Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜேர்மனி மீதான எதிர்பார்ப்பு!

Featured Replies

தமிழர்கள் மத்தியில் ஒரு குறிப்பிட்ட வகையினர் உண்டு. அவர்கள் தங்களை நம்புவதை விட மற்றவர்களையே அதிகம் நம்புவார்கள். துன்பம் நேரும் போது வேறு யாராவது வந்து தங்களை கைதூக்கி விடுவார்கள் என்று காத்திருப்பார்கள். அந்த "வேறு யாராவது" என்பது "கடவுளாகக்" கூட இருக்கலாம். மொத்தத்தில் தங்களின் துன்பங்களில் இருந்து விடுதலை பெறுவதற்கு முயற்சி செய்யாது மற்றவர்களை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள்.

இவ்வாறான குணவியல்பு கொண்டவர்கள் தொகையளவில் மிக அதிகமானவர்களாக இருக்கிறார்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும் இவர்களின் "காத்திருப்புக்களை" காணக்கூடியதாக இருக்கிறது.

போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் "இந்தியா வந்து பிரச்சனையை தீர்த்து வைக்கும், இந்தியா தமிழீழம் பெற்றுத் தரும்" என்று நம்பியவர்கள்தான் பெரும்பான்மையினராக இருந்தார்கள். விடுதலைப் போராளிகள் மீது நம்பிக்கை வைத்தவர்களை விட இந்தியாவை நம்பியவர்கள் அதிகம் என்று எவ்வித தயக்கமும் இன்றி சொல்லலாம்.

ஒரு நேரத்தில் இந்தியா தமிழீழம் எதையும் பெற்றுத்தராது என்பது தெளிவாகத் தெரிந்த பின்னர், வேறு யாராவது கிடைப்பார்களா என்று காத்திருக்கத் தொடங்கினார்கள். அத்துடன் இடையிடையே "இனிமேல் பிரச்சனை தீரப் போவதில்லை" போன்ற கருத்துக்களையும் கூறி வந்தார்கள்.

நோர்வே எமது பிரச்சனையில் அனுசரணையாளராக பணியாற்றத் தொடங்கியதும், நோர்வே எல்லாவற்றையும் தீர்த்து வைத்துவிடும் என்று நம்பத் தொடங்கினார்கள். இந்தியாவின் இடத்தை நோர்வே எடுத்துக் கொண்டது. எரிக் சொல்கைம் ஒவ்வொரு முறை வன்னிக்கு செல்லும் பொழுதும், இவர்களின் எதிர்பார்ப்பு அதிகரிக்கும்.

இடையில் ஜப்பானும், சிறப்புத் தூதர் ஆகாசியும் சிலருக்கு நம்பிக்கை அளித்தார்கள். சில நேரங்களில் ஐக்கிய நாடுகள் சபையும், கோபி அனானும் அந்த நம்பிக்கையை கொடுத்திருக்கிறார்கள்.

இப்பொழுது ஜப்பான் சிறிது அமைதியாக இருக்கிறது. நோர்வே முன்பு போல் தீவிரமாக இல்லை. இந்த நிலையில் மற்றவர்களை நம்பி காத்திருந்து பழக்கப்பட்டவர்களுக்கு தெம்பு அளிக்கும்படி இன்னும் ஒரு நாடு வந்து சேர்ந்திருக்கிறது.

இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பை ஜேர்மனி பொறுப்பெடுத்திருக்கிறது. இந்த ஜேர்மனிதான் இப்பொழுது இவர்களுக்கு விமோசனம் பெற்றுத் தரும் நாடாக காட்சி அளிக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பே சிறிலங்காவிற்கு வழங்கவிருந்த உதவிகளை ஜேர்மனி இந்தோனேசியாவின் ஆச்சே மாநிலத்திற்கு திருப்பி விட்டது. சிறிலங்கா அரசு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கோடு இது செய்யப்பட்டது. ஜேர்மனியை பின்பற்றி மற்றைய நாடுகளும் சிறிலங்காவிற்கான உதவிகளை நிறுத்தி அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்று ஜேர்மனியின் அபிவிருத்தி அமைச்சர் வேண்டுகோளும் விடுத்தார்.

