Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்ட 174 தமிழர்களுக்கு என்ன நடந்தது?

Featured Replies

கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்ட 174 தமிழர்களுக்கு என்ன நடந்தது? - இரா.துரைரத்தினம்

கிழக்கு மாகாணத்தில் 1980களின் பின்னர் தமிழ் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தது. 1990ஆம் ஆண்டு யூன் மாதத்தின் பின்னர் தமிழ் மக்கள் மீதான படுகொலை உச்சக்கட்டதை அடைந்தது. 1990ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமில் 158 பொதுமக்களும் செப்டம்பர் 23ஆம் திகதி 16பொதுமக்களும் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

1990ஆம் ஆண்டு கிழக்கில் நடந்த படுகொலைகளை நினைவு கூருமுகமாக செப்டம்பர் 5ஆம் திகதியை தமிழ் இன உயிர்கொலை நாளாக மட்டக்களப்பு பொது அமைப்புக்களான கிழக்கு பல்கலைக்கழக சமூகம், மற்றும் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம், அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம் மட்டக்களப்பு தமிழர் மறுமலர்ச்சி கழகம் ஆகியன பிரகடனப்படுத்தி இருந்தன.

1990ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் மீது சிறிலங்கா இராணுவத்தினரும், இராணுவத்தினருடன் இணைந்து செயல்பட்ட புளொட் போன்ற ஒட்டுக்குழுக்களும், ஜிகாத் முஸ்லீம் பயங்கரவாத குழுக்களும் வகைதொகை இன்றி படுகொலைகளை நடத்தி வந்தன. கிழக்கு மாகாணத்தில் நடந்த படுகொலைகளின் பெருந்தொiயானவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களில் கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாம் படுகொலையும் ஒன்றாகும். 

1990ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமிலிருந்து 158இளைஞர்களும், செப்டம்பர் 23ஆம் திகதி 16 இளைஞர்களும் சிறிலங்கா இராணுவத்தினரால் கடத்திச்செல்லப்பட்டனர். இராணுவத்தினரால் கடத்திச்செல்லப்பட்ட இவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பபடுகின்ற போதிலும் இவர்களின் சடலங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் இவர்கள் காணாமல் போனவர்களாகவே கருதப்படுகின்றனர். 

றிசாட் டயஸ் அல்லது கப்டன் முனாஸ் என்று அழைக்கப்படும் இராணுவ புலனாய்வுப்பிரிவு அதிகாரி தலைமையில் கப்டன் பாலித, கப்டன் குணரத்னா, புளொட் மோகன், முஸ்லீம் ஜிகாத் குழுவைச்சேர்ந்த மேஜர் மஜீத் உட்பட இராணுவ குழு ஒன்றே இம்மனித கடத்தலை செய்ததாக நீதியரசர் பாலகிட்ணர் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1990ல் விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் போர் நிறுத்தம் முறிவடைந்து யுத்தம் ஆரம்பமானதை தொடர்ந்து மட்டக்களப்பிலிருந்து வாளைச்சேனை வரையான மக்கள் பாதுகாப்பு தேடி கிழக்கு பல்கலைக்கழகத்தில் தஞ்சம் அடைந்திருந்தனர். இக்கடத்தல் சம்பவம் நடைபெற்ற வேளையில் அம்முகாமில் 55ஆயிரம் பொதுமக்கள் தங்கியிருந்தனர். சம்பவ தினம் காலை 6மணிக்கு முன்னரே அகதி முகம் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டது.  

சம்பவ தினம் கொம்மாதுறை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி கப்டன் களுவாராச்சி தலைமையிலான இராணுவத்தினருடன் மட்டக்களப்பு நகரில் இருந்து வந்த இராணுவ புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளும் அங்கு வந்திருந்தனர்.  கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமுக்கு பொறுப்பாக பேராசிரியர் மனோ சபாரத்தினம், பேராசிரியர் த.ஜெயசிங்கம், கலாநிதி வேலுப்போடி சிவலிங்கம் ஆகியோர் இருந்தனர். அகதி முகாமுக்குள் நுழைந்த இவர்கள் தம்மை யார் என அறிமுப்படுத்தி கொண்டதாக அகதி முகாமுக்கு பொறுப்பாக இருந்தவர்களில் ஒருவரான பேராசிரியர் த.ஜெயசிங்கம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கும் போது தெரிவித்தார்.

