Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிலேடை நயம்

Featured Replies

ஒட்டக்கூத்தரின்மீது மனைவியின் கோபத்திற்குக் காரணம் புகழேந்திப் புலவர் சிறையிலிருப்பதுதான் என்பதைப் புரிந்து கொண்ட அரசன் உடனே புகழேந்தியை விடுதலை செய்து அவரை அந்தப்புரத்திற்கு அனுப்பித் தன் மனைவியை சமாதானம் செய்யும்படிக் கேட்டுக் கொண்டான். புகழேந்தி அரசியின் வாசலுக்கு வந்து

"இழையன்றிரண்டு வகிர் செய்த நுண்ணிடை யேந்தியபொற்

குழையன்றிரண்டு விழியணங்கே கொண்ட கோபந் தணி

மழையன்றிரண்டு கைப் பாணாபரண நின் வாசல் வந்தால்

பிழையன்றிரண்டு பொறாரோ குடியிற் பிறந்தவரே!"

எனும் பாடலைக் கூறியதும் அரசி இரண்டு தாழ்ப்பாள்களையும் திறந்தாள்.

அதன் பொருள்

“நூலிழை ஒன்றை இரண்டாக வகிர்ந்தது போன்ற மெல்லிய இடையும் பொற்குழைகள் போன்ற விழிகளும் உடைய பெண்ணே! நீ கொண்ட கோபத்தைத் தணித்துக் கொள். மழை போல இரு கைகளாலும் எதிரிகளின் மேல் பாணங்களைப் பொழியும் ஆற்றல் கொண்ட குலோத்துங்கன் உனது வாசலுக்கு வரும்பொழுது நற்குடியில் பிறந்த பெண்ணான நீ மன்னனின் ஒன்றிரண்டு பிழைகளைப் பொறுத்தருளவேண்டும்!” என்பதாகும்

  • Replies 69
  • Views 37.2k
  • Created
  • Last Reply

தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது

தூதிதூ தெத்தித்த தூததே - தாதொத்த

துத்திதத் தாதே துதித்துத்தேத் தொத்தீது

தித்தித்த தோதித் திதி

ஆரவல்லியக்கோய்!

இங்கு இன்னொரு பாடலை பாருங்கோ

"தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது

தூதிதூ தொத்தித்த தூததே - தாதொத்த

துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது

தித்தித்த தோதித் திதி"

என்ற கவி காளமேகப் புலவரின் பாடலைப் பார்த்தால் சற்றுத் திகைக்க வேண்டி வரும்.

தாதி - தோழியின்(அடிமைப் பெண்ணின்)

தூதோ- மூலமாக அனுப்பும் தூது

தீது - நன்மை பயக்காது!

தத்தை- (நான் வளர்க்கும்) கிளியோ

தூது - தூதுப் பணியில் தூதை

ஓதாது - (திறம்பட) ஓதாது!

தூதி தூது - தோழியின் தூதோ

ஒத்தித்த தூததே - நாளைக் கடத்திக் கொண்டே போகும்.

தேதுதித்த - தெய்வத்தை வழிபட்டுத்

தொத்து - தொடர்தலும்

தீது - தீதாகும்

தாதொத்த - (ஆகவே) பூந்தாதினைப் போன்ற

துத்தி - தேமல்கள்

தத்தாதே- என் மேல் படராது

தித்தித்தது _ எனக்கு இனிமையான தித்திப்பு நல்கும் என் காதலனின் பெயரை

ஓதித் திதி - ஓதிக் கொண்டிருப்பதையே செய்வேனாக!

Edited by Rasikai

  • தொடங்கியவர்

ரசிகை. விளக்கம் மிகவும் அருமை. தொடருங்கள்.

  • தொடங்கியவர்

தமிழிலக்கியத்தில் இரட்டைக் கவிராயர்களுக்கு தனியிடம் உண்டு. இந்த இரட்டையர்களில் ஒருவர் "குருடர்", மற்றவர் "முடவர்". ஆனாலும் கவிபாடுவதில் மிக்கவல்லவர்கள். குருடர் தோளில் முடவர் ஏறி அமர்ந்துகொள்வார். முடவர் வழிகாட்ட, குருடர் நடப்பார். ஊரூராக சென்று பாடல் புனைவது இவர்கள் வழக்கம். ஒருவர் முதல் இரு அடிகளை பாட, மற்றவர் பின்னிரு அடிகளை பாடி பாடலை முடித்துவைப்பார்.

ஒருமுறை இரட்டையர்கள் திருவாரூர் நடராசரை தரிசித்துவிட்டு, ஒரு மடத்தில் இளைப்பாறிக் கொண்டிருந்த சமயம், குருடர்

நாணென்றால் நஞ்சிருக்கும் நற்சாபம் கற்சாபம்

பாணந்தான்...

என்று கூறி, பாடலை தொடரமுடியாது போகவே அதை அந்த மடத்தின் சுவரில் எழுதிவிட்டு சென்றனர். பின்னாளில் அந்தப்பாடல் முறையாக எழுதி முடிக்கப்பட்டு அதன்கீழ் "காளமேகம்" என ஒப்பமிடப்பட்டிருந்தது.

