Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

சயனைடு - சிறுகதை

 
ப.தெய்வீகன் - ஓவியங்கள்: ஸ்யாம்

 

யனைடு உட்கொள்வதன் மூலம் எவ்வாறு உயிரிழப்பது என்பது, அப்போது எங்கள் கூட்டத்தில் மிக முக்கிய விவாதமாக இருந்தது. சயனைடை அதிகம் பயன்படுத்தும் போராளிகள் எப்போதும் அதைக் குப்பியில் அடைத்து, கழுத்தில் கட்டியிருப்பர். ஆபத்து நெருங்கும் தருணத்தில் அந்தக் குப்பியின் மூடியைக் கழற்றி சயனைடு தூளை வாயில் போட்டு விழுங்கி இறந்துவிடுவர் என்பது சுதா, தான் படித்த ஏதோ ஒரு புத்தகத்தை மேற்கோள் காட்டிச் சொன்ன கதை.

மணிவண்ணன், தனது பக்கத்தில் வேறொரு தகவலை வைத்திருந்தான். ``எதிரிகள் தங்களைச் சூழ்ந்துகொள்ளும் தருணங்களில், சயனைடு மூடியைக் கழற்றி வாயில் போட்டு விழுங்குதற்கெல்லாம் போராளிகளுக்கு நேரம் கிடைக்காது. சாவகாசமாக வாயில் போட்டுச் சப்பிக்கொண்டிருக்க அது என்ன கலியாண வீட்டு பீடாவா? அவர்கள் செப்புக் குப்பியில்தான் சயனைடை வைத்திருப்பார்கள். அதை வாயில் போட்டுக் கடிக்கும்போது செப்பும் சயனைடும் நொறுங்கி உமிழ்நீரில் கலந்துவிடும், எண்ணி மூன்று விநாடியில் ஆள் அவுட்’’  என்று மூன்று விரல்களையும் மடக்கி தனது விஞ்ஞானபூர்வமான விளக்கத்தைக் கூறியிருந்தான்.

48p1_1530015359.jpg

அவனது விளக்கம் சுதாவின் விளக்கத்தைவிடக் கொஞ்சம் நம்பும்படியாக இருந்ததற்கு அப்பால் அவனது உடல்மொழி அவனது கதைத் தொடர்பில் த்ரில்லான திருப்தியையும் எங்களுக்குக் கொடுத்திருந்தது.

ஆர்மியோடு நடைபெற்ற சண்டையில் யார் யார் சயனைடு உட்கொண்டு இறந்தார்கள் என்ற போராளிகளின் பெயர்ப் பட்டியலைக் கொண்டுவந்து காண்பிப்பது முதல், உயிரிழந்த போராளிகளின் படங்களை `ஈழநாதம்’ பத்திரிகையில் காண்பிப்பது வரையிலான தீவிரமான தேடுதல் பணியிலும் அவன் இறங்கியிருந்தான்.

சயனைடு தொடர்பான எப்படிப்பட்ட  புரட்டுகளைக் கதைத்தாலும், இருட்டிய பிறகு பேசும்போது அவற்றுக்கு  இயல்பாகவே ஓர் உண்மைத்தன்மை இருப்பதுபோன்ற உணர்வு எமக்கும் தோன்றியது. ஆனால், ஒரு குறுகிய வட்டத்துக்குள் மாத்திரம்தான் இந்த விஷயத்தை நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம் என்ற மிகப்பெரிய உண்மையை, ரூபசுந்தரின் வருகைதான் உள்ளூர உணரச்செய்தது.
48p2_1530015380.jpg
இடம்பெயர்ந்து எங்கள் கிராமத்துக்கு மிகவும் அண்மித்து (அல்லது எங்களது கேணியடி கிரிக்கெட் அணியில் அங்கம் வகிப்பதற்குரிய தூரத் தகுதியைக்கொண்ட எல்லைக்குள்) ரூபசுந்தர் வந்த பிறகு, நாங்கள் ஏற்கெனவே பேசியும் நம்பியும் வந்த பல விஷயங்களில் எங்களுக்குள் பெரிய மாற்றங்கள் நிகழத் தொடங்கின. இவ்வாறான மாற்றம் நிறைந்த கதைகளில் ஒன்றாகத்தான் எங்களது சயனைடு தொடர்பான பேச்சை அவனுடன் தொடங்கியிருந்தோம். அதற்கு அவன் சொன்ன கதை முற்றிலும் வேறொன்றாக இருந்தது.

