Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பின் கதை - என்.சரவணன்

Featured Replies

  • தொடங்கியவர்

செல்வந்தர்களின் புகலிடமாகிப் போன கறுவாத் தோட்டம் (கொழும்பின் கதை - 16) - என்.சரவணன்

 
 
AVvXsEiBj9b6fhvU9Em3pnSQzNFDoF7bqGEp8rZI

இலங்கை காலனித்துவத்துக்குள் சிக்கிக்கொள்ள வழிவகுத்ததே கறுவா மீதான மேலைத்தேயர்களிடம் இருந்த அளப்பெரிய மோகம் தான். தாகம் தான்.

முதன் முதலில் போர்த்துக்கேயர் வழிதவறி இலங்கையில் கரையொதுங்கிய போது கறுவா வணிகத்தில் ஏகபோகமாக திளைத்திருந்தவர்கள் அரேபியர்கள். கொழும்புத் துறைமுகம் முக்கியத்துவம் பெற்றதும் அதனால் தான். போர்த்துகேயர் அரேபியர்களை விரட்டிவிட்டு படிப்படியாக கறுவா வணிகத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது மட்டுமன்றி “கோட்டே” அரசனுடன் கறுவா வணிகம் சம்பந்தமாக ஒப்பந்தத்தையும் ஏற்படுத்திக்கொண்டு, தமக்கு ஒரு கோட்டையை அமைத்துக்கொள்ள அனுமதியையும் பெற்றுக் கொண்டனர். அதுவே கொழும்பு என்கிற நகரம் உருவாகவும், அதுவே இலங்கையில் தலைநகராக நிலைபெறவும் காரணமாயிற்று.

AVvXsEiKe6aycQ2HJVQl1bkeJVcPOyR5spU14b4l
 

காலனித்துவ ஆட்சியாளர்கள் பிற்காலத்தில் கறுவாவை விட மேலும் பல வருமானங்களை இலங்கையில் ஏற்படுத்திக்கொண்டார்கள். இலங்கையின் வளங்களை எவ்வளவு சுரண்ட முடியுமோ அவ்வளவு சுரண்டிச் சென்றார்கள். ஆனால் இலங்கையின் கறுவாவுக்கு இன்றும் சர்வதேசிய அளவில் ஒரு பேரு மதிப்பு உண்டு.

கொழும்பில் அன்று கறுவா பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்ட இடம் தான் இன்று அப்படி ஒரு பயிர்ச்செய்கை இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் இலங்கையின் பெரும் செல்வந்தர்கள் வாழும் மையமாகவும், கட்டடங்களாகவும் காட்சியளிக்கிறது.

AVvXsEhneP707e1WLif4rJSi7QQaKryCnVXQjgfD

ஆங்கிலத்தின் சின்னமன் கார்டன் (Cinnamon Garden) என்றும் சிங்களத்தில் குறுந்து வத்த (කුරුඳු වත්ත) என்றும் அழைக்கப்படும் இந்த கொழும்பு 7இல் (கறுவாத் தோட்டப் பகுதி) வாழ்பவதை பலரும் பெரும் கௌரவமாகக் கருதுகிறார்கள். முக்கியமான நாடுகளின் தூதுவராலயங்களும், உயர்ஸ்தானிகர்களின் இல்லங்களும் இங்கே உள்ளன.

இலங்கையில் தென்னையும் பனையும் மலிந்திருந்த ஒரு காலத்தில்; உள்நாட்டுக்குள் அத்தனை பிரபல்யமாக கருவா இருக்கவில்லை. ஆரம்பத்தில் கறுவாவை உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் கொள்வனவு செய்து ஏற்றுமதி செய்தவர்கள் படிப்படியாக இலங்கையை ஆக்கிரமிக்கத் தொடங்கியதும் தாமே ஆனால் கரையோரப் பிரதேசங்களில் இத்தகைய தென்னைக் காடுகளை அழித்து கறுவா உற்பத்தியைப் பெருக்கி ஏற்றுமதி செய்தார்கள். போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும், ஆங்கிலேயர்களும் அதைத் தொடர்ந்தார்கள்.

போர்த்துக்கேயர் காலத்திலும், ஒல்லாந்தர் காலத்திலும் அவர்களின் பிரதானமான வருவாயாக கறுவா வணிகம் ஆனது. ஐரோப்பா முழுவதும் இலங்கை கறுவாவை ஏற்றுமதி செய்தார்கள். கறுவா திணைக்களம் என்கிற ஒரு அரச நிறுவனத்தையே ஏற்படுத்தியிருந்தார்கள். கண்டி ராஜ்ஜியத்தின் படையெடுப்பில் இருந்து தம்மை பாதுகாப்பதற்காக கோட்டை அரசன் போர்த்துகேயருடன் ஆண்டுதோறும் 250,000 இறாத்தல் கறுவாவை வழங்குவதாக ஒப்பந்தம் செய்துகொண்டான். அதுபோல பிற்காலத்தில் கண்டி மன்னன் 1602 ஆம் ஆண்டு ஒல்லாந்து மன்னனுக்கு 3000 இறாத்தல் கறுவாவும், மிளகும் பரிசாக அனுப்பினான். 

போர்த்துகேயர், ஒல்லாந்தர் காலத்தில் கூட இலங்கையர்கள் கறுவாவை காட்டுப் பகுதிகளில் சென்று தான் சேகரித்தார்கள். அதில் ஈடுபடுத்தப்பட்ட இலங்கையர்கள் காட்டு மிருகங்களினால் ஏற்படுகிற இடையூறுகளில் இருந்து பாதுகாப்பதற்காக போர்த்துக்கேய காவலர்கள் பாதுகாப்புக்குச் சென்றார்கள். ஒரு கட்டத்தில் கறுவா குறைந்து கொண்டு வந்தபோது கறுவா செய்கையை ஆரம்பித்தவர்கள் ஒல்லாந்தர்கள் தான். 1705ஆம் ஆண்டு சேனைப் பயிர்ச்செய்கையாக அதைத் தொடங்கினார்கள்.

AVvXsEgoYCjbSYCqsuhBcmb-sBqdxTt0zBDwNcwC

இமான் வில்லம் பல்க் (Iman Willem Falck - 1765-1785) என்கிற டச்சு ஆளுநரின் கீழ் தான் கறுவா பெருந்தோட்டங்கள் அதிகமாக உருவாக்கப்பட்டன. 1769 இல் அவர் ஒரு பரிசோதனை முயற்சியாக கிராண்ட்பாஸ் பகுதியில் செய்துபார்த்தார். ஒரு சில ஆண்டுகளில் அது பலன் தரவே கொழும்பில் கறுவாத்தோட்டப் பகுதியில் 232 ஏக்கரில் முதலில் அவரின் ஆணையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. அது மட்டுமன்றி வேறெவரும் கறுவா பிடுங்கக் கூடாது என்று சட்டமியற்றினார்கள். களவாக பிடுங்கப்படுவோருக்கு எதிராக சட்டமும் இயற்றப்பட்டது. ஒரு செடிக்கு பத்து ரிக்ஸ்டொலர்கள் தண்டப்பணமாக அறிவித்தார்கள். அதை செலுத்த முடியாதவர்கள் பத்தாண்டுகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 1745 ஒக்டோபர் 8 இல் வெளியான சட்டம் இது. இந்தச் சட்டத்தின் பிரகாரம் கறுவா செடியை பறிப்பவர்கள் இலங்கையில் இருந்து நாடுகடத்தப்பட்டு கேப் பொயிண்டுக்கு (Cape Point ) அனுப்பப்பட்ட பதிவுகளும் உண்டு.

டச்சு காலத்தில் கொழும்பு கறுவாத் தோட்டத்தில் 3826 ஏக்கர்களில் கறுவா உற்பத்தி செய்யப்பட்டதென பிற்காலத்தில் கொல்வின் ஆர் டி சில்வா எழுதிய “பிரித்தானியர் ஆக்கிரமிப்பின் கீழ் இலங்கை” (Ceylon Under the British Occupation) என்கிற நூலில் குறிப்பிடுகிறார்.

AVvXsEg-JUKbdPEQkBpnNm9T2e2llwSBOOnukVQu

 

கறுவா பயிர்ச்செய்கையாக ஆரம்பமானதும் முதலாவது கறுவாத் தோட்டம் உருவாக்கப்பட்ட இடம் அன்றைய மருதானைப் பகுதி. இதன் சாத்தியம் உறுதியானதும் நீர்கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை போன்ற பகுதிகளில் விரிவாக்கினார்கள்.

1832 வரை ஆங்கிலேய குடியேற்ற நாட்டரசாங்கம் பெற்ற வருமானத்தில் பெரும்பகுதி கருவா வர்த்தகத்தின் மூலம் தான் கிடைத்தது. உலக சந்தையிலும் இலங்கை கறுவா உயர்ந்த தரமுடையதாக இருந்ததால் அது தனி இடத்தைப் பிடித்திருந்ததுடன் அந்த வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் செல்வந்தர்களாக ஆனார்கள். 

அன்றைய மருதானைப் பகுதியில் முதன் முதலில் கறுவா உற்பத்திசெய்யப்பட்ட இடம் தான் கறுவா தோட்டம். இன்னும் சொல்லப்போனால் இன்றைய கறுவாத் தோட்டம் என்று அழைக்கப்படுகிற இடத்திலிருந்து யூனியன் பிளேஸ் வழியாக, சின்ன பொரளை, மருதானை, பஞ்சிகாவத்தை, நாரஹேன்பிட்டி, திம்பிரிகஸ்யாய ஆகிய பகுதிகள் வரை கறுவா தோட்டங்கள் பரந்திருந்தன.

 

AVvXsEjX66Mn3c-yuMswXqG476yVu3xjv7j_A7JA
இன்று இலங்கைப் பிரதமரின் அலுவலகம், சுதந்திர சதுக்கம், சுவடிகூடத் திணைக்களம், ரோயல் கல்லூரி, கொழும்பு பல்கலைக்கழகம், இலங்கை ஒலிபரப்புப் கூட்டுத்தாபனம், ரூபவாகினி, ஐ.டி.என். கொழும்பு நகர மண்டபம், தாமரைத் தடாகம், பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம், கொழும்பு தேசிய அருங்காட்சியகம், மாநகரசபைக் கட்டிடம், கொழும்பின் வானிலை ஆராய்ச்சி மையம் (வளிமண்டலவியல்த் திணைக்களம்) மற்றும் இலங்கை கோள்மண்டலம், பெரிய ஆஸ்பத்திரி, ஆனந்தா கல்லூரி, சங்கமித்த மகளிர் கல்லூரி, மருதானை இரயில் நிலையம் போன்ற பரந்துபட்ட இடங்கள் அன்றைய கறுவா தோட்டங்கள் என்றால் நம்ப கடினமாக இருக்கும்.

 

கறுவா தொழிலில் ஈடுபட்டவர்கள் இளைப்பாறும் இடமாக மருதானையில் “பரனவாடி” என்கிற இடம் இருந்தது. அதற்கருகில் உள்ள பிரதேசம் மரியக்கடை என்றும் அழைக்கப்பட்டது. பஸ் கண்டக்டர் கூட இந்த இடங்களை சொல்லி நிறுத்தும் வழக்கம் இருந்தது. இப்போது ஆனந்த கல்லூரி அருகில் நிறுத்தச் சொன்னால் தான் நிறுத்துவார்கள்.

AVvXsEhn5s5klwxnTxjXt0F_qFCaI9BIxzbyJHdv

அங்கெல்லாம் கருவாத் தோட்டங்களை உருவாக்கியவர்கள் ஒல்லாந்தர்கள் தான். அதற்கு முன்னர் அது காடு. பொரளை பகுதியிலிருந்து காடு இன்னமும் அடர்ந்த காடாக இருந்தது. டச்சு ஆளுனரும் அதிகாரிகளும் இங்கிருந்து தான் வேட்டைக்கு புறப்பட்டதாக பதிவுகள் உள்ளன. ஆங்கிலேயர்கள் ஆட்சியில் தான் நகர விரிவாக்கத்துக்காக இந்தக் கறுவாத் தோட்டங்கள் அகற்றினார்கள். ஆங்கிலேயர்கள் கறுவாவை விட கோப்பி, தேயிலை போன்ற பணப்பயிர்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டிருந்தார்கள்.

சலாகம சாதி

ஆரம்பத்தில் கேரளப் பின்னணியைக் கொண்ட சலாகம என்கிற சிங்கள சாதியினர் தான் கறுவா உரிக்கும் பணியை மேற்கொண்டார்கள். குறிப்பாக மூத்தவர்களே இதனை செய்தார்கள். ஆனால் போர்த்துக்கேயருக்கு அதிகளவு உற்பத்தியை பெருக்குவதற்காக அச்சமூகத்தின் சிறுவர், சிறுமிகளையும் இத்தொழிலில் ஈடுபடுத்தினார்கள்.

ஒல்லாந்தர் காலத்தில் மகா வரி என்கிற ஒன்றை ஏற்படுத்தினார்கள். கறுவா தொழிலில் ஈடுபடுபவர்கள் பணமாகவோ, அல்லது கறுவா மூலமாகவோ வரியாக செலுத்தவேண்டும். இந்த வரியை அரவிடுவதற்காகவே பதவிகளும் உருவாக்கப்பட்டன. இந்த வரியால் சலாகம சாதியினர் தான் பாதிக்கப்பட்டனர். 

