுமே இருந்தது கிடையாது. குரங்குக்கு அந்தக் காட்டில் பற்றிக் கொள்ள ஒரே ஒரு கிளை மட்டுமே இருந்தது என்று சொல்வதைப் போன்றது. ஒரு வெற்றிகரமான நடிகர், தயாரிப்பாளர் ஒருவருக்குக் கட்டுப்பட்டுக் கிடந்தார் என்ற கற்பனை முழுவதுமே அசட்டுத்தனமானது. அதுவும் 25 வருடங்களாக! ஒரு சிங்கம், காலம் பூராவும் ஒரு காட்டெருமைக்கு அடங்கி நடக்குமா?

இதில் இன்னொரு குழப்பமும் இருக்கிறது. சொக்கு என்ற மேனேஜர்வசம் யாமினி எழுதிய கடிதம் இருக்கிறது. இது எப்படி அவர் கைக்கு வந்தது? உண்மையில் தயாரிப்பாளர் பூர்ண சந்திரராவும், சொக்குவும் வந்து பணம் கொடுத்தும் மிரட்டியும் பிரிக்க முயன்றதாகவும் அவர்களைக் கோபத்தில் விரட்டியடித்ததாகவும் யாமினி கடிதத்தில் சொல்கிறார். எனவே, கடிதம் அனுப்பினால் சொக்குவின் கைக்குத்தான் கிடைக்கும் என்று யாமினி நேரில் பேசத்தான் முயற்சி செய்வார். பிஸியான நடிகர்கள் தமக்கு வரும் கடிதங்களைப் படிப்பதில்லை என்பது நடிகரைக் காதலிக்கும் பெண்ணுக்குத் தெரியாதா என்ன?

அதோடு, மனோரஞ்சன் யாமினிக்கு எழுதிய கடிதமும் சொக்குவின் கையில் பத்திரமாக இருக்கிறது. கிராமத்து கதாநாயகிகள் மாமன் கழுத்தில் கட்ட மஞ்சத் தாலியை இடுப்பில் சொருகியபடி அலைவதுபோல் அவரும் அந்தக் கடிதத்துடனே வலம் வருகிறார். அந்தக் கடிதத்தை யாமினியிடம் கொடுத்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்று பூர்ண சந்திரராவ் மிரட்டினாராம். அப்படியா ஒரு பெரும் தயாரிப்பாளர் செய்வார்? அந்தக் கடிதத்தைக் கொடு என்று வாங்கிக் கிழித்துப் போட்டுவிடமாட்டாரா? 25 வருடங்கள் கழித்து மகளுக்குப் படித்துக் காட்டத் தேவைப்படும் என்று விட்டுவைப்பாரா என்ன? கமல் நியாயவான் வேஷம் கட்டுவதற்காக பிற அத்தனை கேரக்டர்களையும் இப்படியா சிதைப்பது? ஒரே ஒரு போன்கூடப் பேசியிராத, பேசியிருந்தால் தீர்ந்து போயிருக்கும் பிரச்னைக்காக 25 வருடங்கள் கழித்து உருகி மருகும்போது கடுப்பாகத்தான் இருக்கிறது. சொல்லிக்கொள்ளாமல் போனவளைத் தேட ஒரு சிறிய முயற்சி எடுத்திருந்தாலும் காதலி கர்ப்பமாக இருப்பது தெரிந்திருக்கும். பிரிந்திருக்கவே தேவை வந்திருக்காது. இந்த எளிய விஷயம்கூடச் செய்யாமல் இருந்துவிட்டு அவளுக்காக உருகுவதாகக் காட்டியதில் எந்த நியாயமும் இல்லை.

அதுவும் அந்தக் காதல் முறிவுக்குத் தன்மீது எந்தக் குற்றமும் இல்லையென ஒரு யோக்கியன் வேடம் எதற்காகத் தேவைப்படுகிறது? இளம் நாயகனாக வளர்ந்து வந்த காலகட்டத்தில் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வெறி இருந்தது. ஒரு படத்தில் பேரும் புகழும் கொஞ்சம் பணமும் நடிகருக்குக் கிடைத்தாலும் பெருமளவுக்கான பணம் தயாரிப்பாளருக்கே கிடைக்கிறது. எனவே, தயாரிப்பாளராகவும் ஆக முடிவெடுத்தேன். அதோடு நாம் விரும்பும்வகையில் படம் எடுக்கும் சுதந்தரமும் அதில் இருக்கும். இதெல்லாம் நடக்கவேண்டுமென்றால் ஒரு தயாரிப்பாளருடைய மகளைத் திருமணம் செய்துகொண்டால் போதும். அதற்கான வாய்ப்பு வந்தது. இதற்கு காதலியைக் கழட்டிவிட வேண்டியிருந்தது. அதை எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் செய்தேன். இன்று மரணம் குறுக்கிட்டிருக்கும் இந்த நேரத்தில் அன்று செய்தது தவறு என்று தோன்றுகிறது. முதல் காதலியைத் தேடிச் சென்று மன்னிப்பு கேட்க தீர்மானித்தேன் என்று கதையைக் கொண்டு சென்றிருக்கலாமே.

இந்தக் கோணத்தில் தொடர்ந்து சிந்தித்தால் நிச்சயம் வலுவான காட்சிகள் கிடைக்கும். யாமினி கர்ப்பமாக இருப்பது தெரிந்ததும் இப்போது திருமணம் செய்து கொண்டால் பத்திரிகைகள் ஏழெட்டு மாதத்தில் குழந்தை பிறந்துவிட்டால் திருமணத்துக்கு முன்பே கர்ப்பமாகிவிட்டாள் என்று சொல்லி சந்தி சிரிக்க வைப்பார்கள். இந்தக் கருவை இந்த முறையும் கலைத்துவிடு. விரைவில் திருமணம் செய்துகொள்வோம் என்று மனோரஞ்சன் சொல்கிறான். என்னைக் கை கழுவுவதற்காக இப்படிச் சொல்லவில்லையே என்று கேட்கிறாள். மனோரஞ்சனோ பதறிப் போய் அப்படியெல்லாம் இல்லை என்னை நம்பு என்கிறான். அவளும் அரை மனதுடன் சம்மதிக்கிறாள்.

ஆனால், அவள் கர்ப்பமாக இருக்கும் விஷயம் எப்படியோ பத்திரிகை நிருபர் ஒருவருக்குத் தெரிந்துவிடுகிறது. அதை கவர் ஸ்டோரியாக வெளியிட்டுவிடுகிறார். என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு மனோரஞ்சனே காரணம்… அபலைப் பெண்ணின் அதிரடி வாக்குமூலம் என்று நாறடித்து விடுகிறார். மனோரஞ்சனுக்கோ யாமினி மேல் கோபம் வருகிறது. தான் இவ்வளவு சொன்ன பிறகும் இப்படிச் செய்துவிட்டாளே என்று கோபப்படுகிறார். அவர் விலகிப் போவதைப் பார்த்ததும் யாமினி பதறுகிறாள். அவளுடைய பேச்சைக் கேட்காமல் அவளுடைய குடும்பத்தினர் வழக்கறிஞரை நாடுகிறார்கள். மனோரஞ்சன் மேலும் ஆத்திரப்பட்டு அந்தக் குழந்தை என்னுடையது இல்லைஎன்று சொல்லிவிடுகிறான். அப்படியாக ஒரு நிருபரின் அத்துமீறலால் அந்தக் காதல் முறிந்துவிடுகிறது. தன் மீது தவறு இல்லை என்று நிமிர்ந்து நின்ற மனோரஞ்சன் மரணம் நெருங்கிய நிலையில் யாமினியின் அன்றைய நிலையைப் புரிந்துகொண்டு மன்னிப்பு கேட்கப் போகிறான் என்று திரைக்கதையைக் கொண்டுசென்றிருக்கலாம்.

அல்லது கதாநாயகனை உத்தமனாகவே காட்டுவதெல்லாம் எப்போதோ காலியாகிவிட்டதே… சிவப்பு விளக்குப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு அதீத முற்போக்கெல்லாம் எப்போதே நிகழ்த்தியாகிவிட்டதே… இப்போது ஏன் இப்படி ஒரு பத்தாம்பசலித்தனமான நியாயப்படுத்தல்? அதுவும் இறக்கப் போகிறோம் என்பது தெரிந்ததும் தான் செய்த தவறுகளைத் திருத்திக்கொள்ளத்தானே தோன்றும். அந்தவகையிலும் அது நல்ல வாய்ப்புதானே. தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவனாக ஏன் இருக்கவேண்டும். தவறு செய்தவனாகத்தானே இருக்கவேண்டும். இப்படி அஸ்திவாரமே பலவீனமானநிலையில் அதன் பின் வரும் உணர்ச்சிமயமான காட்சிகளோடும் நடிப்புகளோடும் எப்படி ஒன்ற முடியும்?

உண்மையில் மனோரஞ்சனின் கதாபாத்திரம் என்பது கமலின் வாழ்க்கையின் சாயலில் உருவாக்கப்பட்டதுதான். ஆட்டோபிக்ஷன் என்று வேறு அதற்கு புகழாரங்கள் சூட்டப்படுகின்றன. எந்தவொரு படைப்பாளியுமே கதை, நாவல், நிஜ செய்தி என ஏதாவது ஒன்றில் இருந்து உந்துதல் பெற்று அதை அடிப்படையாக (குணிதணூஞிஞு) வைத்துத்தான் ஒரு கலைப்படைப்பை உருவாக்குகிறார். எந்தக் கற்பனைக்கும் இதுபோல் ஏதேனும் ஒரு ஆதாரம் இருக்க வாய்ப்பு உண்டு. ஆட்டோபிக்ஷனில் அந்தப் படைப்பாளியின் சொந்த வாழ்க்கையே அப்படியான ஆதாரமாக இருக்கும். இதனால் இரண்டு நன்மைகள் கிடைக்கும்.

முதலாவதாக கதையின் நிகழ்வுகளுக்கு நம்பகத்தன்மையும் யதார்த்த அம்சமும் கூடுதலாகக் கிடைக்கும். இரண்டாவதாக ஒரு நடிகன் பிற மூலங்களை விட சொந்த வாழ்க்கை அனுபவத்தால் அதிகத் தாக்கம் பெற்றிருப்பார் என்பதால் அதை திரையில், கதையில் அழுத்தமாக நிகழ்த்திக்காட்ட முடியும். நாவலில் இருந்து வரும் கதாபாத்திரத்தை 50 சதவிகிதம் நடித்துக் காட்ட முடியும் என்றால் நிஜ வாழ்க்கையை 70-80 சதவிகிதம் நடித்துக் காட்டிவிடமுடியும். அந்த வகையில் ஆட்டோ பிக்ஷன் என்பது ஒரு படைப்புக்கு கூடுதல் வலுவைத் தர வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இந்த சாத்தியக்கூறு இருப்பதால் மட்டுமே அந்த சாதனை நிகழ்த்தப்பட்டுவிட்டதாகப் பாராட்டிவிடமுடியாது. மேலும் ஒரு படைப்பு ஆட்டோ பயாக்ரஃபியா, பிக்ஷனா, ஆட்டோ பிக்ஷனா என்பது முக்கியமே அல்ல. அதன் மூலம் என்ன ரசவாதம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது… வாழ்க்கையின் எந்த அம்சம், எவ்வளவு நுட்பத்துடனும் கலை அழகுடனும் சித்திரிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் முக்கியம். மற்றபடி உலகிலேயே முதல் ஆட்டோ பிக்ஷன் என்பதெல்லாம் உலகத் தொலைக்காட்சிகளிலேயே முதல் முறையாக திரைக்கு வந்து சில மாதங்களேயான… என்பது போன்ற விளம்பரத்துக்கு இணையானதுதான்.