அவன் அண்ணாதான் அப்போது எங்களுக்குத் தெரியத் தொடங்கியிருந்த ஒரே ஓர் இயக்க ஆள். இரண்டு வருடத்துக்கு முன்பு இயக்கத்துக்குப் போனவர். ஆளை யார் என்றே எங்களுக்குத் தெரியாது. ஆனால், ரூபசுந்தர் வீட்டில் இருந்த பெரிய படம் ஒன்றைக் கொண்டுவந்து காட்டினான். பயங்கர உயரம். நல்ல சிவலை. ரூபசுந்தருடைய அக்காவின் பூப்புனித நீராட்டு விழாவின்போது எக்ஸோரா பூக்கன்றுக்கு முன்னுக்கு நின்று தனியாக எடுக்கப்பட்ட படத்தில் `முறால்’ சிரிப்போடு நின்றுகொண்டிருந்தார். யாழ்ப்பாணம் `சிற்றி போய்ஸி’லதான் உடுப்பு எடுத்திருக்க வேண்டும். ஆளுக்கு நன்றாகப் பொருந்தியிருந்தது. அந்த உடையில் இன்னும் அழகாகத் தெரிந்தார்.

ஒருநாள் தகப்பனோடு ஏதோ பிரச்னை என்று பள்ளிக்கூடம் வரும்போது சைக்கிளைக் கொண்டுபோய் கோயிலடியில் விட்டுவிட்டுக் கடற்புலிகளின் முகாம் பக்கமாகப் போனவர் என்று ரூபசுந்தரின் அம்மாவுக்கு யாரோ போய் தகவல் சொல்ல, அவர் குழறியடித்துக்கொண்டு முகாமுக்கு ஓடினார். ஆனால், தங்களது வாகனத்தில் இன்னொரு முகாமுக்குப் போயிருக்கிறார். இரண்டொரு நாளில் திரும்பி வந்துவிடுவார் என்று முகாமில் சொல்லப்பட்டது. அன்றுமுதல், மகன் வந்துவிடுவான் என்று ரூபசுந்தரின் அம்மா கேணிப்புளியடி தொடக்கம் நல்லூர் கந்தசுவாமி கோயில் வரைக்கும் செய்யாத அர்ச்சனை இல்லை. ``எப்படியும் மகன் வந்திருவான்!’’ என்று அழுதழுது ஊருக்குள் சொல்லித் திரிந்தார்.

ஒரு வருடத்துக்குப் பிறகுதான் ரூபசுந்தரின் அண்ணா வீட்டுக்கு வந்தார். சீருடையில் வீட்டுக்கு வந்தபோது அவரைப் பார்த்தவர்கள் சொன்னபடி, ஆள் நன்றாகக் கறுத்துப்போயிருந்தார். ஆளுக்கு முன்பிலும் பார்க்க இன்னும் மிடுக்கான தோற்றம் வந்திருந்தது.

எல்லாவற்றையும் ரூபசுந்தரே எமக்கு ஒப்புவித்தான். இவ்வாறான கதைகளின் மூலம், தான் கூறுகின்ற இயக்கக் கதைகளுக்கான முழுமையான தகுதியை மேலும் அதிகரித்திருந்தான். அண்ணா இரண்டு மணி நேரம் வீட்டுக்கு வந்துபோன கதையை எமக்கு இரண்டு மணி நேரக் கதையாகவே வர்ணித்து உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தியிருந்தான். இடுப்பில் போராளிகளுக்கான பிரத்யேக பெல்ட் கட்டியிருந்த அண்ணாவிடம் `பிஸ்டலும் கிடந்தது’ என்று சொல்லியிருந்தான்.

48p3_1530015439.jpg

அண்ணாவுக்கு இப்போது இயக்கப் பெயர் `செழியன்’ என்று கூறிய ரூபசுந்தர், அவர் வீட்டுக்கு வந்து போனபோது தனக்குத் தந்துவிட்டுப் போன கைமணிக்கூடு ஒன்றை எங்களிடம் காண்பித்திருந்தான். நாங்கள் எல்லோரும் சைக்கிளைவிட்டு இறங்கிச் சென்று அவனது வலதுபக்க மணிக்கட்டில் உட்புறமாகக் கட்டியிருந்த மணிக்கூட்டைக் கண்கள் விரியப் பார்த்தோம். அந்த மணிக்கூட்டை அவன் யாரையும் தொட விடவில்லை. இயக்கத்தில் எல்லோரும் மணிக்கூட்டை மணிக்கட்டில் உள்பக்கமாகத்தான் கட்டுவார்கள் என்றும் வேவு நடவடிக்கைக்குப் போகும்போது வெளிப்பக்கமாக மணிக்கூட்டைக் கட்டியிருந்தால், இருட்டில் ஆர்மிக்காரன் டோர்ச் அடித்துப்பார்க்கும்போது வெளிச்சம் அதில் பட்டுத்தெறித்து காட்டிக்கொடுத்துவிடும் என்றும் அதற்காகத்தான் போராளிகள் உட்புறமாக மணிக்கூட்டை அணிந்துகொள்வதாகவும் சொன்னான். அவன் அந்தக் கதையைக் கூறி முடிக்கும்போது நாங்கள் அனைவரும் அவன் கூறியதையே கண்வெட்டாமல் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, அவனது கையில் உட்புறமாகக் கட்டப்பட்டிருந்த மணிக்கூட்டைப் பார்த்தோம். அந்த மணிக்கூடும் அதில் தெரிந்த மணியும் அதற்குப் பிறகு கூடுதல் பெருமதியுடன் தெரிந்தது.