காணாமல் போனோர் பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதியரசர் கே.பாலகிட்ணர் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் 83பேர் சாட்சியமளித்தனர். அங்கு வந்த இராணுவ அதிகாரிகள் தாம்மை யார் என அறிமுகப்படுத்திக் கொண்டனர் என பேராசிரியர் ஜெயசிங்கம் தெரிவித்தார்.  

இவர்களுடன் முகத்தை மூடிக்கட்டிய தலையாட்டிகள் என கூறப்படும் 5பேர் இராணுவ உடையுடன் கதிரையில் அமர்த்தப்பட்டிருந்தனர். அகதி முகாமில் இருந்த அனைவரும் மைதானத்திற்கு வருமாறு அழைக்கப்பட்டனர். பெண்கள் தனியாகவும் ஆண்கள் தனியாகவும் பிரிந்து நிற்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். ஆண்கள் அனைவரும் வயது அடிப்படையில் மூன்று வரிசையாக நிறுத்தப்பட்டனர். 

12வயதிருந்து 25வயதுடையவர்கள் முதலாவது வரிசையிலும் 26வயதிலிருந்து 40வயதுவரையானவர்கள் இரண்டாவது வரிசையிலும் 40வயதிற்கு மேற்பட்டவர்கள் மூன்றாவது வரிசையிலும் நிறுத்தப்பட்டனர். இவர்கள் முகத்தை மூடிக்கட்டிய தலையாட்டிகளின் முன்னால் ஒவ்வொருவராக நிறுத்தப்பட்டனர். முகத்தை மூடி கட்டியிருந்தவர்கள் தலையை ஆட்டினால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அதேபோன்று தலையாட்டிகளின் பின்னால் நின்ற முஸ்லீம்களும் சிலரை காட்டினர். 

இவ்வாறு தலையாட்டிகளால் அல்லது முஸ்லீம்களால் காட்டப்பட்ட 158பேர் கைது செய்யப்பட்டு அங்கு ஏற்கனவே தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்ஸில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டனர். பஸ்ஸில் கொண்டு செல்லப்பட்டவர்கள் மட்டக்களப்பு மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் வைத்து படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.  

இது தொடர்பாக மட்டக்களப்பு சமாதான குழு பாதுகாப்பு அமைச்சு உட்பட பல மட்டங்களில் முறையிட்ட போது அப்போது பாதுகாப்பு செயலாளராக இருந்த எயர்மார்சல் பெர்னாண்டோ அனுப்பிவைத்த பதிலில் செப்டம்பர் 5ஆம் திகதி 32பேரை மட்டும் விசாரணைக்காக கைது செய்யததாகவும் அவர்கள் அனைவரும் 24மணிநேரத்திற்குள் விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள் என தெரிவித்திருந்தார். 

இச்சம்பவம் நடந்து மூன்று நாட்களின் பின் செப்டம்பர் 8ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமுக்கு அப்போது இராணுவ தளபதியாக இருந்த ஹரி சில்வா சென்றிருந்தார். அப்போது அகதி முகாமுக்கு பொறுப்பாக இருந்த பேராசிரியர் மனோ சபாரத்தினம், பேராசிரியர் ஜெயசிங்கம் ஆகியோர் இராணுவத்தினர் கைது செய்து கொண்டு சென்ற 158பேரின் நிலமை பற்றி கேட்டனர். அதற்கு பதிலளித்த இராணுவத்தளபதி 158பேரும் குற்றவாளிகள் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு விட்டது. அவர்கள் பற்றி இனி பேசக்கூடாது என எச்சரிக்கும் தொனியில் தெரிவித்தார். 