மனோரஞ்சனின் வாழ்க்கையில் கமலுடைய சொந்த வாழ்க்கையின் அம்சம் 10% கூட இல்லை. உண்மையில் வாணி, சரிகா, கவுதமி என மூன்று பெண்களுடன் கமலுடைய வாழ்க்கை நீண்டகாலம் பிணைந்திருக்கிறது. ஸ்ரீவித்யாவில் ஆரம்பித்து ஸ்ரீதேவி, அம்பிகா ஊடாக சிம்ரன், ஆண்ட்ரியா வரை பல அந்தரங்கத் தோழிகளும் அவருக்கு உண்டு. கமலுடைய வாழ்க்கையின் ஆன்மா என்பது இதில் இருக்கிறது. அவர் ஒரு காதல் இளவரசனாக, மன்னனாக சக்கரவர்த்தியாக தன்னைக் காட்டிக் கொள்பவர். அதே கமல்தான், ஐஸ்வர்யா ராய் உலக அழகி பட்டம் பெற்றபோது கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘இன்னொரு அழகி’ என்று புத்தரைப் போல் பதில் சொன்னார். கமலுடைய முத்தத்தில் ரொமான்ஸ் இல்லை… கேமரா ஆங்கிளிலேயே அவர் அதிக கவனம் செலுத்தினார் என்று ராணி முகர்ஜி சொன்னதாகக் கூட செய்தி வந்தது. ரஜனீஷ் சொல்வது போல் காமத்தை அனுபவித்துக் கடந்துவிட்டவர் கமல். ஆனால், அதன் பிறகும் ரசிகர்களுக்காக கிளுகிளுப்பை ஊட்ட வேண்டிய சிலுவையைச் சுமக்க நேர்ந்தவர். விபச்சாரிகள் போல் ஆ… ஊ… என்று கத்திப் போலி ஆர்கஸத்தைக் காட்டியாக வேண்டிய துர்பாக்கிய நிலை. இதுகூட நுட்பமான உணர்வு என்று சொல்லிவிலகிவிடலாம். கமலுடைய வாழ்க்கையில் அவர் செய்த காதல் துரோகங்கள்… அவருக்கு இழைக்கப்பட்ட துரோகங்கள் என எத்தனையோ இருக்குமே… மரணத்தருவாயில் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக காதலிகளின் ஊர்களுக்குப் புனித யாத்திரை செய்து ஒவ்வொருவரிடமும் மன்னிப்பு கேட்பதாகக் காட்டியிருக்கலாமே… கமலின் ஆட்டோகிராஃப் உண்மையிலேயே கொண்டாடப்படவேண்டியதல்லவா. கதாபாத்திரத்துக்குவந்த மரணத்தின் மூலம் கமல் தன் வாழ்க்கையையிலும் உண்மையான பிராயச்சித்தத்தைச் செய்திருக்கலாம்… அதுதானே உருப்படியான ஆட்டோபிக்ஷனாக இருந்திருக்கும்.

அல்லது, கமலின் டூயல் நேச்சர் மீதான மோகத்தை இங்கும் கொண்டுவந்திருக்கலாம். ஊரெல்லாம் காதல் மன்னனாகத் திகழ்பவன் உண்மையில் ஒரு நபும்சகன்! இந்தக் கதைமுடிச்சு அபாரமான படத்தை உருவாக்க வழி செய்திருக்குமே. ஊரெல்லாம் அவனுடைய படங்களை வைத்துக்கொண்டு காதல்விளையாட்டுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்க, அவனோ தன் படுக்கையறையில் மங்கலான விளக்கொளியை வெறித்துப் பார்த்தபடி படுத்திருக்க, அவனுடைய மனைவி கண்களில் நீர் பனிக்க திரும்பிப் படுத்துக்கொண்டிருக்கிறாள் என்ற ஒற்றை காட்சி போதுமே… இமேஜ் பற்றிய கவலைதான் அவருக்குக் கிடையாதே… வெறும் நடிப்புத்தானே.

குடும்ப உறவில் நம்பிக்கை இல்லாதவன் என்பதுதான் கமலின் சொந்த வாழ்கையின் ஆன்மா. இதைத்தானே தைரியமாகச் சித்திரித்திருக்கவேண்டும். நிஜ வாழ்க்கையில் இருந்து பாலச்சந்தரை மட்டும் எடுத்துக்கொண்டுவிட்டு மற்ற விஷயங்களில் அசட்டுக் கற்பனையின் பின்னால் போனது ஏன்?

திரையுலக வாழ்க்கையிலும்கூட எத்தனையோ சமரசங்கள் அவருக்குச் செய்துகொள்ள வேண்டி வந்திருக்கிறது. தணிக்கைத்துறையில் ஆரம்பித்து, சாதி-மத சமூக சக்திகள், கலாசாரக் காவலர்கள், வணிக எதிர்பார்ப்புகள், விநியோகஸ்தர்களின் ரசனை என எத்தனையோ இரும்பு குண்டுகளைக் காலில் கட்டிக்கொண்டுதான் அவரால் ஓட முடிந்திருக்கிறது. மரணத்தின் விளிம்பில் இருக்கும் கதாபாத்திரத்தின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் போக்கில் அந்த ஆதிக்க சக்திகள் அனைத்தையும் எதிர்க்கும் வகையில் ஒரு துணிச்சலான படத்தை எடுக்க முன்வந்திருக்கலாம். கமலுக்குத்தான் துணிச்சல் இல்லை… மனோரஞ்சனுக்காவது அந்தத் துணிச்சல் இருந்திருக்கலாமே. மனோரஞ்சன் மூலம் அனைத்துவகை ஆதிக்க சக்திகளையும் எதிர்ப்பதாகவும் நிஜ கமல் மூலம் அனைத்து சக்திகளுக்கும் அனுசரித்துப் போவதாகவும் ஒரு இருமையை படத்தில் கொண்டுவந்திருந்தாலே அது படத்தின் தரத்தை உயர்த்தியிருக்குமே… கமலின் சமரசங்கள் கூட பரிவுடன் பார்க்கப்பட்டிருக்கும். அவைகூட சமூக சக்திகள் மீதான வலுவான விமர்சனமாக இருந்திருக்கும். திரைப்படங்களில் ஆதிக்க சக்திகளை எதிர்ப்பவராகவும் நிஜத்தில் அவற்றுடன் அனுசரித்துப் போகிறவராகவும் இருப்பதை நேர்மையுடன் சித்திரித்தாலே போதுமே… ஆட்டோபிக்ஷனுக்கான கலை நேர்மையும் படத்தில் கை கூடியிருக்கும்.

தனது நாத்திக, மத ஆதிக்க சக்திகளுக்கு எதிரான நிலைப்பாட்டை துணிச்சலாக படமக்கியிருக்கலாமே… அசட்டுத்தனமாக நரசிம்மரைக் கொல்லுதல் என்ற கதைக்கு பதிலாக அந்த அரசியலை அதற்குரிய மரியாதையோடு எடுத்திருக்க வேண்டும்… இந்து மதத்தில் சைவர்கள் மட்டும்தானே விமர்சிக்க வேண்டியவர்கள்… எனவே ஏதேனும் சைவ புராணத்தை கட்டுடைத்திருக்கலாம்… இருக்கவே இருக்கிறது நந்தன் கதை… அல்லது கண்ணப்ப நாயனார் கதை… ஆதிக்க சக்திகள் தீ வைத்துக் கொளுத்திவிட்டார்கள், கண்ணைக் குருடாக்கிவிட்டார்கள். அதன் பிறகு எழுந்த மக்களின் எழுச்சியைப் பார்த்து அதைத் திசை திருப்ப கடவுளே வந்து அழைத்துச் சென்றுவிட்டார் என்று கதை கட்டியிருகிறார்கள் என்று ஒரு மறு வாசிப்பை அரசியல் நேர்மையுடன் செய்திருக்கலாம். இந்தக் கதையை வேண்டுமென்றே படம் வெளி வருவதற்கு முனே வெளிவரச் செய்து படத்துக்கான பப்ளிசிட்டியையும் அதிகரித்துக் கொண்டிருக்கலாம். அதுதானே காலத்தை வென்று நிற்க வழி செய்திருக்கும்.

உண்மை நிகழ்வுகளை இப்படி பலவீனமாகப் பயன்படுத்திக் கொண்டதற்கு பேசாமல் வழக்கம்போல் ஏதேனும் வேற்று மொழி சினிமாவைக் காப்பியடித்து எடுத்துவிட்டுப் போயிருக்கலாம். ஆக, நல்ல படங்களோட கதைகளைத்தான் காப்பியடிச்சுக் கந்தரகோலமாக்குவார்… ஒரிஜினல் வாழ்க்கைக் கதையை எடுத்தால் நிச்சயம் இப்படியான பிழைகள் இருக்காது என்று சொல்ல இதுவரை வாய்ப்பு இருந்தது. இந்த ஆட்டோ பிக்ஷன் சாதனை மூலம், ‘அப்படியெல்லாம் நீங்களாகவே என்னைப்பற்றி நினைத்துக்கொண்டால் அதற்கு நானா பொறுப்பு என்று சொல்லிவிட்டிருக்கிறார். ஆமாம், கமல்… உங்கள் மீது என்றுமே தவறில்லை.

சின்னச் சின்ன காட்சிகளில் இருக்கும் அபத்தங்களின் பட்டியல் இதைவிட மிகவும் பெரியது. இவற்றை ஏன் சொல்ல வேண்டியிருக்கிறதென்றால், தெய்யம் வேடத்தில் நடிக்கும்போது அவர் என்று சொல்லவேண்டிய இடத்தில் அது என்று சொல்லிவிட்டதற்குப் பெரும் சீன் போடுவார் கமல். பெர்ஃபக்ஷனிஸ்டாமாம்!

