Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தேவதையின் கதை

Featured Replies

தேவதையின் கதை - சிறுகதை

சிறுகதை: குமாரநந்தன், ஓவியங்கள்: ஸ்யாம்

 

மாதம்மாள் ரக ரகமான அரிசிகளை மாட்டு வண்டிகளில் ஏற்றிக் கொண்டு, சந்தைகளுக்குப் போவாள். ஒவ்வொரு சந்தையிலும் பிரதான இடத்தில் அவள் கடை இருக்கும். மூட்டைகளை இறக்கி அடுக்கும்போதே வியாபாரம் ஆரம்பித்துவிடும். வேலைப்பாடு மிக்க வெள்ளிக்காப்பு அணிந்த கைகளால் படியில் அரிசியை அளக்க ஆரம்பித்தால், இரவு சந்தை கலையும் வரை ஓய்வே இருக்காது. காசுக்குக்  கொண்டு வந்து தருகிறவர்களிடம் தண்ணீர் வாங்கிக் குடித்துக்கொள்வாள். மதிய நேரம் வண்டிக்கார முத்துவிடம் “சித்தநேரம் கடைய பாத்துக்குங்க, சாப்பிட்டு வந்துடறேன்” என, அதிகாலையில் ருக்மணி அம்மாள் ஆக்கித் தந்த சோற்றைச் சாப்பிட்டுவிட்டு, மீண்டும் அதே களையுடன் வந்து கடையில் நிற்பாள். முகத்தில் களைப்பின் அறிகுறியோ, வெயிலின்  கொடுமையோ தென்படாது. அரிசி வாங்காவிட்டாலும் அவளின் சிரித்த முகத்தைப் பார்த்தாலே போதும் என எத்தனையோ பேர் அவள் முகத்தைப்  பார்த்துவிட்டுப் போவார்கள்.  பிச்சைக்காரர்கள் முதலில் வந்து அவள் கையில் வாங்கிக்கொண்டுதான் அடுத்த இடத்துக்குப் போவார்கள். அவர்களையும் அதே சிரித்த முகத்துடன்தான் பார்ப்பாள். முகம் அசூயையோ கர்வமோ  பெருமையோ இல்லாமல் நிர்மலமாக இருக்கும்.

p46a_1522133064.jpg

அவளால்தான் அவள் கணவன் ஜம்புவுக்கு மதிப்பு. ஜம்புவும் குஸ்தி பயில்வான்போல இருப்பான். கணவனும் மனைவியும் சேர்ந்து நடந்தால், கிழவிகள் முறிக்கும் நெட்டி ஒலியால் அவர்கள் பாதை நிறைந்திருக்கும்.

ஜம்புவுக்குக் கல்யாணத்துக்கு முன் இரண்டு ஏக்கர் நிலமிருந்தது. அதில் கீரை வகைகளைத்தான் எப்போதும் பயிர் செய்வான். நடு ஜாமத்தில் எழுந்து அரைக்கீரை, முளைக்கீரை, தண்டுக் கீரைகளை அறுத்துக் கட்டு கட்டி சூரியன் உதிக்கும் முன்பே சந்தைகளுக்கு வண்டியில் கொண்டு போவான்.

மாதம்மாள் வந்த பின் கீரை விதைப்பதை நிறுத்திவிட்டு நெல் போட்டார்கள். சிறு பச்சைக் கடலென அவர்கள் காட்டில் நெற்கதிர்களில் காற்றின் அலை அடித்தது. சட்டென அவர்கள் அந்தஸ்து வேறு தளத்துக்கு உயர்ந்தது. அதுவரை கூலிக்கார பாவனையில் இருந்த அவர்களுக்கு முதலாளி பாவம் வந்தது.

வற்றாத  கிணற்றால், களத்தில் பொற்குவியலாய்க் குவிந்த நெல்லை வியாபாரிகளுக்கு விற்காமல், கோட்டை அடுப்பில் கொப்பரை வைத்து மாதம்மாளே அவித்தாள். புழுக்கிய நெல்லை வண்டிகட்டிக் கொண்டு போய் மில்லில் அரைத்து, மூட்டை பிடித்து, மல்லூர்ச் சந்தையில் கடை போட்டாள். வீட்டு உபயோகத்துக்குப் போக, வைத்திருந்த அத்தனை அரிசியும் ஒரே வாரத்தில் விற்றுத் தீர்ந்தது. சேலம் அரிசி மண்டியில் அரிசி வாங்கி வந்து கடையைத் தொடர்ந்தாள். பனமரத்துப்பட்டி, வெண்ணந்தூர், ஆட்டையாம்பட்டி, குமாரபாளையம் எனச் சந்தை சந்தையாய் அவள் அரிசிக்கடை ராஜ்ஜியம் விரிந்தது. காலங்காலமாய் அரிசி வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்த செட்டியார்களை ஆறே மாதத்தில் ஓரங் கட்டினாள். அப்போதிருந்தே அவர்களுக்கு ராஜயோகம்தான். நான்கைந்து வருடங்களிலேயே வியாபாரம் பிரமாண்டமாய் வளர்ந்தது. அரிசி மூட்டைகளோடு மூட்டையாய் பணத்தையும் கட்டிக்கொண்டு மாதம்மாள் வீட்டுக்குப் போனாள்.