``வீட்டுக்கு வந்து போன அண்ணா சாப்பிடும்போதுகூட இரண்டு சாமான்களைக் கழற்றவே இல்லை’’ என்றான்.

``ஒன்று, அவரது இடுப்பில் இருந்த பிஸ்டல்.”

``மற்றது...” என்று சொல்லிவிட்டு, கொஞ்சம் குரலைத் தாழ்த்தி...

``சயனைடு” என்றான்.

கிரிக்கெட் விளையாடிவிட்டு கேணியடியில் கூடுகின்ற எங்களின் வழக்கமான அரட்டையில் ஒருநாள் மணிக்கூட்டுக் கதை போலவே த்ரில்லான விளக்கம் ஒன்றை சயனைடுக்கும் தர ஆரம்பித்திருந்தான் ரூபசுந்தர்.

``சயனைடை போராளிகள் கண்ணாடிச்சிமிழ் ஒன்றில் போட்டு அடைத்து, கழுத்தில் பட்டி ஒன்றில் கட்டியிருப்பர். எதிரிகளிடம் அகப்பட்டுத் தப்பிக்க முடியாது என முடிவெடுக்கும் தருணத்தில் போராளிகள் அந்தச் சிமிழை எடுத்துக் கடைவாயில் வைத்துக் கடித்து நொறுக்குவர். நொறுங்கிய அந்தச் சிமிழ்ச் சிதிலங்கள் வாயின் உள்ளே காயத்தை ஏற்படுத்தி அதில் சயனைடு கலக்கும்போது எண்ணி மூன்று விநாடியில் ஆள் அவுட்’’ என்று சொன்னான்.

அந்த விளக்கத்தின் பிற்பகுதி தனது விளக்கத்துக்கு மிக நெருக்கமாகக் காணப்பட்ட பெருமையோடு மணிவண்ணன் எங்கள் எல்லோரையும் ஒருமுறை திரும்பிப் பார்த்தான்.

இருந்தாலும் சயனைடு தொடர்பாக ஒவ்வொருவரும் தந்த விளக்கங்கள் குழப்பமாகவே இருந்தன.

பிறகு ஒருதடவை, மகாதேவா மாஸ்டரின் ரசாயனவியல் வகுப்பின்போது இந்தச் சந்தேகத்தை மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்துவதற்காகப் பின்வாங்கிலிருந்து அவரிடம் துண்டு எழுதிக் கேட்டபோது, அவர் அதற்குப் பதில் தர மறுத்துவிட்டார்.

48p4_1530015453.jpg

``ரூபசுந்தரின் அண்ணா, அடுத்த தடவை எப்போது விடுமுறையில் வீடு வருவார்?’’ என்று நாங்கள் அடிக்கடி ரூபசுந்தரிடம் கேட்டபோதெல்லாம், அவன் மேலும் மேலும் பல திகில் கதைகளையெல்லாம் அவிழ்க்கத் தொடங்கினான்.

அண்ணா தற்போது முக்கியப் பொறுப்புகளை வகிப்பதாகவும் அவர் பகலில் வீட்டுக்கு வந்து போவது பாதுகாப்புக்குப் பிரச்னையாகிவிடலாம் என்பதால், இரவில் வருவதுதான் வசதி என்று போனதடவை வரும்போது கூறியதாகவும் அவன் சொன்னான். ``அப்படியே வந்தாலும் அவருடைய பாதுகாப்புக்காகப் பலர் அவரோடு வருவார்கள். அவர்கள் அண்ணாவை நெருங்கவிட மாட்டார்கள்’’ என்றான்.

அண்ணாவுடன் வரும் பாதுகாவலர்கள் கண்டிப்பானவர்கள். அளவாகத்தான் தங்களுடன் அண்ணா இருந்து பேசுவதற்கே அனுமதிப்பதாக வேறு கூறியிருந்தான்.

அந்தக் காலப் பகுதியில் மண் மீட்பு நிதிக்காக ஒவ்வொரு குடும்பத்திடமும் இரண்டு பவுன் தங்கம் வாங்கப்போவதாக இயக்கம் அறிவித்திருந்தது. போராட்டம் என்பதை பொழுதுபோக்காகப் பார்த்துக்கொண்டிருந்த மக்களுக்கு, இந்தப் பவுன் வாங்கும் அறிவிப்பு பற்றிக்கொண்டுவந்தது. அப்போது அம்மா தாலிக்கொடியைக்கூடப் போடுவதற்கு  பயந்து, போலித்தங்கத்தில் செய்த சங்கிலி ஒன்றைத்தான் எப்போதும் அணிந்திருந்தார். ஆனால், இந்தக் கதையை ஒருமுறை கிரிக்கெட் விளையாடிய பிறகு பேசும்போது, தங்களது குடும்பம் பவுன் கொடுக்கத் தேவையில்லை என்று ரூபசுந்தர் கூறியபோது, எங்களுக்கு வழக்கம்போல மறுபடியும் அதிர்ச்சி. வழக்கம்போல அவனது விளக்கத்தை எதிர்பார்த்து அவனது முகத்தைப் பார்த்தபோது...