முதல் காதலிக்குப் பிறந்த மகளும் மனைவிக்குப் பிறந்த மகனும் சகோதர பாசத்துடன் கட்டிப் பிடித்துக் கொண்டிருக்க, அதைப் பார்க்கும் மகனின் காதலி தவறாகப் புரிந்துகொண்டு திட்டுகிறாள். எவ்வளவு பெரிய வேதனை நிறைந்த காட்சி இது. மாபெரும் பண்பாட்டு வீழ்ச்சியைச் சித்திரிக்கும் காட்சி. தன் வாழ்க்கையில் இரண்டு பெண்கள் இருந்ததால் இப்படியான தவறான புரிதல் வந்துவிட்டது. தான் அதற்குக் காரணமாகிவிட்டோமே என்று ஒருவருக்கு மனம் துடிதுடிக்கத்தான் வேண்டும். தன் குழந்தைகள் சகோதர பாசத்துடன் இருப்பதுகூடத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டதே என்று வேதனைதான் படவேண்டும். ஆனால், கமலோ பூரித்துப் போய் மனம் விட்டுச் சிரிக்கிறார். சிரிக்கிறார்… சிரித்துக்கொண்டேயிருக்கிறார். மூத்த மகளின் வளர்ப்புத் தந்தையிடமும் காட்டி போய் பார்த்து நீயும் சிரி என்று வழிநடத்துகிறார்… இந்து குடும்ப உறவை கேள்விக்குட்படுத்தும் காட்சி என்று நினைத்தீர்களா கமல்… சகோதரனும் சகோதரியும் பாசத்தால் கட்டிக் கொள்வதை காதல் கட்டிப்பிடிப்பாகப் பார்ப்பது எந்த இனத்திலும் சமூகத்திலும் வேதனையோடுதான் பார்க்கப்படும். இந்து குடும்ப உறவை மீறி வாழ்ந்த மாபெரும் வாழ்க்கைக்குக் கிடைத்த தங்கப்ப – தக்கமாக அதை நினைத்து நெஞ்சில் குத்திக் கொள்கிறாய். இந்த அளவுக்கு இன் சென்ஸிடிட்டிவானவனா நீ… அல்லது சொந்த இன மதிப்பீடுகளை இந்த அளவுக்கு சிறுமைப்படுத்தும் புல்லனா நீ?

அடுத்ததாக, தன் நோய் பற்றி மகனுக்குச் சொல்லும் காட்சியின் முடிவில் சில ரசிகர்கள் காம்பவுண்டுக்கு வெளியில் இருந்து கை காட்டி மகிழ்கிறார்கள். உடனே மனோரஞ்சனோ (கமலோ) போங்கப்பா… எங்களுக்கு கொஞ்சமாவது ப்ரைவஸி கொடுங்க என்று சலித்துக் கொள்கிறார். உண்மையில் விஸ்வரூபம் பிரச்னையில் இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்களால் நடுத்தெருவுக் கொண்டுவரப்பட்ட கமல், நாட்டை விட்டே போகப்போவதாக நாடகமாடினார். சொத்தெல்லாம் பறிபோய்விடும் என்று ஃபிலிமும் காட்டினார். ஒரு பெரும் ரசிகர் கூட்டம் அதை உண்மை என்று நம்பி தங்கள் வீட்டுப் பத்திரத்தை எடுத்துக்கொண்டுவந்து கொடுத்தார்கள். ஒவ்வொரு ஊரில் இருந்தும் மணியார்டரிலும் செக்காகவும் பணத்தைக் கொண்டுவந்து குவித்தார்கள் ரசிகர்கள். ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் கட் அவுட் கட்டி தோரணம் கட்டி திருவிழாவாகக் கொண்டாடி மகிழும் அந்த ரசிகர் குழுவைத்தான், கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுங்கப்பா என்று அலுத்துக்கொள்கிறார். குறைந்தபட்சம் அந்த இடத்தில் அப்படி நடந்துகொள்வது ஊடகத்தினர் என்று கூடக் காட்டியிருக்கலாம் (அது சரி… அப்படிக் காட்டி ஊடகத்துறையினர் வருத்தப்பட்டுவிட்டால் படத்தின் பிரமோக்களை எப்படிச் செய்ய? அப்பாவி ரசிகர் என்றால் எத்தனை எட்டி உதைத்தாலும் கட் அவுட் கட்ட வருவான்).

அப்பறம் ஒரு நடிகனுடன் திருமணம் செய்யாமலேயே குழந்தை பெற்றுக்கொண்ட ஒருத்தியை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு மனிதருள் மாமாணிக்கமான ஒரு கேரக்டர்.

ஆதிசங்கரர் படம் பண்ண முடிவெடுத்த நேரத்தில் முதல் காதலி மூலம் ஒரு குழந்தை இருக்கும் செய்தி தெரியவந்தால், நக்கீரனில் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி என்று கவர் ஸ்டோரி வரும் என்று சொக்கு சொல்கிறார். ஒரு நடிகனின் முதல் காதல் பற்றித் தெரியவந்தால் இப்படியா தலைப்பு வைப்பார்கள்? அடுத்த வரியிலேயே மன்மத லீலைகள் என்று அந்த மேனேஜரே சொல்கிறார். அதை மட்டும்தானே வைப்பார்கள்? தப்பான பதிலையும் சரியான பதிலையும் தருவேன்… சரியானதை எடுத்துக் கொள்ளுங்கள் என்பதற்கு இதென்னெ வங்கித் தேர்வா?

கேன்சர் வந்துவிட்டிருக்கிறதே. வெய்யிலில் விளையாடலாமா… டாக்டர்கள் ஏதும் சொல்லமாட்டார்களா என்று ஒரு இடத்தில் மகன் கேட்கிறான். டாக்டர் யார் அதைத் தடுக்க. என் மகன் கூட விளையாடறதுக்கு யார்கிட்ட கேட்கணும் என்று கமல் எகிறுகிறார். இந்த இடத்தில் வெய்யிலில் விளையாடக்கூடாது என்று சொல்ல நோயாளியின் டாக்டருக்கு உரிமை கிடையாதா. அவர் அதை அன்பின் அடிப்படையில்தானே சொல்வார். யார் சொல்லியும் கேட்கமாட்டேன் என கமலின் ஈகோவைக் காட்ட வேண்டிய நேரமா இது?

அப்பறம் நீ என்னவாக விரும்புகிறாய் என்று மகனைப் பார்த்து அப்பா கேட்கிறார். இப்போ ஏன் கேட்கிறாய் என்று மகன் உளறுகிறான். அதுதான் அப்பாவுக்கு கேன்சர் என்பது அவனுக்குத் தெரிந்தாயிற்றே. அதனால்தானே அவர் அவனுடன் அன்பாக உட்கார்ந்து ஓரிரு நிமிடங்கள் பேச முன்வந்திருக்கிறார். அப்பறமும் இப்ப ஏன் கேட்கிற என்ற கேள்வி எப்படி வரும்?

அப்பாவின் நடிப்பின் மீது அதுவரை எந்தப் பெரிய மரியாதையும் இல்லாத மகன் அவருக்குக் கேன்சர் என்று தெரிந்ததும் கொலம்பியா போய் திரைக்கதை எழுதப் படித்து கோடம்பாக்கத்துக்காரர்களுக்கு அப்பா யார் என்பதைக் காட்ட வேண்டும் என்று தீர்மானம் செய்திருப்பதாகச் சொல்கிறான். அதற்கு முன் ஒரு காட்சியிலாவது நீ நல்ல நடிகன் அப்பா.. உனக்கு சரியான இயக்குநர்/திரைக்கதை கிடைக்கலை… அல்லது நீ விஷயம் தெரிஞ்சவங்க யார் சொல்றதையும் உன்னோட ஈகோனால கேட்கறதில்லை… என்று சொல்லியிருந்தால் அந்தக் காட்சி நியாயமாக இருந்திருக்கும்.

இப்படியாக முக்கியமான அம்சங்களில் மட்டுமல்ல சின்னச் சின்ன காட்சிகள்/விஷயங்களில்கூட கமலின் தரத்திலேயே படம் முழுவதும் இருக்கிறது. மரணம் என்ற கரு எந்தவகையிலும் அவரது சிந்தனையை மேம்படுத்தியிருக்கவில்லை. வேறென்ன, யானை இருந்தாலும் பொன்… இறந்தாலும் பொன்; கமல் இருந்தாலும் பித்தளை… இறந்தாலும் பித்தளையே!

http://malaigal.com/?p=6759

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
உத்தமவில்லன் மூன்று பெண்டாட்டிக்கார அரசியல்வாதியின்ரை கதையாயிருக்குமெண்டும் சனம் கதைக்குது.
 
ஜெயலலிதாவின் வழக்கு தீர்ப்பிற்கும் உத்தமவில்லன் வெளியிட்ட நாளுக்கும் ஏதோ இருக்கெண்டும் குசுகுசுக்கின்றார்கள்.  :D
  • கருத்துக்கள உறவுகள்

மறுபடியும் குழப்பிறீங்களே கிருபர்.

ஒரு வருடத்தில் ஒண்டு ரெண்டு படம் பார்க்கத்தான் பொறுமை இருக்கு. ஆனாபடியா தேர்வு gun மாரி இருக்கோணும்.

  • கருத்துக்கள உறவுகள்

வேணாம் கோஷன்-ஷே இந்த விசப் பரீட்சை.

நான் கமலின் தீவிர ரசிகன்,  ஆனால் இந்தப் படம் "ஷப்பாஆஆ....... ஆள விடுங்கடா சாமி "
செம மொக்கைப் படம்...    

 

One of the worst Kamal movie... :blink:  for Sure....

உத்தம வில்லனும், கமலஹாசனும்

வ.ஸ்ரீநிவாசன்

Uttama-Villain-Official-Trailer-kamal-ha

திரைப்படம் எடுப்பதும் ஒரு வித்தை. இத்தனை வருடங்களாக இதில் இருக்கிறேன் என்பதாலோ, இத்தனை படங்கள் எடுத்திருக்கிறேன் / நடித்திருக்கிறேன் என்பதாலோ அது கை வந்து விடாது.

சீதா தமிழில் சீதையாவதைப் போல் வித்யா, வித்யையாகி உச்சரிப்பில், பழக்கத்தில் வித்தையாகிறது. வித்யா என்றால் கல்வி, கற்றல். கல்விக் கடவுள் ‘கலை’மகள். ஆனால் ‘வித்தை’ என்னும் தமிழ்ச் சொல் பல பொருட்களிலும் வருகிறது. செப்பிடு வித்தை, கண்கட்டு வித்தை. ‘வித்தை காட்டுவது’. சினிமாவைக் கூட இப்படிச் சொல்லலாம். கண்கட்டு வித்தையால் வசனகர்த்தாக்களையும், நடிகர்களையும் முதலமைச்சர்களாக்க முடியும். தமிழில் வித்தை என்பதற்கு அதன் சம்ஸ்க்ருத பொருளையும் தாண்டி, திறன், தந்திரம், ஜாலம் என்றெல்லாம் அர்த்தங்கள் உண்டு.

கற்க வேண்டிய வித்தைகளிலேயே தலையாயது எது? சகல ஜீவராசிகளாலும் வேண்டப்படும் வித்தை எது?

‘சாகா வித்தை.’ இந்தப் படம் அதைப் பற்றியது.