ஏக்கரா ஏக்கராவாய் நிலம் வாங்கினார்கள். நெல் விளைவித்தார்கள்.

பழைய வீட்டை இடித்து, நடுவில் பத்து மூட்டை நெல் காய வைக்கும் அளவுக்குக் களம் போட்டு, இரட்டை மாடியுடன் தொட்டிக் கட்டு வீடு கட்டினார்கள். வாசலில் ஐம்பது மூட்டை நெல் காய வைக்கலாம். பால் மாடுகள் பத்து கொட்டிலுக்கு வந்தன. வீட்டு வேலை செய்ய, சமைக்க ருக்மணி அம்மாள் வந்தார். பால் கறக்க ஆள், பண்ணையம் பார்க்க ஆள், காட்டு வேலைகளை மேற்பார்வை செய்து, கூலியாட்களைத் தயார் செய்ய கனகரத்தினம் எல்லாம் வந்தார்கள்.

ஜனங்கள் ஏதோ மாயாஜாலப் படத்தைப் பார்ப்பதைப்போல வாயைப் பிளந்துகொண்டு இவர்களைப் பார்த்தார்கள். ஊர் ஊராய் இவர்களைப் பற்றிப் பேச்சாய் இருந்தது.

இவ்வளவு செல்வாக்கு வந்தபிறகுதான் அவர்களுக்குக் குழந்தை இல்லாத குறை நிவர்த்தியானது. பவித்ரா பிறந்தாள். பெயர் சூட்டு விழாவில் ஐந்நூறு பேருக்குச் சாப்பாடு போட்டார்கள். கவிழ்ந்து விழும்போது, குழந்தையின் எடைக்கு நிகராக, அம்மனுக்குக் வெள்ளிக் காசு துலாபாரம் கொடுத்தார்கள். ஏழு மாதத்தில் தங்கக்கிண்ணத்தில் மகளுக்குச் சோறூட்டினார்கள். அவள் நடந்தது, பள்ளிக்கூடம் போனது எல்லாம் திருவிழாவானது.

ஊரில், மாதம்மாளுக்கு ராணியின் மதிப்பு இயல்பாக வந்து சேர்ந்தது. ‘அவங்க போன ஜென்மத்தில மங்கம்மாவா இருந்திருப்பாங்க’, ‘ஜமீன்தாரினி குமுதவல்லியா இருந்திருப்பாங்க’ என, ஊரில் கதை கதையாய்ப் பேச்சு எழுந்தது.

பவித்ரா சிறுமியாய் இருக்கும்போதே, தாயின் அழகைத் தூக்கிச் சாப்பிட்டுவிடும் பேரழகியாய் வரப்போவதற்கான அறிகுறிகள் தெரிந்தன. அவள் விழிக்கோளங்களில் அப்படி ஒரு வெண்மை. வட்ட முகம். கன்னங்களும் வாயும் சிற்பக் கலை.

வெள்ளைக் குதிரை பூட்டிய வில் வண்டியில் பள்ளிக்கூடம் போனாள். ஆனால், பவித்ராவுக்குப் படிப்பு சுமாராகத்தான் வந்தது. மாதம்மாளுக்கு ஏமாற்றமாய் இருந்தது. பெண் ஒருவேளை சூட்டிகை இல்லாமல் போய் விடுவாளோ எனக் கவலைப்பட்டாள். ஆனால், அவளுக்குப் படிப்புதான் சரியாய் வரவில்லையே தவிர புத்தி அபாரமாக வேலை செய்தது.

‘நீ மட்டும் சினிமாவில நடிக்கப் போனியனா டி.ஆர்.ராஜகுமாரி, அஞ்சலிதேவியெல்லாம் கண்காணாத தேசம் போயிடுவாங்க’ என ருக்மணி வாய்க்கு வாய் சொல்லிக் கொண்டிருந்தாள். மாதம்மாளுக்கு அதைக் கேட்கும்போது அவ்வளவு பெருமையாய் இருந்தது. அந்த வார்த்தைகள் அவள் ஆழ்மனதில் சென்று செய்த வேலையோ என்னவோ பவித்ராவுக்கு சினிமா பாவனை சின்ன வயதிலேயே வந்துவிட்டது.

 நறுவிசான அழகு, உணர்வுகளை எழிலாய் வெளிப்படுத்தும் முகம், செல்வச் செழிப்பில் ஒளிவீசும் உடல்...இதெல்லாம் சினிமாவில் நடிப்பதற்கென்றே தனக்கு இறைவன் வழங்கியதாக பவித்ரா நினைத்துக் கொண்டாள்.

