Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

வாரணாசி - சிறுகதை

 

நரன் - ஓவியங்கள்: ரமணன்

 

பெரும்பாலும் ஒரே மாதிரியான சிறிய ரெட்டைத் திண்ணைகளும், திண்ணையின் மேலிருந்து சரியும் தாழ்வார ஓட்டு முகப்பை இரண்டு மரத்தூண்களும் தாங்கிக்கொண்டிருக்கும் படியான வளைவான செருகு ஓடு வேயப்பட்ட வீடுகள் இருக்கும் பழைமையான தெருவுக்குள் அந்த வாகனம் நுழைந்தது. எல்லா வீட்டின் முற்றங்களிலும் விடுபடாமல் நெளிவு நெளிவான வெள்ளை நிறக் கோலங்கள் இருந்தன. பாலாமணி கையைக் காட்டி, கோலமிடப்படாத இடதுபக்க வீட்டின் முற்றத்தில் வாகனத்தை நிறுத்தச் சொன்னான். வெளியே வயதான நான்கைந்து ஆண்கள் நின்றுகொண்டிருந்தார்கள்.

இறங்கி, வண்டியின் முகப்பைத் தெருவிலிருந்து வெளியேறும் பாதை நோக்கித் திருப்பி நிறுத்துமாறு ஓட்டுநரிடம் சொன்னான். பாலாமணியின் ஒரு கையில் கறுத்த கோழியும், மறு கையில் அரசு முத்திரை பதிந்த ஓரிரு காகிதங்களும் இருந்தன. வீட்டுக்குள் நுழையப் போனவனை நிறுத்தி ஒரு பெரியவர் சொன்னார்,

``ஏன்டா பாலாமணி, நீயாவது அவகிட்ட சொல்லக் கூடாதா? ஏற்கெனவே அஞ்சாறு வருஷம் படுக்கையில கிடந்த உடம்பு. அவ்வளவு தூரம் தாங்காதுடா. பூரணிகிட்ட சொல்லு. சட்டுபுட்டுன்னு இங்கேயே எல்லா ஈமக் காரியத்தையும் முடிச்சுடலாம்.’’

46p1_1527502499.jpg

``நீங்க செத்த நேரம் கம்முனு இருங்க மாமா’’ என்றவாறு வீட்டுக்குள் நுழைந்தான். மாதவனின் இறந்த உடலின் தலைமாட்டில் பாந்தமாய் சிறிய திரி நாவிலிருந்து விளக்கு ஒன்று சுடர்விட்டுக்கொண்டிருந்தது.

பழைமையான மூன்று கட்டு வீடு. நடுக்கட்டில் கிடத்தியிருந்தார்கள். அக்கம்பக்கத்து வீடுகளிலிருந்து வயதான பெண்கள் சிலர், பாலாமணியின் மனைவி, அவரின் இரண்டு பெண் குழந்தைகள், வீட்டின் நுழைவாயிலில் திண்ணையில் நான்கைந்து ஆண்கள் அவ்வளவுதான் கூட்டம்.

பூரணி, பாலாமணியைப் பார்த்ததும் கேள்விக்குறிபோல் முகத்தை வைத்து அவனைப் பார்த்தாள். அவன் வீட்டின் சமையல்கூடத்துக்கு அவளை வரச்சொல்லி சைகை காட்டிவிட்டு, முன்னால் போனான். இடுப்பில் சுற்றியிருந்த மங்கிய மஞ்சள் நிறப் பையிலிருந்து பணத்தை எடுத்து அவளிடம் கொடுத்தான் .

``நாலஞ்சு இடத்துல அலைஞ்சுட்டேன். பிணத்தை ஏத்திக்கிட்டு வாரணாசி வரைக்கும் வர, எந்த ஆம்புலன்ஸ் வண்டியும் தயாரில்லை. வர ஒப்புக்கிறவனும் நோக்கத்துக்கு வாடகை கேட்கிறான். இந்த வண்டிக்காரன் மட்டும்தான் ஒப்புக்கிட்டான். வாடகை குறைச்சல்தான். ஆனா, வண்டி கொஞ்சம் பழசு. பின்னாடி குளிர்ப்பதனமெல்லாம் நல்லாவே வேலைசெய்யுது. மூணு, நாலு நாள் ஆனாலும் உடம்பு தாங்கும். கெடாது. அவன்கிட்ட கேட்டுட்டேன். `மூணாம் நாள் சாயங்காலத்துக்குள்ள போயிடலாம்’னு சொன்னான்.’’

பூரணி அவனைப் பார்த்தபடி இருந்தாள்.

``இந்தா...’’ கையில் இருந்த அரசு முத்திரைக் காகிதத்தைக் கொடுத்தான். ``அவ்வளவு தூரம் எடுத்துட்டுப் போறச்ச, வழியில போலீஸ்காரங்க மறிச்சு ஏதாவது கேட்க வாய்ப்பிருக்கு. அதான் கவர்ன்மென்ட் டாக்டரைப் பிடிச்சு `டெத் சர்ட்டிஃபிகேட்’ வாங்கிட்டு வந்தேன். பத்திரமா வெச்சுக்கோ.’’
வாங்கிக்கொண்டாள்.

தலையைத் திருப்பிக் காசிப்பானையைப் பார்த்தவாறு சொன்னான், ``மன்னிக்கணும் பூரணி என்னால வர முடியலை.’’

அவளின் உதடுகள் நீர் படாமல் உலர்ந்து ஒட்டிக்கொண்டு பிரிய முடியாமல் பிரிந்தன. `` பரவால்ல...’’ அவ்வளவுதான் பேசினாள்.

பாலாமணி, பூரணியின் பெரியம்மா மகன். சகோதரன் உறவு. ஓரிரு வயதுதான் அவளினும் குறைவாய் இருக்கும். பூரணிக்கு நாற்பதை நெருங்கும் வயது. குழந்தைப்பேறில்லை. உறவினர்கள் யாரும் அவளோடு பெரிதாகப் புழக்கத்திலில்லை. காண்போரிடமெல்லாம் பூரணி பணம் கேட்பாள் என்பதுதான் அவர்களின் பெரும்பாலான குற்றச்சாட்டு. ஓரளவுக்கு அது உண்மைதான். இப்போதுகூட மாதவனின் இறப்புக்கு அதிகம் பேர் வராததற்குக் காரணம் அதுவாகத்தானிருக்கும்.

