Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹிட்லரை கட்டுப்படுத்த சோவியத்தின் அழைப்பு - பிரிட்டன் – பிரான்ஸ் புறக்கணிப்பு - உலக யுத்தம் 2 - பகுதி 3

Featured Replies

large.B6759CA9-1C2B-4205-9067-FD7D742D85DD.jpeg.5e59c3e93a0ebf3bb0d497354e43e72d.jpeg

இரண்டாம் உலகப்போரின் முன்னோடியாக ஹிட்லர் எவ்வாறு ஒஸ்ரியாவையும் செக்கோஸ்லாவாக்கியாவையும்  யுத்தமின்றி அரசியல் நகர்வுகள் மூலம்  தன் பிடிக்குகள்  கொண்டு வந்தார் என்பது பற்றியும், மூனிச் உடன்படிக்கை பற்றியும், ஹிட்லரை பற்றிய சோவியத் யூனியனின் எச்சரிக்கையையும் மீறி பிரித்தானிய பிரதமராக அன்று இருந்த, நெவில் சாம்பர்லைன் போட்ட தப்புக்கணக்குகள் பற்றியும்,  பிரிட்டனையும் பிரான்சையும் ஏமாற்றி  ஹிட்லர் தனது பலத்தை எவ்வாறு பெருக்கிக்கொண்டார் என்பதையும் இந்த பகுதி விளக்குகிறது.

 

ஜப்பானுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட போதிலும் சீனாவுடனும் உறவை வளர்த்துக்கொண்டு தான் இருந்தார் ஹிட்லர். ஆட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னால் அணியை முடிந்தவரை பலப்படுத்த வேண்டும் என்பதால். ஜேர்மனிக்கும் சீனாவுக்கும்மான உறவு 1911 ல் இருந்து தொடங்குகிறது. சீனாவின் தொழில் முன்னேற்றத்திற்கு ஜேர்மனி உதவியும் ஊக்கமும் அளிக்க ஆரம்பித்தது. அப்போது தான் 1920 ம் ஆ்ண்டு இறுதியில் இருந்து 1930 ம் ஆண்டு இறுதிவரை இரு நாடுகளும் இந்த நட்பினால் பயனடைந்தன. தமக்குத் தேவையான மூலப்பொருட்களை சீனாவிடம் இருந்து ஜேர்மனி பெற்றுக்கொண்டது. பதிலுக்கு, சீனாவுக்கு ராணுவ உதவிகளைச் செய்து வந்தது ஜேர்மனி.

1934-36 ஆண்டுகளில் ஜேர்மனியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பலனாக சீனாவில் ரயில்வே தொழிற்சாலை பலம் பெற்றது. குறிப்பாக, Nanchang. Zhejiang, Guizhou ஆகிய பகுதிகளில் ரயில்வே பாதைகள் அமைக்கப்பட்டன. இதனால் சீனா மட்டுமல்ல ஜேர்மனியும் பலனடைந்தது. ஜேர்மனிக்கு தேவையான மூலப்பொருட்கள், கனிமப்பொருட்களை விரைவாகக் கொண்டு செல்வதற்கு இந்தப் பாதைகள் பயன்பட்டன. இது தவிர, ராணுவ ரீதியிலும் ஜேர்மனி சீனாவுக்கு உதவியது. சியாங்கின் ராணுவத்திற்கு ஜேர்மானிய அதிகாரிகள் பயிற்சியளித்தனர். தளபாடங்களையும் அளித்தனர்.

சீன ராணுவம் பயன்படுத்திய ஆயுதங்களில் எண்பது சதவிகிதம் பயன்படுத்தலாயக்கற்றவை என்று ஜேர்மனி கருதியது. அவற்றை நவீனப்படுத்தவும் ஜேர்மனி முன் வந்தது சீனாவின் அயலுறவுத்துறை அமைச்சரும் கோமிண்டாங் கட்சியினருமான ஹெச்.ஹெச்.குங் 1937 ல் ஜேர்மனி சென்றிருந்த போது ஹிட்லர் அவரை வரவேற்று உரையாடினார். ஜுலை 7, 1937 ல் இரண்டாவது ஜப்பான் சீனா போர் மூண்ட போது, ஜேர்மனி சீனாவுடனான தனது உறவை முறித்துக்கொண்டது. அதற்கு காரணம் சோவியத்யூனியன்.

ஆகஸ்ட் 21,1937 ல் சோவியத்தும் சீனாவும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டன. ஜப்பானின் ஆதிக்கத்ததில் இருந்து சீனாவை மீட்டெடுப்பதற்காக சோவியத் உதவி செய்வதாக ஒப்புக்கொண்டது. பொருளாதார ரீதியிலும் ராணுவ ரீதியிலும் சீனாவுக்கு கைகொடுக்க சோவியத் தயாரானது. ஜேர்மனி சீனாவின் மீது செலுத்தி வந்த ஆதிக்கத்தை முறியடிப்பதே சோவியத்தின் நோக்கமான இருந்தது.

 

ஒஸ்ரியா மீதான ஹிட்லரின் ஆதிக்கம் இணைப்பு.

ஒஸ்ரியாவை ஜேர்மனியுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பது ஹிட்லரின் நீண்ட கால கனவு. ஓஸ்ரியா ஹிட்லரின் பிறந்த மண். எனவே என்னுடையது என்றார் ஹிட்லர். ஓஸ்ரியாவில் பிறந்திருந்தாலும், ஹிட்லர் தன்னை ஒரு போதும் ஓஸ்ரியப் பிரஜையாக எக்காலத்திலும் எண்ணிக்கொண்டதில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஜேர்மனியைப் பலப்படுத்த ஓஸ்ரியா வேண்டும் என்ற அளவில் தான் அவர் அதை இணைக்க விரும்பினார். நீண்ட நெடிய பிரதேசம் ஒன்று ஜேர்மனியுடன் இணையப்போகிறது. அவ்வளவு தான்.