சிங்கள இனவாதக் கட்சியான ஜாதிக ஹெலஉறுமயவும் ஜேர்மனியப் பிரதமரை நவநாசி என்று சாடியது.

ஜேர்மனியின் மீது நம்பிக்கை வைப்பதற்கு இந்தக் காரணங்கள் பலருக்கு போதுமாகி விட்டது. ஜேர்மனி ஐரோப்பிய தலைமைப் பொறுப்பை ஏற்று விட்டதால், சிறிலங்காவின் மேல் கடும் அழுத்தங்கள் விதிக்கப்படும் என்றும், ஐரோப்பாவில் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்படும் என்றும் எதிர்பார்ப்புகள் தொடங்கிவிட்டன.

ஆனால் அப்படி எதுவும் பெரிதாக நடக்கப் போவிதில்லை என்பதுதான் உண்மை. இப்பொழுதே ஒரு மாதம் ஏறக்குறைய ஓடி விட்டது. விரைவில் மிகுதி ஐந்து மாதங்களும் ஓடி விடும். அதன் பிறகு ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பை போர்த்துக்கல் பொறுப்பேற்கும். அப்பொழுதும் "சிறிலங்காவின் முதலாவது காலனித்துவ நாடு, தமிழர்களுக்கு யாழ்ப்பாண ராச்சியம் இருந்ததை அறிந்த நாடு, ஆகவே போர்த்துக்கல் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழத்தை அங்கீகரிக்கும்" என்றும் யாராவது ஆய்வு செய்யக்கூடும்.

உண்மையில் "ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பு" என்கின்ற பதவி அதிகாரங்கள் அற்ற ஒரு வெறும் மரபுரீதியான பதவி. ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையில் யார் இருந்தாலும், நிகழ்ச்சி நிரலின்படி நடக்கின்ற விடயங்களில் எந்த ஒரு மாறுதலும் வரப் போவதில்லை.

ஜேர்மனி சிறிலங்கா மீது அழுத்தம் போடுவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்துதான் அதைச் செய்ய வேண்டும் என்பது இல்லை. எப்படி ஐநா சபையில் அமெரிக்கா என்பது ஒரு சக்தி மிக்க நாடாகவும் முற்றுமுழுதான செல்வாக்கு செலுத்துகின்ற நாடாகவும் இருக்கிறதோ, அதே போன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜேர்மனி என்பது ஒரு சக்தி மிக்க நாடாகவும் குறிப்பிட்டளவு செல்வாக்கு செலுத்துகின்ற நாடாகவும் இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவுகளில் ஜேர்மனி மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆகவே சிறிலங்கா அரசு மீது ஐரோப்பிய ஒன்றியம் உண்மையிலேயே தாக்கமான அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்று ஜேர்மனி விரும்பினால், அதை "தலைமைப் பொறுப்பு" என்கின்ற பதவி இல்லாமலேயே செய்ய முடியும். அத்துடன் நேரடியான அழுத்தங்களையும் சிறிலங்கா அரசுக்கு கொடுக்கக் கூடிய நிலையிலேயே ஜேர்மனி இருக்கிறது.

சிறிலங்காவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் ஜேர்மனி ஆறாம் இடத்தில் இருக்கிறது. ஆண்டு தோறும் ஏறக்குறைய 500 மில்லியன் ஐரோக்கள் இருதரப்பு வர்த்தகமாக நடைபெறுகிறது. 120 ஜேர்மனிய தொழில்சார் நிறுவனங்கள் சிறிலங்காவில் செயற்படுகின்றன. இந்த நிறுவனங்களின் மூலம் 20.000இற்கும் மேற்பட்டோர் சிறிலங்காவில் வேலைவாய்ப்பு பெறுகின்றனர் ஒவ்வொரு வருடமும் 60.000இற்கும் மேற்பட்ட ஜேர்மனியர்கள் சிறிலங்காவிற்கு உல்லாசபிரயாணிகளாக சென்று வருகிறார்கள்.