நாணென்றால் நஞ்சிருக்கும் நற்சாபம் கற்சாபம்

பாணந்தான் மண்டின்ற பாணமே - தாணுவே

சீராரூர் மேவும் சிவனே நீயெப்படியோ

நேரார் புரமெரித்த நேர்.

சிவனின் வில்லில் பூட்டிய நாண் - ஒரு பாம்பு, ஆதிசேடன் (அதனால் தான் நஞ்சிருக்கும்). விஷப்பாம்பை நாணாக கொண்டு, "மண் தின்ற திருமாலை" அம்பாக (பாணமாக) செய்து நீ எப்படித்தான் முப்புரங்களை எரித்தாயோ சிவனே! என்று அந்தப் பாடல் வருகிறது.

Edited by Eelathirumagan

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஈழத்திருமகன் , நல்ல பதிவை ஆரம்பித்திருக்கிறிங்க.

இலக்கிய சுவையை தெரிஞ்சு கொள்ள நல்ல சந்தர்ப்பம் .

  • தொடங்கியவர்

வணக்கம் ஈழத்திருமகன் , நல்ல பதிவை ஆரம்பித்திருக்கிறிங்க.

இலக்கிய சுவையை தெரிஞ்சு கொள்ள நல்ல சந்தர்ப்பம் .

நல்லது கறுப்பி. புதைந்துபோய் இருக்கும் தமிழ் இரசனையை மீட்டிப் பார்ப்பதற்கே இந்த சிறுமுயற்சி. நேரம் கிடைக்கும்போது உங்கள் ஆக்கத்தையும் எழுதுங்கள்.

  • தொடங்கியவர்

"பாம்பும்" "எள்ளும்" ஒன்றே தான் என்று கவி காளமேகம் பாடிய ஒரு சிலேடை.

ஆடிக் குடத்தடையும் ஆடும்போதே இரையும்

மூடித் திறக்கின் முகம்காட்டும் - ஓடிமண்டை

பற்றில் பரபரவெனும் பாரில்பிண்ணாக்கும் உண்டாம்

உற்றிடும்பாம்பு என்எனவே ஓது.

:blink::lol:

எள்ளு செக்கிலே கடையப்பட்டு (ஆடி) எண்ணெய்க்குடத்திலே சேரும். பாம்பும் படமெடுத்தாடியபின் பாம்பாட்டி கொண்டுவரும் குடத்தில் அடைந்துவிடும்.

எள்ளு செக்கிலே கடையப்படும் போது இரைவதுபோன்ற சந்தம் எழுப்பும். பாம்பும் படமெடுத்தாடும்போது சினந்து சீறும்

எண்ணெய் வைத்துள்ள குடத்தின் மூடியை திறந்தால் அங்கு பார்ப்பவரின் முகத்தை கண்ணாடிபோல் காட்டும். பாம்பு இருக்கும் குடத்தின் மூடியை திறந்தாலும் பாம்பு "எட்டி முகம் காட்டும்". :D

எள்ளெண்ணெயை தலையில் (மண்டை) தேய்த்தால் அது பரபரவென தலையோட்டினுள் ஊடுருவி செல்லும். பாம்பின் தலையை பிடித்தால் அதுவும் பரபரவென சுற்றிக்கொள்ளும்.

எள்ளில் இருந்து வருவது எள்ளுப் பிண்ணாக்கு. பாம்பின் நாக்கும் பிளவுபட்ட நாக்கு (பிண்ணாக்கு).

:lol::lol:

  • தொடங்கியவர்

ம்.. நாய்க்குட்டியையும் தேங்காயையும் ஒன்றாக வைத்து காளமேகம் எழுதியது

ஓடுமிருக்கும் அதன் உள்வாய் வெளுத்திருக்கும்

நாடும் குலைதனக்கு நாணாது - சேடியே

தீங்கானது இல்லாத் திருமலைராயன் வரையில்

தேங்காயும் நாயுமெனச் செப்பு.

நாய்க்குட்டி ஓடும், இருக்கும். தேங்காய்க்கு ஓடும் இருக்கும். :blink::lol:

நாய்க்குட்டியின் உள்வாய் வெளுத்திருக்கும். தேங்காயின் உள்பகுதி வெண்மையாக இருக்கும்.

நாய்க்குட்டி குலைப்பதற்கு என்றும் நாணாது. அதேபோல் தேங்காய் குலைகளாக தொங்கவும் நாணாது.

காளமேகத்தின் அருமையான கற்பனை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிறப்புற்றேன் காளியிடம் பேரன்புற்றேன்,

பேச்செல்லாம் கவிமழையாய்ப் பெருகும் ஞானம்

வரப்பெற்றேன், செல்வத்தின் வளமும் பெற்றேன்,

மன்னருடன் சரிசமமாய் மகிழும் வண்ணம் சிறப்புற்றேன்...