1933 முதல் 1935 வரையில் ஓஸ்ரியா இத்தாலியின் அரவணைப்பில் இருந்தது. ஜேர்மனியை அருகே அண்ட விடாமல் செய்வது தான் இத்தாலியின் பணி. 1934 ல் ஒஸ்ரிய சான்சிலர் டோல்ஃபுஸ் (Engelbert Dollfuss) படுகொலை செய்யப்பட்ட போது இத்தாலி எச்சரிக்கையடைந்தது. இந்த குழப்பத்தை ஜேர்மனி தனக்குச் சாதகமாக திருப்பிக் கொள்ளக்கூடும். கவனம் தேவை. ஃப்ரென்னர் பாஸ் (Brennerpass) என்னும் இடத்தில் இத்தாலி துருப்பகளை குவித்தது.

 இத்தாலியும் ஜேர்மனியும் நட்பு பேண ஆரம்பித்து விட்ட பின்னர் முசோலினி ஒஸ்ரியாவில் இருந்து தன் பார்வையை திருப்பிக்கொண்டார். 1937ல் ஒஸ்ரிய சான்சிலரான ஸ்லுஷ்னிக் (Schuschnigg)

இனி தடையேதும் இல்லை ஹிட்லருக்கு. பிப்ரவரி 1938ல் ஹிட்லர் ஒஸ்ரிய சான்சிலருக்கு பத்து நிபந்தனைகளை அனுப்பி வைத்தார்.. அதில் ஒன்று ஒஸ்ரியாவைச் சேர்ந்த Seyss-Inquart என்னும் நாசி வீரரை ஒஸ்ரியாவின் உள்துறை அமைச்சராக நியமனம் செய்வது. உள்துறை அமைச்சர் என்றால் காவல்துறையும் இவர் கட்டுப்பாட்டில் வரும். ஒஸ்ரியாவை அபகரிப்பதற்கு இது முன்னோடியாக இருக்கும் என்பதால் இந்த நிபந்தனை.

எதிர்பார்த்தபடியே, ஓஸ்ரியா இதை ஏற்றுக்கொள்ள மறுத்தது. ஆனால் வெளிப்படையாக மறுப்பதென்பது ஹிட்லர் என்னும் காளையின் கொம்பு சீவி விடுவதற்கு சமம் என்று  அவருக்கு தெரியும். ஒரு மாற்று ஏற்பாட்டை அவர் முன் வைத்தார். ஓஸ்ரியாவில் ஒரு வாக்கெடுப்பை நடத்துகிறோம். ஒஸ்ரியா தனித்து இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை மக்கள் முடிவு செய்யட்டும்.

ஹிட்லர் இதற்கு தயாராக இல்லை. ஓஸ்ரிய மக்களை நம்புவதற்கில்லை. ஜேர்மனி வேண்டாம். தனியாகவே இருக்கிறோம் என்று அவர்கள் வாக்களிக்கலாம். ஜேர்மனியோடு சேர்வதாக அவர்கள் வாக்களிப்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம். ஓஸ்ரியா வேண்டும் என்றால் கொடுத்துவிடுவது தானே!  ஏன் இதற்கு இப்படி பிகு செய்து கொள்ளவேண்டும்?

மறுத்தார் ஹிட்லர். எனக்கு வாக்கெடுப்பில் நம்பிக்கை இல்லை நண்பரே. எனக்கு ஒஸ்ரியா வேண்டும். நீங்கள் ராஜினாமா செய்துவிட்டு எங்காவது சென்று மகிழ்ச்சியுடன் இருந்து கொள்ளுங்கள். உங்கள் மீது எனக்கு எந்த விரோதமும் இல்லை. ஒரு வேளை நீங்கள் முரண்டு பிடித்தால் ராணுவத்தை செலுத்தவேண்டிவரும்.

வேறு வழி தெரியவில்லை ஒஸ்ரிய சான்சிலருக்கு. தன் காபினெட் அமைச்சர்களோடு சேர்ந்து கும்பலாக ராஜினாமா செய்தார். Seyss-Inquart எந்த விதமான இடைஞ்சலும் இல்லாமல் அரசாங்கத்தைக் கைப்பற்றினார். மார்ச் 1938 ல் அவர் ஜேர்மன் ராணுவத்தை அரச மரியாதையுடன் வரவேற்றார். மார்ச் 15 ம் திகதி ஹிட்லர் பெரும் ஆரவாரத்துக்கிடையே வியன்னாவில் நுழைந்தார். வீதிகளில் ஓஸ்ரிய மக்கள் திரண்டு வந்து ஹிட்லரை வாழ்த்தி ஆரவாரம் செய்தனர். தனக்கு இத்தனை பெரிய ஆதரவு கிடைக்கும் என்று ஹிட்லரே எதிர்பார்த்திருக்கவில்லை

ஒஸ்ரியா, ஜேர்மனியுடன் ஒட்டிக்கொண்டது. இந்த இணைப்பின் Anschluss ன் பின்னர் Schluschnigg சிறைப்பிடிக்கப்படுகிறார். ஒஸ்ரிய யூதர்கள் தேடிப்பிடித்து சிறையில் அடைக்கபட்டனர். தாக்கபட்டனர். யூதர்கள் தங்கள் உரிமைகள் அனைத்தையும் அந்த கணமே இழந்தனர். கை, கால்களில் விலங்கு பூட்டி யூதர்கள் தெருகளில் இழுத்துச் செல்லப்பட்டதை நாசிகளும் ஒஸ்ரியப் பிரஜைகளும் பார்த்துக் கொண்டு நின்றனர்.