அவளுக்கு சினிமா என்றால் உயிர். வாரம் ஒருமுறை கணபதி டாக்கீசுக்குக் கூட்டிப் போய்விட வேண்டும். ருக்மணி அம்மாளின் வேலைகளில் இதுவும் ஒன்று. அப்படி கூட்டிப் போக மறுத்தால், அவள் சாப்பிட மாட்டாள். ஒரு கவளம் அவள் வாயில் இறங்காது. படம் பார்த்துவிட்டு வந்ததும், படத்தின் முழு வசனத்தையும் அதே ஏற்ற இறக்கத்தோடு அதைவிடப் பலமடங்கு வசீகரத்தோடு பேசிக் காட்டிவிடுவாள். மாதம்மாளுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. இதென்ன இப்படி ஒரு திறமை. பவித்ராவின் சினிமா மோகமும், நடிப்புத் திறமையும் ஊராரிடமிருந்து மறைத்து வைக்க முடியாததாய் இருந்தது. எங்கே போனாலும் `கண்ணு, அந்தப் படத்துல ராணி பேசின மாதிரி பேசு’, `இந்தப் படத்துல அந்தப் பாட்டை ஒரு தரம் பாடு’ என்ற வேண்டுகோள்களுக்கு அவள் உற்சாகமாய் நடித்துக்காட்டினாள். பள்ளிக்கூடத்தில் வாத்தியாரினிகள் கூட அவளை நடித்துக்காட்டச் சொல்லி மெய்மறந்து பார்த்தனர்.

‘போகப் போக எல்லாம் சரியாகிடும். விவரம் தெரிந்த பின்னால் பெண் சரியாகிவிடுவாள்’ என மாதம்மாள் நம்பியிருந்தாள்.

 வருடத்துக்கு வருடம் அவள் அழகு காட்டாற்று வெள்ளமாய்ப் பெருகியது. உடல் காம அஸ்திரங்களால் நிரம்பியது. மாதம்மாளிடம் இருந்த தெய்விக அமைதி அவளிடம் இல்லை. பவித்ரா மோகினி அவதாரம்போல இருந்தாள். இளமை அவளை வசீகரத்தின் எல்லை வரை கொண்டு செல்லப்போகிறது என்பதே எல்லோரின் கணிப்பாய் இருந்தது.

பன்னிரண்டு வயதில் பவித்ரா பெரியவளானாள். அப்போதே எங்கெங்கிருந்தோ அவளைப் பெண் கேட்டு வர ஆரம்பித்துவிட்டார்கள்.

தான் இனி பள்ளிக்கூடம் போகப்போவதில்லை என பவித்ரா அறிவித்துவிட்டாள். ஆனால், அவள் சினிமா மோகம் இம்மியும் குறையவில்லை. வயதுக்கு வந்தபின் சினிமாவுக்குப் போகக் கூடாது என மாதம்மாள் தடை போட்டாள். பவித்ரா அதை ஒப்புக்கொள்ளவில்லை. ஜம்பு புளிய விளாரால் அவள் கால்களுக்குக் கீழே வீறினான். மாதம்மாள் கணவனைத் தடுத்தாள். “வேண்டாம், அவள் இஷ்டப்படி விடுங்க” என்றாள்.
மகளை மடியில் சாய்த்துக்கொண்டு ரத்தம் கன்றிய கால்களை நீவி விட்டாள்.  “பவித்ரா, நமக்கு எதுக்கும்மா இந்த ஆசையெல்லாம்? குல நாசம் வந்து சேரும். மானம் மரியாதை போயிரும். கடவுள் கொடுத்த இந்த அழகெல்லாம் விகாரமாப்போயிடும். சொன்னா கேளு. சினிமாங்கறது வெறும் காமக் கூத்து. அதிலே வேற ஒண்ணும் கிடையாது. அதுக்கு நீ பலியாகணுமா?”

பவித்ரா எதுவும் பேசவில்லை. அவளின் அழகான கண்களில் இருந்து பரிசுத்தமான கண்ணீர்த் துளிகள் உருண்டு விழுந்தன.

“சரி இனிமே முதலாட்டத்துக்குப் போக வேண்டாம். படம் முடிஞ்சி வர நேரமாயிடும். என்னால வயித்தில நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்க முடியாது. பகல் காட்சிக்குப் போ” என அனுமதியளித்தாள்.
மாரியம்மன் கோவிலுக்குப் போய் `மகளை இந்தப் பைத்தியக் காரத்தனத்தில இருந்து மீட்டுக் கொடம்மா தேவி. நான் கன்ன அலகு குத்தி உன் கோயிலை வலம் வர்றேன்’ என மாதம்மாள் வேண்டிக்கொண்டாள்.
பட்டுப் பாவாடை தாவணி கட்டி பவித்ரா ருக்மணியுடன் கணபதி டாக்கீசுக்குப் படம் பார்க்கப் போனால், தியேட்டரின் வண்ணமே மாறியது. அந்தப் படத்தில் நடித்த நடிகையே படம் பார்க்க வந்ததுபோல் காட்சிக்குக் காட்சி விசில் சத்தத்தால் திமிலோகப்பட்டது கொட்டகை.