இந்தப் படம் சாவைப் பற்றியது. இது சாவை ஆராய்கிறது; கூர்ந்து நோக்குகிறது. வாழ்வின், சாவின் மையப் புள்ளியை நோக்கி உட்புக முனைகிறது.

மனோரஞ்சன் என்னும், வயதாகிக் கொண்டிருக்கும், சினிமா சூப்பர் ஸ்டார் சற்று நாட்களில் இறக்கப் போகிறோம் என்று திடீரென்று அறிந்ததும் எஞ்சியுள்ள சின்னாட்களை என்ன செய்கிறார் என்பதுதான் படம். தொழில் ரீதியாக வெகு நாட்களாகப் பிரிந்திருக்கும் தன் குருநாதரோடு சேர்ந்து ஒரு படம்பண்ணுகிறார். அதைப் பார்த்து விட்டு வரும் ரசிகர்கள் சிரித்துக் கொண்டே வர வேண்டும் என்று அதைக் ‘காமெடிப் படமா’கச் செய்கிறார். சில நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட காலகட்டப் படம். “உத்தம வில்லன்”. அந்தப் படத்தின் நாயகன், உத்தமன். அவனும் ஒரு நடிகன், கூத்துக் கலைஞன். சந்தர்ப்பவசத்தால் சாகா வரம் பெற்றவன் என்று நம்பப் படுபவன்.

நாம் பார்க்கும் படமும், அந்தப் படத்தில் எடுக்கப்பட்டுக் கொண்டே காட்டப்படும் படமும் என்று இரண்டு படங்கள். இரண்டும் சாவு பற்றி ஆராயும், ஊடுருவிப்பார்க்கும் அது உண்மையில் என்ன என்பதை அறியப் பயணிக்கும் படங்கள். ஒன்று, மனோரஞ்சனின் நிஜமான துக்கமும், தீவிரமும் நிரம்பிய கண்ணெதிர் வாழ்க்கை. இன்னொன்று ஃபான்டஸியான, ஒரு ஃபேரி டேல் போல் இருக்கும் சந்தோஷமான எப்போதும் முடிவிலே இன்பம் என்னும் சுப முடிவு திரைப்பட வாழ்க்கை.

மனோரஞ்சன் வாழ்க்கை தலைவலியாய் இருக்கிறது. அந்தத் தலைவலிதான் சாவின் அழைப்பு மணி. சாவது நிச்சயம். அவனுக்கு அதிருஷ்ட வசமாக வாழ்வின் உயர்வு தாழ்வுகளை, பாவ புண்ணியங்களை, உத்தம, வில்லதனச் செயல்களை சரி செய்ய, ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அதை அவன் செய்கிறான். பிரிந்த குருவோடு ஒரு படம் செய்வதிலிருந்து, மறைந்த காதலிக்குப் பிறந்த தன் குழந்தையோடு இணைவதிலிருந்து, இருக்கும் மனைவியை அணைப்பதிலிருந்து, இளம் காதலியை ஏற்பதிலிருந்து, மகனோடு இணக்கமாவதிலிருந்து, மாமனாரோடு சகஜமாவதிலிருந்து எல்லாமும் செய்கிறான்.

தமிழில் பல்வேறு வகையான படங்கள் வந்துள்ளன. அவற்றில் ஆன்மீகப் போராட்டம் (Spiritual struggle) பற்றிய, அக மாசை அகற்றுவது பற்றிய படங்கள் மிக மிகக் கம்மி. ‘தேவதாஸ்’ சஞ்சலப் பேய் வசப்பட்டு காதலி(பார்வதி)யைப் பறிகொடுத்த ஒருவனின் மீட்சிக்கான தொல்வியுறும் முயற்சி பற்றியது; ‘யாருக்காக அழுதான்’ குற்றம் செய்யாதவன், செய்தவனுக்காகவும் சிந்தும் கண்ணீர் பற்றியது; ‘என்னதான் முடிவு’ குற்றவாளி, வாழ்க்கையின் மூலம் அடையும் தண்டனை மற்றும் பரிகாரம் பற்றியது; ‘பூவே பூச்சூடவா’ கல் மனதையும், அது கக்கும் விஷத்தையும் கரைக்கும் அன்பு பற்றியது. அவ்வரிசையில் ‘உத்தம வில்லன்’, எல்லொருக்குமே, அவர்கள் இப்போது இருக்கும் காட்சியின் அடுத்த காட்சியாக தோளுக்குப் பின்னால் மறைந்து நிற்கும், ஒரு முறை உண்மையாகவே முன்னால் வந்துவிடும் புலி போன்ற மரணம் மற்றும் அதன் வெகு அருகாமை நேரடிப் பார்வையில் ஒருவன் செய்யும் பாவ நிவிர்த்தி பற்றியது.

சாவு பற்றி ஜனரஞ்சக சினிமாக்களில் முன்பும் படங்கள் வந்திருக்கிறன. மேலோட்டமாக, சாவை ரொமான்டிக்காக அணுகும் நீர்க்குமிழி, நீலவானம், ஹ்ருஷிகேஷ் முகர்ஜியின் ஆனந்த் போன்ற படங்கள்;

“Often by a queer process of reasoning, movement was equated with action and action with melodrama” என்பார் சத்யஜித் ராய் (Our films their films) அதை நிரூபணமாக்கும் கண்ணீர் பம்ப் காட்சிகள் கொண்ட யதார்த்தத்துடன் அறவே சம்பந்தமில்லாத கணக்கிலடங்கா மெலோ டிராமாக்கள் வெளிவந்து அவற்றில் பல மாபெரும் வெற்றியும் பலரின் மனதில் நீங்காத இடமும் பெற்றுள்ளன.

உலக அளவில் குரோசாவாவின் ‘இகிரு’ , பெர்க்மனின் ‘செவன்த் ஸீல்’ முதலியவை சாவின் சில நிஜப் பரிமாணங்களைக் காட்டியவை. செவெந்த் ஸீலில் சாவும், மன்னனும் சதுரங்கம் ஆடும் காட்சிகள் மிகப் பிரபலமானவை. இகிரு வில் இன்னும் சில நாட்களில் சாக இருக்கும் ஒரு மாநகராட்சி அதிகாரி தன் வாழ்வை பொருளுள்ளதாக, முழுமையாக்க செய்யும் செய்லகளைக் காட்டும் அற்புதமான படம்.

முதலில் குறிப்பிட்ட ரொமான்டிக் மற்றும் டியர் ஜெர்கர்ஸ் ஆன நடுவாந்திரப் படங்கள் போலல்லாது, ஒரு புதிய அணுகு முறையில் உத்தம வில்லன் எடுக்கப் பட்டுள்ளது, அதன் பல குறை நிறைகளுடன்.

‘ராஜ பார்வை’ கமல்ஹாசனை நிமிர்ந்து பார்க்க வைத்தது. அதில் சில காட்சிகள் வழக்கமான தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் மாறாக இருந்தன; இன்னமும் நினைவில் இருக்கின்றன.

சிறுவன் மேலே பார் (Bar) கம்பியில் தொங்கிக் கொண்டிருக்கும் போது அதில் விளையாட ஏற்றிவிட்ட தகப்பனார் மாரடைப்பு வந்து சாவார். அந்தச் சிறுவன் கை நழுவி அடியற்ற பள்ளத்துக்குள் கீழே விழுந்து கொண்டே இருப்பான்.

‘அந்தி மழை’ப் பாடலைக் காட்சிப் படுத்திய விதம், ‘ரிடிக்யுலஸ்’,என்று சொல்லிக் கொண்டே எப்போதும் எரிச்சலில் இருக்கும் மாதவியின் தந்தை, சித்தியின் கூச்சமுற வைக்கும் பொய்ப்பாசம், அற்புதமான தாத்தா-பேத்தி உறவு – இவை போல், வேறு எந்த கமலஹாசன் படத்திலும் பாசாங்கு இல்லாத, திணிக்கப்படாத, செல்ஃப் கான்ஷியசாக இல்லாத, இயல்பாகவே எழுந்த காட்சிகள் எனக்குக் கிடைத்ததில்லை.

07slide3.jpg

முக்கியமாகப் பலரும் போற்றும் ‘நாயகன்’ என்னும் ஆழமேயில்லாத பாசாங்குப் படம், அதை விட நல்லதே என்றாலும் திசை தெரியாத, வன்முறையைப் பெரிதும் நம்பி எடுக்கப்பட்ட, மிகச் சிறந்த கடவுள் எதிர்ப்புப் படமாக வந்திருக்க வேண்டிய ‘மகாநதி’.

‘குருதிப் புனல்’ மற்றும் ‘உன்னைப் போல் ஒருவன்’ இரண்டும் ஹிந்திப் படங்களின் தமிழ் ஆக்கங்கள். ‘த்ரோகாலி’ல் இருக்கும் ஆன்மீகப் போராட்டத்தை கமல்ஹாசன் என்னும் நட்சத்திர பிம்பத்தால் முழுதாய் ஸ்வீகரிக்க முடியவில்லை. அதனால்தான் துரோகி, (ஒருவேளை ‘துரோகி கமலஹாசன்’ என்னும் பெயர் வந்து விட வாய்ப்பு இருந்ததால்) என்னும் சரியான பெயர் குருதிப் புனலாய் மாற்றப் பட்டு வந்தது. உன்னைப் போல் ஒருவனில் அசலிலிருந்து மாற்றப்பட்ட விஷயங்கள் பிழை மிகுந்து, படத்தின் தீவிரத் தன்மையைப் பெரிதும் குலைத்து இருந்தன. ‘எ வெட்னஸ்டே’யில் ஷாவின் நடிப்பை வேறு முதலிலேயே பார்த்து விட்டதால் நிலைமை அவருக்கு சாதகமாய்ப் போய் விட்டது.

‘தேவர்மகன்’ வணிக வெற்றியை மட்டுமே நோக்கி எடுக்கப்பட்ட நல்ல படமே போன்ற நடுவாந்திரப் படம். ‘அன்பே சிவம்’ அதை விட அபாயமானது. நல்ல படம் என்று சொல்லி, நல்ல படம் என்று நம்பப் படுகிற மோசமான படம் என்பதால். ஃப்ளாஷ் பேக் ஆரம்பிக்கும் வரையிலான முதல் பகுதி நன்றாகவே இருக்க அப்புறம் முற்போக்குவாதி கமல் வந்து விடுவார். படம் செயற்கையான, திணிக்கப்பட்ட இடது சாரி சிந்தனைகள், நம்ப முடியா சம்பவங்கள், மனிதச் சித்தரிப்புகள், பாசாங்கான நெகிழ்சித் தருணங்கள் என்று எதிர் பார்க்கிற திசையில் கண்றாவியாகப் பயணிக்கும், மெனக்கெட்டு கட்டப் பட்ட செத்த படமாகி விடும். திருடன் யூகி சேதுவிடம், “சம்ஸ்க்ருதம் தெரியுமா” என்று மரியாதை கலந்த ஆச்சர்யத்தோடு எந்த அன்பரசு கேட்பாராம் என்று கமலைச் சந்தித்தால் கேட்க வேண்டும்.

