Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

பொம்மை - சிறுகதை

 
பாலகுமாரன் - ஓவியங்கள்: செந்தில்

 

ழை பெய்து நெகிழ்ந்திருக்கும் மண் சாலை, பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. ஓவியத்தில், புகைப்படத்தில் இன்னும் கூடுதல் அழகாக இருக்கும். ஆனால், நடப்பதற்குத் தோதாக இல்லை.

ஸ்ரீனிவாசன், மிகுந்த கவனத்தோடு அந்தச் சாலையில் நடந்து கொண்டிருந்தான். அவனுக்கு அது பழக்கம் இல்லை.

``எழுத்தாளரே, இன்னும் கொஞ்சம் விரச நடக்கலாம். கேரளம், பத்து நிமிஷத்துக்கு ஒரு மழை பெய்யும். ஒரு மேகம் வந்து தழைஞ்சு, கரைஞ்சு சற்றுப் பொறுத்து இன்னொரு மேகம் தழையும். மழையாய்க் கரையும். எனவே, விரைந்து வாரும்” என்பதாக மலையாளத்தில் கூச்சலிட்டார்.

அவர் சந்திரமோகன். எழுத்தாள ரான ஸ்ரீனிவாசனின் வாசகன். ஸ்ரீனிவாசன் எழுதிய சிறுகதைகளைப் படித்துவிட்டுப் பாராட்டி அஞ்சல் அட்டையில் எழுத, அதற்கு அதே விதமான அஞ்சல் அட்டையில் ஸ்ரீனிவாசன் நன்றி சொல்ல, `எங்கள் ஊர்ப் பக்கம் வாருங்களேன். நல்ல இயற்கைக் காட்சிகள் இருக்கின்றன’ என்று சொல்ல, `வேறு என்ன விசேஷம்?’ என்று இவன் அஞ்சல் அட்டையில் கேட்க, `அதர்வண வேதம்’ என அவர் விளக்கியிருந்தார்.

படாரென ஒரு துள்ளலுடன் அங்கு போகத் தயாரானான். இரண்டு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டான். சனியும் ஞாயிறும் அவனுக்கு விடுப்பான நாள்கள். மொத்தம் நான்கு நாள்கள் அவன் கையிலிருக்க, தகுந்த காசு சௌகரியங்களோடு அவன் ரயில்வண்டியில் ஏறி ஓர் ஊரில் இறங்கி, அங்கிருந்து பஸ் பிடித்துச் சந்திரமோகனுடைய ஊருக்குப் போனான். அவரது வீட்டில் குளித்துச் சாப்பிட்டுவிட்டு உட்கார...

``என் உறவுக்காரரே அதர்வண வேதத்தில் நல்ல பயிற்சி உடையவர். மாந்திரீகர்.  இதை ஏன் கற்றுக்கொள்ள வேண்டும் என இங்கு வந்திருக் கிறீர்கள்?” என்று சந்திரமோகன் ஆவலுடன் கேட்டார்.

64p1.jpg

ஸ்ரீனிவாசன் மௌனமாக இருந்தான்.

``கதை எழுத வேண்டும் எனப் பார்க்கிறீர்களா?” என்று அவர் வினவ,

``அதுவும் ஒரு காரணம்” என்றான்.

``அதுவும் என்றால்...”

``வேறு சில தொந்தரவுகள் இருக்கின்றன. அதற்காகவும் நான் இங்கு வந்திருக்கிறேன்.”

``என்ன மாதிரி?”

ஸ்ரீனிவாசன், அவரிடம் சொல்வதா, வேண்டாமா என யோசித்தான். அவனின் தயக்கத்தை அவர் புரிந்து கொண்டார்.

``இந்த மாதிரி விஷயங்கள் எல்லோரிடமும் சொல்லத் தகுந்ததாக இருக்காதுதான். எனக்குப் புரிகிறது. என் உறவினரிடம் நான் அழைத்துப் போகிறேன். அவரிடம் பேசுங்கள். மனம்விட்டுப் பேசுங்கள். மிகுந்த உயர்ந்த குணம்கொண்டவர்; கம்பீர மானவர். ஐம்பத்தைந்து வயது, போன மாதம்தான் நிறைந்தது. பார்த்தால் அப்படித் தெரியாது. தன்னுடைய இளமைக்குக் காரணம் அதர்வண வேதம்தான் என்று சொல்பவர். உங்கள் குறை களை அவரிடம் சொல்லுங்கள்” என்று பெருந் தன்மையோடு அழைத்துப் போனார்.

மலையாளிகள் அடுத்தவர் விஷயங்களில் தலையிடு வதில்லை. தானாகவே ஒதுங்கிக் கொள்கிறார்கள். `என்ன... என்ன..?’ என மூக்கு நுழைப்ப தில்லை. ஒருபோதும் தானாக நடப்பதில்லை என மனதில் நினைத்துக்கொண்டான்.

நல்ல உணவுக்குப் பிறகு, அவருடன் மண் சாலை ஒன்றில் நடந்தான். எல்லா இடங்களுக்கும் ஸ்கூட்டரில் போய் பழக்கமான அவனுக்கு, இந்தத் தூரம் கொஞ்சம் சிரமமாக இருந்தது. தோளில் பை மாட்டி, கையில் அவருடைய குடையை எடுத்துக்கொண்டு நடக்க, திடீரென மழைத்தூறலும் பிறகு வெய்யிலுமாக வானம் ஆட்டம் காட்டிக்கொண்டிருந்தது.