படுக்கையில் விழுவதற்கு, ஆறேழு வருடத்துக்கு முன்னர் வரை மாதவன் கும்பகோணம் விசாலம் சிட்ஸில் உதவி மேலாளராக வேலைபார்த்தான். கைநிறைய சம்பளம். வேலைப்பளு எனக் காரணம் சொல்லி, மெள்ள குடிப்பழக்கத்தையும் சீட்டாட்டத்தையும் தொடங்கினான். வாரக் கடைசியில் மீனாட்சி லாட்ஜில் அறை எடுத்து இரவெல்லாம் குடியும் சீட்டாட்டமும் தொடர்ந்தன. அப்போதெல்லாம் சனிக்கிழமை மாலை தொடங்கும் ஆட்டம், ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை நீளும். ஒருசிலர் மட்டும் வீட்டுக்குப் போய்த் தலையைக் காட்டிவிட்டு வந்து ஆட்டத்தைத் தொடர்வார்கள். மாதவனுக்கு இரவு வேலை. `கணக்கு முடிக்க லேட்டாகிவிட்டது’ எனக் காரணம் சொல்வான். பூரணி கொஞ்சம் கடுமை காட்டத் தொடங்கியதும், மதுவாடை போன பிறகு லாட்ஜிலிருந்து அதிகாலை கிளம்பி உறக்கக் கலக்கத்தோடு வீட்டுவாசலைத் தட்டி நிற்பான்.

46p6_1527502521.jpg

ஒருநாள் அதிகாலையில் மதுபோதையோ, உறக்கக் கலக்கமோ அல்லது ரெண்டும் கலந்துமா எனத் தெரியவில்லை, வீட்டுக்கு வரும் வழியில் விபத்தாகி ரத்தக்காயத்தோடு கிடந்தான். எதிலோ மோதியோ அல்லது எதுவும் மோதியோ தெரியாது, விபத்தில் தண்டுவடம் உடைந்துவிட்டது. உயிரை மீட்டெடுக்கப் பெரும்பொருட்செலவு.

மாதவனின் அலுவலகத்தில் சொற்பமாகப் பணம் கொடுத்தார்கள். வீட்டில் சமீபத்திய சேமிப்பு என்று பெரிதாக ஒன்றும் இல்லை. கையில் இருந்த கடைசி நகை வரை விற்றும் மருத்துவச் செலவு அடைபடவில்லை. அப்போது ஆரம்பித்ததுதான். உறவினர்களிடம் கடன் கேட்கத் தொடங்கியது. எவ்வளவு செலவு செய்தாலும் மாதவனை முழுதாய் மீட்க முடியவில்லை. மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புகையில், ``இனி கழுத்துக்குக் கீழ் நிரந்தரமா இயக்கமிருக்காது. மீதி வாழ்நாளை படுக்கையில்தான் கழிக்க முடியும். வேறு வாய்ப்பில்லை’’ என்று சொல்லிவிட்டார்கள் மருத்துவர்கள்.

வீட்டுக்குத் தூக்கிவந்துவிட்டாள். மாதவனின் வயதான பெற்றோர், இவளைத்தான் குறை சொன்னார்கள். ``ஆரம்பத்திலேயே குடிப்பதை அறிந்து கண்டிப்பாக நடந்திருந்தால், இப்படி நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை’’ என்று சொல்லிவிட்டு, அவளை அப்படியே கைவிட்டு விட்டுக் கிளம்பிவிட்டார்கள். ஏறக்குறைய எல்லா உறவினர்களுமே எந்த மாற்றமும் இல்லாமல் அப்படித்தான் செய்தார்கள். அதன் பிறகு இப்போது வரை யாரும் இந்த வீட்டுக்கு வருவதில்லை. பாலாமணி மட்டும் அடிக்கடி வந்து பண உதவிகள் செய்தான்.

ஆரம்பத்திலெல்லாம் மாதவன் பூரணியைப் பார்த்துக் கண்ணீர் வடிப்பான். தன்னால்தான் பூரணியின் வாழ்வு இவ்வளவு மோசமான நிலையை அடைந்துவிட்டதாகப் புலம்புவான். திறந்த மனதோடு அவளிடம் மன்னிப்பு கேட்பான். அதுவும் சிறிது நாளைக்குத்தான். பிறகு அவனும் ``நீ ஆரம்பத்திலேயே என்னைக் கண்டுகொள்ளாமல் விட்டதால்தான் நான் இப்படியான நிலையை அடைந்து விட்டேன்’’ என, புகார் கூறத் தொடங்கினான். பூரணி எப்போதும்போல் எதுவும் பதில் பேச மாட்டாள். மௌனமாய் ஓரிரு துளி கண்ணீர் வடிப்பு. அவ்வளவுதான், அங்கிருந்து நகர்ந்துவிடுவாள்.

எது என்னவானாலும் மாதவனை அதிகாலையிலேயே குளிப்பாட்டிவிடவேண்டும். பிறகு நல்ல வெளுத்த வேட்டியை உடுத்திவிட்டு… கிழக்கு திசைக்கு அவனைக் காட்டி நெற்றியில் திருமண் இடச் சொல்லுவான். இயக்கமற்றுத் துவண்டு கிடக்கும் கரங்களை அவளிடம் சொல்லி அள்ளி எடுத்து ஒருசேர வைத்து சுவாமிகளின் திரு உருவப் படங்களை நோக்கி ஒரு கும்பிடு, விஷ்ணு சகஸ்ரநாமம், பிறகு சில மந்திர உச்சரிப்புகள், அதன் பிறகுதான் உணவூட்டச் சொல்வான். இறுதியில் மருந்திட்டு அவனைக் கிடத்துவாள். இடையில் சிறுநீர், மலம் கழிக்க வேண்டுமென்றால், கத்தி அழைப்பான். பூரணிதான் அள்ளிப்போட்டுவிட்டுத் துடைத்தெடுப்பாள்.