அந்த வருடம் கோயில் விழாவில், நீண்ட நாள்களுக்குப் பிறகு, வாணியம்பாடி சுலோசனாவின் `வள்ளி திருமணம்’ நாடகத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சுலோசனா தங்குவதற்கு ஜம்பு வீட்டில்தான் ஏற்பாடு ஆகியிருந்தது. சுலோசனாவின் நடிப்பில் மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஜம்பு, மாதம்மாள் இருவருக்கும் சுலோசனாவை மிகவும் பிடிக்கும். அவள் தங்கள் வீட்டில் வந்து தங்குவதைப் பெரும்பேறாய் நினைத்தார்கள்.

பண்டிகை இரவு சுலோசனா கோஷ்டிக்கு என, விசேஷமாய் விருந்து தயாரானது. கூட்டும் பொரியலும் வடை பாயசமும் வீடே மணத்தது. சாயந்திரம் நாடகக்காரர்களின் குதிரை வண்டிகள் வீட்டு வாசலில் வந்து நின்றன. சுலோசனா வண்டியிலிருந்து இறங்கினாள். கணவன் மனைவி இருவரும் கைகூப்பி வரவேற்றார்கள்.

மாதம்மாள் அவளையே வைத்த கண் வாங்காது பார்த்தாள். சுலோசனாவும் எதிர்பாராத ஏதோ ஒன்றைக் கண்டது போல மாதம்மாளைப் பிரமிப்புடன் பார்த்தாள். மாதம்மாளின் பார்வையைப் பார்த்து அவளுக்கு வெக்கமாய் இருந்தது. “அக்கா என்னை ஏன் அப்படிப் பாக்கறீங்க, நான் அல்லவா உங்களை அப்படிப் பார்க்க வேணும்?” எனக் கூச்சத்துடன் அவள் கைகளைப் பற்றிக்கொண்டாள். அப்போது அங்கு வந்த பவித்ராவைப் பார்த்து சுலோசனாவுக்கு உலகம் கீழ்மேலாய்ச் சுழன்றது. “அக்கா இது உங்க மகளா?” என்றாள். ஏனோ அவள் கண்களில் நீர் எட்டிப் பார்த்தது.  பவித்ரா ஜென்ம ஜென்மமாய்ப் பழகியவளைப் போல சுலோசனாவின் கைகளைப் பற்றிக் கொண்டாள்.

வீட்டில் வறுத்து அரைத்த காபிக்கொட்டைத் தூளைப் போட்டு, கறந்த பாலில் எல்லோருக்கும் முதலில் காபி வைத்துக் கொடுத்தார்கள். மேளக்காரர் பிரபுலிங்கம் “அம்மா இந்தக் காபி போதும், சம்பளமே வேணாம்” என்றார்.

பவித்ரா மான்குட்டியைப்போல சுலோசனாவிடமே உட்கார்ந்துகொண்டாள். வந்ததிலிருந்தே கேட்டுவிட வேண்டும் என வாய்க்குள்ளேயே சுழன்றுகொண்டிருந்த கேள்வியைக் கேட்டாள். “அக்கா, நீங்க ஏன் சினிமாவுல நடிக்கப் போகலை?”

சுலோசனா வசீகரமாய்ச் சிரித்தாள்.  “சினிமாவுல நடிக்கலாம் வான்னு என்னை எப்பவோ கூப்பிட்டாங்க. எனக்கு என்னவோ அது பிடிக்கலை. ஆயிரம் ஜனங்களுக்கு முன்னால நடிக்கறதுக்கு ஈடாகுமா அது?” என்றாள். அப்போ “அக்கா, உங்களுக்கு சினிமா எடுக்கறவங்களை யெல்லாம் தெரியுமா?” எனக் கேட்டாள். அவள் கண்களிலிருந்து ஒளிமிகுந்த பட்டாம்பூச்சிகள் பறந்தன. சுலோசனா அந்த ஒளியைக் கண்டு பிரமித்தாள். “ஏன் தெரியாம, ‘மேனகையின் காதல்’ படம் எடுத்த பூபதி ராஜா, ‘நீ எப்போ சினிமாவுல நடிக்க வர்றே. உனக்காகவே நான் ஒரு கதை பண்ணி வச்சிருக்கேன்’னு பாக்கும்போதெல்லாம் சொல்லிக்கிட்டே இருப்பார். மெட்ராஸ்ல நாடகம் போட்டா ஒரு நாலு டைரக்டர்ங்களாவது வந்து சினிமாவுல நடிக்க வான்னு கூப்பிடுவாங்க. ஆனா, எனக்குதான் அதுல இன்னும் ஆசையே வரலை’’ என்றாள்.
 நடிப்பு, சினிமா என இருவரும் மெய்மறந்து பேசுவதைக் கேட்க மாதம்மாளுக்கு சங்கடமாய் இருந்தது.  மகளை இந்தப் பக்கம் வரும்படி கூப்பிட்டாள்.

 உணவு எல்லோரும் அளவாகத்தான் சாப்பிட்டார்கள். இரவு விடிய விடிய கண் விழிக்க வேண்டும். நன்றாகச் சாப்பிட்டால் தூக்கம் வந்துவிடும் என்றார்கள்.