கேரளத்தில் பசுமை, மனதை நிறைத்தது. குட்டைத் தென்னையும், காட்டுச் செடிகளும் பச்சை வாசனையைப்  பெருக்கின. கேரளத்து மக்கள் அந்த மண் சாலையில் குதிகால் படாமல் வெகுவேகமாக நடந்து கொண்டிருந்தார்கள். ஸ்ரீனிவாசனுக்குத்தான் `வழுக்கிவிடுமோ’ என பயமாக இருந்தது.

அவர் வீட்டை அடைந்ததும் குடைகளைத் திண்ணையில் சாய்த்துவைத்துவிட்டு கீழே இருந்த நார் மிதியடியில் கால்களை நன்றாகத் துடைத்துக்கொண்டு உள்ளே போய், அங்கு வேலையாள் கொடுத்த சிறிய துணி ஒன்றில் முழங்கால்களைத் துடைத்துக்கொண்டு விரித்திருந்த பெரிய பாயில் அமர்ந்து கொண்டான்.

பெரிய கூடம், எதிரே முற்றம். முற்றத்தில் துளசிச்செடி. கூடத்தில் சின்ன மஸ்தானின் உருவம். நிர்வாணமாக நின்று ஓர் ஆணின் தலையை வெட்டி ரத்தம் குடிக்கும் சின்ன மஸ்தான். பலகையில் கட்டங்கள் எழுதப்பட்டிருக்க, ஒரு கொத்து சோழி அருகே வைக்கப்பட்டிருந்தது. கணக்குப்பிள்ளை ஸ்டூல்போல ஒன்று இருந்தது. அதன்மீது மூக்குக்கண்ணாடி இருந்தது. கொஞ்சம் முதுகு மெத்தையாய் ஓர் இடமும் கீழே தர்ப்பைப் பாயும் இருந்தன. காலையில் குங்கிலியமும் சாம்பிராணியும் போட்டிருக்க வேண்டும். அந்த வாசனை வீசிற்று. வெள்ளைத்துண்டு மடித்து வைக்கப்பட்டிருந்தது.

உட்கார்ந்தவுடனேயே கட்டங்காபி வந்தது. சாரல் மிகுந்த அந்தச் சூழலுக்கு, அந்த காபி இதமாக இருந்தது. கொடுத்து முடித்த சிறிது நேரத்தில் சந்திரமோகன் உறவுக்காரர் வந்தார்.

ஈஸ்வரன் ஸ்வாமி என்ற பெயர்ப் பலகை, வாசலில் தொங்கியிருந்தது அவரைப் பார்த்ததும் ஞாபகம் வந்தது. நல்ல உயரம், கொஞ்சம் கறுப்பு, முன் வழுக்கை, கூர்மையான மூக்கு, தடித்த கண்ணாடி, வெற்றிலை போட்டுச் சிவந்த இதழ்கள், அகலமான மார்பு. வெள்ளை வேட்டியும் காலர் இல்லாத சட்டையுமாகப் பெரிய வரவேற்புக் குரலோடு வந்து உட்கார்ந்தார். சந்திரமோகனோடு மிக வேகமாக மலையாளத்தில் பேசினார்.

ஸ்ரீனிவாசனுக்குப் புரியவில்லை. தாய், தந்தை, தமக்கை, குழந்தைகள் எனச் சகலரையும் விசாரிக்கிறார் எனத் தெரிந்தது. `வேறு என்ன?’ என்றபோது, சந்திரமோகன் அவனைச் சுட்டிக் காட்டினார்.

``ஓ... இப்பதான் ஞாபகம் வருது. சினேகிதம் இல்லையா” என்று சொல்ல,

``ஆமாம்.”

``எழுத்து அல்லவா” என்று கேட்க, மறுபடியும் சந்திரமோகன் ``ஆமாம்’’ என்று சொல்ல,

``என்னிடத்தில் இவருக்கு என்ன வேணும்?” சட்டென மலையாளம் பேசப்பட்டது.

``இவர் மாந்திரீகம் பிரயோகம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார். அதற்காக வந்திருக்கிறார்.”

ஈஸ்வரன் ஸ்வாமி திரும்பி இவனைப் பார்த்தார்.

``எதற்காக அதைக் கற்றுக்கொள்ள வேண்டும்?”

ஸ்ரீனிவாசன்  பதில் சொல்ல சற்று தாமதித்தான்.

``எதிரிகள் இருக்கிறார்களோ?” ஈஸ்வரன் ஸ்வாமி ஆரம்பித்தார்.

``ஆமாம்.”

``கடுமையாக இருக்கிறார்களோ..?”

``ஆமாம்.”

``தாங்கமுடியாமல் இங்கு வந்திருக்கிறீரோ..?”

``ஆமாம்.”

``இதை என்னிடம் சொன்னால் போதுமே. நான் பரிகாரம் செய்துவிடுவேனே. துன்பங்கள் குறையுமே. நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என ஏன் வந்தீர்கள்?”

``வாழ்க்கை முழுவதும் எதிரிகள் இருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.”

``ஓ... ஒவ்வொரு முறையும் ஓர் ஆசானைத் தேடி வர முடியாது.”

``அதே. அதை நானே கற்றுக்கொண்டால், எனக்கே அந்த வித்தை தெரிந்தால், மனிதர்களைக் கையாள்வது எளிதாக இருக்குமல்லவா.”

``அப்படியா!”