 

AVvXsEiK3oqIePD6WernyES20f53NawxLqBP1Hf1
சலாகம சாதியினரை மட்டும் இத்தொழிலில் கட்டாயமாக ஈடுபடுத்தி வந்தார்கள். சலாகம என்கிற சாதி உயர் சாதினராகவே கருதப்பட்டு வந்தது. ஒல்லாந்தரின் வலுக்கட்டாயப் பணிகளில் இருந்தும், ஒடுக்குமுறையில் இருந்தும் தப்புவதற்காக அவர்கள் சிங்கள தாழ்த்தப்பட்ட சாதியினரை திருமணம் முடிக்கின்ற போக்கும் வளர்ந்தது. உயர்த்தப்பட்ட சாதியினர் தாழ்த்தப்பட்ட சாதியினரை மணமுடித்தால் அவரும் தாழ்த்தப்பட்டவராக கருதப்படுகிற சாதிய பொதுப்பண்பு நிலவிய சூழலில் அவர்கள் சாதியை மாற்றிக்கொள்வதற்காக இந்த கலப்பு திருமண வழியைக் கையாண்டார்கள் என்று வரலாற்றாசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி குறிப்பிடுகிறார். இதற்காகவே ஒல்லாந்தரும் தாழ்த்தப்பட்ட பெண்ணை மணமுடித்தாலும் ஆணின் மூல “சாதி” மாறுபடாது என்று அறிவிப்பு செய்தார்கள். பின்னர் வேறு வழியின்றி ஏனைய சாதியினரையும் இத்தொழிலில் ஈடுபடுத்தினார்கள்.

 

“கறுவாத் தோட்டம்” போர்த்துகேயர், ஒல்லாந்தர் காலத்திலேயும் பெரும் காட்டுப் பிரதேசமாகத் தான் இருந்தது. ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் இறுதியில் தான் 

கறுவாத் தோட்டத்து மாற்றங்களோடு தொடர்புடைய ஹெவ்லொக், (Sir Arthur Havelock) ரோஸ்மீட், (Lord Rosmead), எட்வர்ட் பார்ன்ஸ் (Sir Edward Barnes), ஜேம்ஸ் லோங்க்டன் (Sir James Longdon), டொரிங்டன் (Torrington) போன்ற முக்கிய ஆங்கிலேய ஆளுநர்களின் பெயர்களில் இங்குள்ள இடங்களின் பெயர்கள் இன்றும் நிலைத்து நிற்பதைக் காண முடியும்.

AVvXsEj1wWdIaTYfe9hcpj0wuSzP4kdnkv1rJ7jU

அதேவேளை பிரித்தானிய இராணியின் நினைவாக சூட்டப்பட்ட “விக்ரோரியா பூங்கா”வின் (Victoria Park) பெயர் 1956 ஆம் ஆண்டு பண்டாரநாயக்கவின் ஆட்சியின் போது புத்த ஜயந்தி கொண்டாடப்பட்ட வேளை விகாரமகாதேவி பூங்கா என்று மாற்றப்பட்டதையும் இங்கே நினைவுறுத்திக் கொள்வோம். விகாரமகாதேவி; மகாவம்சக் கதாநாயகன் துட்டகைமுனுவின் தாயார் என்பதையும் அறிவீர்கள்.

அன்றைய பசுமைக் காடு, கறுவாத் தோட்டமாகி கட்டிடக் காடாக மாறிய கறுவாத் தோட்டத்தில் எஞ்சியிருக்கும் நிழல் தரும் பூங்காவாக எஞ்சியிருப்பது விகாரமகா தேவிப் பூங்கா மட்டும் தான்.

https://www.namathumalayagam.com/2022/02/cinnamongarden.html

On 15/3/2022 at 20:00, யாயினி said:

நன்றி - தினகரன் - 30.02.2022

திகதிகளில் கொஞ்சம் தவறு விடுகிறார் போலுள்ளது..இப்படித் தான் பகுதி 15ம் விடுபட்டுள்ளது போலும்.இரண்டாம் மாதத்தில் 30 திகதி வருமா எந்த கலண்டரில் அப்படி ஒரு திகதி அச்சிடப்பட்டுள்ளது.நீங்கள் அவரது பக்கத்தில் கேட்கலாம்..உங்கள் விருப்பம்.✍️

அவரிடம் கேட்ட போது 15 ஆம் பகுதி நீண்ட ஒரு பகுதி என்பதால் இன்னும் அதை முடிக்கவில்லை என்று சொன்னார்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

கொழும்பு திரையரங்குகளின் தோற்றம் - என்.சரவணன் - ( கொழும்பின் கதை - 17)

 

கொழும்பில் உள்ள சினிமா தியேட்டர்களின் தோற்றம் நூற்றாண்டுக்கும் மேற்பட்ட வரலாறைக் கொண்டது. சுதேசிய கூத்து, நாட்டிய, நாடக வடிவங்களைக் கண்டு வந்த மக்கள் அசையும் படங்கள் ஐரோப்பாவில் இருந்து இலங்கை வந்தபோது வியப்பாகப் பார்த்தார்கள். அதுவே பின்னர் சுதேசிய நாடக, நாட்டிய பண்பாட்டு மரபுக்கும் காலப்போக்கில் நெருக்கடிக்கும் உள்ளாக்கியது.

நாட்டிய நாடக அரங்குகளும் தகரக் கொட்டகைகளில் நடத்தப்பட்டது போலவே கொழும்பு நகரில் உள்ள பழைய திரையரங்குகளும் தகரக் கொட்டகைகளில் தான் ஆரம்பிக்கப்பட்டன. 1877ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் திகதி இலக்கம் 51 கெய்சர் வீதி, புறக்கோட்டையில், களுதந்திரிகே தொன் பஸ்தியன் ஜயவீர பண்டாரவினால் எழுதப்பட்ட முதலாவது சிங்கள நவீன நாடகம் தொடக்கம், டவர் திரையரங்கம் திறக்கப்படும் வரை கொழும்பில் உள்ள கலை / நாட்டிய / நாடக / அரங்குகள் தற்காலிக அல்லது நிரந்தரமான தகரக் கொட்டகைகளாகவே இருந்தன. புறக்கோட்டை இரயில் நிலையத்தில் இருந்து பார்த்தால் நேரெதிரில் தெரிகிற “மல்வத்தை வீதி”யில் பிளவர் மண்டபம் (Flower Hall), மலர் மண்டபம் இருந்தது.  சரஸ்வதி மண்டபம், பெவிலியன் மண்டபம், பொது மண்டபம் (Public Hall) கூடம் போன்ற பிரபல திரையரங்குகள் அனைத்தும் ஆரம்ப காலத்தில் தகரக் கொட்டகைகளாகவே இருந்தன.

AVvXsEhlKngZEJsRAlXCK-H-TbNb2pEMiw2ZocyM

இலங்கையில் அசையும் படத்தைக் காண்பிப்பதற்கான உத்தியோகபூர்வ அனுமதியை முதன் முதலில் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொண்டவர் அந்திரி (Adolphus William Andree).  அந்திரி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தாயார் யாழ்ப்பாணத்தையும், தந்தை ஐரோப்பாவையும் சேர்ந்தவர்கள். ஒரு புகைப்படக் கலைஞரான அந்திரி “Hopetoun Studio” என்கிற பெயரில் கொழும்பு ஸ்லேவ் ஐலண்டில் (Slave Island) ஒரு புகைப்பட ஸ்டூடியோ ஒன்றையும் நடத்தி வந்தார்.  1903 இல் கொறிக் பயஸ்கோப் (Coric Bioscope) என்கிற ஒரு திரைப்படக் கம்பனியையும் ஆரம்பித்தார். சிங்கள சினிமா வரலாற்றுப் பதிவுகளில் முற்றிலும் இருட்டடிப்பு செய்யப்பட்டவர் இவர். அப்போது வெளிவந்த மௌனப் படங்களைக் காண்பிப்பதற்கான ஒரு புரோஜெக்டரையும் வாங்கி ஒரு மண்டபத்ததில் திரையிட்டு வந்தார். சிங்கள, தமிழ் நாடகங்களைக் கண்டுகளித்து வந்த மேற்தட்டு மக்கள் பலர் இங்கே குவிந்து வந்தார்கள். 1910 இல் அவர் இறக்கும் வரை கோட்டையில் இதனை நடத்தி வந்தார்.

AVvXsEj1L3D72Adeg6ihedYcmXNn4v6D3ItMHCVS
Adolphus William Andree).  அந்திரியின் “Hopetoun Studio”

இவ்வாறு கடந்த நூற்றாண்டின் முற்பாதியிலேயே இலங்கைத் திரைப்படத்துறைக்கான அடித்தளம் அமைக்கப்பட்டுவிட்ட போதிலும், நாட்டில் திரைப்படத் தயாரிப்பு ஒரு வணிகமாக தோன்றவில்லை. இருப்பினும், இந்த புதிய வகை திரைத்துறை நாட்டின் பாரம்பரிய நவீன கலைகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதற்கான அறிகுறிகள் இருந்தன. ஆரம்பத்தில் இலங்கையில் குறும்பட, மௌனப் படங்கள் மட்டுமே திரையிடப்பட்டன.

கொழும்பின் நகரின் மிகப் பழமையான ஹோட்டல்களில் ஒன்றான கோல் ஃபேஸ் ஹோட்டலுக்கு அருகில் அசெம்பிளி ரூம்ஸ் நிறுவனத்தின் ஒரு தற்காலிக நாடக அரங்காக 1869 ஆம் ஆண்டிலிருந்து இயங்கத் தொடங்கியிருந்தது.

"பிளவர் ஹோல்" கொழும்பு புறக்கோட்டையில் உள்ள சாமஸ் தானியக் களஞ்சிய வளாகத்தில் அமைந்திருந்தது. மல்வத்த வீதிக்கும் இன்று புதிய இறைவரித் திணைக்களம் அமைந்துள்ள கட்டடத்துக்கும் நடுவில் உள்ள பகுதி தான் சாமஸ் தானியக் களஞ்சியம் இருந்த பகுதி. ஆங்கிலேய ஆளுநர் சாமஸ் (Robert Chalmers) ஆட்சிக் காலத்தில் காலத்தில் பிளேக் தொற்று உலகம் முழுவதும் பரவி பலர் மடிந்துகொண்டிருந்த போது நாட்டின் உணவுத் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த 1914 இல் உருவாக்கிய களஞ்சியம் தான் இது. அப்போது ஐந்து லட்சம் மூட்டை நெல்லை களஞ்சியப்படுத்தி வைக்கக் கூடிய வகையில் இது அமைக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னர் 1876 இல் இருந்து இந்த இடத்தில் பிளவர் ஹோல் இயங்கி வந்தது. அதுபோல இன்று சங்கிரிலா ஹோட்டல் அமைந்திருக்கிற இடத்தில் (அதற்கு முன்னர் இராணுவத் தலைமையகம்) 1880 இல் இருந்து த கரிசன் தியட்டர் (The Garrison Theater) இயங்கி வந்தது. அது தொடங்கி ஓராண்டுக்குப் பின் கொள்ளுபிட்டியில் லீ ஹெஜஸ் நிறுவனத்துக்கும் திரையரங்கை நடத்தும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

AVvXsEhGSUXc9PX1_qdUQeKhnDhQNNY3dW9NsCKj

கொழும்பு மல்வத்த வீதியில் 1883 இல் “பெவிலியன் கொட்டகை” என்கிற ஒரு அரங்கமும் தற்காலிகமாக இயங்கிவந்தது. மருதானை  இரயில்வே களஞ்சியத்திலும் 1884 இல் இருந்து ஒரு அரங்கம் இயங்கத் தொடங்கியது. அதே ஆண்டு ஹுனுபிட்டிய “பப்ளிக் ஹோல்” என்கிற பெயரில் ஒன்றும் ஆரம்பமானது, புறக்கோட்டை பிரின்ஸ் வீதியில் 1889இல் “சரஸ்வதி மண்டபம்” ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

மெசேஞ்சர் வீதியில் பற்காலத்தில் தொடக்கப்பட்ட “கொலீசியம் ஹோல்”, ஆமர் வீதியில் “கெப்பிட்டல் ஹோல்” கொச்சிக்கடையில் “ ஜிந்துப்பிட்டி ஹோல்”, சேதவத்தையில் “மினர்வா ஹோல்”, தெஹிவளையில் “புஷ்பா ஹோல்” என்பனவற்றை ஆரம்பகால பழமையான மண்டபங்கள் வரிசையில் குறிப்பிட முடியும்.

AVvXsEgu2y16wVhhvJMayagYvrq4QlFyVdB66WcY
கொழும்பில் சினிமா கடவுட்கள் நிறுத்தப்பட்டிருந்த பிரபல இடம் மருதானை சந்தி

மருதானை டார்லி வீதியில் இயங்கிவந்த “நெஷனல் ஹோல்” தான் பிற்காலத்தில் “காமினி ஹோல்” என்கிற சினிமா தியேட்டராக ஆனது. இலங்கையில் பல சிங்களத் திரைப்படங்களைத் தயாரித்த கே.குணரத்தினத்தின் சினிமாஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த தியேட்டர் 1983 இனக்கலவரத்தின் போது முழுமையாக அழிக்கப்பட்டது.இத்தனைக்கும் ஒரு தமிழ் திரைப்படத்தைக் கூட தயாரிக்காத அவர் வாழ்நாள் முழுவதும் 20  க்கும் மேற்பட்ட சிங்களத்திரைப்படங்களை மட்டுமே தயாரித்தவர்.

 

AVvXsEj96Bc84P39eHAmvVZi8u6OgXiBi-WY3x1e
கே.குணரத்தினம்
 
1909 அளவில் லண்டன் பாரிஸ் சினமாமொகிராப் நிறுவனம் இராணி வீதியில் அமைந்திருந்த நூலகக் கட்டிடத்தில் சினிமா காட்சிகளை காண்பித்திருக்கிறார்கள். அதுபோல யுனிவேர்சல் பயிஸ்கோல் நிறுவனமும் லண்டன் பயஸ்கோப் நிறுவனமும் புறக்கோட்டை மல்வத்தை வீதியில் தமது திரைப்படங்களை திரையிட்டிருக்கிறார்கள்.