``போராட்டத்துக்குப் பிள்ளைகளைக் கொடுத்த ஆள்களிடம் இயக்கம் பவுன் கேட்கயில்லை” என்று நாசூக்காக தங்களது குடும்ப கௌரவத்தை இடித்துக்காட்டினான்.

இன்னொரு தடவை தனது தூரத்து முறையான மாமா ஒருவர் முன்பு இயக்கத்தில் இருந்ததாக மணிவண்ணன் கதை ஒன்று தொடங்கியபோது, உடனே குறுக்காகத் தனது கதையைப் போட்ட ரூபசுந்தர்,

``அவருக்கு அடிபாட்டில எத்தனை காயம்?” என்றான்.

கதை தொடங்கியவிதத்திலேயே எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. ``மணிவண்ணனுக்கு மாமன்காரனையே யாரென்று தெரியாது. அதற்குள், அவருக்கு எத்தனை காயம் என்று இவனுக்கு எப்படித் தெரியப்போகிறது! அதுசரி, எத்தனை காயமென்றாலும் இப்போது அதற்கென்ன? காயத்தைக் கணக்கெடுப்பதற்கு அதில் என்ன இருக்கிறது?’’ என்று கேட்க, ரூபசுந்தர் தனது அடுத்த விளக்கத்தை ஆரம்பித்தான்.

``மணி! இயக்கத்துக்குப் போய் சும்மா படம் காட்டிக்கொண்டிருக்கிற ஆளெல்லாம் `வீரர்’ எண்டு நினைக்காதை. அண்ணா சொன்னவன், 17 சண்டையாம். அதில ஏழில தனக்குக் காயமெண்டு. அம்மா கத்துவா எண்டு அவரும் சொல்லயில்லை. அவர் எனக்குச் சொன்னவர் எண்டு நானும் யாருக்கும் சொல்லயில்லை. இரண்டு சண்டையில உள்ளுக்கப் பாய்ஞ்ச சனங்களை இன்னும் வெளியிலயே எடுக்கயில்லை, தெரியுமே!”

சொல்லி முடிக்கும்போது மணிவண்ணன்மீது மட்டுமல்ல, அவனது ஒட்டுமொத்தப் பரம்பரையின் மீதே ஏளனப் பார்வையை அவிழ்த்துவிட்டான் ரூபசுந்தர்.

நான் கொழும்புக்கு வந்த பின்னர், ரூபசுந்தரின் குடும்பத்தினர் எங்கே சென்றார்கள் என்று அடிக்கடி அம்மாவிடம் கேட்கும்போதெல்லாம் ``அவர்கள் வன்னிப்பக்கம்தான் எங்கேயோ இடம்பெயர்ந்து சென்றார்கள்’’ என்றும் ``தொடர்புகள் முற்றாக இல்லை’’ என்றும் சொன்னார். ஆனால், போன கிழமை அம்மா சொன்ன தகவல் எனக்கு அதிர்ச்சியை மாத்திரமல்லாமல், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியி ருந்தது.

``நீ ஒண்டும் போய்ப் பார்க்கவேண்டாம் ராசா. தேவையில்லாத பிரச்னைகளை விலைக்கு வாங்காத... அவனோட கதைக்கப் போய், நீ பிரச்னையல மாட்டிப்போடாத.”

சம்பிரதாயமான அக்கறையுடன் அம்மாவின் அந்தத் தொலைபேசி உரையாடல் அன்று நிறைவ டைந்திருந்தது.

48p5_1530015465.jpg

அந்தத் தகவலைக் கேட்டதிலிருந்து எனக்குள் பழைய நினைவுகள் அனைத்தும் பெருங்கலவரங்களை மூட்டத் தொடங்கின. மனதுக்குள் கல்லொன்று தானாகவே காற்றில் மோதுண்டு மோதுண்டு சிலையாவது போன்ற உக்கிரமான உணர்வை ஏற்படுத்தியது. கேணியடிக் கதைகளும் அந்தக் கதைகளின் நாயகனும் புகார்கொண்ட கனவுலகக் காட்சிகளின் வழியாக எழுந்து நடந்துவருவதுபோலக் கிடந்தன.