முசோலினி சும்மா இருந்தார். பிரிட்டனும் பிரான்ஸும் வழக்கம் போல் எதிர்க்குரல் எழுப்பின. இது அநீதி, ஒஸ்ரியாவின் இறையாண்மை பாதிக்கபட்டுவிட்டது. ஹிட்லர் ஒப்பந்தத்தை மீறுகிறார் என்று தொண்டு கிழிய இரு நாடுகளும் கத்தின. பிறகு வழக்கம் போல அடங்கிவிட்டன.

large.anschluss-1-638.jpg.39d90e8bbbc9169486b965741ada38e2.jpg

செக்கோஸ்லாவாக்கியா மீது குறி 

ஹிட்லரின் அடுத்த குறி செக்கோஸ்லாவாக்கியா என்று அனைவருக்கும் தெரிந்திருந்தது. ஓஸ்ரியாவை சுருட்டிக்  கொண்டவர் அடுத்து இங்கே தான் வரவேண்டும். ஏப்ரல் 1938 ல் இருந்தே ஹிட்லர் போர்த்திட்டங்கள் தீட்ட ஆரம்பித்திருந்தார்.. ஒஸ்ரியா ஜேர்மனியுடன் ஒட்டிக்கொண்ட மகிழ்ச்சியில் இருந்தார் அவர். ஒரு வெற்றி இன்னொரு வெற்றிக்குத்தான் இட்டுச்செல்லும். சென்றாக வேண்டும். எந்தவொரு திட்டமும் தோல்வியடையக்கூடாது.. ஹிட்லருக்கு. அல்லது தோல்வியடையும் எந்த திட்டத்தையும் தீட்டக்கூடாது. ஒஸ்ரியா வேண்டும் என்றால் அது வந்தாக வேண்டும். செக்கோஸ்லாவியா வேண்டும் என்றால் அது கிடைத்தாக வேண்டும்.

மே மாத இறுதியில் ராணுவத்திற்கு ஹிட்லர் உத்தரவிட்டார். செக்கோஸ்லாவாக்கியா என்ற பெயரில் இனி ஒரு நாடு உலக வரைப்படத்தில் இருக்கக்கூடாது. இந்த வெறிக்கு காரணம் அவருக்கு கிடைத்த உளவுத்தகவல்கள். ஓஸ்ரியாவைப் போல் செக் அடிபணியாது. காரணங்கள் எனக்கு வேண்டாம் என்றார் ஹிட்லர் சிடுசிடுப்புடன். எனக்கு வேண்டியது செக்கோஸ்லாவாக்கியா மட்டுமே. மேற்குலக நாடுகளுடன் செக் நல்லுறவு கொண்டிருப்பது ஹிட்லருக்கு பிடிக்கவில்லை. குறிப்பாக, லீக் ஒஃப் நேஷனஸுடன் கொண்டிருந்த உறவு சுத்தமாக பிடிக்கவில்லை.

செக்கோஸ்லாவாக்கியாவில் அப்போது 7.1 மில்லியன் செக் மக்களும் 3.3 மில்லியன் ஜேர்மானியர்களும், 2.6 மில்லியன் ஸ்லாவாக்கியர்களும், 720.00 ஹங்கேரியர்களும், ஒரு லட்சம் போலந்து மக்களும் பிற ரோமானியர்களும் யூகோஸ்லாவியர்களும் ருதேனியர்களும் இருந்தனர். ஹிட்லர் குறிப்பாக கவனித்தது 3.3 மில்லியன் ஜேர்மனியர்களை. சூடெடன்லாந்து (Sudetenland) ஜேர்மனியர்களை.  ஜேர்மனியையும் செக்கை இணைத்துக்கொள்ள இந்த ஒரு காரணம் போதாதா? செக் பெரும்பான்மை மக்கள் வசிக்கும் ஒரிடத்தில் ஜேர்மனியர்களால் எப்படி சுதந்திரமாக வாழ முடியும்.?

1930 களில் செக்கோஸ்லாவாக்கியா பொருளாதார சிக்கலில் சிக்கித்தவிக்க ஆரம்பித்தது. அதுவரை ஒன்றிணைந்து வாழ்ந்து வந்த கதம்ப மக்கள் நெருக்கத்திற்கு உள்ளானார்கள். ஸ்லாவாக்கியர்களும் ஜேர்மனியர்களும் செக் மக்கள் மீது குற்றம் சாட்டினர். எங்கள் வாழ்க்கை நிலை தேய்ந்து போனதற்கு காரணம் பெரும்பான்மையினரான செக் இனம் தான். எங்களுக்கு இங்கே போதுமான சுதந்திரம் இல்லை. வேலை வாய்ப்புக்கள் இல்லை. சமத்துவமாக நாங்கள் நடத்தப்படுவதில்லை. ஹிட்லர் காத்திருந்தது இதற்காக தான். எனதருமை ஜேர்மானியர்களே, கவலை வேண்டாம். நான் இருக்கும் போது உங்களுக்கு என்ன கவலை_

சுண்டைக்காய் தேசம் தான் என்றாலும் அதிலும் ஒரு சிக்கல் இருந்தது. செக், சோவியத்துக்கு இணக்கமான நாடு. பிரான்ஸுடன் ஒப்பந்தம். போட்டுக்கொண்டுள்ள நாடு. ஆக்கிரமிப்பு என்று ஆரம்பித்தால், சோவியத்தும் பிரான்ஸும் மட்டுமல்ல, பிரிட்டனும் கூட்டாக வந்து எதிர்க்கும். ஹிட்லருக்கும் இது தெரியும். ஆனால் அவர் பெரிதாக கவலைப்படவில்லை.