பூரணி தனது கடமையாக நினைத்து எல்லாவற்றையும் சரியாக எந்த முகச்சுளிப்பும் எரிச்சலும் இல்லாமல் செய்து வந்தாள். மாதவன்தான் எதற்கெடுத்தாலும் நொட்டை சொல்லிக்கொண்டிருப்பான். உப்புச் சேர்மானம் சரியில்லை என உணவை அவள் முகத்தில் துப்புவான். பூரணியை வீட்டின் நிலைப்படி தாண்ட விடமாட்டான். மளிகை, காய்கறி என எதற்கும் கடைவீதிக்குப் போக விட மாட்டான். போனவள் திரும்ப வீடு வர மாட்டாள்; தன்னை இப்படியே விட்டுவிட்டு, வேறு யாருடனோ பேருந்து ஏறிவிடுவாள் என பயம்கொள்ளத் தொடங்கினான். எந்தப் பொருள் என்றாலும் மளிகைக் கடையில் சொல்லி வீட்டில் எடுத்து வந்து சேர்க்கும்படி சொல்லச் சொல்வான்.

மளிகைக்கடையிலிருந்து பொருள்கள் கொண்டுவருபவன் இளம் வயதினனாய் இருந்துவிட்டால் அவ்வளவுதான். நிமிடத்துக்கு ஒருமுறை அவள் தன் கண்முன்தான் இருக்கிறாளா எனச் சோதித்துக்கொண்டே இருப்பான். அவன் கண்களிலிருந்து ஐந்து நிமிடம் அவள் நகர்ந்தால் போதும். ``எவனோடு படுத்த? என்னால முடியலைன்னுதானே இப்படிப் பண்ற?’’ என்று கத்திக் கூப்பாடுபோடுவான். ஊரிலிருக்கும் அத்தனை கடவுளையும் கூப்பிட்டு ``என்னை ஏன் இப்படி ஆக்கிட்ட. பகவானே, வேகமா என்னை எடுத்துக்கோ’’ என்று அழுது அரற்றுவான். பூரணியின் சிவந்த நிறமும் இளமையும், அவனது இயலாமையையும், கையாலாகாத்தனத்தையும் உறுத்திக் கொண்டேயிருக்கும் .

உறவுகளில் பாலாமணி ஒருவன்தான் இவளுக்குப் பல வகைகளிலும் உதவியாக இருப்பவன். மாதவன், பல நேரங்களில் பாலாமணியையும் இவளையும் இணைத்துப் பேசுவான். ``நீ இவ்வளவு அழகா இருப்பதால்தான் அவன் உனக்குப் பணம் அளிக்கிறான்’’ என்று வாயும் மனதும் கூசாமல் பழிபோடுவான். பாலாமணிக்குத் தெரிந்து, அவன் ``இந்த ஆளை விட்டுவிட்டு, என் வீட்டுக்கு வா’’ என்று கோபமாய் ஏசினான். மறுத்துவிட்டாள்.  சில நேரத்தில் சொற்களால் அனுதினமும் தன்னைச் சாகடிக்கும் இவனை, கழுத்தை நெரித்துக் கொன்றுவிடத் தோன்றும் அவளுக்கு.

46p2_1527502714.jpg

பூரணியிடம் இப்போதெல்லாம் உடல் முழுக்க இறுக்கமும் பெரும் அமைதியும் குடிகொண்டுவிட்டன. மோசமான சொற்களைக் கேட்டுக் கேட்டு அவளின் உடல் இறுக்கமான கற்களைப்போன்று மாறிவிட்டது. ஆனால், காதுகள் மட்டும் நெகிழ்வான சதைத் துளையாய் இருக்கிறதாய் உணர்கிறாள். எவ்வளவு முயன்றும் அதுமட்டும் கல்தன்மைக்கு மாறாமல் இருக்கின்றன. அதுவும் அப்படியாக மாறிவிட்டால், எந்தச் சொல்லும் தன்னைக் காயப்படுத்தாது என நம்பத் தொடங்கினாள். மாதவனின் வைத்தியத்துக்கு என, சுற்றி இருந்த அத்தனை மனிதர்களிடமும் கடன் வாங்கிவிட்டாள். பாலாமணியிடமும் கணக்கு வழக்கில்லை. இப்போதெல்லாம் அவன் வீட்டுக்குள் வருவதில்லை. வாசலிலேயே பணத்தைக் கொடுத்துவிட்டு நிமிடத்துக்குள் கிளம்பிவிடுவான்.

ஐந்தாறு வருடமாய் படுக்கையில் கிடந்து மாதவனின் உடல் மிகவும் தேய்மானமாகிவிட்டது. கைகளும் கால்களும் சூம்பி, தலை மட்டும் பருத்துத் தெரிந்தது. இறுதியாக சேஷாத்திரி டாக்டர்தான் சொன்னார், ``இன்னும் சொற்ப வாழ்நாள்தான். மூணு மாசம்கூட அதிகம். எந்த ஒளிவுமில்லாமல் மாதவனின் முன்னால்வைத்தே சொல்லிவிட்டார். மாதவன் ஓங்கி ஓங்கி அழுதான். வாழ பிரயாசை கொண்டவனைப் போல் அரற்றினான். தாரை தாரையாய்க் கண்ணீர்விட்டான். பூரணியின் காது கொஞ்சமாய் கல்லின் தன்மைக்கு மாறிவிட்டது போல. எந்த அதிருப்தியும் இல்லை; திருப்தியும் இல்லை.

ஓர் அதிகாலையில் நீராடிவிட்டு சுவாமியை வழிபட்டு முடிந்ததும் பூரணியிடம் கேட்டான், ``பூரணி, எந்த ஜென்மத்தின் கடனோ நீ எனக்காக நிறைய செஞ்சுட்ட. பார்த்த இடத்துலலாம் கடன் வாங்கி வைத்தியம் பண்ணிட்ட. கடைசியா எனக்காக இந்த ஒண்ண மட்டும் செஞ்சுடு.’’ பூரணி `என்ன?’ என்பதுபோல் அவனை ஏறிட்டுப் பார்த்தாள். ``எனக்கு அடுத்த பிறப்பு வேண்டாம். வேதத்தையும் சாஸ்திரத்தையும் நம்புறவனா சொல்றேன். சாஸ்திரப்படி இறந்த உடலை வாரணாசிக்குக் கொண்டுபோய் எரிச்சு, அந்தச் சாம்பலை கங்கையில கரைச்சுட்டா, எனக்கு பிறப்புச் சங்கிலி அறுபட்டு மறுஜென்மம் இல்லாமப்போகும். எனக்காக இந்த ஒரு காரியத்தை மட்டும் மறுக்காமச் செய்வியா?’’ என்றபடி ஒருவித வணங்குதலோடும் நன்றியோடும் பார்த்தான். பூரணி, லேசாகத் தலையை ஆட்டினாள்.