 

வொர்விக் மேஜர் (Warwick Majors) என்கிற ஆங்கிலேயரும் உள்ளூர் திரைப்படத் துறையில் பங்களிப்பு செய்து வந்திருக்கிறார். இவர் தற்போது ரீகல் தியேட்டர் இருக்குமிடத்தில் தகரக் கொட்டகையில் படங்களைக் திரையிட்டு வந்தார். தகரக் கொட்டகைகளில் தொடங்கப்பட்ட “பப்ளிக் ஹோல்”, “எம்பயர் தியேட்டர்” என்பவற்றின் ஆரம்ப உரிமையாளராகவும் வொர்விக் இருந்தார்.

இந்தப் பின்னணியில்தான் இந்தியாவின் பிரபல திரைப்பட நிறுவனமான மதன் தியேட்டர்ஸ் லிமிடெட், இந்தப் புதிய துறையில் மக்கள் கொண்டுள்ள ஆர்வத்தை உணர்ந்து கொழும்புக்கு வந்து  திரைப்பட வணிகத்தில்  இறங்கியது. திரைப்படத் தயாரிப்புகளை மேற்கொள்ளும் அதேவேளை கொழும்பு நகரம் முழுவதும் திரையரங்குகள் அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்தது மதன் நிறுவனம். வொர்விக்கிடம் இருந்து எம்பயர் பேலஸ், பப்ளிக் ஹோல் ஆகிய தியேட்டர்களை மதன் நிறுவனம் வாங்கியது.

இதே காலத்தில் பெவிலியன் என்கிற சிறிய திரையரங்கையும் வொர்விக் வைத்திருந்தார். இது மருதானை சந்தியில் அமைந்திருந்தது. வொர்விக் அத்தியேட்டரை புதுப்பித்து அதற்கு "பெவிலியன் பேலஸ்" என்று பெயர் மாற்றினார். மருதானையிலும் ஒரு நல்ல சினிமா தியேட்டர் ஒன்றை ஆரம்பிப்பதற்கான இடத்தை தேடிக்கொண்டிருந்த மதன் நிறுவனம் வொர்விக்கிடம் இருந்து “பெவிலியன் பேலஸ்” தியேட்டரை வாங்கியது. அதை நவீனமயப்படுத்தி “எல்பின்ஸ்டன் பிக்சர்ஸ் பேலஸ்” என்கிற பெயரை வைத்தது. இன்று எல்பின்ஸ்டன் என்கிற பெயரில் இருக்கிற மண்டபம் அந்த அன்றைய பயஸ்கோப் தகரக் கொட்டகை தான். ஆக 1917க்கும் முந்திய வரலாற்றைக் கொண்டது அது. ஒரு நூற்றாண்டு வளர்ச்சியைக் கொண்டது. இன்று இந்த பழமையான தகர கொட்டகை எல்பினிஸ்டன் என்று அழைக்கப்படுகிறது. அதன்படி, இந்த சினிமாவின் ஆரம்பம் 1917 காலகட்டத்திற்கு செல்கிறது என்று தெரிகிறது.

 

AVvXsEgVo8x7ApulfksOeqLNBgD3KDkI-WydxdVx
 
ஜே.எப்.மதன் (J F Madan) இந்தியாவிலும், பர்மாவிலும், இலங்கையிலும் திரைப்படத்துறையின் முன்னோடியாக கருதப்படுபவர். அவர் இந்தியாவிலும் எல்பின்ஸ்டன் பயாஸ்கோப் கொம்பனி (Elphinstone Bioscope company) என்கிற நிறுவனத்தை நடத்தி வந்தார். எல்பின்ஸ்டன் என்கிற பெயரை இந்திய நிறுவனமான மதன் நிறுவனம் வைத்ததற்கு ஒரு காரணம் இருந்தது. பிரிட்டிஷ் ஆளுநரான எல்பின்ஸ்டன் (Mountstuart Elphinstone 1779 - 1859) இந்திய மக்களின் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்ட பிதாமகராக கருதபடுபவர். நிர்வாக சட்டத்துறையிலும் அவர் கொண்டுவந்த மாற்றங்கள் முக்கியமானவை. அவரின் நினைவாகவே மதன் அப்பெயரை தனது கம்பனிக்கும், மருதானை தியேட்டருக்கும் வைத்தார்.

 

எல்பின்ஸ்டன் திரையரங்கின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் 1925 ஆம் ஆண்டு ஒக்டோபர் 19 ஆம் திகதி அப்போதைய கொழும்பு மேயர் எச்.இ.நிவ்ஹாம் (H.E.Newham) அவர்களால் மதன் திரைப்பட நிறுவனத்தின் சார்பாக நாட்டப்பட்டது. கட்டிடத்தை எச்..எப்.பில்லிமோரியா (H.F.Billimoria) வடிவமைத்தார்.

AVvXsEhA-NABRkWt66aB3a86bikeQdFWl0_kK786
சிற்றம்பலம் ஏ கார்டினர்

சிற்றம்பலம் ஏ கார்டினர் பிற்காலத்தில் சிலோன் தியேட்டர்ஸ் நிறுவனத்துக்காக ஒலிம்பியா, ரீகல் போன்ற தியேட்டர்களை வாங்கிய போது, எல்பின்ஸ்டன் தியேட்டரையும் வாங்கினார்.

1980களில் ஜே.ஆர். ஆட்சியில் எல்பின்ஸ்டன் அரசுடமையாக்கப்பட்டது. அது நவீனமயப்பத்தப்பட்டு அன்றைய பிரதமர் பிரேமதாசவால் சரசவிபாய கலாசார மண்டபத்தையும் இணைத்து 1988 ஒக்டோபர் 09 அன்று அரச நிறுவனமாக மீளத் திறக்கப்பட்டது.

நன்றி - தினக்குரல் - 06.03.2022
  • தொடங்கியவர்

கொச்சிக்கடை சிவன் கோவில் உருவான கதை - (கொழும்பின் கதை - 18) - என்.சரவணன்

AVvXsEjnysmtvxhwC7h522QGCrbL-D2HiWg8LzXi

கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் கோவில் கொழும்பின் அடையாளங்களில் ஒன்று. கொச்சிக்கடை சிவன் கோவில் என்றும் பலரால் அறியப்படுகிற இக்கோவில் வரலாற்று சிறப்பையும், கட்டிடக் கலைச் சிறப்புகளையும் கொண்ட பெரிய கோவில்.

கொழும்புக்கு வரும் இந்து சமயத்தினர் நிச்சயம் ஒரு முறையாவது இக்கோவிலுக்கு செல்லாமல் இருந்திருக்க மாட்டார்கள். கொழும்பு நகரில் சரித்திரப் புகழ்வாய்ந்த கோயில்களுள் ஒன்றாகவும் முக்கிய ஈழத்து சிவாலயங்களில் ஒன்றாகவும் இருப்பதுடன் இக்கோவிலில் திராவிடச் சிற்பக் கலை இன்றும் வியப்பாக பார்க்கப்படுகிறது.

தென்னிந்தியாவிலுள்ள பிரமாண்டமான கருங்கல் ஆலயங்கள் யாவும் மூவேந்தராலும், நாயக்க, பல்லவ மன்னர்களாலுமே கட்டப்பட்டது. அதே மாதிரியான அமைப்பில் இலங்கையில் முற்றிலும் கருங்கற்களிற் பொளிந்த சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த அழகிய கலைக் கோவிலைத் தம் சொந்தப் பணத்தில் கட்டினார் பொன்னம்பல முதலியார்.

 

AVvXsEildqzkUN0-mPooXXNQd0deEat5i9KX4Nbi


இக் கட்டிடம், விஜயநகர கட்டிடக் கலையைத் தழுவிக் கட்டப்பட்டிருக்கின்றது. இவ் ஆலயத்தின் தூண்கள், சிற்பங்கள் கூரையும் கூட , கருங்கற்களால் செதுக்கப்பட்டுக் கட்டப்பட்டிருக்கின்றன. இக் கோயிலின் கட்டிட வேலைகளுக்கு வேண்டிய கற்பாறைகள் சிலவற்றை இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டவை.

 

இக்கோயிலைக் கட்டியவர் அருணாச்சலம் பொன்னம்பல முதலியார் (1814 -1887).

பருத்தித்துறையைச் சேர்ந்த கேட் முதலியார் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி (Arumugampillai Coomaraswamy) 1783இல் பிறந்தவர். சகோதரனின் அழைப்பின் பேரில் கொழும்பில் குடியேறி இங்கேயே கற்று பின்னர் ஆங்கிலய ஆளுநரின் பிரதான மொழிபெயர்ப்பாளராக ஆனார் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி. 1815 ஆம் ஆண்டில் கண்டி அரசன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் பிரித்தானியரால் சிறைபிடிக்கப்பட்ட போது குமாரசுவாமி பிரித்தானியர்களுக்காக மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றியிருந்தார். பின்னர் 1833 இல் சட்ட நிரூபன சபைக்கு நியமிக்கப்பட்டார். அவருக்கு முத்துக்குமாரசுவாமி, செல்லாச்சி ஆகிய இரு பிள்ளைகள். செல்லாச்சிக்கும் பொன்னம்பலம் முதலியாருக்கும் பிறந்தவர்கள் தான் இராமநாதன் சகோதரர்கள் என்று அழைக்கப்பட்ட, குமாரசுவாமி, இராமநாதன், அருணாச்சலம்.

08.09.1854இல் செல்லாச்சி இறந்துபோனதும் பொன்னம்பலம் முதலியார் தனது பணியில் இருந்து இராஜினாமா செய்தார். அதன் பின்னர் கருங்கல்லாலான கோவிலைக் கட்டிமுடிப்பதே அவரின் எண்ணமாக இருந்தது. ஏற்கெனவே அவர் தென்னிந்திய திருத்தலங்களுக்கு அடிக்கடி யாத்திரை செய்து கோவில்களின் அமைப்புகளால் வசீகரிக்கப்பட்டவர். சோழ, பாண்டிய கோவில்களின் அமைப்பில் அவர் அதனைக் கட்ட விரும்பினார்.

 

AVvXsEhdyLJlg_TUWa-YDOIxl-XfDYu2KEXySkNI


அவரின் சொந்த வீட்டில் பால யந்திர பூஜை நடத்தி வந்தவர் அவர். இப்போதும் அவர் வீட்டில் வைத்திருந்த சிவகாமி அம்மன் சிலையை சிவன் கோவிலில் காணலாம்.

 

பொன்னம்பலம் முதலியாருக்கு கொழும்பிலும், மலையகத் தோட்டப் பகுதிகளிலும் சொத்துக்கள் இருந்தன. அது மட்டுமன்றி செட்டியார் தெருவில் வசித்து வந்த அவர் செட்டியார் தெருவில் முத்து விநாயகர் ஆலயத்தையும், ஜிந்துப்பிட்டி கதிரேசன் கோவிலும் கூட அவரால் கட்டப்பட்டது தான்.

கொழும்புக் கொச்சிக்கடைப் பகுதியில் ஐந்து ஏக்கர் காணியை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தைக் கட்டுவதற்காக 05.07.1856 இல் ஆங்கிலேய கப்டன் ஜோன் போல்ஸ்டனிடம் (Captain John Foulstone - Ceylon Rifle Regiment) இருந்து  வாங்கினார். இந்தக் காணியில் ஏற்கெனவே மிகப் பழமையான காளிகோவில் ஒன்று இருந்தது.

தென் இந்தியாவிலிருந்து கோயிற் கட்டடக் கலைஞர்களை வரவழைத்து இரண்டு வருடங்கள் இரவு பகலாக உழைத்துத் திருப்பணி வேலைகளை நிறைவு செய்து 1857ம் ஆண்டு மார்கழி மாதம் 12 ஆம் திகதிமகாகும்பாபிஷேகத்தை சிறப்பாக நடாத்தினார். மூல மூர்த்தியாக 22அங்குல உயரங் கொண்ட சிவலிங்கத்தையும், போகசக்தியையும் மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்வித்தார். தன் வீட்டில் வைத்துப் பூசித்து வந்த பாலயந்திரத்தை 32 அங்குல உயரங் கொண்ட சிவகாமி அம்பாளின் பீடத்திற்கு அடியில் வைத்தும் ஸ்ரீசக்கரத்தை அதன் அருகில் வைத்தும் பிரதிஷ்டை செய்வித்து பொது மக்கள் வழிபடுவதற்கு ஒழுங்கு செய்தார்.

இக்கோவிலை தொடர்ந்து பராமரித்து  பூசைகளையும் விழாக்களையும் எதுவித தடங்கலுமின்றி தன் சந்ததியினர் செய்வதற்கான நிதி வருமான ஏற்பாட்டுக்காக நாத்தாண்டியாவில் ஒரு ஆயிரம் ஏக்கர் தென்னந் தோட்டத்தையும் கொழும்பு மாநகரில் தொடர் கடைகளையும் கட்டி ஆலயப்பராமரிப்புக்கு அவற்றிலிருந்து பணத்தைப் பெற வழிவகுத்தார். இந்தியாவிலிருந்து வரும் யாத்திரிகர்களும், ரிஷிகளும் உணவுண்டு தங்குவதற்கேற்ற முறையில் அன்னதான மடத்தையும் கட்டினார். தினமும் அங்கு வரும் ஏழைகளுக்கும் யாத்திரிகர்களுக்கும் உணவும், உடையும் அளித்தார். இக்கோவிலை தொடர்ந்து நடாத்துவதற்கு தன் சந்ததியில் வரும் மூத்த ஆண் வம்சத்திற்கு அதிகாரத்தைச் சாசன மூலம் வழங்கினார். 