என்று மஹாகவி காளிதாசனுக்காகக் கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகளுக்கொப்ப, காளிதேவியின் அருளால் கவிபாடும் திறம்பெற்றுத் தமிழிலே கவி மழை பொழிந்த மாபெரும் கவி காளமேகம் ஆவார். இவரது இயற்பெயர் வரதன் என்பதாகும். பிறப்பால் வரதன் ஒரு வைணவனானாலும் மோஹனாங்கி எனும் சைவ சமயத்தைச் சேர்ந்த நடனமாது ஒருத்தியை அவன் மனதாரக் காதலித்தான். அவளும் அவன்மேல் தீராத மோஹம் கொண்டிருந்தாள்.

ஒரு முறை நாட்டிய நிகழ்ச்சியொன்றில் மோஹானங்கி

உங்கையிற்பிள்ளை உனக்கே அடைக்கலமென்று

அங்கப் பழஞ்சொல் புதுக்குமெம் அச்சத்தால்

எங்கள் பெருமான் உனக்கொன்றுரைப்போம் கேள்

எங்கொங்கை நின் அன்பரல்லார்தோள் சேரற்க

எங்கை உனக்கல்லாதெப்பணியும் செய்யற்க

கங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க

இங்கிப்பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்

எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோரெம்பாவாய்

என்ற திருவெம்பாவைப் பாடலுக்கு அபிநயம் பிடித்து ஆடுகையில் அவளது தோழிமார்கள், இப்படிப்பட்ட சைவ சமயப் பாடலுக்கு ஆடும் அவள் ஒரு வைணவனைக் காதலிப்பது குறித்து கேலியாகப் பேசவே அவள் மனம் வேதனைப்பட்டாள். அன்று தன்னைக் காணத் தன் விட்டிற்கு வந்த வரதனுக்குக் கதவைத் திறக்காமலேயே இருந்துவிட்டாள். அவள் தான் வைணவனாக இருப்பது குறித்து இவ்வாறு பிணங்குகிறாள் என்பதைத் தெரிந்துகொண்ட வரதன் அக்கணமே சைவ சமயத்தில் சேர்ந்தான்.

அதன்பின் ஒரு நாள் இரவில் வரதன் ஒரு காளி கோவிலில் தங்கி உறங்கிக்கொண்டிருந்தான். அதே கோவிலில் நீண்ட காலமாகக் காளியின் அனுக்கிரஹம் வேண்டி வேறொரு அந்தணன் தவம் செய்துகொண்டிருந்தான். அவனும் அன்றிரவு கோவிலிலேயே உறங்கிக்கொண்டிருந்ததான். காளி தேவி அவன் தவத்துக்குப் பலனளிக்க ஒரு சிறுமியாக உருவெடுத்து, தன் வாயில் தாம்பூலம் தரித்துக்கொண்டு அவ்வந்தணனை எழுப்பி அவனது வாயில் தாம்பூலத்தைத் துப்ப எத்தனித்தாள்.

யாரடி எச்சிற்றம்பலத்தை என் வாயில் உமிழ்வது

என்று அவ்வந்ததணன் கோபம் கொண்டுரைக்கவே அவள் அருகில் படுத்திருந்த வரதனை எழுப்பி அவன் வாயில் தாம்பூலத்தை உமிழ முயற்சிக்கையில், அவன் அவள் மோஹனாங்கி என்று எண்ணி, எங்கே தான் வாய் திறவாவிடில் மறுபடியும் கோபித்துக்கொள்வாளோ என்றெண்ணி வாயைத் திறந்தான். அன்னையின் எச்சில் தாம்பூலத்தை உண்ட வரதன் கவிபாடும் புலமை பெற்றான். வாயைத் திறந்து சொல்லும் சொற்களனைத்தும் கவிமழையாய்ப் பொழிந்ததால் வரதனை அனைவரும் காளமேகம் என்று மரியாதையுடன் அழைக்கலாயினர்.

ஒரு முறை காளமேகப் புலவர் திருமலைராயன் என்ற மன்னன் ஆண்டுவந்த திருமலைராயன் பட்டணம் என்ற நாட்டுக்குச்சென்றார். அரச சபைக்கு வந்த அவரை யாரும் வரவேற்கவில்லை. இருக்க ஆசனமும் தரவில்லை. இந்த அவமானத்தைப் போக்க காளமேகம் கலைவாணியை மனதில் தியானித்து

வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பனிபூண்டு

வெள்ளைக் கமலத்து வீற்றிருப்பாள் - வெள்ளை

அரியா சனத்தில ரசரோ டென்னைச்

சரியா சனத்து வைத்த தாய்

எனும் வெண்பாவைப் பாடவும், அன்னை கலைவாணியின் அருளா அரசனது சிம்மாசனம் வளர்ந்து இடம் கொடுக்கவே, அவ்வாசனத்தில் அரசனுக்குச் சரிசமமாக அமர்ந்து அவர்களது கேள்விகளுக்கு பதிலளிக்கத் தயாரானார்.