இருவருமே இறப்பின் நாளை எதிர்நோக்கி, அந்த நாளுக்காகக் காத்திருந்தார்கள். மாதவன் இருக்கும் நாள்களை முழுக்கப் பார்த்துவிட வேண்டும் என இரவும் பகலுமாய் முழுக்க உறங்காமலேயே இருந்தான். அடிக்கடி பூரணியை அருகில் அழைத்து அமர்த்தி, அவளின் முகத்தைப் பார்த்துக்கொண்டேயிருந்தான். தீடீரென வெடித்து அழுதான். பூரணி எப்போதும்போல் இறுக்கமாக இருந்தாள். மாதவன் அடிக்கடி கேட்டுக் கொண்டேயிருந்தான். ``நான் இறந்ததும் நீ வேறொரு கல்யாணம் பண்ணிப்பல. நீ பாவம் பூரணி, கட்டிக்கோ! என்னைக் கட்டிக்கிட்டு ரொம்பக் கஷ்டப் பட்டுட்ட. அவன் முகத்தை ஏறிட்டு எந்தச் சலனமுமில்லாமல் பார்த்தாள். சிறிது நேரம் கழித்து பூரணியை அழைத்து, ``நீ வேற கல்யாணம் பண்ணிக்காத பூரணி. உன்னை வேற யாரும் தொடக் கூடாது. இப்படியே இருந்துடு. ஏன்... இருக்க முடியாதா? அப்படித்தான் இருக்கணும்’’ என்று கூறி, பற்களைக் கடித்துக்கொண்டு அழுவான்.

பூரணி இப்போதும் அவன் முகத்தை ஏறிட்டு, எந்தச் சலனமுமில்லாமல் பார்த்தாள். காது முழுக்க நிரம்பிக் கிடக்கும் இந்தச் சொற்களையெல்லாம் செரிக்கமாட்டாமல் கிடந்தாள் பூரணி.

இன்று அதிகாலையில்தான் உயிர் பிரிந்தது. இன்று அழுகையில்லை. இப்போதும் இறுக்கமாய் முகத்தில் சிறு சலனமுமில்லாமல் அவன் முகத்தை ஏறிட்டபடி வீட்டுக்குள் நின்றுகொண்டிருந்தாள். மாதவனின் உடலை முகம் மட்டும் தெரியும்படி வெள்ளை காடாத் துணியால் ஒருவன் சுற்றினான். சிறிய கைப்பையில் இரண்டு மாற்றுத்துணிகளை எடுத்து வைத்துக்கொண்டு பாலாமணியின் மனைவி வந்தாள்.

வெளியே வண்டியை பாலாமணி காட்டிய திசைக்குத் திருப்பி வைத்துவிட்டு, காரிலிருந்து நட்ராஜ் தரைக்கு இறங்கினான். ஏதோ ஒரு வீட்டிலிருந்து தீக்கங்குக்குள் பால் சாம்பிராணியைப் போட்டு வாசனையைப் பெருக்கிக்கொண்டிருக்கிறார்கள்போல. வாசனை, வீட்டிலிருந்து தெருவுக்குள் இறங்கி வந்துகொண்டிருந்தது. வேறொரு வீட்டிலிருந்து கிருஷ்ணனின் பிருந்தாவனப் பாடல்களின் ஓசை தம்புராவின் பின்னணியோடு அறுந்து அறுந்து செருமலோசையோடு கசிந்து வந்தது. யாரேனும் ஒரு பெண் பழகிக்கொண்டிருப்பாள்போல. நடுவிலிருந்து கொஞ்சம் பசுஞ்சாணம், ஈர வைக்கோல் வாடை கலந்த தொழுவத்தின் வாசனை அடித்தது. நட்ராஜுக்கு 41 வயது. மனைவி, இவனிடமிருந்து விலகி வேறு திருமணம் செய்துகொண்டாள். எவர்மீதும் அவனுக்கு திடகாத்திரமான நம்பிக்கையில்லை. சிறுவயதிலிருந்து மோட்டாரில் இருக்கிறான். நான்கு ஆண்டுகளாய், சொந்தமாக இரண்டாம் கை மாறிய ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று வைத்து ஓட்டுகிறான்.

ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைக்க நெருப்புக்குச்சி தேடி எங்கிருந்தோ பற்றவைத்துவிட்டு வந்தான். பாலாமணி ``கிளம்பலாமா?’’ என்று கேட்டான். தலையசைத்ததும் ``வந்து ஒரு கை பிடிக்க முடியுமா?’’ என்று கேட்டான். நட்ராஜ் மறுத்துவிட்டான். பிறகு மனது கேட்காமல் பாலாமணியின் முதுகை நோக்கி நடக்க ஆரம்பித்தான். வீட்டுக்குள் நுழைந்ததும் முதலில் பூரணியைத்தான் பார்த்தான். இந்த இறப்புக்காக அல்லாமல், பல ஆண்டுகளாய் வேரூன்றிய சோகம்கூடிய முகம். பாலாமணி, தலைமாட்டில் பிடிக்கும்படி சொன்னான். பாலாமணியும் வேறொருவரும் உடலைப் பிடித்துக் கொள்ள நட்ராஜ் பின்னோக்கித் தெருவுக்கு நடந்தான். வாகனத்தின் இரண்டு கதவுகளும் தன் நெஞ்சைத் திறந்துகொண்டு நிற்பதுபோல் நின்றன.

நட்ராஜ் மேலேறி, தலையை வாகனத்துக்குள் நுழைத்தான். முழு உடலும் நுழைந்ததும் பூரணி வீட்டிலிருந்து வெளியேறினாள். அவள் பாதங்கள் அந்தத் தெருவில் நடந்தே பல ஆண்டுகள் ஆகியிருந்தன. வண்டியில் ஏறி அமர்ந்தாள். சில வீடுகளிலிருந்து பெண்கள் எட்டிப்பார்த்து ஏதோ பேசிக் கொண்டார்கள். பாலாமணி, மாற்றுத்துணி அடங்கிய கைப்பையை அவள் காலடியில் வைத்தான். வேறொருவன் இரு கால்களும் கட்டியிருந்த கறுத்த கோழியை மாதவனின் உடல் இருக்கும் சிறு கட்டில் மாதிரியான அமைப்பின் கால்மாட்டில் கட்டிவைத்தான். `இது எதற்கு?’ என்பதுபோல் பாலாமணியைப் பார்த்தாள்.