சிறிலங்காவிற்கான அபிவிருத்தி உதவிகளை பொறுத்தவரை ஜேர்மனி ஜப்பானுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

இவைகள் சிறிலங்கா மீது ஜேர்மனி தாக்கத்துடன் கூடிய அழுத்தங்களை செலுத்தவதற்கு போதுமானவையாக இருக்கின்றன. ஆனால் சிறிலங்கா விடயத்தில் ஜேர்மனிக்கு என்று தனியான நிகழ்ச்சி நிரல் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

மேற்குலகிற்கு என்றே ஒரு நிகழ்ச்சி நிரல் இருக்கிறது. மேற்குலகு என்று சொல்கின்ற பொழுது, அதற்குள் அமெரிக்காவோடு, ஐரோப்பிய ஒன்றியமும் அடக்கம். கிழக்கில் இருக்கிற ஜப்பானும் அடக்கம்.

மேற்குலகின் நிகழ்ச்சிநிரலின் படி அமெரிக்கா தமிழர் தரப்பிற்கு கடுமையான முகத்தை காட்டுகிறது. ஐரோப்பிய ஒன்றியம் மென்மையான முகத்தை காட்டுகிறது. தேவைப்படுகின்ற போது மட்டும் ஐரோப்பிய ஒன்றியம் சிறிது கடுமையான முகத்தை தமிழர் தரப்பிற்கும், சிறிலங்காவிற்கும் காட்டிக் கொள்ளும். இதை விட எதாவது ஒரு தரப்பின் மீது ஐரோப்பிய ஒன்றியம் மிகக் கடுமையான அழுத்தங்களை பிரயோகிக்கும் என்று எதிர்பார்ப்பதற்கான காரணிகள் எதுவும் உண்மையில் தென்படவில்லை. அது ஐரோப்பிய ஒன்றியத்தின் வேலையும் அல்ல.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ஜேர்மனிக்கும் சிறிலங்காவை விட மிக முக்கிய பிரச்சனைகள் முன்னால் உள்ளன. ஆப்கானிஸ்தான், சூடான் என்று ஐரோப்பிய ஒன்றியம் நேரடியான பங்களிப்பு செலுத்துகின்ற பல பிரச்சனைகள் உண்டு. இந்த நிலையில் ஜேர்மனி தலைமைப் பொறுப்பு வகிக்கப் போகின்ற மிகுதி ஐந்து மாத காலத்தில் சிறிலங்கா மீதான பொருளாதாரத் தடையும், விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கமும் நடைபெறும் என்று எதிர்பார்ப்பது அதிகப்படியானதாகத்தான் இருக்கும்.

இன்றைக்கு அமெரிக்காவின் போக்கு குறித்து பல இடங்களில் அதிருப்தி தோன்றி உள்ளது. ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற இடங்களில் அமெரிக்காவின் அணுகுமுறை தோல்வி அடைந்துவிட்டதாக விமர்சனங்கள் கிளம்பி உள்ளன. உலக அரங்கில் அமெரிக்காவின் இடத்தை ஐரோப்பிய ஒன்றியம் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் பல இடங்களில் தென்படுகின்றன.

இந்த எதிர்பார்ப்பு நிறைவேறி அமெரிக்காவின் இடத்தை ஐரோப்பி ஒன்றியம் எடுத்துக் கொள்ளுமானால், அப்பொழுது இலங்கைத்தீவின் அரசியலிலும் ஐரோப்பிய ஒன்றியம் ஒரு காத்திரமான பங்களிப்பை வழங்கக்கூடும். ஆனால் அவ்வாறான ஒரு பங்களிப்பும் தமிழர் தரப்பிற்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதில் எவ்வித கட்டாயமும் இல்லை.

ஆகவே மற்றவர்களை எதிர்பார்த்தபடியும், அவ்வாறான எதிர்பார்ப்புக்களை அதிகரிக்கக்கூடிய கருத்துக்களை சொல்லிக் கொண்டும் காலம் கழித்துக் கொண்டு இருப்பவர்கள் ஒரு விடயத்தை தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

விடுதலைப்புலிகள் மேற்கொள்கின்ற ராஜதந்திரம் மிக்க நடவடிக்கைகள் சிறிலங்கா அரசுக்கு சில அழுத்தங்களை பெற்றுக் கொடுத்திருக்கிறது. விடுதலைப்புலிகளுக்கு வரவிருந்த பல நெருக்கடிகளை தவிர்த்திருக்கிறது. மேற்குலக நாடுகளின் அறிக்கைகள் சிறிலங்கா அரசுக்கு சங்கடங்களை ஏற்படுத்துவது போன்று இருந்திருக்கின்றன.