அரசன் அவரை யாரென்று விசாரிக்கவே, அவர் தான் "காளமேகம்" என்று பதிலுரைத்தார். அங்கு ஆஸ்தான கவியாக இருந்த அதிமதுரகவி என்பவர் அப்பொழுது காளமேகத்தைப் பார்த்து இகழ்க்சியுடன், "மேகமென்றால் பொழிய வேண்டுமே?" என்று கேட்க அதற்குக் காளமேகம் "பொழியத்தான் வந்தது"என்று பதிலிறுத்தார். அதற்கு "எப்படி?" என்று மீண்டும் அதிமதுரகவி வினவவே,

"உலகைச்சூழ்ந்துள்ள கடல் நீரில் உப்பு மிகுந்திருப்பதால், தொல்காப்பியர் எழுடதிய நன்னூல் சூத்திரரமெனும் இலக்கண நூலாகிய கடலில் மொண்டு, அகத்தியன் தமிழ்படைத்த பொதிகை மலைமேல் நின்று, வானளாவிய கவிதைகளை உரைக்கின்ற புலவர்களின் மனதில் இடியென இடித்தது, மின்னலென முழங்கி, கவிமழை பொழியக் காளமேகம் புறப்பட்டது" எனும் பொருள்படட,

கழியுந் திரைகட லுப்பென்று நன்னூற் கடலின் மொண்டு

வழியும் பொதிய வரையினிற் கால்வைத்து வான்கவிதை

மொழியும் புலவர் மனத்தே யிடித்து முழங்கி மின்னிப்

பொழியும் படிக்குக் கவிகாள மேகம் புறப்பட்டதே

எனும் பாடலைக் கூறினார்.

அதிமதுரகவி அஹங்காரத்துடன் காளமேகப்புலவரை நோக்கி, "நான் யார் தெரியுமா? மூச்சு விடும் நேரத்தில் முன்னூறு நானூறு பாடல்களையும், ஆச்சென்று தும்மல் போடும் நேரத்தில் ஐநூறு பாடல்களையும் புனைந்து கூறும் வல்லமை படைத்த அதிமதுரகாவி நான்" என்ற பொருள்பட,

மூச்கசுவிடு முன்னே முன்னூறு நானூறும்

ஆச்சென்றா லைந்நூறு மாகாவோ - பேச்சென்ன

வெள்ளைக் கவிகாள மேகமே உன்னுடைய

கள்ளக் கவிக் கடையைக் கட்டு

எனும் பாடலைக் கூறினார். வெள்ளைக் கவி என்றால் வெண்பா பாடும் புலவர் என்று பொருள்.

இதற்கு மறுமொழியாகக் காளமேகம், "இம்மென்று குரலெழுப்பும் நேரத்தில் எழுநூறு, எண்ணூறு பாடல்களையும், அம்மென்று வாயை மூடுவதற்குள் ஆயிரம் பாடல்களையும் புனைந்து கூறும் வல்லமை பெற்ற காளமேகம் நான். என் முன்னர் நீ ஒரு சிறு பிள்ளை" எனும் பொருள்பட

இம்மென்னு முன்னே எழுநூறு மெண்ணூறும்

அம்மென்றா லாயிரம்பாட் டாகாவோ - சும்மா

யிருந்தா லிருப்பே னெழுந்தேனே யாகிற்

பெருங்காள மேகம் பிளாய்.

என முழங்கினார்

http://kaalamegam.blogspot.com/

நல்ல தேன் தமிழ் இலக்கிய சுவையை தெரிஞ்சு கொள்ள நல்ல சந்தர்ப்பம் .

விளக்கங்கள் மிகவும் அருமை.

தொடருங்கள்

தேவப்பிரியா

மதனராசா,

கண்ணதாசனின் பல பாடல் வரிகள் இலக்கியத்தில் இருந்து எடுக்கப்பட்டன என்பது பரவலான கதை.

மகாகவி காளிதாஸ் படத்தில் வரும்,

யார் தருவார் இந்த அரியாசனம்?

புவி அரசோடு ஒரு சரியாசனம் என்ற பாடலில் கவி காளமேகம் நினைவுக்கு வருகிறார். அவரது வெண்பாவில் வரும் வரிகள் கவிஞருக்கு அன்று அடி எடுத்துக் கொடுத்திருக்கிறது.

காளமேகத்தின் வெண்பா

வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பனிபூண்டு

வெள்ளைக் கமலத்து வீற்றிருப்பாள் - வெள்ளை

அரியா சனத்தில ரசரோ டென்னைச்

சரியா சனத்து வைத்த தாய்

காளமேகமும் கண்ணதாசனும் சந்தித்துக் கொண்டால் வானம்பாடியில் ஒரு பாட்டு அதற்குப் பதில் சொல்லும்

Edited by aaravally

இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்., தேவிகா இணைந்து நடித்த வானம்பாடி திரைப்படத்திற்கு கண்ணதாசன் பாடல் எழுதியிருந்தார். பாடலுக்கு இசை அமைத்திருந்தவர் கே.வி. மகாதேவன். பாடியவர்கள் டி.எம்.எஸ். சுசீலா, குழுவினர்.

ஒரு கல்லூரியில் நடைபெறும் விழா ஒன்றில் ஆண்களும் பெண்களும் ஏட்டிக்குப் போட்டியாகப் பாடுவதாக காட்சி அமைக்கப் பட்டிருந்தது. கண்ணதாசன் ஒருவித தயக்கமும் இன்றி பாடலின் இறுதியில் காளமேகத்தின் வெண்பாவை இணைத்திருக்கிறார். அதற்கு விளக்கமும் தந்திருக்கிறார்.

