Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரந்தூரில் விளைநிலங்களை அழித்து விமான நிலையம் தேவையா? சீமான் கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பரந்தூரில் விளைநிலங்களை அழித்து விமான நிலையம் தேவையா? சீமான் கேள்வி

Screenshot-2022-08-27-at-8.22.19-AM.png

சென்னையின் 2-வது சர்வதேச விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்பட உள்ளது. இதற்கு தேவையான நிலம் விவசாய நிலங்களாகவும், குடியிருப்பு பகுதிகளாகவும் இருப்பதால் அங்கு வசிக்கும் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனால் ஏகனாபுரம், பரந்தூர், நெல்வாய் உள்பட கிராமங்களில் பல்வேறு போராட்டங்களையும் பொதுமக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

அவர்களின் போராட்டத்துக்கு அரசியல் கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் பரந்தூர் அருகேயுள்ள ஏகனாபுரம் கிராமத்துக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சென்றார். போராட்ட களத்தில் இருந்த பொதுமக்களை சந்தித்து பேசினார். நிலம் கையகப்படுத்தப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் கேட்டறிந்தார்.

அப்போது அங்கிருந்த பெண்கள் சீமானை பார்த்ததும் கண்ணீருடன் புலம்ப தொடங்கினார்கள். கண்ணீர் விட்ட பெண்கள் ‘எங்களுக்கு எங்க ஊர் வேணும்பா… சொந்த பூமியை விட்டு நாங்க எங்கே போகமுடியும்? இந்த மண்ண விட்டு எங்களால போகமுடியாதுப்பா… ஏதாவது செஞ்சு எங்களை காப்பாத்துப்பா…’ என்று மூதாட்டிகள் சிலர் கதற தொடங்கினார்கள்.

பின்னர் யாருமே எதிர்பார்க்காதபடி சீமான் காலில் விழுந்து அழ தொடங்கினார்கள். இதனால் சீமான் பதறி போனார். உடனடியாக அவர்களை தூக்கி கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார். ஒருகட்டத்தில் சீமானும் துக்கம் தாங்காமல் அழ தொடங்கினார். அவரை நிர்வாகிகள் தேற்றினார்கள்.அதனைத் தொடர்ந்து போராட்டக்களத்தில் உள்ள மக்களுக்கு ஆதரவாக தனது கருத்துகளை சீமான் வெளிப்படுத்தினார்.

அவர்களுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் தெரிவித்து, அங்கிருந்து புறப்பட்டார். முன்னதாக பொதுமக்களை சந்தித்த பின்னர் சீமான் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- விளைநிலங்களை அழிப்பதா? புதிதாக விமான நிலையம் அமைக்க என்ன தேவை வந்துவிட்டது? ஏற்கனவே உள்ள விமான நிலையத்தில் ஏதாவது பிரச்சினையா? புதிய விமான நிலையம் வேண்டும் என மக்கள் வீதிக்கு வந்து போராடினார்களா? மக்களின் வாழ்விடங்களையும், விளைநிலங்களையும், நீர்நிலைகளையும் அழித்து விமான நிலையம் கட்டுவதால் என்ன வளர்ச்சி கிடைத்துவிட போகிறது?

சென்னையில் மழை காலத்தின்போது வெள்ளநீர் வழிந்தோடுகிறது. கழிவுநீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. சாலைகள் சரியல்ல. இதனை போக்க ஏதாவது தொலைநோக்கு திட்டங்களை அரசு கொண்டுவந்ததா? இதுபோன்ற திட்டங்களால் சுற்றியுள்ள நில முதலாளிகள் வளரமுடியுமே தவிர, அடித்தட்டு மக்கள் வளரமுடியாது.

விளைநிலங்களை அழித்து ஒரு விமான நிலையம் அமைய வேண்டுமா? அதுதான் வளர்ச்சியா? அவசியமற்ற நடவடிக்கை ஏற்கனவே சென்னையில் ஒரு விமான நிலையம் இருக்கும்போது, இந்த புதிய நடவடிக்கை அவசியமற்றது. அதனால் தான் மக்கள் ‘புதிய விமான நிலையம் வேண்டாம்’ என்று வீதிக்கு வந்து போராடுகிறார்கள். இங்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் புறம்போக்கு நிலம் இருப்பதாகவும், 3-ல் ஒரு பங்கு தான் மக்கள் நிலங்கள் வருகின்றன என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருக்கிறார்.

அப்படி என்றால் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நில எல்லைக்குள்ளாக மட்டும் உள்ளூர் விமான நிலையத்தை கட்டிக்கொள்ளட்டுமே… எதற்காக 5 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கேட்கிறீர்கள்? இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த துடிப்பதின் அவசியம் என்ன? இவ்வாறு சீமான் கூறினார்.
 

 

https://akkinikkunchu.com/?p=223528

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, கிருபன் said:

பரந்தூரில் விளைநிலங்களை அழித்து விமான நிலையம் தேவையா? சீமான் கேள்வி

"கலைஞர்  கருணாநிதி சர்வதேச விமான நிலையம்" என்று பெயர் வைக்க... 
ஒரு விமான நிலையம் தேவை என்றால்...
விளை நிலமாவது, Hair ஆவது. 😂
சீமான்  கிடக்கிறா(ர்)ன்... நீங்க கட்டுங்க.   🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, கிருபன் said:

பரந்தூரில் விளைநிலங்களை அழித்து விமான நிலையம் தேவையா?

ஜேர்மனியில் இப்படியொரு  விளைநிலத்தில் விமான நிலையம் அமைக்க வெளிக்கிட்டால் நாடே ரணகளமாயிருக்கும்.புகைரதநிலையத்தை நவீனமாக விஸ்தரிக்கவே விடவில்லை.ஒன்று இல்லை  என ஆக்கிவிட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

விமான நிலையத்திற்கு இடம் தந்தால் அரசு வேலை! – அமைச்சரின் அறிவிப்பு!