 

AVvXsEhNATtiItmEZchOS6ldJMyo0tFrJj2kUrTw


1887 ஆம் ஆண்டு பொன்னம்பலம் முதலியாரின் மறைவின் பின்னர் மூத்த மகன் பொன். குமாரசுவாமி பொறுப்பேற்று 1905ம் ஆண்டு அவர் மறையும் வரை ஆலயத்தை நிர்வகித்து வந்தார். இலங்கை சைவ பரிபாலன சபையின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவர் குமாரசுவாமியின் மகன். அச்சபையும் இங்கே தான் ஆரம்பத்தில் தலைமையகமாக இயங்கியது. குமாரசுவாமி 1889இல் அதன் தலைவராகவும் இருந்தார்.

 

குமாரசுவாமி காலமானதும் பொன்னம்பலம் முதலியாரின் இரண்டாம் மகனான சேர். பொன், இராமநாதன் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார். தந்தையாரால் கல்லாலும், செங்கட்டியாலும் சுண்ணாம்புச் சாந்தாலும் கட்டிய கோவிலுக்குப் பதிலாக தற்போது உள்ள நிலையிலிருக்கும் கருங்கற் கோவிலை புதிதாகக்கட்ட 1907ஆம் ஆண்டு ஆரம்பித்தார். தென் இந்தியாவிலிருந்து சிறந்த கோயிற் கட்டட ஸ்தபதியையும், சிற்பிகளையும் வரவழைத்தார். வேயங்கொடையிலிருந்து கருங்கற்களை வருவித்தார். நூறு வருடங்களுக்கு முன்னரே இராமநாதனுக்கு இரண்டு லட்ச ரூபாய் செலவழிந்தது.

1907 இல் ஆரம்பித்து 1912 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி குடமுழுக்கு செய்வித்தார். இக்கோயிலின் கட்டிடம் விஜயநகரக் கட்டிடக்கலையைத் தழுவிக் கட்டப்பட்டது. 21.11.1912ம் ஆண்டு முதற் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இதன் தூண்கள், சிற்பங்கள், கூரைகள் அனைத்தும் கருங்கற்களால் செதுக்கப்பட்டுக் கட்டப்பட்டன. இக்கோயிலின் கட்டிட வேலைகளுக்கு வேண்டிய கற்பாறைகள் சில இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்டுள்ளன. இக்கட்டிடத்தின் தூண்கள் ஒரே கல்லில் செதுக்கி எடுக்கப்பட்டன. கூரை வேய்தலுக்கான கற்பாறைகள் 25 அடி நீளமாகவும், 5 அடி அகலமாகவும், 1 அடி கனமாகவும் உள்ளன.

 

AVvXsEgSQz5K4HfQ5UdaY92a1uOhxBWF5jlPV6gv


இக்கோயிலின் இராசகோபுரம் கட்டி முடிக்கப்பட முன்னரே சேர் பொன். இராமநாதன் காலமாகிவிட்டார். அவர் இறந்து பல ஆண்டுகளாகியும் இராசகோபுரம் மொட்டையாகவே இருந்தது. பின்னர் இராசகோபுரத்தை மீள நிர்மாணிக்கும் பணிகள் 1965 ஆம் ஆண்டளவில் அவரது சந்ததியினரால் ஆரம்பிக்கப்பட்டது. ஆனாலும் இராசகோபுரத்தை கருங்கற்களால் அவர்களால் கட்ட முடியவில்லை. பதிலாக சீமெந்தினால் கட்டி முடிக்கப்பட்டது. கிழக்கு வாசலில் 65 அடி உயரங்கொண்ட ஐந்து நிலைக் கோபுரத்தைக் கொண்ட இராசகோபுரத்தில் 162 விக்கிரகங்கள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிற்பமும் ஒவ்வொரு கதையைச் சொல்லுகின்றது. இந்த ராசகோபுரம் வண்னம் தீட்டப்படாது, கருங்கற்களால் செதுக்கிய கட்டிடம் போன்று அமைக்கப்பட்டது. தெற்கு வாசலில் 35 அடி உயரங்கொண்ட மூன்று தளங்களைக் கொண்ட கோபுரமும் உள்ளது.

 

 

AVvXsEj2XoZAR1J3es8ojnn6m_IuvKoEPV_mijgM

இந்த ராஜகோபுரத்திற்கு வண்ணம் தீட்டாது, அதை, கருங்கற்களால் செதுக்கிய கட்டிடம் அப்படியே இன்றும் பேணப்பட்டு வருவதும் ஒரு சிறப்பு. உள்ளிட்ட கட்டிடத்தின் உள் வேலைகள் எல்லாம் கருங்கற்களால் அமைந்திருப்பதனால் ராஜகோபுரமும் கருங்கற்களால் தான் அமைந்திருக்க வேண்டும். ஆனால், அது அப்போது முடியாத செயலாக இருந்ததினால், கல்லைப் போல் தோற்றம் அளிக்கும் வகையில் செய்து முடிக்கப்பட்டிருக்கிறது. வர்ணம் தீட்டினால் அது மங்கி அவலட்சனமாகி விடும் என்றும், அதன் இயல்பை பேணினால் போதுமானது என்று அன்றைய நிர்வாகம் கருதியது.

 

இந்தப் பொன்னம்பலவானேஸ்வார் ஆலயத்தின் ராஜ கோபுரத்தை இன்னும் உயரமாகக் கட்டி எழுப்பி இருக்கலாமே என்கிற விமர்சனங்களும் உண்டு. கோபுரத்தின் உயர அகலம், கோயிலின் கர்ப்பக்கிரகம், சபாமண்டபம் ஆகியவற்றின் நீள அகலத்தில் இருந்தே கணிக்கப்பட வேண் டும் என்பதே ஆலய சாஸ்திர விதி. ஆகவே, குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் எழுப்புவது ஆலய சாஸ்திர விதியை மீறும் என்கிற ஐதீகம் உண்டு.

கோபுர உச்சியிலும், கண்களுக்கே தெரியாத இடங்களிலும் சிற்பங்கள் அமைக்கப்படமைக்கு அன்றே விளக்கம் அளிக்கப்பட்டன. அதனை வடித்த சிற்பிகள்; தங்கள் கலைத்திறன் கடவுளுக்கே சொந்தம் கடவுள் காணாத இடமே கிடையாது ஆகையால் சிற்பங்களை மனிதன் காணமுடியாத இடங்களிலும் செதுக்கினார்கள்' என்று பிரபல அறிஞர் கலாயோகி ஆனந்த குமாரசாமி விளக்கியிருக்கிறார்.

ஆலயத்தின் அமைப்பு, காலத்திற்குக் காலம் வேறுபட்டு வளர்ந்திருக்கிறது. மேற்கு நுழைவாயில் அருகில் பசுமடம் உள்ளது. கோவில் காணிக்குள் நுழையும் இரு பிரதான வாயில்களில் ஒன்று கொழும்புத் துறைமுகம் அமைந்திருக்கிற கடற்கரை பக்கமாக இருக்கின்ற “இராமநாதன் வீதி”யில் மேற்கு நுழைவாயில் உள்ளது. கிழக்கு வாயிலருகில் உயரமான தேர் மண்டபம் உள்ளது. அந்த வாயில் ஜெம்பட்டா ஒழுங்கையின் பக்கமாக அமைந்திருக்கிறது.

 

AVvXsEgBnpsxMeUUlqS1fDiTYDyKTZYXyW4Xaht1


சேர் பொன் இராமநாதன் இலங்கையின் பிரம்மஞான சங்கத்தின் செயற்பாடுகளில் ஈடுபட்டவர். இலங்கை முழுவதும் சுதேசிய பாடசாலைகளை நிறுவ இராமநாதன் பெருமளவு நிதிகளையும் அச்சங்கத்துக்கு வழங்கியிருக்கிறார். ஆனால் அப்பணம் சிங்கள பௌத்தப் பாடசாலைகளை மட்டும் நிறுவ பயன்படுவதைக் கண்ட அவர் ஒழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் சைவத் தமிழ்ப் பாடசாலைகளை ஆரம்பித்தார். 1909ஆம் ஆண்டு அவர் பொன்னம்பலவானேஸ்வரர் தமிழ் பாடசாலை என்கிற ஒன்றையும் கோவிலோடு சேர்த்து ஆரம்பித்திருக்கிறார். ஆனால் அது ஒரு சில ஆண்டுகளில் மூடப்பட்டுவிட்டது.

 

27.11.1957 ஆம் ஆண்டு பொன்னம்பலம் முதலியாரின் பேரன் அருணாச்சலம் மகாதேவாவும் அவரின் மகன் சோமசுந்தரம் மகாதேவாவும் அறங்காவலர் சபையில் இருந்தபடி கோவிலின் நூற்றாண்டு கொண்டாடப்பட்டது.

ஆண்டுதோறும் சிவராத்திரியன்று கூடும் மக்கள் கூட்டம் இங்கு அதிக சன நெரிசல் மிக்க ஒன்றாக இருக்கும். இரவிரவாக நிகழ்த்தப்படும் நிகழ்ச்சிகளைக் காண்பதற்காக ஏராளமானோர் கூடுவார்கள்.

ஒன்றரை நூற்றாண்டுக்கும் அதிகமான கால வரலாற்றைக் கொண்ட இந்த சிவன் கோவில் இலங்கையின் அடையாளங்களில் ஒன்றெனக் கூற முடியும்.

உசாத்துணை

 

  • V.Muttucumaraswamy, Founders of Modern Ceylon (Sri lanka) eminent Tamils, Vol I, Parts I & II, The Pioneers, The Founders. Uma siva Pathippakam, Ceylon, 1973.
  • M.K.Ealaventhan, Sir Ponnambalam Ramanthan, The Forgotten aspects of his life’s work, Colombo, 2002
  • Chelvatamby Maniccavasagar, Let your soul guide you!, Sunday Observer, 05.04.2009.
  • M.Vythilingam, “Ponnambalavaneshwarar Temple”, The Life Of Sir Ponnambalam Ramanathan. (Chapter xxxvi) Vol 1, Ramanathan Commemoration society, Colombo, 1971.
  • துரைராசா, தம்பு , ஈழத்துச் சிவாலயங்கள். தொண்டர் சபை வெளியீடு, 2009
  • பொன்னம்பலவாணேஸ்வரர் வி எஸ். துரைராஜா, மல்லிகை ஆகஸ்ட் 1971 , (இதழ் 39)

 

 
நன்றி - தினகரன் 13.03.2022https://www.namathumalayagam.com/2022/03/sivankovil.html
  • தொடங்கியவர்

இம் முறை ஒரே நாளில்  அத்தியாயங்கள் 17, 18 பகிர்ந்துள்ளேன்...

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நிழலி said:

இம் முறை ஒரே நாளில்  அத்தியாயங்கள் 17, 18 பகிர்ந்துள்ளேன்...

ஏதோ சாதனை செய்த நினைப்பு......முடிந்தால் நாலு அத்தியாயம் ஒரே நாளில் பகிருங்கள் பார்ப்போம், அப்பத்தான் நீங்கள் ஜாம்பவான் என்று நம்புவோம்.......!  😁

  • 1 month later...
  • தொடங்கியவர்

கோட்டை டச்சு ஆஸ்பத்திரி (கொழும்பின் கதை - 19) - என்.சரவணன்

Colombo-19.jpg

கொழும்பில் எஞ்சியிருக்கும் பழமையான கட்டிடங்களில் “பழைய டச்சு ஹோஸ்பிடல்” (“Old Dutch Hospital”) குறிப்பிடத்தக்க ஒன்று. கொழும்பு கோட்டையின் மையப்பகுதியில் Port Hospital Laneஇல் இருக்கிறது என்றால் சிலவேளை நீங்கள் குழப்பமடையலாம். ஆனால் கோட்டை இரட்டைக் கோபுரக் கட்டிடத்துக்கு எதிரில் என்று கூறினால், அல்லது செலிங்கோ கட்டிடத்துக்கு பின்னால் என்றோ கூறினால் பிடித்துவிடுவீர்கள். கொழும்பில் இறுதியாக எஞ்சியுள்ள பழைய டச்சு கட்டிடம் இது தான். பெரிய, அகலமான சுவர்களையும், பெரிய ஜன்னல்களையும், விரிந்த வராந்தாக்களையும் கொண்ட டச்சு கட்டடக் கலையுடன் கூடிய அமைப்பு. 

1656 ஆம் ஆண்டு போர்த்துக்கேயருடன் சண்டையிட்டு கொழும்பைக் கைப்பற்றினார்கள் ஒல்லாந்தர்கள். ஏழு மாதங்கள் தொடர்ச்சியான குண்டுவீச்சால் கொழும்பு கோட்டைப் பகுதியில் இருந்த பல கட்டிடங்கள் சிதைந்தன. ஒல்லாந்தர்கள் கொழும்பைக் கைப்பற்றிய பின்னர் அவற்றை முழுவதுமாக இடித்துவிட்டு புதிய கட்டிடங்களை அமைத்தார்கள். போர்த்துக்கேயரின் ஒரு ஆஸ்பத்திரியும் இங்கே இருந்தது. ஆனால் டச்சு ஆஸ்பத்திரி அமைந்திருக்கும் இதே இடத்தில் அது இருந்திருக்கவில்லை. ஒல்லாந்தர்கள் கைப்பற்றியதும் இந்த ஆஸ்பத்திரி கட்டப்பட்டிருக்க வேண்டும்.