டி.எம்.எஸ்.-

கல் தோன்றி மண் தோன்றும் முன் தோன்று தமிழே

கவி மழையில் ஆடி வரும் கன்னி இளமயிலே

சொல்லோடு பொருளேந்தி விளையாட வந்தேன்

துணை வேண்டும் தாயே நின் திருவடிகள் வாழ்க !

சுசீலா-

பொதிகை மலை உச்சியிலே புறப்பட்ட தமிழே

பூங்கவிதை வானேறி தவழ்ந்து வரும் நிலவே

மதியறியாச் சிறு மகளும் கவி பாட வந்தேன்

மன்றத்தில் துணை நின்று வாழ்த்துவாய் தாயே !

நடுவர்-

நடக்கட்டும்

டி.எம்.எஸ்.-

ஆண் கவியை வெல்ல வந்த பெண் கவியே வருக - நீ

அறிந்தவற்றை மறைந்து நின்று சபையினிலே தருக

சுசீலா-

பெண் கவியை வெல்ல வந்த பெருமகனே வருக - உங்கள்

பெட்டகத்தைத் திறந்து வைத்துப் பொருளை அள்ளித் தருக

டி.எம்.எஸ்.- இலை இல்லாமல் பூத்த மலர் என்ன மலரம்மா?

சுசீலா-அதுஇளமை பொங்க வீற்றிருக்கும் கன்னி மலரையா

டி.எம்.எஸ்.- வலையில்லாமல் மீனைப் பிடிக்கும் தேசம் என்ன தேசம்?

சுசீலா-அதுவாலிபரின் கண்ணில் உள்ள காதல் என்னும் தேசம்

டி.எம்.எஸ்.- காதல் வந்தால் மேனியிலே என்ன உண்டாகும்?

சுசீலா-அதுகன்னியரைக் கண்டவுடன் கால்கள் தள்ளாடும்

டி.எம்.எஸ்.- காதலித்தாள் மறைந்து விட்டால் வாழ்வு என்னாகும்?

சுசீலா-அன்புகாட்டுகின்ற வேறிடத்தில் காதல் உண்டாகும்

டி.எம்.எஸ்.- ஒரு முறைதான் காதல் வரும் தமிழர் பண்பாடு

சுசீலா-அந்தஒன்று எது என்பதுதான் கேள்வி இப்போது

டி.எம்.எஸ்.- வருவதெல்லாம் காதலித்தால் வாழ்வதெவ்வாறு ?

சுசீலா-தன்வாழ்க்கையையே காதலித்தால் புரியும் அப்போது

நடுவர்-

உன்னுடைய கேள்விக்கெல்லாம் அவங்க பதில் சொல்லிட்டாங்க

இனிமேல் அவங்க கேள்வி கேக்கலாமில்லே?

எஸ்.எஸ்.ஆர்-

கேக்க சொல்லுங்க....

சுசீலா-

தாதி தூது தீது தத்தும் தத்தை சொல்லாது..

தூதி துது ஒத்தித்தது தூது செல்லாது..

தேது தித்தித் தொத்து தீது தெய்வம் வராது - இங்கு

துத்தி தத்தும் தத்தை வாழ தித்தித்ததோது..

எஸ்.எஸ்.ஆர்-

கேள்வியா இது ? என்ன உளர்றாங்க ?

நடுவர்-

அவங்க ஒண்ணும் உளறலே.. நீதான் திணர்றே

எஸ்.எஸ்.ஆர்-

நான் திணர்றேனாவது..

நடுவர்-

பின்ன என்ன ?

வேணும்னா நீ தோல்விய ஒப்புக்க.. அவங்களே அர்த்தம் சொல்றாங்க

எஸ்.எஸ்.ஆர்-

முதல்ல அர்த்தத்தை சொல்ல சொல்லுங்க.. அப்புறம் பேசலாம்

நடுவர்-

சரி சொல்லுங்க..

சுசீலா-

அடிமைத் தூது பயன்படாது கிளிகள் பேசாது

அன்புத் தோழி தூது சென்றால் விரைவில் செல்லாது

தெய்வத்தையே தொழுது நின்றால் பயனிருக்காது - இளம்

தேமல் கொண்ட கன்னி வாழ இனியது கூறு

மதனராசா பரிசெல்லாம் பேச்சலவில்தானா? ஆளையே காணோம்

Edited by aaravally

ஆமாம்,

காளமேகத்தின் பாடலுக்கு விளக்கத்தைக் , கண்ணதாசன் பாட்டிலேயே தந்துள்ளார்.

  • தொடங்கியவர்

ஆமாம். கண்ணதாசன்கூட சிலேடை பாடல்கள் பாடியுள்ளார்.

"அத்திக்காய் காய்காய் ஆலங்காய் வெண்ணிலவே" எனும் பாடல்தான் உடனே ஞாபகத்துக்கு வருகிறது. பாடலை தெரிந்தவர்கள் பொருளுடன் இணைத்தால் நல்லது. :rolleyes::)

ஆமாம். கண்ணதாசன்கூட சிலேடை பாடல்கள் பாடியுள்ளார்.