நீண்ட பெருவீதியை வேகமாக விழுங்கியபடி ஒன்றரை மணி நேரமாகப் பயணித்த எனது கார், சிட்னியின் புறநகர்ப் பகுதியை வந்தடைந்தபோது நேரம் மதியத்தைத் தாண்டியிருந்தது. நகரிலிருந்து ஓரளவுக்கு ஒதுக்குப்புறமாக அமைக்க ப்பட்டிருந்த அந்த விசாலமான முகாம், உயரமாக
அமைக் பட்டிருந்த   மின்வேலிகளுக்கு நடுவே உறங்கிக்கொண்டிருந்தது. உள்ளே இருப்பவர்களுக்கும் வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், முகாமைச் சுற்றி குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒன்றாகப் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள், எல்லா திசைகளிலும் நோட்டம் விட்டுக்கொண்டிருந்தன. என்ன குற்றம் செய்ததோ தெரியவில்லை, வாசலில் பெரியதொரு மரம் மொட்டையடிக்கப்பட்ட நிலையில் குற்றுயிராகக் கிடந்தது. அந்த மரத்தின் அருகிலேயே முகாமின் பெயரைப் பெரிய எழுத்தில் எழுதிய பதாகை ஒன்று இரும்புச் சட்டகத்தில் பொருத்திக் கிடந்தது.

வாகனத்தில் வருபவர்கள் முகாமுக்கு அண்மையில் வந்தவுடன் வேகத்தைக் குறைத்துவிடவேண்டும் என்பதற்குரிய கட்டளையாக முகாமை அண்மித்துள்ள பாதையில் 10 - 15 மீட்டர்களுக்கு ஒரு தடவை வேகத்தடைகள் போடப்பட்டிருந்தன.

ஏற்கெனவே தொலைபேசியில் அழைத்து பெயர் விவரங்களைக் கொடுத்து சந்திப்புக்கு அனுமதி வாங்கிய காரணத்தால், எந்தவிதமான பதற்றமும் இல்லை. இருந்தாலும் கார் தரிப்பிடத்திலிருந்து ஓங்கி உயர்ந்து வியாபித்துக் கிடந்த அந்தக் கட்டடங்களை நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்தபோது ஒருவிதப் பதற்றம் உள்ளுக்குள் உருண்டோடியபடியே இருந்தது.

முகாமின் வாசலுக்குச் சென்றபோது கண்ணாடி அறைக்குள் சீருடையில் நின்ற அந்தப் பெண்மணி அலுவலகத்தில் இருந்த பிரதி இயந்திரத்திலிருந்து வழிந்து விழுந்துகொண்டிருந்த ஆவணங்களை அவசர அவசரமாக எடுத்து மேலும் கீழுமாய் மேய்ந்துவிட்டு மேசையில் அடுக்கிக்கொண்டிருந்தார்.

அவள் நின்றுகொண்டிருந்த பணியறை குளிரூட்டப்பட்டிருந்த காரணத்தால்தானோ என்னவோ அவள் அதிகாலை அணிந்திருந்த அல்லது அதற்குப் பிறகு தொடர்ச்சியாக அவள் மீண்டும் மீண்டும் அணிந்துகொண்ட அவளது முகப்பூச்சுகள் எதுவும் அழிந்துவிடாமல் அவளை அழகாகக் காண்பிக்க முயன்றுகொண்டிருந்தன. நடுத்தர வயதிருக்கும். அழகு எனச் சொல்லிட முடியாது என்றாலும், அழகில்லை என்று ஒதுக்கிவிடவும் முடியாத முகவெட்டு. சராசரி உயரம். பாதுகாப்பு அதிகாரிக்குரிய சீருடையை அணிந்திருப்பதால் அந்த உருவத்தில் பலோத்காரமான ஒரு மிடுக்கு வேண்டுமென்று ஒட்டப்பட்டிருந்தது. அந்தக் கண்ணாடியின் வழியாக முகத்தில் சிரிப்பே இல்லாமல் என்னை நிமிர்ந்து பார்க்கும்போதும்கூட அந்தப் பார்வை அப்படியொன்றும் என்னை மிரட்டுவதாகவோ, முகாம் அதிகாரிக்கு உரியதாகவோ தெரியவில்லை.

``யாரைப் பார்க்கவேண்டும்?’’ என்ற கேள்வியோடு கண்ணாடியின் வழியாக அடையாள அட்டையைக் கேட்டவளிடம் அவள் கேட்கும் முதலே தயாராக எடுத்து வைத்திருந்த சாரதி அனுமதி அட்டையைக் கொடுத்தேன். உள்ளே செல்வதற்கான அனுமதிப் பத்திரத்தை வாங்கி, அதில் பார்வையிடச் செல்லும் நபர் `செழியன்’ என எழுதினேன். பிறகு அதை வெட்டினேன். `பாஸ்கரன் தணிகாசலம்’ என்று இயற்பெயரை எழுதினேன். வாங்கிய வழியாக மீண்டும் கொடுத்த பத்திரங்களின் விவரங்களைச் சரிபார்த்துவிட்டு, தனது மேசைக்குக் கீழிருந்த ஆழியை அழுத்திக்கொண்டு என்னை உள்ளே போகுமாறு ஒரு திசையைக் காண்பிக்க, அதன் வழியாக நடந்து சென்றேன்.