அவர் புருவங்களை உயர்த்திப் பார்த்தார். சந்திரமோகனை மெள்ளப் பார்த்துச் சிரித்தார். சந்திரமோகன் சிரிக்கவில்லை. அப்படி என்ன வேதனை என்பதுபோல ஸ்ரீனிவாசனைப் பார்த்தார். ஈஸ்வர ஸ்வாமி சற்று நேரம் அமைதியாக இருந்தார்.

``காபி குடிச்சுதோ?”

``ஆச்சு.”

``இன்னொரு டம்ளர்...’’ எனக் கேட்க,

அவன் ``சரி’’ என்றான்.

உள்ளே குரல் கொடுத்தார். காபி வரும்வரை அமைதியாக இருந்தார்கள். கண்ணாடி டம்ளர் காபியை அவன் மறுபடியும் விரும்பிக் குடித்தான்.

அந்த இடத்தில் அவரோடு பேசும்போது தொண்டை வறண்டும், வயிறு கொஞ்சம் குழைந்தும் இருந்ததுதான் காபி விரும்பியதற்குக் காரணம். அந்த காபி, அந்த விஷயத்தைச் சரி செய்தது; உற்சாகம் கொடுத்தது. `தொண்டை வறண்டு போயிருக்கிறது எனத் தெரிந்தே இவர் காபி வரவழைத்திருக்கிறார்’ என்ற எண்ணம் ஏற்பட்டது. நன்றியுடன் அவரை நோக்கி கைக்கூப்பினான். அவர் மறுபடியும் அழகாகச் சிரித்தார்.

``உங்க காபி வேற... எங்க காபி வேற”

``ஆமாம். ஆனால், இது சுவையாக இருந்தது” என்று பதில் சொன்னான்.

``எத்தனை நாவல் எழுதியிருப்பீர்?”

``முப்பது நாவல் எழுதியிருக்கிறேன். சிறுகதை தொண்ணூறு எழுதியிருக்கிறேன்.”

``அடிசக்கை! அப்போ பெரிய எழுத்தாளர்தான்.”

``இல்லை. இது போதாது. இன்னும் அதிகம் எழுத வேண்டும். இருநூறு, இருநூற்றைம்பது நாவல்களாவது எழுத வேண்டும்.’’

``அடிசக்கை. சினிமா உண்டோ?”

``இல்லை. அதற்குள்ளும் போக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இதுவரை இல்லை.”

``நிச்சயம் போகலாம்.”

அவர் சோழி எடுத்து உள்ளங்கைகளில் தேய்த்துப் பலகையில் போட்டார். மூன்று மல்லாந்தன... மற்றவை குவிந்தன. நிமிர்ந்து ஸ்ரீனிவாசனைப் பார்த்தார்.

அவன் ``குரு’’ என்றான்.

``ஓ... இது தெரியுமோ?”

``கொஞ்சம்.”

``இன்னும் கத்துக்கணுமோ?”

``ஆமாம்.”

64p2.jpg

``மூன்று விழுந்தால் குரு. ஆறு விழுந்தால் சுக்கிரன். இது எளிது. அது ஜோசியம். என்னுடையது மாந்திரீகம்; மந்திரப்பிரயோகம். சாஸ்தா பூஜை, சாம்பவி பூஜை, சின்ன மஸ்தான், தூமாவதி எனப் பல்வேறுவிதமாக நான் ஈடுபடுவேன். மிகுந்த மனவடக்கமும் அமைதியும் தேவைப்படும். சென்னை போன்ற நகரங்களில் இவற்றைச் செய்ய இயலாது. நான் நகரத்திலிருந்து எவ்வளவு தள்ளி இருக்கிறேன் பார்த்தீர்களா? நகரத்திலிருந்து சந்திரமோகனே தள்ளித்தான் இருக்கிறான். சந்திரமோகன் இருக்கும் இடத்திலிருந்து இது இன்னும் உள்ளடங்க, இன்னும் சற்றுப் போனீர்கள் என்றால் காடுதான். இது ஒரு சிறிய கிராமம்.

எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது தெய்வம். அந்த இடத்தில் வந்து உட்கார்ந்து பூஜிக்கிறேன் என்றால், அது அமைதியாக அந்த இடத்தில் வந்து அமர்ந்துகொள்கிறது. அதர்வண வேதத்தில் பாலபாடம், தெய்வத்தை அழைப்பதே. அழைப்பவன் மரியாதையாக அழைத்தால் எவரும் வந்து அமர்வார். என் வீடு சுத்தமாக இருந்தால் உங்களால் நெடுநேரம் அமர முடியும். துர்நாற்றம் வீசினால் உட்கார முடியாது. கிளம்பிப் போய்விடுவீர்கள். திரும்பக் கூப்பிட்டால் வர முடியாது. அதுபோலத்தான் தெய்வமும். இந்த இடத்தில் குங்கிலியமும் சாம்பிராணியும் காலையும் மாலையும் போட்டு மிகச் சுத்தமாக வைத்திருப்போம். துர்வாசனை வராது. மனம் சுத்தமாக இருந்தால் உடல் சுத்தமாக இருக்கும்; உடல் சுத்தமாக இருந்தால் மனம் சுத்தமாக இருக்கும். மனமும் உடலும் சுத்தமாக இருந்தால், சூழ்நிலை சுத்தமாக இருக்கும். சூழ்நிலை சுத்தமாக இருந்தால், ஒரு வீடு சுத்தமாக இருந்தால், ஒரு கிராமம் சுத்தமாக இருக்கும்.