சாப்பிட்டு முடித்து, கூடத்தில் உட்கார்ந்த சுலோசனா திடீரெனக் கேட்டாள்.  “பவித்ரா, எங்கூட மேடையில தோழியாய் நிக்கிறியா? வசனம் எல்லாம் பெரிசா இல்லை” என்றாள்.

அதைக் கேட்டதும் மாதம்மாளுக்கு நெருப்பை வாரிக் கொட்டினாற்போல இருந்தது.  ‘என்ன காரியம் செய்துவிட்டோம். ராஜநாகத்துக்கு அல்லவா பால் வார்த்துவிட்டோம்’ என நினைத்தவளாய், ‘`சுலோசனா, என்ன சொன்னே?’’ எனக் கத்திவிட்டாள்.

சுலோசனா அவளை ஆச்சர்யமாய்ப் பார்த்தாள். மெள்ள  அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. “அக்கா எம்மேல கோவிச்சிக்கிட்டியா? தப்பு, கேட்டது தப்பு, மன்னிச்சிக்க” என்றாள். ஆனால் பவித்ரா, “அக்கா கூடதானே நிக்கப்போறேன். நானும் வர்றேன்” என்றாள்.

மாதம்மாளின் உடல் நடுங்கியது. யோசிக்காமல் சுலோசனாவின் காலில் விழுந்தாள். சுலோசனா தீயில் விழுந்ததைப்போலப் பதறிப் போனாள். “அக்கா, என்ன காரியம் செஞ்சீங்க. ஐயோ நான் பாவி” என அழ ஆரம்பித்துவிட்டாள்.

சட்டெனத் தன்னைத் தேற்றிக்கொண்டு, “அக்கா, நீங்க கவலைப் படாதீங்க. பவித்ரா என்னைக்கும் உங்க மகளா மகாராணியா இருப்பா” என்றாள்.

 பவித்ராவின் தலையை ஆதுரமாய்த் தடவி, “வேண்டாம் கண்ணே, என் வாயில தெரியாத்தனமா அந்த வார்த்தை வந்திடுச்சு. போம்மா, உனக்கு அதெல்லாம் வேண்டாம்” என்றாள்.

 அன்றிரவு நாடகம் பார்க்க மாரியம்மன் கோயில் மைதானம் முழுவதும் ஜனக்கூட்டமாய் நிறைந்திருந்தது.  சுலோசனாவின் ஒவ்வொரு வார்த்தைக்கும் சிரிப்புக்கும் இளவட்டங்களின் விசில் சத்தம் காதைப் பிளந்தது. பவித்ராவின் மனம் எங்கெங்கோ மிதந்தது. அவளுக்குள் புதிய புதிய சிந்தனைகள் உயிர் பெற்றன. எதிர்காலத்தைப் பற்றிய சித்திரம் வலிமையாய் உருக்கொண்டது. மறுநாள் நாடக கோஷ்டி கிளம்பும்போது, பவித்ரா சுலோசனாவின் கையைப் பிடித்துக்கொண்டு, “அக்கா நானும் உன்னை மாதிரி நடிகையாகப்போறேன், சினிமாவில் நடிக்கப்போறேன். என்னைக் கூட்டிக்கிட்டுப் போ” என்றாள்.

சுலோசனா அவள் கைகளை ஆதுரமாய்ப் பற்றிக்கொண்டு, “இதெல்லாம் கனவு கண்ணே, ஒருநாள் எல்லாம் மாறிடும். தீயில் விழும் விட்டில் பூச்சியாய் இதிலே விழுந்திடாதே. அம்மா சொல்றதைக் கேள். அம்மாவின் மனம் நோகும்படி நடந்துகொள்ளாதே” என்றாள்.

மாதம்மாளுக்கு உயிரே போய்விட்டதைப்போல இருந்தது. மகளை எந்த அளவுக்கு விட்டுவிட்டோம். இனியும் இவள் போக்குக்கு விடக்கூடாது என நினைத்துக்கொண்டாள். பவித்ரா எக்காரணம் கொண்டும் இனி சினிமாவுக்குப் போகக் கூடாது என, வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டாள்.

ஒரு வாரம் போனது. அன்று வெள்ளிக் கிழமை காரிப்பட்டியில் சந்தை வியாபாரத்தை முடித்துக்கொண்டு இரவு எட்டு மணிக்குமேல் மாதம்மாள் வீட்டுக்கு வந்தாள். ஜம்பு எரு ஓட்ட வண்டி கட்டிக்கொண்டு ஒடுவன்குறிச்சி போனவன் இன்னும் வரவில்லை. ருக்மணியும் வீட்டில் இல்லை.

மாதம்மாளுக்கு என்னவோ வித்தியாசமாய்த் தெரிந்தது. அடிவயிற்றில் பயம் உருண்டது. ‘பவித்ரா’ எனச் சத்தம் போட்டுக்கொண்டே வீட்டுக்குள் போனாள். வீடு ஆள் அரவமின்றிக் கிடந்தது.