E V Velu
சென்னை அருகே பரந்தூரில் விமான நிலையம் அமைக்க நிலம் தருபவர்களுக்கு அரசு வேலை வழங்குவதாக அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

சென்னை அருகே பரந்தூரில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கு நில எடுப்பு பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த விமான நிலையம் அமைவதற்காக தங்களது நிலங்களை கொடுக்க அப்பகுதி மக்கள் சிலர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு “பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக அப்பகுதியில் உள்ள 13 கிராம மக்களிடமும் சந்தித்து பேசினோம். பலர் நிலத்திற்கு அரசின் நிர்ணயத்தை விட கூடுதல் தொகை தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். விமான தளத்தின் ஓடுபாதையை மாற்றி அமைத்தால் 500 வீடுகள் இடிக்கப்படுவதை தவிர்க்கலாம் என சிலர் கூறினர். இதுகுறித்து ஆய்வு செய்ய விரிவான திட்ட அறிக்கை அளித்தவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
விமான நிலையங்களுக்கு இடம் தருபவர்களுக்கு நில மதிப்பை விட மூன்றரை மடங்கு அதிக பணம் அளிக்க அரசு முடிவெடுத்துள்ளது. அதோடு புதிதாக வேறொரு நிலமும், அதில் வீடுக்கட்டிக் கொள்ள பணமும் அரசால் அளிக்கப்படும். இதுதவிர வீட்டிற்கு ஒரு படித்த நபருக்கு அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்” என கூறியுள்ளார்.
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

"கலைஞர்  கருணாநிதி சர்வதேச விமான நிலையம்" என்று பெயர் வைக்க... 
ஒரு விமான நிலையம் தேவை என்றால்...
விளை நிலமாவது, Hair ஆவது. 😂
சீமான்  கிடக்கிறா(ர்)ன்... நீங்க கட்டுங்க.   🤣

அதானே... உந்த சீமானுக்கு விசர்... 😁

கட்டட்டும்.... அப்பதான் திராவிடநாடு முன்னேறும்... 

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை பரந்தூர் விமான நிலையம்: தொடரும் போராட்டங்களும் வலுவடையும் பாதுகாப்பு ஏற்பாடுகளும்

5 மணி நேரங்களுக்கு முன்னர்
 

சித்தரிப்புப் படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

சித்தரிப்புப் படம்

சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது முதல், அதற்கு ஆதரவுக் குரல்களும் எதிர்ப்பு குரல்களும் எழுந்து வருகின்றன.

கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், "பரந்தூரில் அமையவிருக்கும் புதிய விமான நிலையத் திட்டத்தை செயல்படுத்துவது என்பது நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கானப் படிக்கட்டு. தமிழ்நாட்டை 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாக்கும் உயர்ந்த குறிக்கோளை எட்டுவதற்கானப் பயணத்தில் இது மற்றொரு மைல் கல்லாகும்," என்று குறிப்பிட்டிருந்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இந்த விமான நிலையத் திட்டத்திற்காக 13 கிராமங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் சந்தை மதிப்பை விட 3.5 மடங்கு இழப்பீடு வழங்குவதாக மாநில அரசு அறிவித்தது.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 16ம் தேதியன்று கிராம சபைக் கூட்டத்தில் திட்டத்திற்கு எதிராக இந்த 13 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிய பிறகு, விமான நிலையத் திட்டம் குறித்த மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

 

இந்த பொது கருத்துக் கேட்பு கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, தா.மோ..அன்பரசன், ஸ்ரீபெரும்புதூர் எம். எல்.ஏ கே.செல்வப்பெருந்தகை ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், கடந்த சில நாட்களாக, இந்த விமான நிலையம் கட்டுவதற்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களை ஒட்டி, காவல்துறையினர் அங்கு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

ஏற்கனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகம் மக்கள் கூடுவதை தடுக்க, கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல், 30 (II) காவல் சட்டம் அமல்படுத்தப்பட்டது.

இதன் காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் எதிர்வரும் நாட்களில், முக்கிய விழாக்கள், பண்டிகைகள், அரசியல், சாதி மற்றும் மத தலைவர்களின் பிறந்த நாட்கள், நினைவு நாட்கள் வரவுள்ளதால் மக்கள் பெருமளவில் கூட வாய்ப்புள்ளதால் இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில், பாமக மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பாமக சார்பில், 13 கிராமங்களைச் சேர்ந்த மக்களிடம் கருத்து கேட்டு, அவர்களின் கோரிக்கையை அரசிடம் கலந்து பேசி தீர்வு காணுவதற்காக 7 பேர் கொண்ட குழுவை அமைத்ததாக அக்கட்சி அறிக்கை விடுத்தது. இத்திட்டத்திற்கு எதிராக பரந்தூரில் கூட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஏற்கனவே சென்னையில் விமான நிலையம் உள்ள நிலையில், இரண்டாவது விமான நிலையம் கட்டுவதற்கான அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பினார்.

 

பாமக

பட மூலாதாரம்,@PMKGKM/TWITTER

இத்திட்டத்திற்கு ஏன் எதிர்ப்பு?