எனது தொடுகை    எதுவுமின்றி இரண்டு கண்ணாடிக்கதவுகள் தானே திறந்துகொண்டன. அந்தக் கதவுகள் காண்பித்த வழியாக நடந்து செல்ல, மூன்றாவது கதவின் பக்கமாக நின்றுகொண்டிருந்த உயர்ந்த ஆசாமி, தனது கையில் வைத்திருந்த தட்டை வடிவிலான பொருள் ஒன்றை நோக்கி என்னை அழைத்தார். என்னை சோதனை செய்யப்போவதாக சைகையால் பேசியவர், கைகளை உயர்த்திக் காண்பித்துக்கொண்டு நிற்கக் கோரினார். நானும் காற்றில் அறையப்பட்ட இயேசுவைப்போல கைகளை நீட்டி விரித்தபடி நின்றேன். எனது உடல் விளிம்பை,  தனது கையில் இருந்த கருவியால் மேய்ந்தார். நான் உள்ளே செல்வதற்குத் தகுதியானவன் என்றதொரு சிறிய புன்னகையைத் தந்துவிட்டு, கதவைத் திறந்துவிட்டார்.

48p6_1530015479.jpg

பாவிகளைப் பார்க்க வருபவர்களுக்கென்று அமைக்கப்பட்டிருந்த அந்தப் பரந்த மண்டபத்தில் இரண்டு நிரைகளில் ஆறு பெரிய மேசைகள் போடப்பட்டிருந்தன. ஒவ்வொரு மேசையையும் சுற்றி ஆறேழு கதிரைகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. ஆனால், அந்த மண்டபத்தில் என்னைத் தவிர யாரையும் காணவில்லை. அங்கு உள்ள எந்தக் கதிரையில் அமர்ந்தாலும் பரவாயில்லைதான். ஆனாலும் எனக்கென்று தரப்பட்ட எண்ணின் பிரகாரம் வலதுபக்கம் இருந்த இரண்டாவது மேசையின் ஓரமாக இருந்த கதிரையை இழுத்து அதில் அமர்ந்துகொண்டேன். உள்ளே வருவதற்கு முன்னர் கைப்பேசி முதல் அனைத்தையும் வாசலிலேயே உருவி வைத்துவிட்டு அனுப்பியதால், இப்போது அந்த மண்டபத்தின் அழகை ரசிப்பதைவிட வேறு வழியில்லை.

சுவர்கள் முழுவதும் பல வண்ண ஓவியங்கள், ஆஸ்திரேலியாவின் பெருமையைக் கூறும் வரலாற்றுச் சம்பவங்கள், அகதிகளாக வருகிறவர்களை வாழவைப்பதுதான் தங்களது வரலாற்றுக் கடமை என்ற பொருள்பட எழுதப்பட்ட மூத்த அரசியல்வாதிகளின் பொன்மொழிகள் என்று அனைத்தினாலும் விருந்தினர்களை வியக்கவைக்கும் அளவுக்குப் பல வேலைப்பாடுகள் அங்கு செய்யப்பட்டிருந்தன. ஆஸ்திரேலியாவின் ஆதிக்குடிகள் தொடர்பான செய்திகள் அடங்கிய நூல் எனக்கு முன்னால் இருந்தது. அதை எடுப்பதற்கு எழும்பியபோது, மண்டபத்தின் இன்னொரு மூலையில் இருந்த கண்ணாடிக் கதவுகள் திறந்தன.

நல்ல உயரம், பொது நிறம். சீருடை இல்லாத செழியன் அண்ணா என்று ஓரளவுக்கு ஊகிக்கக்கூடிய அந்த நபர் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் சகிதமாக என்னை நோக்கி நடந்து வர, நான் என்னையறியாமல் எழுந்துகொண்டேன். நடையில் ரூபசுந்தர் கூறிய அதே மிடுக்கு இன்னமும் தெரிந்தது. என்னை நோக்கி வர வர, அவரது நடையில் வேகம் கூடியது. அருகில் வந்தபோது ஒரேயடியாகக் கட்டியணைத்துக்கொண்டார்.

அந்த அணைப்பு, ஒரு தேசமே என்னைக் கட்டியணைத்ததுபோல் இருந்தது.

அந்தத் தேசத்தின் விடுதலைக்காகக் கனவுகண்ட அந்தக் கண்கள் என்னைக் கூர்ந்து பார்த்த அந்தக் கணம், வாழ்நாளில் நான் அதுவரையில் அனுபவித்திராத ஒரு பேரதிர்வை நிகழ்த்திவிட்டு ஓய்ந்தது.

“தங்கச்சி சொன்னவள், நீங்கள் இஞ்சதான் இருக்கிறீங்கள் எண்டு. அநேகமாக வந்து பார்க்கக்கூடும் எண்டு… வாங்கோ, இருங்கோ இருங்கோ.”

எனது ஒரு கையை தன் இரு கைகளாலும் வாஞ்சையோடு பிடித்து அழைத்துச்சென்று கதிரையில் இருத்திவிட்டு முன்னால் இருந்த கதிரையில் அமர்ந்துகொண்டார்.