‘ஹே ராமி’ல் ராணி முகர்ஜி வந்து விட்டு இறந்ததும் நடக்கும் நிகழ்வுகளும், நிலையும் சுமார் 20 நிமிடங்களுக்கு ஆச்சர்யமாகத் தீவிரமாக இருக்கும். அப்புறம் கமல், அவரது கொள்கைகள், வலிய புகுத்தப்பட்ட உடன் நிகழ்வுகள், செயற்கைத்தனங்கள் எல்லாம் படத்தை ஆக்ரமிக்கும். குணா, ஆளவந்தான் Disasters. நம்மவரில் நாகேஷ் மட்டும்தான்.

நகைச்சுவைப் படங்கள் பலதிலும் மிகச் சிறப்பாக நடித்திருக்கும் கமலஹாசன், ஒப்பனை மற்றும் தோற்ற மாறுபாடுகளின் உதவியில்லாமல் சாமான்ய மனிதராகவே வந்து நன்றாக நடித்திருந்தது மீண்டும் கோகிலா, மூன்றாம் பிறை போன்ற படங்களில். மூன்றாம் பிறையிலும் கடைசி மெலோடிராமா காட்சி படத்தின் பொதுவான லயத்தோடு பொருந்தாமல் துருத்திக் கொண்டு நிற்கும்.

இவற்றையெல்லாம் போலலல்லாது உத்தம வில்லன் படத்தில்தான் இயல்பான தீவிரமான காட்சிகள் மற்றும் நடிப்பு, குறிப்பாக கமலஹாசனின் நடிப்பு யதார்தமாக மலர்ந்துள்ளன.

அப்போதுதான் அக்கா தம்பி என்று தெரிந்து கொண்ட கமலஹாசனின் மகளும், மகனும் அணைத்துக் கொள்ளும் உணர்ச்சி மிகு தருணத்தில் அங்கு உள்ளே வரும் அந்தப் பையனின் கேர்ல் ஃப்ரெண்ட் அதைத் தப்பாய் எடுத்துக் கொள்ள, விவரம் சொல்லி அவளிடம் விளக்க முற்படும் மகனுக்கு ஓர் உதவியும் செய்யாமல் அவனுடைய தர்ம சங்கடத்தைப் பார்த்து தந்தை கமலஹாசன் சிரிப்பை அடக்க முடியாமல், கையைத் தட்டிக் கொண்டே அறைக்கு வெளியே செல்வதும், உள்ளே நுழையும் ‘என்ன” என்று கேட்கும் ஜெயராமிடம் “போய்ப் பாருங்கள்” என்று சொல்லி சிரிப்பை நிறுத்தாமலே போவதும்.. .. .. இது போன்ற காட்சியைக் கடைசியாக தமிழ்ப் படத்தில் எப்போது பார்த்தோம் என்பதே நினைவில் இல்லை.

தன் மகளும் தன் மகனும் ஒன்று சேர்ந்து விட்டார்கள். அப்போது நியாயமான, ஆனால் அந்தத் தருணத்தில் அபத்தமான, மன உடைவோடு பையனின் சிநேகிதி. இன்னும் சில நொடிகளில் அவள் சந்தேகம் நிவர்த்தியாகப் போகிறது. அதை சரி செய்து கொண்டிருக்க வேண்டிய அவகாசமோ, அவசியமோ தந்தைக்கு இல்லை. தன் மகளும் மகனும் சேர்ந்து விட்டார்கள். மனம் ஒன்றி விட்டார்கள். எந்த சிறுபிள்ளைத்தனமான உராய்வுகளும், வஞ்சிக்கப்பட்டு விட்ட உணர்வுகளும் இல்லை. தன் வாழ்வின் கடைசித் தருணங்கள்தாம். இருந்தாலும் என்ன? என் மகளும் மகனும் சேர்ந்து விட்டார்கள். அந்த சிநேகிதி, இன்னொரு சிறுமி, அவள் சந்தேகம், நியாயமான சந்தேகம் இதோ நிவர்த்தியாகப் போகிறது. இடையில் விளங்கி அவள் சந்தேகத்தை முடிக்கும் வரை கொஞ்ச நேரம் திண்டாடப் போகும் தன் மகன். ஆம் வாழ்வு முடியப் போகும் நேரம். அதுவே துயரம், அதுவே இந்த ஆனந்தம் நிகழக் காரணமும்.

அந்தக் குழந்தைகளும் என்னமாய் நடித்திருக்கிறார்கள். கமலஹாசனின் 50 + வருட அனுபவத்தில் அவர் சீரியஸாக நடித்ததில் இது முதன்மையான காட்சி.

தன் வாழ்வு சாச்வதம் என்கிற அனைவருக்கும் பொதுவான மயக்கத்தில், புகழின் உச்சியில், போதைகளில் வாழும் மனோரஞ்சனின் அந்த ‘ப்ளாக் மெயிலரை’ ஒழிக்கச் சொல்லும் அகம்பாவம், நிலையாமை என்னும் நிதர்சனத்தின் முன் நீங்கி ஜெயராமுடன் முதல் தரம் உட்கார்ந்து உரையாடும் காட்சி. அந்த சதை தொங்கும் கிழ முகத்தின் பரந்த கண்களில்தான் எத்தனை நினைவுகளின் வாசனை சுமக்கும் உணர்ச்சிகள். இந்த மாதிரி க்ளோசப்பில் தைரியமாக நடிக்க இன்று தமிழில் யார் இருக்கிறார்கள்? எவ்வளவு அளவான, தீவிரமான, மிகை எட்டியே பார்க்காத, சப்ட்யூட் என்ற பெயரில் சறுக்கி விழாத கச்சிதமான, அடர்த்தியான, நுட்பமான நடிப்பு. ஜெயராமும் இணையாக நடித்திருக்கிறார்.

கையில் பந்துடன் அப்பாவும், பிள்ளையும் வாழ்க்கையின் உக்கிர கணத்தை நெருங்குகிறார்கள் என்கையில் ஐயோ பாலச்சந்தர் போல நல்ல தருணங்களை ‘டைரக்டோரியல் டச்’ என்று கொலை செய்து விடப் போகிறார்களே என்று நினைத்து பயந்தேன். நல்ல வேளையாகக் க்ளீஷேவாக ஆரம்பிக்கும் கட்சி தன் க்ளீஷே தனத்தைக் களைந்து இயல்பாகி அருமையாக மலர்ந்து விட்டது. மனோகராக வரும் அந்தப் பையன் யார்? நடிக்கவே இல்லை. நம் பக்கத்துத் தெரு பணக்காரப் பையன் போல் இருக்கிறான்.

மரணம் அணைத்துக் கொள்ள அருகில் நிற்கிறது. பகுத்தறிவு வக்கிரங்களும், மரபு, சரி தப்பு போன்ற பாரச் சுமைகளும் பனி போல் மறைந்து பகா அறிவும், அச்சமற்ற பேரன்பும் நிரம்பி ஒரு காட்சியில் மகன், மகளை அணைத்துக் கொள்ளும் மனோரஞ்சனிடம் மனைவியும் வருவார். அவரையும் அவரால் அணைத்துக் கொள்ள முடிகிறது; அணைத்துக் கொள்வார். அனைத்தையும் அரவணைத்துக் கொள்ளும் மன நிலைக்குப் போயிருப்பார். இன்னும் அர்பணா, சொக்கு, மார்க்க தரிசி, கார் டிரைவர், ஜேகப், மாமனார் எல்லோருக்கும் அவர் அரவணைப்பில் இடம் இருக்கிறது. அருகில் வந்திருந்தால் அவர்களையும், நம்மையுமே கூட அணைத்துக் கொண்டிருப்பார்.

uttama-villain-07.png

இறுதி ஷூட்டிங் முடிந்ததும் ‘அவர்’ என்று சொல்வதற்குப் பதிலாக ‘அது’ என்று சொல்லி விட்டேன், மீண்டும் நடிக்கவா என்று புது மாணவனைப் போல் குற்ற உணர்வுடன், மரியாதை மிகக் கேட்கும் கமலஹாசன், பாலச் சந்தர் ‘வேண்டாம் சரி செய்து கொள்ளலாம்’ என்கையில் மீண்டும் பரவாயில்லையா என்று அதற்கு ஒப்புக் கொள்ளத் தயங்கி தான் செய்த தவறை மீண்டும் சொல்ல முற்படுகையில் வாய் லேசாகாக் குழறும். நாம் முதலில் அதைக் கவனிக்க மாட்டோம். ஒரு புறத்துக் கன்னம் மற்றும் தாடையில் ஒரு மிக நுண்ணிய அசைவுடன் அந்தக் குழறலை அவரிடம் மீண்டும் கவனிக்கும் போது மனம் துணுக்குறும். ஐயோ என்ன ஆச்சு என்று. அந்த வசன உச்சரிப்பையும், அந்த சின்னஞ்சிறு குழறலையும் அதி அற்புதமான இயல்புத் தன்மையோடு கொண்டு வந்திருப்பார்.

ஊர்வசி மார்வலி வந்து படுக்கையில் கணவனிடமும் அருகில் உள்ள ஆண்ட்ரியாவிடமும் பேசும் காட்சி. அவரது க்ளோஸ் அப்கள்.

கடைசிக் காட்சியில் சற்றுத் தொலைவில் டாக்டர் ஆண்ட்ரியா எல்லாம் முடிந்து விட்டது என்பதைப் போல நிற்பதைப் பார்த்து கமலஹாசனின் மகளும், மகனும் அவரிடம் செல்ல அவர் அவர்கள் இருவரையும் அணைத்துக் கொள்வார். மனோரஞ்சனின் இறப்பைவேறு எந்த விதத்திலும் காட்டி கோரமாக்காமல் செய்திருக்கிறார்கள்.

பாலச்சந்தர் நெடுநாள் தொழில் விரோதி விஸ்வநாத்திடம் சாரி சொல்லும் காட்சி. மனோவின் மாமியாரின் வெகு யதார்த்தமான நடமாட்டங்கள்.

கார் காட்சி இன்னொரு அற்புதமான காட்சியாக இருந்திருக்க வேண்டிய ஒன்று. நினைத்த அளவு நன்றாக வர வில்லை என்று தோன்றுகிறது. ஆண்ட்ரியாவை அவர் தன் மடியில் கிடத்திக் கொண்டிருந்தால் ஒரு வேளை இன்னும் பொருத்தமாக இருந்திருக்கலாம்.