இந்த விமான நிலையம் கட்டுவதற்கான இடமான பரந்தூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது தற்போதுள்ள விமான நிலையத்திலிருந்து 53 கி.மீ தொலைவில் உள்ளது என்று இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும் அந்த அறிக்கையின்படி, விமான நிலையம் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடம் 4,791 ஏக்கருக்கு மேல். அதில், 2605 ஏக்கர்கள் நஞ்சை நிலமாக உள்ளது. இது இரண்டு ஓடுபாதையை அமைக்க ஏதுவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமான நிலையத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலம், பரந்தூர், வளந்தூர், கொடவூர், ஏகனாபுரம் உட்பட 13 கிராமங்களை உள்ளடக்கியது. இந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை நம்பி உள்ளனர். அவர்கள் இங்குள்ள வளமான நீர்நிலை வசதிகள் வேறு எங்கு இல்லை என்றும், இப்பகுதியில் விமான நிலையம் கட்டக்கூடாது எனவும் வலியுறுத்தி வருகின்றனர். இதே கருத்துகளை சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி, அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட சேலம்-சென்னை விரைவுச் சாலைத் திட்டமான 8 வழிச்சாலைக்கு எதிராக குரல் கொடுத்து வந்த பன்னியப்பன் மற்றும் குணசேகரன் தர்மராஜா ஆகிய இருவரும், விமான நிலையம் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி மக்களை சந்தித்தனர். அப்போது, அவர்கள் இருவரை காஞ்சிபுரம் காவல்துறை கைது செய்து விடுவித்தது.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

மேலும், சில கட்சிகளும் கிராம மக்களும் இதற்கு எதிராக போராட்டம் அறிவித்துள்ள நிலையில், பரந்தூர் விமான நிலையம் அமைப்பது குறித்து அரசு மறுபரிசீலனை செய்யுமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். https://www.bbc.com/tamil/india-62745262

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பரந்தூர் விமான நிலையம்: கிராமங்களில் தமிழ்நாடு காவல்துறையின் தீவிரக் கண்காணிப்பு ஏன்?

  • எம். மணிகண்டன்
  • பிபிசி தமிழ்
4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

பரந்தூர் விமான நிலையம்

 

படக்குறிப்பு,

ஏகனாபுரத்தில் 60 நாள்களுக்கும் மேலாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரை ஒட்டி விமான நிலையம் அமைய இருக்கும் கிராமப் பகுதிகளில் காவல்துறையினர் தீவிரமான கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிராமங்களை இணைக்கும் முக்கியச் சாலையில் ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இது தங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக கிராம மக்கள் கூறுகிறார்கள்.

தங்கள் பகுதியில் தேவையில்லாமல் காவல்துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், ஊடகத்தினர் பலரை வரவிடாமல் தடுப்பதாகவும் மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்காகவும், சமூக விரோதிகள் ஊடுருவிவிடாமல் தடுப்பதற்காகவும்தான் கண்காணிப்பில் ஈடுபடுவதாக மாவட்ட நிர்வாகம் கூறுகிறது.

பரந்தூர் விமான நிலையத்துக்காக தங்களுடைய விளைநிலங்கள், வீடுகள், கோவில்கள், பள்ளிக்கூடங்கள், நீர்நிலைகள் ஆகியவை அழிக்கப்பட இருப்பதாகக் குற்றம்சாட்டும் கிராம மக்கள் அரசுக்கு தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.

 
 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

விமான நிலையத்துக்காக கையப்படுத்தப்பட இருப்பதாகக் கருதப்படும் ஏகனாபுரம் கிராமத்தில் மக்கள் 60 நாள்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள் உள்ளிட்டோரிடம் முறையிட்டும் தங்களுக்கு ஆதரவாக எதுவும் நடக்கவில்லை என இங்குள்ள மக்கள் கூறுகிறார்கள்.

காவல்துறை கண்காணிப்பு எப்படி இருக்கிறது?

பரந்தூரில் விமான நிலையம் அமைய இருப்பதாகக் கருதப்படும் பகுதியில் ஆங்காங்கே காவல்துறையின் வேகத் தடுப்புகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அங்கு காவல்துறையைச் சேர்ந்தவர்கள் சீருடையிலும், சாதாரண உடையிலும் பணியில் இருக்கிறார்கள். மதுரமங்கலம் சாலை சந்திப்பில் இருந்து பரந்தூர் வரையிலும் காவல்துறையின் கண்காணிப்பு இருக்கிறது.

பிபிசி செய்திக்குழு செய்தி சேகரிக்கச் சென்ற இடங்களில் எல்லாம் சீருடை அணியாத காவலர்கள் பின்தொடர்ந்து வந்தார்கள். ஓர் இடத்தில் வாகனத்தை தடுத்து நிறுத்தி யார், எதற்காக வந்திருக்கிறீர்கள், அடையாள அட்டை எங்கே என்ற கேள்விகளை எழுப்பினார்கள்.

எதற்காக இந்தச் சோதனை என்று கேட்டபோது, "இது வழக்கமான சோதனைதான். மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்திருக்கிறது," என்று காவலர் ஒருவர் கூறினார்.

 

பரந்தூர் விமான நிலையம்

 

படக்குறிப்பு,

நெல்வாய் கிராமத்தில் செய்தி சேகரிக்கும்போது கண்காணிப்புப் பணியில் காவல்துறையினர்

நெல்வாய் கிராமத்தில் பிபிசி குழு, மக்கள் சிலரைச் சந்தித்துப் பேட்டி எடுத்தபோது அங்கும் நான்கைந்து காவலர்கள் சூழ்ந்து நின்றார்கள். எடுக்கும் காட்சிகளையும் பேட்டிகளையும் தங்களது செல்போன்களில் காவலர்கள் பதிவு செய்து கொண்டார்கள்.

காவலர்கள் சூழ்ந்திருப்பதால் அச்சமாக உணர்வதாகவும் பேட்டியளிக்க முடியவில்லை என்றும் நெய்வாய் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். பரந்தூர் விமான நிலையப் பணிகளுக்காக முழுமையாக கையகப்படுத்தப்படுவதாகக் கருதப்படும் கிராமங்களுள் நெல்வாயும் ஒன்று.