இதன் பின்னர் செப்டம்பர் 23ஆம் திகதியும் அங்கு வந்த இராணுவத்தினர் மேலும் 16 இளைஞர்களை கைது செய்து கொண்டு சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதியரசர் கி.பாலகிட்ணர் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில் அகதி முகாமுக்கு பொறுப்பாக இருந்தவர்கள் உட்பட நேரில் கண்ட சாட்சிகள் 83பேர் சாட்சியமளித்தனர். அந்த அகதி முகாமில் இருந்த 45ஆயிரம் மக்கள் முன்னிலையிலேயே இந்த 158பேரும் இராணுவத்தினரால் கொண்டு செல்லப்பட்டனர்.  

இந்த ஆணைக்குழு அறிக்கையில் பொதுமக்கள் வழங்கிய சாட்சிகளின் அடிப்படையில் இராணுவத்தினரே 5ஆம் திகதி 158பேரையும், 23ஆம் திகதி 16பேரையும் கைது செய்து கொண்டு சென்றனர் என தெரிவித்திருந்தது. இந்த கடத்தலில் ஈடுபட்ட இராணுவத்தினரும் புளொட் மற்றும் முஸ்லீம் ஜிகாத் குழுவும் பதில் கூற வேண்டும் என்றும் கடத்தப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மை நிலை அறியப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமை நிர்வாகித்து வந்த பேராசிரியர் மனோ சபாரத்தினம், கலாநிதி சிவலிங்கம், கலாநிதி ஜெயசிங்கம் ஆகியோரில் இன்று கலாநிதி ஜெயசிங்கம் மட்டுமே வாழும் சாட்சியாக உள்ளார். தற்போது கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக இருந்து ஓய்வு பெற்றிருக்கும் ஜெயசிங்கம் இச்சம்பவம் பற்றி 1996ஆம் ஆண்டு பாலகிட்ணர் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவிலும் 2004ஆம் ஆண்டு காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிலும் சாட்சியமளித்தார். 

காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். காணாமல் போனவர்கள் அங்கிருக்கிறார்கள், இங்கிருக்கிறார்கள் என அலைந்து திரியும் அவலமே தொடர்கிறது. உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என பேராசிரியர் ஜெயசிங்கம் தெரிவித்தார். கிழக்கு பல்கலைக்கழக படுகொலை நடந்த செப்டம்பர் 5ஆம் திகதியை தமிழின படுகொலை நாள் என பிரகடனப்படுத்தி வருடாவருடம் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. 

கிழக்கு பல்கலைக்கழக சம்பவம் நடந்து சரியாக நான்கு தினங்களின் பின்னர் 1990 செப்டம்பர் 9ஆம் திகதி மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் மிகப்பெரிய இனப்படுகொலை நடைபெற்றது.

https://www.tamilwin.com/articles/01/255211?ref=rightsidebar-article

 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Iraivan said:

அதேபோன்று தலையாட்டிகளின் பின்னால் நின்ற முஸ்லீம்களும் சிலரை காட்டினர். 

முஸ்லீம்களும்  சிங்களவர்களும் நடாத்திய கிழக்கின் தமிழ் இனஅழிப்பு .யாழில் முஸ்லிம்களை அனுப்பியதுக்கு  குத்தி முறியும் கோடாலி காம்புகள் இந்த சம்பவத்தை இலகுவாக மறந்து விடுவினம் .

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

குத்தி முறியும் கோடாலி காம்புகள் இந்த சம்பவத்தை இலகுவாக மறந்து விடுவினம் .

அவர்களுக்கு தெரியாததல்ல, மறக்கவோ, மறைக்கவோ கூடியதுமல்ல. எல்லாம் தன் சார்ந்த சுயநலம்  அவர்களை அப்படி நடிக்கவும், எண்ணவும் தூண்டுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

main-qimg-f313791b43012d07b5200be45647b323

1990 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இந்தியப்படைகள் தமிழர் தாயகத்தை விட்டு வெளியேறிய நிலையில் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையேயான சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஒரு தேக்க நிலைக்கு வந்திருந்தன. ஆங்காங்கே இரு தரப்பினருக்கும் மோதல்கள் வெடிக்க ஆரம்பித்திருந்தன.