இது கட்டப்பட்ட ஆண்டை உறுதியாகக் கூற முடியாது போனாலும் நிச்சயமாக அது 1677 ஐ விடப் பழமையானது என்பதை மட்டும் சொல்லாம். ஏனெனில் 1676 – 1682 காலப்பகுதியில் இராணுவத்தில் அறுவை சிகிச்சை மருத்துவர்களாக பணியாற்றிய கிறிஸ்டோபர் ஸ்வீட்சர் (Christopher Schweitzer), கிறிஸ்டோபர் பிரிக் (Christopher Fryke) ஆகியோர் 1700 இல் வெளியிட்ட “கிழக்கிந்தியப் பயணம்” (Voyages to the East Indies) என்கிற நூலில் மருத்துவமனையைப் பற்றிய பல குறிப்புகளை எழுதியுள்ளனர். அங்கே பல அடிமைகளும் பணிபுரிந்தையும் பதிவு செய்துள்ளனர். 

 

அவரின் அப்பதிவுகளைப் பற்றி 1803 ஆம் ஆண்டு எழுதப்பட்ட “An account ofthe island of Ceylon” என்கிற நூலில் விபரங்கள் கூறப்பட்டுள்ளன. அந்த நூலை எழுதியவர் 1796 இல் டச்சு வசம் இருந்து ஆங்கிலேயர்கள்  கொழும்பைக் கைப்பற்றிய போது அதன் சாட்சியமாக இருந்தவரான கெப்டன் ரொபர்ட் பேர்சிவல். கடும் காயங்களுக்கு உள்ளான பல வீரர்கள் சிகிச்சைக்கு இங்கு அனுப்பப்பட்டதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.

அன்றைய கொழும்பு கோட்டை சுவருக்குள் இருந்த கட்டிடங்களில் மிகப் பெரிய விஸ்தீரணத்தில் இருந்தது இந்த டச்சு ஆஸ்பத்திரி தான். அரை ஹெக்டயார் பரப்பில் அது இருந்தது. 

1732%20%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%20%E0
1732 ஆம் ஆண்டு போர்த்துகேயர் கால வரைபடம். இதில் E அடையாளம் ஆஸ்பத்திரியைக் குறிக்கிறது.

 

1732 இல் புரோஹியர் உருவாக்கிய வரைபடத்தில் மருத்துவமனை தெளிவாகக் குறிக்கப்பட்டது. இதைவிட முக்கியமாக அன்று டச்சு அரசாங்கத்தில் பணியாற்றிய டென்மார்க்கைச் சேர்ந்த யோஹன்னஸ் ரேச் (Johannes Rach) என்கிற ஓவியர் இலங்கையில் வாழ்ந்த காலத்தில் 1771இல் வரைந்த டச்சு ஆஸ்பத்திரியின் ஓவியம் அதன் அமைப்பை அழகாக விளக்கியிருக்கிறது.

அன்று கோட்டைக்குள் வாழ்ந்து வந்த ஒல்லாந்தர்களுக்காகவும், டச்சு கிழக்கிந்தியக் கம்பனியின் (VOC) அதிகாரிகளுக்காகவும், ஊழியர்களுக்ககவும் கட்டப்பட்டது இந்த ஆஸ்பத்திரி. கொழும்பு துறைமுகம் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கிய காலமும் கூட. துறைமுகத்துக்கு அண்மையில் கட்டப்பட்டதன் நோக்கம்; அப்போது கொழும்புக்கு வந்து போகும் கப்பல்களில் நோய்வாய் பட்டிருந்தவர்களுக்கும் இங்கு வைத்து உயர்தர சிகிச்சையளிக்கப்பட்டு வந்திருக்கிறது.

ரொபர்ட் நொக்ஸ் இருபது ஆண்டுகளாக கண்டியில் சிறைபட்டுக் கிடந்தபோது 1679இல் அங்கிருந்து தப்பிவந்து டச்சுக் காரர்களிடம் வந்து சேர்ந்தார். அவரோடு சேர்ந்து தப்பி வந்த சிலர் நோய்வாய்ப்பட்டிருந்த போது அவர்களுக்கு இங்கே சிகிச்சை அளிக்கப்பட்டதை தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.  கண்டியை ஆண்ட மன்னன் வீர நரேந்திரசிங்கனுக்கு  (இலங்கையின் இறுதி சிங்கள அரசன்) காலில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை செய்வதற்காக 1739இல் டொக்டர் டேனியல்ஸ் (Dr. Danielsz) கண்டிக்கு இந்த ஆஸ்பத்திரியில் இருந்து அனுப்பப்பட்டிருந்தார் என்பதை அவரது பதிவொன்றில் குறிப்பிட்டிருக்கிறார். 

 

3-4.jpg
இன்று சுற்றுலா பயணிகள் விருந்துண்டு மகிழும் இடமாக

 

சுமார் 300 நோயாளர்களை வைத்து பராமரிக்கக் கூடிய அளவுக்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னரே இயங்கியிருக்கிறது. டச்சு மருத்துவமனையினை முதலில் நேரில் கண்ட சாட்சி விபரமாக டச்சு அரசாங்கத்தில் 1734-1737 காலப்பகுதியில் பணியாற்றிய ஜெர்மனைச் சேர்ந்த ஹெய்ட் (Johan Wolfgang Heydt) என்பவரால் போற்றிப் பதிவு செய்யப்பட்ட குறிப்புகளைக் கூற முடியும்.  இலங்கையில் மட்டுமல்ல, ஒல்லாந்தர்களின் காலனி நாடுகளிலேயே நவீன வசதிகளைக் கொண்டிருந்த சிறந்த ஆஸ்பத்திரியாக அன்று இந்த ஆஸ்பத்திரி இருந்ததாக அவர் குறிப்பிடுகிறார். மேலும் சிறந்த பரிசோதனைக் கூடமும், அதிலேயே உயர் ரக மருந்துகளை உருவாக்கக் கூடிய வசதிகளையும் கொண்டிருந்தததாகவும் அவரின் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். ஒரு நோயாளிக்கு இரு தலையணைகளையும், இரு நேர உணவும் வழங்கப்பபட்டதாகவும், இளம் ஆண் பணியாளரால் நான்கு/ஐந்தடி நீளமுள்ள பாத்திரத்தில் அந்தந்த நோயாளியின் தேவைக்கிணங்க சிறு சிறு பாத்திரங்களில் சோறு, கறிகள் மிளகாய், உப்பு, வினாகிரி என்பன வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஒல்லாந்திலிருந்து பல அறுவை சிகிச்சை நிபுணர்கள் இங்கே பணியாற்ற வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

 

அதுபோல அறுவை சிகிச்சை செய்யக்கூடிய நிபுணத்துவம் இல்லாத; மருத்துவம் மட்டுமே தெரிந்தவர்களும் அனுப்பப்பட்டிருக்கிறார்கள். உதாரணத்துக்கு ரைமர் (C.F. Reimer). அவர் ஒரு இராணுவ வீரர். அவரிடம் இருந்த மருத்துவ அறிவின் காரணமாக மூன்றாம் நிலை அறுவை சிகிச்சை வைத்தியராக  அனுப்பப்பட்டார். அவர் ஒரு ஓவியரும் கூட. கண்டி மன்னன் கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கனுக்கும் டச்சு ஆளுநர் பிளாக்குக்கும் (Iman Willem Falck) இடையில் 1766 இல் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்த நிகழ்வை பிரசித்தி பெற்ற ஓவியமாக வரைந்தவர் பிளாக்.

Carl%20Frederick%20Reimer,%20Governor%20

 

இந்த ஆஸ்பத்திரியைப் பற்றிய பல குறிப்புகளை எழுதியவர்களில் இன்னொரு முக்கியமானவர்; இலங்கை தாவரவியலின் தந்தை என்று அழைக்கப்படும் போல் ஹேர்மன் (Paul Hermann).  அவர் இந்த ஆஸ்பத்திரியில் 1672 – 1679 காலப்பகுதியில் பணியாற்றியவர். முன்னாள் தொல்லியல் திணைக்கள ஆணையாளராக இருந்த  கே.டி.பரணவிதானவும் ஒரு இந்த ஆஸ்பத்திரியைப் பற்றிய ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதியிருக்கிறார்.  ஆஸ்பத்திரிக்கு தேவையான முக்கிய மருந்துகள் ஒல்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து வருவிக்கப்பட்டதாகவும், உள்ளூர் ஆயுர்வேத நாட்டு மருந்துகளும் அங்கே பயன்படுத்தப்பட்டன என்று அக்கட்டுரையில் விளக்குகிறார்.

dutch-hospital.jpg
A - தலைமை மருத்துவரின் வதிவிடம், B - மருந்தகம், C - மருந்து தயாரிப்பாளரின் வதிவிடம், D - ஆஸ்பத்திரி. E - சமையலறை, F - கால்நடைத் தொழுவம், G - சுற்றுச் சுவர்

 

1771 இல் வரையப்பட்ட இரண்டு நீர்-வர்ண ஓவியங்களின்படி, மருத்துவமனை கட்டிடம் மூன்று தனித்துவமான பிரிவுகளைக் கொண்டிருந்தது. முதலாவது முகப்பு கட்டிடம் இரண்டு மாடிகளைக் கொண்டதாக அன்றே அமைக்கப்பட்டிருந்ததும் சிறப்பான அம்சம். இதன் முக்கியப் பகுதியான மையப் பகுதி, மருத்துவமனை வார்டுகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. மற்றொன்று மருத்துவமனை, ஆய்வுகூடம், அறுவை சிகிச்சை கூடம் ஆஸ்பத்திரி நிர்வாகியின் இருப்பிடம் என்பவற்றுக்காகவும், மூன்றாவது பகுதி சமையலறைக்காகவும் ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது அந்த அமைப்பைக் காண முடியாது. ஆங்கிலேயர் காலத்தில் இதில் மாற்றங்கள் செய்யப்பட்டன. 1796 இல் பெர்சிவல் எழுதிய குறிப்புகளின் படி, இந்த மருத்துவமனையின் அறைகள் விசாலமானவை, நன்கு காற்றோட்டமானவை. இதனால் மற்ற நோயாளிகளுக்கு நோய் பரவவில்லை. 

டச்சு காலத்தில் ஆப்பிரிக்காவிலிருந்து நீக்ரோ அடிமைகள் கொண்டுவரப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு பரவியிருந்த தொற்று நோய்களை இதே ஆஸ்பத்திரியில் தமது எஜமானர்களுக்கு அளிக்கப்பட அதே மருத்துவ வசதிகள் இவர்களுக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது. 1707 ஆளுனர் யுவான் சிமோன் (Joan Simons) பின்னர் இவர்களுக்கென்று தனி ஆஸ்பத்திரியை கட்டினார்.

 

002_Lageplan_Dutch_Hospital.JPG
தற்போதைய கட்டிடம் இரண்டு முற்றங்களை மத்தியில் கொண்டுள்ளது. தற்போது சுமார் 40 x 30 அடி பரப்பளவில் புல் நடப்பட்டுள்ளது. சுமார் அரை மீற்றர் தடிமன் கொண்ட பெரிய சுவர்கள் கபுக் கல் மற்றும் சுண்ணாம்பு சாந்து ஆகியவற்றைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. மருத்துவமனையின் இரண்டு கூடங்களில் ஒன்று ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. ஆஸ்பத்திரியின் பிரதான வாயில் இருந்த பகுதி ஆஸ்பத்திரி வீதி (Hospital street) என்று ஆங்கிலேயர் காலத்தில் பெயரிடப்பட்டது. இன்று இலங்கை வங்கி, உலக வர்த்தக மையம் (World Trade Centre)அமைந்திருக்கிற Bank of Ceylon Mawatha தான் அந்த வீதி.

 

ஆஸ்பத்திரி வீதியோடு சேர்தாற்போல படகுப் போக்குவரத்துக்காக ஒரு கால்வாயும் அன்று இருந்திருக்கிறது. ஆங்கிலேயர் கைப்பற்றியவுடன் இக்கால்வாய்களை நிரப்பி வீதிகளையும், கட்டிடங்களையும் அமைத்தார்கள். கொழும்பில் போக்குவரத்துக்காக கால்வாய்கள் பயன்படுத்தப்பட்ட காலம் ஒன்று இருந்தது. அதன் எச்சங்களை இன்றும் காணலாம். 

ஆங்கிலேயர் காலத்தில் இக்கட்டிடம் சற்று விரிவாக்கப்பட்டது. மருத்துவமனையின் வடக்குப் பகுதி மட்டும் இரண்டு தளங்களாக மாற்றப்பட்டுள்ளது. பெரிய அளவிலான திடமான மற்றும் வலுவான நீளமான  மரக்கட்டைகள் கூரையின் உறுதிக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவை இன்னும் நல்ல நிலையில் இருப்பதைக் காணலாம்.

இலங்கையின் சிவில் யுத்த காலத்தில் இந்தக் கட்டிடம் நான்காம் மாடியில் தடுத்துவிக்கப்பட்டிருந்த கைதிகளையும், சந்தேகநபர்களையும் வார இறுதியில் சந்திக்க வருபவர்களை சந்திக்க வைக்கின்ற பொலிஸ் நிலையப் பிரிவாகவும் தொழிற்பட்டது. 1980 களில் இருந்து அவ்வாறு கோட்டை பொலிசின் நடவடிக்கைகளுக்காக இந்தக் கட்டிடம் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆயுதக் களஞ்சியமாகவும். சில சிறைக்கூடங்களையும் உள்ளே கட்டினார்கள். கட்டிடத்தின் கட்டடக்கலை மற்றும் தொல்பொருள் மதிப்பு இன்றும் முக்கியமானது. 90 களின் ஆரம்பத்தில் சந்திரசேகரன், காதர், தர்மலிங்கம் போன்ற மலையகத் தலைவர்கள் நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது பல தடவைகள் அவர்களைச் சந்திக்க வார இறுதியில் இங்கு சென்று வந்திருக்கிறேன்.