ஏகனாபுரம் கிராமத்திலும் காவலர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். "செய்தி சேகரிக்க யார் வந்தாலும் அவர்களை காவலர்கள் பின் தொடர்கிறார்கள். அடையாள அட்டைகளைச் சோதிக்கிறார்கள். யூட்யூப் சேனலை சேர்ந்தவர்களை ஊருக்குள் அனுமதிப்பதில்லை" என்று ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் பிபிசி தமிழிடம் கூறினார்.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

"எங்கள் ஊருக்குள் செல்வதற்கே ஆதார் போன்ற அடையாள அட்டைகளைக் காட்டிய பிறகே செல்ல வேண்டியிருக்கிறது. ஊருக்கு வெளியே மாத்திரமல்லாமல் ஊருக்குள் வந்து தெருக்களிலும் காவலர்கள் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கண்காணிப்பை நீக்க வேண்டும்" என்று ஏகனாபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறினார்.

"ஒன்றிணைவதற்குத் தடை"

அண்மையில் ஏகனாபுரம் கிராமத்தில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பதற்காகச் செல்ல முயன்றபோது தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் செங்கல்பட்டு மாவட்ட எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார்.

இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய அவர், "13 கிராம மக்களும் ஒன்றிணைந்து போராடுவதற்கு காவல்துறை தடைபோடுகிறது. இதற்கு முன்பு ஏகனாபுரம் கிராமத்துக்கு செல்ல முயன்றபோது இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலேயே காவல்துறையினர் தடுத்துவிட்டார்கள். அரசு கூறுவது போல நீர்நிலைகளுக்கு பாதிப்பு இல்லை என்றால் எங்களை ஊருக்குள் விடுவதற்கு ஏன் தடை விதிக்கப்படுகிறது? " என்று கேள்வி எழுப்பினார்.

 

பரந்தூர் எல்லை

 

படக்குறிப்பு,

பரந்தூர் எல்லையில் கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினர்

இதேபோல கிராமத்துக்குச் செல்வதில் தனக்கு மறைமுகத் தடை இருப்பதாக சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் ஓர் அமைப்பைச் சேர்ந்தவர் பிபிசி தமிழிடம் கூறினார்.

அண்மையில் இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்த மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், "கிராமங்களில் போலீஸ் முகாம் அமைத்து மக்களுடைய அன்றாட நடவடிக்கைகளை முடக்குவது, அச்சுறுத்துவது போன்றவை அரசுக்கு அவப்பெயரையே ஏற்படுத்தும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசியபோது, "மக்களின் ஒப்புதலுடன்தான் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். மக்களை சந்திக்கவிடாமல் செய்வது சரியல்ல" என்று கூறினார்.

மாவட்ட நிர்வாகம் என்ன கூறுகிறது?

பரந்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்களும், அங்கு வரும் ஊடகத்தினர், தலைவர்கள் உள்ளிட்டோர் கண்காணிக்கப்படுவது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எம். சுதாகரிடம் கேட்டபோது, "சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. நானும் இந்தப் பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்கிறேன். ஊடகத்தினரிடம் மக்கள் பேசும் போது காவலர்கள் அருகே நிற்கக்கூடாது என அறிவுறுத்திவிடுகிறோம்" என்றார்.

காவல்துறையின் கண்காணிப்பால் சிறிய குற்றங்கள் குறைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்பைவிட இப்போது காவல்துறையினரின் எண்ணிக்கையை குறைத்து இருப்பதாகக் தெரிவித்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் எம். ஆர்த்தி, "நிலைமையைப் பயன்படுத்தி சமூக விரோதிகள் யாரும் நுழைந்துவிடக்கூடாது என்பதைத் தடுப்பதற்காகவே இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறோம்" என்றார்.

 

பரந்தூர் விமான நிலையம்

"மக்கள் அப்பாவிகள். சில அமைப்புகள் அவர்களைத் தூண்டிவிட முயற்சி செய்கின்றனர். அரசுடன் பேச்சு நடத்துவதற்கு மக்கள் முன்வந்து நிலைமை சாதாரணமாகும் போது காவல்துறையின் இருப்பு குறைந்து விடும்." என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

"கருத்து சுதந்திரத்தில் எப்போதும் தலையிட மாவட்ட நிர்வாகம் விரும்பவில்லை. மக்கள் என்ன விரும்புகிறார்களோ அதை பேசுவதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. ஊடகம் என்ற பெயரில் ஊடகம் அல்லாத சிலர் ஊர்களுக்குள் நுழைந்து மக்களைத் தூண்டி விட முயற்சி செய்கிறார்கள் அதை கண்காணிக்கவே ஆங்காங்கே காவல்துறையினர் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். கள்ளக்குறிச்சி போன்ற சம்பவங்கள் ஏதும் நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு" என்று அவர் கூறினார்.

பரந்தூர் விமான நிலையம் பின்னணி

சென்னையில் இருந்து சுமார் 65 கிலோ மீட்டர் தொலைவில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க இரு மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. "பரந்தூரில் அமையவிருக்கும் புதிய விமான நிலையத் திட்டத்தை செயல்படுத்துவது என்பது நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கானப் படிக்கட்டு. தமிழ்நாட்டை ஒரு ட்ரில்லியன் (ஒரு லட்சம் கோடி) டாலர் பொருளாதாரமாக உருவாக்கும் உயர்ந்த குறிக்கோளை எட்டுவதற்கானப் பயணத்தில் இது மற்றொரு மைல் கல்லாகும்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

விமான நிலையத்துக்காக பரந்தூரை ஒட்டியிருக்கும் 13 கிராமங்களில் 4,500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் நிலம் எடுக்கப்படும் என்றும் 4 கிராமங்கள் முற்றிலுமாகக் கையகப்படுத்தப்படும் என்றும் தெரியவந்திருக்கிறது. குடியிருப்புகள், நீர்நிலைகள், விவசாய நிலங்கள் போன்றவை இதில் அடங்கியிருக்கின்றன. நிலம், குடியிருப்புகளுக்கு ஏற்பக மூன்றரை மடங்கு இழப்பீடு தருவதாக அரசு அறிவித்திருக்கிறது.

இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏகனாபுரம் கிராமத்தில் 60 நாள்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்று வருகின்றனர். "ஊரைவிட்டு வெளியேற மாட்டோம்" என்று போராட்டத்தில் பங்கேற்கும் மக்கள் கூறுகிறார்கள்.

https://www.bbc.com/tamil/india-63063792

  • கருத்துக்கள உறவுகள்

பரந்தூர் விமான நிலையம்: வெளியேற்றப்படும் மக்கள், அழிக்கப்படும் நீர்நிலைகள் - கள நிலவரம்

  • எம். மணிகண்டன்
  • பிபிசி தமிழ்
4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

பரந்தூர் விமான நிலையம்

பரந்த பசுமையான நெல் வயல், நடுவே அவ்வப்போது வாகனங்கள் வந்து செல்லும் சாலை, வயல்வெளி சூழ வீடுகள், அருகிலேயே எப்போதும் நீர் நிறைந்திருக்கும் ஏரிகள், 1940-களில் கட்டப்பட்ட ஒரு தொடக்கப் பள்ளிக்கூடம் இவையெல்லாம் கொண்ட அந்தக் கிராமத்தின் பெயர் நெல்வாய். பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக முற்றிலுமாக அழியப் போகும் கிராமங்களுள் இதுவும் ஒன்று.

சென்னையில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக 13 ஊர்களில் நிலம் கையகப்படுத்தப்பட இருக்கிறது. அவற்றில் 4 கிராமங்கள் மொத்தமாக அழியப் போகின்றன. குடியிருப்புகள், விவசாய நிலங்கள், ஏரிகள், குளங்கள், கால்வாய், பள்ளிக்கூடங்கள், கோயில்கள் போன்றவை இவற்றில் அடங்கியிருக்கின்றன.

சந்தை மதிப்பைவிட மூன்றரை மடங்கு இழப்பீடு தருவதாக தமிழ்நாடு அரசு வாக்குறுதி அளித்த நிலையிலும், வாழ்வாதாரம் பறிபோவதாகக் கூறி கிராம மக்கள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

நீர் நிலைகள் அழிக்கப்பட்டால் பெரிய அளவில் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும், சென்னை வரை வெள்ள அபாயம் ஏற்படும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் நிபுணர்களும் எச்சரிக்கிறார்கள்.

 

மக்களின் ஒப்புதல் இல்லாமல் நிலத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது என்று ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்துகின்றன. தொடர்புடைய 13 கிராமங்களிலும் காவல்துறையினர் தீவிரமான கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பரந்தூர் பகுதி கிராமங்களில் என்ன நடக்கிறது?

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னை நகருக்கான இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. விமான நிலையத்துக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூர் மற்றும் அதை ஒட்டியுள்ள மொத்தம் 13 கிராமங்களில் இருந்து 4,500-க்கும் அதிகமான ஏக்கர் பரப்பிலான நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்திருக்கிறது.

இதில் சுமார் 3,200 ஏக்கர் அளவிலான நிலப்பரப்பு தனிநபர்களுக்குச் சொந்தமான பட்டா நிலங்களாகவும், சுமார் 1,300 ஏக்கர் அரசுப் புறம்போக்கு நிலமாகவும் இருக்கிறது. சென்னையில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில், திட்டமிடப்பட்டிருக்கும் சென்னை-பெங்களூரு விரைவுச் சாலையை ஒட்டியும் இது அமைந்திருக்கிறது.

 

விவசாய நிலம்

இந்தத் திட்டத்துக்காக சுமார் ஆயிரம் குடும்பங்களை வெளியேற்ற நேரிடும் என இந்தக் கிராமங்களில் இருப்பவர்கள் கூறுகிறார்கள். ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு, மகாதேவி மங்கலம் ஆகிய நான்கு கிராமங்களும் முற்றிலுமாகக் கையகப்படுத்தப்பட இருக்கின்றன.

ஏரிகள், குளங்கள், வயல்வெளிகள், குடியிருப்புகள், பள்ளிக் கூடங்கள், கோயில்கள் போன்றவை இந்தத் திட்டத்துக்காக அழிக்கப்பட இருக்கின்றன. "அரசுப் புறம்போக்கு என்று கூறப்படும் இடங்கள் அனைத்தும் நீர்நிலைகள்தான்" என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

இந்தத் திட்டத்துக்காக நிலத்தைக் கொடுப்போருக்கு பல வகையில் இழப்பீடு வழங்குவதாக அரசு அறிவித்திருக்கிறது. இழப்பீட்டின்போது வழிகாட்டி மதிப்பை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் சந்தை மதிப்பை கணக்கில் எடுத்துக் கொள்ளவும் அரசு முடிவு செய்திருக்கிறது.

"வழிகாட்டி மதிப்பு என்பது வேறு, சந்தை மதிப்பு என்பது வேறு. சந்தை மதிப்பைப் போல மூன்றரை மடங்கு இழப்பீடு. வீட்டில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் வேலை. விமான நிலையத்துக்கு அருகிலேயே நிலமும், வீடு கட்டுவதற்கு பணமும் தருகிறோம்" என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு கூறியிருக்கிறார்.