ஹிட்லர் கவலைப்படவில்லை என்றாலும் அவர் ராணுவத்தில் உள்ள சில முக்கிய தலைகள் கவலைப்பட்டன. பிரான்ஸை பகைத்துக் கொண்டு எதற்காக இந்த ஹிட்லர் செக்கை ஆக்கிரமிக்க விரும்புகிறார்? இது வீண் வேலை அல்லவா? இங்கிருக்கும் ஜேர்மானியர்களுக்காக மாத்திரம் கவலைப்பட்டால் போதாதா? சூடடென்லாந்து எக்கேடு கெட்டால் நமக்கென்ன? எதிர்ப்பு தெரிவுக்கும் வகையில் ராணுவ தலைவராக இருந்த கேர்ணல் லுட்விக் பெக் ஓகஸ்ட் 1938 ல் தன் பதவியை ராஜினாமா செய்தார். அவர் இடத்திற்கு, ஜெனரர் ஹால்டர் என்பவர் நியமிக்கப்ட்டார். அவருகும் ஹிட்லரின் திட்டத்தில் உடன்பாடில்லை. கல்லானாலும் ஹிட்லர் என்று இருந்துவிட வேண்டியதுதானே?

குழம்பித் தவித்த ஹால்டரைத் தொடர்பு கொண்டார் லுட்விக்பெக். இருவரும் பேசினார்கள். ஒரு கட்டத்தில், இருவரும் இணைந்து சுவார்ஸியமான ஒரு திட்டத்தை வகுத்தார்கள். நாம் ஏன் ஹிட்லரை தூக்கியெறியக்கூடாது? திட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் பிரிட்டன் பிரதமர் நெவில் சாம்பர்லைனைத் (Neville Chamberline) தொடர்பு கொண்டனர். ஹிட்லரை கவிழ்க்க எங்களுக்கு உதவுவீர்களா? சாம்பர்லைன் சிரித்துக்கொண்டார். ஹிட்லரையாவது கவிழ்ப்பதாவது?

மூனிச் உடன்படிக்கை  - Munich Agreement

சாம்பர்லைன் வேறு திட்டம் வைத்திருந்தார். செப்ரெம்பர் 15 ம் திகதி விமானம் மூலம் ஜேர்மனி வந்து ஹிட்லரைச் சந்தித்தார். பேசினார். ஹிட்லர் உங்களுக்கு சூடெடன்லாந்து தானே வேண்டும். அது உங்களுடையது. போர் வேண்டாம். பிரான்ஸ் உங்கள் மீது கை வைக்காமல் நான் பார்த்துக் கொள்ளுகிறேன். போதுமா? ஆனால், ஹிட்லருக்கு ஏனோ திருப்தி ஏற்படவில்லை. ஜேர்மனியில் கவலை அதிகரிக்க ஆரம்பித்திருந்தது. ஹிட்லர் பிரான்ஸையும் பிரிட்டனையும் சீண்டுகிறார். விரைவில் அவர்கள் நம்மைத் தாக்கப்போகிறார்கள் என்னும் செய்தி பரவ ஆரம்பித்திருந்தது. சரி, ஒப்பந்தம் மூலமாகவே முடித்துக் கொண்டுவிடலாம்., செக்கை இப்போதைக்கு விட்டுவிடலாம் என்று முடிவு செய்தார் ஹிட்லர். அமைதி உடன்படிக்கையை உருவாக்கும் பணியை தன் நண்பர் முசோலினியிடம் வழங்கினார்.

செப்ரெம்பர் 29, 1938 ல் மூனிச் நகரில் (München) கூடினார்கள். ஹிட்லர், முசோலினி, சாம்பர்லைன் மற்றும் பிரான்ஸ் பிரதமர் டிலாடியர் (Edouard Daladier). எல்லாம் தீர்ந்தது என்னும் நம்பிக்கையில் பிரிந்தார்கள். சாம்பர்லைன், பிரிட்டன் வந்த இறங்கியதுமே தன் கையில் இருந்த ஒப்பந்தத்தை உயரே தூக்கிப் பிடித்து அசைத்துக் காட்டினார். பார்த்தீர்களா? ஹிட்லருக்கு போய் பயப்பட்டுக்கொண்டிருந்தீர்களே!  கையெழுத்து போட்டிருக்கிறார் பாருங்கள். இந்தப் பிரச்சனை மட்டுமல்ல, இனி ஐரோப்பாவில் அவர் மூலமாக எந்த பிரச்சனை வந்தாலும் உட்கார்ந்து பேசி முடிவு கட்டிவிடலாம். மோதல், போர் எதுவும் இனி இங்கே இருக்காது. திருப்திதானே?

large.1512960620_MunichAgreement.jpg.aab90e647b4c282d9e9affd551fcba07.jpg

ஆனால் பின்னர் நடந்த‍து வேறு. சம்பர்லைன் எதிர்பாரத்தபடி ஹிட்லர் திருப்திப்படவில்லை. அமைதியாக  இருக்கவில்லை.

திரும்பவும் ஆரம்பித்தார். மார்ச் 1939 ல் செக் அதிபரை ஹச்சா ( Emil Hacha) என்பவரை அழைத்து நச்சரிக்க ஆர்ம்பித்தார். சூடெடன்லாந்து எங்களுடையது தான். மிச்சமிருப்பதையும் அப்படியே கொடுத்துவிட்டால், நீங்கள் நிம்மதியாக இருக்கலாம். செக் அடிபணிய மறுத்தது. மார் 15 1939 அன்று செக்கோஸ்லாவாக்கியாவில் தலைநகரம் பிராக் (Prag) கைப்பற்றப்பட்டது.

ஹிட்லரின் வாழ்க்கையில் இது மிக முக்கிமான கட்டம். எதுவும் செய்யலாம், தட்டிக்கேட்க யாருமில்லை என்று அவர் திருப்த்தியடைந்தது அப்போது தான். செக்கோஸ்லாவாக்கியாவை ஹிட்லர் ஆக்கிரமித்தபோது அமைதியாக இருந்ததன் மூலம் ஹிட்லரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார் சாம்பர்லைன்.  அதெப்படி நீ ஒப்பந்தத்தை மீறலாம் என்று அவர் மிரட்டவில்லை. மீறினால் படை கொண்டு வருவேன் என்று மிரட்டவில்லை.