மனோரஞ்சனின் காதலி யாமினிக்குப் பிறந்த, ஆனால் பட்டம் பெறும் வயது வரை, யாமினி இறக்கும் வரை அப்படி ஒரு மகள் இருப்பதே மனோரஞ்சனுக்குத் தெரியாத, மகள் மனோன்மணியாக வரும் பார்வதி மேனன் என்னமாய் நடித்திருக்கிறார். ஓர் இளம் நடிகை இவ்வளவு கூர்மையாக, இவ்வளவு பவர்ஃபுல்லாக நடித்திருப்பதும் தமிழ் சினிமாவில் வெகு காலத்துக்குப் பின் நிகழ்ந்துள்ளது. இத்தனைக்கும் அவர் வருவது வெகு சில காட்சிகளில்தான், பேசுவது இரண்டே காட்சிகளில்தான். அந்த இளமைக்கே உரித்த நேர்மை, சுய மரியாதை. அடடா !

எம். எஸ். பாஸ்கர் நன்றாக நடித்திருப்பதை எல்லோரும் சொல்லி விட்டார்கள்; அப்படியும் அது நன்றாக இருந்தது. இவரைப் போல் அருமையான நடிகர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். பயன்படுத்தும் கமலஹாசனுக்குப் பாராட்டு.

கே. பாலசந்தர் பேசுவது – “படவா ராஸ்கல், லாங் லாங் அகோ, ஸோ லாங் அகோ” போன்றவை நாகேஷ் பேசுவது மாதிரியே இருந்து நாகேஷ் இந்தப் படத்தில் இல்லையே என்கிற குறையைத் தீர்த்து விட்டது. இவர் சொல்லிக் கொடுத்துதான் அவர் பேசினாரா அல்லது அவர் தாக்கத்தால் இவர் பேசுகிறாரா என்று தெரியவில்லை. அவர் கே. விஸ்வநாத்தை ‘ராவ்ஜி’ என்று அழைப்பது நாகேஷ் நினைப்பால்தானோ என்னவோ? கே. பி. யின் நடிப்பை அவர் படங்களில் பல நடிக, நடிகைகளிடம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். சிவாஜியைப் போல் தோற்றுப் போன பந்தயக்காரர். 83 வயதில் நன்றாகவே செய்திருக்கிறார்.

ஆனால் பாலச்சந்தரை விட ஓரளவு நன்றாக படம் எடுத்திருக்கும் கே. விஸ்வநாத் அவரை விட நன்றாக நடித்தும் விட்டார். கே. பாலச்சந்தருக்கு மிக உயர்வான வேடம். அவராகவே (ஆனால் வேறு பெயரில்) வருகிறார், ஓர் உத்தமராக. ஆனால் கே. விஸ்வநாத்துக்கு வில்லன் வேடம். அதைச் செய்ய மிகவும் துணிவு வேண்டும். அதற்காகவும், இத்தனை இயல்பாக நடித்திருப்பற்காகவும் அவரைப் பாராட்ட வேண்டும்.

அன்பே சிவத்தில் வரும் ஃப்ளாஷ் பேக் முதலில் வரும் படத்தின் தரத்தைக் குலைத்து விடும். உத்தம வில்லனில் படத்துக்குள் வரும் படமான உத்தமனின் உத்தம வில்லன் வெளியில் வரும் மனோரஞ்சனின் உத்தம வில்லன் படத்துக்கு சமானமான ஆழத்தோடு, நுட்பத்தோடு, முற்றிலும் கான்ட்ராஸ்டான வெளிப்பாட்டில், கற்பனை செய்யப் பட்டு இருக்கிறது. ஆனால் எடுத்த விதத்தில் முதல் 10 நிமிடங்கள் செட்டில் ஆகவேயில்லை. வெகு சீரியசாகப் போய்க் கொண்டிருந்த படம் தொய்ந்து விடுகிறது. ஆனால் அதன் பின் முற்றிலும் புதிய நகைச்சுவைப் பாணியில் (க்ரேஸி மோஹன் நினைவு வராத வண்ணம்) போனாலும் அதிலுள்ள சில விஷயங்கள் தமிழ்ப் பார்வையாளர்களை அந்நியப் படுத்துகிறது.

‘தெய்யம்’ என்கிற பாணியில் எடுத்தது மீசைக்கு பதிலாக வண்ணக் கோடுகளில் நரசிம்மமே நரபூனை ஆகி விடுகிறார். இது ஒரு மாதிரி சீப் ப்ரொடக்ஷன் என்கிற இம்ப்ரெஷனைத் தருகின்றது.

தைரியமாக அமெடியஸ் படத்தில் வரும் ஆபரா காட்சிகளைப் போலவோ, நமக்குப் பரிச்சயமான தெருக் கூத்துப் பாணியில் முற்றிலுமோ எடுத்திருக்கலாம்.

அதே போல் இசை. இந்த பின்னணிக்கு, இம்மாதிரி நாட்டார் கலைக்கு ஒரு கே.வி. மகாதேவன், எம். எஸ். விஸ்வநாதன் சரியாக இருந்திருப்பார்கள். முன்னவர் இல்லை. பின்னவர் இசையமத்துக் கொண்டில்லை. அதுதான் இளைய ராஜா இருக்கிறாரே. அவரை வைத்திருந்தால் வேண்டிய மட்டும் செய்திருப்பாரே. கிப்ரான் மோசமில்லை. ஆனால் உத்தமன் கதையின் நகைச்சுவை இசையில் வெளியாக வில்லை. இது என் இசை நுணுக்கங்கள் அறியா பாமரக் கருத்து

ராஜேஷ் கன்னா, நாகேஷ், சிவாஜி போன்றவர்களை ஆரம்ப கால கமலஹசன் நடிப்பில் காணலாம். இன்னொரு மாபெரும் நடிகனான வடிவேலுவையும் உத்தமனில் காண முடிந்தது. நாசர் இருப்பது வேறு 23ம் புலிகேசியை நினைவு படுத்துகிறது.

நாசருக்குப் பதிலாக பிரகாஷ் ராஜ் போன்றவர்களைப் போட்டிருந்தால் இது ஒருவேளை தவிர்க்கப் பட்டிருக்குமோ என்னவோ?

ஒப்பனை, குடுமி, பஞ்சகச்சம், மேக்கப் எல்லாம் தெலுங்கு, கன்னட சாயல். ரேலங்கி காலத்திலிருந்து பிரம்மானந்தம் வரை நினைவுக்கு வருகிறார்கள்.

காட்சிகளும் ப்ரும்மாண்டமாகத் தோன்றவில்லை. கூத்து காட்சிகளைத்தவிர இதர காட்சிகளும் மேடை நாடகம்போலவே உள்ளன. கே. பி. நாடகத்துக்கும், சினிமாவுக்கும் வித்தியாசம் இல்லாமல் முதலில் எல்லாம் படம் எடுத்தாரே, அந்த Terrible habit of theatre ரை நினைவூட்டவோ?

திருவிளையாடல் போன்ற சாதாரண வணிகப் படத்தில் கூட அந்தக் காலத்திலேயே அவ்வளவாக தொழில் நுட்பத்துக்காக பெயர் பெற்றிராத ஏபிஎன் ஒரு பிரும்மாண்டத்தைக் கொண்டு வந்திருப்பார். ஸூம் வசதிகளோ இதர வசதிகளோ இல்லாத காலத்திலேயே ‘ஒருநாள் போதுமா’ காட்சியிலும், திறந்த வெளிக் காட்சிகளிலும் நிறைய ஸ்பேஸ் இருப்பது போல் காட்டியிருப்பார்.

படத்தில் முக்கியமாக வந்திருக்க வேண்டிய இந்தப் பகுதியே ஏதோ பையன்கள் கரியால் சுவரில் ஸ்டம்ப் வரைந்து ஆடும் க்ரிகெட் மாதிரி ஆகி விட்டது. அவர்களுக்கு வெகு சுவாரஸ்யமாக இருக்கும். ஆடியன்ஸுக்கு?

பேராசிரியர் கு. ஞான சம்பந்தம் அமைச்சராகவே தெரிந்தார். இல்லாவிட்டால் நாசரின் நடு சீட்டைப் பிடித்துக் கொண்டு பட்டிமன்ற நடுவராகி விடுவாரோ என்கிற பயம் வந்திருக்கும். அமைச்சர் கட்சி மாறுவதும், இருக்கும் வலக்காதைப் பொத்திக் கொண்டு நாசர் பூஜா குமாரை காமத்தோடு அணுகுவதும், அவருக்கு கமல் ஊட்டுவதும், அவரது வயிற்று உபாதையும் அப்போது வரும் அருவருப்பூட்டிவிடக் கூடிய ஆனால் ஊட்டாத வசனங்களும் கமல் மற்றும் இதரர் நடிப்பும் என்று நன்றாகவே போகிறது. ஆனால் முக்கால்வாசிக்கு மேல் காதில் வசனங்கள் சரியாக விழவில்லை. பாடல்கள் சுத்தமாகக் கேட்கவில்லை. அதில் கமலஹாசன் தன் கொள்கைகளைப் புகுத்தியிருந்தாலும் நல்ல வேளையாக எனக்கு அவை கேட்கவில்லை; ஒருவேளை நன்றாகவே எழுதியிருந்தால் படத்துக்கு இப்படி கேட்காமல் இருப்பது பெரிய அநீதி. சென்னையில் படம் பார்த்த என் நண்பர்களும் இதையே சொன்னார்கள்.

ஜெயகாந்தன் மும்பை எக்ஸ்பிரஸ் பார்த்துவிட்டு “எனக்குப் படம் பிடித்தது; அதுதான் பயமாய் இருக்கிறது’ என்றாராம். அது போல் இந்த உள் படத்தின் காமெடி வேறு திசையில், வேறு தளத்தில் இருக்கிறது. எனக்குப் பிடிக்கிறது; அதுதான் பயமாகவும் இருக்கிறது.

புலி, பூஜா குமார், அப்பாவி உத்தமன், ம்ருத்யுஞ்ச்ய மந்திரம், அரசன், அமைச்சர்கள், சூழ்ச்சி, இறுதியில் ஒரு ட்விஸ்ட் எல்லாம் நன்றாக இருந்தும், புது மாதிரியான நகைச்சுவை இருந்தும், ஏதோ பஞ்சத்தில் அடிபட்டு படம் எடுத்த மாதிரி இருக்கிறது.

ஒரு நல்ல படம் எடுக்க முயன்றிருப்பதால் வேறு சிலதும் சொல்ல வேண்டியிருக்கிறது.

இரண்டு நாள் ஜுரம் அடித்தாலே கண்கள் கருவளையம் சூழ்ந்து, தாடைகள் தொங்கி களைப்பு முகத்தில் குடிகொள்கையில் இவ்வளவு சீரியஸான வியாதிக்கு ஷூட்டிங் இல்லாத சமயங்களாக சில காட்சிகளைக் காட்டி களைப்புற்ற, கொஞ்சம் கொஞ்சமாக சோபை இழந்து கொண்டிருக்கும் மனோரஞ்சனைக் காட்டியிருக்கலாம்.

ஒரு சூப்பர் ஸ்டாருக்கு உடல் நலக் குறைவு என்றால் ஒரு மருத்துவர்களின் பட்டாளமே வந்து விடாதா? இரண்டே மருத்துவர்கள்தான் வருகிறார்கள். வெளி நாடு போக மாட்டாரா? படம் எடுக்கிறேன் என்று இங்குதான் இருப்பாரா?