தவிக்கும் மக்கள்

விமானம் நிலையம் அமைக்கப்பட இருக்கும் பகுதி ஒரு பெரிய சாலை தவிர பெரும்பாலான இடங்களில் குடியிருப்புகள், நீர்நிலைகள், விவசாய நிலங்கள் ஆகியவற்றைத்தான் பார்க்க முடிகிறது. இதில் அதிகமாக மக்கள் வசிக்கும் கிராமம் ஏகனாபுரம். இரண்டு மாதங்களுக்கும் மேலாக நாள்தோறும் மக்கள் இங்கு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி கணவரை இழந்தவர். அவருக்கு மூன்று குழந்தைகள். விவசாயக் கூலி வேலைகள் செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

 

விவசாயி

 

படக்குறிப்பு,

நீர் நிலைகள் விவசாயத்துக்கு தாய், தந்தை போன்றவை என்கிறார் ஏகனாபுரத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி.

"எனக்குச் சொந்தமாக வீடு மட்டும்தான் இருக்கிறது. கணவரின் நினைவாக அதை பராமரித்துக் கொண்டிருக்கிறேன். ஆடுமாடு மேய்ப்பது, களைபறிப்பது போன்ற வேலைகளுக்குச் சென்று சம்பாதிக்கிறோம். இந்த ஊரில் இருந்தால்தான் எங்களுக்கு பிழைப்பு. என்னைப்போன்று நிறையப் பேர் கூலி வேலை செய்துதான் பிழைத்து வருகிறோம். எங்களை வேறு எங்காவது அனுப்பினால் வேலையும் கிடைக்காது" என்கிறார் அவர்.

"இங்கு இருக்கும் ஏரிகள் எல்லாம் புறம்போக்கு கிடையாது. அவைதான் இங்குள்ள விவசாயத்துக்கு உதவுகின்றன. அவை விவசாயத்துக்கு தாய், தந்தை போல. அதுதான் விவசாயத்துக்கான ஆணி வேர்," என்றார் ராஜேஸ்வரி.

ஏகனாபுரம் கிராமத்தில் 98 ஆண்டுகளுக்கு முந்தைய அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. சுமார் 110 பேர் இந்தப் பள்ளியில் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளியை ஒட்டியே வயல் வெளியும், தாமரைப் பூக்கள் மிதக்கும் ஏரி ஒன்றும் இருக்கிறது. பழமையான ஆலமரங்கள், சிறு குளங்கள், தாங்கல்கள் போன்றவற்றையும் இங்கு பார்க்கலாம்.

ஏகனாபுரத்தில் சுமார் 2,500 பேர் வசிக்கிறார்கள். வசதியான பெரிய வீடுகள், கார்கள் சென்று வரும் அகலமான தெருக்கள் இந்த ஊரில் இருக்கின்றன. பல வீடுகள் கடந்த சில ஆண்டுகளுக்குள் கட்டப்பட்டவை என்று இந்த ஊரில் இருப்பவர்கள் கூறுகிறார்கள்.

 

ஏகனாபுரம்

 

படக்குறிப்பு,

ஏகனாபுரம் நடுநிலைப்பள்ளி தொடங்கப்பட்டு 98 ஆண்டுகள் ஆகின்றன

ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சரோஜாவுக்கு சுமார் 40 சென்ட் அளவுக்கு நிலம் இருக்கிறது. தன் நிலையைப் பற்றிப் பேசும்போது அவர் கண்கலங்குகிறார். என்ன கொடுத்தாலும் ஊரைவிட்டு வெளியேறப் போவதில்லை என்று அவர் கூறுகிறார்.

"30 ஆண்டுகளாக விவசாய வேலை செய்துதான் எனது குழந்தைகளை காப்பாற்றி வருகிறேன். எங்களுக்கு விவசாய வேலை மட்டும்தான் தெரியும். வேறு வேலை எதுவும் தெரியாது. இதை வைத்துதான் எனது பிள்ளைகளுக்கு வருங்காலத்தை அமைக்க முடியும். குடிசையில் வசித்த நான் இப்போதுதான் ஒரு வீடு கட்டியிருக்கிறேன். இதற்கு விவசாயம்தான் உதவியிருக்கிறது. கொரோனா காலத்தில்கூட எங்களுக்கு விவசாயத்தில் இருந்து கிடைத்ததைத்தான் சாப்பிட்டு வாழ்ந்தோம். வெளியே யாரிடமும் எதையும் கேட்கவில்லை " என்கிறார் சரோஜா.

நிலமற்ற விவசாயக் கூலிகளின் நிலைமை

வீடு, வயல், ஆகியவற்றை சொந்தமாக வைத்திருப்போரின் நிலைமை இப்படியென்றால், வீடு, நிலம் ஏதும் இல்லாத விவசாயக் கூலிகளாக இருப்போர் தங்களது நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்று கூறுகிறார்கள்.

பரந்தூர் விமான நிலையத்துக்காக முற்றிலுமாகக் கையகப்படுத்தப்பட இருக்கும் நெல்வாய் கிராமத்தில் வீடற்ற, நிலமற்ற பலர் வசிப்பதாக இங்குள்ள மக்கள் கூறுகிறார்கள். அவர்களுள் ஒருவரான 63 வயது வேணுகோபால் தன்னை கிராமத்தை விட்டு வெளியேற்றினால் வாழ்வதற்கு வழியில்லை என்கிறார்.

 

கூலித் தொழிலாளர்

 

படக்குறிப்பு,

வீடு, வயல் இல்லாத விவசாயக் கூலிகள் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறார் நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த வேணுகோபால்

"எங்களுக்கு நிலம் எதுவும் கிடையாது. கூலி வேலைக்குச் செல்லாவிட்டால் பட்டினிதான் கிடக்க வேண்டும். மழைபெய்தால் ஒழுகும் குடிசை வீடு என்னுடையது. எங்களை நெல்வாயை விட்டு வெளியேற்றக்கூடாது. எங்களைப் போன்றோரை வெளியேற்றினால் உயிருடன் இருக்க முடியாது" என்கிறார்.

"விவசாயத்தை அழித்துவிட்டு விமான நிலையம் எதற்கு?"