"அத்திக்காய் காய்காய் ஆலங்காய் வெண்ணிலவே" எனும் பாடல்தான் உடனே ஞாபகத்துக்கு வருகிறது. பாடலை தெரிந்தவர்கள் பொருளுடன் இணைத்தால் நல்லது. :rolleyes::)

படம் - பலே பாண்டியா

பாடியவர் - ரி.எம்.சௌந்தரராஜன்+P.B.சிறீநீவா

Edited by Rasikai

  • கருத்துக்கள உறவுகள்

என்ன.... பொருள் எழுதுவதற்கு மணியண்ணை வரவேணுமா? அதையும் எழுத வேண்டியது தானே?

என்ன.... பொருள் எழுதுவதற்கு மணியண்ணை வரவேணுமா? அதையும் எழுத வேண்டியது தானே?

பொறுங்கோ இப்பதான் பாட்டை கண்டு பிடிச்சு எழுதுறன் பொருளையும் எழுதுறனப்பா :angry: :angry:

நிலவைப் பெண்ணாகவும், குளிர்மையானதாவும் தான் கவிஞர்கள் வர்ணித்திருக்கிறார்கள். நிலவு குளிர்மையானதென்றால் , அந்த நிலவுக்கு யாரையாவது வெப்பத்தால் சுட்டெரிக்கும் தன்மை உள்ளதா? இல்லை. ஆனால் இங்கே கவியரசர் கண்ணதாசன் குறிப்பிடும் காதலர்கள், தமது காதல் துணையை சுட்டெரிக்கும் வண்ணம் நிலவிடம் விண்ணப்பிக்கின்றாகளே? இது சாத்தியமா? இல்லை. நிலவு இதம் தருமே தவிர வதை செய்யாது. உண்மையான காதலர்கள் தமது காதல் துணைக்கு கனவிலே கூட துன்பம் நினைக்கார். அதனால் தான் அவர்கள் தமது காதலரை சுட்டெரிக்கும் படி சூரியனிடம் கோரவில்லை. இதைத் தான் ஊடல் என்பது. இதோ அந்தப் பாடல்:

" அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே

என்னைப் போல் பெண்ணல்லவோ - நீ

என்னைப் போல் பெண்ணல்லவோ?"

அத்திக்காய் = அந்தப் பக்கமாக, அந்தத் திசையாக [காதலன் நிற்கும் பக்கம்]

இத்திக்காய் = இந்தப் பக்கமாக [ தான் நிற்கும் பக்கம்]

ஆல் = தொலைவு, அதிக தூரம், அங்கே

அங்கே காயும் நிலவே, நீயும் என்னைப் போல ஒரு பெண்தானே, ஆகவே, இந்த்தப் பக்கமாக [நான் நிற்கும் பக்கம்] வந்து என்னைச் சுடாதே. என் காதலர் நிற்கும் பக்கம் சென்று அவரைச் சுடு.

Edited by Rasikai

  • கருத்துக்கள உறவுகள்

பாதை தெரியுது பார்!

ராஜிவ்காந்தியின் 63-வது பிறந்த தினவிழாவிற்கு சத்தியமூர்த்தி பவனில் கலைஞர் தலைமை தாங்கினார். வேற்றுக்கட்சிக்காரர் சத்தியமூர்த்தி பவன் விழாவில் தலைமை வகிப்பது இதுதான் முதல் தடவை. அவரை வரவேற்கக் காங்கிரஸ் தலைவர்கள் ஒன்று கூடி நிற்பார்கள் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம். நாலு மத்திய அமைச்சர்கள் மிஸ்ஸிங். மற்றும் 10 எம்.எல்.ஏக்கள் மட்டுமே விழாவிற்கு வந்திருந்தனர். காங்கிரஸில் எத்தனை தலைவர்கள் இருக்கிறார்களோ அவ்வளவு கோஷ்டிகள். வெறுத்துப்போன முதல்வர், "நான் இந்த விழாவிற்கு வருவதை ஏதோ சந்திரனில் இறங்கப்போகும் நிகழ்ச்சிபோல் பெரிது படுத்தினார்கள். இங்கு வந்திருக்கும் திரளான(?) கூட்டத்தைப்பார்த்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று வஞ்சப்புகழ்ச்சி அணியாக கூறினார். காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியின் வேண்டுகோளை ஏற்று பழைய மகாபலிபுரம் சாலைக்கு 'ராஜிவ் காந்தி சாலை' என்று பெயர் சூட்டச் சம்மதித்தவர், "பாதைகளின் பெயர் மாறலாம், ஆனால் பாதை மாறாதீர்கள்" என்று ஒரு குட்டும் வைத்தார். கருணாநிதியின் சிலேடை நயம் இன்னும் அப்படியே இருக்கிறது.

மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவாவின் விழாவில் பேசிய அவர், விழா என்றால் கொண்டாட்டம் என்று பொருள். இன்னொரு பொருள் விழாது என்பது. இந்த ஐக்கிய முற்போக்கு அணியின் ஆட்சியும் விழாது (கம்யூனிஸ்டுகள் கவிழ்க்க மாட்டார்கள்) என இருபொருள் படக் கூறியது ரசிக்கும்படியிருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

ரசித்த சில சிலேடைகள்

திருமுருக கிருபானந்த வாரியாரின் உபன்யாசங்களில் அவ்வப்போது அழகான சிலேடைகள் வெளிப்படும்.