இத்தருணத்தில், மட்டக்களப்பு நகரில் தையல் வேலை செய்துவந்த முஸ்லீம் ஒருவரை ராணுவம் தாக்கியதற்காக புலிகள் ராணுவத்திடம் நீதி கேட்கப் போனவிடத்து, அது ஒரு மோதலாக வெடித்தது. சிறிய முறுகலாக ஆரம்பித்த இந்த மோதல் முழு மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் பரவி ராணுவம் நிலைகொண்டிருந்த அனைத்து முகாம்களைச் சுற்றியும் முழுமையான யுத்தமாக மாறியது. இந்த மோதல்களைத் தொடர்ந்து வட மாகாணத்தின் வன்னிப்பகுதியிலும், யாழ்க்குடாநாட்டிலும் பல ராணுவ முகாம்கள் புலிகளால் கைப்பற்றப்பட்டு வந்தன. முகாமினுள் புலிகளின் முற்றுகைக்குள் அகப்பட்டு சிறிது சிறிதாக தோற்பதைக் காட்டிலும், முகாமை விட்டு வெளியேறி சண்டையிடுவதென்று ராணுவம் முடிவெடுத்தது. இதன் விளைவாக கிழக்கு மாகாணத்தின் வாழைச்சேனை பகுதியில் நிலைகொண்டிருந்த ராணுவம் முகாமை விட்டு வெளியேறி சுற்றியிருந்த புலிகளின் நிலைகளை நோக்கி முன்னேறத் தொடங்கியது.

வாழைச்சேனை ராணுவ முகாமினைச் சுற்றியிருந்த வந்தாறுமூலை, சுங்கங்கேணி, கறுவாக்கேணி ஆகிய தமிழர் குடியிருப்புக்கள் நோக்கி முன்னேறிய ராணுவம் அங்கிருந்த பொதுமக்களை வேட்டையாடியபடியே "புலிகளை அழிக்கும்" நடவடிக்கையினைத் தொடங்கியது. வீடுகளிலும், பொதுவிடங்களிலும் பயத்துடன் ஒளிந்திருந்த பலபொதுமக்களைக் கட்டியிழுத்துவந்த ராணுவம் தெருக்களில் நிறுத்திவைத்துச் சுட்டுக்கொன்றது. இவ்வாறான ஒரு படுகொலையில் ஓரிடத்தில் மட்டுமே 48 இளைஞர்களைச் சுட்டுக் கொன்று தனது எக்ஸவேட்டர்கள் மூலம் அங்கிருந்த தனியார் காணியொன்றில் அவர்களைப் புதைத்து மூடியது.

ராணுவம் மக்களைக் கொன்று கொண்டு முன்னேறிவரும் செய்தி ஊருக்குள் தீயெனப் பரவவே, வாழைச்சேனை நகர்ப்பகுதி, வந்தாறுமூலை, சுங்கங்கேனி, கறுவாக்கேணி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 55,000 பொதுமக்கள் வந்தாறுமூலையில் அமைந்திருந்த பாரிய பல்கலைக் கழகத்தினுள் தஞ்சம் புகுந்துகொண்டனர். இயல்பாக இயங்கிக்கொண்டிருந்த வந்தாறுமூலைப் பல்கலைக் கழகம் ஒரு சில நாட்களிலேயே பாரிய அகதிகள் முகாமாக மாறியது. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் அகதிகளுக்கு உதவியதோடு, பல்கலைக்கழக நுழைவாயிலில் பாரிய வெண்ணிறக் கொடியொன்றினையும் பறக்கவிட்டிருந்தனர். பல்கலைக் கழகம் அகதிகளால் நிரம்பி வழியும் நிலையினை சிங்கள அரசிற்கும் நன்கு தெரியப்படுத்தியிருந்தனர்.

பல்கலைக்கழகத்தினைச் சுற்றியிருந்த கிராமங்களில் ராணுவம் தனது வேட்டையினை நடத்திக்கொண்டு வந்தது. அகதிகள் முகாமிற்குள் புதிதாக வந்து சேர்ந்தவர்கள் அவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நடந்த அக்கிரமங்களை அங்கிருந்தவர்களிடம் பகிர்ந்துகொள்ள, மக்களிடையே பாரிய அச்சம் நிலவியது. பல்கலைக் கழகம் பாதுகப்பானது என்றும், அரசுக்கு அகதிகள் பற்றி அறிவிக்கப்பட்டதனாலும் ராணுவம் பல்கலைக் கழகத்தினுள் நுழையாது என்று மக்கள் முழுமையாக நம்பியிருந்தனர்.