View Larger Map

1996இல் மத்திய வங்கி குண்டுவெடிப்பின் போது இக்கட்டிடமும் சேதமுற்றது. யுத்தம் முடித்தபின்னர் தற்போதைய ஜனாதிபதியும் அப்போதைய பாதுகாப்பு செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்ச நகர அபிவிருத்தி சபையை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்து கொழும்பை அழகுபடுத்தும் திட்டங்களை மேற்கொண்டார். அந்த திட்டத்தின் கீழ் இந்த டச்சு ஆஸ்பத்திரியை நவீனமயப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 2011 டிசம்பரில்; இதனை உல்லாசப் பிரயாணிகளைக் கவரும் உயர்தர உணவு விடுதிகளையும், உயர்ரக பொருட்களை விற்பனை செய்யும் கடைகளையும் கொண்ட கட்டிடத் தொகுதியாக திறந்து வைக்கப்பட்டது. அரை ஹெக்ராயர் பரப்பில் இன்று அது இருக்கிறது.

டச்சு கால கொழும்பை நினைவுறுத்தும் மிகப் பழைய தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடம் “பழைய டச்சு ஆஸ்பத்திரி”.

நன்றி - தினகரன் - 20.03.2022

https://www.namathumalayagam.com/2022/03/DutchHospital.html

  • தொடங்கியவர்

ட்ராம் போக்குவரத்துக்கு என்ன ஆனது? - என்.சரவணன் ( கொழும்பின் கதை - 20)

colombo20.jpg

இலங்கையில் பொதுப் போக்குவரத்துக்காக பஸ் வண்டிகள் வருவதற்கு முன்னரே அறிமுகப்படுத்தப்பட்டது ட்ராம் வண்டிகள் (Tram-Cars) தான். இதற்காகவே பிரதான பொதுப்பாதைகளில் தண்டவாளங்கள் போடப்பட்டிருந்தன. மிகச் சமீப காலம் வரை அப்படியான ட்ராம் வண்டிகள் கொழும்பில் இயங்கியமைக்கான ஆதாரங்களாக கோட்டை, புறக்கோட்டை ஐந்து லாம்பு சந்தியிலும், கிராண்ட்பாஸ் வீதியிலும் தண்டவாளங்களின் எச்சங்களைக் காணக் கூடியதாக இருந்தது.

இலங்கையில் மனிதப் போக்குவரத்துக்காக விலங்குகளையும், மனிதர்களையும், அதன் பின்னர் இயந்திர வாகனங்களையும் பயன்படுத்தி வந்திருக்கிறோம். குதிரை, யானை, மாட்டு வண்டில்கள் என்பன இந்திய உபகண்டத்தில் முக்கிய போக்குவரத்து சாதனங்களாக நெடுங்காலமாக பயன்பாட்டில் இருந்து வந்திருக்கிறது. அதுபோல மனிதர்கள் சுமந்து செல்லும் பல்லக்குகள் அரசர்களுக்காகவும், அதிகாரிகளுக்காகவும், செல்வந்தர்களுக்காகவும், “உயர்குடி”யினருக்காகவும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. 1893 ஆம் ஆண்டு இலங்கையில் ரிக்சா அறிமுகப்படுத்தப்பட்டது. இரு சக்கரமுள்ள வண்டிலில் ஒருவரையோ, இருவரையோ ஏற்றிக்கொண்டு இன்னொரு மாடுகளுக்குப் பதிலாக மனிதர் இழுத்துச் செல்லும் அமைப்பைக் கொண்டிருந்தது அது. 1896 இல் அதே ரிக்சாவில் முன்னால் சைக்கிளை பொருத்தி அதை மிதித்துச் செல்லும் முறை கொழும்பில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1858 இல் தான் இரயில் அறிமுகப்படுத்தப்பட்டது.

 

Jacob_Haafner_Palanquin-e1475849412466.j
 
1866 ஆம் ஆண்டிலேயே ட்ராம் போக்குவரத்துக்கான திட்டங்களை ஆங்கிலேய ஆட்சியாளர்கள் திட்டமிடத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் அதற்கான டெண்டர் ஒப்பந்தத்தை 1892 இல் தான் கோரப்பட்டது. இறுதியில் 1895 இல் பௌஸ்டீட் (Boustead Brothers) என்கிற நிறுவனம் தான் அந்த ஒப்பந்தத்தை கொழும்பு மாநகர சபையுடன் செய்துகொண்டது.

 

பௌஸ்டீட் நிறுவனம் பிரித்தானிய கம்பனி ஆகும். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த அந்த நிறுவனம் பெருந்தோட்டத்துறையிலும் பெருமளவு தோட்டங்களில் முதலிட்டிருந்தது.

அதன் பிரகாரம் 1898 செப்டம்பர் மாதமே தொடங்கப்பட்டுவிட்டது. 1900ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் திகதி, தெற்காசியாவின் முதல் டிராம் சேவை கொழும்பில் தான் ஆரம்பமானது. யோர்க் தெருவில் உள்ள கிராண்ட் ஓரியண்டல் ஹோட்டலுக்கு அருகில் இருந்து தொட்டலங்க வரை (Grand pass Route) சென்றது. 1900 ஆம் ஆண்டு மட்டும் நாளாந்தம் 14,529 பேர் பயணித்திருக்கிறார்கள் என்றால் அன்றே எந்தளவு பயனாளிகள் இருந்திருக்கிறார்கள் என்பதை உணர முடியும். 

83932411_829317677532367_859695013331520
 
127222831_197931741921953_82926685876565
 
colombo-tramways-1-l.jpg
 
colombo-tramways-2-l.jpg
 
Tramway1899.jpg

புறக்கோட்டை மின்வலுசக்தி நிலையத்தை இந்த நிறுவனம் தான் இயக்கி வந்தது. புறக்கோட்டை காஸ் வேர்க்ஸ் சந்தியில் இது இந்த நிலையம் இயங்கியது. இன்னும் சொல்லப்போனால் இன்றைய பீபல்ஸ் பார்க் என்று அழைக்கப்படுகிற தனியார் பஸ் வண்டிகள் நிறுத்தும் நிலையம் தான் அன்றைய ட்ராம் வண்டிகள் நிறுத்தப்படும் இடமாக இருந்தது. இந்த மின்சார நிலையம் கொழும்பு மத்திய பஸ் நிலையம் வரை அகன்று இருந்தது. சுமார் 110 வோல்ட் டி.சி சக்தியைக் கொண்டு இந்த ட்ராம் வண்டிகள் இயக்கப்பட்டன. 

மெயின் வீதி வழியாக வந்து கேஸ் வேர்க்ஸ் வீதியூடாக ஒல்கொட் வீதியை அடைந்து புறக்கோட்டை இரயில் நிலையத்தின் வழியாக சதாம் வீதிவரை சென்று, அங்கே வலது புறமாக தபால் நிலைய தலைமையகத்துக்கும்,  பின் கார்கில்ஸ் கட்டிடப் பாதையில் வந்து, இடதுபுறம் திரும்பி துறைமுக அதிகார சபையின் முன்னாள் இருக்கிற கிராண்ட் ஓரியண்டல் ஹோட்டலின் வழியாக, கபூர் கட்டிடப் பாதை வழியில் மீண்டும் மெயின் வீதியை நோக்கிச் செல்லும்.

இன்னொரு பாதை மெயின் வீதி வழியாக டாம் வீதிக்குச் சென்று, புதிய சோனகத் தெரு, மெசேஞ்சர் வீதி, ஆர்மர் வீதி, கிராண்ட் பாஸ் வீதி, புனித ஜோசப் வீதி, நாகலகம் வீதி, கிரான்பாஸ் சந்தை வழியாக பெர்குசன் வீதிக்குச் செல்லும்.

ட்ராம் போக்குவரத்து இருந்த இன்னொரு பாதை; நொரிஸ் வீதி வழியாக இடதுபுறம் திரும்பி பழைய இரயில் நிலையத்தின் வழியாக, டெக்னிக்கல் கொலேஜ் சந்திக்கு ஊடாக வலது புறம் திரும்பி எல்பின்ஸ்டன் மண்டபம் அமைந்துள்ள மருதானை சந்தி வழியாக சின்ன பொரளை சென்று அங்கிருந்து நேராக பொரளை சென்றடையும். 

மொத்தம் 52 ட்ராம் வண்டிகள் இயங்கியுள்ளன. டிராம் சேவையின் வருகையுடன் குதிரை வண்டிகள், மாட்டு வண்டில்கள், ரிக்ஷாக்கள் என்பவற்றின் சகாப்தம் மெல்ல மெல்ல முடிவுக்கு வந்தது. ட்ராம் அறிமுகப்படுத்தப்பட்ட போதே ரிக்ஷா தொழிலாளர்கள் அதன் மீது வெறுப்பைக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ட்ராம் வண்டிகள் மீது கல்லெறி நடத்திய பல சந்தர்ப்பங்களும் பதிவாகியுள்ளன. பொலிசாரும் அப்படியானவர்களை கைது செய்திருக்கிறார்கள்.

ட்ராம் வண்டியின் முன்னால் விழுந்து தற்கொலை முயற்சி செய்துகொண்ட சம்பவங்களும், அப்போதே முடிச்சவிக்கிகளின் அனுபவங்களைப் பற்றியும் அன்று பணிபுரிந்தவர்கள் சிங்களத்தில் பதிவு செய்த விபரங்களை காண முடிகின்றன. 

 

z_p44-Tramcars-2.jpg
 
ட்ராம் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம்.

 

ட்ராம் வண்டி ஓட்டுனர்களும், கண்டக்டர்களும் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களுக்கு நாளொன்றுக்கு 1.20 ரூபாய் மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. நோய்வாய் விடுப்பு அல்லது சாதாரண விடுப்பு அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. அப்படியான விடுப்புகளுக்கு பெரும் அபராதம் விதிக்கப்பட்டது. எனவே 25 வீத சம்பள உயர்வு, சுகயீனம் மற்றும் சாதாரண விடுமுறைகளின் போது அபராதத்தை நிறுத்தும்படியும், மேலதிக நேர வேலைக்கு சம்பளமும் மற்றும், பணிச் சீருடை இலவசமாக வழங்கப்பட வேண்டும் எனவும் தொழிற்சங்கம் கோரிகை வைத்தது. சம்பள உயர்வை மட்டும் மறுத்துவிட்டது நிறுவனம். இதன் விளைவாக 1929 ஜனவரி 23 அன்றிலிருந்து வேலை நிறுத்தம் 13 நாட்களாக தொடர்ந்தது.

வேலை நிறுத்தத்தில் 150 தொழிலாளர்கள் மட்டுமே கலந்து கொண்ட போதும் ஏ.ஈ. குணசிங்கவின் தலைமையில் மிகவும் வீரியத்துடன் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபடாத ஊழியர்களைக் கொண்டு பொலிசாரின் பாதுகாப்புடன் கம்பனி ட்ராம் வண்டிகளை இயக்க முற்பட்டது. தொழிலாளர்கள் ட்ராம் போக்குவரத்துப் பாதைகளை மறித்து மறியல் செய்தார்கள். இந்தப் போராட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களும் இணைந்து கொண்டு ஆதரவு கொடுத்தனர்.

போக்குவரத்து ஸ்தம்பித்தது. மீண்டும் மாட்டு வண்டில்களையும், ரிக்ஷாக்களையும் பயன்படுத்தும் யுகத்துக்குச் சென்றனர் மக்கள். 

பௌஸ்டீட் நிறுவனத்தின் ஏனைய தொழிலாளர்களையும் போராட்டத்தில் இணைந்து ஆதரவு தருமாறு தொழிலாளர்கள் கோரினார்கள். அதன்படி பௌஸ்டீட் நிறுவனத்தின் ஏற்றுமதி இறக்குமதியுடன் சம்பந்தப்பட்ட துறைமுகத் தொழிலாளர்களும் இணைந்துகொண்டார்கள். 

 

colombo-tramways-3-l.jpg
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பலர் கைது செய்யப்பட்டார்கள். வழக்கு தொடரப்பட்டார்கள். பெப்ரவரி 5ஆம் திகதி இரயில்வே தொழிலாளர்கள் பலர் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவளித்தமைக்காக கைது செய்யப்பட்டார்கள். பலர் தாக்கப்பட்டார்கள். இந்த செய்தி வேகமாக பரவியது. மேலும் பல அரச நிறுவன தொழிலாளர்கள் தமது வேலைகளை நிறுத்தி போராட்டத்தில் கைகோர்த்தார்கள். வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தார்கள். ஊர்வலங்களை நடத்தினார்கள். சுமார் 20,000 தொழிலாளர்கள் தொழிற்கட்சித் தலைவர் குணசிங்கவின் அலுவலகத்துக்கு வெளியில் கூடினார்கள். தனது உரையில் தான் தாக்கப்பட்டதையும் அவர் விளக்கினார். கூடியிருந்த தொழிலாளர்கள் “பொலிசாரைக் கொல்” என்று கோஷமிட்டதாக குமாரி ஜெயவர்த்தன தனது நூலில் குறிப்பிடுகிறார்.

 

நகரில் இருந்த பல அரச காரியாலயங்களின் மீது போத்தல்களாலும், தடிகளாலும் தாக்குதல் நடத்தினார்கள். வீதிகளில் இருந்த லாம்புகளை அடித்து நொறுக்கினார்கள். ஆங்காங்கு தீயிட்டார்கள். போலீசார் மூர்க்கத்தனமாக இதனை கட்டுபடுத்த முற்பட்டது. மருதானையில் துப்பாக்கிகளைக் கொண்டு பகிரங்கமாக 20 நிமிடங்கள் சூடு நடத்தினார்கள். அதில் ஐவர் கொல்லப்பட்டனர். 250க்கும் மேற்பட்டோர் காயப்பட்டனர். 1920 களில் நிகழ்ந்த போராட்டங்களிலேயே உச்சப் போராட்டமாக இதனைக் கொள்ளலாம் என்கிறார் குமாரி ஜெயவர்த்தன. 