இவைகளை வைத்து இந்த நாடுகள் தமிழினத்திற்கு ஆதரவானவைகள் என்றோ, தமிழினத்திற்கு நியாயமான தீர்வொன்றை பெற்றுத்தருவார்கள் என்றோ நம்பிக்கொண்டிருப்பது தவறு. எமது விடுதலையை நாம்தான் போராடிப் பெற வேண்டும். நாம் எம்மில்தான் நம்பிக்கை வைக்க வேண்டும். நாம் எமது சொந்த பலத்தில் நிற்கின்ற பொழுது, இந்த நாடுகள் எம்மை அங்கீகரிக்கும். அதில் எள்ளளவு சந்தேகமும் கொள்ளத் தேவை இல்லை. ஆகவே எமது போராட்டத்தை வலுப்படுத்தி தமிழீழத்தை மீட்டெடுப்பதே இன்றுள்ள தேவை.

-வி.சபேசன் (18.01.07)

http://www.webeelam.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறப்பான ஆய்வு.. பல முக்கிய பிரயோசனமான தகவல்களை உள்ளடக்கியிருக்கிறார் சபேசன் அவர்கள்..

நன்றி..

வாழ்த்துக்கள். தேவையான ஆக்கபுhர்வமான கண்ணோட்டம்.

நிறைவான கட்டுரை. யதார்த்தமான கருத்துக்கள். இது போன்ற கட்டுரைகளை வாசிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், இதில் சொல்லப்பட்ட கருத்துகளை புரிந்து கொண்டு செயற்படவும் வேண்டிய தருணம் இது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிறைவான கருத்துக்களை உள்ளடக்கிய உன்னதமான கட்டுரை இது.எனவே இக்கட்டுரையை ஆக்கியவருக்கும் இணைத்தவருக்கும் நன்றிகள்.

மற்றவன் தோளில் ஏறி ஒட்டுண்ணியாக வாழ்வது தமிழனுக்கேயுரித்தான தனிமரபு. கேட்பதற்கு இது கசப்பாகத்தான் தோன்றும். ஆனால் இதுவே இன்று நிகழ்வில் நாம் காணும் உண்மை.

வேற்று நாடுகளில் தமிழர் வைத்த நம்பிக்கைக்கும், இந்தியா மீது தமிழர் வைத்த நம்பிக்கைக்கும் இடையே நிறையவே வேறுபாடுகள் உண்டு. ஆனால் 1987ல் தமிழர் இந்தியாவிடம் பட்ட முதல் ஏமாற்றத்திற்காக தமிழரைக்குறை சொல்ல முடியாது. ஏனென்றால் இதுதான் நவீனயுகத்தில் தமிழருக்கு இந்தியாவிடம் இருந்து கிடைத்த முதலாவது ஏமாற்றம். இது தமிழருக்கு கிடைத்த நல்ல படிப்பினை. எனினும், இன்றும் எம்மத்தியில் இந்தியாவை தலையில் வைத்துக் கொண்டாடும் முட்டாள்கள் பெருமளவில் இருக்கின்றார்கள் என்பது வேதனைக்குறிய விடையம்.

உலக அரங்கில் தமிழர்கள் தம்மை, தமிழீழத்தை அடையாயாளப்படுத்தி அங்கீகாரம் பெறுவதற்கு தாமாக எடுக்கும் முயற்சிகள் கைகூடுவதற்கு ஜேர்மன் போன்ற உலக நாடுகளின் போக்கில் ஏற்படும் மனமாற்றங்கள் உதவும் என்பதில் சந்தேகம் தேவையில்லை. ஆனால் எங்கள் தமிழீழத்தேரை உலகநாடுகள் இழுக்கும் என்று எதிர்பார்ப்பதுதான் முட்டாள்தனமானது. உலக நாடுகள் தேரைத்தடுத்து நிறுத்துவதற்கு பயன்படுத்தப்படும் மரக்குற்றிகளேயொழிய, மற்றும்படி தமிழீழத்தேர் எம்முடையது. தமிழீழத்தேரை இழுக்கப்பயன்படும் போராட்டம் எனும் வடம் எம்முடையது. அந்த வடத்தைப்பிடித்து இழுக்கவேண்டிய போராளிகளான தமிழ் மக்களே நாங்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.