அவர் ஒரு சொற்பொழிவில் அந்த நாளைய சில பெரியவர்களுக்கும் இந்தக்காலத்து பெரியவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தைக் குறிப்பிட்டார்.

“அந்தக் காலத்தில் பழங்கள் என்றால் விரும்பி உண்பார்கள். இப்போதெல்லாம் பழங் “கள்" என்றால் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்."

அவரது கந்தபுராணச் சொற்பொழிவில் காமதகனப் படலத்தில் காமனை(மன்மதன்)ப் பற்றிக் கூறுகையில் (இந்துக்களுக்கு ஒரு காமன், கிறித்துவர்கள், இஸ்லாமியர் ஆகிய மற்ற மதத்தினர் என்று பல காமன்கள் கிடையாது. அனைவருக்கும் ஒரே காமன்தான். அவன் அனைவருக்கும் cஒம்மொன்(காமன்)" என்றார்

விமர்சகர் சுப்புடுவின் விமர்சனங்களில் நயமான சிலேடைகள் காணப்படும்.

ஒரு முறை ஒரு பெரிய வித்வானுடைய சங்கீதத்தை விமரிசனம் செய்யும் போது அவர் குறிப்பிட்டது.

“அன்று கச்சேரியில் அவருடைய காதிலும் கம்மல் சாரீரத்திலும் கம்மல்"

தமிழறிஞர் கி. ஆ.பெ. விசுவநாதன் அவர்கள் தன் நண்பர் ஒருவரை அறிமுகம் செய்து வைத்த போது “இவர் பல்துறை வித்தகர்" என்று குறிப்பிட்டார். ஆனால் அவருடன் உரையாடிய நண்பர்களுக்கு அவர் அவ்வளவு பெரிய ஞானம் படைத்தவராகத் தெரியவில்லை. பிறகு கி.ஆ.பெ. அவர்கள் விளக்கினார்: ‘இவர் பல் மருத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்றவர். அதனால்தான் அவ்வாறு கூறினேன்'

தமிழறிஞர் கி.வா.ஜவின் சிலேடைகள் பிரபலமானவை.

கி.வா.ஜகன்னாதன் ஒரு விருந்தில் கலந்துகொண்டபோது “உங்களுக்குப் பூரி பிடிக்குமா?" என்று கேட்டார்கள்.

“ஜகன்னாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா?" என்று உடன் பதிலளித்தார். கி.வா.ஜ

கி. வா. ஜ அவர்கள் ஒரு கூட்டத்தில் இம்மை - மறுமை என்ற தலைப்பில் பேச அழைக்கப்பட்டிருந்தார். அவர் உரையாற்ற ஆரம்பித்ததும் மைக் கோளாறாகி விட்டது. அதை அகற்றி விட்டு வேறு மைக் வைத்தார்கள். அதுவும் கொஞ்ச நேரத்தில் சரியாகச் செயல்படவில்லை. கி.வா.ஜ உடனே“இம்மைக்கும் சரியில்லை, அம்மைக்கும் சரியில்லை" என பேசவிருந்த தலைப்பிற்கு ஏற்றவாறு சிலேடையில் சொல்ல அனைவரும் ரசித்தனர்.

ஒரு இலக்கியப் பத்திரிக்கையில் ரசிகமணி டி.கே.சி அவர்களை மாதம் ஒரு கட்டுரை எழுதித்தரும்படிக் கேட்டுக் கொண்டார்கள். அதற்கு அன்பளிப்பாக மாதம் பத்து ரூபாய் தருவதாகவும் அதை அன்புடன் ஏற்றுக் கொள்ளும்படியும் வேண்டிக் கொண்டனர் அந்தப் பத்திரிகை நிறுவனத்தினர். “உங்களுக்கு மாதம் பத்து ரூபாய் என்பதில் சம்மதம்தானே" என்று அவர்கள் கேட்டதற்கு,

டி.கே.சி. அவர்கள், “உங்கள் பத்திரிக்கையின் தரம் மிகவும் உயர்ந்தது. நீங்கள் கொடுக்கும் மாசம் பத்து எனக்கு மா சம்பத்து" என்றார்.

அதிவீரராம பாண்டியனும் வரதுங்கப் பாண்டியனும் சகோதரர்கள். இருவரும் புலவர்கள். புரவலர்கள். அவர்களைப் பற்றிப் பாடிய ஒரு புலவர் அவர்களை “அண்டம் காக்கைக்கு ஜனித்தவர்கள்“ என்று பாடினார். வரதுங்கப் பாண்டியனுக்கு ஒரே கோபம். அவர் சற்றே கருநிறம் படைத்தவர். அதனால் தான் அப்படிப் பாடினார் என எண்ணி கோபம் அடைந்தார்.