நெல்வாயில் சுமார் சுமார் 500 பேர் வசிக்கிறார்கள். பெயரே இந்த ஊரைப் பற்றிச் சொல்லும் என்ற அளவுக்கு, பசுமையாக இருக்கும் நெல் வயல்வெளிகள் இங்குண்டு. ஊரைச் சுற்றிலும் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளைக் காண முடிகிறது.

இந்தக் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன், "எங்களது விவசாயத்தை அழித்துவிட்டு விமான நிலையம் எதற்கு?" என்று கேள்வி எழுப்புகிறார்.

"காலம்காலமாக நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம். பெரிய லாபம் கிடைக்காது. சில நேரங்களில் நஷ்டம் கூட வரலாம். ஆனால் ஆத்ம திருப்தி விவசாயத்தில்தான் இருக்கிறது. எங்கள் ஊர் முற்றிலுமாக ஏரியால் சூழப்பட்டிருக்கிறது. எந்நேரமும் தண்ணீர் இருக்கும். இங்கு படித்தவர்கள்கூட விவசாயம் பார்க்கிறார்கள். நாங்கள் இதுவரை அரசிடம் எந்தக் கோரிக்கையும் வைத்ததில்லை. இப்போது வெளியேற வேண்டும் என்று கேட்கிறார்கள். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார்கள். இழப்பீடு தருகிறோம், இடம் தருகிறோம் என்கிறார்கள். ஊரை இழந்துவிட்டு எப்படி வாழ்வது. எங்கள் பாட்டன் பூட்டன் காலத்தில் சொந்தமாக இருக்கும் மனையில் இப்போது வீடு கட்டியிருக்கிறோம். எனது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் அதில் வாழ வேண் வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அதை அழித்துவிட்டு வேறு இடத்துக்குப் போங்கள் என்றால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்"

 

ஏரி

"கம்பவர்மன் என்ற மன்னன் காலத்தில் கட்டப்பட்ட கால்வாய் இந்த வழியாகச் செல்கிறது. அது மழைவடிகாலாகச் செயல்பட்டு வருகிறது. 2105-இல் பெரிய மழை வெள்ளம் வந்தபோதுகூட நீர்நிலைகள்தான் எங்களைக் காப்பாற்றியது." என்கிறார் குணசேகரன்.

"அரசு தரும் வேலையும் வேண்டாம் இடமும் வேண்டாம். எங்கள் விவசாயத்தை விட்டுவிடுங்கள். விவசாயம்தான் எங்களுக்கு கடவுள். ஊரைவிட்டு நாங்கள் போகமாட்டோம்," என்கிறார் நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு பெண்மணி.

ஏகனாபுரம் போராட்டமும் காவல்துறையின் கண்காணிப்பும்

தொடர்புடைய 13 கிராமங்களிலும் காவல்துறையினர் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தங்களை அச்சுறுத்துவது போல இருப்பதாக கிராம மக்களில் சிலர் கூறினார்கள். ஆனால் அது "சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் நடவடிக்கை" என்று காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. சுதாகரும், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியும் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்கள்.

விமான நிலையத் திட்டத்துக்கான எதிர்ப்பு ஏகனாபுரம் கிராமத்தில்தான் அதிகமாக இருக்கிறது. இரவு 7 மணிக்கு ஏரியின் கரையை ஒட்டி அமைந்துள்ள ஒரு கோயிலின் முன்பாக கிராமத்து மக்கள் திரள்கிறார்கள். பெண்களும், பள்ளிக் குழந்தைகளும் இவர்களில் அடங்குவார்கள். விமான நிலையத்துக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை இவர்கள் பதிவு செய்கிறார்கள்.

 

போராட்டம்

"எங்களது விளைநிலங்கள் பறிபோகின்றன. புறம்போக்கு நிலம் என்று அரசு கூறும் நிலத்தில் 950 ஏக்கர் நீர்நிலைகள்தான் இருக்கின்றன. வண்டிப்பாதைகள் உள்ளிட்ட 350 ஏக்கர் பரப்புதான் அரசு நிலமாக இருக்கிறது. எங்களது ஊரில் உள்ள இரண்டு ஏரிகளை அழித்தால்தான் முதல் ரன்வே அமைக்க முடிகிறது. இரண்டாவது ரன்வே சுமார் 300 ஏக்கர் நன்செய் நிலம், இரண்டு ஏரிகள் ஆகியவற்றை அழித்தால்தான் அமைக்க முடிகிறது." என்கிறார் ஏகனாபுரத்தைச் சேர்ந்த இளங்கோ.

முதல்வர் தங்கள் வீட்டைக் காட்டி பெருமைப்பட்டுக் கொள்கிறாரே...

"இருபோகம் விவசாயம் செய்கிறோம். எங்களுக்குத் தேவையான அரிசியை நாங்களை உற்பத்தி செய்கிறோம். பரம்பரை பரம்பரையாக இங்கு குடியிருக்கிறோம். முதலமைச்சர் (தன்னுடைய பூர்வீக வீட்டைக் காட்டி) என்னுடைய வீடு என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார். எங்களுக்குப் பெருமைப்பட்டுக் கொள்ள எங்கள் கிராமம் இருக்கத் தேவையில்லையா?" என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

"எந்தச் சலுகைகள் கொடுத்தாலும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்." என்று இளங்கோ கூறும்போது உடன் இருக்கும் பலரும் அதை உறுதியாக மற்றொருமுறை கூறுகிறார்கள்.