``இது சாஸ்திரம். சனிப் பொணமில்லையா!’’ என்று சொல்லிவிட்டு, கதவடைத்தான். அந்தக் கோழியும் இவளைப்போலவே எந்தச் சத்தமும் இல்லாமல் இறுக்கமாய் இருந்தது. சிறிது நேரத்தில் வாகனம் கிளம்பியது. கதவின் மேல் பொருத்தியிருந்த வெளிப்படையான கண்ணாடியின் வழியே பார்த்தாள். எல்லா வீடுகளும் பின்னோக்கிச் சென்றுகொண்டிருந்தன. பாலாமணி மூடிய கதவின் வெளி நின்று ஏதோ பேசினான். வாசலில், திண்ணையில் நிற்கும் மனிதர்கள் ஏதேதோ பேசினார்கள். அவளுக்கு எதுவும் கேட்கவில்லை. ஒரு நிமிடம் காது முழுக்க இறுகிக் கல்லாய் மாறிவிட்டதாகத் தோன்றியது.

கடந்துபோகும் கும்பகோணத்தின் தெருக்களைப் பார்த்தபடியிருந்தாள். எந்த நினைவுகளும் காட்சிகளும் உள் தங்காது கலைந்துகொண்டேயிருந்தன. வாகனம் கும்பகோணத்தின் வெளிப்புறம் வந்து அகலமான கறுப்பு நிறச் சாலைக்கு வந்தது. உடலில் சட்டெனக் குளிர் அறைந்தது. தான் இருக்கும் இடத்தை உணர்ந்தாள். தப்ப முடியாத இறுக்க மூடிய சிறிய அறைக்குள் இருப்பது மாதிரி உணர்ந்தாள். எதிரே இருக்கும் மாதவனின் உடலின் வாயைப் பார்த்தாள். அந்த வாய் எப்போது வேண்டுமானாலும் திறந்து தன்னை மோசமாகப் பேசக்கூடும் என்று பயப்படத் தொடங்கினாள். தன்னால் இந்த உடலோடு இவ்வளவு தூரம் பயணம் செல்ல முடியாது. மறுபடியும் வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போய் அங்கேயே எரித்துவிடலாம் என நினைத்தாள். சட்டென மூச்சு முட்டுவதைப்போல் உணரத் தொடங்கினாள். பார்வையை வேறு எங்கோ மாற்ற நினைத்து, கோழியின் மீது எடுத்துச் சென்றாள். கோழி அவளையே பார்த்துக் கொண்டிருந்தது.

வாகனத்தின் முன் பக்கத்துக்கும், அதன் பின் பக்கத்துக்கும் தொடர்பில் இருக்கும் சிறிய கண்ணாடிக் கதவைத் திறந்து நட்ராஜை வண்டியை நிறுத்துமாறு சொன்னாள். அவனுக்குக் கேட்கவில்லை. கதவைத் திறக்கச் சொல்லி சத்தமாய் அவனிடம் சொன்னாள். வண்டியை ஓர் ஓரமாக நிறுத்தினான். ஒரு கணம், ‘தன்னால் பேச முடியுமா? என் நாவுகள் கல் நாவு அல்ல’ என்பதுபோல் நினைத்துக் கொண்டாள். கதவு திறக்கும் ஓசைக்காகக் காத்திருந்தாள். திறக்கப்பட்டதும் கீழே வேகமாக இறங்கி நன்றாக மூச்சு எடுத்தாள். ஆசுவாசமாய் இருந்தது. தனிமையான சாலையைப் பார்த்தாள். சாலையோரங்களில் வரிசை தப்பாமல் மரங்கள் இருந்தன. இந்த ஏழு ஆண்டுகளில் தன் கண்கள் இதைக்கூடப் பார்க்கவில்லையே என்று தன்னைத்தானே நொந்துகொண்டாள். ``அந்தக் கோழியின் கட்டை அவிழ்த்து, அதை விடுவிக்க முடியுமா?’’ என்று கேட்டாள். அவன் கோழியை ஒரு கையில் பிடித்துக்கொண்டு மறுகையால் கட்டை அவிழ்த்து தரையில் இறக்கி விட்டான். அது புளியமரத்தின் ஓரமாகச் சத்தமிட்டவாறு ஓடியது.

46p3_1527502736.jpg

மீண்டும் தன்னால் மாதவனின் அருகில் போய் அமர்ந்திருக்க முடியாது என நினைத்தபடி அந்த உடலைப் பார்க்காமல் கதவைச் சாத்தச் சொன்னாள். நட்ராஜ் குழப்பத்துடன் கதவைச் சாத்தினான். அவள் வாகனத்தின் முன் இருக்கையை நோக்கி நடந்தாள். தனக்கு அடிக்கடி சிகரெட் பிடிக்க வேண்டும் என்று நட்ராஜ் சொன்னான். அவள் எந்தச் சலனமுமில்லாமல் நடந்து முன்னிருக்கையில் அமர்ந்தாள். அவனும் வந்து ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தபடி ``பின்னாடிதான் குளிர்ப்பதனம் இருக்கிறது. முன்னால் வெக்கைதான்’’ என்று சொன்னான். அவள் வெறுமனே கண்ணாடியின் வழியாகச் சாலையை நோக்கி உறைந்த கண்களால் பார்த்தபடியிருந்தாள். வாகனம் கிளம்பியது.