பத்து ஆண்டுகளுக்கு முன்னால் எதையெல்லாம் ஜேர்மனிக்கு பிரிட்டன் மறுத்ததோ அனைத்தையும் பிரிட்டனே இப்போது வழங்கியது. ரைன்லாந்தை ராணுவமயமாக்குகுதல், ஆயுதங்கள் தருவித்தல் போன்ற விடயங்களில் பிரிட்டன் அமைதி காத்தது. அங்காங்கே வதை முகாம்களை அமைத்து யூதர்களை கொல்லுதலும் போது அது பற்றி அறிந்திருந்தும் அது உள்நாட்டு பிரச்சனை என்று சமாதானம் சொல்லி அமைதியாக இருந்தது.

சூட்டன்லாந்து என்று முழுவதுமாக உச்சரித்து முடிப்பதற்குள் பிரிட்டன் அளித்துவிட்டது. அடிபணிய மாட்டோம் முடிந்தவரை எதிர்க்கப்போகிறோம் என்று செக் உறுதி பூண்ட போது பிரான்ஸும் பிரிட்டனும் செக்கை மிரட்டியது. அநாவசியாமாக எதிர்ப்பு காட்டி செத்துப்போகாதீர்கள். செக் பிரதேசங்களை ஜேர்மனி கைப்பற்றுவதற்கு சில வாரங்களுக்கு முன்பே லண்டன் தொழிலதிபர்களும் ஜேர்மன் தொழிலதிபர்களும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு விட்டார்கள். செக்கில் தொழிற்சாலைகளை நிர்மாணிக்கவும் புனரமைக்கவும் செக்கை விட்டுத்தர மட்டுமல்ல, ஐரோப்பாவின் மிகப் பிரபல்யமான ஆயுதத் தொழிற்சாலையான ஸ்கொடாவை (Skoda) ஜேர்மனிக்கு அள்ளிக்கொடுக்கவும் சாம்பர்லைனும் டலாயரும் தயங்கவில்லை.

ஒரே காரணம் சோவியத் எதிர்ப்பு. சோவியத்யூனியனை எதிர்த்து அழிக்க ஹிட்லரை விட அடாவடியான வேறு ஆள் கிடைப்பார்களா?

சோவியத் கோரிக்கைபிரிட்டனின் அலட்சியம்

பிரிட்டனையும் பிரான்ஸையும் எரிச்சலடையச் செய்யும் வகையில், செக் ஆக்கிரமிப்பிலும் குறுக்கிட்டது சோவியத்யூனியன். செக் நிலப்பரப்புகளை ஜேர்மனி ஆக்கிரமித்தது செல்லாது. இது அத்துமீறல் என்று கண்டனம் செய்தது சோவியத். உடனடியாக பிரிட்டனை தொடர்பு கொண்ட சோவியத், ஹிட்லரை தட்டிவைக்க ஒரு அவசர மகாநாடு கூட்டவேண்டும் என்று கேட்டுக்கொண்டது. பிரிட்டன் பிரான்ஸ் , போலந்து, ரூமேனிய, துருக்கி, சோவியத் எல்லோரும் சேர்ந்து  ஒரு முடிவுக்கு வரவேண்டும். ஹிட்லர் அடுத்தடுத்து கெடுதல் செய்யாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும். ஜேர்மனியின் அத்துமீறல் ஒரு முடிவுக்கு கொண்டுவரவேண்டும்.

சாம்பர்லைன் மறுத்து விட்டார். இப்போது என்ன அவசரம். ஹிட்லரால் பெரிய அபாயம் வரும் என்று எனக்குத் தோன்றவில்லை. சாம்பர்லைனுக்கும் டலாடியருக்கும் தான் அப்படித்தோன்றவில்லையே தவிர பிரிட்டன், பிரான்ஸ் மக்களுக்கு ஹிட்லரைப் பற்றி தெரிந்திருந்தது. ஹிட்லரை இப்போதே அடக்கிவிட வேண்டும் என்னும் சோவியத்தின் குரலை அவர்கள் ஆமோதித்தனர். சோவியத்துடன் இணைந்து போரிடுவது அமைதியைக் கொண்டுவரும் என்றார் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் லோயிட் ஜோர்ஜ்.( Lloyd George)  பிரான்ஸின் முன்னாள் விமான மார்ஷல், பியரி காட் சோவியத்தை ஆதரித்தார். ஜனநாயக நாடுகளுக்கு சோவியத்தின் கூட்டு நன்மையே கொண்டு வரும் என்றார் அவர். நியூயோர்க் ஹெரால்ட் ட்ரிபியூன் (மே 4, 1939) வெளியிட்ட செய்தியின் படி 98 சதவீத பிரிட்டிஷ் வாக்காளர்கள் சோவியத்தின் அழைப்பை ஏற்று, சோவியத்துடன் இணைந்து போரிட விருப்பம் தெரிவித்தார்கள்.

சோவியத் பல்வேறு அழைப்புக்களை பிரிட்டனுக்கும் பிரான்ஸிற்கும் விடுத்தது. மூவரும் இணைவோம். நாசிகளுக்கு எதிராக போராடுவோம். ஐரோப்பாவைக் காப்போம். ஒவ்வொரு முறை அழைப்பு வரும் போதும் அதை ஒத்திவைத்தார் சாம்பர்லைன். பார்க்கிறேன் என்றார். பரிசீலிக்கிறேன் என்றார். மாறாக ஹிட்லருடன் கூட்டுச் சேர்வதில் அவர் மேலதிக ஆர்வம் காட்டினார். ஹிட்லருடன் ஒப்பந்தம் போட்டுக் கொள்வதில், ஹிட்லரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதில். ஹிட்லரிடம் இருந்து அமைதியைக் கேட்டுப் பெறுவதில். ஹிட்லரின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதில்.