பவித்ராவைக் காணவில்லை. ‘இதென்ன மோசம். பாவிப் பெண் இப்படிப் பழி கொண்டு வந்தாளே’ என உடைந்துபோய் உட்கார்ந்துவிட்டாள். ‘பவித்ரா எங்கே போனே? உன்னை எங்கே தேடுவேன்?’ எனப் பைத்தியம் பிடித்தது மாதிரி பிதற்றிக்கொண்டி ருந்தாள். ஜம்பு உரக்குழியில் சாணத்தை இறக்கிவிட்டு வீட்டுக்கு வந்தான். மாதம்மாள் தலை தலையாய் அடித்துக் கொண்டு, பவித்ரா காணாமல் போன செய்தியைச் சொன்னாள்.

ஜம்பு இடிந்து விழுந்தான். “அடிப்பாவி, பிள்ளைய ஒழுங்கா வளக்காம இப்படி நாசம் பண்ணிட்டியேடி” என இடுப்பில் கட்டியிருந்த தோல் பெல்ட்டைக் கழற்றி வீறினான். மாதம்மாள் கூப்பிய கைகளோடு அடிகளை வாங்கிக்கொண்டாள்.  “என்னை அடிச்சுக் கொன்னுடுங்க” எனக் கண்களை மூடிக் கொண்டாள்.

அன்றிரவு எப்படிப் போனதோ எங்கே போனதோ தெரியவில்லை. ஜம்பு விடியற்காலையில் வண்டி கட்டச் சொன்னான். “ஊர் ஊராய் போய்த் தேடுவோம், போலீசில சொல்லுவோம்” என்றான்.

p46b_1522133082.jpg

ஆனால், பொழுது புலரும் முன்பே சுலோசனாவின் குதிரை வண்டி வீட்டு வாசலில் வந்து நின்றது. பவித்ரா அதிலிருந்து இறங்கினாள். பின்னாலேயே சுலோசனா இறங்கினாள். மாதம்மாள் ஓடிப்போய் மகளைக் கட்டிக் கொண்டாள்.

சுலோசனா சங்கடம் தோய்ந்த குரலில் மெள்ளச் சொன்னாள். “அக்கா, இந்தப் பிறவிய மாத்த முடியாது. அவளை அவ இஷ்டத்துக்கு விட்டுடு”. “அவ இஷ்டத்துக்கா விட? நான் உயிரோட இருக்கிறவரைக்கும் நடக்காது. இவளைக் கண்டந்துண்டமாய் வெட்டிப் போட்டாலும் போடுவேன். சினிமாவுல நடிக்க விட மாட்டேன்” என்றாள்.

“ஏய் பவித்ரா, என்னடி சொல்ற, ஒழுங்க இருக்கிறியா இல்லை செத்துப் போறியா?” என்று மகளைப் பார்த்துக் கேட்டாள். மாதம்மாளின் கண்களில் தீக்கங்குகள் காந்துவதை அப்போதுதான் பவித்ரா முதன் முதலாகப் பார்த்தாள். பயமாய் இருந்தது. “அம்மா, இனிமே நான் உன் பேச்சைக் கேட்டு ஒழுங்கா இருக்கேம்மா” என்றாள். பிறகுதான் அந்த வீட்டில் நிம்மதியின் இளம்காற்று வீசியது. தன்னுடைய வேண்டுதலை அம்மன் நிறைவேற்றிவிட்டாள். ‘அடுத்த ஆண்டு பண்டிகையில் சொன்னபடி கன்ன அலகு குத்திக் கொள்கிறேன் தாயே பராசக்தி’ என, மாரியம்மன் கோயில் இருந்த திசையில் கையடுத்துக் கும்பிட்டாள். எல்லாம் ஒரு வாரம்தான். அடுத்த வாரமே பவித்ரா மீண்டும் காணாமல் போய்விட்டாள். இந்த முறை அவள் சுலோசனா வீட்டுக்குப் போகவில்லை. மெட்ராஸ் போகும் சாயந்திர ரயிலில் அவள் ஏறியதைப் பார்த்ததாகச் சிலர் சொன்னார்கள்.

இருவரும் பைத்தியம் பிடித்ததுபோல் ஆனார்கள். மாதம்மாள் சந்தைக்குப் போகவில்லை. அரிசி மூட்டைகள் விற்காமல் அடுக்கியபடியே கிடந்தன. மாதம்மாளின் கண்கள் ஒளி குறைந்து சூனியம் குடிகொண்டது. வெறுமையும் ஏக்கமும் பீடித்தவளானாள். அவளை அப்படிப் பார்க்க ஊருக்கே சகிக்கவில்லை.

ஒரு வாரம் கழித்து பவித்ரா வந்தாள். தான் மெட்ராஸ் போயிருந்ததாகவும், அம்மன் கருணையினால் தனக்குத் துன்பம் எதுவும் நேரவில்லை என்றும் சொன்னாள். மாதம்மாளுக்கும் ஜம்புவுக்கும் மகள்மீது இருந்த பற்று விட்டுப்போனது. யாரோ எவரோ போல் அவளைப் பார்த்தார்கள். அவள் சொன்னதை மௌனமாகக் கேட்டார்கள். பவித்ரா சென்னையில் ஒரு நாடக ஆசிரியரிடம் சேர்ந்துவிட்டதாகச் சொன்னாள். அவர் அவளுக்கு முறையாகப் பயிற்சி கொடுத்து, சினிமாவில் சேர்த்துவிடுவார் என்றாள்.