மனோரஞ்சனின் உத்தம வில்லனிலும் ஒரு சூப்பர் ஸ்டாரின் வாழ்வில் சாதாரணமாகச் சூழ்ந்திருக்கும் ப்ரும்மாண்டம் இல்லை. வீடு, படுக்கை அறை, தோட்டம், ஆஸ்பத்ரி முதற்கொண்டு எல்லாமே ஒரு அப்பர் மிடில் க்ளாஸ் அமைப்பு போல் உள்ளன.

இதற்கா 80 கோடி செலவு?

ஹிரண்ய வதம் நாடகத்தில் “ஹரி ஹரி” என்கையில் “சொறி சொறி” என்று கேலி செய்திருக்கிறார்கள் என்று கேள்விப் பட்டு கமலஹாசனது தீவிர ரசிகைகள் இந்தப் படத்தைப் பார்க்க வரவில்லை. அவர்கள் கமலஹாசனை விட ம்ருத்யுஞ்சயனான நரசிம்மனுக்கு அதிகம் ரசிகைகள். இன்னும் பல கமல் ப்ராண்ட் பிராமண ஜாதி, ஹிந்து மத தாழ்ச்சிகள், பிற மத உயற்சிகள் படத்தில் உண்டு. ஒரு வேளை இவை வேறு யாராவது நடித்திருக்கும் படத்தில் கவனிக்கப் படாமலே பொயிருக்கும். ஆனால், வெண்மணியில் பலிகளின் மீதே குற்றம் கண்டுபிடித்து, திண்ணியம், உத்தபுரத்தில் காட்டும் எதிர்ப்பு முணுமுணுப்பில் கண்ணியத்தை(!)க் கடைபிடித்து, திருப்பித் தாக்க இயலாத ‘சாஃப்ட் டார்கெட்’களை மட்டும் தொடர்ந்து அவமானப் படுத்தும் தமிழக மாவீரர்களின் வரிசையில் வந்த, இவரது கடந்த கால செயல்பாடுகள் இவருக்கு எதிராகவே உள்ளன.

மிகக் கட்டுக் கோப்பாகப் போய்க் கொண்டிருக்கும் மனோரஞ்சனின் கதையில் ஒரு சில வசனங்கள் சற்று பொருந்தாமல் வந்து விழுந்து காட்சிகளின் தீவிரத் தன்மையைத் திசை திருப்புகின்றன. ஊர்வசி மாரடைப்புக்குப் பின் வரும் காட்சியில் கணவனின் நிலையைச் சற்று முன்தான் அறிந்திருப்பவர், வெகு சீக்கிரம் சாகவிருக்கும் தன் கணவர் தன் கண்ணெதிரே எப்போதும் இருக்க வேண்டும் என்கிறவர் நடுவில் தன் உடல் குண்டானதைப் பற்றி புலம்புவது, மனோரஞ்சன் திடீரென்று கமலஹாசனாகி “ஆத்மாவுக்கு காது கேட்காது” என்கையில், தன் பாய் ஃபிரெண்ட் இன்னொரு பெண்ணை அணைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்த பதின் வயது இளம் பெண் (குழந்தை) அதிர்ச்சியால், அருவருப்பால் தாக்கப் பட்ட இடத்தில் ‘உனக்காகத்தான் தலை மயிரை குறைத்துக் கொண்டேன்” என்பது எல்லாமே இன்னமும் கொஞ்சம் கொஞ்சம் பழைய கெட்ட கற்றதும், பெற்றதுமான பழக்கங்கள் இவரிடம் ஒட்டிக் கொண்டிருக்கின்றன என்பதைக் காட்டுகின்றன.

நிறைய பொடி வைத்து எழுதப் பட்ட வசனங்கள். கொஞ்சம் ஓவர் லோட். அதே போல் காட்சி மற்றும் கதை அமைப்பு. உதாரணமாக மனோரஞ்சன் கான்சல் செய்யும் படம் ஆதி சங்கரர். அதை நிறுத்தி விட்டுத்தான் உத்தமனைப் பற்றிய உத்தம வில்லனை எடுக்கிறான்.

“புனரபி ஜனனம், புனரபி மரணம்’ என்றிருக்கிற கடக்க முடியாத இப்பிறவிப் பெருங்கடலைக் கடக்க எனக்கு உதவுவாய்” என்று இறைவனை இரைஞ்சிய, “ப்ரம்மமே ஆன ஆத்மாவாகிய உனக்கு பிறப்புமில்லை; இறப்புமில்லை” என்று மரணமிலாப் பெருவாழ்வு பற்றி உலகுக்கு அறிவித்த மஹா ஞானி சங்கரன். அறுதியான இறுதி உறுதியான சாவே அற்ற பிரம்மத்தை உலகுக்கு எடுத்து உணர்த்திய ஆதி சங்கரனை தவிர்த்து விட்டு அதைவிட சிரமமான ஆனால் அதனோடு ஒப்பிடுகையில் அல்பமான ம்ருத்யுஞ்சய மந்திரத்தைத் தேடி அலைகிறான் மனோ.

ம்ருத்யுஞ்சய மந்திரம் உண்டா கிடையாதா என்பதில் தன் நேரடிப் பொருளில் அது இல்லை என்கிற நிலைப்பாட்டை மிருதுவாகத் தெரிவித்திருக்கிறார். அதே சமயம் அதன் எதிரிடையான அது உண்டு என்பதையும் காட்டியிருக்கிறார். (“a truth in art is that whose opposite is also true” –Oscar wilde) மந்திரம் போல் சொல்லின்பம் வேண்டும் (பாரதி) சொற்கள் மந்திரம் அல்ல. மந்திரம் சொல்லாய்த்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லை. சொற்களில் சில மந்திரம் ஆகையில் கற்களில் சில தெய்வமும் ஆகலாம். சொற்கள் எவை அதில் மந்திரம் எவை கற்கள் எவை அதில் தெய்வம் எவை என உணரும் சுத்த அறிவே சிவம். அந்த சிவமே அன்பு. அன்பே ம்ருத்யுஞ்ச்ய மந்திரம்.

ம்ருத்யுஞ்சய மந்திரம் வெறுமனே சொற்களாலான ஒரு மந்திரம் அல்ல என்று உத்தமனே விளக்குகிறான். அந்த வழி முறைகளில் முதல் இரண்டும் கடினமானவையாக இருக்க மூன்றாவதான காலத்தால் அழியாத கலைஞனாக ஆக நாசர் விழைகிறார். ஆம். மிகச் சிறந்த கலைச் செயலால் “பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்டீர்” என்கிறான் உத்தமன். அதாவது மனோரஞ்சன். கமலஹாசன் செய்யத் துணிவதும், இது மாதிரி ஒரு படத்தை எடுத்து, அதுதானே? ஆக அது – ம்ருத்யுஞ்சய மந்திரம் – உள்ளது.

இறுதியில் உத்தமன் வாழ்கிறான். மனோரஞ்சன் இறக்கிறான். எனினும் அவன் நடித்த உத்தமன் பாத்திரம் மூலம் அவனும் சாகாமல் வாழலாம். ம்ருத்யுஞ்சய மந்திரம் அப்படியும் உண்மையாகி விடுகிறது.

உத்தம வில்லன் பார்க்கையில் சத்யஜித் ராயின் ‘நாயக்’, ‘கூபி கய்ன் பாகா பய்ன்’ படங்கள் இரண்டும் ஞாபகம் வந்தன. ஒன்று சொஃபிஸ்டிகேடட் தருணங்களாலான, வசதி நிறைந்த வாழ்வு கிடைத்த மனிதர்களைப் பற்றியது. ஒரு ரயில் பயணம், ஒரு நடிகன், ஒரு பெண் நிரூபர். காதல் கத்தரிக்காய் எல்லாம் கிடையாது. மிகச் சிறந்த அகப் போராட்டங்கள் கொண்ட படம். இரண்டாவது ஃபேரி டேல். ராஜா காலத்து ஃபாண்டஸி. உத்தமன் கதையைப் போல. சங்கீதமே வராத கிராமிய சாமானிய பதின் வயது இளைஞர்கள். அதன் காரணமாகவே நாடு கடத்தப் பட்டு காட்டில் ஒரு தேவதை தந்த வரங்களால் போர்களையும், பஞ்சங்களையும், பசியையும் தீர்த்து மனிதர்களை ஆனந்தமாக்கும் படம். படத்தின் இசை. அதன் வெகுளித் தனம். அதன் அன்பு. அதன் நோக்கம்.

நாயக் மாதிரி மனோரஞ்சனின் சொஃபிஸ்டிகேடட் வாழ்க்கை, எல்லா குழப்பங்களுடனும், ஆத்ம ஹத்தியுடனும் கொந்தளிக்கும் affluence. கூபி கய்ன் மாதிரி இன்னொசென்ஸை மட்டுமே கருவியாய்க் கொண்ட ஒரு அப்பாவியின் கதை. ( இதில் அந்த அப்பாவித்தனம் ஒரு புத்திசாலி அரசனுடைய வேடம் என்று உத்தமனின் கதை முடிகிறது)

அந்தத் தளத்துக்கு இந்தப் படத்தைக் கொண்டு போயிருக்லாம். தவற விட்டு விட்டார்கள். அப்போது ஒருவேளை படம் ஓடியிருக்காது. இப்போதும் நிலைமை என்னவென்று நிச்சயமாகத் தெரியவில்லை.

குணம் குற்றம் இரண்டையும், பிறதையும் நாடியாயிற்று. அவற்றுள் மிகை நாடுதல் கீழே:-

50 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் இருக்கும் கமலஹாசன் நடிப்பார்; விதவிதமாக வருவார்; ஆடுவார்; பாடுவார்; முத்தமிடுவார், யுத்தமிடுவார். எனவே அப்ளாஸ் காட்சிகளை மனதில் வைத்து நரைகூடிக் கிழப்பருவம் எய்திக் கொண்டிருக்கும் ஒரு நடிகன் இளமையாகவே என்றும் தெரிவதற்காக எடுத்துக் கொள்ளும் முயற்சிகளையும், இயற்கைக்கும் அவன் முயற்சிகளுக்குமான போராட்டத்தையும் கூட எடுத்திருக்கலாம்.