கன்சர்வேடிவ் கட்சியில் இருந்து சாம்பர்லைனுக்கு எதிர்ப்புகள் வலுத்தன. மே 7 ம் திகதி ஹவுஸ் ஒஃவ் காமன்ஸில் உரையாற்றிய சேர்ச்சில், சோவியத்துடன் இணைவது தான் நமக்கு நல்லது என்று குறிப்பிட்டார். முடிந்தவரை எதிர்ப்பைத் துரிதப்படுத்த வேண்டும் என்று சோவியத் விரும்பியது. முடிந்தவரை தள்ளிப் போடலாம் என்று பிரிட்டன் விரும்பியது. செக் கபளீகரம் செய்யப்பட்டு பத்து வாரங்கள் கழிந்திருந்தன. அலட்டிக்கொள்ளவேயில்லை பிரிட்டன். ஆகவே பிரான்ஸும்.

இனி பிரிட்டனையும் பிரான்ஸையும் நம்பிக் கொண்டிருக்க முடியாது என்னும் முடிவுக்கு சோவியத் வந்து சேர்ந்தது. பிரிட்டன் அரசாங்கத்தின் ஒரு பிரிவு (British Parliamentary Secretary of Overseas Trade) ஜேர்மனியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கொண்டிருந்த சமயம் அது. அரை பில்லியன் அல்லது ஒரு பில்லியன் பவுண்ட் வரை அளிக்கத்தயாராக இருப்பதாக பிரிட்டன் அவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தது. பிரிட்டன் ஹிட்லரை மறைமுகமாக ஆதரித்துக் கொண்டிருக்கிறது. ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது. கண்டு கொள்ளாமல் இருக்கிறது. பிரிட்டன் மட்டுமல்ல எந்தவொரு ஐரோப்பிய நாடும் ஜேர்மனியின் செயல்களைத் தட்டிக்கேட்பதாக தெரியவில்லை.

சோவியத் அயல் விவகார கமிட்டியின் தலைவர், Anderei Zhdanov பிராவ்தா இதழில் (ஜுலை 29, 1939) தன் வருத்தத்தை வெளிப்படுத்தினார்.  பிரிட்டனுடனும் பிரான்ஸுடனும் சோவியத் மேற் கொண்டு வரும் பேச்சுவார்த்தைகளுக்கு எந்த வித உருப்படியான பலனும் கிடைக்கவில்லை. சோவியத்துடன் கூட்டுச்சேர இந்த இரு நாடுகளுக்கும் விருப்பமில்லை. ஹிட்லரைக் கண்டிக்கும் எண்ணமும் இவர்களுக்கு இல்லை.

இவ்வாறு ஐரோப்பிய நாடுகள் அரசியல் நகர்வுகளில் ஈடுபட்டிருக்க ஹிட்லர் தனது கனவை நோக்கிய அடுத்த கட்ட செயற்பாடுகளில் அமைதியாக ஈடுபட தொடங்கி இருந்தார்.  ஆம் ஹிட்லரின் அடுத்த இலக்கு போலந்து. இன்னும் ஒரு மாதத்திற்குள் தாக்கப்போகிறார். ஐரோப்பா முழுவதும் செய்தி பரவிவிட்டது. கடைசியாக ஒருமுறை பேசிப்பார்த்தது சோவியத். இப்போதும் கெட்டுப் போய்விடவில்லை. பிரிட்டனும் பிரான்ஸும் தங்கள் ராணுவக் குழுக்களை மொஸ்கோவுக்கு அனுப்பிவைத்தால் ஒன்றிணைக்கப்பட்ட திட்டம் ஒன்றை உருவாக்கமுடியும். ஹிட்லர் போலந்தை தாக்குவதை தடுத்து நிறுத்தவும் முடியும்.

இந்த முறை, சோவியத்தின் அழைப்பை உதாசீனப்படுத்த முடியவில்லை. செய்தால் எதிர்ப்புக்கள் கிளம்பக்கூடும். ஆகவே பெயருக்கு இரண்டு குழுக்களை அனுப்பி வைத்தன பிரிட்டனும் பிரான்ஸும்.  இரண்டும் ஆடி அசைந்து மொஸ்கோவுக்கு வந்து சேர்ந்தன. சோவியத் முன்வைத்த திட்டம் இதுதான். ஹிட்லர் போலந்தை தாக்கினால் ஒன்று சோவியத் துருப்புகளை அனுப்பலாம். இரண்டு, கிழக்கு ப்ரெஷ்யாவை எதிர்த்து போலந்து ஊடாக மத்திய ஜேர்மனியை எதிர்த்துச்செல்ல வேண்டும்

போலந்தை கேட்டுவிட்டு சொல்கிறோம் என்று நேரம் வாங்கிக்கொண்ட  பிரிட்டனும் பிரான்ஸும், இது சாத்தியமில்லை என்று சொல்லிவிட்டன. போலந்து கேட்கவில்லையாம். சோவியத் உதவிக்கு வருவதை போலந்து விரும்பவில்லையாம். ஹிட்லருக்கு அடிபணிந்து போ என்று செக்கை மிரட்ட முடியும். ஆனால் சோவியத்தின் உதவியை ஏற்றுக்கொள் என்று போலந்திடம் சொல்ல முடியாது.  

(தொடரும்)

நூல்  - இரண்டம் உலகப்போர்

எழுதியவர்  - மருதன்

வெளியீடு  - கிழக்கு பதிப்பகம் , மே 2009

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள்! ஒபரேஷன் யுரேனஸ் வரும் வரை பார்த்திருக்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Justin said:

தொடர்ந்து எழுதுங்கள்! ஒபரேஷன் யுரேனஸ் வரும் வரை பார்த்திருக்கிறேன்!