ஆக, பவித்ரா திரும்பவும் போய்விடுவாள் என்பது உறுதியாகத் தெரிந்த பின், “இதைச் சொல்லத்தான் இங்கே வந்தியா? நீ அங்கேயே போயிரு. திரும்ப வந்து எங்க முகத்தில விழிக்காதே” எனக் கையெடுத்துக் கும்பிட்டாள் மாதம்மாள். பவித்ரா அன்றிரவே மீண்டும் மெட்ராஸுக்குக் கிளம்பிவிட்டாள். அதற்குப் பின் அவளைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை.

மாதம்மாள், ஜம்பு இருவரும் மெள்ள மெள்ள தங்களைத் தேற்றிக்கொண்டார்கள். கடவுளின் சித்தத்தைத் தாங்கள் எப்படி மாற்ற முடியும் என்றார்கள். தங்களுக்கு வாரிசு எதுவும் இல்லை என்றும் சொத்துகளைக் கோயிலுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் எழுதி வைக்கப்போவதாகச் சொன்னார்கள்.

மாட்டு வண்டிகள் மீண்டும் அதிகாலையில் சந்தைகளுக்குக் கிளம்பின. பழையபடியே நெளிநெளியான கூந்தலை எண்ணெய் வைத்துப் படியச் சீவி ஜடை போட்டு, தலைநிறைய மல்லிகைப் பூவைச் சூடிக் கொண்டு மாதம்மாள் வியாபாரத்துக்குக் கிளம்பிவிட்டாள். ஆனாலும், அவள் இப்போது வேறொரு மாதம்மாளாய் இருந்தாள். அவள் நடவடிக்கைகளுக்குப் பின்னால் மெல்லிய சோகத்தின் நிழல், விலக்க முடியாமல் படிந்திருந்தது.

அந்த ஆண்டு புரட்டாசியில் நல்ல மழைக்காலமாய் இருந்தது. எல்லாக் கிணறுகளும் தரை மட்டத்துக்கு நிரம்பின. வயல்களில் எல்லாம் வெள்ளாமை செழித்துக் கிடந்தது. மக்கள் வேலை வேலை எனப் பறந்தார்கள். புரட்டாசியைத் தொடர்ந்து வந்த ஐப்பசியிலும் மழை தொடர்ந்தது என்றாலும், அந்த ஆண்டு தீபாவளி சிறப்பாய் இருந்தது.

 தீபாவளிக்கு வந்த `மின்னல் மோகினி’ படத்தில் பவித்ரா நடித்திருப்பதாய் ஊரெல்லாம் ஒரே பேச்சாய்க் கிடந்தது. ‘மின்னல் மோகினி’ படம் சேலத்தில்தான் ஓடியது.

மாதம்மாளைப் பார்த்தவர்கள் எல்லாம் ‘உங்க பொண்ணு நடிச்ச படம் வந்திருக்குதே, நீங்க பாத்தீங்களா?’ என்று கேட்டார்கள். அவள் புன்னகை ஒன்றையே பதிலாகச் சொன்னாள்.

சேலம் ஓரியண்டல் தியேட்டரில் நூறு நாள்களுக்கும் மேல் ஓடி, அதற்குப் பின் தான் கணபதி டாக்கீசுக்கு ‘மின்னல் மோகினி’ வந்தது. ஊரெல்லாம் போஸ்டர் ஒட்டியிருந்தது. மாதம்மாள் அதில் பவித்ராவின் படம் இருக்கிறதா எனப் பார்த்தாள். அப்படி எதுவும் இல்லை.

குதிரை வண்டியில் ரேடியோ கட்டிக் கொண்டு, ‘நம்ம ஊர்ப் பொண்ணு நடிச்ச மின்னல் மோகினி படம் பார்க்க, மக்களே வாரீர்! வாரீர்!’ எனக் கூவினார்கள்.

கணபதி டாக்கீசில் அன்று எம்.ஜி.ஆர். படத்துக்கு வரும் கூட்டத்தைவிட அதிகமான கூட்டம் வந்திருந்தது. உட்கார்ந்து பார்த்தவர்கள் அளவுக்கே நின்றுகொண்டு படம் பார்த்தவர்களின் கூட்டமும் இருந்தது.

திரையில் தெரிந்த முகங்களை எல்லாம் மக்கள் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு பார்த்தார்கள். வெகு நேரமாக அந்தப் பெண்ணைக் காணவில்லை. ஒருவேளை பொய்யோ என மக்கள் யோசிக்க ஆரம்பித்தபோது, திரையில் ராணிக்கு அருகே, அந்தத் தெரிந்த முகம், உள்ளூர் முகம் பவித்ரா தோன்றினாள். தியேட்டரே இடிந்து விழும் அளவுக்கு விசிலும் கைத்தட்டலும் பறந்தது. அவ்வளவுதான்! அதற்குப் பின் எந்த சீனிலும் அவள் வரவில்லை. கணபதி டாக்கீசிலேயே அந்தப் படம் முப்பது நாள் ஓடியது. அதற்குப் பிறகு வந்த படங்களில் எல்லாம் மக்கள் பவித்ராவைத் தேடினார்கள். கூட்டத்தில் ஒருத்தியாய் தோழிகளில் ஒருத்தியாய் அவள் தென்படக்கூடும் என எதிர்பார்த்தார்கள்..