புலவர் சொன்னார், “ நீங்கள் இருவரும் உலகத்தைக் காக்கவே பிறந்தவர்கள்" அதனால் தான் “அண்டம் காக்க ஜனித்தவர்கள் எனப் பாடினேன்" என்று.

‘பாரதி இளம் வயதிலேயே புலமையில் உயர்ந்து இருப்பதைக் கண்டு பொறாமை கொண்ட காந்திமதி நாதன் என்பவர் அவரை பாரதி சின்னப்பயல் என்று இறுதி அடி வரும்படி பாடச்சொன்னார். பாரதி தயங்கவில்லை.

காரது போல் நெஞ்சிருண்ட காந்திமதி நாதனைப்

பார் அதி சின்னப் பயல்

என்று பாடினார்.

பாரதி என்பதை பார் அதி என்று பதம்பிரித்து காந்திமதிநாதனை வெட்கும்படிச்

செய்தார் பாரதி

நன்றி: கி.வா.ஜ சிலேடைகள்., வாரியார் சொற்பொழிவுகள், சிந்தனைக்கு விருந்தாகும் சிலேடைகள் -

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதொரு சுவாரஸ்யமான தலைப்பு.

பின்வரும் பாடலும் சிலேடை அணியைச் சார்ந்தது.

பேரவாவொடு மாசுணம் பேரவே

பேரவாவொடு மாசுணம் பேரவே

ஆரவாரத்தினோடு மருவியே

ஆரவாரத்தினோடு மருவியே

இப்பாடல் என்னுடைய பழைய ஒரு கருத்திலே இக்களத்தில் விளக்கப்பட்டுள்ளது.

சற்றே முயற்சியுங்கள்..

நன்றி

- வழுதி

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா தமிழ்! தமிழ்! என்றும் வாழும். என்றென்றும் வாழும். எஞ்ஞான்றும் வாழும். நன்றி ஈழத்திருமகன்.

ஒருமுறை ஒளவையார் நடந்த களைப்பு நீங்க ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்தார். அப்போது அவ் வீட்டுக்காரி அவரது தாகத்துக்கு நீர் எடுத்து வர உள்ளே சென்றாள். முற்றத்தில் ஒரு பட்டுப்போன பிலாமரம் நின்றது. அதைப்பார்த்து அவர் பாட அம்மரமானது அலரும் தளிருமாய்த் தழைத்து காய் கனிகளுடன் அழகாக நின்றது. அதைப்பார்த்த அவ் வீட்டுக்காரி மிச் சந்தோசத்துடன் மீண்டும் உள்ளே போய் ஒளவை பசியாற சிறிது திணைமாவும் கொண்டுவந்து கொடுத்தாள். அதையும் பெற்றுக் கொன்டு அவர் பாண்டியன் அரன்மனைக்குச் சென்றார்.

அங்கே அரசனிடம் அத் திணைமாவைக் கொடுக்க அரசனும் அதை வாங்கிக் கொண்டே இது ஏது என வினாவினார்! அதற்கு ஒளவையும் பாட்டிலேயே பதில் சொன்னார். அப் பாடல்:

கூழைப்பலா தழைக்கப் பாட -- குலமகளும்

மூழ அழாக்குத் திணை தந்தாள். சோழா கேள்

கூழுக்கும் பாடி உப்புக்கும் பாடி

ஒப்பிக்கும் என் உள்ளம். என்று பாடினார்.

  • தொடங்கியவர்

காளமேகப் புலவர் வைத்தீஸ்வரப் பெருமானை தரிசித்து இகழ்வதுபோல் பாடியது

வாதக்கால் ஆம்தமக்கு மைத்துனர்க்கு நீரிழிவாம்

பேதப் பெருவயிறாம் பிள்ளைதனக்கு - ஒதக்கேள்

வந்தவினை தீர்க்க வகையறியார் வேற்றூரார்

எந்தவினை தீர்ப்பார் இவர்.

:lol::lol:

வாதக்கால் ஆம்தமக்கு - ஒருகாலை எப்போதுமே கீழேவைக்க முடியாமல் தூக்கி ஆடுவதால்

மைத்துனர்க்கு நீரிழிவாம் - சிவனின் மைத்துனர் விஷ்ணு கடலிலே படுத்திருப்பதால்

பேதப் பெருவயிறாம் பிள்ளைதனக்கு - பேழைவயிறுடைய விநாயகப் பெருமான்

ஓதக்கேள் - சொல்வதைக் கேள்

இவ்வாறாக தமக்கு வந்த நோயை தீர்க்கவே வகையறியாது திண்டாடுபவர்கள் மற்றவர் நோயை எப்படி தீர்ப்பார் என நகைச்சுவையாக கேட்கிறார். :lol::lol:

ஈழத்திருமகன்... "்இம்சை அரசன் 23ம் புலிகேசி" படத்திலயும் அரசனை போற்றிப் பாடுவது போல் இகழ்ந்து ஒரு கவிதை சொல்லப்படும்.

ஏன் இங்கு கருத்துக்களத்தில் கூட பல சிலேடைகள் புகுந்து விளையாடியிருக்கின்றன. அவற்றில் சில மாபெரும் புரட்சியை உண்டுபண்ணியும் உள்ளன :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.