ஒரு கிராமம் முழுவதுமே தேவதைகள் வந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். ஏனெனில், இந்தக் கிராமத்தில் உள்ள அனைவருமே முழு நம்பிக்கையோடு தங்களையும் சுத்தப்படுத்தி, தங்கள் இல்லத்தையும் சுத்தமாக வைத்திருக்கிறார்கள். இது சென்னை போன்ற பட்டினத்தில் இயலாது. அதனால்தான் பட்டணத்துக்கார்களுக்கு இது சொல்லித்தருவதில்லை அல்லது இதைக் கற்றுக்கொள்பவர் பட்டினத்தில் இருப்பதில்லை. இந்தப் பக்கம் வந்துவிடுகிறார்கள். உங்களால் இந்தப் பக்கம் வர முடியுமா?”

``இயலாது.”

``எனக்குப் புரிகிறது. என்ன செய்கிறீர்கள்?”

``ஒரு கம்பெனியில் வேலை செய்கிறேன்.”

``பெரிய கம்பெனியோ..?”

``ஆமாம். மிகப்பெரிய கம்பெனி.”

``உங்கள் துக்கம் என்ன?”

``என்னை அலுவலகத்தில் ஒருவர் அவமானப்படுத்துகிறார்; தொடர்ந்து அவமானப்படுத்துகிறார். மன உளைச்சல் தருகிறார்.”