இரண்டு மூன்று ஆண்டுகள் இப்படியே ஓடிவிட்டன. மக்கள் மெள்ள மெள்ள பவித்ராவை மறந்துபோனார்கள்.

ஒருநாள் திடீரென்று பவித்ரா ஊருக்கு வந்தாள். அவள் உடல் நோயினால் பீடிக்கப்பட்டதைப் போல இருந்தது. சரியான உணவில்லாதவளைப்போல போஷாக்கின்றி, மகிழ்ச்சியற்று இருந்தாள். ஆனாலும் உற்சாகமாகப் பேசினாள்.

மாதம்மாளின் கால்களைக் கட்டிக்கொண்டு அழுதாள். “அம்மா, என்னை ஏத்துக்க” என்று கதறினாள். மாதம்மாள் காதில் அது ஏறவே இல்லை. ஜம்பு மகளைப் பார்த்துக் கண்கலங்கினார். அருகில் அழைத்து நெற்றியில் முத்தமிட்டு,  “இப்படிச் செய்யலாமா அம்மா, எங்களுக்கு ஏன் இவ்வளவு பெரிய தண்டனை?” என அழுதார்.

அன்றிரவே அவள் கிளம்பிவிட்டாள்.

மேலும் இரண்டு வருடங்கள் கழித்து  பவித்ரா கதாநாயகியாய் நடித்த `மாமியார் மருமகள்’ என்ற படம் திரைக்கு வந்தது.

போஸ்டர்களிலேயே பவித்ரா அவ்வளவு அழகாய் இருந்தாள்.

காதலித்துத் திருமணம் செய்துகொண்ட பெண், மாமியார் கொடுமைக்கு ஆளாகி, பின் தெளிவு பெற்று, திட்டமிட்டு மாமியாரின் கர்வத்தை அடக்கி அவளை வழிக்குக்கொண்டு வருவதுதான் படத்தின் கதை.
அதில் பவித்ரா அவ்வளவு அற்புதமாய் நடித்திருந்தாள். உண்மையான கிராமத்து மருமகளைக் கண் முன் நிறுத்தினாள். படம் வெளியான தியேட்டர்களில் எல்லாம் சக்கைப்போடு போட்டது. பெண்களின் கூட்டம் தியேட்டர்களில் குவிந்தது.

கணபதி டாக்கீசுக்கும் ‘மாமியார் மருமகள்’ படம் வந்தது. குதிரை வண்டி விளம்பரம் மக்களைக் குதூகலமடையச் செய்தது. `நம் ஊர்ப் பெண், பெண் குலம் போற்றும் ஒப்பற்ற பாத்திரத்தில் நடித்த மாமியார் மருமகள் படத்தைக் காண இன்றே வாருங்கள்.’

p46c_1522133098.jpg

மாதம்மாளையும் ஜம்புவையும் பார்க்க எங்கெங்கிருந்தோ யார்யாரெல்லாமோ வண்டி கட்டிக் கொண்டு வந்தார்கள். ஜம்புவின் முகத்தில் பழைய சிரிப்பு வந்தது. மாதம்மாள் முகத்திலும் சிரிப்பு இருந்தது. ஆனால் இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. ‘மகளை ஊருக்குக் கூட்டிக்கொண்டு வாருங்கள்’ என வந்தவர்கள் எல்லாம் கேட்டுக்கொண்டார்கள். ஜம்புவுக்கு ‘ஆகட்டும், பார்க்கலாம்’ என்று சொல்லிச் சொல்லி வாய் வலித்தது.

மாதம்மாள் வழக்கம்போல விடியற்காலையில் வண்டி கட்டிக்கொண்டு அரிசி மூட்டைகளோடு சந்தைக்குப் போனாள். வழியில்தான் ‘கணபதி டாக்கீஸ்’ இருந்தது. தியேட்டருக்கு முன்னால் ஒட்டியிருந்த போஸ்டர் வெகுதூரத்திலிருந்தே தெரிந்தது.

வண்டியோட்டி முத்து, தியேட்டருக்கு முன்னால் வண்டியை நிறுத்தி போஸ்டரைப் பார்த்தான். மலர்ந்த முகத்தோடு மாதம்மாளைப் பார்த்தான். மாதம்மாள் `வண்டியை வேகமா விடப்பா, சந்தைக்கு நேரமாகுது’ என்றாள். அவள் கண்களில் எந்தச் சலனமும் இல்லை.

போஸ்டரில் மாமியாரின் கொடுமை தாங்காமல் பவித்ரா அழுதுகொண்டிருந்தாள். அது மாதம்மாளைப் பார்த்து அழுவதைப் போலவே முத்துவின் கண்களுக்குத் தெரிந்தது.

https://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.