மதிய உணவுக்காக வாகனத்தை நிறுத்தினான் நட்ராஜ். அவள் ``விருப்பமில்லை’’ எனச் சொல்லி மறுத்தபடி தலையசைத்துவிட்டாள். நட்ராஜ் போன வேகத்தில் ஒரு தேநீர் மட்டும் பருகிவிட்டு வந்துவிட்டான். அவனுக்கு சிகரெட் பிடிக்காமல் என்னவோபோலிருந்தது. ``சாப்பிட எதுவும் வேண்டுமா?’’ என்று மீண்டும் ஒருமுறை அவளிடம் கேட்டான். அவள் மறுத்து லேசாகத் தலையசைத்தாள். வாகனத்தை இயக்கி மீண்டும் கிளம்பினான். புதிய புதிய ஊர்களை, மனிதர்களை, மரங்களை, பறவைகளை, மலைகளை, கால்நடைகளை, வயல்வெளிகளை இறுக்கமான முகத்தோடு பார்த்தபடியே கண்களால் அந்தக் காட்சிகளைப் பருகிக்கொண்டே வந்தாள். அவளின் முகம், சிறிது சிறிதாய் இறுக்கம் தளர்ந்துகொண்டே வருவதைப்போலிருந்தது. வெயில் முடிந்து ஒரு புள்ளியில் மாலை நேரம் தொடங்கி அவள் முகத்தில் மெதுவான குளிர்ந்த காற்று அடித்து, கண்கள் செருகி, பிறகு அயர்ந்து உறங்கிவிட்டாள். `பாவம் எத்தனை நாளின் உறக்கமோ!’ என்று நட்ராஜ் அவளை எழுப்பாமல் விட்டுவிட்டான். இரவு நெடுநேரத்துக்குப் பிறகுதான் எழுந்தாள்.

தெலுங்குப் பாடல்கள் ஒலிக்கும் ஏதோ ஒரு ஹோட்டலின் முன்னால் வாகனம் நின்றுகொண்டிருந்தது. சட்டென விழித்துப் பார்த்தாள். வண்ண வண்ண சிறு விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. பெரிய கல் அடுப்பில் வெள்ளைப் புகை மேலெழும்ப, தோசை வார்த்துக்கொண்டிருந்தார்கள். நூற்றுக்கணக்கில் லாரிகள் நின்றுகொண்டிருந்தன. வாகனத்திலிருந்து இறங்கி நட்ராஜைத் தேடினாள். முழுக்க முழுக்க அங்கே ஆண்கள்தான் இருப்பதுபோலப்பட்டது. நிறைய பேர் அவளைப் பார்த்துக்கொண்டிருப்பதுபோலிருந்தது. சிறிது தூரம் முன் நடந்ததுமே எதிரில் அவளைப் பார்த்தபடி வந்துகொண்டிருந்தான்.

``சிறுநீர் கழிக்கவேண்டுமா?’’ என்று கேட்டான். இவ்வளவு நேரம் மறந்து இருந்துவிட்டு இப்போது சட்டென சிறுநீர்ப்பை நிரம்பி கனமேறிக் கடுப்பது போலிருந்தது. ஆமாம் என்பது போல் தலையை ஆட்டினாள். அவன் முன் நடக்க, தொடர்ந்து போனாள். கொஞ்சம் தூரமாய் இருளுக்குள் ஆங்காங்கே நின்றபடி ஆண்கள் சிறுநீர் கழித்தபடி இருந்தார்கள். ஒரு நிமிடம் அவள் தன்னையும் இப்படியான இருளுக்குள் நின்று சிறுநீர் கழிக்கச் சொல்வான் என நினைத்தாள். அவன் கடைக்குள் சென்றான். தூரத்தில் ஒரு பெண்ணிடம் பேசுவது தெரிந்தது. அவளைக் கடையின் உள்ளே அழைத்தான். கடையின் உள்ளே போய் பின்னால் ஒரு பாதை சென்றது. அங்கே அந்தக் கடைப் பெண் பயன்படுத்தும் ஒரு கழிவறை இருந்தது. கதவைத் திறந்துகொண்டு வெளியே வருகையில் அவன் ஓரமாய் நின்று புகைபிடித்துக் கொண்டிருந்தான்.

சிறிய மஞ்சள் குண்டு பல்பின் வெளிச்சத்தில் அவனை முதன்முறையாகப் பார்த்தாள். ஓரளவு சிவந்த நிறம், முகம் முழுக்கச் செழிப்பாயிருந்த தாடி, கொஞ்சம் முரட்டு உருவமாய்க் காட்டியது. முகத்தில் நிறைய மலையாளத் தன்மையிருந்தது. அவன் அவளைப் பார்த்ததும் சிகரெட்டை அணைக்கவில்லை. தூக்கி வீசவுமில்லை. அவன் அவளிடம் ``ரெண்டு நிமிஷம்’’ என்று சொன்னான். ``அடிக்கடி பிடிப்பவன். மதியத்திலிருந்து பிடிக்கவில்லை’’ என்று சொன்னான். முடிக்கும் வரை அவள் நின்றுகொண்டிருந்தாள். அந்த இரண்டு நிமிடத்தில் ஒரு புதிய ஆடவனோடு எந்த உறுத்தலுமில்லாமல் எப்படி சகஜமாக இருக்க முடிகிறது என்று நினைத்துக்கொண்டாள்.

அவன் அணைத்துவிட்டு வந்தான். கையைக் கழுவிவிட்டு சாப்பிட்டு வரச் சொன்னான். அவள் மறுத்து வாகனத்தை நோக்கி நகர்ந்தாள். பின்னாலேயே அவனும் வந்துவிட்டான். `சாப்பிடலையா?’ என்பதுபோல் அவனைப் பார்த்தாள். அவன் பதில் பேசாமல் வாகனத்தில் சாவியை நுழைத்தான். நமக்காக ஏன் ஒருவன் சாப்பிடாமல் கிடக்கிறான் என நினைத்தபடி, ``நீங்க சாப்பிட வேண்டியதுதானே!’’ என்று கேட்டாள்.

``எனக்குத் தெரிஞ்சு நீங்க மதியத்திலிருந்து சாப்பிடலை. எப்ப இருந்து நீங்க சாப்பிடலைனு எனக்குத் தெரியாது. ஆனா, நம்மகூட இருக்கிற ஒருத்தர் சாப்பிடாம இருக்கும்போது நமக்கு சாப்பிட எப்படி மனசு வரும்?’’ என்று கேட்டான்.

``சாப்பிடப் போகலாம்’’ என்று சொல்லி, கீழே இறங்கினாள்.