``வன்முறையா?”

```இல்லை. பேச்சினாலும் செய்கையினாலும்.”

``இன்னும் கொஞ்சம் வலித்துச் சொல்ல முடியுமா?”

``எனக்கு மனைவியாகப்போகிறவர், எனக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். பத்து பக்கக் கடிதம்.”

``ஓ...”

``அதில் என்னோடு சந்தோஷமாக இருந்த தருணங்களை விளக்கியிருக்கிறார். `உங்கள் கை என்மீது இன்னும் இருக்கிறது’ என்று வர்ணித்திருக்கிறார்.”

``சொல்லுங்கள்.”

``அந்தக் கடிதத்தை எனக்குத் தெரியாமல் எடுத்து, என் அலுவலக நண்பர்களிடம் அதைப் படிக்கக் கொடுத்து, சகலரும் சிரிக்கச் செய்துவிட்டார்.”

``இவருக்குத் திருமணமாகிவிட்டது. இவருக்குக் கடிதம் எழுதியது வேறொரு பெண். அந்தப் பெண்ணையும் திருமணம் செய்ய வேண்டும் என்று இவர் விரும்புகிறார்.”

``சரி.”

சந்திரமோகன் போட்டுக்கொடுக்க, அவர் நிதானமாக ``சரி’’ என்ற வார்த்தையைச் சொன்னார். `இது தேவையில்லாமல் பேசியிருக்கிறாரோ!’ என்று மெல்லிய கோபம் வந்தது. ஆனால், காட்டிக்கொள்ளவில்லை. ஈஸ்வரன் ஸ்வாமி அமைதியாக இருந்தார்.

``சந்திரமோகன்... முதல், இரண்டாவது, மூன்று, நான்காவது அது விஷயமில்லை. ஒரு பெண்மணி அந்தரங்கமாக ஒருவருக்கு எழுதிய கடிதத்தை எடுத்து அதை மற்ற எல்லோருக்கும் படிக்கக் கொடுப்பது என்பது அந்த ஆளுக்குச் செய்த துரோகம் அல்ல; அந்தப் பெண்ணுக்குச் செய்த துரோகம். ஒரு பெண்ணை அவமானப்படுத்தியிருக்கிறார்;   கேவலப்படுத்தி யிருக்கிறார். இவரைக் கேலிசெய்வதைவிட அதிகமாக அந்தப் பெண்மணியை அவர்கள் பேசுவார்கள். இழிவாகச் சொல்வார்கள். அது தவறு. அடுத்தவருடைய கடிதத்தைப் படிப்பதே தவறு. இந்த மாதிரிக் கடிதத்தைப் படிப்பது மிகவும் தவறு. இதைப் பல பேருக்குக் கொடுப்பது தவறு. அவர் பேர் என்ன?”

``வரதராகவன்.”

``ஓ... அவர் வேறு என்ன செய்கிறார்?”

``என்னை எப்படியேனும் வேறு இடத்துக்கு மாற்றிவிட வேண்டும் எனத் துடிக்கிறார்.”

``ஏன்?”

``நான் அவருக்கு அருகே இருப்பதால், லஞ்சங்களில் அவரை ஈடுபட முடியாமல் தடுக்கிறது. என்னிடம் இருக்கும் பொறுப்புகளையும் அவர் எடுத்துக்கொண்டு விட்டால், அவருக்கு அதில் மிகப்பெரிய பணவசதி இருக்கிறது.”

``ம்... நீங்கள் அவரைவிட்டு நகர முடியாதா?”

``நகரலாம். அது ஒரு தோல்வி என்பதாகப்படும். அவர் வெற்றிபெற்றதாக ஆகும்.”

``வேறு என்ன செய்கிறார்?’’

``நான் கதைகள் எழுதுகிறேன்.”

``சரி.”

``அதைச் சொல்லி `இந்தப் பொறுப்புக்கு வந்துவிட்டு  இந்தக் கதைகளெல்லாம் எழுதுவது சரியில்லை. இது பொறுப்பின் கவனத்தைக் குறைக்கும்’ என்று சொல்கிறார். நான் சிறு தவறு செய்தாலும் என் இலக்கியப் பணிதான் காரணம் எனப் பெரிதாகப் பேசுகிறார்.”

``இலக்கியம் அறியாதவரா?”

``காசுதான் முக்கியம் என்பவர்.”

64p3.jpg

``ஆமாம். மனிதர்கள் அப்படியும் இருக்கிறார்கள். சந்திரமோகன், ஒரு மனிதனுடைய நல்ல சக்தி இலக்கியம். உன்னதமான நிலை இலக்கியம். என்ன தொழில் செய்தாலும் இலக்கியவாதியாக ஒருவன் இருப்பாரேயானால், அவன் மனிதருள் சிறந்தவன். ஒருவேளை இவர் இலக்கியமேகூட அந்த இரண்டாவது பெண்மணியினுடைய அன்புக்குக் காரணமாக இருக்கலாம். அந்தப் பாராட்டு இவர்களுக்குள் நட்பு ஏற்படுத்தியிருக்கலாம். அது என்னவாகும் என்பது வேறு விஷயம். இந்த இரண்டையும் ஒருவர் கொச்சைப்படுத்தியிருக்கிறார் என்றால், அது மிகப்பெரிய தவறு. அவரை உங்களால் மன்னிக்க முடியாதா?” ஈஸ்வரன் ஸ்வாமி மீண்டும் கேட்டார்.

``இல்லை. மன்னிக்க இயலாது. என்னுடைய வாசகியும் சினேகிதியுமான அந்தப் பெண்மணியை `ஒரு கேஸ்’ எனச் சொன்னது, என்னைக் குமுறவைத்துவிட்டது. அந்தப் பெண்மணி, மிக உயர்ந்தவர்; மிகச்சிறந்த பண்பாளி; அறிவுக்கூர்மைமிக்கவர். அவரின் கால் தூசுக்கு வரதராகவன் இணையாக மாட்டார்.”

``புரிகிறது. மனைவியை அல்லது மனைவியைப் போன்றவரை அவமானப் படுத்துவது என்பது போர் தூண்டுகின்ற விஷயமாகவே இருக்கிறது. பல போர்களுக்குக் காரணம் இதுவாகவே இருக்கிறது. இதை ஏன் மாந்திரீகத்தால் எதிர்க்க வேண்டும் என வந்தீர்கள்? நேரே போய் அடித்து நொறுக்கலாமே!”