சுற்றுச்சூழல் நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

"எந்த ஒரு வளர்ச்சித் திட்டத்தை செயல்படுத்தினாலும் அதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படத்தான் செய்யும். சென்னையில் ஐடி காரிடார் அமைக்கும்போது பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பெருமளவு அழிக்கப்பட்டது. 135 ஏரிகளின் உபரிநீர் வந்து உருவானதுதான் இந்தச் சதுப்பு நிலம். இது உருவாக குறைந்தது ஆயிரம் ஆண்டுகள் ஆகும். இப்படி ஒவ்வொரு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தும்போதும் முதலில் நீர்நிலைகளைத்தான் அழிக்கிறோம். அதனால் பரந்தூர் விமான நிலையம் மட்டும் இதில் விதிவிலக்கல்ல." என்கிறார் நீரியல் வல்லுநரான ஜனகராஜன்.

 

பரந்தூர் விமான நிலையம்

 

படக்குறிப்பு,

ஏகனாபுரத்தில் இருபோகம் விளைவதாக கிராம மக்கள் கூறுகிறார்கள்

"திட்டமிடப்பட்டிருக்கும் இடத்தில் 11 நீர்நிலைகள் இருக்கின்றன. இவை அனைத்தையும் அழிப்பார்கள். விமான நிலையம் தரை மட்டத்தில் அமைக்கப்படுவதில்லை. உயர்த்தப்படும். அதனால் நீர் வழித்தடங்கள் பாதிக்கப்படும். ஒருபக்கம் செல்ல வேண்டிய நீர் வேறொரு பக்கத்துக்குச் செல்லும். நீரியல் முழுமையாகப் பாதிக்கப்படும்."

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் வளர்ச்சித் திட்டங்களுக்கு நீர்நிலைகளை எப்படி அழிக்கிறார்கள் என்று தெரியவில்லை. தொடக்க காலத்தில் நீர்நிலைகள் அனைத்தும் மக்களுக்குச் சொந்தமானதாகத்தான் இருந்தன. இப்போது அதை அரசு எடுத்துக் கொண்டிருக்கிறது.

"அரசு இழப்பீடு வழங்குவதாக அறிவிக்கிறது. ஆனால் என்ன கொடுத்தாலும் சொந்த ஊரை மக்கள் விட்டுத்தர மாட்டார்கள்." என்கிறார் ஜனகராஜன்.

"மேற்குப்பக்க நீர்நிலைகளை அழித்தால் சென்னைக்கு ஆபத்து"

சென்னைக்கு மேற்கேயுள்ள நீர்நிலைகளை அழித்தால் அது சென்னையை வறட்சியிலும் வெள்ளத்திலும் தள்ளும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலரான பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன் கூறுகிறார்.

"பரந்தூர் விமான நிலையத்துக்காகக் கையகப்படுத்தப்படும் நிலம் முழுவதும் பயன்பாட்டில் இருக்கும் நிலம்தான். நீர்நிலைகள் தவிர மூன்றாம் நிலை ஓடை அங்கு இருக்கிறது. முதல்நிலை, இரண்டாம் நிலை ஓடைகளில் நீர் பெருகி மூன்றாம் நிலை ஓடைக்கு வரும். அதன் பிறகு அவை ஆறாகப் பெருக்கெடுக்கும். உலகத்தில் 80 சதவிகித நீர் இது போன்ற மூன்றாம் நிலை ஓடைகளில்தான் கிடைக்கிறது. இதுதான் பல நீர்நிலைகளை நிரப்புகிறது. பரந்தூர் பகுதியில் இருக்கும் மூன்றாம் நிலை ஓடை செம்பரம்பாக்கம் வரை நீரைக் கொண்டு வருகிறது. சென்னைக்கு மேற்குப் பக்கம் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என சென்னை வெள்ளத் தடுப்பு நிபுணர் குழு கூறி வருகிறது. இப்போது மேற்குப்பக்க நீர்நிலைகளை அழித்தால் சென்னை வெள்ளத்தில் மிதக்கும்." என்கிறார் சுந்தர்ராஜன்.

பரந்தூர் விமான நிலையத்துக்கு மாற்று என்ன?

பரந்தூரில் அமைய இருக்கும் விமான நிலையம் "மாநில வளர்ச்சியின் படிக்கட்டு" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிடுகிறார். தற்போது இருக்கும் சென்னை விமான நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் மேற்கொண்ட பிறகும் ஏழே ஆண்டுகளில் அதிகபட்ச பயணிகள் கையாளும் அளவை எட்டிவிடும் என்று முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடுகிறார். அதாவது ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை விமான நிலையத்தில் அதிகரிக்கும் பயணிகளைக் கையாள முடியாது என்று பொருள்.

 

பள்ளி

 

படக்குறிப்பு,

நெல்வாய் கிராமத்தில் 1940-களில் தொடங்கப்பட்ட பள்ளி

நீர்நிலைகளையும் விவசாய நிலங்களையும் பாதிக்காமல் விமான நிலைய திட்டத்தை வேறு இடத்துக்கு மாற்ற முடியுமா என்று கேட்டபோது, "சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் எங்கு நிலத்தைக் கையகப்படுத்தினாலும் நீர்நிலைகள் நிச்சயமாகப் பாதிக்கப்படும். இந்த மாவட்டங்களில் 3600 ஏரிகள் இருக்கின்றன." என்றார் ஜனகராஜன்.

எனினும் "நீர் வழித் தடங்களை பாதிக்காத வகையில் முன்னேற்பாடு செய்துவிட்டு விமான நிலையம் கட்டலாம்." என்று கூறும் அவர், "அப்படிச் செய்யாவிட்டால் அது பேரழிவாக இருக்கும். அங்குள்ள நீர் சென்னைக்குத்தான் வரும்" என்கிறார்.

"தற்போது சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் 80 சதவிகிதம் பேர் சென்னையைச் சாராதவர்கள். கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி போன்ற இடங்களில் உள்ள விமான நிலையங்களை தரம் உயர்த்தினாலே சென்னையில் நெருக்கடி குறையும் " என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன்.

https://www.bbc.com/tamil/india-63078616

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.