ஆனால், மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு மாறாக செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி, பல்கலைக் கழகத்தினுள் புலிகள் ஒளிந்திருக்கிறார்கள், ஆகவே அதனை சோதனியிடவேண்டும் என்று கூறிக்கொண்டு கொம்மாதுறை ராணுவ முகாமிலிருந்து ராணுவம் அந்தப் பாரிய அகதிமுகாமினுள் நுழைந்தது. இங்கே இருப்பவர்கள் உண்மையாகவே அகதிகள்தான், புலிகள் இங்கு வரவில்லை என்று பல்கலைக்கழக விரிவுரையாளர்களும், ஊர்ப் பெரியார்களும் எவ்வளவோ எடுத்துக் கூறியும் ராணுவம் அவர்களைக் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.

ராணுவத்துடன் கூடவே வந்திருந்த தமிழ் ஒட்டுக்குழுக்களான தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் முஸ்லீம் ஊர்காவல்ப் படை ஆகியோரின் உதவியுடன் அங்கிருந்த அகதிகளில் ஆண்களை வயதின் அடிப்படையில் பிரிக்கத் தொடங்கியது. 12 வயதிலிருந்து 25 வயதுவரையான ஆண்கள் ஒரு வரிசையிலும், 25 வயது முதல் 40 வரையான ஆண்கள் இரண்டாவது வரிசையிலும், 40 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மூன்றாவது வரிசையிலும் நிற்கவைக்கப்பட்டனர். இவ்வாறு வரிசையாக நிற்கவைக்கப்பட்ட ஆண்களை ராணுவச் சீருடையுடன் முகமூடியணிந்த தமிழ் ஒட்டுக்குழு உறுப்பினர்கள் முன்னாலும், முஸ்லீம் ஊர்காவல்ப்படை வீரர்கள் முன்னாலும் அணிவகுத்து வரச் செய்யப்பட்டனர். அவ்வாறு வரும்போது, முகமூடியணிந்தவர் தலையாட்டுமிடத்து அந்த தமிழ் இளைஞர் தனியே இன்னொரு வரிசையில் நிற்கவைக்கப்பட்டார். இவ்வாறு அன்றுமட்டும் 158 தமிழர்கள் ஒட்டுக்குழுக்களாலும், முஸ்லீம் ஊர்காவல்ப்படை வீரர்களாலும் தலையாட்டப்பட்டு காட்டிக்கொடுக்கப்பட்டனர்.

இவ்வாறு பிரித்தெடுக்கப்பட்ட அந்த 158 பேரையும் விசாரணைக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்று ராணுவம் கூறவும் அவர்களின் பெற்றோரும் உறவினர்களும் கதறியழுது, அவர்களை விட்டு விடும்படி மன்றாடத் தொடங்கினர். உள்நுழைந்த ராணுவ அணியின் தளபதியின் கால்களைக் கட்டிப்பிடித்து மன்றாடிய தாய்மார்களை உதறித்தள்ளிவிட்டு இரு பஸ்வண்டிகளில் அந்த 158 தமிழர்களையும் ராணுவம் ஏற்றிக்கொண்டு சென்றது.

அன்றிரவு, முகாமிலிருந்து சிறுதொலைவில் கடுமையான துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டபடியே இருந்தன. நடப்பது என்னவென்பதை ஓரளவிற்கு ஊகிக்க முடிந்தாலும், எவருக்கும் முகாமின் வெளியே சென்று நடப்பதை அறியும் துணிபு இருக்கவில்லை. கூட்டிச் செல்லப்பட்ட ஆண்களில் எவருமே திரும்பி வராததால், சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் அரச சார்பற்ற தொண்டு நிறுவங்களின் துணையுடன் சில பெற்றோர்கள் வாழைச்சேனை ராணுவ முகாமிற்குச் சென்று தமது பிள்ளைகள் பற்றி விசாரித்தபோது, அம்முகாமிலிருந்து எந்த ராணுவ அணியும் அன்று போகவில்லையென்றும், எவரையும் கைதுசெய்யவில்லையென்றும் அறிவிக்கப்பட்டது. அப்பகுதியில் ராணுவம் நிலைகொண்டிருந்த பலமுகாம்களுக்கும் சென்ற பெற்றோருக்கு திரும்பத் திரும்ப இதே பதில்தான் கொடுக்கப்பட்டது.