``எனக்கு வேலை போகும். என் செயல்கள் யாவும் இலக்கியப் பணிகள் முதற்கொண்டு தடைபட்டுப்போகும்.”

``அடிசக்கை. நல்லது. முன்னமே சொன்னதுபோல மாந்திரீகம் என்பது தேவதைகளை வரவழைப்பது. தேவதைகளை எதிரே வரவழைத்துவிட்டு, அவர்களைப் பற்றிய மந்திர உச்சாடணங்களைச் செய்துவிட்டு நாம் பிரயோகத்தைத் தொடங்க வேண்டும். நாம் பிரயோகத்தைத் தொடங்க வேண்டும். நீங்கள் அந்தணர்தானே!”

``ஆமாம்.”

``போய் கைகால்களைச் சுத்தம் செய்து வாருங்கள்.”

அவன் முற்றத்துக்குப் போய் கைகால்களைச் சுத்தம் செய்து வந்தான். அங்கு இருந்த துண்டில் முகம் துடைத்துக்கொண்டு வந்து உட்கார்ந்தான். பையிலிருந்து பஞ்ச பாத்திரம் எடுத்துவைத்தான். தர்ப்பை பூக்களையும் தர்ப்பை மோதிரத்தையும் கீழே வைத்தான். அவர் வியந்தார்.

``கற்றுக்கொள்ள வேண்டும் என்ற தெளிவோடே இதை எடுத்துக்கொண்டு வந்திருக்கிறீர்களா?”

``ஆமாம்.”

``நல்லது. கற்றுத்தருகிறேன்.”

அவர் சொம்பிலிருந்து பஞ்ச பாத்திரத்தில் போட, அவன் சட்டையைக் கழற்றிவிட்டு பையிலிருந்த மேல் துண்டை இடுப்பில் சுற்றி வேகமாக மூன்று உளுந்து அளவு ஜலம் குடித்துக் கணபதியை வேண்டி, பரமேஸ்வரரைப் பிரார்த்தித்துக் கைக்கூப்பி குரு வணக்கம் சொல்லி, ``என்ன தட்சணை?’’ என்று கேட்டான்.

``பிறகு பார்ப்போம். உங்கள் வேகம் உங்கள் காயத்தை எனக்குக் காட்டுகிறது. நல்லது. எப்போது தேவதைகளை வரவழைத்து விட்டோமோ, பிறகு பிரயோகம் தொடங்கும். தேவதைகளை இப்போது வரவழைப்போம்.”

குறிப்பிட்ட ஒரு தேவதைக்கான மந்திரத்தைச் சொன்னார். ஸ்ரீனிவாசனைச் சொல்லச் சொன்னார். ஸ்ரீனிவாசனுக்கு அந்த மந்திரம் தெரிந்திருந்தது. அட்சரம் பிசகாமல் அழகாகச் சொன்னான்.

``ஏன் இந்த மந்திரத்தைக் கற்றுக்கொண்டீர்கள்?”

``இது சொன்னால் தடுக்கப்படும் என நினைத்தேன்.”

``தடுக்கப்படவில்லையோ?”

``இல்லை. கொஞ்சம் குறைந்தது, அவ்வளவுதான். அழியவில்லை. அழிக்கவே உங்களை நாடி வந்திருக்கிறேன்.”

``புரிகிறது. மந்திர ஜபம் செய்து தேவதைகளை இங்கு வரவழைக்கும் வித்தையை இப்படிச் செய்யலாம்.’’

``ஒரு கொத்து புஷ்பங்களை வைத்திருக்கிறேன். வந்து உட்காரும்படிச் சொல்கிறேன். நாம் சொன்ன நேரம் அவர் வந்து உட்கார்ந்தால் இந்தப் பூக்கள் சற்று சரியும். ஓர் ஆள் வந்து உட்கார்ந்ததற்கான விஷயம் நமக்குப் புரியும்.”

அவர் கொத்துப்பூவை வைத்துவிட்டு, மறுபடியும் அவனோடு சேர்ந்து மந்திரம் சொன்னார். சட்டென பூக்கள் காற்றில் கலைந்ததுபோல் கலைந்தன. ஆனால், காற்று வீசவில்லை. அவர் உயர்த்தி கைகாட்டி அவனை அமைதிப்படுத்தினார்.

``இப்போது கோதுமை மாவில் ஒரு மனித உருவம் செய்ய வேண்டும்.”

அவர் மரப்பெட்டியைத் திறந்து, உள்ளிருந்து ஒரு பிளாஸ்டிக் குப்பியை எடுத்து அதில் இருந்த உருண்டையை எடுத்துக் காண்பித்தார்.

``இது இன்று காலை செய்தது. கோதுமை மாவு உருண்டை. இதில் மனித உருவம் செய்வோம்.”

வெகு விரைவாக இரண்டு கை, இரண்டு கால், தலை, உடம்பு என அந்தப் பலகையில் மனித உருவம் செய்தார்.

``இப்போது இது வெறும் மனித உடம்பு; உன் எதிரி அல்ல. அந்த எதிரியின் உடம்பை இங்கு வரவழைப்பதற்கு ஒரு மந்திரம் இருக்கிறது.”

அவர் வேறுவிதமான சத்தங்கள் எழுப்பும் மந்திரத்தைச் சொன்னார். அவனும் சொன்னான். அது அவன் அறியாதது.

``மெள்ள இதில் இப்போது உங்கள் விரல்களை வைத்தீர்கள் என்றால், தொட்டுத் தொட்டு எடுத்தீர்கள் என்றால் அந்த இடத்தில் அவருடைய உருவம் தெரியும்.’’

அந்தக் கோதுமை மாவை வலது உள்ளங்கை விரல்களால் மெள்ள மெள்ளத் தொட்டுத் தொட்டு ஐந்து முறை எடுத்தான்.

``போதும் உற்றுப்பாருங்கள்” என்று சொல்ல, அங்கு மூக்கு, கண், தலை, முடி, கழுத்து, சட்டை என்றெல்லாம் பதிந்திருந்தன. கொஞ்சம் தொப்பையுடன் கூடிய வரதராகவனின் உடல் இருந்தது. அவன் பெரும் வியப்போடும் சிரிப்போடும் அவரைப் பார்த்தான்.

``வந்துவிட்டதா.”

``வந்துவிட்டது.”

``இப்போது இந்த மனிதரைத் தண்டிக்க, ஆயுதம் எடுக்க வேண்டும். இதோ இந்த மாதிரியான குச்சி.”

அவர் பல் குத்தும் குச்சியைப்போல சற்று நீளமான குச்சியை அவனுக்குக் காட்டினார். மிக அழகாகச் சீவப்பட்டிருந்தது. முனை கூர்மையாக இருந்தது.