டொனமூர் ஆணைக்குழு இந்தக் காலப்பகுதியில் தான் இலங்கை வந்து விசாரணைகளை செய்துகொண்டிருந்தார்கள். இந்த நிகழ்வைப் பற்றி கே.எம்.டி.சில்வா தனது நூலில் இப்படிக் குறிப்பிடுகிறார்.

9zuZ0xUAL6UvQDl1_16.jpg
 

 

 

20190317Travel-8.jpg
 
“இந்த தொழில்துறை அமைதியின்மையின் ஒரு விளைவு முதலாளிமார் சம்மேளனம் உருவானதும், இந்த அமைப்புக்கும் குணசிங்கவின் தொழிற்சங்க காங்கிரசுக்கும் இடையிலான முதலாவது கூட்டு உடன்படிக்கையில் 1929 ஜூனில் கைச்சாத்திடப்பட்டதும் ஆகும். முதல் தடவையாக, தற்போதுள்ள தொழிற்சங்கங்களுக்கும், தொழிற்சங்கங்களை ஒழுங்கமைப்பதற்கு உத்தியோகபூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டது. எவ்வாறெனினும், இலங்கையில் காலனித்துவ நிர்வாகம் போர்க்குணமிக்க தொழிற்சங்கவாதத்திற்கு அடிபணிவது குறைவு. எனவே 1927 ஆம் ஆண்டின் பிரித்தானிய வர்த்தக மற்றும் வர்த்தக பிணக்குகள் சட்டத்தின் பிரதான கட்டுப்படுத்தப்பட்ட சரத்துக்களை இலங்கையில் புகுத்த முயற்சித்தது. அரசாங்கத்தில் காலனி நாடுகளுக்கான அரசு செயலாளர் பாஸ்ஃபீல்ட் (Lord Passfield) தனது ஒப்புதலை வழங்க மறுத்துவிட்டார்.” 

 

இந்த போராட்டம் தந்த அதிர்ச்சியால் ட்ராம் போக்குவரத்தை தொடர்ந்து நடத்தும் எண்ணத்தை கைவிட்டது கம்பனி. 1944 ஆம் ஆண்டு செப்டெம்பர் 1 ஆம் திகதி கொழும்பு மாநகர சபையினால் 3.6 மில்லியன் ரூபாவை Bowstad நிறுவனத்திற்கு வழங்கி  ட்ராம் சேவையை அரசு கையகப்படுத்தியது.  கொழும்பு மாநகர சபை 1953 இல் ட்ராம் வண்டிகளை மின்சார ட்ரொலி பேருந்து வண்டிகளாக (ஒரு மாடி, இரு மாடிகளைக் கொண்ட Trolly Buss) மாற்றி போக்குவரத்துக்கு விட்டது. 1958 ஆம் ஆண்டு பண்டாரநாயக்க இலங்கை போக்குவரத்துச் சபையை உருவாக்கி பொதுப்போக்குவரத்தை தேசியமயப்படுத்தினார். 1964 ஆம் ஆண்டு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நிகழ்ந்தது. அரசு ட்ராம் வண்டி சேவைக்கு செலவளிக்கும் வசதியைக் கொண்டிருக்கவில்லை. 1965 ஜனவரி 1ஆம் திகதி ட்ராம் போக்குவாத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனை ஆராய்வதற்காக ஒரு ஆணைக்குழுவும் நியமிக்கப்பட்டது. இதனால் பல விபத்துக்கள் அதிகரித்திருந்ததையும் அந்த ஆணைக்குழு சுட்டிக்காட்டியது. 

அப்படி கைவிட்டபோது அதனை அன்றைய இரும்பு வியாபாரத்தில் பேர்பெற்ற தொழிலதிபராக இருந்த A. Y. S. ஞானம்  ஒரு ட்ராம் வண்டி 100 ரூபா படி மாநகர சபையிடம் இருந்து ஏலத்தில் கொள்வனவு செய்தார்.

இன்று நம் நாட்டில் டிராம் போக்குவரத்து இல்லை, ஆனால் அவை நோர்வே, சுவிட்சர்லாந்து, பின்லாந்து, பெல்ஜியம், பல்கேரியா போன்ற பல ஐரோப்பிய நாடுகளில் நகரப் போக்குவரத்துக்காக வெற்றிகரமான முறையில் பயன்பாட்டில் உள்ளன. ட்ராம் போக்குவரத்தை நவீனமயப்படுத்தி அதே தெருக்களில் அதே தண்டவாளங்களில் பயணிக்கின்றன.

கொழும்பு டெக்னிக்கல் சந்தியில் அமைந்துள்ள இலங்கை தேசிய ரயில்வே நூதனசாலையில் இன்றும் ட்ராம் வண்டிகளும், என்ஜின்களும் பார்வைக்கு வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

நன்றி - தினகரன் 27.03.2022

https://www.namathumalayagam.com/2022/03/TramTrollyColombo.html

 
 
  • தொடங்கியவர்

கொட்டாஞ்சேனை கொட்டங்காய் தோட்டமா? ( கொழும்பின் கதை – 21) - என்.சரவணன்

Kotahena.jpg

இன்று கொழும்பின் பதினைந்து வலயங்களில் 13 வது வலயமாக கொட்டாஞ்சேனையும், கொச்சிக்கடையும் சேர்த்து அழைக்கப்படுகிறது. சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர் என பல்லின மக்கள் கலந்து வாழும் இந்தப் பகுதியில்; பரதவர், மலையாளிகள், கொழும்பு செட்டி போன்ற சமூகங்களும் குறிப்பிடத்தக்க செல்வாக்கையுடைய சமூகமாக வாழ்ந்து வருகின்றனர். கொழும்பில் தமிழர் செறிவாக வாழும் வாழிடங்களில் கொட்டாஞ்சேனை முக்கியமானது. தமிழ் தியேட்டர்கள், கோவில்கள், தமிழ் பாடசாலைகள், தமிழில் பெயரிடப்பட்ட கடைகள் போன்றவற்றை சான்றுகளாகக் கூறலாம்.

1856 The Ceylon Almanac and Annual Register for the Year of our lord, ஆண்டறிக்கையில் 49 வது பக்கத்தில் கொழும்பு நகரத்தில் இருந்த இடங்களின் விபரங்களையும், அங்கே இருந்த வீடுகளின் எண்ணிக்கையையும் பட்டியலிட்டிருக்கிறது. அதன் பிரகாரம் கொட்டாஞ்சேனையில் அன்று 253 வீடுகள் இருந்ததாக தெரிவிக்கிறது. அதேவேளை அன்றும் அதன் பெயர் கொட்டஹேன அல்ல. அதில் Cotanchina என்று தான் இருக்கிறது என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும். கொட்டாஞ்சேனையில் கொட்டாஞ்சினா மில்ஸ் (Cottanchina Mills) என்கிற பெயரில் ஒரு ஆலையும் john F.Baker, T.W.Hall ஆகியோரால் நடத்தப்பட்டிருப்பதை 1887 இல் வெளியான சிலோன் டிரெக்டரி குறிப்பிடுகிறது.

கொட்டாஞ்சேனையை இப்போது Kotahena என்று அழைத்தாலும்  சுமார் ஒன்றரை நூற்றாண்டுக்கு முன் கொட்டாஞ்சினா “Cottanchina” என்றே அரச பதிவுகளிலும் காணப்படுகின்றன.  1866 இல் வெளியான The Ceylon Directory ; Calender என்கிற நூலில் கொழும்பில் உள்ள பிரதேசங்களின் எல்லைகளைப் பற்றிய விபரங்களைக் காண முடிந்தது. அதில்

“கொட்டாஞ்சினாவின் மேற்கில் கடல் எல்லையில் உள்ளது; வடக்கில், கடல், களனி கங்கை, நதி; கிழக்கு மற்றும் தென்கிழக்கு, களனி ஆற்றின் மூலம், ஆற்றில் இருந்து ஏரிக்கு செல்லும் கால்வாய் வழியாக, வேந்தர்மெய்டன் போல்டரில் (Vandermeyden's Polder) உள்ள கால்வாயிலிருந்து புனித ஜோசப் தெருவுக்குச் செல்லும் வீதி வழியாக; தெற்கில், பார்பர் வீதி, ஆண்டர்சன் வீதி என்பவற்றை எல்லையாகக் கொண்டிருந்தது.” என்று குறிப்பிடுகிறது.

 

2rp18zfcdwvnw88puwe6twentiethcentury00ar
Twentieth century impressions of Ceylon நூலில் இருந்து

சிங்கள மொழியில் கொட்டாஞ்சேனையை “கொட்ட + ஹேன” என்பார்கள். அதாவது “கட்டையான மரங்கள்”  என்று பொருள் படலாம். அதேவேளை தமிழிலும் “கொட்டான் + சேனை” என்பதற்கு நேரடி தமிழ் வடிவம் அசல் அர்த்தத்தை தருகிறது. 1690களில் வரையப்பட்ட டச்சு வரைபடமான Kaart van het Kasteel De Stad en omstreken van Colomboகொழும்பு கொட்டாஞ்சேனை Coutenchene என என்று குறிப்பிடுகிறது. ஆங்கிலேயர் கால குறிப்புகளில் கொட்டான் சீனா (Cottan China) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.

 

அது மட்டுமன்றி டச்சு மொழியில் “Korteboam” என்றால் கட்டையான மரங்கள் என்று அர்த்தம். கொட்டாஞ்சேனையில் தற்போதைய இராமநாதன் வீதியின் முன்னைய பெயர் “Korteboam Street” என்பதையும் கருத்திற் கொள்க.

இந்தப் பிரதேசம் கொட்டாங்காய் மரத்துக்கு பிரபலமாக இருந்ததாலும், கொட்டாங்காய் உள்ளே இருந்து எடுக்கப்படும் கொட்டை உள்ளூர் “பாதாம் பருப்பு” போல பயன்படுத்தப்பட்டதாகவும் அதன் காரணமாக கொட்டாஞ்சேனை என்று பெயர் வந்திருக்கக் கூடுமென்றும் சில குறிப்புகள் கூறுகின்றன.  எனக்கு விபரம் தெரிந்த காலத்தில் கொட்டாஞ்சேனையின் பொன்ஜீன் வீதி சந்தியில் அப்படி கொட்டாங்காய் மரமொன்று இருந்ததைக் கண்டிருக்கிறேன். கொலேஜ் வீதியிலும், இன்னும் பல இடங்களிலும் சிறு வயதில் கொட்டங்காய் பறித்திருக்கிறோம். அவை அந்த மரங்களின் எஞ்சிய எச்சமா என்கிற சந்தேகமே எழுகிறது.

1868 இல் வெளியான Medical Times and Gazette இல் புனித லூசியாஸ் தேவாலயம் “கொட்டன் சீனா” (CottonChina) வில் இருப்பதாகக் குறிப்பிடுகிறது. 

கொட்டாஞ்சேனை சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் மிகவும் பரபரப்பான பிரதேசங்களில் ஒன்றாக இருந்தது. மேலும் மிகவும் பழமையான வரலாற்றையும் கொண்டது.

1618இல் வெளியான “Conquista temporal, e espiritual de Ceylão” என்கிற நூலில்  குவேரஸ் (Fernaõ de Queyroz) கொட்டாஞ்சேனையில் அன்று இருந்த கத்தோலிக்க தேவாலயங்களைப் பற்றியும், பிரபலம் பெற்றிருந்த கிறிஸ்தவப் பணிகளைப் பற்றியும் குறிப்பிடுகிறார். 

இயேசுநாதரின் 12 சீடர்களில் ஒருவரான புனித தோமஸ் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் வந்ததாக பிரபலமான கதையுண்டு. அவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை வந்திருந்தபோது இந்தப் பகுதியில் பிரசங்கங்கள் நடத்தியதாக சில ஆய்வாளர்கள் நம்புகின்றனர். அந்த இடத்தில் தான் இன்றைய ஜிந்துபிட்டி புனித தோமஸ் தேவாலயம் இருப்பதாக பல நூல்களிலும் கூறப்படுகின்றன. புனித தோமஸ் பின்னர் சென்னை மயிலாப்பூரில் இறந்ததாகவும் அந்தக் கதை தொடர்கிறது. இதன் நம்பகத்தன்மைக்கப்பால் இந்த விபரம் பல நூல்களிலும் பதிவு பெற்றிருப்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். மேலும் இந்தப் பிரதேசம் அப்போது மீனவர்கள் வாழ்ந்த பிரதேசமாக இருந்திருக்க வாய்ப்புண்டு. போர்த்துக்கேயர் ஐநூறு வருடங்களுக்கு முன் வந்த போது இங்கே மிகப் பழமையான நெஸ்டோரியன் சிலுவையை (Nestorian Cross) கண்டெடுத்ததாக கூறப்படுகிறது.

s-l1600%20(1)%20(1).jpg

 

1855 இல் வெளியான The Ceylon Almanac அறிக்கையில் அன்று கொழும்பில் இருந்த முக்கிய வீதிகளில் இருந்த வீடுகளின் எண்ணிக்கை பட்டியலிடப்பட்டுள்ளது. அதில் கொட்டாஞ்சேனையில் 253 வீடுகள் மட்டுமே இருந்ததாகக் குறிப்பிடுகிறது.