காலையிலிருந்து நீர்கூடப் பருகவில்லை. நீரைப் பார்த்ததும் கடகடவென எடுத்துப் பருகினாள். தன் முன் இருக்கும் உணவில் சுவை எல்லாம் தெரியவில்லை. ஏதோ சாப்பிட்டாள். பிறகு வாகனத்தை நோக்கி நடந்தாள். சட்டென ஞாபகம் வந்தவளாய் ``சாப்பிட்டது சைவ உணவா... அசைவ உணவா?’’ என்று கேட்டாள். ``எனக்குத் தெரியும்... உங்களுக்கு சைவம்தான்’’ என்று சொன்னான். சட்டென நிம்மதியாக இருந்தது.

வாகனத்தைக் கிளப்பினான். அவன் மணிக்கட்டில் நேரம் என்ன ஆகிறது எனப் பார்த்தாள். மணி இரண்டைத் தாண்டியிருந்தது. சாலையோரங்களில் இருளுக்குள் வயல்கள் கறுப்பு நிறமாய்த் தெரிந்தன. மைல்கல்களில் தெலுங்கிலும் ஆங்கிலத்திலும் ஊரின் பெயர்கள் எழுதியிருந்தன. எப்படியும் இன்னும் ஆயிரத்தி சொச்சம் கிலோ மீட்டர்களைக் கடக்க வேண்டும் என நினைக்கும்போதே அவளுக்கு அயர்ச்சியாய் இருந்தது. மறுபடியும் உறங்கிவிட்டாள்.

காலையில் சிறிய தேநீர்க் கடையின் முன்னால் வாகனம் நின்றது. படிக்கும்போதிருந்தே அவள் பலமுறை நினைத்திருக்கிறாள், `பெண்ணுக்கான குறைந்த சுதந்திரம் என்பது ஒரு தேநீர்க் கடைக்குப் போய் ஒரு தேநீர் சொல்லிவிட்டு அங்கேயே மர பெஞ்சில் அமர்ந்து தினசரி வாசித்தபடியே அதைப் பருக வேண்டும்’ என. யாரோ ஒருவர், தெலுங்கு தினசரியை வாசித்துக்கொண்டிருந்தார். அவளே `இரண்டு தேநீர்’ எனச் சொல்லலாம் என வாய் திறக்கையில், நட்ராஜ் அழைத்தான். ``பல் துலக்கவும் காலைக்கடன் கழிக்கவும் பின்னால் இடம் இருக்கிறது’’ என்றான். சிறிது நேரத்துக்குப் பிறகு வந்து அவள் தேநீர் பருகினாள். தேநீர்க் கடைக்காரர் ஏதோ கேட்கவும் அவன் வாகனத்தின் பின் பாகத்தைச் சுட்டிக்காட்டி அவளையும் காட்டி தெலுங்கில் ஏதோ சொன்னான். அப்போதுதான் அவளுக்கு மீண்டும் மாதவனின் ஞாபகமே வந்தது. சட்டென ஒரு நிமிடம் அவளுக்குள் எல்லாமே இருண்டன. முழுவதும் பருக முடியாமல் மீண்டும் வாகனத்தில் போய் அமர்ந்தாள்.

ஆங்காங்கே நிறுத்தி நட்ராஜ் சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொண்டான். மதியம் அவன் எவ்வளவோ வற்புறுத்தியும் அவள் சாப்பிட மறுத்துவிட்டாள். நட்ராஜ் ஓரிரு வார்த்தைகள் பேசத் தொடங்கினான். மாதவன் இங்கே என் முதுகுக்குப் பின்னால்தான் இருக்கிறான் என்ற உணர்வே அவளை மீண்டும் இறுக்கமாக்கியது. அவனோடு பேச மறுத்தாள். நட்ராஜ் அவளை மிகவும் கனிவாய் நடத்தினான். சிறிது நேரத்துக்கு ஒருமுறை நீர் குடிக்கச் சொல்லி வற்புறுத்தினான். மாலை 4 மணிதான் இருக்கும். சாலை முழுக்க இருள் சூழ்ந்திருந்தது. தூரத்தில் எங்கேயோ மழை பெய்துகொண்டிருக்கிறதுபோல, குளிர்காற்று வீசத் தொடங்கியது. கண்ணாடி இறக்கிவிடப்பட்ட பகுதியில் முழங்கையைத் தாங்கியபடி அமர்ந்திருந்தாள்.

46p5_1527502620.jpg

ஓரிரு கிலோமீட்டர்கள் முன் நகர்ந்துபோனதும் மழைத் தூறல்கள் அவளின் முழங்கையில் பட்டன. `ஒரு துளி மழை தன் மேல் பட்டு எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன’ என நினைத்தாள். முழங்கையை வெளிநோக்கி மேலும் தள்ளினாள். வெளியே மழை கொட்டியது. நிறைய துளிகள். நட்ராஜ் தன் பக்கத்துக் கண்ணாடியை மேலேற்றி அடைத்தான். அவள் தன் உடலை மெள்ளச் சரித்து, கழுத்தையும் மழை விழும் பக்கம் சரித்தாள். அவள் உடலெல்லாம் நீர்த்துளி பட்டு நனைந்தது. நட்ராஜ் வாகனத்தை அகலமான ஓர் ஆற்றுப் பாலத்தில் நிறுத்தி அவளை மழைக்குள் இறங்கச் சொன்னான். `இறங்கின... பாத்துக்கோ!’ சட்டென மாதவனின் குரல் எங்கிருந்தோ கேட்டதும் உள்ளொடுங்கி அமர்ந்தபடி மழையில் இறங்க மறுத்து அப்படியே தன்னை உள்ளேயே இருத்திக்கொண்டாள். எதற்கோ பயந்தவளைப் போல் கண்ணாடியை விரைந்து ஏற்றி மழைத்துளி தன்மேல் படாமல் தடுத்துக்கொண்டாள்.

நட்ராஜ் வேகமாக இறங்கி அவளின் புறத்துக் கதவைத் திறந்து அவளின் கரத்தைப் பிடித்துச் சட்டென வெளியே இழுத்தான். அவள் எதிர்பார்க்கவேயில்லை. ஒரு நிமிடத்தில் மழைக்குள் வந்துவிட்டாள். மழை, அவள்மீது கொட்டித் தீர்த்தது. மழையின் சத்தத்துக்குள் நின்று ஹோ... வெனக் கதறி அழ ஆரம்பித்தாள். தன் கல் பாரம் நீரோடு மெள்ளக் கரையக் கரைய நெடுநேரம் அழுதாள். மழையின் ஓசை நின்றும் அவளின் அழும் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது. இனி அழ ஒன்றுமில்லை என்பதுபோல் அழுதாள். நட்ராஜ் அருகில்கூட வரவில்லை, விட்டுவிட்டான்.