எழுதினாரா, பதிந்தாரா? 🤔

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

எழுதினாரா, பதிந்தாரா? 🤔

ஒரு தமிழ் புத்தகத்தில் இருப்பதை அவர் நேரம் செலவழித்து தட்டச்சு செய்து பகிர்கிறார்! அந்த பயனுள்ள முயற்சிக்கு பாராட்டு வேண்டாம், நக்கலாவது செய்யாமல் இருக்கலாமல்லவா? 

அடிப்படையான டீசன்சி கூட இல்லாமல் ஏன் இப்படியான நக்கல்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

ஒரு தமிழ் புத்தகத்தில் இருப்பதை அவர் நேரம் செலவழித்து தட்டச்சு செய்து பகிர்கிறார்! அந்த பயனுள்ள முயற்சிக்கு பாராட்டு வேண்டாம், நக்கலாவது செய்யாமல் இருக்கலாமல்லவா? 

அடிப்படையான டீசன்சி கூட இல்லாமல் ஏன் இப்படியான நக்கல்கள்? 

உங்கள் புரிதல்!! நம்மளை வைச்சு காமடி பண்ணலையே....?

நீங்கள் நக்கல் பண்ணுகிறீர்கள் போல என்று கேட்ட்டால், அப்படியே நம்ம காலை வாருறீயளே!!

அவர் தட்டச்சு செய்கிறாரா? அவரே சிரிப்பார்?

இது copy & paste தலைவா... இவ்வளவையும் தட்டச்சு செய்ய, அவருக்கு நேரம் இருக்கும் என்று நினைக்கிறீர்களா?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

உங்கள் புரிதல்!! நம்மளை வைச்சு காமடி பண்ணலையே....?

நீங்கள் நக்கல் பண்ணுகிறீர்கள் போல என்று கேட்ட்டால், அப்படியே நம்ம காலை வாருறீயளே!!

அவர் தட்டச்சு செய்கிறாரா? அவரே சிரிப்பார்?

இது copy & paste தலைவா... இவ்வளவையும் தட்டச்சு செய்ய, அவருக்கு நேரம் இருக்கும் என்று நினைக்கிறீர்களா?

ஏதோ பயனுள்ள வேலை செய்கிறாரா இல்லையா? உங்களைப் போல "காமெடி" மட்டுமே செய்து கொண்டிருக்காமல் யாழில் இப்படியான அறிவு சார் பதிவுகளும் அவசியமல்லவா? 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

ஏதோ பயனுள்ள வேலை செய்கிறாரா இல்லையா? உங்களைப் போல "காமெடி" மட்டுமே செய்து கொண்டிருக்காமல் யாழில் இப்படியான அறிவு சார் பதிவுகளும் அவசியமல்லவா? 

அவரது வேலை தவறு என்று யார் சொன்னது? சகலரும் வாசிக்கிறோம் அல்லவா.

புத்தகம் ஒன்றில் இருப்பதனை, தட்டச்சு செய்து போடுகிறார் என்று அவரை நக்கல் பண்ணுகிறீர்களே என்றுதான் சொன்னேன்.

தவறை உணர்ந்து, அப்பதிவினை திருத்துவீர்கள் என்று பார்த்தால்... இன்னும் அவரை மறைமுகமாக மட்டம் தட்டுகிறீர்கள்.

அது சரி, நான் காமடி மட்டுமே பன்னுகிறேனா?

எனது சொந்த ஆக்கங்களும் வந்தனவே இங்கே.

சரி உங்கள் பங்களிப்பு என்னவோ?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

அவரது வேலை தவறு என்று யார் சொன்னது? சகலரும் வாசிக்கிறோம் அல்லவா.

புத்தகம் ஒன்றில் இருப்பதனை, தட்டச்சு செய்து போடுகிறார் என்று அவரை நக்கல் பண்ணுகிறீர்களே என்றுதான் சொன்னேன்.

தவறை உணர்ந்து, அப்பதிவினை திருத்துவீர்கள் என்று பார்த்தால்... இன்னும் அவரை மறைமுகமாக மட்டம் தட்டுகிறீர்கள்.

அது சரி, நான் காமடி மட்டுமே பன்னுகிறேனா?

எனது சொந்த ஆக்கங்களும் வந்தனவே இங்கே.

சரி உங்கள் பங்களிப்பு என்னவோ?

என் பங்களிப்பை நீங்களே தேடலாம்! யாழில் எப்படி ஒருவரின் ஆக்கங்களைத் தேடுவது என்று தெரிந்திருந்தால்!

இந்த தொடரின் முதல் பதிவில் இருந்தே நீங்கள் அலப்பறை செய்ததை எல்லோரும் பார்த்தார்கள்! இங்கேயும் வந்து நக்கல் அடித்து விட்டு பிறகு சமாளிப்பு வேற! பயனுள்ள பதிவுகளை இடுவோரை வெறுக்க வைக்கிற வேலைகள் இவை! சிலர் திட்டமிட்டே நடத்துவது விளங்குகிறது!

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Justin said:

என் பங்களிப்பை நீங்களே தேடலாம்! யாழில் எப்படி ஒருவரின் ஆக்கங்களைத் தேடுவது என்று தெரிந்திருந்தால்!

இந்த தொடரின் முதல் பதிவில் இருந்தே நீங்கள் அலப்பறை செய்ததை எல்லோரும் பார்த்தார்கள்! இங்கேயும் வந்து நக்கல் அடித்து விட்டு பிறகு சமாளிப்பு வேற! பயனுள்ள பதிவுகளை இடுவோரை வெறுக்க வைக்கிற வேலைகள் இவை! சிலர் திட்டமிட்டே நடத்துவது விளங்குகிறது!

உங்களுக்கு, தட்டச்சு செய்வதற்கும், copy & paste பண்ணுவதக்கும் வித்தியாசமே தெரியாமல் லொள்ளு பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்.

நீங்கள் செய்வது தான் அலம்பறை. 