``இது குச்சி அல்ல. இது ஓர் ஆயுதமாக வேண்டும். அந்த ஆயுதத்துக்கான மந்திரம் இருக்கிறது. அது இப்படிச் செய்யப்பட வேண்டும்.”

அவர் ``ஹ்ரீம் ஹும்’’ என்று மந்திரம்  சொல்ல ஆரம்பித்தார். மெள்ள மெள்ள அந்தக் குச்சியைத் தடவச் சொன்னார்.

அந்தக் குச்சியைத் தடவினான்.

``இது எப்போது ஆயுதமாகிறது என்பது, உங்கள் கைகளுக்குத் தெரியும். இதைச் சொல்லிக்கொண்டே தடவுங்கள்.”

ஸ்ரீனிவாசன்  ஏழு   நிமிடங்களுக்கும் மேலாக அந்தக் குச்சியைத் தடவிக்கொண்டிருக்கும் போது, சுளீரெனக் கை வலித்தது. ரத்தம் வந்துவிட்டதோ எனப் பார்த்தான். ரத்தம் வரவில்லை. ஆனால், ஒரு பிளேடு கிழித்ததுபோல எரிச்சல் இருந்தது.

``கத்தி கூர்மையாகிவிட்டது என அர்த்தம். உங்கள் கையைப் பதம் பார்த்து விட்டது. இதில் ரத்தம் வராது. ஏனெனில், இது உண்மையான கத்தி அல்ல. கத்தியின் வலிமையைக் கொண்டது. இது கத்தியாகிவிட்டது என்பதை உங்கள் வலி சொல்கிறது. இப்போது இதை எடுத்து அந்த வயிற்றிலோ அல்லது காலிலோ குத்தினால், சம்பந்தப்பட்ட வரதராகவன் அடிபடுவார். குத்திவிடலாமா?”

64p4.jpg

``குத்திவிடலாம்.”

``எவ்வளவு வலிக்கும் என நினைக்கிறீர்கள்?”

``அதிகம் வலிக்கும் என்றுதான் தோன்றுகிறது.”

``ஒருவேளை அவர் இறந்துவிட்டால்...”

``அவ்வளவு வலிக்குமா?”

``ஓ... எவ்வளவு வலிக்கும் எனத் தெரியவில்லை அல்லவா. இப்போது நாம் வேறுவிதம் செய்வோம். இதே பொம்மையை மெள்ள மெள்ள அதே மந்திரம் சொல்லித் தட்டுங்கள்.”

``எதற்கு?”

``சரி, நான் தட்டுகிறேன். உங்களை நினைத்துத் தட்டுகிறேன்.”

அவர் அழகாக மேலும் கீழுமாய் அந்தக் கோதுமை மாவைத் தட்டினார். குனிந்து பார்த்தான். அவனுடைய முகம் இருந்தது. கறுப்பு தாடி இருந்தது. பெரிய நெற்றி இருந்தது. அவன் சாயல் பலமாகத் தெரிந்தது. அவன் வியப்போடும் பயத்தோடும் அவரைப் பார்த்தான்.

``இந்தக் குச்சி வேண்டாம். இப்போது எதிரே இருப்பது ஸ்ரீனிவாசன். ஸ்ரீனிவாசனுக்கு வலி என்ன எனத் தெரிய வேண்டும் அல்லவா? எனவே, இந்தத் தர்ப்பைப் புல் எடுத்துக் கொள்கிறேன். இந்தப் புல்லின் தாள்களைக் கிழித்துவிடுகிறேன். இப்போது எஞ்சி இருப்பது இந்தக் குச்சி மட்டுமே. மிக மெல்லிய குச்சி. இந்த மெல்லிய குச்சியை நீவி நீவிச் செய்யலாம். நீங்களே நீவிக் கொடுங்கள்.”

அவனிடம் குச்சியைக் கொடுத்தார். அவன் மந்திரம் சொல்லிக் குச்சியை நீவினான். ஒரு நுனியில் சுள்ளென வலித்தது. ஓர் ஊசியை க்ஷண நேரம் குத்தி எடுத்ததுபோல வலி அது. ரத்தம் வருகிறதோ எனப் பார்க்கவைத்தது. ஆனால், வலி இருந்தது.

``குத்துகிறது’’ என்று அறுகம்புல் தண்டை நீட்டினான். அதை அவர் வாங்கிக்கொண்டார்.

``உங்களுக்கு இந்த மெல்லிய குச்சியால் குத்தினால் எப்படி வலிக்கும் என்பதைக் காட்டுகிறேன்.”

சரக்கென வயிற்றில் குத்தினார். ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து பிறகு, ஆறாவது எண்ணிக்கை வரும்போது சுள்ளென மேல் வயிறு வலித்தது.

``வலிக்கிறது” என்று அங்கு பொத்திக் கொண்டான். போட்டு மெள்ளத் திருகினார்.

``ஜாஸ்தியாகிறது” என அவன் கத்தினான். இடதுபக்கம் திருப்பினார்.

``நல்ல வலி”  அவன் நடுங்கினான். இன்னொரு முறை எடுத்துக் குத்தினார்.

``கடுமையான வலி” என்று அவன் கத்தினான். இன்னும் திருகினார்.

``போதும். இது வயிற்றுக்கோளாற்றை ஏற்படுத்திவிடும்” என்று அவன் அவரைத் தடுத்தான்.

``மெல்லிய அறுகம்புல் தண்டு. மிக அமைதியான பிரயோகம். எனக்கு உங்கள்மீது எந்தக் கோபமும் இல்லை. ஒரு பரிசோதனைக்கான கோபம்; பிரயோகம். இதுவே இவ்வளவு வலிக்கிறது அல்லவா? ஒரு கோபத்தோடு, இவ்வளவு பெரிய குச்சியை எடுத்துக் குத்தினால், வரதராகவன் செத்துப்போவான். நீங்கள் வேறு யாரையேனும் இப்படி எடுத்துக் கோபத்தோடு செய்தீர்கள் என்றால், மிக மோசமான பாதிப்பைக் கொடுத்துவிடுவீர்கள். ஒரு விளைவுக்கு எதிர் விளைவு உண்டல்லவா. நீங்கள் பிரயோகம் செய்து சாய்த்துவிட்டால் அந்தப் பக்கத்திலிருந்தும் ஒரு வினை வருமல்லவா? ஒரு செய்கை தவறென்றால், அது பாவமல்லவா? பாவத்துக்குப் பதில் உண்டல்லவா? எனவே, கோபம் உள்ளவர்கள், ஆத்திரம் உள்ளவர்கள், அசூயை உள்ளவர்கள் இதைச் செய்யக் கூடாது.`நீங்கள் செய்துகொடுங்கள்’ என்று என்னைக் கேட்டிருக்கலாம். தானே செய்வேன் என்று நீங்கள் ஆரம்பித்தீர்களே... அது தவறு.