கொட்டாஞ்சேனை - தீபதுத்தமாறாமய விகாரை பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விகாரை. பௌத்த மறுமலர்ச்சியின் தோற்றம் இந்த விகாரையிலிருந்து தான் தொடங்கியது. இலங்கையின் முதலாவது கலவரத்துக்கு காரணமான விகாரையும் இது தான். இலங்கையில் பௌத்த மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான கேர்னல் ஒல்கொட் முதலில் வந்தது குணானந்த தேரரை சந்திக்கத்தான். அது இங்கு தான் நிகழ்ந்தது. அநகாரிக தர்மபாலவை கவர்ந்த பல நிகழ்வுகள் இங்கு தான் நிகழ்ந்தன. இலங்கையின் பௌத்த கொடி உருவானதும் இங்கு தான். அந்த கொடி முதலில் ஏற்றப்பட்டதும் இங்கு தான். வெசாக் தினம் விடுமுறை தினமாக ஆக்குவதற்காக போராடியதும் இங்கிருந்து தான் அதனை முதலில் அறிவித்ததும் இங்கு தான். தாய்லாந்து இளவரசர் பௌத்த மத பிக்குவாக ஆனதும் இங்கு தான். இப்படி பல பௌத்த வரலாற்று சம்பவங்களுக்கு சொந்தம் இந்த விகாரை.

கொச்சிக்கடை

கொழும்பானது ஐந்தாம் நூற்றாண்டிலிருந்தே ஒரு துறைமுகமாக பலரால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

1874 ஆம் ஆண்டு கொழும்புத் துறைமுகம் விரிவாக்கப்பட்டது. ஐம்பதுக்கும் மேற்பட்ட நீராவிக் கப்பல்கள் நங்கூரமிடும் அளவுக்கு இட வசதி பெருப்பிக்கப்பட்டது. கொழும்பின் அமைப்பையே மாற்றும் வல்லமையை துறைமுகம் பெற்றது. 1890 இல் கப்பல்கள் தரித்து நின்று பழுதுபார்த்து செல்லும் இடமாகவும் மாறியது. எனவே துறைமுகத் தொழிலுக்கு ஆளணியின் அவசியம் உணரப்பட்டது. துறைமுகத்துக்கு வெளியில் கோட்டையில் வட பகுதியில் துறைமுகத்தோடு அண்டிய பகுதியான கொச்சிக்கடையில் தொழிலாளர்களைக் குடியேற்றினார்கள். ஆங்கிலேயர் மேற்கொண்ட நகர்ப்புற தொழிலாளர் குடியேற்றங்களில் மிகப் பழமையான குடியேற்றமாக கொச்சிக்கடைக் குடியேற்றத்தைக் குறிப்பிடலாம். கொச்சிக்கடை என்கிற இடப்பெயர் ஆங்கிலேயர்களுக்கு முன்னரே வந்துவிட்டதை அறிவீர்கள்.

அந்த கோட்டையின் வடக்குப் பகுதியில் அமைந்திருந்த கொச்சிக்கடை பல தொழிலாளர்கள் குடியேற்றப்பட்டார்கள். இந்தக் குடியேற்றம் கொச்சிக்கடை, கொட்டாஞ்சேனை, ஜிந்துபிட்டி, ஆட்டுப்பட்டித் தெரு வரை நீண்டது. 

கொச்சிக்கடை குடியேற்றம் மட்டுமல்ல கொழும்புத் துறைமுகத்தின் அன்றைய திடீர் கட்டமைப்பால் தான் இலங்கையின் முதலாவது “இலங்கை வங்கி” (Bank of Ceylon) 1841 இல் உருவாக்கப்பட்டது. அதுமட்டுமன்றி கொழும்பு நகரின் மையமான கோட்டைப் பகுதி இலங்கையின் பொருளாதார மையமாக மாறியதும் துறைமுகத்தை மையமாக வைத்துத் தான்.

கொட்டாஞ்சேனை, கொச்சிக்கடைப் பகுதிகளில் நெடுங்காலமாக தமிழர்கள் செறிவாக வாழும் பகுதி. அதுபோல புறக்கோட்டைப் பகுதியில், நகை வியாபாரம், புடவை வியாபாரம், பலசரக்கு மொத்த விற்பனை, இரும்புகே கடைகள் உட்பட பெரிய கம்பனிகள் வரை தமிழர்களிடம் இருந்தது. 1983 கலவரத்தின் போது இதனால் தான் இந்தப் பகுதிகள் கொள்ளையர்களின் இலக்காக மாறியது. தமிழர்கள் அதிக சொத்திழப்பை எதிர்கொண்ட பிரதேசங்கள் இவை. ஆனால் இனவாதக் காடையர் கும்பல் இலங்கையிலேயே அடிவாங்கி பின்வாங்கி ஓடியதென்றால் அது கொச்சிக்கடையில் தான். கொச்சிக்கடையில் பாதிப்பு மிகவும் குறைவாகவே இருந்தது.

கொட்டாஞ்சேனை இலங்கையின் வரலாற்றில் முக்கிய பதிவுகளை வலுவாக பதித்த இடங்களில் ஒன்று. குறிப்பாக காலனித்துவ கால வரலாற்றுப் பதிவுகளைக் குறிப்பிடலாம். இத்தொடரில் வேறு பல இடங்களில் அவை பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

நன்றி - தினகரன் 03.04.2022

https://www.namathumalayagam.com/2022/04/Kotahena.html

 
 
  • 11 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மறைக்கபட்ட வரலாற்று உண்மைகள். 

இலங்கையில் பல வருடங்களாக ஈழ தமிழர்கள் தனி நாடு. தனி ஈழம் கேட்டு அகிம்சை முறையாகவும், ஆயுத முறையாகவும், போராடி வந்தார்கள். உண்மையில் இலங்கை யாருக்கு சொந்தமானது ?
சில தமிழர்களுக்கும் வெளிநாட்டவருக்கும் ஒரு கேள்வி இருக்கிறது. சிங்களவர்கள் பெருபான்மையாக வசிக்கும் இலங்கையில். சிறுபான்மையாக வாழும் தமிழர்கள் தனி நாடு கேட்டு பல ஆண்டுகளாக சண்டை போட்டு கொண்டு இருக்கிறார்கள். வெளியில் இருந்து வந்து குடியேறியவர்கள் தானே தமிழர்கள் இவர்கள் எப்படி தனி ஈழ நாடு கேட்கிறார்கள். சிங்களவர்களின் கோவம் நியாம் தானே. தமிழன் பிழைக்க போன இடத்தில் தனி நாடு கேக்கலாமா?
கொஞ்சம் தமிழர் வரலாற்றை புரட்டி பார்த்தல்
இலங்கைத் தீவு தமிழர் தேசமாகும். விஜய மன்னன் இலங்கைக்கு வந்த பின்னர்தான் பௌத்த மதமும் சிங்களவர்களும் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. அதற்கு முன்னர் இலங்கையைத் தமிழ் மன்னர்கள்தான் ஆட்சி செய்தனர். இராவணன், குவேனி. சங்கிலி பாண்டியன் .தி .மு. எல்லாளன் என வரலாற்றுப் பட்டியலை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இதெல்லாம் கல் சுவடுகள் வரலாற்றில் நிருபிக்கப்பட்ட உண்மைகள். சிங்களவர்கள் இலங்கைக்கு வரும் முன் இந்த இலங்கை இப்படித்தான் இருந்து இலங்கை முழுவதும் தமிழ் மன்னர்கள் ஆண்டார்கள்.
இந்தியாவில் இருந்து வந்தவர்கள்தான் சிங்களவர்கள். பாகு என்ற பெயர் பங்களாதேசத்துக்குரியது. பராக்கிரமபாகு, விக்கிரமபாகு என சிங்களவர்களுக்குப் பெயர்கள் இருக்கின்றன. இது இந்தியாவில் இருந்து வந்தவர்கள்தான் சிங்களவர்கள் என்பதைப் பறைசாற்றுகின்றது.
அத்துடன், இலங்கை தமிழர்களின் பூர்வீகம்தான் என்பதை உறுதிப்படுத்துவதற்கு மேலும் பல ஆதாரங்கள் உள்ளன. விஜய மன்னன் இங்கு வந்துதான் தமிழர்களின் பிரதேசங்களை ஆக்கிரமித்துக்கொண்டார்.
பௌத்த மதம் கூட இந்தியாவில் இருந்துதான் வந்தது. எனவே, தமிழ் ஈழம் என்று சொல்லுகின்ற வடக்கு மட்டுமல்ல, இலங்கையின் பூர்வீகம் தமிழ்தான் என்பது தெளிவாகத் தென்படுகின்றது. தமிழர்களுக்கு சொந்தமான நாடு. மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள் இந்தியாவில் இருந்து வந்திருந்தாலும் அவர்கள் நூறு, இருநூறுக்கும் மேற்பட்ட வருடங்கள் இங்குதான் வாழ்கின்றனர். இலங்கைக்கு வந்தேரிகளாக குடியேறியவர்கள் சிங்களர்களே.  தமிழர்கள் பூர்வ குடி மக்கள்  என்பதை இலங்கை அரசு புரிந்து கொள்ள வேண்டும். 

Bild

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

மறைக்கபட்ட வரலாற்று உண்மைகள். 

இலங்கையில் பல வருடங்களாக ஈழ தமிழர்கள் தனி நாடு. தனி ஈழம் கேட்டு அகிம்சை முறையாகவும், ஆயுத முறையாகவும், போராடி வந்தார்கள். உண்மையில் இலங்கை யாருக்கு சொந்தமானது ?
சில தமிழர்களுக்கும் வெளிநாட்டவருக்கும் ஒரு கேள்வி இருக்கிறது. சிங்களவர்கள் பெருபான்மையாக வசிக்கும் இலங்கையில். சிறுபான்மையாக வாழும் தமிழர்கள் தனி நாடு கேட்டு பல ஆண்டுகளாக சண்டை போட்டு கொண்டு இருக்கிறார்கள். வெளியில் இருந்து வந்து குடியேறியவர்கள் தானே தமிழர்கள் இவர்கள் எப்படி தனி ஈழ நாடு கேட்கிறார்கள். சிங்களவர்களின் கோவம் நியாம் தானே. தமிழன் பிழைக்க போன இடத்தில் தனி நாடு கேக்கலாமா?
கொஞ்சம் தமிழர் வரலாற்றை புரட்டி பார்த்தல்
இலங்கைத் தீவு தமிழர் தேசமாகும். விஜய மன்னன் இலங்கைக்கு வந்த பின்னர்தான் பௌத்த மதமும் சிங்களவர்களும் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. அதற்கு முன்னர் இலங்கையைத் தமிழ் மன்னர்கள்தான் ஆட்சி செய்தனர். இராவணன், குவேனி. சங்கிலி பாண்டியன் .தி .மு. எல்லாளன் என வரலாற்றுப் பட்டியலை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இதெல்லாம் கல் சுவடுகள் வரலாற்றில் நிருபிக்கப்பட்ட உண்மைகள். சிங்களவர்கள் இலங்கைக்கு வரும் முன் இந்த இலங்கை இப்படித்தான் இருந்து இலங்கை முழுவதும் தமிழ் மன்னர்கள் ஆண்டார்கள்.
இந்தியாவில் இருந்து வந்தவர்கள்தான் சிங்களவர்கள். பாகு என்ற பெயர் பங்களாதேசத்துக்குரியது. பராக்கிரமபாகு, விக்கிரமபாகு என சிங்களவர்களுக்குப் பெயர்கள் இருக்கின்றன. இது இந்தியாவில் இருந்து வந்தவர்கள்தான் சிங்களவர்கள் என்பதைப் பறைசாற்றுகின்றது.
அத்துடன், இலங்கை தமிழர்களின் பூர்வீகம்தான் என்பதை உறுதிப்படுத்துவதற்கு மேலும் பல ஆதாரங்கள் உள்ளன. விஜய மன்னன் இங்கு வந்துதான் தமிழர்களின் பிரதேசங்களை ஆக்கிரமித்துக்கொண்டார்.
பௌத்த மதம் கூட இந்தியாவில் இருந்துதான் வந்தது. எனவே, தமிழ் ஈழம் என்று சொல்லுகின்ற வடக்கு மட்டுமல்ல, இலங்கையின் பூர்வீகம் தமிழ்தான் என்பது தெளிவாகத் தென்படுகின்றது. தமிழர்களுக்கு சொந்தமான நாடு. மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள் இந்தியாவில் இருந்து வந்திருந்தாலும் அவர்கள் நூறு, இருநூறுக்கும் மேற்பட்ட வருடங்கள் இங்குதான் வாழ்கின்றனர். இலங்கைக்கு வந்தேரிகளாக குடியேறியவர்கள் சிங்களர்களே.  தமிழர்கள் பூர்வ குடி மக்கள்  என்பதை இலங்கை அரசு புரிந்து கொள்ள வேண்டும். 

Bild

 

இராவணன், குவேனியெல்லாம் புராண பாத்திரங்களல்லவா? இவர்களை வைத்தா யார் முந்தி வந்தோர் என்று நிரூபிக்கப் போகிறார்களாம்? கற்பனையை விட வலுவான விஞ்ஞான ரீதியான ஆதாரம் 2013 இல் கீழே இருக்கும் ஆய்வுக் கட்டுரையில் வந்திருக்கிறதே?

https://www.nature.com/articles/jhg2013112

சுருக்கமாக, தாய்வழி மரபணு (mtDNA) ஆய்வின் படி:

- வேடர்கள் (Vedda) தான் தனித்துவமான மரபணு அடையாளத்தைக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் தான் தமிழ், சிங்கள குழுவினருக்கு தொடர்பில்லாத தனித்துவம் கொண்டிருக்கின்றனர்.
- தமிழருக்கும், சிங்களவருக்கும் இந்தியாவில் இருக்கும் மரபணு அடையாளங்களோடு தொடர்பிருக்கிறது (எனவே தமிழரும், சிங்களவரும் இந்தியாவில் தான் ஆரம்பம்!)

- அத்தோடு, தமிழருக்கும், சிங்களவருக்கும் இடையே நெருங்கிய மரபணுத் தொடர்பு இருக்கிறது.

 இவை கசக்கும் உண்மைகள், ஆனால் இராவணன், குவேனி, மஹாவம்சக் கற்பனையை விட ஓரளவு ஆதாரங்கள் கொண்ட உண்மைகள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.