நாம் ஆரம்பத்தில் பேசியது ரூல்பனின் பதிவை பற்றி அல்ல. 

ஆங்கில மூலத்தில் இருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு, அதிலுள்ள சிக்கல்கள் குறித்தது.

ஒரு தவறை சுட்டிக்காடினால், அதற்கு  சப்பை கட்டிக்கொண்டே சேறு வாரி அடிக்கும் வேலையினை செய்ய முனைகிறீர்கள். உங்கள் உடன் ஆக்கபூர்வமாக ஒரு விடயம் குறித்து பேச முடியாது போல இருக்கிறதே. 

அய்யா.. சாமி... ஆளை விடுங்கோ... வேறு திரியில் காத்திரமாக உரையாட போகிறேன்... bye  

Edited by Nathamuni

  • தொடங்கியவர்

இந்த தொடரை தட்டச்சு செய்து போடுவதற்கான எனது நேரம் குறித்து இங்கு வெகுவாக கவலை தெரிவிக்கப்பட்டதை வாசித்தறிந்தேன். கவலை தெரிவித்தவர்களுக்கு நன்றி. 

எழுதி வைக்கப்பட்ட   Text  ஜ பார்த்து ஆங்கிலத்திலோ தமிழிலோ மிக விரைவாக ரைப் செய்வதற்கான பயிற்சி எனக்கு பாடசாலைக் காலத்திலேயே அளிக்கப்பட்டு விட்டதால், எனது ஓய்வுநேரத்தில் மிக விரைவாக அதை செய்வதில் எனக்கு எந்த பிரச்சனையும்  இல்லை. (இருந்தாலும் போனில் எழுதுவது மட்டும் இப்போதும் தலையிடி தான்)  

பின்னர் புறூவ் பார்ப்பதற்கும்,  தரவுகள் சரியானதா என்பதை பல்வேறு இணையங்களில் தேடி அதை உறுதிப்படுத்துவதற்கும், பொருத்தமான படங்களை தேடு எடுப்பதற்கும் சற்றே மேலதிக நேரம் தேவைப்பட்டாலும்,  அதை நான் ஆர்வத்துடன் செய்வதால் அதிலும் எனக்கு பிரச்சனை இல்லை என்பதை யாழ்கள உறவுகளுக்கும் வாசகர்களுக்கும் தெரிவித்து கொள்ளுகிறேன். 

நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

இந்த தொடரை தட்டச்சு செய்து போடுவதற்கான எனது நேரம் குறித்து இங்கு வெகுவாக கவலை தெரிவிக்கப்பட்டதை வாசித்தறிந்தேன். கவலை தெரிவித்தவர்களுக்கு நன்றி. 

அண்மையில் மோகனுடனான சந்திப்பில் தட்டச்சு செய்யாமல் பேசவே பதிவாகும் என்று சொன்னார்.இப்படியான செயலியை தரவிறக்கி முயற்சி பண்ணலாமே?

யாழிலும் யாரோ இதுபற்றி எழுதியிருந்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

இந்த தொடரை தட்டச்சு செய்து போடுவதற்கான எனது நேரம் குறித்து இங்கு வெகுவாக கவலை தெரிவிக்கப்பட்டதை வாசித்தறிந்தேன். கவலை தெரிவித்தவர்களுக்கு நன்றி. 

எழுதி வைக்கப்பட்ட   Text  ஜ பார்த்து ஆங்கிலத்திலோ தமிழிலோ மிக விரைவாக ரைப் செய்வதற்கான பயிற்சி எனக்கு பாடசாலைக் காலத்திலேயே அளிக்கப்பட்டு விட்டதால், எனது ஓய்வுநேரத்தில் மிக விரைவாக அதை செய்வதில் எனக்கு எந்த பிரச்சனையும்  இல்லை. (இருந்தாலும் போனில் எழுதுவது மட்டும் இப்போதும் தலையிடி தான்)  

பின்னர் புறூவ் பார்ப்பதற்கும்,  தரவுகள் சரியானதா என்பதை பல்வேறு இணையங்களில் தேடி அதை உறுதிப்படுத்துவதற்கும், பொருத்தமான படங்களை தேடு எடுப்பதற்கும் சற்றே மேலதிக நேரம் தேவைப்பட்டாலும்,  அதை நான் ஆர்வத்துடன் செய்வதால் அதிலும் எனக்கு பிரச்சனை இல்லை என்பதை யாழ்கள உறவுகளுக்கும் வாசகர்களுக்கும் தெரிவித்து கொள்ளுகிறேன். 

நன்றி 

மன்னிக்க வேண்டும் டுல்ப்பன்.

நீங்கள் இந்த விபரங்களை பதிவின் இறுதியாக போட்டு விடுவதால், நீங்கள் அந்த புத்தகத்தின் பக்கங்களை copy & paste செய்து போடுகிறீர்கள் என்று நினைக்க வேண்டியதாகி விட்டது.

நூல்  - இரண்டம் உலகப்போர்

எழுதியவர்  - மருதன்

வெளியீடு  - கிழக்கு பதிப்பகம் , மே 2009

உங்கள் பதிலிலிருந்து, நீங்கள் தான் இந்த ஆக்கத்தினை தயாரிக்கிறீர்கள் என்றால், எனது புரிதல் தவறு. அந்த புரிதலுடன் தான், ஜஸ்டினுடனுன் விவாதித்தேன். ஜஸ்டினும் மன்னிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் நேரத்துக்கும் பதிவுக்கும் நன்றி. உங்கள் பெயரையே போடலாமே என்பது எனது சிறு ஆலோசனை. 

 (அல்லது மருதன், உங்கள் புனை பெயரோ?) 

தொடர்ந்து பதியுங்கள், நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா உறவுகளும் இப்ப ரென்சனாத்தான் இருக்கினம்.தனிமைப்படுத்தலால் வந்த வினையாக இருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.