என்னுடல் என்னை விட்டுத் தனியாகக் கழன்றுபோய் நின்று பேசுவதுபோன்ற குற்ற உணர்ச்சியை எனக்கும் அவருக்குமான அந்த இடைவெளியில் நான் உணர்ந்தேன்.

எங்கள் கேணியடிக் கதைகளின் நாயகன், நாங்கள் பார்ப்பதற்கென்று தவம் கிடந்து தவம் கிடந்து தவறிய வீரத்தளபதி, எங்களால் தொட முடியாதுபோன பிஸ்டலினதும் சயனைடினதும் உரிமையாளன். இப்படி எல்லாத் தகுதிகளோடும் எங்களுக்குள் கோலோச்சிய வீரன் என் கண் முன்னால் இருக்கிறார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அவரின் கண்கள் முதற்கொண்டு முகத்தில் அனைத்துமே என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தன. பாலுக்கு அழுத குழந்தையின் பசி ஆறிய நிறைவும் விகல்பமற்ற உள்மனதின் அப்பட்டமான ஒளிவடிவமுமாக செழியன் அண்ணாவின் பார்வை என்மீது மோதி வழிந்துகொண்டிருந்தது.

ஒரு குழந்தைபோலக் கதைக்கத் தொடங்கினார். ஆனால், என்னால் அவரது முகத்தைப் பார்க்கவே முடியவில்லை. என் கண்களுக்குக் கடிவாளம் போட்டுக்கொண்டிருந்த கேணியடி நினைவுகள், பெருஞ்சலனத்தோடு செழியன் அண்ணாவின் மீது பரபரத்துக்கொண்டிருந்தன. சுதாவும் மணிவண்ணனும் பேசியவை முதற்கொண்டு பிற்காலத்திலும் என் மனதில் புயலடித்துத் திரிந்த செழியனின் அண்ணாவின் நினைவுகள் - கதைகள் எல்லாவற்றிலும் இப்போது எனக்கு முன்னால் இருக்கும் உருவத்தை நிறைத்துக்கொண்டேன்.

வெளியில் மெலிதான வெயில் என்றாலும் உள்ளே குளிரூட்டியைப் போட்டிருந்தார்கள்.

அப்போதுதான் எனது நெஞ்சில் ஓங்கி அறைந்ததுபோல அதைக் கண்டேன். செழியன் அண்ணா போட்டிருந்த மெல்லிய நீல நிற டி-ஷேர்ட்டின் ஒரு பக்கமாக அவர் கழுத்தில் அணிந்திருந்த சிவப்புக் கயிறு தெரிந்தது. வெடி வைத்துக் கிளப்பிய மலை நுனியிலிருந்து பாறைகள் உருண்டோடி பள்ளத்தை நோக்கி வருவதுபோல எனக்கு உள்ளுக்குள் ஏதேதோ  செய்யத் தொடங்கியது.

சண்டை முடியும் முதலே தான் ஓரளவுக்கு முடிவை ஊகித்துக்கொண்டு கொழும்புக்கு வந்து வத்தளையில்தான் தங்கியிருந்ததாகச் சொன்னார்.

அந்தக் கயிறு கனகாலமாக அவர் போட்டிருக்கவேண்டும். சில இடங்களில் நூல்கள் கிளம்பிக்கிடந்தது தெரிந்தன.

அங்கு தங்கியிருந்த மூன்று மாதங்களுக்குள் ரூபசுந்தரோடு வீட்டுக்கு வந்துபோன யாரோ ஒரு பெடியன் போலீஸில் காட்டிக்கொடுக்க, தன்னை ஓர் இரவு வெள்ளை வானில் வந்து கடத்திக்கொண்டு போனதாகக் கூறினார்.

சயனைடு பற்றி நாங்கள் கருத்தரங்கு நடத்தி அதன்மீதான காதல் பெருகி உச்ச உணர்வைப் பெற்றுக்கொண்ட நாளொன்றில் மணிவண்ணன் உருத்திராட்சைக்கொட்டையில் கோத்த சிவப்புக் கயிறு ஒன்றை எல்லோருக்கும் கொண்டுவந்து நாங்கள் வீரர்களாகக் கயிறு அணிந்த போலி நாள் ஒன்றின் பொழுதுகளை எண்ணிப்பார்த்தேன். அன்றிரவே அதைக் கண்ட அம்மா, கழற்றி எறியுமாறு தனது எட்டாவது ஸ்வரத்தில் குழறித் தீர்த்ததும் நினைவில் வந்தது.

48p7_1530015493.jpg

தனக்கு ஏற்கெனவே தெரிந்த ஓ.ஐ.சி ஒருவன் தகவலை அறிந்து தன்னை விடுதலை செய்வதற்கு உதவிசெய்து அடுத்த கிழமையே மலேசியாவுக்கு ஃப்ளைட் எடுத்துத்தந்து தரைவழியாக இந்தோனேஷியாவுக்குள் நுழைந்த கதையைக் கூறினார்.