ஆனால் அதை ஏற்கனவே நம் காலத்திய சில இந்திய நட்சத்திரங்கள் வாழ்ந்து காட்டி விட்டார்கள்; அமோல் பாலேகர், அனில் சாடர்ஜியை வைத்து நகாப் (Naquab) டி.வி.சீரியல் எடுத்து விட்டார். அந்தப் பேராசையின் உச்ச கட்ட நிர்மூலத்தை ‘ஃபெடொரா’வில் ‘பில்லி வைல்டர்’ காட்டிவிட்டார். சிவாஜி டைரெக்டராக வரும் ‘எது மாதிரியும் இல்லாத புதுமாதிரி’ படம் எடுப்பதாகச் சொன்ன திரு ஏ.எஸ். பிரகாசம் ‘சாதனை’யில் மிகப்பெரிய வாய்ப்பைக் தவற விட்டிருப்பார். அதுபோலவும் ஆகியிருந்திருக்கும். நன்றாக எடுக்கப் பட்டிருந்தால் அவர் ரசிகர்களையும், தயாரிப்பாளர்களையும் திருப்திப் படுத்தியிருக்கும். பத்தோடு பதினொன்றாய்ப் போயிருக்கும். நல்ல வேளையாக அதைச் செய்யாததற்காக.. ..

ஒரு நாவலாக எழுதப் பட்டிருந்தால் தமிழில் எழுதப்பட்ட மிகச் சிறந்த நாவல்களில் ஒன்றாக இருந்திருக்கும். அந்த நாவலைத் திரையில் கடத்துகையில் முழுதாக வெற்றி பெறா விட்டாலும் அந்த முயற்சியை எடுத்ததற்காக.. ..

படத்தில் எடுக்கப்பட்டுள்ள மிகப் பெரிய ரிஸ்கே படத்தின் மிகப் பெரிய பலமாய் அமைந்து விட்டது. தொடர்ந்து மீண்டும் மீண்டும் வரும் க்ளோஸ் அப் காட்சிகள். இதில் நடிக்க அடாத தைரியம் வேண்டும்; தன்னம்பிக்கை வேண்டும். அது கமலிடம் இருக்கிறது. அவரிடம் மட்டும்தான் இருக்கிறது. கரணம் தப்பினால் மரணம். ஒன்று ஓவர் ஆக்டிங் அல்லது செயற்கையான சப்ட்யூட் ஆக்டிங். மெல்லிய கயிறின் மேல் ஆயிரம் அடிகளுக்கு மேலான உயரத்தில் இரண்டு மலைச் சிகரங்களை இணைத்து கீழே வலை கூட கட்டாமல் மிக வெற்றிகரமாக நடந்திருப்பதற்காக.. ..

(முன்பெல்லாம், எஸ்.வி. ரங்காராவ், சிவாஜி கணேசன், டி. எஸ். பாலையா, நாகேஷ், ஜெமினி கணேசன், பானுமதி, சாவித்திரி என்று இப்படி தைரியமாக பெருமளவான காட்சிகளில் எமோட் பண்ணுவதற்கு இருந்தார்கள். இப்போது நமக்கு இருக்கும் ஒரே ஒரு கொழுந்து கமலஹாசன்தான்.

தொழில் நுட்பம் மற்றும் உட்பொருள் பற்றிய விவாதம் உலகளாவியது. மிகச் சிறந்த திரைப்படங்களை எடுத்தவர்கள் உட்பொருளின் முக்கியத்துவம் பற்றித் தெரிந்தவர்கள். “it is just because a director has something to say that he finds the form, the skill, the technique to bring it out. If you are concerned only with how you say something without having anything to say then even the way you say something won’t come to anything – Techniques do not enlarge a director. They limit him” – அகிரா குரோசாவா.

தொழில் நுட்பத்திலும் பணம் காரணமாக நாம் நமக்கு எட்டக் கூடிய அரிய உயரங்களை எட்ட முடிவதில்லை. தொழில் நுட்பம் அன்றி உட்பொருளுக்குத் (Content)தான் நல்ல சினிமாவில் முதல் இடம் என்பதை தமிழ் ஜாம்பவான்கள் (!) உணர்ந்ததே இல்லை. ஜாம்பவான்கள் என்று விதந்தோதப் படுபவர்களில் ஒருவர் தங்கத் தாம்பாளத்தில் அரிசியை வைத்து, மலைகா அரோராவையோ, மல்லிகா ஷராவத்தையோ விட்டு “இதுதான் ஐயா சாப்பாடு, சாப்பிடுங்கள்” என்று கொடுக்க வைப்பவர். இன்னொருவர் அதே அரிசியை சேற்றில் புரட்டி எல்லோரும் இப்படித்தான் சாப்பிடுகிறார்கள் என்று ஜோதி லட்சுமியையோ, சிம்ரனையோ ஆட வைத்துக் கொடுப்பவர். நல்ல வேளையாக, அவலை நினைத்து எது எதையோ இடித்துக் கொண்டிருந்த கமலஹாசன், அவர்களைப் போலெல்லாம் இல்லாமல், content டின் முக்கியத்துவத்தை உணர்ந்துவிட்டார். இது எதேச்சையா இல்லை நிரந்தரப் புரிதலா என்பதை அவரது இனி வரும் படங்கள் காட்டிவிடும்.

நம் புதிய இளம் இயக்குனர்களுக்கு உட்பொருள்தான் திரைப்படத்தின் உயிர் என்பது intuitive வாக வாவது புரிந்திருக்கிறது. நலன் குமாரசாமிகளும், கார்த்திக் சுப்பராஜ்களும், கோகுல்களும், விக்ரம் குமார்களும், விஜய் சேதுபதிகளும் இன்று மலர்ந்துள்ள இளம் பட்டாளத்தில் சீரியஸான திறமை மிகு சிலரும் குழுமி நவ தமிழ் சினிமாவின் உதயத்தைக் கொண்டு வந்து விடுவார்கள் போலிருக்கிறதே என்று என்னைப் போன்றவர்கள் ஆவலோடும், ஆன்க்ஸைடியோடும் காத்துக் கிடக்கையில் பல காலம் முன்பே சுஜாதா எதிர்பார்த்த கமலஹாசன் எவ்வளவோ முறை ஏமாற்றிய பின்னும் கூட இன்னமும் பந்தயத்தில் இருக்கிறார் என்பதற்காக.. ..

கே. விஸ்வநாத், மனோகராக நடித்த பையன், பார்வதி மேனன், எம். எஸ். பாஸ்கர், பாலசந்தர், ஊர்வசி, ஜெயராம், ஆண்ட்ரியா, பூஜா குமார், நாசர் என்று எல்லோருக்குமே நடிக்க வாய்ப்பு இருக்கிறது. ஸ்பேஸ் இருக்கிறது. நடிக்கவும் செய்திருக்கிறார்கள். இந்த எல்லாப் பாத்திரங்களுமே ஒற்றைப் பரிமாண கேரக்டர்களாக இல்லாமல் ஒரு ஆழத்தோடு இருப்பதற்காக.. ..

இப்போதெல்லாம் கமலஹாசன் படங்களின் இயக்குனர்கள் யாராக இருந்தாலும் படத்தின் குறை நிறைகளுக்கு கமலஹாசனே காரணம் என்றுதான் பலரும் எண்ணுகிறார்கள். இந்த விமர்சனமும் அந்த விதத்திலேயே அமைந்துள்ளது. படத்தின் அனைத்து அம்சங்களிலும் அவரது ஒப்புதல் இல்லாமல் எதுவும் வர முடியாது என்றே நினைக்கிறோம். ஒரு வேளை ரமேஷ் அரவிந்த்தின் பங்கு நிறைய இருந்தால் நடிப்பு, காட்சியமைப்பு மற்றும் க்ளோஸ் அப்புகளுக்காக அவருக்கும் பாராட்டுகள்.

சாவு, வாழ்வு இரண்டைப் பற்றியும் பலதும் யோசிக்க வைக்கும் ஒரு படம் யோசிக்கவே விடாத தமிழ்ப் பட சூழலில் எடுத்திருப்பதற்காக, 20+ வயதுப் பெண்ணுக்குத் தந்தையாகக் குறைகளும், குற்றங்களும் நிரம்பிய நடிகனாகக் கமலஹாசன் நடிக்கத் துணிந்தமைக்காக.

இதுகாறும் தீவிரமான உணர்ச்சி மிகு நடிப்பு என்றால் இதுதான் என்று இருந்த – அவரே உருவாக்கியவை உட்பட – அனைத்து வரையறைகளையும் கமலஹாசன் தகர்த்து எறிந்ததற்காக, புதிய ஒரு உயரத்தைப் பிற்காலச் சாதனையாளர்களுக்காக ஏற்படுத்தியதற்காக,

உத்தம வில்லனை அவசியம் பார்க்கலாம்.

பாசாங்கு குறைந்திருக்கிறது. கமலஹாசன் இதே திசையில் பயணித்தால், தன் தனிப்பட்ட சாய்வுகளை, சார்புகளை, காழ்ப்புகளை மெனக்கெட்டு கதையில், சம்பவங்களில், வசனங்களில், பாத்திரங்களில் புகுத்தாமல், கதையின், பாத்திரங்களின் மனோ தர்மமும், மனோ தத்துவமும் கெடாமல் படங்களை எடுத்தால் உண்மையிலேயே அவர் மூலம் நல்ல படங்கள் வர வாய்ப்பிருக்கிறது.

அது நிகழ, ஓரு சிறிய ஆலோசனை : சினிமா வித்தையில் சீரியஸ் மாணவரான கமலஹாசனுக்கு மகத்தான திரைக் கலைஞன் ராபர்ட் ப்ரெஸ்ஸான் தனக்குத் தானே சொல்லிக் கொண்ட இந்த வார்த்தைகள் முன்பே தெரிந்திருக்கும். இது ஒரு நினைவூட்டல்தான்:

“Rid myself of the accumulated errors and untruths. Get to know my resources, make sure of them.”

oOo

நன்றி: இந்தக் கட்டுரைக்குத் தேவையான சில தகவல்களைச் சொன்ன திரு. எஸ். பார்த்தசாரதி அவர்களுக்கு.

.- See more at: http://solvanam.com/?p=39859#sthash.KEEf44Kn.dpuf

என்ன வழக்கமான குப்பை சினிமாவை எதிபர்ப்பவர்களுக்கு இது சரிவராது தான்....
யார் இந்த மகாதேவன் ... அவர் இனியாவது நல்ல சினிமாவை பார்ப்பது நல்லம்.... விமர்சனம் என்றால் என்னவென்பது அவருக்கே புரியவில்லை .
 
கமல் இந்த படத்தில் எடுத்துகொண்ட விடயம் நிஜ உலகில் எத்தனை பேர் உள்ளார்கள் ... அதனை சினிமாவில் காட்டுவது என்ன தப்பு .... ஏதோ படத்தில நல்ல மாதிரி காட்டினால் எல்லாரும் தர்மபத்தினி காரர்களாக இருப்பார்கள் மாதிரி ....
 
இது படம் , அந்த கோணத்தில் தான் படம் பார்க்க வேண்டும் ... உங்கள் நிஜ வாழ்வுடன் கோர்க்க கூடாது ...
என்னங்கடா விமர்சனமா செய்றிங்க ... கமலினை பிடிக்காதவர்கள் தான் இந்த மாதிரி....
 
உத்தம வில்லன் மாதிர்யான கலைக்களம் அமைப்பது என்பது எல்லாராலும் முடியாது ... அது கமல் மட்டும் தான் . சகலகலாவல்லவன் ....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.