யுத்தம் சிறிது ஓய்ந்த நிலையில் தமது பிள்ளைகளைத் தேடி பெற்றோர்கள் அப்பகுதியெங்கும் தேடியும் எவரையுமே கண்டுபிடிக்க முடியவில்லை. இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் ஒரு சிறுவன் மட்டும் 9 நாட்களுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டான். அவனது வாக்குமூலத்திலிருந்துதான் மீது158 பேரும் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டு பாரிய புதை குழியொன்றில் புல்டோஸர்கள் கொண்டு புதைக்கப்பட்டது தெரியவந்தது.

பல்கலைக் கழக அகதி முகாமிலிருந்து இழுத்துச்செல்லப்பட்டுக் காணாமலாக்கப்பட்ட 158 பேர், பல்கலைக் கழகத்திற்கு வெளியே சுட்டுக் கொல்லப்படு புதைக்கப்பட்ட 48 அப்பாவிகள், தமது உறவுகளைத் தேடிச்சென்று காணாமல்ப் போன இன்னும் 17 பேர் என்று சுமார் 223 அப்பாவித் தமிழர்களை இரு நாட்களில் அடையாளமே இல்லாமல்ச் செய்தது சிங்கள தேரவாத பெளத்த ராணுவம். தமது பிள்ளைகள் அப்பகுதியில் எங்கோதான் புதைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிந்தும், இன்றுவரை அவர்களின் புதைகுழிகளைத் தேடிவரும் பெற்றோரினதும் உறவுகளினதும் அவலம் சொல்ல முடியாதது. இப்படுகொலை நடந்து 30 ஆண்டுகள் போனபின்னரும்கூட, உலகின் மனிதநேய அமைப்புகளிடம் தமது பிள்ளைகளை மீட்டுத்தருமாறு மன்றாடும் தாய்மார்களும் சகோதரிகளும் இருக்கிறார்கள் என்பது மிகவும் மன உளைச்சலைத் தரும் ஒரு அவலம்.

main-qimg-6f2b000ceff2d26d830f277330fe15bb

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவின் கினிமினி ரெயினிங்கின் தொடர்சியே இந்த படுகொலைகள்.

எனது தனிப்பட்ட விருப்பம் ஒன்று.... இந்த கொலைகளை நடாத்திய இராணுவ அதிகாரிகளின் இன்றைய நிலை என்ன என்று அறிய ஆவல்...

புத்தரும், அல்லாவும் அவர்களை நன்றாக வைத்திருக்கிறார்களா என தெரிந்து கொள்ள வேண்டும்.

பணம் செலவழித்து, இவர்கள் இன்றைய நிலை குறித்து தகவல் தருபவர்களுக்கு பணப்பரிசு என்று சமூக வலைதளங்களில் விளம்பரம் போட்டால் என்னவாகும்?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Nathamuni said:

பிரித்தானியாவின் கினிமினி ரெயினிங்கின் தொடர்சியே இந்த படுகொலைகள்.

எனது தனிப்பட்ட விருப்பம் ஒன்று.... இந்த கொலைகளை நடாத்திய இராணுவ அதிகாரிகளின் இன்றைய நிலை என்ன என்று அறிய ஆவல்...

புத்தரும், அல்லாவும் அவர்களை நன்றாக வைத்திருக்கிறார்களா என தெரிந்து கொள்ள வேண்டும்.

பணம் செலவழித்து, இவர்கள் இன்றைய நிலை குறித்து தகவல் தருபவர்களுக்கு பணப்பரிசு என்று சமூக வலைதளங்களில் விளம்பரம் போட்டால் என்னவாகும்?

நானும் அதையேதான் விரும்புகின்றேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.