அழுது முடித்து, சோர்ந்து நின்று கொண்டிருந்தாள். பருத்தித் துண்டு ஒன்றை எடுத்து அவளின் தலைமீது வைத்தான். அவள் அப்படியே நின்றாள். அப்படியே முகத்தின் மீதும், உடல் முழுக்கவும் இருந்த கல் போன்ற இறுக்கமான கல் தன்மை நீங்கி ஒரு குழந்தையின் முகம்போல் இருந்தது. பருத்தித்துண்டை எடுத்து அவளின் தோள்மீது போட்டான். அவள் கொஞ்சமாய்த் துவட்டிக்கொண்டாள். வாகனத்தில் ஏறி அமர்ந்தாள். வயல்வெளியும், நீண்ட ஆறுகளும் சட்டென எல்லாப் புறங்களும் ஈரமாகி அவளை நெகிழ்த்தின. ஓரிடத்தில் தேநீர் குடிக்க நிறுத்தச் சொன்னாள். அவளே ``ரெண்டு தேநீர்’’ என்று சொன்னாள். பருகிவிட்டு, மீண்டும் மீண்டும் தேநீர் சொல்லிப் பலமுறை பருகினாள். நட்ராஜுக்கு இது விநோதமாய் இருந்தது.

மைல்கற்களில் தெலுங்கு  எழுத்துகள் மறைந்து ஹிந்தி எழுத்துக்கள் தோன்றின.  நட்ராஜுக்கு மழைக்கு முன் வேறொரு பெண்ணோடும் மழைக்குப்பின் வேறொரு பெண்ணோடும் பயணிப்பதுபோல் தோன்றியது. ஈர ஆடையை நெகிழ்த்திவிட்டு வேறொரு ஆடையை அணிந்துகொள்ளச் சொன்னான். அவள் இந்த ஈரம் என் உடலில் ஒட்டிக்கொண்டிருக்கட்டும் என்று சொல்ல நினைத்தபடி, ‘இருக்கட்டும்’ என்று மட்டும் சொன்னாள். தொடையிடையில் பிசுபிசுப்பை உணர்ந்தவள், சட்டென ஏதோ சரியில்லாததுபோல் இருக்க, குனிந்து ஆடையைப் பார்த்தாள். உதிரப்போக்கு. நீல நிறச் சேலையெங்கிலும் முன்புறம் சிவப்பு படர்ந்திருந்தது. நட்ராஜும் பார்த்துவிட்டான். செல்லும் வழியெங்கிலும் எங்கேனும் நாப்கின் கிடைக்கிறதாவெனப் பார்த்தான். கொஞ்சம் பெரிய கிராமமொன்றில் ஒரு கடையில் கிடைத்தது. வாகனத்தை நிறுத்தி, பின்புறம் ஏறி மாற்றிக்கொள்ளும்படி சொன்னான். மாதவனின் முன்னால் ஒருபோதும் நிர்வாணமாய் நிற்க முடியாது என நினைத்துக்கொண்டு, ‘முடியாது’ என்று மட்டும் சொல்லிவிட்டு இருளில் வயல்வெளியின் நடுவே அகன்ற ஒரு மரத்தின் பின்னால் நின்று மாற்றிக்கொண்டாள். இரவு உணவெடுத்துவிட்டு அயர்ந்து உறங்கினாள். குளிர் அதிகமெடுத்தது. நட்ராஜ் வண்டியை ஓரமாய் நிறுத்திவிட்டு தனது இரண்டு போர்வைகளை வைத்து அவளை மூடி, கதவிலிருக்கும் கண்ணாடியைக் குளிர் நுழையாதவாறு உயர்த்திவிட்டான். புகைமூட்டமான அதிகாலையில் வாரணாசிக்குள் வாகனம் நுழைந்தது. பூரணியை எழுப்பினான். அந்த அதிகாலைக் குளிரிலும் கங்கையின் கல்படியின் ஓரத்தில் அவ்வளவு பேர் நீத்தார் சடங்குகள் செய்துகொண்டிருந்தார்கள். நிறைய ஆண் பெண் தலைகள் முங்கி எழுந்து கொண்டிருந்தன. புரோகிதர்களும் சாதுக்களும் பசுக்களும் பிணங்களும் அலைந்து கொண்டிருந்தனர். ‘அரிச்சந்திரன் படித்துறை’ எங்கிருக்கிறதென ஒருவரிடம் விசாரித்தான். விறகுகளின் மேல் மாதவனைக் கிடத்தி நெருப்பிட்டார்கள். சடசடவென உடல் எரிந்தது. நெருப்பு தூய்மையின் அடையாளம்.  அது எல்லாவற்றையும் அழித்து வேறொரு புதிய பொருளை நமக்கு வழங்கிவிடுகிறது என்று ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் எரிப்புச் சடங்கின் பிந்தைய சடங்குகளுக்காக கங்கையில் மூழ்கியெழுந்து  கல்படிக்கு வர பூரணியை அழைத்தார்கள். பூரணி நட்ராஜிடம் தான் விடாய்த் தீட்டிலிருப்பதாய்ச் சொன்னாள். ‘அந்த தெய்வமும் அங்கிருந்துதான் வந்திருக்கக் கூடும். ஒன்றும் தீட்டில்லை’ என்றான்.

ஒரு நிமிடம் அவளுக்கு அவன் மீது அன்பு பெருகி அணைத்துக்கொள்ளத் தோன்றியது.குறைந்தபட்சம் அவன் கரங்களை இறுகப் பற்றிக்கொள்ளவாவது தோன்றியது.

https://www.vikatan.com/

  • கருத்துக்கள உறவுகள்

 ஒரு ஆணிடம் அடிமை விலங்குடன் வாழ்ந்த ஒரு பெண் இன்னொரு ஆண் அவ்விலங்கை உடைக்க அனுமதிக்கிறாள். அதுகூட தப்பாகத் தெரியவில்லை.....!  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.