ஸ்ரீனிவாசன், நீங்கள் நல்ல இலக்கியவாதி. ஓர் இலக்கியம் ஓர் ஆளுக்குப் பொறுமையைத் தான் தர வேண்டுமே தவிர, கோபமும் வேகமும் கொடுத்துவிடக் கூடாது. கோபமும் வேகமும் சாதாரண மனிதர்களுக்கு உண்டான வெளிப்பாடுகள். இலக்கியவாதிகள் பொறுமையை அறிந்துகொண்டவர்கள். பொறுமை என்பது கோழைத்தனம் அல்ல ஸ்ரீனிவாசன். பொறுமை என்பது கம்பீரம். ஒரு வினைக்கு எதிர்வினை உண்டல்லவா? உங்களையும் உங்கள் துணைவியையும் இழிவுபடுத்தியவன், இழிவுபடுவான். வாழ்வு மோசமாகும். இதைத் தூண்டிவிட்டவர் ஒருவர் இருக்கிறார். அவர் குழந்தைகளும் பாதிக்கப் படும். உங்களைப் பார்த்து நகைத்தவர்கள் இரண்டு பேர் இருக்கிறார்கள். அவர் மனைவிக்கு மரணம் ஏற்படும். உங்களுக்கு இடதுபக்கம் இருப்பவரும், உங்களுக்குப் பின்பக்கம் இருப்பவரும் உங்களை அவமானப்படுத்தியதில் பெரும்பங்கு வகித்தவர்கள். அவர்கள் அத்தனை பேரும் பாதிக்கப்படுவார்கள். மிக அழகிய பெண்ணை, துணைவியாக ஏற்கப்போகிறீர்கள். இதைக் கேலிசெய்தவனுக்கு, பல்லும் பனங்காயுமாக மனைவி அமைவாள். நான் ஆரூடம் சொல்லவில்லை. ஒரு வினைக்கு எதிர்வினை நிச்சயம் உண்டு. அப்படி இருப்பின், நாம் அமைதியாக இருந்துவிட வேண்டும். உங்களைப் போன்றோரின் கண்களில் நீர் வரவழைத்தால், அது அமிலமாகும். பொறுமையைக் கைக்கொண்டு இன்னும் உயர்ந்த நிலைக்கு வாருங்கள். இந்த வித்தை உங்களுக்குத் தெரிந்துவிட்டது.

அதைப் பிரயோகிக்கும் விதமும் தெரிந்துவிட்டது. இவை அனைத்தும் கோபமின்றியே செய்யப்பட வேண்டும். அவசியம் ஏற்பட்டாலொழிய இந்த வித்தை செய்யக் கூடாது. உங்களிடம் கத்தியை உறையிலிட்டுக் கொடுத்துவிட்டேன். கத்தியை வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், யுத்தத்துக்குப் போகாதீர்கள். உங்களுக்கு எதிரி என யாரும் இல்லை. எதிரி என்று வந்த அத்தனை பேரும் அடிபடுவார்கள்; சுருண்டு விழுவார்கள்; காலில் விழுவார்கள்.

பெரிய இடத்துக்குப் போகிறீர்கள். அமைதி காக்க, அமைதி காக்க, நீங்கள் உச்சியைத் தொடுவீர்கள். எவன் பதற்றப்படுகிறானோ, எவன் ஆவேசப்படுகிறானோ அவர்கள் அத்தனை பேரும் தாழ்ந்து போவார்கள்.

அவன்  வினையே அவனை அங்கஹீனமாக்கும். எனவே, ஸ்ரீனிவாசன் வித்தையைக் கற்றுக்கொண்டுவிட்டீர்கள். நீங்கள் போகலாம். விடை கொடுக்கிறேன்”  கைக் கூப்பினார்.

அவன் பையிலிருந்து அவன் எழுதிய மூன்று புத்தகங்களை அவருக்குக் கொடுத்தான்.

``அட...”

மூன்று புத்தகங்கள். அவர் வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டார்.

``இது ஒரு லட்சம் ரூபாய்க்குச் சமானம். எனக்குத் தமிழ் வேகமாகப் படிக்க வராது. என் மகன், மகள் இரண்டு பேரும் படிப்பார்கள். அவர்களிடம் கொடுத்து அபிப்ராயம் கேட்டுக்கொள்கிறேன். ஓர் எழுத்தாளன் புத்தகம் கொடுப்பதைவிட பெரிய பரிசு வேறு என்ன இருக்க முடியும்?”

அவன் எழுந்து நின்றான். கைக் கூப்பினான். காது குவித்து அபிவாதயே சொன்னான். நீண்ட நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினான். மண்டியிட்டான். அவன் கண்களிலிருந்து நீர் வழிந்தது.

``கத்தியை மட்டும் கொடுக்கவில்லை. உள்ளே ஒரு சாத்வீகத்தைக் கொடுத்துவிட்டீர்கள். சாந்தத்தைக் கொடுத்துவிட்டீர்கள். நன்றி... நன்றி. உங்களை மறக்க மாட்டேன்’’ அவன் எழுந்து நின்று குனிந்து பாத்திரங்களை உள்ளே போட்டுக்கொண்டு பையை மாட்டிக்கொண்டு மெள்ளப் பின்னடைந்து வெளியேறினான். மழை பெய்துகொண்டிருந்தது. சந்திரமோகனோடு கவலையில்லாமல் அந்த மண் தரையில் அழுத்தி மிதித்தவாறு மழையில் சிரித்தபடி ஸ்ரீனிவாசன் நடந்து வந்தான்.

அந்த ஸ்ரீனிவாசனுக்கு இன்று 71 வயது. அந்தக் கத்தி, உறையிலிடப்பட்டு அவர் இடுப்பில் இருக்கிறது. 41 வருடங்களாக அந்தக் கத்தியை அவர் எடுக்கவேயில்லை.

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.