நம்பிக்கை என்ற பெயரில் நாங்கள் கட்டியெழுப்பிக்கொண்டிருக்கும் மானிடப்  பெருந்தத்துவம் எனப்படுவதெல்லாம் வாழ்வதற்குரிய வட்டத்துக்குள் நாங்களே போலியாக அலங்காரமிட்டு வைக்கும் போலி உருவங்களே தவிர, சாவுக்கும் துணிந்த ஓர் இலக்கின் மீது வைத்திருக்கும் ஓர்மம்தான் உண்மையான நம்பிக்கை என்ற துணிவோடு தனக்குள் நிரப்பிவைத்திருந்த அந்த நிறைந்த ஒளியைச் செழியன் அண்ணாவின் விழிகளுக்குள் தேடினேன்.

நிறைவலிமையும் சர்வவல்லமையும் பொருந்திய அந்தத் துணிவு இப்போதெல்லாம் முடிந்துவிட்ட கணங்களில் - இன்னொரு தேசத்தில் - `அடிமை’ என்ற நிலையிலிருந்து `அகதி’ என்று மாறிவிட்ட அடையாள மாற்றத்தில் எவ்வாறு வாழ்கிறது என்று அவரது முகமெங்கும் தேடினேன்.
உண்மையைச் சொன்னால், அவரது நெஞ்சின் மீதுதான் கண்களால் துளாவிக்கொண்டே யிருந்தேன்.

`நீங்கள் கழுத்தில் போட்டிருக்கிறது என்ன கயிறு?’ என்று கேட்க ஆயத்தமானபோது...

“ஆஸ்திரேலியா 15 நாள் பயணம்” என்று அவர், முதன்முதலாக முகத்தில் ஒரு வாட்டத்தைக் காண்பித்தபோது, கஷ்டப்பட்டு எனது கேள்வியை நிறுத்திக்கொண்டேன்.

ரூபசுந்தரைத் தன் தங்கச்சி ஜேர்மனுக்கு எடுத்துக்கொண்ட நாளில், தான் இயக்கத்தை விட்டுப் பிரிந்து வீட்டோடு இருக்கும்போது தன் அப்பா, அம்மாவை நினைத்து வன்னியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தையும் சொன்னார்.

சாவுக்குத் துணிந்த வாழ்வுக்கு அப்பால், இப்போது வாழ்வதற்கு அதைவிடத்  துணிச்சலாகக் காண்பித்த அந்த அசலான வீரம், எனக்குள் இன்னும் இன்னும் பல கேள்விகளைத் திறந்துகொண்டேயிருந்தது.

``இன்னும் 15 நிமிடத்தில் விருந்தினர்கள் நேரம் முடிவடையப்போகிறது’’ என்று எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த இரண்டு மணி நேரம் நிறைவடையப்போவதை முகாமின் பாதுகாப்பு அதிகாரி அருகில் வந்து ஞாபகப்படுத்திவிட்டுச் சென்றார்.

இருவரும் எழுந்தோம், நான் விடைபெறு வதற்குத் தயாராக நின்றதாக உணர்ந்தவாறு அருகில் வந்த செழியன் அண்ணா -

“என்ன பாக்கிறாயடா, இது இந்தோனேஷியாவில நேந்து கட்டினது” என்று குனிந்து தனது நெஞ்சில் தொங்கியவாறு இருந்த அந்தக் கரடுமுரடான காய் வடிவப் பொருளைக் கையில் ஏந்திக் காண்பித்தார்.

எனக்குள் பறந்துகொண்டிருந்த கேள்விகளில் ஒன்று குறைந்ததா அல்லது கூடியதா என்றுகூட உணர முடியாமல் உறைந்துபோனேன்.

ரூபசுந்தரின் நம்பரை மணிவண்ணன், சுதாவுக்கும் கொடுத்துவிடச் சொல்லிக்கொண்டு விருந்தினர் அறையின் வாசல் வரை தோளில் கைபோட்டவாறு நடந்து வந்த செழியன் அண்ணா, வாயிலைத் தாண்டும் முன்பு மீண்டும் ஒருமுறை கட்டியணைத்துக்கொண்டார்.
“கேட்க மறந்திட்டன் அண்ணா, அப்பா ஏன் இப்பிடி...” என்று இழுக்க.

“அம்மாவிண்ட நினைப்பில பயங்கரமா உடைஞ்சுபோனாரடா, கனகாலமாக நடைப் பிணமாத்தான் அலைஞ்சு கொண்டிருந்தவர். எங்களுக்கு கஷ்டம் குடுக்காமல் தான் போய்ச் சேரவேணும் எண்டு ஒருநாள் முடிவெடுத்துப் போய்ச் சேர்ந்திட்டார். நான் ஆளப்பிடிச்சிருப்பன், ஆனா, எடுத்துவெச்ச மருந்தை நடுத் தொண்டையிலேயே போட்டு விழுங்கியிருக்கிறார், மூன்று விநாடிதான் ஆள் அவுட்.”

https://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.